Blog

  • உன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை

    உன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை

    தமிழர்கள் போற்றிய, நம் உயிரோடும் உணர்வோடும் கலந்த உன்னதக் காதல் காட்சிகள் சிலவற்றை நினைவுகூர்வோம், நெஞ்சில் ஏந்துவோம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்

    அமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மே 25, அமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவுநாள்.  இதை ஆங்கிலத்தில் Memorial Day என்று அழைப்பார்கள்.  ஒவ்வோர் ஆண்டும் வரும் ஐந்து தேசிய விடுமுறைகளில் இதுவும் ஒன்று.  மே மாதத்தின் கடைசித் திங்கள் கிழமையை இந்த நினைவுநாளாகக் குறித்திருக்கிறார்கள்.

    அமெரிக்கா புரிந்த போர்களில் கலந்துகொண்டவர்களை நினைவுகூரும் நாள். அமெரிக்கா புரிந்த பல போர்கள் தேவையில்லாதவை. அமெரிக்கா தன்னுடைய பண வலிமையையும் ராணுவ பலத்தையும் காட்டுவதற்காகப் புரிந்த போர்கள் அவை. அதிலும் வியட்நாமில் புரிந்த போர் அமெரிக்க ஜனாதிபதிகள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் புரிந்த போர். வியட்நாம் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது பதவியில் இருந்த இரண்டு ஜனாதிபதிகளும் தங்கள் பதவிக் காலத்தில் அமெரிக்கா தோற்ற போர் என்ற பெயர் தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே வீம்புக்காக நடத்திய போர். இந்தப் போரையும் சேர்த்து அமெரிக்கா புரிந்த போர்களில் கலந்துகொண்ட அமெரிக்கர்களை நினைவுகூரும் இந்தச் சமயத்தில் இந்தப் போர்களினால் எத்தனை நாடுகளில் எத்தனை சேதம் ஏற்பட்டது, எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அமெரிக்கர்கள் கவலைப்படுவதில்லை. அதுவும் வியட்நாமில் நடந்த போரில்  இலட்சக்கணக்கான   வியநாம் வீரர்களும் குடிமக்களும் இறந்தார்கள் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. கம்யூனிஸ்டுகள் தங்கள் குடிமக்களை நன்றாக மூளைச்சலவை செய்துவிடுகிறார்கள் என்று அமெரிக்கா போன்ற நாடுகள் பழி கூறுகின்றன. அமெரிக்காவில் மட்டும் என்ன வாழ்கிறது!  இந்தப் போர்கள் எல்லாம் அமெரிக்க நலனுக்காகப் புரிந்த போர்கள் என்று எளிதாக மக்களை நம்பவைத்துவிடுகிறார்கள். வியட்நாம் போர் நடந்துகொண்டிருந்தபோது ஆசியாவில் கம்யூனிஸம் பரவுவதைத் தடுப்பதற்காக நடந்துவரும் போர் என்று அமெரிக்க அரசு சொன்னதை எத்தனை இளைஞர்கள் நம்பினார்கள் தெரியுமா? வட வியட்நாமில் கம்யூனிஸ்டுகள் ஜெயித்துவிட்டால் ஆசியா முழுவதும் கம்யூனிஸம் பரவிவிடும் என்றும் பின்னர்  தங்கள் நாட்டிற்கே அது வந்துவிடும் என்றும் பயந்து, மக்களையும் நம்பவைத்து ஜனாதிபதி ட்ரூமன் வெறித்தனமாக வியட்நாம் கம்யூனிஸ்டுகளை எதிர்க்கப்  பிரான்ஸுக்கு ஆயுத உதவி செய்தார். அதுதான் வியட்நாம் போரின் ஆரம்பம். கம்யூனிஸம் உலகில் பரவுவதைத் தடுப்பது அமெரிக்காவின் கடமை என்று ட்ரூமனும் ஐஸன்ஹோவரும் சொன்னதை அப்படியே நம்பிவிட்ட அமெரிக்க இளைஞர்கள் பலர். ஒரு சின்ன உதாரணம். மோகி க்ராக்கர் என்னும் பதினேழே வயதான இளைஞனுக்கு பன்னிரெண்டு வயதிலிருந்தே போர் பற்றிய புத்தகங்களைப் படித்ததால் போர் என்றால் மிகவும் பிடிக்குமாம். சிறு வயதிலேயே அவனுக்கு ஏன் அப்படிப்பட்ட புத்தகங்களாக அவனுடைய பெற்றோர் படிக்கக் கொடுத்தார்கள் என்று புரியவில்லை. அவனுக்குச் சண்டையும் பிடிக்கும், அதிலும் நாட்டிற்காகப் போர் புரிவதென்றால் இன்னும் பிடிக்கும். பதினெட்டு வயது நிறைவவடைந்த பிறகுதான் ராணுவத்தில் சேர முடியும். அதற்கு முன்னரே பெற்றோர் சம்மதம் கொடுத்தால் ராணுவத்தில் சேரலாம். பெற்றோரிடம் சம்மதம் கொடுக்குமாறு வேண்டினான். பெற்றோர் சம்மதம் கொடுக்காததால் வீட்டை விட்டே வெளியேறினான். கடைசியாகச்  சம்மதம் பெற்று ராணுவத்தில் சேர்ந்து, சேர்ந்த சில மாதங்களிலேயே இறந்தும்விட்டான். அவனே வியட்நாமில் பிறந்திருந்தால் வியட்நாமியர்களின் சுதந்திர தாகத்தைப் புரிந்துகொண்டு அவர்களோடு சேர்ந்து போர்புரிந்திருப்பான் என்றும் அமெரிக்காவில் பிறந்துவிட்டதால் கம்யூனிஸம் பரவுவதைத் தடுக்க அமெரிக்கா போர் புரிய வேண்டும் என்று அமெரிக்க அரசியல் தலைவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு வியட்நாமில் போர் புரியச் சென்றான் என்றும் அவனுடைய  சகோதரி கூறியிருக்கிறார்.  இது என்ன பேதமை. கம்யூனிஸம் பரவுவதைத் தடுப்பது அமெரிக்காவின் கடமை என்று தலைவர்கள் சொல்லிவிட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதா? இதுதான் தேசப்பற்றா?

    இந்தத்  தினத்தை அமெரிக்கர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? நாம் இந்தியாவில் காந்திஜி பிறந்த தினத்தைக் கொண்டாடுவது போலத்தான். (காந்திஜியை மறந்துகொண்டிருந்த இந்தியர்கள் அவரை இன்னும் முழுமையாக மறக்கட்டும் என்று பி.ஜே.பி. அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த அந்த நாளை வேலை நாளாக மாற்றிவிட்டது என்பது இன்னொரு விஷயம்.) அமெரிக்காவில் தீநுண்மி கோவிட்-19 பரவுதல் இன்னும் முடியாமல் இருக்கும்போது பீச்சுகளைத் திறந்துவிட வேண்டும் என்று அடம்பிடித்து பீச்சுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இதுதான் அவர்கள் நாட்டிற்காகத் தியாகம் புரிந்த வீரர்களை நினைவுகூரும் விதம். அதுவும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் பொது இடங்களை மக்களின் உபயோகத்துக்காகத் திறந்துவிடுவதற்கு இன்னும் கொஞ்சக்  காலம் காத்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ‘எங்கள் சுதந்திரத்தை நீங்கள் பறிக்க வேண்டாம்’ என்று கோஷம் போடுகிறார்கள். நாட்டுக்காகப் போரிட்டவர்களையும் உயிர் துறந்தவர்களையும் நினைத்து ‘நாமும் நாட்டுக்காக என்ன செய்யலாம்’ என்று நினைப்பதற்குப் பதில் பீச்சுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கோவிட்-19-ஐப் பற்றிக்கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வசந்த காலம் முடிந்து சீக்கிரமே கோடை காலமும் வரப் போகிறதாம், இந்த நாட்களை வீட்டிற்கு வெளியில் சென்று கொண்டாடியே ஆக வேண்டுமாம்.  இவர்களுக்கு வாய்த்திருக்கும் ஜனாதிபதி வேறு ‘வெளியே வாருங்கள்’ என்று இவர்களை உசுப்பேற்றிவிட்டுக்கொண்டிருக்கிறார்.  நல்ல நாடு, நல்ல மக்கள், நல்ல தலைவர்.

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20

    அவ்வைமகள்

    20. இந்து சமயம் எனும் சிகரம்  

    பிரெஞ்சு நேசம் பற்றி நாம் பேசிக்கொண்டுவரும் வேளையில், அன்றைய காலனி ஆதிக்க நாளில், காலனி ஆதிக்க நாயகர்களுக்கு இடையே பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி, தீவிரமான காலனி வெறியின்றியும் , மதத் திணிப்பு – மதமாற்ற  நோக்கமின்றியும் நடந்து கொண்டதோடு, அவர்கள் இந்தியருடன் நட்பு பாராட்டி உதவிகள் செய்தத் தருணங்களை நாம்  நினைவு கூர்ந்து வருகிறோம்.

    இந்திய மக்கள் பால் அவர்கள் காட்டிய இந்த நேசமும் உதவியும், பற்பல  நெருக்கடிகளுக்கிடையே நெஞ்சார்ந்து வழங்கப்பட்ட உதவிகள் என்பதை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம். ஏனெனில், உலக அரங்கில் மற்றும் தன்  உள்நாட்டில் அன்று பிரெஞ்சு பட்ட சிரமங்கள் போலவே, அந்நாளில், காலனி  ஆதிக்கக் காலகட்டங்களில்,  இந்தியாவில் பிரான்ஸ் இருக்கிறபோது அவர்கள் பட்ட சிரமங்கள் ஒன்றிரண்டல்ல. ஒருபுறம் போர்ச்சுக்கீசிய மற்றும்  டச் (நெதர்லாந்து) தந்த பிரச்சினைகள்  மற்றொருபுறம் மிகப்பெரிய அளவில் பிரிட்டிஷ் தந்த பிரச்சினைகள்  என பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில், உண்மையில், படாத பாடுபட்டது.

    அன்று இந்தியாவை அபகரித்துக் குடியேற,  ஐரோப்பிய நாடுகள் கடுமையாய் முயன்றன – காரணம், இந்தியா, அந்நாளைய உலக வர்த்தக மார்க்கத்தின் (Silk Road) வழித்தடமான பட்டுவழிப் பாதை அல்லது பட்டுச் சாலை எனப்படும் பிரதான வணிகப் பாதையில் நடுநாயகமாக விளங்கியது.

     

    பட்டுச் சாலை (Silk Road) என்பது உலகில் இருந்த ஆதிகாலத்து வணிகப்பாதை. மேக்கிற்கும் கிழக்கிறகும் இடையேயான வாணிகம் பட்டுச்சாலை வழியாகத்தான் நடைபெற்று வந்தது. கடல்வழிப் பட்டுச்சாலை  நீல வண்ணத்திலும். தரைவழிப் பட்டுச் சாலைசிவப்பு வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளது. https://en.wikipedia.org/wiki/Muziris

    முப்புறம் கடலும் வடக்கே பிறநாடுகளுடன் நிலவழித் தொடர்பும் கொண்டதாய், மிகக்கணிசமான நிலப்பரப்புடன், மிக சாதகமான சீதோஷ்ண நிலையுடன், கள்ளம் கபடமற்ற நெஞ்சமும் தர்மசிந்தனையும் உள்ள மக்கள் கொண்ட ஒரு வசதியான தீபகற்பமாக விளங்கும் இந்தியாவைப் போல தோதான நாடு உலகில் இல்லவே இல்லை. எனவே, அன்று, அனைவர் கழுக்குப் பார்வையிலும் இந்தியா விழுந்தது! இவ்வாறான சூழலில், இந்தியாவைக் குடியீரம் செய்து அபகரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று விஞ்சிவிடக்  கடுமையாய் முயன்றன. எத்தனை எத்தனை கொடூரமுண்டோ, நயவஞ்சகம் – தந்திரம் உண்டோ அத்தனையும் பிரயோகப்படுத்தப் பட்டன.

    படைபலம் மற்றும் தந்திர சூழ்ச்சிகளில், பிரெஞ்சுப் படைகள்  பலசமயங்களில் பிறரைவிட பலமாக இயங்க இயலவில்லை என்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. அதில் பொருளாதாரப் பிரச்சினைகளும் அடக்கம். பல தருணங்களில், பிரெஞ்சு, தான் ஆக்கிரமித்தப் பகுதிகளை பிரிட்டிஷிடம் இழந்தும் கூட போனது. (உலக அரங்கில், நெப்போலியனின் போர் வெற்றிகளுக்குப் பிறகு இப்பகுதிகளை, பிரிட்டிஷ் மீண்டும் பிரெஞ்சுக்குத் தரவேண்டியும் நேரிட்டது).

    இவ்வாறான, நெருக்கடிகள், இப்போது நாம் மீள்பார்வையாகப்  பேசுவதற்கு எளிதாகத் தெரியும் ஆனால், நிதர்சனமாக இந்த நெருக்கடிகளைக் கடந்து அவர்கள் சென்ற காலம் அவை எத்துணைக் கடினமானவையாய் இருந்தன என்பதையும் நாம் எண்ணுதல் வேண்டும்.

    பொதுவாகவே, நெப்போலியன் காலத்திலிருந்து, பிரான்சின் வரலாற்றைப் பார்த்தால், விடுதலை பெறவிரும்பும் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டித் துணைபுரியும் சார்பு புரியும். அமெரிக்க விடுதலையில் பிரெஞ்சின் பங்கு மகத்தானது என்பதை நாமறிவோம். உலக மக்கள் எவரேயாயினும் அவர்கள் விடுதலைக்காகப் போராடும்போது அங்கே முதலில் குரல் கொடுப்பதும் உதவிக்கு வருவதும்  பிரான்ஸ் தான் என்கிற கீர்த்தி பிரான்சுக்கு எப்போதும் உண்டு. அமரிக்காவின் மிகமுக்கிய வரலாற்று அடையாளமான சுதந்திரதேவியின் சிலை (Statue of Liberty) பிரான்சால் அமரிக்காவுக்கு வழங்கப்பட நினைவுப்பரிசு என்றால், விடுதலை என்பது உலக அரங்கில் முதன்மைப் பொருளாய் இருக்கவேண்டும் என்று தீராத ஆவல் உடைத்த ஒரு நாடாய் பிரான்ஸ் விளங்கிவந்திருப்பது புரியும்.

    காலனி வெறியோடு மதவெறியும் கலந்துதான் நம் நாட்டை, போர்ச்சுக்கீசிய, டச்சு மற்றும், பிரிட்டிஷ் ஆகியோர் நெருங்கினர். இவர்களின் ஒருமித்த கொள்கை யாதென்றால்,இந்தியாவில், சுதேசி சமயங்களை இழித்துரைப்பதும் – கோவில்களை – வழிபாட்டுத்தலங்களை, அழிப்பதுமாகும். சுதேசி சமயக்   கோயில்களை அழித்துத் தரைமட்டமாக்கி அங்கே கிறித்துவ தேவாலயங்களை நிறுவுவது சாமர்த்தியமான செயலாக, வெறித்தன்மையுடன் அரங்கேறி வந்தது.

    முன்பு வந்து, முகலாய ஆதிக்கம் சுதேசி சமயங்களுக்கு செய்த கெடுதல் போதாதென்று, இவர்கள் வந்து, வரிந்து கட்டிக்கொண்டு செய்த நாசவேலைகள் ஏராளம் ஏராளம். கிறித்துவ மதம், சுதேசி சமயங்களை விட உயர்வானது என்பதாகக்  கூறிக்கொண்டு சுதேசி சமயங்களை இழிப்பதும், பொய்யுரைத்தும், போலிக் கவர்ச்சி காட்டியும், பலவகைகளில் மனிதர்களுக்கு மனநெருக்கடியும், புத்திக்குழப்பமும் ஏற்படுத்தியும், ஏன் மிரட்டியும், துன்பறுத்தியும் கூட, பலவகையானும் யுத்திகள் செய்து, சுதேசி சமயங்களிலிருந்து மக்களை கிறித்துவ மதத்தின் பால் இழுத்து, மதமாற்றம் செய்வது, ஒரு தொழிலாகவே நடைபெற்று வந்தது.

    முகலாய மன்னர்களின் ஆட்சி சரியத் தொடங்கிய காலத்திலிருந்தே, பிரான்சின் சிந்தை என்னவென்றால், மெல்ல மெல்ல இந்தியர்களுக்கு இந்தியவிடுதலையில் ஒத்தாசை செய்வது என்பதுதான்.

    எனவேதான், காலனி ஆதிக்கத்தின் போது, இந்தியர்களுடன், குறிப்பாக, தமிழர்களுடன் பிரெஞ்சு மக்கள் நெருங்கிப் பழகத் தொடங்குகின்றனர்.  பிரெஞ்சின் தலைமை பாண்டிச்சேரி என்பதால், தமிழர்கள்  மிகவும் நெருக்கமானவர்கள் ஆகிறார்கள் .

    தமிழர் பண்பாடுகளை  அவர்கள் வெறுமனே கவனிப்பதோடு நின்றுவிடாது,  அவற்றை  அணுகி ஆய்ந்து, அவற்றில் பொதிந்துள்ள உண்மைகளை – பின்னணிகளை  அறிந்து கொள்ளவும் செய்தனர்.  இவ்வாறான, தமிழர் பற்றிய ஞான வளர்ச்சியினால், பிரெஞ்சுக் குடியேற்றம் இருந்த அந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் பெருமைகள் – தமிழர்களின் பெருமைகள் யாவும் பிரான்சில் பேசப்பட்டன. பார்க்கப்போனால், 1731லேயே ரிக் வேதம் பாரிஸின் ராயல் நூலகத்தில் இடம் பெற்றுவிட்டது. அடுத்ததாக,  இந்திய நாகரீகத்திற்கான துறை பல்கலைக் கழகங்களில் உருவானது.  வடமொழி, தமிழ் மொழி உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆய்வு செய்யும், மொழிபெயர்ப்பு செய்யும், தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட கருத்துகளைத் தாங்கியதான இலக்கியங்களை பிரெஞ்சு  மொழியில் ஆக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பிரான்ஸ் மேற்கொண்டது.

    பிரான்சின் புகழ்பெற்ற தமிழ் வித்தகரும் தமிழ் எழுத்தாளருமான கோர் சொல்லுவதைப் பாருங்கள்: “என்னுடைய நாடி நரம்புகளில் பரிபாடல் வரிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.  தமிழ் எனக்கு வாய்க்கப்பெற்ற மொழி – இம்மொழியின் மூலமாக, தமிழகத்தின் கலாச்சாரத்தைப் பார்க்கிறேன்” https://www.livemint.com/Specials/JBdbjIeHpi8wwyAkjz592H/Francois-Gros-Explorations-in-classical-Tamil.html

    பிரான்சில் தமிழும் தமிழர்களும் அதிகம் அறிப்பட்டதன் காரணம் தமிழ் மண்ணான பாண்டிச்சேரி பிரெஞ்சுக் குடியேற்ற்றத்தின் தலைமைப் பீடமானதால் தான் என்று ஏற்கனவே பார்த்தோம்.  தமிழ் பற்றி தமிழகம் பற்றி, இங்குள்ள மக்களின் பண்புகள்  பற்றி பிரான்ஸில்  மிக அதிகமாகவே இன்றும் அறியப்படுகிறது பேசப்படுகிறது என்பதன் தொடக்கம் அன்றே நிகழ்ந்தது எனலாம்.

    அதே போன்றே, பாண்டிச்சேரித் தமிழர்கள் மட்டுமல்லாது இன்னபிற தமிழர்களுக்கும் பிரான்ஸ் பற்றி – அம்மக்கள் பற்றி, அதிகமாகவே தெரிய ஆரம்பிக்கலானது அன்றே ஏனென்றால் பாண்டிச்சேரிக்குள் தமிழர்கள் அனுமதிக்கப்பட்டது தான்.

    இவ்வாறன நேசவுணர்வால் உந்தப்பட்ட பிரெஞ்சு மனிதர்கள், கிறித்துவ மிஷினரிகள் வேரூன்றிப் பெருகுவது மட்டுமல்லாது இந்துமதத்திற்கு எதிரான பிரச்சாரங்களையும், இந்துக்களின் பழக்கவழக்கங்களி இழிவாகப் பேசுவதையும் கண்ணுற்றவாறு இருந்த  அதே நேரத்தில், இந்தியாவில் உள்ள இந்து சமயத்தில் இருக்கிற, செம்மார்ந்த சமய உணர்வுகள், ஆன்மீகச்  சிந்தனைகள், இழித்துப் பேசப்படும் தன்மையல்லாதன என்பதை அவர்கள் முழுதாய் உண்ரகிறார்கள்.

    இந்துமதத்திற்கு எதிராக பிரிட்டிஷ், டச்சு, போர்ச்சுக்கீசிய ஆட்களால்   பரப்பப்படும் பொய்யான கருத்துக்களை அவர்கள் புறந்தள்ளிவிட்டு, இந்து சமயத்தில் இருக்கிற ஆன்மீகப் பயிற்சிகளை, ஆன்மீகச் செழுமையை – ஆன்மீகத்தில் காணப்படுகிற தன்னேரில்லாச் சுதந்திரத்தை ஆராதிக்கிறார்கள்.

    இந்து சமயத்தில் உள்ள உள்சமயங்களில் இருக்கிற வித்தியாசங்களில் பொதிந்திருக்கிற குடியாண்மையை, மனித மதிப்பை, தனிமனித உரிமைகளை பிரெஞ்சு மக்கள் மிக அதிகமாகவே தெரிந்து கொள்கிறார்கள். அவர்களை அன்று இந்துசமயத்தின் பெருமைகளாகப் பார்த்த விஷயங்கள் இதோ:

    இந்து சமயம்   எத்தனை பெருந்தன்மையானது – எத்தனை சுதந்திரமாக எவரொருவரும் இந்த சமயத்தில் இயங்க முடியும் என்பது அவர்களால் வாயாரப் புகழப்பட்டது. பரம்பொருள் எனும் ஒப்பற்ற சக்தியை அவரவருக்குப் பிடித்த உருவத்தில், அவரவருக்குத் தோதான வழிபாட்டுமுறைகளோடு, அவரவர்க்குத் தோதான நேரத்தில் வணங்கிகொள்ளமுடியும்.  அல்லது வெறுமனே மனதாலும் எண்ணிக்கொள்ளமுடியும். இயன்றபோது கோவிலுக்குப் போகலாம், போகாமலேயும் இருக்கலாம். விட்டு விட்டும் போகலாம். ஒரு நாள் ஒரு கோவிலுக்குப் போகலாம் – இன்னொரு நாள்  வேறொரு கோவிலுக்குப் போகலாம். பூசலார் போல் மனதுக்குள்ளேயே கோவில் கட்டிக் குடமுழுக்கு செய்யலாம் – தனிமனிதருக்கு ஏற்றார் போல் சமயம் என்பது எளிவந்து நற்கிற  வசதியோ வசதி. இங்கு சமயம், வாழ்வோடு இணைந்த சுயம்புவான சங்கதி! இங்கே – சமயம் என்பது பாரமான புறத்திருந்து திணிக்கப்படுகிற சுமை இல்லை.

    இங்கே, வழிபாட்டுத்  தோத்திரத்துக்கு எந்த தோத்திரத்தை வேண்டுமானாலும் அவரவர் இஷ்டப்படி எடுத்துக் கொள்ளலாம். சிறுதெய்வங்களை நினைத்துக் கொள்ளலாம் – கிராம தேவதைகளை கும்பிட்டுக்கொள்ளலாம் – எதுவுமே வேண்டாமென்று வெறும் தீபத்தை  ஏற்றி வைத்து வணங்கிக்  கொள்ளலாம். சூரியனை வணங்கலாம் – குளத்தை, –  நதியை – கடலை – காற்றை – நெருப்பை –  மலையை – ஆகாயத்தை  வணங்கலாம்.

    ஆடம்பரப் பதார்த்தங்கள் செய்து  தடபுடலாய் வணங்கலாம் – வெறுமனே ஒரு சொட்டு நீரை  அர்ப்பணம் செய்து  வணங்கலாம்.

    இங்கே சமயத்தில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும், தங்கு தடையற்ற வசதி வாய்ப்புக்கள்! சுதந்திரமான  எண்ண எழுச்சிகள் – செயல் திறங்கள் !!

    தனிமனித உரிமைகள் – விருப்பு வெறுப்புக்கள் யாவற்றையும் அனுமதிக்கிற ஒரே சமயம் – இந்து சமயம்.

    இச்சமயத்தில், கடவுளை எப்படி வேண்டுமானாலும்  விளிக்கலாம் – தோழனாக -வேலைக்காரனாக – எஜமானனாக – காதலனாக -காதலியாக – குழந்தையாக – ஆணாக  – பெண்ணாக – அலியாக – பிசாசாக – பேயாக – முனியாக – காட்டேரியாக – அன்னபூரணியாக, – பாம்பாக, பசுவாக, பன்றியாக!

    கடவுளை, பாடி  வணங்கலாம் – நடமாடி வணங்கலாம், கூத்தாடி வணங்கலாம் – திட்டியும் வணங்கலாம்!

    வேறெந்த சமயமும் அளித்திராத எண்ணிலா தனிமனித சுதந்திரங்கள் தந்திருக்கிற – தந்து கொண்டிருக்கிற ஒரே சமயம்!

    இந்த சமயம் தரும் பேச்சுரிமை – எழுத்துரிமை – சிந்தனை உரிமைகள் ஒன்றா இரண்டா?  இங்கே எவரும் இந்து  மதத்தை விவாதிக்க முடியும் –  குறைகாணமுடியும் – செப்பனிடமுடியும் – காலத்திற்கேற்ப மாறுதல்களை ஏற்படுத்தி சமயத்தை தகவமைப்பு செய்து அதனை வளர்க்கமுடியும்.

    இங்கே சமயத்தில் இவருக்கு எத்தனை தூரம் எத்தனை ஆழமாகப் பயணிக்கமுடியுமே அத்தனை அளவு பயணிக்கமுடியும். வேதங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் என்று எண்ணிலடங்கா சமய இலக்கியங்களின் நவரசத்தை நுகரமுடியும் – அத்தகு இலக்கியங்களை உருவாக்கவும் முடியும்.

    புதுப் புது சீர்திருத்தவாதிகள்   புதுப் புது கிளைகள் – புதுப்புது  பூக்கள் என்று ஒய்யாரமாய் –  என்றும் பசுமையாய் ஜீவிக்கும் சமயம் இந்து சமயம்.

    சமயம் என்பது ஜீவனுள்ள விஷயம் என்பதால் அது பரிணாம வளர்ச்சி  கண்டேயாகவேண்டும் என்பதனை இயல்பாய் எடுத்துக்காட்டும் எளியமதம். இங்கே மதகுருமார்களுக்கு ஒவ்வொரு குடிமகனும், தனது வருவாயில்   பத்து சதவீதம்  மாதம் செலுத்தவேண்டும் என்கிற வற்புறுத்தல் இல்லை – இங்கே மதக்குருமார்களுக்கு அடிமைகளாக அவர்கள் இடும் வேலையைச் செய்து  பிழைப்பு நடத்தும் தேவை எவருக்கும் இல்லை.

    இந்த சமயத்தைப் போல் எந்த சமயமும் இல்லை  என்பதான பேச்சுக்களை அந்நாளிலேயே பிறநாட்டார் பேசம் ஒரு நிலையம் மெல்ல மெல்ல மவுனமாய் வளர்ந்தது என்றால் அதற்கு, பிரெஞ்சு மக்களின் பங்கு இன்றியமையாதது. (இன்னுமும் இந்தக் கணிப்பில் எவ்விதக் குறைவும் மாறுதலும் இல்லை).

    அதுபோலவே, பிரான்சிலும் இந்துமதக் கோட்பாடுகளைஅன்று  வெகுவாக ஆராதித்தார்கள் – இன்று ஆராதிக்கிறார்கள்.

    பின்னாளில் (1914), உலகப் பிரசித்தியான  விஷயம் ஒன்று நிகழ்ந்ததை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். மிர்ரா அல்பாஸா எனும் பிரெஞ்சுப் பெண்மணி, இந்துமதம் தழுவுகிறார்;  பாண்டிச்சேரி வருகிறார் அரபிந்தோ கோஷுடன் இணைந்து  ஆன்மிகம் வளர்க்கிறார் – அரபிந்தோ ஆசிரமமும் ஆரோவில் சமுதாயமும்  உருவாகின்றன – நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆல்போல் வளர்ந்து  அருகுபோல் வேரூன்றி அவையிரண்டும் இன்றும் நின்று மனித குலத்திற்குத் தொண்டு செய்து கொண்டு இருக்கின்றன – இவை நமக்குத் தெரிந்த சேதிகளே. அன்னை என்று நாம் அனைவரும் அன்புடன் அழைக்கும் அப்பெண்மணி பிரஞ்சு தேசத்திலிருந்து இங்கு வந்து நம்முடன் வாழ்ந்து நம் மண்ணில் கலக்க, அவாமிகக் கொண்டு நம்மிடம் வந்தவள்!!

    அன்றைய நாளில், பிரெஞ்சு மக்கள் இந்தியாவைப் பற்றி அறிந்துகொண்ட இன்னொரு விஷயம் தர்மபரிபாலனம். குற்றரசர்கள், சிற்றரசர்கள், பேரரசர்கள் என இந்தியாவில் மன்னராட்சி நடந்து கொண்டிருந்த அக்காலகட்டத்தில், ஒவ்வொரு மன்னனும், தர்ம பரிபாலனம் நடத்தியது  அவர்கள் அறிவுக்கு எட்டியது . ஒவ்வொவொரு மன்னனும் மூன்று தட்டு ஆட்சியமைப்பை நிலைநாட்டி, வெகுசெம்மையாக , தமது நிலப் பகுதியை ஆண்டுவந்தான்.

    இந்த மூன்று தட்டு ஆட்சி என்னவென்றால், சட்டம், நிர்வாகம், நீதி என்பது. ஒவ்வொரு மன்னனும் தெளிவான சட்டங்களை இயற்றி வைத்திருந்தான். ஒவ்வொருவனும் அமைச்சு சார்ந்த நேர்மையான நிர்வாகம் இயற்றினான். ஒவ்வொரு மன்னனும் மிகத் தேர்ந்த நீதித்த துறையை வைத்திருந்தான். முடியாட்சி தான் எனினும் குடியாட்சியின் மாட்சிமையோடு மன்னர்கள் ஆண்டுவந்த  இந்தியா உலக அதிசயமாக – முன்னோடியான  கலாச்சாரப் பண்புகள் கொண்ட ஒரு நாடாக அன்று உலகில் வியக்கப் பட்டது. இத்தகைய மூன்று தட்டு ஆட்சிமுறைமையைக் கொண்ட நாடுகளை அந்நாளில் மேற்கில்  காண இயலவில்லை.

    பிரெஞ்சு -இந்திய வாஞ்சை எத்தனை  வலிமையானது என்பதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.

    முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், மற்றும் ஏனைய பிரெஞ்சுப்  போர்களிலும் இந்தியச்  சிப்பாய்கள் ஈடுபட்டுபி போரிட்டு, பிரெஞ்சுக்கு ஒத்தாசை செய்கிறார்கள்.

    இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னெவென்றால், பிரெஞ்சுக்காகப் போராடிய இந்திய  சிப்பாய்களின், இந்திய அதிகாரிகளின் மத உணர்வுகள் மதிக்கப்பட்டன. தலைப்பாகை மற்றும் தமது இஷ்ட மதத்தின் சின்னங்களைத் தரித்தபடி – தனது மதத்தின் வழிபாட்டு முறைகளை போர்க்களத்திலும்  அவர்கள்  பின்பற்றமுடியும் அதற்கு எந்தத் தடையும் இல்லை. மாட்டுக்கொழுப்பாலான குண்டு உறைகளை வாயில் கடித்து உடைக்குமாறு சிப்பாய்கள் துன்புறுத்தப் படவில்லை. போர்முறைகளை தர்மசிந்தையோடு மட்டுமே செய்யவேண்டும் என்கிற இந்திய போர்வீரர்களின் நற்சிந்தனைக்கும் எவ்வித எதிர்ப்புமில்லை.

    போரென்றால் போர்வீரர்கள் இறப்பது தவிர்க்கவியலாதது அல்லவா? இந்தப் போர்களில், எண்ணிறந்த இந்தியச் சிப்பாய்கள் இறக்க நேரிடுகிறது. அவர்களின் சடலங்களில் யாவும் அவரவர் சமய ஒழுக்கத்தின் படி நேர்த்திக்கடன்களோடு எரிக்கப்பட்டது.

    ஆனால், நாம் ஏற்கனவே பார்த்தபடி, பிரிட்டிஷ் அரசு, கிறித்துவ மதத்தைப்  பகிரங்கமாகவே புகுத்தியும் – இந்து மதப் பழக்கவழக்கங்களைக் கொச்சைப் படுத்தியும் – இந்திய சிப்பாய்களையும், அதிகாரிகளையும் அவர்களது மதஉணர்வு புண்படுமாறு நடத்தியும், அதர்மமான போர் முறைகளை அவர்கள் மேற்கொள்ளுமாறு, அவர்களை வலுக்கட்டாயம் செய்தும் துன்புறுத்தியது. பிரிட்டிஷின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த இந்திய சிப்பாய்களும் அதிகாரிகளும் மனிதாபிமானம் இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டனர்.

    மண்ணாசை மட்டுமே கொண்டு இவ்வுலகைத் தனது  ஆளுகையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்கிற பேராசையும் ராட்சஸத் தன்மையும் கொண்ட பிரிட்டிஷாரின் நாடு பிடிக்கும் வெறி, எத்தனை எத்தனை சாகசங்களைச் செய்து நாடுகளை அடிமைப் படுத்தும், கிறித்துவ மதத்தை அங்கே திணிக்கும் என்பதை அப்பட்டமாய் நேரடியாய் இந்திய மண்ணில் பிரான்ஸ் புரிந்து கொண்டதுபோன்ற நேரடி அனுபவம் வேறு எங்கும் அதற்குக் கிடைக்கவில்லை.

    நேர்மை என்றால் அது ஆங்கிலேயர்களிடம் இல்லாதது. சூழ்ச்சிகள் செய்வது – மக்களுக்கிடையே பேதத்தை உண்டு பண்ணி – அவர்களுக்குஎதிராக அவர்களையே பயன்படுத்துவது என்பதெல்லாம் பிரிட்டிஷின் கைவந்த கலையாக இருப்பதை, பிரெஞ்சு இந்தியாவில் மிகநன்றாகவே புரிந்துகொண்டது ஆக, பிரெஞ்சு அரசுக்கு, இந்தியா என்பது பிரிட்டிஷை, மிக அருகில் நின்றபடி  அறிந்து கொள்ளும் ஒரு கல்விப் பணிமனை  – கற்றல் பணிமனை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதே கற்றலில், ஒரு நாட்டின் சாதாரண குடிமக்களின் – பிரயாசைகள், ஆசைகள், தேவைகள், எதிர்பார்ப்புக்கள், அவர்களது வாழ்வியல் ஆதாரங்கள், அவர்களது நம்பிக்கைகள், அவர்களுக்கு இருக்கிற ஞானம், விடுதலை வேட்கை, சுதந்திர தாகம் ஆகியனவும் பிரெஞ்சுக்குப் புரிகின்றன.

    வேறு எவரும் செய்யத்துணியாத செயலான பிரிட்டிஷை எதிர்ப்பது மற்றும்  சொந்தநாட்டில் மதவெறியை ஒடுக்குவது  என்கிற துணிச்சலை பிரெஞ்சு செய்தது என்றால் அதற்கு இந்தியாவில் பிரிட்டாஷாரிடம் இந்தியர்களும் – இந்தியர்களோடு தாங்களும் பெற்ற நேரடி அனுபவங்களும்  கூட ஒரு காரணம் என்று கருதுவதும் தகும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 18

    பழகத் தெரிய வேணும் – 18

    நிர்மலா ராகவன்

    (தாயும் மகளும்)

    வீட்டுடன் இருக்கும் பெண், ‘நான் எந்த வேலைக்கும் போவதில்லை,’ என்று சற்றுக் கூசியபடி கூறுகிறாள்.

    நாள் முழுவதும் ஓடியாடி உழைத்தாலும், வீட்டுக்குள் இலவசமாக வேலை செய்வதால் அதன் மதிப்பு வெளியில் தெரிவதில்லை.

    தாயான எந்தப் பெண்ணாவது எப்போதும் ஓய்வாக இருந்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

    தடுக்கி விழுந்து அடிபட்டுக் கொள்ளும்போதும், தந்தை காரணமில்லாமல் கோபிக்கும்போதும், பள்ளியில் உடன்படிப்பவர்கள் நட்புடன் பழகாதிருக்கும்போதும் குழந்தைகள் நாடுவது யாரை?

    குழந்தையுடன் பேசுங்கள்

    முதன்முறையாக அம்மா ஆனவர்களுக்கு குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது புரிவதில்லை. மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சினால் போதும் என்று நினைக்கிறார்கள்.

    என் மூத்த மகளுக்கு ஒரு வயதானபோது, அவள் தன்பாட்டில் பொம்மையை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருப்பாள். நான் ஏதாவது செய்துகொண்டிருப்பேன்.

    நாம் பார்ப்பது, கேட்பது எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டிருந்தால்தான் குழந்தையின் அறிவு விசாலமடைகிறது என்று அனுபவத்தில் கண்டிருந்த என் அன்னை, “குழந்தையிடம் பேசினால்தானே அதற்கு மூளை வளரும்?” என்று புத்தி புகட்டினாள்.

    அன்று பேச ஆரம்பித்தவள்தான் நான்.

    பேசாமல் நம் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தோமானால் குழந்தையும் பேசாது உட்கார்ந்திருக்கும். அதற்குப் பேசத் தெரியவில்லையே என்று காத்திருக்கலாமா? மிருகங்களுக்குக்கூட நாம் பேசுவது புரிகிறதே!

    அக்கம்பக்கத்தில் தமிழர்கள் யாருமில்லை என்ற நிலையில், சாயந்திர வேளைகளில் உலவப் போகும்போது, ‘இது புல். இது மரம்,’ என்று பார்ப்பதையெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பேன். கூடவே அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு. இரண்டு வயதிலிருந்து, புத்தகங்கள் கைகொடுத்தன.

    அவளது இருமொழி ‘பாண்டித்தியம்’ இப்படி வெளிவந்தது: `ஒக்காச்சி, சித்தம்’ (Sit down)!

    ஏதாவது காரியமாக நான் வெளியே போனால், வீடுதிரும்பியதும் அதைப்பற்றி குழந்தைகளிடம் விவரமாகச் சொல்வது வழக்கம். அவர்கள் பெரியவர்களானதும், தம்மையும் அறியாது அதே வழக்கத்தைப் பின்பற்றினார்கள். அதனால், ‘நமக்குத் தெரியாமல் என்ன செய்கிறார்களோ!’ என்ற கவலை எழுந்ததில்லை.

    தாயின் திட்டு

    ஒரு பெண் தானே தாய்மை அடைந்தபின்னர், ‘நம்மை வளர்க்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்!’ என்ற ஞானோதயம் ஏற்படுகிறது. அதன் விளைவாக, அம்மாவிடம் வாங்கிய வசவு, அதன் பாதிப்பு, கணிசமாகக் குறையும்.

    ‘பெண்’ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மகளைச் சிறுவயதிலேயே நம்ப வைத்துவிடுவாள் பெற்றவள். தாயானபின்னர், அவளும் அதையே தம் மகளுக்குப் போதிப்பாள்.

    என் தலைமுறையிலிருந்த பிற பெண்களைப்போல் நான் இல்லை என்ற கவலை என் அம்மாவுக்கு. ஓயாமல் கண்டிப்பாள். அதனால் தந்தையிடம் நெருங்கிப்போனேன். தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட போட்டியில் இன்னும் நிறைய வசவு கிடைக்க, ‘திட்டு வாங்கறதுக்குன்னே பிறந்த ஜன்மம்!’ என்ற கேலிக்கு ஆளானேன்.

    இப்போது பெண்கள் என்னைக் கேட்கிறார்கள், “ஒங்களைமாதிரி எப்படி ஆகிறது?” என்று.

    அதற்கு நான் நேரிடையாகப் பதிலளிக்காது, “உங்களை, ‘என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணு!’ என்று சொல்லி வளர்த்திருப்பார்கள்,” என்றேன்.

    அதிர்ச்சியுடன், “ஆமாம். இல்லே?” என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்கிறார்கள்.

    இணக்கமான உறவு

    கதை 1

    எட்டு வயதிலேயே, “யார் உன்னுடன் இவ்வளவு பேசுவது?” என்று ஆசிரியை கேட்க, என் இளைய மகள் சித்ரா பூரிப்புடன், “எங்கம்மா!” என்றிருக்கிறாள்.

    அவளுக்குப் பன்னிரண்டு வயதானபோது, வகுப்பில் எல்லோர் முன்னிலும் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் கூறவேண்டும் என்ற வீட்டுப்பாடம் அளிக்கப்பட்டிருந்தது.

    மகள் என் உதவியை நாடினாள். “பிறர் ஏதாவது சொல்லும்போது, எல்லாரும், ‘ஆமாம், ஆமாம்,’ என்றுவிடுகிறார்கள். நீ மட்டும் அப்படிச் செய்வதில்லை. ஏம்மா?”

    நான் மெல்லச் சிரித்து, “என்னைப்போல் இருப்பவர்களை NON-CONFORMIST என்பார்கள். தவறு என்று எனக்குத் தோன்றினால், பிறர் கூறுவதையோ, செய்வதையோ நான் ஏற்பதில்லை”.

    மறுநாள், “I want to be a non-conformist like my mother,” என்றவள் கூற, ஆசிரியை அயர்ந்துபோனாள்.

    கதை 2

    சித்ரா பன்னிரண்டாவது படிக்கும்போது, ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் படித்தார்கள்.

    ஒருமுறை, வகுப்பில் நுழைந்த இளம் ஆசிரியையிடம், “பாடம் நடத்தவேண்டாம். இன்று உங்களுக்கு களைப்பாக இருக்குமே!” என்று ஒரு பையன் கிண்டல் செய்ய, “உங்களுக்கென்ன அதைப்பற்றி?” என்று அவள் கோபிக்க, எல்லாரும் சிரித்தார்கள்.

    என் மகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

    “நீ சின்னப்பெண். இதெல்லாம் உனக்குப் புரியாது,” என்று நமட்டுச்சிரிப்புடன் அவர்கள் விளக்க மறுத்துவிட்டார்கள்.

    “சொல்லாவிட்டால் போங்கள். என் அம்மாவைக் கேட்டுக்கொள்கிறேன். நான் எது கேட்டாலும் பதில் சொல்வாள்,” என்று வீறாப்பாகச் சொல்லிவிட்டு, என்னிடம் கேட்டாள்.

    இம்மாதிரி பரஸ்பர நம்பிக்கை தாய்க்கும் மகளுக்கும் இருந்தால், எத்தனை வயதானாலும் நெருங்கிய தோழிகளாகவே இருப்பார்கள்.

    எப்படிப்பட்ட கேள்வியானாலும், அதைக் கேட்கும் சிறுவர்கள் அதன் பதிலுக்குத் தயாராகிவிடுகிறார்கள். ‘இது என்ன வயதுக்குமீறிய கேள்வி!’ என்று கோபிக்காவிட்டால், அவர்களுடைய அறிவு விசாலமடையும்.

    ‘வியாழக்கிழமை மனைவியுடன் உடலுறவு கொண்டால் ஏதோ நன்மை விளையும் என்ற நம்பிக்கை சில இனத்தவர்களுக்கு,’ என்று என் சக ஆசிரியர் கூறியிருக்கிறார். அந்த வழக்கம் தெரிந்துதான் மறுநாள் மாணவர்கள் கேலி செய்திருக்கிறார்கள்.

    கதை 3

    இருபது வயதானபோது, அவளைவிட மூத்த பெண்கள் கூறிய அறிவுரை: “உன் அம்மா, ‘சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கொள்,’ என்று வற்புறுத்தி இருப்பார்கள். ஆனால், முப்பது வயதுக்குமேல் பண்ணிக்கொள்”.

    அவள் உடனே, “எங்கம்மா அப்படிச் சொன்னதே கிடையாது,” என்று எதிர்த்தாளாம்.

    தன்னைத்தானே புரிந்துகொள்ளாத ஒரு பெண் இளம் வயதில் கல்யாணமானால், கணவனுக்குப் பயந்து நடக்கிறாள். கணவன் அருகில் இருக்கும்போது, பிறரிடம் பேசக்கூடத் தயங்குகிறாள் –- அவளுக்கென ஒரு தனிப்பட்ட கருத்து இருப்பதை அவன் விரும்பமாட்டான் என்ற அச்சத்தில்.

    கதை

    தாய்க்கும் மகளுக்கும் இடையே போட்டி, பொறாமை விளைவதும் உண்டு.

    பள்ளிப்படிப்பு முடிந்ததுமே தெரிந்தவர்கள்மூலம் மாதுரி நல்ல வேலையில் அமர்ந்தாள். கணிசமான சம்பளம்.

    அதிகப் படிப்போ, சுயசம்பாத்தியமோ இல்லாத அவளுடைய தாய், ‘நாளை மகள் தன்னை மதிப்பாளா?’ என்று கலக்கமடைந்தாள்.

    “வேலைக்குப் போய்விட்டு வந்தால் ஓய்ந்துவிடுகிறாய். வேலையை விட்டுவிடு.  நீ மேலே படி,” என்று ஆசைகாட்டினாள், போலிப்பரிவுடன்.

    மேற்படிப்புக்குப் பணமில்லை என்பதை இருவருமே அப்போது யோசிக்கவில்லை.

    உடன் வேலை செய்தவர்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேளாது, மாதுரி வேலையை விட்டாள்.

    தன் தவறு புரிந்தபின், திரும்பவும் போய் வேலை கேட்க வெட்கம். தாயின்மேல் ஏற்பட்ட வருத்தத்தை வெளியில் காட்டிக்கொள்ளவும் முடியவில்லை.

    தான் பெற்ற மகள் அல்லது தன்னிடம் பயின்ற மாணவி தன்னைவிட சிறந்தால் பெருமைப்படாத தாயோ, ஆசிரியையோ எதில் சேர்த்தி?

    Share
  • உள்ளம் என்ன செய்யும்?

    உள்ளம் என்ன செய்யும்?

    சுதா வேதம்

    போலிப் பூச்சைக் கண்டே மயங்கும்;-இது
    பொய்யை மெய்யாய் நம்பும்!
    கோலி அளவுக் கவலை விதையையும்
    கோடி மரம்போல் நெம்பும்!!

    தோலில் துளைக்கும் ஊசியைப் போலத்
    தோல்வியைப் பெரிதாய் விரிக்கும்;
    சோலி இல்லா வம்புப் பேச்சையும்
    சொர்க்கம் மாதிரி திரிக்கும்;

    பிறகு? பிறகு? என்றே திரியும்;
    பிடிவா தத்தில் துடிக்கும்;
    இறகு போலே மென்மை கொள்வாய்
    என்றால் நன்றாய் நடிக்கும்!

    உயரப் பறக்கும் பறவை போலே
    உற்சாக வானில் தொடங்கும்;
    துயரமும் சோர்வும் வந்தால் புழுப்போல்
    துவண்டே மூலையில் முடங்கும்!

    ஆசையாம் தூண்டிலில் மீன்போல் சிக்கி
    அதற்கோர் இலக்கணம் சொல்லும்;
    மீசை நரைத்துத் தளர்ந்த போதிலும்
    மிகவும் மையல் கொள்ளும்;

    சிறகுகள் இன்றியும் எப்படி என்மனம்
    சிந்தனை வானில் பறக்கிறது?
    முருகா! உன்போல் எத்தனை அசுரரை
    முழுதாய் தினம்நான் அழிக்கிறது?

    Share
  • நாலடியார் நயம் – 23

    நாலடியார் நயம் – 23

    நாங்குநேரி வாசஸ்ரீ

    23. நட்பிற் பிழை பொறுத்தல்

    பாடல் 221

    நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
    அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
    நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
    புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

    நெல்லுக்கும் உமி உண்டு
    நீருக்கும் நுரை உண்டு
    பூவிற்கும் புற இதழ் உண்டு
    பற்றோடு நாம் நல்லவர் எனக்
    கண்டு விரும்பி நட்பு கொண்டவர்
    கெட்டவராயிருப்பினும் அதைத் தம்
    மனதுள்ளே இருத்தி வெளிக்காட்டாது
    மதித்துப் பழக வேண்டும்.

    பாடல் 222

    செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்
    மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
    வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
    தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.

    அடைக்குந்தோறும் கரையினை
    உடைத்துக்கொண்டேயிருப்பினும்
    நல்நீருடன் சினம் பாராட்டாது
    நன்கு அடைத்துக் கட்டுதல்போல்
    விரும்பிக் கொண்ட நண்பர்
    வெறுக்கத்தக்க செயல் செய்யினும்
    பொறுத்துப் போவர் சான்றோர்.

    பாடல் 223

    இறப்பவே தீய செயினும் தம் நட்டார்
    பொறுத்தல் தகுவதொன்று அன்றோ – நிறக்கோங்கு
    உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட!
    ஒருவர் பொறைஇருவர் நட்பு.

    பொன்னிற கோங்க மலரில்
    பாங்காய் வண்டுகள் ஆரவாரிக்கும்
    உயர்மலைகளுடை நாட்டின் அரசனே!
    ஒருவரின்பொறுமையினால்
    இருவரின் நட்புவளருமாதலால்
    தம் நண்பர் மிகுதியாய்த்
    தீங்குகள் செய்யினும் பொறுத்தல்
    தகுதியான செயல் அன்றோ?

    பாடல் 224

    மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
    கடுவிசை நாவாய் கரையலைக்கும் சேர்ப்ப!
    விடுதற்கு அரியார் இயல்பிலரேல் நெஞ்சம்
    சுடுதற்கு மூட்டிய தீ.

    மடிந்துவிழும் அலைகள் குவித்த
    மின்னும் ஒளி முத்துக்களை
    மிகுந்த வேகமுள்ள கப்பல்கள்
    மீட்டுக் கரையிலே அலையச்செய்யும்
    கடற்கரையுடை அரசனே!
    கைவிடற்கரிய நண்பர்கள்
    நற்குணம் இல்லாதவராயின்
    நம் நெஞ்சைச் சுடுவதற்காக
    நம்மாலேயே மூட்டப்பட்ட
    நெருப்பு போன்றவராவர்.

    பாடல் 225

    இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
    பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; – பொன்னொடு
    நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
    இல்லத்தில் ஆக்குத லால்.

    பொன்னோடு கூட நல்ல வீட்டைப்
    பொசுக்கும் நெருப்பையும் தேவை கருதி
    நாளும் வீட்டில் உண்டாக்குதல்போல்
    நடுநடுவே துன்பம் செய்யினும்
    கைவிடற்கரிய நண்பர்களைக்
    காத்து பொன்போல் உயர்வாய்க்
    கருதல் வேண்டும்.

    பாடல் 226

    இன்னா செயினும் விடுதற்கு அரியாரைத்
    துன்னாத் துறத்தல் தகுவதோ – துன்னருஞ்சீர்
    விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ
    கண்குத்திற்று என்றுதம் கை.

    அடைதற்கரிய வானத்தைக் குத்தும்
    அளவு நீண்ட மூங்கில்கள் கொண்ட
    மலைக்கு உரியவனே!
    மாளாத் துன்பம் செய்யினும்
    விடக்கூடாத நண்பர்களை
    விட்டுவிடல் தகுந்ததோ?
    கண்ணைக் குத்திற்று என
    கைவிரலை வெட்டுவார்களோ?

    பாடல் 227

    இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
    கலந்து பழிகாணார் சான்றோர்; – கலந்தபின்
    தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
    தாமும் அவரின் கடை.

    விளங்கும் நீர்நிறை குளிர்கரையுடை
    வேந்தனே! தீமையே செய்யினும்
    நண்பரிடத்தே குற்றம் காணார் பெரியோர்
    நட்புகொண்டபின் குற்றத்தைத்
    தெளிவாக எடுத்தியம்பும்
    திடமான அறிவற்றோர்
    தீமைசெய்யும் நண்பரைவிடத்
    தாழ்ந்தவர் ஆவர்.

    பாடல் 228

    ஏதிலார் செய்தது இறப்பவே தீதெனினும்
    நோதக்கது என்னுண்டாம் நோக்குங்கால்! – காதல்
    கழுமியார் செய்த கறங்கருவி நாட!
    விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.

    ஆர்ப்பரித்தொலிக்கும் அருவிகளுடை நாட்டின்
    அரசனே! அயலார் செய்த தீங்கு
    அளவிற் கொடியதாயினும் விதியால்
    விளைந்தது என்றெண்ணுங்கால்
    வெறுப்பதற்கு என்ன உண்டு?
    மனதில் அன்பு மிக்கவர் புரிதீமை
    மனதுள் நின்று சிறந்ததாகிவிடும்.

    பாடல் 229

    தமரென்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத்
    தமரன்மை தாமறிந்தார் ஆயின், – அவரைத்
    தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
    தம்முள் அடக்கிக் கொளல்.

    தம் உறவினராய்த் தாம் ஏற்றுக்கொண்டவர்
    தம் உறவிற்குப் பொருந்தாமை செய்ததைத்
    தான் அறிந்துகொண்டாராயின் அவரைத்
    தம்மவரினும் மேலாகக் கொண்டு அத்
    தன்மையைத் தம் மனதில் அடக்கிக் கொள்க!

    பாடல் 230

    குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
    நட்டபின் நாடித் திரிவேனேல் – நட்டான்
    மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க
    அறைகடல்சூழ் வையம் நக.

    நண்பனாய்க் கொண்ட பின் ஒருவனின்
    நெறியற்ற செயலையும் மற்ற குணங்களையும்
    ஆராய்ந்து அலைவேனாயின் நண்பனுக்கு
    அல்லல் விளைக்கும் இரகசியத்தைக் காக்காமல்
    வெளிவிட்ட பாவி அடையும் நரகத்திற்கு ஒலிக்கும்
    கடல்சூழ் உலகத்தார் இகழ நான் போகக்கடவேன்.

    Share
  • வாழ நினைப்போர் வாழட்டும்

    வாழ நினைப்போர் வாழட்டும்

    சி. ஜெயபாரதன், கனடா

    கொடிது, கொடிது
    தனிமை கொடியது
    ஏகாந்தம் இனியது  முனிவருக்கு
    பத்துக் கட்டளை
    மோசசுக்கு!
    பைபிள் படைத்த
    ஏசுவுக்கு,
    மனை மாதைக்
    கைவிட்ட
    போதி மரப் புத்தருக்கு.
    ஆண்பெண்
    புறக்கணிப்பு மிக, மிகக்
    கொடியது
    அதிலும் உச்சம்
    முதுமையில்  துணை இழப்பு.

    நீயும் தனி,
    நானும் தனி,
    அயோத்தியை ஆண்ட
    ராமனும் தனி,
    ராவணனைக் கொன்று மீட்ட
    சீதையும் தனி !
    வாழ நினைத்தாள்
    வைதேகி !
    வனத்தில் விடப் பட்டாள்.
    நினைத்துப் பார்த்தால்,
    மண்ணில்
    அனைவரும் தனி.
    அற்று விழும் கிளைகளை
    ஒட்டு மாங்கனி
    ஆக்கு.
    வையத்தில் வாழ நினைக்கும்
    இணக்க முள்ள
    ஆண் பெண் முதியவரை
    பிணைத்துவிடு இனி.
    தென்றலில் ஆடும் கொடிகள்
    ஒன்றின் மீது ஒன்று
    படர்ந்து கொள்ளட்டும்.
    சில நாட்கள்.

    Share
  • தொழிலாளர் துறைக்குப் புகார் அனுப்புவது எப்படி? – A Tutorial on sending complaints to Labour Department

    தொழிலாளர் துறைக்குப் புகார் அனுப்புவது எப்படி? – A Tutorial on sending complaints to Labour Department

    அண்ணாகண்ணன்

    A Tutorial on sending complaints to Tamilnadu Labour Department.

    பணி நீக்கமா? ஊதியக் குறைப்பா? விடுப்பு மறுப்பா? கூடுதல் பணிச் சுமையா? வருகைப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்கவில்லையா? பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலா? வருங்கால வைப்புநிதி, காப்பீடு இல்லையா? பணிப் பாதுகாப்பை வழங்கவில்லையா? கையூட்டுச் சிக்கலா? உங்கள் நிறுவனத்தில் உங்களுக்கு எந்தச் சிக்கல் ஏற்பட்டாலும் தொழிலாளர் துறைக்குப் புகார் அனுப்பலாம். எந்தத் தளத்தில், எந்தப் பக்கத்தில், படிவத்தில், எவ்வாறு புகார் அனுப்புவது என்பதை இந்தப் பதிவில் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 260

    படக்கவிதைப் போட்டி – 260

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (31.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அழகிய ஆட்டுக்குட்டிகளை தம் ஒளிப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பவர் திருமிகு நித்தி ஆனந்த். இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமிகு ராமலக்ஷ்மி. இவர்கள் இருவரும் என் நன்றிக்கு உரியவர்கள்!

    ஆட்டுக்குட்டிகளின் இளங்கழுத்தை இறுக்கி வதைக்கும் கயிற்றைக் காண்கையில் நம் மனம் பதைக்கின்றது. இவற்றின் எதிர்காலம் குறித்த அச்சத்தை அது விதைக்கின்றது. இலையும் தழையும் கிடைத்தாலும் தலைக்கு ஆபத்து எப்போது வருமோ எனும் அச்சத்தோடு வாழும் நிலையில்  உயிர்களுக்கு நிறைவேது? நிம்மதியேது?

    இந்தப் படம் நம் கவிஞர்களின் உளத்துள் எத்தகைய எண்ணங்களைக் கிளர்ந்தெழச் செய்திருக்கின்றது என்பதை அவர்கள் கவிதைவழி அளந்தறிவோம் வாருங்கள்!

    *****

    ”ஆட்டை வளர்த்து அதன் உயிரைப் போக்குகின்ற கேட்டைச் செய்யும் மனிதரை யார் கேள்வி கேட்பது?” என்று ஆதங்கத்தோடு வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஆட்டுக் குட்டிகளாய்…

    ஆட்டை வளர்ப்பான் அறுத்திடவே
    அதிக விலைக்கு விற்றிடவே,
    கேட்டைத் தந்திடும் இச்செயலைக்
    கேட்க ஆளிலை அவனியிலே,
    ஆட்டுக் குட்டிகள் அறியாமல்
    அவனை நம்பி யிருக்கின்றன,
    காட்டும் இலைகளில் மயங்கிடுதல்
    காணலா மின்று மனிதரிலே…!

    *****

    ”மானுடரே! கறுப்பு ஆடு, முள் குத்திற்று என்று தம் தவற்றுக்கெல்லாம் பிறர்மேல் களங்கம் சுமத்தும் கலையை எங்குக் கற்றீர்? எம் இனத்தின்மீது சுமத்திய வீண்பழியை ஒழிப்பீர்!” என்று கலகக்குரல் எழுப்பும் ஆட்டைத் தன் முதல் கவிதையில் காட்டுகின்ற திரு. சீ. காந்திமதிநாதன், தம்முடைய மற்றொரு கவிதையில், ”மனிதர்களே! தீநுண்மித் தொற்றுநோய் முடியும் வரையிலாவது என் ஊன்மீது கொண்ட பற்றினை ஒழிக்கலாகாதா? என்று பரிதாபமாய்க் கேட்கும் ஆட்டின் குரலைப் பதிவுசெய்திருக்கின்றார்.

    கறுப்பு நிற ஆட்டின் முறையீடு:
    இள ஆடும் பயம் அறியாது
    நல விரும்பியாக நீயிரு
    குலம் செழிக்க வாழ்த்துவேன்
    பலம் பெற்ற காளிதாசன் பாட்டால்

    ஆட்டை மேய்த்தவனின் பாட்டை
    நாட்டை ஆண்டவனின் கோட்டை
    கோட்டை விடாது கொண்டதால்
    பாட்டுடைக் கவியோ நாட்டுடைமை

    ஆடென எள்ளி நகை ஆடாதே – நாங்கள்
    நாடாண்ட பரம்பரை சிந்தி!

    வணிகத்தில் புகுந்தது
    ஆங்கிலேயக் கறுப்பு ஆடு
    கணித சாஸ்திரக் கலாசாரம்
    கண்டதோ கறுப்பு ஏடு!

    மனிதநேய பாரத
    பலமே ஆனது கேடு!

    தனித்தனி பிரித்தாளும் சூழ்ச்சி
    பாரதத்தில் வெள்ளையன் ஆட்சி!

    கோட்டையைக் கோட்டைவிட்ட
    ஒற்றுமை யின்மைக்கு
    வைத்துக் கொண்டதோ
    கறுப்பு ஆடென
    என் இனப் பெயர்
    தீராத பழியப்பா

    இனத்தை அழிப்பது பாவம்
    இனத்தைப் பழிப்பதோ மகாபாவம்!

    வாயில்லா ஜீவன் என்பதால்
    வழக்காட இயலவில்லை

    உலக மனித உரிமைக்
    கழகம் இருந்தும்
    கலகம் செய்யும்
    இனப் படுகொலையைத்
    தடுக்க முடியலையே!

    களங்கம் சுமத்தும்
    கலை எங்குக் கற்றீர்?

    முள் குத்திற்று
    கள்ள ரயில்
    கல் தடுக்கிற்று
    கறுப்பு பணம்
    கறுப்பு ஆடு

    மானிடா என்று நீ
    உன்னை உன்னுள்
    தேட முயலுகிறாயோ
    அன்று தான்
    வீண்பழி சுமத்த மாட்டாய்!

    தன் பழி தாங்கிட முடியும்
    பலிகடா வாகிய என்னால்
    என் இனப்பழி முடியலை
    அதனாலே இந்த முறையீடு

    *****

    கருணை மனு….

    தேசப் பிதாவிற்குப் பால் கொடுத்தேன்
    உனக்கோ தோள் கொடுக்கிறேன்
    என் தோல் நீ உரிக்கலாமா?

    உன் நலன் என் நலன்
    உன்றனக்குத் தெரியுமா?

    நெல்லை என்றால் அல்வா
    தில்லை என்றால் நடராசர்
    முல்லை என்றால் பாரி
    எல்லை என்றால் கண்காணிப்பு

    சைவம் என்றால் காய்கறி
    அசைவம் என்றால் நானா?

    என் கொழுப்பு மனித தேகத்தில்
    அதிக நாட்கள் உறையுமாமே!
    அதிக உயிர்ப்பலி வாங்குகிற
    கொவைட்19 தீநுண்மி நோய்த்தொற்று
    அதிக பட்சம் என் ஆயுளோ
    மூவாறு ஆண்டுகள் அறிவாயோ?
    மூவிரு திங்களாவது தின்னாது
    வாயது கையது உன்னைக் கட்டாது
    கயிறது என் கழுத்தில் பாவமே

    என் படைப்பு உனதான பின்பு
    தின்பதை நிறுத்து என் ஊன்
    தீநுண்மி நோய்த்தொற்று
    மடியும் வரையில்…

    *****

    ”தழைகொடுத்து ஆட்டின் தலைகொய்யும் வஞ்சக எசமானர் போன்றோரே அன்பளிப்புத் தந்து அப்பாவி வாக்காளனை ஏமாற்றி ஓட்டு வாங்கும் அரசியலாளரும்” எனும் நடப்பியலைத் தம் படக்கவிதையில் பொருத்திக் காட்டுகின்றார் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்.

    வாக்காளனுக்கு?

    அன்போடு இரண்டு
    ஆடுகள் அளவளாவின!

    ஓராடு சொல்லிற்று,
    போராடும் வாழ்க்கை
    பிற உயிர்க்கெல்லாம்
    நமக்கோ வேளாவேளை
    நற்றளிர்கள், பசும்புற்கள்
    நாவூறும் இலை தழைகள்!

    நமது எசமான் இனி
    நாம் தொழும் இறை
    நினைவில் நீ கொள்
    நம்முயிர் பிரியும் வரை!

    அடுத்திருந்த ஆடு
    ஆதங்கத்தோடு
    பிதற்றிய ஆட்டின்
    பேதைச் செவியில்
    உணரும் வண்ணம்
    உரக்கச் சொன்னது!

    இரையும் புல்லும்
    இனிதாய்க் கொடுத்து
    வளர்ந்த பின்பு
    வாளால் கொல்வர்
    கழுத்தில் இருக்கும்
    கயிறே சாட்சி!

    சிரத்தைக் கொய்யும்
    சிந்தை கொண்டே
    ருசிக்கத் தருவர்
    புசிக்கப் பலவும்!

    உணர்ந்த ஆடு
    உரைத்தது மெல்ல
    உலகில் யாரும்
    உளரோ நமைப்போல்?

    ஏளனத்தோடு எள்ளி
    ஏனில்லை உலகில்
    இரண்டாம் ஆடு
    இரைந்து சொன்னது!

    அரசியல்வாதியிடம்
    அன்பளிப்புப்பணம்
    பெற்று வாக்களிக்கும்
    பேதை வாக்காளனும்
    நம்மினமே, நன்றாக
    நீ உணர்வாய்.

    வரையாட்டிற்குப் புரிந்தது
    வாக்காளனுக்கு?

    *****
    ”குளிர் காலத்தில் கம்பளியாகிறாய்; கொண்டாட்டங்களில் விருந்தாகின்றாய்” என்று ஆட்டின் அவலநிலைக்கு வருந்தும் திருமிகு சுதா மாதவன், கர்த்தர் உம்மை இரட்சிப்பார் என்று ஆடுகளுக்கு நம்பிக்கையூட்டவும் தவறவில்லை.

    ஆகாரத்தில் நீங்கள் ஓர் அங்கம்
    அசைவப் பிரியர்களுக்கு

    மிரள்கின்ற உன் பார்வை
    இப்படியானோமே என்றா?

    குளிர்காலத்தில் கம்பளியாகிறாய்
    கொண்டாட்டங்களில் விருந்தாகிறாய்

    சாணத்தை உரமாக்கினாய்
    பாலினைச் சத்தாக்கினாய்

    கன்னங்களில் அசைப்போட்டு
    மந்தையாய்ச் செல்லும் கூட்டம்

    வரிசையாய் அழகாய் செல்லும்
    உங்கள் ஆட்டு மந்தைக் கூட்டம்

    கர்த்தரின் கைகளில் நீங்களே…
    காத்து ரட்சிப்பர் அவரே
    நீர் தாழ்ச்சியடையீர்!!

    *****

    ”பலிபீடத்தில் நின்றுகொண்டு பச்சைத் தழையை இச்சையோடு உண்டுகொண்டிருக்கும் நாம் வரவிருக்கும் ஆபத்தை உணரவில்லை” என்று ஆடுகளுக்கும் ஆட்களுக்கும் சேர்த்து இரட்டுறமொழிகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்!

    பலியாடுகள்

    உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை
    பிழைப்புக்கேற்ற தொழிலும் இல்லை
    களைத்து ஒதுங்கக் குடிலும் இல்லை
    வறுமையைத் தீர்க்க வழியும் இல்லை
    போதை தீர்ந்த நேரம் இல்லை
    பாதை காணத் திறனும் இல்லை
    நாளை குறித்து திட்டம் இல்லை
    பிரரைக் குறைசொல்லி வாழ்ந்துவிட்டோம்

    ஐந்தாண்டுக்கு ஒருமுறை
    அதிகாரம் மாற்ற வாய்ப்பிருந்தும் -அதை
    ஆயிரம் ஐநூறுக்கு விற்றுவிட்டு
    எதிர்காலம் தொலைத்து விட்டோம்…

    பலிபீடத்தில் நின்றுகொண்டு
    பச்சைத்தழை இலைகள் உண்டு
    வரும் கொடுமை உணராத
    பலியாட்டு மந்தைகள் நாம்…

    *****

    ஆட்டுக்குட்டிகளை வைத்து நாட்டுமக்களுக்கு(ம்) நல்லறிவூட்டியிருக்கின்றார்கள் சிந்தனை வளம்செறிந்த வல்லமைக் கவிஞர்கள்; பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து வருகின்றது…

    தன்னம்பிக்கை!

    அம்மாவைக் காணோமே தம்பி – அட
    அதற்காயேன் அழவேண்டும் வீணாக வெம்பி?
    எம்மா துயர் வந்த போதும் – துணிந்(து)
    இருப்போம் நாம் எப்போதும் எம்மையே நம்பி!

    கண்ணாகக் காத்திட்டாள் அம்மை – நாம்
    கவலைகள் இல்லாமல் வாழ்ந்தது உண்மை!
    எண்ணாமல் தன் நெஞ்சில் எம்மை – அவள்
    எங்கு போய் மாண்டாளோ! எவர் செய்த தீமை?

    ஆயிரம் துயர் வந்த போதும் – நாம்
    அழுவதாற் பயனில்லை கலங்காதே தம்பி!
    தாயவள் பாலினி இல்லை – நாம்
    தழைகுழை யுண்டுதான் வாழணும் தம்பி!

    காய்கின்ற வயிற்றுடன் அன்னை – வந்து
    கட்டியணைத்துப் பால் தருவாளென்றெண்ணி
    சேய்கள் நாம் இனிவாழலாமோ – இல்லை
    தேடுவோம் உணவினை முயற்சிகள் பண்ணி!

    கயிற்றினால் கட்டி வைத்துள்ளார் – நாம்
    கட்டினை அறுத்துவிட் டோடுவோம் தம்பி
    வயிற்றிலே பசியோடு வாடி – நாம்
    வாடவோ வா உடன் சேர்ந்தறுத் தெறிவோம்!

    துள்ளித் திமிறிடுவோம்நாம் – எங்கள்
    சுதந்திரம் காணத் துடித்தெழுவோம் நாம்
    அள்ளி அணைத்தவெம் அன்னை – தன்னை
    அறுத்தபா தகர்தனை நம்பிடலாமோ?

    ”அன்னை வந்து பால்தருவாளென்று காய்கின்ற வயிற்றுடன் சேய்கள் நாம் இனியும் வாழலாகாது. நாமே முயன்று உணவினைத் தேடுவோம்; அதற்கு முதலில் அன்னையை அறுத்துக் கொலைசெய்த பாதகரிடமிருந்து தப்பிச் செல்வோம்” என்று ஆட்டுக்குட்டிகள் தீட்டும் திட்டத்தைத் தம் பாடலில் அழகாய் வடித்துக் காட்டியிருக்கும் திரு. சித்தி கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • TN ePass பெறுவது எப்படி? – How to get TN ePass? – A tutorial

    TN ePass பெறுவது எப்படி? – How to get TN ePass? – A tutorial

    அண்ணாகண்ணன்

    மாவட்டம் கடந்தும், மாநிலம் கடந்தும் செல்ல வேண்டிய தேவையிருப்போர், கட்டாயமாக தமிழகப் பயண அனுமதிச் சீட்டு (TN ePass) பெறவேண்டும். இதைப் பெறும் வழி தெரியாமல் பலரும் அல்லாடி வருகிறார்கள். இதைப் பைசா செலவில்லாமல், இணையம் வழியாக விண்ணப்பித்துப் பெறுவது எப்படி என்று இந்தப் பதிவில் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி – வ. ஐ. ச. ஜெயபாலன்

    தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி – வ. ஐ. ச. ஜெயபாலன்

    கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன்

    முன்னணி மலையக மக்கள் தலைவரும் என் நண்பருமான மாண்புமிகு ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தனது 56ஆவது பிறந்த தினத்துக்கு மூன்றே மூன்று நாட்களின் முன்னம் எதிர்பாராத மரணத்தைத் தழுவிய சேதி, அதிர்ச்சி அளிக்கிறது. ஆழ்ந்த கவலையுடன் அஞ்சலி செய்கிறேன்,

    நண்பருக்குக் கண்ணீரும் அஞ்சலிகளும்

    ஒட்டுமொத்த மலையகத் தமிழர்களதும் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களதும் கனவான மலையக மக்களுக்குச் சம்பள உயர்வு, வீடு, நிலம், கிராமிய வாழ்வு என்கிற அடிப்படை உரிமைகள் கிட்ட, மலையகத் தமிழர் கட்சிகள் அனைத்தும் ஓர் ஐக்கிய முன்னணியின்கீழ் ஒன்றுபட வேண்டும், அதுவே நாம் அமரர் ஆறுமுகம் தொண்டமானுக்கு செய்யக்கூடிய அஞ்சலியாகும்.

    1972இல் தந்தை செல்வநாயகத்துடன் சேர்ந்து தமிழர் கூட்டமைப்பை உருவாக்கிய மலையக மக்கள் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனான அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களை நான் முதன்முதலில் நோர்வேயில் சந்தித்தேன். ஒஸ்லோவில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பான ஆய்வரங்கம் ஒன்றில் அமரரைச் சந்தித்த அன்றே அரசியல் கருத்து முரண்பாடுகளைத் தாண்டிய நல்லுறவு நமக்குள் உருவானது. அவர் என்மீது விமர்சன ரீதியான அன்பு வைத்திருந்தார். ஒஸ்லோவில் தனிப்பட்ட அளவளாவலின்போது மலையகக் கட்சித் தலைமைகள் மலையக மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை வென்றெடுக்குமுகமாக ஐக்கிய முன்னணிக்குள் வரவேண்டும் என்கிற என் கருத்தை அக்கறையுடன் செவிமடுத்தார்.

    கடைசி தடவையாக நான் இலங்கை வந்தபோது ரேணுகா ஹோட்டல் உணவகத்தில் தற்செயலாக அமரரைச் சந்திக்க நேர்ந்தது. மகிழ்ச்சியுடன் என்னை அழைத்தார். தன் பணிகளை மறந்து என்னுடன் நெடுநேரம் அன்பாகப் பேசினார். அலுவலகம் வந்து தன்னைச் சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். தவறிவிட்டேன். அதன்பின் நாம் சந்தித்தது குறைவு என்றாலும் நமக்குள் பரஸ்பரம் விமர்சனரீயான நட்பு வளர்ந்து வந்தது. அமரர் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் நினைவை போற்றுவோம்.

    இலங்கை அரசு வாய்ச்சவடால் அஞ்சலிகளை விடுத்து, அமரர் தொண்டமானின் நீண்டகாலக் கோரிக்கையான மலையக மக்களுக்கு 1000 சம்பளம், நிலம், வீடு, கிராமம் என்கிற கனவை நனவாக்க முன்வர வேண்டும். கொரோனா சிக்கலால், அவரது ஈமைக் கிரியைகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஈழத் தமிழ்க் கலைஞர்கள் சார்பாக ஆழ்ந்த கவலையுடன் என் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.

    Share
  • ஆசைபற்றி அறையலுற்றேன்

    ஆசைபற்றி அறையலுற்றேன்

    ச. சுப்பிரமணியன்

    முன்னுரை

    ‘வல்லமையில்’ பல கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. கடந்த இரண்டு திங்களில் வல்லமை மின்னிதழில் அதற்குமுன் வெளிவந்த பெரும்பாலும் அனைத்துக் கட்டுரைகளையும் படித்து முடித்த நிலையில் இந்தக் கட்டுரையை எழுதியே ஆக வேண்டும என்ற நிலை எனக்கு வந்தது. இந்தக்  கட்டுரையில் காணும் கருத்துகளை அருள்கூர்ந்து அறிவுரையாகக் கருதாமல், வழிகாட்டுதலாகக் கொண்டால் எனக்கு நிறைவு. எதிர்கால ஆய்வு சிறக்கவும் கூடும். அந்த வகையில் தமிழியல் ஆய்வுலகத்தின் இரங்கத்தக்க நிலையினைக் கருத்திற்கொண்டு ஆய்வு நெறிபற்றிய சில கருத்துகளைப் பணிவுடன்  முன்வைக்கிறேன்.

    கட்டுரைகள் எழுதப்படுவதன் நோக்கம்

    தற்காலத் தமிழியல் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவோ ஆய்வுத் துறை சிறக்கவோ ஆராய்ச்சி உண்மைகளைத் தமிழுலகம் அறியாமல் போய்விடக் கூடாதே என்னும் ஆதங்கத்தின் காரணமாகவோ எழுதப்படுகின்றன என நம்பி ஏமாந்து போக வேண்டியதில்லை. முனைவர்ப் பட்ட ஆய்வாளர்களின் பல்கலைக்கழகத் தற்காலிக அனுமதி நிரந்தர அனுமதியாக (CONFIRMATION) மாறுவதற்கும், சுயநிதிக் கல்லூரிகளில் பணியில் சேர்ந்த சில ஆண்டுகளுக்குள் சில ஆய்வுத்தாள்களை வெளியிட்டாலேயே ஊதிய உயர்வு என்னும் நிலை இருப்பதனாலும் முன்னாய்வுச் சுருக்கத்தொடு இரண்டு ஆய்வுத்தாள்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் பல்கலைக்கழக விதியாலுமே பெரும்பாலும் கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

    ஆய்வுக் கட்டுரைகளின் நிலை

    ஆய்வேடு எப்படியோ அப்படித்தான் ஆய்வுக் கட்டுரைகளும். ஆய்வேடுகளில் ஆழமும் செறிவும் இல்லாமற் போனதற்கு ஆய்வுத் தலைப்புகளே தலையாய காரணம். ஆய்வுத் தலைப்புகள் ஆய்வாளரின் உள்ளந்தோய்ந்த பொருளிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்க வேண்டும். உணவு விடுதியின் ‘மெனு’வைப் பார்த்து உணவுக்குக் கட்டளையிடுவதைப்போல இன்றைய ஆய்வுத் தலைப்புகள் அமைந்து போயின. சில நேரங்களில் ‘பாம்போடு உடன் உறையும் வாழ்க்கையுமாக’ அது மாறிப் போகிறது. ஆய்வாளருக்குத் துணையாக இருக்க வேண்டிய நெறியாளர் பலர் அதனைத் தவிர்த்த மற்ற எலலா நிலையினராகவும் இருப்பதை நான் பல நேர்வுகளில் உணர்ந்திருக்கிறேன். நேரடிப் பாதிப்பிற்கும் உள்ளாகியிருக்கிறேன்.

    ஆய்வுப் பொருண்மையும் அத்வைத நிலையும்

    எது வேண்டுமானாலும் உங்கள் கட்டுரைப் பொருளாகலாம். ஆனால் அது உங்கள் உள்ளம் தோய்ந்ததாக  இருக்க வேண்டும். உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்க வேண்டும். எனக்குக் கம்பனும் திருவள்ளுவனும் தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை. கலைஞரும் கண்ணதாசனும் தான் தமிழை எனக்கு அறிமுகம் செய்தவர்கள். ஆனால் அந்த இருவரும் என் திறனாய்வுப் பார்வையில் அவ்வளவாகக் கவர்ச்சியை ஏற்படுத்தவில்லை. காரணம் அவர்களின் பெரும்பாலான படைப்புகளைப் படித்து நடந்த நான், சங்க இலக்கியத்தின் உச்சம் தொட்டதன் காரணமாக அங்கிருந்து இறங்க முடியாமல் போய்விட்டது. அதாவது கீழிருந்து தொடங்கிய பயணம் மேலே வந்து நிலை கொண்ட போது, தொட்டபெட்டாவிலிருந்து கோவையையும் மேடடுப்பாளையத்தையும் பார்ப்பதுபோல் இருந்தது. இது என் நிலை. எல்லோருக்கும் இது பொருந்தும் என்று சொல்ல முடியாது. இங்கே இது  எதற்காக? அவ்விரு வல்லாளர்களும் என் ஆசிரியர்களேயானாலும் என் உள்ளங்கவர்ந்த இலக்கியம் சங்க இலக்கியமே! தொல்காப்பியமே! திருக்குறளே! அவற்றைத் தவிர வேறு எதனையும் என் மனம் உள்வாங்காது. மேம்போக்காகத்தான் பார்க்கும். எனவே என் ஆய்வு அவற்றில் மட்டுந்தான் அமையும் என்பதைச் சுட்டுவதற்காக.  இப்போது புரிந்திருக்கும்!

    உள்ளமும் ஆய்வுப் பொருண்மையும்

    எனக்குச் சங்க  இலக்கியம் என்றால் உங்களுக்கு ஆனந்த விகடன் பிடித்தமானதாக அமையலாம். அவற்றின் இதழ்களைச் செரித்துக்கொண்டு அவற்றின் உள்ளடக்கங்களோடு உங்கள் இலக்கிய அத்வைதம் அமையலாம். எனவே உங்கள் ஆய்வு, விகடனைச் சார்ந்திருக்கலாம். நான் விகடனை ஆராய்வதற்கும் நீங்கள் ஆராய்வதற்கும் வேறுபாடு நிலவும். என்னால் ஆய்வு செய்யவே முடியாது. காரணம் எனக்கு அதில் பிடிப்பில்லை. ஈடுபாடில்லை. அதனால் உங்கள் மனம் எதனைப் பற்றியிருக்கிறதோ எதனைப் பற்றி எப்போதும் சிந்தித்கிறதோ அதனைப் பற்றித் தேவை கருதி ஆய்வு செய்யலாம். கட்டுரை எழுதலாம். அதுதான் முறை.

    சிலருக்குத் தொல்லியல் பிடித்திருக்கலாம். சிலருக்குக் கல்வெட்டு மட்டும் பிடித்திருக்கலாம். சிலருக்குத் தலபுராணங்கள் பிடித்திருக்கலாம். சிலரைப் பெருமாள் திருமொழி கவர்ந்திருக்கலாம். சிலருக்குப் பெரிய புராணத்தையும் வெள்ளக்கால் சுப்பிரமணியத்தையும் பிடித்திருக்கலாம். ஜெயகாந்தனைப் பிடித்திருக்கலாம். ஆண்டாள் பிரியதர்சினியைப் பிடித்திருக்கலாம். பிரபஞ்சனைப் பிடித்திருக்கலாம். இப்படிப் பிடித்து மனத்துள் படிந்து போன பொருள் பற்றிய ஆய்வே சிறக்கும். கருதுகோளுக்கான  வலிமையான தரவுகளும் கிட்டும். கட்டுரை செறிவாகும். கட்டுரையின் முதற்பத்தியைப் படித்த உடனேயே கட்டுரையாளருக்கும் கட்டுரைக்கும் இடையே நிலவுகின்ற  ‘உறவு நிலை’ மதிப்பீட்டாளருக்குப் புரியாமல் போகாது எனக் கட்டுரையாளர் எண்ணிவிடக் கூடாது. கையிருப்பின்றிக் கடன் வாங்கும் கருதுகோளின் வழ்நாள் குறைவே!

    கட்டுரையின் முன்னுரை

    ஆய்வேட்டில் ‘ஆய்வு முன்னுரை’ என்னும் பகுதியில் சொல்லப்படும் அனைத்துச் செய்திகளையும் இன்னும் சுருக்கமாகக் கட்டுரையின் முன்னுரையில் சொல்லிவிடலாம். ஆய்வுத் தலைப்பு, ஆய்வு நெறி, ஆய்வு அணுகுமுறை, ஆய்வுக் களம், ஆய்வெல்லை, நோக்கம், பயன் முதலியன பற்றிய கடடுரையாளரின் எண்ணத்தைப் புரிந்துகொள்ள இது உதவக்கூடும்.  ஆய்வு நெறி, ஆய்வு அணுகுமுறை என்பவை தனித் தனி. பலர் ஒன்றெனக் கருதி மயங்குவது தெரிகிறது. சிலப்பதிகாரத்தை வரலாற்று முறையில் அணுகுவதும் இலக்கிய நெறியில் அணுகுவதும் ஆய்வு அணுகுமுறை.  இந்த அணுகுமுறையில் கண்டறியப்படும் ஆய்வுண்மைகள் வெளிப்படுவது ஆய்வு நெறி. பல்வகை  அணுகுமுறைகளுக்கும் ஒரே நெறி பயன்படலாம். ஒவ்வொரு அணுகுமுறைக்கும் ஒவ்வொரு தனிநெறி தேவைப்படலாம். இது ஆய்வாளர் உரிமை. கள ஆய்வுகளுக்கு இது பொருந்தாது.

    மதிப்பீடு உள்ளடக்கம் பற்றியதன்று

    வல்லமையில் ஒரு கட்டுரை முன் மதிப்பீடு செய்யப்படுகிறது என்றால் கட்டுரையின் ‘உள்ளடக்கம்’ பெரும்பாலும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அது ஆய்வாளரின் அல்லது கட்டுரையாளரின் உரிமை. கட்டுரையாளர் எடுத்துக்கொண்ட தலைப்பு, தலைப்புக்கான தரவுகள், தலைப்பையே கருதுகோளாகக் கொண்டால் அதற்கும் தரவுகளுக்குமான பொருத்தப்பாட்டினை  உறுதி செய்வதில் கட்டுரையாளருக்கு இருக்க வேண்டிய தெளிவு  மற்றும் ஆராய்ச்சி அறிவு, பொருத்தமான மதிக்கத்தக்க மேற்கோள்கள், பொருண்மைக்கேற்ற பிழையில்லாத தூயதமிழ் மொழிநடை, கட்டுமான நெறிகள் ஆகியவை மட்டுமே கருத்திற் கொள்ளப்படுகின்றன.

    கட்டுரையாளரின் கருதுகோள் தவறு என்பதற்கோ, முடிவு தவறு என்பதற்கோ மதிப்பீட்டாளர் தனது செல்வாக்கைப் பயன்படுத்துவதில்லை. மேற்சொன்ன கரணைகளின் பொருத்தப்பாடு பெரும் கவனத்திற்கு உள்ளாக்கப்படும். கட்டுரையாளர்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். சுருங்கச் சொன்னால் ‘சட்டை ஒழுங்காகத் தைக்கப்பட்டிருக்கிறதா?’ என்று தையலின் உறுதியை நோக்குவதுதான் மதிப்பீட்டின் அல்லது மதிப்பீட்டாளரின் பணி. அது ‘பொருத்தமாக இருக்கிறதா?’ என்பது போட்டுப் பார்ப்பவரின் விதி!. காரணம் கட்டுரையின் விரிவான ஆய்வினைப் பின்னாலே வெளிவரும் ஒரு கட்டுரையின் ஒரு அடிக்குறிப்பு தகர்த்துவிடும். எனவே இதுபற்றிக் கவலைகொள்ள வேண்டிய தேவை, மதிப்பீட்டாளருக்குத் இல்லை. இதனைக் கட்டுரையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டுரை, கட்டுரையின் புறக்கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல் மட்டுமே!

    கட்டுரையில் பத்திப் பிரிப்பு

    வல்லமையில் வெளிவந்த பொதுக் கட்டுரைகள் — ஆய்வுக் கட்டுரைகள் என எதுவாயினும் அவற்றுள் பல, நல்ல வலிமையான தரவுகள் இருந்தும் வெளிப்பாட்டு உத்தியின் தோல்வியினால் பெற வேண்டிய சிறப்பினைப் பெறாமல் போயின. இதற்கு அடிப்படைக் காரணம், பத்திப் பிரித்தலில் காட்டிய அலட்சியமே!. ‘ஒரு கட்டுரையின் சிறப்பிற்குத் தொடர்களே காரணம். ஆனால் அதனின் சிறப்பு பத்திப் பிரிப்புக்கே’ என்பார் அறிஞர் அண்ணல் பழந்தமிழ் இலக்கண நூல்களில் ‘தொகுத்துச் சுட்டல்; என்பதும் ஒன்று. கருதுகோளின் விரிவுக்குத் துணைசெய்யும் கருத்தமைவுகளை அதன் தன்மைக்கேற்ப பிரித்தமைக்கும் வடிவ முயற்சியே பத்திகளாகும்.  ஒரு பத்தியின் முடிவு, அடுத்த பத்தியின் தொடக்கத்திற்கு வழிகோல வேண்டும். ஒவ்வொரு பத்தியும் கருதுகோளின் ஒவ்வொரு உட்பகுதியை விளக்குவதாக அமைதல் வேண்டும். பத்திகளின் பொருண்மைக்கேற்ப தரவுகள் அமைக்கப்படல் வேண்டும். வேறொரு பத்தியின் பொருண்மைக்குரிய தரவு  அவசரத்திலும் பிழையாகவும் இவ்வாறு பதிவாவது உண்டு. இதனை மீள்பார்வையில் நீக்கிவிட வேண்டும்.

    கட்டுரையில் வடசொற்கள்

    நாடு விடுதலையடைந்தும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டும் 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் வல்லமையின் பல கட்டுரைகளில் தமிழ்மொழி கறைபடிந்த நிலவாகவே காட்சியளிக்கிறது.  ஒரு குறிப்பு அணி அல்லது அலங்காரம் என்பது தமிழுக்கு உரியதன்று. அது வடமொழி இலக்கியங்களுக்கு உரியது. தொல்காப்பியத்தில் அணி என்பது இல்லை. தொல்காப்பியத்தின் ‘உவமம்’ ஒன்றுக்கும் மேற்பட்ட இயல்களில் ஆராயப்பட்டிருக்கிறது. அது அணியன்று. பொருட்பகுதி.

    அந்த வடமொழி அலங்காரங்களின் பெயர்களில் சிலவற்றைப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ்ப் பேரறிஞர்கள் எப்படி மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் தெரியுமா? தற்குறிப்பேற்றம், பிறிது மொழிதல், நுவலா நுவற்சி, எடுத்துக்காட்டு உவமம் வேற்றுமை வேற்றுப் பொருள் வைப்பு, என்றெல்லாம் பழகுதமிழில் பெயர்த்தெழுதியிருக்கிறார்கள். ‘பிரசுரம்’ என்பது துண்டறிக்கை ஆகி 50 ஆண்டுகளாகின்றன. ‘பிரசுலாயம்’ என்பது பதிப்பகம் ஆகியும் பல்லாண்டுகள் ஆகின்றன.

    அவ்வளவு ஏன்? ‘வல்லமை’ என்னும் ‘பத்திரிகையை’ யாரும் தரிசிக்க இயலாது ‘வல்லமை’ என்னும் ‘மின்னிதழைத்தான்’ காண முடியும். இவ்வளவுக்கும் பிறகும் சிலர் ‘உதாரணமாக’ என்று எழுதுகிறார்கள். இப்படி வடமொழியில் தங்கள் புலமையைக் காட்ட விழைவார், தம் கட்டுரையை வடமொழியிலேயே எழுதுவதுதான் சிறந்தது. வடமொழிக் கலப்பும் அது பற்றிய விழிப்புணர்வும் அதற்கான கொள்முதல் கொள்கையும் தொல்காப்பியர் காலத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக அதன்  வளர்ச்சி நிலையில் இருக்க வேண்டிய தமிழ் இப்படி இருக்கிறது என்பதைக் கடடுரையாளர்கள் புரிந்துகொண்டு கட்டுரையாக்கம் செய்ய வேண்டியது அவர் கடமை அல்லவா? .

    கட்டுரையின் மொழிநடை

    பொருண்மைக்கும் மொழிநடைக்கும் தொடர்பு உண்டு. ஆழமான செய்திகளைக் கடுமையான நடையில் சொல்லுவது தவறன்று ஆனால் அவற்றையே எளிமையாகச் சொல்வது சிறப்பு தரும். இதற்குப் புலமை மட்டுமே போதாது. எளிமையான உள்ளம் வேண்டும். ஒரு சில படைப்பாளர்களுக்குத்தான் இது வாய்த்திருக்கிறது. தற்காலத்தில் நானறிந்தவரையில் ஔவையார், கவிமணி, சுப்பிரமணிய பாரதியார், கண்ணதாசன் முதலியோரிடத்தில் இந்த எளிமையைக்  கண்டு வியந்திருக்கிறேன். ஆழமான கருத்தியல். எதிரெதிர் முரண்கள். ஆனால் சொற்கள் மிக எளிமை.

    ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பது மிகக் கடுமையான முரண். ‘நண்பனும் பகைபோல் தெரியும் அது நாட்பட நாட்பட புரியும்? எவ்வளவு பெரிய சிந்தனை? ஆனால் போகிற போக்கில் மொழி நடை அமைந்துவிடுகிறது. ‘கொடி அசைந்ததும்  காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா? எண்ணிப் பாருங்கள். ‘நான் பிறந்த காரணத்தை  நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே? எவ்வளவு பெரிய தத்துவம்? இந்த எளிமைக்கு மூலதனம் அறிவா? உள்ளமா? ‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித் தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்! நினைத்துப் பார்க்க முடியாத சிந்தனை இயைபு.

    படைப்பாளர்களில் இப்படி  ஒரு சிலர் என்றால் ஆய்வுலகில் ஒரே ஒருவர்தான். அவர்தான் அறிஞர்  மு.வ. மொழியியலைக் கூட மூன்றாம் வகுப்புக்குக் கற்பிக்கும் ஆளுமை, அவர்க்கு மட்டுமே உண்டு. சிறிய எளிய தொடர்களால் பேருண்மைகளைப் பதிவு செய்த பேரறிஞர். தற்காலத் தமிழியல் ஆய்வறிஞர்களின் பல கட்டுரைகள், யாருக்கும் புரியாது. இருட்டுக்கு வாழ்க்கைப்பட்டவை அவை. இதனை நான் ஆயிரம் கோயில்களில் சொல்லுவேன். பதர்ச் சொற்கள்!. ஆரவாரப் புனைவு! அலங்காரக் கற்பனை! இவையெல்லாம் எப்படி ஆய்வாகும்?

    கட்டுரை இலக்கியமாகலாம்

    ‘இலக்கியக் கட்டுரை’ என்பதற்கும் ‘கட்டுரை இலக்கியம்’ என்பதற்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. ‘இலக்கியக் கட்டுரை’ என்பது அறிவியற் கட்டுரை முதலிய பிற கட்டுரைகளினின்றும்  வேறுபட்டு நிற்பதைக் குறிக்கும். கட்டுரை இலக்கியம் அத்தகையதன்று. எந்தப் பொருள்பற்றிக் கட்டுரை எழுதப்பட்டாலும் அவை இலக்கியத் தகுதியைப் பெறுமாறு அமைக்க இயலும். ஜி.ஆர்.தாமோதரன் எழுதிய அறிவியல் கட்டுரைகளும், சோமெலே எழுதிய பயணக் கட்டுரைகளும் ‘திராவிடநாடு’ ‘காஞ்சி’ முதலிய இதழ்களில் பேரறிஞர் அண்ணா எழுதிய கட்டுரைகளும், ‘தம்பிக்கு’ எழுதிய மடல்களும் கலைஞர் முரசொலியில் எழுதிய கட்டுரைகளும் உடன்பிறப்புக்கான கடிதங்களும் அறிஞர் மு.வ. அவர்களின் தம்பிக்கு, அன்னைக்கு முதலிய கட்டுரைகளும் தினமணியின் முன்னாள் ஆசிரியர் திரு.ஏ.என். சிவரமனின் அறிவியற்கட்டுரைகளும், வைரமுத்து எழுதிய  ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’  என்னும் கட்டுரை நூலும் கட்டுரைகளை இலக்கியமாகக் காட்டுவதில் முழு வெற்றியடைந்திருக்கின்றன என்பதைக் கற்பார் உணரக்கூடும். இக்கட்டுரைகள் ஆழமான பொருள் பற்றி அமைக்கப்பட்டிருந்தாலும் இனிய எளிய தமிழால் வகை தொகை செய்யப்பட்டு நிரலாகக் கொடுத்திருக்கும் பாங்கினைத் தற்கால ஆய்வாளர்கள் கற்றுணர வேண்டும்.

    ஆய்வுக் கட்டுரையின் சிறப்பு

    அறிஞர் தமிழண்ணல் ஆய்வேட்டுக்குச் சொல்லியிருக்கும் அத்தனைப் பண்புகளும் ஆய்வுக் கட்டுரைக்கும் பொருந்தும். ஆய்வுக் கட்டுரை ஆய்வுலகிற்கு ஒரு நன்கொடை, அது கட்டுரையாளரின் சொந்தப் படைப்பு,  அது ஒரு அறிவியற் சார்ந்த படைப்பு, ஆய்வாளரின் சொந்த நோக்கும் போக்கும் எண்ணங்களும் கொண்ட கருவூலம் என்பனவெல்லாம் ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரையாளருக்குக் கட்டுரையால் கிட்டும் பெருமைகளாகும். ஆய்வு முடிவு எல்லோரும் ஒப்புக்கொள்ளும் வண்ணமே இருத்தல் வேண்டுமென்பதில்லை. ஒரு புதிய சிந்தனையை நேர்முகமாகவோ எதிர்முகமாகவோ தூண்டுதற்கு அது பயன்படுமானால் ஆய்வு வெற்றியடைந்தது என்பதுதான் பொருள். இதனை ஆய்வாளர்கள் பலர் உணர்வதில்லை. நடுநிலை என்பதையே மறந்துவிடுவது ஏற்புடையதன்று. பரிமேலழகரைப் பற்றிய நேர்முகப் பார்வையை ஒருவர் பதிவிடுகிறபோது, எதிர்முகப் பார்வைக்கும் அது இடமளிக்கிறது என்பதை மறத்தலாகாது. அந்த எதிர்முகப் பார்வையும் ஓர் ஆய்வே! ‘COMPOSITION’  என்பது வேறு. ‘RESEARCH PAPER’ என்பது வேறு. முன்னது பள்ளிமாணவர் எழுதவது. பின்னது ஆய்வாளர்கள் கண்டறிந்து படைப்பது.

    கட்டுரையாளர் கவனத்திற்கு

    ‘வல்லமை’ மின்னிதழுக்கு ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் ஆய்வாளர்கள் மற்றும் கட்டுரையாளர்கள், பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு பொறுமையாக, ஆழமான சிந்தனையுடன், இனிய எளிய தமிழில் கட்டுரைகளை எழுதுவது அவர்களுக்கு நலம் பயக்கக் கூடும்.

    1. சிக்கலில்தான் ஆய்வு தோன்றும். கட்டுரையாளர்கள் கட்டுரைப் பொருளில் தமக்குள்ள ஆர்வத்தையும் பயிற்சியையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ‘ஆய்வு’ என்பது ஒரு தவம். தயார் நிலை இன்றித் தவம் கைகூடுமா?
    2. முன்பின் அறியாத துறையில் ஆய்வு செய்வது நெறியன்று, பயனற்றது.
    3. கருதுகோளைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
    4. கருதுகோளை உறுதி செய்வதற்கான தரமான வலிமையான தரவுகளைத் தொகுப்பதில் போதிய காலத்தையும் கவனத்தையும் செலுத்த வேண்டும்.
    5. தம்மைத் தாமே ஊக்கப்படுத்திக் கொண்டு உழைக்க முந்துவது வேறு. தம்மைத் தாமே தருக்கிக் கொண்டு தவறவிடுவது வேறு. பின்னதுதான் அதிகமாக நிகழ்கிறது.
    6. கட்டுரை எளிமையில் தொடங்கி அருமையில் நிறைவு பெற வேண்டும்.
    7. தலைப்பைத் தேர்ந்தெடுப்பதிலும் பத்திகளுக்கான குறுந்தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மிகுந்த கவனம் வேண்டும்.
    8. பொற்சரட்டில் முகப்பாகக் கரணைகளாகக் கண்ணிகளாக அவை அமைந்திருக்கின்றனவா என்பதை ஒவ்வொரு நிலையிலும் கண்காணிக்க வேண்டும்.
    9. கட்டுரையாதலின் மேற்கோள் பற்றிய விவரங்களை ஆங்காங்கே பதிவு செய்யாமல் சான்றெண்களை மட்டும் பதிவு செய்து கட்டுரையின் இறுதியில் அவ்வெண்களுக்கான விவரங்களைக் கட்டுரையின் இறுதியில் தந்தால் போதும்.
    10. துணைநூற்பட்டியல் நீண்டிருந்தால் கட்டுரை கனத்துவிடும் என்று எண்ணிவிடலாகாது. அந்நூல்களினின்றும் பெறப்பட்ட தரவுகள் அல்லது மேற்கோள்கள் கட்டுரைப் பொருளை விளக்குவதில் அளிக்கும் பங்களிப்பே அப்பட்டியலுக்குப் பெருமை சேர்க்கும் .
    11. தொகுத்துச் சுட்டல் என்பது முன்னுரை. வகுத்துக் காட்டல்; என்பது பத்திகள். ‘அப்பொருள் முடித்தல்’ என்பது நிறைவுரை. அக்கால முப்பத்திரண்டு உத்திகளும் தற்காலத் திறனாய்வுக் கொள்கைகளுக்கு வழிகாட்டிகள் என்பதை அறிதல் நன்று. .
    12. ‘இன்னது சொல்லப் போகிறது’ எனத் தொடங்கி ‘இன்னதை இன்னவாறு இன்னவற்றால் இக்கட்டுரை சொல்லியிருக்கிறது’ என நிறைவு செய்தலே கட்டுரையின் புறக்கட்டுமானமாகும்.

    நிறைவுரை

    மேற்கண்ட பத்திகளில் கண்ட கருத்துகளை நான் பதிவு செய்யக் காரணம், வல்லமையின் கட்டுரைகளே!  வைரங்கள் பல தகரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. கண்ணாடித் துண்டுகள் பல, தங்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அடிப்படைக் காரணம் அவசரம்! அலட்சியம்! தெளிவின்மை!. இவற்றையெல்லாம் களைந்து அமைக்கப்படும் கட்டுரைகளுக்கு வல்லமையில் மதிப்புமிக்க இடமுண்டு. என் கருத்துகளில் சங்கடப்படுவோர் இருக்கலாம். அந்தக் கருத்துகள் சிறிதேனும் ஒளி தருவது உண்மையானால் அந்தச் சிறிதளவு வெப்பத்தைத் தாங்கித்தான் ஆகவேண்டும்! ஏனென்றால் வெப்பமில்லாத ஒளி உலகில் உண்டா? ஆய்வாளர் மற்றும் கட்டுரையாளர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

    எத்தகைய  ஐயங்களுக்கும் தொடர்புகொள்ளலாம்; sangilisubramanian46@gmail.com

    Share
  • அஞ்சலியுடன் ஆறுமுகம் தொண்டமான் நினைவுகள் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    அஞ்சலியுடன் ஆறுமுகம் தொண்டமான் நினைவுகள் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
    சிவ சேனை

    இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அலுவலகம் கொள்ளுப்பிட்டியில். 1973-1975 காலப் பகுதியில் திரு பேரின்பநாயகமும் நானும் அங்கு வாரம் ஒரு முறையாவது செல்வோம்.

    தலைவர் திரு சௌமியமூர்த்தி தொண்டமான், செயலாளர் திரு செல்லச்சாமி இருவரையுமோ அல்லது ஒருவரையோ சந்தித்து வருவோம். அக்காலங்களில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர்.

    திரு சௌமியமூர்த்தி தொண்டமான் வாழ்ந்த காலங்களில் அவர் வழிவந்த திரு ஆறுமுகம் தொண்டமான் எனக்கு அறிமுகமானார்.

    1994 இல் சந்திரிகாவின் அமைச்சரவையில் திரு சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக இருந்தார்.

    சென்னைக்கு வந்திருந்தார். அவருக்கு மருத்துவராக இருந்த என் அருமை நண்பர் என்னை அழைத்தார். அமைச்சர் தொண்டமான் உங்களைச் சந்திக்க விரும்புகிறார் எனச் சொன்னார்.

    மருத்துவர் கீழ்ப்பாக்கத்தில் இருந்தார். எனவே அவரிடம் நேரே போனேன். அங்கே திரு ஆறுமுகம் தொண்டமான் இருந்தார்.

    சென்னை புரசைவாக்கத்தில் மேனாள் காங்கிரசு அமைச்சர் திருமதி அனந்தநாயகி அவர்கள் இல்லத்தில் அமைச்சர் திரு சௌமியமூர்த்தி தொண்டமான் தங்கியிருப்பதாகவும் அங்கு வர முடியுமா? எனவும் திரு ஆறுமுகம் என்னிடம் கேட்டார்.

    இருவருமாகச் சென்றோம். சீனா – பிரித்தானியா அரசுகள் பேசிக் கொண்டிருந்த காலம். ஒங்கொங்கு தீவின் எதிர்காலம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. சீனாவின் பகுதியாக ஒங்கொங்கு மாறும். ஆனால் ஒங்கொங்கு தனது தனித்துவத்தைப் பேணும் என்ற வகையில் தீர்வுகளை நோக்கி வரைவுகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் தொண்டமான் என்னிடம் கூறினார்.

    அதை ஒத்த தீர்வு ஒன்றினை இலங்கையிலும் ஏற்படுத்தலாம் எனத் திருமதி சந்திரிகாவுடன் பேசிக் கொண்டிருப்பதாக என்னிடம் அமைச்சர் தொண்டமான் கூறினார்.

    பிரபாகரனின் ஒப்புதலைப் பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அமைச்சர் தொண்டமான் கருதினார்.

    பிரபாகரன் இதற்கு ஒப்புவாரா? அல்லது இத்தகைய பேச்சுவார்த்தையை நோக்கித் தாம் முன்னெடுத்தால் பிரபாகரன் சார்பில் கலந்து கொள்வார்களா? என்றெல்லாம் அமைச்சர் தொண்டமான் என்னிடம் கேட்டார்.

    வெளியே வந்த நான் திரு பழ. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் இருவரையும் சந்தித்துத் திரு தொண்டமான் சொன்ன முன்மொழிவுகளை எடுத்துக் கூறினேன்.

    அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று திரு தொண்டமான் உடன் பேசலாமா? என கேட்டேன்.

    திரு பழ நெடுமாறன் வருவதற்கு ஒப்புக்கொண்டார். அவரை அழைத்துக் கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் பிரீசு விடுதியில் அமைச்சர் தொண்டமானைச் சந்தித்தோம். திரு ஆறுமுகம் தொண்டமான் உடனிருந்தார்.

    என்னிடம் கூறிய அதே செய்தியை அமைச்சர் தொண்டமான் திரு பழ நெடுமாறனிடம் கூறினார். தனது முன்மொழிவுகள் தொடர்பாக ஆதரவான கடிதமொன்றைத் திரு பிரபாகரனிடம் பெற்றுத் தர முடியுமா என அமைச்சர் தொண்டமான் கேட்டார்.

    முயற்சி செய்யலாம் எனக் கூறித் திரு பழ நெடுமாறனும் நானும் வெளியே வந்தோம். திரு பிரபாகரனிடம் இது தொடர்பாகப் பேசும் பொறுப்பைத் திரு பழ நெடுமாறன் ஏற்றுக்கொண்டார்.

    சில வாரங்களின் பின் திரு பிரபாகரனிடம் இருந்து கடிதம் ஒன்றைக் கொண்டுவந்து திரு பழ நெடுமாறன் என்னிடம் கொடுத்தார். அமைச்சர் தொண்டமானிடம் சேர்க்குமாறுகூறினார்.

    நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியை அமைச்சரவையில் தொடருங்கள். அமைச்சரவையில் ஈழத் தமிழர் நலனுக்காக குரல் கொடுங்கள் என்ற கருத்து அந்த ஆறு வரிக் கடிதத்தில் இருந்தது.

    கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவரிடம் நேரில் சென்று செய்தி சொன்னேன்.

    1991 க்குப் பின் தமிழகம், ஈழத்தமிழர் தொடர்பாக வெளிப்படையாக ஆதரவு அளிக்க முடியாத நிலையில் இருந்தது. இந்திய அளவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் சட்டம் இருந்தது.

    1991 இராசீவரைச் சந்திக்கச் சென்றமை தொடர்பாக மல்லிகையில் என்னையும் சேர்த்து விசாரித்துக் கொண்டிருந்த காலம்.

    விடுதலைப்புலிகள் தலைவர் திரு பிரபாகரன் தந்த கடிதம் என் இல்லத்தில் இருந்தது. மருத்துவருக்கு மட்டுமே விவரம் தெரியும். திரு பழ நெடுமாறனுக்கும் விவரம் தெரியும்.

    ஒரு வாரம் கழித்து மருத்துவர் என்னை அழைத்தார். மருத்துவமனைக்கு வாருங்கள் என்றார். கடிதத்துடன் சென்றேன். அங்கு திரு ஆறுமுகம் தொண்டமான் இருந்தார். அவரிடம் கடிதத்தைக் கையளித்தேன்.

    அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை அறியேன்.

    1996ஆம் ஆண்டு மொரிசியசு நாட்டுத் துணைப் பிரதமர், எனக்கு அருமை நண்பர் திரு பெரஞ்சே என்னை அழைத்தார். தனது கட்சியின் வெள்ளிவிழா அந்த ஆண்டு நடைபெறுவதாகவும் இலங்கையிலிருந்து தமிழ்த் தலைவர் ஒருவரை அழைக்க விரும்புவதாகவும் என்னிடம் கூறினார்.

    அடுத்த வாரம் கொழும்பு செல்ல உள்ளேன். வேறு ஒரு பணிக்காகச் செல்கிறேன் அங்கு உள்ளோரிடம் உசாவிப் பதில் சொல்கிறேன் என அவரிடம் கூறினேன்.

    கொழும்பு சென்றேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமை அலுவலகக் கட்டடப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் அமைச்சர் தொண்டமான் சிறிய அலுவலகத்தில் இருந்தார். திரு ஆறுமுகம் தொண்டமான் உடனிருந்தார்.

    மொரிசியசுத் துணைப் பிரதமரின் செய்தியைக் கூறினேன். போய் வருவீர்களா? எனக் கேட்டேன். நாடு, அங்குள்ள அரசியல் நிலைமை, கட்சியின் கொள்கை, விழாவின் இயல்பு, என என்னிடம் விவரங்கள் கேட்டார்.

    அங்கிருந்தே மொரிசியசுத் துணை பிரதமருக்கு அழைப்பு எடுத்து இருவரையும் இணைத்தேன்.

    கட்சியின் பெயர் Mauritius Militant Movement. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர் அங்கு இருந்தார். Militant என்ற பெயர் இருப்பதால் அதுவும் விடுதலைப் புலிகள் சார்ந்த அமைப்பாக இருக்குமோ என என்னிடம் வினவினார்.

    ஆட்சியில் உள்ள கட்சியினர் அழைக்கிறார்கள் என திரு ஆறுமுகம் தொண்டமான் எடுத்துச் சொன்னார்.

    திரு பிரஞ்சே அழைப்பை ஏற்ற திரு தொண்டமான் மொரிசியசு சென்றார். வெள்ளி விழாவில் கலந்துகொண்டார். சிங்கப்பூர் வழியாகச் சென்று மீண்டார்.

    நேற்று இரவு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார் என்ற செய்தி அறிந்ததும் என் கண்கள் பனித்தன. மூத்த தொண்டைமானைப் போலவே இவரும் ஈழத் தமிழர் நலனில் மிக்க ஈடுபாடு உடையவர்.

    அவரோடு பழகிய நாள்கள் நெஞ்சில் நினைவு அலைகளாக மோதுகின்றன. இனிமையான பொறுப்பு வாய்ந்த மனிதநேயமிக்க ஒருவரை இழந்து வாடும் இல்லத்தார், செந்திலார், சீவகனார், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசார், மலையக மக்கள் யாவருக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-25

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-25

    தி. இரா. மீனா

    நிவ்வுருத்தி சங்கய்யா

    சிவசரணான பின்பு சாதியை விட்டு விடவேண்டும்.ஆசையை விட்டொழிப்பவனே உண்மையான இலிங்காங்கி [இலிங்காயத்து] என்கிறார். ’நிவ்ருதிசங்கையா’ இவரது முத்திரையாகும். வடமொழிச் சொற்களை அதிகம் பயன்படுத்தியிருப்பதால் கல்வியில் சிறந்திருப்பார் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    “அசையும் அசையாப் பொருட்கள் எல்லாவற்றிற்கும்
    ஆசையே முதன்மையாம்.
    எண்பத்து நான்கு இலட்ச அசையும் அசையாப் பொருட்களில்
    ஆசையின்றி வாழும் இலிங்கமுடையவனைக் காட்டுவாய்
    ஆசையைக் குற்றம் சாட்டி
    நிராசையில் வாழ்பவரைச் சரியென்பேன் காணாய்
    நிவ்வுருத்தி சங்கையனே”

    நீலம்மா

    பசவேசரின் இரண்டாவது மனைவி இவர். பிஜ்ஜள மன்னனின் வளர்ப்புத் தங்கை. ’விவேக பத்தினி’ என்று தன்னை அழைத்துக் கொண்ட இவர் பசவேசரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தவர். கல்யாண் புரட்சி சமயத்தில் கூடல சங்கமத்திற்கு அருகிலுள்ள தங்கடியில் ஐக்கியமானார் என்பது செய்தி. ‘சங்கய்யா’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “வரவிற்குப் பெருமை தேவையில்லை
    இழப்பிற்குக் கலக்கம் வேண்டியதில்லை
    மனமே, உன்னை நீயே சமாதானம் செய்து கொள்.
    வரவு உன் வசமல்ல; இழப்பு உன் விருப்பமல்ல
    பற்பல போகங்கள் அனைத்தும் சங்கய்யன் வசம்“

    2. “இலையுதிர்ந்த மரத்தில் நிழலைத் தேடவில்லை
    ஒளியிழந்த விளக்கில் வெளிச்சம் தேடவில்லை
    அடையாளமற்றதில் உருவம் தேடவில்லை
    ஒலியடங்கிய பசவனுள் ஒலியைத் தேடவில்லை
    சங்கையனில் நான் உடலற்ற கருணையோன் ஆனேன்”

    3. “பார்வதியின் அழகை எனக்குள் கண்டு
    நான் சிவனோடு சேர்ந்தவளென
    என்னோடு அவன் இணையவில்லை
    தாய்மகன் உறவில் உடலழித்து
    சுமையில்லாத தேகம் பெற்று
    பசவனின் அனுபவத்தால் நான்
    அறிவுடைய மனைவியானேன் சங்கய்யனே“

    நூலிய சந்தய்யா

    புல்லைக் கொண்டு வந்து கயிறு திரித்து அதை விற்ற பணத்தில் தாசோகம் செய்து வந்தவர். கல்யாண்  புரட்சிக்குப் பிறகு சென்ன பசவரோடு உடுவிக்கு வருகிறார். அங்கு சென்ன பசவர் இறைவனோடு ஐக்கியமான பின்பு நாகம்மாவோடு எண்ணேஹொளே வருகிறார். அங்கு நாகம்மா மறைந்த பிறகு நூலேனூரு வருகிறார். அங்கு சமாதியாகிறார். அங்கு இவரது சமாதி இன்றுமிருப்ப தாகச் சொல்லப்படுகிறது. ’சந்தேஸ்வரா’ இவரது முத்திரையாகும். குரு, இலிங்க, ஜங்கம எல்லோருக்கும் காயகம் கட்டாயம். “காட்டுக் கீரையாக இருந்தாலும் காயகம் செய்து கிடைத்தால் மட்டுமே படையலாக்க வேண்டும்“ என்று காயக மேன்மையைக் குறிப்பிடுகிறார்.

    1. “காயகம் எதைச் செய்தாலும் மனத் தூய்மையுடன்
    குரு, இலிங்க, ஜங்கமனுக்குச் செய்வது சிவபூஜை
    செய்யும் செயலன்றி வெறும் பேச்சு பூஜையாகுமோ?
    சென்ன பசவண்ணப் பிரிய சங்கேஸ்வர இலிங்கத்துக்கு
    அது இசைவல்ல மடிவாளய்யனே .”

    2. “ஆயுதம் ஏந்தியவர்கள் அனைவரும் வீரமானவரோ?
    சாதனை செய்யும் சிறியோர் போரில் வல்லவரோ?
    துரோகிகள் உயர் பக்தராவரோ?
    சென்ன பசவண்ணப் பிரிய சங்கேஸ்வர இலிங்கத்துக்கு
    அது பொருந்தாத செயல்.”

    3. “குருவுக்கு உடல் இலிங்கத்துக்கு உள்ளம்
    ஜங்கமனுக்குச் செல்வம் என்வான பின்னர்
    பிறிதொன்றின் விருப்பத்தைக் கொண்டாடுவதேன்?
    அந்த குணம் சந்தேஸ்வர இலிங்கத்துக்குத் தூரம்“

    பரஞ்சோதி

    ’வரநாகன குரு வீரன பரஞ்சோதி மகாவிரக்தி’ என்பது இவரது முத்திரையாகும்.

    “உடலெடுத்து மாயையை விடவேண்டுமெனில் அது எப்படி?
    தேகமெடுத்து அனுபவ அமுது பருகினோமென்பர்.
    அமுதுண்ட பின்பு பசியுண்டோ சொல்வாய்?
    வாதம் பித்தம் சிலேட்டுமம் கொண்டு
    அமுதுண்டோமெனச் சொல்பவருக்கு  என்றும்
    அமுது கிடைக்காது பிரமைக்கு ஆட்பட்டோர்
    கெடும் கேட்டிற்கு முதல் முடிவெதுவுமில்லை.
    மனமே தானானவனுக்கு அழிவில்லை அச்சமில்லை
    வரநாகன குரு வீரன பரஞ்சோதி மகாவிரக்தியே”

    புரத நாகண்ணா

    அமரகுண்டமெனும் ஊரைச் சேர்ந்தவர். ’அமரகுண்டத்து மல்லி கார்ஜூனா’ என்பது இவரது முத்திரையாகும்.

    “நினைக்கும் மனத்துக்கு மண்ணைக் காட்டினாய்
    பார்க்கின்ற பெண்களுக்குப் பெண்ணைக் காட்டினாய்
    வணங்குகின்ற கைகளுக்குப் பொன்னைக் காட்டினாய்
    இம்மூன்றையும் காட்டியும் கொடுத்தும்
    மறதியுள் வைத்தாய்
    அமரகுண்டத்தின் மல்லிகார்ஜூனையா
    நீ காட்டிய அதிசயம் கண்டு வியந்தேன்.”

    [தொடரும்]

    Share