நாங்குநேரி வாசஸ்ரீ

31. இரவச்சம்

பாடல் 301

நம்மாலே யாவாந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று – தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர்.

இவ்வறியவர் நம்மாலே வாழ்கிறார்
இவர் எப்போதும் தாமே சம்பாதித்தவர்
இலர் எனத் தம்மை மேலானவராய் மதித்து
இன்புற்று மயங்கும் மனமுடையாரிடத்து
இரத்தற்குச் செல்வரோ தெளிந்த அறிவுடையார்?

பாடல் 302

இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு.

தாழ்வதற்குக் காரணமான செய்கைகள் செய்து
தம் வயிராற உண்பதினும் பழிதரும் அதனைத்
தள்ளி பசியோடிருந்து இறப்பது குற்றமா? ஒருவன்
தன்னுயிர் விடுத்தபின் பிறக்கும் பிறப்பு கண் இமைக்கும்
தருணத்தில் நிகழுமெனவே இவ்வுடம்பு போனால்
திரும்பவும் வேறுடம்பு கிடைப்பது அரிதென நினையாதீர்.

பாடல் 303

இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
செல்லாரும் அல்லர் சிறுநெறி – புல்லா
அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான்
முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?

தாங்கொணா வறுமையால் இரத்தெலெனும் இழிதொழிலை
தெளிந்து செய்தாலும் அவ்வற்ப வழியிலும் மேன்மைகருதி
தம்மைத் தழுவிக்கொண்டு எம் வீட்டிற்கு வாருங்கள் எனத்
தக்க முறையில் உணவுகொள்ளச்செய்பவரல்லாது வேறோரிடம்
தலைகாட்டவும் மாட்டார் மேலோர்.

பாடல் 304

திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்
றெருத்திறைஞ்சி நில்லாதா மேல்.

தம்மைச் செல்வத்தின் அன்னை இலட்சுமி கைவிட்டாலும்
தெய்வம் கோபம் கொண்டாலும் மேலோர்
தம் மேன்மையை நினைப்பதேயல்லாமல்
தன் பணத்தை வீணாகச் சேர்த்துவைக்கின்ற
தகுதியற்ற அற்பரிடம் சென்று பொருள் வேண்டி
தலைகுனிந்து ஒருபோதும் நில்லார்.

பாடல் 305

கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை – இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.

தம் பொருளை மறைக்காது கொடுக்கும்
திடமான அன்புடைய கண்போலும் இனியவரிடத்தும்
தாம் சென்று இரவாமல் வாழ்வதே உயர்வாழ்க்கை
தேடிச்சென்று யாசிப்போம் என நினையும்போதே
துன்புற்று மனம் உருகிப்போகும் நிலையிலிருக்கிறதே
தருவதைப் பெறுவோர் மனம் எப்படியிருக்குமோ?

பாடல் 306

இன்னா இயைக இனிய ஒழிகென்று
தன்னையே தானிரப்பத் தீர்வதற் – கென்னைகொல்
காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்
டேதி லவரை இரவு.

துன்பம் நம்மைச் சேரட்டும் இன்பம்
தூர விலகட்டும் என வேண்டி
தன் மனதை நிறைவு செய்வதால்
தீர்ந்துபோகும் வறுமையெனில் பொருளாசை
துன்புறுத்தும் மனதுடன் அறிவழிந்து அயலாரைத்
தேடிச் சென்று இரப்பதால் என்ன பயன்?

பாடல் 307

என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
தென்று மவனே பிறக்கலான் – குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட
இரப்பாரை எள்ளா மகன்.

மலையின் பரப்பு முழுதும் பொன் பரந்து ஓடும்படியான
மிகு அருவிகளுடை மலைநாட்டு வேந்தனே! இவ்வுலகில்
எக்காலத்தும் புதியமனிதர் பிறந்துகொண்டேயிருப்பினும்
என்றும் பிறவாதவன் ஒருவன் யாரெனில் இரப்பாரை
இகழாது ஆதரிக்கும் மனிதன்.

பாடல் 308

புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்.

தம் புற உடலை வறுமை வருத்த
தன் அகத்தேயுள்ள மெய்யறிவை விலக்கி
அறியாமையை நிலைநிறுத்தி செல்வந்தனை
அண்டி யாசித்தபின் அவன் கொடுக்க மறுத்தால்
அவ்வறுமையாளன் உயிர் விடமாட்டானா?

பாடல் 309

ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுத லல்லால் – பாசழிந்து
செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே
பையத்தான் செல்லும் நெறி?

வறியவர் மற்றொருவரைச் சார்ந்து சொன்னபடி செய்து
வணங்கித் தாழ்தல் உலக முறைமையே அல்லாமல்
ஏதேனும் உதவி செய்யீரோ என இரப்பதைக் காட்டிலும்
ஏவல் செய்து சார்ந்து வாழும் வாழ்க்கை துன்பம் தருவதோ?

பாடல் 310

பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானுஞ் செய்க கிழமை
பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
தறாஅச் சுடுவதோர் தீ.

பழைய நட்பை ஆதாரமாகக் கொண்டு உதவி கேட்டுப்
பெற வந்தவர்க்கு தான் யாதாகிலும் தகுந்ததைச் செய்ய
மன நிறைவின்மையால் அதைப் பெற்றுக்கொள்ள அவர்
மறுப்பாராயின் கொடுத்தவர் மனதில் அச்செய்கை
நீங்காது நிலைத்து நின்று சுடும் தீ போல் வருத்தும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.