மீனாட்சி பாலகணேஷ்

 (சிற்றில் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

பத்துப்பருவங்களுக்கும் மிகுதியான விளையாட்டுப் பருவங்களும் நிகழ்வுகளும்தான் பிள்ளைப்பருவத்தை இனிமையுடையதாகச் செய்கின்றன. பிள்ளைத்தமிழுக்கென இலக்கணம் வகுத்த நூல்களும் அதிகப்படியான பருவங்களைப் பாட வாய்ப்புள்ளதனை நன்கு விளக்குகின்றன. இனி இத்தொடரில் அவையனைத்தையும், அவை அமைந்துள்ள பிள்ளைத்தமிழ் நூல்களிலிருந்து ஒவ்வொன்றாகக் கண்டு இன்புறலாம்.

பிங்கல நிகண்டு பெண்பால் பிள்ளைத்தமிழுக்குப் பத்தொன்பது பருவங்களை விவரிக்கின்றது. இப்பருவங்கள் காப்பு, செங்கீரை, சொல்வதைக்கற்றல், அமுதூட்டல், தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய இருபாலருக்கும் பொதுவான பருவங்களுடன், மூன்றாம் ஆண்டில் தான்விளையாடும் பாவைக்கு ‘மணம் பேசுதல்’ (குழமணம் மொழிதல்), ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுவரை மன்மதனையொத்த கணவனைப்பெறக் ‘காமநோன்பு நோற்றல்’, குளிர்ந்த நீராடல், பதுமைகளை (பாவைகளை) வைத்து ‘பாவைவிளையாடல்’, அம்மானையாடல், கழங்காடல், பந்தடித்தல், சிறுசோறு அடுதல், சிற்றில் இழைத்தல், ஊசலாடல் எனும் பருவங்களுள் சிலவற்றையோ பலவற்றையோ கொண்டு அமையும். இவையே பத்தொன்பது பருவங்களாகும்.

‘பேணும் சிறப்பிற் பெண்மக வாயின்
மூன்றா மாண்டிற் குழமண மொழிதலு
ஐந்தின் முதலா யொன்பதின் காறு
மைங்கணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றலும்
பனிநீர் தோய்தலும் பாவை யாடலும்
அம்மனை கழங்கு பந்தடித் தாடலுஞ்
சிறுசோ றடுதலுஞ் சிற்றி லிழைத்தலும்
ஊச லாடலும் மென்றிவை யுள்ளிட்டுப்
பேசிய பெண்பாற் பிள்ளைப் பாட்டே,’1 என பிங்கல நிகண்டு கூறுகின்றது.

திவாகர நிகண்டு இதிலிருந்து சிறிது வேறுபட்டு இருபால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான காப்பு, செங்கீரை, தால், அமுதூட்டல், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களையும், பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கான குழமணம் மொழிதல், ஐங்கணைக்கிழவனை ஆர்வமொடு நோற்றல், பனிநீர் தோய்தல், பாவையாடல், சிறுசோறடுதல், சிற்றிலிழைத்தல், ஊசலாடல் ஆகிய பதினான்கு பருவங்களைக் கூறுகிறது.

உலகவழக்கில் பெண்குழந்தைகளான சிறுமியருக்கென்று சில இனிய விளையாடல்கள் அமைந்துள்ளன. அவை தமது தாய்மார், வயதில் பெரிய பெண்களான அக்காள்மார் மற்றும் உறவினப்பெண்டிர் இவர்கள்  மனையில் குழந்தை வளர்த்தல், சமையல் செய்தல், குடும்பநலன் பேணுதல், தம் மக்களுக்கு மணம்பேசி முடித்தல் ஆகிய வாழ்வியல் தொடர்பான செயல்களைக் கண்டு, தாமும் அவ்வாறு செய்ய ஆசைகொண்டு, சிறு பெண்குழந்தைகளால் பாவனையாக, பொய்யாக விளையாடப்படும். இதுவே ‘பொய்தல் விளையாட்டு’ என வழங்கப்பட்டது. தமக்கென மணலாலும் தழைகளாலும் ஒரு சிறுவீட்டினைக் கட்டிக்கொண்டும், பாவைகளைக் குழந்தைகளாகக் கருதிக்கொண்டு கருத்தோடு பேணியும், சமையல் முதலானவற்றைச் செய்வதுபோல பாவனை செய்து கணவன் முதலானோருக்கு உணவளித்தும், தம் மக்களுக்குத் திருமணம் செய்வது போலப் பாவைகளுக்கு மணம்பேசி முடித்தும் சிறுமிகள் விளையாடுவர். இந்தப் ‘பொய்தல் விளையாட்டி’னுள் பாவை விளையாடல், குழமணம் மொழிதல், சிற்றிலிழைத்தல், சிறுசோறு அடுதல் ஆகிய நான்குமே அழகுறக் கலந்து விரவி அமைந்துள்ளதனைக் காணலாம்.

இவற்றுள் குழமணம் மொழிதல் எனும் பருவம் மட்டுமே எந்தப் பிள்ளைத்தமிழிலும் தனிப்பட எடுத்துப் பாடப்படவில்லை.

சிற்றில் இழைத்தல் பருவம், சிறுமியர் வண்டல் மணலினால் ஆற்றங்கரையில் சிறிய வீடுகளைக் கட்டி விளையாடுவதனை விளக்கும். இதே பெயர்கொண்ட சிற்றிற்பருவம் ஆண்பாற் பிள்ளைத்தமிழில், சிறுமியர் இழைத்த சிற்றிலை சிறுவர்கள் அழிப்பதாகவும், சிறுமியர் அவ்வாறு செய்யவேண்டா என அவர்களை வேண்டுவதாகவும் அமையும். இதனைப் பெண்பால் பிள்ளைத்தமிழில் ‘சிற்றில் பருவம்’ அல்லது ‘சிறுவீட்டுப் பருவம்’ எனவும் கூறுவர். இதுவன்றி, ‘சிறுசோற்றுப் பருவம்’ எனும் ஒரு பருவமும் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழில் காணப்படுகின்றது. இவை அனைத்தையுமே சிறுமியர் விளையாடும் பாவனை விளையாட்டான ‘பொய்தல் விளையாட்டி’ன்  அங்கங்கள் என சங்க இலக்கியங்கள் கூறும்.

‘மணம்கமழ் மனைதொறும் பொய்தல் அயர2,’ என மதுரைக்காஞ்சியும்

‘ஆடுவார் பொய்தல் அணிவண்டு இமிர் மணல்3,’ எனப் பரிபாடலும் கூறுகின்றன.

சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் (ஆண்பாற்) சிற்றிற்பருவத்துப் பாடலொன்று சிறுபெண்கள் ‘பாவனை’யாக, பொய்யாக விளையாடும் விளையாட்டினை நயமுற விளக்குகிறது.

தாம் பாடுபட்டு இழைத்த சிற்றிலை உதைத்து அழிக்க ஓடோடிவரும் சிறுவன் முருகனிடம் சிறுமியர், நயமாகவும், கெஞ்சியும், சாமர்த்தியமாகவும், ‘ஒளி பொருந்திய குளிர்ந்த முத்துக்களாலான அரிசியும், அதற்கு உலைபெய்த நறுந்தேனும் கவிழ்ந்து சிதறாதோ? சமைக்கும் பாண்டமான நந்தின் கடமான சங்கு உடைந்து போய்விடாதோ? மாதுளைமலர்களைப் பெய்து நாம் அமைத்த உலைத்தீ அவிந்து விடாதோ? பவளக்கொடிகளால் எம் சிறுவீட்டிற்கு நாம் ஆசையாக இட்டுள்ள விளக்கு அணைந்துவிடாதோ? நாங்கள் (பாவைத்) திருமணம் எனக்கூறிச் செய்துவைத்துள்ள விருந்து வீணாகப் போகாதோ? (பாவனையாக) முலைப்பாலருந்துவித்து உறங்க வைத்துள்ள எமது மகவு (பாவை) தாமரை போன்ற தனது கண்களை விழித்தெழுந்து தேம்பி அழும் அல்லவோ? ஆகவே எமது சிற்றிலைச் சிதைக்க வேண்டாம்,’ என வேண்டுவதாக அமைந்த பாடல்.

‘நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே
            னுளையுங் கவிழாதோ
நந்தின் கடமு முடையாதோ நளிமா
             துளைத்தீ யவியாதோ..
 ………………………………………
            அடியேம் வதுவையெனச்
சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா
            விருந்தும்4………………………..,‘ என்பன பாடல் வரிகள்.

தமது தாய்மார்கள் செய்வதுபோல, வீட்டை சுத்தம் செய்வதும், அடுப்பில் உலையேற்றிச் சமைப்பதும், குழந்தையை நீராட்டி, அதற்குப் பால்கொடுத்து, உறங்க வைப்பதும் இவர்களுடைய விளையாட்டு. எதிர்காலத்தில் தாம் ஆற்றவேண்டிய கடமைகளுக்காக இப்போதே தயாராகிறார்கள் போலுள்ளது! இதுவே சின்னஞ்சிறுமிகளின் மனோபாவம்! பொங்கிப்பெருகும் தாய்மை உணர்வை இச்சிறு பிராயத்திலிருந்தே வெளிப்படுத்தும் குழந்தைத்தனம் நிறைந்த அழகு இதுவே! இது ஆண்பாற் பிள்ளைத்தமிழானதனால் சிறுவீடு கட்டுவதும், சிறுசோறு சமைப்பதும், பாவை விளையாடலும் அதனுள் ஒரு அங்கமாகக் குழமணம் மொழிதலும் ஒருங்கே கூறப்பட்டுள்ளன. பொய்தல் விளையாட்டின் ஒரு  அங்கமான ‘குழமணம் பேசுதல்’ இப்பாடல் ஒன்றில் மட்டுமே சுட்டப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் “மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே5,” எனும் பாடல், “ஆற்றோரம் மணலெடுத்து, அழகழகாய் வீடுகட்டி6,” எனும் பாடல் ஆகியன இக்கருத்தின் அடிப்படையிலேயே எழுந்ததெனலாம். இன்றளவும் சின்னஞ்சிறுமியர் பொம்மைகளைக்கொண்டு பலவிதமான விளையாட்டுக்களை விளையாடி மகிழ்வதனையும் காணலாம்.

இவை தொடர்பான நிகழ்வுகளே பெண்பால் பிள்ளைத்தமிழில் பாவை விளையாடல், சிற்றிலிழைத்தல், சிறுசோறு அடுதல் என்ற மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுப் புலவர்களின் கற்பனைக்கேற்பப் பாடப்பட்டுள்ளன. குழமணம் மொழிதலின் விரிவான விளக்கங்களை எப்பிள்ளைத்தமிழிலும் காணக் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே!

ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் மட்டுமே காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி ஆகிய முதல் ஏழு பருவங்களுடன், சிற்றில் பருவம், சிறுசோற்றுப் பருவம், காமநோன்புப் பருவம் என சில புதுமையான பருவங்களுடன் மொத்தம் பதினோரு பருவங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

சிற்றில் பருவமானது பெண்பால் பிள்ளைத்தமிழில் வழக்கமாகப் பாடப்பெறாது இருப்பினும், அது சிறுவீடு கட்டுதல், சிறுசோறு சமைத்தல் எனும் இரு செயல்களைக் கொண்டமைந்துள்ளமையால் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் இதனை இரு பருவங்களாக்கியுள்ளார் எனக் கருதலாம். சிறுமியர் விளையாட்டும் இத்தகைமைத்தே என்பதனைக் கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் சிற்றிற்பருவத்துப் பாடலொன்றின் கருத்திலிருந்து காணலாம். அதில் சிற்றிலிழைத்த சிறுமியர், சிறுசோறாக உண்ண சிறுவன் கணேசன் கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களுக்காகக் காத்திருப்பதனைக் காணலாம். பொய்யாக, மணலையும், சிறுமுத்துக்களையும் அரிசி எனக்கூறிப் பெய்து சிறுசோறு சமைத்த சிறுமியர், மற்ற சிறார்கள் தமது மனைகளிலிருந்து கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களைச் சுவைத்து மகிழ்வர் என்பது கண்கூடு. சிறுவர்களும் இவர்களுடன் சேர்ந்து விளையாட்டிலும், விருந்திலும் பங்கேற்று மகிழ்வர் என அறியலாம்.

‘பெருத்தவயிறு தயங்க மெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
பெரும் பண்ணியமுமேந்தியேம்பாற் பேணிவருநின் கரவினைக்கண்டு
அருத்தியொடு……,’7

என்பன பாடல் வரிகள். இப்பாடலின் விரிவான விளக்கத்தை ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றில்பருவத்தில் காணலாம். இனி, பெண்பால் பிள்ளைத்தமிழின் நயங்களைக் காணலாமா?
சிற்றில் பருவம் (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

மிகச்சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் மட்டுமே சிற்றில்பருவம் எனத் தனியாக ஒரு பருவத்தில், இறைவி சிறுமியாக சிற்றிலிழைக்கும் மேன்மையைப் போற்றி மிகவும் இரசித்தும், பக்தியிலாழ்ந்தும், பலநயங்களைப் புகுத்தியும் பாடியுள்ளதனைக் காணலாம்.

வயிரவன்கோவில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் நூலில் ஒன்பதாம் பருவமாக, நீராடலுக்கு மாறாக சிற்றிலிழைத்தல் (சிற்றில் பருவம்) பத்துப்பாடல்களில் பாடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உயிரும் இருந்து வாழும்படி அவையவற்றிற்கு உரிய வகையில் வடிவுடையம்மையாகிய பராசக்தி வீடுகளை அமைக்கும் சிறப்பை விளக்கும் பாடலொன்றைக் காணலாம். பாடலே இனிய எளிய நடையிலமைந்துள்ளமையால் விளக்கம் தேவையில்லை!

மூவருறை யுயர்வீடு முத்தியின் பென்றோது
              முழுநிதியம் வைக்கும் வீடு
 மோனஞா னானந்த சிவயோக நிலைகண்ட
              முனிவர்கள் வசிக்கும் வீடும்
…………………………………………………….

பாவிய சிறப்புமலி வீடுமாழ் பாதலம்
              பற்றிவாழ் நாகர் வீடும்
பகுத்துத் தனித்தனி யியற்றிவிளை யாடுநீ
                   ………………………………………..
தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
             யள் சிறுவீடுகட்டி யருளே8 என்பது பாடல்.

மேலும் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்களில் காண்பதுபோல் இதுவும் அம்மை சிறுவீடமைப்பதனை உருவகமாக சிறுவர்களின் விளையாட்டான ‘பொய்தலாட்டயர்வ’தாகக் குறிப்பிடுகின்றது. எடுத்துக்காட்டாக ஒருபாடல் அவள் ஈரேழு உலகைப் படைத்தும் அதற்கு முத்தொழில் புரியும் அதிகாரிகளாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை நியமித்தும், சன்மார்க்க துன்மார்க்கங்களில் உயிர்களைச் செலுத்தியும், அதனைக் கண்காணித்தும் ஆகியன செய்வதனைப் பொய்தல் விளையாட்டு எனக் கூறுவதில் உள்ள கருத்தொற்றுமை வியக்கத் தக்கதாம்.

‘அண்டமென் றோதுபெரு வெளியிலீ ரேழுநகர்
                   ………………………………….
 பிண்டத் தினுந்தந்து பொய்தலாட் டயரும்
                 பெருந்தகைச் சிறிய விடையாய்
         ………………………………
திண்டடஞ் சோவடுக நாதபுர மேவுபரை
                சிறுவீடு கட்டி யருளே9,’ என்பன பாடல் வரிகள்.

பின்னும் இதில் அன்னை உயிர்களுக்குத் தகுதியான உடல்களை எழுவகைத்தாதுக்கள் எனப்படும் இரத்தம், சுக்கிலம், மூளை, தசை, எலும்பு, நரம்பு, தோல் இவற்றோடு ஐந்துவகை பௌதிகப் பொருட்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியனவற்றைப் பொருத்தி இணைத்து எழுபத்திரண்டாயிரம் எண்ணிக்கையிலான நரம்புகளையும் அதனூடே இழைத்தும், மூன்றரைக்கோடி மயிர்களை வேய்ந்தும், ஒன்பது வாயில்களை அமைத்தும், இன்னபிற செய்வித்தும் பலவிதமான வீடுகளை உயிரினங்களுக்குச் சிற்றில் அமைப்பதுபோன்று படைக்கிறாள். அவை பழுதுபடின் வேறு வீடுகளை அமைத்துக் கொடுக்கிறாள். இவ்வாறு பிறப்பு, இறப்பு, பாவ புண்ணியங்களுக்கேற்ற மறுபிறப்பு ஆகியனவற்றை அருமையாக எடுத்தியம்பும் பாடலிது.

 ‘எழுவகைத் தாதுவினோ டைவகைப் பௌதிகமு
              மேய்வித்து நீடி மல்கு
 மெழுபத் திரண்டா யிரத்தொகை நரம்பினையு
                   ………………………
 பழகுற வமைத்துமன் பதைகட்கு வாழ்வீடு
              பற்பல விழைத்திட் டவை
 பழுதுபடின் வேறுமவ் வாறுபுரி யம்மையே
                   …………………………..
 தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
              யள்சிறுவீடு கட்டி யருளே10,’ என்பது பாடல்.

நுட்பமான கருத்துக்களாக உடலின் அமைப்பை விளக்கி அவற்றைச் சிறுமிகள் இழைக்கும் சிறுவீட்டின் அமைப்போடு ஒப்புநோக்குதல் வியக்கத்தக்கதாம். இதுபோலும் பொருளும் நயமும் மிக்க பத்துப்பாடல்கள் உள்ளன.

                                                          ****

புதுவை திரிபுரசுந்தரியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப்பருவத்தைத் தவிர்த்து சிற்றிலிழைத்தல் பருவம்  எட்டாம் பருவமாக வைக்கப்பட்டு பத்துப்பாடல்களால் சிறப்புற பாடப்பெற்றுள்ளது. இவற்றுள் முதலைந்து பாடல்கள் அன்னை எவ்வெவற்றைக்கொண்டு சிறுவீடு கட்டுவது போன்று ஈரேழு உலகங்களையும் படைத்தருளுகிறாள் என விளக்குகிறது.

‘பொன்புற மிலங்குநெ டுவட்டவா ளக்குன்று
               புரிசையா கத்திகாந்துப்
புறக்கடற் கோட்டை சூழகழி யாத்திசைகள்11
                   ……………………………..’

எனச் சிறுவீட்டின் அமைப்பையும், அதில் வாழும் உயிர்களைக் காக்க அவள் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்குப் பதவியளித்ததனையும் கூறுகிறது.

‘முத்தலைச் சூலமேந் திப்பொடி யணிந்தோங்கு
மூரிவெள் விடையவர்க்கு
முந்நீர் நிறங்கொண் டுமண்ணுண் டுவிண்ணீண்ட
முண்டகக் கண்ணருக்கும்12…. என்பன பாடல் வரிகள்.

இத்தகைய அருமையான கருத்துக்களைக் கொண்டமைந்ததால் இப்பருவத்தின் பாடல்கள் பெண்பால் பிள்ளைத்தமிழில்  சிறப்பாக விளங்குகின்றன.

                                                                                  (தொடரும்)

பார்வை நூல்கள்

1. பிங்கல முனிவர்- பிங்கல நிகண்டு
2. மதுரைக்காஞ்சி, வரி 589.
3. பரிபாடல், 20, வரி 23.
4. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
5. தஞ்சை ராமையா தாஸ்- ‘காவேரியின் கணவன்’ திரைப்படப் பாடல், 1959
6. கண்ணதாசன்- ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ திரைப்படப்பாடல், 1964
7. சிவஞான முனிவர்- கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
8, 9, 10. சேந்தன்குடி வி. நடராசக்கவிராயர்- வயிரவன் கோயில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்
11, 12. புதுவை முத்துக்குமாரன்-  திரிபுரசுந்தரியம்மை பிள்ளைத்தமிழ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.