Blog
-

கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவில்லம்
அண்ணாகண்ணன்கணித மேதை சீனிவாச ராமானுஜனின் கும்பகோணம் வீட்டை, சாஸ்திரா பல்கலைக்கழகம், நினைவில்லமாகப் பரமாரித்து வருகிறது. கும்பகோணம் சென்று வந்த பலரும் கூட, இந்த வீட்டை நாங்கள் பார்க்கவில்லையே என்று வருந்தினார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் வீடு பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்க்க ஆவலிருந்தும் முடியாமல் போய்விட்டது என்று நண்பர் முத்துக்குமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். ரேழியும் முற்றமும் கொல்லையும் கொண்ட இந்த வீட்டுக்குள் சென்று வருவது, அந்தக் காலத்திற்கே பயணிக்கும் உணர்வைத் தருகிறது.29.12.2019 அன்று இந்த இல்லத்தைப் பார்த்து, அங்கிருந்த குறிப்பேட்டில், உடனுக்குடன் நான் எழுதிய வெண்பா இது.கனவில் உதித்த கணிதப் புதிர்கள்மனத்தில் விழித்த மனிதன் – தனித்துவராமா னுஜனின் ரகசியப் புள்ளிகள்சாமான்யன் வாழும் சபை.இராமானுஜனுக்குக் கனவில் கணித சூத்திரங்களுக்கு நாமகிரித் தாயார் விடை தந்துள்ளார். கடினமான கணக்குகளுக்குக் கனவில் விடை கண்டு, உடனே எழுந்து அவற்றின் வழிமுறைகளை எழுதுவது கணித மேதை ராமானுஜத்தின் வழக்கம். அவர் பயன்படுத்திய கட்டிலையும் கட்டிலிலிருந்து மேலே பார்க்கும்போது காட்சி தரும் உத்திரத்தையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். -

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-20
தி. இரா. மீனா
தோண்ட்ட சித்தலிங்க சிவயோகி
கன்னட உலகில் இலிங்காயத்துக்களின் வரலாற்றில் மிகச் சிறந்தவராகப் போற்றப்படுபவர். அல்லமா பிரபுவின் வழியிலான சூன்யபீடம் பசவேசர் உருவாக்கிய ஸட்ஸ்தல சித்தாந்தத்தை விளக்கமாகச் சொல்லி அனுபவ மண்டபத்தின் வழிமுறைகளைச் சீரமைத்து உயர்த்தியவர். இவரது சாதனைகள் கல்வெட்டுக்களில் வெளிப்படுகின்றன. மடங்கள், கோயில்கள் ஆகியவற்றிலும் இவர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அரதனஹள்ளி இவரது ஊராகும். தோட்டத்தில் எவ்விதப் பணியும் செய்யாமலிருந்ததால் “தோண்ட்ட சித்தலிங்கா“ என்றழைக்கப்பட்டார். பசவேசரின் வசனங்களை தேடிக்கண்டு பிடித்து தொகுத்து வசன இலக்கியப் பரம்பரையை முன்னடத்திச் சென்ற பெருமை இவருக்குண்டு. ”மகாலிங்க குரு சித்தேஸ்வர பிரபுவே” இவரது முத்திரையாகும்.
1.“ஆட்டுவிக்காமல் ஆடுவதுண்டோ? எரியாமல் சுடுமோ ?
சமைத்ததை மீண்டும் சமைக்கலாமோ?
சுட்ட சட்டி மீண்டும் மண்ணோடு இணையுமா?
நெருப்பு கற்பூரத்தை சார்ந்த பின்பு கரியுண்டோ?
நதியும் நதியும் சேர்வது போல அடியான் இலிங்கமோடிணைந்து
இலிங்கம் அடியானோடிணைய வேண்டும் ஐயனே!
அஞ்ஞானிகளைக் காட்டாதிருப்பாய்
மகாலிங்ககுரு சிவசித்தேஸ்வரப் பிரபுவே“2.“ஈசலை உண்ட நரி தன் செயலுக்கு ஊளையிடுவது போல
பேச்சின் கர்வத்திற்கு ஆகமம் அறிவோம் எனச் சொல்வர்
ஆகமம் அதிமர்மமானது, அது அறிவீரோ மாந்தரே?
ஆன்ம அனுபவத்தின் ஆகமமூர்த்தி அறிவான்
உன் சரணர் அறிவர்
மகாலிங்ககுரு சிவசித்தேஸ்வரப் பிரபுவே“3.“பெருவிரலில் நாகம் தீண்டினால்
உடல் முழுவதும் நஞ்சாகும்
சரணன் உடலில் இலிங்கம் தீண்ட
அவனுடல் முழுவதும் இலிங்கமாகிவிடும்
அழிவிலாத சரணனுக்கு காமத்தின் உறவுண்டோ?
மகாலிங்ககுரு சிவசித்தேஸ்வரப் பிரபுவே“4. “வலமில்லை இடமில்லை முன்னுமில்லை பின்னுமில்லைகாரணம்
அடியற்ற முடியற்ற உடலற்ற
பிடிக்க, விட, காண, பேச,சேர முடியாத இணையற்றவன் நீ
வடிவம் , நினைவற்று மகிமையானவனாதலால்
அருவமில்லா இலிங்கம் நீ
மகாலிங்ககுரு சிவசித்தேஸ்வரப் பிரபுவே“5. “மாயையை வெற்றி கொள்ளாத வரையில்
உடல் நிர்வாணமாகியென்ன?
உலகியலை விடாத வரையில்
மொட்டையடித்தென்ன? எத்தகைய முக்தியிது?
புறத்தோற்றத்தின் அற்பர்களைச் சரணர் விரும்புவதில்லை.
மகாலிங்ககுரு சிவசித்தேஸ்வரப் பிரபுவே“6. “அகப்பை சுவையறியுமா?
சமைத்த சட்டி சாப்பிட இயலுமா?
வெட்டவெளியைக் கட்டுப்படுத்த இயலுமா?
அன்பு இல்லாதவரின் இலிங்கம் நியமத்திற்குள் அடங்குமா?
மகாலிங்ககுரு சிவசித்தேஸ்வரப் பிரபுவே“7. “படிகக் குடத்தின் விளக்கு
உள்ளும் புறமும் ஒரேயளவில் பிரகாசிப்பது போல
என்னுள்ளும் புறமுமிருக்கும் இறைவன்
ஆதியந்தம் காண வந்தான்
அப்பரத் தத்துவ அடியான் ஒருவனே பாரீர்
மகாலிங்ககுரு சிவசித்தேஸ்வரப் பிரபுவே“8. “பெண்ணை, மண்ணை, பொன்னை விட்டேனென
உலகின் கண்களைக் கட்டுபவர்களே கேளுங்கள்!
பேச்சை விட்டீரோ? மனதை விட்டீரோ? சொல்வீர்
இலிங்க நினைவு ஆளுமைக்குள் வந்தால் விட்டனரென்பேன்
பேச்சை விட்டுவிட்டு மனத்துள் கொண்டால்
பிறப்பு இறப்புக்களில் நிறுத்தி
காலணியைக் கடிக்கும் நாய்போல விடாது பாரய்யா!
பிடித்து சம்சாரிகளாகி, விட்டு துறவியாகி
இரண்டுமன்றி துன்பப் படுபவரை என்னென்பேன்?
மகாலிங்ககுரு சிவசித்தேஸ்வரப் பிரபுவே“
தட்சகண சிங்கிதேவய்யா
“நாச்சய்யா பிரியமல்லிநாதய்யா“ இவரது முத்திரையாகும். குருபக்தியைக் காட்டுவதாக வசனங்கள் அமைகின்றன.
1. “மனைவி மக்கள் பெற்றோர்க்கெனப் பெற்றால்
உன்மீ்தாணை ஐயனே,
மக்களுக்குச் சேவையாற்றினால் உன்மீதாணை
உன்னையன்றிப் பிறரை வணங்கினால் உன்மீதாணை
என் மனைவியன்றிப் பிறன்மனை விரும்பின் உன்மீதாணை
உடல் உள்ளம் செல்வம் வஞ்சனையானால்
உன்மீதாணை நாச்சய்யாப் பிரிய மல்லிநாதனே“2. “மனைவி மக்கள் பணியாளர் வஞ்சகர் பகைவரென்று
நினைப்பது என் பிழை ஐயனே
விழிப்பு கனவு உறக்கம் என பிழை எனதய்யனே
மற்றவரில் நீங்களிருக்க அதையறியாத பிழை எனதய்யனே
நாச்சய்யாப் பிரிய மல்லிநாதனே“தசரய்யா
இராமகொண்டே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தினமும் தோட்டத்திற்குச் சென்று பூக்களைக் கொய்து வந்து வழிபாடு செய்வது இவரின் காயகம். ஒரு முறை பூக்கொய்த போது “ஐயோ நொந்தேன் “என்றொரு ஒலி கேட்க அன்றிலிருந்து பூக்களைக் கொய்வதை விட்டுவிட்டுக் கிழே கிடக்கும் பூக்களை எடுத்து வந்து வழிபாடு செய்ததாக ஒரு செய்தியுண்டு. ”தசரேஸ்வரலிங்கா” என்பது இவரது முத்திரையாகும்.
“உலகின் கூறு உடல்
சூரியனின் கூறு சுக்கில சுரோணிதம்
சிவனின் கூறு பசி
காற்றின் கூறு ஜீவாத்மா
வானத்தின் கூறு நெற்றி நடு சூட்சுமம் என
இவை ஐந்துமுள்ள வரையில் வெற்றி தோல்வியுண்டு.
அங்கங்கே இவற்றைத் தடுத்து விடுவிப்பாய்
உனக்கு என்னிடம் அற்பத்தனம் வேண்டாம்
அது என் பிழையன்று,உன் பிழையே
தசரேஸ்வரலிங்கமே“
தசரய்யாவின் புண்ணிய ஸ்த்ரி வீரம்மா
இவர் தசரய்யாவின் மனைவி. சரணர் மனைவி புண்ணியஸ்திரீ என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நிலையைச் சில இடங்களில் காணமுடிகிறது.” குருசாந்தேஸ்வரன் “இவரது முத்திரையாகும்
“சேவல் நேரமறியும்
சரணன் விரத ஈனனை அறிவான்
அறிந்தும் சேர்ந்தால் நரகமே
குருசாந்தேஸ்வரனே “[தொடரும்]
-

நாலடியார் நயம் – 7
நாங்குநேரி வாசஸ்ரீ
7. சினம் இன்மை
பாடல் 61
மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க – மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.மதித்து நடப்பாரும் நடக்கட்டும்
மதியாது அவமதிப்பாரும் இருக்கட்டும்
அற்ப ஈயும் மிதித்து ஏறித்தலையில்
அமருதலால் அந்நிலையுணர்ந்து
சிந்திக்கும் சான்றோர் அவமதிப்போரை
சீறிச்சினந்து இருத்தல் வேண்டா.பாடல் 62
தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ – மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.ஓரடியும் எடுத்து வைக்க
ஒழியாத பெரு அவமதிப்பு
வந்த காலத்தும் கலங்காது
வகுத்த காரியம் நிறைவேற்றும்
மனவலிமை மிக்கார்
மிகச் சிறந்த தம் உயிரை
சிறிய இடர் வந்தகாலத்தே
சினம் பொறுக்காது விடுவரோ?பாடல் 63
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் – ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்துநா காவாமல் வாய்திறந்து
நவிலும் சினச்சொல்
இடைவிடாது தனக்கே
இன்னலைத் தந்துவிடும்
இடையறாது ஆராய்ந்து
பொருந்திய கேள்வி அறிவைப்
பெற்ற சான்றோர் சினத்தினால்
கடுஞ்சொல் கூறார் என்பது
கற்றறிந்த மேலோரின் கருத்து.பாடல் 64
நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் – ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.பெரியோர் தமக்கு நிகரல்லாதார்
பழிச்சொல்லைச் சொல்லுங்கால்
மனம் புழுங்கிச் சினம் கொள்ளார்
மனதில் இருத்தி நினைத்து நினைத்து
மற்றவரிடம் பகிர்ந்து மேலும்
கோபமுற்று ஆறாது ஊரெல்லாம்
கேட்பத் துள்ளிக் குதித்துத் தூணில்
முட்டிக்கொள்வர் கீழ்மக்கள்.பாடல் 65
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் – எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.பொறிவழிச் செல்லா இளைஞனின்
புலனடக்கமே அடக்கம்
கொஞ்சமும் பொருள் இல்லானின்
கொடையே பயனுள்ள கொடை
பலவித எதிர்ப்புகளை வெல்லும்
பலமும் மனவுறுதியும் உடையோன்
சினம் பொறுத்தலே ஆகச்
சிறந்த பொறுமை.பாடல் 66
கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் – ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.கல் எறிந்ததுபோல் வரும்
கீழ்மக்கள் வாய்ச்சொல்லை
மந்திரித்து இட்ட திருநீற்றினால்
மயங்கிப் படம் அடங்கும்
பாம்பைப்போல் தங்கள்
குலப்பெருமையால் தடைபட்டு
கட்டுண்டு சினமின்றி அமைதிகாத்து
நல்வழி செல்குவர் பெரியோர்.பாடல் 67
மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் – ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.பகைகொண்டவராய் இருந்து
பகைமைக்கேற்ப தீச்செயல்
புரியும் ஒருவரை எதிர்த்துநின்று
பகை கொள்ளாது பொறுமைகாப்பவரின்
பண்பை இயலாமை எனப்
பகரமாட்டார் பெரியோர்
பகைவர் மனம் அடங்காது
பல துன்பம் இழைப்பினும்
பழிதீர்க்க திரும்பத் தீமைகள்
புரியாதிருத்தலே நல்லது.பாடல் 68
நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் – அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.கீழ்மக்கள் சினம் நெடுங்காலம்
கழியினும் தணியாது வளரும்
காய்ச்சும் பொழுது நீர்
கொண்ட வெப்பம்போல்
தானே தணிந்து குறையும்
மேன்மை மிகுந்த
மேலோர்களின் சினம்.பாடல் 69
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் – உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.தாம் செய்த உதவியைத்
துளியும் சிந்தியாது
தமக்குத் தீமையே செய்தாலும்
தாம் அவருக்கு நன்மையே கருதி
திரும்பவும் உதவுவார்களன்றி
தீமைசெய்தல் வானளவு புகழ்
தன்னகத்தே கொண்ட குடியில்
தோன்றியோர்க்கு இல்லை.பாடல் 70
கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை – நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.கோபம் கொண்ட நாய்
கடித்தாலும் தம்வாயால்
எதிர்த்துக் கடித்தவர்
எவரும் இல்லை இவ்வுலகில்
குணமில்லாக் கீழ்மக்கள்
கூறும் ஈனச்சொல்லை
மீண்டும் கூறுவரோ
மேலோர் தம் வாயால். -

சேக்கிழார் பாடல் நயம் – 77 (அக்குல)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
அக்கு லப்பதிக் குடிமுதல் வணிகர்;
அளவில் செல்வத்து வல்லமையின் அமைந்தார்;
செக்கர் வெண்பிறைச் சடையவர் அடிமைத்
திறத்தின் மிக்கவர்; மறைச்சிலம் படியார்;
மிக்க சீர்அடி யார்கள்யா ரெனினும்
வேண்டும் யாவையும் இல்லை என்னாதே
இக்க டல்படி நிகழமுன் கொடுக்கும்
இயல்பின் நின்றவர்; உலகியற் பகையார் .பெருமையும் வளமும் நிறைந்த பூம்புகார் நகரில் பெருங்குடி வணிகர் மரபைச் சேர்ந்த ஓரடியார் வாழ்ந்தார். அவருக்கு வாணிகத்தினால் வந்த பொருட்செல்வமும், இயற்கை நில வளங்களையும் பெற்று வாழ்ந்தார். பொருட் செல்வத்துடன் அருட் செல்வத்தையும் பெறும் நோக்கத்துடன் பிறையணிந்த செஞ்சடைப் பிரானின் திருவருளையும் நாடி அடிமைத் திறத்தைப் பேணி வந்தார். அவர் செஞ்சடைப்பிரானின், வேதங்களாகிய சிலம்புகள் ஒலிக்கும் திருவடிகளை யுடையார் தம், பெரும் சிறப்புடைய அடியவர்கள் யாவரேயாயினும், அவர்கள் வேண்டியவை எவையேயாயினும் இல்லையென்னாதே கடல் சூழ்ந்த இந்த உலகிலே விளக்கமுற முன்னே கொடுக்கும் தன்மையிலே நிலைத்து நின்றவர் ஆவார். அவர் உலகியலுக்கு மாறான நிலையிலே எவையாயினும் இல்லை என்னாமல் கொடுக்கும் பண்பினால் ‘’உலகியற் பகையார்’’ என்ற காரணப் பெயரைப் பெற்றிருந்தார்.
அவ்வூரின் பெருங்குடி வணிகர்கள் நற்குடி நாற்பத்தெண்ணாயிரவர் ஆவர். அவர்கள் இப்பர், கவிப்பர், பெருங்குடி வாணிபர் என மூன்று வகையினர். இவ்வகையிலே இயற்பகையார் மூன்றாவது வகையினர்.
உலகச் செல்வம் சிவனடிமைத் திறத்தில் ஒழுகாதவிடத்திற் செல்வமாகாது; இன்னலுக்கே யேதுவாகும், ஆதலின் இதனையடுத்து பிறையணிந்த செஞ்சடைப் பிரானின் திருவருளையும் நாடி அடிமைத்திறத்தில் எவரினும் மிக்கவராய் விளங்கினார் என உடன்சேர்த்துக் கூறினார். அடியாரிடத்து அன்பு செய்யாக்கால் “ஈசனுக் கன்பிலார் அடியவர்க்கன் பில்லார்“ என்றபடி ஈசனிடத்தும் அன்பு இல்லையாய் முடியும்; ஆதலின் அடியார்பாலன்பும் அடுத்து வைத்தோதினார்.
அவர் எல்லாவகைச் செல்வமும் பெற்றிருந்தாலும், அதன் மேலும் ஈசன் அடிமைச் செல்வமும் பெற்றிருந்தார். ஆதலால் அடியார்க்குக் கொடுக்கும் இயல்பில் மற்றவரினும் மிக்கவர் ஆவார். இப்பாடலில் ‘’மறைச்சிலம்படியார்’’ என்ற தொடர் இறைவன் பாதச் சிலம்புகள் இறைவன் இலக்கணங்களையே தம்முட் கொண்டு ஒலிப்பன என்பதை விளக்குகிறது. ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்பது தத்துவம்! அந்தணரின் வேத ஒலிகள் கிளிமொழியாக வருவது போல!
மேலும் ‘’யாவரேனும்’’ என்ற சீர், குலம், குறி, குணம் முதலான மனித பேதங்களைக் காணாமல், எல்லா அடியாரும் இறைவன்பால் அடிமைத் திறம் பூண்டமையால் எவ்வகைப் பேதமும் அற்றவர் என்பது புலனாகும்.
‘’எவரேனும் தாமாக, இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி ‘’
என்பது திருத்தாண்டகம். அடுத்து,
‘’நலமிலராக நலமதுண்டாக நாட்டவர் நாடறி கின்ற
குலமிலராகக் குலமதுண்டாக ‘’ என்றும்,‘’கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியும்‘’என்றும் திருஞான சம்பந்தர் தம் திருவாலவாய்த் தேவாரத்தில் கூறுகிறார். ஆகவே அடியார்களின் சிறப்பு விளங்கும். அவர்கள் வேண்டும் பொருள்களைத் தக்கது தகாதது என்ற வேறுபாடு கருதாது கொடுத்தலை ‘’வேண்டும் யாவையும்‘’ என்ற தொடர் குறிக்கிறது. அவர் அவ்வாறு கொடுத்தல் இவ்வுலகில் சிவதருமம் என்றும் நின்று நிலவு மாறு கொடுத்தலை ‘’இக்கடற் படி நிகழ முன் கொடுக்கும்” என்ற தொடர் விளக்குகிறது. ‘’இல்லை என்னாதே‘’ என்ற தொடர் இவருடைய கொடைத்திறத்தை விளக்குகிறது. உலகியலில் ‘தமக்குப் பின் தான் தான தருமம்’ என்ற வகையில் அளவாகக் கொடுப்பார்கள். இவரோ எல்லாவற்றையும் கொடுத்து விடுவார் என்பது கருத்து.
இப்பாடலில் இவர் திருப்பெயரை ‘’உலகியற்பகையார்‘’ என்று சேக்கிழார் கூறியதன் நுட்பம் எண்ணி எண்ணி மகிழத்தக்கது. இயற்பகையார் என்பது, உலகியலுக்குப் பகையாவார் என்ற உடன்பாட்டுக் கருத்தையும், சிவனடி யாருக்கு எல்லாவற்றையும் வழங்கும் உலகியலைப் பகைக்க மாட்டார்- பகையார், என்று எதிர் மறையாகவும் பொருள் கொள்ள இடமளிக்கிறது.
-

தமிழில் செல்லிட ஆளுகை – அண்ணாகண்ணன் உரை
அண்ணாகண்ணன்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக 9ஆவது தமிழ் இணைய மாநாடு, கோவையில் 2010 ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்றது. அதில் நா.கோவிந்தசாமி அரங்கில் 25.06.2010 அன்று, ‘கையடக்கப் பேசியில் தமிழ்’ என்ற தலைப்பிலான அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமை வகித்தார். இதில், ‘தமிழில் செல்லிட ஆளுகை’ என்ற தலைப்பில் என் கட்டுரையைத் திரை உரை முறையில் வழங்கினேன். இந்த அமர்வில் என்னுடன் ஜி.புவன் பாபு, எம். சிவலிங்கம், சுவர்ணலதா ஆகியோரும் உரையாற்றினார்கள். உரையைத் தொடர்ந்து கேள்வி – பதில் பகுதியும் இடம்பெற்றது. எனது முழு உரையையும் இங்கே நீங்கள் பார்க்கலாம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

இங்கா இங்கா
அண்ணாகண்ணன்(குழந்தையின் ங்கா ங்கா என்ற ஓசைக்கு எழுதியது)இதை ஆசிரியரின் குரலில் இங்கே கேட்கலாம்நான் பிறந்தது இங்கா இங்காநலம் விளைந்தது இங்கா இங்காவான் கனிந்தது இங்கா இங்காவளம் கொழிப்பது இங்கா இங்காதேன் இனிப்பது இங்கா இங்காதிசை களிப்பது இங்கா இங்காதான் வளர்வது இங்கா இங்காதாகம் வளர்ப்பது இங்கா இங்கா.கண் மலர்ந்தது இங்கா இங்காகனவு மெய்த்தது இங்கா இங்காமண் குளிர்ந்தது இங்கா இங்காமனம் விழித்தது இங்கா இங்காபண் இசைப்பது இங்கா இங்காபந்தடிப்பது இங்கா இங்காவிண் சுரந்தது இங்கா இங்காவெற்றிகள் சூழ்வது இங்கா இங்கா.பொழுது புலர்ந்தது இங்கா இங்காபுதுமை விரிந்தது இங்கா இங்காஅழுது சிரிப்பது இங்கா இங்காஅமுது சுவைப்பது இங்கா இங்காஎழுந்து நடப்பது இங்கா இங்காஎழுத்து படிப்பது இங்கா இங்காமழலை குழைவது இங்கா இங்காமனசு திறப்பது இங்கா இங்கா.நிலவு பார்ப்பது இங்கா இங்காநிலம் தவழ்வது இங்கா இங்காபால் மணப்பது இங்கா இங்காபாட்டில் தோய்வது இங்கா இங்காகொஞ்சி அணைப்பது இங்கா இங்காகுறும்பு விளைப்பது இங்கா இங்காவாழ வந்தது இங்கா இங்கா – நீவாழ்த்த வந்தது இங்கா இங்கா.(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan) -

ஏமாறாதே ஜாக்கிரதை!
கவியோகி வேதம்
வானவில்லின் நாணறுந்துவர்ணமெல்லாம் மறையுதே!!நீநினைக்கும் கடல்ஓலம்,நிமிடத்தில் மாறுதே!!ஞானச்சுட ர் ‘வாசல்’நாணமின்றி ஏய்க்குதே!கூனல் மயக்கத்தில்-அட!குனிந்தேநீ விழுவயோ!ஈன‘அகம்’ அகற்றிநீஈசனை“உள்” பூட்டுவாய்!சட்டிசுட்ட பின்னுமிந்தச்
சட்டையுடல் காவலா?
விட்டகுறை வினையெல்லாம்
விலகுமோ மானிடா?
சட்டுவ- விவாதத்தால்
சரியாமோ உன் ‘பாவம்’?
முட்டைவிட்டுக் குஞ்சுவரும்;
முன்மயக்கம் தீர்ந்துவிடும்!பட்டணத்துச் சாமிவந்து
பற்றவைத்த தீயடா-(*உன்னுள்)
பத்ரகிரி மயங்கிப்போய்
பற்றுவைத்த ஓடடா!
பட்டுப்பட்டும் மாறுமோ-
பாழுமனப் பேயடா?-(உன்)
பட்டினியில், பத்தியத்தில்
பயந்திடுமோ விதி-யடா?சாட்டைக்கோர் விதியுண்டே,
பம்பரம் சாட்சியடா!
சாதகமும் உனைப்பற்றிச்
சாற்றுவது கேளடா!
நீட்டிப் படுத்துவிட்டால்
நீயும்அங்கு நெருப்படா!(அவன்!)
நிச்சயித்து விட்டாலோ
நினக்கில்லை மண்ணடா? -

நாலடியார் நயம் – 6
நாங்குநேரி வாசஸ்ரீ
6. துறவு
பாடல் 51
விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் – விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.விளக்கு ஒளியின் முன்னே
விலகிச்செல்லும் இருள்போல்
செய்த நல் வினையின் முன்
சேர்த்துவைத்த பாவம் நீங்கும்
எண்ணெய் குறையும்நேரம்
எங்கும் இருள் சூழ்வதுபோல்
நல்வினைப்பயன் நீங்கும்
நேரம் பாவம் வந்துநிற்கும்.பாடல் 52
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் – தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.நிலையாமையும் மூப்பும்
நோயும் சாவுத்துன்பமும்
இவ்வுடம்பிற்கு உண்டு என
இயன்றவரை கருமங்களைச்
செய்து வாழ்வர் ஞானநூல்களைச்
செவ்வனே கற்ற சான்றோர்
இம்மைக்கு மட்டுமே பயன்நல்கும்
இலக்கணநூல்களையும் சோதிடமும்
பிறவற்றையுமே பிதற்றித்திரியும்
பித்தர்களைவிட அறிவிலார்
இவ்வுலகில் இல்லை.பாடல் 53
இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் – மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம்உய்யக் கொண்டு.சிறந்த அழகு மனை இளமை
செல்வாக்கு செல்வம் வலிமை
இவையெல்லாம் நாளடைவில்
இல்லாமல் போகும் நிலைஅறிந்து
மேலோர் தாம் கடைத்தேற
மேற்கொண்டு காலம்தாழ்த்தாது
பற்றுக்களை விடுத்துப்
பாங்காய் வாழ்வர்.பாடல் 54
துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் – இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு
அடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.ஆறாத்துன்பம் பலநாட்கள்
அடைந்து துன்புற்றாலும்
அறிவிற் சிறியர் ஒருநாளின்
அற்ப இன்பம் விரும்புவர்
இன்பம் நிலையற்றதெனவும்
இன்னல் தருவதெனவும்
உணர்ந்த சான்றோர்
உடன் இல்லறத்தினின்று
நீங்கிச் சென்று
நீடூழி வாழ்வர்.பாடல் 55
கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே
பிணியோடு மூப்பும் வருமால் – துணிவொன்றி
என்னொடு சூழாது எழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு.இளமை வீணாய்க் கழிய
இப்போதே நோயுடன்
இணைந்து மூப்பும் வந்தது
என்னோடு ஆலோசிக்காது
எழுகின்ற மனமே!
நமக்கு நல்வழி கிடைக்க
நல்ல பாதையில் போகின்றாயோ?(நன்மார்க்கத்திற்குச் செல்லத் துணிந்தவன் தன் மனதுடன் பேசியதுபோல் அமைகிறது இப்பாடல்)
பாடல் 56
மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்
பூண்டான் கழித்தற்கு அருமையால் – பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார்.மாட்சிமைப்பட்ட குணமும்
மக்கட்பேறும் இல்லையெனினும்
மணம் செய்த கணவன்
மனையாளை நீக்குதல்
தகாது என்பதால்
தானே தேடிக்கொள்ளும் துன்பம்
திருமணம் செய்தல் என
உணர்ந்த சான்றோர் எக்காலத்திலும்
உறுதியாய் மணம்முடிக்காதீர் என்றனர்.பாடல் 57
ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.முயன்று செய்த விரதங்கள்
முடிவுற்று அழியும் வண்ணம்
தாங்கமுடியாத் துன்பம் வரினும்
தடங்கல்களை விலக்கித்
தம் விரதங்களை நிலைநிறுத்தும்
மனவலிமை கொண்டோரே
மேலான துறவற ஒழுக்கம்
மேற்கொள்ளும் சிறப்புடையவர்.பாடல் 58
தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் – உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.பழித்துப் பேசி தீவினை
புரிந்தோரைத் தாம்
பொறுப்பதோடல்லாது
எம்மை இகழ்ந்த தீவினையால்
எரியும் நரகம் வீழ்ந்து இவர்
மறுமையில் துன்புறுவாரே என
மனது இரங்குவதும்
மேலோரின் கடமையே.பாடல் 59
மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் – கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.மெய் வாய் கண்
மூக்கு செவி எனப்
பெயர் கொண்ட ஐம்
புலன்களை அடக்கி
அவற்றின் வழி வரும்
ஆசையைக் கலக்கமின்றி
அறவழியில் செலுத்தும்
வல்லவன் தப்பாமல்
வீடுபேறு அடைவான்.பாடல் 60
துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் – இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.அறிவிலார் வாழ்வில் துன்பம்
அதிகமாய் வருதல்கண்டும்
துறத்தலை நினையாதவராய்
துளியளவு இன்பம் விரும்புவர்
அறிவுடைய மேலோர்
அச்சிறு இன்பம் கிட்டும்நேரம்
ஆசை கொள்ளார் மனதில்
அதனைத் தொடரும் துன்பம்கருதி. -

புலி வந்திருச்சி!
சி. ஜெயபாரதன், கனடா
புலி வருது ! புலி வருது !!
புலி வருதென
அலறி
அலை அலையாய்
எழுந்தார்
விழித்துக் கொண்டு !
இப்போது
புலி வந்திருச்சி !!!
உயிருக்குப் பயந்தோர் எல்லாம்
ஓடி வாரீர் !
தலை வைப்பீர்
என் மீது !
எதையும் தாங்கும் இதயம்
எனக்கு !
வீட்டுக்குள் அமர்ந்து வீடியோ
காட்சி அளித்தார்
எதிர்க்கட்சி எம்மெல்லே டைகட்டி !
நாடாளும் மன்றம்
ஆடாமல், குறட்டை விட்டு
உறங்குது !
பிரதம மந்திரி தெருவில் நின்று
மக்களுக்கு
மூக்கு வாய் மூடக்
சுவாசக் கவசம் கொடுத்தார் !
வீட்டில் அடைபட்டு
நாட்டு மாந்தர்
ஊழிய மின்றி, ஊதியம் இழந்து,
உணவுத் தானியம்
காலியாகி
கை கட்டி நின்றார்
கண்ணீரை
டையில் துடைத்துக் கொண்டு !
வயல்களில்
காத்துக் கிடக்கும் பசுமையாய்
காய்கறிகள், கனிகள்
எடுப்பாரின்றி !
மூலையில் எடுத்த கிழங்குகள்
குவித்துக் கிடக்கும்
வாகனத்தில்
ஏற்றிக்
கொடுப்பாரின்றி !
சுவாசக் கருவிகள்,
மூக்கு வாய் கவசங்கள்
தைத்து
மலிவாய்ச் செய்ய
ஈபாடில்
இன்றுதான் ஆர்டர்
சைனாவுக்குப் போய்
உள்ளது !
நெடுதொலைக் குகையின்
முடிவில்
வெளிச்சம் தோன்றுமா ?
சந்திர னுக்குச் சென்று மீண்ட
விண்சிமிழ் செய்யும்
வல்லரசுகள் கைவசம் இப்போ
யந்திரம் இல்லை !
செய்யும் திறம்,
தொழில் நுணுக்கம் இல்லை !
கோடான கோடி
வல்லரசு நிபுணர்கள்
டைகட்டி, கைகட்டி
வாய் மூடி
எதுவும் செய்ய இயலாது
சைனா
வேதாளத்தின்
பாதத்திலே கிடக்கிறார்
பாரீர் ! பாரீர் !
பாரீர் ! -
குறளின் கதிர்களாய்…(297)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(297)
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.– திருக்குறள் – 227 (ஈகை)
புதுக் கவிதையில்…
எப்போதும்
தன்னிடமிருக்கும் உணவைத்
தான் மட்டும் உண்ணாது,
பிறர்க்கும் பகிர்ந்தளித்து
உண்டு வாழப்
பழகியவனை,
பசியென்னும் தீயநோய்
அணுகுதல் அரிதாகும்…!குறும்பாவில்…
இருக்கும் உணவைப் பிறருடன்
பகிர்ந்துண்டு வாழப் பழகியவனைப் பசியென்னும்
தீயநோய்த் தீண்ட வராதே…!மரபுக் கவிதையில்…
தன்னிட மிருக்கும் உணவதனைத்
தானே யுண்டு களிக்காமல்,
தன்னை யொத்த பிறமாந்தர்
தன்னுடன் பகிர்ந்தே உண்டுவாழும்
தன்மை தன்னைப் பழகியுள்ள
தன்னல மற்ற ஒருவன்தனை,
துன்பம் தந்திடும் பசியென்னும்
தீப்பிணி என்றும் தீண்டாதே…!லிமரைக்கூ…
பலர்க்கும் பகிர்ந்தளித்தே யுண்டு
வாழ்பவனை அணுகாதே பசியெனும் தீப்பிணி,
பயந்தோடிடும் அவனைக் கண்டு…!கிராமிய பாணியில்…
குடுத்து ஒதவு குடுத்து ஒதவு
அடுத்தவங்களுக்கும் குடுத்து ஒதவு..இருக்கிற ஒணவத்
தான்மட்டும் திங்காம
அடுத்தவங்களுக்கும் பங்குவச்சிக் குடுத்துத்
தானும் தின்னு வாழுறவங்கிட்ட
பசி பட்டினிங்கிற
பெரிய நோயெல்லாம் நெருங்காதே..அதால
குடுத்து ஒதவு குடுத்து ஒதவு
அடுத்தவங்களுக்கும் குடுத்து ஒதவு…! -

Bio-sequence, a possible solution to Corona
Dr.Annakannan
(Annakannan Ideas – 39)
When Corona / Covid-19 announced as pandemic, when first time lockdown announced in India, my wife asked me to find a solution to this issue. She used to hear many solutions from me for various issues and problems. I too was thinking about this, before she asked. But, didn’t get a catch. On 16th April 2020, in the early morning around 3 AM, I got a dream. The exact visual is tracing virus / bacteria through bio-sequence. Waked-up & I regain the word, that is ‘bio-sequence’. After that, I read few pages in online on this term.
This page is related to this:
“Bio-sequence analysis deals with the translation of bio-sequence information
into biochemical and biophysical knowledge, to decipher the structural, functional and evolutionary clues encoded in the language of biological sequences.”We can create a tool / system, which can read the bio-sequence of entire eco-system with bigdata technologies. With this we can trace any and all virus / bacteria, where it’s alive, who are affected and which areas are affected and which level it is.
We already know the bio-sequence of Corona (https://www.theverge.com). We need to deep scan with powerful tools, if there is any match in the surrounding; this tool should give immediate report of a person or any living being or any physical element or a surface or space in the air. Not only Corona / Covid-19, we can apply this to any virus or bacteria.
Once, we know that a person is affected, we can quarantine. Again this bio-sequence can help in the treatment too. We can replace Covid-19 sequence with another sequence, which has more immunity. The Plasma treatment may help here. But, no need to depend a cured person. We can create the same healthy sequence & replace.
I study biology only in my school days, that too 26 years back; just suggesting this with a basic logic. Scientists, doctors, biotech engineers or any science enthusiast can explore more. I hope, this ‘Key’ word will trigger the solution.
——————————————————-
Pic courtesy: https://asm.org
-

(Peer Reviewed)அருந்தமிழ் வளர்க்கும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்
–முனைவர் சொ. அருணன்,
முனைவர் பட்ட மேலாய்வாளர்,
தமிழ்ப் பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3.[காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் ரூசா 2.0 நிதி ஆய்வுத் திட்டத்தின்கீழ் எழுதப்பட்ட கட்டுரை]
*****
அறிமுகமாக…
காலங்காலமாகத் தமிழ்மொழி போற்றி வளர்க்கப்பட்ட பெருமைக்குரியது. இயல்பில் தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும் சிறப்பு தமிழுக்கு இருந்தபோதும் சில திருவிடங்களில் தன்னை இருத்தி வளர்த்ததாகத் தமிழே வரலாறு மொழிகிறது. மூவேந்தர்களும் குறுநில மன்னர்களும் தங்களுடைய உயிர்க்கு இணையாகக் கருதி வளர்த்தபோதினும்கூடத் தமிழ், பாண்டிய மன்னர்களின் சங்கத்தில் இருந்து வளர்ந்ததாகவே பெருமைப்பட்டுக் கொள்கிறது. அதுபோலவே தமிழை உலகில் உள்ள அத்தனை சமயங்களும் கொண்டாடிய போதினும்கூட அது தன்னைச் சைவத்திற்கு உரியதாகவே நிலைநிறுத்திக் கொள்கிறது. அதனாலேயே சைவமும் தமிழும் தழைத்தினிது ஓங்குக என்னும் நிறைமொழி தோன்றியது. அவ்வாறு தமிழைப் போற்றி வளர்த்த திருவிடங்களின் வரிசையில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்குத் தனிச்சிறப்பு எக்காலத்தும் உண்டு. இக்கட்டுரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தமிழ்ப் பணிகளைக் குறித்து விளக்குவதாக எழுகிறது.
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தோற்றம்
குருபரம்பரை
திருக்கயிலாயப் பரம்பரையின் வழியாகத் தோன்றிய பதினெட்டுச் சுத்த சைவ ஆதீனங்களுள் மிகவும் தொன்மையானது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனமாகும். திருக்கயிலாய மலையில் சிவபெருமான் சிவஞானபோதத்தை, திருநந்தி தேவருக்கு உணர்த்தியருளினார். அந்தச் சிவஞானச் செல்வத்தைத் தம் அருமை மாணாக்கராகிய சனற்குமார முனிவருக்கு அருளிச் செய்தார் திருநந்தி தேவர். சனற்குமார முனிவர் அதனைத் தம் மாணாக்கருள் சிறந்த சத்தியஞானதரிசினிக்கு அருளினார். அவர் அதனைத் தம் மாணாக்கருள் சிறந்த பரஞ்சோதி முனிவருக்கு அருளிச் செய்தார். இது திருக்கயிலாயத்தில் நிகழ்ந்தது. ஆதலின் திருநந்திதேவர் முதலிய நால்வரும் இந்தப் பரம்பரையிலே “தேவசந்தானத்தார்” எனவும் “அகச் சந்தானத்தார்” எனவும் வழங்கப் பெறுவர்.
இந்த வரிசையில் பூலோகத்தில் அவதரித்திருந்த சுவேதவனப் பெருமாள் என்னும் குழந்தைக்கு அந்தச் சிவஞானபோதம் கிட்டிற்று. பரஞ்சோதி முனிவர் அகத்தியரைக் காண்பதற்காகப் பொதிய மலைக்குச் செல்லும் வழியில் இந்தக் குழந்தைத் திருவீதியில் விளையாடிக் கொண்டிருந்தவேளையில் அதன் பக்குவநிலையுணர்ந்து சிவஞானபோதத்தை உபதேசித்தார். மேலும் அவருக்கு மெய்கண்டார் என்னும் திருப்பெயரையும் சூட்டினார். மெய்கண்டார் தாம் பெற்ற சிவஞானபோதத்தை அருள்நந்திக்கு உபதேசம் செய்தார். அத்தகு அருள்பெற்ற அருள்நந்தி தேவரின் அருமைச் சீடர்களுள் ஒருவராகத் தோன்றியவர்தான் திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வராகிய திருவருள்திரு தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆவார். இளம் வயதிலேயே தம் பக்தியின் ஆற்றலால் அந்தண வடிவில் இறைக்காட்சிப் பேறு பெற்றதோடு ‘அருள்நந்தியிடம் சென்று சேர்க’ என்னும் அருளாணையும் பெற்றார்.
திருவண்ணாமலை ஆதீனத் தோற்றம்
பின்னர் திருவருள் வழிகாட்டத் திருவண்ணாமலையிலிருந்து ஆட்சி புரிந்த வீரவல்லாளன் என்னும் ஆட்சியாளனிடத்துச் செய்த ஓர் அற்புதத்தால் சீடர்களும் திருமடமும் தோன்றி வரலாறாக நிலைத்தது. ஆதீனத்தின் குருமுதல்வரின் 60-வது அகவையில் கி.பி.1310இல் திருவண்ணாமலை ஆதீனம் தோற்றம் பெற்றது.
பிரான்மலையில் ஆதீனத் தோற்றம்
இந்தக் குருமரபில் 17ஆம் பட்டமாக வந்துதித்தவர் திருவருள்திரு நாகலிங்க தேசிகர் ஆவார். இவர் தலயாத்திரையாகத் திருச்சுழியலுக்கு வந்திருந்த வேளையில் தரிசனம் வேண்டி வந்த இராமநாதபுர மன்னர் இரகுநாதசேதுபதி இராமேசுவரத்துக்கு வரவேற்றதோடு இந்த மண்ணிலே சுவாமிகள் இருந்து அருளாட்சி புரிய வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். அவர்தம் வேண்டுகோளை ஏற்று 1690-இல் இராமநாதபுர எல்லையாக இருந்த பிரான்மலை என்று தற்காலத்து அழைக்கப்படும் வேள்பாரியின் பறம்புமலையில் (திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பெற்ற திருக்கொடுங்குன்றமும் இதுவேயாகும்) இருந்து அருளாட்சி புரிந்து வந்தார்கள்.
குன்றக்குடி ஆதீனத் தோற்றம்
இவ்வாறு 17ஆம் பட்டத்திலிருந்து 30ஆம் பட்டம் குருமூர்த்திகள் வரையிலும் பிரான்மலையிலிருந்து அருளாட்சிபுரிந்து வந்தனர். இந்நிலையில் 28ஆம் பட்டம் ஞானப்பிரகாச தேசிகர் குன்றக்குடி சண்முகநாதப் பெருமான்மீது பெரும்பக்தி பூண்டவரானார். குன்றக்குடியையே அவர்மனம் நாடிற்று. அவருடைய திருவெண்ணம் கி.பி.1778-இல் திருவருள்திரு மருதநாயக தேசிகர் ஆட்சிக் காலத்தில் பலிதமுற்றுப் பிரான்மலையிலிருந்த திருமடம் குன்றக்குடிக்கு வந்து நிலைபெற்றது.
அன்றிலிருந்து இன்றுவரை வாழையடி வாழையாக வளர்ந்தும் சிவத்தொண்டும் தமிழ்த்தொண்டுமாகச் சமயத்திற்கும் சமுதாயத்திற்கும் தனது பணிகளைத் தொடர்ந்து நிகழ்த்தி மண்ணுலக உயிர்களுக்கெல்லாம் இன்னல் தீர்க்கும் அருமருந்தினைப் போல விளங்கி வருவது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஆகும்.
அருந்தமிழ் போற்றிய ஆதீன குருமூர்த்திகள்
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வர்கள் அனைவரும் பண்பாடு நிறைந்த அருளாளர்களாக விளங்கியவர்கள். திருவருளையே குருவருளாகக் கொண்டு தம்வாழ்வைத் தவவாழ்வாகப் பூண்டொழுகியவர்கள். சிவஞானமாகிய தெள்ளமுதை மக்களுக்குக் குறைவிலாது வழங்கியவர்கள். அவர்களுள் தமிழ்த்தொண்டு புரிந்த குருமூர்த்திகளும் உளர். 17ஆம் பட்டமாக விளங்கிய திருவருள்திரு நாகலிங்கதேசிகர் சைவத்தையும் தமிழையும் இருகண்களெனக் கொண்டு இயங்கியவர். சிவநெறி பேணிய சீலர். மக்களிடம் அன்பையும் தமிழையும் ஒருசேர வளர்த்த பெருமைக்குரியவர் ஆவார். இவர், தான் மேற்கொண்ட தலயாத்திரையின் மூலம் தன்னை நாடி வந்த அன்பர்களுக்கெல்லாம் பக்திநெறியை மனத்தில் ஆழ விதைத்தவர். இவருடைய காலத்திலேயே ஆதீனம் பிரான்மலையில் தோற்றம் பெற்றது.
பிரான்மலையிலிருந்து அருளாட்சி புரிந்தவர்கள் ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபட்டுச் சிறந்தனர். பிரான்மலை, (பிரான்மலை உட்கிடைக்கோயில் சதுர்வேதி மங்கலம்) திருப்புத்தூர், திருக்கோளக்குடி, குன்றக்குடி, தேனாச்சியம்மன் கோயில் ஆகிய ஐந்து கோயில்களுக்கும் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து அருளாட்சி புரிந்தனர். அன்றுமுதல் இன்றுவரை ஆதீனத்தின் குருமூர்த்திகள் தொடர்ந்து பிரான்மலை வகை ஐந்து கோயில்களின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து அருளாட்சி செய்து வருகின்றனர். பிரான்மலையில் எழுந்தருளியிருந்த குருமூர்த்திகள் அனைவரும் அருளும் தவமும் அறமும் அருந்தமிழ்ப் பெருக்கும் நிறைந்தவர்களாக விளங்கினர்.
38ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக சுவாமிகள் காலத்தில் ஆதீனம் மிகச் சிறந்து விளங்கியது. இவர்கள் காலத்தில் கி.பி.1864-இல் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் குன்றக்குடி ஆதீனத் திருமடத்துக்கு வந்தார்; சிறந்த சொற்பொழிவு நிகழ்த்தினார். குருமகா சந்நிதானம் அவர்கள் நாவலரை நன்கு பாராட்டி, எந்த ஆதீனமும் செய்யாத வகையில் புதிதாகச் சிவிகை (பல்லக்கு) செய்வித்து அதில் அமரச்செய்து ஊர்வலச் சிறப்பும் செய்வித்தருளினார்.
அதுபோலவே மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள் திருப்பெருந்துறையில் திருப்பெருந்துறைப் புராணத்தை அரங்கேற்றிய பின்னர் குன்றக்குடிக்கு வருகை தந்தார். குருமகாசந்நிதானம் அவர்கள் வித்துவானைச் சில நாள்கள் குன்றக்குடியில் தங்க வைத்து அவர்களுக்குத் தக்க சன்மானமும் வழங்கியபின், பல்லக்கு வைத்துக் காரைக்குடி வரை அனுப்பி வைத்தார்கள்.
மேலும், தமிழ்ப் புலமை மிக்க ‘சிலேடைப் புலி’ எனப் பெயர் பெற்ற வேம்பத்தூர் பிச்சு ஐயரைக் கொண்டு குன்றக்குடி சண்முகநாதப் பெருமானுக்கு உலா இயற்றச் செய்தருளினார்கள். இந்நூலில் ஆதீனத்திற்குட்பட்ட ஐந்து கோயில்களிலும் நடைபெறும் சிறப்புகளைப் பற்றி அழகாகப் பாடப்பெற்றுள்ளது.
“நந்தி பரம்பரையில் நல்(கு) அருணைஆதீனத்(து)
இந்(து) அணிவோன் வாயால் இனி(து) இயம்ப-வந்திலகு
சைவாகமம் விளங்கத் தாரணியில் ஆலயங்கள்
மைவார் பைங்கூழ்போல மன்னி நிற்ப—மெய் வாய்ந்த
சீராரும் தெய்வ சிகாமணியென்றே உதித்துப்
பாராள் குருமரபில் பார்க்கரன்போல்—ஏராரும்
தன்மகர்த்தாவாகி இந்தத் தாரணியெல்லாம் புகழும்
சின்மயனாம் ஆறுமுக தேசிகன்.”என்று ஆதீனத்தைப் பற்றியும் குருமகாசந்நிதானம் அவர்களைப் பற்றியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
39-ஆம் பட்டம் ஆறுமுக தேசிக சுவாமிகள் மகாவித்துவானாகத் திகழ்ந்தவர்கள்; தணிகைப் புராணம், பெரிய புராணம், மெய்கண்ட நூல்கள், பண்டார சாத்திரம் முதலியவற்றை நன்கு போதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். பெரிய ஆறுமுக தேசிக சுவாமிகள் காலத்தில் யாழ்ப்பாணம் தில்லைநாத பிள்ளையால் பதிப்பிக்கப் பெற்ற ஞானவந்தாதி, தெய்வசிகாமணி நான்மணிமாலைப் பதிப்புக்கு இவர்களருளிய சிறப்புப் பாயிரம் (அப்போது திருவாவடுதுறைத் தம்பிரானாக இருந்தார்கள்) இவர்களது பெரும்புலமைக்குச் சான்றாக விளங்குவது ஆகும். இவர்கள் தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித்தார்கள்; தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களுக்குச் சிலப்பதிகாரத்தின் சிறந்த ஏட்டுப் பிரதியை உதவியருளினார்கள்.
தமிழ்த்தாத்தாவின் பெருமிதம்
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் பணியாற்றி வந்த அப்பாப்பிள்ளை என வழங்கும் சுவாமிநாத பிள்ளை பெரும்புலவராகத் திகழ்ந்தவர். உ.வே.சா. அவர்களை மிதிலைப்பட்டி முதலிய இடங்களுக்கு அழைத்துச் சென்று மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய பழைய ஏட்டுப் பிரதிகள் கிடைக்கும்படிச் செய்தவர்; ஐயர் அவர்கள் இவரால் இந்தப் பக்கத்தில் வழங்கிய பல வரலாறுகளை அறிந்து கொண்டார். இதனால் இவரைப் பலபடப் பாராட்டித் தமது ‘என் சரித்திரம்’ நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
“திருப்பெருந்துறையிலிருந்து குன்றக்குடி சென்று ஆதீன கர்த்தரையும் அங்கே சின்னப்பட்டத்தில் இருந்த என் நண்பர் ஆறுமுக தேசிகரையும் (இவர் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடங்கேட்டவர்) கண்டு பேசினேன். மடத்தின் தலைமைக் குமாஸ்தாவாக இருந்த அப்பாப் பிள்ளையைக் கண்டு தமிழ் ஏட்டுச் சுவடிகள் இருக்குமிடத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று முன்பு எழுதியிருந்ததை ஞாபகப்படுத்தினேன். அவர் ‘இருங்கள்’ என்று சொல்லி உள்ளே சென்று ஒரு சுவடியைக் கொணர்ந்து கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தேன். சிலப்பதிகாரம் மூலமும் மணிமேகலை மூலமும் அதில் இருந்தன. சிலப்பதிகாரத்தைப் புரட்டிப் பார்த்தேன். மூலம் முற்றும் இருந்தது. பிரதி மிகவும் திருத்தமாகக் காணப்பட்டது. ‘இந்தச் சுவடி எங்கே கிடைத்தது?’ என்று கேட்டேன். ‘முதலைப்பட்டியில் ஒரு கவிராயர் வீடு இருக்கிறது. அங்கே நூற்றுக்கணக்கான ஏடுகள் உள்ளன. அங்கிருந்து எடுத்து வந்தேன்’ என்றார். அன்று பிற்பகலே ஆதீனகர்த்தர் உத்தரவு பெற்று அப்பாப் பிள்ளையுடன் மிதிலைப்பட்டி சென்று அந்தக் கவிராயர் வீட்டை அடைந்தேன். அப்போது அங்கே இருந்த கவிராயரது பெயர் அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்பது. அவரைக்கண்டு பேசிக் கொண்டிருந்தேன். அவர் வீட்டிலுள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்த்தேன். அவர் வீடு தமிழ்மகள் ஆலயமாகத் தோன்றியது. குருடனுக்குக் கண் கிடைத்தது போல எனக்கு அளவற்ற ஆனந்தம் உண்டாயிற்று.”
வடமொழி வளர்த்த ஆதீனம்
தமிழகத்து உள்ள ஏனைய ஆதீனங்களை விடவும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் வடமொழிநூல்கள் பல இயற்றப் பெற்றுள்ளன. சிவஞான போதத்திற்குச் சிறந்த வியாக்கியானமும், பெளஷ்கர ஆகமத்திற்குச் சிறந்த விருத்தியும் ஞானப் பிரகாச முனிவர் செய்துள்ளார். மேலும் ஞானப்பிரகாச முனிவரால் இயற்றப் பெற்ற வடமொழி நூல்கள் வருமாறு:
- சித்தாந்த சிகாமணி
- பிரமாண தீபிகை
- பிரசாத தீபிகை
- அஞ்ஞான விவேசனம்
- சிவயோக சாரம்
- சிவயோக ரத்னம்
- சிவாகமாதி மகான்மிய சங்கிரகம்
ஆகியனவாகும்.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பணிகள்
இந்த ஆதீனத்தின் 45ஆவது குருமகாசந்நிதானமாகத் திகழ்ந்த திருவருள்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் தம் அருட்பணியால் மக்கள் உள்ளமெல்லாம் நிறைந்து ‘குன்றக்குடி அடிகளார்’ என்னும் சிறப்புப் பெயரால் போற்றப் பெற்றவராவார். காலப்போக்கில் ‘அடிகளார்’ என்ற உயர்தனிச் சொல்லே அவர் பெருமை விளக்குவதாயிற்று.
அடிகளார் பெருமான் சித்தாந்தச் செந்நெறிக்கும் செந்தமிழ் மொழிக்கும், தமிழகத்து மக்களுக்கும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றியுள்ள தொண்டுகள் நாடறிந்தவை.
சைவ சமய சாத்திர தோத்திர நூல்களைப் பயின்று தெளிந்தவர்கள்; தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் துறைபோகியவர்கள்; ஆங்கில மொழிப் புலமை உடையவர்கள். உலகின் பல்வேறு சமய நூல்களையும் தத்துவ நூல்களையும் ஆழ்ந்து பயின்று சிந்தித்தவர்கள். உலகிலுள்ள பல்வேறு அரசியல், ஞான நூல்களையும் கற்றவர்கள்; அறிவியல் நூல்களைப் பயின்றவர்கள்; சமுதாய வரலாற்றை ஊன்றிக் கற்றவர்கள்; சமுதாய நிகழ்வுகளைப் பாடமாகக் கொண்டு படித்தவர்கள்; படித்து வருபவர்கள்; உழைப்பையே தவமாகக் கொண்டவர்கள். தொண்டு செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் செய்துள்ள தொண்டு அளப்பரியது என அடிகளார்தம் அரும்பணிகளைப் பட்டியலிடுகிறார் குன்றக்குடி ஆதீனப்புலவர் மரு. பரமகுரு.
இனிய எளிய முழக்கம் போலான தம் உரையால் சொற்பெருக்காற்றிச் செவி மடுத்தோர் உள்ளமெல்லாம் சைவத்தையும் தமிழையும் தழைக்கச் செய்த பெருமகனார் இவர். தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பலபகுதிகளுக்கும் உலகில் பல நாடுகளுக்கும் இவரது செஞ்சொற்பெருக்கு சென்று சேர்ந்தது. ஆதீனப் பணிகளிலும் நிர்வாகப் பணிகளிலும் பலவித மாற்றங்களைக் கொண்டு வந்ததோடு வருங்காலத்திற்கான பன்னோக்குத் திட்டங்களையும் புகுத்திய பெருமைக்குரியவர். தமிழையும் சைவத்தையும் மானுடநேயத்தையும் பரப்பவும் நிலைநிறுத்தவும் இவர் தோற்றுவித்த அமைப்புகள் பலவாகும். அவற்றுள் தமிழ்நாடு தெய்விகப் பேரவை, திருக்குறள் பேரவை, திருவருள் பேரவை போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நாத்திகம் கையோங்கியிருந்த காலத்து அதற்கு மாற்றாகக் ‘கோயிலைத் தழுவிய குடிகளும், குடிகளைத் தழுவிய கோயில்களும்’ என்னும் உயர்கோட்பாட்டை நிறுவிச் சமயப்பெருமையையும் ஆலயச் சிறப்பையும் நிலைநாட்டியவர்கள். சமயப் பணிகளுக்கு இணையாகச் சமுதாயப் பணிகளையும் பெரும்பணிகளையும் மக்களைப் பரத்திற்கு ஈடேற்றும் ஆன்மீகப் பணிகளோடு புறத்திற்கு வழிகாட்டும் அறிவியல் பணிகளிலும் ஆழ்ந்தும் அயராதும் உழைத்த குருமகா சன்னிதானத்தை மக்கள் உள்ளன்போடு ‘தமிழ்மாமுனிவர்’ என்று போற்றியழைத்தனர். சமூகக் களத்தில் வீறுகொண்ட போராளியாகவே திகழ்ந்தவர். இவரைப் போற்றித் துதித்த சான்றோர்கள் பலராவர். அவர்களுள், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் பாடிய பாராட்டுப் பா ஒன்று சான்றாகப் பின்வருமாறு அமைகிறது.
செய்ய தமிழும் சிவநெறியும் சிறக்கத் தொண்டு புரிந்திடுவோன்
ஐயன் குன்றக்குடி அடிகள் அருணா சலதே சிகநாதன்
தையல் பாகன் தண்ணருளால் சமயச் செங்கோல் இனிதோச்சி
வையம் புகழப் பல்லாண்டு வாழ்க! வாழ்க! வாழ்கவே!குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தமிழ்ப் பணிகள்
குன்றக்குடி அடிகளார் பெருமானைத் தொடர்ந்து 46-ஆவது பட்டமேற்று அருளாட்சி புரிந்து வருபவர் திருவருள்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள். அடிகளார் என்னும் பெயர் இவருக்கும் பொருந்துவதாயிற்று. அமுதனைய தமிழ்மொழியால் ஈர்ப்புடை முழக்கக் குரலால் தமிழகம் மற்றும் அயலகங்களில் அருந்தமிழ் வளர்ப்பதோடு மிகுசைவத் துறைவிளங்கவும் மானுடம் தழைத்தோங்கவும் அருட்பெருக்காற்றி வரும் பெருமைக்குரியவர். ஆலயத் திருப்பணிகள், அறங்காவல் நிர்வாகம் முதலியவற்றைச் செவ்வனே நிறைவேற்றிச் சிறக்கச் செய்பவர்.
ஆதீனப் பணிகளோடு முன்னோர் மொழிபொருளைப் பொன்னேபோல் போற்றும் தகையராய்ச் சமயப்பணிகளுடனும் சமுதாயப் பணிகளுடன் அயராது தவப்பணி புரிந்து வருபவர். எழுத்தாலும் இன்னுரையாலும் புரட்சிக் கருத்துகளை மக்களிடம் விதைத்து ஞானப்பயிர் வளர்த்து வரும் போற்றுதற்குரியவர்.
நிறைமுகமாக…
‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்’ என்னும் மந்திரமொழிக்கேற்பக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் திருக்கயிலாய பரம்பரையாகத் தொடங்கி இன்றளவும் இப்புவி உள்ளளவும் அருந்தமிழ்ப் பணிகளையும் சைவப் பெரும்பணிகளையும் சமுதாயப் பணிகளையும் உலக மேன்மைக்கும் மானுட குலத்துக்கும் என்றும் ஈடேற்றம் தரும் வண்ணம் இயங்கும் என்பதனை இக்கட்டுரை சற்றே எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.
*****
கருவி நூல்கள்”
- குன்றக்குடி, திருக்கயிலாய பரம்பரை திருவண்ணாமலைஆதீன வரலாறு, வித்துவான் சு.சுவர்ண காளீச்சுரன், சார்வரி ஆவணி–பூரட்டாதி, ஆதீனச் சீடர்கள் வெளியீடு.
- ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் சரித்திரம், வே. கனரத்தின உபாத்தியாயர், யாழ்ப்பாணம் நாவலர் நூற்றாண்டு விழாச் சபையினரால், மறுபிரசுரமாக வெளியிடப்பட்டது.
- என் சரித்திரம்–மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள், 1982. மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதைய்யர் நூல் நிலையம், சென்னை—1941.
- மயூரகிரிக் கோவை, கோடகுடி சே.சர்க்கரை இராமசாமிப் புலவர் கீலக, ஆனி, (15 கி.பி. 1908)
- தமிழ் இலக்கிய வரலாறு–பதினாறாம் நூற்றாண்டு, மு.அருணாசலம், 1976. காந்தி வித்யாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், தஞ்சை ஜில்லா.
- சைவ சமய வளர்ச்சி, டாக்டர்.மா. இராசமாணிக்கனார், 1958 ஒளவை நூலகம்—சென்னை.
- திருவாவடுதுறைஆதீனத்து மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் I&II மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர், 1940. டாக்டர். சுவாமிநாதையர் பப்ளிகேஷன்ஸ், சென்னை–5.
- மயூரகிரி என்னும்குன்றக்குடி ஷண்முகநாதருலா, பிரமஸ்ரீ சிலேடைப்புலி பிச்சுவையர்–1938.
- திருவண்ணாமலைத் தல விளக்கம், பதிப்பாசிரியர்: சீ.ஈ.எஸ்.பெருமாள், 1968. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேவஸ்தானம்
- திருக்கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலையாதீனத்து ஸ்ரீலஸ்ரீ தேவசிகாமணி தாண்டவராஜ தேசிக பண்டார சந்நிதி அவர்கள் பேரில் இயற்றப்பட்ட சாஹித்தியங்கள்.
********************************************************************************
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தோற்றம், வளர்ச்சி, ஆதீனம் தமிழோடு வடமொழிக்கும் ஆற்றிய தொண்டுகள், இந்த ஆதீனத்தில் பணியாற்றி வந்த பெரும்புலவர் சுவாமிநாதப் பிள்ளை என்பவர் வாயிலாகத் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையருக்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றின் ஓலைச்சுவடிகள் கிடைத்தமை, அதனை நன்றியோடு அவர் தம்முடைய ’என் சரித்திரத்தில்’ பதிவு செய்திருப்பது எனப் பல செய்திகளை இந்த ஆய்வுக்கட்டுரையில் அறியத்தந்திருக்கின்றார் ஆய்வாளர்.
குன்றக்குடி ஆதீனத்தின் புகழ்பெற்ற ஆதீனகர்த்தரான குன்றக்குடி அடிகளாரின் சமயப் பணிகள், சமூகப்பணிகள் போன்றவையும் அவரைத் தொடர்ந்து பொன்னம்பல அடிகளார் இப்போது ஆற்றிவருகின்ற அரும்பணிகளும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆய்ந்துகண்ட புதிய முடிபுகள் என்று குறிப்பிடத்தக்க வகையில் ஏதும் கட்டுரையில் இல்லாதபோதினும், குன்றக்குடி ஆதீனம் குறித்து நல்லதோர் அறிமுகத்தை இக் கட்டுரை தருகின்றது எனலாம்.
-

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 14
அவ்வைமகள்
14. எளிவந்த எளிமை
உலகத்திலேயே மிகவும் சிக்கலான விடயம் ஒன்று உண்டென்றால் அது தான் எளிமை.
ஆம்! “எளிமை” தான் அத்தனைச் சிக்கல் நிறைந்தது. எளிமையாக எழதுவது, எளிமையாகப் பேசுவது, எளிமையான கருவிகளை – பொருட்களை உருவாக்குவது என்பதெல்லாம் எளிமையின் முத்தாய்ப்பான வெளிப்பாடுகள்.
இவ்வாறாக எளிவந்து எளிமை படைப்போர்கள் உலகத்தில் எப்போதோ அபூர்வமாய் உதிக்கிறார்கள். வள்ளுவனுக்குப் பிறகு ஒன்றே முக்கால் வரியில் ஒரு இலக்கியத்தை, அவன் போல் எளிவந்து எழுதிப்போந்த ஒருவனை இவ்வுலகம் இதுகாறும் காணவில்லை.
அவ்வையின், இரண்டே இரண்டு சொற்களைக் கொண்ட “ஆத்திசூடியும்” நான்கே நான்கு சொற்களைக் கொண்ட “கொன்றைவேந்தனும்” நாவை வருடிச் சொடுக்கெடுக்கும் நேர்த்தித் திறன் மிக்க எளிமை கொண்டவை. அவ்வையின் ஆத்திசூடியில் ஆடித்திளைத்த பாரதி, தானும் கூட ஒரு புதிய ஆத்திச்சூடியைப் படைத்து ஆத்திசூடிக்கு ஆத்திச்சூட்டி மகிழ்ந்தான். எளிமையின் அசாத்தியக் கவர்ச்சியை – ஆற்றலை இன்னமும் சொல்லவும் வேண்டுமோ?
தற்காலத்தில், “ஹைக்கூ” எனப்படும் குறுங்கவிதை வகையை அறிவோம். இன்று, ஹைக்கூ கவிதை எழுதுவோர்கள் உலகிலேயே மிகவும் குறைவான எண்ணிக்கையிலேதான் இருக்கிறார்கள்! வெறும் பதினேழு (5-7-5) சொற்கள் போதும் இக்கவிதையை எழுதுவதற்கு. எளிமை என்றால் அத்தனை எளிமை! ஆனால், அதை எழுத ஆளில்லை! காரணம் அதிலுள்ள சவால்!!
சொல்லப்போனால் இன்றைய ஹைக்கூ பெரிதும் விதிகள் தளர்த்தப்பட்டிருக்கிறதான கவிதை வடிவமே. “ரெங்கா” (Renga), என்பதான பெயரில், பதினைந்தாம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றியதான ஒரு கவிதை வகையின் பல்லவி “ஹோக்கு” என்று வழங்கப்பட்டு வந்தது. ஹோக்கு எழுதுவது என்பது வெகுபல நிறைத்த சவால்களை உடைத்ததாய் இருதிருக்கிறது. அடுத்து. “ரெங்கா” என்பது “ரெங்கு” (Renku) வாக மாறி, விதித்தளர்வு பெற்று, படிப்படியாக, இன்னும் கொஞ்சம் எளிமையை இழந்தது. அப்புறம், இன்னமும் கொஞ்சம் விதித் தளர்வு ஏற்பட்டு, பல்லவியான ஹோக்குவையே ஒரு தனிக் கவிதைப் பாணியாகத் எடுத்துக் கொள்ளுவது என்று முடிவு செய்யபட்டது. அது தொட்டு, ஹோக்கூ எனும் பெயரை, ஹைக்கூவாக மாற்றி, பற்பல வகைகளில் மேலும் விதித் தளர்வுகள் ஏற்படுத்திய வகையில், இன்றைய ஹைக்கூ இளைத்து நிற்கிறது. ஆனால், இந்நிலையில் கூட, அதன் எளிமை சவால் நிறைந்த கடினமாய் இருக்கிறது என்றால் எளிமையில் இருக்கக் கூடிய கடினத்தை, சிக்கலை, நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும்.
ஆக, எளிமை என்பது சுலபமானது அன்று என்பது வெள்ளிடை மலை.
ஆனால், இவ்வுலக வாழ்க்கையில், எளிமை தான் விரும்பப்படுவது – வேண்டப்படுவது – இன்றியமையாதது.
சுக்குக்கு மிஞ்சின வைத்தியமில்லை – சுத்திக்கு மிஞ்சின ஆயுதமில்லை – என்பார்கள்.
மிகவும் எளிமையான விடயங்களான சுக்கும் சுத்தியலுமில்லாமல் வீடிருக்க வாய்ப்பில்லை அல்லவா?
ஆக, எளிமையானவை எவையோ அவையே வலிமையானவை – அவையே இன்றியமையாதவை – என்பது விளங்கும்.
கணினி உலகத்தில் முதல் தலைமுறைக் கணினிகளை தற்போதையக் கணினிகளோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இன்றைய கணினிகள் எத்தனை எளிமையாகி இருக்கின்றன என்பது புரியும்.
அதுபோன்றே, கணினிகளில் செருகிப் பயன்படுத்தும் நினைவுப் பெட்டகங்கள் (Memory Storage Devices) எத்தனை எளிதாயிருக்கின்றன என்பதை நினைக்கும்போது மயிர்க்கூச்செறிகிறது. காந்தத் துளை அட்டைகள் (Magnetic Punch Cards), ப்ளாப்பி தட்டுகள். சி டி தட்டுகள், யு எஸ் பி பேனாச் செருகி, மினி யு எஸ் பி பேனாச் செருகி, மைக்ரோ யு எஸ் பி பேனாச் செருகி, நேனோ யு எஸ் பி பேனாச் செருகி என எளிமையை நாம் சேர்த்துக்கொண்டே வந்திருக்கிறோம். இதுபோன்றே எஸ் டி அட்டைகளிலும் தொடர்ச்சியாக எளிமை சேர்ந்து கொண்டே இருக்கிறது.
காரணம்? இவற்றின் எளிமையே இன்றைய மக்களின் வாழ்வாதாரம் என்பதால்.
காந்தத் துளை அட்டையிலிருந்து ஒரு மைக்ரோ யு எஸ் பி வருவதற்கு எத்தனை ஆண்டுகள ஆயின என்று பாருங்கள் – ஏறக்குறைய 50 ஆண்டுகள்.
இந்த 50 ஆண்டுகளிலும் நாம் ஒரு நினைவுப் பெட்டகத்தையோ அல்லது ஒரு கணினியையோ எளிமைப்படுத்துவதற்காக கொடுத்திருக்கிற முயற்சி, உழைப்பு, முதலீடு, ஆகியனவற்றைக் கணக்கில் கொண்டு பார்த்தால், எளிமை என்பது எத்தனைக் கடினமான பணி – காலம் வேண்டுகிற பணி என்பது விளங்கியிருக்கும்.
ஒரு தொழிநுட்பத் துறயில், எளிமை என்பது சாதிக்கப்படவேண்டுமேன்றால் அங்கே மகத்தான திட்டம் இருக்க வேண்டும். நீண்ட கால மற்றும் குறுகிய கால மைற்கற்கள் விவரம் வேண்டும், ஏற்படக்கூடிய இலாப நட்டங்கள் பட்டியலிடப்பட்டாக வேண்டும்; வெற்றி தோல்விகளுக்கு ஏற்றார் போன்ற தகவமைப்பு வேண்டும், நிதிவேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக, அசைக்கமுடியாத உறுதியும், “இது நடக்கும் – நடந்தே யாகும்” என்கிற நம்பிக்கை வேண்டும் – அதற்கும் மேலாக, விசுவாசமான் ஊழியர்கள் வேண்டும்.
கணினிகளும் நினைவாற்றல் பெட்டகங்களும் எளிமையாகின பரிணாம வளர்ச்சியில், எளிமை ஏற்றப்பட ஏற்றப்பட, கணினிகளின் – நினைவாற்றல் பெட்டகங்களின் – சக்தியானது (Power) அதிகரித்துக்கொண்டே போவதை நாம் நிதர்சனமாகப் பார்த்துக் கொண்டிருகிறோம் என்பது பேருண்மை.
நாம் இன்னொன்றையும் கவனிக்கிறோம்: கணினிகள் எளிமையானதால். நினைவாற்றல் பெட்டகங்கள் எளிமையானதால், ஒட்டுமொத்த மனித குலத்தின், திறன் அதிகரித்திருக்கிறது – தொலைத்தொடர்புகள் விரைவு பட்டிருக்கின்றன. உலகமே ஒரு கைப்பிடிக்குள் என்பதான ஏகாந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆக, எளிமை என்பது மனிதகுலத்தின் சக்தியை, திறனை, பலத்தை அதிகரிக்கும் சத்தியத்தை நாம் வெகு யதார்த்தமாகப் பார்க்கிறோம்.
கணினிகளை எளிமைப்படுத்தி, அனைவர் கைகளிலேயும் எளிமையான கணினிகளை ஆனந்தமாய்த் தழுவ விட்ட பெருமை ஸ்டீவ் ஜாப்சிற்கு உண்டு என்றால் சமயத்தை –– எளிமையாக்கி, மக்களின் சிந்தையிலே எளிமையானதொரு சமயத்தை ஆனந்தமாய்த் தழுவவிட்ட பெருமை வள்ளலாரைச் சேரும்.
கணினி என்பது மனிதர்களது வாழ்வாதாரம் என்று ஜாப்சும் சமயம் என்பது மனிதர்களது வாழ்வாதாரம் என்று வள்ளலாரும் சொல்லாமல் சொல்லிப்போன பெற்றியை நம் சிந்தையில் பொருத்திப் பார்க்கிற போது – இவர்கள் இருவரும் ஒப்பிலா மணிகள் என்றே நாம் உணர்ந்து கொள்கிறோம்.
இவ்வாறு நாம் பேசும்போது, கணினியை சமயத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது போல் சிலருக்குத் தோன்றலாம். கணினியையும் சமயத்தையும் ஒப்பிடுவது நம் இலக்கு அல்ல. ஆனால், கணினி என்பது இன்றைய மனிதகுலத்தின் வாழ்வாதாரத்திற்கு எத்தனை முக்கியமானதோ அத்தனை முக்கியமானது சமயமும் என்கிற புரிதல் கிடைக்குமெனில், வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் எனும் இரு பெருமனிதர்களை நாம் புரிந்துகொள்ளுவதற்கு அதுவே ஒரு சிறந்த துவக்கப் புள்ளியாகும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகளை எளிமைப்படுத்தும்போது நேரிட்ட பல சுவையான நிகழ்வுகள் உண்டு. அவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்க இருக்கிற நிலையிலே, எளிமை பற்றிய அவரது பொன்னான கூற்று ஒன்றினை முதலில் பார்ப்போமாக:
“That’s been one of my mantras – focus and simplicity. Simple can be harder than complex: You have to work hard to get your thinking clean to make it simple. But it’s worth it in the end because once you get there, you can move mountains.”
“கவனச்செறிவும் எளிமையுமே எனது மந்திரங்கள் – எளிமை என்பது சிக்கலையும் விடச் சிக்கலானது. உன் எண்ணம் எளிமையாவதற்கு, நீ கடினப்பட்டு முயன்று உனது எண்ண நிலையைத் தூய்மைப்படுத்த வேண்டும். அவ்வாறான, கடின முயற்சி எத்தனை மதிப்புடையது என்பது இறுதியில் விளங்கும் ஏனென்றால், அங்கே (எளிமைக்கு) சென்று விட்டாயென்றால், நீ மலைகளை அசைக்கமுடியும்!”
எளிமை என்பதற்கு இருக்கிற பராக்கிரம ஆற்றலை ஸ்டீவ் ஜாப்சை விட விவரமாக எடுத்துச் சொல்லியவர்கள் எவருமில்லை.
அவருக்கு முன் எளிமையைப் பற்றிப் பூடகமாக, சுருங்கச்சொல்லிப் போந்தவர்கள் சிலருண்டு: லியனார்டோ டா வின்சி (ஏப்ரல் 14/15, 1452 – மே 2. 1519); வால்ட் விட்மன் (மே 31, 1819 – மார்ச் 26,1892); ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18,1955)
“எளிமை என்பது நுட்பத்தின் முத்தாய்ப்பு” (Simplicity is the ultimate sophistication) – லியனார்டோ டா வின்சி.
“எளிமை வெளிப்பாட்டின் மகிமை” “Simplicity is the Glory of Expression” – வால்ட் விட்மன்
எந்த ஒன்றையும் எளிமையாக்குங்கள் – எளிதாக்காதீர்கள் “Make Everythig Simple not Simpler” – ஐன்ஸ்டீன்.
இக்கூற்றுக்கள் மூன்றும் சங்கமித்து மிளிருமுகமாக அமைவது ஸ்டீவ் ஜாப்ஸின் கூற்று என்று எடுத்துக்கொண்டாலும், எளிமை என்பது யாதென செய்முறையாக (practical) ஒரு விளக்கத்தைத் தந்த முதல் மனிதர் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமே. ஏனெனில் எளிமையை, கணினியில் தத்ரூபமாக நிலைநாட்ட அவர் தந்த முற்சிகளும், அம்முயற்சிகளுக்கு அவர் தந்த மாபெரும் உழைப்பு என்னும் மூலதனமும் மட்டுமே எளிமையின் செய்முறையைப் பிறருக்குச் சொல்லுமளவுக்கு அவரைத் தயார் செய்தது.
அவருக்கு முன்னே, எளிமைக்கான எளிமைச் செய்முறையை பிரம்மாண்டமானதொரு தொழிலில், ஒரு தொழில் நுட்பச் சவாலாக எடுத்துக் கொண்டு நிலை நாட்டவேண்டிய வாழ்க்கைப் பேறு, அதாவது கொடுப்பினை பிறருக்கு இல்லை என்பதும் புலப்படுகிறது.
இந்நேரத்தில், நம் கவனத்திற்கு இன்னொன்றும் வருகிறது; ஸ்டீவ் ஜாப்சிற்கு அவரது எளிமை மந்திரத்துக்கு அடித்தளம் போடுவதற்கு ஏதுவாக, எளிமையை வேராகக் கொண்டு வளர்ந்தெழுந்த இந்தியச் சிந்தனை அவரிடம் இருந்ததாக நாம் உணர்கிறோம்.
தியானமுறைகளைப் பயில இந்தியா வந்து, இங்கு தங்கியிருந்து, பயின்று சென்றிருக்கிறவர் என்ற முறையிலும், பொதுவாகவே சிலபல தருணங்களில் இந்தியப் பரிபாஷைகளை எடுத்தாள்கிற மனிதராக வாழ்ந்திருக்கிறார் என்பதாலும், எளிமை என்பது கருவிலேயே, எண்ண நிலையில் எழவேண்டிய ஒன்று என்பதை அவர் துரிதமாகவே அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார் என்றே நம்மால் ஊகிக்க முடிகிறது. இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருமாறு எண்ணிறந்த நேரடியான தனித்தனிச் சம்பவங்கள், இப்போது நம் வசம் இல்லை என்றாலும் “நேர்க் காணல்” முறையில் ஐசக்சனால் எழுதப்பட்ட அவரது வாழ்க்கைச் சரிதத்தில் [1] ஸ்டீவ் ஜாப்ஸின் பல கூற்றுக்களில் உள்ள இந்தியச் சிந்தனையின் சாயலை, நாம் புறக்கணிக்க முடியாது. இதுபற்றி நாம் பின்னால் பேசவும் இருக்கிறோம்.
இந்தியச் சிநதனை என்பது எளிதானதல்ல ஆனால் எளிமையானது. “எளிமையால் மலைகளை அசைக்க முடியும்” என்கிற ஸ்டீவ் ஜாப்சின் கூற்று, மலைகளின் தொகுப்பாக, மாவல்லமை பெற்று நின்ற பிரிட்டிஷ் அரசை, தனது எளிமை என்னும் ஒற்றை நெம்புகோலால் அனயாசயமாய்ப் புரட்டிப்போட்ட அண்ணல் காந்தியடிகளின் (அக்டோபர் 2, 1869 – சனவரி 30,1948) செயல் சாதனையின் வெளிப்பாடே என்று நாம் கொள்ளலாம். இந்த வெளிப்பாட்டை வெறும் வாய்மொழியோடு ஸ்டீவ் ஜாப்ஸ் நிறுத்திக்கொள்ளவில்லை. நேரடியாக செய்து காட்டிச் சென்றிருக்கிறார் – அதுவும் அதி சிக்கலான அவரது துறையில்.
கணினித்துறை என்பது சும்மா அல்பசொல்பமானதல்ல. மிகுந்த போட்டிகளும் வர்த்தகச் சவால்களும், தொழில்நுட்பச் சவால்களும், பல வேலைப் பணியார்களின் மனிதாயுதச் சவால்களும் நிறைந்தது அது. அதுமட்டுமல்ல அது ஒரு உலகாய்ந்த துறை; நொடிப்பொழுதும், “கண்கொத்திப் பாம்பைப்போல்” பிறர் பார்த்துக் கொண்டிருக்கிற பார்வை உள்ளதான துறை. அத்தகையதொரு துறையில், அந்தரத்தில், அப்பட்டமாய் நின்றபடி, வெட்டவெளிச்சமாய், நாட்டவர் மருளவும், கேட்டவர் வியக்கவும், பார்த்தவர்க் கிறங்கவும், எளிமையை எளிவந்து சாதித்துக் காட்டிய ஸ்டீவ் ஜாப்ஸின் சாதனை உலக வரலாற்றில் நீங்காத இடம் பெரும் தன்மையதுதான்.
அவருள் இருந்த எளிமைச் சார்பின் தன்மை தான் ஸ்டீவ் ஜாப்ஸின் இந்தச் சாதனைக்கு அடித்தளமாய் அமைந்தது என்பதை நாம் வலியுறுத்த வேண்டிய தேவை இல்லை.
(மேலும் பேசுவோம்)
துணைநூற் பட்டியல்
[1] Walter Issacson (2011). Steve Jobs, Simon & Schuster, 656 pp.
-

பழகத் தெரிய வேணும் – 12
நிர்மலா ராகவன்
(குடும்பச் சுற்றுலா)
“அடுத்தமுறை, உலகத்தைச் சுற்றிப் பார்க்கப் போகும்போது, என்னையும் அழைத்துப் போகிறாயா?” கேட்டது என் எட்டு வயதாகியிருந்த பேரன். நான் எங்காவது அயல்நாடு போய்விட்டு, கதைகதையாகச் சொல்வதைக் கேட்டு, அவனுக்கும் ஆர்வம் பிறந்திருந்தது.
அப்படி என்ன கதை?
தற்போது கிழக்கு மலேசியா என்று அழைக்கப்படும் போர்னியோ காட்டுக்கு என் மகளுடன் சென்றிருந்தேன்.
காட்டில் ஆங்காங்கு சிறு குடில்கள். ஜன்னலோரமாக வைத்திருக்கும் வாழைப்பழத்தை வெளியிலிருந்து உரிமையுடன் எடுத்துச் சாப்பிடும் குரங்குகள். குடிலுக்கு வெளியே இருந்த மரத்தில் பின்னிப் பிணைந்த நாகம். இவையெல்லாம் நகர்ப்புறத்தில் காணக் கிடைக்காத அனுபவங்கள்.
‘இங்கு குழாய்த்தண்ணீர் சிவப்பாக இருக்கும். மரங்களின் வேரால் அப்படி ஆகிறது. ஆனால், சுத்தமான நீர்தான்,’ என்று முதலிலேயே எச்சரிக்கை விடுத்திருந்தார்கள்.
குளியலறைக்குப் போனவள், அங்கு ஒரு தவளை இருப்பதைக் கண்டு, வெளியே ஓடி வந்தேன்.
‘வேண்டுமென்றுதான் ஒவ்வொரு குளியலறையிலும் ஒன்றை விட்டிருக்கிறோம். அப்போதுதான் கொசுத்தொல்லை இருக்காது!’ என்ற விளக்கம் கிடைத்தது.
‘தவளையை மிதித்துத் தொலைக்கப் போகிறோமே!’ என்று பயந்தபடி குளிக்க வேண்டியிருந்தது.
JUNGLE TREKKING என்று காட்டு வழியில் நடப்பதற்குப் புறப்பட்டேன். அதுதான் முதன்முறை. என்ன எதிர்பார்ப்பது என்று புரியாததால் உற்சாகமாக இருந்தது.
என்னைப்போன்ற அனுபவமற்றவர்களுக்கு என்று ஒன்று, இரண்டு என்று பாதைகளின் எண்களைக் குறித்திருந்தார்கள். முதல் பாதையில் ஆரம்பித்தேன். பாதி வழிக்குள் எப்படியோ, நான்காவது பாதைக்கு மாற்றி அழைத்துப் போய்விட்டாள் மகள். மொத்தமே ஐந்துதான்.
இந்தக் கடினமான பாதையில் ஒரு மரக்கிளையிலிருந்து அடுத்த நிலைக்குக் குதிக்க வேண்டும். இடையே ஒரு மீட்டர்!
எனக்கோ, அறுபது வயது. அப்படியே மலைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன்.
“’யோசிச்சுப் பாரும்மா. இந்த நிமிடம் போர்னியோ காட்டில் மரங்களின் மீதும், மலைப்பாதைகளின்மேலும் ஏறி, இறங்கும் இந்தியப்பாட்டி நீ ஒருத்தியாகத்தான் இருப்பாய்!”
“பயமாக இருந்தாலும், அக்காரியத்தைச் செய்துவிட்டால், பயம் போய்விடும்,” என்றெல்லாம் பலவாறாக மகள் சமாதானப்படுத்த, நீண்ட மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு குதித்தேன்.
என்னைத் தனியாகத் திரும்பிப்போகச் சொல்லிவிட்டு, என் மகள் மீண்டும் ஏறினாள்.
நான் போகும் வழியில் ஒரு PROBOSCIS குரங்கு உட்கார்ந்திருந்தது. பெரிய உருவம். தும்பிக்கைபோல் ஒன்று. நட்டநடுவிலா இப்படி உட்கார்ந்திருக்கும்!
இம்மாதிரி தருணங்களில்தான் பக்தி அதிகரித்துவிடுகிறது.
நான் அதற்கு மிக அருகில் நடந்துபோனேன். அது கவனிக்கவேயில்லை. சில சமயங்களில் நாம் அடையும் அச்சம் அனாவசியம் என்று புரிந்தது.
அடுத்த சில மணி நேரம், நாற்காலியில் உட்கார்ந்திருந்த நிலையிலும் என் கால்கள் தாமாக ஆடியபடி இருந்தன.
‘நமக்கு ரொம்பத்தான் வயதாகிவிட்டது போலிருக்கிறதே!’ என்று எழுந்த கவலை அதேபோல் பக்கவாட்டில் கால்கள் ஆட நடந்த இரு இளம்பெண்களைப் பார்த்ததும் சிரிப்பாக மாறியது.
முன்பின் பழக்கமில்லாமல் ஒரு காரியத்தில் இறங்கினால் எதை எதையோ சந்திக்க வேண்டியிருக்கும்.
நேபாளத்தில்
காட்மாண்டுவின் தென்மேற்குப் பகுதியில் இருந்த சிட்வான் (CHITWAN) என்ற இடத்திற்குப் போனோம். அக்காட்டில் யானைகளை வளர்க்கிறார்கள்.
ஒரு யானைமேல் கால்களை இரு பக்கங்களிலும் தொங்கவிட்டு அமர்ந்தபடி காட்டினூடே பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம்.
அவ்வப்போது, ‘எல்லாரும் முன்னால் நகருங்கள்,’ என்று அதன்மேல் அமர்ந்திருந்த நால்வரிடம் உத்தரவு பிறப்பிப்பார் யானைப்பாகன். அடுத்து, யானை ஒரு மேட்டிலிருந்து குதித்து, ஆற்றுக்குள் நடக்கும். பயமும் மகிழ்ச்சியும் போட்டி போட்டுக்கொண்டு எழுந்தன.
அங்கு விதவிதமான பறவைகள், அசையாது, இறந்ததுபோல் கிடந்த முதலைகள்.
வழியில் ஒரு குட்டி யானை அம்மாவின் அடியிலிருந்த நிழலில் படுத்து சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தது. சற்று வளர்ந்தபின்னர், அதையும் பழக்குவார்கள் என்று கேட்டபோது வருத்தமாக இருந்தது.
இன்னொரு குட்டி அதன் ஆகாரமான தழைகளை மணலில் புரட்டி, அதைத் தன் தலைமேல் தட்டிக்கொண்டது. தன் தாய் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொண்டிருக்கும்.
அடுத்து, வாயில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது புரியாது, மீண்டும் மணலில் புரட்டி எடுத்து, தலையில் தட்டி, என்று திரும்பத் திரும்ப அதே காரியத்தைச் செய்தது எங்களை பரிதாபப்படவும், சிரிக்கவும் வைத்தது.
நீண்ட யானைச் சவாரிக்குப்பின் இறங்கவே சிரமப்பட்டேன். காலில் தசைநார் கிழிந்துபோக, ஆறுமாத காலம் நொண்டியபடிதான் நடக்க முடிந்தது.
‘செலவு, நோய்நொடி எல்லாவற்றையும் தவிர்க்க இருக்கும் இடத்திலேயே சௌக்கியமாக இருக்கலாமே!’ என்று பார்த்தால் முடியுமா? வீட்டில் செய்த காரியத்தையே செய்துகொண்டிருப்பது சலிப்பைத்தான் தரும்.
முன்னேற்பாடாக, தேவைப்படும் ஆடைகளையோ, மருந்துகளையோ எடுத்துக்கொண்டு போகவேண்டியதுதான்.
(நீண்ட பயணத்திற்கு உலர்ந்த திராட்சையை அவ்வப்போது மென்றால், சோர்வு ஏற்படுவதில்லை. சிசுக்களை விமானத்தில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் காதில் பஞ்சை அடைத்தால், ஓயாமல் கதறி அழமாட்டார்கள்).
உணவு, உறக்கம்
என் ‘சாதனை’களைக் கேட்ட பின்னர், தானும் இம்மாதிரியான சாகசங்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது என் பேரனுக்கு.
எனக்குத் தயக்கமாக இருந்தது.
“நீ சாப்பிடப் படுத்துவாயே! வெளியில் என்ன கிடைக்கிறதோ, அதைத்தான் சாப்பிட வேண்டியிருக்கும்”.
மறுநாளிலிருந்து வீட்டில் என்ன சமைக்கிறோமோ, அவைகளையெல்லாம் ‘பிடிக்காது, பழக்கமில்லை,’ என்றெல்லாம் வழக்கம்போல் ஒதுக்காது, மிளகாய் வற்றல், கறிவேப்பிலையைக்கூடச் சாப்பிட ஆரம்பித்தான்!
நீண்ட பயணத்தின்போது தூங்கினால்தான் இறங்கியபின்னர் உற்சாகத்துடன் சுற்றிப்பார்க்க முடியும். ஓயாமல் பேசிக்கொண்டோ, விளையாடிக்கொண்டோ சென்றால், ஊரைச் சுற்றிப் பார்க்கும்போது உடல் களைத்து, எதையும் சரியாகப் புரிந்துகொள்ள இயலாது.
குழந்தைகளுக்கு லஞ்சம்
பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பயணம் செய்ய நேரிட்டால், சிறுவர்களுக்குப் பொறுமை மீற, நமக்கு அவர்களை சகிக்க முடியாது போய்விடும்.
“பேசாம இருந்தா, அடுத்த தடவை கார் நிக்கறபோது, ஒனக்கு ரெண்டு ஐஸ்க்ரீம் வாங்கித் தரேன்,” என்று ஆசை காட்டுவேன்.
சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். உண்மை பேசும் குணமும் தானே வரும்.
“ஒனக்கு மட்டும்தான் ரெண்டு!” என்று, அவன் என்னவோ மிக நல்ல குழந்தை என்பதுபோல் சொல்லிக்காட்ட, அவனுக்குப் பெருமையாகிவிடும். பயணம் தொடரும்போது, முடிந்தவரை தொந்தரவு கொடுக்காது இருப்பான்.
குழந்தைகளுடன் சுற்றுலா போவதால் நன்மை அவர்களுக்கு மட்டுமல்ல.
‘வெளியூருக்குப் போனா, மத்தியானம் தூங்க வேண்டாம்னு அம்மா சொல்லிட்டா!’ என்று நான்கு வயதில் என் மகள் குதூகலித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
அறிவு முதிர்ச்சி
புதிய இடங்களில் பழக்கமில்லாத மொழி, கலாசாரத்தைப்பற்றி அறிவது அறிவு முதிர்ச்சியை அளிக்கிறது. அதிகாரம் செய்வதைவிட மரியாதையாகப் பிறரை நடத்துவது நல்ல பலனை அளிக்கும் என்று புரிந்துபோகிறது. நம்மிடமிருந்து மாறுபட்ட எவரையும் ஏற்கும் குணம் வருகிறது.
வீடு திரும்பியபின், எந்த வயதினரும் எப்போதும் செய்துவந்த காரியங்களைச் செய்ய உற்சாகம் காட்டுவார்கள்.
காலப்போக்கில், பெற்றோரைவிட்டு வெகுதொலைவு சென்றாலும், சிறுவயதில் குடும்பத்துடன் கழித்த சில தருணங்கள் நினைவில் நிலைத்து, மகிழ்ச்சியைத் தரும்.
அவை வாழ்க்கையில் ஏற்படும் இடர்களால் ஒரேயடியாக இடிந்து போய்விடாது நம்மைக் காக்கும்.

