மீனாட்சி பாலகணேஷ்

 (சிற்றில் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

இத்தொடரில் பெண்பால் சிற்றில் பருவத்தில் அடுத்து நாம் காணப்போகும் நூல் தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஆகும். இதில் இப்பருவம் மிகவும் சிறப்பாக, அழகிய நயங்களுடன் பத்துப் பாடல்களால் பாடப்பட்டுள்ளது.

உலகுக்கே அன்னையான சிவகாமி எனும் உமையவள் அண்டகோடிகளை, பிரம்மாண்டங்களைத் தோற்றுவிப்பதனை, சிறுவீடுகட்டி அவள் விளையாடுவதாக நயம்பட உரைக்கிறார். காஞ்சிப்பதியில் சிவபிரான் அம்மைக்கு இருநாழி நெல் அளித்ததனையும் அம்மை அதனைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றி உலகங்களைப் புரந்ததாகவும் காஞ்சிப்புராணத்தில் காண்பதற்கியைய, இங்கும் அக்கருத்தை எடுத்தோம்புகிறார்.

            ‘…………………………………………..
         அட்டதிக்கும் கால்கள்நட்டு நெடுமேரு
                   நடுவு அசையாததூண் நிறுத்தி
         …………………………………………….
                   விளை பச்சைநெல் இருநாழியில்
         பல்லுயிரும் உண்டு தேக்கிட்டிடும்
                   ……………………………………..
         திடமருவு பெருவீடு கட்டி விளையாடும்
                   உமை சிறுவீடு கட்டியருளே!’1

‘ஆ ப்ரஹ்ம கீட ஜனனீ’ என லலிதா சகஸ்ரநாமம் அன்னையை ஏத்துகின்றது. பிரம்மன் முதல் புழு வரை அவளால் படைக்கப்படுகின்றன என்பது இதன் பொருள்; படைப்புக்கடவுளான பிரம்மனையுமே அவள்தான் படைக்கிறாளாம். படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் நடைபெறும் இந்தப் பிரபஞ்சப்பெருவிளையாட்டினை சிவபிரானின் பாதியாகிய அன்னை சிவகாமசுந்தரியே நிகழ்த்துவதாகக் கூறி மகிழ்கிறார் புலவர் கிருட்டிணையர். பராசக்தியாகிய சிவகாமசுந்தரி சிற்றில் இழைக்கும் விளையாட்டு பெரிய தத்துவத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது.

பின்னொரு பாடலில் அன்னை கட்டிடும் சிறுவீட்டின் அமைப்பினை விளக்கியுள்ளமை, உடற்கூற்றியலில் விளக்கப்பட்டுள்ள மனித உடலின் அமைப்பை ஒத்துள்ளது வியக்கத்தக்கதாகும். தசை எனப்படும் மண்ணினை வைத்தும் தூண்களாகிய கால்களை வைத்தும், உடல் எனப்படும் சுவரை அமைத்தும், வீட்டினைத் தாங்கக் கைம்மரங்கள் என்னும் இரு கரங்களை வைத்தும் அமைக்கிறாள்; உடலில் உள்ள ஒன்பது துளைகளை ஒன்பது வாயில்களாக அமைக்கிறாள்; கூரை மரங்களை நரம்புகளால் முறையாகக் கட்டுகிறாள்; அதன்மீது மண்பூசுவது போன்று தோலைப் போர்த்து, மயிர்க்கற்றைகளால் கூரையையும் வைக்கிறாள். வாழ்வின் இன்பதுன்பங்களைப் பகுத்து அனுபவிக்க கண்களை விளக்குகளாக ஏற்றுகிறாள். இவ்வாறு அனைத்துயிர்களும் வாழும்பொருட்டு எண்பத்துநான்கு இலட்சம் வகைப்பட்ட வலிமைமிக்க பலவீடுகளை, அதாவது பற்பல உயிர்களுக்காக அவை வாழும் உடலெனும் வீடுகளைத் தோற்றுவித்தும், அழித்தும், பின்னும் தோற்றுவித்தும் இடையறாது அருள்விளையாட்டுப் புரிகிறாள். உயிரினங்களின் வகை எண்பத்து நான்கு இலட்சம் எனப் புராணங்கள் விளக்குகின்றன. அனைத்தையும் அவற்றிற்குரிய வீடுகளாகிய உயிர்க்கூடுகளில் வகைவகையாகப் படைக்கிறாள் என அதியற்புதமாக இப்பாடல் விளக்குகின்றது.

            ‘மண்வைத்துக் கால்வைத்துத் தூணினால்
                   சுவர்வைத்து வலியகைம் மரமும்வைத்து
         வாசல் ஒன்பதுவிட்டு மோட்டுவளை
                   பக்கத்துவளை வரிச்சலும் நரம்பால்
         பண்புற்றிடக் கட்டிமேலே லாம்தோலுடன்
                   பலமயிர்க் கற்றை இட்டு
         …………………………………………….
         எண்பத்து நான்குநூறா யிரம்பேதமாய்
                   இனிய சிறுவீடு தோறும்
         ………………………………………….
திண்பெற்ற பலவீடு கட்டிவிளை யாடும்
         உமை சிறுவீடு கட்டியருளே2!’

இழைக்கப்படும் சிறுவீடானது, மனித உடலின் கைகள், கால், தோல், மயிர் போன்ற பல பாகங்களுக்கும் தொடர்புபடுத்தி விளக்கப்பட்டிருப்பது மிக்க அருமை. உடற்கூற்றியல் எனும் அறிவியல் பகுப்பு இதில் முழுமையாக ஒரேபாடலில் அருமையாக விளக்கப் பெற்றுள்ளது தமிழுக்குப் பெருமை!

சிற்றிலிழைத்து விளையாடும் இச்சிறு பெண்பிள்ளை, அச்சிறுவீட்டினுள்ளே பலவிதமான பாவைகளைக் குடிவைத்து விளையாடுகின்றாள். அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான புலவர் அன்னை சிறுபெண்ணாய் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தினையுமே பராசக்தியின் ஆடல்களாகக் கண்டு வாழ்த்துகிறார். மிக எளிமையாக இதற்குப் பொருளுணர வேண்டுமாயின் பின்வருமாறு பொருள்கொள்ளலாம்:

ஆற்றல்வாய்ந்த தெய்வங்களின் பாவைகள், பூவுலகில் வாழும் ஆடு, மாடு, யானை முதலான விலங்குகளின் பாவைகள், கடலில் வாழும் ஜீவராசிகளின் பாவைகள், பலவிதமான பறவைகளின் பாவைகள், விரைந்து நெளிந்து ஊர்ந்து செல்லும் புழு, பூச்சிகள், மரவட்டை, பாம்பு ஆகியனவற்றின் பாவைகள், செடி, கொடி, மரங்கள் ஆகியனவற்றின் பாவைகள் என ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களின் பாவைகளை எல்லாம் எண்பத்துநான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களால் இவளே அப்பாவைகளைச் செய்கிறாளாம். அன்னை பராசக்தி இவ்வுயிர்களை பஞ்சபூதங்களால் விளையாட்டாகவே உண்டுபண்ணுகிறாள். அது மட்டுமா? அவற்றைக் கனவு, நினைவு / விழிப்பு, உறக்கம் ஆகிய நிலைகளில் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி வைத்து தினமும் விளையாடுகிறாள்.

எல்லா உயிர்களுக்கும் பராசக்தி அன்னை திரும்பத்திரும்பப் படைத்து அளிக்கும் பலவிதமான வடிவங்கள் இப்பாடலில் நயம்படக் கூறப்படுகின்றன.

            வல்ல தெய்வப் பாவை மானிடப்
                   பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
         மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
                   மருவு பறவைப் பாவையும்
         ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும்
                   பாவையும் உறும் தாவரப் பாவையும்
         ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப்
                   பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்
         எல்லவே சாக்கிரம் கனவொடு
                   சுழுத்தியுடன் எழும் பூதாசார வடிவாய்
         …………………………………………………….
         பரம சிவகாம சுந்தரி அம்மை இனிய
                   பொற்பாவை விளையாடி அருளே3!

(பாவை- பொம்மை; பொறி- அறிவு; சாக்கிரம்- விழிப்பு; சுழுத்தி- உறக்கம்)

சிவகாமி அன்னையைச் சிறுவீடு கட்டியருள வேண்டிடும் புலவர் பெருமகனார், தில்லையில் உள்ள பொன்மன்றின் அமைப்பினை விளக்கி அவ்வண்ணமே ஒரு சிறுவீட்டினைக் கட்டியருள சிவகாமியம்மையை வேண்டுகிறார்.

சிதம்பரம் கோயிலின் அமைப்பு, மனித உடலும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்4 என்பது திருமூலர் வாக்கு. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து கோசங்களைக் (Layers) கொண்டமைந்துள்ளது. அதே போன்று சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள்  உள்ளன. மனித இதயம் இடப்புறம் அமைந்திருப்பதுபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லாது இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை  மூச்சுவிடுகிறான். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21,600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72,000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் உள்ள ஓடுகளை 72,000 ஆணிகள் இணைக்கின்றன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்படுகிறது.

இப்பிள்ளைத்தமிழினை இயற்றிய நல்லதுக்குடி கிருட்டிணையர் பொன்மன்றின் அமைப்பினை இன்னுமே விரிவாக விளக்கி அதனைச் சிவகாமியம்மை எவ்வாறு கட்டுகிறாள் என விளக்குகிறார். இது அன்னை மனித உயிர்களைப் படைக்கும் பாங்கினை அழகுற விளக்குகிறது.

பொன்மன்றில் விளங்கும் பிரமபீடத்திற்கு ஆறு சாத்திரங்களையும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைப் பெரிய தூண்களாகவும் அமைக்கிறாள். இருபத்தெட்டு சிவாகமங்கள், ஐம்பெரும் பூதங்கள், பதினெண் புராணங்கள் ஆகியவை சிறிய தூண்களாகவும் உத்திரங்களாகவும் வைக்கப்படுகின்றன. ஆயகலைகள் அறுபத்துநான்கும் அழகிய வரிச்சல்களுடன் பொருந்திய கைம்மரங்களாக பொருத்தப்பட்டு, அவைமீது ஒளிவீசும் தங்க ஓடுகள் 21,600 வைத்து அவற்றை 72,000 ஆணிகளால் பொருத்தி இணைத்து, மேலும் இருநூற்றுஇருபத்துநான்கு புவனங்களையும் தாமரைமலரின் வடிவில் ஆக்கிய தட்டுக்களாகவும் சைவசித்தாந்தத் தத்துவங்களான தொண்ணூற்றாறு தத்துவங்களையும் பலகணிகளாக ஆக்கி, ஒன்பது கலசங்களை மனித உடலின் ஒன்பது வாயில்களாக அமைத்து சிற்றம்பலம் எனும் உறுதியான வீட்டினைக் கட்டுகிறாள் அன்னை. பின்னர் அங்கு தானே இறைவனுடன் குடிகொள்கிறாள்.

இவ்வாறு அரியதான எம்மை, எமது மனித உடலைப் படைத்தருளுமுகமாக சிறுவீடு கட்டியருளுக என வேண்டுவதாக அமைந்த பாடலிது.

            ஆறு சாத்திரம் நாலுவேதம் அதிதூண்
                   ஆகமங்கள்………………….
         ……………………………………………………
                   மரம்நாட்டி எழுபத்து இரண்டாயிரம்
         ………………………………………
         கூறு தொண்ணூற்றாறு தத்துவம் பலகணிகள்
                   கும்பம் ஒன்பது வாசலும்
         …………………………………………………..
                   விமலையே! சிறுவீடு கட்டியருளே5!

பிள்ளைத்தமிழ் பிரபந்தத்தின் அமைப்பில் ஒவ்வொரு பருவத்திற்குமான பத்துப்பாடல்களில், தொன்மச் செய்திகள், அழகியல், சந்தநயம், அணிநயங்கள் மட்டுமின்றி, சைவசித்தாந்த, தத்துவ, சமய விளக்கங்களையும் கூட்டிப் பாடல்களை அமைப்பதே நல்லிசைப்புலவோரின் வழக்காகும் எனப் பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் கூறுகிறார். இன்னும் இப்பிள்ளைத்தமிழ் நூலின் பல பாடல்களும் பல சமயக் கருத்துக்களையும் விளக்கங்களையும் உள்ளடக்கிக் கொண்டு பொலிகின்றன.

மற்றும் ஒரு பெண்பால் பிள்ளைத்தமிழான ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ், சிறுமியரின் சிற்றில் பருவத்தை அழகுறப் பாடிப் பதிவு செய்து வைத்துள்ளது. இதன் ஆசிரியர் (பெயர் தெரியக் கிடைக்கவில்லை) ஆண்டாளைத் திருமகளாகவே கொண்டு அக்கருத்துக்களிலேயே பாடல்களைப் பாடியுள்ளார்.

சிற்றில் பருவத்துப் பத்துப்பாடல்களில் ஆறு மட்டுமே கிடைத்துள்ளன. ஆயினும் கருத்து நயமும் உவமை உருவகங்களும் வைணவத்தின் பொருண்மைகளும் செறிந்த பாடல்கள் இவை. சமயத் தத்துவங்களை அழகுறப் பொதிந்துகொண்டு விளங்குகின்றன.

மேருமலையை ஆதாரமாகக் கொண்டும், மற்ற மலைகளை இடைத்தூண்களாக வைத்தும் செய்விக்கப்பட்ட மணிமண்டபம் உனது கொலுமண்டபம். மேலும், காவல் நிறைந்த  புறமனைகள் ஏழும் கடலால் சூழப்பட்ட ஏழுதீவுகள் ஆகியனவும் பள்ளியறை முதலான அமைப்புகளாவன. இவை பூமியாகிய நிலாமுற்றத்திற்கு அரணாகின்றன. சுடரும் கதிரவன் விளக்காகிறான். அண்டச்சுவரும், கடலையே அகழியாகவும் கொண்டு, பொன்னுலகம் ஐந்தினையும் உப்பரிகைகளாகக் கொண்டு விளங்கும் அருமையான வீட்டைக் காக்கும் பெண்ணரசியே! உலகிற்கு அன்னையான புதுவை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) வாழ் திருமகளே! தென்னரங்கேசன் முதலான ஐந்து பேரும் குடிபுகுவதற்காக நினது சிற்றிலை இழைப்பாயாக! என வேண்டும் பாடல்.

இவ்வைந்து பேரும் திருமாலின் ஐந்து வடிவங்களே! தென்னரங்கேசன்- ஸ்ரீரங்கத்து அரங்கன், திருமலையில் குடிகொண்ட திருவேங்கடவன், திருமாலிருஞ்சோலையில் அமர்ந்த பிரான், திருத்தண்கா அப்பன், வடபத்ரசாயி எனும் ஸ்ரீவில்லிப்புத்தூர்ப் பெருமாள் ஆகியோராவர்.

            ஆதார மேருபூ தரநள் ளிடைத்தூண
                   மருவரைக ளெண்டிசைக்கா
         …………………………………………..
         பூதாதி வழிவந்த வண்டபித் தியுமாப்
                  பொரும்புறக் கடலகழியாப்
         பொன்னுலக முதலைந்தும் உப்பரிக் கையதாப்
                   …………………………………….
         சீதார விந்தமலர் வளவயற் புதுவையுட்
                   சிற்றிலை யிழைத்தருள்கவே
         தென்னரங் கேசன்முத லைவருங் குடிபுகச்
                   சிற்றிலை யிழைத்தருள்கவே6

இப்பருவத்துப் பாடல்கள் அனைத்தும் பெண்மகவு இழைக்கும் சிறுவீடானது எவ்வாறு மனித உடலை ஒத்துள்ளது எனவும், பராசக்தி எனும் அன்னை எங்ஙனம் நம்மைப் படைத்துப் புரந்தளிக்கிறாள் என்றும் பலவித நயங்களில் கூறியுள்ளமை மிக உயர்வாக உள்ளன.

                                                                                                                      (தொடரும்)

பார்வை நூல்கள்:

1, 2, 3, 5. தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்- நல்லதுக்குடி கிருட்டிணையர்.
4. திருமந்திரம்- திருமூலர்
6. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *