நாலடியார் நயம் – 4

நாங்குநேரி வாசஸ்ரீ

 4. அறன் வலியுறுத்தல்

பாடல் 31

அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்

இவ்வீட்டினுள்ளே இருப்பவர்தாம்
இனிய வாழ்வு வாழ்பவர் என
அண்ணாந்து நோக்கி வீட்டின்
அருகே சென்று முயற்சித்தும்
உயர்ந்தோக்கி நிற்கும் வீட்டின்
உட்செல்ல இயலாத மன
வருத்தத்துடன் வாயிலைப் பற்றி
வருந்தி நிற்பர் எவரெனில்
தம் முற்பிறப்பிலும் கூட
தருமம் செய்யாதோர்.

பாடல் 32

ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே – ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
சென்றன செய்வது உரை.

அளவற்ற செல்வம் விரும்பி
அதற்காகவே உழைத்து
பெருஞ்செல்வம் சேர்த்து
பெருவாழ்வு வாழ்ந்து
தருமம் செய்ய மறந்து
தன்னுயிர் நீப்போம்
என்றுணராது வாழும்
எம் மடநெஞ்சமே!
முயற்சித்து வாழ்ந்தாலும்
முடியும் உன் வாழ்நாட்கள்
எஞ்சிய நாளிலாவது
என் செய்வாய்? மறுமைக்காக.

பாடல் 33

வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை – நினைத்ததனைத்
தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்தொருவு வார்

தீவினையால் பெரும்
தீங்கு நேரும் காலம்
பெருமூச்செரிந்து மனதுள்
பெரும் கவலையுற்று
அழிவர் அறிவில்லாதோர்.
அத்தீவினைப் பயனை
மனதுள் நினைந்து அது
முற்பிறப்பில் செய்த
பாவத்தின் பலன் என
பக்குவாய் ஏற்று
அமைதியாய் அனுபவிக்கும்
அறிவுடையோர் பிறவித்
துன்பத்தின் எல்லையைத்
துரிதமாய்க் கடப்பர்.

பாடல் 34

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும் பயனும் ஆற்றவே கொள்க – கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.

பெறுதற்கரிய இம்மனித உடலை
பெற்றோம் புண்ணிய பயனால்
பெற்ற அவ்வுடலைக் கொண்டு
பெருந்தருமம் செய்க!
கரும்பின் சாறுபோல்
காலத்திற்கும் உதவும் அது
உயிரற்று அழியும் உடம்போ
உதவாத சக்கை போலாம்.

பாடல் 35

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்

ஆட்டிய கரும்பின் சாற்றில்
ஆகிய வெல்லக்கட்டியை
முற்காலத்தில் கொண்டோர்
முன்னே கிடக்கும் சக்கை
தீப்பற்றி எரியும் நேரம்
துன்புற்று வருந்தார்
நல்லறம் செய்து
நல் பிறவிப்பயன் உற்றவர்
எமன் வரும் நேரம்
எண்ணித் துன்பம்கொள்ளார்.

பாடல் 36

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்

இன்றைக்கோ அன்றைக்கோ
என்றைக்கோ என எண்ணாது
எப்போதும் எமன் உம் பின்னால்
நிற்பதாய் நினைத்துக்கொண்டு
நீக்கிவிடுங்கள் தீச்செயல்களை
முடிந்த வரையில்
புகழுடைப் பெரியோர்
போற்றிய தர்மத்தைப்
புரிந்து வாழ்வீர்.

பாடல் 37

மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் – தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாதுஉம்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்

மனிதப் பிறவியால்
மண்ணுலகில் ஆகும் செயல்
ஆராய்ந்து நோக்கின்
அளவிற் பலவாம்
நரம்பும் தசையும் கூடிய
நம் உடம்பையே கவனித்து
வாழ்ந்திராது சுவர்க்கம்
வாய்த்து இன்பம் நுகர
நல்லறம் செய்து
நலமாய் வாழ்வீர்.

பாடல் 38

உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு – அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும் .

மிகச்சிறு ஆலம்விதை
மரமாகி நிழல்தருவது போல்
அறத்தால்வரும் பயன்
அற்பமாய் இருப்பினும்
தகுதியுடையவர் கையில்
தங்கிச் சேர்ந்தால்
ஆகாயமும் அற்பமாகுமளவு
அளவிற்பெரியதாகி
அதனை மூடிப் போர்த்தும்.

பாடல் 39

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார். .

தினந்தோரும் நாள் கழிவதை
திரும்பத்திரும்பப் பார்த்திருந்தும்
அறிந்துகொள்ளாதார்
ஆயுட்காலம் தொடர்ந்து
குறைவதை உணராது
நிலையாக இருப்பதாய்
நினைத்து இன்புறுவர்.

பாடல் 40

மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் – ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்

இழிவான காரியம் செய்து
இனிய உணவு ஊட்டுவதனால்
இவ்வுடம்பு உறுதியுடன்
இனிதே நீண்ட நாள் நிலைக்குமெனும்
இக்கூற்று உண்மையானால்
மானமெனும் அருமை
மிக்க அணிகலன் நீக்கி
கை ஏந்துதல் எனப்படும்
கீழான அவமானத்துடன்
பெரும்பாலும் வாழ்வேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.