Blog

  • (Peer Reviewed) அடுத்தவர் பார்வையும் அழகர் நோக்கும் (உரையாசிரியர் பரிமேலழகரின் உரைப்பண்பாடு பற்றியதோர் ஆய்வு)

    (Peer Reviewed) அடுத்தவர் பார்வையும் அழகர் நோக்கும் (உரையாசிரியர் பரிமேலழகரின் உரைப்பண்பாடு பற்றியதோர் ஆய்வு)

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com


    முன்னுரை

    தமிழிலக்கண, இலக்கிய உரைகள் படைப்பிலக்கியங்களுக்கு நிகரான அகப்புறக் கட்டமைப்பைக் கொண்டவை அவற்றை ஒருமுறை ஓதியறிந்தாரும் இந்த உண்மையை உணர்வர், ஒப்புவர். பரிமேலழகரின் திருக்குறள் உரையும் அவற்றுள் ஒன்று. வலிமையான தரவுகளோ சான்றுகளோ இல்லாத நிலையிலும் தமிழியல் உலகத்தின் மாபெரும் மறுதலிப்புக்கு ஆளானவர். இதனால் புலமையுலகுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு பெரிது. ஒரு மாபெரும் இலக்கியச் செல்வத்தின் அருமை பெருமைகளை மீட்டெடுத்து ஆய்வுலகத்தின் பார்வைக்கு வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. அழகரின் உரைகாணும் நெறிகளில் ‘பண்பாடு காத்தல்’ என்பதும் ஒன்று.  மாறுபட்ட கருத்துக்களை அவர் கையாளும் முறை பற்றி இந்தக் கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    • உரைவேற்றுமையும் அழகர் பண்பாடும்

        அழகர் திருக்குறள் உரையில் எந்தக் குறட்பாவிற்கான உரையிலும் தனது கருத்தே சரி என்னும் வாதத்தை முன்வைத்தார் என்பதற்கு வலிவான சான்றேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

    1. தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்வார்.
    2. தன்னுடைய கருத்திற்கேற்ற பாடங்களையே ஏற்பார்.
    3. மூலத்திற்கு நெருங்கி வராத கருத்துக்களைச் சுட்டுவார்.
    4. உரைநெறி பிறழ்வை இலக்கண, இலக்கியச் சான்றுகளால் மறுப்பார்.
    5. பிற உரையாசிரியர்களின் இருவகைப் புலமைச் சோர்வை எடுத்துக் காட்டுவார்.
    6. மறுக்கவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் இயலாத நிலையில் ‘இவ்வாறு உரைப்பாரும் உளர்’ என்று சுட்டிக்காட்டி அமைவார்.

    இவற்றுள் இறுதியாக அமைந்த ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடருக்குள் அமைந்திருக்கும் உரைநிலைப் பண்பாட்டை அறிவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.

    1.1. பார்வையும் நோக்கும்

    பார்வையும் நோக்குமாகிய இரண்டும் கண்களின் வினையே. எனினும் ‘பார்வை’ என்பது மனத்தோடும் மூளையோடும் பொருந்தாத நிலையிலும் நிகழக்கூடும். ஆனால் நோக்கு அத்தகையதன்று. ஒரு குறிக்கோளோடு பார்ப்பதைத்தான் நோக்கு என்ற சொல் குறிக்கும்.

    ‘அரிமா நோக்கு’ 1
    ‘நோக்குதற் காரணம்’ 2
    ‘கோல்நோக்கி வாழும் குட’ 3
    ‘நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்’ 4
    ‘இருநோக்கு இவள் உண்கண்’ 5
    ‘கண்களவு கொள்ளும சிறுநோக்கம்’ 6
    ‘நோக்கரிய நோக்கே!’ 7
    ‘பருகிய நோக்கெனும்’ 8
    ‘மீன் நோக்கு நீள்வயல்’ 9

    முதலிய இலக்கியத் தொடர்களும் நோக்கம், பார்வையின் வேறுபட்டிருப்பதைப் புலப்படுத்தக் கூடும்.

    1.2. உரைப்பாரும் உளர்

    பழந்தமிழிலக்கண, இலக்கிய உரைகளில் ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடர் பெருவழக்கு. பிற உரையாசிரியர்களின் கருத்துக்களுக்கான மாறுபாட்டை எடுத்துக் காட்டுகின்ற நெறியினும்  இது வேறானது. ‘மூலத்திற்கான என் கருத்து இது. ஆனால் இவர் இப்படிச் சொல்கிறார். எதனை ஏற்பது என்பது கற்பார் கடன்’ என்பதே ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடர் உணர்த்தும் பொருளாகும். இத்தகைய நேர்வுகளில் பிற உரையாசிரியர்கள் அவ்வாறு உரைகொள்வதற்கான காரணத்தையும் சுட்டிச் செல்கிறாரேயன்றி அக்காரணமே தவறு என்று அவர் சொல்ல மாட்டார்.

    1.3. ‘உரைப்பினும் அமையும்’ என்பது வேறு

    உரைப்பாரும் உளர்’ என்னும் தொடரால் பரிமேலழகர் உரைப்பது ‘உரைப்பினும் அமையும்’ என்பதனினும் வேறானது. ‘உரைப்பினும் அமையும்’ என்றால் குறிப்பிட்ட குறட்பாவிற்குத் தன்னளவிலேயே பொருத்தமான வேறொரு உரையினைக் காணமுடியும் என்பதைச் சுட்டுவதாகும். ஒரு குறட்பாவின் அமைப்பு ஒன்றிற்கும் மேற்பட்ட கருத்துக்களைத் தனக்கே தோன்றும் அளவுக்கு அமைந்திருக்கிறது என்றால் பிறருக்குத் தோன்றுதல் சொல்ல வேண்டாவாயிற்று. இந்தப் பண்பின் அடிப்படையில்தான் அவர் உரைப்பாரும் உளர் என்னும் தொடரைக் கையாள்கிறார். இத்தகைய உயர்பண்பு தற்காலத்தில் காண்பதற்கு அரியது என்பதன்று. யாண்டும் இல்லையென்றே கூறலாம்.

    “ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
    கொற்றம் கொளக்கிடந்தது இல்”10

    என்னும் குறட்பாவிற்கு,

    “ஒற்றினானே எல்லார் கண்ணும் ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை அறியாத அரசன் வென்றியடையக் கிடந்த வேறொரு நெறியில்லை”11

    என்று பொழிப்புரை எழுதி,

    “இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும்.”12

    என்று மற்றொரு உரை எழுதுகிறார். மேற்கண்ட உரைகளில் முன்னதில் ‘கிடந்தது’ என்பதற்கு ‘வெற்றிக்கான வழி’ என்று உரைகாணும் அழகர், பின்னதில் ‘வெற்றியே’ என்று உரைகாண்கிறார். இரண்டு உரைகளும் குறட்பாவின் சொற்கிடக்கையால் அழகர் ஒருவருக்கே தோன்றியனவாம்.

    “மதியும் மடந்தை முகனும் அறியா
    பதியிற் கலங்கிய மீன்”13

    என்னும் குறட்பாவிற்கு,

    “வானத்து மீன்கள் வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம் மடந்தை முகத்தினையும் இது மதி இது முகம் என்று  அறியமாட்டாது  தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன”14

    எனப் பொழிப்புரை எழுதி,

    “இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின் மீன்கள் அறியா என்று உரைப்பினும் அமையும்.”15

    என்று மற்றொரு உரை எழுதுகிறார். இவ்விரண்டு உரைகளுள் முன்னதில் மீன்களின் கலக்கமாகிய செயல் முதன்மைப்படுத்தப்படுகிறது. பின்னதில் மீன்கள் படர்க்கையாக்கப்பட்டு “இவை அறியும் இவை அறியா” என வினைமுடிபு காணப்பட்டுள்ளது. இரண்டு உரைகளும் குறட்பாவின் சொற்கிடக்கையால் அழகர் ஒருவருக்கே தோன்றியனவாம். இதிலிருந்து மாற்றுரை காண்பதிலும், மாற்றுரையை மறுக்கும் போதும் அழகர் கொண்டிருந்த பொறுப்புணர்வும் அச்சமும் சிந்திக்கற்பாலன. எடுத்தேன்  கவிழ்த்தேன் என்று எடுத்தெறிந்து உரையெழுதும் போக்கு அவர் அறியாதது. தனது கருத்து இது என்று சொல்லுவார். பிறருடைய கருத்துக்கு மூலத்தின் அடிப்படையிலேயே மறுப்புச் சொல்வாரேயன்றித் தனது கருத்தினை மையமாக வைத்து அவர் மறுப்புச் சொன்னதாகத் தகவல் இல்லை. சுய முரண்பாடு இல்லாத உரையாசிரியர் அழகர். இனிச், சில குறட்பாக்களுக்குப் பிறர் கூறும் கருத்துக்களை அவர் மதிக்கின்ற பாங்கு சுட்டும் ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடருக்கு ஆளான சில குறட்பாக்களை ஆராயலாம்.

    1.3.1. செய்யாமையா? செய்யாமலா?

    இருக்கின்ற பாடத்தை வைத்து உரை சொல்கிறார் அழகர். அதாவது தான் கூறும் உரைக்கேற்ற பாடத்தைக் கொள்கிறார். அதுதான் பாடமாக இருத்தல் வேண்டும் என்று நம்புகிறார். உரை எழுதுகிறார்.

    “செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது”16

    என்னும் குறட்பாவிற்குத்,

    “தனக்கு முன் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது”17

    எனப் பொழிப்புரை எழுதுகிறார். எழுதிக்,

    “கைம்மாறெல்லாம் காரணமுடையவாகலின் காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின.”18

    என விளக்கவுரை தருகிறார். ‘கைம்மாறெலலாம் காரணமுடையன’ என்றால் செய்கிற உதவியெல்லாம் திரும்பிவரும் நாள் (பிரதிபலன்) எதிர்பார்த்து’ (தற்காலத் திருமணத்தில் மொய் எழுதுவதுபோல) என்பதாம்.  ஆனால் அதிகாரம் ‘செய்ந்நன்றி அறிதல்’ ஆதலின் செய்த நன்றியைப் பற்றித்தான் அதிகாரப் பொருண்மை இருத்தல் வேண்டும். இருக்கிறது. செய்வாரின் தகுதி பற்றியோ அவன் செய்வானா மாட்டானா என்னும் ஐயம் பற்றியோ செய்ய இயலாத அவன் நிலைமை பற்றியோ சிந்திக்குமாறு அவ்வதிகாரப் பொருண்மை அமையவில்லை. ‘செய்’ந்நன்றி என்பதாலேயே ‘செய்யாமல் செய்’த உதவி என்பது பாடமாயிற்று என்பது அழகர் கருத்து. ஆனால்,

    “செய்யாமைச் செய்த உதவி எனப் பாடம் ஓதி மதித்து உதவ மாட்டாமை உள்ள இடத்துச் செய்த உதவி” என்று உரைப்பாரும் உளர்”19

    பிற உரையாசிரியர்கள் செய்திருக்கும் உரையினைச் சுட்டிக்காட்டி அமைகிறார். இங்கே நோக்க வேண்டியவை,

    • அதிகாரப் பொருண்மையை உள்வாங்கித் தான் கொண்ட

    பாடத்தின் அடிப்படையில் உரை எழுதுகிறார்.

    • பிறர் கொள்ளும் பாடத்தையும் அதனடிப்படையில்

    அவர் சொல்லும் உரையையும் காட்சிப்படுத்துகிறார்.

    • அவ்வுரை பற்றிய எந்தக் கருத்தினையும்

    பதிவு செய்யாமல் விடுகிறார்.

    • அவர் கொண்ட பாடம் பற்றிய தமது கருத்தினையும்

    பதிவு செய்யாமல் விடுகிறார்.

    ‘செய்யாமை’ என்னும் மற்றவர் கொண்ட பாடமும் ‘செய்யாமல்’ என்னும் அழகர் கொண்ட பாடமும் பாடபேதங்களாக மட்டும் நிற்காமல், மற்றவரின் பார்வையையும் அழகரின் நோக்கினையும் அறிந்து கொள்ள உதவும் கருவிகளாகவும் பயன்படுகிறது.

    1.3.2. ‘ஈதல்’ பண்பா? பொருட்பன்மையா?

    மேல் அதிகாரப் பொருண்மையினை உள்வாங்கிச் ‘செய்தற்கு இயலாத வறியவர்கள்’ என்னும் பொருள் தரும் செய்யாமையைப் பாடபேதமாகக் கொண்டு எழுதப்பட்ட உரையினை எடுத்தோதிய அழகர் மற்றொரு இடத்தில் முந்தைய குறட்பாக்களின் சாரத்தை உள்வாங்கி உரையெழுதிய குறட்பாவையும் பிறர் தமது புலமையாற்றலால் எழுதிய பல உரைகளையும் காட்சிப்படுத்துகிறார்.

    “இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலன் உடையான் கண்ணே உள”20

    என்பது குறட்பா. ஈகை என்னும் அதிகாரத்தில் மூன்றாவதாக இடம்பெற்றிருக்கும் இந்தக் குறட்பாவிற்கு,

    “யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்க்கண் சொல்லாமையும் அதனைத் தன் கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும் இவ்விரண்டும் குலன் உடையான் கண்ணே உளவாவன” 21

    எனப் பொழிப்புரை எழுதுகிறார்.

    1.3.2.1. பிறருடைய பார்வையில் ஈதல்

    உரையாமை, ஈதல் என்னும் இரண்டும் தொழிலடியாகப் பிறந்த பண்புச் சொற்கள். அவ்விருவகைப் பண்புகளும் நல்ல குடியிலே பிறந்தவரிடத்தில் உளவாகும் என்பது அழகர் கொண்ட இலக்கணத்திற்கான கருத்து. ஆனால் ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்’ என்பதற்கு மற்றவர் கூறும் உரைகளைப்  பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்.

    1. அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும்22

    2. அதனைப் பின்னும் பிறனொருவன் சென்று அவன் உரையாவகைக்
    கொடுத்தல் எனவும்23

    3. யான் இதுபொழுது பொருளுடையன் அல்லேன் எனக் கரப்பான்
    சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும்24

    உரைப்பாரும் உளர். அவர், ’ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.25

    இந்தக் குறட்பாவில் தன்னுடைய உரைக்கு ‘ஈதல்’ என்பதை வினையடியாகப் பிறந்த பண்பாகக் கொள்கிறார் அழகர். உரையாமையும் ஈதலுமாகிய இவையிரண்டும்” (இவ்விரண்டு உயர்பண்புகளும்) என்னும் உரைப்பகுதி காண்க.

    1.3.2.2. பொருட்பன்மை என்றால் என்ன?

    ஈதலாகிய தொழில் ஒன்று. ஈவார்க்குப் பயன்படும் பொருள்கள் பல. எனவே தொழில் ஒன்றாயினும் ஈயப்படும் பொருள்கள் பலவாதலால் ‘ஈதல்’ என்பது பொருட்பன்மையாயிற்று. ‘தானம்’ ஒன்றுதான். அன்னதானம், சொன்னதானம், கன்னிகாதானம், பூதானம், வித்யாதானம் எனப் பல்வகைப்படுதலின் ‘ஈதல்’ என்னும் சொல்லுக்குள் அடங்கும் தானங்கள் பலவாம். இந்தக் கருத்தினை அழகர் ஏற்றுக் கொள்கிறாரா என்பது இங்கே கருத்தில்லை. இப்படிச் சொல்கிறார்கள் என்று ‘உரைப்பந்தி’ வைப்பதோடு அமைதியடைகிறார்.

    1.3.2.3. அழகர் உரையின் ஆழமும் பொருத்தமும்

    ‘ஈகை’ என்னும் அதிகாரத்தில் ஈகையது இலக்கணம் (221), ஈதலின் சிறப்பு (222), பெறுதலின் இழிவு (222) என நிரல்பட ஆசிரியர் கூறுகிறார்.

    “மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவை உணர்த்தியது”26

    என்னும் மூலக்கொடுமுடியில் நிற்கிறார் அழகர். அதாவது இதற்கு முந்தைய குறட்பாவில் குறிப்பிட்ட தீதினை ஒழிக்க வேண்டுமல்லவா? எது தீது? எவ்வம் உரைத்தல் தீது! அதனால் ‘உரையாமை’ என்றார். இனி நன்மையைச் செய்ய வேண்டுமல்லவா? எது நன்மை? ஈதல் நன்மை! அதனால் ஈதல் என்றார். இலன் என்னும் எவ்வம் உரையாமையும் பண்பு. தொடர்ந்து ஈதலும் பண்பு. இவ்விரண்டு பண்புகளும். நற்குடிப் பிறந்தார் மாட்டு உளவாம் எனக் கருத்துரைத்தார். ஈதல் என்பதற்கான பல்வகை அறச்செயல்கள் என்னும் பொருள் பற்றிக் கருத்துரைக்காமல் தானுண்டு தன் உரையுண்டு’ என அடக்கமாகிவிடுவதைக் காணமுடிகிறது.

    1.3.3. பெருமைச் சிதைவா? நம்பிக்கைத் துரோகமா?

    பிறனுக்குரிய மனையாளை விரும்புவதை வடநூல்கள் ‘பரகீயம்’ என வழங்கும். அதாவது அவளுடைய ஒப்புதலோடு நடப்பதால் பிழையில்லை என்பது கருத்து. ஆனால் திருக்குறள் அதனை அறத்துப்பாலில் வைத்து ஆராய்வதால் பாவம் என்றே வலியுறுத்துகிறது. நடப்பியலில் அது ஒருவனுக்கான பெருமையைச் சீர்குலைத்துவிடும் என்றும் சுட்டுகிறது.

    “எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல்” 27

    என்னும் குறட்பாவிற்குக்,

    “காமமயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல் எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும்?” 28

    என வினாவடிவில் அமைந்த குறட்பாவிற்கு வினா வடிவிலேயே உரையெழுதியிருக்கிறார். எழுதியவர்,

    ‘தேரான் பிறன்’ என்பதனைத் ‘தம்மை ஐயுறாத பிறன் என்று உரைப்பாரும் உளர்”29

    எனப் பிறர் கூறும் உரைப்பகுதியினைச் சுட்டிச் செல்கிறார்.

    1.3.3.1. அழகரின் அரிய நோக்கு

    அதிகாரம் அறத்துப்பாலில் அமைந்துள்ளதாலும் ‘பிறனில்’ என்பதற்குப் பிறன் ஒருவனுடைய மனைவி இருக்கும் இல்லம் என்னும் பொருளே சிறத்தலாலும் ‘தேரான்’ என்பதற்குத் தாம் செய்யும் பிழையை உணராதவன் என்னும் பொருள் பொருத்தமுடையது என்பதாலும் அவ்வாறு தேராமைக்குக் காமமே காரணம் என்பதாலும் ‘தம்மை ஐயுறாத பிறன்’ என்பதில் பொருட்சிறப்பு ஏதுமில்லையாதலாலும் பிறனை ஏமாற்றுதல் என்பதனினும் கணநேரக் காமத்திற்காக ‘அறவழு’ உண்டாக்கும் வடு பெரிது என்பதாலும் அழகருக்கு இவ்வாறு உரைகூற நேர்ந்தது. மேலும் இலக்கிய நுகர்வு அடிப்படையிலும் ‘எனைத்துணை’ என்பதற்கேற்பத் ‘தினைத்துணை’ என்னும் முரண் தரும்பொருள் நுட்பத்தை அழகர் சிந்தித்து உரையெழுதுவதாகக் கருதலாம்.     தினைத்துணையும் தேரான் (ஆகி) பிறனில் புகல் (செய்யின்) எனைத்துணையார் ஆயினும் என்னாம்? என்னும் உரைநடை நிரலை ‘என்னாத்த படிச்சு என்னாத்த செய்யறது?” என்னும் வழக்கோடு ஒப்புநோக்குக.

    ‘பிறனில் புகல்’ என்னும் காரியத்திற்குத் ‘தேராமையைக் காரணமாக்கினால்தான் அறம் சிறக்க ஏதுவாகும். ‘தேராதவனாகிய பிறன்’ என்பதனினும் ‘அறக்கழிவு’ என்பதனைத் தான் தேராமல்’ என்பது வலிமையுடைத்து. அதிகாரம் பிறனில் விழைபவனுடைய ஒழுக்கம் பற்றியதேயன்றித் ‘தம்மை ஐயுறாத பிறனைப் பற்றியதன்று’. அழகர் இந்த அளவுக்குச் செல்லவில்லை. ‘இப்படியும் உரை அமைந்திருக்கிறது’  அப்படிச் சொல்வதற்கு இடமிருக்கிறது என்ற அளவில் சுட்டி அமைதியடைகிறார்.

    1.3.4. ஆவது அறிதல் என்றால் என்ன?

    திருவள்ளுவர் அடையாளப்படுத்தும் பத்து உடைமைகளில் அறிவுடைமை என்பதும் ஒன்று. இவ்வதிகாரத்தில் ஐந்து பாடல்களில் அறிவின் இலக்கணம் கூறிய வள்ளுவர், தொடர்ந்து அவ்வறிவினை உடையாரது இலக்கணத்தைக் கூறுகிறார். அறிவு நுண்பொருளாதலின் அதன் உடைமையை உடையார் செய்யும் செயல்வழியேயன்றிப் பிறவழி அறிதல் இயலாதாம். எனவே எதிர்வருவதை அறியும் ஆற்றலுடையாரும் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுபவருமே அறிவுடையார் என இலக்கணம் வகுப்பர் (427, 428). அவ்விலக்கணம் கூறும் குறட்பாக்களுள்,

    “அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்”30

    என்பதும் ஒன்று. இக்குறட்பாவிற்கு,

    “அறிவுடையராவார் வரக்கடவதனை முன் அறிய வல்லார் அறிவிலராவார்  அதனை முன் அறிய மாட்டாதார்”

    முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது; வந்தால் அறிதல்”31

    என்னும் விளக்கத்தினை அழகர் எழுதுகிறார். எழுதி,

    “இனி, ‘ஆவது அறிவார்’ என்பதற்குத் ‘தமக்கு நன்மையறிவார்’ என்று உரைப்பாரும் உளர்”32

    என ஆவது அறிதல் என்னும் தொடருக்குப் பிறர் காணும் உரையினைப் பதிவிடுகிறார். ஆவது என்னும் தொடருக்குச் செயப்படுபொருளாகத் தமக்கு ஆவது எனக்கொள்ளுமம் பிறருடைய உரைக்கருத்துப் பற்றி எதுவும் தெரிவிக்காது அப்படியே பதிவு செய்து விடுகிறார்.

    1.3.4.1. அழகரின் அரிய நோக்கு

    பிறிதின் நோய் தன்நோய்போல் போற்றாத நிலையில் அறிவினால் உண்டாகும் பயனேதும் இல்லையாதலால் அறிவின் பயன் பிறர் நலம் பேணுதலே என்பது சொல்லாமல் பெறப்படும். தனக்கு மட்டுமன்றிப் பிறருக்கும் கேடு வரும் செயல்ளைத் தன் இருவகை அறிவாலும் உய்த்துணர்ந்து காப்பதே அறிவுடையாருக்கு இலக்கணமாக இருத்தல் இயலும்; ‘எதிரதாக் காக்கும் அறிவினார்’ என்பதும் ‘வருமுன்னர் காவாதான் வாழ்க்கை’ என்பதும் அக்கருத்தின் சாரமே! ‘ஆவது அறிவது’ என்பதற்குத் தமக்கு வரும் நன்மை என உரைகொள்வது அறிவுடைமையின் முழுப்பயனைச் சுட்டுவதாகத் தெரியவில்லை. மேலும் அவ்வுரைப்பொருள் அழகரின் உரைப்பொருளிலேயே அடங்கிவிடுகிறது என்பதையும் நோக்கினால் அழகர் உரையின் மாண்பு விளங்கும். இருப்பினும் இவற்றில் எதனையும் முன்னெடுக்காது ‘தமக்கு நன்மை அறிவார்” என்று பிறர் கூறுகின்றனர்’ என வாளா அமைந்துவிடுகிறார்.

    1.3.5. அகத்திணை நுட்பம்

    முப்பெரும் பொருண்மைகளுக்கு உரையெழுதியவர் அழகர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனுள் தொடக்கத்திலேயே ‘வீட்டை’த் தவிர்த்துவிடுகிறார். அவருடைய உரை யாண்டும் முரண்பாடு இல்லாமல் அமைந்ததற்கு இது ஒரு தலையாய காரணம். அந்த வகையில் காமத்துப் பாலுக்கு உரையெழுதுகிறபோது அகத்திணைத் தலைமக்களாகவே அவர் மாறிவிடுகிறார். அகத்திணையின் தலைமைப் பாத்திரம் தோழியே என்பது அறிஞர் முடிவு. தோழிக்கும் காதல் உண்டு. தோழி தலைவியாகிறபோது தலைவி தோழியாவாள். சுட்டி ஒருவர் பெயர்கொளாமைக்குக் காரணம் இதுதான். கண்ணகிக்குத் தேவந்தி தோழியாகலாம். ஆனால் தேவந்திக்குக் கண்ணகி தோழியாக முடியாது. இந்த அகப்பொருள் மரபை உள்வாங்கிக் கொண்டாலேயொழிய  அகத்திணை இலக்கியங்களைச் சுவைப்பது கடினம்.

    1.3.5.1. அழகர் செய்துகொள்ளும் அதிகாரப் பொருளமைதி   

    ஏனைய பால்களில் உள்ள அதிகாரங்களைப் பொருண்மை நிலைக்கு ஏற்பப் பகுத்து உரையெழுதும் அழகர் காமத்துப்பாலின் அதிகாரப்பகிர்வை அகத்துறைகளின் அடிப்படையில் கொள்கிறார். சான்றாக, ‘அவர் வயின் விதும்பல்’ என்னும் அதிகாரப் பொருண்மையைக் கீழ்க்கண்டவாறு பகுத்துக் கொள்கிறார்.

    • தலைமகள் காண்டல் விதுப்பினாற் சொல்லியது (1261)
    • ஆற்றாமை மிகுதலின் இடையீடின்றி நினைக்கற்பாலையல்லை, சிறிது மறக்கல் வேண்டும் என்ற தோழிக்குச் சொன்னது (1262-1264)
    • தலைமகன் வரவு கூற “ஆற்றாயாய்ப் பசக்கற் பாலையல்லை” என்ற தோழிக்குச் சொல்லியது (1265 -1267)
    • வேந்தற்கு உற்றுழி பிரிந்த தலைமகன் வினைமுடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது. (1270)

    இந்தப் பாகுபாடு அதிகாரப் பொருண்மையை நன்கு உள்வாங்குதற்கும் ‘கூற்று யாருக்கு உரியது’ என்பதை அறிந்து கொள்வதற்கும் அதனால் வெளிப்படும் உணர்ச்சியினைத் துல்லியமாக உணர்ந்து கொள்வதற்கும் பயன்படலாம் என்பது அழகர் கருத்து. இந்த அதிகாரத்தில் வந்த ஒரு குறட்பா இப்படி அமைகிறது,

    “புலப்பேன்கொல்? புல்லுவேன் கொல்லோ? கலப்பேன்கொல்?

    கண் அன்ன கேளிர் வரின்”33

    இந்தக் குறட்பாவிற்கு,

    கண்போற் சிறந்த கேளிர் வருவராயின், அவர் வரவு நீட்டித்தமை நோக்கியான் புலக்கக் கடவேனோ? அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக் கடவேனோ? அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்?34

    என்று உரையெழுதிப்,

    “புலவியும் புல்லலும் ஒரு பொழுதின் கண் விரவாமையின் ‘கலப்பேன்கொல்’ என்றாள். மூன்றனையும் செய்தல் கருத்தாகலின் விதுப்பாயிற்று.” 35

    என்ற விளக்கத்தையும் தருகிறார். தந்து,

    “இனிக் கலப்பேன்கொல் என்பதற்கு “ஒரு புதுமை செய்யாது
    பிரியாத நாட்போலக் கலந்து ஒழுகுவேனோ? என்று
    உரைப்பாரும் உளர்.” 36

    எனப் பிறர் கூறும் உரையைப் பதிவு செய்கிறார் அழகர்.

    1.3.5.2. அழகரின் அரிய நோக்கு

    தலைவியின் விதும்பலுக்குக் காரணம் தலைவனின் வரைவு நீட்டிப்பே. நீட்டித்து வந்ததால் புலப்பதா? நீட்டித்தாலும் வந்துவிட்டானே என்பதால் புல்லுவதா? புலத்தலையும் புல்லலையும் ஒரே காலத்தில் செய்ய இயலாதே? புலக்குங்கால் புல்லல் ஆகாது. புல்லுங்கால் புலத்தல் ஆகாதே என்னும் தலைவியின் தடுமாற்றத்தையும் வாராத் தலைவன் வந்துழி அவள் வெளிப்படுத்தும் உணர்ச்சி மெய்ப்பாடுகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு அழகர் உரையெழுதுகிறார். பிறர் புலத்தல், புல்லல் ஆகிய இரண்டு செயல்களின் வேறாய் இயல்பான செயலொன்றே  இருப்பதாக எண்ணி உரையெழுதினர். இலக்கணம் அறியாமையைப் போக்குவது. இலக்கியம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது. அவ்வனுபவங்களை அழகர் தம் கற்பனையில் முழுமையாக்கித் தருகிறார். இருந்தும் பிறருடைய கருத்தினைப் பதிவு செய்வதோடு அமைந்துவிடுகிறார்.

    1.3.6. ‘எனக்கு’ என்றவர் தலைவியா? தோழியா?

    அழகர் தமிழ் மரபறிந்தவர். அவருடைய உரை பலவிடங்களில் இலக்கிய மரபு தழுவி அமைந்துள்ளது. திருக்குறள் ஓர் இலக்கியம். அதற்கு இலக்கிய மரபுசார்ந்த உரை பொருத்தமே. சான்றாகக் ‘கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்பதைச் சிலர் அறிவியல் கண்கொண்டு திறனாய்வு செய்வர். பத்தினிப்பெண்கள் மழைவேண்டின் உடன் மழை வரும் என்பது அந்நாள் சமுதாய நம்பிக்கை. இந்த நம்பிக்கை அவள் கற்பின் வலிமை பற்றிய கற்பனை மதிப்பீடு.  வான்மழை பெறல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே! என்பது இலக்கிய மரபு. அந்தக் குறட்பாவின் இறுதியில் ‘இதனால் கற்புடையாளது ஆற்றல் கூறப்பட்டது’ என்னும் அழகர் குறிப்பினைப் பலரும் நோக்குவதில்லை. இது கட்டுரைப் பொருளுக்கு நேரடித் தொடர்பு இல்லையெனினும் அழகரின் உரை, மரபு சார்ந்த உரை என்பதற்காகச் சுட்டப்பட்டது. அகத்திணை மரபில் தோழி என்பவள் செவிலியின் மகள். ‘ஒன்றித் தோன்றும் தோழி’ என்பது தொல்காப்பியம். எனவே தலைவியுடன் இருவகைக் கைகோளில் உடனிருக்கும் தோழியே கூற்றுக்கு உரியவள். தலைவியைத் தோழி ஆற்றுவதுதான் புலனெறி வழக்கமேயன்றித் தோழியைத் தலைவி ஆற்றியதற்குப் புலனெறி வழக்கம் இன்று. பிரிவின் கண் தலைமகனைத் தலைவியது ஆற்றாமை கூறித் தடுப்பது தோழியின் பணியேயன்றித் தலைவி தன் ஆற்றாமையைத் தானே வெளிப்படுத்தல் இலக்கண மரபன்று. மரபை மறக்காத  அழகர்,

    “செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
    வல்வரவு வாழ்வார்க்கு உரை”37

    என்னும் குறட்பாவைப்,

    ‘பிரிந்து கடிதின் வருவல் என்னும் தலைமகனுக்குத் தோழி சொல்லியது”38

    என்னும் துறையின் கீழ்க் கொண்டுவந்து,

    “நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் (அதனை) எனக்குச் சொல்., அஃதொழிய (பிரிந்து போய்) நின் விரைந்து வருதல்  (சொல்வையாயின்),  (அதனை)  (அதுபொழுது) வாழ்வார்க்குச் சொல்)!”39

    என்னும் பொழிப்புரை எழுதுகிறார். எழுதி,

    “தலைமகளையொழித்து எனக்கு என்றாள் “தான் அவள்” என்னும் வேற்றுமையன்மையின், ………………………

    இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்”40

    என இலக்கண மரபு சுட்டுகிறார். இந்தக் கூற்றினைத் தலைவிக்கு ஆக்குவதால் ‘உரைப்புரட்சி’ எதற்கும் வாய்ப்பில்லை, தலைவிக்கும் தோழிக்குமான உரிமை ஒத்திருப்பதால்.  ஆனால் ‘அவர் அப்படிச் சொல்கிறார்., நான் இப்படிச்  சொல்லுகிறேன்.  அவர் பார்வை அத்தகையது., என் பார்வை இத்தகையது’ எனப் பிற உரையாசிரியர்களைச் சுட்டுவதோடு அமைகிறார். அழகர் இதனைத் தோழி கூற்றாக்கியதற்குக் காரணம் என்ன என்பதைச் சிந்தித்தால் சில இலக்கண மரபு. இலக்கிய மரபுகள் புலனாகும்.

    “தலைவரும் விழுமம் நிலையெடுத் துரைப்பினும்
    போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
    ………………………………………………………………………………………………
    ………………………………………………………………………………………………
    ஒன்றித் தோன்றும் தோழி மேன” 41

    என்னும் அகத்திணை இலக்கண மரபும்,

    “எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வதுஅந்நாள்
    கொண்டிறக்கம் இவள் அரும்பெறல் உயிரே” 42

    என்னும் இலக்கிய மரபும் அகத்திணையின் தலைமை உறுப்பினராகிய தோழியின் கூற்றுப் பகுதிகளாகக் காட்டுவது அழகரின் நினைவுக்கு வந்திருக்கக் கூடும். இவ்வாறு பொருத்தமான கூற்றுக்குரியாரை அடையாளப்படுத்துவதில் அழகருக்கு இருக்கும் ஆர்வம் அக்குறட்பாவின் இலக்கியச் சுவையை மிகுவிப்பதற்கேயன்றி வேறெதுவாயிருக்க  இயலும்?

    நிறைவுரை

    உரையாசிரியர் ஒருவர் தமது உரையை வலியுறுத்துங்கால் ‘ஒரு நெறியையே’ கடைப்பிடிக்கும் உரையுலகில் பண்பாட்டு அடிப்படையிலான உரைநெறியை அழகர் கடைப்பிடித்திருக்கிறார் என்பதே இதுவரை இக்கட்டுரையில் விளக்கப்பட்டவையின் சாரமாகும். ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்னும் முனைப்பு பழந்தமிழ் உரையாசிரியர்களிடம் காண்பது அரிது. அழகரிடம் அது அறவேயில்லை. ‘எனக்கு இப்படித் தோன்றுகிறது’. அவருக்கு அப்படித் தோன்றுகிறது., ‘அதற்கு அது காரணம்’ என்று கூறுகிற உயர்ந்த பண்பாட்டைக் காணமுடிகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேறுபட்ட உரைகள் தனக்கே தோன்றுவதையும் பதிவு செய்கிறார். தனக்கான உரிமை பிறர்க்கும் உண்டு என நம்புகிறார். அவர்க்கான உரிமையை மதிக்கிறார். கவிஞர்களைச் சான்றோர்கள் என்று அழைக்கும் மரபு கிடையாது. ஆனால் சங்கப் புலவர்கள் ‘சங்கச் சான்றோர்கள்’ என அழைக்கப்படும் அந்தப் பெருமையைப் பெற்றிருந்தார்கள். அவர்களுடைய புலமைக்கு  அவர்களுடைய சான்றாண்மை தாங்கு தளமாயிருந்ததே காரணம். சங்கச் சான்றோர்களைத் தாங்கிய அதே சான்றாண்மை உரையாசிரியராகிய அழகருடைய புலமையையும் தாங்கியிருப்பதைச் சுட்டிக் காட்டுவதற்கு  இக்கட்டுரை பயன்படக் கூடும். பண்டைச் செந்தமிழ்ப் பனுவல்களுக்கு உரையியற்றிய பேரறிஞர் பலருள்ளும் தம் உரையோவிய நுட்ப வினைத்திறத்தால் எம் உள்ளங்கவர்ந்து நிற்பவர் பரிமேலழகரேயாவார்43 என்னும் நாவலர் ந.மு.வே. நாட்டார் ஐயா அவர்களின் புகழுரையோடு இக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

    சான்றெண் விளக்கம்

    1. பவணந்தி முனிவர்                                       நன்னூல்                                                நூ.எண். 19
    2. தொல்காப்பியர்                                               தொல்காப்பியம்                         நூ.எண். 1361
    3. திருவள்ளுவர்                                                      திருக்குறள்                                        கு.எண். 542
    4. மேலது                                                                                                                                                கு.எண். 1068
    5. பரிமேலழகர்                                                        மேலது உரை                                   கு.எண். 1093
    6. திருவள்ளுவர்                                                      திருக்குறள்                                        கு.எண். 1092
    7. மாணிக்க வாசகர்                                          திருவாசகம் (சிவ.பு)                  வரி. 76
    8. கம்பர்                                                                          கம்பராமாயணம்                       பா.எண். 516
    9. குலசேகர ஆழ்வார்                                       பெருமாள் திருமொழி             பா.எண். 690
    10. திருவள்ளுவர்                                                     திருக்குறள்                                          கு.எண். 583
    11. பரிமேலழகர்                                                      மேலது உரை
    12. மேலது
    13. திருவள்ளுவர்                                                     திருக்குறள்                                           கு.எண். 1116
    14. பரிமேலழகர்                                                      மேலது உரை
    15. மேலது
    16. திருவள்ளுவர்                                                    திருக்குறள்                                            கு.எண். 101
    17. பரிமேலழகர்                                                     மேலது உரை
    18. மேலது
    19. மேலது
    20. திருவள்ளுவர்                                                   திருக்குறள்                                             கு.எண். 223
    21. பரிமேலழகர்                                                    மேலது உரை
    22. மேலது
    23. மேலது
    24. மேலது
    25. மேலது
    26. மேலது
    27. திருவள்ளுவர்                                                    திருக்குறள்                                           கு.எண். 144
    28. பரிமேலழகர்                                                     மேலது உரை
    29. மேலது
    30. திருவள்ளுவர்                                                    திருக்குறள்                                           கு.எண். 427
    31. பரிமேலழகர்                                                     மேலது உரை
    32. மேலது
    33. திருவள்ளுவர்                                                    திருக்குறள்                                           கு.எண். 1267
    34. பரிமேலழகர்                                                     மேலது உரை
    35. மேலது
    36. மேலது
    37. திருவள்ளுவர்                                                     திருக்குறள்                                           கு.எண். 1151
    38. பரிமேலழகர்                                                       மேலது துறைவிளக்கம்
    39. பரிமேலழகர்                                                       திருக்குறள் உரை                          கு.எண். 1151
    40. மேலது
    41. தொல்காப்பியர்                                               தொல்காப்பியம்                            நூ.எண். 985
    42. பெருங்கடுங்கோ                                            கலித்தொகை. பா.க.                   பா.எண். 5.18—19
    43. ந.மு.வேங்கடசாமி நாட்டார்                 இலக்கியக் கட்டுரைகள்        ப185

    துணைநூற் பட்டியல்

    1. நச்சினார்க்கினியர்
    தொல்காப்பியம் பொருளதிகார உரை
    தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை
    மறுபதிப்பு – 1967

    2. திருக்குறள் பரிமேலழகர் உரை
    வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
    உமா பதிப்பகம்  சென்னை – 600 001
    முதற்பதிப்பு – 2009

    3. எஸ்.வையாபுரிப்பிள்ளை
    தமிழ்ச்சுடர் மணிகள்
    குமரி மலர்க் காரியாலயம்
    தேனாம்பேட்டை, சென்னை – 600 018
    முதற்பதிப்பு – 1949

    4. புலவர் ச.சீனிவாசன்,
    திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல்
    மெய்யப்பன் தமிழாய்வு மையம்,
    53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001
    முதற்பதிப்பு – 2002

    5. முனைவர் நா.பாலுசாமி
    பன்முகப் பார்வையில் பரிமேலழகர்
    அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007
    முதற்பதிப்பு – 2005

    6. மு.வை.அரவிந்தன்
    உரையாசிரியர்கள்
    8/7, சிங்கர் தெரு
    பாரிமுனை, சென்னை – 600 108
    முதற்பதிப்பு – 1968

    7. நாவலர். ந.மு.வேங்கடசாமி நாட்டார்
    இலக்கியக் கட்டுரைகள்
    நாவலர். ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளை,
    கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை,
    தஞ்சாவூர் – 613 003


    ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

    ‘அடுத்தவர் பார்வையும் அழகர் நோக்கும்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. படைப்புப் பற்றிய ஆய்வினைத் தவிர்த்துப் படைப்பாளர் மற்றும் திறனாய்வாளன் முதலியோரின் புலமை நலன்களையும் பண்புநலன்களையும் அவர்தம் படைப்புக்களைக் கொண்டே ஆராய்வது என்பது ‘அரைத்தமாவையே அரைக்கும்’ ஆய்வுலகில் ஒரு புதிய முயற்சி. பாரியைப் பாடிய கபிலரின் பாடலகளைக் கொண்டு கபிலரின் பண்புகளை ஆராய்வது போன்றது இது.

    2. ‘உரை வேற்றுமையும் அழகர் பண்பாடும்’ என்னுங் குறுந்தலைப்பில் ஆய்வாளர் நிரல்படுத்தியிருப்பன பாராட்டுக்குரியன.

    3. ‘உரைப்பினும் அமையும்’ என்னுந் தொடர்கொண்டு அழகர் குறட்பாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரைகாண் நெறியை வரவேற்பவர் என்பதை ஆய்வாளர் நிறுவியுள்ளார்.

    4. ‘செய்யாமல்’ செய்யாமை என்னும் இருவேறு பாடங்களில் ‘செய்யாமல்’ என்பதையே தான் பாடமாகக் கொண்டதற்கான அழகர் கூறும் காரணத்தைக் கட்டுரையாளர் குறிப்பாகப் பெறவைத்துள்ளார்.

    5. ‘ஈதல்’ என்பதைப் பிறர் பொருட்பன்மையாகக் கொணடதானாலேயே  அவ்வாறு உரைத்தனர்” என்று காட்டும் அழகர் முந்தைய குறட்பாவை நோக்கி (தீது) ஒழிதற்குரியவனையும் (நன்று) செய்தற்குரியவனையும் (குலனுடையான்) என அடையாளப்படுத்துவதற்காகவே தான் தொழில் பண்பாகக் கொண்டதை ஆய்வாளர் புலப்படுத்தியுள்ளார்.

    6. ‘கலப்பேன் கொல்? என்பதனுள் கலப்புக்குரியவனவாக அழகர் சொல்லியிருப்பதையும் பிறர் கூறியிருப்பதையும எடுத்துக் காட்டும் ஆய்வாளர்  (தலைவியின்) செயலமைதியின் புரிதல் திறனைக் கற்பாருக்கே விட்டுவிடுகிறார்.

    7. இலக்கிய ஆராய்ச்சி பண்பாட்டு ஆராய்ச்சியாகவும் அமையலாம் என்பதற்கும் இலக்கிய உரைக்குள் இத்தகைய பண்பாடடுக் கூறுகளும் அமைந்துள்ளன என்பதற்கும்  இக்கட்டுரை ஒரு எடுத்துக்காட்டாகக் கருதப்படலாம்.

    8. ‘பார்வையும் நோக்கும் என்னும் தலைப்பில் ‘நோக்கு’ என்பதன் பொருள் விளக்கத்திற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட சான்றுகளைத் தந்திருக்கும் ஆய்வாளர் அவற்றைப் பத்தியிலேயே நிரல்படச் சொல்லி, ‘முதலிய இலக்கண இலக்கியப் பதிவுகளிலும்’ என் அடக்கியிருக்கலாம். தரவுகளின் பெருமை (சானறுகளின்) எண்ணிக்கையால் அல்ல. தரத்தால்  தன்மையால்.


     

    Share
  • காம யோகா – 1

    காம யோகா – 1

    சி. ஜெயபாரதன், கனடா

    அந்தி வானம் மயங்கி, மங்கி
    களைத்துப் போனது,
    சினத்தில் கண் சிவந்து
    கதிரவனும்
    தொடுவானைக்
    குருதியில் மூழ்க்கி விட்டான்!
    பெரு நிலவு மாதரசி
    முகம் காட்டிக்
    என்னைக் கண்ணடித்தாள்!
    காமுற்றாள்!

    இருளெனும் கோழி
    அடைகாத்திட அண்ட கோளத்தை
    முட்டையாய்
    மூடினாள் இறக்கையுள்!
    உறக்கம் இல்லா
    உடல் இரண்டு தன்தன்  உயிர்த்துவ
    ஆத்மாவை அனுப்பி,
    முன்பிறப்புத் தொடர்பால்
    ஒன்றை ஒன்று தேடித் சென்று
    தழுவிக் கொண்டன!
    இடம்மாறி , உடல்மாறி, நடைமாறி
    இனிய கசப்பு
    நாடகம் நடத்தின!

    வெகு தூரத்தில் வசிக்கிறோம்
    நெருங்காமல், நீங்காமல்
    விருப்பமுடன்
    தீ காய்வார் போல வாழ்கிறோம்,
    இடைவெளி விட்டு!
    விதிவின்
    விளையாட்டு இதுதான்!
    ஒருத்திக்கு ஒருவன் வாழ்விலே
    இருப்பான்!
    ஒருவனுக்கு ஒருத்தி ஊழ்விதி!
    ஒருவரை ஒருவர்
    நித்தம்
    நினைந்து கொண்டு
    சில நேரம்,
    நேசித்துக் கொண்டு,
    சில நேரம்
    மோதிக் கொண்டு
    பேசியும், பேசாமலும்,
    தண்ணீர் ஒட்டியும் ஒட்டாத
    தாமரை இலை வாழ்வு!
    நிலையான
    நேச மில்லை  எங்கும்!
    எப்போதும்!
    ஊமைப் போர்கள் நிற்கா
    ஒருபோதும்!

    அடிக்கும் போனை, உடனே
    எடுக்காத காதல் மாது!
    பதிவுப் பேச்சை மட்டும், தவறாது
    தனியே கேட்டு மகிழும்
    இனிய மாது!
    இளம் வயதிலே அந்த நாட்களில்
    நிழலாய்ச் சுற்றி வரும்
    வாலிபக் கனவுகள் ஆயிரம்!
    இதயத்தைக்
    குத்திக் கிழித்தவை சில!
    ஆறியும்
    ஆறாத புண்கள் சில!
    கண்ணால், வாயால், காதால்,
    கனவால், நினைவால்,
    தனித்திரைக் காட்சியாய்ப்
    பன்முறை
    பார்த்துப் பார்த்து
    மீண்டும் பார்த்து மகிழும்
    தேனிலவுக்
    காட்சி மயங்கள் !
    பழுத்த, சுவைத்த, இனித்த
    பழங்கதைகள் !

    முதிய இதயங் களுக்கு  அவை
    புத்துயிர் அளிப்பவை.
    கடந்த கால
    வாலிபப் பருவ நினைவுகள்,
    முடிவற்ற
    சின்னஞ் சிறு மனத்திரைக்
    காட்சிகள்!
    சிறகு ஒடிந்த முதிய பறவை
    அவளது
    குரலினிது, வாயினிது.
    கவ்விக் கொள்ளும் கண்களின்
    காந்த சக்தி!
    கவர்ச்சி முறுவல்
    குமரி இல்லை அவள்!
    சிறகுள்ள
    தனிப்பறவை  அவன்!
    சுதந்திரம்
    தூய காதலருக்கு
    கிடைக்காத சொர்க்க புரி.

    யாரையும் ஒருத்தி நேசிக்கலாம்!
    நேசித்துத் தன்னவனாய்
    இதயக் கோவிலில்  வைத்துப்
    பூஜிக்கலாம்!
    ஜாதி, மதம், நாடு, இனம்,
    குலம், நிறம்
    உயர்ச்சி, தாழ்ச்சி, குட்டை
    நெட்டை,, தடிப்பு
    மற்றும் உற்றார், பெற்றார்
    எதிர்ப்புத் தடைகள்
    ஏது  மில்லை.
    உறவிலா  உறவாய்க்  கிடைத்தாய்
    ஒரு கொடையாய்!
    கோரிக்கை யற்றுக் கிடக்கும்
    வேரிற் பழுத்த பலா,
    நீ இப்போது.
    உன் கூண்டில் உண்டு உறங்கி,
    போகாத நாளையும்
    ஆமைப்
    பொழுதையும்
    கழுத்தைப் பிடித்து தள்ளுகிறாய்!

    பல்லாண்டு காலம்
    படுக்கையில் தனியே பல நேரம்
    உறக்கம் வராது
    புரண்டு, புரண்டு, புரண்டு
    உருண்டு கிடக்கும்
    உயிர்த்துவ உடல்கள்
    இரண்டு!
    ஒன்றை ஒன்று கட்டிக் கொண்டு
    மனக் கனவுகளில்
    புனை கதையாய்
    புணர்ந்து கொள்ளத் துடிக்கும்
    ஈருடல்கள்,
    மேள தாள மின்றி
    இனிய
    நாதசுவர வாசிப்பின்றி
    மணந்து கொள்ள விழையும்
    மனிதப் பிறவிகள்.

    யாரவள்?
    ஈரேழு ஆண்டுகள்
    கண்ணீரில் மூழ்கினாள்!
    இராமன்
    வானோக்கிப்  போய்விட்டான்,
    கானகத்தில்
    சீதாவைத் தவிக்க விட்டு,
    தனியே விட்டு!
    தம்பி பரதன்  அடைக்கலம்
    கொடுக்க
    முன் வந்தான்,
    அன்ன மிட்ட கை அந்தக் கை!
    அரிசி கிடைக்காத
    அந்த பஞ்ச காலத்தில்
    ஆருயிர் அளித்த கை.
    அந்தக் கை!

    [தொடரும்]

    Share
  • பூலாங்குறிச்சி கல்வெட்டு விளக்கம்

    பூலாங்குறிச்சி கல்வெட்டு விளக்கம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் இருப்பது தான் பூலாங்குறிச்சி மலை. இம்மலையில் மூன்று கல்வெட்டுகள் முதன்முதலாக 1979 இல் அறியப்பட்டன. அவற்றில் வலப்புற கல்வெட்டு பெரும்பாலும் சிதையாமல் முழுமையான செய்திகளை அறியும்படி 13 வரி கொண்டதாக உள்ளது. 22 வரி உள்ள இடப்புற கல்வெட்டு தொடக்கத்திலும் இறுதியிலும் சிதைந்துள்ளதால் அதன் செய்தியை தெளிவாக முழுமையாக அறியமுடிவில்லை. இதன் நடுப் பகுதியில் மட்டும் சில செய்தி சிதையாமல் உள்ளன. நடுவில் உள்ள இன்னொரு கல்வெட்டு முழுவதும் தேய்ந்துவிட்டபடியால் அதன் செய்தியை அறிய முடியவில்லை. வலப்புறக் கல்வெட்டில் குறிக்கப்படும் பச்செறிச்சில் மலை தான் இன்று பூலாங்குறிச்சி எனப்படுகின்றது. இக்கல்வெட்டுகள் தமிழியில் இருந்து வட்டெழுத்து தோன்றுகிற தொடக்க நிலை எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. மெய்யெழுத்திற்கும், எ, ஒ என்னும் உயிரெழுத்திற்கும் புள்ளி வைக்கப்பட்டுள்ளன. மிகப் பழங்காலக் தமிழ்க் கல்வெட்டில் இவையே நெடியதென அறியப்படுகின்றன. எழுத்தமைதியை கொண்டு இவற்றின் காலம் தொல்லியல் அறிஞரால் கி.பி. 5-ம் நூற்றாண்டு என முடிவு கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் அக்கால சமய, சமூக, அரசியல் நிலையை ஓரளவு அறிந்து கொள்ள முடிகின்றது. இனி கல்வெட்டு விளக்கம் கீழே.

    வலப்புற கல்வெட்டு:

    1. கோச் சேந்தன் கூற்றற்கு யாண்டு நூற்றுத்தொண்ணூற்றி
    2. ரண்டு நாண் முப்பத்தாறு பக்கந் தைப்பிறை நாள் ப(ன்னிரண்டு) வேள் மருகண் மகன் கடலகப் பெரும்படைத்
    3. தலைவன் எங்குமான் னொல்லையூருக் கூற்றத்து வேள்கூருப் பச்செறிச்சின் மலை மேற் செஇவித்த தேவகுலமும்
    4. முத்தூற்றுக் கூற்றத்து விளமரு(ச்) செஇவித்த தேவகுலமும் மதிரை உலவியத்தான் குளத்தின் வடபக்கத்துச் செஇவி
    5. த்த தாபதப்பள்ளியுள் (வா)சி தேவனாரு கோட்டமும் மவை அத்திக்கோயத்தாரு முள்மனையாருந் நாற்பாற்றிணைகளுந் தமக்கு காவலாக
    6. அவற்றுக்குற்றது செ(யக்) கொண்டமையால் லவற்றை வ(ழிபடுவது)ம் மவற்றுக்குப் பெயப்பட்ட அறப்புறந் நடையாட்டுவதூஞ் செயும்
    7. பாண்டங்கருஞ் சேவுக்கரும் (வி)ரும்மாச்சாரிகள்ளுந் தருமிகளுமூ(ர்) காவல் கொண்டா(ரு ஆ) ராஇந்து வைஇக்கப்பட்டாரு அல்லது வழிபடப்
    8. பெறாமையும் மவற்றுட் பச்செறிச்சி(ல்) மலைமேற் செஇவி(த்த தேவகு)லத்துக்குக் குடும்பியராவாரு குழ
    9. (லூ)ருத் துஞ்சிய உடையாரால் வேள்கூருப் பெயப்பட்ட குடும்பி(யர் வழியல்லது வேறொரு) குடும்பாடப் பெறாமையும்
    10. மத் தேவகுலத்துக் குற்றது செய்து வல்லக்குற்றந் தொழில் செய_ _க(ளு)_ _(டஞ்) செயவும் மெழுதி வைக்கென் றருள்ளித்தாரு
    11. கேட்டாருலவியப் பெருந்திணை நல்லங்கிழானெ இனங்குமானும் முலவியப் பெருந்திணை ப_ _ஆறு கிழான் கீரங்காரி
    12. யு முலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தையுங் கேட்டு வந்து கூறின (னோ)லை எழுதுவான் (றம)ன் காரி
    13. கண்ணன். இது கடைப்(பி) ஓலை காற் கண்டெழுதிக் கொடுத்தேன் (வே)ண்ணாட்டான் (ந_ _ரி) நாரியங்காரி

    பக்கம் – (சுக்ல, கிருஷ்ண) பக்ஷம் எனும் நிலவின் பிரிவு; மகன் – நேரடியாக கீழ்பணிந்த வீரன், low rank subordinate warrior, சேவகன் என்பது வேந்தன் அல்லது மன்னனின் மேலாண்மையை ஏற்ற இன்னொரு ஆட்சியாளனை மட்டும் குறிக்கும்; கடலகம் – கடற்புறம்; தேவகுலம் – தேவன் இருப்பிடம், குருகுலம் குருவின் இருப்பிடத்தை குறிப்பது போல; கோட்டம் – சன்னதி, shrine; அத்திக்கோயத்தார் – காவல் புரியும் யானை அல்லது குதிரைப்படை வீரர் குழு; உள்மனையார் – ஊருள் வீடுடையோர். புறமனை என்றால் ஊருக்கு வெளியே வீடு; நாற்பாற்றிணை – நால்வகைக் குலம்; பெயப்பட்ட – வேறு இடத்தின்று அமர்த்திய; அறப்புற – நியதிப்படி, as per procedure;  நடையாட்டு – வழக்கில் பயிலுதல், usage; பாண்டங்கர் – பண்டாரக் காப்பாளர்; சேவுகர் – பிற்கால தேவரடியாரை ஒத்த அர்ப்பணிப்பு பணியாளர், dedicated worker; விரும்மாச்சாரி – ஒரு வகை கோவில் ஊழியர்; தருமி – துறவி, அறவோர்; ஆராய்ந்து – தகுதியை ஆய்ந்து; குடும்பி – பூசகர், சிலம்பில் சேடகுடும்பி என்ற சொல் பூசகரைக் குறிக்கின்றது; அருளி – ஆணையிட்டு; உலவியப் பெருந்திணை – ஆவணப்படியே செயலாக ஒப்பி ஆணைப்படுத்தும் அதிகாரி; கிழான் – வேந்தன் கீழ் மன்னன் அவன் கீழ் அரையன் அரையன் கீழ் கிழான் என்ற நாலாம் நிலை அதிகாரப் பொறுப்பு ஆட்சியாளன். ஒரு ஆவணத்தை ஆணைப்படுத்தும் அதிகாரியாக பெரும்பாலும் கிழார்களே செயல்பட்டனர்; கடைப்பி – பிடிபாடு, வழிகாட்டு நெறி, guidelines; ஓலைக்கால் – ஓலைச்சுவடி.

    விளக்கம்:  வேந்தன் சேந்தன் கூற்றனுக்கு மகுடம் ஏறிய பின் 192 ம் ஆண்டு, நாள் 36, பக்கம் தேற்பிறை 12 நாளிலில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது. சேந்தன் கூற்றனுக்கு அடங்கிய வேள்ஆன மருகண் என்பானுக்கு கீழ்படிந்த போர்வீரனான கடல்புறத்து மீனவப் பெரும் படைக்குத் தலைவனாகிய எங்குமான் என்பவன் ஒல்லையூர்க் கூற்றத்தில் வேள்கூரின் பச்செறிச்சின் மலை மேல் எடுப்பித்த தேவகுலமான கோவிலும் முத்தூற்றுக் கூற்றத்தின் விளமரில் செய்வித்த கோவிலும் மதிரையில் உலவியத்தான் குளத்தின் வடபக்கத்தில் உள்ள தாபதப்பள்ளியில் எடுப்பித்த வாசி தேவனார் கோட்டமும் ஆகிய இம்மூன்றுக்கும் அத்திகோயத்தார், ஊருள் வாழ்வோர், நாற்பிரிவு குலம் ஆகியோரை தமக்கு காவலாக, துணையாகக் கொண்டு அவற்றுக்கு தேவையானவற்றை செய்தமையால் அவற்றில் வழிபடவும் அவற்றுக்குப் ஏற்படுத்தப்பட்ட நியதிப்படியான பூசனையை வழக்கமாக செய்யும் பண்டாரம் காப்பாளரும், அர்ப்பணிப்பு பணியாளரும், விரும்மாச்சாரிகளும், துறவியரும், ஊர் காவல் கொண்டாரும் தகுதி ஆராய்ந்து வைக்கப்பட்டவரை தவிர பிறர் வழிபாடு ஆற்றாதவாறு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக பச்செறிச்சில் மலைமேல் எடுப்பித்த கோவிலுக்கு பூசகராகின்றவர் குழலூரில் இறந்த வேந்தரால் வேள்கூருக்கு அழைத்து வந்து அமர்த்தப்பட்ட பூசகர் குடும்ப வழியினரைச் சாராத வேறொரு குடும்பத்து பூசகர் பூசனை ஆற்றக்கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அக்கோவிலுக்கு தேவையானதை செய்தும் தீங்கான செயல்களுக்கு தண்டம் விதித்தும் செயற்பட வேண்டும் என்று எழுதிவைக்கச் சொல்லி ஆணையிட்டார். இதை படைத் தலைவன் எங்குமான் சொல்லிடக் கேட்டவரான உலவியப் பெருந்திணை நல்லன்கிழான் எயினங்குமான், உலவியப் பெருந்திணை ப_ _ஆறு கிழான் கீரங்காரி, உலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தை ஆகிய மூவரும் இதற்கு ஒப்பி  கையெழுதிட்டு ஆணைப்படுத்தினர். இதை கேட்டு வந்து கேட்டபடி கூறினவன் ஓலை எழுதுவான் தமன் காரி கண்ணன் ஆவான். இதையே வழிகாட்டு நெறியாக ஓலைச்சுவடி கண்டு (கல்லில்) எழுதிக் கொடுத்தேன் வேண்ணாட்டான் ந_ _ரி நாரியங்காரி.

    192–ம் ஆண்டு எந்த தொடக்க ஆண்டை குறிக்கின்றது என்று தெரியவில்லை. நாற்பாற்றிணை என்பது அந்தணர், அரசர், வணிகர், உழவர் என்ற நால்வருண முறை ஆகும். நால் வருண முறையை குறிக்கும் மிகப் பழைய தமிழ்க் கல்வெட்டு இதுவே எனலாம். தாபதப்பள்ளி என்பது சமண பள்ளி ஆகும். தேவகுலம் என்பது சமணம் சாராத கோவில் ஆகும்.

    இடப்புற கல்வெட்டு:

    1. _ _ _ ந்தற்கு யாண்டு நூற்றுத் _ _ _ _ _
    2. நா(ற்) _ _ _ ர.ப_ ] _ _
    3. (னு)_ _ _ ளள் (ளை) _ _ _ _
    4. _ _ _ _ (ள்) மருகண் மகன் (க)டலகப் பெ
    5. _ _ _ _ ன் ஒல்லையூருக்கூற்(ற)
    6. _ _ _ _ _ _ _ _
    7. _ _ செ _ _ _ வகள _ _ வய _ _ _ _
    8. _ _ _ _ _ _ _ _ _
    9. (பெ)_ _ரு நிலனும் புன்செ வெள்ளேற்றான் மங்கலமென்
    10. ._ _ (ழவரும்)_ ரு…ங் கூடலூரு நாட்டுப் பிரம்மதாயஞ் சிற்றையூருப் பிரம்மதாயங்கி
    11. _ _ _ ழமையும் (மீயா)ட்சியுங் கொண்டாளும் மவூருப்படுங்கடைய வயலென்னும்
    12. _ _ _ புலத்தவன் விற்றுக்கொண்டு கொடுத்த புன்செ நிலனு
    13. _ _ _ துப் பிரம்மதாயத்துட் பிரம்மதாயக் கிழவரா(ன)
    14. _ _ _ றாராலும் பிரம்_ _யுங் காரண்மையுமாகக் கொண்டாளுந் நீர் நிலனும் புன்
    15. _ _ லனும் பிறவுஞ்_ _ _ பாண்டி நாட்டுங் கொங்கு நாட்டும் மவரு காராண்கிழமையுங் கல
    16. க் கிழமையும் மேல்(லாண்மை) கொண்ட(ன)வும் மவருடைய காலாசமுந் தோட்டங்களும் மவரு தமரையும் ம
    17. வரு குடிகளையும் _ _ _ டையாரும் பிரம்ம தாயமுடையாருந் நாடுகாப்பாரும் புறங்காப்
    18. பாரும் முப்பு (ரு காப்பாரு) _ _ _ தாயந் நெறி அ_ _ செஇதாரு தத்தமானும் வேறு வேறு ஆஇரத்தாறுநூ
    19. று காணந் _ _ று __ டு வே_ _ ன்ற_ _ ரு கேட்டாருல வியப் பெருந்திணை நல்லகிழா னெ இனங்கு
    20. மானும் முலவி _ _ _ ம _ _ _  ங்கிழான் ளங் கூற்றனும் முலவியப் பெருந்திணை ஆலத்தூர் கி
    21. _ _ _ _ லை _ _ துவான் (றமன்வ)டுகங் குமான்_ _டைப்பி (ஒ)
    22. _ _ _(தளருக்கு)_ _ _

    விளக்கம்:   வேள்ஆன மருகண் என்பானுக்கு கீழ்படிந்த போர்வீரனான கடல்புறத்து மீனவப் பெரும் படைக்குத் தலைவனாகிய எங்குமான் ஒல்லையூர் கூற்றத்தில் செய்த செயலைக் குறிக்கின்றது. 12-ம் வரி வயலுக்கு உரிமையாளன் விற்றுக்கொடுத்த புன்செய் நிலம் பிரம்மதாயமாக ஆக்கப்பட்டதை தெரிவிக்கின்றது. அந்த பிரம்மதாயத்துள் ஒரு உரிமையாளரின் பயிர் செய்யும் உரிமை நீர், நிலம் என்பது பற்றியும் பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அவருக்கு உள்ள பயிர் செய்யும் உரிமை பற்றியும், அவருடைய கால்நடை, தோட்டம், குடிகள் பற்றியும் சொல்கின்றது.

    பிரம்ம தாயமுடையவரும், நாடுகாப்பாரும், புறங்காப்பாரும் முப்புரு காப்பாரும் தாயநெறியை காக்க வேண்டும் என்றும் இதற்கு அல்லவை செய்தாரிடம் ஆயிரத்தறுநூறு காணம் தண்டம் திரட்டவேண்டும் என்கின்றது. இதை ஆணைப்படுத்திய கிழார்கள் பெயரை குறிப்பதோடு கல்வெட்டு சிதைந்துள்ளது.

    இதன் மூலம் அக்காலத்தே பிராமணர் தமிழகத்தில் வாழ்ந்தது உறுதி செய்யப்படுவதோடு அவர் பெற்ற நிலக்கொடை அதன் பயிர் செய்யும் உரிமை பற்றி அறிய முடிகின்றது.

    பார்வை நூல்: ஆவணம் இதழ்1991 , பக். 67- 69.

    Share
  • பாறாங்கல் படகையே கவிழ்க்கும்

    பாறாங்கல் படகையே கவிழ்க்கும்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி, இந்திரபாலா,
    எழுத்தாளர்கள் டானியல், பிரேம்சி,
    அரசியல்வாதிகள் குமாரசூரியர், அருளம்பலம், தியாகராசா, அல்பிரட் துரையப்பா,
    தொழிலதிபர்கள் சிவானந்தன், கே. சி. தங்கராசா,
    மருத்துவர் ஆனந்தராசா, நீதியரசர் தம்பையா,

    இவர்கள் அனைவரும் ஒரே அணியில், ஒரே கருத்தில், ஒரே கொள்கையில், ஒரே கோட்பாட்டில்.

    நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைக் கொழும்பில் நடத்த வேண்டும் என்ற சிறீமாவோ அரசின் கொள்கையை முன்னெடுத்த அணியினரே இவர்கள்.

    1973 ஆம் ஆண்டு வைகாசி, ஆனி, ஆடி, ஆவணியில் கொழும்பில் பம்பலப்பிட்டி, மிலாகிரியா நிழற்சாலையில் உள்ள அலுவலகத்தில் கூட்டங்கள் நடந்தன.

    சிறிமாவோ அரசின் சார்பானோர் ஒருபுறம்.

    யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்ற அணியினர் மறுபுறம்.

    பேராசிரியர் வித்தியானந்தன், அறிஞர் யேம்சு இரத்தினம், பேராசிரியர் பத்மநாதன், திருமதி புனிதம் திருச்செல்வம், கலைஞர் வி. எசு. துரைராஜா, மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகிய நான், அறிஞர் அம்பிகைபாகன் எனப் பெரும்பான்மையோர் யாழ்ப்பாணத்தில் நடத்த விரும்பினோம்.

    அக்காலத்தில் உடல் நலக் குறைவால் வளலாயில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகளாரும் யாழ்ப்பாணத்தில் நடத்தவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

    சிறீமாவோ அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆண்ட காலம். மாவை சேனாதிராசாவை ஒத்த 60க்கும் கூடுதலான எண்ணிக்கையில் இளைஞர்கள் பூசாவிலும் வெலிக்கடையிலும் யாழ்ப்பாணத்திலும் சிறைகளில் தவமிருந்த காலம்.

    ஒரு நாள் மாலை. பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் கூட்டம்.

    நாற்காலிகளை வட்டமாக அடுக்கி இருந்தோம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏறத்தாழ 30 தொடக்கம் 40 பேர் வரை இருந்தார்கள்.

    நான் எழுந்து பேசினேன். நீதியரசர் தம்பையா அவர்களே யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவதாக இருந்தால், நீங்கள் தலைவராகத் தொடருங்கள் அல்லது தலைமைப் பதவியில் இருந்து விலகுங்கள், எனக் கேட்டேன்.

    கொஞ்சம் சலசலப்பு. ஆனாலும் நான் விட வில்லை. மீண்டும் என் கருத்தை வலியுறுத்தினேன். பல செய்திகளைப் பேசினோம். பலர் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

    மறுநாள் நல்ல செய்தி. நீதியரசர் தம்பையா தலைமைப் பதவியிலிருந்து விலகினார். தொழிலதிபர் சிவானந்தர், கே. சி. தங்கராசா, மருத்துவர் ஆனந்தராசா, ஆகியோரும் விலகினார்கள். தாம் கொடுத்த நன்கொடைகளை திரும்பத் தருமாறும் கேட்டனர்.

    எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. பகை இல்லை. துரோணரின் மாணவன் அருச்சுனனுக்கு இலக்காகப் பறவையின் கண் மட்டுமே தெரிந்தது போன்று, யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற கொள்கையே எனக்குத் தெரிந்தது.  அதற்காகத் தலைமையிலிருந்து நீதியரசர் தம்பையாவைப் பதவி விலகக் கோரும் துணிச்சல் எனக்கு இருந்தது.

    பெட்டிப் பாம்பாக மகுடிக்குப் படம் எடுத்துச் சீறுவது போல் நடித்துப் பின் அடங்கி விடும் மனோநிலை எனக்கு இருக்கவில்லை.

    தந்தை செல்வாவிடம் சைவ சமயிகள் சார்பில் நான் எடுத்துக்கூறிய பல ஆலோசனைகள் அவர் கேட்டார். நடைமுறைக்குக் கொண்டு வந்தார். தந்தை செல்வா தலைவர் என்பதனால் அவர் சொன்ன அனைத்தையும் ஏற்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை.

    மாற்றுக் கருத்து உண்டெனில் அதை அவரிடம் சொல்லி அந்த நியாயங்களை எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்திருக்கிறேன்.

    எனது இருபது ஆண்டுகாலத் தொடர்பில் அவர் மீதுள்ள மதிப்பு உயர்ந்தமைக்கு அவருடைய பொறுமையும் நல்ல கருத்துக்களை ஏற்று நடைமுறைக்குக் கொண்டுவரும் பண்புமே காரணம்.

    திருச்செல்வம் மூத்த வழக்குரைஞர். 13 ஆண்டுகாலம் அவரோடு பணிபுரிந்தேன். அமைச்சராக இருந்த காலத்தில் தனி உதவியாளராகவும் இருந்தேன். அவரோடு உடன்படாத கருத்துக்களை நான் சொல்வேன். அவர் தூக்கி எறிய மாட்டார். தம்பி நீர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பார். நடைமுறைக்குக் கொண்டு வருவார்.

    தந்தை செல்வாவுக்கு நினைவுத்தூண் அமையுங்கள் என்ற கருத்தை அமிர்தலிங்கம் அவர்களிடம் முன்வைத்தேன். முதலில் தயங்கினார். வலியுறுத்தினேன், ஏற்றுக் கொண்டார். என்னையே அப்பணியைச் செய்யுமாறு பணித்தார். வெற்றிகரமாகச் செய்து கொடுத்தேன்.

    அறைக் கூட்டங்களில் அமிர்தலிங்கம் அவர்களோடு முரண்பட்டு இருக்கிறேன். உங்களுக்கு அரசியல் தெரியாது என்றும் ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். மாலையில் மனைவியொடு என் வீட்டுக்கு வருவார். நீங்கள் சொன்னதில் நியாயம் இருக்கிறது அதன்படி செய்வோம் என்பார்.

    அனைத்துப் போராளி இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நான் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்திருக்கிறேன். வன்முறையில் எனக்குக் கிஞ்சித்தும் நம்பிக்கை கிடையாது என நேரடியாகவே அவர்களிடம் சொல்வேன். ஆனாலும் உங்களுடைய ஈடுபாடும் தியாகமும் நல்ல நோக்கமும் என் மதிப்புக்குரியன. எனவே உங்களுக்கு என்னால் முடிந்தததைச் செய்வது என் கடமை என்பேன்.

    2000ஆம் ஆண்டில் ஒரு சூழ்நிலையில் பிரபாகரன் கொண்ட கருத்தைத் தலைகீழாக மாற்றுமாறு கேட்டேன். அவர் செய்திருக்கிறார். என் அணுகுமுறையில் உள்ள தமிழ்த்தேசிய நன்மையை அவர் பின்பும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    என் வாழ்நாளில் ஒரு முறையாவது தமிழ்த்தேசியத்தில் ஈடுபாடுகொண்ட எவரையும் அந்நியர் எவரிடமும் சுட்டிக்காட்டித் தவறிழைக்கிறார் எனச் சொல்வதில்லை.

    சரி பிழைகளைத் தளர்வுகளைத் தொய்வுகளை நடைமுறை மாற்றுகளை நமக்குள்ளே பேசலாம். அந்நியரிடம் பேசலாமா? அதுவும் அடிமை கொள்ள விழையும் அந்நியரிடம் பேசலாமா?

    அவ்வாறு பேசியவரைச் சம்பந்தன் அவர்கள் காப்பாற்றுகிறார் எனில் பெட்டிப்பாம்பாக இருக்காமல் பொங்கியெழுந்து தமிழ்த் தேசியத்திற்காகச் சம்பந்தன் அவர்களிடமே உரத்துப் பேசி, சுமந்திரனை நீக்க வேண்டிய கடமை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு.

    மைத்திரிபால சிரிசேனா, இரணில் விக்கிரமசிங்க கூட்டணிக்கு வாக்களிக்காதீர் என சிவகரன், அனந்தி நான் மூவரும் ஊடகத்தாரிடம் கூறினோம். அக்கருத்து அவர்களின் தனிக் கருத்து எனக் கருதியிருக்கலாமே?

    சுமந்திரனின் கை மேலோங்கியதால் சிவகரனையும் அனந்தியையும் நீக்கினார்கள். கட்சி உடைந்தது.

    சுமந்திரன் கை மேலோங்கியதால் தமிழ்க் காங்கிரசும் ஈபிஆர்லெஎஃபும் கூட்டமைப்பில் இருந்து விலகின.

    சுமந்திரனின் கை ஓங்கியதால் அவைத் தலைவரான சிவிகே சிவஞானமே வெட்கங்கெட்டு ஆளுநரிடம் சென்றார், முதலமைச்சருக்கு எதிராக. கூட்டமைப்பை உடைப்பதற்காக.

    இன்றைய ஒருங்கிணையாத தமிழர் அரசியல் கள நிலைக்கு, இரணிலின் கைப்பாவையாகிய சுமந்திரனின் கை ஓங்கியமையே காரணம்.

    அருளம்பலம் தியாகராசா கனகரத்தினம் அல்பிரட் துரையப்பா குமாரசூரியர் என நீளும் அரசியலார் வரிசையில் சுமந்திரன் இருக்கிறார்.

    அன்று அல்பிரட் துரையப்பாவுக்குத் துணைபோன சிவிகே சிவஞானம் இன்று சுமந்திரனுக்கு துணை போகிறார். அடையாளங்கண்டு தமிழ்த் தேசியப் பயிர்களை வளர்க்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியத்தாருக்கு உண்டு.

    சுமந்திரன் இல்லாத சூழ்நிலையில் விரல்களாக வேறுபட்டாலும் கையாக இணைவோம் என வெவ்வேறு கொள்கையரும் ஒரே அணிக்கு மீள்வர். தமிழ்த் தேசியத்தார் வலிமை பெறுவர்.

    நீதியரசர் தம்பையா தலைமைப் பதவியில் இருந்து விலகியதால் தமிழ்த் தேசியம் ஓங்கியது. நீதியரசர் சிவசுப்பிரமணியம் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியதால் சைவத் திருக்கோயில்களை அரசு கையேற்காமல் காத்தோம். இருவரது விலகலுக்கும் எனது பங்களிப்புக் காத்திரமானது.

    சுமந்திரனை விலக்குக. அல்லது நீங்களும் விலகுக எனச் சம்பந்தன் அவர்களிடம் எடுத்துக்கூறும் துணிச்சல் உள்ளவர்களை அழைக்கிறேன். படகு பெரிய பாறாங் கல்லுடன் மிதக்க முடியாது. பாறாங்கல்லை நீருள் தள்ளிப் படகைக் காக்க அழைக்கிறேன்.

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 8

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 8

    மீ. விசுவநாதன்

    குருவின் மகிமை

    சாரதா பீடம் தன்னில்
    தரவழி குருவம் சத்தை
    பாரதீ தேவி என்றே
    பக்தரும் பணிவ துண்டு!
    ஆயிரம் சான்று சொல்லி
    அவைகளை விளக்க லாம்தான்!
    தாயது அன்பை எந்தத்
    தராசினால் கணக்குப் பார்க்க? (71)

    ஒன்றி ரெண்டு காட்ட
    உயர்வு தெரியு மென்று
    இன்றி தையே இங்கு
    எளிதாய் எழுது கின்றேன்!
    தென்றல் காற்று தங்கத்
    தேரில் வருதல் போல
    தென்தி சைக்கு ஆசான்
    சீட ருடனே வந்தார்! (72)

    குருவும் சீடரும் தென்திசைப் பயணம்

    சத்திய மங்கலம் வந்தார்
    சந்திர சூரியர் போல!
    நித்தியக் கடமையாம் பூஜை
    நியமமும் உரையுமே செய்தார்!
    சத்திய உரையினைத் தங்கள்
    சன்னிதா னம்தமி ழில்தான்
    சுத்தமாய்ப் பேசிய பேச்சில்
    சொக்கியே போனதாம் சத்யம்! (73)

    பன்மொழி வித்தகர்

    பன்மொழிப் புலமை கண்டு
    பாரதீ தீர்த்தர் மீது
    பன்மொழிப் புலவோர் கூட்டம்,
    பாமரர் கூட்ட மென்று
    அன்பினால் பக்தி செய்வோர்
    ஆயிரங் கோடி என்று
    நன்றியால்க் கண்ணீர் மல்க
    நானிலம் கூறக் கேட்டேன்! (74)

    பற்றறுத் தோன்தாள் பணி

    கல்லில் வடித்த சிற்பம்
    கணக்கில் கல்லா னாலும்
    நல்லுள் ளத்துள் தானே
    ஞான ஒளியாய்த் தோன்றும்!
    சொல்லி வருவ தில்லை
    துறவு! சொல்லா மல்தான்
    மல்லி மலரைப் போல
    மனத்துள் வாசம் செய்யும் ! (75)

    அமைதி வேண்டும் என்றால்
    அன்பு பெருக வேண்டும்!
    சுமையாம் வாழ்வு தன்னை
    சுகமாய் மாற்ற வேண்டி
    தமையே மறந்து கொஞ்சம்
    தனது கண்கள் மூட
    இமையோன் சிவனைப் போல
    இருப்பார் சன்னி தானம்! (76)

    தன்னைப் பணியும் பக்தன்
    தரத்தைப் பார்க்கா வண்ணம்
    அன்னை தரத்தில் நின்று
    அருளும் உயர்ந்த வள்ளல்!
    முன்னோர் சென்ற பாதை
    மூத்தோர் செய்த புண்யம்
    என்னைப் போன்ற வர்க்கு
    எளிதாய்ச் சேர்ந்த செல்வம்! (77)

    சிக்கெனப் பற்றுக பற்றுவிட

    ஊரென அறிந்தேன் அல்லேன்
    உறவினை அறிந்தேன் அல்லேன்
    பேரெனக் கேட்கும் முன்னே
    பிரியமாய் பக்தி செய்தேன்
    தூரென இருந்த உள்ளம்
    தூயதாய் ஆவ தற்கு
    பாரதீ தீர்த்தர் பாதம்
    பணிவதே என்று ணர்ந்தேன் ! (78)

    எதிலும் ஒழுங்கு

    திருநீற்றில் நேர்த்தி; ஆடை
    திருமேனி கொள்ளல் நேர்த்தி;
    வரும்வார்த்தை எல்லாம் நேர்த்தி;
    வண்ணப்பூ வெடுத்து ஈசன்
    உருமீது மெல்ல வைத்துப்
    பூஜைசெய்யும் நேர்த்தி என்று
    தருணமெலாம் நேர்த்தி யான
    தவசியேஸ்ரீ சன்னி தானம்! (79)

    அன்பே சிவம்

    மானிடம் அன்பு காட்டி
    மயிலிடம் பரிவு கூட்டி
    தேனிபோல் நல்ல தெல்லாம்
    தேடியே தினமும் சேர்த்து
    மானிடப் பண்பு ஓங்க
    மறைவழி வாழும் யோகி
    தானினை வென்ற சான்றோர்
    பாரதீ தீர்த்தர் என்பேன். (80)

    (யாத்திரை தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(301)

    குறளின் கதிர்களாய்…(301)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(301)

    தந்தை மகற்காற்றும் நன்றி யவையத்து
    முந்தி யிருப்பச் செயல்.

    – திருக்குறள் -67 (புதல்வரைப் பெறுதல்)

    புதுக் கவிதையில்...

    தந்தையொருவன்
    தன் மகனுக்குச் செய்யும்
    நன்மை,
    தன்னைவிடவும்
    அதிகமாய் அவனைக்
    கல்வி கற்கச்செய்து
    கற்றோர் அவையில்
    முதன்மையாய் இருக்கவைப்பதே…!

    குறும்பாவில்...

    தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை,
    தனக்குமேலும் படிக்கவைத்து கற்றவர் சபையில்
    அவனை முதன்மைபெறச் செய்வதாகும்…!

    மரபுக் கவிதையில்...

    பொன்னாய்ப் பொருளாய்ப் பணமதாகப்
    பெரிதாய்ச் செல்வம் சேர்க்கவேண்டாம்,
    தன்னை விடவும் அதிகமாகத்
    தன்மகன் கற்றுத் தேர்ந்தேதான்
    மன்றம் நிறைந்த கற்றோர்முன்
    மதிப்பி லுயர்ந்தே முதல்நிலையில்
    நின்று நிலைக்க வைப்பதுதான்
    நன்மை தந்தை செய்வதுவே…!

    லிமரைக்கூ..

    தந்தை மகனுக்காற்றும் உதவி,
    நன்றாயவனைப் படிக்கவைத்துப் பெறச்செய்யவேண்டும்
    கற்றோரவையில் முதன்மைப் பதவி…!

    கிராமிய பாணியில்...

    செல்வத்திலயெல்லாம்
    பெரியசெல்வம் பிள்ளச்செல்வம்,
    அதப்
    பேணிக் காப்பாத்துறது
    பெத்தவுங்க கடம..

    ஒரு தகப்பன்
    தன்மகனுக்குச் செய்யிற
    பெரிய நன்ம இதுதான்,
    தன்ன விடவும் அவன
    நல்லாப் படிக்கவச்சி
    படிச்சவுங்க சபயில
    அவன மொத ஆளா
    இருக்க வைக்கிறதுதான்..

    அதால
    செல்வத்திலயெல்லாம்
    பெரியசெல்வம் பிள்ளச்செல்வம்,
    அதப்
    பேணிக் காப்பாத்துறது
    பெத்தவுங்க கடம…!

    Share
  • 11ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    11ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    2020 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 10 ஆண்டுகளை நிறைவுசெய்து 11ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பத்து ஆண்டுகளில் வல்லமை, 16,535 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,505 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 900 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.

    கடந்த ஆண்டு, தொழில்நுட்பச் சிக்கல்களால் வல்லமை 37 நாள்கள் முடங்கியது. பெரும் முயற்சிகளுக்குப் பிறகு, மீண்டது. இப்போது செம்மையாகச் செயல்பட்டு வருகிறது. நமது வழங்கியை (Server) மாற்றினோம். தரவுகளைப் பாதுகாக்க, தரவு சேமிப்பகத்தைத் (Data back-up) தேர்ந்தோம். தொழில்நுட்ப ஆதரவு (Technical support) நிறுவனத்தைத் தேர்ந்தோம். இவையனைத்தும் கட்டணச் சேவைகள். எனினும் உரிய நேரத்தில் எழுத்தாளர்கள் நிர்மலா ராகவன், ஜெயபாரதன், மேகலா இராமமூர்த்தி, நாங்குநேரி வாசஸ்ரீ, திருச்சி புலவர் இராமமூர்த்தி ஆகியோர் வழங்கிய நன்கொடையால், தளம் நிமிர்ந்தது. கவிஞர் வித்யாசாகர், பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், முனைவர் நா.கணேசன், பெரியவர் இன்னம்பூரான் உள்ளிட்டோர் மேலும் நன்கொடையும் உதவிகளும் வழங்க இசைந்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது உள்ளம் நிறைந்த நன்றிகள்.

    தரமான, நடுநிலையான, கூர்மையான மின்னிதழாக வல்லமை தொடர்ந்து மிளிர்ந்து வருகிறது. ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பிட்டு, ஆய்வறிஞர்கள் வழங்கும் மதிப்புரைகள், ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுதலாய் அமைகின்றன. நாம் இன்னும் நிறையப் பணிகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆக்கப்பூர்வமான படைப்புகளையும் ஆய்வுகளையும் ஊக்குவித்து வளர்த்தெடுக்க, வல்லமை உறுதி பூண்டுள்ளது. இதற்குத் தொடர்ச்சியான நன்கொடைகள் தேவை. உங்களால் இயன்ற நிதியை அளித்து உதவுங்கள். ஆர்வமும் நேரமும் தமிழறிவும் படைத்தவர்கள், வல்லமை ஆசிரியர் குழுவில் இணையலாம். வாய்ப்புள்ளோர், வல்லமையில் விளம்பரங்கள் வெளியிடலாம்.

    வல்லமை 11ஆவது ஆண்டில் நுழைந்துள்ள இந்த நாளில் வல்லமை யூடியூப் அலைவரிசையை அறிமுகப்படுத்துகிறோம். இதில் அன்பர்கள் உறுப்பினராக இணைந்து (Subscribe), ஈடுபாட்டுடன் பங்கெடுக்க வருமாறு அழைக்கிறோம்.

    வல்லமை யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள்: http://www.youtube.com/channel/UCnjxyY8wTI3_HHFCD162IIA?sub_confirmation=1

    இதன் இடுகைகளுக்கு விருப்பக்குறியிட்டு, பின்னூட்டங்கள் அளித்து, உங்கள் நண்பர்களுக்கு இந்தப் பதிவுகளையும் அலைவரிசையையும் பகிர்ந்து, அவர்களையும் இணையுமாறு ஆற்றுப்படுத்த வேண்டுகிறோம். இந்த முயற்சியின் பயன், பலரையும் எட்ட வேண்டும் என்பதே நம் நோக்கம்.

    இந்த அலைவரிசையில் முனைவர் பா.ஜெய்கணேஷ் அவர்களின் காலந்தோறும் சங்க இலக்கியம் என்ற இணையவழி உரையை முதல் பதிவாக அளித்துள்ளோம்.

    தமிழில் மின்னாளுகை என்ற தலைப்பிலான எனது முனைவர்ப் பட்ட வாய்மொழித் தேர்வின்போது வழங்கிய திரை உரைக் காட்சித் தொடரையும் நீங்கள் காணலாம்.

    இந்த அலைவரிசை, கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, அறிவுப் பகிர்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆய்வுக் கட்டுரைகள், இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வேடுகளின் சுருக்கங்களை இதில் காணொலியில் (வீடியோவில்) பதிந்து ஏற்றலாம். நீண்ட கட்டுரைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் முழுமையாகப் படிப்பதற்கு முன்னால், அதன் சாரத்தை ஓரிரு நிமிடங்களில் வழங்கினால், வாசகருக்கு அல்லது பயனருக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் இது, முழுக் கட்டுரையைப் படிப்பதற்குத் தூண்டுகோலாக அமையும். இது, ஒரு திரைப்படத்தைக் காண்பதற்கு முன்னால், அதன் முன்னோட்டத்தைப் பார்ப்பது போலாகும்.

    வாய்ப்புள்ளோர், முழுக் கட்டுரையின் செய்திகளையும் முழுமையான உரையாகவும் வழங்கலாம். இது ஒரே நேரத்தில் ஓர் உள்ளடக்கத்தைக் காணொலி வடிவிலும் எழுத்து வடிவிலும் வழங்குவதாகும். இதில், எழுத்தில் காட்ட முடியாத தொனியையும் குறிப்பையும் உணர்வுகளையும் பாவங்களையும் காட்ட இயலும். மேலும் காட்சி வடிவச் சான்றுகளையும் இதர இணையப் பக்கங்களையும் காணொலிகளையும் எடுத்துக் காட்டலாம்.

    இவை மட்டுமின்றி, தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அயல் நாடுகளிலும் பல்வேறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்கள் போன்றவை அன்றாடம் நடைபெற்று வருகின்றன. இந்த ஊரடங்கு காலத்தில் இவை அனைத்தும் இணையம் வழியே நடைபெறுகின்றன. மேலும் பல்வேறு பயிற்சி வகுப்புகளும் இணையத் தொடர்களும் முழு வீச்சில் நடக்கின்றன. இவை அனைத்தையும் ஆவணப்படுத்த, வல்லமை விழைகிறது. இவற்றின் முழுமையான காணொலிப் பதிவுகள், திரைஉரை காட்சித் தொடர்கள் ஆகியவற்றை இந்த அலைவரிசையில் ஆவணப்படுத்த விரும்புகிறோம்.

    அன்பர்கள் தாங்கள் உருவாக்கும் பவர்பாயின்ட் உரைகளை நமக்கு அனுப்பினால், அவற்றைக் காணொலியாக மாற்றி, வெளியிட இயலும். எனவே, காணொலிப் பதிவாக இருந்தாலும் பவர்பாயின்ட் ஆக இருந்தாலும் பிடிஎப் ஆக இருந்தாலும் எந்த வடிவில் உங்கள் காட்சியுரை இருந்தாலும் எங்களுக்கு அனுப்புங்கள். எங்கே, என்றைக்கு, எந்த நிகழ்வில் இதை வழங்கினீர்கள் என்ற விவரத்தைக் குறிப்பிட்டு அனுப்புங்கள். இவற்றை நாங்கள் உரிய முறையில் ஆவணப்படுத்துவோம். யூடியூப் அலைவரிசையில் வெளியிடுவதோடு, அவற்றை வல்லமை மின்னிதழிலும் காட்சிப்படுத்துவோம்.

    தொழில்நுட்பம் வழங்கியுள்ள அளப்பரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தமிழ் உள்ளடக்கத்தையும் தமிழாய்வையும் வளர்த்தெடுக்க, வாருங்கள்.

    உங்கள் இலக்கியப் படைப்பு அல்லது ஆய்வுக் கட்டுரை அல்லது முனைவர் பட்டம் குறித்து, சுருக்கமாக / விளக்கமாகப் பேசி ஒரு பதிவை கூகுள் டிரைவ் வழியாக vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம். பேச்சின் இடையே உங்கள் முனைவர் பட்ட ஆய்வேட்டினைக் காட்டலாம். அதில் உள்ள முக்கிய தரவுகள், சான்றுகளை எடுத்துக் காட்டலாம். அதன் தனிச் சிறப்புகளை எடுத்துரைக்கலாம்.

    வல்லமை எவ்வாறு உங்களுக்குப் பயனளிக்கின்றது என்றும் இன்னும் என்னென்ன செய்யலாம் என்றும் அன்பர்கள் கருத்துரைக்க வேண்டுகிறோம். வல்லமையின் வளர்ச்சிக்குத் துணைநிற்கும் ஆசிரியர் குழுவினர், ஆய்வுலகினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், வாசகர்கள், நன்கொடையாளர்கள், தொழில்நுட்ப ஆதரவு நல்கும் எல்.கார்க்கிக் உள்ளிட்ட நண்பர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். படைப்புகளை வெளியிடுவதில், முனைவர் சுரேஷ் ரங்கநாதன், மிகச் சிறந்த ஒத்துழைப்பினை வழங்கி வருகிறார். பிழை திருத்துவதில் முனைவர் அருணன் கபிலன் பங்களிக்கிறார். தரமான படைப்புகளாலும் படக்கவிதைப் போட்டி முடிவுகளாலும் மேகலா இராமமூர்த்தி, வல்லமைக்கு அணிசெய்து வருகிறார். சாந்தி மாரியப்பனும் ராமலக்ஷ்மியும் உரிய படங்களைத் தேர்ந்தெடுத்து வழங்கி வருகின்றனர். வல்லமையின் மதிப்பாய்வு அறிஞர்கள், சிறப்பான மதிப்பீடுகளை வழங்கி வருகின்றனர். இவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மிகுந்த நன்றி.

    தரமான இதழாக வல்லமை தொடர்ந்து பயணிக்கும். உங்கள் அனைவரின் தொடர்ச்சியான நல்லாதரவினை வேண்டுகிறோம்.

    Share
  • உன் அழகுத் தோட்டத்தில் – ஆர்.எஸ்.மணி கவிதை

    உன் அழகுத் தோட்டத்தில் – ஆர்.எஸ்.மணி கவிதை

    இது, கனடா ஆர்.எஸ்.மணி, 2007 மார்ச் 18 அன்று எனக்கு அனுப்பிய கவிதை. அவருடைய “Idle Tears” தொகுப்பிலிருந்து அவரே மொழிபெயர்த்த கவிதை. இந்த ஓவியத்தை வரைந்தவரும் அவரே. இந்தக் கவிதைக்கு இசையமைத்தவரும் அவரே. எனக்கு மிகவும் பிடித்த கவிதை.  – அண்ணாகண்ணன்.

    இந்தக் கவிதையை ஆர்.எஸ்.மணி குரலில் இங்கே கேட்கலாம்

     

    உன் அழகுத் தோட்டத்தில்
    ஒரு மூலையின் ஓரத்தில்
    மலராய் நான் பூத்திடுவேன்.

    உன்னுடைய மென்பாதம்
    வேறெங்கோ நடந்தாலும் – என் மனமோ
    உன்னையே சுற்றிவரும்.

    பரந்த உன் வீதியிலே – உன்
    கால்பட்ட மண்தரையில்
    பாடகனாய்த் திரிந்திடுவேன்.

    முற்றத்தில் நீஅமர்ந்து
    மலர்களைத் தொடுத்தாலும் – என் இசையோ
    உனைத் தொட்டு முத்தமிடும்.

    உன் அழகு மாளிகையில்
    ஒரு மூலைப் பிறையினிலே
    சிறுவிளக்காய் நானிருப்பேன்

    கருத்த உன் விழிகளென்னைக்
    காணாமல் இருந்தாலும் – நான் அங்கே
    காலமெல்லாம் எரிந்திருப்பேன்.

    Share
  • (Peer Reviewed) பண்ணோடு இயைந்த மகாகவி பாரதி

    (Peer Reviewed) பண்ணோடு இயைந்த மகாகவி பாரதி

    திரு. பாபு விநாயகம், நிறுவனர் மற்றும் தலைவர், உலகத்தமிழிசை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம், வாஷிங்டன் டி.சி, அமெரிக்கா.

    முனைவர். ஆ. ஷைலா ஹெலின், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், கேரளா, இந்தியா.

    தன் எண்ணங்களையும் சிந்தனைகளையும் இலக்கிய உணர்வோடு வெளிப்படுத்துபவன் கவிஞன். எல்லாக் காலங்களிலும் எல்லா மொழிகளிலும் புற்றீசல் போல் முளைத்தெழும் கவிஞர்களுள் “மகாகவி” எனும் சிறப்புக்கு உரியவர் ஒரு சிலரே. அங்ஙனம் இவ்வுலகில் கி.பி.1882 முதல் கி.பி.1921 வரையிலாக மொத்தம் முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார், ஒரு மகாகவி எனும் தகுதிக்குரியவர்.

    பாரதியார் “பண்ணோடு இயைந்தவர்” என்றும், தமிழரின் மரபிசையான பண்ணிசையை மீட்டுருவாக்கிட பாரதியின் இரு பாடல்களுக்கு இக்கட்டுரையில்  பண்ணிசைக்கப்பட்டுள்ளன.

    இசையோடு இயைந்த பாரதி

    பாரதியின் பல்நோக்குப் பார்வையில் இசைசார் விளக்கங்கள் இல்லாமல் இல்லை. இசைப் பாடல்கள் பல இயற்றியும் அவற்றுள் இசை பற்றிய பல நுணுக்கங்களைக் குறிப்பிட்டும் தான் ஒரு சிறந்த இசை அமைப்பாளர்  என்பதையும் நிருபித்துள்ளார். தமிழிசைக் கலைச் சொற்களான பண், தாளம், சந்தம், பாடல், சங்கீதம் முதலியவைகளும் குழல், வீணை, முரசு, பேரிகை வெண்சங்கு ஆகிய இசைக் கருவிகளின் பெயர்களும் பாடல் வரிகளில் பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளன. பாரதியார் கவிதைகளில் காணலாகும் பண் குறிப்புகளாவன:

    “பண்ணில் இனிய பாடலோடு” (விடுதலை வேண்டும்)1
    “பண்ணிலினிய சுவை பரந்த மொழியினால் ” (மனப் பீடம்)1
    “பாட்டைத் திறப்பது பண்ணாலே” (அம்மாக்கண்ணு பாட்டு)1
    “பண்ணே பண்ணே பண்ணே
    பண்ணிற் கேயோர் பழுதுண்டாயின்
    மண்ணே மண்ணே மண்ணே” (குயில் பாட்டு)1

    “பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
    பத்தினிப் பெண்வேணும் -எங்கள்
    கூட்டுக் களியினிலே-கவிதைகள்
    கொண்டுதர வேணும்-அந்தக்
    காட்டு வெளியினிலே -அம்மா! நின்தன்
    காவலுற வேணும்;என்தன்
    பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
    பாலித்திட வேணும்” (காணி நிலம் வேண்டும்)1

    “எண்ணுங் காரியங்க ளெல்லாம் – வெற்றி
    யேறப் புரிந்தருளல் வேண்டும்-பல
    பண்ணப் பெரு நிதியம் வேண்டும் -அதிற்
    பல்லோர் துணை புரிதல் வேண்டும் -சுவை
    நண்ணும் பாட்டினொடு தாளம் -மிக
    நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் -பல
    பண்ணிற் கோடிவகை இன்பம் – நான்
    பாடத்திறனடைதல் வேண்டும்! ( யோக சித்தி – 7)1

    “பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்
    புண்ணை யொழிப்பீர் -இந்தப்
    பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை”( கண்ணன் பிறப்பு)1

    “பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
    பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே”-(விடுதலை வேண்டும்)1

    ஆகிய வரிகளுள் பண்ணிசைக் கூறுகளையும், தேசிய கீதங்கள், திருப்பள்ளி எழுச்சி பாடல்கள், தெய்வப் பாடல்கள் ஞானப் பாடல்கள், தனிப்பாடல்கள், கண்ணன் பாட்டு, தமிழர் பாட்டு, வள்ளிப் பாட்டு, காளி பாட்டு, நவராத்திரி பாட்டு முதலிய பாட்டுகளையும் பாரதி பாடியுள்ளார். பாடடினைத் தாளத்தோடு பாட வேண்டும் என்பதனை,

    “தாளம் தாளம் தாளம்
    தாளத்திற்கோர் தடையுண்டாயின்
    கூளம் கூளம் கூளம்”- (குயில் பாட்டு)1

    என்னும் பாடல் வரிகளால் அறியலாம்.

    “பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
    பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
    நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ?
    ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
    ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ”(குயிலும் மாடும்)1

    எனும் வரிகளினால் பாரதியார் பாடல்களின்கண் காணலாகும் ஈர்ப்பு அறியலாகிறது.

    பண்ணோடியைந்த பாரதி

    “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா – அவன்
    பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
    கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா!” (அமரகவி)2

    என்று கூறியுள்ள கவிமணியின் வரிகளிலிருந்து பாரதியின் பாடல்கள் பண்ணோடு பாடக்கூடியவைகளாக அமைந்திருக்கின்றன என்பதனை நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.

    “மனந் திறப்பது மதியாலே
    பாட்டைத் திறப்பது பண்ணாலே”  (அம்மாக்கண்ணு பாட்டு)1

    இவ்வரிகளில் “பாட்டைத் திறப்பது பண்ணாலே” எனும் பாரதியின் தொடர் முலம், இவரின் பாடல்கள் பண்ணின் இலக்கணம் பெற்ற பாடல் என்பது பொருள். நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டுப் பெருந்தானங்களில் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு எனும் எட்டு கிரியைகளால் பண்ணப்படுவதால் “பண்” எனப் பெயராயிற்று என்பதனை,

    “பாவோடணைதல் இசை என்றார், பண் என்றார்
    மேவார் பெருந்தானம் எட்டானும் – பாவாய்
    எடுத்தல் முதலாய் இருநான்கும் பண்ணிப்
    படுத்தமையால் பண்ணென்று பார்” (3:26.அடியார்க்.உரை.ப.105)3

    என அரங்கேற்றுக் காதையில் அடியார்க்கு நல்லார் பண் குறித்துக் கூறியுள்ளார்.

    பண்ணிலக்கணம்

    பண்ணிலக்கணம் என்பது பண்ணீர்மையைக் குறிப்பதாகும். பண்ணீர்மைகள் என்பன பண்ணிற்குரிய ஓசைகளாலாகிய நிறங்கள். பண்ணின் நிறங்கள் பதினொன்றும் பண்ணின் சுரங்களைப் பல்வேறு வகைகளில் இசைத்தலால் வருவன. இதனை இளங்கோவடிகள் “வக்கிரித் திட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    “இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்தாங்கு
    அசையா மரபின் அதுபட வைத்து” (3:41,42.ப.63)3

    என்னும் அடிகளுக்கு ஈருரைஞர்கள் (அடியார்க்கு நல்லார்,அரும்பத உரையார்) உரைத்துள்ள விளக்கம்,

    “இவைப்புலவன் ஆளத்திவைத்த பண்ணீர்மையை முதலும், முறையும், முடிவும், நிறையும், குறையும், கிழமையும், வலிவும், மெலிவும், சமனும், வரையறை, நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினாலும் அறிந்து, அறிந்த வண்ணம் அவன் தாள நிலையில் எய்த வைத்த நிறம் தன் கவியினிடையேத் தோன்ற வைக்க வல்லோனாய்” (3:41,42 அடியார்க். உரை.ப.63, அரும்பத உரை.ப.108)3 என்பதாகும்.

    1. முதற் சுரம் என்பது பண்ணின் எடுப்புச் சுரம் (கிரகச் சுரம்).

    2. முறை என்பது பண்ணுக்குரிய சுரங்களின் வகைகளையும் அவை வரும் வரிசைகளையும் குறிப்பது.

    3. முடிவு சுரம் என்பது பண்ணின் முடிவு பெரும் சுரமமாகும்.

    4. நிறை என்பது ஒரு பண்ணை ஆலாபனை செய்கையில் நிரம்ப நிறுத்தல் சுரத்தை குறிக்கும்.

    5. குறை என்பது ஒரு பண்ணை ஆலாபனை செய்கையில் மிகக் குறைவாக ஒலித்தற்குரிய சுரம்.

    6. கிழமை சுரம் என்பது இணை, கிளை, நட்பு என்னும் குறியறிந்து புணரும் சுரங்கள் வந்து வந்து சேரும் சுரமாகும். இதனை ஜீவ சுரம் என்பர்.

    7. வலிவு என்பது இராகத்தை வலிவு மண்டிலத்தில் நிறுத்தி பாடுவது.

    8. மெலிவு என்பது இராகத்தை மெலிவு மண்டிலத்தில் நிறுத்தி பாடுவது.

    9. சமன் என்பது சமன் மண்டிலத்தில் பண்களின் சுரங்களை இசைத்தல்

    10. வரையறை என்பது பண்ணிற்கு என வரையறுக்கப்பட்ட நெறிகளும் முறைகளுமாகும்.

    11. நீர்மை என்பது ஒவ்வொரு பண்ணுக்குரிய சுவை, உணர்வு, மெய்ப்பாடு, தாட்டு வரிசைகள் முதலியவைகளைக் குறிக்கும்.

    பண்ணிலக்கணம் அல்லது பண்ணீர்மைகள் என்பது முதல், முறைமை, முடிவு, நிறை, குறை, கிழமை, வலிவு, மெலிவு, சமன், வரையறை, நீர்மை என்னும் பதினோரு பாகுப்புகளாக வகைப்படுத்திப் பாடும் திட்டமாகும்.(தொகுதி -3.ப.248)4

    பண்ணிசையில் பாரதியார் பாடல்கள்

    தென்னக இசையியலின் சிறப்புத் தன்மைகளுள் ஒன்றான இராக முறைக்கு முன்னோடியாகத் திகழ்வது தமிழிசையின் பண்களே.(ப.48)5 இப்பண்ணிசையை மீட்டுருவாக்கம் செய்வதோடு தமிழர் தம் பாரம்பரிய இசை முறையான பண்ணிசையினை அறிந்திருத்தலின் அவசியம் உணர்ந்து மகாகவி பாரதியின் இரண்டு பாடல்களுக்குப் பண்ணிசை அமைக்கப்பட்டு இங்கே  பணிந்தனுப்பப்பட்டுள்ளன.

    1. சொல்

    பண்: செம்பாலை          இராகம்: அரிகாம்போதி              தாளம் : ஆதி

    சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை
    நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.

    1.விரியும் அறிவுநிலை காட்டுவீர்-அங்கு
    வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்:
    தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர்-நல்ல
    தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர்.

    2.“வலிமை,வலிமை”என்று பாடுவோம்-என்றும்
    வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்;
    கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம்-நெஞ்சில்
    கவலை யிருளனைத்தும் நீங்கினோம்.

    3.“அமிழ்தம்,அமிழ்தம்’‘என்று கூறுவோம்-நித்தம்
    அனலைப் பணிந்துமலர் தூவுவோம்;
    தமிழில் பழமறையைப் பாடுவோம்-என்றும்
    தலைமை பெருமை புகழ் கூடுவோம்.1

    2. முரசு

    பண்: தனாசி                இராகம்: தன்யாசி                    தாளம்: ஆதி

    வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!
    வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!
    நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
    நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

    1.சாதிக் கொடுமைகள் வேண்டாம்; – அன்பு
    தன்னில் செழித்திடும் வையம்;
    ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; – தொழில்
    ஆயிரம் மாண்புறச் செய்வோம்

    2.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
    பேணி வளர்த்திடும் ஈசன்;
    மண்ணுக் குள்ளே சிலமூடர் – நல்ல
    மாத ரறிவைக் கெடுத்தார்

    3.அன்பென்று கொட்டு முரசே! – மக்கள்
    அத்தனை பேரும் நிகராம்.
    இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
    யாவரும் ஒன்றென்று கொண்டால்.1

    முடிவுரை

    “பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
    பாலித்திட வேணும்”1

    எனக் கூறியுள்ள மகாகவி பாரதி தன் பல்நோக்குப் பார்வையினால் இறை உணர்வு, தேச உணர்வு, விடுதலை வேட்கை, சமூக எழுச்சி, கவித்துவம், சொற்சுவை, பொருட்சுவை முதலியவைகள் அடங்கிய பல்வேறு பாடுபொருள்களில் ஆவேசப் படைப்புகளைப் படைத்து, “மகாகவி” எனும் தகைமையுடையவராக மட்டும் அல்லாது “பண்ணோடு இயைந்தோன்” என்னும் தகைமையையும் பெற்றுத் திண்மையாக விளங்குகின்றார்.

    தமிழரின் மரபிசை என்பது பண்ணிசையாகும். பண்ணிசைக் கூறுகளையும் தமிழிசையின் வேர்களைக் கொண்ட கருநாடக இசையின் கூறுகளையும் நன்கு அறிந்திருந்தமையால் பாரதி பிற புகழ்பெற்ற கவிஞர்கள் குறிப்பிடாத இப்பண்ணின் மேன்மையைத் தம் கவிதைகளுள் விரவியுள்ளார். இவரின் காலகட்டத்தில் பண்ணிசையின் ஆக்கம் விளிம்பு நிலையடைந்து, அயல் மொழியாளரின் கலப்பினால் கருநாடக இசை துளிர்விட்டுப் படர்ந்து பந்தலித்து வளரத் தொடங்கியிருந்தது.

    இயற்றமிழ் வடிவில் பல்வேறு பாடுபொருள்களை மக்களின் மனதில் உறையச் செய்வதைக்காட்டிலும் இசை வடிவின் வாயிலாக மக்கள் மனதில் பதிப்பிப்பது மிக எளிமையாது என்பதனால், மகாகவி பாரதியின் பாடல்களுள் இரண்டு பாடல்களைத் தெரிவு செய்து, தமிழரின் மரபிசையான பண்ணிசையினை மீட்டுருவாக்கும் நோக்கோடு பண்ணிசைக்கப்பட்டு உள்ளன. இப்பாடல்கள் தமிழினத்தவரின் இசையுணர்வுகள், பண்ணுணர்வுகள், கலையுணர்வுகள் முதலியவைகள் மேம்படுத்துவதோடு, தமிழரின் மரபிசையாம் பண்ணிசை மக்களிடையே மீண்டும் உயிரோட்டம் பெறும் என்பது திண்ணம்.

    துணை நின்றவைகள்

    1. பாரதியார் கவிதைகள் – http://www.tamilvu.org/library/l9100/html/l9100ba1.htm

    2. கவிமணியின் கவிதைகள்- http://www.tamilvu.org/library/l9302/html/l9302ind.htm

    3. சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும்- முனைவர்.சாமிநாதய்யர்,உ.வே. தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் ,1985.

    4. தமிழிசைக் கலைக்களஞ்சியம் தொகுதி(1-4)- சுந்தரம்.வீ.ப.கா. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, 2006.

    5. பண்ணும் இலயமும் – முனைவர் அங்கயற்கண்ணி.இ. அருளானந்த நகர், தஞ்சாவூர், 2010.


    ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

    பண்ணோடு  இயைந்த மகாகவி பாரதி என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன்மதிப்பீடு

    1. பாரதி இயற்றமிழ்ப் பாடல்களை (நான்குவகைப் பாக்கள் மற்றும் அவற்றின் இனங்கள் என) எழுதுகிறபோதே உணர்ச்சிவசப்பட்டு எழுதியவர். எனவே தம்முடைய இசைப்பாடல்களை எழுதிய போது அடைந்த உணர்ச்சி பிறழ்ந்து உணரப்பட்டுவிடக் கூடாது என்னும் எண்ணத்தால் பல பாடல்களுக்கு இராகம், மெட்டு, தாளம் எனக் குறிப்புகளைத் தந்திருக்கிறார்.

    2. அவ்வாறு குறிப்புகள் பெறாத ஆனால் பெற்றிருக்க வேண்டிய பாடலகளில் இரண்டு பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கட்டுரையாளர் இசையமைத்துத் தாளம் பற்றிய குறிப்புகளைக் கொடுத்திருப்பது பாராட்டுக்கு உரியது.

    3. பாரதியைப் பற்றிய ஆய்வில் அவருடைய இசைப் பாடல்களைப் பற்றியன எண்ணிக்கையில் குறைவு. இவர் அப்பொருள் குறித்துத்  தமது ஆய்வுக் கடடுரையை அமைத்திருப்பது நல்ல முயற்சி.

    4. சான்றெண் விளக்கத்துள் ஓரிடத்தில் ‘குயில்பாட்டு’ எனவும் பிறிதோரிடத்தில் ‘குயிலும் மாடும்’ எனவும் குறித்திருப்பது நெறியன்று. ஆய்வில் அவசரம் கூடாது.

    5. வலிமையான தரவுகள் கொண்ட ஆய்வில்  ‘சுரமமாகும் ‘பாகுப்புக்கள்’ முதலிய தட்டச்சுப் பிழைகள் தவிர்த்திருக்கலாம். இதனால் ஆய்வுச்சாரம் குறையவில்லையாயினும் ‘பொலிவு’ குறைகிறதல்லவா?

    6. ‘மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை’ (தொல் 1885)  என்பதனான் மனத்தில் என்றே இருத்தல் வேண்டும் ‘மரத்தில்’ ஏறினால் ‘பழத்தைப்’ பறிக்கலாமேயன்றி ‘மரமில்’ ஏறினால் ‘பழமை’ பறிக்க இயலாது. ‘முகத்தில்’ முகம் பாரக்கலாம் ‘முகமில்’ முகம் பார்க்க இயலாது. ‘மனத்துக்கண்’ என்பது நோக்குக. ‘மனதில்’ என்பது இலக்கணமுடையதன்று

    7. பாரதியைப் பற்றிய வழக்கமான ஆய்வுத் தடம் விலகிப் புதுத்தடத்தில்  பயணிக்கும் முயற்சியும் அம்முயற்சியின் விளைவாக மகாகவியின் பாடல்களில் இரண்டினுக்கு இசையமைத்துக் காட்டியிருப்பதும் கட்டுரையின் சிறப்பை உயர்த்துகின்றன.


     

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 18

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 18

    அவ்வைமகள்

    18. மொழியும் உடையும், கொடியும்  

    புரட்சியாளர்கள் பொதுவாக, மூன்று விஷயங்களில் தம் புரட்சியை போதிக்கின்றனர்; ஒன்று: மொழி, இரண்டு: உடை, மூன்று: கொடி. புரட்சியியலில், மொழியும், உடையும், கொடியும் புரட்சியின் கருவிகள்  என்று கூறப்படுவது வழக்கம் [1].

    மொழியும்,  உடையும், கொடியும்  மனித சமூகத்தின்  மிகப்பெரும் அடையாளங்கள் – எனவே இவை மூன்றும், புரட்சிக்கு முக்கிய அடையாளங்களாக எடுத்துக் கொள்ளப்படுவது புரட்சியாளர்களின் வழக்கமெனவே தெரிகிறது.

    எடுத்துக்காட்டாக, பிரெஞ்சுப் புரட்சியை (மே 5, 1789 – நவம்பர் 9, 1799) எடுத்துக் கொள்வோம். பிரெஞ்சு மொழியில் அதுகாறும் து (tu) என்பது (vous) என்று மாறி, பிரெஞ்சு மொழியின் இலக்கணத்தையே மாற்றியது  பிரெஞ்சுப் புரட்சியே.

    அதுபோன்றே, பிரெஞ்சுப் புரட்சியில், ஆண்-பெண் இருபாலரின் உடைகளும் – அவற்றின் மூவண்ணங்களும் கோடுகளும், ரிப்பன்களும் ஆண்டானின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுயஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதுமானதாக அணிந்து கொள்ளப்பட்டன. அவ்வாறே, பிரெஞ்சுப் புரட்சியின் கொடியும் மூவண்ணப் புரட்சிக் கொடியாக வடிமைக்கப்பட்டு ஏற்றப்பட்டது – ஏந்தப்பட்டது.

    பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு நெருங்கும் தறுவாயில்தான், இங்கே, வள்ளலார், ஆன்மீகப் புரட்சி விளைக்கிறார்.  தம் புரட்சிக்கு அவர் தெரிந்தெடுத்தது, மொழியும், உடையும், கொடியுமே.

    வள்ளலாரின் தமிழ் வெகு எளிமையானது – இலகுவானது – இசைநயம் உடையது – பொருளாழம் பொதிந்தது. “பருகியும் அறியேன் – விழுங்கியும் ஆறேன்” என்று ஆற்றா இன்பமாய் ஊற்றுப் பெருக்கெடுக்கும் சுவை பொதிந்தது.

    வள்ளலாரின் உடை  என்பது ஆன்மீக உலகத்தில் புதுப் புரட்சி. முன்னெப்போதும் அவரைப்போல உடைத் தோற்றத்தை ஒரு புரட்சிப் பொருளாய் எவரும், ஆன்மீகத்தில் எடுத்தாளவில்லை.

    அவர் உருவாக்கி அளித்த வெண்மை- மஞ்சள் இருவண்ண ஆன்மீகக் கொடி மகத்தான அறிவியல் – உடலியல் தத்துவம். வள்ளலாரின் மொழி, உடை, கொடி ஆகியன அவரது ஆன்மீகப் புரட்சியின் கருவிகளாக இயங்கிய தன்மை பற்றி விரைவில் விரிவாக விவாதிக்க இருக்கிறோம்.

    அதற்கு முன், ஸ்டீவ் ஜாப்ஸின் உடைப் புரட்சி பற்றி சிந்தித்துவிட்டு, வள்ளலாருக்குச் செல்வோம்.

    கணிணிப் பொருட்களில் தொழில்நுட்பப் புரட்சி செய்த ஸ்டீவ் ஜாப்ஸும் கூட, தனது மொழியில் புரட்சி செய்ததைப் போல, தனது  உடையிலும்  புரட்சியை விளைத்தவரே. ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு (1980க்குப் பிறகு), அவர், ஆமைக்கழுத்துச் சட்டை எனப்படும் உயர்கழுத்தும் நீள்கைகளும் கொண்ட பனியன் துணியாலான கருப்பு நிறச் சட்டையை மட்டுமே அணியத் தொடங்கினார் – அதனுடன் எப்போதும்  அவர் அணிந்தது  நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மட்டுமே – இறக்கும் வரையில் இதுவே அவர் உடையானது.

    சொல்லப் போனால்,  முதலில்,  இதனை ஆப்பிள் நிறுவனத்தின் சீருடையாக்கும் எண்ணமும் கூட அவருக்கு இருந்தது. அந்த முதல்படிகளில் ஆப்பிள் நிர்வாகத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும்  இவ்வுடையின் சிறப்புத் தெரியவில்லை போலும். அதற்கு அவர்கள் ஆதரவு அளிக்கவில்லை. அதனால், ஜாப்ஸ் தளர்ந்தாரில்லை. இந்த உடையைத் தனது சீருடை என்றே அழைத்து, ஜாப்ஸ் அதனையே தொடர்ந்து அணிந்து வரலானார்.

    உடையின் எளிமை, உடையின் கண்ணியம், செய்யும் பணிக்கு ஏற்ப உடை தரும்  வசதி,  அதன் தனித்துவ   அடையாளம், மற்றும் அது பிறருக்குச் சொல்லும் ஒட்டுமொத்தச் சேதி, ஆகிய  ஐந்தையும் கருத்தில் கொண்டே ஜாப்ஸ் இந்தச் சீருடையைத்  தனக்காகத்  தெரிந்தெடுத்துக் கொண்டார்.

    ஜாப்ஸ் தெரிந்தெடுத்த உடை, தொழிலாளியின் உடை (Workman attire) – முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்தது. தொழிலாளிதான் தொழிலகத்தில் முதன்மையானவன் என்பதை இடையறாது எடுத்தியம்பும் ஊடகமாக ஜாப்ஸ் தெரிந்தெடுத்த சீருடை அமைந்தது.

    “இந்த நிறுவனத்திலே – பணியாளர்களே முக்கியம்” என்னும் அதே நேரத்தில் பணியாளர்கள் செய்யும் பணிதான் இந்த நிறுவனத்தின் ஜீவநாடி என்று முரசறைவைது போல உரைப்பதாய், ஆனால் மவுனமாய் எடுத்தியம்புவதாக அவரது உடை அமைந்தது.

    பின்னாளில், எவ்வித அறிவுறுத்தலுமின்றி, தன்னியல்பாய்த் தன்னாலேயே  இவ்வுடை  ஆப்பிளின், வலியுறுத்தப்படாத சீருடையானது.

    ஒருவர்பின் ஒருவராக, ஜாப்ஸ் அணிந்து கொண்ட உடைக்கு அனைவரும் மாறலானார்கள்.

    காலர் வைத்த சட்டைகளை ஒதுக்கிவிட்டு, பாமரமான – எளியோர்களும் சர்வ சாதாரணமாய் அணிந்து கொள்வதுமான பனியன் துணி உயர்க்கழுத்துச் சட்டைகளைத் தம் அடையாளமாகக் கொள்வதை,  ஆப்பிள் நிறுவனத்தில் உள்ளோர் பெருமிதமாய்க் கருதத் தொடங்கினர்.

    கீழே உள்ள புகைப்படத்தில், இடப்புறம் உள்ளவர் ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி குக் என்பவர்;  வலப்புறம் உள்ளவர்  ஸ்டீவ் ஜாப்ஸ் .

    சீருடை, ஜாப்ஸைத் தாண்டி இன்ன பிறர்க்கும் பரவி நிற்பதைக் காண்க.

    https://nypost.com/2015/03/13/5-people-who-famously-were-super-committed-to-their-bosses/

    மனித சமுதாயத்தோடு நேரடித் தொடர்பில் இருப்பவர்கள்  சாதாரண மனிதர்களின் சாயலில் இருப்பதை, தொழில்ரீதியாகவும், வியாபாரரீதியாகவும் சாதகமான அடையாளம் என்று  ஆப்பிளில் உள்ளவர்கள் உணர்ந்தது சுயவெளிச்சமே தவிர எவ்வித வற்புறுத்தலாலும் இல்லை.

    புரட்சியாளர்களின் எளிவந்த புரட்சியின் வலிமையை உண்மையான சான்றாக அறிவிக்க, இந்த உண்மை நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.

    புரட்சியாளர்கள் தம் புரட்சிக்கான வித்துகளை,  பிறரது வெற்றி எடுத்துக்காட்டு களிலிருந்து ஆய்ந்து தெரிவு செய்துகொள்கிறார்கள் என்றால் அது உண்மையே.

    ஜாப்ஸிற்குச் சீருடை பற்றிய எண்ணம் எவ்வாறு தோன்றியது என்றால், அது அவருடைய ஜப்பானியப் பயணத்தின் போதுதான். 1980இல் ஜப்பானில் உள்ள சோனி நிறுவனத்திற்குச் சென்றபோது அங்கே அனைவரும் சீருடை அணிந்திருப்பதைப் பார்த்த ஜாப்ஸ், சோனி நிறுவனத்தின் தலைவரான, அகியோ  மொரிட்டாவிடம் அதுபற்றிக் கேட்கிறார்.

    அப்போது ஜாப்ஸிடம் அகியோ சொன்னதாவது: “போருக்குப் பிறகு எங்கள் மக்களுக்கு உடுத்திக்கொள்ள உடை இல்லை. எனவே நாங்கள் எங்கள் நிறுவனத்திலிருந்து, எங்கள் பணியாளர்களுக்கு தினப்படி அணிந்துகொள்ள உடை வழங்கி உதவினோம். நாங்கள் அவர்களுக்குத் தந்த உடையின் வடிவமைப்பு அவர்களுக்கு வெகுவசதியாக இருப்பதை அவர்கள் பாராட்டியதோடு, போரின் தாக்கத்திலிருந்து மீண்டு, பொருளாதாரம் சற்று மேம்பட்ட பிறகும்கூட, அவர்கள், நாங்கள் வழங்கிய எளிய உடையையே தினப்படி விடாமல், அணிந்து வந்தார்கள்! எங்கள் பணியாளர்களுக்கும், எங்கள் நிறுவனத்திற்கும் இடையே ஒரு நிலைத்த  பாசப் பிணைப்பை இந்த உடை உருவாக்கியது என்றே சொல்லவேண்டும்.”

    “அதன்பிறகு, காலப்போக்கில், இதேஉடையே  சீருடையாகியது; உடை வடிமைப்பாளர் ஐஸீ மியாக்கே என்பவரிடம் சொல்லி, சிறுமாறுதல்களை ஏற்படுத்தி, கூடுதல் வசதியுடன் எங்களது சீருடைகள்  தயாராகின!”

    அகியா, இதனைச் சொன்ன மாத்திரத்தில், ஐஸீ மியாக்கேவை ஜாப்ஸ் சந்திக்கிறார். தனது ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்றாற்போல் உடை ஒன்று வடிவமைத்துத் தர முடியுமா என்று கேட்கிறார். அவரும்  சில மாதிரிகளைத் தயார் செய்து கொடுக்கிறார். அந்த மாதிரிகளை  எடுத்துக்கொண்டு அமெரிக்கா திரும்பியவர், சோனி நிறுவனத்தில் தான் கண்ட  சீருடை பற்றி ஆப்பிளில்  பேசுகிறார். ஆப்பிளிலும், இவ்வாறு உடுத்திக்கொள்ளலாமா என்று கேட்கிறார். ஆனால், நான் ஏற்கெனவே சொன்னது போல, ஆப்பிளில் எவரும் சீருடையை எண்ண அளவில் கூட முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை.

    ஆனால், ஜாப்ஸ், பணியாளர் சீருடையில் மட்டுமே, தான் எப்போதும் அலுவலகத்தில் தோன்றுவேன் என உறுதி செய்துகொண்டு ஜப்பானில் மியாக்கேவைத் தொடர்பு கொண்டு,  தன்னுடைய அளவுக்கு, கருப்பு நிறத்தில் ஆமைக்கழுத்து கொண்ட நீள் கைவைத்த பனியன் சட்டைகளைத் தயாரித்து அனுப்ப முடியுமா எனக்கேட்க, அவரும் நூறு சட்டைகளை ஜாப்ஸின் அளவுக்குத் தயாரித்து அனுப்பி வைத்தார். அதை நித்தமும் தவறாமல், தான் இறக்கும்  வரையில் அணிந்தார் ஜாப்ஸ்.

    அவர் இவ்வாறு நேரடியாய், வெட்ட வெளிச்சமாய் எளிய உடையில் வாழ்ந்து காட்டிய வாக்கில் மெல்ல மெல்லப் பணியாளர்கள் தாமே முன்வந்து அவ்வுடையைப் பின்பற்றினர் என்பதோடல்லாது, கணினித் தொழில்நுட்பத் துறையிலும் இன்னபிற துறையிலும் இருக்கும் நிர்வாகத் தலைவர்கள்  எவரும் ஜாப்ஸ் போன்றே உடையணிய ஆரம்பித்தனர்.

    சொல்லப் போனால், ஜாப்ஸ் ஏற்படுத்திய உடைப் புரட்சி, இன்னும் ஒருபடி மேலே போய் – வெற்றியாளர்களாக விரும்புபவர்கள்  யாவரும் தினமும் ஒரே உடையை அணியவேண்டும் – உடை வடிவத்தில் மாற்றம் நிகழ்த்திக்கொள்ளக் கூடாது என்கிறதான ஒரு கொள்கை உலகில் உருவாகி, அது ஜீவிதமாய் நிற்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

    சீருடை என்பது பணியாளர்களுக்கிடையிலும், பணியாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலும் பாசப் பிணைப்பை ஏற்படுத்துகிறது என்று சோனி தலைவர் கூறியது ஆப்பிள் நிறுவனத்தில் நிதர்சனமாய் நிகழ்ந்தது.

    கணையத்தில் புற்றுக்கட்டி ஏற்பட்டு, மருத்துவமனையில், ஜாப்ஸ் கிடக்க, அவருக்கு  மாற்றுக் கல்லீரல் பொருத்தும் முகமாகக் கொடையாளியாக “நான் வருகிறேன்” “நான் வருகிறேன்” என்று போட்டி போட்டுக்கொண்டு, ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளரும் இசைவு தெரிவித்தனர். அவர்களுள் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொடையாளிக்கான பொருத்தம் அமைகிறது. அவர் தான் ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரியான குக். அவரது  இரத்தம்  மற்றும் கல்லீரல், ஜாப்ஸின்  மாற்றுக் கல்லீரல் அறுவைச் சிகிச்சைக்குத் தோதாக இருப்பதாக அறியப்படுகிறது.

    குக் தனது கல்லீரலின் ஒரு பகுதியை ஜாப்ஸிற்குத் தர ஆர்வத்தோடும் முழு மனதுடனும் முன்வருகிறார். இந்த நெகிழ்ச்சியை விட நெகிழ்ச்சியான தருணம் என்னெவென்றால் ஜாப்ஸ் அதை மறுத்தது.

    “உங்கள் உழைப்பைத் தந்து என் நிறுவனத்தை உயிருடன் வாழவைத்துக் கொண்டிருக்கிற  நீங்கள் நீடூழி வாழவேண்டும் – என் உயிர் என் நிறுவனத்தில் தான் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று குக்கிடம் ஜாப்ஸ் கேட்டு, அவரது கல்லீரல் கொடையைப் பெருந்தன்மையாய் மறுத்துவிட்டார்.

    அதற்குப் பிறகு, சிறிது காலத்திற்குப் பிறகு, இறந்த ஒருவரின் உடலிலிருந்து பெறப்பட்ட கல்லீரலைக் கொண்டு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்படுகிறது. இருப்பினும், ஜாப்ஸ் அதிக நாட்கள் உயிர் வாழ முடியவில்லை என்பது இறைவனின் சித்தம் என்றே கொள்கிறோம்.

    ஆப்பிள் நிறுவனத்திற்கு, கொடி இல்லை – கொடி தேவையில்லை என்றாலும், ஆப்பிள் என்ற எளிமையான ஜனரஞ்சகமான பெயரும் – ஒருவாய் கடித்துச் சுவைத்த ஆப்பிள் என்பதான அதன் சின்னமும் ஜாப்ஸின் புரட்சியின் மௌனமான முத்தாய்ப்புகள். அதிக சிரத்தையும், அதிக வார்த்தைகளும் இன்றி ஆப்பிள் நிறுவனம் புரட்சிகரமாய் மண்ணில் வேரூன்றப்பட்ட சாகசத்தை இன்று எவருமே வியந்து – வியந்து போற்றியவண்ணம் இருக்கிறார்கள்.

    (மேலும் பேசுவோம்)     

    துணை நின்றவை

    [1] Frey L., Frey M. (2018) Instruments of the Revolution: Language and Dress. In: The Culture of French Revolutionary Diplomacy. Studies in Diplomacy and International Relations. Palgrave Macmillan, Cham

    Share
  • பழகத் தெரிய வேணும் – 16

    பழகத் தெரிய வேணும் – 16

    நிர்மலா ராகவன்

    (பேரவா இருந்தால் சாதிக்கலாம்)

    தொலைகாட்சியில் இரவு முழுவதும் திரைப்படங்கள் காட்டுகிறார்கள். காப்பி குடித்தாவது கண்விழித்து விடிய விடிய அவைகளைப் பார்க்கிறார்களே பலரும், எப்படி?

    வெளிநாட்டில் நடக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளை இரவு நேரங்களில் பார்ப்பவர்களும் இதே ரகம்தான்.

    ஒருவருக்கு ஆர்வம் இருக்கும் காரியத்தைப் பார்க்கும்போதோ, செய்யும்போதோ சலிப்பு ஏற்படுவதில்லை. உற்சாகமாக இருக்கிறது. பொறுமையும் அதிகரிக்கும்.

    ‘புத்தகத்தைக் கையில் எடுத்தாலே கொட்டாவி வருகிறது’ என்னும் மாணவமணிகளுக்கு ஏன் படித்துத் தொலைக்க வேண்டும் என்ற எரிச்சல்.

    ஒருவர் தனக்குள்ளிருக்கும் திறமைகளைப் பூரணமாகப் பயன்படுத்தாது போனால் எதையோ இழந்துவிட்டதுபோன்ற வெறுமை, எதிலும் சலிப்பு.

    எந்தக் காரியமாக இருந்தாலும், அதில் ஆர்வம் இல்லாதபோது அதைச் சரியாக செய்து முடிக்க முடியாது.

    சாதனையாளர்கள் வெற்றிமேல் வெற்றி அடைகிறார்கள். பணமோ, புகழோ மட்டும் அவர்களின் உந்துசக்தியாக இருப்பதில்லை.

    முதலில், ‘இந்தக் காரியத்தைச் செய்யவேண்டும்,’ என்று தீர்மானிக்கிறார்கள். பிறகு, அதை எப்படிச் செய்வது என்று யோசித்து, கவனம் கலையாது, அதை நோக்கிச் செல்கிறார்கள். உற்றாரின் பக்கபலமும் இருந்தால் சிறப்பு. அப்படி இல்லாவிட்டாலும், இவர்கள் மனம் தளர்ந்துவிடுவதில்லை.

    IRVING WALLACE என்பவர் பிரபலமான அமெரிக்க எழுத்தாளர். அவரைப் பார்க்கும்போதெல்லாம், அவருடைய உறவினர்கள், `இப்போதாவது உருப்படியாக ஏதாவது வேலை செய்கிறாயா?’ என்று கேட்பதாகச் சொல்லிச் சிரித்தார்.

    பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்று அவருக்குப் புரிந்திருந்தது. பிறருக்காக தான் விரும்பிச் செய்ததை நிறுத்தவில்லை. தம் புத்தகங்களின்வழி நிறையப் புகழும் பணமும் சேர்த்தாலும், தொடர்ந்து எழுதினார்.

    கமல், ரஜனி போன்ற நடிகர்கள் வெற்றிப்பாதையில் நீடித்திருப்பதின் ரகசியம் என்ன?

    ‘எங்களுக்குப் பட்டம், பதவி இதிலெல்லாம் அக்கறை கிடையாது. நடிப்பது நடிப்பின்மேல் இருக்கும் வேட்கையால்’. இப்படி ஒரு நிகழ்ச்சியில் கமலஹாசன் கூற, மற்றவர் தலையசைத்து, ஒப்புக்கொண்டார்.

    ‘எனக்கும் ஆசைதான்..,’ என்று தயங்கியே காலம் தள்ளுவானேன்? துணிந்து இறங்க வேண்டியதுதான். நாம் ஈடுபடப்போகும் காரியத்தால் வேண்டாத விளைவுகள் ஏற்படக்கூடும். அப்போது ஏற்படும் அச்சத்தால் எடுத்த முயற்சியைக் கைவிடலாமா?

    கதை

    1987-ல், Rick E.Hunts என்ற தச்சர் தன் தலைமயிரைத் தானே வெட்டிக்கொள்ளும் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க முடிவெடுத்தார்.

    அவருக்கு எப்படி இந்த எண்ணம் பிறந்தது?

    ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில், தலைமயிர் வெட்டிக்கொள்ள வருகிறவர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டதைப் பார்த்ததும், அதற்குப் பதிலாக, புதிய முறை VACUUM CLEANER பயன்படுத்தி, மயிர் மேலே பறக்கச் செய்யலாமே என்று பொறி தட்டியதாம்.

    தொடர்ந்து ஏழு வருடங்கள் நான்கு விதங்களைத் தயாரித்துச் சோதனை செய்திருக்கிறார். ஐம்பது மாற்றங்கள்!

    மொத்த செலவு: இன்றைய ஐந்து லட்ச அமெரிக்க டாலருக்குமேல். (அதற்காகத் தன் கடையையும் விற்றிருக்கிறார்).

    தச்சராக இருந்தவர் விஞ்ஞானியாக மாறியதில் பலமுறை தோல்வியுற்றாலும், மனம் தளரவில்லை. செய்யும் காரியத்தில் பேரவா இருந்ததால், சலிப்பு ஏற்படவில்லை. எங்கே தவறு என்று ஆராய்ந்து, அதிலிருந்து புதியவற்றைக் கற்றிருக்கிறார்.

    இன்று பலருக்கும் அக்கருவி தேவைப்படுகிறது. ஒரு பெரிய கம்பெனி செய்து வைத்திருந்த அனைத்துக் கருவிகளும் விற்றுப்போய்விட்டனவாம்!

    ‘இப்போது வாழ்க்கை குழப்பமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. புதிதாக எதையாவது ஆரம்பித்து மாட்டிக்கொள்வானேன்!’ என்று எண்ணமிட்டு, ஏதோ ஒரு நியதியை எப்போதும் பின்பற்றிக்கொண்டிருந்தால் அமைதி கிடைக்கலாம். ஆனால், பெருமகிழ்ச்சி?

    விளம்பரங்களைப் பாருங்கள். வித்தியாசமாக எதையாவது செய்பவர்களே நம் கவனத்தைக் கவர்கிறார்கள்.

    கதை

    பல வருடங்களுக்குமுன், குமுதம் பத்திரிகையைக் கையில் எடுத்தாலே மரிக்கொழுந்து வாசனை ஆளைத் தூக்கும். ஒரு செண்ட் தயாரிப்பாளர்களின் விளம்பர உத்தி அது.

    விழாவென்றில், கையில் கிடைத்த புதிய பத்திரிகையை நான் ஆவலுடன் மூக்கருகே கொண்டுபோனேன்.

    அருகிலிருந்த சிறு பெண்கள், “யார்?” என்று ஆவலுடன் விசாரித்தார்கள், நான் அட்டைப்படத்திலிருந்த ஏதோ நடிகரைக் கொஞ்சுவதாக எண்ணி!

    மனிதர்களும் வித்தியாசமாகச் செயல்பட்டால்தான் கவனிக்கப்படுகிறார்கள்.

    தன்னைப் பிறர் கவனிக்க வேண்டும் என்று அசட்டுத்தனமாக ஏதாவது செய்வதைவிட பிறருக்குத் தம் சக்தியைமீறி சேவை செய்பவர்களே பாராட்டுக்கு உரியவர்களாக ஆகிறார்கள்.

    கதை (மலேசியாவில் நடந்தது)

    அண்மையில், தொற்றுநோய் பரவாதிருக்க யாரும் வீட்டுக்கு வெளியே வரக்கூடாது என்ற நிலையில், பள்ளிகள் மூடப்பட்டன. கணினிமூலம் ஆசிரியர்கள் போதித்தனர்.

    மலேசிய கிராமம் ஒன்றில் கணினி வசதி கிடையாது. ஏன், அங்கு செல்ல சரியான பாதைகூட கிடையாது.

    ஏற்கெனவே வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வந்திருக்கும் குழந்தைகள் மேலும் பின்தங்கிவிடுவார்களே என்று ஓர் ஆசிரியர் யோசித்தார்.

    அதன் விளைவு: பிற ஆசிரியர்களை அவர்களது பாடத்திட்டத்தைத் தமக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அவைகளைப் பிரதி எடுத்து, மிகுந்த சிரமத்துடன் அக்கிராமத்திற்குச் சென்று, மாணவர்களிடம் விநியோகித்தார்.

    ‘வீட்டுப்பாடத்தை உடனே முடித்துவிட்டேன்! அடுத்து எப்போது வருவீர்கள்?’ என்று ஒரு மாணவன் உற்சாகமாகத் தெரிவித்தது அவருக்குப் பெருமகிழ்ச்சி அளித்தது.

    அதிகமான யோசனை ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை. ஒரு காரியத்தை ஆரம்பிக்குமுன் திட்டமிடுதல் அவசியம்தான். ஆனால், ‘வெற்றி பெறுவோமோ? யார் என்ன சொல்வார்களோ!’ என்றெல்லாம் ஐயம் எழுந்தால் ஓரடிகூட எடுத்து வைக்க முடியாது.

    என்னுடன் வேலை பார்த்த ஆங்கில ஆசிரியை சொன்னாள்: “எனக்குக் கதை எழுத ஆசை. ஆனால், ஒரு வரி எழுதியதும், `இப்படி இருக்கலாமோ?’ என்ற சந்தேகம் வந்துவிடும். அதை மாற்றினால், இன்னொரு விதமாக எழுதத் தோன்றும். இப்படியே, செய்ததில், ஒரு வரிக்குமேல் செல்லவே முடியவில்லை!”

    நல்லவேளை, எனக்கு அந்தக் குழப்பமெல்லாம் கிடையாது. மனதில் தோன்றுவதை ஆங்கில எழுத்துக்களில் வடித்தாலே பெரிய காரியம் என்று நினைத்து எழுதுவேன்.

    “அது எப்படி, கணக்கு ஆசிரியை, பௌதிக ஆசிரியை என்று நீங்களெல்லாம் போட்டிகளில் பரிசு பெறுகிறீர்கள்!” என்று இன்னொரு ஆங்கில ஆசிரியை அதிசயப்பட்டாள்.

    போட்டிகளில் பரிசுபெற்ற கதைகளைப் படித்தால் நீதிபதிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்துவிடும். கணக்கிலும் விஞ்ஞானத்திலும் இருப்பதுபோல் இதுவும் ஒருவித ஃபார்முலாதான்.

    செய்யும் தொழிலே தெய்வம் என்கிறோம். ஆனால், பிடித்துச் செய்யும் காரியத்திற்குத்தான் அது பொருந்தும். அந்நிலையில், ‘இதனால் எவ்வளவு பணம் கிடைக்கும்?’ என்ற யோசனை எழாது.

    பிடிக்காவிட்டாலும், செய்ய நேர்கிறதா?

    WHAT IS WORTH DOING IS WORTH DOING WELL.

    எதைச் செய்ய நேரிட்டாலும், முழுமையான கவனத்துடன், ஈடுபாட்டுடன் செய்யவேண்டும். பிறர் மெச்சுகிறார்களோ, இல்லையோ, திருப்தியாவது கிடைக்குமே!

    Share
  • வாழ்க்கை அறிவு

    வாழ்க்கை அறிவு

    முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    மார்பு வரை ஏற்றிவிட்ட தவிட்டு நிறத்தில் உள்ள கால்சட்டையும், ஆங்காங்கு ஓட்டைகள் இடப்பட்ட வெள்ளை நிற பனியனும் அணிந்து, ஷேவ் செய்து பளிச்சென ஒரு சின்ன அறையில் சுழல் நாற்காலியில், புகைக்குழலுடன் அமர்ந்திருக்கும் மருத்துவரின் முன்னால், விருப்பமில்லாத ஒரு கர்ப்பத்தின் தயங்கலுடன் ஒரு கிராமத்து இளம்பெண்ணும், ஒரு இளைஞனும் சென்றனர்.

    என்ன நடந்தது என்பதை மருத்துவரின் அனுபவப்பூர்வமானக் காட்சி ஒரு நிமிடத்தில் உணரவைத்தது. பரிசோதனைக்காக வழக்கம்போல இருண்ட அறைக்கு அவர் அப்பெண்ணை அழைத்தார். அவள் அவரை பின்தொடர்ந்தாள். அறையின் கதவடைந்தது.

    “நீ ஒரு குட்டி கெட்டிக்காரி” மேசைமீது நீண்டு நிமிர்ந்து கிடக்கும் பெண்ணிடம் டாக்டர் கூறினார். அவர் பரிசோதனைத் தொடங்கினார்.

    பக்கத்து அறையிலிருந்து அங்கு கிடக்கும் ஏதோ வெளியீடுகளின் பக்கங்களை திருப்பிப்திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞனுக்கு  வாசிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை. அடுத்த அறையில் பரிசோதனைக்குச் சென்றிருக்கும் பெண்ணுடன் தான் நடத்திய உறவு அவனது சிந்தனையைக் கலக்கியது. ஒரு வாழைத்தோப்பின் தனிமையையும், வாழைகளுக்கு நடுவில் அடிக்கடி வீசுகின்ற குளிர்ந்தகாற்றையும் மண்ணின் வாசனையையும் அவன் சபித்தான். அப்படியொரு வாழைத்தோப்பு இல்லாதிருந்திருந்தால் கடும் பச்சையும் இளம்பச்சையுமான வாழையிலைகளுக்கு குளிர்ந்தகாற்று வீசாதிருந்திருந்தால்! மண்ணிற்கு போதையேற்றக்கூடிய வாசம் இல்லாதிருந்திருந்தால்!.

    கதவு திறந்தது. டாக்டர் ஒரு பாத்டவலில் கையைத் துடைத்துக் கொண்டு அறைக்கு வந்தார்.

    “ஒன்றோ ரெண்டோ மாசமல்ல. இத்தனநாள் ஏ வெச்சிட்டிருந்தீங்க?”  தனது நாற்காலியில் போய் உட்கார்ந்து அவர் கேட்டார்.

    “அவ இப்பதா சொன்னா” – இளைஞன் கூறினான்.

    “அப்படீனா அவளுக்கு வேற ஏதாவது உத்தேசம் இருக்கும்” மருத்துவர் கூறினார்.

    அவன் அதை மறுக்கவில்லை.

    கதவிற்குப் பின்னால் பெண்ணின் நிழல் ஆடியது.

    “நீ வெளில போய் உட்காரு. நாங்க பேசட்டும்.” டாக்டர் அவளிடம் கூறினார்.

    “அவளின் முகத்தில் வெறுப்பு தெரிந்தது. இளைஞன் அவள் பின்னாலேயே வெளியில் வந்தான்.

    “ம் ஹீம்?”

    “அவன எனக்குச் சுத்தமாப் பிடிக்கல”

    “உனக்கு அவன புடிக்க வேண்டா”

    “அவனொரு கேவலமானவெ, நாம போகலாம்”

    டாக்டர் அதக் கேட்டிருவாறோன்னு  இளைஞனுக்குத் தோன்றியது.

    “எடீ நமக்கு, நமக்கு நம்மோட கார்யம் நடக்க வேண்டாமா?. இவ்வளவு தூரம் வந்திட்டுத் திரும்பிப்போறதா? கஷ்டம்னு அவர் சொல்றாரு. நா போய் அவர எப்படியாவது சொல்லி சம்மதிக்க வெக்கிறே”

    “அதவிட நல்லது  என்னக்கொல்றதுதா”

    “நீ கொஞ்சம் அடங்கியிரு”

    அவன் திரும்பவும் டாக்டரின் அறைக்குச் சென்றான்.

    டாக்டர்  தன்னுடைய  புகையிலைக் குழலை பற்றவைத்துக் கொண்டிருந்தார். ஒரு புன்சிரிப்புடன் அவர் இளைஞனை வரவேற்றார். அவர்களுக்குள் சர்ச்சை தொடங்கியது. அது நீண்டு கொண்டே சென்றது.

    “இதுதா இருக்கு எங்கையில” இளைஞன் சட்டைப்பையிலிருந்து பேப்பர்ல் கட்டிவைக்கப்பட்ட பணத்தை டாக்டர் முன்னால் வைத்தார்.

    கட்டை விரித்து பணத்தை எண்ணியபோது அவர் கொஞ்சம் கூட திருப்பதி அடைந்தவராகக் காணப்படவில்லை. நெற்றியில் சுருக்கத்துடன் அவர் இளைஞனைப் பார்த்தார். அவர்ககளுக்குள் விவாதம் இரண்டாம் கட்டத்தை நெருங்கியது.  இந்தமுறை வெளியில் இருக்கும் இளம்பெண்ணும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டாள். அவள் ஒரு சின்ன கெட்டிக்காரியும் அமைதியான அழகுமுடையவள்னு நான் நெனக்கறேன்னு டாக்டர் வெளிப்படுத்தினார். அவள் ஒரு வறுமையானக் குடும்பத்தைச் சார்ந்தவள் என்று இளைஞன் கூறினான்.  வறுமையின் நிழல் அவளது உடலில்லை என்றார் டாக்டர். அவளுடைய மனது மிகவும் மிருதுவானது இளைஞன் கூறினான். நான் அதை விரும்பறேன்னு டாக்டர் கூறினார். இளைஞன் நிசப்தமானான். மேசைக்குள்ளிருந்த சின்ன கண்ணாடியெடுத்து அதில் முகம் பார்த்தார். பிறகு பின்னாலுள்ள பீரோவிலிருந்து பர்ஃப்யூமை கைநீட்டி எடுத்தார். உடம்பில் வாசனை திரவம் ஸ்ப்ரே பண்ணும் சத்தம் கேட்டது. ஷ்… ஷ்…

    இளைஞனின் மனதில் எதிர்பாராமல் குளிர்ந்த காற்று வீசியது. வாழைகளின் நிழல்கள் அவனைத் தடவியது.

    “வேண்டா  என்னோட பணத்தக்குடுங்க!” அவன் ஏதோ தாளம் மாறிய விதத்தில் கூறினான்.

    அவனும் அப்பெண்ணும் வெளியிலிறங்கி நடந்தனர். இருவரும் மௌனம் பாலித்தனர். சிறிது நேரம் கழித்து அவள் அவனை நோக்கினாள்.

    “என்ன  யோசிக்கறீங்க?” அவள் கேட்டாள்.

    அவனின் பதில் உடனே வந்தது.

    “உன்னே எப்படிக் கொல்லலாம்னு”

    அவள் ஒரு நொடி பதைத்தாள். ஆனால் உடனே சுயமாக மீண்டெழுந்தாள். சில அடிகள் நடந்தபிறகு அவள் மனமுருகிக் கூறினாள்.

    “உங்க கையால எப்படி சாகறதுக்கும் எனக்கு விருப்பம்தா……… போதுமா?”

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

    Share
  • நாலடியார் நயம் – 17

    நாலடியார் நயம் – 17

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பெரியாரைப் பிழையாமை

    பாடல் 161

    பொறுப்பர்என்றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
    வெறுப்பன செய்யாமை வேண்டும்; – வெறுத்தபின்
    ஆர்க்கும் அருவி அணிமலை நாட!
    பேர்க்குதல் யார்க்கும் அரிது.

    ஒலிக்கும் அருவிகளை அணிகலனாய்
    அணிந்த மலைசூழ் நாட்டின் வேந்தனே!
    பொறுத்துக்கொள்வர் என நினைத்து
    பெரியோரிடம் அவர் வருந்துமாறு
    குற்றம் செய்யாமை நன்று
    அவர் வெகுண்டால் அதனை மாற்றுதல்
    அத்துணை எளிதன்று எவருக்கும்.

    பாடல் 162

    பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
    கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் – அன்னோ
    பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
    நயமில் அறிவி னவர்.

    பொன்னையே கொடுத்தாலும் நெருங்கமுடியாப்
    பெரியோரைச் செலவின்றி சேரத்தக்க நிலையைப்
    பெற்றினும் நற்பண்பற்ற அறிவிலார்
    பயனின்றி வீணாய்க் காலம் கழிப்பாரே.

    பாடல் 163

    அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
    மிகைமக்க ளான்மதிக்கற் பால – நயமுணராக்
    கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
    வையார் வடித்தநூ லார்.

    அவமதிப்பும் மிக்க மதிப்பும்
    ஆகிய  இரண்டும் பெரியோரால்
    மதிக்கத்தக்கன நல்லொழுக்கமற்ற
    மனிதரின் பழிப்பையும் பாராட்டையும்
    ஆராய்ந்த நூலறிந்த பெரியோர்
    அற்பமாய்க் கருதி மதியார்.

    பாடல் 164

    விரிநிற நாகம் விடருள தேனும்
    உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்;
    அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
    பெருமை யுடையார் செறின்.

    படம்விரிக்கும் பாம்பு மலைப்
    பிளப்பில் இருப்பினும் எழும்
    இடியோசைக்கு அஞ்சுதல்போல்
    மேன்மைமிகு பெரியோர்
    மனதில் கோபம் கொள்வாராயின்
    தவறிழைத்தோர் புக இயலா
    தரமான கோட்டையிலிருப்பினும்
    தப்பிப் பிழைக்கமாட்டார்.

    பாடல் 165

    எம்மை அறிந்தலிர் எம்போல்வார் இல்லென்று
    தம்மைத்தாம் கொள்வது கோளன்று; – தம்மை
    அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
    பெரியராக் கொள்வது கோள்.

    எம்மை அறியமாட்டீர் இவ்வுலகில்
    எமக்கு ஒத்தவர் எவருமிலர் எனத்
    தம்மைத்தாமே மதித்தல்
    தக்க குணம் ஆகா
    அறம் உணர்ந்த பெரியோர் நம்
    அருமை உணர்ந்து நம்மைப்
    பெரியோர் என மதித்தலே
    பெரும் பெருமையாம்.

    பாடல் 166

    நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழல் போல
    விளியும் சிறியவர் கேண்மை; – விளிவின்றி
    அல்கு நிழல்போல் அகன்றகன்று ஓடுமே
    தொல்புக ழாளர் தொடர்பு.

    பெருங்கடலின் குளிர்கரையுடையவனே!
    முற்பகலின் நிழல் போல் குறைந்து
    மறையும் சிறியோர் நட்பு
    பழம்புகழ் மிக்க பெரியோரின் நட்போ
    பிற்பகல் நிழல்போல் மிக்கு வளர்ந்து நீளூம்.

    பாடல் 167

    மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
    துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா – துன்னிக்
    குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
    உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு.

    அரசனின் செல்வத்தையும் பொதுமகளிரின்
    அழகையும் நெருங்கினவர் துய்ப்பர்
    அதற்குத் தகுதி வேண்டா எதுபோலெனில்
    அருமையாய்த் தளிர்விட்டுத் தழைத்து
    அமைந்த குளிர்மரமெல்லாம் தம்
    அருகே வந்தவர்க்கு நிழல்தருதல் போல.

    பாடல் 168

    தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்
    பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; – பெரிய
    உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்
    கலவாமை கோடி யுறும்.

    வற்றாத கழிக்கரையுடை
    வேந்தனே! நன்மை தீமை
    பிரித்துணரும் தெளிவிலாரிடம்
    பழகிப்பின் பிரிய நேர்ந்தால் அப்
    பிரிவு மிகு துன்பத்தைத் தருமெனவே
    எவரிடமும் நட்பு கொள்ளாமை
    எல்லோர்க்கும் கோடிபங்கு நன்மையாம்.

    பாடல் 169

    கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
    செல்லாது வைகிய வைகலும்; – ஒல்வ
    கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
    படாஅவாம் பண்புடையார் கண்.

    கற்கவேண்டிய நூல்களைக்
    கல்லாமல் வீணாகக்
    கழிந்த நாட்களும்
    கேள்வியின் காரணமாய்ப்
    கற்ற பெரியோரிடம் செல்லாது
    கழிந்த நாளும் தம்மால்
    கொடுக்கமுடிந்த அளவு
    கேட்பவர்க்குக் கொடாது
    கழிந்தநாளும் பண்புடையோரிடத்துக்
    காணக் கிட்டாதவை.

    பாடல் 170

    பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
    உரியார் உரிமை அடக்கம் – தெரியுங்கால்
    செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
    அல்லல் களைப எனின்.

    பெரியோருக்குப் பெருமை தருவது
    பண்பான எளிமையுணர்த்தும் செருக்கிலாப்
    பணிவுடைமையாம் கற்றோரின்
    பண்பு அடக்கமுடைமையாம்
    ஆராய்ந்து நோக்கின் தம்மை
    அண்டியவரின் வறுமைபோக்குவாராயின்
    செல்வம் உடையவரும் செல்வரே.

    Share
  • தேடுமிடம் – அமரர் ஆர்.எஸ். மணியின் கவிதை

    தேடுமிடம் – அமரர் ஆர்.எஸ். மணியின் கவிதை

    2006ஆம் ஆண்டு, கனடா நாட்டில் வாழ்ந்த, பல்கலை வித்தகர் ஆர்.எஸ். மணி, தமிழ் சிஃபி தளத்துக்காக, தேடுமிடம் என்ற தனது கவிதையை வாசித்து எனக்கு அனுப்பிவைத்தார். அதை ஆவணப்படுத்தும் முயற்சியாக, யூடியூபில் இட்டுள்ளேன். மயக்கும் அவரது குரலை இங்கே நீங்கள் கேட்கலாம்.

     

    thEdumidam

     

    Share
  • ஒரு யுக்தி

    ஒரு யுக்தி

    செல்வன்

    2001ஆம் ஆண்டு.
     
    ஓக்லாந்து பேஸ்பால் அணி தோல்வி மேல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. நட்சத்திர வீரர்களை ஏலம் எடுக்கக் காசு இல்லை. அணியின் முன்னணி விரர்கள் ஓய்வு பெற்றுவிட்டார்கள்.
     
    இந்தச் சூழலில் அணியின் மேலாளர் பில்லி பீன், பீட்டர் பிராண்டு எனும் யேல் பல்கலைக்கழக எகனாமிக்ஸ் வல்லுனரை சந்திக்கிறார். பீட்டர் பிராண்டு, அவரிடம் “பேஸ்பால் ஆட்டமே மிகத் தவறான முறையில் வழிநடத்தப்படுகிறது. நான் சொல்லும் கணிதவியல் மாடல்களை வைத்து வீரர்களை ஏலம் எடுத்தால் அணி வெற்றிபெறும்” என்கிறார்.
     
    அப்போது பேஸ்பால் நட்சத்திர மவுசை வைத்தே இயங்கி வந்தது…. ஹோம் ரன் எனப்படும் சிக்சருக்கு ஒப்பான அடிகளை அடிப்பவர்கள் பெரும் விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார்கள். பேட்டிங் சராசரி கூடுதலாக இருப்பவர்களும் அதிக விலைக்கு வாங்கப்பட்டார்கள். நட்சத்திரங்களைப் பார்க்கவும், ஹோம் ரன்களைப் பார்க்கவும் கூட்டம் கூடியது..
     
    “இந்த மாடலே தவறு. பேட்டிங் சராசரியை அவுட் ஆகாமல் இருப்பதன் மூலம் செயற்கையாகக் கூட்டமுடியும். ஹோம் ரன்களை அடிக்கணும் என எந்த அவசியமும் இல்லை. பந்தைத் தட்டிவிட்டுவிட்டு முதல் பேசுக்கு ஓடுவதில் வல்லவர்களை விலைக்கு வாங்கினால் போதும். அப்படி தட்டிவிட்டுவிட்டு ஓடினால் ரன்கள் வந்துகொண்டே இருக்கும்” என்ற பீட்டர் பிராண்ட், அந்த மாடலை வைத்துக் கணக்குகளைப் போட்டு, வீரர்கள் சிலரை ஏலம் எடுக்கச் சொன்னார்.
     
    அதில் வயதானவர்கள், ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள், காயம்பட்டுச் சரியாக ஆடமுடியாமல் இருப்பவர்கள் எனப் பலர் இருந்தார்கள். நட்சத்திர வீரர்களை எல்லாம் ஏலம் எடுக்காமல் இவர்களை மிக மலிவான விலைக்கு ஓக்லாந்து அணி ஏலம் எடுக்கவும் அவர்கள் நகைப்புக்கும், பகடிக்கும் ஆளானார்கள். அணி நிர்வாகத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக ரசிகர்கள் கருதினார்கள்.
     
    ஆனால் சீசன் துவங்கியதும் இந்த உத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. நட்சத்திர வீரர்கள் இல்லை, ஹோம் ரன்கள் இல்லை, ஆனால் ரன்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தன. தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் வென்று உலக சாதனை படைக்கவும் விளையாட்டு உலகமே அதிர்ச்சி அடைந்து, பில்லிபீனைத் திருப்பிப் பார்த்தது. அந்த ஆண்டு, பட்டத்தையும் ஓக்லாந்து அணி வென்றது.
     
    உடனடியாக பில்லிபீனை வலுவான, பெரிய அணியின் முதலாளிகள் சூழ்ந்தார்கள். “எத்தனை தொகை வேண்டுமானாலும் கேளுங்கள். கொடுக்கிறோம். எங்கள் அணிக்கு வாருங்கள்” என்றார்கள். ஒரு அணி ஒன்றேகால் கோடி டாலரைக் கொடுக்க முன்வந்தது. அனைத்தையும் மறுத்து அடுத்த சீசனுக்கு தன் அணியின் சார்பிலேயே களம் இறங்கினார் பில்லிபீன்.
     
    2001ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்த வெற்றியைப் பெற்றுத்தந்த விவிஎஸ் லட்சுமண் இந்த உத்தியைத் தான் கையாண்டார். அந்த 281 ரன்களில் ஒரே ஒரு சிக்சர் கூட இல்லை. “சிக்சருக்கும், பவுண்டரிக்கும் இருக்கும் வேறுபாடு 2 ரன்கள் தான். ஆனால் தூக்கி அடிக்காவிட்டால் அவுட் ஆகமாட்டோம்” என்றார் லட்சுமண்.
     
    அடித்து ஆடும் ஆவேச ஆட்டம் இல்லை, ரசிகர்களை வியக்க வைக்கும் ஷாட்டுகள் இல்லை… ஒன்று, இரண்டு, நாலு என மெதுவாக ரன்கள் ஏறின. மெதுவாக, நிலையான, திட்டமிட்ட ஆட்டம் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது,.
     
    பீட்டர் பிராண்டும், பில்லிபீனும் கையாண்ட உத்தி, இன்று அனைத்து பேஸ்பால் அணிகளாலும் கையாளப்படுகிறது. அவர்கள் கிட்டத்தட்ட லெஜண்டுகளின் இடத்தை அடைந்துவிட்டார்கள். இதை அடிப்படையாக வைத்து, Moneyball எனும் ஆங்கிலப் படம் வெளிவந்தது. பிராட் பிட், பில்லி பீன் வேடத்தில் நடித்தார்.
     
    வெற்றி சிக்சர்களாலும், ஹோம் ரன்களாலும், பெரிய சாதனைகளாலும் தீர்மானிக்கப்படுவதில்லை. நிதானமான, தொடர்ச்சியான, சிறுசிறு வெற்றிகள் மூலமே வெற்றி பெறுவோம். நாம் எப்படி ஜெயித்தோம் என்பதே அதன்பின் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும்.
    Share