Blog

  • வேங்கட வேட்கை

    வேங்கட வேட்கை

    கவித்தலம் கை. அறிவழகன்

    காப்புச் செய்யுள்

    (இன்னிசை வெண்பா)

    வேங்கட வேட்கை விருப்புடன் பாடியே
    தீங்கினை நீக்கித் திருமலைக்குச் செல்ல:
    திரைவிரி காவிரித் தீந்தமிழ் ஆற்றங்
    கரைகிடந்த கண்ணா அருள்.

    (கலிவிருத்தம்)

    முத்தமிழ் உவப்பானை முகில்வண்ண மூர்த்தியைப்
    புத்தியில் உறைவானைப் பொழிலேழு மலையானை
    வித்தகக் கண்ணனை வேதத்தின் நாயகனைச்
    சித்தம் நிறைந்திடச் சேவிப்ப தெந்நாளோ?

    உருக்கிடும் உருவானை உளத்துளே நிறைவானைப்
    பெருக்கிடும் விழிநீர் மல்கப் பிணைத்திடும் அன்பினாலே
    திருக்கண்டு பொன்மேனி கண்டு திருப்பதியான்
    இருக்கின்ற எழிலுருவை எப்போது காண்பேனோ?

    ஆயனை அலர்மேல் மங்கை போற்றும்
    நேயனை நெடுங்கடல் வண்ண நிமலனைத்
    தூயநீர் அருவி துளிர்த்திடும் வேங்கடத்தே
    தாயனையத் தலைவனைத் தரிசிப்ப தெந்நாளோ?

    கங்குல் விளக்கானைக் கருத்ததனில் நிறைந்தானை
    எங்குலக் கொழுந்தானை எவ்வுயிருக்கும் நாயகனைத்
    தெங்கிள நீர்ச்சுவைத் திருவேங்கட மலையானைப்
    பொங்கிடத் தரிசித்துப் பூரிப்ப தெந்நாளோ?

    பொங்கரவில் அணைவானைப் புரிதுயில் நிறைவானைச்
    சிங்கமுக உருவானைச் சிதறுந்தேன் ஒன்றாகித்
    தங்குமலர்த் தாமரை தமிழ்வேங் கடத்தே
    செங்கமலக் கண்ணனைச் சேவிப்ப தெந்நாளோ?

    எண்ணிய எண்ணத்தை ஈடேற்றும் நாயகனைப்
    புண்ணிய நல்வினை பொழிந்திடும் தேவனை
    மண்ணிலே உயர்ந்த மாமலை வேங்கடத்தில்
    கண்ணினால் கண்டே கரையேறு வதெந்நாளோ?

    முத்தி தருவானை மூவுலகும் காப்பானை
    எத்திசையும் போற்றும் ஏழு மலையானைப்
    பத்திப் பெருக்குடனே பாதமலர் தான்வணங்கி
    அத்தி வரதரையும் அடிதொழுவ தெந்நாளோ?

    செந்துவர்வாய்ச் சங்கனைச் சீரிமிகு சக்கரம்
    தந்தோள் சூடிய தாமோ தரனை
    எந்துயர் தீர்ப்பானை ஏழுமலை வேங்கடனை
    முந்தியே தரிசித்து மூழ்குவதும் எந்நாளோ?

    சீதை நாயகனைச் செங்கண் திருமாலைக்
    கோதை மாலை சூடிய கோவிந்தனை
    வேத முதல்வனை வேங்கட மலையானைத்
    தீதறத் திருவிழி காண்பதுவும் எந்நாளோ?

    குலம்காக்க வேண்டும் கோவிந்தா என்றும்
    நலம்காத் தருள்வாய்; நாராயணா என்றும்
    தலம்போற் றுகின்ற தமிழ்வேங் கடத்தே
    பலர்போற்றுந் தமிழால் பாடுவதும் எந்நாளோ?

                               (வேறு)

    (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

    கண்ணுளே பாவை யானாய்
    கருத்துளே யாவும் ஆனாய்
    மண்ணுளே மரமும் செடியும்
    மற்றுள அனைத்தும் ஆனாய்
    தண்ணொளிக்  கதிராய் ஆனாய்
    தமிழெலாம் நீயே ஆனாய்
    விண்பொழி மழைபோல் ஆங்கே
    வேங்கடம் நின்றாய் நீயே!

    உன்னையே தொழுதேன் என்றும்
    உணர்வுடன் மகிழ்வாய் நின்றே
    என்னையும் ஏற்பாய் என்றே
    எழுமலை துதிக்கின் றேனே
    அன்னையே அத்தன் நீயே
    அன்பினோர் வடிவம் நீயே
    இன்னுமோ உறக்கம் கொண்டாய்
    ஏழையேன் தவிக்கின் றேனே!

    Share
  • ஏறன் சிவா துளிப்பாக்கள்

    ஏறன் சிவா துளிப்பாக்கள்

    ஏறன் சிவா

    வீசப்பட்ட விதைகள்
    முளைத்து வந்தது
    நம்பிக்கை!

                   ****

    துள்ளியோடிய அணில்
    ஏறி அமர்ந்துகொண்டது
    மனத்தில்!

                    ****

    சோற்றுக்கே வழியில்லை
    வீடு கட்டுகிறான்
    சிலம்பப் பயிற்சி!

                    ****

    வீட்டுக்கு வரும் விருந்தினர்
    ஓடி ஓடி வரவேற்கிறான்
    நாய்க்குட்டி!

                     ****

    யாரும் மதிக்காததால்
    வெளியிலேயே நின்றுவிட்டது
    செருப்பு!

                      ****

    ஆற்றில் விழுந்த பொம்மை
    அடித்துச் செல்கிறது
    மழலையின் மனம்!

                       ****
    நூலகம் மூடப்பட்டதும்
    புதிதாகத் திறக்கப்பட்டது
    மதுக்கடையும் சிறைச்சாலையும்!

                       ****
    கைவிடப்பட்ட குழந்தைகள்
    குப்பையில் தேடுகிறார்கள்
    தங்கள் வாழ்க்கையை!

                       ****

    கோடைக்காலப் பயிர்கள்
    வாடுகிறது
    உழவனின் குடும்பம்!

                        ****

    நனைக்காமலேயே நம்மைக்
    குளிப்பாட்டி விடுகிறது
    குளிர்ந்த தென்றல்!

    Share
  • நாலடியார் நயம் – 5

    நாலடியார் நயம் – 5

    நாங்குநேரி வாசஸ்ரீ

     5. தூய் தன்மை

    பாடல் 41

    மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர்
    நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை – யாக்கைக்கோர்
    ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
    காக்கை கடிவதோர் கோல்

    மாந்தளிரின் மேனியுடை இள
    மங்கை நல்லாளே! என
    விளித்துப் பிதற்றும் அறிவுடையோர்
    விரைவில்அழியும் உடம்பின்
    இழிவை எண்ணிப் பாராரோ?
    ஈயின் சிறகு அளவு
    தோல் அறுந்தாலும்
    வழியும் குருதிநோக்கி
    வரும் காக்கையை
    விரட்ட ஒரு கொம்பு
    வேண்டும் என உணர்வீர்.

    பாடல் 42 

    தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
    மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் – மீப்போர்வை
    பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
    பைம்மறியாப் பார்க்கப் படும்

    கண்ணுக்குத்தெரியா துளைகள் பல
    கொண்டு அசுத்தங்களை மறைக்கும்
    மேற்போர்வைத் தோலினால்
    மிக்க பெருமை கொண்டு
    விளங்கும் இவ்வுடம்பு
    விருப்பம்தரும் அத்தோலால்
    ஆசைமேலிட்டு காம வயப்படாது
    அசுத்தம் மறைக்கப்படாத
    பை போல் நினைந்து உட்புறம்
    காண்கின் உண்மை புரியும்.

    பாடல் 43

    தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
    பொய்க்கோலம் செய்ய ஒழியுமே – எக்காலும்
    உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
    கண்டுகை விட்ட மயல்.

    உண்ணும் தொழிலால்
    உடலுள் அழுக்கு மிகுமென்று
    பெரியோர் விலக்கிவிட்ட
    ஆசை எனும் மயக்கத்தால்
    ஆகுகின்ற உடல்நாற்றம்
    மணம் தரும் பொருட்களை
    மென்று தின்பதாலோ
    வாசனை மலர்களை
    வகையாய்ச் சூடிச் செய்யும்
    பொய் அலங்காரத்தாலோ
    போகிடுமோ?

    பாடல் 44

    தெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று
    கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
    உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
    கண்ணீர்மை கண்டொழுகு வேன்

    உள்ளிருக்கும் நீர் நீக்கின்
    தோண்டிய நுங்கு போல்
    தோன்றும் கண்களைத்
    தெளிந்தநீர்க் குவளை என்றோ
    கரையில் புரளும் கயலென்றோ
    கூர் வேற்படை என்றோ
    கூறி இன்புறும் அற்பமனிதர்கள்
    என்மனத்தைத் துன்புறுத்த
    எச்சமயத்திலும் விடுவேனோ?

    பாடல் 45

    முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
    கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
    எல்லோரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
    பல்லென்பு கண்டொழுகு வேன்

    எல்லோரும் காணும்படி சுடுகாடு
    எங்கும் சிந்திக்கிடக்கும்
    பல்லாகிய எலும்புகளைப்
    பார்த்தபின்னும் பற்றற்று
    ஒழுகும் நான் பெண்களின்
    ஒளிமிகு பற்களை
    முல்லை அரும்புகள் என்றும்
    முத்துப் போன்றவை என்றும்
    பிதற்றும் மேலான நூலறிவு
    பெறாக் கீழ்மக்கள் எம்
    உள்ளத்தைத் துன்புறுத்த
    உறுதியற்று விடுவேனோ?

    பாடல் 46

    குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
    தொடரும் நரம்பொடு தோலும் – இடையிடையே
    வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
    எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்

    குடலும் கொழுப்பும்
    குருதியும் எலும்பும்
    நன்கு கட்டப்பட்ட
    நரம்பும் தோலும்
    இவற்றினிடைத் தோன்றும்
    தசைகளும் நிணமும்
    தாங்கிய இவைகளுள்
    குளிர்ந்த மாலை சூடிய இக்
    கோதை எப்பகுதியை உடையவள்?

    பாடல் 47

    ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
    கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் – பேதை
    பெருந்தோளி பெய்வளையாய் என்னுமீப் போர்த்த
    கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.

    அழுக்குகள் ஊறி
    அவ் வெறுக்கத்தக்க
    ஒன்பது துளைகளை
    உடைய புலன்களையும்
    அசுத்தக் குழம்பு உட்சிதறி
    அலைமோதும் உடம்பையும்
    கண்டும் அறிவில்லாதான்
    கண்கவரும் மேல்தோலால்
    கவரப்பட்டு அழகிய
    பெருத்த தோளுடையவளே!
    பாங்கான வளையல்கள்
    அணிந்தவளே! என விளித்து
    அறிவில்லாது பிதற்றுவான்.

    பாடல் 48

    பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
    கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் – மண்டிப்
    பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்
    முடைச்சாகாடு அச்சிற்று உழி

    உடம்பெனும் பண்டத்தின்
    உண்மை இயல்பறியாதோர்
    சந்தனப் பூச்சையும்
    சூடும் மலர்மாலையையும்
    பாராட்டி மகிழ்ந்திடுவர்
    முடைநாற்றம் கொண்ட
    மனித உடம்பெனும் வண்டியின்
    அச்சுபோலாம் உயிர் பிரிந்தபின்
    ஆணும் பெண்ணுமாய் வலிமிகு
    கழுகுகள் கூடிப் புரட்டிக்
    குத்தி உண்பதை அவர்கள்
    கண்டதில்லையோ?

    பாடல் 49

    கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
    குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி – ஒழிந்தாரைப்
    போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
    சாற்றுங்கொல் சாலச் சிரித்து

    இடுகாட்டில் காணப்படும்
    இறந்தவர்களின் தலைகள்
    அச்சந்தரும் தோற்றம் கொண்ட
    ஆழ்பள்ளக் கண்களுடன்
    சாகாது நிற்கும் மற்றவர்
    சகிக்க முடியாதபடி
    ஏளனமாய்ச் சிரித்து
    இவ்வுடம்பின் தன்மை
    இத்தகையது என உணர்த்தி
    நல்லறம் போற்றி
    நல்வழியில் நில்லுங்கள்
    எனச் சொல்லுகின்றனவோ?

    பாடல் 50

    உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
    செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் – செயிர்தீர்ந்தார்
    கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர்
    பண்டத்துள் வைப்ப திலர்

    இறந்தவர் வெண்மண்டை ஓடுகள்
    இருப்பவர் அஞ்சும்படி நகைத்து
    இல்லறத்தில் இறுமாந்து
    இருப்போரின் குற்றம் போக்கும்
    உடல்மயக்கமெனும் குற்றம் நீங்கியோர்
    உண்மையை உணர்ந்துப் பின்னர்
    இவ்வுடம்பின் இயல்பு
    இத்தகையதுதான் என
    அறிந்து தம் உடம்பை
    அரிதான ஒரு பொருளாய்
    அதிசயித்துப் பாராட்ட விழைந்திலர்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 254

    படக்கவிதைப் போட்டி – 254

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பிரேம்நாத் திருமலைச்சாமி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 253-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 253-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ஆழியும் ஓடங்களும் அவற்றின் அருகிருக்கும் மனிதர்களுமாக ‘ஆழிசூழ் உலகை’க் கறுப்பு வெள்ளை நிழற்படமாக்கி நம் பார்வைக்குத் தந்திருக்கின்றார் திரு. முகம்மது ரபி. இப்படத்தை படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் திருமிகு ராமலக்ஷ்மி. படமெடுத்தவர், அதனைத் தேர்ந்தெடுத்தவர் இருவருக்கும் என் நன்றி!

    ”வாழ்க்கையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே
    ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே”
    எனும் பழைய திரைப்படப் பாடல் நினைவலைகளில் மோதுகின்றது.

    கூடவே…” நீர்வழிப் படூஉம் புணைபோல்
    ஆருயிர் முறைவழிப் படூஉம்
    ” எனும் கணியன் பூங்குன்றனின் மணிமொழியும் நெஞ்சில் ஒலிக்கின்றது.

    கற்பனைக்கு நல்விருந்தாய் விளங்கும் இக்காட்சிக்குப் பொற்பான கவியெழுதிக் காத்திருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களை வரவேற்று அவர்களின் கவியமுதைப் பருகிவருவோம்!

    *****

    ”பயந்தனை விரட்டு! விதைநெல்லாய்த் தனித்திரு! வியந்திட வாழலாம் மீண்டெழுந்து!” என்று நம்பிக்கையை அள்ளித் தெளித்திருக்கின்றார் கவிதையில் திரு. செண்பக ஜெகதீசன்.

    தனித்திரு விழித்திரு…

    பயண மெல்லாம் பாதியிலே
    பறவை விலங்கினம் வீதியிலே,
    துயரில் வீழ்ந்ததே மனிதயினம்
    தூய்மை தானே தேவையினி,
    பயந்தே யிருந்தால் பலனில்லை
    படகை ஓட்டு தனிமையிலே,
    வியந்திட வாழலாம் மீண்டெழுந்தே
    விதைநெல் லாயிரு தனித்திருந்தே…!

    *****

    ”கருப்பு மனமும் கருப்புப் பணமும் வேண்டாம்; வெள்ளை மனமும் வெள்ளைப் பணமும் கொள்வோம்! வாழ்வினில் வெல்வோம்!” என்று நன்மொழி நவில்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    கடல்நீரும் வானும்
    கரையோரப் படகுகளும்
    கரைத்திட்டு மணலும்
    அக்காட்சி காணும் மனிதர்களும்
    கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில்
    நிறம் மாறித்தான் போயினவோ?
    அதன் உரிய வண்ணம் தெரிவதற்கு
    ஒருபோதும் வாய்ப்பில்லை!

    கருப்பு நிறம் பணத்தளவில்
    கருப்புநிறம் மனத்தளவில்
    என்றொரு எண்ணம் வேண்டாம்
    வெண்மை நிறம் பணத்தளவில்
    வெண்மை நிறம் மனத்தளவில்
    என்றே நாளும் வாழ்ந்திடலாம்
    இனிதே நாளும் உயர்ந்திடலாம்

    *****

    ”பொறாமைத் தீயில் பொசுங்கினாலும் அழுக்காறில்லா ஆன்றோனாய்க் காட்டிக்கொண்டேன்; கயமை உள்ளே களிநடனம் புரிந்தாலும் உத்தமனாய் விடியல்நோக்கிக் காத்திருந்தேன்!” என்று மானுட மனத்தின் முரண்பாடுகளை அருமையாய் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    முரண்பாடு

    மனக்கடலில் ஆசையலைப்
    பேரிரைச்சல் போட்டு ஆட
    முகந்தனிலே அமைதி காட்டி
    மௌனத்தாழ்ப் போட்டிருந்தேன்!

    கயமையது உள்ளிருந்து
    களிநடனம் புரிகையிலே
    விடியல் நோக்கிக் காத்திருக்கும்
    வேடமதைத் தாங்கி நின்றேன்!

    பொறாமைத் தீயில் நாளும்
    பொசுங்கி வெந்து போனாலும்
    அழுக்காறு ஏதுமில்லா
    ஆன்றோனாய்க் காட்டிவைத்தேன்

    பெருவெள்ளம் தாண்டி நின்றும்
    கரைசேர மனமில்லாப் படகாக
    ஆசை நீரில் தத்தளிக்கும்
    தக்கையென உழலுகின்றேன்!

    முரண்பாட்டின் மொத்த உரு
    அசுரனாய் உள் வளர்ந்து நிற்க
    முற்றும் துறந்த முனிவனென
    முகங்காட்டி நிற்கின்றேன்!

    *****

    ”சிலசமயம் பாசம் படிந்து, சிலசமயம் உடைந்து, எக்கருவி எந்தச் சூத்திரம் கொண்டும் ஆசாரியர்கள் என்ன பண்படுத்தினாலும் அலைகளும் அசைவுகளும் மட்டும் ஓய்வதில்லை” என்று மனித மனத்தின் சலனத்தைக் கவிதையில் அழகாய்க் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. கார்கில் ஜெய்.

    கட்டுமனம், பாய்மனம், உல்லாச மனம் எனப் பலமனம்
    நினைவலைகளில் ஆடிக்கொண்டே இருப்பதனால்  
    எந்த மனமும் ஆழ்வதில்லை; ஆழ்ந்தது மீள்வதில்லை 
    பரந்த வானமும், பரந்த நீலமும் வழிந்து விழுந்தது போலிருக்கும்
    பரந்த கடலில் சிறகை விரித்துப் பறந்த பறவைகள் போல் 
    தேடிச்சென்றது எதுவோ கிடைத்தது எதுவோ
    சூரியன் தூங்கியதும் கரை திரும்பும் மனங்கள்
    சிலசமயம் பாசம் படிந்து, சிலசமயம் உடைந்து 
    அல்லது கசியும் ஓட்டையோடு
    எக்கருவி எந்தச் சூத்திரம் கொண்டும் 
    ஆசாரியர்கள் என்ன பண்படுத்தினாலும் 
    அலைகளும் அசைவுகளும்  மட்டும் ஓய்வதில்லை
    அடுத்தநாள் இருக்கும்போதும்…
    கரையேறுதல் எப்போது?

    *****

    தம் எண்ண அலைகளின் உதவியால், படத்தில் காணப்படும், அசையாப் படகுகளையும் அழகாய் அசைத்துக் காட்டியிருக்கின்றார்கள் நம் திறன்மிகு கவிஞர்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    விடயம்

    கட்டுத்தறிக் காளைகளாய்க் கரைநிற்கும் படகுகள்
    கொட்டியளக்கும் உழைப்பின் வியர்வைக்கடல் ஊர்திகள்
    மட்டுப்படா முனைப்புகளின் விளைவுதரும் மானிகள்
    கட்டுக்கடங்கா மகிழ்ச்சியைப் பரிசுதரும் கர்மயோகிகள்

    கேள்விக்குறியாய் முதுகுவளையும் செயன்மை
    அன்றாட வாழ்வின் ஆதாரம் தேடும் உயிர்மை
    பொன்னோடம் ஏறிப் பொழுதுபோக்கும் இளமை
    தன்னாவி இனிக்க ஏறத்துடிக்கும் குழுமை

    தாவிச்செல்லும் இளமை வேகம்
    தாங்கிநிற்கும் சுமையின் போகம்
    ஓடநினைக்கும் குழந்தைச் சொந்தம்
    மடுத்துக் காக்கும் தந்தை பந்தம்
    எல்லாம்;
    கண்ணாரக் காணும் காட்சி சொல்லும்
    எண்ணாரத் தொகுப்பாய் அமையும் விடயம்!

    ”கட்டுத்தறிக் காளைகளாய்க் கரைநிற்கும் படகுகள், கொட்டியளக்கும் உழைப்பின் வியர்வைக்கடல் ஊர்திகள்; கட்டுக்கடங்கா மகிழ்ச்சியைப் பரிசுதரும் கர்மயோகிகள்!” என்று படகுகளின் பண்பையும் பயனையும் நயமாய் உரைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர், திருமிகு. ச. கண்மணி கணேசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கனவென்னும் கட்டெறும்பு

    கனவென்னும் கட்டெறும்பு

    கவிதை: அண்ணாகண்ணன்
    வாசிப்பு: அண்ணாகண்ணன், ஷைலஜா

    இந்தக் கவிதையை ஒலி வடிவில்  இங்கே கேட் கலாம்.

     

    காய்ச்சலா என்று கேட்டு
    நெற்றியில் கையை வைத்தாய்.
    இல்லாத காய்ச்சல் சூடு
    ஜிவ்வென ஏறக் கண்டேன்.

    வேர்க்குதா என்று கேட்டு
    மேலாக்கால் துடைத்து விட்டாய்.
    இல்லாத வேர்வை பொங்கி
    என்மேனி மூழ்கக் கண்டேன்.

    தூசியா என்று கேட்டு
    இதழ்குவித்து ஊதி விட்டாய்.
    உலகமே தூசியாச்சு
    உன்னிதழ் உலக மாச்சு.

    கோணலா வகிடு என்று
    சீப்பினால் சிலை வடித்தாய்.
    மேகமாய் மிதந்து சென்று
    காற்றுக்குத் தலை கொடுத்தேன்.

    பசிக்குதா என்று கேட்டு
    ஒற்றைவாய் ஊட்டிவிட்டாய்.
    உறுபசி தன்னைத் தின்று
    உயிர்ப்பசி ஊறக் கண்டேன்.

    தூங்கென்று சொல்லிவிட்டுத்
    தூரத்தில் புள்ளி யானாய்.
    கனவென்னும் கட்டெறும்பு – என்
    காலத்தைக் கடிக்குதேடி.

    http://annakannan-kavithaigal.blogspot.com/2006/03/blog-post.html
    ——————————————
    Pic courtesy: https://www.maxpixels.net

    ——————————————

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எழுவகைப் பெண்கள் – 14

    எழுவகைப் பெண்கள் – 14

    அவ்வைமகள்

    தலைப்பின்னல் எனும் மருத்துவச்  சூட்சுமம்

    அந்த இராணுவ அதிகாரிக்கு, தலைமுடி பற்றி, சிலபல நல்ல கேள்விகள் இருந்தன. அவற்றுள் முதலாவதாக மிக முக்கியமானதாக எதை எடுத்துகொள்ளலாம் என அவரையே கேட்டேன். “தலைப் பின்னல்” என்றார்.

    அவர் சொன்னார்: நான் பொதுவாகக் கேள்விப்பட்டது அல்லது வலைத்தளத்தின் மூலம் தெரிந்துகொண்டது என்னவென்றால் பின்னல் சடை போடுவது என்பது உங்களது பாரம்பரிய பழக்கம் என்று. ஏறக்குறைய எங்கள் நாட்டுப் பூர்வீக இந்தியர்கள் கூட நீள்முடி உள்ளவர்கள் – அவர்களில் பெண்கள் ஏன் ஆண்களும் கூட, உங்களைப்போலவே பின்னல் சடை போட்டுக் கொள்பவர்கள். உங்கள் இருவருக்கும் இவ்விஷயத்தில் உள்ள ஒற்றுமை ஆச்சரியப்படவைக்கிறது. ஆப்பிரிக்கப் பெண்களும் பின்னல் போட்டுக் கொள்கிறார்கள் – அவை உங்கள் இரு இந்தியர்களின் பின்னலில் இருந்து மாறுபட்டது. அவர்கள், சிறுசிறு பின்னல்களை பல எண்ணிக்கையில் போட்டுக் கொள்கிறார்கள்.

    இந்தத் தலைப்  பின்னலின் பின்னணிதான் என்ன? காரணம் இல்லாமல் பின்னல் ஒரு பண்பாடாக வர வாய்ப்பில்லை என்பது என் கருத்து என்றவர், கொஞ்சம் இழுத்துப் பேசலானார்.

    ஆனால், தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள் உங்கள் பெண்களுக்கு  இப்போது இந்திய சாயல் குறைந்து கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. குட்டைமுடியும் விரித்த கூந்தலும் அதிகம் இருக்கிறது, ஆங்காங்கே சில பின்னல் தலைகள் காணப்படுகின்றன அவ்வளவே. அந்தக் குறைந்த பின்னல் தலைகளில் பிரெஞ்சு மாடல் பின்னல்களை அடிக்கடிக் காணமுடிகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்தியப்பெண்கள் இப்போது ஐரோப்பிய சாயலில் தெரிகிறார்களே தவிர இந்தியர்களாகத் தெரியவில்லையே என்றார்.

    நீங்கள் சரியாகவே எங்களை நோட்டம் விட்டிருகிறீர்கள். Modernism – நவீனம் என்ற பெயரில் எங்கள் சமுதாயம், பாரம்பரிய கலாச்சாரத்திலிருந்து கொஞ்சம் வேகமாகவே விலகுவது வெளிப்படையாகவே தெரிவது உண்மைதான். ஆனால், நன்மை தரக்கூடிய கலாச்சாரப் பழக்கங்களைத் தவிர்ப்பதுதான் வருத்தமான விஷயம் என்றேன்.

    அப்படி என்றால், நான் கருதியது சரிதான்! நீங்கள், தலைப் பின்னல் என்பது நன்மை தரும் வழக்கம் என்று சொல்வதாக உணர்கிறேன் அதைக் கொஞ்சம் விளக்குங்களேன்.

    உங்கள் பூர்விக இந்தியர்களையும் – இந்தியாவின் இந்தியர்களான எங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தது மிகவும் சரியே. பல்வேறு விஷயங்களில் நாங்களும் அவர்களும் ஒருவரே. ஒற்றைப்பின்னல் மட்டுமல்ல; இரட்டைப் பின்னல், எசஸ்கட் மடித்துக் கட்டுதல் என பல்வேறு ஒற்றுமைகள் எங்களுக்கு உண்டு. குழந்தைகள வளர வளர, அவர்களது பருவத்துக்குத் தேவையான படி, பின்னல்கள் மற்றும், கட்டுக்கள் அமைப்போம். அதே போன்ற பழக்கம் செவ்விந்தியர்களிடமும்  இருக்கிறது. பின்னலை, நார் அல்லது பருத்தி நூற்கயிறு,  அல்லது பட்டு நூற்கயிறு போட்டு கட்டும் பழக்கமும் இரு இந்திய வகையினரிடமும் இருக்கிறது (இப்பொழுதெல்லாம் பாலிஎஸ்தர் ரிப்பங்களுக்கும் ரப்பர் பாண்டுகளுக்கும் மாறியாயிற்று) என்று தொடர்ந்தேன்.

    உங்கள் பூர்விகக் குடிகளான இந்தியர்கள் செவ்விந்தியர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்பதற்கு சிலபல விளக்கங்கள் இருந்தாலும், ஒரு சில வரலாற்று நூல்களில், எம் சமுகமான, தமிழ் சமூகத்திற்கும், செவ்விந்தியர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது காட்டப்படுள்ளது என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். எடுத்துகாட்டாக, வில்லியம் ப்ரெச்காட் (William Prescott ) 1847, எழுதி வெளியிட்டிருந்த “The Conquest of Mexico and Peru” புத்தகத்தில், இதுபற்றிப் பேசியிருப்பதாக நான் அறிந்ததுண்டு. இதனை நினைவு கூர்ந்து, 2014ல் எங்கள் மொழியில் வெளிவந்திருந்த ஒரு முகநூல் (Horror – அமானுஷ்யம்) கட்டுரையும் உண்டு.

    எங்கள் தமிழ்ச் சமூகத்தின் தொன்மையைப் பற்றிக் கூறுபவர்கள், “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்குடி என்பார்கள்!”

    அமரிக்க இந்தியர்கள் சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறியதாகக் கணக்குண்டு. எங்கள் சமூகத்தினர், பன் நெடுங்காலமாகவே, கடல் கடந்து, உலகெங்கும்,  எங்கெங்கோ பரவிப்போய் ஆட்சிகள் அமைத்தும் குடியேறியும் வாழ்ந்ததாகப் பேச்சு உண்டு. இந்த வரலாறுகள் பல எழுதப்படாமலேயே அழிந்ததும், எழுதியும் அழிந்ததும் உண்டு என்பர். வரலாற்றில், பாண்டித்தியம் இல்லாதவள் என்பதால் இதுபற்றி இப்போது அதிகமாகப் பேசும் தகுதி எனக்கில்லை.

    ஆனால், இங்கு நான் கவனித்த, படித்த, மற்றும் கேட்ட விஷயங்களிலிருந்து மிகப்பல்வேறு ஒற்றுமைகள் எங்கள் இரு இந்தியர்களுக்கும் இருக்கிறது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியும்.

     

     

     

     

     

     

     

       Superstock.com, saved by Pinterest

    https://www.pinterest.com/pin/474355773230225719/

    Pinterest saved by Zarina Jenae

    இங்கே, இரண்டு தற்காலப் பெண்களின் படங்களைப் பார்ப்போம். இடது படம் – செவ்விந்தியப் பெண்ணின் பின்புறம்; வலது புறம் உள்ளது தமிழப் பெண்ணின் பின்புறம். தலைமுடியின் நிறம் மற்று அமைப்பு, பின்னும் விதம், ஆகியன ஒன்றே போல் இருக்கின்றன அல்லவா?

    அடுத்து, இரு இந்திய சமூகங்களுக்கும், தலைமுடி பற்றியுள்ள சிந்தனைகள் மற்றும் அவர்களது, தலைமுடி சார்ந்த பழக்கவழக்கங்கள் பால் நம் கருத்தைச் செலுத்துவோமேயானால், ஆச்சரியத்தக்க ஒற்றுமைகள் இருப்பது உண்மையே.

    இரு இந்திய சமூகங்களுக்குமே தலைமுடி என்பது மிகப் புனிதமான பொருள். அது எத்தனைப் புனிதமானது என்றால், கடவுளுக்காகக் காணிக்கையாகத் தரப்படும் மிக உயர்ந்த தகுதியுடைய ஓரே உடற்பகுதி என்பது அவர்களுடைய கருத்து.

    என் அம்மாவின் பாட்டி, நான் சின்னஞ்சிறு பெண்ணாக இருந்தபோது, எனக்குத் தலை பின்னிக்கொண்டே ஒரு நாள் சொல்லியிருக்கிறாள், “தலைமுடிங்கறது – ஒடம்போட முக்கியமான உறுப்பு – ஒவ்வொரு முடிக்கும் தெய்வீக ஆற்றலால, உணர்வு இருக்கு –  கண்ணிருக்கு.  ஒவ்வொரு முடியும் – நீ தூங்கறபோது கூட முழிச்சிகிட்டே இருந்து ஒன்னச் சுத்தி என்ன நடக்குதுன்னு பாத்துக்கிட்டே இருக்கும். தூங்கற போது ஆபத்துலேர்ந்து ஒன்னைக் காப்பாத்தும். நீ தூங்கிக் கிட்டிருக்க, அப்ப, யாரோ வெளி ஆளுங்க உன்னை நோக்கி வராங்கன்னா, நீ திடுக்குனு எழுந்துடுவ – அதுக்கு முடி தான் கரணம்.”

    “அப்ப, நம்ம முடிக்கு நம்ம வீட்டு ஆளுங்க யாரு – வெளி ஆளுங்க யாருன்னு தெரியுமா?” பாட்டி என்று கேட்டேன். ஆமாம், நீ என்ன பண்றே – மத்தவங்க ஒன்னச் சுத்தி என்னென்ன பண்றாங்கன்னு அது போட்டோ பிடிச்சு வச்சிக்கும்! அதனாலத்தான் முடிக்கு மதிப்பு கொடுத்து பத்திரமா பாதுகாத்து வச்சுக்கணும்.”

    “தலையை நல்லப் படிய வாரி, பின்னல்போட்டு நுனியை மடிச்சிக் கட்டணும், இல்லைனா உடம்புல இருக்க சக்தியெல்லாம் உடம்புலேர்ந்து வெளியே போயிடும்!” என்று சொன்னாள் என்றேன்.

    அந்த ராணுவ அதிகாரி குறுக்கிட்டார்: “தலைமுடி ஒரு உடல் உறுப்பு போன்றதா? கேட்கவே வேடிக்கையாய் இருக்கிறது! நகத்தைப் போல வெட்டி வீசக்கூடிய ஒரு பொருள் – உயிரற்ற ஒரு உதிரிப்பாகம் – முடி இல்லாமலேயே உயிர்வாழவும் முடியும் – அதுவே உதிர்ந்து வேறு கொட்டுகிறது. இப்படியிருக்க, தலைமுடியை ஒரு புனிதப்பொருள் என்று நீங்கள் கூறுவது ஒரு மூடநம்பிக்கை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.” அதே போன்று, தலைமுடிக்கு உணர்வு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவே முடியாது என்றார்.

    தலைமுடி பற்றிய சிலவற்றைப் பார்த்து விட்டு தலைமுடி புனிதமானது என்கிற, இந்தியர்கள் கருத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பார்ப்போமே என்றேன். அவரும் உடன்பட்டார். தொடர்ந்தேன்.

    இப்போது, செவ்விந்தியர்களைக் கவனிப்போம்: “தலை முடி என்பது உடலின் மைய நரம்பு மண்டலத்தின் வெளிப்புறத் தொடர்ச்சி” என்கின்றனர் அவர்கள். இந்தக் காணொளிகளைப் பாருங்கள் என்று காண்பித்தேன்.

    https://www.youtube.com/watch?time_continue=18&v=hxl9PgKGTX4&feature=emb_logo

    அவர் அக்காணொளியைக் கண்டபின், செவ்விந்தியர்களின் கூற்றில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் – அதற்கு முன்பாக, இந்த இரண்டு படங்களைக் காட்டுகிறேன் – அவற்றையும்  பார்த்தபின்பு நீங்கள் உங்கள் முடிவைச் சொல்லல்லாம் என்றேன். நமது மைய நரம்பு மண்டலத்தின் இரண்டு படங்களை, அவருக்கு வலைதலத்திளிருந்து இரண்டு படங்களை எடுத்துக் காண்பித்தேன். (அவை இங்கே தரப்பட்டுள்ளன).


    https://www.aplustopper.com/nervous-system-sense-organs-icse-solutions-class-10-biology/

    https://www.pnas.org/content/107/48/20610

    அந்த இருபடங்களைப் பார்த்த வினாடி, உணர்ச்சி ததும்ப, மொழி மறந்து, கடவுளே! உன் கைவண்ணத்தின் அற்புதம் தான் என்னே (Lord! What a marvelous handiwork!)  என்றார். ஆமாம்! உங்கள் அம்மவின் பாட்டி என்ன சொன்னார் என்று சொன்னீர்களோ, அதையே அந்த செவிந்தியரும் சொல்கிறாரே! நமக்குள்ளே ஏற்படும் உள்ளணர்வுக்கும் தலைமுடிக்கும் தொடர்பு உண்டு என்று அவர் ஆணித்தரமாய்ச் சொல்லுகிறாரே! தலைமுடியை பக்தி சிரத்தையோடு மதிக்கவேண்டும் என்கிறாரே!  என்று பூரித்தார் .

    அவருக்கு நன்றி செலுத்திவிட்டு, இப்போது. இந்தக் காணொளியில் இன்னொரு செவ்விந்தியர் கூறுவதைக்  கேளுங்கள் – குறிப்பாக, 9.26 – 11.45 என்றேன்.

    https://www.youtube.com/watch?v=OKZI-4GExQk

    பார்த்தார். உண்மையாகவா? நம் தலைமுடியை, நம் நேரடிக் குடும்பத்தினரைத் தவிர, பிறர் தொடுவதை அனுமதிக்கக் கூடாதா? அத்தனை சுயமான விஷயமா முடி? என்றவர். இவ்வாறெல்லாம் சொல்வதைப் பிறர் நம்ப மாட்டர்களே அறிவியல் சான்று இல்லாமல் என்றார்.

    ஒருவரது தலைமுடி, அவருக்கென பிரத்யேகமாக கடவுள் தயாரித்து அனுப்பி இருப்பதை இப்போது அறிவியல் உலகம் உறுதிப் படுத்திவிட்டதே என்றேன்.

    விளக்கமாய் சொல்லுங்களேன் என்றார்.

    குற்றவியல் அறிவியல் தட நிபுணர்கள், தலைமுடியை, மைக்ராஸ்கோப்பின், கீழ் வைத்துப் பார்த்து, அந்த முடி எந்த இனத்தவரின் முடி என்று டக்கென்று சொல்லிவிடுவார்கள். தலைமுடியை வைத்துப் பார்த்தால் உலகத்தில் மொத்தம் மூன்றே மூன்று இனங்கள் தாம் உண்டு: வெள்ளையர்கள், ஆப்பிரிக்கர்கள, மங்கோலிய ஆசியர்கள் (அல்லது ஐரோப்பிய ஆசியர்கள்) என்று.

    இவ்வாறு தலைமுடி, தடவியலில், ஆட்களின் இனத்தை அடையாளம் கண்டு பிடிக்க உதவி வந்து கொண்டிருந்த நிலையில், விஞ்ஞானிகள், இன்னொரு படி மேலே போய் புதியதொரு தலைமுடி உபாயத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்னவென்றால், ஒருவரது முடியின் வேரில் உள்ள டி என் ஏ வைப் பரிசோதித்தால் அந்த நபரது மரபணு புரிந்துவிடும் என்று.

    இதனால் என்ன லாபம் என்று கேட்டீர்கள் என்றால், இனிவரும் காலத்தில் மரபணுப் பரிசோதனைக்கு, இரத்தம் தேவை இல்லை. முடியின் வேர் போதும். (சமீப காலமாக, இரத்த மரபணுப் பரிசோதனைகளில் சில சிக்கல்கள் எழுந்தமையால் மரபணுப் பரிசோதனைக்கென மாற்று வழிகளைக் காணும் நிர்ப்பந்தம் உண்டாகியிருக்கிறது). இந்த இணைப்பைப் பாருங்கள் என்று அவரிடம் பகிர்ந்தேன்.

    https://www.mynewlab.com/blog/why-hair-analysis-could-become-an-alternative-to-dna-testing/

    நன்றி தெரிவித்தவர், அதற்கு அடுத்து கேட்டார்: அந்த இரண்டாவது காணொளியில், அந்தச் செவ்விந்தியர் சொன்னது என் கவனத்தை கவர்ந்தது. இனிப்புப் புல் சேர்த்து அவர்கள் தலைப் பின்னல் பின்னிக் கொள்கிறார்கள்  என்று – அது போன்ற பழக்கங்கள் உங்களுக்கும்  உண்டா என்றார்.

    ஆமாம்! வாழைமட்டையில், பூக்களைத் தைத்து, ஜடை தயாரித்து பின்னலின் மேல் தைத்துக் கொள்வது, தாழைமடல்களைக் கொண்டு பின்னலுக்கு மேலே உறை தைப்பது, பின்னலுக்கு மேலே, மூளைப் பகுதியில், நறுமணமும், குளிர்ச்சியும் தரக்கூட்டிய பூக்களையும், தவனம், மரிக்கொழுந்து போன்ற வாசனைச் செடிகளையும் நெருக்கமாகத் தொடுத்து அணிந்து கொள்வது – இவை எல்லாம் எங்களது பழக்கம். நங்கள் வாழும் தட்பவெப்ப நிலை செவ்விந்தியர்களின் தட்பவெப்ப நிலையை விட அதிகம் என்பதால், நாங்கள் இன்னமும் ஒரு படி மேலே போய் தலைமுடியைப் பாதுகாக்கிறோம்.

    மேலும், குஞ்சம் வைத்து, தலைப்பின்னலைப் பின்னி விசேஷ நாட்களில் அணிந்து கொள்வது எங்கள் இளம் பெண்களின் பழக்கம். இவ்வாறு செய்யும்போது, குஞ்சம் சரியாக, இடுப்பில், பிட்டத்திற்கு மேல் இடித்து நிற்கும். முதுகுத்தண்டு வளையாமல், கழுத்துக்கு பலம் சேர்த்து நிமிர்த்தும்  ஒரு எளிய அழகுப் பயிற்சி இது. குட்டையான தலைமுடி உள்ளவர்கள் கூட சவுரி எனப்படும் செயற்கை முடி நீட்பான்களை உபயோகித்து, குஞ்சம் சேர்த்து இவ்வாறு, பின்னலை நீட்டி, பின் இடுப்பின் பள்ளத்தில் இடிக்குமாறு அழகு படுத்திகொள்வார்கள்.  ஒரு தலைமுறைக்கு முன்பு வரையிலும் கூட, இது சர்வ சாதாரண பழக்கமாய் இருந்தது. என்றேன்.

    அப்படியென்றால், உங்கள் பின்னலில் மருத்துவச் சூட்சுமம் உண்டு என்று சொல்லலாமா? என்றார்.

    – (மேலும் பேசுவோம்)

    Share
  • நாலடியார் நயம் – 4

    நாலடியார் நயம் – 4

    நாங்குநேரி வாசஸ்ரீ

     4. அறன் வலியுறுத்தல்

    பாடல் 31

    அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
    புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
    மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
    தவத்தால் தவஞ்செய்யா தார்

    இவ்வீட்டினுள்ளே இருப்பவர்தாம்
    இனிய வாழ்வு வாழ்பவர் என
    அண்ணாந்து நோக்கி வீட்டின்
    அருகே சென்று முயற்சித்தும்
    உயர்ந்தோக்கி நிற்கும் வீட்டின்
    உட்செல்ல இயலாத மன
    வருத்தத்துடன் வாயிலைப் பற்றி
    வருந்தி நிற்பர் எவரெனில்
    தம் முற்பிறப்பிலும் கூட
    தருமம் செய்யாதோர்.

    பாடல் 32

    ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
    போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே – ஓவாது
    நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
    சென்றன செய்வது உரை.

    அளவற்ற செல்வம் விரும்பி
    அதற்காகவே உழைத்து
    பெருஞ்செல்வம் சேர்த்து
    பெருவாழ்வு வாழ்ந்து
    தருமம் செய்ய மறந்து
    தன்னுயிர் நீப்போம்
    என்றுணராது வாழும்
    எம் மடநெஞ்சமே!
    முயற்சித்து வாழ்ந்தாலும்
    முடியும் உன் வாழ்நாட்கள்
    எஞ்சிய நாளிலாவது
    என் செய்வாய்? மறுமைக்காக.

    பாடல் 33

    வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
    மனத்தின் அழியுமாம் பேதை – நினைத்ததனைத்
    தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து
    எல்லை இகந்தொருவு வார்

    தீவினையால் பெரும்
    தீங்கு நேரும் காலம்
    பெருமூச்செரிந்து மனதுள்
    பெரும் கவலையுற்று
    அழிவர் அறிவில்லாதோர்.
    அத்தீவினைப் பயனை
    மனதுள் நினைந்து அது
    முற்பிறப்பில் செய்த
    பாவத்தின் பலன் என
    பக்குவாய் ஏற்று
    அமைதியாய் அனுபவிக்கும்
    அறிவுடையோர் பிறவித்
    துன்பத்தின் எல்லையைத்
    துரிதமாய்க் கடப்பர்.

    பாடல் 34

    அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
    பெரும் பயனும் ஆற்றவே கொள்க – கரும்பூர்ந்த
    சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
    கோதுபோல் போகும் உடம்பு.

    பெறுதற்கரிய இம்மனித உடலை
    பெற்றோம் புண்ணிய பயனால்
    பெற்ற அவ்வுடலைக் கொண்டு
    பெருந்தருமம் செய்க!
    கரும்பின் சாறுபோல்
    காலத்திற்கும் உதவும் அது
    உயிரற்று அழியும் உடம்போ
    உதவாத சக்கை போலாம்.

    பாடல் 35

    கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
    துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
    வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
    வருங்கால் பரிவ திலர்

    ஆட்டிய கரும்பின் சாற்றில்
    ஆகிய வெல்லக்கட்டியை
    முற்காலத்தில் கொண்டோர்
    முன்னே கிடக்கும் சக்கை
    தீப்பற்றி எரியும் நேரம்
    துன்புற்று வருந்தார்
    நல்லறம் செய்து
    நல் பிறவிப்பயன் உற்றவர்
    எமன் வரும் நேரம்
    எண்ணித் துன்பம்கொள்ளார்.

    பாடல் 36

    இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
    பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
    ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
    மருவுமின் மாண்டார் அறம்

    இன்றைக்கோ அன்றைக்கோ
    என்றைக்கோ என எண்ணாது
    எப்போதும் எமன் உம் பின்னால்
    நிற்பதாய் நினைத்துக்கொண்டு
    நீக்கிவிடுங்கள் தீச்செயல்களை
    முடிந்த வரையில்
    புகழுடைப் பெரியோர்
    போற்றிய தர்மத்தைப்
    புரிந்து வாழ்வீர்.

    பாடல் 37

    மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
    எத்துணையும் ஆற்றப் பலவானால் – தொக்க
    உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாதுஉம்பர்க்
    கிடந்துண்ணப் பண்ணப் படும்

    மனிதப் பிறவியால்
    மண்ணுலகில் ஆகும் செயல்
    ஆராய்ந்து நோக்கின்
    அளவிற் பலவாம்
    நரம்பும் தசையும் கூடிய
    நம் உடம்பையே கவனித்து
    வாழ்ந்திராது சுவர்க்கம்
    வாய்த்து இன்பம் நுகர
    நல்லறம் செய்து
    நலமாய் வாழ்வீர்.

    பாடல் 38

    உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
    இறப்ப நிழற்பயந் தாஅங்கு – அறப்பயனும்
    தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
    வான்சிறிதாப் போர்த்து விடும் .

    மிகச்சிறு ஆலம்விதை
    மரமாகி நிழல்தருவது போல்
    அறத்தால்வரும் பயன்
    அற்பமாய் இருப்பினும்
    தகுதியுடையவர் கையில்
    தங்கிச் சேர்ந்தால்
    ஆகாயமும் அற்பமாகுமளவு
    அளவிற்பெரியதாகி
    அதனை மூடிப் போர்த்தும்.

    பாடல் 39

    வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
    வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
    வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
    வைகலை வைத்துணரா தார். .

    தினந்தோரும் நாள் கழிவதை
    திரும்பத்திரும்பப் பார்த்திருந்தும்
    அறிந்துகொள்ளாதார்
    ஆயுட்காலம் தொடர்ந்து
    குறைவதை உணராது
    நிலையாக இருப்பதாய்
    நினைத்து இன்புறுவர்.

    பாடல் 40

    மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
    ஈன இளிவினால் வாழ்வேன்மன் – ஈனத்தால்
    ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
    நீட்டித்து நிற்கும் எனின்

    இழிவான காரியம் செய்து
    இனிய உணவு ஊட்டுவதனால்
    இவ்வுடம்பு உறுதியுடன்
    இனிதே நீண்ட நாள் நிலைக்குமெனும்
    இக்கூற்று உண்மையானால்
    மானமெனும் அருமை
    மிக்க அணிகலன் நீக்கி
    கை ஏந்துதல் எனப்படும்
    கீழான அவமானத்துடன்
    பெரும்பாலும் வாழ்வேன்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 76 (மன்றுளே)

    சேக்கிழார் பாடல் நயம் – 76 (மன்றுளே)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மன்றுளே  திருக்கூத்   தாடி  அடியவர்  மனைகள் தோறும்
    சென்றவர்  நிலைமை  காட்டும்  தேவர்கள்  தேவர் தாமும்
    வென்றஐம்   புலனால் மிக்கீர்  விருப்புடன்  இருக்க  நம்பால்
    என்றுமிவ்   விளமை  நீங்காது  என்றெழுந்   தருளி   னாரே !

    தில்லைத் திருநகரில் தாம் இளமையில் எடுத்துக்கொண்ட சூளுறவால் தம் மனைவியாரை மனத்தாலும் தீண்டாமல்  வாழ்ந்த  திருநீலகண்டர் ‘திருத்தொண்டர்  வரலாற்றில் முதலிடம் பெற்ற தனியடியார்’ என்ற சிறப்பைப் பெற்றார். அவரை ஆட்கொண்ட காமத்தை வென்று, தம்மை ஆட்கொண்ட  இறைவனிடமே தம் மனம், மொழி, செயல்களை முழுமையாகச் செலுத்தி ‘அற்புறு புணர்ச்சியின்மை அயல் அறியாமல்‘ வாழ்ந்தார். இறைவன் திருவோடு தந்து செய்த சோதனையால் தம் மனைவியாருடன்  குளத்தில் மூழ்கித்  தம் நேர்மையை உறுதி செய்தார்.

    அவரும் மனைவியாரும் ஒரு தண்டினைப் பற்றிக் கொண்டு திருக்குளத்தில் மூழ்கி எழுந்த போது, முதுமைக்குரிய அறிகுறிகள் மறைந்து, இளமை வடிவுடன்  விளங்கினர். இத்தனைக்  காலம் இருந்த முதுமை நீங்கி , இளமைக்  கோலம் பெற்றபோது, உள்ளமும் திருந்தி இறையருளை நாடும் நினைவுடன் மீண்டும் எழுச்சி பெற்றனர். அவர்கள் மூழ்கிய திருக்குளம்  இப்போதும் ‘’இளமை யாக்கினார் குளம்‘’ என்ற பெயருடன் விளங்குகிறது! திருநீலகண்டரின் உள்ளம் தடுமாறக் காரணமாக அமைந்தது தேவைக்கு மேல் சேர்த்த செல்வமே என்பதற்கும், எப்போதும் அவருள்ளத்தில் சுடர்விட்ட பக்தி   மேலெழுந்து அவர் இன்பியல் வாழ்வைப் புறக்கணித்த மாற்றத் துக்கும்  அவர்தம் மனைவியார் செய்த எச்சரிக்கையும், திருநீலகண்டத்தின் பால் அவர் வைத்த பெரும்பற்றும்  காரணமாயின!

    ஆகவே கணவனும் மனைவியும் இணைந்து செய்யும் செயலே அவர்கள் வாழ்வின் வளத்துக்கும், நலத்துக்கும் அடிப்படையாகும் என்ற உண்மையைச் சேக்கிழார் புலப்படுத்துகிறார். மீண்டும் இளமை பெற்ற உடலும், எழுச்சி பெற்ற  உள்ளமும். இடைவிடாது கூறும் திருநீலகண்டம் என்ற உறையும் உடைய செவ்விய அடியார்களாக  அவர்கள்  ஊரினர் போற்ற விளங்கினர். ஆகவே, திருவம்பலத்திலே திருக்கூத்து ஆடி, அடியார்களது மனைகள் தோறும் போய் அவர்களது உண்மை நிலையினை உலகறியக் காட்டுகின்ற தேவ தேவராகிய சிவபெருமானும்“, (நாயனாரையும் மனைவியாரையும் நோக்கி) “வென்று அடிப்படுத்தப் பட்ட ஐம்புலன்களினாலே மிக்கு விளங்குபவர்களே! நீங்கள் இப்போது எமதருளால் மீளப் பெற்றஇந்த இளமை என்றும் நீங்காதநிலையுடன் எம்மிடத்திலே இருப்பீர்களாக!“ என்று அருளிச்செய்து தமது நிறைவு நிலையினுள்ளே எழுந்தருளிப்போயினார். என்ற பொருளில் இத்திருப்பாடல் அமைந்தது.

    இப்பாடலில் இறைவன் கூத்தாடும் மன்றம் நம் மனமே என்பதும், அவர் ஆடும் திருக்கூத்து நம் உள்ளத்தின் இயல்பே என்பதும், அத்திருக்கூத்தின் அசையா அசைவாக நம் மனம் அசையம் என்பதும் , ‘’மன்றுளே திருக்கூத்தாடி ‘’ என்ற தொடர் விளக்குகிறது.

    இறையவன் திருக்கூத்தாடும் போதே அடியார் உள்ளம் தோறும், அவர் தம் இல்லந்தோறும் எழுந்தருளுபவன் என்பதை , ‘’அடியவர் மனைகள் தோறும் சென்று ‘’ என்ற தொடர் விளக்குகிறது. அடியவர்கள் இருக்குமிடந்தோறும் தாமே சென்று வலிய அவர்களை ஆட்கொள்ளுந் திறத்தாலே உலகத்தையும் அறிவுறுத்தி ஆட்கொள்வது எமது பெருமானது அருட்பெருக்கின் இயல்பு. உயிர்களை வழிப்படுத்தி ஆட்படுநெறியிற் செலுத்தும். இதுவே அவரது ஐந்தொழில் திருக்கூத்தினியலும் பொருளுமாம்.  இதனை இப்புராணமே

    “திருமனையி லொருவழியே
    தெள்ளுதிரை நீருலகம் உய்வதற்கு மற்றவர்தம்
    உள்ளநிலைப் பொருளாய உம்பர்பிரான் றாமணை வார்.“

    என்றும்  பாடுகிறது. மேலும் திருவாசகம்

    ‘’இங்கு நம்   இல்லங்கள்  தோறும் எழுந்தருளிச்
    செங்கமலப்  பொற்பாதம்  தந்தருளுஞ்  சேவகனை ‘’ என்றும் ,

    ‘’பந்தணை  விரலியும்  நீயும்  நின்னடியார்
    பழங்குடில்  தொறும்எழுந் தருளிய பரனே‘’ என்றும் பாடியதை நினைவுகூர்ந்தே சேக்கிழார் இப்பாடலை எழுதியுள்ளார். அவ்வடியார் நிலையை மக்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் தேவர்களின் தலைவராகிய இறைவனே அடியாரின் முன் எழுந்தருளி, ‘’ஐம்புலனையும்  வென்று மற்றையோரினும் மேலாகிச் சிறந்த வர்களே ‘’ என்று அழைத்தார்.

    ஐம்புலன்களும் வெல்லப்பட்டமையால் இவர்கள் சொல்வழி அவை ஏவல் கேட்டு அமைந்து நின்றன. ஏனையோர்களை, அவை, தம்மைப் பின்பற்றி நடக்குமாறு கீழ்ப்படுத்தித் தாம் மேலோங்கி நிற்பன. ஆதலின் ஏனையோர்களது நிலைகள் கீழ்ப்பட்டனவே. இவர்களோ ஐம்புலனை வென்றதனால் நிலைமையில் மேலோங்கியவர்கள்.

    “தம்மை யைந்து புலனும் பின்செல்லுந் தகையார்“

    –  என்று  சண்டீசர்புராணம்  கூறுகின்றது. “ஐந்தவித்தான்“ என்ற குறளில் புலன்களிற் செல்கின்ற அவாவைந்தனையும் அடக்கினான் எனப் பரிமேலழகரும், நுகர்ச்சியாகிய ஐந்தினையும் துறந்தான் என மணக்குடவரும் உரை விரித்தது காண்க.

    எனவே புலன்களைந்தும் நின்றன; ஆயின் அவற்றிற் செல்லும் அவாவும், அது காரணமாக வரும் நுகர்ச்சியும் இல்லையாயின என்க. இங்கு நாயனாரிடத்தும் மனைவியாரிடத்தும் ஐம்புலனும் இருந்தன. மெய்யுறு புணர்ச்சி ஒன்றொழிய இல்வாழ்வாரும் அடியாரும் செய்யும் எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றினர். புலன்கள் தம் செயலற்று இவர்கள் வசமாய்த் தாழ்ந்து நின்றன என்பதாம். ஐம்புலன்களையும் ஒடுக்கி அசைவற்றிருக்கும் யோகநிலை வேறு; அவற்றை அடிப்படுத்தித் தம்வழி நிறுத்தி அவற்றின்கட் செல்லும்  அவாவை இறை வழிபாட்டிற்செலுத்தி நிற்றல் வேறு.

    “வென்றுளே புலன்க ளைந்தார் மெய்யுண ருள்ளந் தோறும்
    சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி“

     என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. இதனையே இந்நூல் ,

    ‘’வென்றஐம்   புலனால் மிக்கீர்  விருப்புடன்  இருக்க  நம்பால்
    என்றும்  இவ்விளமை  நீங்காது’’

    என்று பாடுகிறது. இருக்க – வியங்கோள் – இருப்பீர்களாக. இவ்விளமை நீங்காது விருப்புடன் நம்பால் என்றுமிருக்க என்றியைத்துக்கொள்க. என்றும் மாறுபாடின்றி ஒரு தன்மையனாகவுள்ள இறைவன்பா லிருப்பவர்களே என்றும் மாறுபடாத இளமையோடிருக்க வல்லவர்கள். காலகாலனது சார்பினாலே அவர்கள் காலத்தை – மரணத்தை – வென்றவர்களாகலான் என்பது. அன்றியும் ஏனையோர் யாவரையும் சாகச்செய்யும் விடத்தை உண்டு சாவாமலும் மூவாமலும் இருக்கும் சிவபெருமானொருவனே மூவாத இளமை தர வல்லவன் என்றலுமாம். இறைவனை  “சாவாமூவாச் சிங்கமே“ –  என்று  திருப்புகலூர்த் திருத்தாண்டகம்  பாடுகிறது.

    விஷ்ணு, பிரமன், இந்திரன், சந்திரன் முதலிய தேவர்களும் அவ்வவர் சரிதங்களால் அறியக் கிடக்கின்றபடி, ஐம்புலன் வெல்லமாட்டாது ஒவ்வோர் குற்றங்களுக்காளாயினர்; இங்கு நமது நாயனாரும் மனைவியாருமே புலன் வென்று மிக்கார்கள் என்பார்,  இவ்விடத்துத் தேவர்கள் தேவன் என்ற பெயராற் கூறினார் என்ற குறிப்புமாம். இதுவறை “நின்றா“ ராகிய அவரை இருக்க என்றார் என்ற குறிப்பு நினைந்து மகிழத்தக்கது..

    இப்பாடலால் அடியாரின் ஆழ்மனத்தே இருந்த இறைப்பற்று தூண்டப் பெற்று மேலெழுந்ததும், அதற்கு இல்லறத்தாரின் திடமான பக்தியே காரணம் என்பதும், ஐம்புலனையும் அடக்கி வாழும் இல்லறத்துறவே சிறந்தது என்பதும், இது தேவர்களை விடவும் உயர்வை நமக்கு அளிக்கும் என்பதும், இதனை நாமும் பயின்று உயரலாம் என்பதும், ‘’ஐம்புலனை வென்றார் வீரமே வீரம்!’’ ஆதலால் உண்மையான  புலனடக்கம் வெற்றி தரும் என்பதும் புலனாகின்றன!

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-19

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-19

    தி. இரா. மீனா

    ஜோதர மாயண்ணா

    பிஜ்ஜள மன்னனிடம் யானைப் படைத் தலைவராகப் பணியாற்றியவர்.” சோமநாதாலிங்கா “என்பது இவரது முத்திரையாகும். சொல் செயல் தூய்மை, குருவின் பெருமை ஆகியவற்றைப் பற்றிப் பேசுவதாக இவர் வசனங்கள் அமைகின்றன.

    “பிற பெண்கள் பார்வதியெனச் சொல்லி
    நம்மை நடத்திச் சென்றது குரு வார்த்தை.
    என்னைச் சரணனின் மனைவியென
    நடத்திச் சென்றது குருவசனம்.
    மனைவியர் அனைவரும் குருவின் சதியரென
    நடத்திச் சென்றது குருவசனம்
    குருவின் வார்த்தை என்னை வழி நடத்திச் சென்றது
    குருவின் வார்த்தை என்னை அமைதிப்படுத்தியது
    குருவின் வார்த்தை என்னை
    சம்பு சோமநாதலிங்கத்தோடு ஐக்கியமாக்கியது“

    டக்கேய பொம்மண்ணா

    இவருக்கு டக்கேய மாரய்யா என்றொரு பெயருமுண்டு. நாட்டுப்புறக் கலைஞர். சிவசரணராவதற்கு முன்பு மாரியம்மனைத் தலைமேலேந்தி துடியை இசைத்துக் கொண்டு இரந்து பிழைப்பு நடத்தியவர். ”காலாந்தக பீமேஸ்வரலிங்க“ இவரது முத்திரையாகும். வசனங்களில் நாட்டுப்புறக் கலைத் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தியுள்ளார்.

    1. “கையில் ஆயுதமேந்திப் போரிடும் போது
    போராடுவது மனமா, கையா, ஆயுதமா ?
    அங்கம், இலிங்கம் கூடும் போது
    உறவாவது அங்கமா, இலிங்கமா, ஆன்மாவா?
    இதை அறிந்தால்
    காலாந்தக பீமேஸ்வரலிங்கத்தை அறிந்ததாம். “

    2. “ஆற்று வெள்ளத்தில் படகோட்டியுடன் உதவியுடன்
    அவன் பின் செல்வது போல
    உடலின் புலன்கள் என்ற ஆற்று நீரில்
    இலிங்கமெனும் படகோட்டியின் துணையோடு
    பின் தொடர வழி காட்டுவாய்
    காலாந்தக பீமேஸ்வரலிங்கமே”

    3. “சிற்பியின் கையில் கல் நிலையழிந்து அடையாளமானது
    குருவின் கையில் பாறை அழிந்து இலிங்கமானது
    சரணரின் சிந்தனையில் இலிங்கம் நிலையானது
    சிந்தை புலனோடிணைந்து காலாந்தக பீமேஸ்வரனானது“

    4. “மனைவியின் பண்பைக் கணவன் பார்க்க வேண்டுமேயன்றி
    கணவன் பண்பை மனைவி பார்க்கலாமா? எனல் தவறு.
    சதியின் தொடுதல் பதிக்குக் கேடல்லவா?
    பதியின் தொடுதல் சதிக்குக் கேடல்லவா?
    அங்கமொன்றின் கண்கள் இரண்டில்
    ஒன்று பழுதானால், எது பழுதானதெனப் புரிந்தால்
    காலாந்தக பீமேஸ்வரலிங்கத்தைப் புரிந்து கொள்ளலாம்”

    டோகர கக்கய்யா 

    மாளவத்திலிருந்து கல்யாண் வந்தவர். தலித் பரம்பரையைச் சேர்ந்தவர். தோல் பதனிடும் காயகம் இவருடையது கல்யாணில் புரட்சி நடந்த போது  சென்ன பசவரோடு ஏர் கலப்பையைக் கொண்டு சென்றவர். கக்கேரியில் ஐக்கியமானவர். அங்கு இவர் பெயரில் சமாதி, ஏரி ஆகியனவுண்டு. “அபிநவ மல்லிகார்ச்ஜூனா” இவரது முத்திரையாகும்.

    1.“குலத்தின் குறைவு தங்கள் கைபட்டு மாயமானது
    சாதியாலான தீட்டு உங்களைத் தொட்டபின்பு மாயமானது
    இலிங்கத்தின் தீண்டல் ஐம்புலன்களை மாயமாக்கியது
    அந்தரங்கத்திற்குள் ஞானவெளி புகுந்து அதை மாயமாக்கியது
    சம்சார பந்தம் நீக்கியதால் மனஇருள் மாயமானது
    அபிநவ மல்லிகார்ஜூனனே
    உன்னைத் தொட்டு நானும் மாயமானேன்.”

    2.“ஓ, இலிங்கத் தந்தையே !
    தாழ்குலத்தில்  பிறக்கவைத்தாய்
    உன்னைத் தொடாமல் வருந்தினேன்
    கை தொடாவிட்டாலும் மனம் தொடாதோ?
    அபிநவ மல்லிகார்ஜூனனே“

    தளவார காமிதேவய்யா

    கல்யாண் நகரைச் சேர்ந்த இவரது காயகம் கிராமத் தலையாரி. “காமஹரப்பிரிய ராமநாதா “இவரது முத்திரையாகும்.

    1. “காளையாக இருந்துகொண்டு ஏர் சுமக்கமறுப்பது முறையா ?
    சேவகனாக இருந்துகொண்டு ஆணைகேட்க மறுப்பது முறையா?
    சரணனாகி குருவைக் கடைபிடிக்காமலிருப்பது முறையா ?
    காமஹரப்பிரிய இராமநாதனே”

    2. “வியாபாரத்தில் ஆதாயம் இல்லையென்றால்
    அது வியாபரமாகுமா? அதைச் செய்வதேன்?
    குருலிங்க ஜங்கமத்துக்கு புகழ் கருதிச் செய்வது
    மூலமில்லாமல் ஆதாயம் தேடுவது போன்றதே
    காமஹரப்பிரிய இராமநாதனே”

    துருகாஹி ராமண்ணா

    சரணர்களின் வீட்டுப் பசுக்களை மேய்க்கும் காயகம் இவருடையதாகும். ”கோபதிநாத விஸ்வேஸ்வரலிங்கா“ என்பது இவரது முத்திரையாகும். தொழில் அனுபவத்தை ஆத்ம அனுபவத்தோடு சேர்த்துக் கூறுவதாக  வசனங்களின் போக்குள்ளது.

    “ஒரு கம்பு கொண்டு வெவ்வேறு பசுக்களைக்
    கட்டுப்படுத்துவது போல வெவ்வேறுபட்டவர்களை
    ஏக சிந்தனையில் வைத்து, மும்மலம் கொண்டவரை விலக்கி
    இறைவனோடு தன்னை இணைப்பது
    கோபதிநாத விஸ்வேஸ்வரலிங்கம் அறிவதற்கு வழி.”

    தெலுகேச மசணய்யா

    பசுக்களை மேய்க்கும் காயகம் இவருடையதாகும். இவரது பெயரிலுள்ள தெலுகேச அடைமொழி இவர் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்கிறது. ”தெலுகேசுவரா“ என்பது இவரது முத்திரையாகும்.

    1.“அழகானவனாக இருப்பின் மகளிர் அவனைப் போற்றவேண்டும்
    கொடையாளனாக இருப்பின் யாசிப்போர் போற்றவேண்டும்
    வீரனாக இருப்பின் பகைவர் போற்ற வேண்டும்
    நீசன் தன்னையே போற்றிக் கொள்வான்
    ஒருவன் தெலுகேஸ்வரனின் பக்தனாயின்
    தேவன் புகழ்வதோடு உலகமும் பாராட்டும்“

    2.“அங்கத்தின் மீது இலிங்கமிருப்பது
    குருவின் கருணையைப் பெற்றதற்கு சாட்சி.
    அங்கத்தின் மீது இலிங்கம் இல்லையெனில்
    குருவின் கருணை கிடைப்பது எப்படி?
    இலிங்க தீட்சை இல்லையெனில் குருவின் கருணையுண்டோ?
    ஒருவன் அம்மாதிரியான பேச்சுக்கள் கேட்கக் கூடாது
    உடலில் இலிங்கம் அணிவது ஒழுக்கமாகும்
    இல்லையெனில் ஒழுக்கமில்லையென்பேன் தெலுகேஸ்வரனே”

    [தொடரும்]

    Share
  • தீர்வறியும்  சார்வரி

    தீர்வறியும்  சார்வரி

    அண்ணாகண்ணன்
     
    இடரெழுந்து இடையறாது இடறவைக்கும் போதிலும்
    தொடரிழந்து தொடர்பிழந்து தொடருமின்னல் ஆயினும்
    படரிடுக்கண் படையெடுத்து, திசைமறைத்து நிற்பினும் 
    சுடரெடுத்து, புதிரவிழ்த்து, துயரொழித்து மீட்டுவோம்.
     
    சிறகடக்கி, சிறுவளைக்குள் சிரமொடுங்கி நிற்பினும்
    வறுமையோடு வெறுமையோடு தனிமைசூழ நிற்பினும்
    நிறமிழந்து நிதியிழந்து கதியிழந்த போதிலும்
    அறமிழக்க வில்லையின்னும் அறமிழக்க வில்லையே!
     
    அச்சமென்னும் கிருமியெங்கள் உச்சிமீது ஏறுதோ!
    நச்செரித்து ஆலகாலம் உட்செரித்து வெல்லுவோம்
    உச்சரிக்கும் தமிழெடுக்க, மூச்சிறுக்கம் நேர்ப்படும்
    ஆச்சரிய அனுபவங்கள் ஆயிரமாய் ஏற்படும்!
     
    விலகலென்ற காட்சியிலும் கலகலென்று தோன்றுவோம்
    வலிகளுண்டு என்றபோதும் வழிகளுண்டு காட்டுவோம்
    இளவலோடும் முறுவலோடு அளவளாவும் நாள்வரும்
    உலகளாவி இனிதுலாவி உளம்குலாவிப் பாடுவோம்!
     
    தீர்வறியும் கூர்வரியும் சீர்வரியும் ஏந்துவோம்
    நேர்வரியில் வேர்வரியில் பூவிரிய நீந்துவோம்
    ஊர்விரியும் பார்விரியும் உளம்விரியும் மேலுமே
    சார்வரியில் நலம்திகழும், நல்லின்பம் கூடுமே! 
    ———————————————————————————————-
     
     
    ———————————————————————————————-
    அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ———————————————————————————————-

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழரின் நாக்கு!

    தமிழரின் நாக்கு!

    ஏறன் சிவா 

    மீன்புலிவில் வேந்தருடை
    மெய்யுரைக்கத் தமிழர்நா கூசாது! — அவர்
    வான்முட்டும் வரலாற்றை
    வகுத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — இங்கே
    காண்!தமிழர் அறிவியலைக் கணத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — பாரில்
    நான்தமிழன் எனப்பெருமை
    நவில்வதற்குத் தமிழர்நா கூசாது!

    வெல்நாட்டுப் போர்வெற்றியை
    விளக்குதற்குத் தமிழர்நா கூசாது!  — அவர்
    வல்கோட்டைக் கட்டியதை
    வாயுரைக்கத் தமிழர்நா கூசாது! — அணைக்
    கல்கோட்டைக் காலத்தைக்
    கணித்துரைக்கத் தமிழர்நா கூசாது! – தமிழ்ச்
    சொல்கோட்டைப் பெரிதென்றுச்
    சூளுரைக்கத் தமிழர்நா கூசாது!

    நெல்விளைக்கும் வேளாண்மையின்
    நெறியுரைக்கத் தமிழர்நா கூசாது! — கருங்
    கல்விளைக்கும் சிற்பத்தின்
    கலையுரைக்கத் தமிழர்நா கூசாது! — அங்கே
    பல்துறையின் பண்புகளைப்
    பகுத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — திரு
    வள்ளல்களின் கொடைத்திறனின்
    வளமுரைக்கத் தமிழர்நா கூசாது!

    பொன்வளத்துக் குன்றேறிப்
    புகழுரைக்கத் தமிழர்நா கூசாது! — தங்கள்
    மண்வளத்து எழிலுரைக்க
    மணித்துளியும் தமிழர்நா கூசாது! — இரு
    கண்போன்ற இலக்கியத்தின்
    கடலுரைக்கத் தமிழர்நா கூசாது! — வாழும்
    தென்மொழியின் திறமுரைக்கத்
    தீநடுவும் தமிழர்நா கூசாது!

    அம்பாலே உலகாண்ட
    அழகுரைக்கத் தமிழர்நா கூசாது! — அவர்
    தம்அறமும் மறம்;திறமும்
    சாற்றுதற்குத் தமிழர்நா கூசாது! — கொண்ட
    அன்பாலே இழந்ததனை
    அடித்துரைக்கத் தமிழர்நா கூசாது! — ஆனால்
    தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில்
    தமிழரோடு தமிழ்ப்பேசத் தான்கூசும்!

    Share
  • நாலடியார் நயம் – 3

    நாலடியார் நயம் – 3

    நாங்குநேரி வாசஸ்ரீ

    3. யாக்கை நிலையாமை

    பாடல் 21

    மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
    தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத்
    துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
    எஞ்சினார் இவ்வுலகத் தில்.

    மலைமேல் தோன்றும் சந்திரன் போல்
    மண்ணுலகில் யானைத் தலைமேல்
    பிடித்த வெண்கொற்றக் குடையுடைய
    புகழுடை வேந்தர்களும் மாண்டனர்
    என இகழப்பட்டார் அல்லாமல்
    எஞ்சியவர் என்று சாகாமல்
    எவருமில்லை இவ்வுலகில்.

    பாடல் 22

    வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
    வீழ்நாள் படாஅது எழுதலால் – வாழ்நாள்
    உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
    நிலவார் நிலமிசை மேல்.

    உயிர் வாழும் காலத்தை
    உலகோர்க்கு அளந்தியம்பும்
    கருவியாம் சூரியன்
    காலம் தவறாது உதிப்பதால்
    ஆயுள் முடியும் முன்னர்
    அடுத்தவருக்கு உதவுங்கள்
    உயிர்விடாமல் நிலைத்து
    உலகில் வாழ்ந்தவர் எவருமில்லை.

    பாடல் 23

    மன்றம் கறங்க மணப்பறை யாயின
    அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் – பின்றை
    ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
    வலிக்குமாம் மாண்டார் மனம்.

    திருமண மண்டபத்தில் ஒலிக்கும்
    தக்க மங்கல வாத்தியம்
    அன்றே நிலை மாறி
    அவருக்குப் பிணப்பறையாய்
    ஒலித்தலும் உண்டென்பதை
    உணர்ந்த பெரியோர் மனம்
    உறுதியாய்ப் பற்றி நிற்கும்
    பிறவித் துயரினின்று
    பிரிந்து தப்பும் வழியை.

    பாடல் 24

    சென்றே எறிய ஒருகால்; சிறுவரை
    நின்றே எறிப பறையினை – நன்றேகாண்
    முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர்
    செத்தாரைச் சாவார் சுமந்து

    இறந்தவர் வீட்டில் பறை அடிப்போர்
    இடைவெளி விட்டு பறை அடிப்பர்
    முதற்பறைக்குப்பின் காலம் கழித்து
    மீண்டும் அடிப்பது இரண்டாம் பறை
    மூன்றாம் பறை அடிக்குமுன்னே
    முகத்தைத் துணியால் மூடி நெருப்பிலிட
    செத்தவனைத் தூக்கிச்செல்வர்
    சாகாதவர்கள் சுடுகாட்டை நோக்கி

    பாடல் 25

    கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
    பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங்கொண்டீண்டு
    உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
    டொண்டொண்டொ டென்னும் பறை

    கூட்டம் கூடி உறவினர்
    கூவி அழுது பிணத்தைச்
    சுடுகாடு கொண்டு சென்று
    சுட்டெரிப்பதைக் கண்டபின்னும்
    திருமணம் செய்துகொண்டு
    திகட்டாத இன்பத்துடன்
    சுகமாய் வாழ்வேன் என்ற
    சிந்தனையுடன் மயங்குவோர்க்கு
    சாப்பறையின்  தொண் தொண் ஒலி
    இவ்வுலகவாழ்வில் இத்தகு
    இன்பம் இல்லை எனக்காட்டும்.

    பாடல் 26

    நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்
    பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
    தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
    கூத்தன் புறப்பட்டக் கால்.

    தோல் பையெனும் உடலுள்
    தங்கித் தன் தொழில்களை ஆற்றி
    விளையும் பயனைத் தானே
    விரும்பி அனுபவிக்கும்
    கூத்தாடியாகிய உயிர்
    கூட்டை விட்டுச் சென்றபின்
    பிணத்தைக் கயிற்றால் கட்டி
    பிடித்து இழுத்தால் தான் என்ன?
    நன்கு சுத்தம் செய்து
    நல்லடக்கம் செய்தால்தான் என்ன?
    வீசிப் போட்டால்தான் என்ன?
    வீண்பழி சுமத்தினால்தான் என்ன?

    பாடல் 27

    படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
    கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் – தடுமாற்றம்
    தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
    நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.

    பெய்யும் மழை நீரில்
    பலமுறை தோன்றி அழியும்
    குமிழிபோல் ஒரு பொருள்
    உடம்பு என உறுதியாய்
    உணர்ந்துத் தடுமாறாமல்
    பிறவித் துன்பத்தைப் போக்க
    பெரும் அறம் செய்து வாழும்
    பேரறிவுடைய பெரியோருக்கு
    இணையாய் ஒத்தோர் எவருளார்
    இப்பெரும் உலகில்.

    பாடல் 28

    யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
    யாக்கையா லாய பயன்கொள்க; – யாக்கை
    மலைநாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
    நிலையாது நீத்து விடும்.

    வலிமையான உடலை
    வினைப்பயனால் பெற்றவர்
    அதனால் ஆகும் பயனாய்
    ஆகச்சிறந்த நற்செயல் புரிவீர்!
    மலைமேல் உலாவும்
    மேகம்போன்ற இவ்வுடல்
    நிலைபெற்று நில்லாது
    நீங்கிச் சென்றுவிடும் முன்னே

    பாடல் 29

    புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
    இன்னினியே செய்க அறவினை; – இன்னினியே
    நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
    சென்றான் எனப்படுத லால்.

    இப்போதுதான்  நின்றிருந்த
    இவன் உட்கார்ந்தான்
    பின்னர் படுத்தவன்
    பல உறவினரை
    அலறி அழவைத்து
    ஆருயிர் நீத்தான்
    என்பது போல்
    எவ்வகையிலும் நிலையில்லா
    நுனிப்புல்லில் உள்ள
    நீர்த்துளி போன்ற
    இவ்வுடம்பின் நிலையுணர்ந்து
    இப்பொழுதே தொடங்குவீர்
    அறச்செயல்களை ஆற்ற.

    பாடல் 30

    கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
    வாளாதே போவரால் மாந்தர்கள் –  கேளாதே
    சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
    யாக்கை தமர்க்கொழிய நீத்து.

    வரட்டுமா? எனக் கேளாது
    வந்து சேர்வர் உறவினராய்
    பின் தம்கூடு மறந்து தொலைவில்
    பறந்து செல்லும் பறவைபோல்
    உற்றார் உறவினரிடம்
    உடலை விட்டுவிட்டு
    உயிர்நீத்துச் சென்றிடுவர்.

    Share
  • கொரோனாவின் கோரப்பிடியும், இங்கிலாந்தும்

    கொரோனாவின் கோரப்பிடியும், இங்கிலாந்தும்

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    அசாத்தியமான நிலை, அசாதாரணமான சூழல் நான்கு மாதங்களுக்கு முன்னால் எண்ணிப்பார்த்திருக்கக் கூட முடியாத ஒரு சூழலில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து மக்கள். இங்கிலாந்து மட்டுமல்ல முழு உலகுமே என்று கூடச் சொல்லலாம். எதையும், எப்படியும், எப்போதும் சமாளித்து விடுவோம் என்று பொருளாதாரத்திலும், முன்னேற்றத்திலும் முன்னனி வகித்து அனைத்து வசதிகளும் நிறைந்திருக்கும் நாடுகள் எனும் உல்கக்கணிப்பில் இருந்த நாடுகள் பல. பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கி வெளியேவர அந்நியநாட்டு உதவிகளை எதிர்பார்த்து தத்தளித்துக் கொண்டிருந்த நாடுகள் பல கலந்து நிறைந்த உலகினை ஒரு கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்க்கிருமி இன்று தன்னிலை உணரப் பண்ணியிருக்கிறது என்பதுவே உண்மை.

    இயற்கைக்கு மனிதன் நாகரீக முன்னேற்றம், மனித வளர்ச்சியின் முன்னேற்றம் எனும் வகையில் விடுத்த சவாலை இயற்கை சத்தமின்றி சின்னாபின்னமாக்கியிருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது. இனம், மதம், மொழி எனும் எல்லைகளுக்கப்பால் நாடுகள் எனும் எல்லைகளைக் கடந்து நான் உங்களையெல்லாம் பார்ப்பது மனிதர் எனும் ஒரேயொரு இனமாகத்தான் என்று உணர்த்தியிருக்கிறது இக்கொரோனா வைரஸ்.

    நேற்று மாலை இல்லத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்காக எமக்கருகாமையிலிருக்கும் ஒரு பல்பொருள் அங்காடிக்கு செல்ல வேண்டிய தேவையிருந்தது. புறப்படும்போது மனைவி “கையுறை (Gloves), முகவுறை (Mask), சுத்தம் செய்வதற்கான நனைக்கப்பட்ட காகிதத்தாள் (Anti Bacterial Wipes) இவைகளெல்லாம் எடுத்துக் கொண்டீர்களா” என்று கேட்டபோது ஏதோ போருக்குப் புறப்படுவோனிடம் ஆயுதங்களை எடுத்துக் கொண்டீர்களா? என்று கேட்பது போலிருந்தது.

    ஆமாம் இதுவும் ஒரு சத்தமில்லா யுத்தம் தானே! கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்க்கிருமி எத்தனை பேர்களின் உயிர்களைத் தன்னால் காவு கொள்ள முடியும் எனும் வகையில் காத்திருக்க, கண்ணுக்குப் புலப்படாத இந்த எதிரியிடமிருந்து எப்படி எம்மைக் காத்துக் கொள்வது எனும் தந்திர யுத்திகளை நாம் கையாள இதுவும் ஒரு நவீன போர் என்றுதானே கூற வேண்டும்..!

    இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து எனும் நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய ஐக்கிய இராச்சியம் இன்று அடங்கிப் போயிருக்கிறது. லாக் டவுண் எனப்படும் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் சட்டவிதிகளை அமுலாக்கி இக்கொரோனா வைரஸினை வெற்றி கொள்ளும் ஒரு தீவிரமான கட்டத்தில் தன்னை அமிழ்த்தியிருக்கிறது ஐக்கிய இராச்சியம்.

    ஐக்கிய இராச்சியம் மட்டுமல்ல முழு அகிலமுமே இன்று ஏதோ ஒரு வகையிலான கட்டுப்பாட்டினை தமது மக்களின் நடமாட்டத்தின் மீது விதித்திருக்கின்றன. ஐனநாயகத்தினைக் கடைப்பிடிக்கும் எந்த ஒரு நாடுமே எந்த விதமான கட்டுப்பாட்டினைத் தமது நாட்டு மக்களின் மீது என்றுமே விதிக்க மாட்டா என்று இருந்தனவோ இன்று அந்நிலை மாறி அதே மக்களின் நன்மைக்காக அவர்மீது அக்கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் அரசாங்கங்கள் இருப்பது தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

    இக்கொரோனா வைரஸினால் தாக்கப்பட்ட இங்கிலாந்துப் பிரதமரின் காய்ச்சல் பத்து நாட்களாகியும் குறையாததினால் முன்னெச்சரிக்கையாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். நாடு முழுவதுமே ஒருவகையிலான துயர நிலைக்குத்தள்ளப்பட்டது. கடைசியாகக் கிடைத்த செய்திகளின் படி அவர் தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து சாதாரன பிரிவுக்கு மாற்றப்பட்டது அவரது உடல்நிலை தேறிவருகிறது என்பதினை உறுதி செய்கிறது.

    எந்தவிதமான அரசியல் பாகுபாடுமின்றி அனைத்துத் தரப்பினரும், நாட்டு மக்களின் பெரும்பான்மையினரும் அவரின் நலனை முன்னிறுத்தியது மனிதத்தின் வெற்றி என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

    இங்கிலாந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விதிகளின்படி

    1. ஒருநாளைக்கு ஒரு தடவை உடற்பயிற்சிக்காக தமது இல்லங்களுக்கு அருகாமையில் மக்கள் நடைபயிற்சிக்கோ அன்று தமது வளர்ப்புப்பிராணியின் நடைக்காகவோ வெளியே செல்லலாம்
    2. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வெளியே செல்லலாம்
    3. மருந்துப்பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வெளியே செல்லலாம்
    4. தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள முடியாதவர்களுக்கு உதவுவதற்காக வெளியே செல்லலாம்
    5. வீட்டிலிருந்தபடியே பணி செய்ய முடியாதவர்கள் அவர்களின் பணிகள் அத்தியாவசியமாக இருக்கும் பட்சத்தில் பணிமனை செல்லலாம். ஆனால் பணிமனையில் தனிமனித விலத்தல் விதிகளுக்கமையவே அவர்கள் பணிபுரியலாம்.

    என்பனவே சட்டபூர்வமாக கடைப்பிடிக்கும்படி விதிக்கப்பட்டிருக்கிறது

    மேலே குறிப்பிட்ட விதிகள் சாதாரண மக்களுக்கானவை. ஆனால் பலவிதமான தீவிரமான நோய்களுக்குட்பட்ட ஏறக்குறய ஒன்றரை லட்சம் மக்களுக்கு ஐக்கிய இராச்சிய வைத்தியத்துறை கடித மூலம் அவர்கள் 12 வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடது எனவும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், மற்றும் மருந்துகள் என்பனவற்றைப் பெற்றுக் கொடுக்க உதவிகள் இல்லாத பட்டத்தில் அதற்கான இணையத்தளத்தில் தம்மைப் பதிவு செய்தவன் மூலம் அவர்களுக்கான தேவைகளை அளிக்க கவுன்சில்கள் ஏற்பாடு செய்யும் என்றும் அரிவித்துள்ளார்கள்

    பல வியாபார நிலையங்கள், வர்த்தக ஸ்தாபனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன. தனியார், மற்றும் அரச ஊழியர்களில் வீடுகளில் இருந்து பணிபுரியக்கூடியவர்களுக்கு அத்தகைய வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மட்டும் திறப்பதற்கு அனுமதி உள்ளது.

    பார்கள், உணவுவிடுதிகள் என்பனன அடைக்கப்பட்டு விட்டன. சில உணவு விடுதிகள் மட்டும் இணையத்தளம் வழியாக தமது வியாபாரத்தினை நடத்துகின்றன, கிரடிட் அட்டைகளின் மூலமாக பணத்தினைச் செலுத்த உணவு இல்லத்துக்கு எடுத்து வரப்படுகின்றன. உதரணமாக பிட்ஸா போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

    பிரபலமான பல்பொருள் அங்காடிகள் காலை ஆறு மணி முதல் மாலை 10 மணிவரை திறக்கப்படுகின்றன. இங்கு தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஏனையோர் கடைக்கு வெளியே 2 மீட்டர் இடைவெளியில் வரிசையில் நிற்பார்கள் உள்ளே இருப்பாரில் எத்தனை பேர் வெளியே வருகிறார்களோ அத்தனை பேர் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். ஷாப்பிங் வண்டிகளின் கைப்பிடியை சுத்தம் செய்வதற்கான வசதிகள் வாசலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கடையின் உள்ளே ஒருவழிப்பாதை முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இது தனிமனிதருக்கிடையில் இருக்கும் இடைவெளியை தக்க வைப்பதற்கு உதவுவதற்காக எனலாம் .

    ஆசிய உணவு வகைகளை விற்கும் கடைகள் இங்கிலாந்தில் பல உண்டு. இவைகளில் தமிழ்க்கடைகள் அதிகமாகவே இருக்கும். இங்கு வகை வகையிலான எமது நாட்டு காய்கறிகள் கிடைக்கும். ஆனால் இன்றோ இவைகளில் பெரும்பான்மையானவை மூடப்பட்டிருக்கின்றன. திறந்திருக்கும் ஒருசில கடைகளில் எமது நாட்டு காய்கறி கிடைப்பது அரிதாகவே உள்ளது.

    இங்கிலாந்தின் பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது. ஆனால் வர்த்தக ஸ்தாபனங்கள் மூடப்பட்டு விட்டதால் இதனைக் கடந்து மீண்டும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது கடினம் என்பதினால் இதுவரை வரலாற்றில் காணாத வகையில் பல பொருளாதார உதவிகளை இங்கிலாந்து நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். இங்கிலாந்தின் அரசாங்கத்தை அமைத்திருப்பது கன்சர்வேடிவ் கட்சி. பொதுச் செலவுகளை மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் ஒரு பெயர் பெற்ற கட்சி. அந்தக் கட்சியின் கொள்கைகளுக்கு முற்றும் முரணாக பலவகையிலான பொருளாதார உதவிகளை அள்ளி வழங்கியிருக்கிறது இங்கிலாந்து அரசு. இங்கிலாந்தின் நிதியமைச்சர் இந்தியாவின் முன்னனி நிறுவனமான “இன்போசிஸ்” நிறுவன உரிமையாளரான திரு நாராயணமூர்த்தி அவர்களின் மாப்பிள்ளையான ரிஷி சுனாக் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    வியாபார நிறுவனங்கள இழுத்து மூடி அங்கு பணிபுரிபவர்களை வேலையிலிருந்து நீக்காதீர்கள், இந்நிலையிலிருந்து நாம் மீளும்வரை நீங்கள் வேலையில் வைத்திருக்கும் ஊழியர்களின் 80% ஊதியத்தை அரசாங்கம் தரும் என்று அறிவித்திருக்கிறார். அத்துடன் Self employed எனும் வகையிலான பணிபுரிவோருக்கும் பொருளாதார உதவிகளை அறிவித்திருக்கிறது அரசு. இவ்வகை பணிபுரிபவர்கள் தமது வரிக்கான பத்திரத்தைச் சமர்ப்பிக்கும்போது தமது வருமானம் எவ்வளவு என்று குறிப்பிடிருந்தார்களோ அதன் 80% த்தை அரசு கொடுக்கும் என்பதுவே அது. அதுதவிர தமது வாழ்வாதரத்துக்கான நிதிப்பற்றாக்குறையுள்ளவர்கள் அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி அரச உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்கள்.

    தேசிய சுகாதார சேவையில் இருக்கும் அத்தியாவசிய ஊழியர்களுக்கான பாதுகாப்புக் கவசப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பதிலாக அரசுக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்களை உற்பத்தி செய்யும்படி வேண்டப்பட்டு அதனை உற்பத்தி செய்கிறார்கள்.

    இங்கிலாந்தின் தேசிய சுகாதரச் சேவையின் அன்றாட பொருட்கள், நோயாளர்கள், மருந்துகள் என்பனவற்றினை உரிய இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு தமக்கு உதவி தேவை அதற்காக தன்னார்வ முறையில் சுமார் 250000 பேர்வரை எதிர்பார்க்கிறோம் என்ற அவர்களது கோரிக்கை வந்த இரண்டு நாட்களுக்குள் சுமார் 750000 பேர் உதவ அதற்கான இணையத்தளத்தில் தம்மைப் பதிவு செய்தமை மக்களின் புரிந்துணர்வினை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

    அரசாங்கத்தின் சட்டத்திற்கமைய மூடப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு நஷ்டஈடு உரியவகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கொரோனா வைரஸினால் தாக்கப்பட்டவர்களைப் பராமரிக்கும் முன்னனி வைத்தியர்கள், தாதிமார்கள் மற்றும் வயோதிபர்களைப் பராமரிக்கும் விடுதிகளின் சேவையாளர்களுக்கான பரிசோதனை திருப்திகரமாக இல்லை எனும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதற்காக இம்மாத இறுதிக்குள் நாளொன்றுக்கு 100000 பேரைப் பரிசோதிக்கக்கூடிய வசதிகளை நிர்ணயித்து விடுவோம் என சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்,

    ஒவ்வொரு வியாழனும் இரவு 8 மணிக்கு அனைவரும் தமது இல்லங்களிலிருந்து வெளியே வந்து இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் தமது அன்றாடக் கடமைகளை ஆற்றும் அத்தியவசியத்துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கரகோஷம் செய்து வருகிறார்கள்.

    இதுவரை கிடைத்த தரவுகளின் படி இங்கிலாந்தில் 65,077 பேர்கள் இவ்வைரஸினால் தாக்கப்பட்டுள்ளார்கள். 7,978 பேர்கள் மரணத்தை தழுவியுள்ளார்கள். இங்கே குறிப்பிடப்பட்ட தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வைத்தியசாலைக்குச் சென்று தம்மை அடையாளப் படுத்திக் கொண்டவர்களேயாகும். அவர்களைத் தவிர மேலும் பலர் மிகவும் குறைவான நிலையில் இவ்வைஸினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு செல்லத் தேவையில்லாமல் இருப்பார்கள் என்றே தெரிவிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 250000 க்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டுள்ளார்கள்.

    மார்ச் 23ம் திகதியே ஐக்கிய இராச்சியத்தில் கட்டுப்பாட்டு விதிகள் அறிவிக்கப்பட்டன. இக்கட்டுப்பாட்டினை பெரும்பான்மையான ஐக்கிய இராச்சிய மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இதன் காரணமாக புதிய வைரஸ் தொற்றுக்கள் குறைந்து வருவதோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இறப்போரின் எண்ணிக்கை இன்னும் ஓரிரு வாரங்களுக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும் அதன் பின்னால் இறப்போரின் எண்ணிக்கை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு நாளும் மாலை 5 மணியளவில் ஐக்கிய இராச்சிய அரசின் சார்பாக பத்திரிகையாளர் மகாநாடு நடத்தப்படுகிறது. இது தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. இப்போது அநேகமாக கேட்கப்படும் கேள்வி எப்போ மக்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்பதே. அதற்கு அரசின் சார்பாக அடுத்த வார இறுதியில் இது மீள்பரிசோதிக்கப்படும் வரை எதுவும் கூற முடியாது எனும் பதிலே கிடைக்கிறது.

    இவ்வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சகட்டத்தை அடைந்து விட்டதா என்பதை இன்னமும் நிர்ணயிக்க முடியாமல் இருப்பதே இதற்குக் காரணமாகிறது. இங்கே இறப்போரின் எண்ணிக்கை என்பது ஒரு தொகையாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மரணத்தின் பின்னாலும் ஒரு குடும்பத்தின் சோகம் காணாமல் போகிறது. இந்நோயினால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ஒரேயொருவர் மட்டும் மரணச்சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். ஏனையோர் அதிக பட்சம் காணொளியில் மட்டுமே கண்டு கொள்ளலாம், தமது உறவினர்களின் கடைசி யாத்திரையைக் கூட நேரடியாகக் கண்டு கொள்ள முடியாத ஒரு அவலமான நிலையில் பலர் மனமுடைகிறார்கள். அது தவிர இறப்பவர்களின் உயிர் பிரியும்போது அவர்களின் உறவினர்கள் யாரும் அருகில் இல்லாமல் உலகை விட்டு நீங்குகிறார்கள்.. ஆனால் அவர்கள் தன்னந்தனியாக உலகை விட்டு நீங்காமல் தாதிமார்கள் அருகில் இருக்கிறார்கள். ஆனால் இதனைத் தொடர்ந்து கண்ணுறும் டாக்டர் மற்றும் தாதிமார் கூட மிகவும் மனமுடைந்து போகிறார்கள்.

    இன்று ஐக்கிய இராச்சியமும், உலகும் கண்டு கொண்டிருக்கும் நிலை உலகப் போர்களுக்குப் பின்னால் வரலாற்றில் முதன்முறையாக நிகழ்கிறது. இதனை எதிர்கொள்வதும், கையாள்வதும், மக்களுக்கும், அனைத்து அரசுகளுக்கும் ஒரு புதிய அனுபவமே.

    ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வு ஐக்கிய இராச்சியத்தை பிளவு படுத்தியது. ஆனால் இன்று கொரோனா எனும் வைரஸ் ஐக்கிய இராச்சியத்தை மீண்டும் ஓரணியில் திரள வைத்திருக்கிறது. இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து மீண்டு வரும்போது உலகம் நிச்சயமாக ஒரு பொருளாதார பின்னடைவைச் சந்திக்கப் போவது உறுதி என்பதை பல பொருளாதார நிபுணர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். உலகமயமாதல் எனும் நிலையை விட்டு முன்னனி நாடுகள் தாமும் தமது நலமும் எனும் ஒரு கோட்டுக்குள் நுழைந்து கொண்டிருக்கும் சமயத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வின் தாக்கத்தை உலகநாடுகள் ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து எதிர்கொள்ளப் போகின்றனவா? இல்லை மீண்டும் சுயநலத்தின் அடிப்படையில் இயங்கப் போகின்றனவா? என்பது கேள்விக்குறியே!

    ஆனால் நிச்சயமாக இந்நிலையிலிருந்து மீண்டு வரும்போது மனித வாழ்க்கையின் செயற்பாடுகளிலும், வாழ்க்கையை நோக்கிய அவர்களது பார்வையிலும் நிச்சயம் ஒரு மாற்றம் இருக்கத்தான் போகிறது. இருப்போரும், இல்லையென்போரும் ஒரே தளத்தில் வாழ்வினை எதிர்நோக்க வைத்ததில் கொரோனா வைரஸ் வெற்றி கண்டிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

    மனிதர்கள் அனைவரையும் எதுவித வேறுபாடுமின்றி மனிதர் என்றே பார்த்த வைரஸ் தந்த பாடம் எம்மையும் அதேபோல பார்க்க வைக்குமா? இல்லை மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி! எனும் நிலைதானா ?

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 3

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 3

    மீ.விசுவநாதன்

        “குருவின் கருணை”

    தானே சீட னுக்காய்
    “தர்க்க சங்க்ரஹம்” என்ற
    தேனாம் பாடம் தன்னை
    தினமும் கற்றவர் கொடுத்தார் !
    மேலாம் கருணை கொண்ட
    மேகம் அவரருள் என்று
    நூலோர் சொன்ன வார்த்தை
    நூறு சதமெனக் கண்டார். (21)

    “குரு சீடருக்கு அறிவுரை”

    அப்பா அம்மா உன்னை
    அன்பால் தேடு வார்கள்
    இப்போ துடனே நீயும்
    எழுது கடிதம் என்றார்
    சிப்பாய் போல ஓடிச்
    செய்து விட்டார் சீடர்;
    அப்பா அம்மா உள்ளம்
    அதனால் அமைதி ஆச்சு. (22)

    “1968ல் சிருங்கேரி வந்தார்”

    வடநாடு யாத்திரை சென்று
    மறுபடி சிருங்கேரி வந்தார்
    திடமான அத்வைத ஞானி
    தெய்வமாம்  நம்வித்யா தீர்த்தர்;
    கடலாழ முத்தினை ஒத்தக்
    கவிஞராம் சீடருமே பாம்புப்
    படத்தாலே தவளையைக் காத்த
    பதியினை  வந்த டைந்தார். (23)

                “சிருங்கேரி “

    வேம்பும் அரசும் ஒன்றாய்
    வேருடன் நிற்றல் போல
    பாம்பும் தவளை யோடு
    பாசமாய் இருத்தல் பார்த்து
    ஆமாம் இந்த மண்தான்
    அமைதியைப் பேணு மென்று
    ஓமோம் என்று ஓதி
    முதல்மடம் அங்க மைத்த (24)

    சங்கரர் வாழ்ந்த பூமி!
    சங்கர வம்சம் வாழும்
    மங்கல சிருங்கே ரிக்கு
    மாந்தரே வருக என்று
    திங்களைச் சூட்டிக் கொண்ட
    செந்நிற சிவனே போன்ற
    எங்களின் குருவே அன்பால்
    இன்முகங் கொண்ட ழைப்பார். (25)

          “நரசிம்மவனம்”

    நரசிம்ம வனத்தி லுள்ள
    “ஆக்னீக மந்திரம்” என்னும்
    மரம்சூழ்ந்த அறையை அன்று
    மகாசன்னி தானமே தந்தார்
    பரம்பொருளைக் காட்ட வேண்டி
    பாதையினைத் காட்டினார் என்றே
    சிரம்தாழ்த்தி வணக்கம் சொல்லி
    சீடருமே தங்கியும் வந்தார்.  (26)

       “கசடறக் கற்கக் கற்க”

    கசடறக் கற்க வேண்டும்
    கற்றபடி நிற்க வேண்டும்
    இசைபட என்றும் வாழ
    வேதநெறி ஒழுக வேண்டும்
    அசைவிலா உள்ளுக் குள்ளே
    அகிலத்தை அடக்கி வைக்கும்
    நிசமான ஞானம் கொள்ள
    நினைத்தாரே சீட ரும்தான் (27)

           “தாயைப்போல் பரிவு”

    ஒருபிர தோஷ நன்னாள்
    துங்கைக் கரையில் உள்ள
    அருமையாம் சார தாவின்
    ஆல யம்சென் றுவிட்டு
    திரும்பிடும் போது பார்த்தார்
    தெய்வ நிகர்ஆ சானை !
    இருட்டிடும் முன்பே வாவா
    என்றார் குருவும் அன்பால்! (28)

           “தர்க்க சாத்திரப் பாடம்”

    தக்கதோர் குருவைக் கொண்டு
    தர்க்க சாத்திரப் பாடம்
    அக்கணம் சீடன் கற்க
    ஆசான் விரும்பினார் ! நல்ல
    பக்குவப் பட்ட சான்றோர்
    பக்கம் இருந்திடச் செய்து
    திக்கெலாம் புகழும் வண்ணம்
    சீடன் பேர்பெற வைத்தார். (29)

    காலையில் கற்ற பாடம்
    கருங்கல் எழுத்தைப் போல
    மாலையில் சொல்வார் சீடர் !
    மயங்கு வாராம் ஆசான்!
    சோலையில் வீசும் தென்றல்
    சுகமாய் குருவும், “அம்பாள்”
    வேலையி தென்றே எண்ணி
    நெகிழ்ந்தே மகிழ்ந்தி ருப்பார் . (30)

    Share