Blog

  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் கலாநிதி என். சண்முகலிங்கன் அவர்களுடன் இ-நேர்காணல்

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் கலாநிதி என். சண்முகலிங்கன் அவர்களுடன் இ-நேர்காணல்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

    யாழ்ப்பாணத்தில் தென்மயிலையில் கட்டுவன் கிராமத்தில் பிறந்து கல்வியில் உயர்நிலை பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக்கத்தின் துணைவேந்தராய் பதவி வகித்தவர்தான் பேராசிரியர் கலாநிதி நா. சண்முகலிங்கன் அவர்கள்.

    யாழ்மண்ணின் புகழ்பூத்த மகாஜனாக் கல்லூரியில் விஞ்ஞானம் படித்துபல்கலைக்கழகம் சென்று கல்வித்துறையில் பட்டம் பெற்று சமூகவியல் துறையினைத் தேர்ந்தெடுத்து புலமைப் பரிசிலைப் பெற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாப் பல்கலைக்கழகத்தில் உயர்பட்ட ஆய்வினை மேற்கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். நிறைவில் அமெரிக்க பிரின்ஸ்ரன் பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் கணநாத் ஒபயசேகர வழி காட்டலில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

    சமயத்தின் சமூகவியல், பண்பாட்டு மானிடவியல், ஊடகக்கல்வி, செயல்முறை வடிவிலான நுண்சமூகப் பொறிமுறையியல் என்பவற்றில் இவரது ஆர்வமும் ஆய்வும் அமைந்திருந்தது.

    கவிதை, சிறுகதை, நாடகம், சிறுவர் நாவல், நாவல், ஆக்க இசைப் பாடல்கள் என்று பல்துறைகளில் முத்திரை பதித்துள்ளார். அத்துடன் தமிழில் சமூகவியல், மானிடவியல், துறைசார்ந்த நூல்களை எழுதிய முன்னோடியாகவும் விளங்குகிறார்.

    1981 ஆம் ஆண்டு உதவி விரிவுரையாளராக யாழ்ப்பாணப் பல்லகலைக் கழகத்தில் நியமனம் பெற்று பேராசிரியராய் துறைத்தலவராய் வளர்ச்சியுற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராய் உயர்வு பெற்றார்.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மானிடவியல் துறைகளை நிலைபெறச் செய்த பெருமையினையும் பெற்றுக்கொள்ளுகின்றார். அதுமட்டும் அல்ல அத்துறையின் முதல் பேராசிரியராகவும் அத்துறையின் தலைவராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றிய பெருமையினையும் இவர் பெற்றுக் கொள்ளுகிறார். இதுவரை பதினைந்து நூல்களைத் தந்திருக்கிறார். அதில் இரண்டு நூல்கள் ஆங்கிலத்தில் ஆக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பன்முக ஆளுமையாக விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி நா. சண்முகலிங்கன் அவர்களை நேர்காணல் செய்தேன். அந்த நேர்காணல் இங்கே விரிகிறது. மனமுவந்து நட்புடன் தன் சிந்தனைகளை வழங்கிய அவரை வாழ்த்தி நன்றி நவின்று மகிழ்கின்றேன்.

    பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன்,மேனாள் துணை வேந்தர் சமூகவியல் சிரேஷ்ட பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை

    நேர்கண்டவர்மகாதேவஐயர் ஜெயராமசர்மா

    1. பல்துறை அறிஞராக தற்போது உலகையே அச்சுறுத்தும் கொடிய அரக்கனான கொரனோவை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள்?

    மனித வரலாறு, ஆங்காங்கே இது போன்ற பேரனர்த்தங்களை சந்தித்ததுண்டு. ஆனாலும் இன்றைய தொடர்பூடக-உலகமயமாக்க விரிவாக்கத்தில் கொரோனாவும்  அதுபற்றிய செய்திகளும் உலகம் முழுமையையும் ஆக்கிரமித்து நிற்கின்றது என்றே சொல்ல வேண்டும்.

    வவ்வால், பாம்பு, அழுங்கு போன்ற விலங்குகள் வழி கொரோனா அரக்கன் வரவா அல்லது அழித்தல் நோக்கிலான மனித அரக்கனின் அறிவின் அரசியல் சதியா என்ற வினாக்களுக்கு இன்னமும் தெளிவான விடையில்லை. உலக வல்லரசுகளிலிருந்து சகலரும் கையறுநிலையில்…

    ’நவீன வாழ்வியல் வேகத்தில் எல்லாம் முடியும்’ என்ற வேகம் கெட, எல்லாமும் எல்லோரும் ஒடுங்கிய ஒர் அனுபவமாக கொரோனா; இந்த ஒடுக்ககாலம் என்பது கடந்தகாலம் பற்றிய மனித குலத்தின் மீள் விசாரணைக்கான ஒரு தவக்காலம் என்பேன்.

    2. கொரனோவின் காரணமாக வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை இன்று பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து வீட்டில் இருப்பதால் பலர் மனமுறு கலுக்கு ஆளாகின்றனர் என அறிய முடிகிறது. இதைப்பற்றிய கருத்தினைத் தந்தால் பலருக்கும் பயனாகும் இருக்கும் அல்லவா?

    வீட்டிலே முடங்கியிருத்தல் என்ற பதம் கூட ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல கட்டமைக்கப்பட்ட சங்கதிதான். வீட்டிலே இருக்க நேரமில்லையே என அந்தரித்த மனிதர், இன்று வீட்டில் இருக்க கிடைத்த சூழலின் வாய்ப்பான பக்கங்களை மனங்கொள்ள வேண்டும். அவசர யந்திர வாழ்விடை நாம் தொலைத்த குடும்ப உறவின் அழகினை, சொந்த வீட்டின் அழகினை ஆராதிக்கக்கிடைத்தது வரப்பிரசாதமாக இந்த நாட்களைக் கொண்டாட வேண்டும்.

    இது கூட ஒருவிதத்தில் நிலையான வாழ்வாதாரம் – வசதிகொண்ட வகுப்பினருக்கான கருத்தாக்கமாகவே முடியலாம். அன்றாட வாழ்வாதாரத்துக்கு அல்லாடும் நலிந்த மக்கள் தொடர்பான சிறப்பான ஏற்பாடுகள் இக்காலத்தில் முதன்மையான கவனிப்புக்குரியன.

    தனித்திருத்தல் என்ற தாரக மந்திரத்துக்குள் யாரும் புறந்தள்ளப்பட்டு விடக்கூடாது. சமூக இடைவெளி என்பது தனியன்களுக்கிடையிலான பௌதீக தூர மட்டுப்பாட்டினைக் குறிப்பதே தவிர சமூகத்திலிருந்து ஒதுங்குதல் அல்லது ஒதுக்குதல் என பொருள்படாது என்ற புரிதல் மிகமிக முக்கியமானது.

    3.  ஊடகத்துறையிலும் தொடர்பாடல் துறையிலும் நீங்கள் வல்லமை பெற்றவர் என்ற வகையில் தற்போதைய சூழலில் இவற்றின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன?

    வழமை போலவே கொரோனா விடயத்திலும் சமூகப்பொறுப்பான ஊடகங்கள் பக்குவமாய் செயற்படுகின்றன; அதேவேளையில் உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுவது போல ஆதாரமில்லாத – தவறான தரவுகளை தரும் infordemic எனப்படும்  நிலை  ஆபத்தானது. கொரோனா விடயத்தில் நிறையவே இவ்வாறான நியாயமான விமர்சனங்களை காணமுடிகின்றது. உண்மையில் இந்த சூழமைவின் பதகளிப்புகளை அதிகரிக்கவைப்பதற்குப்பதிலாக மக்களின் உள வல்லமையை காக்கும் –மேம்படுத்தும் பணியில் ஊடகங்கள் பெரிதும் பங்காற்ற முடியும் என்பேன்.

    4.  அவலமான இந்தச் சூழலிலும் அவசியமே இல்லாத ஆபத்தான போதைப் பொருட்களை நாடி ஓடும் நிலையினை நீங்கள் உங்கள் துறைசார்ந்த நோக்கில் எப்படிப் பார்க்கிறீர்கள்?

    போதைப்பொருள்களை நாடியோடும் நிலைமை அவலமானது. வழமையான பொழுதுபோக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும்போது அல்லது சூழலின் அழுத்தங்களிலிருந்து தற்காலிகமாக தப்பிக்கும் நோக்கில் மக்கள் போதைப்பொருட்களை நாடுகின்றார்கள்  எனப்படுவதுண்டு. ஆனால் யதார்த்தம் அதுவல்ல. கொரோனா இல்லாமலேயே – தனிமைப்படுத்தலில்லாமலேயே போதைக்கு அடிமையாகும் நோய் நிலையில் இச் சமூகங்கள் உள்ளன என்பதே உண்மையாகும்.

    5. ஆபத்தைக் கொண்டுவரும் கொரனோ வைரசை அரசியல் ஆக்க முனையு ஒரு நிலையும் தோற்றம் பெற முனைகிறது. தங்களின் நோக்கு இதில் எப்படி அமைகிறது….

    கொரோனாவின் பிறப்பு பற்றிய அரசியலுக்கான விடை எதுவாக இருந்தாலும் அதன் இருப்பு-பிழைப்பு சார்ந்த அரசியலை ஒரு அரசியல் பிழைப்பாகவே அகிலமெங்கும் காணமுடிகின்றது, குறுகிய இந்த பிழைப்பு அணுகுமுறையும் கூட கொரோனா பெருக்கத்தினை – அவலங்களை அறிவார்ந்து அணுகுதற்கு தடையாக உள்ளது எனலாம்.

    6. கொரனோ வைரசின் கோரத்தால் சமயங்களையும் சடங்களையும் உதாசீனம் செய்யும் ஒரு உணர்வு உருவாகியிருக்கிறது. இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

    சமயம், சடங்குகள் சார்ந்த உதாசீனம் என்பதைவிட அவை சார்ந்த சமுதாய கூடலுக்கான இக்கால தடைகள்தான் நம் கவனத்துக்குரியன என்பேன். புறத்தே கூடுவதற்கே தடைகள். ஆனால் அகத்தே, சடங்குகளுக்கு அப்பாலான ஆன்மீக அனுபவங்களை தேடவும் பயிலவும் மிகமிக வாய்ப்பான காலமாக இதனைப்பயன்படுத்த முடியும்.

    இந்த ஆன்மீகம் என்பது தனிமைப்பட்ட, துயருறும் மனிதருக்கு உதவும் மனப்பாங்கின் விரிவுக்கும் வழிசமைக்கும்.

    7. பழைமையைப் புறக்கணித்தமையும் புதுமைக்குத் தலைமை கொடுத்தமையும் இயற்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்தியமையுமே கோரரக்கன் கொரனோனவின் வரவென்று குரலெழுகிறது. தங்களின் நோக்கில் இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

    நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல நவீன வாழ்வின் கண்மண் தெரியாத வேகத்தின் பாதக விளைவுகளை கொரோனாவுக்கு முன்னரே இந்த உலகம் அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. இயற்கையை அடிமையாக்கிய நவீனமயமாக்கத்தில் மனத்தின் சுவாசக்காற்றுக்கே பங்கம் விளைந்துள்ளது.

    இவைபற்றி எத்தனை ஆய்வுகள், பிரகடனங்கள், எத்தனங்கள்…; யாரும் கேட்க வில்லை. இப்பொழுது வாகனப்புகையில்லாத வீதிகள், விமானம் பறக்காத  வானம், பாரிய வணிக உற்பத்திச்சாலைகளின் கழிவுகள் இல்லாத சூழலின் நலன்கள் பற்றிய புதிய தரிசனத்தை இந்த சின்னஞ்சிறு நுண் உயிரி தந்திருக்கின்றது. ஆசிய ஐரோப்பிய  தொழில் மையபுலங்களில் 40% த்துக்குமேல் சுறுச்சூழல் மேம்பட்ட ஆய்வுத்தரவுகள் எத்துணை மகிழ்ச்சியானவை. ஆனால் வழமைக்கு  மீளுதல் என்ற இன்றைய உலக அவசரம் என்பது மீளவும்  அழிவான சூழலுக்கு மீளுதலாகவே அமையக்காணலாம். இந்தப்போக்கு கொரோனா விரிவாக்கத்துக்கு மட்டுமன்றி இன்னும் இன்னும் புதிய துயரங்களையே எமதாக்கும்.

    இந்த இடத்தில் பாரம்பரிய வாழ்வின் மேன்மைகளுக்கு மீளுதல், நுகர்வுப்பண்பாட்டின் பொருளாதார விதிக்குள் சந்தைப்பண்டமாகி இழக்கப்பட்ட மனித இருப்பிலிருந்து இயற்கையோடு இசைந்த நோயற்ற வாழ்வினுக்கு திரும்புதல், வாழத் தேவையான உற்பத்தி, சமூக நீதியான உற்பத்தி எனும் சிந்தனைச்சட்டக மாற்றம் பற்றிய பின்னை மேம்பாட்டு சிந்தனையாளர் [Post development thinkers]  அழைப்பு  உலக விதியாதல் வேண்டும்.

    8. வயது முதிர்ந்தவர்கள் ஏற்கனவே தனிமையிலே இருக்கும் நிலையில் தற்போது மேலும் நெருக்கடிக்குள் உள்வாங்கப் பட்டிருக்கிறார்கள். முதியோர் இல்லங்களில் இருப்பது ஒரு நிலை. வீட்டில் இருப்பது மற்றொரு நிலை. இரண்டுமே இரண்டுவிதமான தனிமை என நினைக்கிறேன். இதில் தங்களின் மேலான  கருத்தை வெளிப்படுத்தினால் நல்லது என எண்ணுகின்றேன்.

    ’கொடிது கொடிது முதுமையில் தனிமை’ என மூப்பியல் சார்ந்த என் எழுத்துக்களில் குறிப்பிடுவதுண்டு. கொரோனா சூழமைவில் முதியோர்  புறக்கணிப்பு, கருணைக்கொலை சார்ந்த செய்திகள் பயங்கரமானவை.

    மீளவும் கூட்டுக்குடும்ப வாழ்வின் மேன்மைகளை எமதாகுதலில் இருந்து மூத்தவர்களின் பாரம்பரிய வாழ்வின்  பழக்கவழக்கங்களை பயிலும்,பயிற்றும் வாழ் வியல் எமதாகவேண்டும். இதற்கான திட்டமிடலை, திட சங்கற்பத்தினை எடுக்க வேண்டிய மிக முக்கியமான தருணம் இது என்பேன்.

    9. தனிமையில் இருக்கும்பொழுது இசைகேட்பது பற்றிய தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்தால் பயனாகும் என்று கருதுகிறேன். 

    தனிமையின் சாரத்தை உணர்கிற ,உணர்த்துகின்ற அற்புதப்பொழுதுகளாக  இசை அனுபவங்கள் அமைகின்றன. இந்த கொரோனா காலத்து என் சுயம், அதன் அர்த்தம் பற்றிய சுய விசாரணையின் சாரமாக, சாட்சியாகவும்கூட இதனைக்  குறிப்பிடுவேன். இந்த நாட்களில் சில ஆக்க இசை அனுபவங்களை, உள சமூக  வல்லமைக்கான படைப்புகளாக தரமுடிந்தமையையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இவற்றினை சமூக அனுபவமாக பகிரும் நோக்கில் you tube பிலும் தரவேற்றியிருக்கின்றேன்.

    உண்மையில் தனித்திருந்து இசையை கேட்பது போல கூட்டாக, குடும்பமாக, சிறு குழுக்களாக ஆறுதல் தரும் இசை அனுபவங்களை கேட்பதற்கு இக்காலப்பகுதி மிகவும் பொருத்தமானது என்பேன்.

    10. கோரோனாவுக்கு அப்பால் ஒரு சமூகவியலாளனாக நீங்கள் சொல்ல விரும்புவது…

    பல்லாயிரம் உயிர்களை கொரோனா காவுகொண்டு வருவது உண்மைதான். ஆனால் கொரோனாவுக்கு அப்பால் சமூக கட்டமைப்புச் சார்ந்த  ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள் வழியான நோய்களினால், வறுமையினால், மேலாண்மை அரசியல் ஆதிக்கங்களினால் கொரோனாவையும் விஞ்சி உயிரை இழந்திடும்  குழந்தைகள், பெரியவர் அனைவரையும் பற்றிய கவனிப்பும் ஒருசேர வேண்டும். இவையாவும் பொத்தம் பொதுவான புள்ளிவிபர அளிக்கைகளாக அமையாமை.

    உரிய சமூகப் பகுப்பாய்வுடனும் வெளிப்படுத்தப்படவேண்டும். எப்படியோ இந்தக்கொடிய சூழமைவிலிருந்து உலகம் விடுதலை பெறவேண்டும்; அதற்கான வழிவகைகளை ஒன்றுபட்டு காணவேண்டும்.இந்த இடரான காலத்துக்கு இன்றியமையாத சிந்தனைக்கு  வழிசமைத்த தங்களுக்கு என் அன்பான நன்றி.

    Share
  • கொரோனாவைத் தாண்டி

    கொரோனாவைத் தாண்டி

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    தொலைக்காட்சிப் பெட்டியைத் திருப்பினாலும் சரி, வானோலியைத் திருகினாலும் சரி கொரோனா எனும் வார்த்தையைத் தாண்டிச் செல்வது என்பது இப்போ எண்ணிப்பார்க்கவே முடியாத ஒரு சூழலில் நாமனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் வாழும் ஐக்கிய இராச்சியத்தில் கொரோனா வைரஸின் கட்டுப்படுத்துதலுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்படுவதற்கான அறிகுறிகள் எதுவுமே இன்றுவரை தெரியவில்லை. இந்நிலையில் கொரோவைத் தாண்டி என்று எதைப்பற்றிச் சிந்திக்க முடியும் என்று நீங்கள் எண்ணினால் அது நியாயமே!

    ஆயினும் ஒரு நாளிலோ அன்றி ஒரு வருடத்திலோ நாம் இந்தக் கொரோனா எனும் நிலையைத் தாண்டிச் செல்ல வேண்டிய அதாவது இதையும் கடந்து செல்ல வேண்டிய நிலையிலிருக்கிறோம். கொரோனா எனும் இந்த வைரஸ் இன்று எம்மீது தொடுத்திருக்கும் தாக்குதல் எமது உடல்ரீதியிலான தாக்குதலே. ஆனால் இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான உலகின் பலநாடுகளிலும் எடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் இக்கொரோனா வைரஸினால் அதிக அளவு பாதிப்பு பொருளாதாரப் பாதிப்பு என்பது தவிர்க்க முடியாத யதார்த்தமாகிறது.

    பொருளாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தேசங்களின் உடமையான மக்களின் உயிர்களைக் காவு கொடுக்க முடியாது என்பது அனைத்து நாடுகளைப் பொறுத்தவரையிலும் மறுக்கப்பட முடியாத உண்மையாகிறது. ஆனால் இதனால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பின் தாக்கம் எத்தகைய வகையில் இருக்கப் போகிறது என்பதை நிர்ணயிக்கப் போவது மக்களின் மீது விதிக்கப்பட்ட இக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் எத்தனை காலம் நீடிக்கப் போகிறது என்பதுவே.

    இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் நாட்டின் பிரதமரே வாழ்வுக்கும் சாவுக்கும் மத்தியில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மீண்டு வந்திருக்கிறார் என்பதுவே உண்மை. வைத்தியசாலையில் இருந்து இல்லத்துக்குத் திரும்பி இருவார ஓய்வுக்குப் பின்னால் மீண்டும் பிரதமராக 27.04.2020 இலிருந்து செயற்பட ஆரம்பித்திருக்கிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன். அவரது வரவை கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் வரவேற்றிருப்பது ஐனநாயகத்தின் முடிக்கு அழகு சேர்க்கும் மற்றொரு மணியாகிறது.

    மீண்டும் தமது உத்தியோக வாசஸ்தலமாகிய 10, டவிணிங் சாலைக்குத் திரும்பியதும் 27ம் திகதி காலை 9 மணிக்கு தனது வாசஸ்தலத்திற்கு முன்னால் நாட்டு மக்களுக்கு திரு. பொரிஸ் ஜான்சன் அவர்கள் உரையாற்றினார். அவ்வுரையில் தான் ஒரு சிக்கலான கட்டத்திலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும், நாடு எதிர்நோக்கியிருக்கும் இந்த முன்னொருபோதுமில்லாத ஒரு சிக்கல் நிறைந்த கட்டத்தில் உயிர்களைக் காப்பாற்றப் போராடும் வைத்தியத்துறை ஊழியர்களுக்கும், கெடுபிடியான விதிமுறைகளை அனுசரித்து நடக்கும் நாட்டு மக்களுக்கும் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். கொரோனா வைரஸின் பிடியினால் தாக்கமுறும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில், இதுவரை நோய் பீடிக்கப்பட்டு வைத்தியசாலை தீவிர சிகீச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவோரில் உயிரிழப்போரின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அனைத்தும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை இதுவரை அடைந்த முன்னேற்றத்தைப் பின்னடைவு செய்யக்கூடிய வகையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.

    ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்களுல் இரண்டாம் உ;லகப்போரின் பின்னால் எதிர்கொள்ளும் மிகச் சிக்கலான ஒரு நிலவரத்தை இன்றைய எமது பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்கள் எதிர்கொள்கிறார் என்பது நிதர்சனமான உண்மை. ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த அரசியல் அவதானிகளின் கருத்துக்களின் படி மக்களின் பாதுகாப்பு, நாட்டின் பொருளாதாரச் சூழல் என்பனவற்றின் இடையில் ஒரு கயிற்றில் நடப்பதைப் போல் மிக அவதனமாகச் செயற்படவேண்டிய நிலையில் பிரதமர் பொரிஸ் ஜான்சன் இருக்கிறார்.

    வைத்தியசாலையில் இத்தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை. தினசரி குறைந்து கொண்டு வருகிறது, தினசரி கொரோனா தாக்கத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களின் தொகையும் குறைந்து கொண்டு வருகிறது, சுமார் 20,000 பேர்வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலைமாறி சுமார் 15,000 பேராக இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவையெல்லாம் கொஞ்சம் நம்பிக்கை எனும் வெளிச்சத்தைத் தருகிறது எனினும் கட்டுப்பாடு தளர்த்தப்படக்கூடிய வகையில் இன்னும் நிலையத் தோற்றுவிக்கவில்லை.

    ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தைப் பொறுத்தவரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைப் பற்றிச் சிந்திப்பதற்கு ஜந்து நிபந்தனைகள் விதித்திருக்கிறார்கள். இந்த ஜந்து நிபந்தனைகளும் எட்டும் பட்சத்தில் மட்டுமே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைப் பற்றிச் சிந்திப்பதற்கு முனைவோம் என்பதே அவர்களது நிலைப்பாடு. இந்த ஜந்து நிபந்தனைகள் பின்வருமாறு,

    1. தேசிய சுகாதார சேவை நிலைமையச் சாமாளிக்கும் நிலையில் உள்ளது

    2. தினசரி இறப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் குறைந்து கொண்டு வரவேண்டும்

    3. தரமான தரவுகளின்படி வைரஸ் தொற்றுவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் சமாளிக்கக் கூடிய எண்ணிக்கைக்கு குறைவாகும் நிலை வர வேண்டும்.

    4. முன்னனி சேவையாளர்களுக்கான பாதுகாப்பு அணிகள் போதுமான அளவில் கையிருப்பில் கொண்டு தொடர் விநியோகத்திற்கான பொறிமுறைகள் திருப்திகரமாக இருக்க வேண்டும்.

    5. எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் இத்தொற்று நோய் பீடிக்கப்படும் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்காது எனும் ஒரு நிலை வரவேண்டும்.

    மே மாதம் 7ம் திகதி அரசு இந்த ஜந்து நிபந்தனைகளையும் கருத்தில் கொண்டு அப்போதைய நிலையில் எந்தவிதமான நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்று ஆராய்ந்து, மே 10ம் திகதி பிரதமர் இதுபற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அறிவித்துள்ளார்கள்.

    சரி இதுவரை அரசியல் நிலைப்பாட்டைப் பார்த்தோம். இனிச் சற்று பொருளாதாரச் சிக்கல்களை பார்ப்போம். கொரோனவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மக்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விதிகளின் ஏற்பட்ட உடனடிப் பாதிப்புகளைச் சரி செய்வதற்காக இதுவரை காணாத வகையில் பல பொருளாதஅர நிதுயுதவிகளை அரசு பலதரப்பட்ட மக்களுக்கும் அறிவித்துச் செயற்படுத்தி வருகிறது.

    விமானநிலையங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவிலான விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள் போலக் காட்சியளிக்கின்றன. அரசைப் பொறுத்தளவில் இக்கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுபட்டதும் மீண்டும் வியாபாரங்கள், வர்த்தக ஸ்தாபனங்கள் இயங்க ஆரம்பிக்க வேண்டும் எனும் கருத்தோடு பணியாளர்களை வேலையிலிருந்து நீக்காமலிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான ஊதியப்பணத்தின் 80 வீதத்தை தாம் அளிப்பதாக உறுதியளித்துள்ளார்கள். ஆனால் இவை சமூக விலத்தியிருத்தல் விதிகளைக் கடைப்பிடித்து இயங்க முடியாத ஸ்தாபனங்களுக்கு மட்டுமே.

    ஆனால் இப்போதிருக்கும் நிலையையிலிருந்து திரும்பும் போது தாம் வங்குரோத்து நிலையை அடைந்து விடுவோம் எனும் வகையிலான சரிவைக்காணும் நிறுவனங்கள் வேறுவழியின்றிப் பலரை வேலையிலிருந்து நீக்குகிறார்கள், பணியிழந்தவர்கள் தமது வாழ்வாதரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அரசாங்கத்தின் உதவித்தொகையையே நம்பியுள்ளார்கள். இவர்கள் அனைவருக்குமான உதவிகளை அரசாங்கம் வழங்கினாலும் இதற்கான நிதிநிலைமைகள் மக்களின் வரிப்பணத்திலேதான் பெறப்படப் போகின்றன.

    உலகமயமாக்கல் எனும் அமைப்பின் கீழ் ஐக்கிய இராச்சியம் தனது உற்பத்தி வன்மையை வெகுவாகக் குறைத்துக் கொண்டது. முதாலாளித்துவ கொள்கையின் வழி தமது இலாபங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக உற்பத்தி ஆலைகளை குறைந்தளவு ஊதியத்துடன் பணிக்கமர்த்தக்கூடிய ஊழியர்கள் கிடைக்கக்கூடிய நாடுகளில் நிறுவிக் கொண்டார்கள். இன்று கொரோனா எனும் ஒரு கண்ணுக்குத் தெரியாத கிருமியினால் அதற்கான விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மேற்கத்திய நாடுகள் இந்தக் கொரோனாவினால் கண்டு கொண்டிருக்கும் பொருளாதாரச் சரிவு 1920களில் உலகம் கண்ட மிகப்பெரிய பொருளாதாரச் சரிவினை விட அதிக அளவிலான சரிவினைக் காணவேண்டி வரும் எனும் அச்சம் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ளது வேலையில்லாத் திண்டாட்டம் ஐக்கிய இராச்சியத்தினை ஆட்டம் காண வைக்கக்கூடும் எனும் வகையிலான கருத்துக்கள் ஆங்காங்கே நிலவுகின்றன.

    இது ஒரு யதார்த்தமான உண்மை. இந்நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு மக்களின் மனதில் ஒருவகையிலான வைராக்கியம் தேவைப்படுகிறது. அத்தகைய மனநிலையை உருவாக்கும் வகையில் செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கிறது.

    ஒருசில பணியாளர்களுடன் இயங்கும் சிறிய வியாபார, வர்த்தக அமைப்புக்கள் பல இந்த இழப்பினை ஈடு செய்து மீண்டு வருவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். வியாபார நிறுவனங்களுக்கு உடனடித் தேவைகளுக்காக இடைத்தர நிறுவனங்களுக்கு 50000 பவுண்ட்ஸ் வரையும், பெரிய நிறுவனங்களுக்கு 250000 பவுண்ட்ஸ் வரையிலுமான நிதி உதவியைக் கடனாக கொடுத்துதவ வங்கிகளை அரசாங்கம் பணித்துள்ளது. அக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகும் பட்சத்தில் அவற்றிற்கு அரசாங்கமே பொறுப்பு எனும் உத்தரவாதத்தையும் அரசாங்கம் வங்கிகளுக்கு கொடுத்துள்ளது.

    லண்டன் நகர மேயரின் அதிகாரத்தின் கீழியங்கும் லண்டன் பஸ், நிலக்கீழ் ரயில்சேவை என்பனவற்றின் சேவைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையாலும், நாட்டில் நிலவும், கட்டுப்பாட்டு விதிகளுக்கமைய மக்கள் தேவையற்ற பிரயாணங்களை மேற்கொள்ளக் கூடாதென்பதாலும் இச்சேவைகள் பாரிய நஸ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

    ஐக்கிய இராச்சியத்தின் அடையாளமான பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் என்றழைக்கப்படும் விமானசேவை இக்கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய தாம் தமது நிறுவனத்தின் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டியிருப்பதனால் ஏறக்குறைய 12000 பணியாளர்களை உலக அளவில் தாம் வேலைநீக்கம் செய்ய வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளது. அதேபோல மிகவும் பிரபலமான மற்றொரு விமான சேவையான ரயன் எயர் எனும் விமான சேவை தாம் 3000 பேரை வேலைநீக்கம் செய்ய வேண்டி வரும் என எச்சரித்துள்ளது.இவ்வேலை நீக்கங்கள் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது முக்கிய விமான நிலையமான கட்விக் (Gatwick) எனும் விமான நிலையத்தில் இவ்விரு விமானசேவைகளின் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டு விடும் எனும் ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது. இதன் விளைவாக கட்விக் விமானநிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் எனும் அச்சம் நிலவுகிறது.

    இது மட்டுமல்ல ஒரு விமானநிலையத்தின் நடவடிக்கைகள் அதைச்சுற்றி இருக்கும் பல வர்த்தக நிறுவனங்களின் வியாபாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, இந்நடவடிக்கைகளின் மட்டுப்படுத்தல் என்பது அவ்விமான நிலையத்தை மட்டுமல்லாமல் அதன் இயக்கத்தில் தங்கியிருக்கும் வர்த்தக நிறுவனங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    நான் மேலே குறிப்பிட்டது ஒரிரு முன்னனி நிறுவனங்களின் பாதிப்பையே இதே போன்று பல வித்தியாசமான வர்த்தக நிறுவனங்களின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதுவே உண்மை. இப்பாதிப்புகளின் முதல்பலி அங்கு பணிபுரியும் பணியாளர்களே! விளைவாக நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டமும் அதைனைச் சமாளிக்க அரசு எடுக்க வேண்டிய நெருக்கடியான பொருளாதார முடிவுகளும் ஐக்கிய இராச்சியத்தை ஒரு உலுக்கு உலுக்கத்தான் போகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

    இந்தக் கொரோனாவாவினால் முடுக்கி விடப்பட்டுள்ள பொருளாதார முடக்கம் ஐக்கிய இராச்சியத்தை மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தையுமே ஆட்டிப்படைக்கப் போகிறது. இன்றைய உலகப் பொருளாதாரம் “உலகமயமாக்கப்படுதல் அன்றி குளோபலைசேஷன்” எனப்படும் கோட்பாட்டினால் கட்டியாளாப்படும் நிலையில் ஒரு நாட்டின் பொருளாதாரச் சிக்கல் மற்றொரு நாட்டினை தாக்குவது என்பது யதார்த்தமான உண்மை. குறிப்பாக கிடைக்கின்ற செய்திகளின் படி அமேரிக்க நாட்டின் வேலையற்றோர் தொகை 30 மில்லியனாக உயர்ந்துள்ளது எனத் தெரிகின்றது. ஏற்கனவே உள்மயமாக்கப்படுதல் எனும் கொள்கையை முன்னிறுத்திய அதிபர் ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள்ஐந்தச் சூழலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதும் மிகவும் கிலேசத்தையே வரவழைக்கிறது.

    ஐக்கிய இராச்சிய பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரம் கொரோனாவின் பாதிப்பால் சுமார் 14% சுருக்கமடையும். இது சமூக, சமுதாய நடவடிக்கைகளில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியே. சுமார் ஆறு வாரங்களுக்கு மேலான தடைக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து 10.05.2020 ஐக்கிய இராச்சிய பிரதமர் பொரிஸ் ஜான்சன் கொரோனாவைத் தாண்டி எப்படி மக்களும், சமூகமும் வெளிவரப் போகிறது என்பதற்கான ஒரு பாதையை விளக்குவார் என எதிர்பார்க்கப் படுகிற௹௹௹து. கட்டுப்பாட்டு விதிகளைச் சிறிதளவு தளர்த்துவார் என எதிர்பார்க்கப் படுகிறது. சில, சில பிரதேச வாரியான வர்த்தக நிறுவனங்கள் அங்கு சமூக விலத்தலைக் கடைப்பிடிக்கும் வகையில் தமது வியாபாரங்களை ஆரம்பிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

    ஐக்கிய இராச்சியத்தில் இதுவரை கொரோனா பதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று அதாவது 09.05.2020 வரை சுமார் 32000 பேர். ஆனால் தொடர் நிகழ்வாக புதிதாக தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை, மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தினசரி இறப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவது இத்தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. ஆயினும் சமூகக் கட்டுப்பாட்டு விதிகளை முற்றாகத் தளர்த்தினால் மற்றொரு முறை கொரோனா தொற்று அதிகரிக்கலாம் எனும் விஞ்ஞானிகளின் கருத்துக்களை ஐக்கிய இராச்சிய அரசு கவனத்தில் கொண்டு அவதானமாகவே செயற்படப் போகிறது என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகூடிய மரண எண்ணிக்கையை. கொண்ட நாடாக ஐக்கிய இராச்சியம் முடிசூட்டிக் கொண்டது மிகவும் துன்பியல் நிறைந்த செய்தியே.

    ஒவ்வொரு மரணத்தின் பின்னும் ஒரு மாபெரும் சோகம் பிணைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கொரோனா வைரஸ் எனும் இந்தக் கிருமியின் தொற்றினை இங்கிலாந்து அரசு எவ்வகையில் கையாண்டிருக்கிறது என்றும் இக்கையாளுதல் மரணமடைவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளதா? என்றும் கேள்விகள் ஆங்காங்கே எழுகின்றன. அரசோ தம்மீது எந்தத் தவறுமில்லை என்று வரையறுப்பதற்காக தாம் அரச விஞ்ஞானிகளின் ஆலோசனையின் படியே செயற்பட்டதாகக் கூறிவருக்கிறார்கள். தற்போதைய சூழலில் எந்த ஒரு அரசியல்வாதியும் இந்தச் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயலவில்லை என்பது ஐனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி எனலாம். ஆயினும் இந்நடவடிக்கைகள் என்றுமே ஆராயப்படாமல் இருக்குமா? என்பது சந்தேகமே !

    கொரோனாவின் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தலைவர் தேர்தல் வந்தது தெரியாமல் நிறைவேறி முடிந்து விட்டது. ஆமாம் கடந்த பொதுத் தேர்தலில் பாரிய தோல்வியைச் சந்தித்த எதிர்க்கட்சியின் சர்ச்சைக்குரிய தலைவரான ஜெர்மி கோர்பன் பதவி விலகி அனைத்துத் தரப்பினராலும் ஒரு நடுநிலைவாதி எனக் கணிக்கப்படும் சேர் கியர் ஸ்டாமார் (Sir Keir Starmer) தெரிவு செய்யப்பட்டது மிகவும் சலனமில்லாமலே நடந்தேறிவிட்டது. பொதுவாகவே ஒரு கட்சிக்குத் தலைவராக தெரிவு செய்யப்படுபவர் ஊடகங்களினால் சல்லடை போடப்படும் வழமை இம்முறை கொரோனாவினால் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. புதிய லேபர் கட்சித் தலைவரும் கட்சியை ஒரு புது மிதவாதமான போக்கினூடு நடத்திச் செல்லப் போகிறார் போன்றே அவரது ஆரம்ப நடவடிக்கைகள் தோற்றுவிக்கின்றன.

    இக்கொரொனாவின் வரவினால் உலகிற்கு கிடைத்துள்ள ஒரேயொரு அனுகூலம் சுற்றுச்சூழலின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டமையே. லண்டனில் சுற்றுச்சூழல் பாதிப்பு 50% குறைவடைந்திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் தமது பணிகளுக்கு திரும்பச் செல்கையில் சைக்கிள், மற்றும் நடப்பது என்பதை கடைப்பிடிக்கக்கூடிய வரையில் கடைப்பிடிக்கும்படி வேண்டப்படுகிறார்கள். இதற்காக சாலைகளில் மாற்றங்களை ஏற்படுத்த அரசு 2.5 பில்லியன் பவுண்ட்ஸ்களை ஒதுக்குவதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இம்மாற்றங்கள் கொரோனாவைத் தாண்டியும் நிலைத்திருக்குமா?

    வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை பல நிறுவனக்களினால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருவதும், வியாபார சந்திப்புகள் காணொளிகள் மூலம் நடத்தப்படுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிலைமையின் அனுகூலத்தை நிரந்தரமாகுவது பற்றிய அரசின் கணிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கொரோனாவைத் தாண்டி . . . . . .

    பல கேள்விகளுக்கான விடைகள் தங்கியிருக்கின்றன

    • பொருளாதாரப் பாதிப்பின் விளைவுகள் எத்தகையது?
    • ப்ரெக்ஸிட்டினால் பிளவு பட்ட நாடு இன்று கொரோனாவினால் கண்ட ஒருங்கிணைப்பு கொரோனாவைத் தாண்டியும் நிலைக்குமா?
    • சுற்றுச்சூழல் பாதிப்பினைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் நாட்டின் போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றங்களை மக்கள் நிரந்தரமாக உள்வாங்கி காலநிலைச் சீர்கேட்டைத் தடுக்க முனைவார்களா?
    • மக்களின் சமுதாய, சமூகத்தை நோக்கிய பார்வையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன?
    • மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்காய் உழைப்போரின் மீதான மக்கள் பார்வையில் ஏற்பட்ட மாற்றம் கொரோனாவைத் தாண்டியும் நிலைக்குமா?
    • உலகம் எனும் பரந்த நோக்கம் மாறி எம் நாடு, எம் மக்கள் எனும் தனிமைப்படுத்துவோரின் செல்வாக்கு ஓங்குமா?
    • வெளிநாடுகளுக்கான மக்கள் பயணங்கௐள் சகஜமான நிலைக்குத் திரும்ப வருடங்களாகுமா?

    இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னால் உலகம் கண்டிருக்கும் ஒரு மாபெரும் சோதனையான காலம் இது என்பதே அனைத்து மக்களின் அனுமானமும் ஆகும்.

    கொரோனாவைத் தாண்டிய வாழ்க்கையின் மாற்றங்களுக்கு இனிவரும் காலமே பதிலிறுக்க வேண்டும். ஏனெனில் இன்று நாம் எதிர்கொள்வது முன்னொரு பொழுதும் கண்டிராத ஒரு நிகழ்வு.

    Share
  • அன்னை தெரேசாவின் அருள்வாக்கு -1

    அன்னை தெரேசாவின் அருள்வாக்கு -1

    சி. ஜெயபாரதன், கனடா

    இறைவழிபாடு

    பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
    வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
    படைப்பு உறுதியில் கிறித்துவப் பணிமாது.

                 –     அன்னை தெரேசா [1910-1997]

    இறைவா, நீ  அமைதி நிலவும் ஒரு கருவியாக என்னை
    ஆக்குவிப்பாய்;
    எங்கே மானிட வெறுப்புள்ளதோ அங்கே நான் அன்பை விதைக்க விடு.
    எங்கே காயங்கள் உண்டாக்கப் பட்டுள்ளதோ, அங்கே மன்னிப்பு அளி.
    எங்கே ஐயம் உள்ளதோ, அங்கு உறுதி நிலைநாட்டு.
    எங்கே மனமுறிவு உள்ளதோ அங்கு நம்பிக்கை கொடு.
    எங்கே இருள் சூழ்ந்துள்ளதோ, அங்கு விளக்கொளி காட்டு.
    எங்கே சோகம் குடிகொண்டுள்ளதோ, அங்கு மன மகிழ்வு உண்டாக்கு.

    இறைவா, எனக்கு ஆறுதல் பெற வேண்டேன்,   பிறர்க்கு ஆறுதல் தருவதைத் தவிர.
    என்னைப் புரிந்து கொள்ள வேண்டேன், பிறரைப் புரிந்து கொள்வதைத் தவிர.
    என்னை நேசிக்க வேண்டேன், பிறரை நான் நேசிப்பதைத்  தவிர.
    ஏனெனில் கொடுப்பதில்தான் நாம் பெறுகிறோம்.
    மன்னிப்பதில்தான் நாம் மன்னிக்கப் படுகிறோம்.

    இறைவழிபாடு ஒரு வேண்டுதல் இல்லை.  நம்மைப் பணிபுரிய இறைவன் கைகளில் அர்ப்பணம் செய்வதும், நம் ஆழ்மனதில் அவன் குரலைக் கேட்பதும் தான் நமது இறைவழிபாடு.

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 7

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 7

    மீ. விசுவநாதன்

    “ஸ்ரீ மகாசன்னிதானம்,
    ஸ்ரீ சன்னிதானம்”

    சீடர் வந்த பின்பு
    சேர்ந்தே எங்கும் செல்வர்;
    “சூடன் போன்ற தன்மை
    சுவாமி களென்று சொல்லி
    கூடும் பக்தர் யாரும்
    கொள்க அவரி டம்தான்
    வீடு பேறு கொள்ளும்
    வினைக்கு ஆசி” என்பார்!   (61)

    புதிய புதிய செய்தி
    பொதிந்தி  ருக்கும் வண்ணம்
    அதிக கவன மோடு
    ஆற்றும் உரைகள் கேட்டு
    மதியில் குளிர்ந்து போவார்
    மகாசன் னிதானம்! ஞான
    பதியாம் குருவ ருள்என்
    பர்ஸ்ரீ சன்னி தானம்!    (62)

    “குருவின் வாக்கை மதி”  

    குருவின் வார்த்தைக் கென்றும்
    கொடுப்பார் மரியா தையே !
    ஒருநாள் உபன்யா சத்தில்,
    ” சுவாமி கள்தான் இன்று
    பூஜை செய்வார்” என்றார்;
    புரிந்து கொண்ட சீடர்
    பூஜைக் குத்தன் ஆசான்
    சொன்ன நேரம் வந்தார்!    (63)

    “காவி உடைக்குள் கடவுள்”

    உறவை விட்டு வந்து
    உள்ளத் தாலே தூய
    துறவு ஏற்ற பின்பு
    துவரா டையைக் கொண்டார்!
    பீடா திபதிக் கான
    சிறந்த சரிகைக் காவி
    ஆடை யையு டுத்த
    ஆசான் அவர்க்கு ரைத்தார்!   (64)

    தேவி சார தாவின்
    சிரித்த முகத்தின் சாயல்
    காவி உடைக்குள் வந்த
    கண்ணி யத்தின் பேற்றை
    நாவி னாலே சொல்ல
    ஞான மார்க்கம் தோன்றும்!
    சேவிப் போர்க்கு வாழ்க்கைப்
    பிறவி அறுந்து போகும்!      (65)

     “பணிவே விநயம் தரும்”

    சின்ன வயதுப் பையன்
    சிரித்த முகத்தைக் காட்டி,
    “என்ன ருமைக் குருவே
    எனக்கு மந்தி ரம்தான்
    வேண்டும்” என்ற போது
    “விநமு டனேநீ கேட்க
    வேண்டும்” என்று நல்ல
    விதமாய் வழியும் சொன்னார்! (66)

    அதன்பின் அந்தப் பையன்
    அபிந வவித்யா தீர்த்தர்
    பதத்தில் வீழ்ந்து மிக்கப்
    பணிவாய் வேண்டிக் கொள்ள
    சிதம்ப ரேசர் நாமம்
    சிந்தை செய்யச் சொன்னார்!
    நிதம தையே சொன்ன
    சிறுவன் உயந்தான் வாழ்வில்.  (67)

     “சபரிகிரி ஸ்ரீ ஐயப்ப தரிசனம்”

    சபரி மலைக்குச் சென்று
    சாஸ்தா தரிச னத்தில்
    தபசி கள்தன் னுள்ளம்
    கரைந்து சுதனைக் கண்டார்
    உடனே சாஸ்தா பேரில்
    உருக்க மாய்சு லோகம்
    கடலாய்ப் பெருகி ஓட
    கவிதை யாய்ச்செய் திட்டார்! (68)

    அந்த ஸ்லோகம் தன்னை
    அடியார் சொல்லி வந்தால்
    எந்தப் பிணியும் இன்றி
    இன்பம் கொள்வர் சத்யம்.
    மந்த புத்தி மாறும்
    மனத்தில் சக்தி கூடும்
    நந்த வனத்துப் பூவாய்
    ஞான வாசம் சேரும்.  (69)

     “ஒன்றிலே ஒன்றப் பழகு”

    ஓசை எதுவந் தாலும்
    ஒன்றில் மனத்தை வைத்து
    பூசை செய்யும் வேளை
    பொன்னாய் ஒளிர்வான் போலே
    மீசை வைத்த ஈசன்
    மெல்லத் தெரிவான் என்பார்!
    பாசம் பற்றை வென்ற
    பார தீதீர்த் தர்தான்.  (70)

                           (யாத்திரை தொடரும்)

    Share
  • நாலடியார் நயம் – 15

    நாலடியார் நயம் – 15

    நாங்குநேரி வாசஸ்ரீ

     15. குடிப்பிறப்பு

    பாடல் 141

    உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
    குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
    இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
    கொடிப்புல் கறிக்குமோ மற்று.

    ஆறாப் பசித்துயரிலும் சிங்கம்
    அருகம்புல்லைத் தின்னாது
    உடுக்கும்உடை கிழிந்து
    உடல் மெலிந்த வறுமையிலும்
    உயர்குடியில் பிறந்தோர் தம்
    உயர் ஒழுக்கத்தில் சிறிதும் குறையார்.

    பாடல் 142

    சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
    வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது – வான்தோயும்
    மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
    எய்தியக் கண்ணும் பிறர்க்கு.

    மேகங்கள் தவழும்
    மலைகளுடை அரசனே!
    மேன்மை பெருந்தன்மை ஒழுக்கம்
    மூன்றும் உயர்குடியில் பிறந்தோரிடம்
    அல்லாது பெருஞ்செல்வம் சேர்ந்த
    அளவிலும் பிறரிடம் உண்டாகா.

    பாடல் 143

    இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
    விடுப்ப ஒழிதலோடு இன்ன – குடிப்பிறந்தார்
    குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு
    ஒன்றா உணரற்பாற் றன்று.

    பெரியோர் வரக் கண்டால்
    பணிவாய் எழுதலும்
    எதிர்சென்று வரவேற்றலும்
    ஏனைய உபசாரங்களும்
    விடைபெரும் நேரம்
    பின்சென்று திரும்புதலுமெனும்
    நல்லொழுக்கங்களைக் கொண்ட
    நற்குடியில் பிறந்தோரை
    நற்பண்பில்லா மூடருடன்
    ஒப்பிடுதல் ஏற்புடையதன்று.

    பாடல் 144

    நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
    பல்லவர் தூற்றும் பழியாகும் – எல்லாம்
    உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ
    புணரும் ஒருவர்க் கெனின்?

    அவர் நல்லவை செய்யின்
    அது செய்யத்தகுந்த முறைமையாம்
    கெடுதல் செய்யின் பலரால்
    கெட்டவரெனப் பழிக்கப்படுவாராமெனின்
    அனைத்தும் உணர்ந்த அக்குடிப்பிறப்பால்
    உயர்குடிப்பிறப்பு அமைந்த ஒருவர்க்கு
    உண்டாகும் பயன்தான் என்ன?

    பாடல் 145

    கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
    சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்; – எல்லாம்
    இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
    மாணாக் குடிப்பிறந்தார்.

    கல்லாமைக்கு அஞ்சுவதும்
    கீழோரின் இழிதொழிலுக்கு அஞ்சுவதும்
    தகாத சொல் சொல்ல அஞ்சுவதும்
    தம்மிடம் கேட்பவர்க்குக் கொடுக்க
    இயலாமைக்கு அஞ்சுவதும் எனும்
    அச்சங்கள் உயர்குடிப்பிறந்தோரிடம்
    அமைந்துள்ளதால் மாண்புகளற்ற
    அச்சமில்லாத மற்றவர்
    மரத்தன்மையுடையோராம்.

    பாடல் 146

    இனநன்மை இன்சொல்ஒன்று ஈதல்மற் றேனை
    மனநன்மை என்றிவை யெல்லாம் – கனமணி
    முத்தோடு இமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப!
    இற்பிறந்தார் கண்ணே யுள.

    மாணிக்க மணிகள் முத்துக்களுடன்
    மயங்கி ஒளிவீசும் ஒலிக்கும் கடலின்
    குளிர்மிகு கரையுடை வேந்தனே!
    சேருபவர்களின் நன்மை அவர்
    சொல்லும் இன்சொல்
    வறியவர்க்குக் கொடுத்தல்
    மனத்தூய்மை எனும்
    நற்குணங்கள் எல்லாம்
    நற்குடிப்பிறந்தவர்களிடத்தே உண்டு.

    பாடல் 147

    செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
    பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
    எவ்வம் உழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
    செய்வர் செயற்பா லவை.

    வேலைப்பாடுகள் குலைந்து
    வீடுமுழுதும் கரையான் பிடித்தாலும்
    பெரிய வீடானது மழை
    பெய்யா ஒருபக்கத்தைப் பெற்றதுபோல்
    எத்தகு வறுமைத் துன்பம் வரினும்
    நற்குடிப்பிறந்தோர் செய்யத்தக்க
    நற்செயல்களையே செய்வர்.

    பாடல் 148

    ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
    அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் – திங்கள்போல்
    செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
    ஒல்கார் குடிப்பிறந் தார்.

    இராகு எனும் பாம்பு ஒருபக்கத்தை
    இறுகப் பிடித்தாலும் தம் மறுபக்கத்தால்
    அழகிய பெரும் உலகிற்கு ஒளிகொடுக்கும்
    நிலவுபோல் வறுமைத் துன்பம் முன்னே
    நிற்பினும் தளராது உதவுவர் உயர்குடிப்பிறந்தோர்.

    பாடல் 149

    செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
    செல்லிடத்தும் செய்யார் சிறியவர் – புல்வாய்
    பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
    பொருமுரண் ஆற்றுதல் இன்று.

    பருத்திருக்கும்போதும் மானினால்
    பாயும் குதிரைபோல்
    போரிட இயலாததுபோல
    வறுமை வாட்டும்நிலையிலும்
    உயர்குடிப்பிறந்தார் ஆற்றும்
    நற்செயலைச் செல்வம் மிக்குள்ள
    நேரத்திலும் செய்யார் கீழோர்.

    பாடல் 150

    எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
    அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்;
    அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
    தெற்றெனத் தெண்ணீர் படும்.

    தண்ணீரற்ற காலத்தும் அகன்ற ஆறு
    தோண்டியவுடன் நீர்கொடுப்பதுபோல்
    பொருளற்ற காலத்தும் உயர்ந்தோர்
    தம்மை அண்டிவந்தவரின்
    துன்பம் போக்கி ஊன்றுகோலாய்த்
    தளர்ச்சி நீங்க உதவுவர்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(300)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(300)

    செய்யாமற் செய்த யுதவிக்கு வையகமும்
    வானகமு மாற்ற லரிது.

           – திருக்குறள் -101 (செய்ந்நன்றி அறிதல்)

    புதுக் கவிதையில்…

    மற்றவர்க்குத் தான்
    உதவியேதும் செய்யாதபோதும்,
    பிறர் தனக்குச் செய்த
    பேருதவிக்கு,
    இம் மண்ணுலகு விண்ணுலகு
    இரண்டையும்
    கைம்மாறாய்க் கொடுத்தாலும்
    ஈடாகாது அவையே…!

    குறும்பாவில்…

    தானுதவியேதும் செய்யாதபோதும்
    தனக்குப் பிறர்செய்யும் உதவிக்குக் கைமாறாய்
    விண்ணும் மண்ணுமே ஈடாகா…!

    மரபுக் கவிதையில்…

    மற்றவர் தமக்குத் தானுதவி
         மதித்துச் செய்யாப் போதினிலும்,
    உற்றவர் போலப் பிறர்தனக்கே
         உதவிடும் போதி லவ்வுதவி
    பெற்றிடு முலகில் பெருமதிப்பு,
         பெருமை யதற்குக் கைமாறாய்ச்
    சுற்றிடும் பூமியும் விண்ணதுவும்
         சேர்த்துக் கொடுப்பினும் ஈடிலையே…!

    லிமரைக்கூ..

    பிறர்க்குத் தானுதவாத போது
    தனக்குப் பிறருதவிடின் கைமாறாய் விண்மண்
    எதுகொடுத்தாலும் ஈடென்பது ஏது…!

    கிராமிய பாணியில்…

    மறக்காத மறக்காத
    செய்நன்றி மறக்காத,
    ஒதவி ஒனக்கொருத்தன் செஞ்சத
    ஒருநாளும் மறக்காத..

    ஒருத்தருக்கும் தான்
    ஒதவாத போதும்,
    தனக்கொருத்தன்
    ஒதவி செஞ்சாண்ணா,
    அந்த ஒதவிக்குக் கைமாறா
    இந்த ஒலகத்தயும் வானத்தயும்
    குடுத்தாலும்
    அதுக்கு ஈடாவாதே..

    அதுனால
    மறக்காத மறக்காத
    செய்நன்றி மறக்காத,
    ஒதவி ஒனக்கொருத்தன் செஞ்சத
    ஒருநாளும் மறக்காத…!

    Share
  • இணையவழியில் மது விற்க முடியும்!

    இணையவழியில் மது விற்க முடியும்!

    அண்ணாகண்ணன்

    டாஸ்மாக் மதுக் கடைகளில் மக்கள் குவிந்து வருவதால், கொரோனா தொற்று ஆபத்து மிகுந்துள்ளது. இதை இணையம் வழியே விற்றால், குறைந்தபட்சம், கொரோனா பரவலையாவது தடுக்கலாம். இணையம் வழியே மது விற்க முடியாது என்று அரசு, அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், நினைத்தால் முடியும் என்பதே உண்மை. இதற்குச் செய்ய வேண்டியவை குறித்து இந்தப் பதிவில் சிறிது விளக்கியுள்ளேன்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 257

    படக்கவிதைப் போட்டி – 257

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (10.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • மவுனத் தேன்

    மவுனத் தேன்

    அண்ணாகண்ணன்

    இந்தக் கவிதையை ஆசிரியரின் குரலில் இங்கே கேட்கலாம்

     

    ****************

    விரைந்து செல்லும் வாக னத்தில்
    ஜன்னல் ஓரம் சாய்கிறேன்!
    விரியும் காற்று முகத்தில் மோத,
    மவுனத் தேனில் தோய்கிறேன்!

    மழையில் நனையும் போதில் கண்ணீர்
    மறைந்து வழியும் கண்ணிலே!
    பழைய பாடல் ஒலிக்கும் நேரம்
    பனிக்கும் என்றன் கண்களே!

    தூய சிரிப்பைப் பார்க்கப் பார்க்க,
    துள்ளும் என்றன் இதயமே.
    நேயம் ஓங்கும் நேரம் எல்லாம்
    நெஞ்சம் விம்மி நெகிழுமே!

    எளிய மனிதர் வெல்லும் செய்தி
    எனக்குள் சக்தி பாய்ச்சுமே!
    துளியில் வெள்ளம் விதையில் ஆலம்
    வடிவ மாயை மாயுமே!

    நீதி வெல்லும் ஜோதி வெல்லும்
    நிறையும் எங்கும் உண்மையே!
    மேதினிக்குள் நல்லவர்க்கு
    மேன்மை உண்டு மேன்மையே!

    எண்ணெய் இல்லாத் தீபத்திற்குள்
    என்னை ஊற்ற ஆவலே!
    எண்ணம் முற்றும் வற்ற வேண்டும்
    இங்கு தேவி காவலே!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மதுவிற்றல் முறையோ!

    மதுவிற்றல் முறையோ!

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
    மெல்பேண்ஆஸ்திரேலியா 

    எம்மதமும் மதுகுடிக்கச் சொல்லியதே இல்லை
    எந்நூலும் மதுநன்று எனச்சொன்ன துண்டோ
    புத்தரொடு வள்ளுவரும் புறக்கணிக்கச் சொன்னார்
    சித்தமதில் ஏற்றாமல் திரிகிறார் பலரும் !

    நாடிருக்கும் நிலையினிலே தேடுவதா மதுவை
    கேடுதரும் மதுநாட  யாருமக்குச் சொன்னார்
    வீடுவிட்டு வீதிவந்து மதுதேவை என்று
    விளக்குகிற வீணர்களை விலக்கிவிட வேண்டும்!

    நோயுற்றார் மனைகளிலே நொந்து மடிகின்றார்
    தாயாகச் சேவைசெய்வார் தம்மை இழக்கின்றார்
    மதுவில்லை என்பதனால் மனமுடைந்து போச்சு
    எனவுரைக்கும் மனிதரைநாம் என்னவென்று சொல்ல!

    மதுவாலே வருமானம் வருகிறதாய் நினைக்கும்
    மதியுரைஞர் தனையெண்ணத் தலைகுனிவாய் இருக்கு
    காந்திமகான் நடைநடந்து களம்கண்ட நிலத்தில்
    காசுக்காய் கடைதிறந்து மதுவிற்றல் முறையோ!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 15

    பழகத் தெரிய வேணும் – 15

    நிர்மலா ராகவன்

    (சுயமரியாதையுடைய பெண்கள்)

    கணவனாலோ, பிறராலோ சிறுமைப்படுத்தப்பட்டால், ‘மரியாதை’ என்று அடங்கிப்போய், அதை ஏற்கமாட்டார்கள் சில பெண்கள். இவர்களுக்கு சுயமரியாதை முக்கியம்.

    இவர்களுக்கு புத்திசாலித்தனத்துடன் துணிச்சலும் உண்டு.

    கதை

    ‘பெண்களை அதிகம் படிக்க வைத்துவிட்டால், ஆண்களை மதிக்கமாட்டாள். அடங்கவேமாட்டாள்!’ என்று அச்சுறுத்தியவர்களை அலட்சியம் செய்யும் விவேகம் காயத்ரியின் பெற்றோருக்கு இருந்தது.

    சிறுவயதிலிருந்தே, ‘நீ தைரியசாலி. புத்திசாலி!’ என்று ஊக்கமளித்து அவளை வளர்த்தார்கள்.

    ‘எந்தக் காரியமாக இருந்தாலும், அதில் முழுக்கவனத்தையும் செலுத்து. அப்போதுதான் சிறப்பாகச் செய்து வெற்றி பெறமுடியும்,’ என்று தினமும் போதித்தார் தந்தை.

    பெற்றோர் தனக்கு நல்லதுதான் சொல்வார்கள் என்று நம்பி, அவர்கள் சொற்படி நடந்தாள். சிறு வெற்றிகள் கிடைக்க, தன்னம்பிக்கை வளர்ந்தது.

    வாழ்க்கையில் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்தபோதும், யாருக்காகவும் காயத்ரி தன் ஆற்றலை விட்டுக்கொடுக்கவில்லை.

    அவளைப் பார்த்துப் பயந்த ஆண்கள் புகழ்ச்சியால் அவளைக் கவர முயற்சித்தார்கள் — அப்படியாவது அவளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற எண்ணத்துடன்.

    இப்படி வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணை எந்த ஆணும் வசப்படுத்தவோ, பலகீனப்படுத்தவோ முடியாது என்று அவர்களுக்குப் புரியாது நடந்ததால் அவமானத்திற்கு ஆளானார்கள்.

    பல ஆண்களுக்கு இன்றும் இது புரியாததால்தான் விவாகரத்து அதிகரிக்கிறது.

    அழகும் மகிழ்ச்சியும்

    ஒருசில பெண்கள் கவனமாக அலங்காரம் செய்துகொள்வார்கள். ‘மூக்கும் முழியுமாக இருக்கிறாள்!’ என்று பெண்களே பாராட்டும்வகையில் இருப்பார்கள். ஆனால், ‘அழகு’ என்று பிரமிக்கவைக்கும்படி இருக்கமாட்டார்கள்.

    இன்னொரு வகையினர் எளிமையான தோற்றத்துடன் இருந்தாலும், அவர்களை நாடத் தோன்றும். ஏனெனில், பிரச்னைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை என்று புரிந்து, தம் மகிழ்ச்சியை அறவே இழக்காமல் இருப்பவர்கள் அவர்கள்.

    இந்த உண்மையை உறுதி செய்கிறார் நடிகை AUDREY HEPBURN: “மகிழ்ச்சியாக இருக்கும் பெண்கள்தாம் அழகானவர்கள்”.

    பெற்றோரும், ஆசிரியரும், ‘இதுதான் நீ போகவேண்டிய பாதை’ என்று வற்புறுத்தினால், அதில் ஆர்வமே இல்லாதபோது எப்படி மகிழ்ச்சி ஏற்படும்?

    ‘காதல் திருமணம்கூட இரு வருடங்களுக்குப்பின் அலுப்பைத்தான் தருகிறது,’ என்று சலிப்புடன் ஒத்துக்கொண்டாள் ஆங்கிலேயப்பெண்ணான அலெக்ஸாண்டரா.

    கதை

    நன்கு படித்து, உத்தியோகத்திலும் அமர்ந்த ஜெயமலரை மணக்க அவள் அலுவலகத்திலிருந்த பலர் போட்டியிட்டனர்.

    அவள் தேர்ந்தெடுத்தது வேணுவை. ஏனெனில், அவன்தானே அவளை நிறையப் புகழ்ந்து, பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்து, அவளைத்தவிர தனக்கு வேறு எந்த சிந்தனையும் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டான்!

    அவள் கிடைத்ததும், ‘இனியும் அவளை மயக்க முயற்சிகள் செய்வானேன்!’ என்று எண்ணியதுபோல், நண்பர்களுடனேயே காலத்தைக் கழிக்க ஆரம்பித்தான் வேணு.

    புதிதாகக் கல்யாணமான பெண் கணவன் தன்னை தினந்தோறும் வெளியில் எங்காவது அழைத்துப் போகவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். காதலித்தபோது அப்படித்தானே நடந்துகொண்டான்?

    ஆணுடைய எண்ணப்போக்கே வேறு. காதலியுடன் கொண்ட நெருக்கம் முன்பு அவனுக்குக் கிளர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். சற்று பழகியபின், அதிலுள்ள கவர்ச்சி, எதிர்பார்ப்பு, அலுத்துவிடுகிறது.

    இந்தக் குணம் பெண்களுக்குப் புரிவதில்லை.

    மனைவியின் ‘தொணதொணப்பு’ தாங்காது, முன்போல் நண்பர்களை நாடுகிறான். அவர்கள்தாம் தன்னைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

    பொதுவாக, வீட்டு வேலை, குழந்தைகள் இதெல்லாம் பெண்கள் வேலை என்று ஆண்கள் ஒதுங்கிவிடுகிறார்கள். மாற்றமில்லாமல் காலம் கழிக்க நேரிட்டால் எவருக்கும் அலுப்பு ஏற்பட, ஆத்திரம் எழாமல் என்ன செய்யும்!

    ‘எதற்கு வீண் சண்டை!’ என்று யோசித்து, வேறு உபாயங்களைக் கடைப்பிடிக்கலாமே!

    கதை

    ஒரு பெண் வேறொரு உபாயத்தைக் கைப்பிடித்தாள்.

    “இரண்டு நாட்கள் நான் செய்யும் வேலைகளையெல்லாம் நீங்கள் செய்யுங்கள். என் நிலை புரியும்,” என கணவரும் ஒப்புக்கொண்டார்.

    அந்த காலக்கெடு முடிந்ததும், “ஓயாத வீட்டு வேலை இவ்வளவு சலிப்பானதா! எனக்குத் தெரியாமல் போயிற்று!” என்று அயர்ந்தார்.

    அதன்பின், அவளுடைய வேலைகளில் பங்குகொண்டார். நிறையப் பேசும் தருணங்கள் வாய்த்தன.

    ஓயாத சண்டையா?

    “நான் அடிக்கடி எங்க வீட்டுத் தோட்டத்திலே புதிய பூஞ்செடிகள் வாங்கிவைப்பேன். எங்கம்மா, ‘தண்ணீர் விடாம எல்லாத்தையும் வாடவெச்சு, திரும்பவும் வேற வாங்குவே!’ன்னு கேலி செய்வாங்க,” என்று சிரித்தபடி ஒத்துக்கொண்டாள் என் தோழி ஒருத்தி.

    தகுந்த பராமரிப்பு இல்லாவிட்டால் இல்லற வாழ்க்கையும் இப்படித்தான் துவண்டுபோகிறது.

    தொற்றுநோய் பரவாதிருக்க வீட்டுக்குள்ளேயேதான் ‘அடைந்து கிடக்க’வேண்டும் என்ற தற்கால நிலையில், குடும்பச் சண்டைகள் அதிகரித்துவிட்டனவாம்.

    அதையொட்டி ஒரு துணுக்கு: எப்படி ஒரே வீட்டில் பேசாமல் இருப்பது என்று கற்றுக்கொடுக்க பதினேழு ஆண்டுகளுக்குமேல் ஒன்றாக இருக்கும் தம்பதிகள் தேவை!

    திருமணம் செய்துகொண்ட பின்னர் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒரு செடிக்குத் தினமும் நீர் பாய்ச்சி கவனித்துக்கொள்வதுபோல், ஒவ்வொரு நாளும் இல்லற வாழ்க்கை தழைக்க ஏதாவது செய்யவேண்டும்.

    ஏன் கோபம் எப்போதும்?

    ‘எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்பாள் ஒரு தாய், தான் பெற்ற குழந்தைகளை திட்டுவதையும் அடிப்பதையும் நியாயப்படுத்துவதுபோல்.

    அவளுக்கு என்னென்னமோ ஆசைகள். ஆனால், அவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பொய்த்துப்போன கனவுகள் எரிச்சலில் கொண்டுவிட்டன.

    ஒன்றை இழந்தால் வேறொன்று கிடைக்கலாம். கடந்ததையே எண்ணி வருந்தி, அந்த வருத்தத்தை ஆத்திரமாக மாற்றிக்கொள்வதால் யாருக்கு நிம்மதி?

    திருமணத்திற்குப்பின்

    பல பெண்கள் தாம் ரசித்து ஈடுபட்ட பொழுதுபோக்குகளை விட்டுவிடுகிறார்கள். ஆர்வக்குறைவால் அல்ல.

    ‘பாடுவதாக இருந்தால் தினமும் சாதகம் செய்ய வேண்டுமே!’

    ‘குழந்தைகள், வீட்டுவேலை! மற்றதற்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்கிறது!’

    ‘முன்பெல்லாம் நிறைய எழுதினேன். இப்போது கற்பனையே வரண்டுவிட்டது!’

    இப்படி ஏதேதோ காரணங்களைக் காட்டி சமாளித்தாலும், கணவரைவிட கூடுதலான வெற்றி பெற்றால் குடும்ப ஒற்றுமை குலைந்துவிடுமோ என்ற பயம் ஒரு முக்கிய காரணம்.

    ‘எடுத்த காரியத்தை எப்படி நல்லபடியாக செய்து முடிப்பது?’ என்ற தயக்கமும் எழக்கூடும்.

    தன் தவறு எங்கே என்று புரிந்தாலும் அதை மாற்றிக்கொள்ளத் துணிவு அவசியம். பயத்தையும், தயக்கத்தையும் மீறிச் செய்தால் வெற்றி கிடைக்கும்.

    பெரிதாக எதையும் சாதிக்க வேண்டும் என்பதில்லை. செய்வதைக் கருத்துடன் செய்தாலே மகிழ்ச்சி கிடைக்குமே!

    ஏதோ கொஞ்சம் சாதித்துவிட்டு, அதையே எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது எப்போதும் மகிழ்ச்சியைத் தருமா?

    துணிவிற்கும் தசைநார்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு என்கிறார்கள்.

    நம்பிக்கையை இழக்காது, துணிச்சலைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் அது விருத்தியடையும்.

    அலட்சியமாக விட்டுவிட்டால், தசைநார்கள்போல் துணிச்சலும் வலுவிழந்துவிடும்.

    Share
  • நாலடியார் நயம் – 14

    நாலடியார் நயம் – 14

    நாங்குநேரி வாசஸ்ரீ

    14. கல்வி

    பாடல் 131

    குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
    கல்வி அழகே அழகு.

    சீர்படித்தி முடித்த தலைமுடியினழகும்
    சிறப்பாகக் கரையிட்ட ஆடையினழகும்
    பூசிய மஞ்சளின் அழகும்
    பூவுலகில் உண்மை அழகல்ல
    உண்மையாய் நடக்கும் நடுவுநிலைமை
    உணர்வைத் தருவதால் கல்வியால்
    உண்டாகின்ற அழகே உயர்ந்த அழகு.

    பாடல் 132

    இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
    தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
    எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
    மம்மர் அறுக்கும் மருந்து.

    இவ்வுலக இன்பத்தைத்தரும்
    ஈவதனால் குறையாது
    தம் புகழை எங்கும் பரப்பும்
    தம் உயிருள்ளவரை அழியாது
    ஆதலில் கல்விபோல் எவ்வுலகிலும்
    அறியாமை போக்கும் மருந்தை
    யாம் கண்டதில்லை.

    பாடல் 133

    களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
    விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
    கடைநிலத்தோ ராயினும் சுற்றறிந் தோரைத்
    தலைநிலத்து வைக்கப்படும்.

    உவர்நிலத்தில் உண்டான உப்பை
    உயர்ந்தோர் நன்செய் விளைநெல்லினும்
    உயர்வாய்க் கருதுவர் கீழ்க்குடியில்
    உதித்தவராயினும் கற்றறிந்தவராயின்
    உயர்குடியினும் உயர்ந்த இடத்தில் வைத்து
    உயர்வாய்ப் போற்றி மதித்தல் வேண்டும்.

    பாடல்134

    வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
    மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்;
    எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
    விச்சைமற் றல்ல பிற.

    வைத்த இடமான மனதிலிருந்து
    வேறொருவரால் கவரஇயலாது
    தமக்குக் கிடைத்ததைப் பிறருக்குத்
    தருவதால் அழிவதில்லை
    படை வலிமைமிக்க மன்னர் சினந்தாலும்
    பிடுங்கிக்கொள்ளல் அரிது ஆதலில்
    தம் மக்கட்குச் சேர்த்துவைக்கத்
    தக்கது கல்வியேயன்றி வேறல்ல.

    பாடல் 135

    கல்வி கரையில கற்பவர் நாள்சில;
    மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
    ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
    பாலுண் குருகின் தெரிந்து.

    கல்வி முடிவில்லாதது
    கற்பவரின் வாழ்நாட்களும்
    குறைவே மெல்ல யோசித்தால்
    அண்டும் நோய்களும் பல
    ஆதலில் நீரை நீக்கி
    பாலைப் பருகும் அன்னம்
    போல் அறிவுடையார் ஆராய்ந்து
    பொருத்தமானவற்றையே கற்பர்.

    பாடல் 136

    தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
    காணிற் கடைப்பட்டான் என்றிகழார் – காணாய்
    அவன்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற
    மகன்துணையா நல்ல கொளல்.

    படகு செலுத்துபவனைப்
    பண்டைய சாதிகளில்
    கீழோன் என இகழார் மேலோர்
    அப்படகு ஓட்டுபவனின்
    துணையால் ஆற்றைக் கடப்பது போலாம்
    தக்க நூல்களைப் படித்தவனைத்
    தேடி நன்நூற்பொருளைக் கற்றல்.

    பாடல் 137

    தவலருந் தொல்கேள்வித் தன்மை உடையார்
    இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ
    நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து
    உம்பர் உறைவார் பதி.

    குற்றமற்ற பழமையான நூற்கேள்வி
    கேட்குந்தன்மை உடையவராய்
    கூர்அறிவுடை கற்றோர்களுடன்
    கூடி மாறுபாடற்று அளவளாவி
    மகிழ்தலைவிட  இன்பம் உண்டெனில்
    மேலுலகமெனும் தேவர்கள் உலகத்தைக்
    காண முயலுவோம்.

    பாடல் 138

    கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
    நுனியின் கரும்புதின் றற்றே – நுனிநீக்கித்
    தூரில்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
    ஈரமி லாளர் தொடர்பு.

    ஒலிக்கும் கடலின் குளிர் துறை
    உடையோனே! நுனியிலிருந்து கரும்பைத்
    தின்பது போலாம் கற்றறிந்தான் நட்பு
    தீய அன்பில்லாக் குணமற்றவரின் நட்போ
    அடியிலிருந்து கரும்பைத் தின்பதுபோலாம்.

    பாடல் 139

    கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
    நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
    ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
    தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

    பழஞ்சிறப்புடை அழகுமிகு
    பாதிரிப்பூவைச் சார்ந்ததால்
    மண்பானை தண்ணீரை
    மணமுள்ளதாக்குதல் போல்
    கல்லாரே ஆயினும்
    கற்றாரைச் சார்ந்து
    நடப்பின் அவர்போல்
    நல்லறிவு நாளும் உண்டாகும்.

    பாடல் 140

    அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
    உலகநூல் ஓதுவ தெல்லாம் – கலகல
    கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
    போஒம் துணையறிவார் இல்.

    பலநூல்களுக்குள்ளே ஞானம்
    போதிக்கும் நூல்களைக் கல்லாது
    விடுத்து இவ்வுலக அறிவை மட்டுமே
    வழங்கும் நூல்களைக் கற்பதெல்லாம்
    கலகல என்று வீணாகக்
    கூவுவதைப் போலல்லாமல்
    பிறவியாகிய தடுமாற்றத்தைப்
    போக்கும் வழி அறியப்படுவது இல்லை.

    Share
  • படக்கவிதைப் போட்டி 256-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 256-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கம்பிகளில் தொங்கிக்கொண்டிருக்கும் பூட்டைத் தம் படக்கருவிக்குள்  பத்திரப்படுத்திவந்து படக்கவிதைப் போட்டி 256க்கு வழங்கியிருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள படமிது. திருமிகு. ராமலக்ஷ்மிக்கு என் நன்றி!

    ”கொரோனா வைரசுக்குப் பயந்து பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது; சிறுத்தையே வெளியில் வா!” என்று நாம் ஒருவரையொருவர் பார்த்து மகிழ்ந்து பாடும்நாள் எந்நாளோ தெரியவில்லை.

    சிந்தனையைத் தூண்டும் இந்தப் படத்திற்கு கவிவடித்துத் தர நம் கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். அவர்களை வரவேற்போம்!

    *****

    ”பணிபோனதால் பூட்டும் போனது; வாட்டும் நோயது தொற்றிடாமல் வீட்டிலிருப்போம் பாதுகாப்பாய்!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வீட்டிலிருப்போம்…

    பூட்டும் போனதே பணியின்றி
    புதிதாய் வந்தநோய்ப் பகையாலே,
    வீட்டைப் பூட்டத் தேவையில்லை
    வெளியே செல்ல வேண்டாமே,
    வாட்டும் நோயது தொற்றிடாமல்
    வருந்திடா திருப்போம் வீட்டினுள்ளே,
    ஓட்டி யதனை விரட்டும்வரை
    ஒன்றா யிருப்போம் ஒட்டாமலே…!

    *****

    பூட்டின் உபயோகத்தை, மனிதர்கள் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் இந்த இக்கட்டான காலத்திலும் பூட்டு சுதந்தரமாக வெளியுலகைப் பார்க்கும் வேடிக்கையை, திருடனிடம் செல்லுபடியாகாத பூட்டின் சாமர்த்தியத்தை எனப் பூட்டு குறித்த தம் சிந்தனைகளை மூன்று கவிதைகளில், வெவ்வேறு கோணங்களில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. காந்திமதிநாதன்.

    கவிதை 1

    ஒருநாள் தேவைப்படுவாய் என்றுதான் பூட்டே உன்னை வேலியினில் பத்திரமாக்கி இருக்கிறேன்…

    வேண்டாத பொருளென எதுவும் இல்லாத உலகில்
    வேண்டும் பொருளாகிய உன்னைப் பார்வை படும்படி பத்திரப்படுத்தி இருக்கிறேன்!

    அறிவைத் திறப்பது நூல் என்றால் உன்னைத் திறப்பது சாவி!

    அன்பைத் திறப்பது மனிதநேயம் என்றால் உன்னைத் திறப்பதும் சாவி!

    மவுனம் கடைப்பிடிக்க வாய்க்கு வார்த்தை பூட்டு என்றால் தேவைப்படும் நேரத்தில் பூட்டே நீ பூட்ட தேவைப்படுவதால் இப்போது கண்முன்னே பூட்டப்பட்டு இருக்கிறாய்!

    தனிமைச்சிறையில் நீ மட்டுமில்லை என் பூட்டே

    உலக மாந்தர்கள் பலர் ஊரடங்கு தனிமைச் சிறையில்!

    நீயாவது வெளி உலகைக் காண்கிறாய்

    உன்னை தொங்கவிட்டு வீட்டிற்குள் யானோ ஒரு மண்டலம் நோக்கி!

    *****

    கவிதை 2

    உபயோகமில்லை என நினைக்காதே! உபயோகப்படுவாய் என நினைத்தே பாதுகாப்பான இடத்தில்! பாதுகாக்க இடமா இல்லையெனக் கேட்கலாம்.. பத்திரமாக உன்னை வைத்து இருப்பதே யான் கொரானாவில் இருந்து தப்பிக்கவே…காலை மதியம் இரவு மூன்று வேளையும் உணவு உண்ண வருவார்கள் வீடற்றோர்..வீடிருந்தும் கையில் காசற்றோர்..வெளி மாநில என் இந்திய சொந்தங்கள்…காலை ஆறு மணிக்கு உன்னைத் திறந்து இரவு பத்து மணி வரையில்தான் பாதுகாப்பாக இங்கே தொடங்குகிறாய்!

    எந்தக் கைரேகையும் உன்மீது பட்டு நான் தொட்டுவிட்டால் எனது தொண்டு தடைப்படுமே என்பதாலே
    எவர் கண்ணிலும் படாமல் என் கண்களுக்கு படும்படி!

    *****

    கவிதை 3

    சாவி இல்லையேல் பூட்டே நீயில்லை..யாரிடம் சாவி இருக்கிறதோ அவருக்கே நீ சொந்தம்..திருடனிடம் செல்லாது உனது வைராக்கியம்.. குறுக்கு வழியில் செல்வதற்குத்தான் நீயும் வழி விடுகிறாய்..பலப்பல பூட்டுகள் உடைக்கப்பட்டு தான் கொலை கொள்ளைகள்…உடைபட வேண்டாமே என்பதற்காகப் பாதுகாப்புத் தேடிக் கொண்டாயோ?

    *****

    பசுமைச் செடிக்குக் காவலாய்ப் பூட்டுப் போட்டது சரியே என்று தம்முடைய முதல் கவிதையில் உரைக்கும் திருமிகு. சுதா மாதவன், பூட்டினைப் போட்டுப் பசுமையைக் காக்கும் காலத்தின் கோலத்திற்கு வருந்திப் பசுமையை எங்கும் கொணர்ந்து பாரதத்தைச் செழிக்கச் செய்வோம் எனச் சூளுரைக்கின்றார் இரண்டாவது கவிதையில்.

    கவிதை 1

    பசுமைச் செடிக்குக் காவல்போடப் பூட்டு
    சரியே
    இல்லையெனில்
    வரைபடம் வரைந்து வானுயரடுக்கு மாடி ஆகிடுமோ?
    விலைக்கு வாங்கக் கூட்டம் ஏராளமிருக்க
    பசுமைச் செடிக்குப் பூட்டு
    சரியே!

    *****

    கவிதை 2

    பசுமைச் செடிகளைப் பார்க்கும்போது
    பரவசம் மனதில் தோன்றுதே!
    செழுமையின் பிரதிபலிப்பேயெனச்
    சிந்தனை கொள்ளத் தோன்றுதே

    பூட்டினைப் போட்டுப் பசுமையைக் காக்க
    இன்றைய காலம் உருவானதே
    வளமிகு ஆற்றின் மணலை அள்ளி
    பணம் தினம் பார்க்கத் தோணுதே!

    பாய்ந்தோடும் நதிக்கரையினிலே
    பலமிகு வீடுகள் உருவானதே
    ஏரினை உழுதுச் சோற்றினைப் புடைக்கும்
    விவசாயி கண்ணில் ஏக்கம்தான் தெரியுதே!

    இவைகளைத் தவிர்த்து எங்கும் பசுமையைக் கொணர்ந்து
    வளமிகு வாழ்வை உருவாக்குவோம்!
    நோயினாலான சிவப்பு மண்டலம்
    பசுமையாய் மாற்றிப்
    பாரதம் செழிக்க உதவுவோம்!
    நாம் இந்தியரென்றே உணர்த்துவோம்!

    *****

    கொரோனாவை எதிர்த்துக் கத்தியின்றி ரத்தமின்றி நடக்கும் இந்த உலக யுத்தத்தில் மானுட வாழ்க்கையே வீட்டுக்குள் முடங்கிப்போனது! வேலியில் இட்ட பூட்டு நம் வழி அடைத்ததை விளக்க எவருமில்லை. எனினும், இந்தப் பூட்டைத் திறக்க நாளை புதிய சாவி கிட்டும்! பூமிப்பந்து மீண்டும் புதிதாய்ச் சுற்றும் என்று நம்பிக்கை விதைக்கின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    கத்தியின்றி ரத்தமின்றி
    யுத்தமொன்று நடக்குது
    இருட்டுக்குள் எதிரியைத்தேடி
    என்னென்னவோ நடக்குது

    வெறிச்சோடிய வீதிகளில்
    விலங்குகள்தான் அலையுது
    வீட்டிற்குள் முடங்கிக் கிடந்து
    விரக்தியிலே மனம் தவிக்குது

    மூக்குமூடி வாய்பொத்தியே
    திருமணங்கள் நடக்குது
    எடுத்துச் செல்ல ஆட்களின்றி
    இறுதி யாத்திரைகள் நகருது

    பாதிக்கப்பட்டோர்
    பலியானோர்
    மீண்டோர்
    பட்டியலைப் பார்த்துப் பார்த்து
    பார்வை கூட மங்குது

    மூன்று திங்களாய்க்
    கொரானா என்னும்
    ஒற்றைச் சொல்லில்தான்
    உலகம் முழுமையும் சுழலுது

    எங்கிருந்தோ எதிலோ வந்து
    எங்கிருப்போர் உயிரையெல்லாம்
    ஏலம் விட்டுச் சிரிக்குது
    உலகாண்ட தேசமெல்லாம்
    செயல் மறந்து நிற்கிறது

    வேலியில் இட்ட பூட்டு அது
    வழி அடைத்தது எவ்வாறு
    விபரம் சொல்ல எவருமில்லை
    நாளை இந்த நிலை் மாறுமென
    நம்பிக்கைத் தரவும் யாருமில்லை

    ஆனாலும்
    பூட்டைத் திறக்க
    புதிய சாவியொன்று
    நிச்சயமாய்க் கிடைக்கும்
    பூமிப்பந்து அன்று
    புதிதாய்ச் சுற்றும்!

    *****

    பழமைப் பூட்டுக்கு இடப்பட்ட புது வேலியிது என்று மொழியும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன், அமைதியை அகிம்சையை அடிமைத்தனமென்று ஒதுக்கி வன்மத்தை, வன்முறையை வீரமென்று உரைக்கும் நம் புன்மையைச் சாடுகின்றார் தம் கவிதையில்.

    புது வேலி

    புதுமைகள் புகும் நல்வேளையிலே
    கலாசாரக் காவலன் நாமென்று கூவிப்
    பழமை என்னும் பூட்டுக்குப்
    புது வேலி செய்து காவலிட்டோம்..

    கண்ணியமான அன்பதனைக்
    கடிவாளம் போட்டு ஒதுக்கி வைத்தோம்
    காமக்களிக் கூத்தினையே – உண்மைக்
    காதல் என்றே காட்சி செய்தோம்..

    அமைதி சாந்தி அகிம்சையெலாம்
    அடிமைத்தனம் என்றொதுக்கி
    வன்மமும் வன்முறையும் வீரமென்று
    வருந்தலைமுறைக்குப் பாடம் சொன்னோம்..

    உண்மை நேர்மை என்பதெல்லாம்
    வெற்றிக்குதவா வீண்செயலாக்கி
    பொய்யும் புரட்டும் திறமையென – புதுத்
    தத்துவம் சொல்லி வாழுகின்றோம்…

    *****

    பூட்டுக்குள்ளே நல்ல கருத்துக்களென்னும் அதிர்வேட்டுக்களை வைத்து வெடிக்கச் செய்திருக்கும் கவிவலவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    பூட்டு

    எங்கெங்கோ தேடுகிறேன்
    இங்கேயா நீயிருந்தாய் ?
    வேலியின் மீதுன்னை
    வேண்டாமெனத் தொங்கவிட்டோம்

    வண்ணக் கதவுகளை உன்னை
    வைத்துப் பூட்டிடலாம் – எங்கள்
    எண்ணக் கதவுகளை – எதைவைத்துப்
    பூட்டுவது ?

    என்னுள்ளே எண்ணங்கள் வந்து
    ஏதேதோ பந்தலிடும் – ஒன்றிரண்டு
    உன்னிடத்தில் நான் இங்கு
    உரைத்திட வந்துள்ளேன்!

    எப்படிக் கேட்பதன்று பூட்டே உனக்கு
    ஏன் இத் தயக்கம் ? உனக்குத்தான்
    இரு செவிக்கு பதில் ஓர் துளை
    இருக்கிறதே! கேள்.

    இயற்கையை மறந்து விட்டு
    இயந்திரமாகிவிட்டோம்…
    விழிகளை விற்று விட்டு
    வீண் ஓவியங்கள் வாங்கிவிட்டோம்

    உல்லாச வாழ்வதனில்
    உயர் மூத்தோர் சொல் மறந்தோம்
    கொரோனாவின் கரங்களால்
    கோரமாகிப் போய் விட்டோம்.

    ஊரடங்கு வந்து எங்கள் காதுகளில்
    உரைத்தது, அது எங்களுக்கும் உறைத்தது
    விண்ணகத்து மூத்தோர் உரை
    விரைவாகப் புரிந்து கொண்டோம்

    சுத்தமும், விலகலுமே
    சுகமென்று அறிந்து கொண்டோம்
    திறவுகோலைக் கண்டுகொண்டு
    திறந்து விட்டோம் மனப் பூட்டை

    சீர்க் காவலரும், மருத்துவரும் ,
    செவிலியரும், துப்புரவுத் தோழர்களும்
    பாங்காக உழைத்தார்கள் பாரினிலே
    பூட்டே எங்களுக்குப் புரிந்தது தெளிவாக.

    வேட்கைகளை விட்டொழித்தோம்
    விடியல் வரக் காத்திருந்தோம்
    அன்பு சூழ் உலகு என்று
    அனைவருமே அறிந்து கொண்டோம்.

    ”பூட்டே கேள்!” என்று விளித்து, உல்லாச வாழ்வதனில் உயர் மூத்தோர் சொல் மறந்தோம்! ஊரடங்கு எங்கள் காதில்வந்து உரைத்ததும்தான் மூத்தோர் மொழியின் அருமை எங்களுக்கு உறைத்தது! மனப்பூட்டைத் திறந்துவிட்டோம்! அன்புசூழ் உலகே அழகானது என்று உணர்ந்துவிட்டோம்!” என்று இன்றைய வாழ்க்கைச் சூழலை எதார்த்தமாகத் தம் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கும் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • Q & A: சுதா மாதவன் கேள்விகளுக்கு அண்ணாகண்ணன் பதில்

    Q & A: சுதா மாதவன் கேள்விகளுக்கு அண்ணாகண்ணன் பதில்

    அண்ணாகண்ணன்

    எனது யூடியூப் அலைவரிசையில் ஒரு புதிய பகுதியாக, அன்பர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன். இந்த முதல் பதிவில், முகநூல் (பேஸ்புக்) நண்பரும் வல்லமை வாசகருமான சுதா மாதவன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளேன்.

     

    உங்களுக்கு ஏதும் கேள்விகள், ஐயங்கள், யோசனைகள், கருத்துகள், பின்னூட்டங்கள் இருந்தால், வீடியோவில் பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒளவையாரின் ஆத்திசூடி அமைப்பும் நிலைப்பாடும்

    ஒளவையாரின் ஆத்திசூடி அமைப்பும் நிலைப்பாடும்

    முனைவர் சொ.சேதுபதி
    தமிழ்த்துறைத் தலைவர்
    பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி
    புதுச்சேரி- 605003
    sethukabilan@gmail.com

    ஆத்திசூடி என்பது ஓர் அடியில் அறம் உரைக்கும் நீதிநூல் ஆகும். தமிழ்மொழியில் உள்ள உயிர். மெய் மற்றும் உயிர்மெய்யெழுத்துக்களை முதலாக உடைய  சொற்களைக் கொண்டு தொடங்கும் ஒவ்வோர் அடியிலும், ஓர் அறச் செய்தியைச் சொல்லுவது இதன் மரபாகும். இந்த நூலை இயற்றிய ஒளவையார், ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்திப் பாடி’த் தொடங்குகிறது. ஆத்திசூடி எனத் தொடங்குவதால், இந்நூலுக்கு ஆத்திசூடி என்றே பெயர் அமைந்திருக்கிறது. இதேபோல், ஒளவையார் பாடிய மற்றொரு அறநூல், கொன்றைவேந்தன் ஆகும். அதுவும் ‘கொன்றை வேந்தன்’ என்று தொடங்குவதால், அப்பெயர் பெற்றது.

    தமிழ் எழுத்துகளை முதலாகக் கொண்டு அமைந்த நூல்கள் இவை என்பதால், இந்த நூல்களின் தொடக்கச் சொற்களே இந்நூல்களுக்குப் பெயர்களாக அமைந்திருப்பதும் பொருத்தம்தான்.

    ஒளவையாரின் ஆத்திசூடியும் தமிழ் எழுத்துக்களும்

    தமிழின் எழுத்துக்கள் மொத்தம் முப்பதாகும். அவை, ‘அகரம்’ தொடங்கி, னகர இறுவாயான, ‘ன்’ வரையிலான எழுத்துக்களாகும். இதனை,

    “எழுத்தெனப் படுவ
    அகர முதல்
    னகர இறுவாய் முப்பஃதென்ப” (தொல்.எழுத்து.நூன்மரபு – 1)

    என்று தொல்காப்பியர் சொல்கிறார். எழுத்துக் முதல், சார்பு என இருவகைப்படுகின்றன. அவற்றுள் முதல் எழுத்தானது உயிர் (12), மெய் (18) இவை இரண்டும் இணைந்து எண்ணிக்கையில் முப்பது (30) ஆகிறது. இதனைப் பவணந்திமுனிவர்,

    “உயிரும் உடம்புமாம் முப்பது முதலே” (நன்னூல் – எழுத்து- 59)
    என்கிறார்; மேலும், சார்பு எழுத்துக்கள் பத்தினை,
    “உயிர்மெய், ஆய்தம், உயிரளபு, ஒற்றளபு
    அஃகிய, இ,உ,ஐ,ஒள, மஃகான்
    தனிநிலை பத்தும் சார்பெழுத்தாகும் (நன்னூல் – எழுத்து- 60)

    எனச் சூத்திரம் சொல்லி எடுத்துரைக்கிறார். அவை, உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகியனவாகும்.

    தொல்காப்பியர், முதல் எழுத்துக்களுள் முதலாவதாகிய உயிர் எழுத்துகளை, அ’ முதல் ‘ஒள’ வரையிலாக, (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள) பன்னிரண்டு என வகைபிரித்துக் காட்டுகிறார்.

    “ஒளகார இறுவாய்ப்
    பன்னீரெழுத்தும் உயிரென மொழிப” (தொல்.எழுத்து.நூன்மரபு-8)

    அதுபோல், மெய்யெழுத்துக்களை, ‘க்’ முதல் ‘ன்’ வரை, (க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்) பதினெட்டு எனக் கணக்கிட்டுக் காட்டுகிறார்.

    “னகர இறுவாய்ப்
    பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப” (தொல்.எழுத்து.நூன்மரபு-9)

    இவையிரண்டும் சேர்ந்து வருகிற உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஆகின்றன. இதை,

    “உயிர்மெய் இரட்டுநூற்றெட்டு” (நன்னூல்- எழுத்து- 61)

    என்று பவணந்திமுனிவர் சொல்கிறார். உயிரும் மெய்யும் இணைந்து வரும் எழுத்துக்கள், தமக்குரிய புள்ளியை விட்டுவிட்டு, அகரத்தோடு கூடியும் பின்னர் உள்ள பதினொரு உயிர்எழுத்துக்களோடு உருவு திரிந்தும் உயிர்ப்புறும் என்று இவ்விரு இலக்கண ஆசிரியர்களும் பின்வருமாறு எடுத்துச் சொல்கின்றனர்.

    “புள்ளி இல்லா எல்லா மெய்யும்
    உருவுரு ஆகி யகரமோ(டு) உயிர்த்தலும்
    ஏனை உயிரோடு உருவுதிரிந்து உயிர்த்தலும்
    ஆயீரியல உயிர்த்தல் ஆறே.” (தொல்.எழுத்து.நூன்மரபு-17)

    “புள்ளிவிட்டு அவ்வொடு முன்னுரு வாகியும்
    ஏனை உயிரொடு உருவு திரிந்தும்
    உயிர்அள வாயநன் வடிவொழித் திருவயிற்
    பெயரொடும் ஒற்றுமுன்னாய் வரும் உயிர்மெய்.” (நன்னூல்- எழுத்து- 89)

    இவற்றுள், மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களாகப் பின்வருவனவற்றைச் சுட்டுகின்றது நன்னூல்.

    “பன்னீ ருயிரும் க,ச,த,ந, ப,ம,வ, ய
    ஞ,ங ஈரைந்துயிர்மெய்யும் மொழிமுதல்” (நன்னூல்- எழுத்து- 102)
    “உ,ஊ,ஒ,ஓ,வலவொடு வம்முதல்” (நன்னூல்- எழுத்து- 103)
    “அ,ஆ,உ,ஊ,ஒ,ஒள யம்முதல்” (நன்னூல்- எழுத்து- 104)
    “அ.ஆ,எ,ஒவ்வோ டாகும் ஞம்முதல்” (நன்னூல்- எழுத்து- 105)

    இவற்றுள் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, அகரத்துடன் இணைந்த உயிர்மெய்யெப்யெழுத்துக்கள் பதினெட்டு, இவற்றோடு மொழிமுதல் வருகிற உயிர்மெய் வருக்க எழுத்துக்கள் ஆகியவற்றை முதல் எழுத்தாகக் கொண்டு தொடங்குகிற கட்டளைகளை ஒளவையார் தம் ஆத்திசூடியில் பயன்படுத்தியிருக்கிறார்.

    ஒளவையாரின் ஆத்திசூடியில் உயிர் வருக்கமும் உயிர்மெய் வருக்கமும்

    ஒளவையாரின் ஆத்திசூடியானது, ‘அ’கரம் தொடங்கி, ‘வோ’காரம் வரையிலான, எழுத்துக்களை முதலாகக் கொண்டு, மொத்தம் 109 எழுத்துக்களுக்கும், ஓர் அடியில் உலக அறன் உரைப்பதாக அமைந்துள்ளது.

    தொடக்கமாக, ‘அ’கரம் தொடங்கி, ‘ஒள’காரம் வரை உள்ள உயிர் வருக்க எழுத்துக்களை முதலாகக் கொண்டு, ‘அறம் செய விரும்பு’ – ‘ஒளவியம் பேசேல்’ வரை பன்னிரண்டு உயிர் எழுத்துக்களுக்கும் ஆத்திசூடிக் கட்டளைகள் அமைகின்றன.

    தனிநிலை, ஆய்தம் என்று குறிக்கப்பெறும் ‘ஃ’ மொழி முதலில் வராது என்பதால், ‘அ’கரத்தை முன்வைத்து, ‘அஃகம் சுருக்கேல்’ என்று அமைகிறது. அதுபோல், ‘ங’ மொழி முதல் வராதது. ஆனால், அந்த எழுத்தைச் சுட்டிக் காட்டுவதற்காக, மொழிமுதலில் அதனை அமைத்து, ‘ஙப்போல் வளை’ என்று ஒளவையார் பாடியது அறமுரைக்கும் பாங்கின் மணிமுடி என்றே கொள்ள வேண்டும்.

    ‘ங’கர வருக்க எழுத்துக்களான, ஙா, ஙி,ஙீ, ஙு, ஙூ,ஙெ, ஙே, ஙை, ஙொ,ஙோ, ஙௌ ஆகியவை பெரிதும் பயன்படாதவை என்றாலும், ஙகர வருக்கத்தில் தோன்றிய காரணத்தால் அழியாது இருக்கின்றன. இத்தனை எழுத்துக்களையும், ‘ங’ வளைத்துக் காப்பதுபோல், சுற்றத்தைப் பேணிக் காக்கிற அறமும் தேவை என்பதால், ‘ஙப்போல்’ என்ற உவமையைத் தந்து ‘வளை’த்துக் கொள்ளச் சொல்கிறார் ஒளவையார்.

    உயிர் எழுத்துக்களாகிய பன்னிரண்டு எழுத்துக்களோடு, மெய்யெழுத்துக்களாகிய 18 எழுத்துக்களும் சேர்ந்து உண்டாகும் முப்பது எழுத்துக்கள் (12+18=30) உயிர்மெய் வருக்க எழுத்துக்கள் ஆகின்றன.

    ‘க்+அ=க’, இதுபோல், ஏனைய 17 மெய்யெழுத்துக்களும், ‘அ’கர உயிர் எழுத்துடன் இணைந்து முறையே, ங,ச.ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனப் பதினேழு எழுத்துக்களாக உருவாகின்றன. ஆக, மொத்தம் பதினெட்டு எழுத்துக்களுக்கும் பதினெட்டுக் கட்டளைகள் ஒளவையாரின் ஆத்திசூடியில் பாடப்பெற்றுள்ளன.

    ஆக, உயிர் எழுத்துக்கள் – 12, ஆய்த எழுத்து –  1, அகர உயிர்மெய் எழுத்து 18 ஆகிய முதல் எழுத்துக்களை முன்வைத்து அமைந்த சொற்களில், 31 கட்டளைகளை ஒளவையார் பிறப்பித்துள்ளார்.

    இவற்றை அடுத்து, பிற உயிர் எழுத்துக்களுடன் இணைந்த மெய்யெழுத்துகளுள் மொழி முதலாவதாக வரக்கூடியவற்றையும், மொழி முதலாக வர இயலாத நிலையில், அகர, இகர, உகர எழுத்துக்களை முதற்கொண்டு  வரக்கூடியவற்றையும் வைத்து, 78 கட்டளைகளைத் தந்துள்ளார்.

    அவற்றுள், ட, ண, ய, ர, ல, ழ,ள,ற.ன ஆகிய ஒன்பது எழுத்துக்கள் மொழிமுதல் வராதவை. எனவே, அவை ‘அ’கர, ‘இ’கர உயிர் எழுத்துக்களை முன்னதாகக் கொண்டு அமைகின்றன. ‘அ’கரத்தை முதலாகக் கொண்டு அமைந்த எழுத்துக்கள், ர, ழ, ற, ன ஆகிய நான்காகும். ‘இ’கரத்தை முன்வைத்து அமைந்தவை, ட, ண, ய,ல,ள, என ஐந்தாகும். அவை பின்வருமாறு:

    ர – அரவம் ஆட்டேல் (25)
    ழ – அழகு அலாதன செய்யேல் (28)
    ற – அறனை மறவேல் (30)
    ன – அனந்தல் ஆடேல் (31)
    ட  – இடம்பட வீடு எடேல் (18)
    ண – இணக்கம் அறிந்து இணங்கு (19)
    ய – இயல்பு அலாதன செய்யேல் (24)
    ல – இலவம் பஞ்சில் துயில் (26)
    ள – இளமையில் கல் (29)

    மொழி முதலாக வரும் வகர வருக்க எழுத்துக்களுள்ளும் மொழிமுதல் வாரா நான்கு எழுத்துக்களுக்கு, உகர, ஒகர, ஓகார உயிர் எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளார். அவை பின்வருமாறு:

    வு – உத்தமனாய் இரு (103)
    வூ – ஊருடன் கூடிவாழ் (104)
    வொ – ஒன்னாரைத் தேறேல் (108)
    வோ – ஓரம் சொல்லேல் (109)

    ஒளவையாரின் ஆத்திசூடியில், ஙகர, ஞகர எழுத்துக்கள் போக, ஏனைய அதன் வருக்க எழுத்துக்களில் தொடர்கள் இல்லை. அதுபோலவே, ட,ண,ய,ர,ல,ழ,ள,ற,ன ஆகியவற்றின் வருக்க எழுத்துக்களுக்கும் தொடர்கள் இல்லை. மேலும், சௌ, தௌ, நௌ, பௌ, மௌ, வெள ஆகிய எழுத்துக்களுக்கான தொடர்கள் இல்லை.

    வாழ்தல் வேண்டின்…

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது வாழ்வு.

    “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு” (நிலையாமை- 339)

    என்கிறார் திருவள்ளுவர்.

    “யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
    உறங்குவதும் ஆகமுடியும்” (தாயுமானவர், பரிபூரணானந்தம்-  10)

    என்கிறார் தாயுமானவர். உண்பது, உறங்குவது, விழிப்பது என்கிற அளவில் நகரும் வாழ்வில் இருப்பது எப்போது? இயங்குவது எப்படி என்கிற நிலைகளில்தான் நிலையாமையை எதிர்கொண்டு நிலைக்கின்ற ஆற்றலை மனிதகுலம் பெறுகிறது. அதுவே வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் என்பதாகிறது. அதற்கான வழிமுறைகளை எழுத்துவருக்கங்களின் வரிசையில் எடுத்துச் சொன்னாலும், அதனைப் பொருண்மை அடிப்படையில் பொருத்திப் பார்ப்பதும் தேவையாய் இருக்கிறது.

    உறங்குதல், விழித்தல் என்பது அன்றாட நிகழ்வு. எப்படி உறங்குவது எப்போது எழுவது என்பதற்கு இரு கட்டளைகள் இடுகிறார். இலவம் பஞ்சில் துயில் (26) என்கிற ஒளவையார், வைகறைத் துயில் எழு (107) என்று எழுப்பிவிடுகிறார். அதுபோல் கற்றலும் நிற்றலும். கற்றலுக்கு உரியன எண்ணும், எழுத்தும். அதனால், எண் எழுத்து இகழேல் (7) என்கிறார். அதனைக் கற்றலே மனித வாழ்வின் அடிப்படைக் கடப்பாடு. அதிலும் இளமையில் கற்றலே ஏற்புடையது என்பதால், இளமையில் கல் (29) என்கிறார். எதனைக் கற்பது என்ற கேள்வி கூடவே எழுதல் இயல்பு. அதற்குப் பதில், நூல் பல கல் (71).

    ‘கற்றதனால் ஆய பயன்என் கொல்?’ எனக் கேட்ட திருவள்ளுவர், ’வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ (கடவுள் வாழ்த்து-2) என்றார். ஒளவையாரோ, தெய்வம் இகழேல் (61) என்கிறார். இப்போக்கு அவர் காலத்திலேயே வந்துவிட்டதுபோலும். அந்தவகையில், கற்றலின் மூலமாக அகற்றிக் கொள்ளவேண்டியவை நான்கு. அவையாவன, 1. கீழ்மை அகற்று (35) 2. கௌவை அகற்று (43) 3. தீவினை அகற்று (58) 4.பேதைமை அகற்று (84) மேலும், கற்கும் முறைமையில் கேள்வி முதன்மையானது. எனவே, கேள்வி முயல் (39) என்றார். இந்த முயற்சிக்கு எதிரிகளாவன நான்கு. அவற்றுக்குக் ‘கெடுநீரார் காமக் கலன்’ என்றே பெயர் சூட்டுகிறார் திருவள்ளுவர்.

    “நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்” (மடியின்மை- 605)

    என்பது குறள். இதில், நெடுநீர்மை- தாமதம்; மறவி- மறதி; மடி- சோம்பல்; துயில்- தூக்கம். இவை நான்கும் கெடுநீரார் காமக்கலன்- இதற்கு, ‘இறக்கும் இயல்பினையுடையார்  விரும்ப  ஏறும் மரக்கலம்’ என்று விளக்கம் கொடுக்கிறார் பரிமேலழகர்.

    வாழ்தல் வேண்டி, மரக் கலம் ஏறி, பொருள் தேடப் போனவர்கள் நம் முன்னோர். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ (கொன்றைவேந்தன் – 39) என்றும் ஒளவையார் கூறியிருக்கிறார். ஆனால், திருவள்ளுவரோ, இறப்பதற்கென்றே விரும்பி ஏறுவோர்க்குரிய மரக்கலம் என்று இவற்றைக் குறிக்கின்றார். இதற்கு மறுதலையான அறங்களைத் தம் ஆத்திசூடியில் ஒளவையார் குறித்திருப்பது சிறப்புக்குரியது. தாமதம் போக்குதற்கு உரிய செயல்பாடு, விரைவு. அதற்காக, தூக்கி வினை செய் (60) என்றும், நன்மை கடைப்பிடி (66) என்றும் கட்டளையிடுகிறார்.  சோம்பலுக்கு எதிர், முயற்சி. சோம்பித் திரியேல் (54) சையெனத் திரியேல் (52) சோம்பலுடனும், பெரியோர் ‘சீ’ என வெறுக்கும்படியாகவும் திரியாதே’ என்று எச்சரிக்கிறார். மாற்றாக, தக்கோன் எனத் திரி (55) என்கிறார். அடுத்தது மறதி. நன்றி மறவேல் (21) அறனை மறவேல் (30) சீர்மை மறவேல் (47) என்ற மூன்று கட்டளைகள் முறையே பிறப்பிக்கப்பெறுகின்றன. இதே வேளையில், கடிவது மற (32) என்று சொன்னதையும் மறந்துவிடலாகாது. நான்காவது துயில், நீடுதுயில் மரணம் நிகர்த்தது. எனவே, அனந்தல் ஆடேல் (31) என்கிறார். கைக் கொள்ள வேண்டிய அறங்களைப்போலவே, கைவிடலாகாதனவாக,  ஊக்கமது கைவிடேல் (6) குணமது கைவிடேல் (36) என்பனவற்றையும் அவர் எடுத்துரைக்கின்றார்.

    வையத்துள் வாழ்வாங்கு வாழ…

    ஒளவையாரின் ஆத்திசூடியானது, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வேண்டிய அறநெறிகளை எடுத்துரைக்கும் அழகிய கட்டளைக் கொண்டது. வாழ்தலுக்குரிய கட்டளைகளாக, ஐந்தினை அவர் பிறப்பித்துள்ளார்.

    உடலும் உயிரும் ஒன்றி வாழ்தல் எவ்வுயிர்க்கும் இயல்பு. மனித வாழ்வோ, வாழ்வாங்கு வாழ்தற்குரியது. இதற்கு, வாழ்வித்து வாழ்தல் என்று பொருள். பிறவுயிர்களுக்குப் பயன்படுமாறு, அவற்றை வாழ்வித்துத் தானும் வாழ்தலே வாழ்வு. அதனால்தான், கிழமைப்பட வாழ் (34) என்கிறார் ஒளவையார். கிழமை என்பதற்கு உரிமை என்று பொருள். உடலும் உயிரும் பிறருக்கு உரிமையாகும்படியாகப் பயனுற வாழ்தல் என்பது பெறுதற்குரிய பொருள்.

    “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதிய மில்லை உயிர்க்கு” (புகழ்- 231)

    என்கிறது திருக்குறள். இவற்றுக்கு இன்றியமையாதது பொருள். எனவே, பொருளையும் புகழ்ந்தாரையும் போற்றுதல் வாழ்தலின் இன்றியமையாக்கூறுகள். எனவே, ‘போற்றிவாழ்’ என்ற முடிவுடன், புகழ்ந்தாரைப் போற்றி வாழ் (81), பொருள்தனைப் போற்றி வாழ் (86) என்று சொல்லப்பெற்றது. அடுத்த கட்டளைகள், வாழிடத்தோடு தொடர்புடையவை.

    “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” (ஒழுக்கமுடைமை-140) என்கிறது திருக்குறள். ஆத்திசூடியோ, தேசத்தோடு ஒட்டி வாழ் (62) என்கிறது. உலகநெறிகட்கும் வழிகாட்டுவது நாட்டுநெறி. எனவே, தேசத்தோடு பொருந்தி வாழ்தல் கடப்பாடாகிறது. அதற்கேற்ப, ஊருடன் கூடி வாழ் (104) என்றும் பிறிதொரு கட்டளையைப் பிறப்பிக்கின்றது. அவ்வாறு இல்லாமல், ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் (கொன்றைவேந்தன்-6) என்றும் அவரே எச்சரித்திருக்கிறார். இங்கு ஊரும், தேசமும், உலகமும் உயர்ந்தோரை முன்னிறுத்திச் சொல்லப்பெற்றது என்பதையும் மறந்துவிடக்கூடாது. “உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே” (தொல¢காப¢ப¤யம¢, பொருள¢, மரப¤யல¢ 96) என்கிறது தொல்காப்பியம்.

    உயிரினும் சிறந்தது ஒழுக்கம்

    உயிரினும் சிறந்ததான ஒழுக்கத்தை வலியுறுத்திய வள்ளுவம் அதனையும் ஓர் உடைமையாக்கி, ‘ஒழுக்கமுடைமை’ என்ற தலைப்பில் ஓர் அதிகாரமே படைத்துள்ளது. அதனை அடியாகக் கொண்ட ஒளவையார், ஒழுகு என்ற சொல்லுடனான இரண்டு கட்டளைகளைத் தன் ஆத்திசூடியில் ஒளவையார் தருகிறார்.

    ‘ஒப்புரவறிதல் அறிதல்’ என்ற திருக்குறள் அதிகாரத்தின் பிழிவாக 1. ஒப்புரவு ஒழுகு (10) என்பதைக் கொள்ளலாம். அதிலும் நேர்மை தவறாமல் இருத்தல் வேண்டும் என்பதற்காகவே, 2. நேர்பட ஒழுகு (73) என்றும் கட்டளையிடுகிறார். இதற்கு மறுதலையாவது, கரத்தல். அதாவது மறைத்தல். இயன்றதை மறைக்காமல் கொடுத்தலும், இயற்றுதற்குக் காரணமான கைத்தொழிலையும் மறைக்காது செய்தலும் அறமாகும் என்பதால், இயல்வது கரவேல் (3), கைவினை கரவேல் (40) என்பன சொல்லப்பெற்றன.

    எதிர் எதிர் நிலைகளில் பிறக்கும் கட்டளைகள்

    ஒளவையாரின் ஆத்திசூடியில் உடன்பாட்டுநெறியாகச் சொல்லப்பெற்றவை 52 கட்டளைகள். எதிர்நிலை யாகச் சொல்லப்பெற்றவை, 57 கட்டளைகள். அவற்றுள், நேருக்கு நேர் எதிரானவையாக நிறுத்திப் பார்க்கத் தக்கன பல. ஒருவகையில் இதுவோர் உத்தியே போலக் கவனத்திற் கொள்ளத்தக்கதாக அமைவதையும் இங்கு கவனத்திற் கொள்ளலாம். அக்கட்டளைகள் பின்வருமாறு:

    1. விரும்பு  X  விரும்பேல்

    ஒளவையார் விதித்த ஆத்திசூடிக் கட்டளைகளுள், ‘விரும்பு’ என்றும், அதற்கு எதிர்நிலையாக விரும்பேல் என்றும் சொல்லப்பெற்ற கட்டளைகள், முறையே மூன்றாகும்.

    அறம் செய விரும்பு (1) இதற்கு எதிர்நிலையாக உணர்த்தப்பெற்ற அறம், கொள்ளை விரும்பேல். (41) அறத்திற்கு எதிரானது கொள்ளை. ‘அறம் செய விரும்பு’ என்கிற ஒளவையார். ‘கொள்ளை’க்கு அடுத்து வேறெந்தச் சொல்லையும் இடாமல், ‘விரும்பேல்’ என்கிறார். கொள்ளையின்பால் விருப்பம் வந்துவிட்டாலே அதைச்செய்வதற்கு நிகராகிவிடுகிறது. அது சூதினும் தீது. அறம் செய்வதற்குப் பொருள் தேவை என்ற நிலையில் கொள்ளையிட்டு அறம் செய்யலாம் என்று நினைத்துவிட்டாலே அறம் மீறிய அபாயம் நேரும். எனவே, அறம் செய விரும்புவதோடு கொள்ளையை விரும்பாதிருப்பதும் இன்றியமையாதது என்று சுட்டுகிறார். அதுபோலவே, தானமும், சூதும்.  விரும்பிய வண்ணம் தானம் பண்ணச் சூதினைக் கைக்கொண்டுவிடக்கூடாது. அதனால்தான், தானமது விரும்பு (56) என்ற ஒளவையார், சூது விரும்பேல் (49) என்றும் சொல்கிறார்.

    வித்தை விரும்பு (101) வித்தையாவது கல்வி. அது பெறும் வாயில் கேள்வி. செவிக்குணவு இல்லாதபோதுதான் வயிற்றுக்கு ஈய வேண்டும். அதுவும் சிறிது என்கிறது திருக்குறள். அறிவின் கூர்மை பெறத் தடையாவது மிகையுணவு. நாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டால், கல்வியின் சுவை பெற இயலாது எனவே, வித்தை விரும்புதலுக்கு எதிர்நிலை அறமாக மீதூண் விரும்பேல் (91) சொல்லப்பெற்றது.

    2. செய்  X  செய்யேல்

    பருவத்தே பயிர் செய் (22), செய்வன திருந்தச் செய் (50), திருமாலுக்கு அடிமை செய் (57) ஆகிய கட்டளைகளுக்கு நேராகக் கருத்தில் கொள்ள வேண்டியவை, இயல்பு அலாதன செய்யேல் (24), அழகு அலாதன செய்யேல் (28) ஆகியனவாகும்.

    தூக்கி வினை செய் (60), நாடு ஒப்பன செய் (67), நெற்பயிர் விளைவு செய் (72) ஆகியவற்றுக்கு நேர் எதிர், வேண்டி வினை செயேல் (106) – இங்கு வினை என்பது தீவினையைக் குறிக்கிறது. .

    3. இணங்கு  X  இணங்கேல்

    ‘அறிவில்லாத சிற்றினத்தாருடனும், மூர்க்கக்குணம் கொண்டவர்களுடனும்’ இணங்காதே என்பதற்கு, பையலோடு இணங்கேல் (85) மூர்க்கரோடு இணங்கேல் (93) என்னும் இரு கட்டளைகளைப் பிறப்பித்த ஒளவையார்,  இதற்கு மாற்றாக, இணக்கம் அறிந்து இணங்கு (19) என்று ஒரே கட்டளையை நிறுத்துகிறார்.

    4. ஒழி  X  ஒழியேல்

    கெடுப்பது ஒழி (38), கோதாட்டு ஒழி (42) என ஒழிக்கத்தக்கனவான இரண்டினைச் சுட்டும் ஒளவையார், ஓதுதலை ஒழிக்கக்கூடாது என்கிறார்; ஓதுவது ஒழியேல் (11) என்பது அவர்தம் கட்டளை.

    5. உரை  X  உரையேல்

    சொல்லுதல், உரைத்தல், பேசுதல், பகர்தல், கூறல், விளம்பல் ஆகியன, உரைத்தல் எனும் பொருள்தரு சொற்களாகும். நயம்பட உரைக்கச் சொல்லும் ஒளவையார், நொய்ய உரைக்காதே என்றும் கூறுகிறார்.

    “நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
    பயனில சொல்லாமை நன்று” (பயனில சொல்லாமை – 197)
    என்பது குறள்நெறி. அதுவே,
    “பயனில சொல் பாராட்டு வானை மகன்எனல்
    மக்கட் பதடி எனல்.” (பயனில சொல்லாமை- 196)

    என்றும் சொல்கிறது. நயனில, பயனில சொல்லாமை சிறந்த பண்பு என்பது இதன்வழி பெறப்படுகின்றது. இவ்விரு குறட்பாக்களின் அடிப்படையில், ஞயம்பட உரை (17), நொய்ய உரையேல் (75) என்னும் இரு கட்டளைகளையும் பிறப்பிக்கின்றார். மொழிவது அற மொழி (97) என்ற அவரே, அதற்குத் துணைசெய்யும்,  மேன்மக்கள் சொல் கேள் (95) என்று கட்டளையிடுகிறார். கூடவே, தையல் சொல் கேளேல் 63) என்றும் சொல்கிறார்.

    சொல்லக்கூடாதவை என்று அவர் சொல்வன ஐந்தாகும். அவை, கண்டொன்று சொல்லேல் (14), சுளிக்கச் சொல்லேல் (48), மிகைபடச் சொல்லேல் (90), பிழைபடச் சொல்லேல் (79), ஓரம் சொல்லேல் (109). இந்த வரிசையில், பகரேல், கூறேல், விளம்பேல், எனக் கொண்டு முடியும் கட்டளைகள் மூன்றாக அமைகின்றன. அவை, பழிப்பன பகரேல் (77), வாது முற்கூறேல் (100), உடையது விளம்பேல் (5) ஆகியனவாகும். கூடவே, பேசேல் எனக்குறிக்கும் ஒளவியம் பேசேல் (12), சித்திரம் பேசேல் (46), வல்லமை பேசேல் (99), வெட்டெனப் பேசேல் (105) நான்கு கட்டளைகளும் பிறக்கின்றன.

    6. உண்  X  உண்ணேல்

    இவ்வுலக வாழ்விற்கு இன்றியமையாதது உணவு.

    “மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே” (மணிமேகலை, பாத்திரம்  பெற்ற காதை- 95-96)

    என்று மணிமேகலை பேசும். தான் உண்டு வாழ்வதை விடவும், தம்முடன் வாழ்வோரையும் உண்பித்து வாழ்வது உயர்வு. ஆதலால், ஐயம் இட்டு உண் (9) என்று கட்டளையிடுகிறார். அதற்குத் தேவையான உணவு உற்பத்தியாதல் தேவை. அதற்ககாகப் பூமி திருத்தி, உழவுத் தொழில் புரிந்து உண்க என்ற நிலையில், பூமி திருத்தி உண் (82) என்கிறார். இது நெறி. இந்தப் பண்பு, பற்றாக மாறி, தனக்கான பூமியை விரிவுபடுத்த விழைந்து, நெறிபிறழ்ந்த வெறியாவதால்தான் போர் முதலான புன்மை நேருகிறது. எனவே, மண் பறித்து உண்ணேல் (23) என்றும் மறுதலையாகக் கட்டளைபிறப்பித்து மக்களைக் காக்கிறார்.

    7. ஆடு X ஆடேல்

    வாரம் ஒருமுறை, சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்லும் ஒளவையார், சனி நீராடு (16)என்று கட்டளையிடுகிறார். சனி – என்பதற்குக் குளிர்ந்த நீர் என்று பொருள் கொண்டு, குளிர்ந்த நீரில் குளிக்கச் சொல்லியதாகவும் பொருள் உரைப்பர். அதற்கு மறுதலையாக, நீர் விளையாடேல் (6) அனந்தல் ஆடேல் (31) என்றும் சொல்கிறார். நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பெரும்பூதங்களுள், தீயுடனும் நீருடனும் விளையாடுதல் தவிர்க்க வேண்டும் என்பர். ’தீ விளையாட்டு விளையாடாதே’ என்பது இன்றளவும் சிற்றூர்களில் சொல்லப்பெறும் அறிவுரை. அதேபோல், ‘ஆழம் தெரியாமல் காலை விடாதே’ என்பதும் நீர்நிலையை முன்வைத்துச் சொல்லப்பெறும் அறநெறி. அனந்தல் என்பது தூக்கம். நீரில் மூழ்குதல் போல, தூங்குதலைத் தூக்கத்தில் மூழ்குதல், துயிலில் ஆழ்தல் என்றும் சொல்வது உண்டு. தூக்கத்தில் இலயித்தல் கூடாது என்பதால், ’அனந்தல் ஆடேல்’ என்று கட்டளை பிறப்பிக்கிறார். திருக்குறள் காட்டும்,‘கெடுநீரார் காமக்கலன்கள்’ நான்கனுள்  துயிலும் ஒன்று.

    8. நில்  X  நில்லேல்

    கடறக் கற்று கற்றவழியில் நிற்கச் சொல்வது திருக்குறள். நில் என்பதன் நீட்சி நிலைபேறு. அதற்கான நிலையில், சக்கர நெறி நில் (44), பீடு பெற நில் (80), வீடு பெற நில் (102) எனும் மூன்று கட்டளைகளைப் பிறப்பிக்கிறார். இதில் சக்கர நெறி என்பது அரசாணைவழி நிற்றல். பீடு என்பது பெருமைக்குரியது. சிலம்பில்,  பிரிந்த கணவனைச் சேர்வதற்கு, சோமகுண்டம் சூரிய குண்டம் ஆகிய நீர்நிலைகளில் மூழ்கிக் காமனைத் துதிக்கச் சொன்ன, தோழி தேவந்தியின் கூற்றை மறுத்துக் கண்ணகி, ‘பீடன்று’ (சிலப்பதிகாரம், கனாத்திறம் உரைத்த காதை- 64) என்று மொழிந்ததை இங்கு நினைவுகூரலாம். அரசநெறிநின்று, வாழ்வியல் அறம்பேணிப் பீடுற நின்றால் வீடுபேறு அடையலாம் என்பது தெளிவு. இதற்கு மறுதலையாக, முனைமுகத்து நில்லேல் (92) என்றும் சொல்கிறார். அழிவுத்தொழிலான போர்த்தொழிலுக்குரிய போர்முனையில் முன் நில்லாதே என்பது அவர்தம் போரமைதிக்குரிய வழிகாட்டு நெறியாகும். அது கருதியே, போர்த்தொழில் புரியேல் (87) என்றும் கட்டளையிடுகிறார். எடுத்ததற்கெல்லாம் போரும் பூசலும் கொண்டிருந்த அக்காலத் தமிழகத்தில், ஒளவையாரின் இவ் வமைதிக் கட்டளை, எத்துணை புரட்சிகரமானது என்பது நினைந்து போற்றத்தக்கது.

    9. சேர் – அகல் – பிரியேல் – இரு

    உறவுநிலையில் சுற்றமும் நட்பும் இணக்கத்திற்குரியன. சேர்தலும், சேர்ந்து இருத்தலும், பிரியாது இருத்தலும் போலவே, சேரக்கூடாத இடத்து அகல்வதும் இன்றியமையாதன என்பதை ஏழு கட்டளைகளில் ஒளவையார் எடுத்துரைக்கின்றார்.

    இணக்கம் அறிந்து இணங்கு (19) என்று ஏற்கெனவே கட்டளையிட்ட அவர், சேர வேண்டிய இடம் குறித்தும் இரு கட்டளைகள் பிறப்பித்துள்ளார். அதில் ஒன்று நட்பு. அதற்கான கட்டளை, சேரிடம் அறிந்து சேர் (51) என்பதாகும். பெரியாரைத் துணைக் கொள் (83) என்பதும் அதனோடு பொருந்தும் அறமாகும். அதேபோல் இருத்தலும் உயர்வுக்குரியது. அதற்கான கட்டளை சான்றோர் இனத்து இரு (45). சேர்தலில் மற்றொன்று, உறவு. பிறப்பால் எய்துகிற சுற்றத்தாரைவிடச் சேர்ந்து வாழக்கூடிய அகவாழ்வுக்குத் துணையாகும் பெண்மையைச் சேர்தல் என்ற நிலையில், மெல்லி னல்லாள் தோள்சேர் (94) என்ற கட்டளையைப் பிறப்பிக்கின்றார். சேர்தலுக்குரிய இவ்விரு கட்டளைகளுக்கும் துணைமையாக இருத்தல் என்ற நிலையில், உத்தமனாய் இரு (103) என்ற கட்டளை அமைகிறது. இவற்றுக்கு மறுதலையாகக் காமவயப்பட்ட நிலையில், பொருட்பெண்டிருடனான தொடர்பை விட்டுவிலகியிருக்கச் சொல்லி அவர் இடும் கட்டளை, மைவிழியார் மனை அகல் (96) என அமைகின்றது. சேர்வது எவ்வளவு சிறப்பிற்குரியதோ, அதேபோலச் சேர்ந்தாரைப் பிரியாமல் இருப்பதும். அந்நிலையில், கூடிப் பிரியேல் (37) என்றும் நிலையில் பிரியேல் (68) என்றும் அவர் கூறிய கட்டளைகள் ஏற்புடையனவாகும்.

    ஆத்திசூடியின் அற்புத மந்திரம்

    அஃகம் சுருக்கேல் (13), அரவம் ஆட்டேல் (25), ஈவது விலக்கேல் (4), தோற்பன தொடரேல் (65), நுண்மை நுகரேல் (70), நைவினை நணுகேல் (74), ஒன்னாரைத் தேறேல் (108) என்றெல்லாம் எதிர்நிலையில் இருந்து இன்றியமையாத அறங்களை எடுத்துரைத்த ஒளவையார், ஆறுவது சினம் (2), மோகத்தை முனி (98), ஏற்பது இகழ்ச்சி (8) காப்பது விரதம் (33) என்பனவாகிய மந்திரத் தொடர்களையும் அமைத்துக் காட்டுகிறார்.

    இவற்றுள் எல்லாம் மணிமுடியாகத் திகழும் வாசகம், ஙப் போல் வளை (15) என்பதாகும். மொழி முதலில் வருதற்கு வாய்ப்பே இல்லாததோடு, இதன் வருக்க எழுத்துக்களான எதுவும் எழுத்துவழக்கிலோ, பேச்சு வழக்கிலோ பயன்படாது இருந்தாலும், அவற்றை, ங எனும் எழுத்து இழுத்து வளைத்துஅழியாது காத்துப் பேணுகிறது. அதுபோல், தன்னைப் பேணுதலோடு, தன் வருக்கத்தையும் தாங்கிப் பேணுதல் மனிதர்களின் கடப்பாடு அல்லவா? தன்னை இவ்வுலகிற்குத் தந்த தாயையும் தந்தையையும் பேணுதல் ( தந்தை தாய்ப் பேண்-20)  தவறாது புரியவேண்டிய அறமல்லவா? தன்னுயிர் போலே மன்னுயிர் யாவையும் தாங்கிக் காத்தல் ஙப்போல் வளைக்கும் நல்லறம் என்பதால், அதுவே, இவ்விலக்கியத்தின் அற்புத மந்திரம் ஆகிறது.

    அதனால்தான், இந்த ஆத்திசூடிக்குப் பின்னர் புதிய ஆத்திசூடி பாடிய மகாகவி பாரதி, இந்த (ங) எழுத்தைத் தன் கட்டளைகளில் இடம்பெறாத வண்ணம் விட்டுக் கொடுத்து மரியாதை செலுத்தினார் போலும்.

    நிறைவாக…

    சிறார் இலக்கியத்துள் இன்னும் அழியாத நிலைபெற்றுள்ளவை ஒளவையாரின் ஆத்திசூடியும், கொன்றைவேந்தனும் ஆகும். எழுத்தை எழுத்தாகவே பயிலாமல், எண்ணத்துடன் இணைத்து, வாழ்வியல் தளத்தில் பின்னர் இருந்து பயன்தரத்தக்க நன்னெறிகளை உள்ளடக்கியவை இவை. நினைவில் நிறுத்திக் கொள்ள ஏதுவாய், ஒற்றைத் தொடரில் மந்திரம் போல் அமைந்த கட்டளைகளின் தொகுதி. எழுத்து வருக்க வரிசையிலும், பொருண்மைப் பொருத்த அமைப்பிலும் வைத்துப் பொருள் கொள்ளத் தக்க வாழ்வியல் சீலங்களின் வகைப்பாடாக இது திகழ்கிறது.

    ஆத்திசூடியின் அனைத்துக் கட்டளைகளும், தனித்தொடர்களாக மனனம் செய்யவும் சொல்லிப்பழகவும் பயன்படுவனபோல் அமைந்தாலும் வாழ்க்கைப் போக்கில், பேச்சுவழக்கில், சொல்வதாகவோ, கேட்பதாகவோ புழக்கத்திற்கு வருகிறபோது, அவை அறம் உணர்த்தும் நுண்பொருள்களாக மனதில் இருந்து புலப்படும் என்பதால், இளமையில் கற்பிக்க ஏதுவாக ஒளவையாரால் பாடப்பெற்றன என்பதே உண்மை.

    எழுதப்பட்ட காலத்தேவைக்கேற்ப, இவற்றின் பாடுபொருள் அமைகிறது என்பதால் இவற்றுள் சில கட்டளைகள் இலகுவாகத் தோன்றலாம். ஆனால், அடுத்த தலைமுறைக்கு வேண்டிய அறங்களைப் போதிக்கப் புதிய ஆத்திசூடி பிறக்கவும், பிற ஆத்திசூடி வகைகள் பெருகவும் இதுவே தாய் ஆத்திசூடியாக இருந்து உரமளித்திருக்கிறது என்பதே வரலாற்றுப் பெருமை.

    துணைநின்றவை

    1. இளவரசு.சோம, (ப-ஆர்), நன்னூல் விருத்தியுரை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 1990,
    2. ஒளவையார் அருளிச் செய்த ஆத்திசூடி- மூலமும் உரையும், சென்னை- மதராஸ் ரிப்பன் எந்திரச்சாலை, சென்னை, 1913.
    3. சிற்பி பாலசுப்பிரமணியம், முனைவர் சொ.சேதுபதி, தமிழ் இலக்கிய வரலாறு, கவிதா பப்ளிகேஷன், சென்னை, 2010.
    4. சுப்பிரமணியன்.ச.வே., தொல்காப்பியத் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1008.
    5. செல்லப்பன்.சு.சிலம்பொலி, சிலப்பதிகாரம் தெளிவுரை, பாரதி பதிப்பகம், சென்னை. 2000.
    6. சொக்கலிங்கம்.பேராசிரியர் சு.ந., தாயுமானவர் பாடல் தொகுப்பு, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2009.
    7. தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரைவளம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, 2014.
    8. நவபாரதி, (தொ-ஆர்) மகாகவி பாரதியார் கவிதைகள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, 2014.
    9. பாலசுப்பிரமணியன். கு.வெ.,  தொல்காப்பியம் மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2019.
    10. வேங்கடசாமி நாட்டார். ந.மு. (உ.ஆர்),  கொன்றைவேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2007
    11. வேங்கடசாமி நாட்டார். ந.மு, சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம், சென்னை, 2005.

    Share