Blog

  • படக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    தொடரியையும் அதன் அருகில் நின்றுகொண்டு சிந்தனையை வேறெங்கோ படரவிட்டிருக்கும் இளைஞரையும் சேர்த்தே தம் படப்பதிவுக் கருவிக்குள் ஏற்றிவந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இப்படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுப் படக்கவிதைப் போட்டி 260க்கு வழங்கப்பட்டுள்ளது. படப்பதிவாளர் திருமிகு. ராமலக்ஷ்மிக்கு என் நன்றி!

    இவ்வொளிப் படத்திற்கு மேலும் ஒளிகூட்டும் சிந்தனைகளைத் தம் கவிதைகளில் ஏற்றுவர் கவிஞர் என்று நம்புகின்றேன். வாருங்கள் கவிதைகளைச் சுவைத்து வருவோம்!

    *****

    ”தொடர்வண்டி ஓட்டம் தொடங்கினால் அல்லவா எம் இடர்வண்டி ஓட்டம் தடைப்படும்? இறையிடம் முறையிடுகின்றேன் இதுகுறித்து!” என்கிறார் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்.

    எமையாளும் இறையிடம்
    சுமையாளன் கேட்கும் வரம்.

    தொடர் வண்டி ஓட்டம் துவங்கிட்டால் எம்
    இடர் வண்டி ஓட்டம் தடைப்படும் விரைவாகப்
    படர் தீ நுண்மி தொற்றினி எமைத் தொடராது
    சுடர்மிகு இறையே சூழ்ந்தெம்மைக் கா.

    *****

    சர்வாதிகார நாடான சீனா வளர்ச்சியின் உச்சம் தொடுகின்றது. ஆனால் பெரும் ஜனநாயக நாடாக இருந்தும் இந்தியா முன்னேற்றத்தில் நாயகமாகத் திகழாமல் முடங்கிவிட்டதற்குக் காரணம் அரசியல் சுரண்டலோ என்று தம்முடைய முதல் கவிதையில் ஐயுறும்  திரு. சீ. காந்திமதிநாதன், நாட்டில் பொறுப்பில்லா மக்கள், பொறுப்பில்லா அமைப்புகள் இதனால் பொய்யும் புரட்டும் எல்லாத் துறைகளிலும், நீதி நேர்மையோ நொண்டிக் குதிரையில் என்று வருந்துகின்றார் தம் இரண்டாவது கவிதையில். தம்முடைய மூன்றாவது கவிதையில், தொழிற்சங்கங்களின் அவலநிலையால் அல்லலுறும் இளைஞராகப் புகைவண்டி அருகில் நிற்கும் இளைஞரைச் சித்திரித்திருக்கின்றார்.

    ஐயம்

    உலக மக்கள் தொகையில்
    இலகுவாக இரண்டாவது
    தொடர் வண்டித் துறையில்
    இடர்களுக்கிடையில் நான்காவது…

    இருப்புப் பாதை நீளம்
    பொறுப்பில் தடம் புரள
    நீண்டது ஆண்டுகளே
    கண்டது துண்டுகளே

    ஆண்டொன்றுக்கு ஐந்நூறு கோடிப் பயணிகள்
    அன்றாடம் பயணிக்க வளர்ச்சி
    நன்றாகப் பயணிக்காது போனால்
    நன்றாகச் சுரண்டல்கள் எங்கோ??

    ஆண்டுகள் நூற்று அறுபத்து ஏழு
    தண்டவாளம் தேய்ந்து இந்திய விவசாயியாய்
    வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றினால்
    தண்டவாளங்கள் புத்துயிர் பெறுதலே நலம்

    கடமை தவறாத ஊழியர்கள்
    கடமை தவறாத நிர்வாகம்
    நாணயம் தவறாத பயணிகள்
    நானிலத்தில் ஏன் பின்தங்கல்???

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்
    பசி பட்டினியால் தவித்த சீனா
    தன்னிறைவில் அபரிமித வளர்ச்சி
    சாதாரண விசயம் தானா?

    மக்கள் நலனில் அக்கறை இருந்தால்
    சர்வாதிகார ஆட்சி உத்தமம்
    உலகிற்குச் சீனா புதுப் பாதை
    இலகுவாகக் காட்டுகிறதோ???

    உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாடு
    பெருமை மக்கள் நலத்தில் வளத்தில்
    அதிகச் சுதந்திரம் தனிமனித உயர்வுக்கும்
    தேச வளர்ச்சிக்கும் என்றானால் நலம்

    பசிக்கும் பிணிக்கும் மூலமே
    ஜனநாயகம் நாயகம் எனில்
    தாயகம் தாங்குமா???

    *****

    கண்துடைப்பு

    மாறு வேடக் காவலன் நான்
    தாறு மாறாய் ஒரு தறுதலை
    ஆறு மாதமாய்த் தப்பித்தலில்
    வேறு விதமாய்ப் பிடிக்கவே

    ஆளுங்கட்சி செல்வாக்கு
    உள்ளூர்வாசி சொல்வாக்கு
    கண்டுக்காத காவல்துறை
    கண்துடைப்பாக அக்கறை

    வயித்துப் பொழப்பு இப்படி ஓர் கூத்து
    அங்குத் தேடினேன் இங்குத் தேடினேன்
    எங்குத் தேடியும் கிடைக்கலை என்று
    பங்கிற்குக் கோப்பில் சேர்க்கணும் நன்று

    பல லட்சியக் கனவுகளில் சேர்ந்தவன்
    பல லட்சம் காண்பவர்களின் அலட்சியம்
    பலமாகப் பாலமாக உள்ள துறை
    பாவமாகப் பரிதாபமாக ஆள்பவர்களால்

    பொய்யும் புரட்டும் எல்லாத் துறைகளில்
    நீதி நேர்மை நொண்டிக் குதிரையில்
    ஊரோடு ஒத்துவாழ் கட்டியவள் கட்டளை
    சீரோடு வாழ உயிரோடு வாழ என்றாள்

    ஒருகாலத்தில் சத்தியத்தின் செல்லப்பிள்ளை
    இலாகாவிலோ எடுப்பார் கைப்பிள்ளை
    இரத்தம் சிந்தியதால் எடுத்த முடிவு
    இரத்த பந்தம் காண வேண்டும் விடிவு

    பொறுப்பில்லாத மக்கள்
    பொறுப்பில்லாத அமைப்பு
    பொறுப்பின்மை
    பொறுப்பின்மைக்கே
    பொறுப்பினைத் தந்தால்
    வெறுப்பும் விரக்தியும்
    அழையாத விருந்தாளிகள்!

    *****

    தொழிற்சங்கங்களின் அவல நிலை

    தொழிலாளர் களுக்குள் ஒருவரே தலைவர்
    தொழில் வளம் செழிக்கும் நலம் பயக்கும்
    தொழிலே தெரியாதவன் தலைவர் எனில்
    தொழிலும் பாழ் தொழிலாளியும் பாழ்

    சங்கத்தின் ஆண்டு விழா
    சங்க வளர்வோ தேய் நிலா
    தலைமை தாங்க வரும் பாலா
    வராது தவிக்கிறேன் குணபாலா

    இரவெல்லாம் தந்த போதை
    இருக்கலாமோ இன்னும் மீதை
    இறங்கி வந்தால் தரலாம் தலைமை
    கிறங்கி வந்தாலும் தரும் நிலைமை

    *****

    தாம் இணையாமல் இருந்து மக்களை இணைத்த தண்டவாளங்கள் இப்போது இரயில்கள் ஓடாததால் ஓய்வெடுக்கின்றன. என்று தீரும் இந்தக் கொரோனாத் தொற்று? எப்போது செல்வர் எம்மக்கள் மீண்டும் இரயில்களில் பயணப்பட்டு? என்று வினாவெழுப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    எப்போது…

    இணையாமலே இருந்து
    மக்களையும் மாநகரங்களையும்
    இணைத்த தண்டவாளங்கள்
    இப்போது
    ஓய்வெடுக்கின்றன,
    ஓடாததால் ரயில்..

    கொரோனாவால் வந்த
    கோளாறு தீர்வதெப்போது
    என்ற
    கேள்விதான் இப்போது..

    தொற்றுப் பயத்துடன்
    கெடுபிடிகள்
    சற்றுத் தளரந்த நிலையில்
    புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன்
    புறப்படுகின்றன சில ரயில்கள்..

    எல்லோரும்
    செல்லும் நாள்
    என்று வருமோ…!

    *****

    ”இளைஞனே! நீ உழைத்துச் சிந்திய குருதியின் நிறம் உன் மேலங்கியின் நிறம்! வண்டிகள் ஓட ஆரம்பித்துவிட்டன; உன் கடமையைச் செய்! உறுதியோடு உழை! உயர்வு காண்பாய்!” என்று நம்பிக்கையளிக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    பயணம் முடித்து வருவோரின்
    சுமைகளை இறக்கியேற்றி
    பயணம் ஆரம்பித்துச் செல்வோரின் சுமைகளை ஏற்றியிறக்கி
    சிந்திய உன் வியர்வையின் குருதியின்
    வர்ணம் உன் மேலங்கியின் நிறம்!

    நீ புலம்பெயர்ந்தவனா?
    இல்லை இங்கேயே பிறந்து வாழ்பவனா?
    எனக்கது தேவையில்லை
    நீ மண்ணின் மைந்தன்
    உழைப்பின் அடையாளம்
    உன்னைக் காக்க மாட்டோமா நாங்கள்?
    கவலையை விடு
    நோய்த் தொற்றில் சிக்காதே!
    வண்டிகள் ஓட ஆரம்பித்து விட்டன
    தயாராக இரு
    அடுத்து பயணிகள் சுமையைக் கையாள்வதற்குச் சகோதரா!!
    உன் உடலினைப் பலப்படுத்து
    உறுதியை மனதிலேற்று!!
    உழைப்பே உயர்வு!!

    *****

    ”பிறர்பாரம் தான் ஏற்று வயிறு நிரப்பும் இந்தச் சுமைதாங்கி மனிதர்கள், தொடருந்துபோல் துயர் தொடர்ந்து துரத்தினாலும் தப்பியோடவியலா இடிதாங்கி மனிதர்கள்” என்று இவர்களுக்காக வருந்துகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    இடிதாங்கி மனிதர்கள்

    நிற்க நேரமின்றி
    பிறர் பாரம் தானேற்று
    வயிறு நிரப்பும்
    சுமைதாங்கி மனிதர்கள்!

    கொடும் நுண்ணயிரியால்
    தடைக்காலம் கண்டமையால்
    தடம் பார்த்து நின்றுகொண்டு
    விடைதேடும் வீரர்கள்!

    தொடருந்து போலத்
    துயரங்கள் தொடர்ந்தாலும்
    தப்பியோடும் மார்க்கமில்லா
    இடிதாங்கி மனிதர்கள்….

    *****

    தொடர்வண்டி ஓரம் நின்றிருக்கும் இளைஞரைக் குறித்த தம் சிந்தனையோட்டங்களையெல்லாம் செம்மையாகவும் காலத்துக்குப் பொருந்தும் வகையில் சுவையாகவும் தம் கவிதைகளில் படைத்தளித்திருக்கின்றார்கள் நம் கவிஞர்பெருமக்கள்! அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    *****

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது…

    காத்திருப்போம் காலம் வரும்!

    காலை முதல் இரவு வரை கலகலப்பாய்ப் பயணிகளுடன்
    காட்சியளித்த எம் இரயில் வண்டியே என்ன ஆயிற்று இன்று?
    காத்துக்கிடந்தோம் கவலையுடன் உன் ஆரவாரம் கேட்க
    கடைசியில் வாயடைத்த தொழிலாளர்களின் வயிற்றலிடித்து
    கூட்டிச் சென்றாயாமே குடிநீரும் இல்லாது நெடுந்தொலைவு!
    கடுகளவும் நம்பவில்லை நான் அச்செய்திகளை!
    காலம்காலமாய்ப் பயணிகளை உமிழ்ந்தும் விழுங்கியும்
    கொடும் வயிற்றுப்பசி போக்கும் உனக்குப் பசிவருத்தம் தெரியாதா?
    காரணமின்றி உன்னுள் பயணிகளை
    இடைவெளிவிட்டு அமர்த்தியதாகக்
    கவலைப்படாதே
    இணையாத இடைவெளியாம் உன் பாதைபோல்

    கிடக்காது விரைவில் தீரும் இப்பிரச்சினை!
    உன்னோடிணைந்து கூட்டத்தோடு கலந்து
    பயணிகளின் சுமை தாங்கிய எம்காலமும்
    இவ்வளவு நாளும் காலனுக்கு இரையாகிப் போனது
    கொரோனா எனும் கொடும் தொற்றின் வரவால்!
    காலங்காலமாய்ப் பலரை வாழவைத்த நீ
    வருந்தாது குதூகலத்துடன் கிளம்பிச்செல்
    நான் சென்று காபி விற்கும் அண்ணனிடமும்
    கைமுறுக்கு விற்கும் அக்காளிடமும் சொல்லிவருகிறேன்
    கொரோனாவை விரட்டிய பின்
    ஒருங்கே தொடர்வோம் நம் பயணத்தையென!

    ”கலகலப்பாய்ப் பயணிகளுடன் காட்சியளித்த எம் இரயில்வண்டியே! உன்னோடு இணைந்து கூட்டத்தோடு கலந்து பயணிகளின் சுமைதாங்கிய எம் காலம் கொரோனாவால் காலனுக்கு இரையானதே! நம்பிக்கையிருக்கின்றது விரைவில் நாம் மீண்டும் இணைந்து பயணிப்போம் என!” என்று இரயிலிடம் தம் மனக்குமுறல்களைக் கொட்டி ஆறுதல்தேடும் இளைஞரைக் நம் கண்முன் நிறுத்தி நம்மைக் கவர்ந்திருக்கும் நாங்குநேரி திருமிகு. வாசஸ்ரீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கூட்டுக் குடும்பம்

    குருநாதன் ரமணி

    இளம் இந்திய ஆடவரும் பெண்டிரும் திரைகடலோடித் திரவியம் தேடி வாழ்வில் எல்லாவித சுதந்திரங்களையும் அனுபவித்துப் பார்க்க முற்படும் தற்காலத்தின் சமூகப் பரிணாம வளர்ச்சியில் இனிவரும் நாட்களில் பெண்ணியமும் ஆணியமும் ஒன்றுடன் ஒன்று மோதிப் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்ததில் விளைந்த குட்டிக்கதை இது.

    று வயதுச் சிறுவன் அகிலேஷ்: அக்கா, நீ மட்டும் அப்பாவை ஏன் டாடின்னு கூப்பிடறே? நாமட்டும் ஏன் அப்பான்னு கூப்பிடனும்? அப்பா வேற டாடி வேறயாக்கா? ரெண்டும் ஒரே மீனிங்தான்னு என் ஃப்ரெண்ட் அரவிந்த் சொல்றானே?

    எட்டு வயதுச் சிறுமி மதுமிதா: ஆமாம் அகில் கண்ணா! ஒவ்வொரு ஸன்டேயும் என்னை வந்து கூட்டிட்டுப் போவாரே, ப்ரகாஷ் அங்கிள், அவர்தான் எனக்கு அப்பா. உங்கப்பா சூர்யா வந்து உனக்கு அப்பா, எனக்கு டாடி, ஸிம்பிள்!

    அகிலேஷ்: அப்போ உங்கப்பாவை நான் டாடின்னு கூப்பிடலாமா? நம்ம ரெண்டு பேர்க்கும் ஒரே அம்மா, ஆனா அப்பா டாடி வேற வேறயாக்கா?

    மதுமிதா: எனக்கும் உனக்கும் ஒரே அம்மாதான். ஆனா எனக்கு இன்னொரு மம்மி இருக்கா. அவளுக்கு ஒரு குட்டிப் பாப்பாவும் இருக்கு, தீபக்ங்கற பேர்ல, தெரியுமா? ஸோ, எனக்கு ரெண்டு தம்பிங்க இருக்காங்க.

    அகிலேஷ்: ஏன்க்கா எனக்கு மட்டும் மம்மி இல்லை? அம்மா வந்ததும் கேக்கப் போறேன், எனக்கும் ஒரு மம்மி வேணும்.

    மதுமிதா: ஷ்..ஷ்! சத்தம் போட்டுப் பேசாதே, பாட்டி எழுந்திடப் போறா! உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன், ஆனா நீ அதைப் பத்தி யார்ட்டயும், மெய்ன்னா அம்மா டாடிட்ட வாய்தவறிக் கூடக் கேட்டுறக் கூடாது, ப்ராமிஸ்?

    அகிலேஷ்: ப்ராமிஸ்க்கா! என்ன ரகசியம் சொல்லேன்.

    மதுமிதா: கூடிய சீக்கிரம் உனக்கும் ஒரு மம்மி வரப் போறா!

    அகிலேஷ்: ஹை, எப்படிக்கா?

    மதுமிதா: அம்மாவும் உங்கப்பாவும் இப்பல்லாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா பத்தியா? அதனாலா, டாடி வேற கல்யாணம் பண்ணிக்கப் போறார். ஸோ, உனக்கு ஒரு மம்மி கிடைப்பா. ஆனால், நீ இதுபத்தி மூச்சு விடக்கூடாது.

    அகிலேஷ் (கொஞ்சம் யோசித்து): ஏன்க்கா நம்ப அம்மா அப்பா டாடிலாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா? நம்ப அம்மாவும் உங்க அப்பாவும் பிரிஞ்சதனாலதானே நீ இங்கேயும் அங்கேயுமா இருக்க வேண்டியிருக்கு. எனக்கும் ஸன்டேஸ்ல போர் அடிக்கிது. அட்லீஸ்ட் நாம சில்ட்ரன்லாம் ஒண்ணா ஒரு இடத்தில இருந்தா எவ்ளோ லவ்லியா இருக்கும்!

    மதுமிதா: கவலைப் படாதே அகில் கண்ணா. நான் அதுக்கு ஒரு ப்ளான் வெச்சிருக்கேன். அது சரியா வரலேன்னா ப்ளான்-B-யும் யோசிச்சு வெச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் பாரேன், நான் பெரியவங்க எல்லோரையும் ஃபோர்ஸ் பண்ணி நாம எல்லாரும் சேர்ந்து ஒரு வீக்-என்ட் பிக்னிக் போகப்போறோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முதல்ல நாம சில்ட்ரென் லெவல்ல ஒண்ணுசேரப் போறோம்.

    தொலைபேசி மணி அடிக்க, பாட்டி விழித்துக்கொள்கிறாள். குழந்தைகள் வாயை மூடிக்கொண்டு தங்கள் ஹோம்-வர்க்கைத் தொடர்கின்றனர்.

    ★★★★★

    மேலுள்ள குட்டிக்கதையானது மேற்கத்திய கலாசாரத்தில் எப்படி பூதாகாரமாகப் பரிமாணம் எடுக்கக்கூடும் என்று கோடிட்டுக் காட்டி ஆங்கிலத்தில் வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கின் தமிழாக்கம்:

    ஏற்பட்ட திருமணமும் காதல் திருமணமும்:
    ஒரு கலாசார அதிர்ச்சி

    ரண்டு மனிதர்கள், ஒருவர் இந்தியர், மற்றொருவர் அமெரிக்கர் ஒரு பாரில் பக்கத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள்.

    இந்தியர் அமெரிக்கரிடம் சொன்னார்: “என் பெற்றோர்கள் என்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி கட்டாயப் படுத்துகிறார்கள். குடும்பப் பாங்கான ஒரு கிராமப் பெண்ணாம். நான் அவளை ஒரு முறை கூடப் பார்த்ததில்லை!

    “நாங்கள் இதை ’அரேஞ்ட் மேரேஜ்’ என்று சொல்வோம். நான் காதலிக்காத ஒரு பெண்ணை மணந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. இதை நான் அவர்களிடம் வெளிப்படியாகச் சொல்லிவிட்டதால் குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம்…”

    அமெரிக்கர் சொன்னார்: “’லவ் மேரேஜ்’ பற்றியா நீங்கள் பேசுகிறீர்கள்? என் கதையைக் கேளுங்கள்…

    “மூன்று வருடங்கள் டேட்டிங் பண்ணி நான் ஒரு விதவையைக் கல்யாணம் செய்துகொண்டேன். அவளுக்குக் கல்யாண வயதில் ஒரு மகள் இருந்தாள்… இரண்டு வருடம் கழித்து என் அப்பா என் வளர்ப்பு மகளான அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டார். இதனால் என் தந்தை எனக்கு மருமகன் ஆகிவிட, நான் என் தந்தையின் மாமனார் ஆனேன்! என் மகள் இப்போது என் அன்னையாகி, என் மனைவியே எனக்குப் பாட்டியானாள்!

    “எனக்கு ஒரு மகன் பிறந்தபோது உறவின் குழப்பங்கள் விசுவரூபம் எடுத்தன. என் மகன் என் தந்தையின் சகோதரன், எனவே எனக்கு அவன் அங்க்கிள் ஆனான்! என் தந்தைக்கும் ஒரு மகன் பிறந்தபோது இன்னும் மோசமானது. இப்போது என் தந்தையின் மகன், அதாவது என் சகோதரன் எனக்குப் பேரன்! இப்படியெல்லாம் எங்கள் குடும்பத்தில் இருக்கும்போது நீ உன் குடும்பத்தில் குழப்பம் என்று சொல்வது வேடிக்கை!”

    ★★★★★

    Share
  • Q&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?

    Q&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?

    அண்ணாகண்ணன்

    நண்பர் வெண்மணி குமார் அவர்களின் கேள்விக்கு எனது பதில் இங்கே.

     

    Cover Image courtesy: https://www.maxpixels.net

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26

    தி.இரா. மீனா

    பிரசாதி போகண்ணா

    தத்துவ போதனை, சரணரைப் போற்றுதல், பக்தனின் இயல்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இவர் வசனங்கள் அமைகின்றன. ’சென்ன பசவண்ணப்பிரிய போக மல்லிகார்ச்சுனலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    1. “தத்துவத்தின் வழி மெய்யறிய நினைத்தால்
    அது குரங்கின் கை கண்ணாடி போலாம்
    வெறுமே ஆடியதன்றி எதையும் காணவில்லை.
    மலைக்குகையில் அழைப்பது வெற்றொலியாம்
    நம்பிக்கைக்குரியவன்
    சென்ன பசவண்ணப்பிரிய போக மல்லிகார்ச்சுன இலிங்கம்”

    2. “பக்தியென்பது வேர், விரக்தியென்பது மரம்
    கனியென்பது ஞானம்,
    பக்குவமடைந்தால் எல்லையற்ற ஞானம்
    காம்பிலிருந்து விடுபட்டால் பரமஞானம்
    சுவைக்கும் போது உள்முக ஞானம்
    மகிழ்வு தன்மயமாகும்போது புனித ஞானம்
    புனிதஒளி நிலைக்கும் போது பரிபூரண ஞானம்
    அது மேலான உடலென்பதற்கிடமில்லை
    சென்னபசவண்ணப்பிரிய போகமல்லிகார்ச்சுன இலிங்கம்
    அளவிற்கு எட்டாத காரணத்தால்“

    3. “உலோகப் பந்து ஊடுருவிச் செல்ல முடியுமா?
    மலரும் முன்னால் செடிக்கு மணமும் நிறமுமேது?
    இந்த துவைத அத்வைத இரண்டும்
    சென்னபசவண்ணப்பிரிய போகமல்லிகார்ச்சுன
    இலிங்கத்துள்ளுண்டு.“

    4. “காற்று அடங்கிய பெரிய கடல்போல
    ஒலியில் அடங்கிய மௌனம் போல
    வெட்ட வெளியைத் தொடாத உறுதியைப் போல
    சென்னபசவண்ணப்பிரிய
    போக மல்லிகார்ச்சுனனுள் அடங்கிய நட்பாம்“

    பிரசாதி லெங்க பங்கண்ணா

    சரணர்களுக்கு சேவை செய்வது இவர் காயகம். ’தகன சண்டிகேஸ்வரலிங்கா’ என்பது இவரது முத்திரையாகும்.

    “பிரசாதமே உடலெனக் கொண்டவனின் இருப்பு
    பச்சை மண்பாண்டம் உடைந்தது போலிருக்க வேண்டும்
    கானல் நீர் நிரப்பிக் கொட்டியது போலிருக்க வேண்டும்
    தீயில் எரிந்த கற்பூரக் குன்று போலிருக்க வேண்டும்
    பிரசாதத்திற்கு மறுப்போர் இல்லாதது போலிருக்கவேண்டும்
    தகனசண்டிகேஸ்வர இலிங்கத்தில் இணையவேண்டும்“

    பத்தலேஸ்வரனின் புண்ணியஸ்திரி குட்டவ்வே

    நாடோடிகளில் ஒருவரான பத்தலேசுவரனின் மனைவி ’நிம்பேஸ் வரா’ இவரது முத்திரையாகும்.

    “மனம் நிர்வாணமாகாத வரையில்
    உடல் நிர்வாணமாகியென்ன?
    விரதம் தவறிய பின்பு விரதம் தவறியவரோடு சேர்ந்தால்
    விரதம் கடைப்பிடித்தென்ன பயன்?
    அது நரகமே நிம்பேஸ்வரனே.“

    பசவலிங்கதேவா

    குருவின் மீது எல்லையற்ற அன்பு கொண்டதான நிலையில் இவர் வசனங்கள் அமைகின்றன. ’மத்பிராண நாத மஹாகுரு சித்தலிங்கேஸ்வரா’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “மண்ணாசையில் மனம் கொள்ளவைத்தது உயிராத்மா
    பெண்ணாசையில் வாட்டியது அந்தராத்மா
    பொன்னாசையில் கருக்கியது பரமாத்மா
    தனதான்யத்தில் பொடியானது  தூய ஆத்மா
    தாய் தந்தை உறவில் சுழன்றது ஞான ஆத்மா
    உடன்பிறப்பு உறவுகளெனத் தவித்தது உடலாத்மா
    இப்படி ஜடமான ஆன்மாக்களின் நட்பில் கெட்டேன்
    என் கதியென்ன குருலிங்க ஜங்கமமே?
    ஹரஹர சிவசிவ ஜெயஜெய கருணாகரனே
    ’மதபிராணநாத மஹாகுரு சித்தலிங்கேஸ்வரா“

    2. “என்னுள் எள்ளளவும் நல்லெண்ணமில்லை
    ஏழு தீவுகள் அளவு குற்றமுடையவன் நான்
    கருணையால் என்னைக் காப்பீரோ?
    குருலிங்க ஜங்கமமே குற்றம் பொறுப்பவரே,
    ஹரஹர சிவசிவ ஜெயஜெய கருணாகரனே
    ’மதபிராணநாத மஹாகுரு சித்தலிங்கேஸ்வரா”

    பஹூரூபி சௌடய்யா

    நாட்டுப்புறக் கலைஞரான இவர் கல்யாண் நகரில் பலவேட காயகத்தின் மூலம்  சரணவாழ்வு வாழ்ந்தவர். ’ரேகண்ணப்பிரிய நாகி நாதா’ இவரது முத்திரையாகும்.

    1. “ஐவரோடு இணைந்து ஆடினேன்
    சிவனொடு நட்பானேன்
    நான் நீயெனும் வேற்றுமை நீங்கிப் பார்த்தேன்
    கூடினேன் கேடில்லாத கூட்டத்துடன்
    ஆட்டம் போலியானது நோட்டம் முடிந்தது
    ரேகண்ணப்பிரிய நாகிநாதனே“

    2. “எல்லாவுலகங்களிலும் அவன் இருந்தாலென்ன?
    உலகைப் போன்றவனல்லன் சிவன்
    உலகைத் தன்னுள் வைத்து தான் வெளியிலிருப்பின்
    பிரம்மாண்டம் போன்றவனோ? இல்லை
    ஆகாயம் போல உள்ளும் புறமும் ஆற்றலின் ஆதாரம்
    நம் ரேகண்ணப்பிரிய நாகிநாதன்“

    3. “கையை மறந்து சண்டை போடுவது எத்தகையது?
    உணர்வை மறந்து பார்க்கும் பார்வை  எத்தகையது?
    பயத்தை மறந்து செய்யும் பக்தி எத்தகையது?
    குருவை மறந்து இலிங்கத்தை விரும்புவாயெனில்
    இலிங்கமுமில்லை குருவுமில்லை
    ரேகண்ணப்பிரிய நாகநாதனே”

    [தொடரும்]

    Share
  • செடிகள் பூக்களைத்தான் தரும்

    செடிகள் பூக்களைத்தான் தரும்

    ஆதித் சக்திவேல் 

    தன் தோளிலும் கழுத்திலும்
    தொங்கிய  கருவிகளில்
    அவ்விசைக் கலைஞனின்
    உதடுகளும் விரல்களும்
    மாறி மாறிப் பதிந்து பயணித்ததில்
    மிதந்து வந்த மேகமென
    கொட்டிய  மலை அருவியென
    பொங்கியது அவன் பாடலில்  இனிமை
    வேர் பிடித்துச் சென்றேன் அவ்விசையின் இனிமையை
    வேதனைகள் முடிச்சு முடிச்சாய்
    திரண்டிருந்தன அவற்றின்
    நுனிகளில்

    வண்ணங்களை
    அந்த ஓவியன் கலந்த நேர்த்தியில்
    நிஜங்களை
    நிறங்களால் நிழல்களாக்கி
    திரையினில் அவன் தீட்டிய பாங்கினில்
    உயிர் பெற்றது ஒரு காட்சி ஓவியமாய்
    அவனது கற்பனை வண்ணங்களை
    ஒவ்வொன்றாய் உரித்துப் பார்த்தேன்
    கடைசியாய்க்  கண்ணுக்குத் தெரிந்தது
    இருட்டான  கருப்பு வண்ணம்
    திட்டுத்  திட்டாய் அவன் மனம் எங்கும்

    முழங்கிய உரையில்
    குரலின் ஏற்ற இறக்கங்களில்
    சினத்தில் அடித்த முரசின் இடியென
    கத்தியின் கூர்மையாய்
    மேடையில் பேசியவனிடமிருந்து
    வந்து விழுந்த வார்த்தைகளைக்
    கூர்ந்து கேட்டேன்
    கைகோர்த்து நின்றன அவற்றுடன்
    ஏமாற்றத்தின் துயரை
    எதிரொலித்த பல வார்த்தைகள்

    பூக்கள் மேவிய பாதையில் நடப்பதாய்
    அந்நடிகனின் கம்பீரம் கண்டு
    பாதங்களின் சுவடுகளைப்
    பின் தொடர்ந்தேன்
    முட்களையும்  கற்களையும்
    மிதித்துச் சென்றன அவை
    குத்திக் கிழித்திடும்
    அவனது பார்வை என
    எண்ணிய நான் ஏமாந்தேன்
    குனிந்து குருதி வடித்துக் கொண்டிருந்த
    அவன் கண்களைப் பார்த்தபோது
    அவன் கண்ட கனவுகளை
    யாரோ திருடிக் கொண்டது போல்
    அக்கண்களில் ஒரு பாவம்

    ஒவ்வொரு கலைஞனின் மனதிலும்
    இவ்வளவு வேதனைகளா?
    தாங்க முடியாமல்
    அவர்களில் ஒருவனை
    நிறுத்திக் கேட்டேன்

    “நீருக்குப் போரிடும் தம் வேரை
    யாருக்கும் தெரியாது
    மண்ணுள் புதைத்து
    பூத்துக் குலுங்கும் மலர்களை
    காய்த்துக் கனிந்த கனிகளை
    தம் கிளைகளில் காட்டும்
    செடிகளும் மரங்களும் போல்
    அடுக்கடுக்காய் வேதனைகள்   அத்தனையும் மனதின் ஆழப்புதைத்து
    மக்கள் மகிழ்ச்சி கொள்ளத்
    தம்மை வெளிக் காட்டுவோரே கலைஞர்
    பூக்களுக்கும் நிலவுக்கும் நடுவே
    வாழ்பவரல்ல அவர்கள் “

    கலைஞர்களின்  பிரதியாய்
    இருந்த அவன்
    என் கேள்விக்கு பதில் தந்து
    நடந்தான்  தன் அடுத்த நிகழ்ச்சிக்கு

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)

    சேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    இயற்பகை   முனிவா   ஓலம்;  ஈண்டுநீ   வருவாய்  ஓலம்!
    அயர்ப்பிலா   தானே   ஓலம்!    அன்பனே   ஓலம்,  ஓலம்!
    செயற்கரும்  செய்கை  செய்த  தீரனே  ஓலம்!   என்றான்
    மயக்கறும்    மறைஓ   லிட்டு   மாலயன்  தேட  நின்றான்!

    தம்மிடம்  மனைவியாரை   ஊரறிய  ஒப்படைத்து  விட்டுத்  திரும்பிப் பார்க்காமல் தம்மூர் நோக்கிச் சென்ற இயற்பகையாரை, சிவவேதியராக வந்த இறைவன் ஓங்கிய குரலெடுத்து அழைக்கலுற்றார்; ஊர் அறிய ஒப்படைத்த  அடியாரை ஊர் அறிய  அழைத்தார்.

    என்றும் தெளிவுடைய நான்மறைகள் பன்முறையும் தம்மை நோக்கி அழைத்த போதும் வெளிப்படாதவர் சிவபெருமான்; அதுமட்டுமல்ல பிரமனும் திருமாலும் தேடிய போதும் அவர்களுக்கு அகப்படாமல் ஓங்கியுயர்ந்து நின்றவர்  சிவபிரான்; அவரே  இப்போது,  “இயற்பகை முனிவனே ஓலம்!; இங்கே நீ வருவாய் ஓலம்!; எப்போதும் எமது சிந்தனை மறவாதவனே ஓலம்!; அன்புடையவனே ஓலம்! ஓலம்!; பிறர் எவரும் செய்தற்கரிய செய்கை செய்த தீரமுடையானே ஓலம்!” என்று தான் பன்முறையும் ஓலமிட்டு அழைத்தான்.

    இப்பாடலில் ‘இயற்பகை முனிவா!’ என்ற தொடர் இயற்பகையார்,  முனிவர் நிலையை அடைந்த சிறப்பை  விளக்குகிறது. தம் மனைவி பால் காமம் காட்டாமல், காமனை முனிந்தவர் முனிவர் ஆனார்  உலகப் பற்றுக்களை யெலாம் அறவே முனிந்து ஒதுக்கியவராதலின் முனிவர் என்றார். அவரது முனிவராகும்  தன்மையை மூவுலகும் அறியக்  காட்டிய செயல் நிறைவெய்திய இடம் இது!  அதனை நிறுவியமையால்  இவர் முனிவரா யினார் என்று முடித்துக் காட்டியபடியாம்.

    இவ்வாறு அவர் முனிவரான செயலை  இறைவனோடு ஓ[பிட்டு  சேக்கிழார் விளக்குகிறார். பின்னர் இதே நூலில்  “முனிவர்“ – (408); “மாதவன்“ – (412); மறைமுனி – (419); நற்றவர் – (422); முனிவர் (429); தவமுனி – (430) என முன்னர் முனித் தன்மை யாலே குறிக்கப்பெற்ற இறைவன்,

    “துரியங் கடந்தசுடர்த் தோகையுட னென்றும்
    பிரியாதே நிற்கின்ற பெம்மான் – றுரியத்தைச்
    சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யுந் தன்மைகளும்
    ஆக்குவிப்ப னன்பர்க் கவன்”.

    என்று திருக்களிற்றுப்படியார் காட்டிய படி,  தமது தன்மையே தமது அன்பர்க்கும் ஆயினமையை  இங்குக் குறித்துக் காட்டினார்!  முனிவரால் முனிவர் எனப் போற்றப் பெற்றமையால் இவர்  பெரு முனிவர் ஆனார்!

    அடுத்து இப்பாடலின்  ‘’ஈண்டு நீ வருவாய் ‘’ என்ற தொடர்,’’ நீ புகுமிடம் நீ இப்போது திரும்பிச் செல்லும் நகரமன்று. நாம் இருக்கும் இந்த இடமே’ என்பதைக்க குறித்தது. இத்தொடரை, ‘’மீண்டு நீ வருவாய்’’, என்றும்  கூறலாம் .  பிறரால் எளிதின்  மீளக்கூடாத இவ்வுலகத்திலிருந்து மீண்டு எமது நலமிகும்  உலகத்திற்கு மீண்டு வா’ என்ற குறிப்பும் விளங்குகிறது.

    இப்பாடலின்  ‘’அயர்ப்பிலாதானே’’  என்ற தொடர்,  ‘’எந்தக் காலத்தும் எவ்விடத்திலும் சிவனையும் அவனடியாரையும் மறவாமல் நின்று, அடியாருக்கு  இல்லை என்னாத விரதங் காத்தவனே!’’,  என்று பொருள் படும். அயர்ப்பு என்பது மறதியைக்  குறிக்கும்.

    “அங்கொருநாள்  அருளாலே யயர்த்து உண்ணப் புகுகின்றார்
    எங்கள்பிரான் தனையறியாது  அயர்த்தேன் யானென“

    சாக்கியநாயனார் புராணத்திலும் இதனைச் சேக்கிழார் கூறுவார். மேலும், ‘’அன்பனே ஓலம் ஓலம்’’ என்ற பகுதியில் இருமுறை ஓலம் என்று கூறி அழைத்தமையால், இறைவனிடத்தும் அடியாரிடத்தும் அன்பு நிறைந்தவனே. என்ற இருவகை அழைப்பைக்  காட்டுகிறது! அன்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் காரணமான சிறப்புடையதாதலின் ஏனைய இடத்து ஓலம் என்று ஒரு முறை அறைகூவியவர் அன்பனே ஓலம் ஓலம் என இங்கு இருமுறை அடுக்கிக் கூவினார்.

    இறைவன் தம்மையே ஒப்புவிக்கும் பொருள் அடியாரின் அன்பு ஒன்றுதானே! இதனை, “பத்திவலையிற் படுவோன் காண்க“ என்ற  திருவாசகத்திலும், “பத்திரனடிமை யென்றான்“ எனத் திருவிளையாடலில், இறைவன் பாணபத்திரருக்குத் தம்மை அடிமையாக்கிக் கொண்டபகுதியிலும் காண்க. “அன்பே சிவமாவ தாரு மறிகிலர்“ என்பது திருமந்திரம். அன்பிலே கலந்துகொண்டு இரண்டற நிற்பவர் ஆதலின் அன்பனுக்கு இருமுறை ஓலமிட்டனர்!

    அடுத்து, ‘’செயற்கருஞ் செய்கை செய்த தீரனே!’’ என்ற தொடரால், மேற்பாட்டில் ஆசிரியர் தம் வாக்கினால் நாயனாரது அரிய செய்கையைப் பாராட்டியதையும், இங்கு இறைவனும் அவ்வாறு பாராட்டியதையும்  தெரிவிக்கின்றார்.

    அடுத்து,  ‘’மயக்கறும் மறை ஓலிட்டு’’ என்ற தொடரில், மயக்கம் என்பது மோகத்தைக் குறித்தது.  உயிர்களுக்கு உள்ள மயக்கம் போக்கி உண்மை உணர்த்துவது வேதம். மயக்கறும் மறை, மயக்கம்  அறுதற்குக் காரணமான மறையைக் குறித்தது. ஓலமிட்டு என்பது ஒலிட்டு என நின்றது.  ஓலிடவும், தேடவும் நின்றான் என்றுவிரித்துரைக்க. மறை ஓலிடுதலாவது எல்லா  வகையானும் சொல்லியும் இறைவன் தன்மை தன்னளவுட் படாமல் இளைத்து நின்று விடுதல். இதனை,

    ‘’வேதங்கள்  ஐயா  என ஓங்கி  ஆழ்ந்தகன்ற  நுண்ணியனே!’’

    என்ற திருவாசகம் விளக்கும்.  இகலி நின்ற பிரமவிட்டுணுக்களினிடையே நான்கும் வேதங்களும் வெளிப்பட்டடு நீவிர் இருவரில் ஒருவரும் பரமல்லர் இறைவனே பரம்பொருள் என்பதை ஆதாரங்கள் காட்டி, முறையிடவும் என, உரைத்தலும் ஆகும்! நாதரூபமாகிய மறை, நாதாந்த ரூபனாகிய இறைவனை ஓலமிட்டு அழைத்தல் இயல்பாம்.

    மறை ஓலிட்டு, என்பதை மறைச் சொற்களால் ஒலமிட்டு, மாலயன் தேட என்று இவ்விரண்டினையும் ஒன்று கூட்டி உரைக்கலாம். மறை ஓலிடவும் நின்ற  இறைவன், நாயனார் பெயரைக்  கூவி ஓலமிட்டான் என அடியாரது பெருமையை விளக்கினார்!

    மறைவழி நின்ற முனிவர் பெரியர்; அவரிலும் அவர்களால் வழிபடப் பெற்ற வேதம் பெரிது; அவற்றினும், அவ்வேதத்தால் வழிபடப்பெற்றவனும் அதைச் சொன்னவனுமாகிய இறைவன் பெரியன்; அவனும் ஓலமிட நின்ற மிகப் பெரியார் இந்நாயனார்! என இவரது உயர்வைக்  குறித்தார். இதனையே, முன்னர் முனிவர் என்றபோது,  ஐந்தவித்த முனிவனாகிய கௌதமனினும் அங்ஙனம் அவியாது நின்றே உலகச்சார்பை விட்டு அறுத்த நாயனார் ஆற்றல் மிகப் பெரிதென்பதை உணர்த்தினார்.

    இயற்பகையார், முனிவராதலே வருவாய் என்றழைக்கக் காரணம்; அவர் அயராமையே முனிவராதற்குக் காரணம்; அன்பு அதற்கு அடிப்படை; அதுவே செயற்கரிய செய்கை செய்வித்தது எனத் தொடர்புபடுத்திக் கொள்க.

    அறுபகையும் செற்றவர் நாயனாராதலின் இறைவன் கூவிய ஓலங்களும்  அறுவகைப்பட்டன!

    Share
  • ஈருடல் இணையுமா?

    ஈருடல் இணையுமா?

    சி. ஜெயபாரதன், கனடா

    ஈருடலைத்
    தாலியில் போடும் மூன்று
    முடிச்சுகள்
    ஓருடலாய் இணைப்ப தில்லை !
    சேர்ந்தவை சில
    சேராமல் போனவை  பல.
    சேர்ந்தும்
    சேராதது போல்
    தெரிபவை சில.
    சேராமல் சேர்ந்திருப்பவை
    சில.
    அறுத்துக் கொள்பவை சில.
    வெறுத்துக்
    கொள்பவை சில.
    வெட்டிக்  கொண்டவை சில
    மீண்டும்
    ஒட்டிக் கொள்பவை சில
    ஒட்டு மாங்கனி
    காய்க்க.

    கண்டதும் காதல் என்பது
    ஓர் கண்ணடிப்பு.
    கண்ணைக் குருடாக்கும்
    மின்னடிப்பு.
    பளிச்சென வெளிச்சம் காட்டி
    ஒளிமயம் மறையும்.
    நீர் மேல்  எழுத்து!
    காதல்  காதல்  காதல்  தோல்வியில்
    நேரும் மோதல்
    மோதலுக்குப் பிறகு
    போதல்
    நேர் / எதிர்த் திசைகளில்
    திரும்பிப் பாராமல் !
    சாதிப் பிணக்கால் உற்றார்
    பெற்றார், கற்றார்
    சாதல்  கொலை புரிவது  வேதனை
    வேதனை, வேதனை.
    காதலைத் தெய்வீகம் என்று
    பூஜிப்பது
    ஏட்டுச் சுரைக்காய்!
    ஆண் / பெண் உடல் மோகம்
    வளர்பிறை!
    தேனில வுக்குப் பிறகு
    தேய்பிறை தான்!
    சொர்க்கபுரி
    மலை உச்சிக்கு ஏறியவர்
    பிறகு கீழே
    இறங்க வேண்டும் தனியாக
    தர்க்க புரிக்கு!
    தண்ட வாளம் சேர்ந்தால்
    வண்டி விழும்.
    இணையாகப் போனால்
    இரயில்
    விழுவ தில்லை!
    நெருங்காமல், நீங்காமல்
    தீக்காய்வார்  போல்
    நேசித்திரு
    இடைவெளி தேவை பாவைக்கு
    புரண்டு கொள்ள!

    Share
  • நாலடியார் நயம் – 25

    நாலடியார் நயம் – 25

    நாங்குநேரி வாசஸ்ரீ

    25. அறிவுடைமை

    பாடல் 241

    பகைவர் பணிவிடம் நோக்கித் தகஉடையார்
    தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
    இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது
    அணங்கருந் துப்பின் அரா.

    வருத்தத்தை விளைவிக்கும் மிக்க
    வலிய பாம்பும் சந்திரன் இளம்பிறையாய்
    விளங்கும்நேரம் விழுங்கச்செல்லாததுபோல்
    வீரமிக்கவர் பகைவர் தளர்ந்திருக்குங்கால்
    வெல்வதற்கு வெட்கப்பட்டு போர்செய்ய
    விரும்பி அவ்விடம் செல்லார்.

    பாடல் 242

    நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு
    அணிகலம் ஆவது அடக்கம் – பணிவில்சீர்
    மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
    கோத்திரம் கூறப் படும்.

    அகலக் கடலின் குளிர்மிகு கரைக்கு
    அரசனே! வறுமையுற்ற மனிதனின்
    அணிகலம் அடக்கமுடைமை
    அடக்கமின்றி சிறப்புடைய
    அளவுகடந்து நடப்பானாயின்
    அவன் வாழும் ஊரில்
    அவன் குலம் இகழப்படும்.

    பாடல் 243

    எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது
    எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
    தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
    கொன்னாளர் சாலப் பலர்.

    எந்நிலத்தில் விதைத்தாலும்
    எட்டிவிதை தென்னை மரமாகா
    தென் நாட்டினரும் நல்லறம் செய்து
    தூய சுவர்க்கம் புகுதலால்
    மறுமைப்பேறு கிட்டுமேயல்லாது
    பிறந்த இடத்தின் பெருமையாலன்று
    வடதிசையிலுள்ளோரிலும் முயற்சியின்றி
    வீணாய்க் காலம் கழித்து நரகம்
    புகுவார் பலர் உள்ளார்.

    (மறுமைப் பயனடைய அவரவர் செய்கையே காரணமாவதன்றித் திசையினால் ஒன்றுமில்லை.)

    பாடல் 244

    வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
    தீஞ்சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே
    இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
    மனந்தீதாம் பக்கம் அரிது.

    வேம்பின் இலைகளிடையே பழுத்தாலும்
    வாழையின் இனிய சுவை மாறாததுபோல்
    தாம் சேர்ந்த கூட்டம் தீயதாயினும்
    தக்க குணமுடைப் பெரியோரின் மனதில்
    தீயவராகும் தன்மை இல்லை.

    பாடல் 245

    கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
    உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம்
    இனத்தனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப!
    மனத்தனையர் மக்கள்என் பார்.

    அலைமோதும் குளிர் கடற்கரையுடை
    அரசனே! கடலருகிலும் இனிய நீர்
    உண்டாகும் மலை அருகிலும்
    உப்புநீர் சுரக்குமாதலால்
    மக்கள் சார்ந்த இனத்தையல்லாது
    தம் மன இயல்பை ஒத்தவராவர்.

    பாடல் 246

    பரா அரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப!
    ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ? நல்ல
    மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கு மனத்தார்
    விராஅஅய்ச் செய்யாமை நன்று.

    பருத்த அடிமரம் கொண்ட
    புன்னை சூழ் குளிர்கடற்கரையுடை
    நாட்டின் அரசனே! நிலையான மனமுடையார்
    நல்லசெய்கையுடையாரிடத்து நீங்குதலும்
    பின் சேர்தலும் செய்வாரோ? நீங்குதலைவிட
    பழகாமால் இருத்தலே நன்று.

    பாடல் 247

    உணர உணரும் உணர்வுடை யாரைப்
    புணரிற் புணருமாம் இன்பம் – புணரின்
    தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
    பிரியப் பிரியுமாம் நோய்.

    நம் மனதில் எண்ணியதைக் குறிப்பாலுணரும்
    நுண்ணறிவுடையோரை நண்பராய்க் கொண்டால்
    இன்பம்மிகும் வெளிப்படையாகக் காட்டியும் அறியும்
    இயல்பற்றோரை நண்பராய்க் கொண்டால்
    உண்டாகும் துன்பம் அவரைப் பிரியும் நேரம்
    உடனே நீங்கிச் செல்லும்.

    பாடல் 248

    நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
    நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
    மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்
    தலையாகச் செய்வானும் தான்.

    நல்ல நிலையில் தம்மை
    நிறுத்திக்கொள்பவனும் அந்
    நிலைகெடுத்து தம்மைத் தாழ்
    நிலைக்கு கொண்டுசெல்பவனும்
    நிலையை மென்மேல் உயர்த்துபவனும்
    நன்கு உயர்த்தி தலைமையுடையவனாய்
    நிற்கச் செய்பவனும் தானே ஆவான்.

    பாடல் 249

    கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
    பெருமை யுடையாரும் சேறல் – அருமரபின்
    ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
    பேதைமை யன்றுஅது அறிவு.

    அருமையாய் ஒரே சீரான முறையில்
    அலைகள் ஆரவாரிக்கும் குளிர்
    கடற்கரையுடை நாட்டின் வேந்தனே!
    காரியத்தை நிறைவேற்றும் பொருட்டு
    பெருமையுடையாரும் அறிவில்லார்
    பின் செல்வது அறியாமையன்று
    அறிவுடைமையே!

    பாடல் 250

    கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத்
    தருமமும் தக்கார்க்கே செய்யா – ஒருநிலையே
    முட்டின்றி மூன்றும் முடியுமேல்அஃதென்ப
    பட்டினம் பெற்ற கலம்.

    நல்ல தொழில் முயற்சியால்
    நன்கு பொருள் சேர்த்து இன்பம்
    துய்த்து தகுதியுடையார்க்கு
    தருமம் செய்து ஒருபிறப்பிலே இம்
    மூன்றையும் தடையில்லாமல் ஆற்ற
    முடியுமெனில் அது வாணிகத்தை வெற்றியுடன்
    முடித்து துறைமுகப் பட்டினம் அடைந்த
    கப்பல் போலும் இன்பம்பயக்கும்.

    Share
  • நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி

    நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி

    நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகளை ஏந்தி 
    முதன் முதல் அகில விண்வெளி நிலையத்துடன் இணைப்பு
     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்திலிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக பூமிச் சுற்று வீதியில் சுற்றத் தொடங்கியது. 2011ஆம் ஆண்டில் ஓய்வெடுத்த எல்லா விண்வெளி மீட்சிக் கப்பல்கள் [Space Shuttle] ஆட்சிக்குப் பிறகு, இப்போதுதான் நாசா தன் சொந்த நாட்டு ராக்கெட் ஸ்பேஸ்X விண்கப்பலை இரு விமானிகளை இயக்கப் பயிற்சி அளித்து முதன் முதல் ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டு, மே மாதம் 31ஆம் தேதி அகில உலக விண்வெளி நிலையத்துடன் கப்பல் இணைப்பு நிகழ்ச்சியும் நடத்திக் காட்டியுள்ளது. இதுவே முடிவான சோதனை. இதற்குப் பிறகு ஸ்பேஸ்X கப்பல் சாதாரண மனிதரையும் அண்ட வெளிச் சுற்றுலா பயணத்துக்குத் தூக்கிச் செல்லும். அதற்குக் கட்டணம் ஒருவருக்கு 20 மில்லியன் டாலர். இரு விமானிகளும் சில நாட்கள் நிலையத்தில் தங்கி 2020 ஆகஸ்டில் மறுபடியும் பூமிக்கு வந்து சேர்வார். அப்போது நான்கு பாராசூட் குடைகள் டிராகன் விண்சிமிழைத் தாங்கி அட்லாண்டிக் கடலில் இறங்கும். பில்லியனர் எலான் மஸ்க் [ELON MUSK] டிசைன் இது. 2022 இல் ஸ்பேஸ்X ஏற்பாடு நிலவுக்கும், 2024 இல் செவ்வாய்க் கோளுக்கும் பயணம் செய்யும் எதிர்காலத் திட்டங்களும் உள்ளன.

    NASA, SPACE X, BOEING HUMAN SPACEFLIGHT

    ++++++++++++++++

    1. https://everydayastronaut.com/crew-dragon-vs-starliner/
    2. https://youtu.be/P_LLNuLhEXc
    3. https://youtu.be/oV319JAmxCM
    4. http://www.spacedaily.com/reports/Musks_SpaceX_unveils_new_Starship_for_private_trips_in_space_then_moon_999.html

    +++++++++++++++++++

    Image result for Orion, crew dragon, Starliner

    Orion Spaceship and Space Station

    ++++++++++++++++

    image.jpeg

    Starliner Spaceship

    +++++++++++++++

    நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில்
    நிலவில் தடம் வைத்தார்.
    பூமியைச் சுற்றி வரும்
    அகில நாட்டு விண்வெளி நிலையத்தில்
    சிலநேரம் தங்கிச்
    சுற்றுலாப் பயணம்  செய்ய
    நிற்கிறார்  வரிசையில்
    புவி மனிதர்  !
    நவயுகத் தரை நபர்கள் 
    இனிமேல் 
    விண்கப்பல் புவிச் சுற்றில் 
    சுற்றுலா வருவர் !
    கனவில்லை இது !
    மெய்யான நிகழ்ச்சி ! 
    வருவாய் பெருக்கும் மகிழ்ச்சி.

    ++++++++++++++++++

    Image result for Orion, crew dragon, Starliner

     

    https://www.msn.com/sv-se/nyheter/utrikes/tainted-water-exhibition-roves-around-beijing/vi-AAA4gOU

     

    ++++++++++++++++

    நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் [பொதுநபர், இரு தனிநபர்] சேர்ந்து புரியும் விண்கப்பல் சுற்றுலா

    இப்புது விண்வெளிச் சுற்றுலாத் திட்டம், ஈராண்டு தாமதமாகி 2020இல் நிகழும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க விண்வெளிச் சாதனைகளில் முன்னோடித் திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதுவரை 20 பில்லியன் டாலர் நாசாவின் ஓரியன் விண்சிமிழ் [Orion], ஸ்பேஸ்-எக்ஸ் குரு டிராகன் [Crew Dragon] , போயிங் ஸ்டார்லைனர் [Starliner]]  புதுச் சாதன விருத்திக்குப் பயன்படுத்தி உள்ளதாக நாசா தெரிவிக்கிறது.  குறிப்பாக, பூமியைச் சுற்றிவரும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் போக, மீள, சாதனங்கள் கொண்டு செல்ல, இதுவரை ரஷ்ய உதவியை நாட வேண்டி இருந்தது. அதனால் செலவு 70 மில்லியன் டாலர் ஒருமுறை செல்ல அல்லது ஒருவரைக் கொண்டு செல்ல. அத்தேவை இப்போது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கப்பல் பயணங்களால் நிறைவேறுகிறது.  2020இல் மீண்டும் நிலவுக்குச் செல்ல, நாசா 2014இல் 68 பில்லியன் டாலர் ஒதுக்கி இரு நிறுவகங்களைத் தேர்ந்தெடுத்தது.  ஒன்று ஸ்பேஸ்-எக்ஸ் [2.6 பில்லியன் டாலர்] குரு டிராகன் விண்கப்பல் சிமிழுக்கு.  அடுத்தது போயிங் [4.2 பில்லியன் டாலர்] அதன் ஸ்டார்லைனர் விண்கப்பல் சிமிழுக்கு. ஏற்கெனவே ஓரியன் விண்சிமிழ் விருத்திக்கு லாக்கீடு நிறுவகம் [Lokheed] 12 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.

    தற்போதைய சுற்றுலாப் பயணக் கட்டணம் ஒருவருக்கு 250,000 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் திட்டம் : 2020 இல் நிறைவேறப் போகும் மனிதர் செல்லும் விண்வெளிச் சுற்றுலா.

    அடுத்த திட்டம் : 2024 மீண்டும் மனிதர் ஏகும் நிலவுப் பயணம்.

    ++++++++++++++++++++++++++++++

    நாசாவின் திட்டம் 2024ஆம் ஆண்டில் நிலவுக்கு மீளும்  புது முயற்சி. 2020 ஆண்டில்  விண்வெளிப் பயணத்துக்குப் பொது நபர் சுற்றுலா தொடங்கலாம். அண்டவெளிச் சுற்றுலாவை முதன்முதல் தொடங்க, இருபெரும்  தொழில் துறை நிறுவகங்கள் சோதனைகள் செய்து, 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றத் தயாராக இருந்தன.  வெர்ஜின் கலாக்டிக் [Virgin Galactic] தொழில் நிறுவன அதிபர்,  பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ரிச்செர்டு பிரான்சன் [Richard Branson] ஒருவர்.  அடுத்தது புளூ ஆரிஜின் [Blue Origin] தொழில் நிறுவன அதிபர், அமேஸான் படைப்பாளி, ஜெஃப்ரி  பிஸோஸ் [Jeffery Bezos] .  இரு நிறுவகங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, யார் முதலில் நிறைவேற்றப் போகிறார் என்று போட்டி போட்டு வருகிறார்.

    வெர்ஜின், புளூ ஆர்ஜின் கைக்கொண்ட முறைகள் இரண்டிலும் பொதுநபர் பூமியைச் சுற்றி வரப் போவதில்லை.  பயணிகள் ஒரு சில மணிநேரம் விண்வெளி நிலையத்தில் தங்கி, புவிக்கு மீளும் போது, சில நிமிடங்கள் பளுவற்ற உணர்ச்சியில் [Moments of Weightlessness] அனுபவம் பெற்று, புவியில் வந்து இறங்குவார்.  முந்தைய வாய்ப்பாக 2000ஆம் ஆண்டில் விண்வெளி நிலையச் சுற்றுலாப் பயணத்துக்கு மில்லியன் கணக்கான டாலர் தர வேண்டி இருந்தது.  இப்போது சுற்றுலாவுக்கு டிக்கெட் செலவு : 250,000 டாலர்!  மிக மலிவு.  விண்வெளி நிலையம் 250 மைல் [400 கி.மீ] உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.  தற்போதைய குறிக்கோள் விண்வெளிச் சுற்றுலாப் பயணிகள் சுமார் 62 மைல் [100 கி.மீ.] உயரத்தில் விண்கப்பலில் சுற்றி, பளுவற்ற உணர்வை ஒரு சில மணிகள் அனுபவித்து, பாராசூட்டில் புவிக்கு மீள்வார்.

    வெர்ஜின் விண்கப்பலில் 6 பயணிகளும், 2 விமான இயக்குநரும் செல்வார்.  தனியார் ஜெட் விமானம் போலிருக்கும் அதனை இருபுறமும் ஒரு வாடிக்கை விமானம் தூக்கிச் செல்லும்.  சுற்றுலாப் பயணம் நீடிப்பது 90 – 120 நிமிடம்.  கலிஃபோர்னியா  மொகாவி பாலைவனத்தில் செய்த சோதிப்பில் 21 மைல் உயரத்தில்  விண்கப்பல் பறந்தது.  பிரான்ஸன் கடந்த 2018 மே மாதத்தில் BBC வானொலி நபருக்குக் கூறியது :  இதுவரை 650 நபர் பயணத்துக்குப் பெயர் கொடுத்திருக்கிறார்.  விண்சிமிழைத் தூக்கிச் செல்லும் ராக்கெட் உயரம் 60 அடி.  விண்சிமிழ் 66 மைல் உயரத்தைத் தொட்டது. அமெரிக்காவின்  ஸ்பேஸ் எக்ஸ் போயிங் நிறுவகங்கள் 2020 ஆண்டுக்குள் தமது விண்வெளிப் பயணத் திட்டங்களைத் தயார் செய்யும்.

    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 19

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 19

    மீனாட்சி பாலகணேஷ்

    (சிறுசோற்றுப் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்மக்களின் வளர்ச்சியில் ‘பொய்தல் விளையாட்டு’ பெரும்பங்கு வகிக்கிறது. பெண் குழந்தைகள் உடல், உள, மன வகையாக வளர்ந்து தமது குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாராவது இவ்விளையாட்டுகளால்தான்.

    இவை சிற்றில் இழைத்தல், சிறுசோறு சமைத்தல், பாவை விளையாடுதல், குழமணம் மொழிதல் எனப் பல சிறு விளையாட்டுகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. பெண்குழந்தைகள் சிற்றில் இழைத்தலைப் பற்றிய விளக்கங்களை இத்தொடரின் 18.1 & 18.2 ஆகிய பகுதிகளில் கண்டோம். ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்திலும் பெண்குழந்தைகள் இழைக்கும் பலவிதமான சிற்றில்கள், அவர்கள் சமைக்கும் சிறுசோறு ஆகியன பற்றிய அழகான விளக்கங்களைக் காணலாம் (இத்தொடரின் பகுதிகள்11.1 & 11.2). மிகச்சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் மட்டுமே சிற்றில் பருவம் பாடப்பட்டுள்ளது. சிறுசோறு அடுதல்/சமைத்தல் என்பது இதில் ஒரு செயலாகவே அடங்கிவிட்டதனையும் காணலாம். ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் ஒன்றில் மட்டுமே இதனை ஒரு தனிப்பருவமாகவே இதனை இயற்றிய புலவர் (பெயர் தெரியவில்லை) பாடிவைத்துள்ளார்.

    பதிப்பு ஆண்டை நோக்கினால், இப்பிள்ளைத்தமிழ் ஆண்டாள் வாழ்ந்த காலத்திற்கு நீண்டநாட்களுக்குப்பின் பாடப்பட்டது. ஆண்டாளின் காலம் கி. பி. 8-ஆம் நூற்றாண்டாக இருக்கும் என்பது சரித்திர, ஆன்மீகவாதிகள் கூற்று. இப்பிள்ளைத்தமிழோ கி. பி. 18-ஆம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பிள்ளைத்தமிழ் நூல்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் பின்னரே எழுதப்பட்டன. அனைத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கும் முன்னோடியாகக் கருதப்படும் பெரியாழ்வாரின் (இவரே ஆண்டாளின் வளர்ப்புத் தந்தையுமாவார்) கண்ணன் மீதான திருவாய்மொழியும் இக்காலத்திலேயே படைக்கப்பெற்றது.

    ஆண்டாள் எனும் தெய்வத் திருமகள் ஒருவளே மார்கழி, தைந்நீராடலையும், காமநோன்பு நோற்பதனையும், அவற்றினூடே சிற்றிலிழைத்தல், சிறுசோறு சமைத்தல் ஆகியனவற்றையும் பெண்மக்களின் விளையாட்டாக மட்டுமின்றி, நாடும் வீடும் நலம்பெற வைக்கும் ஒரு வழிபாடாகவும் காட்டி அழகுறத் தனது பாசுரங்களில் பாடிவைத்துள்ளமை வியத்தற்குரியதாகும். இதனால்தானோ என்னவோ புலவரின் கற்பனையும் கவித்திறனும் அவளிழைக்கும் சிற்றிலையும் சமைக்கும் சிறுசோற்றினையும்  இரு இனிய பருவங்களாக்கி ஒவ்வொன்றினையும் பத்துப் பாடல்களால் பாட வாய்ப்பினையும் அளித்தது எனலாம்.

    ‘மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
    கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!1′ எனும் திருப்பாவையில் ஆண்டாள் எவ்வாறு சிறுபெண்களாகிய தாங்கள் அக்கார அடிசிலைச் செய்து அதில் நெய்பெய்து முழங்கையில் வழியுமாறு அனைவருடனும் சேர்ந்து உண்போம் எனப் பாடுகிறாள்.

    இதுபோன்று குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழின் வருகைப் பருவத்துப் பாடலொன்றில் மிகவும் நயமாக  அன்னை பார்வதி ‘ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு’ முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றி ‘விளையாடிக் கொண்டி’ருப்பதனைக் கூறுவதனைக் காண்கிறோம்.

    ‘லீலா க்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா2 என லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமம் பார்வதிதேவி அன்னைக்கு உண்டு. விளையாட்டாகவே இவ்வுலகங்கள் அனைத்தையும் படைப்பவள் என்பதுதான் அதன் பொருள். பேரண்டமாகிய இந்த உலகினையே சிற்றில் இழைப்பதாக அவள் பாவனை செய்துகொண்டு இழைத்து, மிக அருமையாக, ஆசையாக, விதம்விதமாக, அழகாகப் படைக்கின்றாள்; பின் படைத்த உலகங்களில் வாழும் உயிர்களுக்கு உணவளிக்கச் சிறுசோறாக்குகிறாள்.

    இருவினைப் பயன்களே சிறுசோறெனச் சமைக்கப்படுகின்றன! சிறுமியாகிய நம் அன்னை இவ்வுலகில் உள்ள எண்பத்துநாலாயிரம் கோடிவகை உயிர்களையும் தான்விளையாட உயிருள்ள பாவைகளாகச் செய்விக்கிறாள். அவற்றை மலங்கள் எனப்படும் கருமவினைப் பயன்கள் நாள்தோறும் வருத்தித் துன்பத்தில் ஆழ்த்தியவண்ணம் உள்ளன. ஆகவே அவள் சமைத்து வைத்துள்ள இருவினைப் பயன்களெனும் சிறுசோற்றினை அந்தப் பாவைகளுக்கு உண்ணக் கொடுத்து அவற்றின் பசியைப் போக்கி அருளுகிறாள் அவள். ஒருநாளல்ல, இரு நாட்களல்ல, பொறுமையாகச் சலிப்பின்றி, கற்பகோடி காலங்களாகப் பாராசக்தி அன்னை எனும் சிறுமி செய்து வரும் விளையாட்டு இதுவாகும். இவ்வாறு செய்யும் பராசக்தி எனும் சிறுமி விளையாடுமிடம் பரமானந்தப் பெருவீடு எனப்படும் உயர்ந்த ஞானப் பெருவெளியாகும். அதாவது அவளை உணர்ந்து கொண்டவர்களுக்கே அவளுடைய இவ்விளையாடலையும் இக்கண்ணோட்டத்தில் உணர்ந்து போற்றவியலும் என்பதே பாடலின் உட்பொருள்.

            ‘கடிகொண் டலரு நறுங்கடுக்கைக்
                       கடவுண் மகிழப் பேரண்ட
             கடாகப் பரப்பே சிற்றிலெனக்
                       கருமப் பகுப்பே சிறுசோறாம்,
             படிகொண் டுயிராம் பாவைகட்குப்
                       பைதன் மலநோய்ப் பசியிரியப்
             பல்கா லயிற்றி விளையாடிப்
                       பரமா னந்தப் பெருவீட்டிற்
             குடிகொண் டிருக்குந் தீங்கொம்பே3

     …………..’ என்பன இப்பாடலின் அழகிய பொருள்செறிந்த வரிகளாகும்.

    இதனால் பெண்மக்கள் சிற்றிலிழைப்பதும் சிறுசோறு சமைப்பதும் பல பிள்ளைத்தமிழ் நூல்களிலும் தனியாகப் பாடப்படாவிடினும், அந்நூல்களின் மற்ற பருவங்களில் அவை ஒரு அழகான செய்தியாக அற்புதமான உவமைகளுடன் கூறப்படுகின்றன என அறியலாம்.

    இனி ஆண்டாள் பிள்ளைத்தமிழிலிருந்து சில பாடல்களைக் கண்டு மகிழலாம். இயற்றப்பட்ட பத்துப்பாடல்களில் கிடைத்தவை ஆறு பாடல்களேயாம்.

    முதற்பாடல் தேவர் முதலானோர் கூறுவதாக உள்ளது. அவர்கள், “திரிசூலமேந்திய சிவபெருமான் தொட்டுண்ட மிச்சத்தினை நாம் இங்கு உண்ண இயலாது; அவன் இருக்குமிடமோ சுடுகாடு; அவன் மாலையாக அணிந்துள்ளவை எலும்புகள்; அவன் மண்டையோட்டில் உண்ணுதற்காகப் பலியினை ஏற்பவன்; ஒரு அன்னையிடம் பிள்ளையை அறுத்துச் சமைத்து உணவிடக் கூறியுண்டவன்; (ஈண்டு சிறுத்தொண்ட நாயனார் கதை உள்ளடக்கமாகக் கூறப்பட்டது); இது எமக்குச் சரிப்படாது; ஆதலால் பிரமன் முதலானவர்கள் அவனை விட்டுவிட்டு உன்னிடம் வந்து நீ அமலனான எம்பெருமானுக்கு ஊட்டி உண்ணுகின்ற உணவின் சேடத்தை (மிச்சத்தை) உண்பதே உசிதம் என்று எதிர்பார்த்து நிற்கின்றனர். புதுவை எனும் ஸ்ரீவில்லிப்புத்தூர்ப் பிராட்டியே! நீ சிறுசோறு இழைத்தருளுக!

    தென்னரங்கத்துப் பெருமான், திருமாலிருஞ்சோலைப் பெருமாள், திருமலைப்பிரான், திருத்தண்கா அப்பன், ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ரசாயி ஆகிய ஐவரும் விருந்துண்ணுமாறு சிறுசோறு சமைத்தருளுக,” என வேண்டுகிறார் புலவர்.

             ஊனறாச் சுடர்முத் தலைக்குல பாணிதொட்
                       டுண்டதீங் கொருவ ருண்ணா
             ……………………………………………………..
             தானமுஞ் சுடுகாடு தமமென் பூனுடைத்
                       தலையிலிடு பலியை யுண்பான்
             ……………………………………………………
             ஆனதா லவனைவிட் டிங்குவந் தன்னைநீ
                       யமலனுக் கூட்டி யுண்ணு
             மச்சேட முண்பதே யுசிதமென் றயனைமுத
                       லவர்களெதிர் கொண்டு நின்றார்
             ………………………………………………
             தென்னரங் கேசன்முத லைவரும் விருந்துணச்
                       சிறுசோ றிழைத்தருள்கவே 4.

    மேற்காணும் பாடலில் ஆண்டாள் அரங்கப்பெருமானுக்கு ஆக்கும் சிறுசோற்றின்பெருமை விளம்பப்பட்டது. மற்றொரு பாடலில் உலகத்து உயிர்கட்கெலாம் சிறுசோறு இழைக்குமாறு ஆண்டாளை வேண்டும் நயம் மிகவும் அருமையாக உள்ளது.

    உயிர்களையெல்லாம் படைத்து, அவற்றிற்கு உரிய வீடுகள் எனப்படும் உடல்களில் குடியேற்றி, அவை உயிர்வாழத் தேவையான உணவெனும் இருவினைப் பயன்களையும் ஊட்டுபவள் அன்னை தெய்வம் எனும்  ஆழ்ந்த கருத்து இதனால் பெறப்படுகின்றது.

    மேலும் ஆண்பாற்பிள்ளைத்தமிழின் சிற்றில் பருவத்துப் பாடல்கள் பெரும்பாலும் பெண்குழந்தைகளின் வேண்டுதல்களாகவே அமைவதனையும் முன்பே இத்தொடரின் பகுதி-11.1 & 11.2-இல் கண்டோம். இவற்றில் தாமிழைக்கும் சிற்றிலை அழிக்க வேண்டாம் என்றும், சமைக்கும் பாண்டங்களை உடைக்க வேண்டாம் என்றும், அடுப்புத்தீயை அவிக்க வேண்டாமெனவும், பாவைத்திருமண விருந்தினை வீணாக்க வேண்டம் எனவும் பலவாறாக வேண்டும் சிறுமியர் கூற்றுகள் மிகவும் நயமானவை; சுவைமிகுந்தவை.

            ‘நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
                                நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
             தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
                               சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
             முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
                               மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
             திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
              சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே5,’ என்பது சேயூர் முருகன் பிள்ளைத்தமிழின் இனிய பாடல். பலமுறை கேட்டாலும் தெவிட்டாத கவியமுதம்.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும்6 குமரகுருபரனார், திரும்பத் திரும்பப் புதியதாக உலகங்களைப் படைத்து, கலங்களைத் திரும்பவும் கழுவி அவற்றில் புதுக்கூழ் சமைத்து சலியாது  உயிர்களுக்கு ஊட்டும் சிறுபெண்ணாக மீனாட்சியம்மையைச் செங்கீரைப் பருவப் பாடலொன்றில் அழகுபட உரைக்கின்றார். இதனைப் பகுதி 11.2-இல் காணவும்.

    ஆண்டாள் பிள்ளைத்தமிழ் சிறுசோற்றுப் பருவத்தின் மற்றொரு இனிய பாடலைக் காண்போம்:

    பறவைகள், விலங்குகள், மீன்வகைகள், ஊர்வன, தாவர வகைகள் என்பன ஆண், பெண், அலி எனும் முப்பாற்பட்டன. இவை தவிர, எண்ணிக்கையில் இன்னும் மேற்பட்ட மக்கள், தேவர் என்பவர்களுடனெல்லாம் சேர்த்து, எண்பத்துநான்கு நூறாயிரம்வகை உயிர்களும் குடிபுகுந்து வாழும்வண்ணம் அவற்றிற்குத் தேவையான வெவ்வேறு வகைப்பட்ட உணவினைப் பெருஞ்சோறு என ஆக்கி அருள்புரிபவள் அன்னை ஆண்டாள் என்கிறார் புலவர்.

    நறவு எனும் தேன், தயிர், நெய், கன்னல் எனும் கரும்பு, பாலாழி, கறிசோறு என இவையனைத்தையும் செய்விப்பதாகக் கடலில் விளையும் முத்துகளைச் சோறாக்கி, மலையைப் பானையாக்கி, புனல்நீரை உலைநீராகப் பெய்து, இவற்றைச் சமைக்க சூரியனை அடுப்பின் நெருப்பாகவும் கொண்டு புதுவைப்பிராட்டியே, சிறுசோறு இழைத்தருளுக என வேண்டுவதாக அமைந்த பாடல். இழைத்தலுக்கு, ஆக்குதல் எனவும் ஒரு பொருளுண்டு.

             பறவைமா மீனமூர் வனதாப ரங்கண்முப்
                       பானுடன் …………………..
             …………………………………….
             முறவுகொண் டெண்பத்து நான்குநூ றாயிரம்
                       யோனியிற் குடிபுக்கவா
             முயிர்கட்கு வேறுவே றுணர்வொடு பெருஞ்சோறு
                       முற்றிழைத் தருள்புரியுநீ
             நறவுதயிர் நெய்கன்னல் பாலாழி கறிசோறு
                       நரலையுட் டரளமுலைநீர்
             நன்புனற் கடனேமி வரைமிடா வுலைமுக
                       நயந்ததழல் ஞாயிறாகச்
             சிறகர்வண் டிமிழ்பொழிற் புதுவைப் பிராட்டியே
                       சிறுசோ றிழைத்தருள்கவே7
                …………………………………….

    இவ்வாறு நயம் மிகுந்த கருத்துக் செறிவான பாடல்களைக் கொண்டு இப்பருவத்தைப் பாடிவைத்துள்ளார் இப்புலவர் பெருமான்.

    அடுத்த பகுதியில் பொய்தல் விளையாட்டின் மற்றொரு அங்கத்தைக் கண்டு களிக்கலாம்.

    (தொடரும்)

    பார்வை நூல்கள்

    1. ஸ்ரீ ஆண்டாள் – திருப்பாவை
    2. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம சுலோகம்
    3. சிவஞான சுவாமிகள்- குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
    4, 7 ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
    5. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    6. குமரகுருபரர்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • கொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்

    கொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்

    வ.ஐ.ச. ஜெயபாலன்

    மலர்கிறது முல்லை
    கமகமவெனச் சுவர்க்கமாய் உயர்கிறதே
    என் மாடித் தோட்டம்.
    கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின்
    மரண அமைதி அதிர
    கருவண்டுகள் இசைக்கின்றன
    ”அஞ்சாதே தோழா” என்னும் பாடல்.

    அமேசான் காட்டுத் தீயையும் மிஞ்சி
    உலகை வேட்டையாடுதே கொரோனா.
    அடாது கொட்டும் வெண்பனியையும்
    விழாவாய்க் கொண்டாடும்
    ஒஸ்லோ நகரும் முடங்கியதே.
    கூதிரில் தனித்த என் மனைவிக்குப்
    பூக்களும் இல்லை.
    எனினும் எனினும்
    இடுக்கண் வருங்கால் நகைக்கும்
    புதல்வர்களை விட்டு வந்தேனே..

    வெற்றியெனக் கொரோனோ கிருமிகள் துள்ளும்
    பெசன்ட் நகர் கடற்கரையில்
    கைவிடப்பட்ட படகுகளில் அஞ்சாமல்
    நண்டுகள் தொற்றும் இரவில்
    குடிசைகளுள்
    படகெனத் துயிலும் பெண்டிர் மார்பில்
    வலிய விரல்கள் ஊர்கின்றன.

    சாத்தானே அப்பாலே போ.
    மனிதர்கள் கைவிடப்படுவதில்லை.
    ஒருபோதும் வெல்லப்படுவதுமில்லை.

    ————————————————————

    Pic courtesy: https://www.maxpixels.net

    Share
  • நால்வரியார் – 1

    நால்வரியார் – 1

    (நாலடியார் மன்னிக்க வேண்டும்)

    சி. ஜெயபாரதன், கனடா

    பிரிவு

    காயும் நிலா காத்திருக்கு
    கனத்த நெஞ்சம் பூத்திருக்கு
    பாயும் தரையில் விரிச்சிருக்கு
    பாவை போனாள் திரும்பவில்லை.

    பருவம் விரைவாய் போயிருச்சு
    பயிரும்  செழிப்பாய் விளைஞ்சிருச்சு
    புருவம் பாதி நரைச்சிருச்சு.
    புவியில் தொடுவான்  சிவந்திருச்சு.

    நட்பு என்பது உதட்டளவு
    நடிப்பு பார்த்தால் உடலளவு
    இச்சை  தோன்றின் தோலளவு
    இன்பம்  விளைவது மனத்தளவு.

    இரவு பகலாய் விடிந்திருச்சு
    இடரும் துயரும் நேர்ந்திருச்சு
    பிணக்கு நேரும் முன்னே
    பிரிவு வரும் பின்னே.

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9

    மீ. விசுவநாதன்

    “பிறவி நீங்க வழி”

    பிறவியாம் கடலில் நீந்திப்
    பேரின்பக் கரையில் ஏறத்
    துறவியின் பாதம் பற்றத்
    தோன்றியதோர் நேரம் என்னுள்
    குருவிபோல் சிறக டித்துக்
    குழந்தையென வந்த மர்ந்த
    குருஎவர் சொல்சொல் என்றால்
    சொல்பார தீதீர்த் தர்தான்.  (81)

    “ஸ்ரீ சங்கர வழி”

    திங்களைச் சுமக்கும் ஈசன்
    தேடிக் காலடி தோன்றி
    சங்கரர் என்ற பேரால்
    அத்வை தப்பயிர் பேண
    அங்கவர் செய்த தெல்லாம்
    அகிலம் போற்றிடும் வண்ணம்
    இங்கவர் சீடர் செய்தார்
    எளியோர்க் கிரங்கிடும் தீர்த்தர். (82)

    பொறுமை, கனிவு, கல்வி,
    புதுமை, பக்தி, ஞானம்
    வெறுமை தோன்றா உள்ளே
    வேத கோஷப் பள்ளி;
    வறுமை கொண்ட பேர்க்கு
    வாரி வழங்கும் வள்ளல்
    இருமை வென்ற யோகி
    இவரே என்று சொல்வேன்  (83)

    “கல்யாணபுரி விஜயம்”

    கல்லிடைக் குறிச்சி ஊரில்
    கணக்கிலா பக்தர் உண்டு.
    நல்மனம் கொண்ட பேர்கள்
    ஞானியைப் போற்று கின்ற
    துல்லிய தூயோர் உண்டு;
    துயரென வருவோர்க் கெல்லாம்
    நெல்மணி வாரித் தந்து
    நிம்மதி பெறுவோர் உண்டு. (84)

    அங்கொரு வருடம் வந்தார்
    அரும்பெரும் குருநா தர்தான்!
    எங்குமே சீடர் கூட்டம்
    இணையிலா பக்தி யோடு
    தங்களின் குருவைக் கண்டு
    தங்கமாய்ப் பொலிந்தி ருந்தார்!
    அங்கொரு கோவில் காண
    அழைத்தனர் ஆசார் யாளை ! (85)

    “கிராமக் கோவில் தரிசனம்”

    அழகினைச் சுமந்த கோவில்
    அற்புதத் தெய்வக் காட்சி
    பழகிய நண்பர் போலே
    பரமனைத் தொழுதார் யோகி!
    “பழமையாய் இருந்த தெல்லாம்
    பார்த்துநான் புதுமை செய்தேன்
    தொழுகிற இடங்கள் எங்கும்
    தொடர்பணி செய்து வந்தேன் ” (86)

    “பக்தரின் நானை நீக்கிய குருநாதர்”

    என்றவர் நடக்கும் போது
    இடறிய நேரம் கொஞ்சம்
    நின்றவர், ” இந்தக் கல்லே
    இடித்ததால்  விரலில் ரத்தம்
    என்றதும், “ஓய்ஓய் நீங்கள்
    இதுவரை என்ன சொன்னீர்!
    மன்றிலே எல்லாம் நானே
    மதிப்புடன் செய்தேன் என்றீர்!  (87)

    நடந்திடும் போது கல்லில்
    நறுக்கென நீர்தான் முட்டி
    படக்கென விழவும் பார்த்தீர்!
    பழிதனைக் கல்லில் போட்டீர்!
    திடமுடன் இதையும் நானே
    செய்ததாய்ச் சொல்லும்” என்று
    மடமதி அகந்தை நீக்க
    வழியதைச் சொன்னார் ஞானி ! (88)

    “பணிந்த சீடருக்கு ஆசி”

    குறைதனை உணர்ந்த சீடர்
    குருவினை வணங்கி விட்டு,
    “இறைவனே எனக்கு நீங்கள்!
    இப்படி என்னுள் உள்ள
    கறைதனை நீக்கி உங்கள்
    கருணையால் என்னைக் காத்தீர்!
    மறையினைப் போன்ற உங்கள்
    மகிமையைப் பணிவே னென்றார் ! (89)

        “மதுரைக்கு விஜயம்”

    “உழைப்பாலே உயரும் பூமி
    உமையாளின் செல்ல ஊர்தான்
    பிழைப்புக்காய் வந்த பேரை
    பிரியமுடன் காக்கும் மீனாள்!
    அழைத்தவுடன் அவளைக் கண்டு
    அருள்மழையில் நனைய எண்ணி
    மழைக்காக மக்கள் ஏங்கும்
    மதுரைக்கு விஜயம் செய்தார்!   (90)

    Share
  • நாலடியார் நயம் – 24

    நாலடியார் நயம் – 24

    நாங்குநேரி வாசஸ்ரீ

    24. கூடா நட்பு

    பாடல் 231

    செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
    இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர், – கறைக்குன்றம்
    பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட!
    தங்கருமம் முற்றும் துணை.

    கரிய மலைகளிலே மிகுந்த அருவிகள்
    கொண்ட மலைநாட்டு அரசனே!
    கட்டு இல்லாப் பழைய கூரை வீட்டிலே
    மேலிருந்து விழும்நீரைப் பாத்திரத்திலேந்தியும்
    மழைநீர் உட்புகாவண்ணம் சேற்றினால்
    வாகாய் அணைகட்டியும் புகுந்த நீரை
    வெளி இறைத்தும் தம் காரியம் முடியும்
    வரை நம்முடன் இருந்து பின் நீங்கும்
    வகையாரின் நட்பு இனிதன்று..

    பாடல் 232

    சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
    மாரிபோல் மாண்ட பயத்ததாம் – மாரி
    வறத்தக்கால் போலுமே வாலருவி நாட!
    சிறந்தக்கால் சீரிலார் நட்பு.

    வெண்அருவிகளுடை நாட்டின்
    வேந்தனே! உயர்ந்தவர்களின்
    நட்பு மேலான சிறப்புடையதாய்
    நல்ல மழைபோலும் பயனுள்ளதாம்.
    நற்குணமற்றோர் நட்புமிகுந்தால்
    மழையற்ற வறண்ட காலம்போல்
    மோசமான பயனற்றதாய் அமைந்துவிடும்.

    பாடல் 233

    நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை
    விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் – நுண்ணூல்
    உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
    புணர்தல் நிரயத்துள் ஒன்று.

    நுட்ப அறிவுடையாருடன்
    நட்பு செய்து பயன் அனுபவித்தல்
    மேலோகத்து இன்பம்போல்
    மேன்மையுடையது நுட்பமான
    நூலறிவில்லாப் பயனற்றவருடன்
    சேர்தல் நரகங்களுள் ஒன்றைச்
    சார்ந்ததுபோல் துன்பம் தரத்தக்கது.

    பாடல் 234

    பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
    ஒருபொழுதும் சொல்லாதே நந்தும் – அருகெல்லாம்
    சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட!
    பந்தமி லாளர் தொடர்பு.

    பக்கங்களிலெல்லாம் சந்தனச் சோலை
    பெருகிக்கிடக்கும் மலைநாட்டு மன்னனே!
    அன்பு இல்லாதவருடன் கொண்ட நட்பு
    அளவிற்பெருகி வளர்வது போலத்தோன்றி
    அதன்பின் கணப்பொழுதும் நில்லாது கெடும்.

    பாடல் 235

    செய்யாத செய்தும்நாம் என்றலும் செய்தவனைச்
    செய்யாது தாழ்த்துக் கொண்டு ஓட்டலும் – மெய்யாக
    இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
    துன்புறூஉம் பெற்றி தரும்.

    செய்ய முடியாத செயலையெல்லாம்
    செய்வோம் எனச் சொல்லலும்
    செய்யமுடிந்ததைச் செய்யாமல்
    சந்தியில்விடுத்து காலம் கடத்தலும்
    சத்தியமாகவே இன்பத்தை வெறுத்த
    சந்நியாசிகளுக்கும் அப்பொழுதே
    சங்கடத்தை விளைவிக்கும்.

    பாடல் 236

    ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
    விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
    பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
    கருமங்கள் வேறு படும்.

    ஒரே குளத்தில் தோன்றி
    ஒன்றாகவே வளர்ந்தாலும்
    மணம்வீசும் குவளைக்கு அல்லி
    மலர் ஒப்பாகா சிறந்த குணம்
    பொருந்தியவரின் நட்பைப்
    பெற்றினும் நற்குணமில்லாதார்
    செயல் வேறுபடும்.

    பாடல் 237

    முற்றல் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
    நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
    குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
    ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.

    முதிராத சிறு குரங்கு எதிரே தன்
    முன் வந்த தந்தையாகிய பெரும்
    குரங்கை பயற்றம் நெற்றைக்
    கண்டாற் போலும் விரல்களால்
    கையை முறுக்கிக் குத்தி
    கனியைப் பறித்துக்கொள்ளூம்
    மலைநாட்டுடை மன்னனே!
    மனம் பொருந்தாதவரின் நட்பு
    மகிழ்ச்சியளிக்காது.

    பாடல் 238

    முட்டுற்ற போழ்தின் முடுகியென் ஆருயிரை
    நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் – நட்டான்
    கடிமனை கட்டழித்தான் செல்வழிச் செல்க
    நெடுமொழி வையம் நக.

    என் நண்பன் துன்புற்றபோது விரைந்து
    என் ஆருயிரை அவன் கையில்கொடுத்து
    அவன் துன்பத்தைக் களையாவிடின்
    அதிகப் புகழுடை இவ்வுலகம் சிரிக்குமாறு
    அவன் மனைவியைக் கற்பழித்த பாவி
    அடையும் நரகத்திற்கு நான் செல்வேனாக!

    பாடல் 239

    ஆன்படு நெய்பெய் கலனுள் அது களைந்து
    வேம்படு நெய்பெய் தனைத்தரோ – தேம்படு
    நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
    புல்லறிவி னாரொடு நட்பு.

    தேன்கூடுகள் சேர்ந்த மலைநாட்டு மன்னனே!
    தக்க நன்மையை அறிவாரோடுள்ள நட்பை
    நீக்கி அற்ப அறிவுடையாரோடு கொண்ட
    நட்பு பசுநெய் ஊற்றும் பாத்திரத்தில் அதை
    நீக்கி வேப்பெண்ணெயை ஊற்றினாற் போலாம்.

    பாடல் 240

    உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை யின்மை
    பருகற்கு அமைந்தபால் நீரளாய் அற்றே
    தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல் நாகம்
    விரிபெடையோடு ஆடிவிட் டற்று.

    அழகுடையவனிடத்தில் உதவும் குணம் இல்லாமை
    அருந்துவதற்கு வைத்த பாலில் நீர் கலந்தது போலாம்
    அறிவுடையோர் தீயோரைச் சார்ந்து கெடுதல்
    அரும் நாகம் பெட்டைவிரியனுடன் புணர்ந்து
    ஆருயிர் நீத்தது போலாம்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(303)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(303)

    தெண்ணீ ரடுபுற்கை யாயினுந் தாள்தந்த
    துண்ணலி னூங்கிய தில்.

           – திருக்குறள் – 1065 (இரவச்சம்)

    புதுக் கவிதையில்...

    இரக்காமல்
    முயற்சியுடன் உழைத்து
    அதன் மூலம்
    உண்ணக் கிடைத்தது,
    தெளிந்த நீர்போல் சமைத்த
    கூழே ஆனாலும்,
    அதனை
    மகிழ்வுடன் உண்பதைவிட
    இனிமையானது
    வேறெதுவுமில்லை…!

    குறும்பாவில்...

    முயற்சியுடன் உழைப்பின் மூலம்
    உண்ணக் கிடைத்த எளிய நீராகாரத்தை
    உண்பதைவிட இனியது வேறில்லை…!

    மரபுக் கவிதையில்...

    பிறரிடம் கையது ஏந்திடாமல்
         பிழைத்திட உழைப்பதன் மூலமாகச்
    சிறிதள வாகக் கிடைத்ததிலே
         சிறப்பாய்ச் சமைத்த நீர்க்கஞ்சி
    குறைவாய் உண்ணக் கிடைத்தாலும்
         குடிக்கு மந்தக் கூழதிலே
    நிறைவாக் கிடைக்கும் இன்பமதன்
         நிகராய் நிலமதில் வேறிலையே…!

    லிமரைக்கூ..

    முயன்றே யுழைத்துமுன் னேறு,          
    அவ்வழி உண்ணக்கிடைத்த நீர்க்கஞ்சிக்கு
    நிகராய் இனியதானதில்லை வேறு…!

    கிராமிய பாணியில்...

    பயம்வேணும் பயம்வேணும்
    எரந்து உண்ணப் பயம்வேணும்,
    இருக்கத உண்ணப் பழகோணும்..

    அடுத்தவங்கிட்டக் கையேந்தாம
    மொயற்சிசெய்து ஒழச்சி
    அது மூலமா
    சாப்புடக் கெடச்ச
    தெளிஞ்ச நீர்போலச் சமச்ச
    கூழப்போல இனிப்பானது
    ஓலகத்தில
    வேற எதுவுமில்ல..

    அதால
    பயம்வேணும் பயம்வேணும்
    எரந்து உண்ணப் பயம்வேணும்,
    இருக்கத உண்ணப் பழகோணும்…!

    Share