செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(305)

நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

– திருக்குறள் -995 (பண்புடைமை)

புதுக் கவிதையில்...

ஒன்றாய்ச் சேர்ந்து
விளையாடும் போதும்
ஒருவரை இகழ்தல்
துன்பம்தரும் செயலே..

பிறரது இயல்பினை
அறிந்து அவரிடம் எவ்விதம்
நடந்துகொள்ளவேண்டுமென்ற
முறை தெரிந்தவருக்குப்
பகைமையுள்ளும்
பிறரை இகழா
நற்பண்புகளே உள்ளன…!

குறும்பாவில்...

விளையாட்டிலும் இகழ்தல் துன்பமேதரும்,  
பிறர் இயல்பறிந்து நடந்துகொள்ளத் தெரிந்தவருக்குப்
பகைமையிலும் நற்பண்புகளே உள்ளன…!

மரபுக் கவிதையில்...

ஒன்றாய் கூடி விளையாடையில்
     ஒருவரை நேரில் விளையாட்டாய்
நன்றா இகழ்தல் அன்னவர்க்கே
     நடுங்கும் வகையில் துன்பந்தரும்,
என்றும் மற்றவர் இயல்பறிந்தே
     ஏற்ற வகையில் நடப்பவர்க்கே
குன்றாப் பண்பது நல்லதுவாய்க்
     கொடிய பகையிலும் உள்ளதுவே…!

லிமரைக்கூ..

இகழ்தல் விளையாடும்போது ஒன்றாய்
துன்பந்தரும், பிறர் இயல்பறிந்தொழுகுவோர்குப் பகையிலும்
நற்பண்பதுவே மிளிரும் குன்றாய்…!

கிராமிய பாணியில்...

பண்புவேணும் பண்புவேணும்,
வாழ்க்கயில
நல்லதான பண்புவேணும்..

வெளயாட்டாக் கூட
வெளயாடும்போது ஒருத்தனக்
கேவலமாப் பேசுனா
துன்பப்படும் மனசு..

அடுத்தவன் கொணம்தெரிஞ்சி
அவங்கிட்டப் பழகிற
மொற தெரிஞ்சவனுக்கு,
பகயிலயும்
அடுத்தவனக் கேவலப்படுத்தாத
நல்ல பண்புதான் இருக்கும்..

அதால
பண்புவேணும் பண்புவேணும்,
வாழ்க்கயில
நல்லதான பண்புவேணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.