சேக்கிழார் பாடல் நயம் – 85 (அம்பொன் )

திருச்சி புலவர் இராமமூர்த்தி
இளையான்குடி மாற நாயனார் புராணம்
இயற்பகை நாயனாரின் செயற்கரிய செயல் குறித்துச் சேக்கிழார் இயற்றிய பாடல்களின் நயங்களை இன்று வரை படித்து மகிழ்ந்தோம்! இனி இளையான்குடி நாயனாரின் அருள் வரலாற்றைச் சேக்கிழார் பெருமானின் கவித்திறத்தின் வழியே காண்போம்.
முதலில் திருநீலகண்டக் குயவர், அடுத்து இயற்பகையார் என்ற கடற்கரை வாணிகர், அடுத்து சூத்திர நற்குலத்தாராகிய இளையான்குடி மாற நாயனார். இவ்வாறு அடியார்களிடையே குலவேறுபாடு கருதாத சைவத்தின் சிறப்பைத் தொடர்ந்து நம் திருமுறை கூறுகின்றது!
அம்பொன் நீடிய அம்ப லத்தினில் ஆடுவார்அடி சூடுவார்
தம்பி ரான்அடி மைதிறத்துஉயர் சால்பின் மேன்மை தரித்துளார்
நம்பு வாய்மையின் நீடு சூத்திர நற்கு லம்செய் தவத்தினார்
இம்பர் ஞாலம் விளக்கினார்இளை யான்கு டிப்பதி மாறனார்
உரை:
அழகிய பொன்னோடுகளால் வேயப்பெற்ற, நீடித்த பெருமையை உடைய அம்பலத்தில் கூத்தாடுவாரின் திருவடியை எப்போதும் தலைமேல் சூடிக் கொள்பவர்; சிவபிரான் அடிமைத்திறத்தில் உயர்ந்த நிறைவு பெற்று அதனையே தம்பண்பாக மேற்கொண்டு வாழ்பவர்; உயர்ந்த நம்பிக்கைக்கு உரிய சூத்திரக் குலம் செய்த தவத்தால் அக்குலத்தில் அவதரித்து அந்தக் குலத்தை புகழுடன் விளங்கச் செய்தவர், இளையான்குடி என்ற ஊரை ஆண்ட சிற்றரசராகிய மாறனார் ஆவார். அவர் தம் செயற்கருஞ் செயலை இப்புராணத்தில் காண்போம்.
விளக்கம்:
இப்பாடலில் ‘’அம்பொன் நீடிய அம்பலம்’’ என்ற தொடர் தில்லையம்பலத்தின் நெடிய வரலாற்றைக் கூறுகிறது! அவ்வம்பலம் காலந்தோறும் பொன்னால் வேயப்பெற்ற நெடிய வரலாறு கொண்டது. முற்காலத்தில் இறைவனின் திருக்கூத்தை தரிசித்த தேவர்கள் அம்பலத்திற்குப் பொன் வேய்ந்தனர்; அதன் பின் இரணியவர்மன் என்ற அரசர் அம்பலத்திற்குப் பொற்கூரை வேய்ந்தார்; அதன்பின் அநபாயச் சக்கரவர்த்தி முதலானோர் பொன்னோடுகளால் தில்லையம்பலத்தை வேய்ந்தனர்; இன்றும் தில்லையம்பலம் பொன்னால் வேயப்பெற்று விளங்குகிறது. திருநாவுக்கரசர்,
‘’முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூயசெம் பொன்னினால்
எழுதி வேய்ந்த சிற்றம்பலக் கூத்தன்‘’
என்று பாடுகிறார். அவ்விறைவன் திருவடி மலர்களைத் தம் தலைமேல் சூட்டிக்கொண்ட அடியார் மாறனார் ஆவார். இறைவன் திருவடி,
‘’அஞ்சிப்போய்க் கலி மெலிய அழலோம்பும் அப்பூதிக்
குஞ்சிப்பூவாய் விளங்கும் சேவடியே கூடுதியே!’’
என்று அப்பர் பாடுகிறார்.
மேலும் ‘’உயர் சால்பின் மேன்மை தரித்துளார்‘’ என்ற தொடர், அவர்தம் அடிமைத் திறத்தில் நிறைந்த,
அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண்!’’
என்ற வள்ளுவர் வாக்கிக்கேற்ற ஐந்து குணங்களும் புலப்படுகின்றன! இவ்வாறு எல்லாக் குணங்களும் நாயனாரின் இறையடிமைத் திறத்தில் குடிகொண்டன!
மேலும் ‘’நம்பு வாய்மையின் நீடு சூத்திர நற்குலம்‘’ என்ற தொடர் அவர் பிறந்த குலத்தின் வாய்மைத் திறத்தை உணர்த்துகிறது. வள்ளுவரும் ‘’வாய்மையோடு ஐந்து சால்பு ஊன்றிய தூண்‘’ என்ற குறளில் வாய்மை யோடு சார்ந்த நான்கு குணங்களும் சேர்ந்து சால்பு ஆயினமையை உணர்த்தியது போலவே சேக்கிழாரும், சூத்திர நற்குலத்தை ‘’நம்பு வாய்மையின்‘’ என்று அடைமொழி கொடுத்து இங்கே உணர்த்துகிறார்.
வாய்மைத் தன்மையிலே நீடி வருகின்ற சூத்திரன் என்ற பெயரா லறியப் பெறும் நல்ல குலம். நல் – நல்ல. நலம் – சுத்தம். “சூத்ரா சுத்த குலோத்பவா;“ என்பது சிவாகமம். சூத்திரப் பெயர் இங்கு உழுதொழிலாளரைக் குறித்தது.
“தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல நன்மை சான்ற நலம்“ என்று ஆசிரியர் பின்னரும் வாயிலார் நாயனார் புராணத்தில் இக்குலப் பெருமையைச் சிறப்பித்தார். உழுதொழில் புரிவோர்களைச் சூத்திரர் எனவும், நான்காம் வருணத்தவர் எனவும் பேசுதல் ஆசிரியர் காலத்தில் வழக்காயிருந்தது. அச்சொல்லைப் பிற்காலத்தார் இழிவு படுத்தினர். அப்பெயரால் ஏதும் இழிபு குறித்திருப்பின் ஆசிரியர் அதனை சிறப்புறக் கூறியிருக்க மாட்டார்! இங்கு, ஏர்த்தொழில் புரியுங் குலமாகவே இப்பெயராற் போந்த குலம் சுட்டப் பெற்றது. “ஏரின் மல்கு வளத்தினால் வரும்“ என்று அடுத்த பாட்டிலே தொடர்ந்து கூறுவது காண்க.
இப்புராணத்துள்ளே மற்றும் பல நாயன்மார்களை வேளாண் குலத்தவர் எனக் குறித்த ஆசிரியர் இங்கு ஏர்த்தொழிலே செய்யும் இந்நாயனார் சூத்திர நற்குலத்தவர் என்று குறித்தலின் வேற்றுமை ஒன்றும் காணப் பெறவில்லை. வேளாளரை வாய்மையின் மேன்மைபற்றி அறிவிப்பது ஆசிரியர் மரபு. உழுதுண்போர் – உழுவித்துண்போர் என்ற பாகுபாடு கருதி இவ்வாறு வேறு வேறாக குறிக்கப்பெற்றதோ என்று சிலர் ஐயங்கொள்வார்
“பின்னவர் சதுர்த்தர் பெருக்களார் வன்மையர்
மன்னுமுத் தொழிலர் மண்மகள் புதல்வர்
உழவர் ஏரினர் வாணர் காராளர்
விளைஞர் மேழியார் வேளாளர் என்றிவை
தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர் பெயரே“
என்று பிங்கல நிகண்டு சொற்பொருள் கூறுகிறது! இப்பெயர் பற்றி இந்நாளில் எழும் பல் வகைப் பூசல்களையும் பிற்காலத்தினர் உருவாக்கினர். அக்குலம் இவரைப் பெறத் தவம் செய்தது என்று சேக்கிழார் கூறினார், அக் குலஞ்செய்த தவத்தின் விளைவாக அதனில் வந்தவதரித்து இவ்வுலகை வாழ்வித்தவர் இளையான்குடி மாறனார் ஆவார்! .
இளையான்குடி – இது இப்போது பரமக்குடி என்ற ஊரின் அருகில் உள்ள இளையான்தன்குடி அஃதாவது இளையாற்றங்குடி எனப்படும். இதனை அந்த ஊரிலேயே சென்று பேசிய பேராசிரியர் இராதாகிருஷ்ணன் குறிப்பிடுவார். மேலும் சோழநாட்டில் திருநள்ளாற்றுக்கு மேற்கே 2 நாழிகையளவில் உள்ளது என்றும், பத்தகுடி என்ற இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 3/4 நாழிகையில் மட்சாலையில் இதனை யடையலாம் என்றும் சிலர் கூறுவர். இவ்வூரில் பழைய சிவாலயமு மொன்றுண்டு. புராணத்து வரும் நாற்றங்கால் கோயிலுக்குத் தெற்கில் உள்ளது. இதனை முளைவாரிக்குட்டை – முளைவாரி
நாற்றங்கால் என வழங்குகின்றனர். சோழமண்டல சதகமும் இப்பதி சோழநாட்டிலுள்ளதாகப் பேசுகின்றது. ஆகவே இவர் வரலாற்றின் உண்மைத் தன்மை நன்கு விளங்குகிறது.