Blog

  • விபுலானந்த அடிகளாரின் பன்முகப் பரிமாணங்கள்

    விபுலானந்த அடிகளாரின் பன்முகப் பரிமாணங்கள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    விபுலானந்த அடிகளார் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் ஐம்பத்து ஐந்து வருடங்கள் மட்டுமே. ஆனால் இக்காலக் கட்டத்துக்குள் அவரின் வாழ்வானது மூன்றுவித அனுபவங்களைக் கொண்டதாக அமைகிறது. ஈழத்தில் பிறந்த அடிகளார், இந்தியாவில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. அதுவும் தமிழ் நாடாகிய தென்னிந்தியாவிலும் தமிழ் பேசாத வட இந்தியாவிலும் இருக்கின்ற சூழலும் அடிகளாருக்கு ஏற்படுகிறது. இதனால் மூன்று விதமான சூழலும் அங்கே கிடைத்த அனுபவங்களும் அடிகளாரின் பணிகளில் சிந்தனைகளில் செயற்பாடுகளிலெல்லாம் பல தாக்கங்களுக்குக் காலாகவும் இருந்திருக்கும் என்பதும் கருத்திருத்த வேண்டியதே.

    பிரித்தானியர் ஆட்சியில் இந்தியா சிக்கித் தவித்த காலம். வட இந்தியாவில் ஒரு போக்கும் தமிழ்நாட்டில் இன்னொரு போக்கும் சமூகத்தில் எழுந்து நின்ற காலம். சாதிப் பிரிவினை வடக்கில் காந்திய இயக்கத்தால் எதிர்க்கப்பட்டது. தீண்டாமை என்பது இருந்தால் தேசிய உணர்வு ஏற்படுதல் தடையாகும் என்பதால் காந்தி அவர்கள் தீண்டாமைக்கு எதிர்க்குரல் கொடுத்தார். தமிழ்நாட்டில் பிராமணர் ஆதிக்கம் யாவற்றிலும் முன்னின்றதால் அதனை உடைக்க திராவிட இயக்கம் தலைதூக்கி, தமிழியக்கத்தை முதன்மைப்படுத்தித் தனித்தமிழ் வாதத்தை ஓங்கி ஒலித்த சூழல் அங்கு காணப்பட்டது. இலங்கையிலோ சமயமாற்றம், இனவாதம், சாதிப் பிரச்சினை என்பவற்றோடு தமிழ்ப்பகுதிகளில் மரபுவழி தமிழ் இலக்கியங்கியங்களைப் பேணுவதும், சைவத்தைக் காப்பதுவுமான ஒரு சூழல் காணப்பட்டது எனலாம்.

    இப்படியான சூழலில் சுவாமி அவர்கள் வாழும் நிலை ஏற்பட்டதால் அவரின் நடவடிக்கைகளிலும் இம்மூன்று சூழல்களும் பாதிப்பினை உண்டாக்கத் தவறவில்லை என்றே அறிஞர்கள் கருதுகிறார்கள். தாய்மொழியுடன் ஆங்கிலம், சமஸ்கிருதம், சிங்களம், பாலி , லத்தீன், கிரோக்கம், அரபி, என்று பன்மொழி அறிவினையும் சுவாமி அவர்கள் பெற்றிருக்கிறார்கள். பன்மொழி அறிவால் அவரின் பார்வை குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிடவில்லை. அவரின் எண்ண ஓட்டங்கள் பரந்துபட்டனவாகவே அமைந்திருந்தன.

    மரபுவழியில் தமிழினைக் கற்று தமிழில் பண்டிதர் பட்டமும் பெற்றவராக இருந்த பொழுதும் அவரின் விஞ்ஞானப் பட்டப்படிப்பு அவரை பழமைக்குள் மட்டும் அமுங்கிவிடச் செய்துவிடவில்லை என்பது மிகவும் முக்கியக் கருத்தெனலாம். பண்பாட்டினைக் கட்டிக்காத்து சமயநெறிகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தை உள்ளிருத்தி வாழ்ந்தாலும் அவரின் சிந்தனைகள், செயற்பாடுகள் சமூகத்தின் புரையோடிப் போன புறம்போக்கான நடவடிக்கைகளை மட்டும் ஏற்றுவிடும் மனப்பாங்கு அவரிடம் காணப்படவில்லை என்பதும் மனத்தில் இருத்தவேண்டியதே.

    சைவ சமயச் சூழலில் சைவராக வாழ்ந்த சுவாமிகள் ஆரம்பத்தில் சித்தாந்தத்தைப் பெரிதென எண்ணுகிறார். பின்னர் அவரின் போக்கு இராமகிருஷ்ண மடத்துடன் இணைந்துவிடும் நிலையில் வேதாந்தமே முன்னுரிமை வகிக்கும் நிலை உருவாகிறது. இராமகிருஷ்ண அமைப்பில் சேருமுன் சுவாமிகளின் சிந்தனை, எழுத்து, செயற்பாடுகள் வேறு. இராமகிருஷ்ண அமைப்பில் இணைந்த பின்னர் அவரின் எழுத்துகள், நடவடிக்கைகள், சமூகப் பார்வைகள் வேறாகவே இருந்தன என்பதை அவரின் வரலாற்றில் கண்டுகொள்ள முடிகிறது. சமரச சன்மார்க்க நெறி என்பதே அவரின் மனத்தை நிறைத்து நின்றது எனலாம்.

    மொழிபெயர்ப்புகள் செய்தார். மரபுக் கவிதைகள் யாத்தார். பலவிதமான கட்டுரைகளை எழுதினார். பத்திரிகை ஆசிரியராக விளங்கினார். ஆராய்ச்சி நூல்களை எழுதினார். இசைபற்றி ஆராய்ந்தார். அவரின் அரிய முயற்சியால் பழந்தமிழ் இசையின் பரிணாமம் என “யாழ் நூல்” எழுந்து வந்தது. இந்த நூலின் வருகை, பலரையும் பிரமிக்க வைத்தது. பழங்கால இசை மரபைத் தனது இசை அறிவாலும், கணித அறிவாலும், தமிழ் அறிவாலுமே யாழ்நூலாக அடிகளார் அவர்கள் ஆக்கி அளித்தார் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    அறிஞர்கள் யாவரும் போற்றும் வண்ணம் இப்படைப்பு வந்திருக்கிறது என்றால் அந்த அளவு ஆளுமையினை அடிகளாரின் கல்விப்புலமே வழங்கி இருக்கிறது எனலாம். யாழ்நூலினை ஆராய்கின்ற பொழுது தமிழிசையினைக் கணித மொழியினில் விளக்க முயன்ற திறனையே காட்டுகிறது எனலாம்.

    பன்மொழி அறிவால் பன்னாட்டு நூல்களையும் அங்குள்ள பண்பாடு, கலாச்சாரங்களையும் மூல மொழியிலே கற்று விளங்கும் ஆற்றலை அடிகளார் பெற்றவர் ஆகிறார். மரபுவழிவந்த தமிழ் அறிஞர்களிடம் கல்வி கற்றாலும் கூட அடிகளாரின் எண்ணங்கள் விசாலம் அடைவதற்குப் பன்மொழி ஆற்றல் கைகொடுத்த காரணத்தால் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை அடிகளார் புறந்தள்ளுகிறார். அக்காலத் தமிழ் அறிஞர்களிடம் காணப்பட்ட அத்தனை அறிவும் ஆற்றலும் அடிகளாரிடமும் காணப்பட்ட போதிலும் – அவர் அத்தகைய பழைமை பேணும் அறிஞர்கள் வரிசையில் தாமும் இடம்பெற்று நின்றுவிட விரும்பவில்லை. அவரின் கலை, இலக்கியம், சமூகம் பற்றிய பார்வையானது உலகின் பரந்துபட்ட சிந்தனைகளுடன் தமிழினையும் உற்று நோக்குவதாகவே அமைந்திருந்தது என்பதுதான் கவனத்தில் இருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    அகில உலகப் பார்வையினால் அடிகளின் சமூக நோக்கும் அதன் அடிப்படையிலே எழுச்சி பெற்றது எனலாம். உயர்வு தாழ்வு பார்ப்பதை அவரது உள்ளம் ஏற்றிட மறுத்தது. இதனால் சாதியைப் பற்றிய எண்ணமே அவரின் மனத்தில் இருந்திட  மறுத்தே  விட்டது  எனலாம். செயல்களினால் மனிதர்கள் வேறுபடலாமே ஒழிய, பிறப்பினால் அல்ல என்னும் சிந்தனை அடிகளாரின் மனதில் வேரூன்றி நின்றது.

    விஞ்ஞானம் படித்தவர் மெய்ஞ்ஞானி ஆகிறார். இராமகிருஷ்ண அமைப்பு அடிகளிடம் பல மாற்றங்களுக்கு வழி சமைக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பொழுது, ஒதுக்கப்பட்டவர்கள், கல்விகற்க வழியற்றவர்களை நாடிச்சென்று அவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்து அவர்களின் நலனில் அடிகளார் காட்டிய அக்கறை, அவரின் சமூக, சமத்துவ மனப்பாங்கினுக்கு மிக்கதோர் சான்று எனலாம்.

    பாரதியாரைப் பெரும்புலவர் என்றோ அவரின் கவிதைகளை தமிழ்க் கவிதைகள் என்றோ தமிழ்நாட்டில் இருந்த பழந்தமிழ்ப் பண்டிதப் பரம்பரை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தமிழ்நாட்டில் பிறந்த பாரதியைச் சமூகத்தின் முன்னே கொண்டுவந்து காட்டி, பாரதிக்கும் அவரது படைப்பினுக்கும் முன்னுரிமையினை ஈழத்தவராக இருந்தும் சுவாமி விபுலானந்தர் எடுத்துக் கொடுத்திருக்கிறார். இதற்குக் காரணம் சுவாமிகளின் பழமைக்கும் புதுமைக்குமான பொருத்தப்பாடு எனலாம். புதுக்கவிதை  எழுதுபவர்கள் பாரதியைத் தொடுகிறார்கள். வசன கவிதையைக் கையில் எடுப்பவர்கள் பாரதியைப் பார்க்கிறார்கள். மரபுக் கவிஞர்கள்கூட பாரதியின் கற்பனை ஆற்றலில் கட்டுண்டு போகிறார்கள். இந்த வகையில் பாரதிக்கு முன், பாரதிக்குப் பின் என்று சொல்லும் நிலையும் இன்று ஏற்பட்டிருக்கிறது. பாரதியின் பாடல்கள் பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகம் வரை படிப்பிக்கவும் படுகிறது. இப்படியெல்லாம் நடக்கவேண்டும் என்றும் அடிகளாரின் சிந்தனையில் அன்றே உதித்திருக்கிறது. இதைத்தான் ஆத்மீக பலம் என்கிறோம். ஆத்மீக பலம் மிக்க அடிகளார் எதைச் செய்தாலும் அவையாவுமே அன்றும் பயனை நல்கியது. இன்றும் நல்கிக் கொண்டே இருக்கிறது  என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

    “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்பது முற்றிலும் அடிகளாருக்கே மிகவும் பொருந்துவதாக அமைகிறது. ஈழத்தில் காரைதீவு என்னும் கிராமத்தில் பிறந்தவர் இமயமலைவரை சென்று இமாலய சாதனையின் நாயகனாக மிளிர்ந்தார் எனும் பொழுது கருவிலேயே திருவினைப் பெற்றே அடிகளார் பிறந்திருக்கிறார் என்பது வெள்ளிடை மலை எனலாம். சாதாரண விஞ்ஞான ஆசிரியராய் ஆரம்பித்து யாழ்ப்பாணம் சென்று அங்கு தனது வாழ்வினைத் திருப்பி விடுகிறார். அடிகளார். கல்வியால் திருப்பம். சிந்தனையால் திருப்பம். மயில்வாகன விஞ்ஞான ஆசிரியராக யாழ்ப்பாணம் சென்றவர், பாதை மெய்ஞ்ஞானச் சிந்தனையில் விரிந்து, சுவாமி விபுலானந்தர் ஆகிவிடுகிறார். பழமையில் ஊறியவர் பழமையையும் புதுமையையும் சரிவர உணர்ந்து சரியான வழியினைத் தேர்ந்தெடுத்து சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் சிந்தையில் இருத்தி, சமூக ஈடேற்றத்துக்கு எது சிறந்தது என்பதை உள்ளத்து இருத்தி அதன்வழியில் செயலாற்றி, சமூகத்தில் ஏற்றுதலுக்கும் போற்றுதலுக்கு உரியவராக உயர்ந்து நிற்கிறார்.

    கல்வித் தொண்டு, சமூகத் தொண்டு, இலக்கியத் தொண்டு, இவை யாவற்றையும் எடுத்து நோக்கும் பொழுது அவரின் பிறப்பு தமிழ்ச் சமூகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம். பழமையில் வளர்ந்தாலும் புதுமையில் பயணித்தார். தனித்தமிழ் விரும்பினாலும் பன்மொழிப் புலமையினையும் ஒதுக்கிவிட விரும்பவில்லை. மரபிலே முகிழ்த்தாலும் விஞ்ஞானம் அவரை விரிவுபடுத்தியது. அதனால் குறுகிய பாதைகள் குறுக்கிடுவதை ஒதுக்கியே விட்டார். சித்தாந்த நிலையிலிருந்து வேதாந்த நிலைக்கு வந்தமையால் அவரின் நோக்கும் செயலும் பரந்து பட்டதாகவே காணப்பட்டது. கலைஞராய் விளங்கினார். அறிஞராய் விளங்கினார். நிறைவில் துறவியாய் உயர்வு பெற்றார். தாமரை இலைத் தண்ணீராய் அடிகளார் வாழ்வு அமைந்திருந்தது. ஆனால் அவரின் உள்ளம், வெள்ளைக் கமலமாகவே இருந்தது.

    —————————————————————

    தொடர்புடைய கட்டுரை :

    சுவாமி விபுலானந்த அடிகளாரின் பன்முகப் புலமையும் வாய்க்கப்பெற்ற சந்தர்ப்பங்களும்

    https://www.vallamai.com/?p=91090

    Share
  • ஊறுகிற குஷி

    ஊறுகிற குஷி

    கவியோகி வேதம் 

    “ஊறுகாய்?’ என்றாள்—ஊறியது குஷியும்!!
    ஊறுதே அம்மாவின் அன்றைய நினைவுமே!!
    ஊறுகிற நாக்கில் அவள்செய்த நெல்லிபதம்
    ஓட்டியது வயிற்றுளே கற்சட்டிச் சாதமே!

    தயிர்சாதம் என்றால் எலுமிச்சை, மிளகாய்
    தழைந்த இஞ்சியுடன் இட்டாலே போதுமே!
    அயனான பொங்கலும் மாகாணி ஊறுகாயின்
    அடிதொட்டால், நாக்கில் அப்படியே செல்லுமே!

    எண்ணெய் மாங்காயாம் கார  ஊறுகாய்!
    எந்தஓர் விருந்திலும் நண்பரைக்  கூட்டுமே!
    துண்டுபல கடித்தே சுவைத்து ரசிப்பமே!
    தூயசின்னப்   பிள்ளைகளாய்   மாறியே   நிற்பமே!

    வடுமாங்காய் என்றாலே  எச்சில்  வழியுமே!
    வக்கணையாய் எச்சாதமும் நிறையப் போகுமே!
    கொடுகொடு எனப்பாலர் கைகள் நீட்டியே
    கொட்டமடித்  துண்ணஒரு ஜமா சேருமே!!

    மாகாணி என்ற ஒரு  அதிசய  ஊறுகாய்!
    மாகாளி  நேர்வரினும்  எங்கே? என்பாளே!!
    வேகாத வெயிலிலும் சாதம் கூடையாய்
    வெட்டிடவே காரமுடன் நாக்கில் நிற்குமே!

    நெல்லிக்காய்  ஊறுகாய் நாவிலே   ஊறுமே!
    நிறையவே  மனத் தினில் உற்சாகம் சேருமே!
    கொல்லுமந்த  கோங்குரா சட்னி என்றாலே
    கொண்டுவா  ஒருசட்டி  சாதம்  என்னுமே!

    எத்தனையோ  விதமாந்தர்  தமிழ் நாட்டில்  உண்டடா!
    எத்தனையோ ஊறுகாயும்  ருசிப்பதற்கே –  உண்டடா!
    அத்தனையும்  தாய்மார்தம்  கற்பனையின் சுவையடா!
    அன்னையின் கைகளுக்கே  தனிருசி  உண்டடா!

    Share
  • நாலடியார் நயம் – 20

    நாலடியார் நயம் – 20

    நாங்குநேரி வாசஸ்ரீ

    20. தாளாண்மை

    பாடல் 191

    கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல்
    கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
    வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
    தாளாளர்க்கு உண்டோ தவறு.

    கொள்ள மாட்டாத மிகுநீரையுடைக்
    குளத்தினருகே விளையும் பயிர்
    வளமுடன் இருந்துப் பின் குளம்
    வறண்ட நிலையில் கருகுவதுபோல்
    முயற்சியின்றி உறவினர் தருவதை
    மட்டுமேயுண்டு அவ்வுறவினர்
    வறுமையுறும் காலம் சாவர் சிலர்
    வாளின்மேல் கூத்தாடும் மகளிரின்
    விழிபோல் இயங்கிச் சுறுசுறுப்பாய்
    உழைக்கும் முயற்சியுடையோருக்கு
    உறுமோ இப்பிழைப்பு.

    பாடல் 192

    ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம்
    காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்;
    வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
    தாழ்வின்றித் தன்னைச் செயின்.

    ஆடுகின்ற கொம்பாகி வழியில்
    அமைந்த செடியும் வயிரம்கொண்டு
    உறுதிமிகு மரமாய் வளர்ந்தபின்
    உலகில் யானைகட்டும் தறியாகும்
    முயன்று ஒருவன் தன்னைத்
    தாழ்ச்சியில்லாதபடி செய்தால்
    அவன் வாழ்வும் அத்தன்மைத்தாகும்.

    பாடல் 193

    உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
    சிறுதேரை பற்றியும் தின்னும்; – அறிவினால்
    கால்தொழில் என்று கருதற்க கையினால்
    மேல் தொழிலும் ஆங்கே மிகும்.

    பெரும்புலியும் மாமிசம் இல்லாக் காலம்
    பிடித்துத் தின்னும் சிறு தேரையை
    அறிவினால் எத்தொழிலையும்
    அற்பமானது என எண்ணவேண்டா
    முயற்சியினால் அத்தொழிலும்
    மேம்படும் அக்கறையுடன் செய்கின்.

    பாடல் 194

    இசையா தெனினும் இயற்றியோர் ஆற்றலால்
    அசையாது நிற்பதாம் ஆண்மை – இசையுங்கால்
    கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப!
    பெண்டிரும் வாழாரோ மற்று.

    தாழையை அலைகள் அசைக்கின்ற
    தரமான சோலைகள் சூழ் கடற்கரையுடை
    வேந்தனே! முடியாதசெயலையும் ஒரு
    வழியினால் செய்து தளராது நிற்பதே
    ஆண்மையாம் முடியுமெனில் பெண்களும்
    அச்செயல் புரிந்து பெருமையடையாரோ?

    பாடல் 195

    நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
    சொல்லளவு அல்லால் பொருளில்லை; – தொல் சிறப்பின்
    ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
    என்றிவற்றான் ஆகும் குலம்.

    நல்ல குலம் தீய குலம் என
    நவிலுவதெல்லாம் வெறும்
    சொல்லளவே தவிர அங்ஙனம்
    சொல்லுவதில் பொருளொன்றுமில்லை
    பழம் சிறப்புமிக்க பொருளும் தவமும்
    பண்பான கல்வியும் முயற்சியும்
    போன்றவற்றால் நற்குலம் அமைவதாம்.

    பாடல் 196

    ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
    ஊக்கம் உரையார் உணர்வுடையார் – ஊக்கம்
    உறுப்பினால்ஆராயும் ஒண்மை உடையார்
    குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு.

    மேற்கொண்ட செயலைச் செய்து
    முடிக்கும்வரை அறிவின் திறத்தை
    மனதுள் அடக்கித் தம் வலிமையை
    மற்றவருக்கு வெளிப்படுத்தாது பிறரின்
    மனவலிமையை அவர்தம்
    உறுப்புக்களின் குறிப்பினால்
    உணர்ந்தறிவர் அறிவுடையார்
    இத்தகையோரின் அறிவுநுட்பத்தில்
    இருக்கின்றது இவ்வுலகு.

    பாடல் 197

    சிதலை தினப்பட்ட ஆலமரத்தை
    மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
    குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற
    புதல்வன் மறைப்பக் கெடும்.

    கறையானால் அரிக்கப்பட்ட
    கனமான ஆலமரத்தைத்
    தாங்குதூணாயதன் விழுது
    தாங்குதல்போலத் தந்தையின்
    தளர்ச்சியை முயற்சித்துத்
    தனயன் போக்க அது நீங்கும்.

    பாடல் 198

    ஈனமாய் இல்லிருந் தின்று விளியினும்
    மானம் தலைவருவ செய்யவோ? – யானை
    வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
    அரிமா மதுகை அவர்.

    புள்ளியுள்ள யானையின் முகத்தையும்
    புண்படுத்தவல்ல கூர்நகமும்
    வலிய பாதங்களுமுடைய
    வீரிய சிங்கத்தையொத்தவர்
    பொருளற்று வீட்டிலிருந்து வறுமையுற்று
    பாவப்பட்டுத் தாழ்ந்தாலும் தமக்குப்
    பழியுண்டாக்கும் செயலைச் செய்வரோ?

    பாடல் 199

    தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
    தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு – ஓங்கும்
    உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
    பேராண்மை இல்லாக் கடை.

    தித்திக்கும் இனிய கரும்பு ஈன்ற
    திரண்ட காம்பினையுடைய
    குதிரையின் பிடரிமயிர் போலும்
    கற்றையான பூ நறுமணம் இழந்ததுபோல்
    கடும் முயற்சி செய்து தம்
    பெயரை நிலைநாட்டாதவன்
    பிறந்த குடி சிறந்ததாய்
    இருப்பினும் என்ன பயன்?

    பாடல் 200

    பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
    கருனைச்சோ றார்வர் கயவர்; – கருனையைப்
    பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
    நீரும் அமிழ்தாய் விடும்.

    முயற்சியற்ற மூடர் பெருமுத்தரையர்
    மகிழ்ந்து தரும் பொரிக்கறி உணவை
    உண்பர் கறியின் பெயரும் அறியா
    உயர்ந்தோர் தம் அயரா முயற்சியால்
    வந்த நீருணவையும் அமிழ்தமென
    விரும்பி உண்பர்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 17

    பழகத் தெரிய வேணும் – 17

    நிர்மலா ராகவன்

    (எனக்கு என்னைப் பிடிக்கும்)

    ‘என்னை யாருக்குமே பிடிக்கவில்லை,’ என்று அழுதான் அச்சிறுவன்.

    பாட்டி அளித்த அபரிமிதமான செல்லத்தில் வளர்ந்து, மனத்திற்குத் தோன்றியபடி நடந்து, ஒருவரையும் மதிக்காது நடந்துகொண்டதன் விளைவு அது. ஆனால் அதெல்லாம் புரியும் வயதாகவில்லை அப்போது.

    சிறு வயதில், ‘புத்திசாலி, சமர்த்து’ என்றெல்லாம் பிறர் பாராட்டுவதைக் கேட்டு, ‘நாம் அப்படித்தான்’ என்று நம்பிவிடுகிறோம். யாரும் புகழாது, பழிப்பிற்கு ஆளானால் அச்சிறுவனைப்போல்தான் வருந்த நேரிடுகிறது.

    இருப்பினும், அறியாப் பருவத்தில் தவறு செய்துவிட்டு, அதையே எண்ணி வருந்துவது வீண். பெரியவர்களானதும், கடந்த காலக் கசப்புகளிலிருந்து மீண்டால்தான் நிம்மதி கிடைக்கும்.

    பிறருக்குப் பிடிக்காவிட்டால் என்ன?

    ‘எனக்கு என்னைப் பிடிக்கும்!’ என்ற மனப்பான்மையை ஒருவர் வளர்த்துக்கொள்வது நல்லது.

    சுயநலமா?

    தன் நலனை ஒருவர் கவனித்துக்கொள்வது சுயநலம் அல்ல. பிறரை ஒதுக்கிவிட்டு, தன்னையே எப்போதும் கவனித்துக் கொண்டிருந்தால்தான் சுயநலம்.

    மூன்று வயதான வினு கடைக்குட்டியானதால் குடும்பத்தில் எல்லாருக்கும் செல்லம்.

    “எனக்கு வினுவைப் பிடிக்கும்,” என்று தன்னைக் கண்டிப்பும் அன்புமாக வளர்த்த தாயிடம் அடிக்கடி சொல்வான். அக்குணத்தினால் அவனுக்குப் பார்த்தவர்கள் எல்லாரையும் பிடித்துப் போயிற்று. அவர்களும் அவனது அன்பைத் திரும்ப அளித்தார்கள்.

    அனுசரித்துப் போய்விடு!

    பிறருக்கு ஏற்றபடியெல்லாம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களுக்குப் போதிக்கப்படுகிறது. அப்போதுதான் அவள் எவ்விதக் கண்டனத்துக்கும் ஆளாகமாட்டாள்.

    ‘ஒரு பெண்ணானவள் தந்தைக்கு அன்பான மகள், கணவனுக்கு..,’ என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். அவளுக்கு அவள் யார் என்பது முக்கியமென்று எவருக்கும் தோன்றவில்லை.

    கதை

    ‘பிறருடைய சந்தோஷம்தான் உன் சந்தோஷம்,’ என்று கூறியே வளர்த்திருந்தார்கள் விசாலியை.

    பத்து வயதிலிருந்தே பிறருக்காக ஓயாது உழைத்தாள். அவர்கள் செய்ய ஆரம்பித்த வேலையைப் பிடுங்கிச் செய்வாள். தன் நலனையும் கவனிக்காது விட்டுவிட்டால் எவருக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்காது. 

    ‘என்ன குணம்!’ என்ற பிறரின் பாராட்டு கிடைத்தது.

    அவளுடைய பதின்ம வயதில், தன்னலம் பாராத அக்குணத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள் கயமையான சில உறவினர்கள்.

    விவரம் புரியாத அந்த வயதில், “எல்லாருக்கும் என்னைப் பிடிக்கிறது!’ என்ற பூரிப்பு ஏற்பட்டது. இருபது வயதில்தான் தன் இழப்பு என்னவென்று அவளுக்குப் புரிந்தது.

    திருமணமானபின், கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்று புரிந்தபோதும், அவனை எதிர்க்கத் தோன்றவில்லை.

    வழக்கம்போல், ‘என்னுடைய மகிழ்ச்சியா பெரிது!’ என்று விட்டுக் கொடுத்தாள். ஆனால், வருத்தம் ஏற்படாமல் இருக்குமா?

    உடற்பயிற்சி, ஆகாரம், ஓய்வு எல்லாம் நமக்கு நாமே செய்துகொள்ளும் நன்மை. அத்தேவைகளைக் கவனிக்காது விட்டால் உடலும் மனமும் ஒருங்கே கெடும் அபாயம் இருக்கிறது.

    ‘நல்ல பெண்’ என்று பெயரெடுக்க எந்தப் பெண்ணும் விசாலியைப்போல் தன்னையே கரைத்துக்கொள்ள வேண்டியதில்லை.

    தனக்குப் பிடித்த காரியத்திற்காக நேரத்தைச் செலவிடுவது சுயநலம் என்று பெண்களை நம்பவைத்திருக்கிறார்கள். நம் நலனில் நம்மைவிட வேறு யாருக்கு அதிக அக்கறை இருக்கமுடியும்?

    தொலைக்காட்சியில் ஒரு பாடம்

    அண்மையில், தொலைக்காட்சியில் “கோடீஸ்வரி” நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்ச்சி அது.

    சொல்லிவைத்தாற்போல், அனேகமாக எல்லாப் பெண்களும், ‘வெல்லும் பணம் கணவருக்கு, குழந்தைகளுக்கு,’ என்றுதான் கூறினார்கள்.

    அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசை எதுவுமே கிடையாதா?

    இருக்கலாம். ஆனால், பிறருக்காக வாழ்ந்தால்தான் நல்ல பெண் என்று சமூகம் எதிர்பார்த்து, அதன்படி நடந்து பழகியவர்கள் ஆயிற்றே!

    நிகழ்ச்சியைச் செம்மையாக வழிநடத்திய நடிகை ராதிகா சரத்குமார் இப்பெண்களைப் பலமுறை தூண்டி, அவர்களுக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறது, அதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில் தப்பில்லை என்று உணரவைத்தார்.

    ஒரு கிராமப்புறத்திலிருந்த – படித்த – பெண்ணுக்கு ஜீன்ஸ் அணிய ஆசை. ஆனால், தாய் மறுத்துவிட்டாள் – பிறர் பழிப்பார்கள் என்று அஞ்சி. அவளுடைய ஆசை அந்நிகழ்ச்சிமூலம் நிறைவேற, பல பெண்கள் அவளைப் பின்பற்றினார்கள்.

    ‘நான் இப்படி இருந்தால்தான் பிறருக்குப் பிடிக்கும்!’ என்று வளைந்துகொடுப்பவர்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கலாம். பிறரது புகழ்ச்சியும் கிடைக்கும். ஆனால், நிறைவேறாத ஆசையை அடக்குவதால் ஏற்படும் ஏக்கத்தைத் தவிர்க்க முடியாது.

    பெண்கள் தம் ஆசைகளை, அனுபவிக்கும் துயரங்களை, வெளிக்காட்டாது இருப்பதால் பிறருக்கு அவர்களது மனம் புரிவதில்லை. ‘பெண்களின் மனம் கடலைவிட ஆழமானது!’ என்று சொல்லிவிடுகிறார்கள்.

    ‘உனக்கென்று ஏதாவது ஆசை இருக்கிறதா?’ என்று கேட்டுப்பாருங்கள்.

    அவர்களுக்கே தெரியாது, ஏதாவது ஆசை ஒட்டிக்கொண்டிருக்கும்.

    கதை

    ஆறு வயதான மாது, சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் நிறைந்தவன்.

    “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டபோது, “எனக்கு ஒரு குதிரை வேணும்,” என்றான்.

    “பொம்மைக் குதிரையா?”

    “இல்லை, நிஜக்குதிரை! என் கல்யாணத்திலே நான் அதுமேலே ஒக்காந்து வருவேன்!”

    இவனுக்குத் தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்திருக்கிறது.

    குழந்தைத்தனமாக ஏதோ பிதற்றுகிறான் என்று அலட்சியம் செய்யாமல், அவனையும் மதித்து, பேச்சுக் கொடுத்ததால் தன்னைப் பற்றி யோசிப்பது தவறில்லை என்று அவனுக்குப் புரிகிறது.

    ஒப்பீடு வேண்டாமே!

    பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டாலோ, ‘வித்தியாசமாக இருக்கிறோமே!’ என்று மனம் நொந்தாலோ நிம்மதி பறிபோய்விடும்.

    ‘நான் ஆதர்ச மனைவியாக இருப்பேன்!’

    ‘பிறருடைய மகிழ்ச்சிக்காக உயிரையே கொடுப்பேன்!’

    இம்மாதிரியான உறுதிமொழிகள் ஏன்? பிறர் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்று ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடுகிறதே!

    கதை

    சிறுவயதிலிருந்தே, தனது ஒவ்வொரு சொல்லாலும் செயலாலும் பிறரது ஆமோதிப்பை எதிர்பார்த்தாள் பூமா. பாராட்டு பெறாதவர் கண்டனத்துக்குரியவர் என்று நம்பினாள்.

    இப்போக்கால், தன்னம்பிக்கை குறைந்துவிடும் என்பதை அவள் உணரவில்லை. சற்றுப் பெரியவளானதும், அதிகாரத்தால் தன் பலவீனத்தை மறைத்துக்கொண்டாள்.

    நம்மைப்பற்றி நாமே நல்லவிதமாக எண்ணும்போது, நம்மையே மதிக்கிறோம். தன்னம்பிக்கை வளர, நாம் செய்யும் சிறு பிழைகளுக்காக மனம் உடைந்துபோய்விடுவதில்லை.

    நாமேதான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கவோ மாற்றிக்கொள்ளவோ முடியும்.

    மிக அழகாக இருந்த ஒரு நடனமணியைக் கேட்டார்கள், “நீங்கள் எப்படி உலகளாவிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுகிறீர்கள்? இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்?”

    அவள் அளித்த பதில்: “தினமும் காலை கண்ணாடிமுன் நின்று, `YOU, HANDSOME DEVIL!’ என்று என்னை நானே மெச்சிக்கொள்வேன்!”

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 44 – வீட்டிலிருந்தே உற்பத்தி, வீட்டிலிருந்தே சேவைகள்

    அண்ணாகண்ணன் யோசனைகள் 44 – வீட்டிலிருந்தே உற்பத்தி, வீட்டிலிருந்தே சேவைகள்

    ஊரடங்கால், பொது முடக்கத்தால் நாம் வீட்டில் முடங்கித்தான் கிடக்க வேண்டுமா? பணியாற்ற முடியாதா? பொருளீட்ட முடியாதா? வீட்டிலிருந்தே வேலை என்பது போல, வீட்டிலிருந்தே நம்மால் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும், வீட்டிலிருந்தே சேவைகள் வழங்க முடியும். பொருளாதாரச் சுணக்கம் கண்டுள்ள இந்தியாவின் அடிப்படைச் சிக்கலுக்கு எனது தீர்வு இங்கே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 259

    படக்கவிதைப் போட்டி – 259

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (24.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 258இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 258இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    தெருவில் நிற்கும் பெற்றத்தை (மாடு) இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குப் படமாகப் பெற்றிருக்கின்றோம். இந்த ஒளிப்படத்தை எடுத்த திருமிகு. ஷாமினிக்கும், இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து போட்டிக்கு வழங்கியிருக்கும் திருமிகு. ராமலக்ஷ்மிக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

    இந்தப் பசுவின் மருண்ட பார்வையில் தெரிவது என்ன?

    கன்றைப் பிரிந்த கலக்கமா?

    எசமானரைப் பிரிந்த ஏக்கமா?

    வழிமாறி வந்துவிட்ட வருத்தமா?

    கவிஞர்களைக் கேட்டு விடையறிவோம்! வாருங்கள்!

    *****

    மனிதா! நீ இயந்திரத்தை இயக்கிய நாளே இந்திய விவசாயம் கீழிறங்கிய நாள்! என் சாணியே விவசாயத்திற்கு அச்சாணி! அது முறிந்ததால் அல்லவோ உன் உடம்பு விதவிதமாய்ப் பல நோய்கட்கு ஆளானது” என்று மாட்டின்மூலம் மானுடரின் பகுத்தறிவற்ற செயல்களை வகுத்துரைக்கும் திரு. காந்திமதிநாதன், தம்முடைய மற்றொரு கவிதையில் மன்னராட்சியில் மணி நீதிக்கு; மக்களாட்சியிலோ money அநீதிக்கு என்று வார்த்தைகளோடு விளையாடி இன்றைய வாழ்க்கையை விளங்கவைக்கின்றார்.

    இந்திய விவசாயின் நிலைமை

    இறைவனுக்கு அடுத்து விவசாயியே என
    முறைப்படுத்தினான் அறத்தை வள்ளுவன்

    வள்ளுவன் போற்றிய உழவுத் தொழிலுக்கு
    மூடுவிழா நட்த்தி விட்டுவிட்டு
    அடிமைத் தொழிலுக்கு பெருநகரம் வந்த
    குடிசைவாழ் என் எஜமானரைத் தேடுகிறேன்!

    விவசாயி விலாசத்தைத் தொலைக்க வைக்க
    வகை செய்த பெரியோரே கண்டீர்களா?

    அவரும் நானும் வானும் நிலவும் போல
    நானில்லாது இருளாகிப் போனார்!

    மண்ணில் ஏர் நின்றால்
    என் துணை கைக்கொண்டால்
    மண்வளம் செழிக்கும்
    மக்கள் நலம் ஜொலிக்கும்

    என்று எங்களைத் துறந்து விளைநிலத்தில்
    இயந்திரத்தை இயக்கிய நாள் …அன்றே
    இந்திய விவசாயம் கீழ் இறங்கிய நாள்!
    விவசாயியை நீங்கள் மறந்த நாள்
    பசுமையோ மண்ணைத் துறந்த நாள்
    விவசாயியின் உயர்வைக் கறந்த நாள்!

    மானிடா கேள்!
    நான் சாணி போட்டால் உரமாகி
    விவசாயத்திற்கோ அச் சாணி அச்சாணி
    என் சாணி மறந்ததால் அச்சாணி முறிந்தது
    எண் சாண் உடம்புக்குள் விதவிதமாய் நோயினில்
    என் சாணியாய்க் காய்கிறாயே……பயிர்கள்
    காய்க்க வேண்டிய விளைநிலமோ மருத்துவமனைகளாய்!

    மும்மலத்தின் ஏகபோகப் பிரதிநிதியே!
    நும் மலமோ துர்நாற்றம்
    எம் மலமோ மலர்சூடும்….நீ என்னைப்
    பிள்ளையார் பிடிக்கும்போது
    சிந்திக்க மறந்தாயே என்ன பிள்ளையப்பா நீ?
    ஆமாம்…
    யாரப்பா சொன்னா உனக்கு
    ஓர ரறிவு அதிகமாமே என்னை விட
    அதுவும் பகுத்தறிவாமே…?!
    வெளியில் சொல்லாதே
    ஓர ரறிவும் எள்ளி நகையாடும்….!

    *****

    நீதிக்கு வீதி

    என் தொழுவத்தில் பிறந்தவர்
    ஒரு கன்னத்தில் அடித்தால்
    மறு கன்னத்தைக் காட்டு என்றார்
    அதை ஏன் மறந்தீர் என்றேன்

    குழல் ஊதிய வண்ணமே கருநிறக்
    குழலாள் ராதைக் கண்ணன் பாரதக்
    குலம் பாரினுக்குப் பரிசளித்த கீதை
    வலம் வராதது ஏன் என்றேன்

    மன்னனின் மகனால் தேர்க்காலில்
    என் இனச் செல்வம் மாண்டதை
    மன்னராட்சியிலே நீதி கேட்டதை
    மன்னவனே மணி ஓசை கேட்டு

    மணி கட்டி வைத்து நீதியை
    மக்களுக்கும் மாக்களுக்கும்
    சமம் என்ற திருநாட்டில்
    நீதி கேட்டால் தெரு வீதியில்

    மன்னராட்சி மணி நீதிக்கு
    மக்களாட்சி MONEY அநீதிக்கோ??????

    *****

    ”கெடாமலே பட்டணம் சேர்ந்த மனிதர்களோடு கூடவந்த நானோ வீதியில்; அவர்களோ தொற்றுநோய்க்கு அஞ்சி வீட்டுக்குள்!  இவர்கள் வாழ்க்கை என்று விடியும்?” என்ற சிந்தனையை அசைபோட்டு நின்றிருக்கும் மாடிது என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    விடியுமா…

    கெட்டும்
    பட்டணம் சேர் என்றார்கள்..

    இவர்கள்
    கெடாமலே கெடுவதற்காகப்
    பட்டணம் வந்தவர்கள்,
    பசுமாடும் கூடப்
    பயணம் வந்தது..

    பட்டண வாழ்க்கை
    வழக்கம்போல் ஓடியது
    வேகமாய்,
    வந்தது கொரோனா
    வாழ்வுமுறை மாறியது,
    வீட்டுக்குள் மனிதர்கள்
    வெறிச்சோடியது வீதி..

    விதியை எண்ணி
    வீதியில் பசுமாடு,
    காட்டில் மேய்ந்த
    கடந்த காலத்தை அசைபோட்டு..

    விடியுமா
    இவர்கள் வாழ்க்கை…!

    *****

    ”தொற்றுநோய் உனைப் பற்றிடாதிருக்கத் தொழுவத்துக்குச் சென்றுவிடு! கால்கடுக்கச் சாலைதனில் நின்றிடாதே” என்று பசுவுக்கு அறிவுறுத்தும் திருமிகு. சுதா மாதவன், ”பசுவதையைத் தடுத்திடவே விதி செய்வோம்! மேதினியில் பசுவினையே காத்திடுவோம்!” என்று மக்களுக்கும் நல்லுரை நவில்கின்றார்.

    கன்றினைத் தேடும் உன் பார்வை
    கனிவு மட்டுமே அதன் போர்வை
    உனையே தான் தேடிவரும் உன் கன்று
    சாலையில் நீ நிற்பது நல்லதன்று!

    கொடிய நோய் உனையும் கொன்றிடாது
    தொழுவத்தில் தனித்திருந்து காத்துக் கொள்!
    சாலைகளில் திரிந்தலைந்து நிற்பதனால்
    நீ சாதிக்கப் போவது என்ன என்ன?

    பதறிப் போய் உன் எஜமானர் தேடுகின்றார்
    பதவிசாய் அவருடனே சென்று விடு
    கால்கடுக்கச் சாலைதனில் நின்றிடாதே

    பசுவதையைத் தடுத்திடவே விதி செய்தோம்
    பாரெங்கும் மேதினியில் உனைக் காப்போம்
    கோமாதா எங்கள் குலமாதா
    என்றுமே நீ ஜகன்மாதா

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    பாசுரங்கள் உனைப் பாடித் துதித்திடவே
    காமதேனு வடிவினிலே எமைக் காப்பாய்
    உலகில் பால் வளமும் ஆறாகப் பெருகச் செய்வாய்

    *****

    ”மேய்ச்சல்நிலம் காய்ந்ததென்று புலம்பெயர்ந்து வந்த நாங்கள் அடிமாடாய்  அவலம் எய்தி வாழுகின்றோம்; இனி சொந்தமண்ணே சொர்க்கமென்று திரும்புகின்றோம்!” என்றுணர்ந்துரைக்கும் மாட்டைக் காணுகின்றோம் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனின் கவிதையில்.

    அடிமாடு

    மேய்ச்சல் நிலம் காய்ந்ததென்று
    விளைநிலம் சீர்கெட்டுப் போனதென்று
    வயக்காடு வீட்டுமனையானதென்று
    ஊரைவிட்டுப் புலம்பெயர்ந்து வந்துவிட்டோம்…

    வந்த இடம் தந்தமிச்சம் உண்டு வாழ்ந்தோம்
    சொந்தமென்று ஏதுமின்றிச் சுற்றி வந்தோம்
    பந்துபோல அடிபட்டு ஓடிநின்றோம்
    சொந்தமண்ணே சொர்க்கமென்று திரும்புகின்றோம்….

    உழைப்பதனை உறிஞ்ச விட்டு
    உயிர் மட்டும் மிச்சம் கொண்டு
    வீடு நோக்கிச் செல்கின்றோம் – இங்கு
    அடிமாடாய் வாழுகின்றோம்…

    மாட்டை வைத்து நல்ல கருத்துள்ள பாட்டுக்களை எழுதியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    பசுவின் கேள்வி?
    பிறந்து வளர் சிறு மழலைகள் – அறிவு
    சிறந்து ஒளிர் பெரியீர் இப்பாரில் பலரும்
    ருசித்துப் பருகிடப் பால் சுரக்கும் எமக்கு
    புசிக்க நற்பசும்புற்கள் அருகி நிலமெங்கும்
    நெகிழி சூழ் உலகாக்கி முப்பொழுதும்
    மகிழ்ந்தே மிகு கேளிக்கையால் குலவி
    மனம் போன போக்கதனில் நிதம் உழலும்
    மானிடப் பதர்களே இன்றியமையாதது
    நீரும் உழவுமென நெஞ்சில் நிலைநிறுத்தி
    நீவிர் மனம் மாறுவது எப்போது ?

    ”மானிடர்களே! மழலையர் முதல் பெரியோர்வரை அனைவரும் பருகிடச் சுவையான பாலளிக்கும் பசுவின்பால் அன்பின்றி பசும்புல்லை அழித்து, நெகிழிகளைப் பெருக்கி, மனம்போன போக்கில் வாழும் நீவிர், உழவின் அருமை உணர்ந்து திருந்துவதெப்போது?” என்று வினவி நிற்கும் பசுவினைத் தம் பாட்டில் காட்டியிருக்கும் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-24

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-24

    தி. இரா. மீனா

    துக்களே

    *இவர் ஜேடர தாசிம்மையனின் மனைவி. ஆடை நெய்வது இவரது காயகமாகும். தாசிம்மையனோடு சேர்ந்து இவர் வரலாறும் சிறப்பானது. ’தாசய்யப் பிரிய இராமநாதா ’ இவரது முத்திரையாகும்.

    “பக்தனெனில் பசவண்ணர் போலிருக்க வேண்டும்
    ஜங்கமனெனில் பிரபுதேவர் போலிருக்க வேண்டும்
    யோகியெனில் சித்தராமன் போலிருக்க வேண்டும்
    போகியெனில் சென்னபசவண்ணர் போலிருக்க வேண்டும்
    ஐக்கியமெனில் அஜகண்ணர் போலிருக்க வேண்டும்
    இவர்தம் கருணையின் மேன்மையைப் பெற்று
    மடிந்தவர் போலிருக்க வேண்டுமேயன்றி
    தத்துவப் பேச்செதற்கைய்யா?
    தாசய்யப்பிரிய இராமநாதனே.”

    தேசிகேந்திர சங்கனபசவய்யா

    தேசிகேந்திரன் [நாடோடி] என்ற அடைமொழியோடு அழைக்கப் படுவதால் பற்றற்ற சரணராக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். “நிரஞ்சன சென்ன பசவலிங்கா“ இவரது முத்திரையாகும்.

    1. “ஆடிச் சோர்வதில்லை என்கால்கள்
    செய்து சோர்வதில்லை என்கைகள்
    பார்த்துச் சோர்வதில்லை என்கண்கள்
    பாடிச் சோர்வதில்லை என் நா
    கேட்டுச் சோர்வதில்லை என் செவிகள்
    வேண்டிச் சோர்ந்து போகாது குருநிரஞ்சனாம்
    சென்னபசவலிங்கனே உன் சரணரின் அன்பில் என் எண்ணம்”

    2. “கண்டேன் என்பது பொய், காணாமலிருப்பது மெய்
    காணக்கூடியவர்கள் எதிரில் பார்ப்பதுவே உண்மை
    காணாதவர் எதிரில் பார்க்காமலிருப்பதே உண்மை
    குரு நிரஞ்சனாம் சென்ன பசவலிங்கத்தில்
    துவைதம் என்பதில்லை அத்வைதம் என்பதுவுமில்லை
    என்றான் சரணன்“

    3. “கல்லிற்குள் இருக்கும் நெருப்பு எரியாமல் தெரியாது
    கட்டைக்குள் இருக்கும் நெருப்பு பயன்படாமல் பரவாது
    விதை நீரும் மண்ணுமின்றி முளைக்காது
    அது போலவே சரணரின் பேச்சு
    உண்மை தவிரப் பிறிதொன்றை வெளிப்படுத்தாது
    குரு நிரஞ்சனாம் சென்ன பசவலிங்கத்தின் வார்த்தை
    மாசற்ற காரணத்தால்”

    4. “கால்களில்லாத நடை
    கைகளில்லாத தொடுகை
    கண்களில்லாத பார்வை
    காதுகளில்லாத கேட்டல்
    நாசியற்ற நறுமணம்
    நாவற்ற மொழி
    தானெனும் அகந்தையற்ற சுகம்
    குரு நிரஞ்சனாம் சென்ன பசவலிங்கனே
    உனது சரணர் இலிங்க ஐக்கியமானோர்.”

    நகேய மாரிதந்தே

    சிரிக்கவைப்பதையே காயகமாகக் கொண்ட கலைஞர். ”ஆதுர வைரி மாரேஸ்வரா“ என்பது இவரது முத்திரையாகும். உவமைகள், கருத் துச்சுருக்கம் ஆகியவைகளோடு வசனங்கள் அமைகின்றன.

    1. “நெல்லைப் பரப்பி வலையை விரித்து
    சிட்டுக் குருவியைப் பிடிக்கின்றவனைப் போல
    பேச்சில் அத்வைதம் கற்று
    சம்ஸ்கிருதச் சொல்லின் கடைவிரித்து
    மீன் வாயில் இரையைப் போட்டது போல்
    எத்தகைய பேச்சது? மாய்மாலம்
    ஆதுரவைரி மாரேஸ்வரனே“

    2. “குருவிடம் குணமில்லையெனில் வணக்கம் ஏன்?
    இலிங்கத்தில் உயர்வின்றேல் சந்தியாவந்தனம் ஏன்?
    ஜங்கமத்தில் சாதியின்றேல் உயர்வு தாழ்வு ஏன்?
    இதை என்னவென்பது?
    குரு பிறப்பிற்கு ஆட்பட்டவன்
    இலிங்கம் அடையாளமுடையது
    ஜங்கமன் சாதிக்கு ஆட்பட்டவன்
    இது எனக்கு மகிழ்ச்சியளித்ததா?
    வஞ்சனை வேண்டாம் ஆதுரவைரி மாரேஸ்வரனே.”

    3. “விதை வெடித்து முளைக்கும் போது இலை எங்கிருந்தது?
    இலை படரும் போது கிளை எங்கிருந்தது?
    கிளை பரவி மலர் மலரும் போது கனி எங்கிருந்தது?
    கனி கனிந்து சாறு நிரம்பியபோது சுவை எங்கிருந்தது?
    சுவைத்துப் பயனறிந்த போது என்ன நிறைவு அது!
    இத்துணை அறிவாய், ஆதுரவைரி மாரேஸ்வரனே“

    நிஜகுண யோகி 

    சிம்மலகி இவருடைய ஊராகும். இவரது முத்திரை நிஜகுண யோகி.

    “நானிருக்கும் வரையில் நீயிருப்பாயா மாயையே?
    நானில்லையெனில் நீயில்லை
    நான் நீ என்னும் இரண்டு நிலையழிய
    ஆனந்த நிஜகுண யோகம்”

    நிராலம்ப பிரபுதேவா 

    ‘நிஸ்ஸங்க நிராள நிஜலிங்க பிரபுவே’ இவரது முத்திரையாகும். சிவசக்தி பஞ்சாங்க வசன என்ற பார்வையில் சிவாச்சாரத்தை அறியவேண்டுமென்பதை வலியுறுத்துகிறார்.

    “குரு கருணையால் கொடுத்த இட்டலிங்கத்தை
    கை, மனம், எண்ணத்தில் வைத்து வழிபட முடியாமல்
    உயர்சாதியினர் சொல்கேட்டு  விரயத்துக்கு ஆட்படுகின்ற
    செம்பு பித்தளை எனப் பலதெய்வங்களைப் பாடி
    வணங்கும் அஞ்ஞானத்தின் உருவமானவரை
    எனக்கு ஒருமுறையும் காட்டாதிருப்பாய்
    நிஸ்ஸங்க நிராள நிஜலிங்கப் பிரபுவே”

    [தொடரும்]

    [*துக்களேயின் அற்புதமான சிந்திக்கும் ஆற்றல் அவளை ஜேடர தாசிம்மய்யனின் மனைவியாக்கிய சுவையான நிகழ்வு முன்னர் – ஜேடரதாசிம்மையன் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.]

    Share
  • மாற்றங்களின் விதை (சிறுகதை)

    மாற்றங்களின் விதை (சிறுகதை)

    இராகராமன்

    காலையில் காலிங் பெல் அடித்து ஓய்ந்தது.

    அரைத்தூக்கத்தில் எழுந்து வெளியில் சென்று கதவில் மாட்டி இருந்த மஞ்சள் பையில் பால் பாக்கெட்டுகளை எடுக்கப் போனேன். பால்காரர் “என்ன சார் உங்கள் லிப்ட்ல மட்டும் லிப்ட் பட்டன்களை அழுத்த மரக் குச்சிகளைத் தனியாக வைக்கவில்லை. பட்டன்களை முதுகாலும் கை முட்டியாலும் நெற்றியாலும் அழுத்த எத்தனை கஷ்டமாக இருக்கு” என்று அலுத்துக்கொண்டார்.  மரக்குச்சிகள் காலியாகிவிட்டன போலும்.

    வாசக் கதவின் பக்கத்தில் புதிதாக வைக்கப்பட்டு இருந்த வாஷ் பேசினில் ஹாண்ட் வாஷ் மூலம் கையை அலம்பிக்கொண்டு பால் பாக்கெட்டுகளை உள்ளே எடுத்து வந்தேன். ஊரடங்கு அனுபவத்திற்கு அப்புறம் எல்லார் வீட்டிலேயும் வாசல் கதவின் பக்கத்திலேயே வாஷ் பேசின் வைத்துக் கொடுத்த ப்ளாட் ஓனர் மிகத் தங்கமானவர் தான். இல்லையென்றால் அரசாங்க உத்தரவுப் படி நம் செலவில் வாசலில் வாஷ் பேசின் வைக்க வேண்டும். நல்லவேளை கால் அலம்பத் தனியாகக் குழாய் வைக்கவில்லை. வைத்திருந்தால் வீட்டு வாசலே பார்க்க ஒரு மாதிரி தோற்றமளிக்கும்.

    பால்பாக்கெட்டுகளை அதற்காக வைக்கப்பட்டிருந்த சோப்பில் நன்றாக அலம்பி வைத்துவிட்டு, திரும்ப படுத்துக்கொண்டு கொஞ்சம் கண்ணயர்ந்தேன்.

    அப்பா வாசல் பக்கத்தில் “அய்யோ….. அம்மா……“ என்று கத்தும் சப்தம் கேட்டு உடனே வேகமாக எழுந்து போய் பார்த்தேன். அப்பா வாசல் கதவைத் திறந்து வாசல் பக்கத்தில் வீசப்பட்டிருந்த நியூஸ் பேப்பரை ஆசையோடு எடுத்திருக்கிறார். தற்போது பேப்பர்கள் அனைத்தும் வைரஸ் ப்ரீயாக ஹாட் கேசில் கொதிக்கக் கொதிக்க வருவதால் அவசரப்பட்டு கை பொத்துவிட்டது  “அப்பா கொஞ்சம் வெயிட் பண்ணி ஆறியவுடன் பேப்பரை எடுக்கணும் னு எத்தனை தடவை சொல்றது”. சமாதானப்படுத்திவிட்டு இன்று இனி தூக்கம் இவ்வளவு தான் என்று தேற்றிக்கொண்டு பல் தேய்க்கத் தயாரானேன்.

    எதிர்பாராத வகையில் திரும்ப ஒரு சத்தம், கிச்சனிலிருந்து வந்தது.  மனைவி அங்கிருந்து “பால் பாக்கெட் எடுத்து வச்சீங்களே. பாக்கெட்டுகளை சோப்பு போட்டு கழுவினீங்களா? எப்போதும் மறந்துடுவீங்களே” என்று அதட்டல் குரலில் சத்தமாகக் கேட்டாள்.  “எல்லாம் வாசல் வாஷ் பேசின்லேயே கழுவியாச்சு” டக்குனு பதில் சொன்னேன். காலையிலேயே இப்படி எல்லாம் கஷ்டப்படுவோம்னு கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

    அதற்குள் காலேஜில் பைனல் இயர் படிக்கும் பையன் “அப்பா! நியூஸ் பாத்தீங்களா? இன்னிக்கு ஒரு நல்ல நியூஸ். “காலேஜ் வரைக்கும் இந்த வருடம் ஆல் பாஸ் தானாம். நல்ல படிச்சவங்கள நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு”  என்றான். எல்கேஜி, யூகேஜி மாதிரி காலேஜ் வரை ஆல் பாஸ் என்றால் எதற்குப் படிப்பு என்று தெரியவில்லை. ரொம்பவும் எல்லோரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

    பல்தேய்த்து முகம் கழுவி வருவதற்குள், ஹாலில் அப்பா வழக்கம் போல டிவி யில் நியூசை ஓட விட்டு, பேப்பருக்கு இடையிடையே எட்டிப் பார்த்துக்கொண்டு கேட்க ஆரம்பித்தார். பேப்பர் படிக்கிறாரா? அல்லது நியூஸ் பார்க்கிறாரா? இரண்டையும் எப்படி பார்த்துப் புரிந்துகொள்வது என்பது அவரிடமிருந்து தான் படிக்கவேண்டும்.

    டிவியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தன… விளம்பரங்கள் ஒவ்வொன்றாக ஓடி முடிந்ததும்…….

    “இன்றைய தலைப்புச் செய்திகள்.

    நாட்டில் நகரங்களில் காற்று மாசு முழுவதுமாக குறைந்து உள்ளதாலும் நதிகளிலும் குளங்களிலும் தண்ணீர் நிறைந்து உள்ளதாலும் கிராம மக்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பு. அமெரிக்கா வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு திரும்ப ஆர்வம்.

    உலக அளவில் பெட்ரோல் பயன்பாடு முற்றிலும் நின்றுவிட்டதால் சர்வதேச ஆயில் விலை பீப்பாய் ஒன்றுக்கு ஐந்து டாலராக வீழ்ச்சி.

    இந்தியாவில் அனைத்து டீசல் மற்றும் பெட்ரோல் வண்டிகள் புழக்கம் நிறுத்தப்பட்டு எலக்ட்ரிக் வண்டிகளாக மாற்றப்பட்டதால் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் சார்ஜ் நிலையங்களாக மாற்றம்.

    டாஸ்மாக் சரக்குகள் அனைத்தும் மாதக் கணக்கில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதாலும் மக்கள் முழுவதுமாகக் குடிப்பழக்கத்தை மறந்துவிட்டதாலும் உடன் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த அவசரக் கூட்டம். மந்திரிகள் விரைவு. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தொழில் அதிபர்கள் முதலாளிகளாக உள்ள சரக்கு தயாரிக்கும் கம்பெனிகள்  பெரும் அதிர்ச்சி.

    சாலைகள் முழுவதும் வெறிச்சோடிக் கிடப்பதால் அனைத்து நாட்களிலும்  மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் பயணிக்கலாம். அரசு உத்தரவு.

    எல்லோரும் சோசியல் டிஸ்டான்ஸ் கடைப்பிடிப்பதால் சிறிய ரக வீடுகள் விற்பனையில் கடும் வீழ்ச்சி.

    இனி விரிவான செய்திகள்.”

    முகத்தை டவலால் துடைத்துக்கொண்டே தலைப்புச் செய்திகளைக் கேட்டுக்கொண்டே இருக்கும் போது வாசலில் திரும்பவும் பெல் சத்தம். பக்கத்து வீட்டுச் சாரதி எட்டிப் பார்த்தார்.

    “சூடா பேப்பர்ல என்ன போட்டிருக்கான்” கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

    “ஒண்ணுமில்லை மாமா” அப்பா காலையில் அவசர அவசரமாக பேப்பரை எடுத்து சூடு போட்டுக்கொண்டதை சொன்னேன். “அதனால தான் நாம் சுடச் சுட நியூஸ் படிக்க முடிகிறது இல்லையா?” என்று சிரித்துக்கொண்டார்.

    சரி… சரி…. மாமா நல்ல நேரத்தில் தான் வந்தேள்.  கொஞ்சம் கஷாயம் சாப்பிடுங்கோ.  எங்க வீட்டிலேயும் காப்பி டீ யை நிறுத்தி பல மாதங்களாச்சி. இரண்டு வேளையும் கஷாயம் தான். கொஞ்சம் கசப்பாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. அப்பாவுக்கு மட்டும் காபி தனியாக கொடுக்க வேண்டியிருக்கு. “காபி தான் எனக்கு உயிர்” ன்னு அவ்வப்போது மிரட்டுவது பயமா இருக்கு” என்றாள் மனைவி.

    காபி சாப்பிடும் அப்பாவைப் பார்க்கும்போது ”கொடுத்து வச்ச மனுஷன்…..” என்று நினைக்கத் தோன்றியது.

    கொஞ்ச நேரத்தில் அவள் கிச்சனிலிருந்து தலையை நீட்டி “இந்தாங்க இன்னிக்கு வந்த வாட்ஸ் அப் நியூஸைப் படிங்க” என்று செல்போனை மூஞ்சிக்கு நேரா நீட்டினாள். என்ன தான் கரடியாகக் கத்தினாலும் பக்கத்தில் வந்து அவள் செல்போனை நீட்டியது ஆரோக்கியக் குறைவாகவே இருந்தது. “கீப் சோசியல் டிஸ்டன்ஸ்!” என்று சொல்லி அதை வாங்கி மெசேஜைப் படித்தேன். எல்லா ஐடி கம்பெனிகளும் இனிமேல் ஒர்க் ப்ரம் ஹோம் தானாம். வருடம் ஒரு முறை மஸ்டரிங் மாதிரி ஒரு நாள் வந்து முகத்தை நேரடியாகக் காண்பித்துப் போக வேண்டுமாம். இதைப் படித்ததும் மயக்கமே வந்துவிட்டது. ஒர்க் ப்ரம் ஹோம் வீடுகளில் ஆண்கள் படும் பாடு சொல்லி மாளாது. எதற்கு எடுத்தாலும் “நான் ஆபிஸ் வேலையா இருக்கேன். நீங்களே ஏதாவது சமையல் பண்ணி எனக்கும் வையுங்களேன்..” என்று எல்லார் வீட்டிலேயும் இந்தக் கூத்து தான்.

    இந்த நேரத்தில் ப்ளாஷ் நியூஸ் திரும்பத் திரும்ப டிவியில் ஓடியது. அப்படி என்னதான் ஓடுகிறது என்று பார்த்தால்….

    ”மதுப்பிரியர்கள் வாங்கி வைத்திருந்த பாட்டில்களை கோபத்தில் குப்பைத் தொட்டியில் போட்டு உடைத்ததால் அதை குடித்த தெரு நாய்கள் ஆட்டம் போட்டு மட்டையாகின.”

    “டிவி காரனுக்கு வேற வேலை இல்லை. இது ஒரு ப்ளாஷ் நியூசா” என்று அப்பா தலையில் அடித்துக்கொண்டார். அடிக்கடி ப்ளாஷ் நியூஸ் வருவதால் மெயின் நியூஸ் என்ன? என்பதை தேடித்தான் பிடிக்கவேண்டும்.

    இதற்குள் காலையிலேயே குளித்துவிட்டு, கோவிலுக்குச் சென்று திரும்பி வந்த அம்மா தானும் சேர்ந்துகொண்டு தன் பிரச்சினையைச் சொன்னாள்.

    “ஏன்டா கோவில்லே அடிக்கிற கூத்து தாங்க முடியலைடா.  சோஷியல் டிஸ்டன்ஸ் என்று ஆறு அடிக்கு ஒருவர் நிற்கறதாலே கியூ இரண்டு மைல் தூரம் நீள்றது… ஒருத்தருக்கு ஒருத்தர் எதுவும் பேச முடியவில்லை. மணிக் கணக்காக நின்று உள்ளே போனா பட்டாச்சாரியார் துளசியை அஞ்சடி தூரத்திலிருந்து தூக்கி எறியறார். தீர்த்தம் வெளியிலே குழாய்ல வரும், வாயைத் திறந்தால் இரண்டு சொட்டு விழும்” ங்கிறார். நல்லவேளை தேங்காய் கொண்டு வர தடை விதிச்சதுனால நல்லதாப் போச்சு… அதையும் தூக்கிப் போட்டுப் பிடிச்சுக்குங்க என்று சொன்னால்……. நினைக்கவே பயமா இருக்குடா”. அம்மா அலுத்துக்கொண்டாள்.  “சாமியையும் அம்பாளையுமே சோஷியல் டிஸ்டன்ஸ் என்று சொல்லி அஞ்சடி தள்ளித் தள்ளித் தான் வெச்சுருக்கா…. அப்பத்தான் நமக்கெல்லாம் ஒரு தெளிவு பிறக்கும் என்று சொல்றா…..எல்லாம் காலத்தின் கோலம்….” அம்மா சொல்லி வருத்தப்பட்டாள்.

    அதற்குள் இன்னொரு பெல். வாசலில் காலிங்பெல் இரண்டு மூன்று முறை ஒலித்தது. என்னவென்று திறந்து பார்த்தேன். முகத்தில் கருப்புக் கலரில் இரண்டு பக்கமும் மண்டையோடு படம் போட்ட மாஸ்க் போட்டுக்கொண்டு இரண்டு பேர். திருட்டுக் கும்பலோ என்று ஒரு கணம் பயந்து உடம்பு வேர்த்துவிட்டது. மாஸ்க் போடுவதால் வந்திருப்பவர் யார் என்று தெளிவாக முகம் தெரிவதில்லை. அதுவும் மாஸ்க் கம்பெனிகள் போட்டி போட்டுக்கொண்டு என்னென்னவோ படம் போட்டு மாஸ்க் தயாரிக்கிறார்கள். பார்க்கவே பயமாக இருக்கிறது.

    நானும் உள்ளே சென்று மாஸ்க் போட்டுக்கொண்டு வந்தேன்.

    ஆன்லைனில் ஒரு பெரிய மளிகைப் பொருட்கள் ஒரு அட்டைப் பெட்டியில் வந்திறங்கியது. அத்துடன் ஒரு ரோஸ் கலர் ஐந்து லிட்டர் கேன் இருந்தது.  “என்ன இது?….. ஹாண்ட் வாஷ் 5 லிட்டர் கேன் நான் கேட்கவே இல்லையே?…. இதை எதற்காகக்  கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டேன்.

    “சார்.. நீங்கள் இரண்டாயிரத்து நானூறு ரூபாய்க்கு ஆர்டர் செய்திருக்கிறீர்கள்…இரண்டாயிரம் ரூபாய்க்கு ஆர்டர் செய்தால் அஞ்சு லிட்டர் ஹாண்ட் வாஷ் கேன் இலவசம்” என்று கூறிய போது தலை சுற்றியது. குடும்ப பட்ஜெட்டில் இப்போது இவற்றுக்குத் தான் அதிகச் செலவாகிறது.

    “இதைப் பார்த்தே யோசிக்கிறீங்களே…..இதுவே உங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தான் வரும்…குறைஞ்சது ஒரு நாளைக்கு இருபது முறையாவது கைகளை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்..” என்று கூடவே வழக்கமான அட்வைஸ் பண்ணி விட்டு நின்றுகொண்டிருந்தான்.  கைகளை சோப்புப் போட்டு கழுவிக்கொண்டு டெபிட் கார்டில் பணம் கொடுத்தேன். சோஷியல் டிஸ்டன்ஸ் என்பதால் ஐந்து அடி தள்ளி இருந்து கார்டை அவர்கள் பாக்கெட்டை நோக்கிக் காட்டினால் அவர்கள் பாக்கெட்டில் உள்ள மெஷினில் பணம் டெபிட் ஆகி எனக்கு மெஸேஜ் வந்துவிட்டது… “என்னென்ன மாற்றங்கள் இந்த உலகத்தையே புரட்டிப் போட்ட வைரஸால் ஏற்பட்டுவிட்டன? என்று நினைத்து அசந்து போய்விட்டேன்.

    நமது முன்னோர்கள் ஆச்சாரம், சுத்தம், சுகாதாரம் என்று குழந்தைப் பருவத்திலேயே பழக்கப்படுத்தி அடித்துக்கொண்டவையே இவை என்பதை நினைக்கும் போது காலச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதையும் எண்ணிப் பார்த்தேன்.

    திடீர் என்று ஓடிக்கொண்டிருந்த மின்விசிறிச்  சப்தம் நின்றது. உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது. மனைவி “என்ன….இவ்வளவு நேரம் தூங்கினது போறாதா? எழுந்திருங்க” என்று தண்ணியைக் கொட்டாத குறையாக, மின்விசிறியை “டொக்” என்று அணைத்துவிட்டு நான் எழுந்திருப்பதற்குக் காத்திருந்தாள்.

    “இவ்வளவு நேரம் கண்டது கனவா?”

    கனவில் கண்ட மாற்றங்கள் முழுவதுமாக எப்போது வரும்? என்று சிரித்துக்கொண்டே கொலைகார வைரஸ்- க்கு மனதார ஒரு கும்பிடு போட்டேன்.

    Share
  • நாலடியார் நயம் – 19

    நாலடியார் நயம் – 19

    நாங்குநேரி வாசஸ்ரீ

    19. பெருமை

    பாடல் 181

    ஈதல் இசையாது இளமைசேண் நீங்குதலால்
    காத லவரும் கருத்தல்லர்; – காதலித்து
    ஆதுநாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்
    போவதே போலும் பொரு.

    மற்றவருக்கு ஒன்றைக் கொடுக்க
    மாட்டாது இளமையும் வீணாகக்
    கழிய ஆசை வைத்திருந்த
    காதல் பெண்டிரும் நீங்கினர்
    இன்னும் நாம் வாழ்வோமெனும்
    இச்சையை விடுத்துத் துறப்பதே
    ஆகச்சிறந்த செயல்.

    பாடல் 182

    இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைத்தேம் என்றெண்ணிப்
    பொச்சாந்து ஒழுகுவார் பேதையார்; – அச்சார்வு
    நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
    என்றும் பரிவ திலர்.

    இல்வாழ்வால் இன்புற்றோம்
    இருக்கின்றோம் குறையின்றியென
    இனி வரப்போகும் துன்பமெனும்
    இடர் மறந்திருப்பர் அறிவிலார்
    இல்வாழ்க்கையின்பம் நிலையாக
    இருப்பன போல் தோன்றி
    இல்லாமல் அழிபவை எனும்
    இவ்வுண்மையை உணர்ந்தோர்
    இவ்வுலகில் எப்போதும் வருந்தார்.

    பாடல் 183

    மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
    சிறுமைப் படாதேநீர் வாழ்மின் – அறிஞராய்
    நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்
    இன்றிப் பலவும் உள.

    இருந்த இடத்திலிருந்தே காரணமின்றி
    இளமை நிறம் பருவங்கள் போன்றவற்றில்
    மாற்றங்கள் பல உண்டாகுமெனவே
    மறுமைக்கு வித்தாகும் நல்லறங்களை
    மயக்கமின்றிச் செய்து துன்பமடையாமல்
    அறிவுடையோராய் வாழுங்கள்!

    பாடல் 184

    உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
    இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; – கொடைக்கடனும்
    சாஅயக் கண்ணும் பெரியார்போல மற்றையார்
    ஆஅயம் கண்ணும் அரிது.

    மழைபெய்யாது வறண்ட காலத்தும்
    ஊற்றுநீர்க் கிணறு பிறர் இறைத்து
    உண்ணக்கொடுத்து ஊரைக்காக்குமென்பர்
    வறுமையால் தளர்ந்தபோதும் பெரியோர்
    வாரிக்கொடுப்பர் பிறருக்கு சிறியரோ
    செல்வம்மிக்க காலத்தும் தரமாட்டார்.

    பாடல் 185

    உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
    கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; – செல்வம்
    பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
    செய்வர் செயற் பாலவை.

    வெள்ளம் வரும் காலம் மிகுநீரைக் கொடுத்து
    வையகத்தோரை உண்பித்த ஆறு
    நீரற்ற காலத்தும் ஊற்றுக்குழியில்
    நீர்சுரந்து உதவுதல்போல் பெரியோர்
    தம் செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து
    தம்மாலான உதவியாற்றுவர் வறுமையிலும்.

    பாடல்186

    பெருவரை நாட! பெரியேர்கண் தீமை
    கருநரைமேல் சூடேபோல் தோன்றும்; – கருநரையைக்
    கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
    ஒன்றானும் தோன்றாக் கெடும்.

    பெரிய மலைகளையுடை
    பரந்த நாட்டின் வேந்தனே!
    பெரியோரிடம் உண்டான குற்றம்
    பெரும் வெள்ளெருதின்மேல்
    போடப்பட்ட சூடுபோல்
    தெளிவாகத் தோன்றும்
    தூயவெள்ளெருதைக் கொன்ற
    குற்றத்தைச் சிறியோர் செய்யின்
    குற்றமாகத் தோன்றாதழிந்து விடும்.

    பாடல் 187

    இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்,
    பயைந்த துணையும் பரிவாம் – அசைந்த
    நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
    பகையேயும் பாடு பெறும்.

    அற்பத்தனம் மிக்க நற்குணம்
    அற்றவரிடம் கொண்ட நட்பு
    வருத்தும் துன்பத்தையே தரும்
    விளையாட்டிற்குக்கூட தீய
    கெடுதலை விரும்பா நல்லவரிடம்
    கொண்ட பகையும் பெருமையைத்தரும்.

    பாடல்188

    மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்து
    ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை; – எல்லாம்
    சலவருள் சாலச் சலமே; நலவருள்
    நன்மை வரம்பாய் விடல்.

    மென்மைக் குணமுள்ள பெண்களிடம்
    மென்மைத்தன்மை உடையவராயும்
    எதிரிகளிடம் அதைவிடுத்து
    எமனும் அஞ்சத்தக்கவராகவும்
    எல்லோரிடத்தும் வஞ்சகம் பேசுபவரிடம்
    எப்போதும் வஞ்சம் பேசுபவராகவும்
    நற்குணமுள்ளவரிடத்து நன்மையாய்
    நடப்பதும் எல்லையாயிருக்கவேண்டும்.

    பாடல் 189

    கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி
    மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
    துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
    விளக்கினுள் ஒண்சுடரே போன்று.

    முகத்தைக் கடுமையாய் வைத்து
    மற்றவர் பற்றி மிகக் கடுஞ்சொல்
    பேசி அறிவை மயங்கச்செய்யினும்
    பிறர்பால் வேறுபாடின்றி தீபத்தின்
    பிரகாச ஒளிச்சுடர் போல்
    அசைவில்லாதவர் தூயமனத்தவர்.

    பாடல் 190

    முன்துற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
    பின்துற்றுத் துற்றவர் சான்றவர்; – அத்துற்று
    முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
    துக்கத்துள் நீக்கி விடும்.

    உண்ணத்தகும் உணவினை நாள்தோறும்
    உண்ணுமுன் இரப்போர்க்குக் கொடுத்து பின்
    உண்ணுவர் சான்றோர் அது முக்குற்றமான
    வெகுளி காமம் மயக்கத்தைப் போக்குவதுடன்
    வாழ்நாள் முழுதும் துன்பத்தினின்று காக்கும்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 81 (மறைமுனி)

    சேக்கிழார் பாடல் நயம் – 81 (மறைமுனி)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ‘’மறைமுனி  அஞ்சினான்போல்  மாதினைப்  பார்க்க  மாதும்
    இறைவனே அஞ்சவேண்டாம்  இயற்பகை  வெல்லும்  என்ன
    அறைகழல்    அண்ணல் கேளா  அடியனேன்  அவரை  எல்லாம்
    தரையிடைப்   படுத்து   கின்றேன் தளர்ந்தருள்  செய்யேல்  என்று’’

    சேக்கிழார்பாடுகின்றார். இதன் நயத்தை இங்கே காண்போம்! இயற்பகையார் தம் மனைவியை முற்றும் துறந்து, வந்தவருக்குக் கொடுத்தபின், அம்மாது சிவவேதியராய் வந்த முனிவரைக் கண்டு அவர் இறைவனே என உணர்ந்து நின்றார். பின்னர் அவ்வேதியரிடம், ‘’இனி யான் செய்யத்தக்க பணி யாது?’’ எனக்  கேட்டு நின்ற  இயற்பகையாரிடம் ‘’இப்பெண்ணை யான் தனியே அழைத்துக் கொண்டு, உன் சுற்றத்தாரையும், இவ்வூரையும்  கடந்து செல்லும் வகையில் எனக்குத் துணையாக இருப்பாயாக!‘’ என்றார். இவ்வாறு அவ்வந்தணர் கேட்கும் வகையில் ஏதும் செய்யாது நின்றது தம் பிழை எனக் கருதி உடனே அவ்வூராருடன் போரிடுவதற்கு உரிய கவசங்களைப் பூண்டார். அவ்வூரினர், ‘’நம் ஊரில் வாழும் சிவனடியார் தம்மிடம் வந்த தூர்த்தருக்கு உரியவளாய்த் தம் மனைவியை வழங்கியதும், அப்பெண்ணை அவர் ஏற்றுக்கொண்டதும் தகாது!’’  என்று எண்ணியவராய் அவர்களைச் சூழ்ந்து தடுத்தனர்.

    அவர்கள்  தம் கையில்  கிட்டிய படைக்கருவிகளை எடுத்துக்கொண்டு கடலைப் போல் அவர்களைச் சூழ்ந்து  நின்றனர். மேலும் பலர் அந்தக்  காமாந்தகாரனை, ’’இழிகுணம் படைத்தவனே! எங்கள் குலக்கொடி  போன்றவளை   இங்கேயே விட்டு நீக்கி, ஊரார் கூறும் பழியையும்  தவிர்த்து விலகி  நீ போவாயாக!’’ என்று போர்தொடுத்து  வந்தனர்.

    அவர்கள் அவ்வாறு வெருட்டியது கண்டு சற்றே அஞ்சியவர்போல் நின்ற அந்த நான்மறை அந்தணர், இயற்பகையின் மனைவியாரை நோக்கினார்!

    அவரும் “தலைவரே! பயப்படவேண்டாம்; அவர்களை இயற்பகை வெல்லும்“ என்று சொல்ல; இதனை ஆதரித்து ஓசையிடும் வீரக் கழலணிந்த பெருமையுடையாராகிய நாயனார் கேட்டு, “அடியேன் அவர்களை எல்லாம், உமக்கு இடையூறு செய்யாமல் நிலத்தில் வீழ்த்தி விடுகின்றேன்; தேவரீர் தளரவேண்டாம்“ என்று சொல்லிக்கொண்டே அவர்களுடன் போரிடத் தொடங்கினார்.

    இப்பாடலில்  ‘’மறைமுனி’’  என்ற தொடர்  இறைவன்  முனிவராந்தன்மையை மறைத்துத் தூர்த்த வேடந்தாங்கி வந்தவர் என்ற பொருளைத் தருகிறது. இறைவன் மறைகளாலும் காணுதற்கு அரியவன்! அவனை ‘’நேரிழையைக் கலந்திருந்தே  புலன்களைந்தும் வென்றான்’’ என்று தேவாரம் பாடுகிறது.

    அவர் முன்னர் அடியார் மனைவியை நாடி விரும்பியது போலவும்,  பின்னர் அஞ்சுவது போலவும் நடித்தார். அதனால் அவர் அடியாரின் மன உறுதியைச் சோதித்தமை புலப்படும். மேலும் இப்பாடலில்,

    ‘’இறைவனே,  அஞ்ச வேண்டாம்  இயற்பகை வெல்லும்!’’

    என்ற தொடரின் பொருள் நுட்பம்  போற்றுதற்கு உரியது. மனைவியார் கணவரின் கொள்கைப் பிடிப்பை உணர்த்தும் வகையில் ‘’ இயற்பகை  வெல்லும்!’’ என்றார். அவர் அந்த  மறைமுனியை, ‘இறைவன்’ என்று புரிந்து கொண்டமையால் அவர் இறைவனை அடையும் பக்குவமம் தவமும் உடையவர் என்பதும் புலப்படும். அவ்வகையில்  தம் கணவர் என்ற உறவை நீக்கி, இறைவனுக்குத் தம்மை அர்ப்பணித்தார் ஆதலால், ‘’இயற்பகை வெல்லும்!’’ என்றார்.

    நாயகிகள் தமது கணவர் பெயரைச் சொல்லலாகாது என்பது விதியும் வழக்குமாம். இங்கு அம்மையார் இப்போது தாம் இறைவனது  உடைமைப் பொருளாயினமையாலே நாயனாரிடத்து அவர் தமது கணவர் என்ற நினைப்பினை அறவே ஒழித்து நின்றார். ஆதலின் கணவரின் பெயரைக் கூறினார்! காரைக்கால் அம்மையாரின் ‘காதலாகிக்  கசிந்த’ கடவுட்பற்று  கணவரையே  வணங்க வைத்ததை, இங்கே இயற்பகையார் அடைக்கலப் பொருளாகிய மனைவியாரை வணங்கியதோடு ஒப்புநோக்கி மகிழ்தற்கு உரியது! அடுத்து மனைவியார், ‘’இயற்பகை வெல்லும்!” என்று உறுதிபடக் கூறியவுடன்,

    ‘’அறைகழல்’’   அண்ணல் கேளா  அடியனேன்  அவரை  எல்லாம்
    தரையிடைப்   படுத்து  கின்றேன் தளர்ந்தருள்  செய்யேல்!’’

    என்று கூறிப் போரிட்டதாகச் சேக்கிழார் பாடுகின்றார். இயற்பகையார் அணிந்த வீரக்கழல் ‘’இவரே வெல்வார்!’’ என்று ஒலிப்பது போலவும், ‘’புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம்!‘’ என்ற வகையில் இயற்பகையாரும் ஐம்புல ஆசையை வென்று, தாம் இறைவனாகக் கருதிய அடியார்பால் மனைவியை ஒப்படைத்த செயலைப் போற்றுவது போலவும் நயம்பட அமைந்துள்ளது. இதனை இப்புராணமே பின்னர் விளக்கும்!

    Share
  • இனச்சுடர் எழுக!

    இனச்சுடர் எழுக!

    ஏறன் சிவா

    வான்தரும் சுடர்போல் வண்டமிழ் இனத்தார்
    மனங்களில் ஒளிவிடும் சுடரே!
    தீந்தமிழ் என்னும் தென்னவள் வயிற்றில்
    திடமுள மழலையாய்ப் பிறந்தாய்!
    மீன்புலி வில்லை ஏந்திய வேந்தர்
    அரியணைக் கட்டிலில் தவழ்ந்தாய்!
    பைந்தமிழ் மக்கள் தோள்களில் ஏறிப்
    பாரெலாம் ஊர்வலம் புரிந்தாய்!

    பொன்னிறத் தட்டில் பொலிவுறு மணியாய்ப்
    புகழுடன் வளமுடன் திகழ;
    மண்பிறப் பில்..நீ மாபெரும் பிறப்பை
    அடைந்ததை வெறுக்கிற சிலரோ;
    நற்றமிழ் மொழியை நவில்வதால் தமிழ்த்தாய்ப்
    பிள்ளைமேல் இனக்கொலை தொடுத்தார்!
    எற்றைக்கும் சுடரை இருள்கரம் மறைக்காது
    என்பதை அறிகிலார் மூடர்!

    பெருகுக விரைந்து பெருவெளி முழுதும்
    பெருகுக பெருகுக சுடரே!
    உருகுக தமிழர் உளத்தினைக் குழம்பாய்
    உருக்குக உருக்குக சுடரே!
    பருகுக பகைவர்ப் படையினை முற்றாய்ப்
    பருகுக பருகுக சுடரே!
    செருகுக தமிழ் இனச்சுடர் நெருப்பு
    திசையெலாம் எழுந்தவுண் மையை!

    Share
  • Annakannan Ideas 43: Add Credibility score

    Annakannan Ideas 43: Add Credibility score

    Media is running behind breaking news. Many media professionals are publishing stories without proper verification. So many users forwarding them, even without reading in full. How to deal with fake news / message / image / video / memes? Here is my solution.

     

    (To subscribe Annakannan’s channel in YouTube, please click here : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 42: Fake ID-களைத் தவிர்ப்பது எப்படி?

    அண்ணாகண்ணன் யோசனைகள் 42: Fake ID-களைத் தவிர்ப்பது எப்படி?

    Fake ID எனப்படுகிற போலிக் கணக்குகளை எப்படிக் கண்டறிவது? எப்படி தவிர்ப்பது? எப்படி தடுப்பது? இதோ என் யோசனை.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாலடியார் நயம் – 18

    நாலடியார் நயம் – 18

    நாங்குநேரி வாசஸ்ரீ

     18. நல்லினம் சேர்தல்

    பாடல் 171

    அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி
    நெறியல்ல செய்தொழுகி யவ்வும் – நெறியறிந்த
    நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப்
    புற்பனிப் பற்றுவிட் டாங்கு.

    புத்தியில்லா வயதில் அடக்கமற்றவரோடு
    பழகி நெறியல்லாதன செய்து நேர்ந்த
    பாவங்களும் நல்லாரைக் கூடி ஒழுகலால்
    புல்லின்மேல் படிந்த பனிநீர் வெயிலில்
    படிந்த அதனின்று நீங்குதல் போல்விலகும்.

    பாடல் 172

    அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
    பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
    வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
    பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

    அறநெறி அறிவீர் அஞ்சுவீர் எமனுக்கு
    அறியார் கூறும் கடுஞ்சொல் பொறுப்பீர்
    வஞ்சனைக்குணம் வந்தடையாது காப்பீர்
    வெறுப்பீர் தீயவரின் தீச்செயலை
    வாழ்நாள் முழுதும் பெரியோரின்
    வாய்ச்சொல்லாம் அறிவுரை கேட்டு நடப்பீர்.

    பாடல் 173

    அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
    உடங்குடம்பு கொண்டார்க்கு உறலால் – தொடங்கிப்
    பிறப்பின்னாது என்றுணரும் பேரறிவி னாரை
    உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.

    சேர்ந்தவர்களைப் பிரிவதும்
    சரிசெய்ய முடியா வியாதியும்
    மரணமும் உடல் எடுத்தார்க்கு
    உடனே வந்தெய்தலால் பழையதாய்த்
    தொடர்ந்து வரும் பிறப்பினைத்
    துன்பம் தருவது என அறியும்
    உண்மை அறிவுடையாரை என் மனம்
    உறுதியாய்ப் பற்றுவதாக!

    பாடல் 174

    இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
    பிறப்பினை யாரும் முனியார் – பிறப்பினுள்
    பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்
    நண்பாற்றி நட்கப் பெறின்.

    ஆராய்ந்து நோக்கின் பிறப்பு
    ஆறாத் துன்பம் தருவது எனினும்
    நற்குணங்கள்நிறை நல்லோரை
    நாடி எக்காலமும் நட்புகொண்டு
    நடக்கப்பெறின் இப்பிறப்பை
    எவரும் வெறுக்கமாட்டார்.

    பாடல் 175

    ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
    பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; – ஓரும்
    குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
    நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

    ஊரில் உள்ள சாக்கடைநீர்
    சிறப்புபொருந்திய நீரைச்
    சேர்ந்தக்கால் வேறுபெயரும்
    உண்டாகி பரிசுத்த நீரென
    உரைக்கப்படுதல் போல
    குலப்பெருமை இல்லாதோரும்
    குணப் பெருமையுடை
    நல்லாரைச் சேர்ந்தால்
    நிற்பர் மலை போல் உயர்ந்து.

    பாடல் 176

    ஒண்கதிர் வான்மதியம் சேர்தலால் ஓங்கிய
    அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்
    குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்
    குன்றன்னார் கேண்மை கொளின்.

    அழகிய இடத்தையுடை வானத்தில்
    அழகான கதிர்களையுடை சந்திரனைச்
    சேர்ந்திருப்பதால் களங்கமாகிய முயலும்
    சந்திரனைத் தொழும்போது
    சேர்த்துத் தொழப்படுமென்பதுபோல்
    குறைந்த சிறப்புடையவர்களும்
    குன்றுபோலும் நற்குணங்களுடையவரைச்
    சேரும்நேரம் மேன்மை அடைவர்.
    (சந்திரனது களங்கத்தை முயல் எனக்கூறுதல் கவிஞர்கள் மரபு).

    பாடல் 177

    பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது
    நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; – தேரின்
    சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
    பெரியார் பெருமையைச் சார்ந்து.

    பாலுடன் கலந்த தண்ணீர்
    பாலாகக் கருதப்படுமேயல்லாது
    நீரின் நிறத்தை வேறுபடுத்தாது
    நன்கு ஆராய்ந்தால் நற்குணமுடைப்
    பெரியோரின் பெருங்குணத்தைச்
    சேர்தலால் சிறியோரின்
    சிறுமைக்குணமும் தோன்றாது.

    பாடல் 178

    கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
    ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;
    மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்
    செல்லாவாம் செற்றார்சினம்.

    பலவயல்கள் சேர்ந்த பெரிய நிலத்திலே
    மரக்கட்டையைப் பற்றி நிற்கும் புல்
    உழவரின் கலப்பைக்கு சிறிதும் அசையாது
    வலிமையற்றவராயினும் தம்மினும்
    வலிமை மிக்காரைச் சார்ந்தால்
    பகைவரின் சினம் எடுபடாமல் போய்விடும்.

    பாடல் 179

    நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்
    குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; – கலநலத்தைத்
    தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
    தீயினம் சேரக் கெடும்.

    நிலவளத்தால் செழித்து வளரும்
    நெற்பயிர்போல் தாங்கள் சேரும்
    கூட்டத்தால் ஆவர் மேலானவராய்
    கடலில் செல்லும் கப்பலின் பெருமையை
    சுழற்காற்றுத் தாக்கிக் கெடுப்பதுபோல்
    தீயோர் சேர்க்கையால் கெடும்
    ஒருவரின் மேன்மை.

    பாடல் 180

    மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த
    இனத்தால் இகழப் படுவர் – புனத்து
    வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
    எறிபுனந் தீப்பட்டக் கால்.

    காடு தீப்பற்றி எரியும்போது மணம்
    கமழும் சந்தனமரமும் வேங்கைமரமும்
    கருகிப்போகும் என்பதுபோல் மனதில்
    கடுகளவு குற்றமில்லா நல்லவராயினும்
    கெட்டவர் சேர்க்கையால் இகழப்படுவர்.

    Share