நாலடியார் நயம் – 29

நாங்குநேரி வாசஸ்ரீ

29. இன்மை

பாடல் 281

அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்திற் கடை.

காவி தோய்ந்த ஆடையை இடுப்பில்
கட்டி வாழ்ந்தாலும் பத்தோ எட்டோ
கொண்டவராயின் பலருக்கிடையிலும்
கிடைக்கும் மதிப்பு, இல்லையேல் உயர்
குடிப்பிறப்பு இருப்பினும் ஒன்றுமில்லார்
கிடக்கும் உயிரற்ற பிணத்தைவிட
கீழானவராகவே கருதப்படுவார்.

பாடல் 282

நீரினும் நுண்ணிது நெய்யென்பர், நெய்யினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்; – தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைத்து.

நீரைவிட நெய் நுட்பம் நெய்யைவிட புகை
நுட்பமென அனைவரும் அறிவர் ஆராய்ந்தால்
கையேந்துதலெனும் துன்பமுள்ள வறுமையாளன்
கடும்புகையும் புகுதற்கரிய துவாரத்திலும் நுழைந்து
சென்று செல்வரை நாடி யாசிப்பான்.

பாடல் 283

கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்; – கொல்லைக்
கலாஅற் கிளிகடியும் கானக நாட!
இலாஅஅர்க் கில்லை தமர்.

கொல்லைகளில் கல்லால் கிளிகளை ஓட்டும்
காடுகள்சூழ் நாட்டுடை வேந்தனே! பெரும்
கற்களையுடை மலையின்மேல்
காந்தள் மலராதபோது செம்புள்ளிகளுடை
வண்டினங்கள் அங்கு செல்லா அதுபோல்
வேண்டிய பொருள் இல்லாதாருக்கு
விரும்பிய உறவினர் இல்லை.

பாடல் 284

உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டரா யிரவர் தொகுபவே; – வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்.

பொருளிருக்கும் காலத்தில் காக்கைக்கூட்டம்
போல் தொண்டு செய்ய ஆயிரக்கணக்கில் கூடுவர்
பொருளற்ற வறுமை நிலையில் வண்டுபோல்
பலதிசையில் ஒருவேளைச்சோற்றுக்கு அலையும்
பொழுது தீதில்லாது வாழ்கிறீரா (நலமா?) என வினவுவார்
பாரினிலே யாருமில்லை.

பாடல் 285

பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும்
சிறந்ததம் கல்வியும் மாயும் – கறங்கருவி
கன்மேற் கழூஉம் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு.

அருவிகள் கல்மேல் வீழ்ந்தொலித்து
அதன்மாசுபோகக் கழுவும் மலைநாட்டுடை
அரசனே! உலகில் வறுமை கொண்டவர்க்கு
அவர் பிறந்த குலப்பெருமை கெடும்
அரும்பெரும் வல்லமை கெடும்
அளவிற் சிறந்த கல்வியும் கெடும்.

பாடல் 286

உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூர் இருந்தும்ஒன்று ஆற்றாதான்; – உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று.

வயிற்றுப் பசி மிகுந்து துன்புற்று தம்மிடம்
விரும்பி வந்தார்க்கு உள்ளூரிலிருந்தும் ஒன்றும்
வழங்க இயலாதவன் அங்கேயே இருந்து தன்
வாழ்நாளை வீணாய்க் கழித்து உயிர்விடாது
வேற்றூர்க்குத் தான் சென்று மற்றவருக்கு
விருந்தாளியாய் இருப்பதே நல்லது.

பாடல் 287

நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; – கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார்.

முல்லையரும்புகளை வருத்தும் பற்களை உடையவளே!
மண்ணுலகில் வறுமை எனும் துன்பம் சேரப்பெற்றவர் தம்
மேன்மைக் குணங்களையே அல்லாமல் புத்தி கூர்மையையும்
மற்ற சிறப்புக்களனைத்தையும் ஒருசேர இழப்பர்.

பாடல் 288

இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று.

வறுமைக் குழியில் விழுந்து துயருற்று
வருபவர்க்கு யாசிக்கும் பொருளைக் கொடுக்க
முடியாது உள்ளூரில் வருந்தி வாழ்தலைவிட
முயன்று நெடுந்தூரம் நடந்து வரிசையான
வீடுகளில் கை ஏந்தி இரந்து உண்ணும் கெட்ட
வழியில் வாழ்வதே நலம்.

பாடல் 289

கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக் – குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
துப்புரவு சென்றுலந்தக் கால்.

அனுபவிக்கப்படும் பொருட்கள் நீங்கி வறுமையால்
அல்லலுறும்போது பொற்கடகம் அணிந்த தம்
கைகளால் கீரைகளைப் பறித்துச் சமைத்து பனங்
காய்களில் நுங்கெடுத்தபின் துளையுள்ளது போலும்
பாத்திரத்தில் உப்பில்லாத வெந்த அக்கீரையைப்
புசித்து மன ஊக்கங்கெட்டு வாழ்வர்.

பாடல் 290

ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் – நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!
வாழாதார்க் கில்லை தமர்.

நல்ல தன்மையுடை அருவிகள் குறையாத
நற்சிறப்புடை குளிர் மலைநாட்டு அரசனே!
நிறைந்த புள்ளிகளுடை வண்டினம்
நன்கு பூத்துதிர்ந்த கொம்பினை விருப்பத்துடன்
நாடிச் செல்லமாட்டா அதுபோல் பொருளுடன்
நல்வாழ்வு வாழாதார்க்கு உறவினர் இல்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.