Love birds

சி. ஜெயபாரதன், கனடா

ஈருடலைத்
தாலியில் போடும் மூன்று
முடிச்சுகள்
ஓருடலாய் இணைப்ப தில்லை !
சேர்ந்தவை சில
சேராமல் போனவை  பல.
சேர்ந்தும்
சேராதது போல்
தெரிபவை சில.
சேராமல் சேர்ந்திருப்பவை
சில.
அறுத்துக் கொள்பவை சில.
வெறுத்துக்
கொள்பவை சில.
வெட்டிக்  கொண்டவை சில
மீண்டும்
ஒட்டிக் கொள்பவை சில
ஒட்டு மாங்கனி
காய்க்க.

கண்டதும் காதல் என்பது
ஓர் கண்ணடிப்பு.
கண்ணைக் குருடாக்கும்
மின்னடிப்பு.
பளிச்சென வெளிச்சம் காட்டி
ஒளிமயம் மறையும்.
நீர் மேல்  எழுத்து!
காதல்  காதல்  காதல்  தோல்வியில்
நேரும் மோதல்
மோதலுக்குப் பிறகு
போதல்
நேர் / எதிர்த் திசைகளில்
திரும்பிப் பாராமல் !
சாதிப் பிணக்கால் உற்றார்
பெற்றார், கற்றார்
சாதல்  கொலை புரிவது  வேதனை
வேதனை, வேதனை.
காதலைத் தெய்வீகம் என்று
பூஜிப்பது
ஏட்டுச் சுரைக்காய்!
ஆண் / பெண் உடல் மோகம்
வளர்பிறை!
தேனில வுக்குப் பிறகு
தேய்பிறை தான்!
சொர்க்கபுரி
மலை உச்சிக்கு ஏறியவர்
பிறகு கீழே
இறங்க வேண்டும் தனியாக
தர்க்க புரிக்கு!
தண்ட வாளம் சேர்ந்தால்
வண்டி விழும்.
இணையாகப் போனால்
இரயில்
விழுவ தில்லை!
நெருங்காமல், நீங்காமல்
தீக்காய்வார்  போல்
நேசித்திரு
இடைவெளி தேவை பாவைக்கு
புரண்டு கொள்ள!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.