Blog

  • சேக்கிழார் பாடல் நயம் – 75 (அந்தணன் ஆம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 75 (அந்தணன் ஆம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    அந்தணனா  மெந்தைபிரா  னருமறையோர்  முன்பகர்வான்
     ‘’இந்தவேட்   கோவன்பால்  யான்வைத்த   பாத்திரத்தை
     தந்தொழியான்; கெடுத்தானேற் றன்மனைவி  கைப்பற்றி
     வந்துமூழ்   கியுந்தாரான்; வழிசெய்கின் றா’’னென்றார். 

    உரை :

    ‘’அந்தணனாக வந்த எம்பெருமான், தில்லைவாழ் அந்தணர்கள் முன்னே சென்று சொல்லத் தொடங்கினார்.’’ இந்தக் குயவனிடம் நான் முன்பு கொடுத்துச் சென்ற திருவோட்டை  மீண்டும் தராமல் இருக்கிறான். அதனைத் தொலைத்துவிட்டான் என்றால், அந்த உண்மையை உறுதிசெய்யத் தன மனைவியின் கையைப் பற்றிக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்ய இசைய வில்லை! இவ்வாறு இவன் பிடிவாதம் செய்கின்றான் ‘’ என்று முறையிட்டார்.

    விளக்கம் :

    சிவவேதியராகத்  திருநீலகண்டர் முன் வந்த சிவபெருமான் தாம் முன்னே அவ்வவடியாரிடம்  வைத்த திருவோட்டைத் திரும்பத்தருமாறு கேட்டார். அடியாரும் இல்லினுள் சென்று அவ்வோட்டினைத்   தேடினார். அவ்வோடு அங்கில்லை. அருகில் தென்பட்டோரிடம் அதுபற்றிக் கேட்டார். எவ்வகையிலும்  அவ்வொடு கிட்டாமையால் சிவவேதியரிடம், ‘’அவ்வோடு எங்கு தேடினும் கிட்ட வில்லை, யான் குயவன் ஆதலால் மண்ணால் புது ஓடு வனைந்து தருகிறேன்’’ என்றார். யான் கொடுத்த திருவோடே எனக்கு  மீண்டும் வேண்டும்‘’ என்று வேதியர் கேட்டார். அடியார் ‘’நான் பொன்னாலான ஓடு வேண்டுமானாலும் செய்து தருகிறேன்’’ என்றார். அதற்கு ‘’யான்கொடுத்த மண்ணோடே வேண்டும்’’ என்று பிணங்கினார். ‘’அப்படியானால் அந்த ஓட்டினைக்  காணவில்லை என்று உன் மைந்தன்  மேல் சத்தியம் செய்து கொடு!’’ என்றார். அதற்கு அடியார், தமக்கு மைந்தன் இல்லை என்றார். ‘’அப்படியானால் உன் மனைவியுடன் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்!’’ என்றார். ‘’யான்செய்த சூளுரையால் மனைவியுடன் இணைந்து  வாழவில்லை , ஆதலால் அதற்கும் வாய்ப்பு இல்லை’’ என்றார். வேதியர், ‘’நான் இப்போதே தில்லைவாழ் அந்தணர்களிடம் சென்று முறையிடுவேன்’’ என்றார் . அவ்வாறே முறையிட்ட  பாடலே இது. இதன் பொருள். இவ்வாறு முறையிட வந்த சிவபெருமான், ஆதி அந்தணன் ஆவார். இதனை ஞானசம்பந்தர்,

    ‘’தையலாள் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும்
    ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையும் இடம்
    மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து
    பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே!’’ 

    என்றும் ,

    அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே,

    என்றும்  பாடுகிறார்.  மேலும்  திருநாவுக்கரசர்,

    ‘’ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணும் ஆம்
    மெய்யன் மேதகு வெண் பொடி பூசிய
    மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான்
    பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே’’

    என்று பாடுகிறார். சுந்தர மூர்த்தி சுவாமிகளோ,

    ‘’இந்துசேகரனே இமையோர் சீர் ஈசனே திரு ஆவடுதுறையுள்
    அந்தணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே’’ 

    என்று  பாடுகிறார். மாணிக்க வாசகர்,

    ‘’திருமாலும் பன்றியாய் சென்று உணரா திருவடியை
    உரு நாம் அறிய ஓர் அந்தணன் ஆய் ஆண்டுகொண்டான் ‘’

    என்று பாடுகிறார். திருமூலரோ,

    ‘’பிறவா நெறி தந்த பேரருளாளன்
    மறவா அருள் தந்த மாதவன் நந்தி
    அறவாழி அந்தணன் ஆதி பராபரன்
    உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே’’

    என்று பாடுகிறார், ‘’அறவாழி அந்தணன்தாள் சேர்ந்தார்க்கு‘’ என்ற திருக்குறள் இங்கே எண்ணத்தக்கது. பழைய வேதத்தை ஓதி வாழும் அந்தணர்களிடம் வேதியர் முறையிடப் போனதன்  நுட்பம்அறிந்து கொள்ளத்தக்கது. அந்தணர்கள் பசுஞானத்தைக்  கடந்து பதிஞானம் கைவரப்பெற்றவர் என்பதே  அது.

    மேலும் பழங்காலத்தில் வழக்கு மன்றத்தில் முறையிடச் செல்பவர் தாமே தம் வழக்கினை, மன்றத்தில் முறையிடும் வழக்கம் இருந்தது. இவ்வழக்கில் பொது மக்களின் வழக்கம் சபையாரால் ஆராயப்பட்டது.

    வழக்கிடப்பட்டார் நியாயசபை அல்லது அரச நீதியின்பேரால் முறையிடப் பட்டபோது, அதனுக்குட்பட்டுத் தாமே தம்மேல் வழக்கிடுவோரைத் தொடர்ந்து சென்று நீதி மன்றத்தினர் முன் நின்று தமது முறையையும் விளம்பித் தீர்ப்புக்கேட்டு நிற்றல் அந்நாளில் தமிழ்மக்களின் சமூக நிலை, இந்நாளில் நீதிமன்றத்தில் வருமாறு

    எத்தனை கட்டளைகள் வரினும் அவற்றிற்கெல்லாம் தப்பிமீறி நிற்கும் நாகரிக  மெனப்படும் நமது சமூக நிலையினுடன் இதனை ஒத்துநோக்கி உலகம் திருத்தமடைக.

    திருவிளையாடற் புராணத்திலேஅரசன் பேரால் பார்ப்பனன் முறையிட்டு வேடனைக் குற்றம்சாட்டியபோது அவனைத் தொடர்ந்து அரசன் முன்னர்த் தானே போந்த வேடன் செயலையும் இங்கு வைத்து உன்னுக. முன்னர் வல் வழக்கிட்ட கிழவேதியரைத் தொடர்ந்து வன்றொண்டரும் மணப்பந்தலில் இருந்த சுற்றத்தாரும் மணத் தொழிலை விட்டுத் திருவெண்ணெய் நல்லூர் நீதிமன்றத்தினை அணைந்தமையும், பிறவும் காண்க.

    இப்பாடலால் வழக்கிட்டு வாதிப்போர் தமக்குள் முரண்படுதலும், அதனை நீக்க சபையிடம் செல்வதும், சபை விசாரணை செய்வதும் புலப்படுகின்றது. எப்போதும் அருளையே வழங்கும் சிவபிரான் மேல் வைத்த  அன்பினால் சிவவேதியரிடமும் அன்பு கொள்ளாமல்  வழக்கு  மன்றம்  செல்வது பாசஞானத்தின்  செயலே என்பதும் புலப்படுகின்றது.

    Share
  • நாலடியார் நயம் – 1

    நாலடியார் நயம் – 1

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நாலடியார் நயம்

    பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த வேளாண் வேதம் எனப் போற்றப்படும் நாலடியார் சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நீதி நூல். நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பை கொண்ட இந்நூலில் திருக்குறளைப் போன்றே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகள் உள்ளன.

    அறத்துப்பால்

    1. செல்வம் நிலையாமை

    பாடல் 1

    அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
    மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச்
    சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
    உண்டாக வைக்கற்பாற் றன்று.

    அறுசுவை உணவை இனியமனைவி
    அருகமர்ந்து ஊட்ட ஒருகவளத்துக்கு மேல்
    உண்ண முடியாது மறுகவளத்தை
    உதறித்தள்ளும் செல்வந்தரும் ஏழையாய்ப்
    பிறிதோர் நாளில் கூழ் வேண்டிப்
    பிச்சையெடுக்க நேரிடும் என்பதால்
    செல்வம் நிலையானது என்ற
    சிந்தனையை விலக்கிடுவீர்.

    பாடல் 2

    துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
    பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
    அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
    சகடக்கால் போல வரும்.

    குற்றமற்ற நல்வழியில் ஈட்டிய
    குறைவற்ற பெருஞ்செல்வம்
    சேரத் தொடங்கிய நாள் முதல்
    சோர்வில்லா எருமைகள்பூட்டி உழுது
    உண்டாக்கிய சோற்றை வறியவர்
    உடனமர்ந்து பகிர்ந்து உண்பீர்.
    நிலையில்லாத செல்வம் எவரிடமும்
    நிற்காது வண்டிச் சக்கரம்போல்
    உயர்த்தியும் தாழ்த்தியும் அதனை
    உடையோரை ஆட்டுவிக்கும்.

    பாடல்- 3

    யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
    சேனைத் தலைவராய்ச் சென்றோரும் ஏனை
    வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
    மனையாளை மாற்றார் கொள.

    பெருமையுடன் யானை மீதமர்ந்து
    படைகள்சூழ உலா வந்த செல்வம் மிக்க
    அரசர்களும் வினைப்பயனால்
    அவர்தம் நல்நிலை தாழ்ந்து மனையாளை
    பகைவர் கடத்திச் செல்ல யாருமற்று
    பதைபதைக்கும் வறுமை நிலையுற்றுத்
    தாழ்வர் என்பதனால் பொருள் உள்ளபோதே
    தானம் செய்து அற வாழ்க்கை வாழ்வீர்!. .

    பாடல் 4

    நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
    ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
    சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
    வந்தது வந்தது கூற்று

    நிலைபெற்று நிற்கும் என
    நினைத்த பொருளெல்லாம்
    நில்லாமல் அழியும்
    நிலை கண்டபின்னும்
    நற்காரியங்கள் நிகழ்த்த
    நாட்களைக் கடத்தாதீர்
    விரைந்து குறையும் நம்
    வாழ்நாட்கள் உணர்வீர் அதை.
    கிளம்பிவிட்டான் எமன்
    கோபத்துடன் கொண்டுசெல்ல.

    பாடல் 5

    என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
    பின்னாவ தென்று பிடித்திரா முன்னே
    கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
    கொடுத்தாறு செல்லும் சுரம்

    கிடைக்கப்பெற்ற ஓர் பொருளை
    கடைக்காலத்திற்கு உதவுமென
    பிடித்துவைத்துக் கொள்ளாது
    பற்றற்று தானம் செய்தவர்கள்
    கொடும் எமன் பின்னே
    நரகம் செல்லாது விடுத்து
    நல் இன்பம்மிகு சுவர்க்கம் எய்துவர்.

    பாடல் 6

    இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
    கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; – ஆற்றப்
    பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் நாளைத்
    தழீஇம்தழீஇம் தண்ணம் படும்.

    தம் வாழ்வின் முடிவை மாற்ற
    தப்பிக்குதித்து ஓடி எமனிடம்
    அகப்படாமல் வாழ்ந்தோர் எவருமில்லை
    அளவற்ற பொருள் வைத்திருப்போரே!
    வாரி வழங்குவீர் பிறருக்கு
    விரைவில் பிணப்பறை
    ஒலிக்கும் தழீம் தழீம் எனும்
    ஓசையுடன் உங்களுக்கும்.

    பாடல் 7

    தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
    கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; – ஆற்ற
    அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
    பிறந்தும் பிறவாதார் இல்

    சூரியனை நாழிபோல் வைத்து
    சூழ்ச்சியாய் வாழ்வை அளக்கும்
    எமன் இறுதியில் நம் உயிரை
    எடுத்துச் செல்வான் நிச்சயமாய்
    ஆதலினால் அருளுடையவராய்
    அறம் செய்து வாழ்வீர்
    பொறுப்பற்று இவ்வழி நடவாதோர்
    பிறந்தும் இவ்வுலகில் பிறவாதவரே..

    பாடல் 8

    செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
    புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லில்
    கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
    மருங்கறக் கெட்டு விடும்.

    இருக்கும் செல்வம் கொண்டு
    இறுமாப்போடு அலையும்
    அடுத்த பிறவிபற்றிய
    அறிவற்றோர் செல்வம்
    கருமேகத்தின் வாயில்
    கணநேரம் தோன்றி
    மின்னி மறையும்
    மின்னல் போல்
    இல்லாமல் அழியும்
    இருந்த இடம் காட்டாமல். .

    பாடல் 9

    உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
    துன்னருங் கேளிர் துயர்களையான் – கொன்னே
    வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ
    இழந்தான்என் றெண்ணப் படும்.

    தானும் உண்ணாது
    தக்க மதிப்பையும் பெறாது
    உயர்ந்த செயல் செய்யாது
    உறவினர் துன்பம் களையாது
    வேண்டியவர்க்கு உதவாது
    வாழ்பவனின் செல்வம்
    இருந்தும் இல்லாததுபோல்
    இரங்கத்தக்க நிலையில்
    அய்யகோ! பொருளிழந்தானென
    அனைவராலும் கருதப்படும்.

    பாடல் 10

    உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
    கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது
    வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
    உய்த்தீட்டும் தேனீக் கரி

    விண்தொடும் மலைநாட்டின்
    வேந்தனே!
    விரும்பியதை உடுக்காது
    வாய்க்கு ருசியாய் உண்ணாது
    நலிவுற்ற காலத்தும்
    நல்லறம் செய்யாது
    தேவைக்கு உதவாது
    தேக்கிவைப்போர் செல்வம்
    பல மலரின் தேனை
    பாங்காகச் சேர்த்துவைத்து
    பலன் எதுவுமில்லாமல்
    பின்இழக்கும் தேனீ போலாகும்.

    Share
  • எழுவகைப் பெண்கள் – 13

    எழுவகைப் பெண்கள் – 13

    அவ்வைமகள்

    தென்னிந்தியத் தலைமுடிக்காய் ஆலாய்ப் பறக்கும் உலகம்

    பெண்களின் உடல்நலம் குறித்து நானும் அந்த ராணுவ அதிகாரியும் தொடர்ந்து செய்து வரும் உரையாடலில் அடுத்த பகுதியாக அமைவது பெண்களின் தலை முடி.

    அவர் சொன்னார்: எங்கள் அமெரிக்கப் பெண்களுக்கு மிகப் பெரிய பிரச்சினை இருக்கிறது – அதுதான் தலைமுடிப் பிரச்சினை. முடிப் பராமரிப்புப் பொருட்களுக்காகவும் முடிப் பராமரிப்புச் சேவைக்காகவும் அவர்கள் அதிகப் பணம் செலவிடுகிறார்கள். அதிக நேரம் செலவிடுகிறார்கள். இருப்பினும் சரியான தலைமுடி ஆரோக்கியத்தையோ அல்லது உண்மையான பராமரிப்புச் சேவையையோ அவர்கள் அடைந்ததான நிறைவு அவர்களுக்கு ஏற்படுவதில்லை. எங்கள் பெண்கள் தலைமுடிக்காகச் செலவிடும் பணம் கொஞ்சநஞ்சமல்ல. ஆண்டுக்கு பில்லியன் கணக்கில் போகிறது. நீங்களே வலை தளத்தில் சென்று  பார்க்கலாம். நான் சொல்வது அத்தனையும் உண்மை! தலைமுடிப் பொருட்கள் என்கிற மாபெரும் வணிகத்துறை அமெரிக்கப் பெண்களை வைத்தே எழுந்து கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

    வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பணத்தில் முக்கால்வாசி தலைமுடிக்கே போனதென்றால் இந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரம் என்னவாகும்?  இந்தப் பரிதாப நிலை எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்குக்கிறது என்றவர் மேலும் தொடர்ந்தார்.

    இந்நிலையில் நான் இன்னொன்றையும் அறிந்து கொண்டேன். உலகில் தென்னிந்தியத் தலைமுடிக்கு ஏகப்பட்ட கிராக்கி – டிமாண்ட் இருக்கிறது. எத்தனை பணம் கொடுத்தும் உங்கள் தலைமுடியை வாங்கிச் சிகையலங்காரம் செய்து கொள்ள உலகமே துடிக்கிறது என்றறிந்தேன் என்றார்.

    பொதுவாகவே உங்கள் பெண்களின் தலைமுடி கருப்பழகுடன் நீளமாக, அடர்த்தியாக, ஆரோக்கியமாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. இதற்கு ஜெனிடிக் காரணங்கள் உண்டா அல்லது பராமரிப்பின் இரகசியம் தான் காரணமா?

    ஜெனிடிக் அதாவது மரபு சார் ரீதியாகப் பார்க்கிறபோது, எம் இன மக்களின் தலைமுடி கருப்பு நிறத்தில் சுருளற்று நேரிழைகளாக இருக்கும். முடி அடர்த்தியில் உலகில் நாங்கள் இரண்டாவதுதான் – வெள்ளையர்கள் தான் அடர்த்தியில் முதலிடம்.

    ஆனால் எங்கள்  மண்டை மிகுந்த எண்ணெய்ப் பசையோடு இருக்கும் – முடி வெகு அடர்த்தியாக இல்லையென்றாலும் நல்ல அடர்த்தி இருக்கும். வெய்யிலில் இருந்து மண்டையைக் காப்பாற்றுவதற்காக இயற்கை செய்திருக்கிற ஏற்பாடுகள்தாம்  இவை இரண்டுமே.

    அதே போன்று  கருப்பு நிறமும், வெய்யிலின் கொடை தான். எங்கள் முடியில் மெலனின் நிறமி செரிந்திருப்பதால் தான் கரு நிறம். மெலனின் நிறமிகளில் இரண்டு வகை  உண்டு: யூமெலனின் (eumelanin) மற்றும் பியூமெலனின் (phaeomelanin).

    யூமெலனின் ஆழ்ந்த கருப்பில் உள்ள நிறமி. பியூமெலனின் வெளுத்த கருப்பில் உள்ளது. எங்கள் முடியில், யூமெலனின் அதிகம் இருப்பதால் ஆழ்ந்த கருவண்ணம் கொண்ட முடியாக அது தெரிகிறது. வெய்யில் பிரதேசங்களில் யூமெலனின் தோலிலும் முடியிலும் செறிந்து இருப்பது இயற்கையின் அற்புதமான ஏற்பாடு. எங்களுக்கெல்லாம் தோல் புற்றுநோய் வராது என்பதற்கும் எங்கள் தோலில் யூமெலனின் செரிந்திருப்பதுதான் காரணம்.

    மேலும் எங்களுடைய தலைமுடியின் மயிர் ஒவ்வொன்றும் வட்ட அச்சில் சீராக உருவாகி ஒரு குழல் போல இருக்கும்.

    எங்கள் முடிக்கு சுருள் தன்மை கிடையாது. நேர் மயிரிழைகளான அமைப்பு அதற்கு இருப்பதால், நீளவாக்கில் தங்குதடையின்றி அது அழகாய் அது வளர்கிறது.

    ஆனால், முடியின் ஆரோக்கியமும் நீளமும், அடர்த்தியும் பெரும்பாலும் பராமரிப்பில் தான் உள்ளது.

    உலகின் மிக உறுதியான தலைமுடி எங்களுடையது. எந்தவித சிகை அலங்காரத்துக்கும் எங்கள் தலைமுடி நெளிந்து வளைந்து ஒத்தாசை கொடுக்கும். மேலும், இழுப்புதிறன் அதிகம் உள்ளதால் வெகு சிக்கலான  முடிச்சுகள் – பின்னல்கள் என ஏகப்பட்ட தொந்தரவுகளையும் அது தாங்கி நிற்கும். அறுந்து போகாது – பிடுங்கிக்கொண்டு வராது. மேலும் எங்களது தலைமுடி எல்லா வண்ணங்களையும் அனாயாசமாய் ஏற்றுக்கொள்ளும். உலக மார்க்கெட்டில், தென்னிந்திய முடிக்கு உள்ள கிராக்கிக்கும் போட்டிக்கும் இதுதான் காரணம் என்றேன்.

    ஓ அப்படியா? பராமரிப்பில் தான் உங்கள் முடிவளத்தை நீங்கள் காத்துக் கொள்ளுகிறீர்கள் என்று சொல்லலாமா?

    ஆம்! எங்கள் முடி பராமரிப்பு முறைகள்  மிகவும் பழமையானவை என்பதோடல்லாது மிகவும் அறிவியல் பூர்வமானவை என்று தொடர்ந்தேன்.

    வாரம் இரண்டு நாள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கவேண்டும் என்பது கட்டாய நியதி, என்று நான் சொல்லிமுடிக்கும் போதே குறுக்கிட்டார்.

    ஏற்கனவே எண்ணெய்த்தலை – அதற்கு எண்ணைத் தேய்த்துக் குளிப்பதா? இது சுத்த முட்டாள்தனம் – இதைப் போய் அறிவியல் முறை என்கிறீர்களே – என்றார்.

    இதை நான் பின்னர் விளக்க இருந்தேன் – உங்கள் கேள்வி இதனை முதலிலேயே விளக்க வைக்கிறது – மிக்க நன்றி என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்.

    முதலில், மண்டையில் எண்ணெய்ப் பசை எதனால் வருகிறது என்று பார்ப்போம். செபம் (sebum) எனப்படும் ஒரு பிசின் போன்ற கொழுப்பினை, நம் மண்டையின் புறத்தோல் (scalp) ஓயாமல் சுரந்து கொண்டே இருக்கிறது. செபச் சுரப்பிகள் தலை முதல் கால் வரை உடலின் மேல்தோல் முழுவதும்  இருக்கின்றன. ஆனால் சுரக்கப்படுகின்ற செபம் உடல் உறுப்புக்கு ஏற்றார் போல் கொஞ்சம் வித்தியாசப் படுகிறது. மண்டையில், முகத்தில், கழுத்தில், கைகளில், கால்களில் சுரக்கும் செபத்தின் தன்மைகள் வெவ்வேறாய் இருக்கும். உறுப்பின் பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு அவ்வுறுப்பு இலக்காகும் காலம் – அதன் தீவிரம் ஆகியனவற்றைப் பொறுத்து செபம் மாறுபடுகிறது.

    பொதுவாக, செபம் இலேசான மஞ்சள் வண்ணத்தில் உள்ளதொரு பிசினாகும். மண்டையில் சுரக்கும் செபத்தில் என்னென்ன இருக்கின்றன என்று பார்த்தால்:

    • த்ரிக்ளிசரைட் – திடப்பொருள்
    • கொழுப்பு அமிலங்கள் – திடப்பொருள்
    • கொலச்டரால் எஸ்டர்கள் – கூழ்மப் பொருள்
    • கொலச்டரால் – திடப்பொருள்
    • மெழுகு – திடகாத்திரம் இல்லாத திடப்பொருள்
    • ஸ்குவாலீன் எனப்படும் ஒரு சிறப்பு எண்ணெய்

    செபத்தின் பிசின் தன்மைக்கு இந்தக் கலவையின் கூட்டுப் பண்பே காரணம். செபம் என்பது மண்டையையும் முடியின் வேர்க்கால்களையும் உயவுத் தன்மையோடு (lubrication) ஈரப்பதத்தில் வைத்துக் காப்பதற்காக சுரக்கப்படுவது.

    மண்டையின் உள்வெப்பச்சூடு, வெய்யில் மற்றும் வெளிக்காற்றின் தாக்கம் ஆகியனவற்றை எதிர்த்து மண்டையில் சுரக்கும் செபம் ஓயாமல் போராடுகிறது. அதன் விளைவாக, செபம், ஓயாமல் உலர்ந்து வறண்டு போய், கெட்டித்துப் பாளம் பாளமாய் மண்டையின் மீது படிக்கிறது. இவ்வாறு மண்டியில் அது உலர்ந்து படியும்போது, வேர்க்கால்களை இறுகிப்  பிடித்து அமுக்குகிறது. பழைய செபம் மேலே உறைந்து வேர்க்கால்களை அடைத்து நிற்பதால், புதிய செபம் வெளியே வர முடியாமல் உள்ளிருந்து விசையுடன் மயிர்க்காலை வெளித்தள்ளி, தான் வெளிவர எத்தனிக்கிறது. ஏற்கனவே தன்மீது செபம் உறைந்ததால் நெளியமுடியாது விறைத்து நிற்கிற மயிர்க்கால் உள்ளிருந்து வெளிப்புறம் ஒரு அழுத்தமும், வெளியிலிருந்து உட்புறம் ஒரு அழுத்தமும் என்கிறதான இருமுனை அழுத்தத்தை அடைவதால், வேர்க்கால் தளர்ந்து – கழன்று – முடி உதிர  ஆரம்பிக்கிறது.

    எனவே, உறைந்து போகும் செபத்தை வெளியேற்றுவது என்பது முக்கியமாகிறது.

    நம்மைப்போலவே விலங்குகள் பலவற்றுக்கும் செபம் சுரக்கிறது. எடுத்துக்காட்டாக, பறவைகளுக்கு நம்மைப்போலவே தாராளமாக செபம் சுரக்கிறது அவற்றின் இறகுகளின் வேர்க்கால்களில்.  பறவைகள், தம்  அலகால் தம்  இறகை அடியிலிருந்து வெளியீடாகக் கோதிக் கோதி, செபத்தை இளக்கி, இளகிய செபத்தை  தம் சிறகின் மீது தீற்றி தீற்றி இறகின் வேர்க்கால்களை பராமரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவ்வாறு கோதி விட்டவுடன் அவற்றின் இறகுகள் பளபளப்பு ஏறி மின்னுவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த மினுமினுப்பு, அவற்றின் மீது படும் சூரிய ஒளியை எதிரொளித்து விடுகின்றன. பறவைகள் வெட்ட வெளியில் சதா இருப்பினும் அவை பாதிப்பு இன்றி இருப்பதன் காரணம் செபம் தரும் பாதுகாப்பு தான்.

    பறவைகளைப் போலல்லாமல் மனிதனுடைய செபம் கொஞ்சம் பிரச்சனைக் குரியதான விடயமாகும்.

    தட்டையான மண்டை உச்சியும், பெருத்தத் தலையுமாக நிமிர்ந்து நிற்க்கக் கூடிய ஒரே விலங்கு மனிதன் எனபதும் அவனுடைய இயக்கங்கள் பிற விலங்குகளை விட வேகத்தில் குறைவு என்பதாலும் – அவனுக்கு வெப்பத்தில் வியர்க்கும் கூடுதல் தகவமைப்பு உள்ளது என்பதாலும் சிக்கல்கள் விளைகின்றன.

    அதனால்,  செபம் கெட்டியாவதும் வியர்வையுடன் சேர்ந்து, அது கசண்டாகி மண்டையில் படிந்து உலர்வதும் வெகு துரிதமாக நடந்துவிடுகிறது – கூடவே மனிதனுக்கு நாள்தோறும் நடக்கும் வளர்சிதை மாற்றத்தால் விலகும் இறந்த செல்களும் இக்கசண்டோடு சேர்ந்து இன்னமும் கெட்டிப் படுகின்றன.

    எனவே, உறைந்து போகும் செபத்தை நீக்கி, மண்டையையும் மயிர்க்கால்களையும் தொடர்ந்து சுத்தமாய் வைக்க வேண்டிய நித்திய கடப்பாடு மனிதனுக்கு உள்ளது. அன்றேல், அவனுக்கு மண்டையின் ஆரோக்கியமும் – முடியின் ஆரோக்கியமும் கெட்டுப்போகும்.

    இங்கு எண்ணெய்க் குளியல் எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம். செபத்தில் உள்ள கொழுப்புப் பொருட்கள் யாவும் பூரிதத் தன்மை (saturated) உள்ளவை – விரைவில் ஆவியாகி மண்டையை விட்டு வெளியேறி விடாமல் இருப்பதற்கான இயற்கை ஏற்பாடு இது.

    எனவே நாம் ஒரு சவால் நிறைந்த செபத்தை மண்டையில் சுரக்கிறோம்.  இங்கு தான் சில எண்ணெய்களின் ஆற்றல் பற்றிய அறிவு மிக முக்கியமாகிறது. திட மற்றும் கூழ்மக் கொழுப்புகளைக் கரைக்கும் ஆற்றல் சில எண்ணெய்களுக்கு உண்டு. அவற்றுள் ஒரு சில எண்ணெய்களுக்குள் மட்டுமே நம் தலையில் பயன்படுத்தக் கூடிய தகுதிகள் உண்டு அவை: நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், இந்த நான்கு எண்ணெய்களுக்குள் இரண்டு எண்ணெய்கள் கொஞ்சம் பழசானால் காரல் (rancidity) எடுப்பவை: ஆலிவ் எண்ணெய் மற்று தேங்காய் எண்ணெய்.

    விளக்கெண்ணெய், அதிக அடர்த்தி உடையது எனவே முழுதாய்த் தனியே தலைக்குப் பயன்படுத்தமுடியாது. ஆக, ஒரு எண்ணெய் மட்டுமே தலைக்கு வைக்க, மிகச்சிறந்த பயன்பாட்டுத் தகுதிகள் உடைத்ததாய்  இருக்கிறது; அந்த எண்ணெய் தான் நல்லெண்ணெய்; நல்ல எண்ணெய் என்பதால் இதற்கு நல்லெண்ணெய் என்று பெயர்.

    தலையில் பயன்படுத்தும் படியான கூடுதல் தனிச்சிறப்பும்  நல்லெண்ணெய்க்கு உண்டு. அது என்னவென்றால், தலையில் சுரக்கும் செபத்தில் இருக்கிற அதே முக்கியப் பொருட்களான த்ரிக்ளிசரைட் மற்றும் கொழுப்பு அமிலங்களை, நல்லெண்ணெய், திரவ நிலையில் வைத்திருக்கிறது – அதுவும் மிக அதிகமான அளவில். மேலும்,  நல்லெண்ணெயிலே, வைட்டமின் K  தாராளமாக இருக்கிறது. இதனால், கொழுப்புத் தன்மை உடைய செபத்தைக் கரைத்தெடுக்கும் ஆற்றல் கொண்ட – ஒரு நேசனாய், நல்லெண்ணெய் விளங்குகிறது.

    இருப்பினும் நல்லெண்ணெயை நாங்கள் தலைக்குளியலுக்கு அப்படியே பயன்படுத்துவதில்லை இஞ்சி, மிளகு, கைக்குத்தல் அரிசி சேர்த்துக் காய்ச்சி, அந்த எண்ணெயை, இளஞ்சூட்டில் தலையில் அழுத்திப் பரபரவெனத் தேய்த்து – எண்ணெய் மயிர்க்கால்களில் இறங்குமுகமாக, ஒரு வாத்தியத்தைத் தட்டுவது போல் லயத்தோடு தட்டி – ஒருமணிநேரம் ஊறிய பின்பு – கவனமாகத் தயாரிகப்பட்ட சிகைகாய்ப் பொடிபோட்டுக் குளித்து எழுவது வழக்கம்.

    இவ்வாறான எண்ணெய்க் குளியலின் போது, தலைக்கு எண்ணெய் வைத்தபின் உடல் முழுவதும் இடு பொருட்கள சேர்க்காத தனி நல்லெண்ணெய், தடவி, உடல் தோல் – தசையை நன்கு உருவிவிடுவார்கள்.

    இவ்வாறாக, தலையும் – உடலும் ஏகமாக ஒரு மணி நேரம் எண்ணையில் ஊறிக் குளிப்பதுதான்  எண்ணெய்க் குளியல்.

    வாரம்  இருமுறை எனும்போது – ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனிதனி நாட்கள், பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளி. ஆண்களுக்கு புதன் மற்றும் சனி.

    இது என்ன புதுப் புதிராய் இருகிறதே – ஆணையும் பெண்ணையும் குளியலில் கூட வேறு வேறாய்ப் பார்க்கிறீர்களே – ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித் தனி நாட்களா – உண்மையாகவா சொல்லுகிறீர்கள்? என்றார்.

    ஆமாம், ஆணின் உடல் – பெண்ணின் உடல் ஆகியன உட்ற்கூற்றிலும் – வளர்சிதை மாற்ற  வேகத்திலும், உடலின் வெப்ப உற்பத்தியிலும் வேறுபட்டவை என்பதால் அவர்கள் இருவருக்கும் பொருத்தமான கோள் அமைப்பு கொண்ட நாட்கள் தெரிவு செய்யப்பட்டன என்றேன்.

    வெகு சுவாரசியமாய் இருக்கிறது – தலைமுடி விஷயத்தில், நான் உங்களிடம் நிறைய கேட்க வேண்டியதிருக்கிறது என்றார்.

    தொடர்ந்து பேசுவோமே என்றேன்.

                                                     (மேலும் பேசுவோம்)

    Share
  • யாருடைய வரையறை?

    யாருடைய வரையறை?

    சு. திரிவேணி,
    கோயம்புத்தூர்

    ஒரு மாதமாகக்
    களைகட்டிவிட்டது துறை.
    கல்லூரியின் வேலைநாள் முதல்
    விருந்தினர் வரை
    வேலைகள் வரையறுத்து
    வரம்புகள் தீர்மானித்துப்
    போகிறது விழாவின் பயணம்.
    பயணம் நிறைவடைகையில்
    ஆரவாரம் ஆரம்பமாகிறது.
    விழாக்கோலமே மகிழ்வைத் தருகிறது.
    பரபரப்பும் பரவசமும்
    பார்ப்பவர் முகத்திலும்
    புன்னகையை வரவழைக்கிறது.
    எல்லாம் சரிதான்…
    அணிகலன்களும் மலர்மாலைகளுமாய்
    அலங்கரித்துக் கொண்டு மாணவிகளும்
    ஆளுமை உணர்வு ததும்பும் ஆடைகளில்
    புனைவுகளின்றி மாணவர்களும்
    வரவேண்டுமெனக் கண்டறிந்து
    வரையறுத்தவர் யார்
    என்பதுதான் அறியப்படவில்லை!

    Share
  • தமிழகம் போற்றவேண்டிய பெருந்தகை! 

    தமிழகம் போற்றவேண்டிய பெருந்தகை! 

    -மேகலா இராமமூர்த்தி

    கொங்குமண்டலத்தின் கிழக்கு எல்லையாக அமைந்துள்ள சேலம் மாநகரம் மாங்கனிக்கு மட்டும் பெயர்பெற்றதன்று; மூதறிஞர் இராஜகோபாலாசாரியார், சீர்திருத்தவாதி விஜயராகவாசாரியார், விடுதலைப் போராட்ட வீரர் வரதராஜுலு நாயுடு போன்ற உயர்ந்த தலைவர்களைத் தந்த வகையிலும் பெயர்பெற்றது. ஆனால் இவர்களெல்லாம் இந்திய அரசியல் வானில் ஒளிவீசுவதற்கு முன்பே செந்தமிழ் நாட்டின் புகழ், இந்திய அரசியலில் ஒளிர்வதற்கும், நம் பழந்தமிழ் நூல்கள் புத்துயிர் பெற்று மிளிர்வதற்கும் மூலகாரணமாய்த் திகழ்ந்தவர் சேலம் தந்த செம்மலான இராமசாமி முதலியார் ஆவார்.

    செப்டம்பர் 6, 1852-இல் சேலத்தில் பிறந்தவர் இவர். இவருடைய தந்தையாரான கோபாலசாமி முதலியார் சேலத்தில் செல்வாக்கு மிக்க நிலக்கிழாராக விளங்கியவர்; அத்தோடு தாசில்தாராய்ப் பணியாற்றிப் புகழ் ஈட்டியவர்.

    இவ்வாறு கல்வியும் செல்வமும் கொலுவீற்றிருக்கும் குடியில் தோன்றிய இராமசாமியார்,  தம் ஆறாம் அகவையிலேயே கல்வியின் பொருட்டுச் சென்னை மாநகர்க்கு அனுப்பப்பட்டார். சென்னையில் கதிர்வேலு உவாத்தியாயர் என்பவரிடம் ஆரம்பக் கல்வி பயின்ற இராமசாமி முதலியார், பின்பு சென்னை உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். மெட்ரிகுலேசன் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சிபெற்று மாநில அரசின் உதவித்தொகையைப் பெற்றார்.

    1871-ஆம் ஆண்டு இளங்கலைப் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேர்ச்சி பெற்றார். பின்னர் வரலாற்றையும் தத்துவத்தையும் முதன்மைப் பாடங்களாகத் தெரிவுசெய்து தம் மேற்படிப்பைத் தொடர்ந்த அவர், 1873-இல் முதுகலைப் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1875-இல் சட்டத்தில் இளங்கலை பயின்று அதிலும் மாநிலத்தின் முதல் மாணாக்கராய்த் தேர்ந்தார். 1876-இல் தம்மை வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்டு சேலத்தில் தொழில்புரியத் தொடங்கினார். வழக்கறிஞர் பணியில் மிகத் திறமையானவராக விளங்கியபோதும், நீதியை நிலைநாட்டும் நீதியரசராகப் பணியாற்றவேண்டும் எனும் அவா அவருக்கு இருந்ததை அறிந்த சேலம் மாவட்ட நீதிபதி, அதற்கான தகுதியும் திறமையும் நல்லொழுக்கமும் உடையவர் இராமசாமி முதலியார் என அரசாங்கத்துக்குப் பரிந்துரைக் கடிதம் எழுதினார். அதன்பயனாய்த் திருச்சி மாவட்ட முன்சீபாய் (munsif) 1877-இல் நியமனம் பெற்றார் இராமசாமி முதலியார்.

    நெடுநுகத்துப் பகலாணிபோல நடுநிலை வழுவாது நல்ல தீர்ப்புகளை வழங்கிப் புகழ்பெற்றார். நீதியரசர் பதவியை அவர் விரும்பியே ஏற்றிருந்த போதிலும் மக்கள் தொண்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனும் ஆவல் அவரிடம் அதிகமாய் இருந்ததால் அரசாங்க அலுவல் அவருக்குச் சரிப்பட்டு வரவில்லை. எனவே 1882-இல் நீதிபதிப் பதவியை விட்டு விலகினார். சென்னைக்குச் சென்று தனிப்பட்ட முறையில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார். அப்போது வெளிப்பட்ட அவருடைய அறிவின் ஆற்றலும் ஒழுக்கச் சிறப்பும் அனைத்து அறிஞர்களாலும் பாராட்டப்பெற்றன. நீதித் தொழிலை பொருளீட்ட மட்டுமே உதவும் நிதித் தொழிலாக அவர் மேற்கொள்ளவில்லை. மனித குலத்தை மேம்படுத்தவும் சீர்திருத்தவும் கிடைத்த நல்வாய்ப்பாகவே அதனை எண்ணினார்.

    லா ஜர்னல் (law journal) என்ற பத்திரிகையை ஆரம்பித்து 1891 வரை அதன் தலைமை ஆசிரியராகத் திகழ்ந்தார். அந்நாளில் பச்சையப்பர் அறநிலையத்திலும் (Pachaiyappa’s Trust Board) சென்னைப் பல்கலைக்கழத்திலும் உறுப்பினராய் விளங்கி இராமசாமியார் ஆற்றிய தொண்டுகள் கல்வித்துறையாளர் போற்றுதற்குரியன.

    சட்டத்தைத் தொழிலாகக் கொண்டிருந்தபோதிலும், தமிழ்மீதும் தமிழிலக்கியத்தின்மீதும் இராமசாமி முதலியார் கொண்டிருந்த காதல் மட்டற்றது. அதனைப் பழந்தமிழ் நூல்கள் பலவற்றைத் தேடிப் பதிப்பித்தவரும் தமிழ்த்தாத்தா என்று நம்மால் கொண்டாடப்படுபவருமான  உ.வே.சா.வின் மொழிகளிலேயே அறிந்துகொள்வது பொருத்தமாய் இருக்கும்.

    உ.வே.சா. அவர்கள் தாம் எழுதிய தன்வரலாற்று நூலான (autobiography) ”என் சரித்திரம்” என்ற நூலில் சேலம் இராமசாமி முதலியாரைப் பற்றி குறிப்பிட்டிருக்கும் செய்திகளாவன:

    ”கும்பகோணம் கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டும் ஓய்வுநேரங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டும் நான் இருந்தவேளையில் அரியலூரிலிருந்து இராமசாமி முதலியார் என்பவர் கும்பகோணத்துக்கு முன்சீப்பாக வந்துசேர்ந்தார். அவருடைய நட்பினால் தமிழிலக்கியத்தின் விரிவை நான் அறியமுடிந்தது. தண்டமிழ் நூல்களில் பொதிந்துகிடந்த இன்தமிழ் இன்பத்தை நான் மாந்தி மகிழ்ந்ததோடு, பிறரும் அறிந்து இன்புறச் செய்யும் நற்பேறு எனக்கு வாய்த்தது.

    கும்பகோணத்துக்குப் பெரிய அறிஞர்கள் உயர்பதவிகளில் இருப்போர் யாரேனும் புதிதாக வந்தால் திருவாவடுதுறை மடத்தின் சார்பாக அவர்களைச் சென்றுபார்த்து குருபூஜை முதலிய விசேட நாட்களுக்கு மடத்துக்கு வரவேண்டும் என்று அழைப்பது வழக்கம். அவ்வாறு திருவாவடுதுறை மடத்தைச் சேர்ந்தவர்கள் ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகரின் விருப்பப்படி இராமசாமி முதலியாரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

    இராமசாமி முதலியார் திருவாவடுதுறை மடத்தின் பழம்பெருமை உணர்ந்தவராதலின், மடத்து நிர்வாகத்தைப் பற்றி விசாரித்ததோடு நில்லாமல் மடத்தில் தமிழ்க் கல்வி எப்படி இருக்கிறது யார் யார் வித்வான்களாக இருக்கிறார்கள் என்றும் விசாரித்திருக்கின்றார்.

    அப்போது மடத்துச் செயலாளரான சிவசுப்பிரமணியப் பிள்ளை, மடத்திலே படித்த மாணாக்கருள் ஒருவராகிய சாமிநாதையர் என்பவரே கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராய்ப் பணியாற்றுகிறார் என்று  சொல்லியிருக்கிறார். மடத்தைச் சார்ந்த வித்வான்களைப் பற்றியெல்லாம் இராமசாமி முதலியார் ஆர்வத்தோடு விசாரித்ததை அறிந்த சுப்பிரமணிய தேசிகர், ”நீங்கள் ஒருமுறை இராமசாமி முதலியாரை நேரில் சென்று பார்த்துப் பேசிவிடுங்கள்!” என்று அவரைக் காணச்சென்றபோது என்னிடம் கூறினார்.

    தேசிகரின் விருப்பப்படி இராமசாமி முதலியாரைச் சென்று சந்தித்தேன். ”நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்?” என்று என்னைக் கேட்டார் முதலியார். ”மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டேன்” என்றேன் நான். மகாவித்வான் பேரைக் கேட்டவுடன் அவர் முகத்தில் மலர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்த்திருந்த எனக்கு, அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படாதது ஏமாற்றத்தையே தந்தது.

    முதலியாரோ கேள்வி கேட்பதையும் நிறுத்தவில்லை. ”என்னென்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்?” என்று அடுத்த கேள்விக்கணையை எனைநோக்கி வீசினார். நான் கற்ற அந்தாதிகள், கலம்பகங்கள், கோவை நூல்கள், உலாக்கள் என்று அனைத்தையும் அடுக்கினேன்.

    ”இதெல்லாம் படித்து என்ன பிரயோஜனம்?” என்று அவர்  கேட்கவே நான் மிகவும் வருத்தமுற்று, இவர் இங்கிலீசு படித்து அதில் மோகங்கொண்டவராய் இருக்கலாம்; அதனால்தான் இப்படிச் சொல்கிறார் என்று எண்ணிக்கொண்டேன்.

    அவரைத் திருப்திப்படுத்தும் நோக்கில், ”கம்பராமாயணம் முழுவதும் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். பிள்ளையவர்களிடமும் சில காண்டங்கள் பாடம் கேட்டிருக்கிறேன்” என்றேன்.

    ”இந்தப் பிற்காலத்து நூல்களெல்லாம் படித்தது சரிதான். பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா?” என்று அவர் தொடர்ந்து கேட்கவும், கம்பராமாயணம் பழைய நூல்தானே இவர் வேறு எதைக் கேட்கிறார் என்று சிந்தித்து, ”நான் சொன்னவற்றிலேயே பல பழைய நூல்கள் இருக்கின்றனவே” என்று மறுமொழி கூறினேன்.

    ”அவைகளுக்கெல்லாம் மூலமான நூல்களைப் படித்திருக்கிறீர்களா?” என்று அவர் வினவியபோதுதான் ”இவரிடம் ஏதோ சரக்கு இருக்கின்றது” என்று நான் புரிந்துகொண்டு, ”நீங்கள் எந்த நூல்களைச் சொல்லுகிறீர்கள்?” என்று தெரியவில்லையே என்றேன்.

    ”சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை, சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?” என்று அவர் கேட்கவே நான் திகைத்துப் போனேன். அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை; ஏன்… என் ஆசிரியர் மகாவித்வானே அவற்றையெல்லாம்  படித்ததில்லை. எனவே அவரிடம்,  

    “புத்தகம் கிடைக்கவில்லை; கிடைத்தால் அவற்றையும் என்னால் படித்துவிட முடியும்” என்று கம்பீரமாகச் சொன்னேன்.

    அப்போதுதான் இராமசாமி முதலியாரின் முகத்தில் மகிழ்ச்சியின் அறிகுறி தென்பட்டது. ”நான் புத்தகம் தருகிறேன்; தந்தால் படித்து எனக்குப் பாடம் சொல்வீர்களா?” என்று கேட்டார்.

    ”நிச்சயமாக” என்றேன் நான்.

    “அடுத்த வாரம் வாருங்கள். நான் சிந்தாமணியை எடுத்துவைக்கிறேன்” என்றார். அவ்வாறே நான் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவர் வீட்டுக்குச் சென்றேன்.

    அவர் தம்மிடம் இருந்த சிந்தமாணிக் கடிதப் பிரதியை என்னிடம் கொடுத்தார்.

    பிறகு அந்தப் பிரதி தமக்குக் கிடைத்த வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்…

    “எனக்குச் சிந்தாமணி முதலிய பழைய நூல்களைப் படிக்கவேண்டும் என்று ஆசை; எனினும் அவற்றின் ஏட்டுச் சுவடியைப் பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை. திருநெல்வேலி பக்கத்திலுள்ள கவிராயர்கள் வீட்டில் அவை கிடைக்கலாம் என எண்ணி என்னுடைய நண்பரும் ஸ்ரீவைகுண்டத்தில் முன்சீபாக இருந்தவருமான ஏ. இராமச்சந்திர ஐயரிடம்  இதுகுறித்துச் சொல்லியிருந்தேன்.

    ஒருசமயம் ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகிலுள்ள ஊரைச் சேர்ந்த கவிராயர் குடும்பத்தவரான ஒருவர் வழக்கு ஒன்றிற்கு என் நண்பர் இராமச்சந்திர ஐயரிடம் சாட்சியாக வந்தார். அவரை என் நண்பர் விசாரித்தபோது, அவருடைய பரம்பரையைச் சேர்ந்த கவிராயர்கள் பல நூல்கள் இயற்றியிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. வழக்கு முடிந்ததும் என் நண்பர் அவரைத் தனியே அழைத்துச் சென்று அவர் வீட்டில் பழைய ஏட்டுச்சுவடிகள் இருக்கின்றனவா என்று விசாரித்தபோது அவர் இருக்கின்றன என்று மறுமொழி சொல்லவே, சிந்தாமணிப் பிரதி இருந்தால் தேடி எடுத்துவந்து கொடுக்கவும் என்று சொல்லியிருக்கின்றார் என் நண்பர். அதிகாரமுள்ள பதவியில் இருந்ததனால் என் நண்பரின் முயற்சி பலித்தது. அந்தக் கவிராயர் சீவக சிந்தாமணி பிரதியைக் கொண்டுவந்து கொடுத்தார். அதிலிருந்து காகிதத்தில் பிரதி எடுத்த புத்தகம் இது” என்று சொல்லிப் புத்தகத்தை என்னிடம் கொடுத்த இராமசாமி முதலியார்,

    ”இந்தப் புத்தகம் மிகச்சிறந்த புத்தகம்; கம்பராமாயணத்தின் காப்பிய அமைப்புக்கெல்லாம் இந்தக் காப்பியமே வழிகாட்டி. இதைப் படித்துப் பொருள் செய்து கொண்டு எனக்குப் பாடம் சொல்வீர்களானால் நம் இருவருக்குமே இன்பம் உண்டாகும்” என்றார். அதைக் கேட்ட நான், ”இதைப் படித்துப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று உற்சாகமாகக் கூறிவிட்டு இராமசாமி முதலியாரிடமிருந்து விடைபெற்றேன்.

    நச்சினார்க்கினியர் உரையுடன் கூடிய சிந்தாமணிப் பிரதியை படித்துச்  சிறிது நாளில் இராமசாமி முதலியாருக்குப் பாடம் சொல்லத் தொடங்கினேன். படிக்கப் படிக்கச் சீவக சிந்தாமணி மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. அநபாயச் சோழரைக் கவர்ந்த காப்பியமாகச் சிந்தாமணி இருந்ததில் வியப்பில்லை என்று எண்ணிக் கொண்டேன்.

    இதற்கிடையில் முதலியார், தம் முன்சீப் வேலையை விட்டுவிட்டுச் சென்னைக்குச் சென்று வழக்கறிஞராக இருக்கலாமெனக் கிளம்பினார். அப்போது என்னிடம், ”சிந்தாமணியின் அருமையை இப்போது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். இந்த அருமையான காப்பியம் படிப்பாரற்றுப் போகாமல் இதனைப் பாதுகாக்க வேண்டும். அச்சிட்டு இதனை வெளிப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    சென்னைக்குப் போகுமுன் சிலப்பதிகாரப் பிரதியை என்னிடம் கொடுத்துச் சென்றார். சென்னைக்குச் சென்ற பிறகு நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க தம்மிடம் இருந்த மணிமேகலைப் பிரதியையும் அனுப்பினார்.

    கடுமையாக உழைத்துச் சிந்தாமணியை அச்சிட்டு முடித்து பைண்டு செய்யப்பட்ட அதன் பிரதியை எடுத்துக்கொண்டு முதலியாரிடம் சென்றேன். அவரிடம் புத்தகத்தைக் காட்டியபோது அவரடைந்த இன்பம் இவ்வளவென்று சொல்லமுடியாது.

    ”அரிய பெரிய செயலை மேற்கொண்டு நிறைவேற்றிவிட்டீர்கள். இனி, சிலப்பதிகாரம் முதலியவற்றையும் இவ்வாறே அச்சிட்டுப் பூர்த்திசெய்யவேண்டும்” என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.”

    என உணர்ச்சியும் உயிரோட்டமுமாக இராமசாமி முதலியாரைப் பற்றி ’என் சரித்திரம்’ நூலில் உவேசா அவர்கள் பதிவு செய்திருக்கும் இந்தச் செய்திகள் இராமசாமி முதலியாரின் அளவிடற்கரிய தமிழ்ப்பற்றையும் அவருடைய பெருந்தகைமையையும் உணர்த்தி நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

    இலக்கியத்துறைக்கு அரும்பணிகள் ஆற்றிய இராமசாமி முதலியார் அரசியல் துறையிலும் சாதனைகள் பல நிகழ்த்தியவர். முதன்முதலாக அவர் அரசியல் உலகில் அடியெடுத்து வைத்தது 1882-ஆம் ஆண்டில். அந்த ஆண்டில் சென்னை நிர்வாக சபையிலிருந்து ஓய்வுபெற்ற வெள்ளையரான D F கார்மைக்கல் (D.F. Carmichael) என்பவருக்கு நம் மக்கள்  நினைவுச்சின்னம் எழுப்ப முயன்றபோது, ”நம் நாட்டை அடிமைப்படுத்தி ஆளவந்த வெள்ளையருக்கு  நினைவுச்சின்னமா?” என்று அதைப் பலமாக எதிர்த்துக் கிளர்ச்சி செய்தவர் இராமசாமி முதலியார்.

    இராமசாமியாரின் அரசியல் வாழ்வில் மணிமுடியாகத் திகழ்ந்தது அவருடைய இங்கிலாந்துப் பயணம். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தங்கள் விடுதலை வேட்கையை இங்கிலாந்து மக்களிடம் எடுத்துச் சொல்ல விரும்பிய இந்திய தேசியவாதிகள், அதற்குத் தேசபக்தியும் நாவன்மையும் மிக்க மூன்று பேரை இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுத்தனர். அவர்களுள் ஒருவரே சென்னையின் பிரதிநிதியாகச் சென்ற இராமசாமி முதலியார். இந்தியாவின் தணியாத விடுதலை வேட்கையை இங்கிலாந்து சென்று அங்குள்ள மக்களுக்கு எடுத்துரைத்த முதல் தமிழர் இராமசாமி முதலியாரே என்பதைத் தமிழர்களாகிய நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

    முதலியாரின் எழுச்சிமிகு ஆங்கில உரைகளும், அவருடைய கம்பீரத் தோற்றமும் இங்கிலாந்து மக்களைப் பெரிதும் கவர்ந்தன. தம் இங்கிலாந்துப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தமிழகத்தின் தலைநகருக்கு அவர் திரும்பியபோது சென்னைக் கடற்கரையில் மக்கள் அலைகடலெனத் திரண்டுவந்து அவரை வரவேற்று வாழ்த்தினர்.

    தேசிய உணர்ச்சி மிக்கவரான இராமசாமி முதலியார், காங்கிரஸ் மகாசபையைத் தொடக்க காலத்தில் பேணிவளர்த்த பெருமக்களுள் ஒருவர் என்பது நம்மில் பலரும் அறியாதது.  சென்னை நகர நிர்வாகக் குழுவில் உறுப்பினராய் இருந்து அவராற்றிய அரும்பணிகள் அளவிடற்கரியன.

    அளப்பரிய தமிழ்ப்பற்றும் தாய்நாட்டுப்பற்றும் கொண்டவராய்த் திகழ்ந்து தமிழுலகிற்கும் இந்தியத் திருநாட்டுக்கும் கைம்மாறு செய்யவியலாத் தொண்டுகள் புரிந்த இராமசாமி முதலியாரைத் தமிழ்மக்கள் விரும்பியதுபோலவே காலனும் விரும்பினான் போலிருக்கின்றது. அதனால்தான் அந்தச் செந்தமிழரை அவருடைய நாற்பதாம் அகவையிலேயே தன்னிடம் அழைத்துக்கொண்டு விட்டான்.

    முதலியாரின் அகால மரணமறிந்து துடிதுடித்துப் போனோர் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் உ.வே.சா. தம்முடைய தாளமுடியாத் துக்கத்தை – துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் சில இரங்கற் பாக்களை எழுதியிருக்கின்றார் அவர். அவற்றில் ஒன்று:

    ”ஊர்க்குழைப்பான் போனானென்று  உலைவாரும் போனான்இப்
    பார்க்குழைப்பான் என்று பதைப்பாரும் தமிழெனும்முந்
    நீர்க்குழைப்பான் என்றுருகி நிற்பாருமாய்க் கலங்க
    ஆர்க்குழைப்பான் சென்றாய் அளியுடைய அண்ணலே!”

    வாழ்ந்த காலம் சிலவாயினும் அதற்குள் செயற்கரிய செயல்கள் பலவற்றைச் செய்துமுடித்த சாதனையாளர் தமிழ்ப் பெரியாரான சேலம் இராமசாமி முதலியார்.

    தமிழுக்குப் பெரிதாக எதனையும் செய்யாத அரசியல் தலைவர்களுக்கெல்லாம் தெருவுக்குத் தெரு சிலைவைத்துத் தலைவணங்கும் நாம், பழந்தமிழைத் தமிழ்த் தாத்தாவுக்கே அறிமுகம் செய்துவைத்து, அந்நூல்களை அழிந்துபடாமல் காத்த அருந்தமிழரான சேலம் இராமசாமி முதலியாரை முற்றாக மறந்துபோனது வேதனைக்குரியது. இனியேனும் அவருடைய அருமையை உணர்ந்து நாம் போற்றவேண்டும்! உண்மையான அந்தத் தமிழ்த் தொண்டருக்கு நினைவுமண்டபம் எழுப்பிக் கொண்டாட வேண்டும்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. இருபெருந்தலைவர் – ந. சஞ்சீவி எம்.ஏ., பாரி நிலையம், 59 பிராட்வே, சென்னை 1.
    2. என் சரித்திரம் – மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
    3. https://en.wikipedia.org/wiki/Salem_Ramaswami_Mudaliar

    Share
  • அம்பா அம்பா

    அம்பா அம்பா

    அண்ணாகண்ணன்

    இந்தப் பாடலை ஆசிரியர் அண்ணாகண்ணன் குரலில்  இங்கே கேட்கலாம்

     

    அம்பா அம்பா கமலாம்பா
    அம்பா அம்பா லலிதாம்பா
    அம்பா அம்பா ஜகதாம்பா
    அம்பா அம்பா வடிவாம்பா  

    அம்பா அம்பா ஞானாம்பா 
    அம்பா அம்பா யோகாம்பா
    அம்பா அம்பா வேதாம்பா    
    அம்பா அம்பா லோகாம்பா

    அம்பா அம்பா மதுராம்பா
    அம்பா அம்பா கருணாம்பா  
    அம்பா அம்பா கனகாம்பா  
    அம்பா அம்பா அபயாம்பா    

    அம்பா அம்பா நீலாம்பா
    அம்பா அம்பா லீலாம்பா
    அம்பா அம்பா பாலாம்பா
    அம்பா அம்பா வாலாம்பா

    அம்பா அம்பா மீனாம்பா
    அம்பா அம்பா தேனாம்பா
    அம்பா அம்பா ரத்னாம்பா
    அம்பா அம்பா பத்மாம்பா

    அம்பா அம்பா காளிகாம்பா
    அம்பா அம்பா ரேணுகாம்பா  
    அம்பா அம்பா கற்பகாம்பா  
    அம்பா அம்பா மங்களாம்பா

    அம்பா அம்பா மூகாம்பா      
    அம்பா அம்பா நாகாம்பா
    அம்பா அம்பா ஜ்வாலாம்பா 
    அம்பா அம்பா பூர்ணாம்பா 

    அம்பா அம்பா கண்ணாம்பா 
    அம்பா அம்பா சுந்தராம்பா   
    அம்பா அம்பா மோகனாம்பா 
    அம்பா அம்பா தர்மாம்பா 

    அம்பா அம்பா சௌடாம்பா  
    அம்பா அம்பா சைலாம்பா
    அம்பா அம்பா பிருஹதாம்பா
    அம்பா அம்பா பிரம்மாம்பா  

    அம்பா அம்பா விருதாம்பா  
    அம்பா அம்பா திலகாம்பா
    அம்பா அம்பா உமையாம்பா
    அம்பா அம்பா குசலாம்பா

    அம்பா அம்பா சாரதாம்பா
    அம்பா அம்பா கோகிலாம்பா
    அம்பா அம்பா புஷ்கலாம்பா
    அம்பா அம்பா மரகதாம்பா   

    அம்பா அம்பா கிருஷ்ணாம்பா   
    அம்பா அம்பா ருத்ராம்பா
    அம்பா அம்பா சித்ராம்பா
    அம்பா அம்பா முக்தாம்பா  

    அம்பா அம்பா புஷ்பாம்பா
    அம்பா அம்பா வேலாம்பா    
    அம்பா அம்பா அழகாம்பா
    அம்பா அம்பா அகிலாம்பா

    ———————————————————————————————-

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இல்லாமையின் கொடிய முகம்

    இல்லாமையின் கொடிய முகம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கொரொனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்துப்போயிருக்கிறது. எல்லா நாடுகளிலுமிருந்து கொரொனா ஏற்படுத்தும் அபாயங்கள் தினமும் வந்துகொண்டிருக்கின்றன. உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவில் நாங்கள் இப்போது இருக்கிறோம். இப்போது மற்ற எல்லா நாடுகளையும்விட அமெரிக்காவில்தான் அதிகப் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; அதிகப் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இதற்கு ட்ரம்ப் சரியாக முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்பதுதான் காரணம் என்று பலர் சொல்கிறார்கள். முதலில் அமெரிக்காவுக்கு எந்த ஆபத்தும் இல்லை, பதட்டப்படாமல் இருங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது தான் முதலிலேயே ஆபத்து வருகிறது என்று சொன்னதாகக் கதையையே மாற்றுகிறார். இவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். இப்போதும் அவரை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லையாம்; சொல்லப் போனால் கூடிக்கொண்டு போகிறது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.  யாரைக் குறைகூறுவது என்று தெரியவில்லை. ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம்வரை இறப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்தச் செய்திகளால் ஏற்படும் அச்சம் ஒரு புறம் இருக்க எல்லா நாடுகளிலும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைக்கும்போது நெஞ்சமெல்லாம் வேதனை நிறைகிறது.  நான் வளர்ந்து வரும்போது மாறியிருந்த என் தந்தையின் பொருளாதார நிலை நான் பிறக்கும்போது இல்லையென்றாலும் எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் உணவுப் பற்றாக்குறை ஒருபோதும் இருந்ததில்லை. நான் சிறுபிள்ளையாக இருக்கும்போதே வீட்டில் எப்போதும் வேண்டிய அளவு அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் என்று எப்போது எதை வேண்டுமானாலும் சமைப்பதற்கு வசதிகள் இருந்தன.  எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். யாருக்கு எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சமைத்துக்கொள்ள வசதி இருந்தது.

    எங்கள் வீட்டின் முகப்பில் இருந்த கடையில் ஒருவர் பலசரக்குக் கடை வைத்திருந்தார்.  பலசரக்குக் கடை என்றால் மிகவும் சிறிய கடை. மாதம் முழுவதும் நூறு ரூபாய்க்குச் சாமான்கள் விற்றால் அதிகம் என்று சொல்லலாம்.  அப்போது விலைவாசியும் இப்படி இல்லை.  பல ஏழைக் குடும்பங்கள் பத்து ரூபாய் சம்பளத்தில் மாதம் முழுவதையும் ஓட்டிவிடுவார்கள் என்று சொல்லலாம்.  அப்போது எங்கள் வீட்டில் ஒவ்வொரு முறையும் ஒரு படி எண்ணெய் வாங்குவோம்.  (அப்போது திரவங்களை கால்படி, அரைப்படி என்றும் திடப்பொருள்களை வீசைக் கணக்கிலும் அளப்போம்.  கிலோ, லிட்டர் எல்லாம் பின்னால் வந்தவை.) ஏழை மக்களோ தினமும் அன்றைய சமையலுக்கு வேண்டிய அளவுதான் எண்ணெய் வாங்குவார்கள். சிறு பாட்டில்களில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் வாங்கிச் செல்வார்கள். தாளிக்க உபயோகிக்கும் கடுகு உளுந்தம்பருப்பைக்கூட அன்றன்றுதான் வாங்குவார்கள்.  இவர்கள் எல்லாம் அன்றாடம் சம்பளம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.  சம்பாத்தியம் பண்ணுபவருக்கு உடல்நலமில்லையென்றால் அன்று வீட்டில் சமைப்பது மிகவும் கஷ்டம்.  கையில் பணமே இருக்காது.  சேமிப்பு என்ற ஒன்றும் இருக்காது.

    இப்போது கொரொனா வைரஸால் எங்களால் எங்கும் போக முடியவில்லை. நினைத்த நேரம் நினைத்த சாமான்களை வாங்க முடியவில்லை. இல்லினாய் மாநிலமும் சிகாகோ நகரமும் ‘எங்கும் வெளியில் போகாதீர்கள்’ என்று அறிவுரை கூறியிருந்தாலும் நாங்கள் போனால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். இந்தியாவில்போல் காவலர்கள் வீதி முழுவதும் நின்றுகொண்டு மக்களைக் கண்காணிப்பதில்லை. இப்படி நாங்களாகப் போட்டுக்கொண்ட வரைமுறைகள் என்றாலும் எங்களுக்கு நிறையச் சிரமங்கள் ஏற்படுகின்றன. எப்போதாவது கடைக்குப் போய் இரண்டு, மூன்று வாரங்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வந்துவிடுகிறோம். அப்படியும் ஏதாவது ஒரு சாமான் இல்லையென்றால் ஏதோ கை ஒடிந்ததுபோல் இருக்கிறது. தக்காளிப் பழங்கள் இவ்வளவுதானே இருக்கின்றன, இன்னும் பத்து நாட்களுக்கு வருமா என்ற கவலை வந்துவிடுகிறது. காலிபிளவர் சாப்பிட வேண்டும்போல் இருக்கிறதே, இன்னும் பல நாட்கள் காத்திருக்க வேண்டுமே என்ற ஏக்கம் வந்துவிடுகிறது. இத்தனைக்கும் வீட்டில் உள்ள சாமான்களை வைத்துக்கொண்டே எவ்வளவோ சமைக்கலாம்; அந்தத் தருணத்தில் மனம் விரும்புவதை சமைக்க முடியவில்லை என்பதைத் தவிர நாங்கள் இப்போது பட்டினியால் வாடவில்லை.  நினைத்த இடங்களுக்குப் போக முடியவில்லையென்றாலும் பொழுதைக் கழிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. வேண்டிய அளவு படிப்பதற்கு நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன; புத்தகங்களை ரசித்துப் படிப்பதற்கு ஆர்வமும் இருக்கிறது; அதற்குமேல் தொலைக்காட்சி இருக்கவே இருக்கிறது.  எத்தனை நிகழ்ச்சிகள் வேண்டுமானாலும் பார்க்கலாம்.  இந்தியாவில் ஏழை மக்களுக்கு இந்த மாதிரி எந்த வசதிகளும் இல்லை. இப்போது பெரும்பாலானவர்கள் வீடுகளில் – குடிசை வாழ் மக்கள் வீடுகளில் கூட – தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது என்றாலும் பல புத்தகங்களைப் படித்துப் பயன்பெறும் பக்குவம் அவர்களுக்கு இல்லை.

    அமெரிக்காவில் வியட்நாம் போரில் பணிபுரிந்த ஒருவனை அவனுடைய பெற்றோர் விமானநிலையத்திலிருந்து கூட்டிவருகிறார்கள். அவர்கள் வீடு வந்து சேர்ந்ததும் தாய், ‘வீட்டில் சாப்பிடுவதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை’ என்கிறார்.  உடனே பையனுக்கு அப்படி ஒரு கோபம் வருகிறது. சமையலறையிலுள்ள அத்தனை அலமாரிகளையும் திறந்து அதிலுள்ள எல்லாப் பொருள்களையும் வெளியில் வீசி எறிந்து, ‘இத்தனை சாமான்கள் இருக்கும்போது சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை என்கிறீர்களே’ என்று கோபத்தோடு கூறுகிறான். அமெரிக்கா வியட்நாமில் சண்டை புரிந்தபோது மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.  நெல் விளையும் நிலங்களையெல்லாம் அமெரிக்கா ‘ஆரஞ்ச் ஏஜென்ட்’ என்னும் ரசாயன நஞ்சை வைத்து அழித்துவிட்டது.  மேலும் தினம் தினம் சண்டை நடந்துவந்ததால் வேறு எதிலும் மக்களால் கவனம் செலுத்த முடியவில்லை. வியட்நாம் மக்களின் வாழ்க்கையைப் பார்த்ததால்தான் அந்த அமெரிக்கனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. வேண்டும்போது வேண்டியதை சாப்பிட முடியவில்லையே என்று நான் குறைப்பட்டுக்கொண்டால் என் மகன் இப்படித்தான் என் மீது கோபப்படுவானா?  இந்த மாதிரி, சாப்பிட இல்லாத ஏழைகளைப் பார்த்து நம் மேலேயே நமக்குக் கோபம் வருகிறதா?

    தற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் இந்த இடைஞ்சல்களைக்கூட நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே.  அடுத்த வேளை உணவு எங்கிருந்து கிடைக்கும் என்பது தெரியாமல் இருக்கும் இந்த ஏழை மக்கள் வாழ்க்கை முழுவதும் இப்படிக் கஷ்டப்படுகிறார்களே.  இவர்களின் நிலையை என்னவென்று சொல்வது? எல்லோருக்கும் வயிறார உணவு கிடைக்கும்படிச் செய் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே.

    பார்வைக்கு: For India’s Laborers, Coronavirus Lockdown Is an Order to Starve

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-133

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-133

    நாங்குநேரி வாசஸ்ரீ

    133. ஊடலுவகை

    குறள் 1321

    இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
    வல்ல தவரளிக்கும் ஆறு

    அவுககிட்ட எந்த தப்பும் இல்லையின்னாலும் பிணங்கிநிக்கது எம்மேல நேசம் வைக்கச்செய்யும்.

    குறள் 1322

    ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
    வாடினும் பாடு பெறும்

    பிணக்குனால எனக்கு ஏற்படுத சின்ன சங்கடத்துக்காவ அவுக காட்டுத அளவத்த நேசம் வாடினாலும் பெருமையத் தரும்.

    குறள் 1323

    புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
    நீரியைந் தன்னார் அகத்து

    நிலத்தோட தண்ணி கலந்தாமாரி ஒத்துமையா நேசம் வச்சிருக்க காதலர்கிட்ட ஏற்படுத பிணக்குல கெடைக்க சந்தோசம் சொர்க்கத்துலயும் கெடைக்குமா?

    குறள் 1324

    புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
    உள்ளம் உடைக்கும் படை

    இறுக்க கட்டிப்பிடிச்சி விடாம இருக்காமாரி அமையுத பிணக்குலதான் என் நெஞ்சுறுதியக் குலையச்செய்யுத ஆயுதமும் இருக்கு.

    குறள் 1325

    தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
    அகறலின் ஆங்கொன் றுடைத்து

    தப்பே பண்ணாத நேரமும் பிணங்கி நேசம் வச்சவளோட மெல்லிசான தோளப் பிரிஞ்சி இருக்கதுல ஒரு சந்தோசம் இருக்கு.

    குறள் 1326

    உணலினும் உண்ட தறலினிது காமம்
    புணர்தலின் ஊடல் இனிது

    சாப்பாடு சாப்பிடுததவிட முன்ன சாப்பிட்டது செரிச்சிச்சின்னா அது ஒரு சுகம். அதுகணக்கா காதல்ல சேருதத விட பிணங்கி நிக்கது அவுகளுக்கு ஒரு சுகம்.

    குறள் 1327

    ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
    கூடலிற் காணப் படும்

    பிணக்குல தோத்தவுக செயிச்சதுக்குச் சமானம். இத பொறவு கூடிச்சேந்து சந்தோசப்படையில தெரிஞ்சுக்கிடலாம்.

    குறள் 1328

    ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
    கூடலில் தோன்றிய உப்பு

    நெத்திவேர்க்க கூடிச்சேருத சந்தோசத்த திரும்ப ஒருக்க பிணக்கு உண்டாகையில பெத்துக்கிடலாமில்லையா.

    குறள் 1329

    ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
    நீடுக மன்னோ இரா

    பளபளக்குத மொகமுள்ள காதலி இன்னும் பிணங்கட்டும். அதுக்காவ நான் அவகிட்ட கையேந்தி நிக்குத சந்தோசத்தப் பெறுததுக்காக ராப்பொழுது நீண்டுபோவட்டும்.

    குறள் 1330

    ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்

    காதலுக்கு சந்தோசம் தருதது ஒருத்தருக்கொருத்தர் கோவப்பட்டு சிணுங்கிப் பிரியுத ஊடல். அதுக்குப்பொறவு கூடிச்சேந்து சந்தோசப்பட்டாகன்னா அது அந்த ஊடலுக்கு இன்பம்.

    (முற்றும்)

    Share
  • நான் காற்றுவாங்கப் போனேன் ஒரு க‌‌‌‌‌ஷ்டம் வாங்கி வந்தேன்!

    நான் காற்றுவாங்கப் போனேன் ஒரு க‌‌‌‌‌ஷ்டம் வாங்கி வந்தேன்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    பெல்பேண், அவுஸ்திரேலியா

    நான் காற்றுவாங்கப் போனேன்
    ஒரு க‌‌‌‌‌ஷ்டம்வாங்கி வந்தேன்
    அதைக் கேட்டு வாங்கவில்லை
    இப்போ கிலிக்குள் நிற்கிறேனே
    நான் காற்றுவாங்கப் போனேன்

    தொண்டை வரண்டு வருது
    எனக்கு தும்மல்கூட வருது
    உடலும் வலியாய் இருக்கு
    இப்போ உள்ளம் பயத்திலிருக்கு
    நான் காற்றுவாங்கப் போனேன்

    எச்சில் விழுங்கும் போதும்
    எனக்கு எரிச்சலாக இருக்கு
    மூச்சை இழுத்து நிற்க
    இப்போ சோர்வு அதிகமாச்சு
    நான் காற்றுவாங்கப் போனேன்

    பழத்தைக் கடித்துப் பார்த்தேன்
    அதன் இனிப்புத் தெரியவில்லை
    மலரை நுகர்ந்து பார்த்தேன்
    அதன் மணமும் உணரவில்லை
    நான் காற்றுவாங்கப் போனேன்

    உடனே ஓடிச் சென்றேன்
    எனக்கு உதவி நாடியங்கு
    கொரனோ என்று சொன்னார்
    குழம்பி அங்கு நின்றேன்
    நான் காற்றுவாங்கப் போனேன்

    வீட்டில் இருந்த வேளை
    எனக்கு எதுவும் நிகழவில்லை
    வீட்டை விட்டுச் சென்றேன்
    இப்போ வினைக்குள் மாட்டிவிட்டேன்
    நான் காற்றுவாங்கப் போனேன்

    Share
  • சுவடி கூறும் தமிழறி மடந்தை கதை

    சுவடி கூறும் தமிழறி மடந்தை கதை

    -முனைவர் சு. சத்தியா
    உதவிப்பேராசிரியர்
    தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
    தஞ்சாவூர்.

    *****

    கதை என்பது ஏதாவது ஒன்றினை விரித்துக் கூறுவதாகும். பழங்காலத்திலிருந்து இன்றுவரை நம் மக்களிடையே கதை சொல்லும் வழக்கம் இருந்த வண்ணமாகவே உள்ளது. பாட்டி கதை முதல் கட்டபொம்மன் கதை வரை எண்ணற்ற கதைகளை நம் தமிழர் கூறுவதில் கைதேர்ந்தவர்கள் என்றால் மிகையாகாது! அவ்வகையில் நம் இலக்கியங்கள் கதை வரலாறாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். நம் பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்துக்கும் அடிச்சுவடே சுவடிதான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே!

    தமிழ்ச் சுவடியியல் வரலாற்றினை ஆராய்ந்தோமென்றால் இலக்கண இலக்கியத்தின் உயிர் நாடியாய்ச் சுவடிகள் இருந்துள்ளதையும் அவையே நம் தமிழ்மொழியின் பெருமையையும் தமிழரின் பண்பாட்டினையும் நிலைநிறுத்தியுள்ளதையும் அறியமுடியும். சுவடிகள் இலக்கணம், இலக்கியம், மருத்துவம், சோதிடம், வானியல், எண்கணிதம் என்று பல்வேறு பிரிவுகளிலும் நமக்குச் செய்திகள் தந்தபோதிலும் கதை சொல்லவும் தவறவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

    காப்புடன் தொடங்கும் கதை

        சண்பகமே வீசுந் தமிழறிவாளன் பேரில்
        பண்புடனே செந்தமிழைப் பாடுதற்கு –  என்புவியில்
        வேளைவிழித் தெரித்த வித்தகனார் பெற்றெடுத்த
        காளை மதக்களிறே காப்பு!

    என்ற காப்புச் செய்யுளுடன் இக்கதை வரலாறு தொடங்குகிறது.

    தமிழறி மடந்தை கதை –  வரலாறு

     முன்னொரு காலத்தில் அளகாபுரி என்னும் நகரத்தினை அளகேஸ்வரன் என்னும் மன்னன் சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ஏழாங்குழலாள் எனும் அழகிய மகள் பிறக்கிறாள். கல்வி கேள்விகளில் வல்லவளாக வளர்ந்து வருகிறாள். இன்னொரு புறத்தில் பாடலிபுத்திரத்தின் அதிபதியான பத்திரகிரி என்ற மன்னனுக்கு சந்தனகுமாரன்  என்ற அழகிய மகன் இருக்கிறான். படிப்பிலே ஆர்வமில்லாதவன் தந்தையுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறான். கண்கண்ட தேசம் எல்லாம் சுற்றி அதன் அழகினைக் கண்டு இரசித்து வந்தவன் வழியில் அளகாபுரியினை வந்தடைகிறான். அவ்வேளையில் தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த ஏழாங்குழலாளினைக் கண்டு மனத்தைப்  பறிக்கொடுக்கிறான். அவளும் இவன் அழகில் மயங்கிப் பார்வையாலே இருவரும் காதல் கொண்டனர். அரசகுமாரியோ வித்தைகள் கற்றவளாதலால் தன் காதில் அணிந்திருந்த ஓலையில்  கை நகத்தினால்  சாவடிக்கு இரவு வருமாறு செய்தியினைக் கீறி அதைச் சந்தனகுமாரன் முன்பு எவரும் அறியா வண்ணம் தூக்கிப் போடுகிறாள்.

     எழுதப் படிக்கவே தெரியாத சந்தனகுமாரன் அதனைக் கையில் எடுத்து ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டே சாவடி முன்பு படுத்துக்கிடந்த குஷ்டரோகியிடம் காட்டுகிறான். வஞ்சகனான குஷ்டரோகன் சூழ்ச்சியால் அரசகுமாரியை அடைய விரும்பி, இந்நகரின் மன்னன் தங்களை எங்கு கண்டாலும் கொன்றுவிடுமாறு ஆணையிட்டுள்ளார். அதனால், இந்நகரினைவிட்டு தாங்கள் வெளியேறிவிடுங்கள்  என்று தவறாகப் படித்துக் காட்டினான். இதனைக் கேட்ட அரசகுமாரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தான் தவறு ஏதும் செய்யவில்லையே!. ஏன்? இவ்வாறு என்று தனக்குள் பேசிக்கொண்டு அவ்வூரினைவிட்டு வெளியேறுகிறான்.

     அன்றிரவு அரசகுமாரி தான் ஓலையில் குறிப்பிட்டப்படி சாவடிக்கு வருகிறாள். அரசகுமாரன் தான் கூறியபடி வந்துள்ளான் என்று எண்ணி அங்கிருந்த குஷ்டரோகியைக் கட்டியணைத்து முத்தமிடுகிறாள். அவன் மீதுள்ள இரத்தமும் சீழும் அரசகுமாரியின் உடல் முழுவதும் பட்டு ஈரமாகிவிடுகிறது. நாற்றம் தாங்காது உண்மையறிந்த அரசகுமாரி தான் ஏமாந்ததை அறிந்து அவமானம் தாங்காமல் தன் உயிரையே மாய்த்துக் கொள்கிறாள். இதனைக் கேள்வியுற்ற சந்தனகுமாரனும் தற்கொலை செய்துகொள்கிறான். இதன்பிறகு இருவரும் பேயாக உருவெடுத்து அலைகின்ற வேளையில் ஒளவையின் ஆசியினால், இருவரும் மீண்டும் மறுபிறவி எடுக்கின்றனர்.

    ஏழாங்குழலாள் தமிழறி மடந்தையாகவும் சந்தனகுமாரன் விறகுத் தலையனாகவும் பிறக்கின்றனர். தமிழறிமடந்தை தன் தமிழ்ப்புலமை மீது கொண்ட ஆணவத்தை அடக்க விறகுத் தலையன் நக்கீரரின் உதவியை நாடுகிறான். நக்கீரருக்கும் தமிழறி மடந்தைக்கும் நடக்கும் வாத உரையில் இறுதியில் நக்கீரர் வெற்றி பெறுகிறார். இருவரும் தங்கள் பிறப்பினை எண்ணி மீண்டும் ஒன்று சேர்வதாக இக்கதை நிறைவுறுகிறது.

    தமிழறி மடந்தை –  நக்கீரரின் வாத உரை

     வெண்பா   

    பாய்ச்சி மறித்திடுவார் பாதமே நான்குடையார்
      வாய்ச்ச கனல்புகுந்து வாழ்ந்திருப்பார் – வீச்சிப்
      படைவரா தார்தங்களுக் குப்பாரின்மேற் காணா
      அடைமாவு மல்ல வது.

    என்று தமிழறிவாள் கூறியதற்கு நக்கீரர்,

    வெண்பா

      தங்கைபல வைச்சடியிற் கால்களொரு நான்குளதாம்
      பைம்போர்க்கள மேறிப்பாய்ச் சுதலா –  லெம்பெரிய
      மாவல்ல நல்லமாக் காலேமா நிலமன்
      பூவலருங் கோதாய் பொருள்.

    என்று கூறியபின்,மேலும் தமிழறிவாள்,

     சந்தவிருத்தம்

    அங்காடி கொள்ளப் போயானை கண்டேன்
      அணிநகர மன்றினிலே சேனை கண்டேன்
      கொங்காளு முத்தரசர் தம்மைக் கண்டேன்
      கொடிக்கரும் பெரிமாவுங் கூடக் கண்டேன்
      அங்கொருவ ரெதிர்நின்று வெட்டக் கண்டேன்
      அதுகண்டுயான் றலையைத் தாழ்த்த லுற்றேன்
      இங்கிதனை யின்னதென் றியம்பு வோர்க்கே
      எதிரில்லை யிப்புவிக்கு ளென்றவாறே

    என்று கூறியதைக் கேட்ட நக்கீரர்,

     சந்தவிருத்தம்

     எதிராங்க மன்றினிலே யேறக் கண்டேன்
     எழுத்தரிய தேமாவு மனிதர் கண்டேன்
     அதிராங்க மாயிருவ ராடக் கண்டேன்
     அவ்விருவ ரெதிர்நின்று வெட்டக் கண்டேன்
     சதுரங்க மிதுகாணும் வேறொன் றல்ல
     தார்குழலே தீதலையைத் தாழ்த்த லேனோ
     விதிரரங்க முடையதொரு மானே கேளாய்
     வீணருக்கும் வேந்தருக்கும் வேலைதானே

    என்று கூறுகிறார். இவ்வாறு இருவருக்கும் வாதம் மேன்மேலும் பாடல் வழியில் வினா விடையாகத் தொடர்கிறது. இறுதியில் விறகுத் தலையனாக வேடமிட்டிருந்த நக்கீரர் வெற்றியடைகிறார்.

    கதை நுட்பம்

    இக்கதையில் கைளாப்பட்டுள்ள செய்யுள் நடையும் உரைநடையும் படிப்பவருக்கு விருந்தளிப்பதோடு, தமிழ்ச்சங்கப் புலவர் நக்கீரர், கரிகாற் சோழப்பெருவளத்தான், ஒளவையார், பாண்டிய மன்னர் என்று பல்வேறு கதாபாத்திரங்கள் வலம்வருவது இக்கதைக்கு மணிமகுடமாகிறது. பழந்தமிழ்ச் சொற்கள் விரவிவருவது இக்கதைக்கு மேலும் வலுச்சேர்க்கிறது.

    இக்கதையினைப் படிப்பவர் தமிழின் சிறப்பினையும் தமிழரின் கதை நுட்பத்தையும் அறிவர். பழைய சொல்வளத்தையும் ஆராய முயல்வர்.

    *****

    பார்வை நூல்:

    தமிழறி மடந்தை கதை, பதிப்பாசிரியர் மணி. மாறன், தமிழ்ப் பண்டிதர், சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், 2013.

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(295)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(295)

    மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
    மறைந்தொழுகு மாந்தர் பலர்.

            – திருக்குறள் -278 (கூடாவொழுக்கம்)

    புதுக் கவிதையில்…

    உள்ளத்தின் உள்ளே
    அழுக்குடன்
    மாண்புடைய துறந்தார்போல்
    பலமுறை நீராடி
    தூயவர் போல்
    மறைந்தொழுகும் மாந்தர்
    பலர் உள்ளனர்
    பாரினிலே…!

    குறும்பாவில்…

    மனதினில் தூய்மையின்றி
    மாண்புடைத் தூயோர்போல் நடித்து நீராடி
    மறைந்தொழுகுவோர் பலருளர் மேதினியில்…!

    மரபுக் கவிதையில்…

    உள்ள மதிலே அழுக்குடனே
         உடலைத் தூய்மை செய்திடவே
    கள்ள மனதை மறைத்தேதான்
         கண்ட போதெலாம் நீராடி
    வெள்ளை உள்ள மாந்தர்போல்
         வேட மிட்டே நல்லோராய்க்
    கள்ளத் தனமாய் மறைந்தொழுகும்
         கயவர் பலருளர் பாரினிலே…!

    லிமரைக்கூ..

    உள்ளத்தி னுள்ளே அழுக்கு,    
    மறைத்ததை மாண்புடையராய் நடித்தொழுகும் பலர்
    போட்டிடுவர் நீரினிலே முழுக்கு…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும் நல்லொழுக்கம்
    மனுசனுக்கு
    வேண்டவே வேண்டாம் தீயொழுக்கம்..

    மனசுலயெல்லாம்
    கெட்ட எண்ணத்தோட,
    ஒடம்ப மட்டும் சுத்தமாக்க
    ஒழுங்காக் குளிச்சி
    நல்ல மனசுக்காரனா
    நடிச்சி மறச்சி வாழுற
    பொல்லா மனுசங்க
    பலர் இருக்காங்க ஒலகத்தில..

    அதால
    வேணும் வேணும் நல்லொழுக்கம்
    மனுசனுக்கு
    வேண்டவே வேண்டாம் தீயொழுக்கம்…!

    Share
  • ஓயாத மழையில்

    ஓயாத மழையில்

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை

    வழக்கத்திற்கும் மாறாகத் தாமதமாக செல்லவே பள்ளிக்குப் போகும் வழியில் ஒற்றைப்படுத்தப்பட்ட சிறுமி; சிறுமி ஸ்கூல் பேகை முதுகில் சுமந்து, சிவப்பு நிறக்குடையை விரித்துப் பிடித்து மழையில் ஓடியும் நடந்தும் குன்றை ஏறும்போது வழியோரத்தில் முள்படர்ப்பின் மறைவிலிருந்து பைத்தியம் போன்ற ஒருவன் அவளின் முன்னால் குதித்து, சத்தம் போட்டீனா கொன்றுவிடுவேன் என்று மிரட்டினான். காய்ச்சல் வந்ததுபோல அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் கையில் கூர்மையான ஒரு பெரிய கல்.

    சிறுமி பயந்து நின்றாள். அவன் தனது வலதுகையில் உள்ள கல்லை அவளுக்கு நேராக உயர்த்தினான். கல்லின் கூர்மையான முனையால் அவளுடைய கண்களை குத்த முயற்சித்தான்.

    அவர்களுக்கிடையில் மழை சோ என்று பெய்தது.

    உன்னோட சோத்துடப்பா எங்கே? அவன் முரட்டுத்தனமாக கேட்டான். சிறுமி வாய் திறக்க ஓசை எழும்பாமல் தேம்பிக்கொண்டே தன்முதுகில் உள்ள பேகை சுட்டிக்காண்பித்தாள்.

    “உம்… எடு. அவளை பயமுறுத்த எண்ணி வலதுகையை அசைத்தான்.

    கனல்கள் எரிகின்ற அவனின் முகத்திலிருந்து கண்ணெடுக்கத் துணிச்சலில்லாமல் அவள் பேகைக் கையில் எடுத்தாள். அதற்குள் ஒரு மஞ்சள் நிற பாலித்தீன் கவரில் டிஃப்பன் போக்ஸ் சுற்றப்பட்டிருந்தது. அதை அவள் வெளியில் எடுத்ததும், அவன் கண்களில் ஜொலிப்புடன் இடது கை நீட்டினான். அவள் உற்றுப்பார்த்துவிட்டுப் பாத்திரத்தை அவனுக்குக் கைமாறினாள்.

    “உ…ம் போ ஆனா ஒரு விஷயம். வழில யாரிட்டயும் எதுவும் சொல்லக்கூடாது”. அவன் மிரட்டினான்.

    சிறுமி இல்ல என்று தலையசைத்தாள். மெதுவாக நடக்கத் தொடங்கினாள். அவன் முள்பரப்புகள் வழியாக அவசரமாக ஓடினான். மழை தொடர்ந்தது.

    கருவாட்டுக் கொழம்பு  ஊற்றின சோறு தின்று முடியப்போகும்போது யாரோ தன்னை கவனிக்கிறார்கள் என திடீரென உணர்ந்தான். வலிமை வாய்ந்த ஒரு பெரிய மிருகத்தைப் பார்த்தது போல மரத்துக்குப் பின்னால் பதுங்கினான்.

    ‘நான்…………..  தா’ … சிறுமி  முட்படர்ப்புக்கருகில் நின்று சொன்னாள். வாயில் போட்ட சோற்றை மெல்ல முடியாமல் சலனமற்று அவளைப் பார்த்தான்.

    “சோத்து டப்பாவுக்காகத்தா பாக்கறே அதத் திரும்பக்கொண்டு போகலேனா எனக்கு அடி கெடைக்கும்!! என்றாள் சிறுமி.

    அவன் என்ன செய்வதென்றறியாது சலனமற்று நின்றான். கடைசியில் அவன் பாத்திரத்தை நீட்டினான்.

    அதை கையில் வாங்கிக்கொண்டு அழகிய சிரிப்புடன் கேட்டாள்.

    “இவ்வளவு கொஞ்சமா சோறு சாப்பிட்டா வயிறு நெறயுமா?”.

    அவன் அப்படி ஒரு கேள்வியை  எதிர்பார்க்கவில்லை  என்ற உணர்வில் அவளைப் பார்த்தான். திடீரென அவனுக்குள் இருந்து பயங்கர காயம்பட்ட ஒரு விலங்கின் அலறல் சத்தம் உயர்ந்தது. அதொரு பேரொலியாக எங்கும் பரவியது. சிறுமி சலனமற்று நின்றாள். அவன் இருகைகளையும் தலையில் வைத்துத் திரும்பி ஓடினான். ஓயாத சத்தத்துடன் ஓயாத மழையில் எங்கோ மறைந்தான்.


    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை (நெறியான வாழ்க்கை)

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை (நெறியான வாழ்க்கை)

    மீ.விசுவநாதன்

     (நெறியான வாழ்க்கை) 

    கற்ற தொழுக வேண்டும்
    கனிவு வாக்கில் வேண்டும்
    பெற்ற பொருள்கள் யாவும்
    பெருமாள் செல்வ மென்னும்
    பற்றி லாத பாதை
    பால பருவந் தொட்டே
    முற்றி யுள்ளே நின்று
    மோகம் கொன்று வென்றார். (11)

    தந்தைக்கு உதவி யாகத்
    தானும் வைதீ கத்தில்
    சிந்தையினை வைத்து நித்தம்
    வேத நெறியைக் கற்றார்
    முந்தைவினைப் பேற்றி னாலே
    முகிழ்ந்த பக்தி யாலே
    சந்தித்தார் குருவை ஊரில்
    சாந்தி கொண்டார் உள்ளே.  (12)

       “1960ல் குருதரிசனம்”

    நரசராவ் பேட்டை வந்த
    நம்குரு வித்யா தீர்த்தர்
    இரவிலே பூஜை செய்தார்
    இளைஞராஞ் சநேய லுவங்கே
    சிரசிலே கையை வைத்து
    செகத்தையே மறந்தி ருந்தார்
    வரமது குருவின் பார்வை
    வாய்த்ததில் சாந்தி கொண்டார். (13)

     “1961ல் மீண்டும் குருதரிசனம்”

    “விஜய வாடா” ஊர்க்கு
    விஜயம் அடுத்த ஆண்டு!
    நிஜமா பொய்யா என்று
    நினைக்க வைத்த பேறு !
    சமஸ்கி ரதத்தில் பேசி
    சபையைக் கவர்ந்த சீடன்
    தமக்காம் குருவின் நெஞ்சத்
    தவத்துள் நிறைத்து விட்டார்.  (14)

    ஆங்கிலம், தெலுங்கு, மற்றும்
    ஆர்வமாய்க் கணிதம் கற்கும்
    பாங்கினைக் கொண்ட தாலே
    படிப்பிலே முன்னே நின்றார்.
    ஏங்கினார் மேலும் மேலும்
    வேதமே கற்க வேண்டி;
    தாங்கினார் தந்தை அன்பால்
    தமையனின் ஆசை வெல்ல.   (15)

    “1966ல் உஜைனியில் குருதரிசனம்”

    சாதுர் மாச காலம்
    சன்யாசி யாரும் எங்கும்
    ஊரூர் சென்றி டாமல்
    ஓரிடத்தில் தங்கிக் கொண்டு
    வேத நெறிகள் சொன்ன
    விதிப்படியே பூஜை செய்து
    பூமி வாழும் மக்கள்
    பொலிவுபெற வாழ்த்து வார்கள். (16)

    அபிநவ வித்யா தீர்த்தர்
    அப்படியோர் காலம் தன்னில்
    புவியிலே புண்ய மான
    உஜைனியிலே” விரதம் ஏற்றார்!
    செவியிலே வேத நாதம்
    தேன்போலே கேட்கும் நித்தம்!
    கவியெலாம் அங்கு கூடி
    காவியங்கள் தர்க்கம் செய்வர்! (17)

     “உஜைனிக்கு சுவாமி வித்யாரண்யாருடன்”

    அந்த அழகைக் காண
    ஆஞ்ச நேயலு சென்றார்
    சொந்த ஊர்க்கு வந்த
    சுவாமி ஒருவரை நாடி!
    எந்தக் கவலை, துன்பம்
    ஏதும் கொண்டிடா நெஞ்சில்
    இந்தக் குருவை மட்டும்
    இருத்தி தியானமே செய்தார். (18)

    கண்டார் குருவை நேரில்
    கண்களில் சாந்தி பொங்க !
    வாண்டாய் அலைந்த எண்ணம்
    மௌனமாய் நின்ற தங்கே
    கொண்டார் இன்பம் உள்ளே
    குருவிழி வழியி னாலே!
    உண்டார் இல்லை இன்ப
    ஊற்றினால் உறக்க மில்லை. (19)

    அடுத்தநாள் தரிசனப் போதில்
    ஆசார்யர் தாளைப் போற்றித்
    தொடுத்தனர் தன்னுடை ஆசை!
    “உங்களுக்குத் தொண்டு செய்து
    படித்திட வேண்டுறேன்; ஈசா
    பக்தனைநீர் கொள்ளு மென்றார்”.
    பிடித்தது சீடனின் பேச்சு
    பிரியமாக ஆசி தந்தார்.   (20)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-132

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-132

    நாங்குநேரி வாசஸ்ரீ

    132. புலவி நுணுக்கம்

    குறள் 1311

    பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
    நண்ணேன் பரத்தநின் மார்பு

    பொம்பளைங்க எல்லாரும் தங்களோட கண்ணால பொதுப்பொருளா நெனச்சி உன் மார்ப நுகருதாங்க. அதனால நான் உன் மார்பச் சேரமாட்டேன்.

    குறள் 1312

    ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
    நீடுவாழ் கென்பாக் கறிந்து

    நான் பிணங்கி இருக்கையில அவுக தும்மினாக, ஆயுசோட நெறைய நாள் வாழணும்னு நான் வாழ்த்துவேனோன்னு நெனைச்சு.

    குறள் 1313

    கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
    காட்டிய சூடினீர் என்று

    கிளைகள்ல பூத்துக்கெடக்குத பூவக்கட்டி நான் சூடிக்கிட்டாலும் யாருக்கோ காணிக்கதுக்காவத்தான் சூடி இருக்கேம்னு கோவப்பட்டு நிக்கா.

    குறள் 1314

    யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
    யாரினும் யாரினும் என்று

    யாரையும்விட அதிகமா நேசம் வச்சிருக்கேம்னு சொன்னேம். யார விட? யார விட? னு தொளைச்சு எடுத்து பிணங்கி நின்னுக்கிட்டா.

    குறள் 1315

    இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
    கண்நிறை நீர்கொண் டனள்

    இந்தப் பொறப்புல நான் பிரிஞ்சுபோவமாட்டேம்னு சொன்னேன். இனி வரப்போவுத பொறப்புல பிரிஞ்சுபோடுவேம்னு கண்ணீர் உட்டுக்கிட்டு நிக்கா.

    குறள் 1316

    உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
    புல்லாள் புலத்தக் கனள்

    நான் உன்னய நெனச்சேம்னு சொன்னேன். அம்புட்டுதான் அப்பம் என்னய மறந்து இருந்தீயளான்னு ஏசி தழுவாம பிணங்கி நின்னுட்டா.

    குறள் 1317

    வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
    யாருள்ளித் தும்மினீர் என்று

    நான் தும்மினேன். வழக்கம்போல வாழ்த்தினவ எவ உம்மபத்தி நெனச்சா இப்பம் தும்முததுக்குன்னு கேட்டு அழுக ஆரம்பிச்சிட்டா.

    குறள் 1318

    தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
    எம்மை மறைத்திரோ என்று

    அவ பிணங்குவான்னு பயந்து தும்மல அடக்கிக்கிட்டேன். அப்பமும் உமக்கு வேண்டப்பட்டவுக நெனைக்கத தெரிஞ்சுக்கிடக்கூடாதுனு  மறைக்கீயனு கேட்டு அழுதா.

    குறள் 1319

    தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
    இந்நீரர் ஆகுதிர் என்று

    நான் பணிஞ்சுபோய் அவ பிணக்கப் போக்கி சந்தோசப்படுத்தினாலும் நீர் மத்த பிள்ளைங்ககிட்டயும் இப்டித்தான் நடந்துக்கிடுவீயளானு கேட்டு ஏசுவா.

    குறள் 1320

    நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
    யாருள்ளி நோக்கினீர் என்று

    அவ அழக நெனைச்சு நான் அமைதிய ஒக்காந்து பாத்துக்கிட்டே இருந்தாலும் யார் கூட ஒப்பிட்டுப் பாக்கீறுனு கோவப்படுதா.

    Share
  • தீநுண்ம நோய் பரவுக – சுமந்திரன் கோருகிறாரா?

    தீநுண்ம நோய் பரவுக – சுமந்திரன் கோருகிறாரா?

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை, இலங்கை

    நாடாளுமன்ற கூட்டத்தொடரை மீண்டும் தொடங்குமாறு மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேட்டுள்ளார்.

    குடிமக்களின் இறைமையை நாடாளுமன்றம் எடுத்துச் செல்கின்றது. இறைமைக்கு ஆட்சி வடிவம் கொடுக்கிறது.

    தீநுண்மித் தொற்றுநோய் இரட்டித்து இரட்டித்த கணிதப் பெருக்கத்தில் பாய்ந்து பரவும் என்ற அச்சம் சூழ்ந்த வேளை.

    இயல்பு நிலையில் உலகில் எந்த நாடுமே இல்லை. குடிமக்களின் இறைமைக்கு ஆட்சி வடிவம் கொடுக்க நாடாளுமன்றம் கூடலாமா?

    தென்கொரியாவின் கடவுளர் திருக்கூட்டம்
    இந்தியா தில்லியின் நிசாமுதீன் எழுச்சிக் கூட்டம்.
    இலங்கை யாழ்ப்பாணம் அரியாலையில் பிலடெல்பியா தேவாலயத் திருக்கூட்டம்.

    இக்கூட்டங்களே தீநுண்மித் தொற்று நோயின் கருவறைகள் ஆயின. தொடர்ந்து கூட்டங்கள் கூட்டுவதே தவறு என்பர் மருத்துவர். தொற்றுநோய்க் கருவுக்கு அவை தாயகமாகும் என்பர்.

    செயவர்த்தனபுரத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதற்கும் அரியாலையில் பிலடெல்பியா தேவாலயக் கூட்டத்தைக் கூட்டுவதற்கும் வேறுபாடில்லை.

    இவ்வாறான கூட்டங்களை நடத்தியோரும் நடத்துமாறு கோருவோரும் தம்மைத் தாம் மத மாற்றிகள் என்பதை ஒப்பியவர்கள்.

    மரபு சார்ந்த வழமை சார்ந்த அருள் பெருக்கும் கூட்டங்கள் மதமாற்றக் கூடாரங்கள் அல்ல.

    மதம் மாற்றியாக,
    மதம் மாற்றுவதே நோக்கமாகக் கொண்ட
    இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் துணைத் தலைவரான,
    மதம் மாற்றுவதையே தொழிலாகக் கொண்டு மாதம் இரண்டு இலட்சம் ரூபாய் பிரித்தானியக் கிருத்தவ அமைப்பிலிருந்து சம்பளமாகப் பெறுகின்ற சாவித்திரியின் கணவரான
    மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோருவது இலங்கை முழுவதும் தீநுண்மித் தொற்று நோயைப் பரப்பும் நோக்கத்துடனா? எனக் கேட்க விரும்புகிறேன்.

    புறத்தோற்றம் ஒன்று. அக நோக்கம் வேறு. இவ்வாறானோர் ஆட்டுத் தோல் போர்த்த ஓநாய் எனத் தூயரான ஏசு பெருமானே எடுத்துக்கூறிய மலைப்பிரசங்க வரிகளைத் (மத்தேயு 7.15) தூயரான இயேசு பிரான் பெயரால் மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கும் சுமந்திரனுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன்.

    புறன் உடையர்
    புனை துகிலர்
    தம் நெறியலாதன புறம் கூறுபவர்
    பாண்டியனுக்கு வெப்பு நோயைத் தந்தவர்
    என்றெல்லாம் திருஞானசம்பந்தப் பெருமான் அடையாளம் காட்டினார்.
    எத்தர் என்றும் ஈனர் என்றும் கூறினார்.

    ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று தூய இயேசுபிரான் கூறினார்.

    இன்றும் இத்தகையோரே நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி இலங்கை முழுவதும் தீ நுண்மித் தொற்றைப் பரப்புமாறு கூறுவர்.

    இயல்பற்ற நாட்டுச் சூழலில்
    நாடாளுமன்றத்தைக் கூட்டாமலே
    குடிமக்களின் இறைமைக்கு ஆட்சி வடிவம் கொடுக்கும்
    வரையறைகள் இன்றைய அரசியலமைப்பில்
    தாராளமாக உள்ளன.

    தேர்தல் ஆணையம்
    குடியரசுத் தலைவர்
    நாடாளுமன்ற அவைத் தலைவர்
    உச்சநீதிமன்றம்
    யாவரும் இணைந்தே
    இலங்கைக் குடிமக்களின் இறைமையை
    ஆட்சியாக்கும் சட்டவலிமை கொண்டவர்.

    சட்ட நுணுக்கங்களை எடுத்துக் கூறக்கூடிய வல்லுனர்கள் ஏராளம் ஏராளம். மதமாற்றம் அவர்களின் நோக்கம் அல்ல.

    தீநுண்மித் தொற்றை இலங்கை முழுவதும் பரப்பும் வழிவகைகளை அவர்கள் கூற மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஆட்டுத்தோல் போர்த்த ஓநாய்கள் அல்லர்.

    உலக நாடுகள் பலவற்றின் நாடாளுமன்றங்கள், மாநில அவைகள், மாகாண அவைகள் உள்ளூராட்சி. அமைப்புகள் முடங்கி உள. ஐநா மாநாடுகளைப் பின் தள்ளினர். விம்பிள்டன், ஒலிம்பிக் போட்டிகள் பின் தள்ளின. இதை அறிந்தவர் சுமந்திரன். தெரிந்தும் இலங்கை நாடாளும்னறத்தைக் கூட்டக் கேட்கிறார். இவரரின் கோரிக்கை மத்தேயுவின் 17.5 வரிகளை நினைவூட்டுகிறது.

    Share