நாங்குநேரி வாசஸ்ரீ

25. அறிவுடைமை

பாடல் 241

பகைவர் பணிவிடம் நோக்கித் தகஉடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது
அணங்கருந் துப்பின் அரா.

வருத்தத்தை விளைவிக்கும் மிக்க
வலிய பாம்பும் சந்திரன் இளம்பிறையாய்
விளங்கும்நேரம் விழுங்கச்செல்லாததுபோல்
வீரமிக்கவர் பகைவர் தளர்ந்திருக்குங்கால்
வெல்வதற்கு வெட்கப்பட்டு போர்செய்ய
விரும்பி அவ்விடம் செல்லார்.

பாடல் 242

நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு
அணிகலம் ஆவது அடக்கம் – பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரம் கூறப் படும்.

அகலக் கடலின் குளிர்மிகு கரைக்கு
அரசனே! வறுமையுற்ற மனிதனின்
அணிகலம் அடக்கமுடைமை
அடக்கமின்றி சிறப்புடைய
அளவுகடந்து நடப்பானாயின்
அவன் வாழும் ஊரில்
அவன் குலம் இகழப்படும்.

பாடல் 243

எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது
எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்.

எந்நிலத்தில் விதைத்தாலும்
எட்டிவிதை தென்னை மரமாகா
தென் நாட்டினரும் நல்லறம் செய்து
தூய சுவர்க்கம் புகுதலால்
மறுமைப்பேறு கிட்டுமேயல்லாது
பிறந்த இடத்தின் பெருமையாலன்று
வடதிசையிலுள்ளோரிலும் முயற்சியின்றி
வீணாய்க் காலம் கழித்து நரகம்
புகுவார் பலர் உள்ளார்.

(மறுமைப் பயனடைய அவரவர் செய்கையே காரணமாவதன்றித் திசையினால் ஒன்றுமில்லை.)

பாடல் 244

வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.

வேம்பின் இலைகளிடையே பழுத்தாலும்
வாழையின் இனிய சுவை மாறாததுபோல்
தாம் சேர்ந்த கூட்டம் தீயதாயினும்
தக்க குணமுடைப் பெரியோரின் மனதில்
தீயவராகும் தன்மை இல்லை.

பாடல் 245

கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம்
இனத்தனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப!
மனத்தனையர் மக்கள்என் பார்.

அலைமோதும் குளிர் கடற்கரையுடை
அரசனே! கடலருகிலும் இனிய நீர்
உண்டாகும் மலை அருகிலும்
உப்புநீர் சுரக்குமாதலால்
மக்கள் சார்ந்த இனத்தையல்லாது
தம் மன இயல்பை ஒத்தவராவர்.

பாடல் 246

பரா அரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ? நல்ல
மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று.

பருத்த அடிமரம் கொண்ட
புன்னை சூழ் குளிர்கடற்கரையுடை
நாட்டின் அரசனே! நிலையான மனமுடையார்
நல்லசெய்கையுடையாரிடத்து நீங்குதலும்
பின் சேர்தலும் செய்வாரோ? நீங்குதலைவிட
பழகாமால் இருத்தலே நன்று.

பாடல் 247

உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் – புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.

நம் மனதில் எண்ணியதைக் குறிப்பாலுணரும்
நுண்ணறிவுடையோரை நண்பராய்க் கொண்டால்
இன்பம்மிகும் வெளிப்படையாகக் காட்டியும் அறியும்
இயல்பற்றோரை நண்பராய்க் கொண்டால்
உண்டாகும் துன்பம் அவரைப் பிரியும் நேரம்
உடனே நீங்கிச் செல்லும்.

பாடல் 248

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.

நல்ல நிலையில் தம்மை
நிறுத்திக்கொள்பவனும் அந்
நிலைகெடுத்து தம்மைத் தாழ்
நிலைக்கு கொண்டுசெல்பவனும்
நிலையை மென்மேல் உயர்த்துபவனும்
நன்கு உயர்த்தி தலைமையுடையவனாய்
நிற்கச் செய்பவனும் தானே ஆவான்.

பாடல் 249

கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாரும் சேறல் – அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
பேதைமை யன்றுஅது அறிவு.

அருமையாய் ஒரே சீரான முறையில்
அலைகள் ஆரவாரிக்கும் குளிர்
கடற்கரையுடை நாட்டின் வேந்தனே!
காரியத்தை நிறைவேற்றும் பொருட்டு
பெருமையுடையாரும் அறிவில்லார்
பின் செல்வது அறியாமையன்று
அறிவுடைமையே!

பாடல் 250

கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத்
தருமமும் தக்கார்க்கே செய்யா – ஒருநிலையே
முட்டின்றி மூன்றும் முடியுமேல்அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.

நல்ல தொழில் முயற்சியால்
நன்கு பொருள் சேர்த்து இன்பம்
துய்த்து தகுதியுடையார்க்கு
தருமம் செய்து ஒருபிறப்பிலே இம்
மூன்றையும் தடையில்லாமல் ஆற்ற
முடியுமெனில் அது வாணிகத்தை வெற்றியுடன்
முடித்து துறைமுகப் பட்டினம் அடைந்த
கப்பல் போலும் இன்பம்பயக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *