நாலடியார் நயம் – 5

நாங்குநேரி வாசஸ்ரீ
5. தூய் தன்மை
பாடல் 41
மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை – யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்
மாந்தளிரின் மேனியுடை இள
மங்கை நல்லாளே! என
விளித்துப் பிதற்றும் அறிவுடையோர்
விரைவில்அழியும் உடம்பின்
இழிவை எண்ணிப் பாராரோ?
ஈயின் சிறகு அளவு
தோல் அறுந்தாலும்
வழியும் குருதிநோக்கி
வரும் காக்கையை
விரட்ட ஒரு கொம்பு
வேண்டும் என உணர்வீர்.
பாடல் 42
தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் – மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்
கண்ணுக்குத்தெரியா துளைகள் பல
கொண்டு அசுத்தங்களை மறைக்கும்
மேற்போர்வைத் தோலினால்
மிக்க பெருமை கொண்டு
விளங்கும் இவ்வுடம்பு
விருப்பம்தரும் அத்தோலால்
ஆசைமேலிட்டு காம வயப்படாது
அசுத்தம் மறைக்கப்படாத
பை போல் நினைந்து உட்புறம்
காண்கின் உண்மை புரியும்.
பாடல் 43
தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே – எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.
உண்ணும் தொழிலால்
உடலுள் அழுக்கு மிகுமென்று
பெரியோர் விலக்கிவிட்ட
ஆசை எனும் மயக்கத்தால்
ஆகுகின்ற உடல்நாற்றம்
மணம் தரும் பொருட்களை
மென்று தின்பதாலோ
வாசனை மலர்களை
வகையாய்ச் சூடிச் செய்யும்
பொய் அலங்காரத்தாலோ
போகிடுமோ?
பாடல் 44
தெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்
உள்ளிருக்கும் நீர் நீக்கின்
தோண்டிய நுங்கு போல்
தோன்றும் கண்களைத்
தெளிந்தநீர்க் குவளை என்றோ
கரையில் புரளும் கயலென்றோ
கூர் வேற்படை என்றோ
கூறி இன்புறும் அற்பமனிதர்கள்
என்மனத்தைத் துன்புறுத்த
எச்சமயத்திலும் விடுவேனோ?
பாடல் 45
முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
எல்லோரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்
எல்லோரும் காணும்படி சுடுகாடு
எங்கும் சிந்திக்கிடக்கும்
பல்லாகிய எலும்புகளைப்
பார்த்தபின்னும் பற்றற்று
ஒழுகும் நான் பெண்களின்
ஒளிமிகு பற்களை
முல்லை அரும்புகள் என்றும்
முத்துப் போன்றவை என்றும்
பிதற்றும் மேலான நூலறிவு
பெறாக் கீழ்மக்கள் எம்
உள்ளத்தைத் துன்புறுத்த
உறுதியற்று விடுவேனோ?
பாடல் 46
குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் – இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்
குடலும் கொழுப்பும்
குருதியும் எலும்பும்
நன்கு கட்டப்பட்ட
நரம்பும் தோலும்
இவற்றினிடைத் தோன்றும்
தசைகளும் நிணமும்
தாங்கிய இவைகளுள்
குளிர்ந்த மாலை சூடிய இக்
கோதை எப்பகுதியை உடையவள்?
பாடல் 47
ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் – பேதை
பெருந்தோளி பெய்வளையாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.
அழுக்குகள் ஊறி
அவ் வெறுக்கத்தக்க
ஒன்பது துளைகளை
உடைய புலன்களையும்
அசுத்தக் குழம்பு உட்சிதறி
அலைமோதும் உடம்பையும்
கண்டும் அறிவில்லாதான்
கண்கவரும் மேல்தோலால்
கவரப்பட்டு அழகிய
பெருத்த தோளுடையவளே!
பாங்கான வளையல்கள்
அணிந்தவளே! என விளித்து
அறிவில்லாது பிதற்றுவான்.
பாடல் 48
பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் – மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்
முடைச்சாகாடு அச்சிற்று உழி
உடம்பெனும் பண்டத்தின்
உண்மை இயல்பறியாதோர்
சந்தனப் பூச்சையும்
சூடும் மலர்மாலையையும்
பாராட்டி மகிழ்ந்திடுவர்
முடைநாற்றம் கொண்ட
மனித உடம்பெனும் வண்டியின்
அச்சுபோலாம் உயிர் பிரிந்தபின்
ஆணும் பெண்ணுமாய் வலிமிகு
கழுகுகள் கூடிப் புரட்டிக்
குத்தி உண்பதை அவர்கள்
கண்டதில்லையோ?
பாடல் 49
கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி – ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து
இடுகாட்டில் காணப்படும்
இறந்தவர்களின் தலைகள்
அச்சந்தரும் தோற்றம் கொண்ட
ஆழ்பள்ளக் கண்களுடன்
சாகாது நிற்கும் மற்றவர்
சகிக்க முடியாதபடி
ஏளனமாய்ச் சிரித்து
இவ்வுடம்பின் தன்மை
இத்தகையது என உணர்த்தி
நல்லறம் போற்றி
நல்வழியில் நில்லுங்கள்
எனச் சொல்லுகின்றனவோ?
பாடல் 50
உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் – செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்
இறந்தவர் வெண்மண்டை ஓடுகள்
இருப்பவர் அஞ்சும்படி நகைத்து
இல்லறத்தில் இறுமாந்து
இருப்போரின் குற்றம் போக்கும்
உடல்மயக்கமெனும் குற்றம் நீங்கியோர்
உண்மையை உணர்ந்துப் பின்னர்
இவ்வுடம்பின் இயல்பு
இத்தகையதுதான் என
அறிந்து தம் உடம்பை
அரிதான ஒரு பொருளாய்
அதிசயித்துப் பாராட்ட விழைந்திலர்.