வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-27

0

தி. இரா. மீனா

பள்ளே மல்லையா

சமணசமயத்தைச் சேர்ந்த வணிகர்.சிவசரணனான பிறகு மல்ல செட்டி என்ற பெயர் மல்லயா ஆனது. தானியங்களை அளக்கும் படியையே இலிங்கமாக எண்ணி பள்ளேஷ மல்லையா ஆனார். ’பள்ளேஷ்வரா’ இவரது முத்திரையாகும்.

1. “நீங்கள் உயர்ந்தவர் என்றுரைப்பது உமது பேரிகை
கேட்பதைக் கொடுப்பீர் என்று சொல்வது உமது தப்பட்டை
உலகம் தங்கள் படைபென்று சொல்வது உமது சங்கு
பிற தெய்வமில்லையென்று சொல்வது உமது உடுக்கை
கெடுதல் பேசுபவரின் வாயைக் கிழிப்பது உமது திரிசூலம்
அதுவே பள்ளேஷனின் பேரிகையானது மூவுலகிற்கும் “

2. “உயிரைத் துன்புறுத்த வேண்டாம்
பிறன்மனை நட்பு வேண்டாம்
பிறர் பொருளுக்கு ஆசை வேண்டாம்
பிற கடவுளரை வணங்க வேண்டாம்
இவை நான்கையும் கடைப்பிடிக்கும் போது
மற்றவர் பார்ப்பார்,பாரார் என்று நினைக்க வேண்டாம்
பள்ளேஷ்வர இலிங்கத்தை யாரும் மறைக்க முடியாது
கொடிய நரகம் தருவான் அவன்“

பாலசங்கண்ணா

“கமடேஸ்வரலிங்கா“ இவரது முத்திரையாகும்.

“பொன்னுக்கு அகமும் புறமுமுண்டோ?
சந்தனம், சாமந்தி, முல்லை, மல்லிகை மருக்கொழுந்து
போன்ற இலை மலர்களுக்கு உள்ளும் புறமுமுண்டோ?
அங்கம் முழுவதும் கொண்டிருக்கும் மணம்
இது போன்றதே கமடேஸ்வர இலிங்கத்தில்
இரண்டுமழிந்த சரணரின் நிலை“

பால சங்கைய்யா

மிகச் சிறந்த வசனகர்த்தா எனப் போற்றப்படுபவர். ’அப்பிரமாணக் கூடல சங்கம தேவா’ இவரது முத்திரையாகும்.

1. “வான்மீறியோன் என்னும் மேன்மையுள்
இணைந்த சரணனின் நிலை
சூரியனுள்ளிருக்கும் பிம்பம் போன்றது
கண்ணாடியுள் அடங்கிய பிரதிபிம்பம் போன்றது,
மலருள் அடங்கிய மணம் போன்றது
ஒளியுள் அடங்கிய கற்பூரம் போன்றது
மேன்மையுள் அடங்கிய அடியானின் நிலை
அப்பிராமாண கூடல சங்கமதேவனே.”

2. “உப்பு நீரில் கலந்தது போல
ஆலங்கட்டி நீரில் கலந்தது போல
கற்பூரம் தீயில் கலந்தது போல
மனம் இலிங்கத்துள் இணைவது பாவலிங்க வழிபாடு
இவ்வகையாம் அப்பிராமண கூடலசங்மதேவனே“

3. “என்னுடல் என்னும் பிரகாரத்துள்
மனமெனும் சிவாலயம் பாராய்!
மனமெனும் சிவாலயத்துள்
பரமாத்மாவெனும் சிம்மாசனம் பாராய்!
பரமாத்மாவெனும் சிம்மாசனத்தின் மீது
விழிப்புணர்வின் இலிங்கம் நிலைநாட்டி
அமைதியெனும் கையால் வழிபட்டு
பிறப்பென்னும் மாலையறுத்து பிறவியற்றவானேன்“

4. “கல்தெய்வம் தெய்வமல்ல
மண்தெய்வம் தெய்வமல்ல
மரதெய்வம் தெய்வமல்ல
ஐம்பொன்னால் செய்த தெய்வம் தெய்வமல்ல
இராமர் பாலம்,கோகர்ணம், காசி, கேதார் முதல்
புனித இடங்களிலுள்ள தெய்வங்கள் தெய்வங்களல்ல.
தன்னைத் தானறிந்து தான்யாரெனத் தெரிந்தால்
தானே தெய்வம் பாராய்
அப்பிராமண கூடலசங்கமதேவனே“

பாகூர் பொம்மண்ணா

காயகம் தோட்ட வேலை. ’சங்கன பசவண்ண சாட்சியாகி பிரமேஸ்வ ரலிங்க’ இவரது முத்திரையாகும்.

1. “எவ்விடத்தைச் சாதித்து நிற்பினும்
மனப்பூர்வமாய் உணர்வது ஒரே மகாலிங்கத்தை
அதுவே பக்தியின் வேர்
நம்பிக்கையின் கிளைகள், நம்பிக்கையின் கனி
உண்மைத் தத்துவத்தின் சாரம் தன்மயத்தின் சுவை
சங்கன பசவண்ணனால் விளைந்த விளைச்சல்
பிரம்மேஸ்வர இலிங்கத்தில் ஐக்கியமாம்”

2. “காய்ச்சிய உலோகத்தின் மீது நீரை ஊற்றினால்
உறிஞ்சுவது உலோகமா? வெப்பமா?
இதையறிந்தால் அங்க இலிங்கத்தின் உறவாம்
பால் பொங்கும்போது நீர் தெளித்தால்
அதனை உள்ளெடுப்பது பாலா? பாத்திரமா?
இதையறிந்தால் செயல் ஞான ஆத்மலிங்க உறவினன் நீயே
உண்மை நிலையறியின் செயலுக்குப் பயிற்சி
அறிவுக்குச் சங்கமம் இது சங்கன பசவண்ணனின் ஆட்டம்
பிரமேஸ்வர இலிங்கத்தை அறிந்தவரின் ஆட்டம்!”

3. “கட்டை துளிர்த்தால் ,மலட்டுப்  பசு பால் கறந்தால்
வரைபடம் உயிர் பெற்றால்
அது கண்களின் பார்வையா? நம்பிக்கையின் திடமா?
பக்தியின் பாதையறிய முக்கியமிது!
சங்கன பசவண்ணன் நிஜமாம், பிரமேஸ்வர இலிங்கத்தில்
இணைவதற்கு நெறியாம்“

பிப்பிபாச்சய்யா

’ஏணாங்க தர சோமேஸ்வரா’ என்பது இவரது முத்திரையாகும்.

1. “நெருப்பின் உலோக போல கனியின் சாறு போல
உடலின் உயிர் போல உருவத்தின் நிழல் போல
அங்கமும் இலிங்கமும் உறவாக வேண்டும்
ஏணாங்கதர சோமேஸ்வர இலிங்கத்தில்“

2. “விதையொன்றில் கிளைகள் படர்வது போல்
அறிவொன்று உருவங்கள் பலவாகத் தோன்றுவது போல
தெளிந்த நீரில் தெரிகின்ற நிலவு போல
வேற்றுமையொன்றே,
ஏணாங்கதர சோமேஸ்வர இலிங்கத்தில்”

பொக்கதா சிக்கண்ணா

கல்யாணில் பிஜ்ஜளனின் கருவூல அதிகாரியாக பணியாற்றியவர். ’பசவண்ணப்பிரிய நாகரேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும். தன் தொழிலுக்கு அடிப்படையான கருவூலத்தையே இறையுருவமாகப் பாவித்தவர்.

“இசைக்கு இராகத்தின் பெயர் சூட்டியது போல
நாதமொன்று, அசைவுகளின் வண்ணம் வேறானது போல
பசுக்கள் பலநிறம் பால்நிறம் ஒன்றானது போல
தொழில்கள் பலவானாலும்
இலிங்கமுடன் இணைகின்ற சரணர் வழிபாடு
செயல், உறவு ஒன்றாம்
பசவண்ணப்பிரிய நாகரேஸ்வர இலிங்கம் அறிவதற்கு.”

“குளிர்ச்சி உள்ளவரையில் வெப்பத்தின் தேவை
வெப்பம் உள்ளவரையில் குளிர்ச்சியின் தேவை
காலை எழுந்து இரவில் உறங்கும் வரையில்
அத்துவைதம் உண்மையன்று,
இதனால் செயலை மறக்கவில்லை
அறிவு சூன்யமென விடவில்லை
அது கனல் மறைந்துள்ள கல்,எண்ணெய் மறைந்த விதை
அன்பு வேண்டும் அதையறிய
பசவண்ணப்பிரிய நாகரேஸ்வர இலிங்கம் அறிவதற்கு.”

[தொடரும்]                

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *