Photo-poetry-contest-256

-மேகலா இராமமூர்த்தி

கம்பிகளில் தொங்கிக்கொண்டிருக்கும் பூட்டைத் தம் படக்கருவிக்குள்  பத்திரப்படுத்திவந்து படக்கவிதைப் போட்டி 256க்கு வழங்கியிருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள படமிது. திருமிகு. ராமலக்ஷ்மிக்கு என் நன்றி!

”கொரோனா வைரசுக்குப் பயந்து பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது; சிறுத்தையே வெளியில் வா!” என்று நாம் ஒருவரையொருவர் பார்த்து மகிழ்ந்து பாடும்நாள் எந்நாளோ தெரியவில்லை.

சிந்தனையைத் தூண்டும் இந்தப் படத்திற்கு கவிவடித்துத் தர நம் கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். அவர்களை வரவேற்போம்!

*****

”பணிபோனதால் பூட்டும் போனது; வாட்டும் நோயது தொற்றிடாமல் வீட்டிலிருப்போம் பாதுகாப்பாய்!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

வீட்டிலிருப்போம்…

பூட்டும் போனதே பணியின்றி
புதிதாய் வந்தநோய்ப் பகையாலே,
வீட்டைப் பூட்டத் தேவையில்லை
வெளியே செல்ல வேண்டாமே,
வாட்டும் நோயது தொற்றிடாமல்
வருந்திடா திருப்போம் வீட்டினுள்ளே,
ஓட்டி யதனை விரட்டும்வரை
ஒன்றா யிருப்போம் ஒட்டாமலே…!

*****

பூட்டின் உபயோகத்தை, மனிதர்கள் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் இந்த இக்கட்டான காலத்திலும் பூட்டு சுதந்தரமாக வெளியுலகைப் பார்க்கும் வேடிக்கையை, திருடனிடம் செல்லுபடியாகாத பூட்டின் சாமர்த்தியத்தை எனப் பூட்டு குறித்த தம் சிந்தனைகளை மூன்று கவிதைகளில், வெவ்வேறு கோணங்களில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. காந்திமதிநாதன்.

கவிதை 1

ஒருநாள் தேவைப்படுவாய் என்றுதான் பூட்டே உன்னை வேலியினில் பத்திரமாக்கி இருக்கிறேன்…

வேண்டாத பொருளென எதுவும் இல்லாத உலகில்
வேண்டும் பொருளாகிய உன்னைப் பார்வை படும்படி பத்திரப்படுத்தி இருக்கிறேன்!

அறிவைத் திறப்பது நூல் என்றால் உன்னைத் திறப்பது சாவி!

அன்பைத் திறப்பது மனிதநேயம் என்றால் உன்னைத் திறப்பதும் சாவி!

மவுனம் கடைப்பிடிக்க வாய்க்கு வார்த்தை பூட்டு என்றால் தேவைப்படும் நேரத்தில் பூட்டே நீ பூட்ட தேவைப்படுவதால் இப்போது கண்முன்னே பூட்டப்பட்டு இருக்கிறாய்!

தனிமைச்சிறையில் நீ மட்டுமில்லை என் பூட்டே

உலக மாந்தர்கள் பலர் ஊரடங்கு தனிமைச் சிறையில்!

நீயாவது வெளி உலகைக் காண்கிறாய்

உன்னை தொங்கவிட்டு வீட்டிற்குள் யானோ ஒரு மண்டலம் நோக்கி!

*****

கவிதை 2

உபயோகமில்லை என நினைக்காதே! உபயோகப்படுவாய் என நினைத்தே பாதுகாப்பான இடத்தில்! பாதுகாக்க இடமா இல்லையெனக் கேட்கலாம்.. பத்திரமாக உன்னை வைத்து இருப்பதே யான் கொரானாவில் இருந்து தப்பிக்கவே…காலை மதியம் இரவு மூன்று வேளையும் உணவு உண்ண வருவார்கள் வீடற்றோர்..வீடிருந்தும் கையில் காசற்றோர்..வெளி மாநில என் இந்திய சொந்தங்கள்…காலை ஆறு மணிக்கு உன்னைத் திறந்து இரவு பத்து மணி வரையில்தான் பாதுகாப்பாக இங்கே தொடங்குகிறாய்!

எந்தக் கைரேகையும் உன்மீது பட்டு நான் தொட்டுவிட்டால் எனது தொண்டு தடைப்படுமே என்பதாலே
எவர் கண்ணிலும் படாமல் என் கண்களுக்கு படும்படி!

*****

கவிதை 3

சாவி இல்லையேல் பூட்டே நீயில்லை..யாரிடம் சாவி இருக்கிறதோ அவருக்கே நீ சொந்தம்..திருடனிடம் செல்லாது உனது வைராக்கியம்.. குறுக்கு வழியில் செல்வதற்குத்தான் நீயும் வழி விடுகிறாய்..பலப்பல பூட்டுகள் உடைக்கப்பட்டு தான் கொலை கொள்ளைகள்…உடைபட வேண்டாமே என்பதற்காகப் பாதுகாப்புத் தேடிக் கொண்டாயோ?

*****

பசுமைச் செடிக்குக் காவலாய்ப் பூட்டுப் போட்டது சரியே என்று தம்முடைய முதல் கவிதையில் உரைக்கும் திருமிகு. சுதா மாதவன், பூட்டினைப் போட்டுப் பசுமையைக் காக்கும் காலத்தின் கோலத்திற்கு வருந்திப் பசுமையை எங்கும் கொணர்ந்து பாரதத்தைச் செழிக்கச் செய்வோம் எனச் சூளுரைக்கின்றார் இரண்டாவது கவிதையில்.

கவிதை 1

பசுமைச் செடிக்குக் காவல்போடப் பூட்டு
சரியே
இல்லையெனில்
வரைபடம் வரைந்து வானுயரடுக்கு மாடி ஆகிடுமோ?
விலைக்கு வாங்கக் கூட்டம் ஏராளமிருக்க
பசுமைச் செடிக்குப் பூட்டு
சரியே!

*****

கவிதை 2

பசுமைச் செடிகளைப் பார்க்கும்போது
பரவசம் மனதில் தோன்றுதே!
செழுமையின் பிரதிபலிப்பேயெனச்
சிந்தனை கொள்ளத் தோன்றுதே

பூட்டினைப் போட்டுப் பசுமையைக் காக்க
இன்றைய காலம் உருவானதே
வளமிகு ஆற்றின் மணலை அள்ளி
பணம் தினம் பார்க்கத் தோணுதே!

பாய்ந்தோடும் நதிக்கரையினிலே
பலமிகு வீடுகள் உருவானதே
ஏரினை உழுதுச் சோற்றினைப் புடைக்கும்
விவசாயி கண்ணில் ஏக்கம்தான் தெரியுதே!

இவைகளைத் தவிர்த்து எங்கும் பசுமையைக் கொணர்ந்து
வளமிகு வாழ்வை உருவாக்குவோம்!
நோயினாலான சிவப்பு மண்டலம்
பசுமையாய் மாற்றிப்
பாரதம் செழிக்க உதவுவோம்!
நாம் இந்தியரென்றே உணர்த்துவோம்!

*****

கொரோனாவை எதிர்த்துக் கத்தியின்றி ரத்தமின்றி நடக்கும் இந்த உலக யுத்தத்தில் மானுட வாழ்க்கையே வீட்டுக்குள் முடங்கிப்போனது! வேலியில் இட்ட பூட்டு நம் வழி அடைத்ததை விளக்க எவருமில்லை. எனினும், இந்தப் பூட்டைத் திறக்க நாளை புதிய சாவி கிட்டும்! பூமிப்பந்து மீண்டும் புதிதாய்ச் சுற்றும் என்று நம்பிக்கை விதைக்கின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று நடக்குது
இருட்டுக்குள் எதிரியைத்தேடி
என்னென்னவோ நடக்குது

வெறிச்சோடிய வீதிகளில்
விலங்குகள்தான் அலையுது
வீட்டிற்குள் முடங்கிக் கிடந்து
விரக்தியிலே மனம் தவிக்குது

மூக்குமூடி வாய்பொத்தியே
திருமணங்கள் நடக்குது
எடுத்துச் செல்ல ஆட்களின்றி
இறுதி யாத்திரைகள் நகருது

பாதிக்கப்பட்டோர்
பலியானோர்
மீண்டோர்
பட்டியலைப் பார்த்துப் பார்த்து
பார்வை கூட மங்குது

மூன்று திங்களாய்க்
கொரானா என்னும்
ஒற்றைச் சொல்லில்தான்
உலகம் முழுமையும் சுழலுது

எங்கிருந்தோ எதிலோ வந்து
எங்கிருப்போர் உயிரையெல்லாம்
ஏலம் விட்டுச் சிரிக்குது
உலகாண்ட தேசமெல்லாம்
செயல் மறந்து நிற்கிறது

வேலியில் இட்ட பூட்டு அது
வழி அடைத்தது எவ்வாறு
விபரம் சொல்ல எவருமில்லை
நாளை இந்த நிலை் மாறுமென
நம்பிக்கைத் தரவும் யாருமில்லை

ஆனாலும்
பூட்டைத் திறக்க
புதிய சாவியொன்று
நிச்சயமாய்க் கிடைக்கும்
பூமிப்பந்து அன்று
புதிதாய்ச் சுற்றும்!

*****

பழமைப் பூட்டுக்கு இடப்பட்ட புது வேலியிது என்று மொழியும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன், அமைதியை அகிம்சையை அடிமைத்தனமென்று ஒதுக்கி வன்மத்தை, வன்முறையை வீரமென்று உரைக்கும் நம் புன்மையைச் சாடுகின்றார் தம் கவிதையில்.

புது வேலி

புதுமைகள் புகும் நல்வேளையிலே
கலாசாரக் காவலன் நாமென்று கூவிப்
பழமை என்னும் பூட்டுக்குப்
புது வேலி செய்து காவலிட்டோம்..

கண்ணியமான அன்பதனைக்
கடிவாளம் போட்டு ஒதுக்கி வைத்தோம்
காமக்களிக் கூத்தினையே – உண்மைக்
காதல் என்றே காட்சி செய்தோம்..

அமைதி சாந்தி அகிம்சையெலாம்
அடிமைத்தனம் என்றொதுக்கி
வன்மமும் வன்முறையும் வீரமென்று
வருந்தலைமுறைக்குப் பாடம் சொன்னோம்..

உண்மை நேர்மை என்பதெல்லாம்
வெற்றிக்குதவா வீண்செயலாக்கி
பொய்யும் புரட்டும் திறமையென – புதுத்
தத்துவம் சொல்லி வாழுகின்றோம்…

*****

பூட்டுக்குள்ளே நல்ல கருத்துக்களென்னும் அதிர்வேட்டுக்களை வைத்து வெடிக்கச் செய்திருக்கும் கவிவலவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

பூட்டு

எங்கெங்கோ தேடுகிறேன்
இங்கேயா நீயிருந்தாய் ?
வேலியின் மீதுன்னை
வேண்டாமெனத் தொங்கவிட்டோம்

வண்ணக் கதவுகளை உன்னை
வைத்துப் பூட்டிடலாம் – எங்கள்
எண்ணக் கதவுகளை – எதைவைத்துப்
பூட்டுவது ?

என்னுள்ளே எண்ணங்கள் வந்து
ஏதேதோ பந்தலிடும் – ஒன்றிரண்டு
உன்னிடத்தில் நான் இங்கு
உரைத்திட வந்துள்ளேன்!

எப்படிக் கேட்பதன்று பூட்டே உனக்கு
ஏன் இத் தயக்கம் ? உனக்குத்தான்
இரு செவிக்கு பதில் ஓர் துளை
இருக்கிறதே! கேள்.

இயற்கையை மறந்து விட்டு
இயந்திரமாகிவிட்டோம்…
விழிகளை விற்று விட்டு
வீண் ஓவியங்கள் வாங்கிவிட்டோம்

உல்லாச வாழ்வதனில்
உயர் மூத்தோர் சொல் மறந்தோம்
கொரோனாவின் கரங்களால்
கோரமாகிப் போய் விட்டோம்.

ஊரடங்கு வந்து எங்கள் காதுகளில்
உரைத்தது, அது எங்களுக்கும் உறைத்தது
விண்ணகத்து மூத்தோர் உரை
விரைவாகப் புரிந்து கொண்டோம்

சுத்தமும், விலகலுமே
சுகமென்று அறிந்து கொண்டோம்
திறவுகோலைக் கண்டுகொண்டு
திறந்து விட்டோம் மனப் பூட்டை

சீர்க் காவலரும், மருத்துவரும் ,
செவிலியரும், துப்புரவுத் தோழர்களும்
பாங்காக உழைத்தார்கள் பாரினிலே
பூட்டே எங்களுக்குப் புரிந்தது தெளிவாக.

வேட்கைகளை விட்டொழித்தோம்
விடியல் வரக் காத்திருந்தோம்
அன்பு சூழ் உலகு என்று
அனைவருமே அறிந்து கொண்டோம்.

”பூட்டே கேள்!” என்று விளித்து, உல்லாச வாழ்வதனில் உயர் மூத்தோர் சொல் மறந்தோம்! ஊரடங்கு எங்கள் காதில்வந்து உரைத்ததும்தான் மூத்தோர் மொழியின் அருமை எங்களுக்கு உறைத்தது! மனப்பூட்டைத் திறந்துவிட்டோம்! அன்புசூழ் உலகே அழகானது என்று உணர்ந்துவிட்டோம்!” என்று இன்றைய வாழ்க்கைச் சூழலை எதார்த்தமாகத் தம் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கும் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.