Blog

  • நாலடியார் நயம் – 30

    நாலடியார் நயம் – 30

    நாங்குநேரி வாசஸ்ரீ

    30. மானம்

    பாடல் 291

    திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
    பெருமிதம் கண்டக் கடைத்தும் – எரிமண்டிக்
    கானத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே,
    மான முடையார் மனம்.

    செல்வச் செருக்கினால் நற்குணமற்றவர்
    செய்யும் அவமதிப்பைக் கண்டபோது
    மானமுடையார் மனத்தில் காட்டுத் தீ
    மிகுந்து பரவுவதுபோல் அனல் சொலிக்கும்.

    பாடல் 292

    என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
    தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; – தம்பாடு
    உரையாமை முன்  னுணரும் ஒண்மை உடையார்க்கு
    உரையாரோ தாமுற்ற நோய்.

    தம் மானத்தைக் காப்பவர் பசியால்
    தாக்குண்டு எலும்புக்கூடாய் உடல்வற்றிய
    தன்மையேற்படினும் தம் வறுமையைத்
    தகுதியில்லார் பின்சென்று கூறுவரோ?
    தான் சொல்லாதே குறிப்பாலுணரும்
    தகுதியுடை அறிவாளியிடம் சொல்லாதிருப்பாரோ?

    பாடல் 293

    யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்
    காணவே கற்பழியும் என்பார்போல் – நாணிப்
    புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
    மறந்திடுக செல்வர் தொடர்பு.

    வறுமையிருந்தாலும் நாமாக இருந்தால்
    வீட்டினுள் அழைத்து செல்வந்தருக்கு
    நம் இல்லாளை அறிமுகப்படுத்துவோம்
    நல்ல பொருள் படைத்த செல்வந்தரோ
    நாம் கண்டாலே மனைவியின் கற்புகெடுமென
    நினைப்பவர்போல் நாணி வாயிலின் புறத்தே
    வைத்துச் சோறிடுவர் அதனால் செல்வந்தருடன்
    வைக்கும் தொடர்பை மறந்திடுக.

    பாடல் 294

    இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
    உம்மையும் நல்ல பயத்தால்; – செம்மையின்
    நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண்
    மான முடையார் மதிப்பு.

    நன்றாகக் கஸ்தூரிமணம் கமழும் கூந்தலையுடையவளே!
    இப்பிறப்பில் நன்மை உண்டாக்குவதோடல்லாது
    இனிவரும் மறுமையிலும் நன்மை விளைவிக்கும்
    மானமுடையாரின் மதிப்பு அவர்தம் நல்வழிதவறா
    மாண்பினால் இதன் மேன்மையை நீ உணர்வாயாக!

    பாடல் 295

    பாவமும் ஏனைப் பழியும் படவருவ
    சாயினும் சான்றவர் செய்கலார்; – சாதல்
    ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
    அருநவை ஆற்றுதல் இன்று.

    பாவமும் மற்ற பழியும் தோன்றும் செயலை
    பண்பட்ட சான்றோர் தாம் இறக்கநேரிடினும்
    புரியார் ஏனெனில் சாவுத்துன்பம் ஒருநாளில்
    அதுவும் ஒருகணப்பொழுது மட்டும்
    அனுபவிக்க்கக் கூடியது அத்துன்பம்
    அப்பாவமும் பழியும்போல் உயிர் உள்ளளவும்
    ஆறாத்துயர் தந்து நிலைத்துநில்லாது.

    பாடல் 296

    மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
    செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
    நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
    செல்வரைச் சென்றிரவா தார்.

    மிக்க வளமான இப்பெரு உலகில் வாழ்பவர்
    மற்றவரைவிட மிகுந்த செல்வம் கொண்டவராயினும்
    வறியோர்க்கு பொருள் கொடுத்து உதவாராயின் அவரும்
    வறியவரே தம் வறுமைநிலையிலும் செல்வரிடம் பொருள்
    வேண்டி இரவாதார் பெருமுத்தரையர் போலும் செல்வந்தரே.

    பாடல் 297

    கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை
    இடையெலாம் இன்னாமை அஞ்சும் – புடை பரந்த
    விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலை யெல்லாம்
    சொற்பழி அஞ்சி விடும்.

    வில் போலும் வளைந்த புருவத்தின் கீழ்
    வேல் போல் உலாவிவரும் நீள் கண்ணையுடையவளே!
    வாட்டும் பசிக்கு அஞ்சுவர் கீழ் மக்களெல்லாம்
    வருத்தும் துன்பத்துக்கு அஞ்சுவர் இடைப்பட்டோர்
    வரும் பழிக்குஅஞ்சுவர் மேன்மக்கள்.

    பாடல் 298

    நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
    செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் – கொல்லன்
    உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
    தலையாய சான்றோர் மனம்.

    இவர் நல்லவர் அருளுடையவர்
    இப்போது வறுமையுற்றார் எனக்கூறி இகழ்ந்து
    செல்வர் அற்பப் பார்வை பார்க்கும்போது பெருஞ்
    சான்றோர் மனம் கொல்லன் உலைக்களத்தில்
    துருத்தியால் ஊதி உண்டாக்கும் நெருப்புபோல்
    துன்பப்பட்டு உள்ளே கொதிக்கும்.

    பாடல் 299

    நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாள்நாளும்
    அச்சத்தால் நாணுதல் நாண்அன்றாம்; – எச்சத்தின்
    மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
    சொல்லாது இருப்பது நாண்.

    விரும்பி வந்தவர்க்குக்கொடாமை நாணம் அன்று
    வேண்டாத தீயவை செய்ய அஞ்சி வெட்கப்படுதலும்
    வெட்கமன்று நம்மை எளியராய்க் கருதி புத்திகெட்டவர்
    செய்த அவமதிப்பைப் பிறருக்குச் சொல்லாதிருப்பதே
    சிறந்த நாணம் ஆகும்.

    பாடல் 300

    கடமா தொலைச்சிய கானுறை வேற்கை
    இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் – இடமுடைய
    வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
    மானம் அழுங்க வரின்.

    காட்டிலுள்ள புலி தான் கொன்ற
    காட்டுப்பசு இடப்பக்கம் வீழுமாயின்
    கொள்ளாது பட்டினியால் இறக்கும்
    கையில் இடமகன்ற விண்ணுலகம்
    கிட்டுவதாயினும் மானம்கெட வருமாயின்
    கொள்ளார் பெரியோர்.

    Share
  • Q&A: மின்னிதழ் தொடங்குவது எப்படி?

    Q&A: மின்னிதழ் தொடங்குவது எப்படி?

    பத்திரிகையாளர் பாரதியின் கேள்விக்கு எனது பதில் இங்கே.

     

    Cover Image by Werner Moser from Pixabay

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இலைப்பந்தல்

    இலைப்பந்தல்

    அண்ணாகண்ணன்

    குளிர்த்தென்றல் தவழும்
    குயில்சந்தம் கமழும்
    இலைப்பந்தல் விரிக்கும்
    ஏகாந்தம் சிரிக்கும்
    ஒளிவண்ணம் குழைக்கும்
    ஒய்யாரம் தழைக்கும்
    பூவுலகு புரக்கும்
    புதுக்காதல் பிறக்கும்

    பழம்கொண்டு பழகும்
    பசிதீர்த்து வருடும்
    கிளைமீது கூடும்
    கிளியூஞ்சல் ஆடும்
    களிமதுரம் சுழற்றும்
    ககனம்கண் சிமிட்டும்
    ஒருகோடி உயிர்க்கும்
    உயிர்கோடி உவக்கும்

    கணம்தோறும் நடனம்
    கனிந்தாழும் மௌனம்
    விதைதோறும் காடு
    விடையுண்டு தேடு
    மலர்தோறும் வண்டு
    திசைதோறும் தொண்டு
    இன்னும் என்ன அச்சம்
    இதோ புது வெளிச்சம்

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சைவத் தமிழ்ச் சங்கிலியனும் சட்டத் தொடர்ச்சியும்

    சைவத் தமிழ்ச் சங்கிலியனும் சட்டத் தொடர்ச்சியும்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    இலங்கையில் மூவர் அமரும் நீதிமன்றங்கள் அமைவது மிகக் குறைவு. ஆங்கிலத்தில் Trial-at-Bar எனச் சொல்வார்கள்.

    சங்கிலி மன்னனின் கடைசிக் காலங்களை 1976ஆம் ஆண்டு கொழும்பில் மூவர் நீதிமன்றத்தின் முன் பேசினர். சூடானில் நடந்தவை, சிம்பாப்வேயில் நடந்தவை, அவற்றுக்கும் சங்கிலி மன்னனுக்கும் என்ன தொடர்பு?ஆனாலும் நீதிமன்றத்தில் பேசினர்.

    குலேந்திரன், மகேந்திரன் அல்லது குலோதரன், மகோதரன் என்ற யாழ்ப்பாண (நாகநாடு) மன்னர்களை மகாவமிசம் கூறும்.

    முதலாம் கயவாகுவை மணம் முடித்தவள் யாழ்ப்பாண மன்னர் மகள் என மகாவமிசம் கூறும்.

    பூம்புகார்ச் சோழ மன்னன் கிள்ளிவளவன் மணம் முடித்ததும் யாழ்ப்பாண மன்னனின் மகள் என்று மணிமேகலை கூறும்.

    ஓர் அரசனிடமிருந்து மற்றோர் அரசனுக்கு ஆட்சி கைமாறும். அரசன் இறந்தால் இளவரசன்/ இளவரசி அரசராகுவர். அரசன் போரில் தோற்றால் வென்ற அரசன் அரசனாவான்.

    வாரிசு அரசன் ஆகலாம். போரில் வென்றவன் அரசன் ஆகலாம். அங்கே இறைமைத் தொடர்ச்சி, ஆட்சித் தொடர்ச்சி, சட்டத் தொடர்ச்சி.

    மகாவம்சம் கூறும் மகோதரனுக்கு முன்பும் பல அரசர். பின்பும் பல அரசர். இடை இடையே குறுகிய காலங்கள், சேரர் சோழர் பாண்டியர் எனத் தமிழரே யாழ்ப்பாணத்தைத் தொடர்ச்சியாக ஆண்டனர். போரில் வென்றதால் ஆண்டனர்.

    நீண்ட ஆட்சியாக யாழ்ப்பாணத் தமிழ் அரசர்கள் ஆண்டனர். இடையே கலிங்க மாகன் ஒருவன், சாவகச் சந்திரபானு மற்றவன், யாழ்ப்பாணத்தை வீழ்த்தித் தமது ஆட்சிக்குள் கொண்டுவந்தனர். இவர்கள் இருவருமே தமிழர் அல்லாத அரசர்.

    வரலாறுக்கு முற்பட்ட காலங்களிலிருந்து தொடர்ச்சியாக யாழ்ப்பாண அரசைத் தமிழரான வாரிசு அரசர்கள், போரில் வென்ற அரசர்கள் ஆண்டனர்.

    இடையில் திடீரென்று முளைத்த எவரும் அரசர் ஆகவில்லை. கலிங்க மாகனையும் சாவகச் சந்திரபானுவையும் தவிர அன்னியர் ஆட்சியில் யாழ்ப்பாணம் ஒருபோதும் இருந்ததில்லை.

    முடியாட்சிக் காலத்தில் இறைமைத் தொடர்ச்சி, ஆட்சித் தொடர்ச்சி, சட்டத் தொடர்ச்சி என யாழ்ப்பாணத்தில் பல நூற்றாண்டுகளுக்கு ஊடாக நிலையான ஆட்சி. தமிழரான செண்பகப் பெருமாளின் 16 ஆண்டு கால ஆட்சியைச் சிங்கள ஆட்சி எனலாமா?

    சங்கிலியனைப் போர்த்துக்கேயர் வீழ்த்தும் நாளில் தமிழரின் நீண்ட தொடரச்சியான முடியாட்சி அற்றது. சைவத் தமிழச் சங்கிலி மன்னனிடம் இருந்த தமிழர் இறைமை, கத்தோலிக்கப் போர்த்துக்கேய மன்னனைச் சென்றடைந்தது. போத்துக்கேயர் தாம் பெற்ற இறைமையை, ஆட்சி உரிமையை கிறித்தவ ஒல்லாந்த மன்னரிடம் கையளித்தனர். ஒல்லாந்தரும் அவற்றைக் கிறித்தவ ஆங்கிலேய மன்னரிடம் கையளித்தனர்.

    ஆங்கிலேயர் விட்டுச் சென்ற பொழுது சோல்பரி அரசியலமைப்புக் கொண்ட இலங்கை, விடுதலை பெற்று ஆங்கிலேய மன்னரின் கீழ் குடியாட்சி (Dominion) நாடாகியது.

    இலங்கையின் உச்ச நீதிமன்றத்தை நாடுவோர், அதன் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து அரசவை நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்கலாம், தீர்ப்பைக் கோரலாம். 1948-1972 ஆக 24ஆண்டுகளாக இந்த நிலை.

    1795 தொடக்கம் 22 மே1972 வரை சங்கிலிய மன்னன் கையளித்த சைவத் தமிழர் இறைமை ஆங்கிலேய அரசியிடம்.

    இலங்கை நாடாளுமன்றமே அரசியலமைப்பைத் திருத்தாமல், சட்டத் தொடர்ச்சி இன்றி, புதிய அரசியலமைப்பு யாக்க அவையை, கொழும்பு ரோயல் கல்லூரி மண்டபத்தில், நவரங்கல மண்டபத்தில் 1971 ஸ்ரீமாவோ ஆட்சியின் கீழ் கூட்டிய பொழுது சங்கிலியன் கையளித்த தமிழரின் இறைமையை யார் பயன்படுத்துவது? என்ற வினா.

    புதிய அரசியல் அமைப்பு யாக்க அவையில் தமிழர் பங்கு பற்றாததால் சைவத் தமிழச் சங்கிலியன் கையளித்த சைவத் தமிழரின் இறைமை கத்தோலிக்கப் போர்த்துக்கேயர், கிறித்தவ ஒல்லாந்தர், கிறித்தவ ஆங்கிலேயர், சோல்பரி அரசியலமைப்பு எனச் சட்டத்தொடர்ச்சியாக 1972 மே 22ஆம் நாள் மீண்டும் தமிழரிடம் வந்தது.

    படைப் புரட்சி வழியாகச் சூடான் நாட்டில் சட்டத் தொடர்ச்சியற்ற ஆட்சியை அமைத்தார்கள்.

    தமக்குத் தாமே விடுதலையை (Unilateral Declaration of Independence) அறிவித்துச் சட்டத் தொடர்ச்சியற்ற  ஆட்சியை சிம்பாப்வேயில் வெள்ளையர் அமைத்தனர்.

    இலங்கையில் நாடாளுமன்றத்துக்கு அப்பால், சோல்பரி அரசியலமைப்புக்கு அப்பால், நவரங்கல மண்டபத்தில் கூடி, நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடி, சட்டத் தொடர்ச்சியற்ற ஆட்சியைச் சிங்களவர், புத்த சமயத்துக்கு முன்னுரிமையுடன் அமைத்தனர்.

    சைவத் தமிழ் மன்னன் சங்கிலியன் கையளித்த தமிழரின் இறைமையை, ஆட்சி உரிமையாக்கப் புதிய அரசியலமைப்பு இடம் தராது. சட்டத் தொடர்ச்சியற்ற அரசியலமைப்பு இடம் தராது எனக் கொழும்பில், மூவர் நீதிமன்றத்தின் முன் 1976இல் இராணியின் வழக்குரைஞர், சட்டத்தரணி திரு மு. திருச்செல்வம் அவர்கள் வாதிட்டார்.

    தமிழரின் ஆட்சியின் எதிர்காலம் சைவத் தமிழ்ச் சங்கிலியன் விட்டுச் சென்ற சட்டத் தொடர்ச்சிப் பங்களிப்பு இன்றி இல்லை, எனத் திரு மு. திருச்செல்வம் அவர்கள் வாதிட்டார்.

    அவருடைய வாதத்துக்கு அமையச் சங்கிலியன் கையளித்த இறைமையைத் தமிழரின் ஒப்புதலின்றி ஆட்சியுரிமை ஆக்க எவராலும் முடியாது.

    ஈழத் தமிழரின் இறைமை, போரில் தமிழரிடம் இருந்து பறிபோன நாள், அதன் நினைவு நாள், அதன் 401ஆண்டு ஆண்டு நினைவு நாள் இன்று.

    கலியுகம் 4720, சகாப்தம் 1541, திருவள்ளுவராண்டு 1650, விபவ ஆண்டு, 27 வைகாசி புதன்கிழமை (05.06.1619) தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி பூரட்டாதி நட்சத்திரம் அன்று சைவத்தமிழ் அரசு வீழ்ந்தது. வீழ்த்தியவர்கள் மேலைநாட்டுக் கத்தோலிக்கப் போர்த்துக்கேயர்.

    கலியுகம் 5121, சகாப்தம் 1942, திருவள்ளுவராண்டு 2051, சார்வரி ஆண்டு, 30, வைகாசி சனிக்கிழமை (13.06.2020) தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி பூரட்டாதி நட்சத்திரம் அன்று சைவத்தமிழ் அரசு வீழ்ந்து 401ஆவது ஆண்டு. அதுவே சங்கிலியன் நினைவு நாள்.

    Share
  • தொல்தமிழகத்து விருந்துணவில் முதன்மை பெற்ற இனிப்பு

    தொல்தமிழகத்து விருந்துணவில் முதன்மை பெற்ற இனிப்பு

    ச.கண்மணி கணேசன் (ஓய்வு),
    முதல்வர்& தமிழ்த்துறைத்  தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.
    kanmanitamilskc@gmail.com

    முன்னுரை

    பண்டைத்தமிழர் உணவுமுறை பற்றிக் கட்டுரைகள் உள; எனினும் விருந்துணவில் முதன்மை பெற்ற இனிப்பு பற்றி ஆழமாகவும் முழுமையாகவும் கூர்ந்து நோக்கி விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும். அகநானூறு – 86ம் & ஐங்குறுநூறு – 211ம்; இவ்இனிப்புப் பண்டம் பற்றித் தெளிவாகவே பேசுகின்றன. புறநானூறு-381 அதே இனிப்பைக்  குறிப்பாகச் சுட்டுகிறது.

    இனிப்பு எது?

    திருமண விருந்தை விவரிக்கும் அகப்பாடலில் உழுந்தங்களி இடம்பெறுகிறது. அது நல்லாவூர் கிழாரின்;

    “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை”(அகம்.- 86) என்று தொடங்கும் பாடலாகும். மேற்சுட்டிய பாடலடி மூலம் அறியக்கூடிய செய்திகளாவன:

    1. இப்பண்டத்தில் உழுந்து தலைமைப் பொருளாகும்.
    2. அது ‘களி’ என்று சொல்லக்கூடிய பதத்தில் இருந்தது.
    3. அதில் ஊட்டச்சத்து மிகுவதற்கேற்ப பிற பொருட்களும் சேர்க்கப்பட்டன.
    4. அத்துடன் சேர்த்துச் சுவைக்க ஒரு நீர்மப் பொருள் பயன்பட்டது.

    ‘உழுந்து தலைப்பெய்த’ என்னும் தொடர்; இவ்வுணவுப் பண்டத்தில் உழுந்தே முதன்மைப் பொருள் என்று உணர்த்துகிறது. ஏனென்றால் துணைப்பண்டத்தைத் தொகைஇலக்கியம் ‘கண்ணுறை’ என்று சுட்டுகிறது. சான்றாக ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் (பா – 140) கீரை சமைக்கக் கண்ணுறையாகச் சில அரிசி வேண்டியமை பற்றிக் குறிப்பிடுகிறது. ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை இப்பாடல் சுட்டும் அரிசி துவரை மணிகள் என்றே உரை கூறுகிறார். இன்றளவும் கீரைக்கூட்டுக்குத் துவரம்பருப்பு சேர்க்கும் வழக்கம் உள்ளது. பக்கஉணவாகிய கீரையில் துணைப்பொருளாக அமையக்கூடிய துவரையைக் கண்ணுறை என்று ஒளவையார் கூறுவதால்; அதற்கு மறுதலைப்பட்டு ‘உழுந்து தலைப்பெய்த’ என்னும் தொடர் உழுந்தை முதன்மைப் பொருள் என்றுரைப்பது உறுதிப்படுகிறது.

    ‘கொழுங்களி’ என்னும் தொடர் அவ்வுணவுப் பண்டத்தின் பதம் பற்றியும், அது வளமான பிற பொருட்களுடன் சேர்த்துச் சமைக்கப் படுவதையும் குறிப்பாகப் புலப்படுத்துகின்றது. தொகை இலக்கியத்தில் ‘கொழு’ என்னும் பண்புப் பெயர்ப் பகுதி ‘வளம் மிகுந்த’ என்னும் பொருளில் பயின்று வருகிறது.

    “கொடுத்த தந்தை கொழுஞ்சோறு கொள்ளாள்” (நற்றிணை – 110) இங்கு கொழுஞ்சோறு வளம் மிகுந்த சத்துணவு என்றே பொருள்படுகிறது. இதே  போன்றே ‘கொழுங்களி’ எனும் தொடருக்கும் பொருள் கொள்வது  ஏற்புடைத்து.

    மிதவை என்னும் சொல் உணவுடன் சேர்க்கும் நீர்மப் பொருளைக் குறிக்கும். மலைபடுகடாம் அவரைப்புளிங்கூழ் ஊற்றிய மூங்கிலரிசிச் சோறு பற்றிப் பேசும்போது;

    “வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
    சுவல்விளை நெல்லின் அவரையம் புளிங்கூழ்” (அடி- 435)

    என்கிறது. நீர்மப்பொருளையே ‘சொரிந்த’ என்ற சொல்லால் குறிக்க இயலும். பாலூற்றி உண்ணும் உணவு ‘பாலின் மிதவை’ என்று அழைக்கப்படும் (மலைபடுகடாம்- அடி- 417). தயிர் ஊற்றிய உணவு ‘தயிர்மிதி மிதவை’ (அகம்- 340) என்று அழைக்கப்பட்டது. மோர்க்குழம்பு “ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை” (புறம்- 215) என்றழைக்கப்பட்டது. இதனால் உழுந்தங்களியுடன் சேர்த்த மிதவை ஒரு நீர்மப் பொருள் என்று ஐயமின்றித் தெளியலாம்.

    ஐங்குறுநூறு உழுந்தாலான உணவு கெட்டுப்போவது பற்றிப் பேசுகிறது.  “நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன” (பா- 221)

    என்னும் தொடர் காண்க. அத்துடன் அகநானூறு உழுந்தங்களியைக் ‘கொழுங்களி’ என்றழைத்த காரணமும் இப்பாடலடியில் வெளிப்படுகிறது. ‘நெய்யோடு மயக்கிய’ செய்முறை; மிதமிஞ்சிய நெய் சேர்த்துச் செய்யப்பட்டது என்னும் பொருளைத் தருகிறது. உழுந்தங்களி கிண்டும் போது அளவிறந்த நல்லெண்ணெயைக் குடிக்கும் என்பது நடைமுறை உண்மை. இங்கே சுட்டப்படும் நெய் எள்ளிலிருந்து எடுக்கப்படுவதாகும்.

    தொகைநூற் காலத்தில் எள்ளினின்றும் எடுக்கப்படுவது நெய் என்றே அழைக்கப்பட்டது. மலைபடுகடாம் ‘ஒருபிடி அளவிற்றாய தண்டில் ஏழு காய் அளவு நெய்மிக்கு எள் விளைந்திருந்த தன்மையை;

    “கெளவை போகிய கருங்காய் பிடியேழ்
    நெய்கொள ஒழுகின பல்கவர் ஈர்எள்” எனப் பாடி எள்ளில்
    இருக்கும் நெய்யைச் சுட்டுவது காண்க.

    பொ.வே.சோமசுந்தரனார் மேற்சுட்டிய ஐங்குறுநூற்றுப் பாடலுக்கு உரை எழுதுங்கால்; அதை உழுந்தங்களி என்று சுட்டவில்லை; மாறாக உழுந்தினின்று செய்யப்படும் வடகம் என்கிறார். இது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. ஏனெனில்; அப்பாடலடியில் ‘நூற்றுப் போவதைப் போல’ என்னும் உவமை இடம் பெறுகிறது. வடகம் என்னும் உணவு வகை வெய்யிலில் காயவைத்துச் செய்யப்படும். அது நூற்றுப் போக வழியில்லை. ஆனால் உழுந்தில் செய்த பிற உணவுப்பண்டங்கள் நூற்றுப்போகும் வாய்ப்பு மிகுதி. ‘ஊசிப்போதல்’ என்ற இக்கால வழக்கே பாடலில் நூற்றுப்போதல் எனச் சொல்லப்படுகிறது. ஊசிப்போன உழுந்துப் பலகாரத்தில் இருந்து கெட்ட வாடையுடன் நூல்போன்ற கசிவு ஏற்படும். இந்த நடைமுறை அனுபவ அறிவுடன் கபிலர் பாடியிருப்பது வியந்து போற்றத்தக்கது. உழுந்தங்களி உண்ணக் காலம் தாழ்த்தினால் நூற்றுப் போய் உண்ணத் தகுதியற்றதாகிவிடும்; அதுபோல் தலைவன் தந்த தழையாடையை ஏற்றுக்கொண்டு அணியாவிடில் வாடிப்போய் உடுத்தும் தகுதியை இழந்துவிடும் என்பதே பாடலின் பொருளாகும்.

    கரும்பனூர் கிழானைப் பாடும் புறப்பாடலில் உழுந்தங்களி ‘மிதவை’ என்று அழைக்கப்பட்ட காரணம் இடம்பெறுகிறது. அவன் கலைஞர்களை எவ்வாறு விருந்தயர்ந்தான் எனப் புலவர் பாடும்போது அவனளித்த உணவு வகைகள் இடம் பெறுகின்றன. அவ்வரிசையில்;

    “பாகின் கொண்டவும்” (புறம் – 381) எனும் தொடர் உள்ளது.

    பாலோடு சேர்த்துண்பவற்றையும்; பாகோடு சேர்த்துண்பவற்றையும் தாராளமாகக் கொடுத்தான் என்கிறார். பண்டைத் தமிழகத்துப் பாகு கருப்பட்டி என்று இன்று அழைக்கப்படும் பனம்பாகு ஆகும். இன்றும் உழுந்தங்களிக்கும், வெந்தயம் சேர்த்துச் செய்யும் வெந்தயக்களிக்கும் நடுவில் குழித்து; கருப்பட்டிப்பாகு ஊற்றிச் சேர்த்துச் சுவைக்கும் வழக்கம் உள்ளது. பாகு நீர்மப் பொருளாகையால் அத்துடன் சேர்த்து உண்ணும் களியை மிதவை என்று பாடியுள்ளனர்.

    விருந்து முறை:

    அகநானூற்றுப் பாடல் திருமணநிகழ்வுகளை வரிசைப்படுத்துங்கால்;

    “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
    பெருஞ்சோற்று அமலை நிற்ப” (மேற்.) என முதலில்

    விருந்தை வருணிக்கிறது. அந்த விருந்தில் முதலிடம் பெற்றது உழுந்தங்களி ஆகும். அதைத்தொடர்ந்து பெருஞ்சோற்றமலையுடன் விருந்து தொடர்ந்து நடந்தது  என்கிறார். இன்று உலகமயமாகும் சூழலில் ஐந்து நட்சத்திர உணவகங்களில் dessert என்று அழைக்கப்படும் இனிப்பு வகைகள் உண்ணும் வரிசையில் பின்னிடத்தைப் பெறுகின்றன. உணவக மேலாண்மையியல் சொல்லும் பாடங்களும் இனிப்பை இறுதியில் வழங்குவதை அறிவுறுத்துகின்றன. ஆனால் தமிழகப் பாரம்பரியம் விருந்தில் இனிப்பை முதலில் பரிமாறும் வழக்கத்தை ஈராயிரம் ஆண்டுக்காலப் பழமை வாய்ந்தது என்று காட்டுவது அறிந்து இன்புறத்தக்கது.

    முடிவுரை:

    பண்டைத் தமிழரின் ஒவ்வொரு உணவுமுறையையும் இங்ஙனம் ஆழமாக நோக்கும்போது உணவுமுறை சார்ந்த பண்பாட்டு நுட்பங்கள் புலப்பட வாய்ப்பு உள்ளது. அன்றைய திருமணவிருந்திலும், கலைஞர்க்குத் தலைவர் கொடுத்த விருந்திலும் முதலிடம் பெற்றது உழுந்தங்களி என்னும் இனிப்பு ஆகும்.


    Brief note on author

    Dr.(Mrs)S.Kanmani Ganesan a lecturer in Tamil published ‘chilappathikaaram kaattum naadum nakaramum’- her Ph.D thesis in 1992. It’s worthy to mention her publication – ‘Murukan Cult In Cilappathikaaram’ in Murukan The Lord Of The Kurinchi Land released by the Institute Of Asian Studies, Chennai. She has also translated the traumatology section of the book- An Introduction To Orthopaedics And Traumatology authored by Dr.M. Natarajan as ‘kaaya aruvaiyiyal maruththuvam’ which was published by the Madurai Kamaraj University; sponsored by the Text Book Society of Tamilnadu, Chennai. The booklet makalir udalnalach chikkalkal was published by her as the proceedings of a symposium sponsored by the UGC, New Delhi. She retired as a principal of an autonomous institution.


     

    Share
  • பழகத் தெரிய வேணும் – 20

    பழகத் தெரிய வேணும் – 20

    நிர்மலா ராகவன்

    (நீடிக்கும் உறவுகள்)

    ஐம்பது வருடங்களுக்குமேல் தாம்பத்தியத்தில் இணைந்திருப்பவர்களைப் பார்த்தால், அவர்களுக்குள் சண்டையே வந்திருக்காதா, எப்படி மனம் ஒத்துப்போயிற்று என்றெல்லாம் அதிசயமாக இருக்கும்.

    நெருக்கமான உறவில் மட்டும் அடுத்தவருக்குப் பிடிக்காத குணங்கள் இருக்காதா, என்ன! வருத்தமும் ஆத்திரமும் ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்திருக்கலாம். இருப்பினும், அவற்றைக் கடந்தால்தான் உறவு நீடிக்கும் என்று புரிந்தவர்கள் அவர்கள்.

    துணுக்கு

    ஓர் இளைஞன் தன் தாயிடம் பெருமையாகச் சொன்னான்: என் காதலி நான் வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று சொல்கிறாள்.

    தாய் கேட்டாள்: உனக்கு அவளிடம் என்ன பிடிக்கும்?

    பதில்: அவள் என்னை வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று புகழ்வது.

    தம்மிடமிருந்து, தாம் நம்புவதிலிருந்து, மாறுபட்டவர்களைக் கண்டால் பலருக்கும் ஏதோ பயம். அது கோபமாக மாறுகிறது.

    கதை

    என்னுடன் ஒரே மாதம் வேலைபார்த்த கணபதி, “நீங்கள் வெஜிடேரியனா?” என்று கேட்டபோது, “ஆமாம்,” என்றேன்.

    உடனே கோபமாக, “எத்தனை பிராமணர்கள் ‘எல்லாவற்றையும்’ சாப்பிடுகிறார்கள், தெரியுமா?” என்று கத்தினார்.

    நான் அமைதியாக, “நீங்கள் என்னைப் பற்றிக் கேட்டீர்கள். அதற்கு நான் பதில் சொன்னேன். ‘எல்லாப் பிராமணர்களும்’ என்று கேட்டிருந்தால், வேறு விதமாகப் பதில் அளித்திருப்பேன்,” என்றேன்.

    அவருடைய முகம் சுருங்கிப்போயிற்று.

    மனைவி என்றால் தனது அதிகாரத்தை ஏற்கவிருப்பவள் என்று எண்ணுவதுபோல் நடப்பவர் கணபதி. பேசும் சுதந்திரத்தைக்கூடத் தன் மனைவிக்கு அளித்திருக்கமாட்டார். பிறர் பேசும்போது அவள் எதுவும் பேசாது, சிரித்துக்கொண்டே இருப்பாள்.

    ஏன் தன் மனைவி கலகலப்பாக இல்லை என்ற குழப்பம் எழ, “என் மனைவி படித்தவள். (இதை இருமுறை அழுத்தமாகக் கூறினார்). ஆனால், உங்களைப்போல் இல்லையே!” என்று என்னிடம் குறைப்பட்டார்.

    என் பதில்: “நீங்கள் நினைப்பதை, சொல்வதை, பிறர் அப்படியே ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி இல்லாவிட்டால் கோபம் வருகிறது. உங்களுக்கு என்னைப் போன்ற மனைவி சரிப்படமாட்டாள்”.

    அன்பு என்பது ஒருவரை அவர் உள்ளபடியே ஏற்பது. மற்றவரிடம் எதை எதையோ எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் உண்டாகும்.

    கதை

    புதுமணத் தம்பதிகளான பிரபாவும் பார்த்திபனும் ஈராண்டுகள் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அப்போது மனைவியின் முகம் சிறிது கோணினாலும், உடனே மன்னிப்பு கேட்டுவிடுவான் பார்த்திபன். தான் தவறு செய்திருக்கலாமோ என்ற சந்தேகத்தால் அல்ல.

    (புரியவில்லையா? உடல் நெருக்கம் மட்டுமே முக்கியமாக இருந்த காலம் அது).

    பிரபாவின் கை ஓங்கியது. அதன்பின், அறிவு முதிர்ச்சி இன்றி, எந்த வாய்ச்சண்டையிலும் தான்தான் வெல்லவேண்டும் என்று நினைப்பவளாக ஆனாள்.

    ‘என்ன பேச ஆரம்பித்தாலும், ஏனோ வாக்குவாதத்தில் முடிகிறதே!’ என்று பார்த்திபன் அவளிடமிருந்து லேசாக விலகலானான்.

    பொதுவாக, எல்லாத் தம்பதிகளையும்போல் பிரபாவின் பெற்றோரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்வதுண்டு. மௌனமாக இருப்பதற்கு அது மேல் என்று புரிந்தவர்கள்.

    பிரபா தாயிடம் கலந்து ஆலோசித்தாள். “அது எப்படி, நீயும் அப்பாவும் இத்தனை வருடங்களாக ஒருவரையொருவர் பொறுத்துப் போனீர்கள்?”

    “யாரிடம்தான் குறையில்லை? அடி, உதையில் இறங்காதவரை, பொறுத்துப் போக வேண்டியதுதான்,” என்று வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கினாள் தாய். “அப்பா சிறு தவற்றைச் செய்யும்போது, அதைக் கவனிக்காததுபோல் இருந்துவிடுவேன். அவரைப் பற்றிப் பிறரிடம் புகார் செய்வதும் கிடையாது”.

    ஒருவர் கூறுவதை ஏற்க முடியாததால் சண்டை பிடிக்கத் தோன்றுகிறதா?

    அமைதியாகப் பேசினால் பயன் கிடைக்கும். மௌனம் சாதித்தால், ஒருவர் மனத்தில் இருப்பதை மற்றவர் எப்படிப் புரிந்துகொள்ள இயலும்?

    மற்றவர் செய்த பிழைகளைப் பெரிதுபடுத்தாது இருப்பது உறவைப் பலப்படுத்தும் என்றெல்லாம் மணவாழ்க்கை அவளுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.

    “குறையே இல்லாதவராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்கிற காரியமா? நான் மட்டும் என்ன, தப்பே செய்யமாட்டேனா? விட்டுப்பிடி”.

    ஒரு துணுக்கு

    எல்லா நாடுகளிலும் பெண்கள் தலைவர்களாக இருந்தால் என்ன ஆகும்?

    ஒருவரோடு ஒருவர் பேசாத நாடுகள் உருவாகும்!

    பெண்ணின் எதிர்பார்ப்பு

    நாம் விரும்பிய ஒருவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அவர் அப்படி இல்லாவிட்டால் ஏமாற்றம்தான் உண்டாகும்.

    மனைவி தன்னை எப்போதும் சாடுகிறாளே என்று வருந்திய ஒருவனின் குமுறல்: “நான் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவள் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவள், வீட்டு வேலை செய்யப் பிடிக்காது என்று வீட்டில் சமையலுக்குக்கூட ஆள் போட்டிருக்கிறேன். அவளுடைய சொந்த உபயோகத்திற்கு கார். இன்னும் என்ன வேண்டும்?”

    கணவனுக்குப் பெரிய வேலை, அதனால் பொறுப்புகள் நிறைய இருக்கும் என்பதெல்லாம் அவளுக்கும் புரியாமலில்லை.

    வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குப் போய்வரும்போதெல்லாம் பரிசுப் பொருட்கள் வாங்கி வருகிறான். இருந்தாலும், தனக்காக அவ்வளவு நேரத்தைச் செலவழிப்பதில்லை என்ற வருத்தம் கோபமாக மாறிவிட்டது.

    காதலனாக இருந்தபோது இப்படியா இருந்தான்! எவ்வளவு எதிர்பார்ப்புடன், குடும்பத்தை எதிர்த்து அவனை மணந்தாள்!

    இப்போது அவளுக்கு வேண்டியது அவனுடைய அன்பான கவனிப்பு. வேறு எதுவும் அதற்கு ஈடாகாது.

    வெளிப்படையாகக் குறைகூறாது அனுசரித்து நடந்தால், இருவரில் ஒருவர் தானாக மாறலாம். இல்லை, மாற்ற முடியாததை ஏற்க வேண்டும்.

    கதை

    அமெரிக்கப் பெண்மணி லூயிஸ் கலகலப்பானவள். அவளுடைய கணவரோ நேர்எதிர். அழுமூஞ்சி என்று சொல்லத்தக்கவர்.

    சற்று பழகியதும், நான் அவளிடம் கேட்டேன்: “உனக்கும் உன் கணவருக்கும் பொருத்தமே இல்லையே! எப்படி அவருடன் இருக்கிறாய்?”

    (அவர்களுடைய பிரச்சினையில் நான் மூக்கை நுழைப்பதை அவள் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டாள் என்று தெரியும்).

    உடனே, “அப்படிப் பார்த்துக்கொண்டே இருந்தால், முடிவே கிடையாது,” என்று பதிலளித்தாள். சற்றுப் பொறுத்து, “என் கணவர் விவாகரத்து ஆனவர். அவருடைய முதல் மனைவியை ஒருமுறை சந்தித்தேன். என்னைப் போலவே இருந்தாள்,’ என்று தெரிவித்தாள்.

    வெளிப்படையாகக் கட்டுப்படுத்தாது, அவருடைய குறைகளைப் புரிந்து, அவற்றுடன் அவரை ஏற்கும் விவேகம் நிறைந்தவள் லூயிஸ். அதனால் அவர்களுடைய தாம்பத்தியம் குறுகிய காலத்தில் முடிந்துவிடவில்லை. தன் குறைகளை உணர்ந்த கணவரும் அவளிடம் நன்றி செலுத்தும் விதமாக மிக்க அன்புடன் நடந்துகொண்டார்.

    காதல் எதுவரை?

    காதலர்களாக இருக்கும்போது, உல்லாசமாக ஊர்சுற்றி, செலவைப் பார்க்காமல் ஒருவர் மற்றவருக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து, சிரிப்பும் களிப்புமாக இருப்பதோடு காதல் முடிந்து விடுவதில்லை. வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போடும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாக நடக்க வேண்டியதும் அவசியம்.

    Share
  • நாலடியார் நயம் – 29

    நாலடியார் நயம் – 29

    நாங்குநேரி வாசஸ்ரீ

    29. இன்மை

    பாடல் 281

    அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
    பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
    ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
    செத்த பிணத்திற் கடை.

    காவி தோய்ந்த ஆடையை இடுப்பில்
    கட்டி வாழ்ந்தாலும் பத்தோ எட்டோ
    கொண்டவராயின் பலருக்கிடையிலும்
    கிடைக்கும் மதிப்பு, இல்லையேல் உயர்
    குடிப்பிறப்பு இருப்பினும் ஒன்றுமில்லார்
    கிடக்கும் உயிரற்ற பிணத்தைவிட
    கீழானவராகவே கருதப்படுவார்.

    பாடல் 282

    நீரினும் நுண்ணிது நெய்யென்பர், நெய்யினும்
    யாரும் அறிவர் புகைநுட்பம்; – தேரின்
    நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
    புகற்கரிய பூழை நுழைத்து.

    நீரைவிட நெய் நுட்பம் நெய்யைவிட புகை
    நுட்பமென அனைவரும் அறிவர் ஆராய்ந்தால்
    கையேந்துதலெனும் துன்பமுள்ள வறுமையாளன்
    கடும்புகையும் புகுதற்கரிய துவாரத்திலும் நுழைந்து
    சென்று செல்வரை நாடி யாசிப்பான்.

    பாடல் 283

    கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
    செல்லாவாம் செம்பொறி வண்டினம்; – கொல்லைக்
    கலாஅற் கிளிகடியும் கானக நாட!
    இலாஅஅர்க் கில்லை தமர்.

    கொல்லைகளில் கல்லால் கிளிகளை ஓட்டும்
    காடுகள்சூழ் நாட்டுடை வேந்தனே! பெரும்
    கற்களையுடை மலையின்மேல்
    காந்தள் மலராதபோது செம்புள்ளிகளுடை
    வண்டினங்கள் அங்கு செல்லா அதுபோல்
    வேண்டிய பொருள் இல்லாதாருக்கு
    விரும்பிய உறவினர் இல்லை.

    பாடல் 284

    உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
    தொண்டரா யிரவர் தொகுபவே; – வண்டாய்த்
    திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
    ஒருவரும் இவ்வுலகத் தில்.

    பொருளிருக்கும் காலத்தில் காக்கைக்கூட்டம்
    போல் தொண்டு செய்ய ஆயிரக்கணக்கில் கூடுவர்
    பொருளற்ற வறுமை நிலையில் வண்டுபோல்
    பலதிசையில் ஒருவேளைச்சோற்றுக்கு அலையும்
    பொழுது தீதில்லாது வாழ்கிறீரா (நலமா?) என வினவுவார்
    பாரினிலே யாருமில்லை.

    பாடல் 285

    பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும்
    சிறந்ததம் கல்வியும் மாயும் – கறங்கருவி
    கன்மேற் கழூஉம் கணமலை நன்னாட!
    இன்மை தழுவப்பட் டார்க்கு.

    அருவிகள் கல்மேல் வீழ்ந்தொலித்து
    அதன்மாசுபோகக் கழுவும் மலைநாட்டுடை
    அரசனே! உலகில் வறுமை கொண்டவர்க்கு
    அவர் பிறந்த குலப்பெருமை கெடும்
    அரும்பெரும் வல்லமை கெடும்
    அளவிற் சிறந்த கல்வியும் கெடும்.

    பாடல் 286

    உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
    உள்ளூர் இருந்தும்ஒன்று ஆற்றாதான்; – உள்ளூர்
    இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
    விருந்தினன் ஆதலே நன்று.

    வயிற்றுப் பசி மிகுந்து துன்புற்று தம்மிடம்
    விரும்பி வந்தார்க்கு உள்ளூரிலிருந்தும் ஒன்றும்
    வழங்க இயலாதவன் அங்கேயே இருந்து தன்
    வாழ்நாளை வீணாய்க் கழித்து உயிர்விடாது
    வேற்றூர்க்குத் தான் சென்று மற்றவருக்கு
    விருந்தாளியாய் இருப்பதே நல்லது.

    பாடல் 287

    நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம்
    கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; – கூர்மையின்
    முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
    அல்லல் அடையப்பட் டார்.

    முல்லையரும்புகளை வருத்தும் பற்களை உடையவளே!
    மண்ணுலகில் வறுமை எனும் துன்பம் சேரப்பெற்றவர் தம்
    மேன்மைக் குணங்களையே அல்லாமல் புத்தி கூர்மையையும்
    மற்ற சிறப்புக்களனைத்தையும் ஒருசேர இழப்பர்.

    பாடல் 288

    இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது
    முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
    நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
    கெட்டாற்று வாழ்க்கையே நன்று.

    வறுமைக் குழியில் விழுந்து துயருற்று
    வருபவர்க்கு யாசிக்கும் பொருளைக் கொடுக்க
    முடியாது உள்ளூரில் வருந்தி வாழ்தலைவிட
    முயன்று நெடுந்தூரம் நடந்து வரிசையான
    வீடுகளில் கை ஏந்தி இரந்து உண்ணும் கெட்ட
    வழியில் வாழ்வதே நலம்.

    பாடல் 289

    கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
    அடகு பறித்துக்கொண் டட்டுக் – குடைகலனா
    உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
    துப்புரவு சென்றுலந்தக் கால்.

    அனுபவிக்கப்படும் பொருட்கள் நீங்கி வறுமையால்
    அல்லலுறும்போது பொற்கடகம் அணிந்த தம்
    கைகளால் கீரைகளைப் பறித்துச் சமைத்து பனங்
    காய்களில் நுங்கெடுத்தபின் துளையுள்ளது போலும்
    பாத்திரத்தில் உப்பில்லாத வெந்த அக்கீரையைப்
    புசித்து மன ஊக்கங்கெட்டு வாழ்வர்.

    பாடல் 290

    ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
    பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் – நீர்த்தருவி
    தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!
    வாழாதார்க் கில்லை தமர்.

    நல்ல தன்மையுடை அருவிகள் குறையாத
    நற்சிறப்புடை குளிர் மலைநாட்டு அரசனே!
    நிறைந்த புள்ளிகளுடை வண்டினம்
    நன்கு பூத்துதிர்ந்த கொம்பினை விருப்பத்துடன்
    நாடிச் செல்லமாட்டா அதுபோல் பொருளுடன்
    நல்வாழ்வு வாழாதார்க்கு உறவினர் இல்லை.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 262

    படக்கவிதைப் போட்டி – 262

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (14.06.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 261இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 261இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கொலுவீற்றிருக்கும் பொம்மைகளூடே கண்ணைப்பறிக்கும் கவினோடு காட்சிதருகின்றது இந்த வண்ணப் பரி. இவ்வெழிற்படத்தை எடுத்திருப்பவர் திருமிகு. ஷாமினி. இதனை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. என் நன்றிகளை இவ்விருவருக்கும் உரித்தாக்கிக் கொள்கின்றேன்.

    குதிரைகளையே நீண்டதூரப் பயணத்திற்கேற்ற வாகனமாக மக்கள் பயன்படுத்திய காலமும் இருந்தது. போர்க்களங்களில் சாகசம் நிகழ்த்தி வேந்தர்களுக்கு வெற்றிதேடித் தந்ததிலும் குதிரைகளின் பங்கு மகத்தானது. புரவி, இவுளி, பரி, கலிமான், கடுமான் என்று பல்வேறு பெயர்களால் சங்க காலத்தில் குதிரைகள் அழைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு விலங்கைக் குறிக்கப் பல பெயர்கள் புழக்கத்தில் இருந்ததை வைத்தே அதன் பயன்பாட்டு மிகுதியையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

    கம்பீரமும் அழகும் கொண்ட இந்த மண் குதிரையைக் கண்டதும் நம் கவிஞர்களின் மனக் குதிரையும் பல்வேறு எண்ணங்களை நோக்கித் தாவும்; நற்கருத்துக்களைக் கவிதைகளில் தூவும் என்ற எதிர்பார்ப்போடு அவர்தம் படைப்புக்களைப் பார்வையிடுவோம் வாருங்கள்!

    *****

    ”நகராத இந்த பொம்மைக் குதிரையைப் போலவே நாம் நம்பிடும் அரசியலும் பயனற்ற மண் குதிரையே” என்று வெறுத்து விளம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நாட்டிலும்…

    பொம்மைக் குதிரை ஓடாது
    போகு மிடத்தைச் சேராது,
    இம்மி யளவும் அசையாத
    இதிலே ஏறி அமர்ந்திட்டால்
    நம்மைப் பார்த்து நகைப்பாரே,
    நகர்ந்திடு சிறுவர் விளையாட்டு,
    நம்பிடும் நாட்டு அரசியலும்
    நமக்குக் காட்டிடும் மண்குதிரையே…!

    *****

    ”பிறந்தவீட்டைப் பிரிந்து புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டபோது கூடவே கூட்டி வந்தது, அண்ணன் அன்பாய் வாங்கித்தந்த இந்த பொம்மைக் குதிரை”
    என்று சிலிர்க்கும் தங்கையின் பாசத்தைக் காண்கிறோம் திரு. சீ. காந்திமதிநாதனின் கவிதையில்.

    அண்ணன் வாங்கித் தந்த குதிரை
    அண்ணன் நினைவு சொல்லும் குதிரை
    அண்ணன் பாசம் காட்டும் குதிரை
    அண்ணன் வசம் நிறுத்தும் குதிரை

    கேட்டது எல்லாம் வாங்கித் தருவான்
    கேட்க மறந்தாலும் கொண்டு வருவான்
    கேட்பதை நானும் குறைத்துக் கொண்டேன்
    கேட்பதால் ஆகும் செலவினைக் கண்டு

    விவசாய நிலத்தில் வியர்வை சிந்துகிறான்
    விவசாய விளைபொருளோ அடிமாட்டு விலை
    குதிரை விலையிலோ மற்றைய பொருட்கள்
    குண்டுமணிக் காசு கூட மிச்சம் ஏதுமில்லை

    வயித்த கட்டி வாயக் கட்டி
    விவசாயி பொழப்பு போகுது
    அறியாத வயதில் அண்ணன்
    கேட்டது எல்லாம் வாங்கித் தந்த
    விபரம் இப்பத்தான் புரியுது

    தனக்கு வேட்டியோ ஒன்னு இரண்டு
    உடுத்திக்க சட்டையோ மூணு நாலு
    வேட்டி விட சட்டை கூடுதலோ
    கெட்டியான கேள்வி வரும்
    அண்ணன் சட்டை போட்டால்தான்
    கண்ணிரண்டில் தூக்கம் வரும்

    தாயில்லாத பிள்ளை
    தகப்பனில்லாத பிள்ளை
    யார் சொன்னது?

    அண்ணன் இருக்க
    எண்ணமே இல்லாமல் போனது

    பருவப் பொண்ணு
    திருமணமே பண்ணு
    அண்ணன் சொன்னதாலே
    சம்மதம் சொன்னேன்

    பரிசம் போட்டாச்சு பத்திரிகையும் அடிச்சாச்சு
    பந்தக்காலும் நட்டாச்சு பந்திப்பாயும் விரிச்சாச்சு

    தாலி கட்டிய புதுப் பொண்ணு
    புகுந்த வீடு போகணும்மாமே
    புதுப்பட்டு புது மாப்பிள்ளை
    புதுமணப் பொண்ணு கோலம்
    பிறந்த வீட்டில் இருக்கும்போது தெரியல

    புகுந்த வீடு போகணும்னு
    பிறந்த வீட்டை விட்டுப்
    பிரியும் போது
    கூடவே கூட்டி வந்தது
    அண்ணன் வாங்கித் தந்த
    மரப் பொம்மை குதிரை
    மறக்க முடியுமோ
    மூச்சு இருக்கும் வரையில்

    *****

    ”பரிகள்போல் ஆட்சியில் வந்தமர்ந்து, பின்பு தம் நரிக்குணத்தை வெளிப்படுத்தும் அரசியலாளரை அடையாளம் கண்டும் மீண்டும் அவர்குணத்தை மறக்கிறானே வாக்காளன் அடுத்த தேர்தலில்!” என்று வருந்துகின்றார் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்.   

    மண்பரிகள்

    மண்ணில் பரியைச் செய்து
    மனங்கவர் வண்ணம் தீட்டி
    கண்ணில் கண்ட பின்பு
    கடைதனில் உடனே வாங்க
    ஆவலை ஊட்டும் வணிகன்
    ஆயிரம் பேர்கள் உண்டு

    அவனியில் அப்பரி போல்
    அரசியல் தனிலும் உண்டு
    பாய்ந்திடும் பரிகள் போலப்
    பாசாங்கு செய்து விட்டு
    வாக்குகள் வாங்கிப் பின்
    வந்தமர்வர் பதவி தனில்

    வாக்கிட்ட மக்கள் இடர்
    வாழ்வினில் உடனிருக்க
    வந்தமர்ந்த பரிகளெல்லாம்
    வஞ்ச மிகு நரிகளென்று
    அறிந்திடுவான் வாக்காளன்
    அடுத்த தேர்தலில் மறப்பதற்கு!

    *****

    மண்குதிரை ஏறி மாக்கடல் தாண்ட விழைவதுபோல், புவியின் வளமழித்துப் புதிய சொர்க்கம் தேடுகின்ற மானுடனை எண்ணி வேதனையுறுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மண்குதிரைச் சவாரி

    மண்குதிரை மீதேறி
    மாக்கடலைக் கடந்துவிட்டு
    மறுகரையை அடைந்திடவே
    மன்றாடும் மாந்தரைப்போல்

    கண்ணிரண்டும் விற்றுவிட்டு
    கவின்மிகு சித்திரத்தைக்
    கண்டுநாளும் களித்திடவே
    கனவுகாணும் மூடனைப்போல்

    இயற்கை வளங்களை அழித்து விட்டு
    இன்ப வாழ்க்கையைத் தேடுகின்றோம்
    நிலவளம் நீர்வளம் கெடுத்து
    நித்திய இன்பத்தை நாடுகின்றோம்…

    சுவரை அழித்துவிட்டு
    சுந்தர ஓவியந் தீட்டுவதுபோல்
    பூமியின் வளமழித்து
    புதிய சொர்க்கம் தேடுகின்றோம்….

    வண்ணக் குதிரையைக் கண்டதும் கவியெழுதத் தம் எண்ணக்குதிரையை தட்டிவிட்டுப் பல நல்ல கருத்துக்களை அழகாய் அளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    *****

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது அடுத்து…

    வண்ண வண்ணக் குதிரைகள்
    கிராமத்து வாயிலில் நம்மை வரவேற்கும்
    ஐயனாரும் அதனூடே
    வாளோடே வானுயர
    குலசாமி நடுவினிலே
    பார்ப்பவர் கண்கள்
    பிரமிக்க வைக்கும்
    நம் கிராமிய மணத்தில்தானே!

    பட்டினத்தில் குதிரைகள்
    பணம் வைத்து ஆடவே
    பாழாய்ப் போன மாந்தர்கள்
    பணமிழந்ததும் அதனிலே!

    சத்ரபதியின் வீரம்
    ஜான்சி ராணியின் வீரம்
    வீரத்தை எதிர்கொள்ளும் வீரம்
    அதன் அடையாளமே இந்தக் குதிரையினமே!

    ஆன்மிகத் தோன்றலிலும் குதிரை
    அரச வரலாற்றிலும் குதிரை
    இயந்திர இயக்கத்தில் திறன் குதிரை
    மழலைப் பருவத்தில் ஆட்டம் குதிரை
    இடைவிடாது நம் கனவில் மனக்குதிரை
    குதிரை குதிரை

    வண்ண வண்ணக் குதிரை!!

    ”ஐயனாரிடத்திலும் குதிரை, ஆட்டத்திலும் குதிரை, வேகத்துக்கும் குதிரை, விவேகத்துக்கும் குதிரை, திறனுக்கும் குதிரை, தீரத்துக்கும் குதிரை, எண்ண ஓட்டத்துக்கும் குதிரை என எத்தனை எத்தனை வண்ணங்களில் குதிரைகள் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன!” என்று வியக்கும் திருமிகு. சுதா மாதவனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • எழுவகைப் பெண்கள் – 17: பெண்களைக் குறிவைத்துப்  பணம் பண்ணும் கேசப் பொருள் வர்த்தகம்

    எழுவகைப் பெண்கள் – 17: பெண்களைக் குறிவைத்துப்  பணம் பண்ணும் கேசப் பொருள் வர்த்தகம்

    அவ்வைமகள்

    பெண்களைக் குறிவைத்துப்  பணம் பண்ணும் கேசப் பொருள் வர்த்தகம்  

    தலைமுடியைப் பற்றிய அறியாமை, அறிவியல் நூற்றாண்டான இந்த நூற்றாண்டில் மிகுந்திருப்பது வருத்தமே! இன்று பெண்கள், மாபெரும் வணிகப் பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். கேசப்பொருட்கள் வர்த்தகம் பெண்களின் புத்தியை மழுக்கி, அவர்கள் அவசர முடிவு எடுக்குமாறு வணிகக் கவர்ச்சிகள் காட்டி, வெகு வசமாய் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது.

    இன்று, கேசப்பொருள் வணிகம் பில்லியன் டாலர் வணிகமாகக் கொழித்துச் செழித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குப் பெண்களே மூல காரணம். பெண்களின் ஆதரவினால் மட்டுமே இந்த வணிகம் நடக்கும் என்பதால் என்னென்ன வியாபாரத் தந்திரங்கள் உண்டோ அவையனைத்தும் பிரயோகிக்கப்படுகின்றன.  கேசப்பொருள் வணிகத்தின் ஒரே குறிக்கோள் என்னவென்றால், பெண்களை இந்த வணிகத்தில், தொடர் வாங்குவோர்களாக, தொடர் நுகர்வோர்களாக தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே.

    பெண்கள், ஆண்களின் சார்பின்றி சுயமாக இயங்கும் திறனை. சுயமாகக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கும் திறனை வெகு சாதுரியமாய் கேசப்பொருள் வணிகம் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. வறுமையில் வாடுபவர்கள் கூட, கணிசமான தொகையை, கேசப்பொருட்களுக்காகச் செலவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இன்று என்பது உலகளாவிய விஷயமாய் நிலைபெற்றிருக்கிறது.

    இந்நிலையில், தலைமுடியின் நுண்ணமைப்பு மற்றும் அதன் பண்புகளை அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு செய்வது நமது தலையாய கடமையாயிருக்கிறது. குறிப்பாகப் பெண்களுக்கு, தலைமுடியின் அமைப்பு, அதன் தன்மைகள் ஆகியன அத்துப்படியாகத் தெரியவேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைமுடி பற்றிய ஞான வெளிச்சம் உண்டானதென்றால், அவளது குடும்பமே கேச ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடும்! ஏனெனில், ஒரு  குடும்பத்தின் ஒட்டுமொத்த உடல்நலப் பாதுகாப்பும் பெண்ணின் கையில் தான் இருக்கிறது.

    எனவே அதுபற்றி நாம் முதலில் பேசுவது நல்லது என்றார் – தொடர்ந்தேன்.

    சுமார் 100 மைக்ரான் அளவு சராசரி தடிமன் மட்டுமே கொண்டது, மனிதத் தலைமுடி (17 முதல் 181 மைக்ரான் வரை  தடிமன் மாறுபடும்); அதன் புறப்பரப்பு மிக அதிசயமான  அமைப்போடு காணப்படுகிறது. தடவிப் பார்க்க வெகுசன்னமாய்த் தெரிகிற தலைமுடியின் புறப்பரப்பு உண்மையில் ஒரு செதிலடுக்காகும். தலைமுடியின் புறப்பரப்பு Cuticle எனப்படும் தலைமுடிக் கவசத்தால் ஆனது.

    ஆம்! ஒன்றின் மீது செருகப்பட்ட எண்ணிறந்த நுண்ணிய செதில்களை, தலைமுடியின் புறப்பரப்பில் காணலாம். தலைமுடியின் புறப்பரப்பில் உள்ள செதில்களின் அடுக்கு முறை, ஓட்டு அடுக்கு முறை பாணியில் அமைந்துள்ளது. வீட்டின் கூரைமீது ஓடுகள் வேயப்படும்போது, இவ்வாறுதான் ஓடுகளை அடுக்குவார்கள். வீட்டின் கூரையின் ஓடுகள் கீழ்நோக்கி அமைந்திருப்பதைப் போலவே, தலைமுடியின் புறப்புரச் செதில்களும் கீழுநோக்கியே அமைந்துள்ளன.

    By Nicola Angeli/MUSEThis file was uploaded by MUSE – Science Museum of Trento in cooperationwith Wikimedia Italia. – MUSE, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=48293053

    இவ்வாறான செதிலடுக்கு கொண்ட புறப்பரப்பு, தலைமுடிக்கு மினுமினுப்பைத் தருவதோடு, நம் மீது விழும் ஒளி மற்றும் வெப்பத்தை வலுவாக எதிரொளிப்பதற்கான ஏற்பாடாகும். இவ்வகையில், homeostasis எனப்படும் உடல்வெப்பத் தகவுசீரமைப்பில் தலைமுடி முக்கியமான பங்காற்றுகிறது.

    தலைமுடியின் புறப்பரப்பு செய்யும் கூடுதல் பணி என்னெவென்றால், அது, சூழலிலிருந்து நம்மீது விழும் தூசு தும்புகள் மற்றும் நச்சுகள் யாவற்றையும் தன் மீது சேகரித்துத் துப்புரவு செய்கிறது. மேலும், அது முடியின் உள்பாகங்களுக்குப் பாதுகாப்புக் கவசமாய் இருக்கிறது. குறிப்பாக, தலைமுடியின் ஈரப் பதத்தைப் பாதுகாக்கிறது.

    தலைமுடியின் புறத்தோற்றம் ஓர் அதிசயம் என்றால், உட்தோற்றம் இன்னுமோர் அதிசயம். பார்க்கப் போனால், புறத்தைவிட, அகத்தின் அதிசயம் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் தொடர் அதிசயமாய் விரிகிறது. ஆம்! ஒவ்வொரு மயிரிழையும் ஒரு அற்புதச் சுரங்கம். வெளியிலிருந்து உள்நோக்கில், தலைமுடிக்குள் சென்று பார்த்தால், அதிநுட்பமான, அடுக்கடுக்கான புதையல் களஞ்சியத்தை அங்கே நாம் பார்க்க  முடியும். கீழே தரப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள் (https://www.mdpi.com/1420-3049/25/9/2143/htm) [1].

    தலைமுடியின் உள்கட்டமைப்பு பற்பல அடுக்குகளைக் கொண்டதாக இருப்பதை, படம் 2 ஐயும் படம் 3 ஐயும் சேர்த்துப் பார்த்தால் விளங்கும்.

    படம் 2: மனிதத் தலைமுடியின் படிநிலை உள்கட்டமைப்பு; Mullner , Alexander , R. M ., Ruben, Pahl, Doris, Brandhuber, Herwig Peterlik (2020)Porosity at Different Structural Levels in Human and Yak Belly Hair and Its Effect on Hair Dyeing, Molecules25(9), 2143; https://doi.org/10.3390/molecules25092143

    படம் 3. தலைமுடியின் குறுக்குவெட்டுத் தோற்றம்.
    https://biomedicalephemera.tumblr.com/post/66493115496/hair-cross-section-diagrams-and-representations/embed; A Treatise on the Diseases of the Skin. Dr. Henry W. Stelwagon, 1923

    தலைமுடியின் நெடுக்குவெட்டுத் தோற்றத்திலும், தலைமுடியின் அழகிய உள்ளமைப்புக் கட்டமைப்பைக் கூடுதலாக அறிந்துகொள்ள முடியும். இந்த நெடுக்குவெட்டுத் தோற்றத்தில், அடியிலிருந்து நுனி நோக்கிச் செல்வதான  அமைப்பு தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பின்னாலும் நாம் உபயோகப்படுத்திப் பேசவிருக்கிறோம்.

    படம் 3. தலைமுடியின் நெடுக்குவெட்டுத் தோற்றம்.

    https://biomedicalephemera.tumblr.com/post/66493115496/hair-cross-section-diagrams-and-representations/embed; A Treatise on the Diseases of the Skin. Dr. Henry W. Stelwagon, 1923

    முதலாவதாக, க்யூட்டிகிள் எனப்படும் தலைமுடியின் கவசத்தின் தன்மையையும் அதன் செயல்களையும் அறிந்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். ஏனெனில். தலைமுடியின் தலையாய பிரச்சினைகள் க்யூட்டிகிளில்  தான் தொடங்குகின்றன.  “எனக்கு அறிவியல் ஞானம் இல்லை” “எனக்கு அறிவியல் ஆர்வம் இல்லை“ என்று எவரும் சொல்லிவிடக் கூடாது. சிறிது  நேரத்தை  இதற்கென  ஒதுக்கி,  ஒவ்வொருவரும், மிகக்  குறிப்பாகப் பெண்கள், இதனை நன்கு அறிந்து புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

    க்யூட்டிகிளின் செதில்கள் புரதத்தால் ஆனவை. இந்தச் செதில்களுக்கு இடையில் க்யூட்டிகிள் – க்யூட்டிகிள் செல் இழைக்  குழம்பு (Cuticle-Cuticle Cell Membrane Complex)  எனும் பொருள் இருக்கிறது. இதனை CCMB என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். CCMB-யில் என்னென்ன அடக்கம் என்றால்: டெல்டா மற்றும் பீட்டா புரதங்கள், 18- மீத்தைல் எய்க்கோசனாயிக் அமிலம் (18-methyl eicosanic acid), மற்றும் கட்டில்லாத அமிலங்களாக, ஒலியிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் ஆகியன உள்ளன.

    இதில், 18- மீத்தைல் எய்க்கோசனாயிக் அமிலம், சுருக்கமாக 18-MEA என்று அழைக்கப்படுகிறது.

    CCMBயில், 18MEA எவ்வாறு அமைந்திருக்கிறது என்றால், அது  பீட்டா புரதங்களோடு,  கொவேலன்ட் பிணைப்புகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. கோவலன்ட் பிணைப்புகள் வெகு உறுதியான பிணைப்புகள் ஆகும்.

    CCMB குழம்பு என்ன செய்கிறதென்றால் முடிகளின் செதில்களுக்கு இடையே, ஒரு மெத்தை போன்று, சிமெண்ட் போன்று செயல்பட்டு, செதில்களைப் பிணைத்தும் அவற்றிற்கு இடையே ஒரு உயவு எண்ணெய் ஆகவும்  ஒரே நேரத்தில் செயல்பட்டு,  முடியின் செதில்கள் பிரியாமல் –  விரியாமல் காக்கிறது. முடியின் செதில்கள்  பிரியாது விரியாது இருப்பது தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு, மிக முக்கியமானது.  இதில் 18MEA செய்கிற பணி அதிமுக்கியமானது. முடியின் மிருதுத் தன்மைக்கும், வளைந்து நெளியும் இசைவுத்தன்மைக்கும், மினுப்புத் தோற்றத்திற்கும்   எது காரணமாகிறது என்றால், அது 18MEA தான்.

    மேலும், முடிக்கு Hydrophobicity எனப்படும் நீர் எதிர்ப்புத் திறனை 18MEA  தருகிறது. இதனால் தலையில் நீர் பட்டதென்றால், தாமரையிலையில் தண்ணீர் பட்டாற்போல், நீர் துளித்து நிற்கும் – முடியை நனைக்காது. இதனால், எந்தச் சூழலிலும் வெளியிலிருந்து அதிக நீரை முடி உறிஞ்சாதவாறு 18MEA காக்கிறது.

    நவீனம் – மாடர்னிசம் – என்றாகியிருக்கிற இந்த காலக்கட்டத்தில், ஏறக்குறைய அனைவருமே, 18MEA சிதிலம் அடைந்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், ஷாம்பூ, கண்டிஷனர், சாயம், ஸ்டைலிங் ஜெல், என்று பல்வேறு வேதிப்  பொருட்களைப் பயன்படுத்துவதும், மற்றும் தலைமுடியை அயர்ன் செய்வது, போன்ற பழக்கங்களால்.

    ஷாம்புக்கள், ஆல்கலைன் பி. எச் எனப்படும் அளவீடு கொண்ட காரவகைப் பொருட்களால் ஆனவை. இவை 18-MEA உடன் வேதிவினை புரிந்து 18-MEAஐ அழித்துவிடுகின்றன. கண்டிஷனர்கள் தேவையற்ற ஒரு பூச்சை க்யூட்டிகிளின் மேல் இட்டு, தேவையற்ற எடையை முடியின் மீது ஏற்றி க்யூட்டிகிளைப் பிய்த்து இழுத்து முறிக்கின்றன. இதற்கு மேலாக, கூடுதல் சிதைவு, ஹேர் ட்ரையர் எனப்படும் உஷ்ண உலர்த்திகளால் நடைபெறுகிறது.  உஷ்ண உலர்த்திகள், க்யூட்டிக்கிளின் செதில்களை அகட்டி விரித்து, செதில்களுக்கு அடியில் இருக்கிற CCMB குழம்பை, துரத்தி வெளியேற்றி, வறள வைக்கிறது.

    இதனால், முடி உலர்ந்து, உறுதி இழந்து, பலவீனமாகி அறுந்து போகும் தன்மையை அடைகிறது; பல நேரங்களில் முடி, வேரோடு உதிரும் நிலையம் உண்டாகிறது. இருக்கும் முடிகளும் கூட நுனி வெடித்துப்  பிளந்து கதிர் கதிராய் விரியும்.

    க்யூட்டிகிள் பாதிக்கப்பட்டால், வேரறுபடுவது புரியவில்லையே என்று நீங்கள் கேட்கலாம்.

    முடியின் நெடுக்கு வெட்டுத் தோற்றத்தைப் பார்த்தால் க்யூட்டிகிளுக்கும், வேருக்கும் உள்ள தொடர்பு புரியும். க்யூட்டிகிள் வேரிலிருந்து தொடங்குவது, எனவே வேருக்கும் க்யூட்டிகிளுக்கும்  நேரடித் தொடர்பு உள்ளது. க்யூட்டிக்கிள் பாதிக்கப்பட்டதென்றால் வேரும் பாதிக்கப்படுகிறது. கியூட்டிகிள் பலவீனமாகும் ஒவ்வொரு தருணத்திலும் வேரும் பலவீனமாகிறது.

    இங்கு நாம் வேர் என்று குறிப்பிடுவது முடியின் அடியில் உள்ள குமிழி போன்ற பகுதி; இது Hair Bulb எனப்படுவது. இந்த, வேர் எனப்படும் முடியின் அடிக்குமிழி, உண்மையில் ஸ்கால்ப் (Scalp) எனப்படும் மண்டைத் தோலுக்கு உள்ளே, அடியில் இருக்கிறது. இதனை, படம் 5இல் பார்க்க முடியும்.

    படம் 5. முடியின் வேர்;  https://link.springer.com/protocol/10.1385/0-89603-441-0:101

    நாம் ஏற்கனவே பார்த்தது போல 1900 களின் தொடக்கத்தில் ஏற்பட்ட கொள்ளை நோய்களுக்கு முடி ஒரு ஊடகமாக இருந்தது என்கிற காரணத்தால், தலைமுடியில் தொற்றிக்கொள்ளும் நோய்க்கிருமிகளைக் களைந்து, முடியைக் கழுவி எடுப்பதற்கான முயற்சிகளில் உருவானதே ஷாம்பூ. அதைத் தொடர்ந்து அது நம்மிடையே நின்றுவிட்டதன் காரணம் விளம்பரங்கள் மட்டுமே. விளம்பரங்களின் மாய வலையில் மாட்டிக்கொண்ட பின் – அதிலேயே நாம் நின்றுவிட்டோம். ஷாம்பூவால் மண்டைத் தோலுக்கும், தலைமுடிக்கும் ஏற்பட்டுள்ள கேடுகள் ஒன்றா இரண்டா?  ஒவ்வாமை வியாதிகள் எத்தனை?

    நல்ல தலைமுடி ஆரோக்கியத்திற்குப் பேர்போனவர்களான கிழக்கு நாடுகளிலுள்ள மக்கள் யாவரும் முன்னெப்போதும் காணா தலைமுடி உதிர்வு, சொட்டை விழுதல், வழுக்கை ஆகிய வியாதிகளால் தாங்கொணா மன உளைச்சலும் பணச் செலவுமாக இன்று அலைந்து வருந்தி வருவது தலைமுடிக்காக விற்கப்படும் பொருட்களால் தான் என்றால் அது மிகையில்லை.

    அது மட்டுமல்ல, ஷாம்பூ, கண்டிஷனர், கேசச் சாயம், போன்ற வேதிப் பொருட்கள், குளியலறையிலிருந்து வெளியேறிப் பொதுக்கழிவில் கலந்து, வாய்க்காலோடி, நீர்நிலைகள் யாவற்றிலும் கலந்து, எத்தனை எத்தனையோ உயிரினங்களைக் கொன்றுள்ளன. இன்னமும் கொன்றுகொண்டே இருக்கின்றன.

    ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களில் உள்ள நுரை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள், Eutrophication அல்லது Algal Bloom எனும் ஒரு கெடுதல் நிகழ்வை நீர் நிலைகளில் ஏற்படுத்தி, நீர்ப் பரப்பில் நஞ்சு மிகுந்த களைகளையும் பாசியையும் ஆல்காக்களையும் வளர்த்து. நீரில் கரைந்துள்ள உயிர்வாயுவான ஆக்சிஜனைக் கபளீகரம் பண்ணி, தவளை, தேரை, மீன், நண்டு, உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ இயலாதவாறு செய்கின்றன.

    ஷாம்பு  கேசச் சாயம் போன்றவற்றில் உள்ள பிற வேதிமங்களோ  உண்மையில் நச்சுத் தன்மை உடையன. அவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்வதுபோல் சேர்ந்து, சிறுதுளி பெருவெள்ளமாய், அளவு கூடி நிறைத்த நச்சூட்டலை நீர்நிலைகளில் நிகழ்த்திவிடுகின்றன. இவ்வாறான நீர்நிலைகளில் அற்ப சொற்பமாக வாழ்கிற மீன், நண்டு ஆகியன நச்சூட்டப்பட்ட நிலையில் தான் இருக்கின்றன. இவற்றை நாம் உணவாக உண்ணும்போது நாம் நஞ்சையும் சேர்த்துத்தான் உண்ணுகிறோம். கழிவுநீர்க் கால்வாயின் இருமருங்கிலும், நீர்நிலைகளின் கரைநெடுகிலும் நிலமும் நச்சூட்டப்படுகிறது, இந்நிலையில், அங்கு வளரும் தாவரங்கள் எவ்வாறு நச்சூட்டம் ஏற்படாமல் தப்பிக்க முடியும்?

    ஆக, நாலு சுவருக்குள் நாம் செய்கிற மதியீனமான செயல்கள் எத்தனை பெரிய சமுதாய அழிவை உண்டாக்குகின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

    ஷாம்பு, கண்டிஷனர், சாயம், இத்யாதிகள் வருகின்ற பாட்டில்கள், குப்பிகள், முதலியன சேர்க்கும் குப்பைகளுக்கு அளவுண்டா? இவற்றையும் நாம் காசு கொடுத்துத் தான் வாங்குகிறோம்! அவற்றைக் குப்பையில் வீசி, அந்தக் குப்பையை அள்ளவும் கூட நாம் தான் பணம் தருகிறோம். என்ன வேதனை இது? இந்தக் குப்பைகள் யாவும் அழியாக் குப்பைகள். பூமியின் பாரத்தைத் தெடர்ந்து ஏற்றுவதோடு – பூமியின் வெப்பமிகுதிக்கும் காரணமாகின்றன. என்ன வேதனை இது?

    மேற்கத்திய நாடுகள் தாம் அறியாமையாலும் ஆணவத்தாலும் தவறு செய்கின்றன என்றால், கிழக்கும் இத்தவறுக்கு உடந்தையானது ஏன்?

    பூர்வீகமான சுதேசி ஞானத்தை விடுத்து, நவீனத்தைத் தழுவியதால்தான், கேச ஆரோக்கியத்தில் இன்று துர்பாக்கியமான நிலைமையைக் கிழக்கு நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன! கிழக்கத்திய நாட்டு மக்கள்,  பொதுவாகவே, பாதுகாப்பு உணர்வு கொண்டவர்கள். இயற்கைப் பொருட்களில் நாட்டம் கொண்டவர்கள். இயற்கைப் பொருட்களாலான சிறப்புக் கலவைகளால் கேசம் கழுவும்  பழக்கம் கொண்டவர்கள். அதனை அவர்கள் மறந்ததும் துறந்ததும் துர்பாக்கிய நிலையே.

    இதில், இந்தியா, தலைசிறந்த விஞ்ஞான அறிவியல், தொன்மை உடையது. இந்தியர்களுக்கு இருக்கிற தாவரவியல் ஞானம் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதது. அதுவும், “Phytochemistry” எனப்படுகிற தாவரவேதியியலில் இந்தியர்களுக்கு இணை உலகில் எவருமில்லை என்றே சொல்லலாம். பி. ராமச்சந்திரன் பய், டி. ஆர். கோவிந்தாச்சாரி போன்ற புகழ்மிக்க தாவர வேதியியல் விஞ்ஞானிகளை உலகிற்கு வழங்கிய பெருமை, தமிழகத்திற்கு  உண்டு. இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற எஸ். பி. தியாகராஜன் – கீழாநெல்லியிலிருந்து மஞ்சள் காமாலைக்கு மருந்து கண்டுபிடித்து உலகம் முழுமைக்கும் வழங்கியிருக்கிற பெருமையை நாமறிவோம்.

    தமிழ் மருத்துவ முறை என்று பெருமையாகச் சொல்லப்படும் சித்த மருத்துவ முறை முழுக்க முழுக்கத் தாவரப் பொருட்களையும் பூமியில் உள்ள இயற்கைத் தாதுக்களையும் மட்டுமே பயன்படுத்துவது. அதர்வண வேதம், ரிக் வேதம், மற்றும், சுஷ்ருத  ஸமிதா ஆகியவற்றில். எண்ணிறந்த தாவரங்களும், அவற்றில் இருக்கிற மருந்துப் பொருட்கள் பற்றியும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவ முறை, இம்மூன்று நூல்களும் தரும் ஞானத்தின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட மருத்துவ முறையாகும்.

    “Wealth of India” என்று தலைப்பிடப்பட்டு பதினொரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ள இந்திய அரசின் புத்தகத் தொகுப்பில், பாரத நாட்டின் பொக்கிஷங்களான தாவரங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் நாம் மறந்தது எப்படி?

    எங்கள் மக்கள், சிகைக்காய்ப் பொடி என்னும் ஒரு  அதியற்புதமான பொடியை, தேர்ந்தெடுத்தப் பல தாவரப் பொருட்களைச் சேர்த்து அரைத்துத் தயாரிப்பர். அதனைச் சோறு  வடித்த கஞ்சியில் கரைத்து.  அந்தப் பசையைக் கொண்டு, எண்ணெய்க்  குளியலில், தலையில் வைத்த எண்ணெய்ப் பூச்சை, இதமாய்க் கழுவி எடுப்பர், கேசம் துளியும் கெடாது, மெருகுடனும் வளத்துடனும், பட்டு போன்ற மிருதுத் தன்மையுடனும், ஒவ்வொரு பெண்ணும் பாதுகாத்து வாழ்ந்த மண்ணில் இன்று ஞானப் பஞ்சம் ஏற்பட்டு, மதியீனம் ஓங்கி வளர்ந்திருக்கிறது என்றால் இந்தத் துர்பாக்கிய நிலையை என்னென்று சொல்வது?

    சிகைக்காய்ப் பொடி என்பது நம்மவரின் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு. சரியான pH சமநிலை, சரியான conditioning – ஈரப் பதனம், மிகச் சரியான போஷாக்கு, மிகச் சரியான கொரகொரப்புத்தன்மை, அற்புதமான வாசனை, நேர்த்தியாய்ச் சேர்த்த பாதுகாப்பான தொற்று நீக்கிகள், மிகச் சரியான நுரை வளம், நீர் நிலைகளுக்குப் பாதுகாப்பு, நிலத்துக்குப் பாதுகாப்பு எனச் சிகைக்காயின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    பார்த்துக்கொண்டே இருங்கள் இந்த நூற்றாண்டிலேயே இதற்கு அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ பேடண்ட் வாங்கிவிடுவார்கள். நாம் எவ்வெவற்றையெல்லாம் நமது பொக்கிஷம் எனப் பேணிக் காக்கத் தவறுகிறோமோ, அவையெல்லாம் இவ்வாறு தான், அடுத்தவன் அள்ளிக்கொண்டு போவதில் முடிவடைகின்றன.

    தலைமுடியின் வெளி உறையை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம்.  உறைக்கு உள்ளே இருக்கிற, தலைமுடியின் உள் கட்டமைப்பின் முத்தாய்ப்பான விஷயங்களை அடுத்து நாம் கவனிக்க இருக்கிறோம்.

    (மேலும் பேசுவோம்)

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-27

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-27

    தி. இரா. மீனா

    பள்ளே மல்லையா

    சமணசமயத்தைச் சேர்ந்த வணிகர்.சிவசரணனான பிறகு மல்ல செட்டி என்ற பெயர் மல்லயா ஆனது. தானியங்களை அளக்கும் படியையே இலிங்கமாக எண்ணி பள்ளேஷ மல்லையா ஆனார். ’பள்ளேஷ்வரா’ இவரது முத்திரையாகும்.

    1. “நீங்கள் உயர்ந்தவர் என்றுரைப்பது உமது பேரிகை
    கேட்பதைக் கொடுப்பீர் என்று சொல்வது உமது தப்பட்டை
    உலகம் தங்கள் படைபென்று சொல்வது உமது சங்கு
    பிற தெய்வமில்லையென்று சொல்வது உமது உடுக்கை
    கெடுதல் பேசுபவரின் வாயைக் கிழிப்பது உமது திரிசூலம்
    அதுவே பள்ளேஷனின் பேரிகையானது மூவுலகிற்கும் “

    2. “உயிரைத் துன்புறுத்த வேண்டாம்
    பிறன்மனை நட்பு வேண்டாம்
    பிறர் பொருளுக்கு ஆசை வேண்டாம்
    பிற கடவுளரை வணங்க வேண்டாம்
    இவை நான்கையும் கடைப்பிடிக்கும் போது
    மற்றவர் பார்ப்பார்,பாரார் என்று நினைக்க வேண்டாம்
    பள்ளேஷ்வர இலிங்கத்தை யாரும் மறைக்க முடியாது
    கொடிய நரகம் தருவான் அவன்“

    பாலசங்கண்ணா

    “கமடேஸ்வரலிங்கா“ இவரது முத்திரையாகும்.

    “பொன்னுக்கு அகமும் புறமுமுண்டோ?
    சந்தனம், சாமந்தி, முல்லை, மல்லிகை மருக்கொழுந்து
    போன்ற இலை மலர்களுக்கு உள்ளும் புறமுமுண்டோ?
    அங்கம் முழுவதும் கொண்டிருக்கும் மணம்
    இது போன்றதே கமடேஸ்வர இலிங்கத்தில்
    இரண்டுமழிந்த சரணரின் நிலை“

    பால சங்கைய்யா

    மிகச் சிறந்த வசனகர்த்தா எனப் போற்றப்படுபவர். ’அப்பிரமாணக் கூடல சங்கம தேவா’ இவரது முத்திரையாகும்.

    1. “வான்மீறியோன் என்னும் மேன்மையுள்
    இணைந்த சரணனின் நிலை
    சூரியனுள்ளிருக்கும் பிம்பம் போன்றது
    கண்ணாடியுள் அடங்கிய பிரதிபிம்பம் போன்றது,
    மலருள் அடங்கிய மணம் போன்றது
    ஒளியுள் அடங்கிய கற்பூரம் போன்றது
    மேன்மையுள் அடங்கிய அடியானின் நிலை
    அப்பிராமாண கூடல சங்கமதேவனே.”

    2. “உப்பு நீரில் கலந்தது போல
    ஆலங்கட்டி நீரில் கலந்தது போல
    கற்பூரம் தீயில் கலந்தது போல
    மனம் இலிங்கத்துள் இணைவது பாவலிங்க வழிபாடு
    இவ்வகையாம் அப்பிராமண கூடலசங்மதேவனே“

    3. “என்னுடல் என்னும் பிரகாரத்துள்
    மனமெனும் சிவாலயம் பாராய்!
    மனமெனும் சிவாலயத்துள்
    பரமாத்மாவெனும் சிம்மாசனம் பாராய்!
    பரமாத்மாவெனும் சிம்மாசனத்தின் மீது
    விழிப்புணர்வின் இலிங்கம் நிலைநாட்டி
    அமைதியெனும் கையால் வழிபட்டு
    பிறப்பென்னும் மாலையறுத்து பிறவியற்றவானேன்“

    4. “கல்தெய்வம் தெய்வமல்ல
    மண்தெய்வம் தெய்வமல்ல
    மரதெய்வம் தெய்வமல்ல
    ஐம்பொன்னால் செய்த தெய்வம் தெய்வமல்ல
    இராமர் பாலம்,கோகர்ணம், காசி, கேதார் முதல்
    புனித இடங்களிலுள்ள தெய்வங்கள் தெய்வங்களல்ல.
    தன்னைத் தானறிந்து தான்யாரெனத் தெரிந்தால்
    தானே தெய்வம் பாராய்
    அப்பிராமண கூடலசங்கமதேவனே“

    பாகூர் பொம்மண்ணா

    காயகம் தோட்ட வேலை. ’சங்கன பசவண்ண சாட்சியாகி பிரமேஸ்வ ரலிங்க’ இவரது முத்திரையாகும்.

    1. “எவ்விடத்தைச் சாதித்து நிற்பினும்
    மனப்பூர்வமாய் உணர்வது ஒரே மகாலிங்கத்தை
    அதுவே பக்தியின் வேர்
    நம்பிக்கையின் கிளைகள், நம்பிக்கையின் கனி
    உண்மைத் தத்துவத்தின் சாரம் தன்மயத்தின் சுவை
    சங்கன பசவண்ணனால் விளைந்த விளைச்சல்
    பிரம்மேஸ்வர இலிங்கத்தில் ஐக்கியமாம்”

    2. “காய்ச்சிய உலோகத்தின் மீது நீரை ஊற்றினால்
    உறிஞ்சுவது உலோகமா? வெப்பமா?
    இதையறிந்தால் அங்க இலிங்கத்தின் உறவாம்
    பால் பொங்கும்போது நீர் தெளித்தால்
    அதனை உள்ளெடுப்பது பாலா? பாத்திரமா?
    இதையறிந்தால் செயல் ஞான ஆத்மலிங்க உறவினன் நீயே
    உண்மை நிலையறியின் செயலுக்குப் பயிற்சி
    அறிவுக்குச் சங்கமம் இது சங்கன பசவண்ணனின் ஆட்டம்
    பிரமேஸ்வர இலிங்கத்தை அறிந்தவரின் ஆட்டம்!”

    3. “கட்டை துளிர்த்தால் ,மலட்டுப்  பசு பால் கறந்தால்
    வரைபடம் உயிர் பெற்றால்
    அது கண்களின் பார்வையா? நம்பிக்கையின் திடமா?
    பக்தியின் பாதையறிய முக்கியமிது!
    சங்கன பசவண்ணன் நிஜமாம், பிரமேஸ்வர இலிங்கத்தில்
    இணைவதற்கு நெறியாம்“

    பிப்பிபாச்சய்யா

    ’ஏணாங்க தர சோமேஸ்வரா’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “நெருப்பின் உலோக போல கனியின் சாறு போல
    உடலின் உயிர் போல உருவத்தின் நிழல் போல
    அங்கமும் இலிங்கமும் உறவாக வேண்டும்
    ஏணாங்கதர சோமேஸ்வர இலிங்கத்தில்“

    2. “விதையொன்றில் கிளைகள் படர்வது போல்
    அறிவொன்று உருவங்கள் பலவாகத் தோன்றுவது போல
    தெளிந்த நீரில் தெரிகின்ற நிலவு போல
    வேற்றுமையொன்றே,
    ஏணாங்கதர சோமேஸ்வர இலிங்கத்தில்”

    பொக்கதா சிக்கண்ணா

    கல்யாணில் பிஜ்ஜளனின் கருவூல அதிகாரியாக பணியாற்றியவர். ’பசவண்ணப்பிரிய நாகரேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும். தன் தொழிலுக்கு அடிப்படையான கருவூலத்தையே இறையுருவமாகப் பாவித்தவர்.

    “இசைக்கு இராகத்தின் பெயர் சூட்டியது போல
    நாதமொன்று, அசைவுகளின் வண்ணம் வேறானது போல
    பசுக்கள் பலநிறம் பால்நிறம் ஒன்றானது போல
    தொழில்கள் பலவானாலும்
    இலிங்கமுடன் இணைகின்ற சரணர் வழிபாடு
    செயல், உறவு ஒன்றாம்
    பசவண்ணப்பிரிய நாகரேஸ்வர இலிங்கம் அறிவதற்கு.”

    “குளிர்ச்சி உள்ளவரையில் வெப்பத்தின் தேவை
    வெப்பம் உள்ளவரையில் குளிர்ச்சியின் தேவை
    காலை எழுந்து இரவில் உறங்கும் வரையில்
    அத்துவைதம் உண்மையன்று,
    இதனால் செயலை மறக்கவில்லை
    அறிவு சூன்யமென விடவில்லை
    அது கனல் மறைந்துள்ள கல்,எண்ணெய் மறைந்த விதை
    அன்பு வேண்டும் அதையறிய
    பசவண்ணப்பிரிய நாகரேஸ்வர இலிங்கம் அறிவதற்கு.”

    [தொடரும்]                

    Share
  • நித்திலா அண்ணாகண்ணனின் யோசனைகள் 1

    நித்திலா அண்ணாகண்ணனின் யோசனைகள் 1

    என் மகள் நித்திலா சொன்ன புதுமையான யோசனையைக் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • டென்சர்ஃப்ளோ – ஓர் அறிமுகம்

    டென்சர்ஃப்ளோ – ஓர் அறிமுகம்

    நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

    இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) என்று சொல்லப்படுகின்ற தரவுப் போக்குகளின் முன்கணிப்பு மற்றும் தரவுப் போக்குக் கணிப்புகளில் தலையீட்டு நடவடிக்கைகளின் விளைவு ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய பயனுள்ள தகவல்களைப் பிரித்தெடுக்கச் சிக்கலான தரவுத் தொகுப்புகளைப் பகுப்பாய்வு செய்ய, தொழில்நுட்பச் சந்தை மற்றும் அறிவு சார்ந்த அமைப்புகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

    இத்தகைய செயற்கை நுண்ணறிவுத் தகவல்கள், வருங்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகளை மாற்றவும் எதிர்காலப் போக்குகளை வழிநடத்தவும் பயன்படுத்தலாம்.

    இயந்திரக் கற்றலும், ஆழமான கற்றலும் செயற்கை நுண்ணறிவின் குறிப்பிட்ட  துணைத் தொகுப்புகளாகும்..

    தற்போது கல்வித் துறையும் தொழில் துறைகளும், பல்வேறு அரசுத் துறைகளும், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

    ஆழ்ந்த கற்றல் என்பது இயந்திரக் கற்றலைச் செயல்படுத்துவதற்கான ஒரு தொழில் நுட்பமாகும். மேலும் இதை ஆழமான கற்றல் நரம்பியல் நெட்வொர்க் (டி.என்.என்.) என்றும் கூறலாம். டென்சர்ஃப்ளோ என்பது டென்சர் + ஃப்ளோ என்ற இரண்டு ஆங்கிலச் சொற்கள் சேர்ந்த ஒரு வார்த்தையைக் குறிக்கின்றது.

    டென்சர் என்பது பல பரிமாண வரிசைகளை உள்ளடங்கியது.

    ஃப்ளோ என்பது செயல்பாடுகளின் வரைபடமாகும்.

    எனவே டென்சர்ஃப்ளோ என்பது பல பரிமாண வரிசைகளை உள்ளடக்கிய செயல்பாடுகளின் வரைபடமாகும்.

    டென்சர்ஃப்ளோ, கூகுள் உருவாக்கியது. இது கூகுள் மூளைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

    பிறகு இது ஒரு திறந்த மூல தயாரிப்பாக அமைந்தது. ஏனெனில் பல இயந்திரக் கற்றல் மற்றும் ஆழமான கற்றல் கட்டமைப்புகள் திறந்த மூலமாகக்  கிடைப்பதை ஏற்றுக் கொள்கின்றன. அல்லது பயன்படுத்திக் கொள்கின்றன.

    செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் சமூகத்தினர்கள் டென்சர்ஃப்ளோவை ஏற்றுக்கொண்டு அதன் மேல், அம்சங்களையும் தயாரிப்புகளையும் உருவாக்குகின்றனர். டென்சர்ஃப்ளோவின் நன்மை என்னவென்றால்,  தீவிரப் பயன்பாடுகளைக் கணக்கிடுவதற்கு ஒற்றைக் கணினியில் ஒற்றை சிபியு (மத்திய செயலாக்க அலகு) மூலம் செயல்களை இயக்குவதை விட, டென்சர்ஃப்ளோ செயல்கள் பல CPUக்கள், GPU க்கள் (கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள்), பல இயந்திரங்கள் அல்லது TPUக்கள் (டென்சர் செயலாக்க அலகுகள்) முழுவதும் விநியோகித்து, தீவிரப் பயன்பாடுகளைக் கணக்கிடலாம். தரவு ஓட்ட வரைபடங்களை உருவாக்கிப் பயன்படுத்துவதன் மூலம் எண் கணக்கீடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்தத் தரவு ஓட்ட வரைபடங்களை டென்சர்போர்டு தொகுப்பு கருவிகளைப் பயன்படுத்திக் காட்சிப்படுத்தலாம்

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 84 (வானவர்)

    சேக்கிழார் பாடல் நயம் – 84 (வானவர்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வானவர் பூவின் மாரி பொழியமா மறைகள் ஆர்ப்ப
    ஞானமா முனிவர் போற்ற நலமிகு சிவலோ கத்தில்
    ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடனுறை பெருமை பெற்றார்
    ஏனைய சுற்றத் தாரும் வானிடை இன்பம் பெற்றார்

    சிவவேதியர் அழைத்தது பேரோசையாகக் கேட்டமையால் உடனே இயற்பகையார் திரும்பி வந்தார். ‘’யாரேனும் தடுத்தால் என் வாளுக்கு இரையாவார்’’ என்று கூறியபடியே ஓடி வந்தார். அங்கே தம்மை அருட்சக்திக் கோலமாக மாற்றிக் கொள்வதற்காகச் சிவவேதியர் மறைந்தார்; அங்கே  இயற்பகையார்  மனைவியார் நின்றார்.

    அப்போது இறைவன் வானில் இடப வாகனத்தின் மேல் தோன்றினார்; அவரைக் கண்ட அடியார் வீழ்ந்து வணங்கினார். அங்கேயே இறைவனைப் பலவாறு துதித்தார். இறைவன். சிவபிரான் ‘’அருள் விளையும் இந்த  உலகில் , இவ்வாறு செயற்கரிய அன்பைக் காட்டிய நீ, உன் பக்திக்குத் துணை புரிந்த மனைவியோடே எம்முடன் வருக!’’ என்று கூறி, இருவருக்கும் வீடு பேறளித்துத் தம் பொன்னம்பலத்தில் புகுந்தார் ஆதலால் இவ்வுலகமே இறைவன் திருவருளுக்கு ஏற்ற இடம் என்பதும் புலனாகின்றது.

    அப்போது தேவர்கள் மலர் மழை பொழிந்தனர்; வேதங்கள் வாழ்த்தின; ஞானியர்கள் வணங்கிப் போற்றினர்; எக்குறையும் இல்லாத தொண்டராகிய இயற்பகை நாயனார் தம்மைப் பிரியாத மனைவியாரோடும் இறைவனருகில் நீங்காது உறையும் பெருமை பெற்றார்; அப்போது அங்கே போரிட்டு மாண்ட  உறவினர்கள் அனைவரும் வீரசுவர்க்கம் அடைந்தனர்!

    இயற்பகையாரின் தொண்டினால் எல்லார்க்கும் விளைந்த நன்மைகள் இப்பாடலில் கூறப் பெற்றன. அவ்வப்போது  தவறுகள் புரியும் தேவர்கள் இறைவனருள்  பெறப்  பூமாரி பொழிந்தனர்!  அதற்கும் மேலாக, என்றும் ஒரே நிலையில் துதித்துப் பிறர்க்கும் உரைக்கும் வேதங்கள் சொல்வோர் இல்லாமலேயே வாழ்த்தின; இவ்வேதவொலி சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளின் போதுதான்  நிகழும், இதனை

    ‘’ ஓதும் மறையோர் பிறிது  உரைத்திடினும்  ஓவா
    வேதமொழி  யால் ஒலி விளங்கி  எழும்  எங்கும்‘’ என்றும்,

    ‘’எங்கணும் இயற்றுபவர்  இன்றியும் இயம்பும்
    மங்கல   முழக்கொலி  மலிந்த மறுகெல்லாம்’’  என்றும்,

    திருஞான சம்பந்தர் தோன்றிய  பெருநிகழ்வின் போது  நிகழ்ந்ததாக  இக்கவிஞரே  கூறுவார்.

    அடுத்து  இப்பாட்டில், ‘’ஊனமில் தொண்டர்’’ என்ற தொடர், உலகில் உயிருணர்வு (பசுபோதம்) மட்டுமே பெற்ற தொண்டர்களை விட மேலான இறையுணர்வு (பதி போதம்) பெற்றவர் இயற்பகையார் என்பதைக் குறித்தது. இதனைச்  சிவஞான போதம்  ஒன்பதாம்  சூத்திரம்.

    ‘’ ஊனக்கண் பாசம்  உணராப் பதியை
    ஞானக்  கண்ணினில்  சிந்தை நாடி‘’ என்று கூறும்.

    அடுத்து, ‘’நலமிகு  சிவலோகத்தில்‘’ என்ற தொடர் முத்திக்கும் மேற்பட்ட அபரமுத்தித்  தானம் என்ற சுத்த புவனமாகிய சிவலோகத்தில், அதாவது நலமே விளையும் பூமியில் என்ற பொருளை விளக்குகிறது.

    அடுத்து ‘’கும்பிட்டு உடனுறை   இன்பம் பெற்றார்’’ என்ற தொடரால், ‘’உணர்வுகள் ஒன்றி வணங்கி, இறைவனுடன் அத்துவிதமாக நிற்கும் பேரின்பம்  பெற்றார்’’   என்பது புலனாகும். அப்பேரின்பம் ,

    “பேரா வொழியாப் பிரிவில்லா மறவா நினையா வளவிலா மாளா வின்பம் ‘’

    என்று திருவாசகத்தில் கூறப் பெற்றது.

    அடுத்து  ‘’ஏனைய  சுற்றத்தாரம் வானிடை  இன்பம் பெற்றார்‘’ என்ற அடி, அவர்கள் அடைந்த வீர சுவர்க்க இன்பத்தைக் குறித்தது. அவர்களும்  உலகியல்  அறத்தை மேற்கொண்டமையாலும், இயற்பகையார், அவர் மனைவியார் மற்றும் தமக்கும்   குலப்பழி  வாராமல்  காக்க  மிகுந்த பாசம் கொண்டு விளங்கியமையாலும், அதற்காகப் போரிட்டு உயிரை இழக்கவும் சித்தமாக இருந்தமையாலும், நாயனாரின் கரங்களாலேயே தண்டிக்கப் பெற்றமையாலும் வானிடை இன்பம் பெற்றார்.

    ஆகவே இப்பாடல், இயற்பகை நாயனாரின் செயலும், தொடர்பும் யாருக்கெல்லாம், எவ்வாறெல்லாம் இறைவன் திருவருளை வழங்கின என்பதை  விளக்குகிறது!

    Share
  • நாலடியார் நயம் – 28

    நாலடியார் நயம் – 28

    நாங்குநேரி வாசஸ்ரீ

    28. ஈயாமை

    பாடல் 271

    நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
    அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; – அட்டது
    அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
    அடைக்குமாம் ஆண்டைக் கதவு.

    தம்மிடமுள்ள பொருளால் தாம் சமைத்த உணவை
    தன் நண்பருக்கும் நண்பரல்லாதாருக்கும் பங்கிட்டுத்
    தாமும் உண்பதே சமைத்து உண்பதாம்
    தாம் சமைத்த உணவைக் கதவைத் தாழிட்டு
    தன் வீட்டுனுள் தாம் மட்டும் உண்டு வாழும்
    தக்க குணமற்றவர்களுக்கு உட்புகமுடியாவண்ணம்
    தேவ உலகத்துக் கதவுகள் அடைக்கப்படும்.

    பாடல் 272

    எத்துணை யானும் இயைந்த அளவினால்
    சிற்றறஞ் செய்தார் தலைப்படுவார்; – மற்றைப்
    பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
    அழிந்தார் பழிகடலத் துள்.

    எவ்வளவாயினும் தம்மால் முடிந்த சிறிய அளவில்
    எத்தகு தருமமாவது செய்தவர் மேன்மையடைவர்
    எல்லாப் பெருஞ்செல்வமும் சேர்ந்தபின்னும்
    என்றாவது ஒருநாள் தருமம் செய்யலாம்
    என எண்ணி இருப்போர் கடல் சூழ்ந்த உலகத்தாரால்
    எக்காலமும் பழிக்கப்பட்டு கெட்டழிவார்.

    பாடல் 273

    துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்று ஈகலான்
    வைத்துக் கழியும் மடவோனை – வைத்த
    பொருளும் அவனை நகுமே உலகத்து
    அருளும் அவனை நகும்.

    தாமும் சேர்த்த பொருளை அனுபவிக்காது
    துறவிகளுக்கும் ஒன்றும் ஈயாது செல்வத்தைத்
    தக்கவைத்து இறந்து போகும் அறிவிலானைத்
    தகுந்த வழியில் நன்கு பயன்படுத்தவில்லையெனத்
    தேடிவைத்த பொருள் நோக்கிச் சிரிக்கும்.

    பாடல் 274

    கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
    உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் – இல்லத்து
    உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
    ஏதிலான் துய்க்கப் படும்.

    அடுத்தவர்க்குக் கொடுப்பதையும் தான் அனுபவிப்பதையும்
    அறியாத லோப குணமுடையானடைந்த பெருஞ்செல்வம்
    அவர்தம் வீட்டில் பிறந்த அழகிய கன்னிப்பெண்ணை
    அவளுக்கேற்ற பருவ காலத்தில் பிறர் அனுபவித்தல் போல
    அயலானால் அனுபவிக்கப்படும்.

    (பிறரைப் பற்றிச் சிந்தியாது, இறக்கமற்று சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகுபார்ப்பதும், கஞ்சத்தனமும் லோபகுணம் எனப்படும்.)

    பாடல் 275

    எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
    அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
    மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
    கழிநல் குரவே தலை.

    அலைகள் மோதுகின்ற கடலிலிருந்தாலும்
    அதன்நீர் குடிக்கப் பயன்படாததால் மக்கள்
    அடிக்கடி நீர்வற்றும் சிறு கிணற்றின் ஊற்றையே
    அலைந்துகண்டு பருகுவர் அதுபோல்
    அறம் செய்து மறுமை இன்பத்தை நாடுதலை
    அறியாதோரின் செல்வத்தை விட
    அறிவுடைச் சான்றோரின் வறுமை மேல்.

    பாடல் 276

    எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை
    எனதெனது என்றிருப்பன் யானும் – தன தாயின்
    தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
    யானும் அதனை அது.

    எப்போதும் அறிவில்லாமூடன் தான் சேர்த்த பொருளை
    என்னுடையது என்னுடையது எனச் சொல்லியிருப்பான்
    எனது எனது என நானும் அப்பொருளை எண்ணியிருப்பேன்
    எப்படியெனில் அவன் அப்பொருளைத் தானும் அனுபவிக்காது
    எவருக்கும் கொடுக்காது இருப்பதுபோல் நானும் அதேபொருளை
    எடுத்து அனுபவிக்காது யாருக்கும் கொடுக்காது இருக்கிறேன்.

    பாடல் 277

    வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
    இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் – உழந்ததனைக்
    காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
    யாப்புய்ந்தார் உய்ந்த பல.

    பிறருக்கு ஈயாச் செல்வந்தரை விட வறுமையுற்றோர்
    பல துன்பத்தினின்றும் தப்பியவராய்க் கொள்ளப்படுவர்
    பொருளிழந்தார் என உலகோர் பழிப்பதிலிருந்தும்
    பலவாறு வருந்தி அப்பொருளைக் காப்பதிலிருந்தும்
    புதைத்து மறைக்க நிலத்தைத் தோண்டுவதிலிருந்தும்
    பாதுகாப்பாய் கைவலிக்கக் கெட்டியாய்ப் பிடித்தலினின்றும்
    போன்று அவ்வறியவர் தப்பினவை பல உண்டு.

    பாடல் 278

    தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும்
    தமதாய போழ்தே கொடாஅர் – தனதாக
    முன்னே கொடுப்பின் அவர்கடியார் – தான்கடியான்
    பின்னை அவர்கொடுக்கும் போழ்து.

    தன்னுடையதாய்ப் பொருள் உள்ளபோது லோபி
    தானும் பிறருக்குக் கொடுக்க மாட்டான் பின்னர்
    தமதான காலத்தில் பங்காளிகளும் கொடுக்க இசையார்
    தன்னுடையதாயிருந்த போது அவன் கொடுப்பதைத்
    தடுத்திருக்க மாட்டார் அவனின் பங்காளிகள் அவர்கள்
    தருவதையோ இறந்தபின் அவனாலும் தடுக்க இயலாது பின்
    தந்து பயன்பெறாது இருவரும் இருந்ததன் காரணம் யாதோ?

    பாடல் 279

    இரவலர் கன்றாக ஈவார் ஆவாக
    விரகிற் சுரப்பதாம் வன்மை – விரகின்றி
    வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
    கொல்லச் சுரப்பதாங் கீழ்.

    கேட்பவர் கன்றாக இருக்க
    கொடுப்பவர் பசுவாக இருந்து
    உற்சாகத்துடன் கொடுப்பதே
    உயர்ந்த கொடையாம் அவ்வாறன்றி
    வலியவர் அடித்தபின் மனமின்றி
    வருந்திப் பால் தரும் பசுபோல்
    வல்லோர் பல சூழ்ச்சிசெய்து
    வற்புறுத்தித் துன்புறுத்தியபின்
    கொடுப்பது கீழ்மக்கள் இயல்பு.

    பாடல் 280

    ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
    காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் – காத்தல்
    குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
    உறைபதி மற்றைப் பொருள்.

    பொருளைச் சம்பாதிப்பதும் துன்பம்
    பாதுகாத்தலும் மிகுந்த துன்பம்
    பாதுகாத்த பொருள் அழிந்தால்
    பெருந்துன்பம் ஆதலில் அப்பொருள்
    பலவித துன்பத்துக்கும் இருப்பிடமாம்.

    Share