நாங்குநேரி வாசஸ்ரீ

35. கயமை

பாடல் 341

கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைபோவாக் கோழிபோல்; – மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்.

காலத்தே தானியத்தை வேண்டுமளவு போட்டாலும்
குப்பைகிளறுவதை விடாது கோழி அதுபோல்
மேன்மைமிகு நூல்களை விரிவாய் விளக்கினாலும் தன்
மனம் விரும்பிய வழியிலே செல்வான் கீழோன்.

பாடல் 342

காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் என உரைப்பின் – கீழ்தான்
உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன் றுரைத்து.

உறுதியான நூற்பொருளைக்  கற்பதற்கு
உயரிய சான்றோரிடம் காலம் தாழ்த்தாது
உடனே செல்வோம் எனச் சொன்னால்
உறங்க வேண்டும் என்றோ வேறொரு
உபயோகமற்ற காரணத்தையோ சொல்லி
உடன்படாது மறுத்துச் செல்வான் கீழானவன்.

பாடல் 343

பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையாது
ஒருநடைய ராகுவர் சான்றோர்; – பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கு அருவிநன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ்.

விளங்கும் மலையருவிகளுடை நல்ல நாட்டின்
வேந்தனே! மேலோர் பெருஞ்சிறப்பு தமக்கு
வாய்க்கப் பெற்றினும் ஒழுக்கத்தினின்று
வழுவாது ஒரே நிலையில் இருப்பர் மாறாக
வளமான பெருஞ்சிறப்பு கிட்டுமாயின்
வேறாக நடந்து கொள்வர் கீழோர்.

பாடல் 344

தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; – பனையனைத்து
என்றும் செயினும் இலங்கருவி நன்னாட!
நன்றில நன்றறியார் மாட்டு.

விளங்கும் அருவிகளுடை நல்ல நாட்டு
வேந்தனே! செய்த உதவி தினை அளவே
விளங்கினும் சான்றோர் பனையளவென
விரும்பிப் போற்றுவர் பனையளவு உதவினும்
நன்றியில்லாதார் அதனை உதவியெனவே
நினைக்க மாட்டார்.

பாடல் 345

பொற்கலத்து ஊட்டிப் புறத்தரினும் நாய்பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; – அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்.

நல்ல உணவைப் பொற்கலத்தில் வைத்து வளர்க்கும்
நாய்க்குக் கொடுத்தாலும் பிறர் எச்சில் சோற்றை
கண் இமைக்காமல் பார்த்திருக்குமதுபோல்
சிறப்புள்ளவனாய் மதித்துப் பெருமை செய்திடினும்
செய்யும் செயல்களால் வேறுபட்டு நிற்பான் கீழ்மகன்.

பாடல் 346

சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; – எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும்..

உலகம் முழுதும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தும்
உயர்ந்த செல்வம் பெறினும் வரம்புகடந்த சொற்களை
உரையார் பெரியோர் எப்போதேனும் முந்திரி எனும்
சிறுதொகையின்மேல் காணி எனும் அற்பத்தொகை
சேர்ந்தால் தம்மைத் தேவலோக இந்திரனாய் நினைத்து
செருக்குற்று நடப்பர் கீழோர்.

பாடல் 347

மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வந்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.

மாசற்ற நல்ல பொன்னின் மேல்
மாட்சிமை பொருந்திய இரத்தினங்கள்
பதித்துச் செய்தாலும் காலில் அணிதற்கே
பயன்படும் செருப்பு என்பதுபோல் கீழ்மக்கள்
அதிகமாய்ச் செல்வம் பெற்றிருப்பினும்
அவர் செய்யும் செயல்களால் கீழோரெனவே
அறியப் படுவர் எப்போதும்.

பாடல் 348

கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும், – அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.

பெருமையான மலைகளுடை நல்லநாட்டைப்
பெற்ற அரசனே! கீழ்மகன் கடும் சொல் சொல்லும்
பழக்கம் உடையவன் எவரிடத்தும் இரக்கம்
பாராட்டாதவன் மற்றவர் படும் துன்பத்திற்கு
பெரிதும் மகிழ்பவன் அடிக்கடி சினம் கொள்பவன்
பல இடங்களில் கண்டபடி திரிபவன் மற்றவரை
பழித்துப் பேசும் இயல்பு கொண்டவன்.

பாடல் 349

பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினியர் ஆகுவர் சான்றோர்; – விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப!
எள்ளுவர் கீழா யவர்.

தேன் சிந்தும் நெய்தல் பூக்கள் மிகுந்து
தொடர்ந்து ஒலியெழுப்பும் கடலினது
குளிர்கரையுடை நாட்டு வேந்தனே! ஒருவர்
தம் பின் நின்றால் பல நாள் பழகியவரென
தகுதியுடைப் பெரியோர் அவர்களிடம் இனியராய்
தக்கவாறு பழகுவர் கீழ்மக்களோ நிற்பவரை
தம் நண்பராய்க் கருதாது பழிப்பர்.

பாடல் 350

கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை; – ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப்படும்.

அரசனே கேட்பாயாக! நாள்தோறும்
அறுக்கத்தக்க புல்லைத் தின்பதற்கு
அறுத்துக் கொடுத்தாலும் சிறிய எருதுகள்
அளவிற்பெரிய வண்டியை இழுக்கமாட்டா
அதுபோல் செல்வம் பெற்றிருப்பினும் கீழோரை
அவர் செய்யும் செயலினால் அறிய இயலும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *