Blog

  • பழகத் தெரிய வேணும் – 14

    பழகத் தெரிய வேணும் – 14

    நிர்மலா ராகவன்

     (பெண்ணுக்கு மரியாதை) 

    “பல ஆண்கள் பெண்களை மட்டமாக நடத்துகிறார்கள் என்று நீங்கள் எழுதுவதைப் பார்த்து எனக்கு ஆத்திரமாக இருக்கும். நீங்க எழுதறது உண்மைதான்னு இப்போ புரியுது. என் மகளை அவளுடைய கணவர் அப்படித்தான் நடத்துகிறார். வருத்தமா இருக்கு!” என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தார் ஒரு பத்திரிகை ஆசிரியர்.

    ‘ஆண்தான் மேலானவன்’ என்பதுபோல், அவரே தன் மனைவியை அப்படி நடத்தியிருக்கக்கூடும். ஆனால், ‘மகள்’ என்று வரும்போது, ஆண்களின் பக்கம் சாயத் தோன்றவில்லை. மருமகன் மீதுதான் கோபம் எழுந்தது.

    தன்னை அவமரியாதையாக நடத்தும் கணவனை மகள் ஏன் எதிர்ப்பதில்லை என்ற குழப்பம் அவருக்கு. தாயைப் பார்த்தே வளர்ந்திருந்தால் மகள் வேறு எப்படி இருப்பாள்?

    மகனும் தந்தையைப்போலவே தன் மனைவியிடம் அலட்சியம் காட்டுவான். அந்த நடத்தை அவருக்குத் தப்பாகத் தோன்றாது.

    ஒரு முதியவர் கடிதம்வழி, மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்தார், ‘என் மனைவி என் மனம் கோணாது நடப்பவள். மிகவும் பொறுமைசாலி,’ என்று.

    பதிலுக்கு, ‘உங்கள் மனைவியின் மனதில் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறதா?’ என்று கேட்டிருந்தேன்.

    கணவனின் மகிழ்ச்சிக்காக பலவற்றை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று பழமையிலேயே ஊறிப்போன பெண்கள் எண்ணுகிறார்கள்.

    கதை

    அடிக்கடி, ‘நான் அம்மன் பக்தன்’ என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வார் சீலன். எல்லா பக்திப்பாடல்களும் அவருக்கு மனப்பாடம்.

    ஆனால், அவர் மனைவி விமலாவை நடத்துவதைப் பார்த்தால், அவளுக்கு எதுவுமே தெரியாது, அடிமுட்டாள் என்பதுபோல் இருக்கும்.

    சீலனுடைய மனதில் ஒரு வக்கிரம். மனைவியைப்போல் இல்லாத பெண்களைக் கண்டால் அலாதி மோகம். அவர்கள் நட்பைப் பெற பல முயற்சிகள் எடுப்பார்.

    “அறிவாளிகளான பெண்களுடன் நட்பு வைத்துக்கொள்ள எனக்குப் பிடிக்கிறது. சும்மா பேச மட்டும்தான்னு சொல்வார்,” என்று அப்பாவித்தனமாக விமலா கூறும்போது, கேட்பவர்களுக்கு அவள்மேல் பரிதாபம்தான் எழும்.

    சீலனுக்குப் புரியாதது: அவர் எதிர்பார்த்தபடி, நடத்தியபடிதான் மனைவி ஆகியிருக்கிறாள். அவளை அவர் தோழமையுடன் நடத்தி, அவளுக்குத் தெரியாததைப் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்திருந்தால் அவளுக்கு அவர்மேல் அன்பு ஏற்பட்டிருக்கும். அவர் எப்படி நடத்தினாலும், ‘தலைவிதி’ என்று விரக்தியுடன் அதைப் பொறுத்துப் போயிருக்கமாட்டாள்.

    புதிய விஷயங்களைக் கற்பதில் அவள் ஆர்வம் காட்டாவிட்டாலும், வேறு எதிலாவது சிறந்திருக்கமாட்டாளா! அதைப் பாராட்டியிருக்கலாமே!

    ஏன் இந்த அதிகாரம்?

    மனைவி ஒரு போகப்பொருள் மட்டும்தான் என்று நம்புகிறவன் அவளிடம் அதிகாரம் செலுத்துகிறான். அதனாலேயே அவளுடைய நட்பை இழக்கிறான். அதை வெளியே, நண்பர்களிடமோ, பிற பெண்களிடமோ தேடுகிறான்.

    பெண்ணுக்கான கட்டுப்பாடுகள்

    அவள் உணர்ச்சிப்பெருக்கில்லாது, ஆணைப்போல் யோசிக்கவேண்டும்.

    ஓயாது உழைக்கவேண்டும். ஆனால், இளமையும் மாறாது இருக்கவேண்டும்.

    மொத்தத்தில், கணவன் பிற ஆண்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்ள ஏற்ற வகையில் இருக்கவேண்டும்.

    நடக்கிற காரியமா?

    ஒரு பெண்ணை அவளது கணவன் ஏதோ செல்லப்பிராணி என்பதுபோல் நடத்தி, அதற்கு அவள் பணிந்தும் போனால், அது அவனுக்குக் காட்டும் மரியாதையாலோ, அன்பினாலோ இல்லை. அவள் வளர்க்கப்பட்ட விதத்தில் எங்கோ கோளாறு நேர்ந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

    கதை

    சீதாபதி மெத்தப் படித்தவன். பத்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளின் தந்தை. பெண்பித்தன்.

    திருமணமாகாத இளம்பெண்களைப் பார்த்தால், உரிமையுடன் அவர்கள் தோளில் கைபோட்டு, “என் மனைவி இங்கிதம் தெரிந்தவள்,” என்று ஆரம்பிப்பான்.

    அவனில்லாதபோது, அவளும், ‘ஆம்படையானுடைய சந்தோஷத்தைவிட நமக்கு வேற என்னடி வேணும்?” என்பாள்.

    ‘எனக்கு நிறையப் பெண்கள் கிடைப்பார்கள்!’ என்று பெருமை பேசுகிறவன் தனக்கு ஆண்மை அதிகம் என்று எண்ணுகிறான். உண்மையில், அவனிடம் ஏதோ குறை இருப்பதால்தான் பெண்களை மயக்க முயற்சிக்கிறான். கலாசாரமும் துணை புரிகிறது.

    அண்மையில் படித்தது

    மெடகாஸ்கர் (MADAGASCAR) ஆப்பிரிகாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு. மிக ஏழ்மையான நாடு.

    ஆண்கள் பெண்களை வதை செய்வது சர்வசாதாரணம். தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஏற்றே பழக்கப்பட்டதால், கணவன் அடித்து, உதைக்காவிட்டால் அவனுக்குத் தன்மீதுள்ள அன்பு குறைந்துவிட்டது என்று அத்தீவிலுள்ள பெண்கள் நினைக்கிறார்கள்!

    பெண்களை எவ்விதமாவது வதை செய்வது சட்ட விரோதம் என்று இப்போது விதிக்கப்பட்டிருந்தாலும், அந்நாட்டில் எந்தப் பெண்ணும் வலிய வந்து புகார் கொடுப்பதில்லை. ஒரு பெண்ணுக்கு லஞ்சம் கொடுத்துத்தான் அவளைப் புகார் அளிக்கச் செய்ய முடியுமாம்!

    ஏழ்மை, அதனால் எழும் வருத்தம் அல்லது அசௌகரியம், கலாசாரம் எல்லாம் ஆண்கள் தான்தோன்றித்தனமாக நடக்க வைக்கிறது. பெண்களையும் இவ்வாறு அடிமை வாழ்க்கையை ஏற்கச் செய்திருக்கிறது.

    கதை

    நாற்பது வயதுவரை, ‘எனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆகுமா!’ என்று ஏங்கிய மலேசியப் பெண் கலாவதி.

    ஒருவழியாக, திருமணம் ஆனதும், ஒவ்வொரு இரவிலும் கணவன் தன்னை நாடுவது அவளுக்குப் பெருமையைக் கொடுத்தது. அதற்குப்பின், அவளைக் கட்டிலிலிருந்து கீழே தள்ளி, அடித்து உதைப்பான். அதனால் என்ன மோசம்!

    வதை அதிகரித்து, சமூகநல அதிகாரிகளின் கவனத்திற்கு கலாவதி கொண்டுவரப்பட்டாள்.

    பரிதாபத்துக்குரிய இப்பெண்ணுக்குப் புத்தி சொல்வதாக எண்ணி, “ஐயோ! இந்தமாதிரி மனிதனுடன் ஏன் சேர்ந்து இருக்கிறாய்?” என்று நான் அலறினேன்.

    “அவருக்கு இல்லாத உரிமையா!”என்று கேட்டவளின் குரலில் கோபம்.

    ஏன் இந்த அவல நிலை?

    பல இந்தியக் குடும்பங்களில், ‘என்ன இருந்தாலும், நீ ஒரு பெண்!’ என்று சொல்லியே பெண்குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவர்களுக்குள் ஏதோ ஏமாற்றம், வெறுமை. அந்தக் குழப்பம் எதனால் என்று புரிவதுமில்லை.

    ‘ஆண்’ என்றால் உயர்ந்த மனிதன் என்ற எண்ணம் பதிந்துவிடுவதால் அவனை அண்டி வாழ்ந்தால்தான் தனக்கு மதிப்பு என்று தோன்றிவிடுகிறது.

    தம்மைப்போல் இல்லாத பிற பெண்களைக் கண்டால் அவர்களுக்கு கோபம். பொறாமையும் எழலாம். ஆனால் மாறவும் பயம். அப்போது யார் பக்கபலமாக இருப்பார்கள்?

    (தொடரும்)

    Share
  • வளர்ப்பு (சிறுகதை)

    வளர்ப்பு (சிறுகதை)

    முனைவர். நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    “கேம்பஸ் இன்டர்வியூல கிடைச்ச வேலைக்கு ஏண்டா போக மாட்டேங்கற?” என விருப்பமில்லாத வேலைக்கு பெங்களூர் அனுப்பி இன்னயோட  நாலு வருஷம் ஓடிப்போச்சு என பெருமூச்சு விட்டாள் நகுலின் அம்மா கோகிலா.

    “எப்ப பாத்தாலும் மகன் நெனப்புதா, நா இங்க ஒருத்தி இருக்கேனே என்னப் பத்தி கொஞ்சாமாவது ஏதாவது யோசிக்கிறயாமா? பசிக்குதுனு சொல்லி அரமணிநேரமாச்சு” என்று ஸ்னேக்ஸ் பொட்டலத்தோடு சமையற்கட்டுக்குள்ளிருந்து வந்தாள் நகுலின் தங்கை வைஷ்ணவி.

    “ஏம்மா! இந்த தடவ லீவுக்கு உன்னோட சீமந்த புத்ரன் வரலயாமா? அண்ணன் வரலேன்னாலும் போர் தாம்மா!”

    “ஆமா வந்தா அவன் முன்ன மாதிரி வீட்டிலயா தங்கறான் அப்ப நீ சின்ன புள்ள, அவன் கூட விளையாண்ட இப்ப நீயே காலேஜ் போயி ரெண்டு வருஷம் ஆச்சு. இனி என்ன உன் கூட விளையாட்டுனு நினைச்சுட்டான் போல. அதுதா வீட்டிலேயே தங்கறதில்லை”

    “இல்லம்மா அண்ணன்கிட்ட நிறையவே சேஞ்ச் தெரியுதுமா”

    “இவ  பெரிய இவ. கண்டுபிடிச்சிட்டா. போடி போ போய் வேலையை பாரு”

    “பையன சொன்னா மட்டும் கோபம் பொத்துகிட்டு வந்துரும். எப்போ ஒத்துகிட்டிருக்கீங்க. அப்பா இங்கே இருக்கிற வரைக்கும் நான் சொல்றது கொஞ்சமாவது கேட்பார். இப்ப அவரு வேற ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வர்றாரு. எங்கே நான் சொல்றத கேக்குறாரு. பேசாம டிகிரி முடிச்சுட்டு நானும் அவர் கூடவே கனடாக்கேப் போறேன்”.

    கோகிலா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. போன் எடுத்து நகுலை ஃப்போன்ல அழைத்தாள். நாலு தடவை முழு ரிங்கு போயும் கால் எடுக்கவில்லை. அஞ்சாவது முறை போன் எடுத்தான். எடுத்ததும் கத்தினான். “ஏம்மா இப்படி டார்ச்சர் பண்றே? நானே ஃப்ரீ ஆயிட்டு கூப்பிடுறேன். ஃபோன வைம்மா”

    “என்ன இவன் இப்படி மாறிட்டா?”

    “இல்லப்பா பொங்கல் லீவுக்கு வருவியான்னு கேட்கத்தான்.”

    “வர்றம்மா போன வை.”

    பொங்கல் விடுமுறை வந்தது. நகுலை ஆவலாய்  எதிர்பார்த்திருந்தனர். அவன் வீட்டிற்கு வந்ததும் அவர்களைப் பார்க்க விரும்பாதவனாய் வண்டி எடுத்துக்கொண்டு வெளியில் போனான். இரவு வெகு நேரமாகித் தான் வீட்டுக்கு வருகிறான். ஏதோ வித்தியாசமான மாற்றத்தை உணர்ந்தாள். அவன் வெளியில் சென்றதும் அவன் அறையை சுத்தம் செய்யப் போனாள். சந்தேகத்திற்கு ஏதாவது கிடைக்குமா என்று அவனது பேகை தேடத்தொடங்கினாள். பேகில் கன்னடத்தில் வெளிவந்த செய்தித்தாள் ஒன்றில் நண்பர்களுடன் நகுலின் போட்டோவும் இருந்தது. இவளுக்கு ஒன்றும் புரியவில்லை சுருட்டி மடித்து வைத்திருந்த பேப்பரை வேகவேகமாக நிமிர்த்தி வைத்தாள். அறைக்கு வெளியில் சென்று தனது மொபைலை எடுத்து வந்து அந்த பேப்பரை போட்டோ எடுத்தாள். அதே போல் சுருட்டி மடக்கி வைத்து விட்டாள்.

    வாரம் தவறாமல் கோயிலுக்கு செல்பவள் கோகிலா. வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போகும்போது அந்த பேப்பரை கோயில் பூசாரிகிட்ட காமிச்சு இத என்னானு கேட்கலாம்னு நினைச்சு ஃபோனை கையில் எடுத்துக்கொண்டு கோயிலுக்குப் போனாள். பூசாரியோட தாய்மொழி கன்னடம். அதேபோல பல ஊர்களில் வேலை செய்திருப்பதால் அவருக்கு நிறைய மொழி தெரியும்.  கோவில் நடை சாத்தும் வரை காத்திருந்தாள்.

    பூசாரி  கோகிலாவை நோக்கி வந்தார்.

    “ஏன்மா எதோ கேக்கனும்னு சொன்னிங்க?”

    “இல்ல சாமி. எனக்கு கன்னடம் வாசிக்கத் தெரியாது. எனக்கு என்னோட ஃப்ரண்டு ஒருத்திகிட்ட இருந்து இந்த மெசேஜ் வந்துச்சு.  இதை கொஞ்சம் என்னன்னு படித்து சொன்னீங்கன்னா”

    அவர் வாங்கி கடகடன்னு வாசித்தார்.

    “ஒண்ணுமில்லம்மா எப்பவும் வர்ற நியூஸ் தான். ஒரு பொம்பள புள்ளைய நாலு பேரு சேர்த்துக் கெடுத்துட்டாங்களா……….. அந்த பொண்ணு உயிருக்கு போராடிட்டு இருக்காம். அந்த நாலு பேர்ல ஒருத்தனோட அப்பா பெரிய பணக்காரர். அதனால நாலு பேர் மேலயும் கேஸ் ஃப்பைல்  பண்ணாம விட்டுட்டாளாம்.”

    “இதுல ஒன் தோழிக்கு தெரிஞ்ச யாராவது இருக்கிறாளோ என்னமோ. என்னத்த சொல்லறது பொம்பள பிள்ளைய கண்டிக்கிற அளவுக்கு ஆம்பள பசங்கள கண்டிச்சு வளக்க மாட்டேங்கறோம். சேல முள்ளில பட்டாலும் முள்ளு சேலல  பட்டாலும் சேலக்குதா சேதம்னு பொம்பளப்புள்ளக்கு சொல்லி வளத்தறோமே தவிர பையனுக்கு செல்லம் கொடுத்து கொடுத்து வளத்தறோம். நாளைக்கு அவந்தா கஞ்சி ஊத்துவானு நாமும் நம்பறோம். எல்லாம் மாறிப்போச்சு சிவ சிவ. சரி பாத்து போம்மா. எனக்கும் நாழியாகுது. நா கிளம்பறேன்” என்று கிளம்பினார். அவர் வாசித்த பெயர்களில் ஒரு பெயர் நகுல். கோகிலாவிற்கு வீட்டிற்கு செல்லும் பாதை முழுக்க கரடுமுரடாக இருந்தது.

    திரை விலகியது.

    நரைத்த தலையுடன் வைஷ்ணவி உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருந்த நகுல் “எவ்வளவு நேரமா சமப்ப? நீயே தின்னு” என்று தட்டை தூக்கி எறிந்து விட்டு வண்டியை எடுத்துக்கொண்டு சென்றான்.

    கொஞ்ச நாளாவே இவன் போக்கு சரியில்லையே என்று கவலைப்பட்டாள். வெளியில் சென்றவன் இரண்டு நாட்களாகியும் வீட்டிற்கு வரவே இல்லை. அவளும் தேடினாள். போலீசில் கம்ப்ளைண்ட் செய்தாள். மாலை வேலை எல்லாம் முடித்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது, டிவி செய்தியில் லலிதா என்ற பெண் பலாத்கார கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனாக நகுலின் படம் காண்பிக்கப்பட்டது.

    இடிந்துபோன அம்மா நகுலின் பேக்குகள், அவனது புத்தகம் என அனைத்தையும் செக் பண்ணினாள்.

    “பல நாட்களாக தவறான வழியில் சென்று கொண்டிருந்த மகன, நான் தான் கவனிக்கல. எத்தனை பொண்ணுகளோட போட்டோ. பாரு வீட்ல இவனுக்கு கீழே ஒரு பொம்பள பிள்ளைய வெச்சிருக்கிற. நாம இவ்வளவு அசால்ட்டா இருந்திருக்கிறோம். நாம வளக்கற போலத்தானே மத்தவங்களும் வளர்த்திருப்பாங்க. ஆரம்பத்திலேயே தெரிஞ்சு இருந்தா இவ்வளவு தப்பு நடக்காம தடுத்திருக்கலாமே. என்ன எல்லாம் கனவு கண்டீர்கள், உங்க பையன பத்தி. இப்போ உங்க பையன பாத்தீங்களா? நீங்க உசுரோட இருந்திருந்தா ஒருவேள இப்படியெல்லா நடந்திருக்காதோ. இதெல்லாம் பார்க்கத்தான் நான் இன்னும் உசுரோட இருக்கேனா. என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போய் இருக்கலாமே” என ஒரு போட்டோவை நெஞ்சோடு சேர்த்து கதறி அழுதாள். அழுது அழுது மயங்கிய அவள் அலைபேசி சத்தம் கேட்டு விழித்தாள்.

    “ஹலோ! ஹலோ!”

    “நான் சவுத் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேசுறேன்.”

    “சொல்லுங்க சார்.”

    “உங்க பையனை காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணி இருந்தீங்க.”

    “ஆமா சார்.”

    “உங்க அருமை புத்திரன் என்ன காரியம் பண்ணிட்டு இங்க வந்து உட்கார்ந்து இருக்கான்னு வந்து பார்த்துட்டு போங்க.”

    அடுத்தக் காட்சி காவல் நிலையம் .

    அம்மா வக்கீலுடன் வந்தாள். அடிக்கடி வீட்டுக்கு வந்து கூட்டிட்டு போற குமாரோடு உட்கார்ந்து இருந்தான் நகுல். அம்மாவை பார்க்கவே இல்லை.

    மகனைக் கண்டதும் அடி அடின்னு அடிக்க கோபம் வந்தது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு இன்ஸ்பெக்டரிடம் வக்கீல் வைத்து பேசி குற்றம் நிரூபிக்கப்படற வரை ஜாமீன் வாங்கப்பட்டது.

    “நீங்க என்னதான் உங்க மகனை பாதுகாத்தாலும் ஒரு வாரத்தில் கோர்ட்டில் தீர்ப்பு வந்துரும். அதுக்கப்புறம் உங்க பையனுக்கு ஆயுள் தண்டனைதான். தண்டனை கொடுத்து என்னத்த பண்றது நீங்க மேல் கோர்ட்டுக்கு போவீங்க. அங்கே கேஸ் முடித்து தீர்ப்பு வர்றதுக்குள்ள அவனுக்கு வயசு ஆயிடும். தாராளமா இவன் வெளியில் நடமாடுவா. கல்யாணம் பண்ணிக்குவா. குடும்பம் குட்டியோட இருப்பான். பாவம் அந்த பொண்ணு குடும்பந்தா சிக்கி சீரழியும். எல்லாம் உங்கள மாதிரி அம்மாக்கள் இருக்கிறதுனாலம்மா. பசங்க எல்லாம் மேல மேல தப்பு பண்ணிட்டு இருக்காங்க. போங்க கூட்டிட்டு போயி நல்ல சாப்பாடு போடுங்க.”

    காட்சி-3

    “சோபாவில் உட்கார்ந்திருந்த நகுல் “ஆமா நானும் இதற்கு உடந்தை தான் அதுக்கு, என்ன இப்போ?. ஊர்ல யாரும் செய்யாத தப்பா நான் செஞ்சுட்டேன். அவன் எல்லா சிக்கலை, நான் சிக்கிட்ட அவ்வளவுதான் இதைப்பற்றி ஏதாவது என்கிட்ட கேட்டே…….. உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லணுங்கிற அவசியம் எனக்கில்லை. சும்மா தொண தொணனு பேசாத.  பசிக்குது ஏதாவது இருந்தா கொடு” என்றான் அலட்சியமாக.

    ஃப்ரிட்ஜ் திறந்து ஒரு பாட்டிலை வெளியில் எடுத்தாள். சோற்றில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கலக்கினாள். அடிவயிற்றிலிருந்து அழுகை பொத்துக்கொண்டு வந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டு அடக்கினாள். மண்டு அமர்க்கு உடைததனன் ஆயின், உண்ட என் முலை அறுத்திடுவென்”  என்ற புறநானூற்றுப் பாடல் பின்னிசையாகக் கேட்டது. சாப்பாட்டை வாரிவாரி வாயில் போட்டான் நகுல். சாப்பிட்ட கை காயும் முன் வாயில் இருந்து நுரை கக்கி கீழே விழுந்து துடித்தான். காணமுடியாத தாய்மை மனதை கல்லாக்கிக் கொண்டு உள்ளே சென்று கதவை சாத்தியது.

    திரைவிழத் தொடங்கியது.

    ‘ஒரு பெண் நினைத்தால் இந்த தேசத்தின் தலைவிதியை மாற்றலாம். தாயாக இருக்கின்ற பெண்மை குற்றம் காணின் சக்தியாகவும் மாறுகிறது. சக்தி அவதாரம் எடுக்கும்போது தவறு செய்யும் ஆண்மைக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கப்படுகிறது. பெண்மை சக்தியாக மாறும்பொழுது தவறுகள் திருத்தப்படுவதில்லை. அழிக்கப்படுகிறது.’ பின்னணியில் ஒலித்தது.

    திரை முழுவதுமாக விழுந்தது.

    கையில் டிராஃபியும் முகத்தில் சிரிப்புடன் நரைத்த தலை வேசத்தில் வைஷ்ணவி அம்மாவிடம் கூறிக்கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டு பையன் ஓடி வந்து வைஷ்ணவியை “ஏன் பாட்டி மாதிரி வேஷம் போட்டு இருக்க?” என்று கேட்டான்.

    “டேய் இன்னைக்கு எங்க காலேஜ்ல டிராமா இருந்துச்சுடா. அக்கா தான் கிங்கு தெரியுமா?” என்றாள். :அம்மா இன்னைக்கு நடந்த காம்பிடேஷன்ல பெஸ்ட் டிராமா அவார்டு எங்களுக்குத்தான். பெஸ்ட் ஆக்டிரஸ் அவார்டு எனக்கும் எங்கூட நடிச்ச கீதாவுக்கும் தான் கொடுத்தாங்க.”

    அம்மா திரும்பி பார்த்தாள்.

    ”ஆமாம்மா காலேஜில் போட்ட டிராமால வந்த கதாபாத்திர பேரும் நகுல்தா. அவந்தா எம்பையன். அவன் தப்பு செஞ்சுட்டுதால கோர்ட்ல கேஸ் போட்டா லேட்டா தண்டனை கிடைக்கும்னு நானே வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சாப்பாட்டுல விஷம் வெச்சு கொல்றதுதா கதை. என்ன அண்ணன் பெயர் வெச்சிட்டு விஷம் வைக்கறோமேனு கவலையா இருந்துச்சு. சரி டிராமாதானேனு  நடிச்சிட்டேன்.”

    “சாப்பிட்டு கீழே விழுந்து துடிக்கிற மாதிரி கீதா நடிச்சா பார்க்கணும் டேபிள்ல இருக்கிறதெல்லாம் விழுந்துருச்சு கடைசியில் பார்த்தால் எல்லாரும் எந்திரிச்சு நின்னு கை தட்டறாங்க.”

    ”பிரைஸ் கொடுக்க வந்த ஜட்ஜ்  இன்றைய சமுதாய பிரச்சினையை அழகாய் சொல்லிட்டு சரியான முடிவையும் கொடுத்திருக்கீங்கனு ஒட்டுமொத்த நாடகக் குழுவையும் பாராட்டினாரு.”

    “எப்படி என் பர்ஃபோமென்ஸ்?” என்று கூறிக்கொண்டு, அப்பாவிடம் பரிசு வாங்கனத சொல்ல போனை காதில் வெச்சிட்டே  வெளயில் போனாள் வைஷ்ணவி.

    கையில் செல்போனில் உள்ள பேப்பர் கட்டிங்கையும் சாப்பாட்டையும் மாறி மாறி பார்த்தாள் கோகிலா.

    Share
  • நாலடியார் நயம் – 11

    நாலடியார் நயம் – 11

    நாங்குநேரி வாசஸ்ரீ

    11. பழவினை

    பாடல் 101

    பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
    வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
    பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
    கிழவனை நாடிக் கொளற்கு.

    கூட்டமான பசுக்கள் நடுவே விட்டினும்
    கன்று தன் தாய்ப் பசுவைத் தேடி
    அடைதல் போல் முற்பிறப்பில்
    ஆற்றிய பழவினையும் செய்தவனைத்
    தேடிஅடைதலில் வல்லமையுடைத்தே. .

    பாடல் 102

    உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
    ஒருவழி நில்லாமை கண்டும் – ஒருவழி
    ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
    நின்றுவீழ்ந் தக்க துடைத்து.

    அழகும் இளமையும் மேன்மையான
    அருஞ்செல்வமும் பலர் அஞ்சத்தக்க
    பெருமதிப்பும் ஓரிடத்தில் நிலையற்று
    இருப்பதைக் கண்டபின்னும்
    இனியும் யாதொரு நற்செயலும்
    செய்யாதவன் வாழ்க்கை, உடலெடுத்து
    சில காலம் வாழ்ந்து பயனில்லாது பின்
    அழிந்துபோகும் தன்மைத்தாம்.

    பாடல் 103

    வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
    அளந்தன போகம் அவரவர் ஆற்றான்
    விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக்
    காரெனச் செய்தாரும் இல்.

    வளமுடன் சிறந்து வாழ்தலை
    விரும்பாதார் எவருமில்லை இவ்வுலகில்
    அளக்கப்பட்டுள்ளன அனுபவிக்கும் சுகங்கள்
    ஆற்றிய நற்செயல்களுக்கேற்ப
    விளாங்காயை உருண்டையாக
    வார்த்தவரில்லை களாம்பழத்தைக்
    கருமையுடையதாய் ஆக்கியவருமில்லை.

    பாடல் 104

    உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
    பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
    வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
    சிறப்பின் தணிப்பாரும் இல்.

    வந்தடையும் தீவினையைத் தடுக்கும்
    வல்லமை துறவிகளிடத்தும் இல்லை
    அவ்வாறே பெறத்தக்க நன்மைகளை
    அடையாது தடுப்பதும் எவராலுமாகா
    மழை பொழியாது வறண்டால்
    மீட்டுக் கொடுப்பாருமில்லை
    அதிகமாய்ப் பெய்தால்
    அடக்குவாரும் இல்லைபோல.

    பாடல் 105

    தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்
    பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
    நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை
    வினைப்பயன் அல்லால் பிற.

    பனையளவு உயர்ந்த
    பெருமை மிக்கவரும்
    தினையளவாகச் சிறுத்து
    தம் கூர்மதியை உள் அடக்கி
    தினந்தோறும் பெருமைகெட்டு
    வாழ்வதன் காரணம் யாதெனின்
    முற்பிறப்பில் செய்த தீவினைப்
    பயனேயன்றி வேறெதுவுமில்லை.

    பாடல் 106

    பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
    கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் – கல்லாதார்
    சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
    கோதென்று கொள்ளாதாம் கூற்று.

    உயர்ந்த நூல்களின் கேள்வியறிவால்
    உற்ற பயன்பெற்றோர் இறப்பதையும்
    கல்வியறிவற்றோர் நீடு வாழ்வதையும்
    அறிந்துள்ளீர்கள்! காரணம்
    அறிவு எனும் சாறு கல்லாதார்
    அகத்தே இல்லாமையால்
    அவர்களைச் சக்கை என நினைத்து
    எடுத்துச் செல்வதில்லை எமன்.

    பாடல் 107

    இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
    நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் – அடம்பப்பூ
    அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
    முன்னை வினையாய் விடும்.

    அடம்பக்கொடியின் மலர்களை
    அன்னங்கள் கோதிக் கிழிக்கும்
    அலைகடலின் குளிர் கரையையுடை
    அரசனே! சிலர் துன்பமிகு மனத்துடன்
    அனைவரும் காணும்படி பல தலைவாயில்களை
    அடைந்து பிச்சைகேட்டு வருந்தும் செயல்
    அனைத்தும் முற்பிறப்பில் செய்தீவினைப் பயனே.

    பாடல் 108

    அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
    பழியோடும் பட்டவை செய்தல் – வளியோடி
    நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
    செய்த வினையான் வரும்.

    நெய்தல்நிலத்தில் காற்று வீசுதலால்
    நீண்ட கடலில் தேன் சிந்தும்
    குளிர் கரையையுடை வேந்தனே!
    அறிவற்றவராய் இல்லாது
    அறிவுடையவராய்த் திகழ்ந்தாலும்
    பழிதரும் செயல்களைச் செய்தல்
    பழம்பிறப்பில் செய்தீவினையின் விளைவே.

    பாடல் 109

    ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும்
    வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
    வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
    தீண்டா விடுதல் அரிது.

    எல்லையில்லாக் கடல்சூழ் உலகில்
    எல்லாரும் எவ்வளவாயினும்
    தீயவைகளை விரும்பார் நலம்
    தரும் நன்மையையே விரும்புவர்
    விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
    வரத்தக்கவை முன்வினைப்பயனால்
    வராமற் போவதில்லை.

    பாடல் 110

    சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
    உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
    சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
    இறுகாலத் தென்னை பரிவு.

    கரு அமைந்த காலத்தில்
    கடவுளால் எழுதப்பட்ட விதிகள்
    வளராது குறையாது
    வரிசைமாறி வராது
    துன்ப காலத்தில் ஊன்றுகோலாகி
    துயர்துடைக்கவும் மாட்டா
    வரவேண்டிய காலத்தே தப்பாது
    வந்துசேருமெனவே மரணகாலத்தில்
    மனம் வருந்துவது ஏன்?

    Share
  • ஏறன் சிவாவின் துளிப்பாக்கள்

    ஏறன் சிவாவின் துளிப்பாக்கள்

    ஏறன் சிவா

    புகார் தெரிவித்ததும்
    உடனே நடவடிக்கை எடுத்தனர்!
    புகார் கொடுத்தவர் மீது!

                      ****

    இடைவிடாமல் தொடர்கிறது
    உண்ணாவிரதப் போராட்டம்
    ஏழையின் வீடுகளில்!

                      ****

    சாலையைப் புதுப்பிக்கக்
    கொஞ்சம் நிதி ஒதுக்கப்பட்டது
    அரசியல்வாதிக்கு!

                      ****

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 40 – கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

    அண்ணாகண்ணன் யோசனைகள் 40 – கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

    கொரோனா தொற்று பரவும் இந்த ஊரடங்கு காலத்தில், கடைகளிலும் பொது இடங்களிலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? இதோ எனது யோசனை.

     

    படப் பதிவு: ஹேமமாலினி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 256

    படக்கவிதைப் போட்டி – 256

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (03.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 255-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 255-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கருமுகில்களுக்குப் பின்னே காய்கதிர்ச் செல்வன் தன் ஒளிமுகத்தை ஒருசிறிதே காட்டுவதைத் தம் புகைப்படக் கருவிக்குள் பத்திரப்படுத்தி வந்திருப்பவர் திரு. பார்கவ் கேசவன். இந்தப் படத்தை படக்கவிதைப் போட்டி 255க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

    இந்தப் படத்தைக் காணும்போது எனக்குக் கபிலர் பெருமான் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கதிரவனோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதனினும் விஞ்சுபுகழ் கொண்டவன் வாழியாதன் என்று அவனை விதந்தோதுவது நினைவுக்கு வருகின்றது.

    ”……ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
    கடந்தடு தானைச் சேரலாதனை
    யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்
    பொழுதுஎன வரைதி புறக்கொடுத்து இறத்தி
    மாறி வருதி மலைமறைந்து ஒளித்தி

    அகல்இரு விசும்பி னானும்
    பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.”
    (புறம் – 8)

    இனி இப்படம் குறித்து நம் இனிய கவிஞர்களின் கற்பனைத் திறத்தினைக் கண்டு வருவோம்!

    *****

    மூன்று முத்தான கவிதைகளை வடித்திருக்கும் திருமிகு. சுதா மாதவன், தம்முடைய முதற் கவிதையில் அக்னி குண்டமாய்த் தழல்வீசும் வானில் எட்டிப்பார்க்கும் நிலவைத் தம்மோடு கைகோத்து இல்லம்வர அழைக்கின்றார்.

    இரண்டாவது கவிதையில் வானில் தெரிவது சந்திரனா சூரியனா என்று ஐயவினாவெழுப்பி இவையிரண்டும் மந்திரமும் தந்திரமுமாக வாழ்வை இயக்குபவை என்று முடிக்கின்றார்.

    மூன்றாவது கவிதையில் ”நிலவே நீ முழுதாய் முகம் காட்டு! அந்தி இருள் ஓட்டு!” என்று நிலவை வாஞ்சையாய் அழைக்கின்றார்.

    செந்தழல்
    புடத்திலிட்ட தங்கம்
    அக்னிக் குண்டம்
    செங்கதிர்
    இவைகளின் வர்ணம்
    இவ்வழகிய புகைப்படத்தில்

    இதனூடே எட்டிப் பார்க்கிற சந்திரன்
    உலகின் இரவு நேர ஒளிக்குத் தயாராகி
    அதிகாலை வரை வானில் தவழ்ந்து
    இளம் மாலை வரை ஓய்வெடுத்து
    இரவுக்கு தயாராவான் தினமும்

    அழகிய நிலவே
    என் கைகளைக் கோத்துக் கொள்
    என்னுடனே வா என் இல்லம் செல்ல
    ஏகபோக உரிமை எனதாக்கிக் கொள்ள!

    *****

    காலைநேரக் கதிரவனா?
    மாலைநேரச் சந்திரனா?
    தகதகக்கும் நிறம் இரண்டும்
    மினுமினுக்கும் ஒளி இரண்டும்
    கதகதக்கும் குளிர் இரண்டும்
    கொதிகொதிக்கும் தணல் இரண்டும்
    இடைவிடாது உலகை இயக்கும் இவர்களே
    மனித வாழ்வில் மாற்றங்களைத் தரும் கோள்களே
    ஆம் கதிரவன் சந்திரன்
    வாழ்வின் மந்திரம் தந்திரம்!

    *****

    தங்க நிலா வெள்ளி நிலா
    வட்ட நிலா வடிவழகு நிலா
    மாய நிலா மவுசு நிலா
    ஒளிரும் நிலா எண்ணத் துளிரும் நிலா

    நிலா நிலா நீ இலா இலா
    நாள் இலா இலா வா அருகில் நிலா நிலா
    செவ்வான மேகங்களோடே
    கடலலையினூடே
    முகத்தை மட்டும் காட்டிடாமல்
    முழுவதுமாய் வா
    மாலை நேரம் மறைந்து
    இரவு வரக் காத்திருக்கு
    இருளை அகற்று ஒளியை ஏற்று!

    *****

    படத்திலிருப்பது கதிரா மதியா என்ற ஐயத்தோடு புகைப்படத்தை அணுகும் திரு. கருணானந்தராஜா, ”நீ கதிராயின் சீறியெழுந்து கொரோனா கிருமியைக் கொன்று உன் திறமையைக் காட்டிடுவாய்!” என்று ஆதவனுக்கு அறைகூவல் விடுக்கின்றார்.

    கதிரே உதவு!

    எல்லையிலாத இவ்வான விளிம்பில்
    இருந்தொளிர் வெண்சுடரே – நீ
    அல்லை (இரவு) முடிக்கப் பிறந்த கதிரோ
    அல்லது வெண்மதியோ
    மெல்ல மறைந்திடப் போகுதியோ இல்லை
    மீண்டெழப்போகுதியோ – என்ன
    சொல்வது என்று புரிகிலன் நானுமுன்
    தோற்றம் புரிந்திலனே.

    ஆதவனாயின் விழித்தெழு -இந்த
    அகிலம் தனை அழிக்க
    பூதமென வந்த பூஞ்சையிலும் சிறு
    பொல்லாக் கொரோனாவெனும்
    பாதி உயிரின் பரவல் தடுத்து இப்
    பாரைச் சுகப்படுத்தும்
    வேதியற் சூழலை ஆக்கிடு நீ இந்தத்
    தீதினைப் போக்கிடற்கே.

    தீச்சுடர் வீசி இவ் வானப்பரப்பினுள்
    சீறி எழுந்திடுவாய் – அலை
    பாய்ச்சி உலகை இயக்கிச் சுகம்பெறப்
    பாதையமைத் திடுவாய்
    மூச்சினில் காற்றில் முகவழியெங்கிலும்
    மூர்க்கமுடன் பரவி – பெரும்
    தீச்செயல் செய்யும் கிருமியைக் கொன்றுன்
    திறமையைக் காட்டிடுவாய்.

    *****

    ”அந்திக் கருக்கும் வானத்திலே சந்திரனை வரவேற்க இயற்கை விரித்த செந்நிறக் கம்பளம் அல்லவோ இது!” என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மந்திரக் கோலம்

    அந்திக் கருக்கும் வானத்திலே
    சிந்தை மயங்கும் வேளையிலே
    சந்திரன் தன்னை வரவேற்க –
    இயற்கை செந்நிறக் கம்பளம் இட்டிருக்கும்

    விந்தைகள் ஆயிரம் செய்து தினம்
    இரவின் வாசலில் செந்நீர் தெளிக்கும்
    முந்தைய தினத்தைப் போல அன்றி – புதுச்
    சிந்தைகள் தோன்றிட வழிவகுக்கும்

    எந்திர வாழ்க்கை மறந்திடுவே
    மந்திர ஜாலங்கள் செய்து தினம்
    சுந்தர நிகழ்வைச் செய்திருக்கும்
    தந்திரன் யார் நீ சொல்லிடுவாய்!

    *****

    ”அந்திவானில் ஆதவனுக்கு மேகங்கள் முகக்கவசம் ஆகி அவனைக் காத்திட, நந்தவனத் தேராய் நிலா வானில் உலாவரும்! பாரினில் நாளும் அரங்கேறும் நாடகமிது!” என்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்க
    உன் கடமை ஆற்றிட
    ஓயாமல் உதித்தெழுந்து
    கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
    தினந்தோறும் ஓடிட
    மெல்ல நகரும் மேகம்
    முகக்கவசமாய் மாறி
    கதிரவன் உன்னைக் காத்திட
    கதிர்வீசும் கரங்களை மடக்கி
    அந்தி சாய்ந்திடும் நேரம்
    நீல வானும் இங்கே
    நிறம் மாறும்
    நந்தவனத் தேராய் வரும்
    நிலவே உன்னழகு மட்டும் மிளிரவே
    இருள் சூழ்ந்து இரவாகும்
    நாளும் இதே நாடகம்
    பாரெல்லாம் அரங்கேறும்
    பகல் இரவாய்
    காலை முதல் மாலை வரை
    வேலை ஏதும் இன்றியே
    இரவு நேரப் பணியாய்
    நிலவு வந்து போகும்
    இயற்கை எனும் நிறுவனத்தில்!

    *****

    செக்கர்வானில் தெரியும் ஒளிப்பிழம்பைக் கதிராகவும் மதியாகவும் வைத்து அழகிய கற்பனைகளைக் குழைத்துக் கவிபுனைந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    இன்ப நாடகம்

    அந்தி வானை
    அழகாக்குகிறது
    அடையும் சூரியன்!

    வந்தவேலை முடித்த
    பகலவனுக்கு
    வாழ்த்துச் சொல்லும்
    பணி நிறைவுப்
    பாராட்டு விழாவுக்கு
    வானமெங்கும்
    வண்ணத் தோரணங்கள்!

    வந்துவிட்டான் தலைவனென
    வானமகளின் வதனத்தில்
    வெட்கச் சிவப்பு!

    இது
    இன்றல்ல நேற்றல்ல,
    காலம் காலமாய்த் தொடரும்
    இயற்கையின்
    இன்ப நாடகம்-
    கண்டு களிப்போமே!

    ”வந்தவேலை முடிந்ததெனப் புறப்படும் கதிரவனுக்கு வானில் தோரணங்களோடு பணிநிறைவுப் பாராட்டுவிழா நடக்கின்றது; தலைவனின் வருகை கண்டு வானமகள் நாணிச் சிவக்கின்றாள்” எனும் அழகிய கற்பனையைக் கவிதையில் செருகியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கலை விமர்சகர் தேனுகா உரை

    கலை விமர்சகர் தேனுகா உரை

    அண்ணாகண்ணன்

    30 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன ஓவியம், சிற்பம், இசை, புகைப்படம், கட்டடவியல், சித்திரக் கவிகள் எனக் கலைத் துறையின் பல்வேறு முனைகளில் உலகளாவிய பார்வையுடன் இயங்கியவர், தேனுகா. இத்துறைக் கலைஞர்கள், அவர்களின் பாணிகள், அவற்றின் நிறை – குறைகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பவர். கலை உலகில் விமர்சகராக நன்கு அறியப்பெற்றவர்.

    வண்ணங்கள் வடிவங்கள் (1987), வித்யாஷங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழி (1987), மைக்கேலேஞ்சலோ (1991), லியனார்டோ டாவின்சி (1991), புது சிற்பவியல் : பியாத் மாந்திரியானின் நியோபிளாஸ்டிசிஸம், ஓவியர் வான்கோ (1996), பழகத் தெரியவேணும் (1997), பியாத் மோந்த்ரியான்(2007) உள்ளிட்ட நூல்களைப் படைத்தவர்.

    மாநில லலித கலா அகாதெமியின் கலைச்செம்மல் விருது, இந்திய அரசின் பெல்லோஷிப் விருது, சிறந்த தமிழறிஞருக்கான தமிழக அரசு விருது, ஸ்டேட் வங்கி இலக்கிய விருது… உள்பட பல விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். இவை அனைத்திற்கும் மேலாகப் பெரும் மரியாதைக்கு உரியவர். காரணம், அவருடைய நேர்மையும் செல்வாக்குக்கு மயங்காத நடுநிலைமையுமே ஆகும்.

    “கலைகளைப் பற்றிய கருத்துகளைக் குறைவின்றி வெளியிடும் வகையில் இது வரையில் வளர்ந்துள்ள தமிழ்ச் சொற்களின் எல்லையை விரிவுபடுத்துகிறார் தேனுகா. கலை விமர்சனத்திற்கான புதிய சொற்களைக் கையாள்வதன் வாயிலாகத் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் அவர் வளம் சேர்க்கிறார். இவருடைய அறிவும் மனோதர்மமும் நுண்உணர்வும் கருத்து வெளியீடும் மிகவும் அபூர்வமானவை. தன் சம காலத்தைப் பற்றிய உணர்வுடன் அமரத்தன்மை பற்றிய பார்வையும் பெற்றுள்ளார் தேனுகா. இது போன்ற எழுத்துகள் அரிதானவை என்பது மட்டுமல்ல; ஆஷாட பூதித்தனமும் ஜம்பங்களும் பாசாங்கும் கூத்தடிக்கும் இந்த வேளையில் தன் ஆளுமை காட்டும் வழியில் தேனுகா தன் பணியினைத் தொடரவேண்டும்” என்று இலக்கிய விமர்சகர் க.நா.சுப்ரமணியம் பாராட்டியிருக்கிறார்.

    மேலும் எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, தஞ்சை ப்ரகாஷ்…. எனப் பலரின் உயரிய பாராட்டுகளைப் பெற்றவர் தேனுகா.

    கும்பகோணத்தில் வசித்த கலை விமர்சகர் தேனுகா, இங்கே தன் புதிய நூலான பியாத் மோந்த்ரியான் பற்றியும் அதன் உள்ளடக்கம் குறித்தும் நம்மிடம் உரையாடுகிறார். உரையினூடாகக் கலை, கட்டடவியல், ஓவியம், வாழ்வியல்… எனப் பலவற்றையும் விவரித்துச் செல்கிறார்.

    என் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்த ஒலிப்பதிவைத் தேனுகா அனுப்பியிருந்தார். 2007 தமிழ் சிஃபி சுதந்திர தினச் சிறப்பிதழில் முதலில் இந்தப் பதிவு வெளியானது. இயல்பான, ஆழமான அந்த உரையை இப்போது கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 78 (ஆயும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 78 (ஆயும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ஆயும்   நுண்பொருள்  ஆகியும்   வெளியே
    அம்பலத்   துள்நின்று  ஆடுவார்   வெளியே
    நாய   கிக்கும..  தறியவோ  பிரியா
    நங்கை   தானறி  யாமையோ  அறியோம்
    தூய   நீறுபொன்   மேனியில்   விளங்கத்
    தூர்த்த    வேடமும்  தோன்றவே   தியராய்
    மாய    வேடமே   கொண்டுதம்     தொண்டர்
    மறாத  வேடமும்   காட்டுவான்  வந்தார்!

    பூம்புகார்  நகரில்  வாழ்ந்த  சிவனடியாராகிய இயற்பகையாரை நோக்கி  இறைவன்  ஒருநாள் வந்தார். உலகில் உள்ளவர் சிவஞானத்தால் ஆராய்வதற்கு உரிய மிகுந்த நுண்பொருளாய் இருப்பவரும், தில்லை யம்பலத்திலே வெளிப்படையாய் நின்று ஆடுகின்றவரும் ஆகிய சிவபெருமான், கைலாயத்திலுள்ள  உமையம்மையார்  அறியாத வண்ணமோ, என்றும் பிரியாது இடப்பாகத்தில் இருக்கும் நங்கை  தானே அறிந்து கொள்ளாத  நிலையிலோ,  நம் அறிவுக்கெட்டாத வகையில் வந்தார். அவ்வாறு வரும் அவர் திருமேனியில் தூய்மையான திருநீறு தம் பொன்போன்ற  மேனியில்  ஒளிவீசி விளங்க  வேதியராகவும்,  காமவயப்பட்ட ஒரு   தூர்த்தனாகத்  தோன்றியும் வந்தார். அவர்தோற்றம் பிறருக்குப் புலப்படாத மாயவேடமாக   விளங்கிய போதும், சிவனைடியார் மறுத்து  விலக்காத  உயர் தோற்றம்  உடையவராக  வந்தார்.

    இப்பாடலில் ‘ஆயும்’ என்ற சொல், நாம் நம் ஆணவத்தால் ஆராய்வோம் என்ற நிலையில் இல்லாமல் ஆணவத்தை முற்றிலும் அடிப்படுத்தி அவன் அறிவிக்க அறிகின்றேன் – என்னும் பரஞான சிற்சத்தி ஒளியின் உதவியால் அறிகின்ற ஆராய்ச்சியை இங்கே காட்டுகிறது. இது பாசஞானத்தால் பெறாத ஆய்வைப் பசுஞானத்தால் பெறலாம் என்பதைக் குறித்தது! அவர் பிரபஞ்சப் பெருவெளியில் எங்கும் உறைந்து ஆனந்த நடனம் ஆடுகிறார்; அவரே பூம்புகார் நகரினுள்   எளிய மனிதராகி, அந்தணராய்த் தூர்த்த வேடத்தில்  வருகிறார். இதனை,

    ‘’ஆயும்  நுண்பொருள் ஆகியும்  வெளியே
    அம்பலத்து  நின்று ஆடுவார்…..
    மாய வண்ணமும்  கொண்டு தொண்டர்
    மறாத  வண்ணமும் காட்டுவான் வந்தார்’’

    என்று சேக்கிழார் பாடுகிறார். தூயதாகிய திருநீறு தமது  பொன்மேனியிலே விளக்கம் பெறவும், (அதற்கு மாறாகத்) தூர்த்த வேடமும் அத்திருமேனியிலே வெளிப்படையாய்த் தோன்றவும், ஒரு வேதியராக உருவங் கொண்டு, தமது மறைப்பினிற் போந்த உருவத்தினையே மேற்கொண்டு (உலகத்தார் காண அதனைக் காட்டுதலே யன்றித்) தமது தொண்டராகிய இயற்பகையார் அடியவர் வேண்டியவை எவையேயாயினும் இல்லை யென்னாது கொடுக்கும் இயல்பினையும் காட்டும் பொருட்டு வந்தார். இதனையே  திருவாசகம்,

    ‘’வேதங்கள் ஐயா  எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!’’

    என்று பாடும்! சொரூப  நிலையிலிருந்து தடத்த நிலைக்கு மாறும் தோற்றச்  சிறப்பு  இது! ஆழ்ந்து என்பது நெடுந்தோற்றம்; அகன்று என்பது பக்கத் தோற்றத்தின் விரிவு; இது சொரூபம்;  நுண்மை என்பது நுட்பத்தோற்றம் இது தடத்தம்;   இதனைப்

    ‘’பாதாளம்  ஏழினும் கீழ்  சொற்கழிவு பாத மலர்!
    போதார் புனை முடியும் எல்லாப்  பொருள் முடிவே ‘’

    என்ற திருவாசகத்தால் அறியலாம்! நுட்பத்தை,

    ‘’அணுவோர்  அண்டமாம் சிறுமை கொண்டு ‘’

    என்ற திருவிசைப்பா காட்டும். மேலும், ’’உள்ளதன்  நுணுக்கம்’’ என்ற தொல்காப்பியச் சூத்திரம்  விளக்கம்  பெறும்.  அடுத்து,

    ‘’அருளும்  வண்ணமும்   ஆதி மாண்பும்  கேட்பான்  புகின்,  அளவில்லை‘’ என்றும்,

    ‘’எதுக்களாலும்  எடுத்த மொழியாலும்  மிக்குச்
    சோதிக்க வேண்டா சுடர் விட்டுள்ளன்  எங்கள் சோதி!’’

    என்றும் கூறப்பெறும் தேவாரத்தின்  விளக்கமாகச் சேக்கிழாரே,

    ‘’ஓதும் எல்லை உளப்பில வாதலின்  யாதும்  ஆராய்ச்சி இல்லை!’’

    என்று பாடுகிறார். ‘’மனம் வாக்குக்களுக்கு எட்டாததாயும் சிவஞானத்தால் அறியப்பெறுவதாயும் உள்ள நுண் பொருளேயாயினும், திருவம்பலத்தினிடத்தே தாமாக வெளிப்பட்டு எல்லா உயிர்களும் உய்யுமாறு அருட் கூத்தாடுவார்’’ என்பதை முன்னரே  ‘’உலகெலாம்‘’ என்ற பாட்டில் கூறினார்.

    மேலும் இப்பாட்டில் ‘’அறியோம்’’ என்ற சொல்லிற்கு, ‘இங்கு இறைவன் திருமேனி தாங்கிவரும் இயல்பினைப்பற்றி முன் ஆயுநுண்  பொருளாகியும் என்றதற்கேற்ப ஒர் ஆராய்ச்சி செய்கின்றார். இவர்  திருமேனி தாங்கி வருவதில் ஒன்றற்கொன்று மாறுபட்ட இவ்விரண்டியல்புகள் காணப் பெறுகின்றன; ஆயுநுண் பொருளாவார வெளியே யாடுவாருமாயினர்; ஓருருவு மில்லார் ஒரு வேடங்  கொண்டார். தூர்த்த வேடமுடைய பொன்மேனியில் தூய நீறும் விளங்கிற்று; இவர்தாம் இவ்வாறு வருங்கால் தமது பங்குடைய உமையம்மையார் அறிய வந்தனரோ? அன்றி அறியாமை வந்தனரோ? எனின் அறிய வருவாராயின், இவர் இங்குப் பிறர்  மனைவியாரை வேண்டிச் செல்வதற்கு அவர் உடன்பட்டிரார் அவர் அறியாது வந்தாரெனின் உடன் பிரியாது இருப்பாராதலின் அஃதுமியலாது; ஆதலின் இதனை இன்னவாறெனத் துணிய அறியோம் என்று பொருள் காணலாம்.

    வெளிப்படையாக அருளும் சத்தியும், மறைப்பாகிய திரோதான சத்தியும் ஒருங்கே தொழிற்பட்டன என்ற கருத்தால் இவ்வாறு கூறப்பெற்றது போலும்! நாயனார் இயற்பகையாராயினமையால் தாமும் தமது இயலுக்கு  மாறாக இத்தன்மையில் வெளிப்பட்டு அருளினர் என இங்கு நினைவு கூர்ந்தவாறாம்.

    மேலும் திருநீறணிந்த தோற்றமும் தூர்த்த வேடமும் வெவ்வேறாய் இருப்பதன் நுட்பம் ஆராய்வதற்கு உரியது!  தூய நீறு “சுத்தம தாவது நீறு“ என்றவாறு தான்  தூய்மையுடையதாகும். அதனோடு யாவற்றையும் தூய்மை  செய்வதுமாம். திருநீறு தம் சார்ந்த  மேனியைத் தூய்மை செய்வது. ஆதலால் அடியவரின் தூய மனம் அவர் வடிவத்தையு மறுக்காமல்  ஏற்றுக் கொண்டது.

    அதனோடு அதற்கு மாறாகத்  தூயதல்லாத தூர்த்த வேடமும் ஒருங்கே காணஅதாவது, பிறனில் விழைவோன் செய்யும் காமந்தோன்றும் அடையாளங்கள் விளங்கும் கோலத்துடன் அதாவது நகக்குறி, பற்குறி, மஞ்சட்பூச்சுக்குறி ஆகியவற்றுடன் வந்தார். காமவசப்பட்ட இயல்புடன் இழிந்த செயல் செய்பவனாய்த்  தூர்த்த வேடத்தில் இருக்கும்  இழிபினைப் போக்க அதற்குப் பரிகாரமாக அந்த மேனியிலே நீறு அணிந்ததுபோல என்ற குறிப்புமாம். மேலும் வேதியராய்  விளங்கியதையும் குறிப்பிடும் திறம் உணர்ந்து கொள்ளுதற்குரியது.

    அடுத்து இப்பாடலில் ‘’மாய வண்ணமும், மறாத வண்ணமும்‘’ என்ற தொடர்கள், பிறர் அறிய இயலாதபடித் தம்மை மறைத்துக் கொண்ட இவ்வுருவந் தாங்கிக்கொண்டு அதனைக் காட்டுதலேயன்றி,  வேண்டும் யாவையும்  இல்லை யென்னாதே முன் கொடுக்கும் இயல்பினையும். தமது மாயை வண்ணத்தைக் காட்டுதலேயன்றி, அடியார் மறாத வண்ணத்தையும் கொண்டு வந்தார்.

    இறைவன் தம் அருள் விளையாட்டில் காட்டும் தோற்ற மாற்றங்களை மிகவும் நுட்ப்பமாகப் புலப்படுத்தும்  இப்பாடல்,  சேக்கிழாரின் பாடல் நயத்தை விளக்குகிறது.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-21

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-21

    தி. இரா. மீனா

    பசவேசர்

    பசவண்ணர், பசவேசர், அண்ணா என்றெல்லாம் போற்றப்படும் இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடந்த சிவசாரணர்களின் சமுதாய ,தார் மீகப் போராட்டத்தின் சூத்ரதாரி. யுகப்புருஷனாகப் போற்றப்படும் இவ ரைக் குறித்து பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. கர்நாடகத்தில் பீஜாப்பூர் மாவட்டத்தின் பாகேவாடி பசவேசரின் பிறந்த ஊர். சைவ பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை மாதராசா, தாய் மாதலாம்பிகே. இவருக்கு கங்காம்பிகே, நீலாம்பிகே என்று இரண்டு மனைவியர். அக்கநாகம்மா இவரது சகோதரி. சென்ன பசவண்ணர் இவர் சகோ தரி மகன். வேலையை மட்டும் முதன்மையாகக் கொண்ட (கர்மநிஷ்ட) சைவப் பார்ப்பனர் பழக்க வழக்கத்தை எதிர்த்து பசவேசர் கூடல சங்கமத்திற்கு வருகிறார். கல்வி கற்கிறார்; தனித்துவத்தை நிலை நிறுத்திக் கொள்கிறார். மண்டல அதிபதி பிஜ்ஜளனின் மங்கள வாடாவுக்குச் சென்று கருவூல அதிகாரியாகப் பணியாற்றுகிறார். பின்னர் பிஜ்ஜளனின் நிதியமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்கிறார். கல்யாண் நகர் பசவேசர் வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகிறது. வர்க்க சாதி, பால் வேறுபாடுகள், மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை மறுத்து சமத்துவம், சுதந்திரம், உடன் பிறப்புக் கொள்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய சமுதாயம் உருவாக்க முயற்சிக்கிறார். அரசாங்கப் பிரதிநிதிகளின் நியாயங்களை எதிர்க்கிறார். ”அரண்மனையில் ராணியாக இருப்பதைவிட பக்தரின் வீட்டில் வேலைக்காரி யாக இருப்பதே மேல்”,  “மன்னனின் பிணமானாலும் ஒரு காசுக்கு வாங்குபவரில்லை “என்பன போன்ற அவர் வழிநடத்துதல்கள் மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்துகிறது. பசவேசரின் முத்திரை ”கூடலசங்கமதேவன்” என்பதாகும். அவர் பலரும் போற்றும் இயல்பு டையவராக விளங்கியிருப்பதை “நான் பசவண்ணராகப் பிறக்க இயலாமல் போய் விட்டதே“ என்று அல்லமாபிரபு கூறியதைக் காட்டலாம்.

    1. “குலம் எதுவாக இருந்தாலென்ன?
    சிவலிங்கமுடையவன் உயர்குலத்தவன்
    சாதிகள் இணைந்த பின்பு
    சரணருள் குலம் தேடலாமோ?
    சிவதர்மகுலே ஜாதஹ புனர்ஜன்ம விவர்ஜிதஹ
    உமா மாதா பிதா ருத்ர யீஸ்வரம் குலமேவ ச்ச்
    ஆதலால் கொடுத்ததை உண்பேன்
    கொடுப்பேன் பெண்ணை
    சரணர்களை நம்புவேன்
    கூடலசங்கமதேவனே“

    2. “இருவர் மூவர் தேவரென்று ஆணவமாகப் பேசவேண்டாம்
    ஒருவனே காணீர், இருவரென்பது பொய்யே
    கூடலசங்கமதேவனன்றி மற்றதில்லையென்றது வேதம்“

    3. “யாரிவன் யாரிவன் யாரிவனென நினைக்க வேண்டாம்
    இவன் நம்மவன் இவன் நம்மவன் இவன் நம்மவனென
    நினைக்க வைக்க வேண்டும் கூடலசங்கமதேவனே
    உங்கள் வீட்டுப்பிள்ளையென நினைக்க வையும் ஐயனே“

    4. “நீருள் மறைந்திருக்கும் அக்னி போலிருந்தது
    செடியின்னுள்ளிருக்கும் சாற்றின் சுவை போலிருந்தது
    பூவிலடங்கிய நறுமணம் போலிருந்தது
    கூடலசங்கமதேவனே“

    5. “செல்வர் சிவாலயம் கட்டலாம்
    ஏழை நானென்ன செய்வேன் ஐயனே?
    காலே தூண், உடலே கோயில்
    தலையே பொன்கலசம் கூடலசங்கமதேவனே
    தாவரத்திற்கு அழிவுண்டு ஜங்கமத்திற்கு அழிவில்லை.”

    6. “கல் எத்தனை காலம் தண்ணீருள் இருந்தென்ன
    ஊறி மிருதுவாகுமா?
    உன்னை எத்தனை காலம் தொழுதென்ன
    மனதில் உறுதியின்றி?
    புதையல் காக்கும் பூதம் போலானதே என் நிலை
    கூடலசங்கமதேவனே“

    7. “வாருங்கள், நலமா என்றால் உங்கள் பணம் அழியுமோ?
    உட்காருங்களென்றால் பூமி குழியுமோ?
    அவரோடு பேசினால் தலை துண்டாகுமோ?
    எதுவும் கொடுக்கவில்லையெனினும் பரவாயில்லை
    மனிதருக்கு குணமிருக்க வேண்டும் இல்லையெனில்
    சும்மா விடுவானோ கூடலசங்கமதேவன்?”

    8. “அக்னி எரிந்தால் எதிரில் நிற்கமுடியும்
    உலகம் எரிந்தால் முடியுமோ?
    ஏரியே நீரைக் குடித்தால்
    வேலியே பயிரை மேய்ந்தால்
    தன் வீட்டில் தானே திருடினால்
    முலைப்பால் நஞ்சாகிக் கொன்றால்
    யாரிடம் முறையிடுவது கூடலசங்கமதேவனே?”

    9. “கல்நாகம் கண்டால்  பாலூற்று என்பார்
    மெய்நாகம் கண்டால் கொல்லென்பாரய்யா
    உண்ணும் மெய்யன்பர் வந்தால் ’போ’ என்பாரையா
    உண்ணாத இலிங்கத்திற்கு உணவைப் படை என்பாரய்யா
    கூடலசங்கமனின் சரணரைப் புறக்கணித்தால்
    கல்பட்ட மண்சட்டியாவார் ஐயனே“

    10. “திருடாதே கொலை செய்யாதே பொய்யும் சொல்லாதே
    சினவாதே பிறரைக் கண்டு கடுகடுக்காதே
    தன்னைப் புகழாதே பிறரைக் கண்டு புழுங்காதே
    இதே அந்தரங்க சுத்தி பகிரங்க சுத்தி
    இதே எங்களது கூடலசங்கமதேவனைக் கும்பிடும் வழி“

    11. “நூல்வலையில் பிணைத்துக் கொள்ளும் சிலந்தி
    வலைக்கான நூலை எங்கிருந்து பெற்றது?
    இராட்டையில்லை; பஞ்சில்லை நூல் நூற்றது யார்?
    தன்னுடல் நூலெடுத்து வலையாக்கிய சிலந்தி
    தனக்குள் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது போல
    தான் படைத்த உடலைத் தனக்குள் வைத்துக் கொள்வான்
    கூடலசங்கமதேவன்“

    12. “குதிரையேறி வருபவர்களைக் கண்டால்
    முன்னால் விழுந்து கால்களைப் பிடிப்பார்கள்
    ஏழ்மையான சரணர் வந்தால்”தள்ளிப் போ “ என்பார்கள்
    என்னிறைவன் கூடலசங்கமதேவன்
    அவர்களைப் பார்த்தால்
    கீழே தள்ளி மூக்கறுக்காமல் விடுவானோ?”

    13. “கணவன் மீது நம்பிக்கையில்லாத மனைவி
    இலிங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத அடியவன்
    இருந்தென்ன ? போயென்ன ?
    குடிப்பதற்குக் கொடுக்காத பசுவிடம்
    குடிக்காத கன்றை விட்டது போலாம்
    கூடலசங்கமதேவய்யனே“

    14. “சாதியின் பெயரால் தீட்டைத் தேடுவார்கள்
    ஓளியைப் பிடித்துக் கொண்டு இருளைத் தேடுவார்கள்
    மூடமனிதனே எதற்கு இது ? சாதியில் உயர்வென்பாய்
    கோடி அந்தணர் இருந்து பயனென்ன?
    ’பக்தனே சிறந்தவன் ”என்கிறது வசனம்
    கூடலசங்க அடியாரின் பாதத்தை நம்பிடுவாய்
    கெடவேண்டாம் மானிடனே“

    15. “உடல் உனதென்றான பிறகு வேற்றுடல் எனக்கில்லை
    உள்ளம் உனதென்றான பிறகு வேற்றுமனம் எனக்கில்லை
    பொருள் உனதென்றானபிறகு வேற்றுப் பொருள் எனக்கில்லை
    மூன்றும் உனதான பிறகு வேற்றெண்ணம்
    எனக்குண்டோ கூடலசங்கமதேவனே?”

    [தொடரும்]

    [ஏப்பிரல் திங்கள் 26ம் நாள் பசவஜெயந்தியாக கர்நாடக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவருகிறது. அதை யொட்டி இக்கட்டுரை]

    Share
  • எழுவகைப் பெண்கள் – 15

    எழுவகைப் பெண்கள் – 15

    அவ்வைமகள்

     சீப்பு எனும் உடல்நலக் கருவி  

    பெண்களின் உடல் நலம் என்கிற வகையில், தலைமுடி  பற்றி, நானும்  அந்த இராணுவ அதிகாரியும்  பேசிக்கொண்டு வரும் இத்தருணத்தில், அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்: பெண்களின் உடல் நலத்தில், தலை வாருவதற்குப் பயன்படுத்தும் சீப்புகளுக்கு  ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா? ஆண்களும் பெண்களும் பொதுவாக வெவ்வேறு விதமான சீப்புகளைப் பயன்படுத்துகிறார்களே அதனால் தான் கேட்கிறேன் என்றார்.

    “ஆம்! சீப்புகளுக்குத் தலைமுடிப் பராமரிப்பிலும் ஆரோக்கியத்திலும், ஏன் ஒட்டுமொத்த, தலை ஆரோக்கியத்திலும் கூட முக்கியப் பங்கு உள்ளது!”

    இந்த முக்கியத்துவத்தை முதலில் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு சீப்பு விஷயத்தில் பெண்-ஆண்  வித்தியாசங்களைப் பார்ப்போமே என்று தொடர்ந்தேன்.

    பார்க்கப்போனால், சீப்பு என்பது மனிதகுல வளர்ச்சியில் இன்றியமையாத அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே சீப்பு மனிதப் பயன்பாட்டில் இருந்ததை வரலாறு காட்டுகிறது என்றால் சீப்பு என்றைக்கோ எப்போதோ உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்த ஓர்  அன்றாட வாழ்க்கைப் பொருள் என்பது விளங்கும்.

    Prehostoric என்று சொல்லப்படுகிற வரலாற்றுக்கு முந்தைய ஆதிகாலத்திலிருந்தே, சீப்பு மனிதனது பிரிவறியாத துணையாக இருந்திருக்கிறது எனலாம். எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததாகச் சொல்லப்படும்  சீப்பைப் போலவே இன்றைய சீப்பும் இருக்கிறது என்பதால், சீப்பு என்பது ஆதிகாலத்திலேயே அதனுடைய முத்தாய்ப்பான பணித்தொழில்நுட்ப வடிவத்தை (Working technical design) அடைந்துவிட்டது எனலாம்.

    புராதன எகிப்தியச் சீப்பு:

    http://phthiraptera.info/sites/phthiraptera.info/files/222%2C%20LouseEggChristmas%20Cave2012.pdf

    பத்தொன்பதாம் நூறாண்டு இந்தியச் சீப்பு

    https://www.atlasobscura.com/articles/some-of-historys-most-beautiful-combs-were-made-for-lice-removal

    தற்காலத்துச்  சீப்பு : inplastico.com/en/1557-double-wooden-comb-for-lice-and-nits.html

    எந்த ஒன்று மனித வாழ்க்கைக்கு, அன்றாட இன்றியமையாத தேவையாகிறதோ அதுமட்டுமே உச்சபட்சத் தொழிநுட்பப் பணித்தொழில்நுட்ப வடிவத்தை  ஆதி காலத்திலேயே பெற்றுவிடமுடியும். இது, அறிவியல் உலகில் ஒரு விதி. எனவே, சீப்பு என்பது தொடக்க நாள் முதலே மனித வாழ்க்கைக்கு எத்தனை அவசியமானதாக  இருந்து வந்திருக்கிறது என்பது உங்களுக்கே புரியும் .

    சீப்பு பற்றிய இன்னுமொரு அதிசயம் என்னவென்றால், உலகில் சீப்புக்கெனவே மூன்று அருங்காட்சியகங்கள் உள்ளன. அலாஸ்காவில் ஒன்றும், பிரிட்டன் கேம்பிரிட்ஜில் ஒன்றும், ஜெர்மனியில் ஒன்றும் என மூன்று சீப்பு அருங்காட்சியகங்கள் உலகில் உள்ளன என்பது  சீப்புப் பயன்பாட்டின் புராதனத் தன்மையைப்  போதுமான அளவு  விளக்கும் என நினைக்கிறேன். சொல்லப்போனால், இன்று நாம் காணும், உலகின் பழங்குடியினரின் புகைப்படங்கள் யாவுமே, பண்டைக்காலந்தொட்டே, தலைமுடியை வாரி முடிப்பது என்பது மனிதர்களின் பழக்கமாகவே இருந்திருப்பதைப்  பறைசாற்றுகின்றன  – என்றேன்.

    https://tribal.nic.in/DivisionsFiles/tribalFaces.pdf

    https://www.akpool.co.uk/postcards/26489518-postcard-ceylon-sri-lanka-kandyan-woman-junge-frau-im-gewand-halsschmuck

    அப்படி சீப்பு என்னதான் நமக்கு உதவி பண்ணுகிறது? என்றார்.

    பறவைகள் தம் அலகால் இறகைக் கோதி மினுமினுக்கச் செய்வது போன்றது, நாம், நம் தலைமுடியைச் சீப்புக்கொண்டு வாருவது. மயிரின் வேர்க்காலில் சுரக்கும் செபத்தை அங்கிருந்து நகர்த்தி, தலைமுடி நெடுகிலும் தீற்றுவதற்ககு, சீப்பால் வாருதல் அவசியம். செபம் நன்கு சுரந்து,  ஆரோக்கியமான தலைமுடி உள்ளவர்கள், பொதுவாகத் தலைமுடியை அழுத்திப் படிய வாரியதும், அவர்களது முடி பளபளப்புடன் ஜொலிப்பதைக் காணலாம். இவ்வாறு சீப்பால் தலையை வாருவதால், செபச்சுரப்பிகள் தூண்டிவிடப்பட்டு, செபம் ஆரோக்கியமாகச் சுரக்கலாகும். நம் மண்டையின் உஷ்ணத்தாலும் சுற்றுச்சூழலின் காற்று மற்றும் உஷ்ணத்தினாலும் செபம் உலர்கிறது என்பதால் சிறுதளவு  எண்ணெய் தடவி  செபத்தை இளக்கி, தலைமுடியை வாருவது அவசியமாகிறது.

    எவரொருவரது  மண்டையும் முடியும் செபத்தின் ஈரப்பதத்தோடும் எண்ணெய்ப் பசையோடும்  இருக்கிறதோ அதுவே ஆரோக்கியமான தலை என்று கருதப்படுவது. எனவே தான் சீப்புக்கொண்டு தலைவாருவது என்பது தினசரிப் பழக்கமானது.

    சொல்லப்போனால், சீப்பு கொண்டு தினமும் வாரப்படாத தலை, வறட்சி கொள்கிறது.

    ஏனென்றால், நாம் ஏற்கனவே பேசியபடி, முடியின் அடியிலிருந்து நீக்கி நீவப்படாத செபம் உறைந்து, புதுச்செபம் சுரப்பதை நிறுத்தி,  மண்டையை வறள வைக்கிறது. மண்டையில் வறட்சி ஏற்படுகிறதென்றால், அங்கே, வெகு பல பிரச்சினைகள் வெகு துரிதமாகத் தோன்றிவிடும்.

    சீப்பால் வாருவதால் ஏற்படும் கூடுதல் நன்மை  என்னவென்றால்,  மண்டையில் இரத்த ஓட்டம் நன்கு தூண்டிவிடப்படுகிறது.  மண்டையில் ரத்த ஓட்டம் பரவியது என்றால், உடல் முழுவதும் உள்ள நாடி நரம்புகள்  புத்துணர்ச்சி இருக்கின்றன. எனவேதான், ஒரு நாளைக்கு இருமுறை சீப்பு வைத்துத்  தலையை அடிமுதல் நுனிவரை வாருதல் அவசியம் என்று கூறப்படுகிறது.

    சீப்பால்  தலைமுடியை வாருவதால் உடலின் மொத்த ஆரோக்கியமும் பெருகும் என்பது எங்கள் குலத்தின் ஞானம் அல்ல. உலகின் பல்வேறு பண்டைய சமூகங்கள் (எடுத்துக்காட்டாக – எகிப்திய – மெசபொடோமியச் சமூகங்கள்) இந்த ரகசியத் தொடர்பை அறிந்திருந்தன எனவேதான் அவை   சீப்பின் உபயோகத்தில் இருந்தன.

    அதிருஷ்டவசமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த ஆரோக்கியப் புரட்சியில்  ஏறக்குறைய உலக மக்கள் அனைவருக்குமே சீப்பின் பயன் பற்றிய  ஞானம் மறுமலர்ச்சி பெற்றது  எனலாம்.

    ஆம்! இன்று நாம் கோவிட்  19 ல் அவதிபடுவது போல, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், உலகம்   பல்வேறு உடல்நலப்பிரச்சனைகளைச் சந்திக்க நேரிட்டது. அம்மை, காலரா, காசநோய் ஆகியன தொற்றுநோய்களாக வெகு அளவில் உலக அளவில் பரவி மனித இழப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில், இந்நோய்கள் இன்னபிற சங்கடங்களோடு  தலைமுடியையும்  உதிரவைத்தன. அதைவிடக் கொடுமை என்னவென்றால், இவற்றுக்கான மருந்துகளும் தலைமுடியைத் தாக்கின. பலர் முடியின்றி வழுக்கை மண்டையாக மாறினர்.

    இந்நிலையில் தான், அமெரிக்காவில், ஓர் உடல் நலப்புரட்சி நடக்கிறது. ஒட்டுமொத்த உடல் நலப்புரட்சி, Holistic Health Reform of the Ninteenth Century,  என்பதான   இப்புரட்சியில், தலைமுடி நலம் என்பது முக்கியமானதாகக் கருதப்பட்டது.

    எடுத்துக்காட்டாக, 1904இல் நியூயார்க்கிலிருந்து வெளிவந்த ஒரு பிரசித்தி பெற்ற புத்தகமான, How to Care for Hair at All  Times [1]  உடல்நலத்தில் சீப்பின் பங்கை எடுத்துரைக்கிறது. இப்புத்தகம் என்ன சொல்கிறது என்றால், சீப்பால் தலையை வாருவது, தலையில் உள்ள தமனிகளைத் தூண்டிவிடுகிறது – இந்தத் தூண்டுதலால், தலைமுடியின் வேர்க்கால்கள் உறுதியடைகின்றன என்பதோடல்லாது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடல் அங்கங்கள் யாவும் புத்துணர்ச்சி பெறுகின்றன.

    இந்தப் புத்தகம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக அளவில் ஏற்பட்ட ஒட்டுமொத்த உடல்நலப் புரட்சியில் ஒரு முக்கிய அங்கம் வகித்ததாக அறிகிறோம் என்கிற அளவில், ஒட்டுமொத்த உடல் நலத்தில்,  தலைமுடியைச் சீப்பால் வாருதல் என்பதன் இன்றியமையாதத் தன்மை பற்றி உலகில் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்பட்டது என்று அறிகிறோம்.   தலைமுடியை வாருவதற்கு மட்டுமல்ல, தலைமுடியை பிரஷ் செய்து தூய்மைப்படுத்தவும் பல்வேறு விதமான சீப்புகள் அமெரிக்காவில் முளைத்த மாபெரும் வணிகக்க காலம் இது.

    வாருவதற்கும் பிரஷ் செய்வதற்கும் மட்டும் சீப்புப் பயன்படுவதில்லை. சீப்புக்கு இன்னுமொரு பங்களிப்பும் உண்டு. தலையில் பேன் பீடித்ததென்றால், பேன்களை அகற்றி ஒழிக்கவும் சீப்புத் தேவைப்படுகிறது. நான் மேலே காட்டியுள்ள மூன்று சீப்புகளுமே பேன் நீக்கும் சீப்புகளே.

    எனவே சீப்பு என்பது நாம் நினைப்பதை விடவும் கூடுதலான சிறப்புக் குணாதிசயங்களைக் கொண்டது என்பது புரிகிறது அல்லவா?

    நாம் பயன்படுத்தும் சீப்பு எந்தப் பொருளினால் செய்யப்பட்டது என்பது சீப்புப் பயன்பாட்டில்  முக்கியமான விஷயம்.

    பண்டை நாட்களில் சீப்பு, மரம், எருமை மாட்டுக்கொம்பு, தந்தம், ஆகியவற்றால் மட்டுமே செய்யப்பட்டது. மரம் என்றால் எல்லா மரத்திலும் சீப்புச் செய்யப்படமாட்டாது. வேம்பு, நுணா, ஜாதிக்காய், கருங்காலி, செம்மரம் (மகோகனி) போன்ற மரங்கள் மட்டுமே சீப்புச் செய்யப் பயன்படுத்தப்பட்டன. சிக்கெடுக்க, மூங்கிலால் ஆன சீப்புகள்  தயாரிக்கப்பட்டன.

    ஈர்க்கொல்லிகள் என்று நீளப் பிடி கொண்ட சீப்பு வகை உண்டு. பேனின் முட்டைகளுக்கு ஈர் என்று பெயர். அந்த ஈர்களை, இழுத்தெடுத்துக் கொள்பவை ஈர்க்கொல்லிகள். ஈர்க்கொல்லிகளின் பற்களும் நீளமானவை என்பதோடு, அப்பற்கள் உறுதியாகவும் உடையாத நெளிவுத்தன்மை உடையதாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான், இழுத்தெடுத்த ஈரை, அப்படியே பற்களுக்கிடையே நெளித்திடுக்கிக் கொல்ல முடியும். எனவே ஈர்க்கொல்லிகள் பெரும்பாலும் உறுதியான கருங்காலி, செம்மரம் போன்றவற்றில் மட்டுமே செய்யப்பட்டு வந்ததாக அறிகிறோம்.

    தந்தச்  சீப்பைப் பொறுத்த மட்டில், எங்கள் நாட்டில்,  யானைத் தந்தத்தால் ஆன சீப்புகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்திருந்ததாக அறிகிறோம். செல்வந்தர்கள் அரச குடும்பத்தினர் ஆகியோர் வசம்,  தந்தச் சீப்பின் பயன்பாடும் தங்கத்தால் ஆன  சீப்பின் பயன்பாடும்  இருந்திருக்கிறது. ஆனால், பிற நாட்டுப் பண்டைய சமூகங்கள், நீர்யானையின்  தந்தம், காட்டுப் பன்றியின் எலும்பு, ஆமையின் ஓடு என இன்னபிற தந்த வகைகளையும் சீப்புச் செய்யப் பயன்படுத்தியதை அறிகிறோம் .

    எங்கள் நாட்டில், ஒரு  சில  இடங்களில் பித்தளையால் ஆன, மிக நெருங்கிய பற்கள் கொண்ட  மிகப் புராதனமான சீப்புகளும் கூடக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இவை கிடைக்கப் பெற்றிருப்பதால்,  ஏதோ விசேடப் பயன்பாடாக மட்டுமே இந்தப்  பித்தளைச்  சீப்புகள் புழக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இவ்வாறு எங்கள் நாட்டில் கிடைத்த புராதனப் பித்தளைச் சீப்புகள், மூடியிட்டதான ஒரு திரவக்கலமாக  வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

    https://onedrive.live.com/Edit.aspx?resid=2BBA21C9F3B27084!344&wdPid=7b6ccb36

    திரவக் கலத்தில் வாசனாதி திரவியங்கள் கலக்கப்பட்ட நீரை ஊற்றி மூடி, அந்த பித்தளைச் சீப்புக்களைத் தலைமுடியில் செருகிக்கொள்வார்களாம். சீப்பின் கால்களின் வழியாக, வாசனாதி திரவியங்கள் மயிர்க்கால்தோறும் இறங்கி முடியின் மயிர்க்கால்களை ஈரப்பதத்துடனும் நல்ல மணத்துடனும் வைத்துக்கொள்ள உதவின என்று விக்கிபீடியா குறிப்பினின்று  அறிகிறோம்.

    ஆனால், நன்கு சிந்தித்துப் பார்த்தோமேயானால் இவ்வகையான திரவக் கலன் கொண்ட சீப்புக்கள் மருத்துவச் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டன  என்றே நம்மால்  ஊகித்து உணர முடிகிறது.

    இன்றைய ஆயுர்வேத எண்ணெய் வடி ஊற்றல் முறையான ஷீரோதாரா முறைக்கும் முந்தையதான எண்ணெய் மருத்துவமாகச் சீப்பு வழி எண்ணெய்  வடி ஊற்றல் மருத்துவ முறையம் எங்கள்  வாழ்வியலில் இருந்திருக்கின்றது.

    பித்தளை ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதற்குக் காரணம் உண்டு. அறிவியல் ஞானத்தின்படி, தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டு உலோகங்கள் நம் தலைமுடியில் செறிவு அடைகின்றன. இந்த இரண்டு உலோகங்களும் போதிய அளவில் முடியின் வேர்க்காலில் செறிவு அடையவில்லையென்றால், முடி கொட்டுதல் உள்ளிட்ட, பல்வேறு  விதமான  தலைமுடி மற்றும் மண்டைப் பிரச்சினைகள் தோன்றும், என்பதோடு, ஞாபகமறதி, புத்திமந்தம் போன்ற பிரச்சனைகள் கூடத்  தோன்றும் என்று சொல்லப்படுகிறது. எனவேதான், எல்லாப் பிரசித்திபெற்ற தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களிலும், இன்று தாமிரமும் துத்தநாகமும் கண்டிப்பாக இருப்பதைப் பார்க்கிறோம்.

    தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டு உலோகங்களுமே Trace Metals எனப்படும் நுண் அளவில் மட்டுமே உடலில் இருப்பதான  உலோகங்கள். வளர்சிதை மாற்றத்தில் இவை அதிகப் பங்கு வகிப்பவை.  ஆக, உடலில் வளர்சிதை மாற்றத்தில் நேரடிப் பங்கு வகிப்பதால் முடியில் தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டு உலோகங்களுமே செறிவதில் வியப்பேதும் இல்லை. ஆக, முடியின் வேருக்கு மிகக்குறைத்த அளவில் தாமிரமும் துத்தநாகம் தேவைப்படுகிறது என்பதை உணர்க.

    பித்தளை என்பது தாமிரமும் துத்தநாகம் சேர்ந்த உலோகக் கலவையாகும். பித்தளை எண்ணையில் கரையவல்லது. எண்ணெய் பட்டால், பித்தளையில்  களிம்பு ஏறுவதை நாமறிவோம். களிம்பு என்பது எண்ணையுடன் பித்தளை நிகழ்த்தும் ஒரு வேதியியல் வினையாகும். அதிகப்படியாய் எண்ணெயில் கரைந்த பித்தளையே களிம்பு. அது  நஞ்சு.

    ஆனால், வெகு  சிறிதளவே பித்தளை எண்ணெய்யில் கரைந்ததென்றால், அந்த எண்ணெய்  முடியின் வேருக்கு ஊட்டச் சத்தாகும். எனவேதான், பித்ததளை சீப்புக்கள் கொண்டு மருத்துவ எண்ணெய்த் தைலங்களை வைத்து, தலைமுடி மற்றும் மண்டைக்கான சிகிச்சைகள் நடத்தப்பட்டன.

    எங்கள் நாட்டில், மரகதக்கல்லில் இழைத்துச் செய்யப்பட்ட சீப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.  பித்தளைச் சீப்புக்களைப் போலவே, மருத்துவ எண்ணெய்த் தைலங்களை வைத்து, தலைமுடி மற்றும் மண்டைக்கான சிகிச்சைகளுக்காகவே மரகதக்கல் சீப்புக்களும்   தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வந்தன. மரகதக் கல்லில், தாமிரம், இரும்பு, துத்தநாகம், மக்னீசியம் ஆகிய உலோகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  சீனாவிலும் பண்டைய நாட்களில் மரதக்கல் சீப்புக்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அங்கும் இவை, சிகை மற்றும் சிரசு மருத்துவச் சிகிச்சைக்காகவே பயன்படுத்தப்பட்டன.

    சீனாவின் புராதன மரகதக்கல்  சீப்பு:
    https://www.metmuseum.org/art/collection/search/72544

    சீப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு உலகமக்களிடையே பெருகியிருந்த காலகட்டத்தில் தான், பிளாஸ்டிக்  பொருட்கள், 1940 வாக்கில் நம் பயன்பாட்டுக்காக, அறிமுகப்படுத்தப் பட்டன. ஆனால், 1970 கள் தொடங்கி, மிக அதிகமான அளவு பிளாஸ்டிக் பொருட்கள் நம் மீது திணிக்கப்பட்டன.

    பிளாஸ்டிக் சீப்புக்கள்  இவ்வாறு தான் நம் இல்லங்களில்  நுழைந்து – நம் கைகளுக்கு வந்து – நம் தலைக்கும் போய்ச்  சேர்ந்தன.  இதனால், நாம், மரம் மற்றும் எருமைக் கொம்பினால் ஆன சீப்புகளைத் துறந்தோம் – மறந்தோம். பிளாஸ்டிக் சீப்புகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம்.

    ஆனால், பிளாஸ்டிக் சீப்புக்கள் நன்மையை விட தீமையையே அளிப்பவை. ஏனென்றால், நம் தலைமுடி நேர்மின்சாரத்தன்மை கொண்டது, பிளாஸ்ட்டிக்கோ, எதிர்மின்சாரத் தன்மை உடையது, இவ்வாறான இரு எதிர் மின்சாரத் தன்மை கொண்ட பொருட்கள் ஒன்றை ஒன்று உரசும்போது அங்கே, நிலைத்த  மின்சாரம் (Static Electricity) உருவாகும். Triboelectric Series எனப்படும் நிலைமின்சாரத் தன்மை கொண்ட பொருட்களின் பட்டியலைப் பார்த்தால், நம் தலைமுடி நேர்மின்சார அளவில் உயர்ந்தும், பிளாஸ்டிக் எதிர்மின்சாரத் தன்மையில் உயர்ந்தும் நிற்கின்றன.

    https://alisiteblog.wordpress.com/2015/11/08/static-swiffers/

    எனவே, நம் தலைமுடியோடு பிளாஸ்டிக் சீப்பு உரசினது என்றால், தலைமுடியில், வலிமையானதொரு நிலைத்த மின்சாரம் உருவாகி, அது நம் முடியை கிளர்த்தெழச் செய்து, முடியைப் பலவீனப்படுத்துகிறது. முடி சக்தி இழந்து, நுனி வெடிப்பது, வேர் கழன்று விழுவது போன்றவை பிளாஸ்டிக் சீப்பினால் நிகழ்கின்றன.

    https://duux.com/en/static-electricity-explained/

    அதுவும், உலர்ந்த முடியில் பிளாஸ்டிக் சீப்பால் வாரும்போது மிக அதிக அளவில் நிலைத்த மின்சாரம் உருவாகும்: https://www.youtube.com/watch?v=l1FpIbEAsZk

    சலூன்களில், முடி வெட்டும்போதும் இன்னபிற அலங்காரங்களைச் செய்துகொள்ளும்போதும் கூட, நிலைத்த மின்சாரம் உருவாகி, அழகு செய்யும்போதே, முடியும் பலவீனப்படுத்தப்படுகிறது: https://www.youtube.com/watch?v=l1FpIbEAsZk

    மரச் சீப்புக்கள், தந்தச் சீப்புக்கள், கொம்புச் சீப்புக்கள் ஆகியன மிகக் குறைந்த அளவிலான நிலைத்த நேர் மின்சாரம் கொண்டவையாக இருக்கின்றன. எனவே இவற்றால் ஆன சீப்புக்கள் கொண்டு தலைமுடியை வாரும்போது, சீப்பும் தலைமுடியும் எவ்வித மின்சார வினையிலும்  ஈடுபடுவதில்லை. அதனால்,  நம் தலைமுடியில் மின்சக்தி உருவாகுவதில்லை. எனவே, தலைமுடியும் மண்டையும் பலவீனப்படுவதில்லை.

    தந்தச் சீப்புகள் இனிமேல் கிடைக்காது – கொம்பு சீப்புகளைத்  தயாரிக்கும் கலை  மறைந்து விட்டது ஆனால், மரச்  சீப்புகளைச் செய்வோர் இன்னமும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள்  – என்றேன். மரச் சீப்புகளுக்கு நாம் மாறிக்கொள்ள இன்னமும் யோசனை செய்யத் தேவையில்லை, ஏனெனில் இது உடல்நலம் சார்ந்த விஷயமில்லையா?  என்றார்.

    [மேலும் பேசுவோம்]  

     

    பயன்பட்ட நூல்கள்

    [1] Juliot Marion Lee (1904). How to Care for the Hair at All Times; Juliot Hair Culture Company, New York.

    Share
  • நாலடியார் நயம் – 10

    நாலடியார் நயம் – 10

    நாங்குநேரி வாசஸ்ரீ

     10. ஈகை

     பாடல் 91

    இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
    உள்ளஇடம் போல் பெரிதுவந்து – மெல்லக்
    கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
    அடையாவாம் ஆண்டைக் கதவு.

    பொருள் இல்லாத காலத்தும்
    பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து
    தம்மால் இயன்றதை இயல்பாகத்
    தரும் குணமுள்ள மாந்தருக்கு
    அவ்வுலகத்துக் கதவுகள் என்றும்
    அடைக்கப்படாமல் திறந்திருக்கும்.

    பாடல் 92

    முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
    பின்னரும் பீடழிக்கும் நோயுள; – கொன்னே
    பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
    கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.

    முன்னே இறக்கும் நாள் காத்திருக்க
    முதுமையெனும் வெறுக்கத்தக்க
    காலம் வந்ததோடு உடல்வலிமை
    குறைக்கும் நோய்களும் வருதலால்
    பொருள் உள்ள காலத்தே மேலும்
    சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாதீர்!
    சேர்த்த பொருளை இறுகப் பற்றியிராதீர்!
    பலருக்கும் கொடுத்து ஒளிக்காது
    பகுத்து உண்ணுங்கள்.

    பாடல் 93

    நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
    கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
    இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
    விடுக்கும் வினையுலந்தக் கால்

    அடுத்தவருக்குக் கொடுத்து
    அனுபவித்தாலும் செல்வம்
    அதுவாகச் சேரும் காலத்தில்
    அண்டிவந்து சேரும்
    நம்மிடத்தே பொருள் சேர்த்த
    நல்வினை தொலையும் நேரம்
    இறுக்கிப் பிடித்தாலும் நில்லாது
    இல்லாமல் நீங்கிவிடும்
    இதை உணராதார் வறுமையால்
    இன்னலுற்று உதவி நாடிவருபவர்
    துயரைப் போக்க மாட்டார்.

    பாடல் 94

    இம்மி யரிசித் துணையானும் வைகலும்
    நும்மில் இயைவ கொடுத்துண்மின் – உம்மைக்
    கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
    அடாஅ அடுப்பி னவர்.

    இம்மியளவு அரிசியின் அளவாவது
    இயன்றவரை பிறருக்குத் தினமும்
    அளித்துப் பின் உண்ணுவீர்!
    ஆழிசூழ் இவ்வுலகில் சமைக்காத
    அடுப்புடைய பிச்சையெடுப்போர்
    அடுத்தவருக்கு உதவாதவர்
    அவர்தம் முற்பிறப்பிலென
    அறிந்து செயல்படுவீர் நாளூம்.

    பாடல் 95

    மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
    உறுமா றியைவ கொடுத்தல் – வறுமையால்
    ஈதல் இசையா தெனினும் இரவாமை
    ஈதல் இரட்டி யுறும்.

    மேலுலகப் பயனையும்
    மேவும்இவ்வுலகப் பயனையும்
    தம் மனதில் நினைத்து
    தம்மால் இயன்ற அளவு
    தானம் செய்வீர்!
    கொடும் வறுமை காரணமாய்
    கொடுக்க இயலாவிடினும்
    பிச்சைகொள்ளாமல் இருத்தல்
    பிறருக்கு ஈவதைக் காட்டிலும்
    இருமடங்கு நல்லது.

    பாடல் 96

    நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
    படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
    குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
    இடுகாட்டுள் ஏற்றைப் பனை.

    வள்ளன்மையுடன் பலரும் விரும்புமாறு
    வாழ்பவர் ஊர்நடுவே மேடைசூழ நிற்கும்
    பயன்தரும் பெண்பனை போன்றோர்
    பல்வளம் பெற்றிருந்தும் பிறருக்கு ஈந்து
    தான் உண்ணாத மக்கட்பண்பு இல்லாதோர்
    தனித்து சுடுகாட்டில் நிற்கும் ஆண்பனைக்கு
    ஒப்பானவரே.

    பாடல் 97

    பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
    செயற்பால செய்யா விடினும் – கயற்புலால்
    புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
    என்னை உலகுய்யுமாறு.

    கயல்மீனின் புலால் நாற்றத்தைக்
    கடற்கரை புன்னைமலர் போக்கும்
    அலை மோதும் குளிர் கடற்கரையுடை
    அரசனே! பருவ மழை தவறினாலோ
    அகிலத்து உயர்ந்தோர் செய்யத்தக்க
    உதவிகளைச் செய்யாது விடுத்தாலோ
    உலகத்து உயிர்கள் எவ்வாறு பிழைக்கும்?

    பாடல் 98

    ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்
    ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் – ஆற்றின்
    மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
    பொலிகடன் என்னும் பெயர்த்து.

    வளம்மிகு குளிர்ச்சிநிறை கடற்கரையுடை
    வேந்தனே! ஏந்தியவனின் கையை மறுக்காது
    இன்னார் என வரையறை செய்யாது
    இரந்து பெற்றதைத் திருப்பித் தர
    இயலாத வறியவருக்கு ஒன்று
    ஈதலே ஆண்மகனின் கடமையாம்
    திருப்பிக்கொடுக்க முடிந்தவர்க்குத்
    தரும் ஈகை கடன் எனப் பெயர்பெறும்.

    பாடல் 99

    இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
    அறப்பயன் யார்மாட்டும் செய்க – முறைப்புதவின்
    ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
    பைய நிறைத்து விடும்.

    கொடுப்பது அற்பமானது என நினையாது
    கேட்டவர்க்கு இல்லை எனச் சொல்லாது
    எப்போதும் எப்படிப்பட்டவர்க்கும்
    ஏற்ற பயனுடைய தருமத்தைச் செய்க!
    வாயில் தோறும் பிச்சை ஏற்கும்
    வாழ்க்கை துறந்த தவசியின் பிச்சைப்பாத்திரம்
    மெதுவாக நிரம்புவதுபோல் நல்வினைப்பயன்
    மெல்ல மெல்ல முழுமையாக நிரம்பிவிடும்.

    பாடல் 100  

    கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
    இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
    அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
    கொடுத்தார் எனப்படுஞ் சொல்.

    குறுங்கோலால் அடிக்கும் முரசின் ஒலி
    கேட்கும் ஒரு காத தூரம் மட்டும்
    ஒலிக்கும் இடியோசை கேட்பது
    ஒருயோசனை தூரம் இருப்பவருக்கே
    தகுதியுடை சான்றோர் கொடுத்தார் எனும்
    தக்க புகழ்ச் சொல் கேட்பதோ
    அடுக்கப்பட்டிருக்கும் மூவுலகங்களுக்கும்.

    Share
  • கற்பனைத் தேரேறி கவலையை ஓட்டு!

    கற்பனைத் தேரேறி கவலையை ஓட்டு!

    கவியோகி வேதம்

    கற்பனைத் தேரில்நீ பறந்து சென்றால்
    கவலையும் உன்னைவிட் டோடி டாதோ?
    அற்பமாம் வேதனை முட்கள் எல்லாம்
    அந்தஓர் தேர்மூலம் மாய்ந்தி டாதோ?

    விண்ணில்உன் கற்பனை பாய்ந்து சென்றால்
    மேவிடும் காட்சிகள் இன்பமன்றோ?!-மனக்
    கண்ணிலே தென்படும் அமுதக் குடம்உன்
    கவலை- அசுரரை மாய்க்குமன்றோ!

    வளைந்துமே விண்ணிலே ஓடும்அந் நாரையும்
    மாயைய டாஇந்த உலகம் என்னும்!
    உளையும்உன் எண்ணமாம் குப்பை எல்லாம்
    ஒன்றாகிச் சொற்களுள் தேய்ந்து விடும்!!

    கவிதையாம் வானில்நீ பார்க்கலையோ அந்தக்
    கந்தர்வன் ரம்பையைத் தழுவுவதை?-
    புவியைத் தொடப்போம் இருள்முகிலும் உன்னில்
    புதுமையாம் சொற்களை விதைப்பதுவை?

    அம்பிகை உன்னையிங் கழைப்பதுவை உன்றன்
    அமுதக் கவிதையால் கண்டுவிடு! –(இந்த)
    வம்புக்க ரோனாஉனைப் பார்க்கும் முன்-அந்த
    மாயக்கைக் குள்ளே ஒளிந்துவிடு!

    Share
  • வலை ஊடக வாய்ப்புகள் – அண்ணாகண்ணன் கருத்துரை

    வலை ஊடக வாய்ப்புகள் – அண்ணாகண்ணன் கருத்துரை

    ‘தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 25.01.2020 அன்று நடைபெற்ற ஒருநாள் பயிலரங்கில், ‘வலை ஊடக வாய்ப்புகள்’ என்ற தலைப்பில், முனைவர் அண்ணாகண்ணன் வழங்கிய கருத்துரை. 

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அமெரிக்காவும் கோவிட்-19 வைரஸும்

    அமெரிக்காவும் கோவிட்-19 வைரஸும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கோவிட்-19 வைரஸ் மனித இனத்தை முற்றுகையிட வந்தாலும் வந்தது உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் மக்களின் தினசரி வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த ஜீவராசி அணுவிலும் பாதிதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்; இருந்தாலும் மனிதனை எத்தனை கஷ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

    சீனாவின் வூஹான் என்னும் இடத்தில் முதலில் தோன்றிய இதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வூஹான் வைரஸ் என்று அழைக்கிறார்; சீனா வைரஸ் என்றும் கூறுகிறார். சீனாதான் இதை அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் கொடுத்திருக்கிறது என்கிறார்.  சீன அதிபதி ஷியோ இது சீனாவுக்கு வந்த அமெரிக்க விளையாட்டு வீரர்கள் இதைச் சீனாவுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என்கிறார்.  இந்தச் சண்டை ஒரு புறம் இருக்க இது உலகம் முழுவதும் கோவிட்-19 என்று அழைக்கப்படுகிறது. தோன்றிய சில மாதங்களிலேயே இது உலகம் முழுவதும் இருபது லட்சம் மக்களைப் பாதித்திருக்கிறது; ஒரு லட்சத்துப் பதினேழாயிரம் பேர்களின் உயிரைப் பலிவாங்கியிருக்கிறது. உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவில்தான் இதனால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இறப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது. உலக ஜனத்தொகையில் ஐந்தே சதவிகிதம் மக்கள் வாழும் அமெரிக்காவில் உலக இறப்புக்களில் பத்து சதவிகிதம் நேர்ந்திருக்கிறது. இது ஏன் என்று விளக்காமலும், இந்த நிலையை சீர்திருத்துவதில் கவனம் செலுத்தாமலும் எப்போதும்போல் ட்ரம்ப் யாரையாவது குறை சொல்வதில் குறியாக இருக்கிறார்; எப்போதும்போல் தினம் தினம் பொய்களாகக் கூறிவருகிறார்.

    நோய்த் தடுப்பு மையத்தின் தலைவர் அமெரிக்க மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இல்லாமல் இருக்க வேண்டும், அத்தியாவசியமான தேவைகளுக்குத் தவிர வெளியே எங்கும் போகக் கூடாது என்று கூறிய யோசனைகளையெல்லாம் முதலில் காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்த ட்ரம்ப் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்குள் நிலைமை மிஞ்சிவிட்டது. இறப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. வைரஸ் பற்றித் தான் முதலிலேயே எச்சரித்ததாகப் பொய் சொல்கிறார். பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசாத ட்ரம்ப்புக்கு உலக மகா புளுகன் என்ற பட்டம் கொடுக்கலாம்.

    அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் கீழே போய்விட்டதாம். அதைத் தூக்கி நிறுத்துவதற்கு இப்போது மூடப்பட்டிருக்கும் வணிக நிறுவனங்களைத் திறக்க வேண்டும் என்கிறார். வைரஸின் தாக்கத்தை நிறுத்துவதற்குத் தவறிவிட்ட ட்ரம்ப் இப்போதாவது அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கடைப்பிடிக்கலாம். அதற்குப் பதில் சீக்கிரமே கடைகளையெல்லாம் திறக்க வேண்டும் என்கிறார். அமெரிக்காவில் மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்திச் சில மாநிலங்கள் பொது இடங்களை மக்களின் உபயோகத்திற்கு இப்போதைக்கு விடப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கின்றன. அந்த மாநிலங்களிலுள்ள இவருடைய ஆதரவாளர்களை கடைகளைத் திறக்கும்படி கிளர்ச்சி செய்யும்படி தூண்டிவிடுகிறார். மக்களின் வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்பினால் வைரஸின் பாதிப்பு இன்னும் கூடலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்வதையெல்லாம் ட்ரம்ப் கேட்பதில்லை. இவரை சமூகத்துக்கு எதிரான பபூன் (Sociopath and buffoon) என்கிறார் அரசியல் விமர்சகரும் மொழியியல் ஆளுமையுமான சாம்ஸ்கி. எல்லோரும் கோவிட்-19 என்று குறிப்பிடும் இந்த வைரஸை ட்ரம்ப் சீன வைரஸ் என்று குறிப்பிடுவதால் சீனர்களுக்கு எதிரான வன்மம் அமெரிக்காவில் கூடியிருக்கிறது என்கிறார்கள். இப்படிப்பட்ட ட்ரம்ப்பை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுத்ததற்கு இன்னும் என்னென்ன பலன்கள் அனுபவிக்கப் போகிறார்களோ அமெரிக்க மக்கள்.

    நேற்று உணவுப் பொருள்கள் வாங்கக் கடைக்குச் சென்றிருந்தோம். எங்களைப் போன்ற வயதானவர்கள் எங்கும் வெளியில் போகக் கூடாது, உணவுப் பொருள்களைக்கூட கடைக்காரர்களைக் கொண்டுவந்து கொடுக்கச் சொல்லலாம் என்று பலர் கூறுகிறார்கள். இரண்டு தடவை அப்படிச் செய்தபோது பொருள்களுக்கு அதிக விலை வாங்கியதோடு நாங்கள் கேட்காத சாமான்களைக் கேட்ட சாமான்களுக்குப் பதிலாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அதனால் நாங்களே நேரில் போவதென்று முடிவுசெய்தோம்.  இது நாங்கள் வழக்கமாகப் போகும் கடைதான். இது மற்ற கடைகளைப்போல் பெரிய சூப்பர் மார்க்கெட் அல்ல.  காய்கறிகள், பழங்கள், பால், சீஸ், ரொட்டி வகைகள்தான் இங்கு அதிகமாகக் கிடைக்கும்.  இந்தக் கடை திறப்பது காலை 8 மணிக்கு. நாங்கள் 8:10-க்குச் சென்றபோது ஏற்கனவே பத்துப் பேர் கடைக்கு வெளியில் 6 அடி இடைவெளி விட்டு வரிசையில் காத்திருந்தார்கள்.  கடைச் சிப்பந்தி ஒருவர் வாயிலின் அருகில் நின்றுகொண்டு உள்ளே செல்வோர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். ஒருவர் சாமான்களை வாங்கி முடித்து வெளியில் வரவும் இன்னொருவரை உள்ளே அனுப்பினார். இப்படிச் செய்ததால் கடைக்குள் நாலைந்து பேர்களே இருந்தனர். பில் போடுபவர்களும் இரண்டு பேர்தான் இருந்தனர். இதனால் ஒருவரிடமிருந்து இன்னொருவர் 6 அடி தூரம் நிற்க முடிந்தது. உணவுப் பொருள்கள் விற்கும் கடைகளில் வரிசை என்பது அமெரிக்கா இதுவரைக் கண்டிராத ஒன்று. வைரஸ் இதைச் சாதித்துவிட்டது.

    வைரஸ் இரண்டாவது முறையாக 2020 அக்டோபர், நவம்பர் மாதங்களில் இன்னும் அதிகத் தீவிரத்தோடு வரலாம் என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.  யாரையும், எந்த நாட்டையும் தண்டிக்கலாம், அடிக்கலாம் என்று நினைக்கும் அமெரிக்காவின் பாச்சா இந்த கோவிட்-19 வைரஸிடம் பலிக்கவில்லை.  இது அமெரிக்காவை ஒரு உலுக்கு உலுக்கிவிடும்போல் தெரிகிறது. உலகையே பஸ்மமாக்கிவிடக் கூடிய அணு ஆயுதங்கள் அமெரிக்காவிடம் எக்கச்சக்கமாக இருக்கின்றன.  ஆனால் கண்ணுக்கே தெரியாத இந்த வைரஸை ஒன்றும் செய்ய முடியவில்லையே.

    Share