Blog

  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-129

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-129

    நாங்குநேரி வாசஸ்ரீ

     129. புணர்ச்சி விதும்பல்

    குறள் 1281

    உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
    கள்ளுக்கில் காமத்திற் குண்டு

    மனசால நெனக்கையில கெடைக்க சந்தோசமும், ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிடுதப்போ கெடைக்க சந்தோசமும் சாராயம் குடிக்கவங்களுக்கு கெடைக்காது. காதலிக்கவங்களுக்கு உண்டு.

    குறள் 1282

    தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
    காமம் நிறைய வரின்

    பனையளவு காதல் பெருகிவருதப்போ தினையளவு கூட பிணக்கு வச்சிக்கிடக்கூடாது.

    குறள் 1283

    பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
    காணா தமையல கண்

    என்னைய அரவணைச்சுப் போவாம தனக்குப் பிடிச்சதையே செஞ்சிக்கிட்டிருந்தாலும் என் கண்ணுங்க காதலரக் காணாம பொருந்தமாட்டேக்கு.

    குறள் 1284

    ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
    கூடற்கண் சென்றதென் னெஞ்சு

    ஏ சேக்காளீ! நான் அவுகளக் கண்டு சண்டபிடிக்கணும்னு தான் போனேன். கண்டுகிட்ட பொறவு எம் மனசு அந்த நோக்கத்த மறந்து இணங்கி சேந்துக்கிடப் போயிடுச்சு.

    குறள் 1285

    எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
    பழிகாணேன் கண்ட இடத்து

    மைபூசுத நேரம் மை தீட்டும் கோலக் காணமுடியாத  கண்ணுங்க கணக்கா என் காதலரக் காணுத நேரம் அவுக என்னய உட்டுப்போட்டு போன குத்தத்த அயத்துப் போயிடுதேன்.

    குறள் 1286

    காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
    காணேன் தவறல் லவை

    அவுகளப் பாக்குத நேரம் குத்தங்கொறைய நான் கண்டுக்கிட மாட்டேன். பாக்காத நேரம் குத்தங்கொறையத் தவித்து நன்மய நான் காணுததே கெடையாது.

    குறள் 1287

    உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
    பொய்த்தல் அறிந்தென் புலந்து

    வெள்ளம் இழுத்துக்கிட்டுப் போயிடும்னு தெரிஞ்சும் அதுல குதிக்கது கணக்கா பிரயோசனம் இல்லன்னு தெரிஞ்சும் சண்டபிடிக்கதனால ஆவது என்ன?

    குறள் 1288

    இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
    கள்ளற்றே கள்வநின் மார்பு

    எம் மனசக் களவாண்ட களவாணியே! தாழ்ச்சி தருத சங்கடத்த நீ தந்தாலும் ,கெடுதலத் தருதுனு தெரிஞ்சும் கள்ளு குடிக்கவங்க ஆசப்பட்டு அதக் குடிக்கது கணக்கா என்னய மயக்குது உன் மார்பு.

    குறள் 1289

    மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
    செவ்வி தலைப்படு வார்

    காதல் தருத சந்தோசம் பூவ விட மென்மை. அத உணந்து அனுவிக்கவுக ஒரு சில பேர் தான்.

    குறள் 1290

    கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
    என்னினும் தான்விதுப் புற்று

    கண்ணால பிணக்கத் தெரியப்படுத்தி பொறவு என்னயக் காட்டிலும் வெரசலாத் தழுவி சேந்துக்கிட்டா.

    Share
  • மூவர் வாழ்க!

    மூவர் வாழ்க!

    ஏறன் சிவா 

    தன்நாட்டின் எல்லைக்குள் தொழில்கள் செய்யத்
    தரையிரங்கி வந்தவர்கள்; இங்கி ருக்கும்
    பொன்வளத்தைக் கண்டுமனப் பேரா சையால்
    போர்செய்து; தந்திரங்கள் பலவுஞ் செய்து;
    மண்பிடித்தார்! மக்களினை அடிமை செய்து
    மலைவளங்கள் தொடங்கி,கடல் வளத்தை யெல்லாம்
    அன்னியர்கள் சுரண்டுகின்ற அவலங் கண்டே
    அகங்கொதித்தார் எரிமலைபோல் அங்கே மூவர்!

    அயலானை விரட்டுதற்கு அமைதிப் போரா?
    ஆகாது அகிம்சையின் பாதை என்று
    புயமுயர்த்தி, தோளுயர்த்தி, குரலு யர்த்தி
    போர்செய்யப் புறப்பட்டார் அந்த மூவர்!
    புயலொன்று குடிசைக்குள் புகுந்தாற் போல
    புகுந்தார்கள் அன்னியர்தம் கோட்டைக் குள்ளே!
    பயமின்றி, சிறுதுளியும் தயக்க மின்றி
    பற்றவைத்தார் விடுதலையின் ஒளியைக் கண்டார்!

    சுகதேவும், இராசகுரு, பகத்து சிங்கும்
    சுண்டிவிட்ட அந்நெருப்பு சுற்றி யுள்ள
    திக்கெல்லாம் பரவியது! அன்னி யர்;அத்
    தீயணைக்க மூவருடைத் தலையைக் கேட்டார்!
    மக்களுக்கே உழைத்ததனால் மூவ ரையும்
    மாட்டினார்கள் தூக்கினிலே! உலகில் என்றும்;
    எக்காலும் புரட்சியாளர் சிந்த னைகள்
    இறக்காது! இறக்காது! வாழ்க மூவர்!

    (மார்ச்சு 23, 1931 அன்று விடுதலைப் போராட்ட வீரர்கள் சுகதேவ், இராஜகுரு, பகத் சிங் மூவரும் தூக்கிலிடப்பட்டார்கள்)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 9

    பழகத் தெரிய வேணும் – 9

    நிர்மலா ராகவன்

    (வேண்டாத) விருந்தினராகப் போவது

    ‘அதிதிகளைக் கவனிப்பது தேவர்களுக்கே தொண்டு செய்வதுபோல்,’ என்று எக்காலத்திலோ சொல்லி வைத்திருக்கிறார்கள். இதை இன்றும் நம்புகிறவர்கள் அரிது.

    இது புரிந்து, ஒரு தாய் மகனுக்குக் கூறிய அறிவுரை: ‘மாமியார் வீட்டுக்கு விருந்தாளியாகப் போகிறாயா? சோற்றில் உன் முகம் தெரியும்போது, புறப்பட்டுவிடு’.

    அவளுக்கு உலகின் போக்கு தெரிந்திருந்தது. முதல்நாள், மருமகனுக்குத் தடபுடலான உபசாரம் நடக்கும். இரண்டாம் நாள் சற்றுக் குறைந்துவிடும். மூன்றாம் நாளோ, மாமியார் பழைய சோற்றில் நீரை விட்டுக்கொடுப்பாளாம்.

    ‘விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு,’ என்று இதற்காகத்தான் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

    மரியாதையாகக் கவனிப்பது

    உறவினரோ, நண்பரோ, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர் அவரைக் கவனிப்பது நாம் அவரை எவ்வளவு மதிக்கிறோம் என்பதைக் குறிக்கிறது.

    கதை

    ஒரு கூட்டுக்குடும்பத்தில் மாமியார் சமையலைக் கவனித்துக்கொண்டாள். கறிகாய் நறுக்குவதிலிருந்து, அரைப்பது, கரைப்பது என்று எல்லா வேலையையும் தானே செய்தாள்.

    ‘மகன் வீட்டில் தங்கி இருக்கிறோமே! தன்னைப் பாரம் என்று மருமகள் கருதிவிட்டால்?’ என்று அவள் எண்ணியிருக்கக்கூடும்.

    தங்களைப்போலவே பிறரும் இருக்கவேண்டும் என்று  எதிர்பார்ப்பதும் கோளாறுதான்.

    அவர்கள் வீட்டில் சில தினங்கள் தங்க, மாமியாரின் உறவுக்காரப் பெண்மணி வந்தாள்.

    மருமகளிடம், “நீயும் கொஞ்சம் ஒத்தாசை செய்யக்கூடாதா? ஒருத்தியே திண்டாடுகிறாளே!’ என்று கூறினாள். எழுபது பிராயத்தை எட்டிவிட்ட மாமியாருக்கு எப்போதும் உடல்வலி என்று தெரிந்துதான் அப்படிக் கூறினாள்.

    இருப்பினும், ‘நல்லதற்குத்தானே சொல்கிறேன்!’ என்று பிறரது குடும்ப விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட்டால், மனத்தாங்கல்தான் வரும்.

    மாமியார்தான் ஏதோ சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று மருமகள் நினைக்க வாய்ப்பிருக்கிறதே! அப்போது அவர்கள் உறவில் விரிசல் ஏற்படாதா?

    நான் அந்த வீட்டுக்குப் போனபோது, ‘உன் காலம் முடிந்ததும், யார் இப்படி எல்லாருக்கும் சமைத்துப் போடுவார்கள்?’ என்று முதியவளை கேட்கத்தான் தோன்றியது.

    சில சமயம், நமக்குத் தோன்றுவதை எல்லாம் வெளிப்படையாகச் சொல்லாதிருப்பதுதான் நன்மை. அதனால் அடக்கிக்கொண்டேன். ‘அவரவர் பாடு, நமக்கென்ன!’ என்று ஒதுங்க வேண்டியதுதான்.

    ‘ஒவ்வொரு காயை ஒவ்வொரு விதமாக நறுக்கவேண்டும். அதனால்தான் நான் பிறரிடம் அந்த வேலையை விடுவதில்லை,’ என்று, எல்லா வேலைகளையும் தானே செய்வதாகச் சொல்கிறார்கள் சிலர். அதிகாரம் தன் கையை விட்டுப் போய்விடுமே என்ற பயமோ?

    மாதிரிக்கு, ஒரு துண்டை நறுக்கி, ‘இதைப்போல் செய்,’ என்றால் புரியாதா?

    பன்னிரண்டு வயதுக்கு மேல், குழந்தைகளையே இப்படிப் பழக்கலாம். பெரியவர்கள் தமக்குப் பிடித்த வேறு வேலையில் ஈடுபடலாம், மகிழ்ச்சியுடன்.

    புத்தி புகட்ட வேண்டாமே!

    பிறர் எதை, எப்படிச் செய்யவேண்டும் என்று நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள் விருந்தினராக வரும் சிலர்.

    ‘நான் உன்னைவிட கல்வியில், செல்வச்செழிப்பில், திறமையில் உயர்ந்திருக்கிறேன்,’ என்ற அகங்காரம் இப்படி ஆட்டுவிக்கலாம். இத்தகைய போக்கு மற்றவர்களை இவர்கள் மதிக்காததைத்தான் காட்டுகிறது.

    மற்ற எந்த தகுதியைவிடவும் முக்கியமானது பணிவும் மரியாதையும். தாமே தம் மரியாதையைக் கெடுத்துக்கொண்டு, பிறரைப் பழிப்பானேன்!

    கல்யாண வீடுகளில் விருந்தினர்

    தங்கள் வீட்டில் இருக்கும் சௌகரியங்களைப் போகும் இடங்களில் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

    ஒரு கல்யாணத்துக்குப் போகிறீர்கள். வருகை புரிந்த உறவினவர்கள் எல்லாரையும் ஒரே இடத்தில் தங்க வைத்திருக்கிறார்கள்.

    ‘தரை ஈரம்!’

    ‘பாத்ரூமுக்கு பத்துப் படிகள் ஏற வேண்டுமா!’

    ‘அது என்ன, பெரிய ஹாலில் நாலே நாலு கட்டில்? எல்லாவற்றையும் வயதானவர்கள் பிடித்துக்கொண்டுவிட்டார்கள்! நானும், கைக்குழந்தையும் எங்கே தூங்குவது?’

    இம்மாதிரியான புகார்களை நிறைய கேட்கமுடியும்.

    வசதி இருந்தால், ஹோட்டலில் தங்கலாம். இல்லாவிட்டால், வாயை மூடிக்கொண்டிருப்பதுதான் சரி. பெண் வீட்டுக்காரர்கள் எவ்வளவோ செலவழித்திருப்பார்கள். விருந்தினர்வேறு கஷ்டம் கொடுக்கவேண்டுமா?

    குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது

    பிறர் வீட்டுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, எதையும் அறிய ஆர்வமுடைய வயதில், எல்லாவற்றையும் கையில் எடுத்துப் பார்ப்பார்கள்.

    வீட்டுக்காரர்கள், ‘சாமான்கள் உடைந்துவிடப்போகிறதே!’ என்ற கவலையுடன், வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் திணறுவார்கள்.

    உடைந்துவிட்டாலோ, குழந்தைகளின் பெற்றோர் மன்னிப்பு கேட்கவேண்டிய நிலை.

    ‘போகிற இடத்தில் எதையும் தொட்டு விஷமம் பண்ணக்கூடாது,’ என்று முதலிலேயே கண்டித்தால், இரு தரப்பினருக்கும் இந்த தர்மசங்கடமான நிலைமை ஏற்படாதே!

    விருந்துண்ணும்போது

    குழந்தைகளுடன் பிறர் வீட்டில் சாப்பிட நேருகிறதா? அப்படியானால், முதலிலேயே அளிக்கவேண்டிய எச்சரிக்கை:

    ‘அவர்கள் கொடுப்பதைச் சாப்பிடுங்கள். நன்றாக இருக்கிறது, இல்லை, என்ற நேரடி வர்ணனை எல்லாம் வேண்டாம்!’

    விருந்தினரை நன்கு கவனிப்பதாக நினைத்துக்கொண்டு, அவர்கள், `போதும், போதும்’ என்று கதற, உணவுப்பண்டங்களை அவர் தட்டில் பரிமாறிக்கொண்டே இருப்பது நாகரீகம்தானா?

    அழையா விருந்தாளி

    கை நிறையப் பணம் கிடைக்குமென்ற ஆசையுடன், செல்வம் வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டார். சில ஆண்டுகள் அங்கு தங்க வேண்டியிருந்தது.

    தனிமை வாட்டுமே!

    புதிய நாட்டில் ஏற்படும் குழப்பங்களை எப்படிச் எதிர்கொள்வது?

    இந்த பிரச்னைகளைச் சமாளிக்க, தன் நாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரைப்பற்றி அவரது உறவினரிடமிருந்து அறிந்து, அவரைத் தொடர்பு கொண்டார்.

    மரியாதை கருதி, அவரைப் பண்புடன் நடத்தினார்கள் அக்குடும்பத்தினர்.

    செல்வத்திற்கு அவர்கள் நல்ல குணம், மரியாதை, புரியவில்லை. ‘பிறர் வீட்டில் சாப்பிட்டால், நம் செலவு குறையும், நிறைய சேமிக்கலாமே!’ என்று குறுக்கு வழியில் யோசனை போயிற்று.

    ஒவ்வொரு விடுமுறையின்போதும், ‘நான் வருகிறேன்,’ என்று அறிவித்துவிட்டு, காலையிலேயே வந்துவிடுவார். காலை, மத்தியான, சாயங்கால உணவு எல்லாம் அவர்கள் வீட்டில்தான். அவர்களுக்குத் தன் சுயநலமான போக்கினால் அசௌகரியம் ஏற்படக்கூடும் என்பதை நினைத்தும் பார்க்கவில்லை.

    அவர்களுக்குச் சொல்லவும் தயக்கமாக இருந்தது.

    உரிய காலம் வந்ததும், ‘நான் திரும்பிப் போக வேண்டும். இங்கேயே வேறு வேலை பார்த்துக் கொடுக்கிறீர்களா?’ என்று கேட்டார் செல்வம்.

    ‘ஓய்வுநாள் வந்தால் யார் வீட்டுக்குச் சாப்பிடப் போவது என்று அலைகிறீர்கள். உங்கள் குழந்தைகள் நினைவாகவே இருக்கிறீர்கள். பேசாமல், உங்கள் ஊரைப் பார்க்கப் போய்சேருங்கள்!’ என்று கறாராகச் சொன்னார்கள்.

    செல்வம் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘ஆமாம்,’ என்றார் வருத்தமாக. அவ்வப்போது தாய்நாடு திரும்பி, மனைவி, குழந்தைகளைப் பார்த்துவிட்டு, எங்கோ தனியாக இருப்பது பொறுக்க முடியாததாக இருந்தது.

    அதற்காக, பிறரைத் தொல்லைப்படுத்தலாமா? இவரது தப்பாத வருகையால், அவர்களுக்கு வெளியில் எங்கும் போக முடியவில்லை. ஓய்வு நாட்களிலும் ஓய்வாக இருக்க முடியவில்லை.

    அரைமனதுடன் சொந்த நாட்டிற்குப் போனார் செல்வம்.

    ‘இரண்டு வீடுகள் வாங்கிவிட்டான்!’ என்று பிரமித்தார்கள் நண்பர்கள். அவர்களுக்குத் தெரியவில்லை, எப்படி ‘பக்கித்தனமாக’ பணம் சேர்த்தார் என்று.

    பிறரது வாழ்க்கைப் பிரச்னைகளில் உண்மையான அக்கறை காட்டாது, ஒருவர் தன் நலனையே யோசித்துக்கொண்டிருந்தால் மரியாதை குறைந்துவிடும்.

    செல்வத்தைப் போன்றவர்கள் எல்லாரிடமும் ஒரே விதமாகப் பழகமாட்டார்கள். ‘இவருடன் பழகினால் தனக்கு என்ன நன்மை கிடைக்கும்?’ என்று கணக்குப்போட்டு, அதன்படி நடப்பார்கள்.

    இவர்களுக்கு உண்மையான நண்பர்கள் எப்படிக் கிடைப்பார்கள்?

    Share
  • தனித்திருப்போம் விழித்திருப்போம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    மெல்பேண், ஸ்திரேலியா

    நிலைபெறுமா றெண்ணிநிற்க
    நீள்புவியில் விரும்பிடுவோம்
    அலைபாயும் மனமதனை
    அடக்குதற்குத் துணிந்திடுவோம்
    நிலையில்லாப் பொருளையெலாம்
    நினைப்பினின்று அகற்றிடுவோம்
    நெஞ்சமதில் இறைநினைப்பை
    நிரந்தரமாய் இருத்திடுவோம்!

    ஏகாந்தம் இனிதென்று 
    எப்போதோ இயம்பியதை
    வாழ்நாளில் கடைப்பிடிக்க 
    வாய்க்கும்நிலை வந்திருக்கு
    தனித்திருப்போம் விழித்திருப்போம்
    தலையிடிகள் ஓடிவிடும்
    நாமெடுக்கும் எச்சரிக்கை
    நாட்டையுமே காத்திடுமே!

    சுத்தமே சோறிடும்
    என்பதனை மனமிருத்தி
    நித்தமுமே சுத்தமதை
    நிரந்தரமாய் ஆக்கிடுவோம்
    பயங்கொள்ளல் ஆகாது
    எனச்சொன்ன பாரதியை
    உளங்கொண்டு செயற்பட்டால்
    கலங்கல்நிலை தெளிவாகும் !

    மஞ்சளது முக்கியத்தை
    மனமமிப்போ உணர்கிறது
    வேப்பிலையின் மகத்துவமும்
    விரிவடைந்து போகிறது
    துளசியிலை நீர்பருகல்
    தூய்மையெனத் தெரிகிறது
    பழமையினை ஒதுக்கியது
    பிழையெனவே புரிகிறது!

    கைகழுவல் எனும்வார்த்தை
    கருத்திருத்தல் அவசியமே
    மெய்தொட்டுத் தீண்டுதலை
    விலக்கிவிடல் அவசியமே
    வீட்டைவிட்டு வெளியேறாது
    இருப்பதுவும் அவசியமே
    நாட்டுநிலை தனையெண்ணி
    நடப்பதுநம் அவசியமே!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 251

    படக்கவிதைப் போட்டி – 251

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அமுதா ஹரிஹரன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (29.03.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கடலும் வானும் கைகோத்து நிற்கும் கவின்மிகு காட்சிக்கு மேலும் பொலிவூட்டுகின்றது அவற்றை நோக்கிநிற்கும் நங்கையின் நளினத் தோற்றம்! பல்வண்ணக் கலவையாய் நம் கண்களுக்கு நல்விருந்தூட்டும் இவ்வரிய காட்சியைப் படமாக்கியிருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இதனைப் படக்கவிதைப் போட்டி 250க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள் சென்று சேரட்டும்!

    ”கடல்நோக்கித் தவமிருக்கும் காரிகையோ?
    காதலன் வரவிற்காய்க் காத்திருக்கும் கன்னிகையோ?
    இயற்கையினைக் காதலிக்கும் இனியவளோ?”
    என்று இந்தப் பெண்ணரசி பற்றி எண்ணங்கள் சூழ்கின்றன என்னுள்!
    விடைசொல்ல வாருங்கள் என்று கவிஞர்களைக் கனிவோடு அழைக்கிறேன்!

    *****

    கடல்நோக்கி நிற்கும் காரணமென்ன? படகுகள் வருமென்ற எதிர்பார்ப்பா? கடலலை காணும் குதூகலிப்பா? என்று வினாக்களை அடுக்கி வனிதையிடம் விடை கேட்கின்றார் திருமிகு சுதா மாதவன்.

    கடலினை நோக்கிக்
    காண்பதென்ன காரிகையே!
    நீலவானும் கடல் நீரும்
    ஓர் வண்ணம் என்றோராய்வா?
    படகுகள் ஒன்றும் காணோம்
    மிதந்து வருமென எதிர்பார்ப்பா?
    கப்பல்களும் ஆடி வரும்
    காட்சி காணக் கண்விரிப்பா?
    கரை மீது அடிக்கும் அலை
    காணக் காணக் குதூகலிப்பா?
    ஆதவனும் சந்திரனும்
    எங்கேயெனப் பரிதவிப்பா?
    அவர்களும் தம் கடமை செய்ய
    சென்று விட்ட புன்சிரிப்பா?
    மனதில் எழும் எண்ணங்களை
    மடை திறந்து கொட்டிவிடு!
    திறம்படவே பதிலைச் சொல்
    திரும்பி நில் தேவதையே!!!

    *****

    ”காலமெலாம் அறியாமைக் காரிருளுள் வைத்தாலும் ஞானஒளிக் கதிரவனாய் புதுவிடியல் காட்டிடுவாய்!” என்று நங்கைக்கு நல்லறிவு கொளுத்துகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    திடங்கொண்டு போராடு!

    ஆர்ப்பரிக்கும் அலைபோலே
    பேரிரைச்சல் போட்டாலும்
    ஆழ்கடலின் அமைதியினை
    அடிமனதில் தேக்கிவைப்பாய்!

    கார்குழலி என்றுனையே
    காதற்சிறை வைத்தாலும்
    பார்புகழும் சாதனைகள்
    பலநூறு படைத்திடுவாய்!

    காலமெலாம் அறியாமைக்
    காரிருளுள் வைத்தாலும்
    ஞானஒளிக் கதிரவனாய்
    புதுவிடியல் காட்டிடுவாய்!

    மென்மையான மலரென்று
    மங்கையுன்னைச் சொன்னாலும்
    திண்மையான உள்ளத்திலே
    திடங்கொண்டு போராடிடுவாய்!

    *****

    நல்ல சிந்தனைகளையும் நயமிகு கற்பனைகளையும் கவிதைகளில் ஊற்றி எழிலேற்றியிருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    காத்திருக்கிறாள்…

    கண்கள் காட்டிய பாதையிலே
    கருத்து மிணைந்த காதலிலே
    அண்மையில் வந்த மணநாளும்
    அப்புறம் தள்ளிப் போனதுவே,
    எண்ணம் பெரிதாய்ப் பணிக்காக
    எங்கோ சென்றவன் வரவில்லை,
    கண்ணில் நீருடன் காத்திருக்கிறாள்
    கடலலை தன்னைத் தூதனுப்பியே…!

    ”பணிதேடிச் சென்ற காதலன் கரம்பற்ற வாராததால் மணநாள் தள்ளிப் போக, கண்ணீரோடு அவனுக்குக் கடலலையைத் தூதுவிட்டுக் காத்திருக்கின்றாள் இந்த மாது!” என்று கவிதையில் ஒரு சோக நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • (Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு

    (Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு

    (Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு

    மு. மோகனலட்சுமி

    முனைவர் பட்ட ஆய்வாளர்

    அரிய கையெழுத்துச் சுவடித்துறை

    தமிழ்ப் பல்கலைக்கழகம்

    முன்னுரை

     பெருமையும் வளமும் பெற்ற தமிழ் மொழியைப் பன்னெடுங்காலமாக வளர்த்த இலக்கியங்களும் இலக்கணங்களும் நம் மொழியின் இரு கண்களாகக் கருதப்படுகின்றன. ஓர் இலக்கியத்தில் அல்லது இலக்கணத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும் மொழியமைப்புகளையும் விளக்கிக் கூறுவதற்கென உரைகள் தேவைப்பட்டன.

    2500 ஆண்டுகளுக்கு முன்னர்ப் படைக்கப்பட்ட தொல்காப்பியத்தைப் புரிந்து கொள்வதில் சிக்கல்கள் நேரும்போது உரையாசிரியர்கள் மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்தரும் வகையில் உரைகள் எழுதிச் சிறப்புச்செய்தனர். அவர்களின் அணுகுமுறை, கல்வி கேள்விகளில் கிடைத்த பட்டறிவு, குறிக்கோள் போன்றவற்றின் அடிப்படையில் மொழி நடை மாறியிருப்பதைக் காண முடிகிறது. நிறைய சான்றோர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள்.

    இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகிய ஐவருமே தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய பெரும் சிறப்பு வாய்ந்த உரையாசிரியர்கள் ஆவர் (சுப்பிரமணியன், 2004).

    ‘’இலக்கியம் இலக்கணம் எனும் இரண்டில் முதன்முதலில் இலக்கண நூல்களுக்கே உரைகள் எழுதத் தலைப்பட்டனர் சான்றோர் பெருமக்கள்’’ என்று [இளங்குமரன், 1988-பக். 28] இலக்கண வரலாற்றில் கூறுகிறார்.

    காலந்தோறும் விரிவடைந்து வருகின்ற ஆய்வுலகில் எழுகின்ற புதுச் சிந்தனைகள், ஆய்வுநெறி அனுகூலங்கள் போன்றவை உரையாசிரியர்களின் உள்ளத்தில் பதிந்து அவற்றின் தாக்கத்தால் புதிய கோணங்களில் இலக்கணத்தை ஆராய்ந்து தெளிவுரை, புத்துரை, விளக்கவுரை, பொழிப்புரை, சிற்றுரை, பேருரை, நயவுரை, போன்ற பல உரைகளும் எழுதி உரைமரபை உருவாக்கித் தந்துள்ளனர்.

    பதிப்புகள்

    ‘’முதன்முதலில் அருஞ்சொற்களுக்குப் பொருள் தரும் வகையிலேயே உரைகள் தொடங்கின. சொற்களைக் கொண்டுகூட்டி முடிக்கும் வகைகளுமே முதற்படிகளாக அமைந்தன. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து போன்ற நூல்களுக்கு மிகச் சுருக்கமான குறிப்புரையே எழுதப்பட்டன.’’ [அரவிந்தன், 2018]. இதைத்தொடர்ந்து, குறிப்புரை களுடன் சொல்லிவந்த விளக்கம், மேற்கோள் ஆகியவற்றோடு உரைகள் விரிவடைந்தன. பதிப்புக்களும் அவ்வாறே மாறிவந்தன.

    பல உரையாசிரியர்களும் எழுதிப் படைத்த உரைகளைத் தொகுத்துச் சரிபார்த்துப் பிழைகளை நீக்கி, விடுபட்டவைகளைத் தேடியெடுத்து, உரைகளுக்கான விளக்கங்களுடன் பதிப்பிப்பது என்பது எளிதான பணி அன்று.  பனையோலைகளில் இருந்த நூல்களை அச்சேற்றிப் பதிப்பித்தோரின் சமூகச் சிந்தனைகளும் மொழிச் சிந்தனைகளும் போற்றுதற்குரியன.

    இவ்வாறான நிலையில் ‘குருசாமி ஐயர்’ என்னும் இயற்பெயர் கொண்டு பின்னாளில் தமிழியக்கத்தலைவர் மறைமலை அடிகளின் கருத்துப்படி ‘அடிகளாசிரியர்’ எனத் தம் பெயரை மாற்றிக்கொண்டவர்இவர். இச்சான்றோரின் தொல்காப்பியப் பதிப்புக்கள் பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

    அடிகளாசிரியரியரின் தமிழ்ப் பணி

                மூலநூல்களைக் கற்பிக்கும் போது எதிர்ப்பட்ட இன்னல்களை நீக்குவதற்கு உரைநூல்களே துணைநின்றன. அதே நேரத்தில் சுவடி வடிவில் இருந்தவற்றை அச்சு வடிவிற்குக் கொண்டுவந்து பொதுமக்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி செய்த முயற்சியின் வெற்றி பதிப்பாசிரியர்களையே சாரும்.  அவர்களுள் அடிகளாசிரியரின் பங்கு மிகச் சிறந்தது ஆகும்.

                ‘பேதைமையை மறுத்தல்’ அடிகளாசிரியரின் அடிப்படைப் பண்பாகும். தமிழ் மொழியும் வடமொழியும் இறையுணர்வின் இரு கண்கள் என்ற கூற்று பேதைமை யுடையதே என்பது அவர் கருத்து. தமிழ்ப் பண்பிலிருந்து வட மொழிக்குச் சென்ற கருத்துக்களை மீட்டெடுக்கத் தம்மை ஆற்றல்படுத்திக் கொள்ள வடமொழியையும் கற்றார்.

                ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.’

    [திருமந்திரம் 1984. செய்யுள் 81]

    என்னும் திருமந்திரத்தையே தனக்கிடப்பட்ட தெய்வ ஆணையாகக் கொண்டு தமிழ்ப் பணி செய்து வந்தார்.

                புதிய இலக்கியம் புனைவதை விட முன்னோர் மொழிந்தவற்றைப் பின்னோர் அறியப் பதிப்பிக்கும் பணியே சிறப்புடையதுஎன எண்ணித்தொல்காப்பியம் முதலான முப்பது  நூல்களுக்குப் பதிப்பாசிரியராக இருந்து செயலாற்றினார்.

                பலவகைகளிலும் ஆராய்ந்து முடிவை வெளிக்கொணர்தல், கற்போரைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் புரியும் படியும் கருத்துக்களைத் தருதல், சமூகத்தின் கல்வி அறிவு வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டு பதிப்பித்தல், நூலாசிரியரின் அல்லது உரையாசிரியரின் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் கருத்துக்களை அறிந்து உரையெழுதுதல் போன்றவற்றைத் தம் குறிக்கோளாகக் கொண்டு தொல்காப்பியத்தைப் பதிப்பிக்கத் தொடங்கினார்.

                இலக்கணங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போதுஇலக்கியத்திற்கு உரை எழுதுவது ஓரளவு எளிமையாகும். ஆனால் மரபு வழுவாது கருத்துக்கள் கூறவேண்டிய கட்டாயம் இலக்கணத்திற்கு உண்டு [நன்னூல்,1984]. அது மட்டுமல்லாமல் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் குறிக்கோளை உள்ளத்தில்கொண்டு இலக்கண நூல்களைப் பதிப்பித்தவர்களுள் அடிகளாசிரியர் முக்கியமானவர்.

    ‘அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்புகள் எளிமைப்படுத்தப்பட்ட முறையில் பதிக்கப்பட்டுள்ளவை என்பதே அவற்றின் தனிச் சிறப்பாகும்.’ [சிவபெருமான், 2009]

    அடிகளாசிரியர் சி.வை.தாமோதரம் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, கு.சுந்தரமூர்த்தி, தி.வே.கோபாலையர், போன்ற தொல்காப்பியப் பதிப்பாசிரியர் களுக்கும் இவருக்குமான பதிப்பு வேறுபாடுகள் பல உண்டு. முதலாவதாக, சிறப்புப் பாயிரத்திற்கு மட்டுமே இருபது பக்க அளவில் விளக்கவுரை எழுதியிருப்பது அவருடைய தனித் தன்மையாகும். இரண்டாவதாக, இளம்பூரணாரின் உரையை அடிப்படையாகக் கொண்டு பதிப்பின் போது வெகுவாக ஆராய்ந்து, சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையார் ஆகியோரின் உரைகளையும் இலக்கண நூல் உரையாசிரியர்களின் உரைகளையும் நிகண்டுகளையும் பயன்படுத்தி உரை எழுதியது. மூன்றாவதாக, உரைக்கே உரைவிளக்கம் எழுதிப் பதிப்பிக்கும் முறையைக் கையாண்டார்.

    உரையாசிரியர்களின் மொழி நடையைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் இன்னல்களை நீக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு உரைவிளக்கம் அளித்தார். அதை அவருடைய சிறந்த பங்களிப்பு எனக் கூறலாம்.எடுத்துக்காட்டாக,

    தொல்காப்பிய சொல்லதிகார இளம்பூரணர் உரைப் பதிப்பில் ‘உயர்திணை’ பற்றிய உரை விளக்கம் மிக அருமையானதாகும்.

     

    ‘’உயர் திணை என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் கூறிய விளக்கத்தை ஒன்றன்பின் ஒன்றாகக் குறிப்பிட்டுக் கடைசியில் தம் கருத்தையும் நிலை நாட்டியுள்ளார்.

                சேனாவரையர்                      –        மக்கட்சாதி

    நச்சினார்க்கினியர்               –       உயர்ந்த ஒழுக்கம்

    தெய்வச்சிலையார்             –       உயர்தல் என்பது மிகுதி

               கல்லாடனார                             –       உயர்திணை என்பது இறந்த கால    வினைத்தொகை

             மயிலைநாதர்                              –      உயர் என்பது மிகுதி, திணை என்பது பொருள்

    சங்கரநமச்சிவாயர்                –       திணை என்பது பல பொருள் குறித்த ஒரு சொல். ஈண்டு குலத்தினை                                                                                      உணர்த்துகிறது.

    இவற்றை எல்லாம் தொகுத்துக் கூறிய அடிகளாசிரியர். இறுதியில் தம் கருத்தான அதற்குப் ‘பொருள் என்னும் பொருளே தக்கதாம்’ என்பதை எடுத்துக் கூறுவது அவர் கையாளும்  உரைவிளக்க உத்தியாகும்.

    இவர் இளம்பூரணாரின் உரையைத் தெரிவுசெய்ததற்குக் காரணம், ‘தொல்காப்பியத்தை உணர்ந்துகொள்ள இளம்பூரணர் உரையே ஏற்றது என்பது அடிகளாசிரியரின் துணிபாகும். எனவே, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்-செய்யுளியல் மற்றும் ஏனைய எட்டு இயல்கள் ஆகியவற்றைப் பதிப்பிக்க இளம்பூரணர் உரையையே தேர்வு செய்தார். அவ்வாறே பதிப்பித்தும் வந்துள்ளார்.’  எனச் சிவபெருமான் தம் முன்னுரையில் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

    தொல்காப்பிய எழுத்ததிகார வளர்நிலைப் பதிப்பில் இவரின் பங்கு முக்கியமானது. அவ்வுரையைக் கரந்தைப் புலவர் கல்லூரியில்மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் போது அதிலுள்ள பிழைகளை நீக்கி வடிவமைத்தார். அதுவே மாணவர்களையும் ஈர்த்தது என்பதில் எந்த விதமான ஐயத்திற்கும் இடமில்லை.

    சிறப்புப் பாயிரத்திற்கென 25 பக்க அளவில் விளக்க உரையும் நூல் மரபு பற்றி 35 பக்கங்களில் தெளிவுரையும் எழுதியது அவர்க்கு இலக்கணத்தில் இருந்த ஆர்வத்தை மேம்படுத்தி நம் இலக்கண அறிவையும் தூண்டியதில் வியப்பொன்றுமில்லை.

    எழுத்ததிகாரப் பதிப்பும் அச்சிடுதலும்

    முதன்முதலாக, 1969-இல் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தின் இளம்பூரணர் உரையைத் தம் சொந்தப் பொருட்செலவிலேயே வெளியிட்டார். இதற்காக அவர் நான்கு ஆண்டுக்காலம் கடும் உழைப்பை மேற்கொண்டு பின்னர் அச்சுப்பணிக்கென இரண்டு ஆண்டுக் காலம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.  புதிதாகப் பதிப்பிப்பவர்களில் பெரும்பாலோர் இவ்வின்னல்களைச் சந்தித்திருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

    பதிப்புத் தொடர்பாக, அடிகளாசிரியர் அனுபவித்த இன்னல்கள் பல.தமிழ் வித்துவான்களிடமும் மடத்தலைவர்களிடமும் கேட்டுப் பயனில்லை. இவரிடமும் போதிய தொழில் நுட்பமில்லை.  இதனால் எல்லாம் கடவுள் செயலே என்று நம்பியிருக்கும் தறுவாயில் இராசபாளையம் மணிமேகலை மன்றத்தார் பூ.கு. குப்புசாமி ராஜா என்பவர் தொல்காப்பிய செய்யுளியல் இரு சூத்திர விளக்கக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தினார். பரிசுத் தொகை ரூ. 1000 எனவும் அறிவித்தார்.

    ‘ஐவகை யடியும் விரிக்கும் காலை

    மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்தும்

    எழுபது வகையின் வழுவிலவாகி

    அறுநூற்றிருபத் தைந்தா கும்மே’

    என்னும் நூற்பாவிற்கான விளக்கத்தை அடிகளாசிரியர் ‘ஐவகையடியும்’ விளக்கம்’ என்னும் கட்டுரையை மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் அவர்களை நடுவராகக் கொண்டு அவரது கட்டுரையே பரிசு பெறத் தகுதிவாய்ந்தது. எனினும் ஐயத்தை முழுமையாகத் தீர்க்கவில்லை. ஆதலால் பாதிப் பரிசு தரலாம் என முடிவு செய்தனர்.

    அடிகளாசிரியர் எழுதிய கட்டுரை சிறந்ததெனத் தேர்வாகியும் ரூ. 500 மட்டுமே கிடைத்தது. அதை வைத்துக் கொண்டு பணியைத் தொடங்கினார்.கீரம்பூர் குப்புசாமி ஐயரிடம் ரூ 500– ஐயும் மாணவர்  நா . முத்துசாமி அவர்களிடம் ஒரு தொகையையும் கடனாகப் பெற்றுப் பதிப்பை வெளியிட்டார்.

    அடிகளாசிரியரைப் போன்றே சேனாவரையரின் சொல்லதிகார உரையை முதன்முதலாகப் பதிப்பித்த பதிப்பு வேந்தரும் இன்னல்பட்டார்.‘’சி. வை. தாமோதரம் பிள்ளையும்அதை அச்சிடுவதற்கான பொருள் இல்லாத போது பர்மா செல்வந்தர்களின் பொருளுதவியுடன் உரையை அச்சிட்டார். இவர் தொல்காப்பியச் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையை 1868-ஆம் ஆண்டு வெளியிட்டார்.’’ [பாண்டுரங்கன், 2008]. இவரைப் போன்றே அடிகளாசிரியரும் பொருளாதாரச் சிக்கலிலிருந்து வெளிவர வள்ளல்களின் துணையை நாடியதில் வியப்பு ஏதும் இல்லை[அடிகளாசிரியர்,1969].

    எழுத்ததிகாரத்தின் மேன்மையையும் எளிமையையும் கருத்தில் கொண்டு பல பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மாணவர்களுக்குத் தொல்காப்பியத்தைக் கற்பிப்பதற்கு இப்பதிப்பையே பயன்படுத்தினர் என்பது அடிகளாசிரியரின்  விளக்கத்திற்கும் செம்மையான பதிப்பிற்கும் கிடைத்த பெருமை எனலாம்.

    எழுத்ததிகாரத்தின் இப்பதிப்பின் சிறப்பை உணர்ந்த அப்போதைய தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தரான மாண்பமை வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் அடிகளாசிரியரைத் தமிழ்ப் பல்கலைக் கழகச் சுவடித்துறையில் சிறப்புநிலைப் பேராசிரியராக நியமனம் செய்தார். அதோடு, தொல்காப்பியத்தை முழுவதுமாகப் பதிப்பித்துத் தரும் பணியையும் அவரிடம் ஒப்படைத்தார் என்பது அடிகளாசிரியரின் பதிப்பின் மேலும் அவரது உழைப்பின் மேலும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.

    எழுத்ததிகாரப் பதிப்பின் சிறப்பு பல்வேறு பேராசிரியப் பெருமக்களால் புகழப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. குறிப்பாக, மு சண்முகம் பிள்ளை [1978] அவர்களைக் கூறலாம். அவரைத் தொடர்ந்துதெ. ஞானசுந்தரம், அபிரகாம் அருளப்பன்  போன்ற பேராசிரியர்களும் அடிகளாசிரியரை மிகுந்த பதிப்புத் திறன் வாய்ந்தவர் என்று தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

    சொல்லதிகாரப் பதிப்பும் அச்சிடுதலும்

    எழுத்ததிகாரப் பதிப்பின் திறமும் பொருளதிகாரப் பதிப்பின்எடுப்பும் தோன்றுமாறு சொல்லதிகாரப் பதிப்பைத் தனி மதிப்புடன் பதிப்பித்துள்ளார்.

                தொல்காப்பிய எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை பதிப்பித்த ஆண்டு 1969. சொல்லதிகாரம் பதிப்பித்த ஆண்டு 1988. சொல்லதிகாரப் பதிப்பு முடிவடைய 19 ஆண்டுகள் ஆயின. கரந்தைப் புலவர் கல்லூரியில் எடுத்த முயற்சி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நிறைவேறியது. இச்செய்தியைக் குறிப்பிடும் போது அவர்,             ‘’யான் தஞ்சாவூர் கரந்தைப் புலவர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த போது பல இலக்கண நூல்களைக் கற்றேன். அவற்றில் பிழைகள் இருப்பதைப் பார்த்து ‘இலக்கண நூல்களில் காணப்படும் பிழைகள்’ [பக் 42] என்னும் தலைப்பில் எழுதினேன். தமிழ்ப்பொழில் இதழில் வேண்டுகோள்கட்டுரையாக வெளியிட்டார்கள்.

    ‘’இப்படிப் பிழைகள் இருப்பது நம் தாய் மொழிக்கு இழுக்கு தரும்.அதனால் தமிழறிஞர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு ஓலைச் சுவடிகள், அச்சுப்படிகள்  போன்றவற்றை வைத்து ஒப்பாய்வு செய்து திருத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்ட போது யாரும் முன்வரவில்லை.’’

    தமிழ் மக்கள் செய்த தவப் பயனால் தமிழ்ப் பல்கலைக் கழகம் தோன்றிற்று. பல்கலைக்கழகத்தார் இப்பணிக்கான முயற்சியை அடிகளாசிரியரிடம் ஒப்படைத்தபோது, ‘’முதன் முதல் தொல்காப்பிய செய்யுளியல் இளம்பூரணர் உரையை ஆராய்ந்து கொடுத்தேன். ஆனால் 1985-இல் தான் அச்சிட்டு வெளியிட்டனர். அதன் பிறகுதான் சொல்லதிகார உரையைத் தொடங்கினேன்’’ என்று குறிப்பிடுகிறார். [அடிகளாசிரியர், தொல். சொல். இளம்பூரணர் உரை பக்கம் 7,8]

    தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் விருப்பத்தை முழுமை செய்ய, தம் உடல் நலமின்மையையும்பொருட்படுத்தாமல் அரும் முயற்சி செய்து இளம்பூரணரின் உரையுடன் சொல்லதிகாரத்தைப் பதிப்பித்துக் கொடுத்தார்.

    பதிப்பிற்கு ஆதாரமாக அவர், திருப்பாதிரிபுலியூர் தவத்திரு ஞானியார் மடத்து ஓலைச் சுவடி, திருவாடுதுறை ஆதீனத்து ஓலைச் சுவடிகளோடு அதுவரை அச்சில் வெளியான இலக்கண இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டும் மிகவும் முயன்று சொல்லதிகாரத்தைப் பதிப்பித்தார்.

    சொல்லதிகாரத்தைப் பதிப்பிப்பதற்கு அவர் 19 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் என்பது அவரது கடின உழைப்பையும் முயற்சியையும் அதன் சிறப்பையும் உறுதிப்படுத்துகிறது. பதிப்பு மிகச் சிறப்பாக வெளிவர வேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கறைக்கு அது சான்றாக அமைகிறது.

    அவருடைய உரைவிளக்கத்திற்கு இன்னுமொரு சான்று

    ‘’இடையெனப் படுப பெயரோடும் வினையோடும்

    நடைபெற் றியலும் தமக்கியல்பிலவே.’’

    [தொல். சொல். இடை.நூற்பா1]

    இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் உரை இல்லை. ஆனால் பிற உரையாசிரியரின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கம் தருகிறார். இதனால் ‘வந்தது கொண்டு வராதது முடித்தல்’ என்னும் உத்திக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது அவரது பதிப்புப் பணி.

    அடிகளாசிரியர் பதிப்பித்த தொல்காப்பிய சொல்லதிகாரம் 510 பக்கங்கள் மற்றும் 456 நூற்பாக்களை உள்ளடக்கியது. இவற்றையெல்லாம் விளக்கிக் கூறும் திறத்தால் இப்பதிப்பை அரிய நயங்கள்  கொண்ட பதிப்பாகக் கொள்ளலாம்.

    தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்101-ஆவது வெளியீடாக, 1988-ஆம் ஆண்டு ‘தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை’ என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.

    செய்யுளியல் பதிப்பும் அச்சும்

     

    வயது முதிர்ந்த நிலையில்  கண்நோயால் போராடிய போது தம் குடும்பத்தை விட்டுத் தம் இளைய மகனுடன் மட்டும் தஞ்சாவூர் வந்து தங்கிப்பணியாற்றித் தம் பதிப்புப் பணியை மேற்கொண்டார்.

    பதிப்புப் பணிக்கான முயற்சியை மேற்கொள்ளும் போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த மாண்புமிகு வ. அய். சுப்பிரமணியம் அவர்கள் சிறப்பான பல அரிய பணிகளை நிறைவேற்றி வந்தார். அப்போது இப்பதிப்புப் பணிப் பற்றிய கருத்துக்களை முன் வைத்தபோது அவர்,

    ‘’பதிப்புப் பணி மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். அதனால் நீங்கள்‘ஏடு, கையெழுத்துப்பிரதிகளை முதலில் தொல்காப்பியம் முழுமைக்கும் திரட்டுக. பாடபேதம் பார்க்க, மூல பாடம் நிர்ணயிக்க’இத்தகைய தகவல்களைத் சேகரித்த பின் பதிப்புப் பணியை மேற்கொண்டால் பதிப்பின் தரம் சிறந்ததாக இருக்கும்.’’ என்று கூறிப் பதவிக்காகஆணையை அளித்தார்கள்.

    ‘இக்கட்டளையை ஏற்றுக்கொண்ட அடிகளாசிரியர் கடவுளின் அனுக்கிரகத்தால்தான் இப்பணி கிடைத்தது’ என உணர்ந்து தம் முயற்சியை மேற்கொண்டார்.

    துணைவேந்தரின் கருத்துப்படியே, ஓலைப்பிரதிகள், அச்சுப்பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள், செந்தமிழ்ச் செல்வி முதலான ஆராய்ச்சி இதழ்களில் காணப்படும் கட்டுரைகள், கருத்தரங்க வெளியீடுகள், அறிஞர்கள் எழுதிய பொருளதிகாரப் பொருள் பற்றிய தனி வெளியீடுகள், தமிழ் ஆராய்ச்சி தொடர்பான நிறுவனங்களின் வெளியீடுகள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தம் ஆய்வை மேற்கொண்டார்.

    இவரின் உழைப்பின் உந்துதலால் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்புத்துறையினர்1985-ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் அடிகளாசிரியரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இளம்பூரணாரின் தொல்காப்பியப் பொருளதிகாரம் செய்யுளியல் உரையைப் பதிப்பித்தனர்.

    பின்னர் செய்யுளியல் தவிர்த்த ஏனைய எட்டு இயல்களுக்கும் உரைப்பதிப்பு வெளியிட ஆய்வுகள் மேற்கொண்டார். அவற்றைப் பற்றிய நீண்ட ஆய்வுரையின் கையெழுத்துப் பிரதியைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு உரித்தாக்கினார். அது வெளிவருமானால் தொல்காப்பியத்திற்கான அவருடைய உரை முழுமையாகும்.

    செய்யுளியல் பதிப்பில் உரை விளக்கம்

     தொல்காப்பியர் செய்யுள் உறுப்புக்களைச் சொல்லும் இடத்தே யாப்பு என்றொரு உறுப்பை ஆறாவது உறுப்பாகச் சொல்லியுள்ளார். யாப்பின் விளக்கம் கூறுமிடத்து,

                ‘’எழுத்து முதலா ஈண்டிய அடியில்

    குறித்த பொருளை முடிய நாட்டல்

    யாப்பென மொழிப யாப்பறி புலவர்.’’

    [பொருளாதிகாரம் செய்யுளியல் நூற்பா-74]

    சில புலவர்கள் எழுத்து, அசை, சீர்,அடி இவற்றை இனிய ஓசைப்பட அமைத்தல் என்று யாப்பை அரைகுறையாகக் கூறும் போது அடிகளாசிரியர்,‘யாப்பு- பொருள் யாத்தல் என்க’ என்று குறித்த பொருள் முற்றுலும் தெளிவாக அமையுமாறு கூறினார்.அடியில் வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தொல்காப்பியர் யாப்பு என்பதைச் செய்யுளின் உறுப்பாகக் கூறியுள்ளார்.’ என்று சிறப்பான உரை விளக்கம் தருகிறார். அது அவரின் ஆய்வுத்திறனையும் எடுத்தியம்பும் திறனையும் வெளிக்காட்டுகிறது.

    செய்யுளியலில் பாட வேறுபாடுகள்

    பொதுவாக,ஓலைச்சுவடிகளைப்படிஎடுப்பவர்களால் பிழைகள் நேரிடுவதுண்டு. அல்லதுநூலாசிரியர்கள் கூறும் கருத்துக்களில் உரையாசிரியர்கள் மாறுபட்டு நிற்கும் போது பாடவேறுபாடுகள் தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றுகின்ற பாடபேதங் களை எவ்வாறு ஆராய்ந்து தெளிவுபடுத்துகிறார் என்பது அடிகளாசிரியருடைய உரைவிளக்கத்திற்குச் சான்று அளிக்கிறது.

    எடுத்துக்காட்டாக,

                ‘இறுவாய் ஒப்பினஃ தியை இயைபென மொழிப.’ என்பது இளம்பூரணர் பாடம்.      ‘இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே.’ என்பது பேராசிரியர் மற்றும்  நச்சினார்க்கினியர் பாடம். ‘இறுவாய் ஒப்பினஃ தியைபெனப்படுமே’ என்பது யாப்பருங்கலம் இயைபுத் தொடை இலக்கணம்.

    அதே நேரத்தில் மர்ரே பதிப்பு, பேராசிரியர் மற்றும் நச்சினார்க்கினியர் பாடத்தை முதலாவதாகவும், இளம்பூரணர் பாடத்தை இரண்டாவதாகவும்வேறுபட்ட பாடத்தை மூன்றாவதாகவும் அமைத்துத் தந்துள்ளனர். இவ்வாறு பாடபேதங்கள் ஏற்படுவதைச் சுட்டித் தம் கருத்துக்களை வெளிப்படுத்துவது அடிகளாசிரியரின் உத்தியாகும்.

    ‘இயைபு’ என்ற சொல்லே கேள்விக்குரியதாக அமைய, அடிகளாசிரியர் எல்லாவற்றையும் நுணுகி ஆராய்ந்து உரைவிளக்கம் தருவதால் அதன் சிறப்பு புரிவதோடு ஆராய்ச்சி முறையையும் மறைமுகமாக அறிந்துகொள்ள முடிகிறது எனலாம்.

    இளம்பூரணர் செய்யுளியல் 97-வது நூற்பாவுரையில் இயைபை இறுதிநிலை எழுத்தின் மேல் வைத்துக் காட்டுகிறார். ‘இறுவாய் ஒப்பினஃ தியைபெனப்படுமே’ என்பது யாப்பருங்கல உரை [40]. இதன் உரையாசிரியர் அடிதொறும் இறுதிக்கண் எழுத்தாலும் சொல்லாலும் ஒன்றிவரின் இயைபு என்கிறார்.யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் அடிதொறும் இறுதிக்கண்நின்ற எழுத்து, அசை, சீர் ஒன்றுதல் என்கிறார்.பல்யாகனாரும் நந்தத்தனாரும் இறுதி சீர் ஒன்றுதலையே இயைபு என்றனர்.

                ‘’இயைபே இறு சீர் ஒன்றும் என்ப

                இறு சீர் ஒன்றின் இயைபெனப்படுமே’’

    இலக்கண விளக்க நூலார் ஈற்றெழுத்து ஒன்றிவருதல் இயைபு என்றனர்.

    ‘’இறுவாய் ஒப்பின் இயைபுத் தொடையாம்.’’

    இவற்றிலிருந்து பாட வேறுபாடு மட்டுமல்லாமல் இயைபு என்பதையும் விளக்கிவிட்டபெருமை அடிகளாசிரியரையே சாரும்.

    அடிகளாசிரியர்தாம் பதிப்பிப்பதற்கு முன்பு வெளியான நூல்களையும் உசாத்துணையாகக் கொண்டு அருமையான பதிப்பை  முழுமை செய்தார். சான்றாக,

    வ.உ. சிதம்பரம் பிள்ளையின் செய்யுளியல் பதிப்பு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரின் செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் இளம்பூரணர் உரை.யாப்பருங்கலக்காரிகை உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரச்சோழிய உரை, நேமிநாத உரை போன்ற பல உரைகளையும்  பயன்படுத்தியதோடு, ‘’ஒரு நூலைப் பதிப்பிக்கத்   தொடங்குவதற்கு முன்பு அந்நூலோடு தொடர்புடைய அனைத்து நூல்களையும் திரட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.’’ என்ற கருத்தினையும் வலியுறுத்தினார்.[ அடிகளாசிரியர் தம் கைப்பட 1982-ஆம் ஆண்டு எழுதிய குறிப்புரை]. அதுவே அவரின் பதிப்புச் செம்மைக்குக் காரணமாயிற்று. பிழைகள் நேராவண்ணம் பார்த்துக்கொள்ளல் அவரது இயல்பு.

    பதிப்புக்களின் வடிவமைப்பும் சிறப்பும்

    அடிகளாசிரியரின் பதிப்புக்கள் செம்மையாக அமைவதன் காரணம் அவர் எடுத்துக்கொண்ட கவனமே. பதிப்பிக்கும் போது ஒவ்வொரு நூற்பாவுக்கும் கீழ்வருமாறு வடிவமைத்துக் கொண்டார்,

    1. நூற்பா, நுதலிய பொருள், நூற்பா பதவுரை, எடுத்துக்காட்டு, நூற்பாக் குறிப்பு, உரைக் குறிப்பு, பாட வேறுபாடு, சுவடி வேறுபாடு, பிற இலக்கண ஆசிரியர் கருத்து, பிற உரையாசிரியர் கருத்து, இவற்றில் இவர் சரியெனக் கொண்ட கருத்து என்னும் பதினொரு கூறுகளைக் கொண்டிருந்தது.
    2. உரைக்குறிப்புக்கள் தரும்போது ஒப்பீட்டு ஆய்வுமுறையைக் கையாண்டார். இளம்பூரணர் உரையோடு சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், மயிலைநாதர், யாப்பருங்கல விருத்திக்காரர், சங்கர நமச்சிவாயர் ஆகியோரின் உரைகளையும் தந்துள்ளார்.
    3. நூலாசிரியர் கருத்தை விளக்க உரையாசிரியரும் உரையாசிரியரின் கருத்தை விளக்கப் பதிப்பாசிரியரும் என்று காலத்தின் வழி நின்று உணர்த்தும் பணியே பதிப்பித்தல் எனத் தம் பதிப்பின் வாயிலாக மெய்பித்துள்ளார்.
    4. இவற்றோடு நூலின் இறுதியில் நூற்பாச் சொல்லகராதி, உரைப்பொருளடைவு, உதாரண மேற்கோள் அகராதி, நூற்பா முதற்குறிப்பு அகராதிஆகியவற்றைக் கொடுத்து பதிப்புக் கலைக்குப் புதிய வடிவம் கொடுத்துள்ளார்.

    பதிப்பிப்பதில் அவ்வளவு அக்கறையும் ஆழ்ந்த எச்சரிக்கை உணர்வுடனும் செயல்படும் அடிகளாசிரியர் அந்த அளவு அச்சகத்தாரும் மற்றோரும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் குறிப்புக்களையும் கொடுத்திருப்பது அவரது சமுதாய-கல்விச் சிந்தனையும் பதிப்பு பிழையின்றி வரவேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வமும்  மிகத் தெளிவாக வெளிப்படுவதைக் காணலாம்.

    சான்றாக,

    1. மூலமும் உரையும் பாட வேறுபாடுகளும் அடங்கிய பிரதி
    2. மூலத்திற்கும் உரைக்கும் விளக்கக் குறிப்பு அடங்கிய பிரதி

    இரண்டையும் அச்சகத்தார் அச்சிடும் போது கருத்தில் வைக்க வேண்டும். தாம் கொடுக்கும் குறிப்புக்களைப் பின்பற்ற வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். பதிப்பு மிகச் செம்மையாக வரவேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கறையைஇதில் காண முடிகிறது.

    1. மூலப் பாடத்தை அறிந்துகொள்ளச் சிவப்பு கோடுகள் போட்டுள்ளேன். அதைப் பெரிய எழுத்திலும்,
    2. மூலத்தின் பின் உரையை அச்சிட வேண்டும். அதாவது, மூலத்தை விடச் சிறிய எழுத்திலும் அச்சிட வேண்டும்.
    3. மேற்கோள், சிறப்புப் பெயர் இரண்டையும் உரைக்குப் பயன் படுத்திய எழுத்துக்களில் தடித்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும்,
    4. பாடபேதங்களைஅடிக்குறிப்பில் கொடுத்துவிடுக.
    5. மூலம், உரை, பாடபேதங்களை மேற்குறித்தவாறு அச்சிட்ட பின் பதிப்பாசிரியர் குறிப்புக்களை அச்சேற்றுங்கள்.போன்ற தெளிவான விளக்க முறை ஒன்றை வகுத்துக் கொடுத்த பெருமைக்குரியவர்.

    [அடிகளாசிரியர் தம் கைப்பட 1985-ஆம் ஆண்டில் எழுதிய குறிப்புரை. பக்கம் 85]

    முடிவுரை

    அடிகளாசிரியர் மிகத் திறமை வாய்ந்த பதிப்பாசிரியர். அவரது தொல்காப்பிய பதிப்புக்களைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இன்றும் தங்கள் இலக்கண வகுப்புகளில் பயன்படுத்துவது அவரின் பதிப்பிற்குக் கிடைத்த வெற்றியாகும். அவரின் தனிக் கவனமும் பதிப்புக்கள் செம்மையாக வரவேண்டும் என்பதில் காட்டிய அக்கறையும் அவருடைய பதிப்புக்கள் சிறந்து விளங்கக் காரணமாயின. அவருடைய ‘உரைக்கு உரைவிளக்கம்’ அளித்த உத்தி காலந்தோறும்  பின்பற்றப்படும் முன்மாதிரியாகத் திகழ்வதில் வியப்பொன்றுமில்லை.

    நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என்னும் மூவரில் பதிப்பாசிரியரின் பணிசிறப்பு மிக்கது என்பதை அடிகளாசிரியர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

    துணைநூற் பட்டியல்

    1. அடிகளாசிரியரின் சிவபெருமான், அ., தொல்காப்பியப் பதிப்புகள் ,  தமிழ்ப் பல்கலைக் கழகம்

    தஞ்சாவூர்,  2009.

    1. இலக்கண வரலாறு,  இளங்குமரன், இரா., மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1988.
    1. உரையாசிரியர்கள்,   அரவிந்தன், மு.வை, மணிவாசகர்பதிப்பகம், சென்னை, [எட்டாம் பதிப்பு],  தொல்காப்பியப் பதிப்புகள். சுப்பிரமணியன், ச.வே..உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை     2004
    1. சி.வை. தாமோதரம் பிள்ளை பாண்டுரங்கன், அ., செம்மொழி செய்தி மடல் 2. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,  சென்னை, 2008.
    1. திருமந்திரம் திருமூலர், கழகப் பதிப்பு,  சென்னை, 1984.
    1. தொல்காப்பியம்- சொல்லியல்  அடிகளாசிரியர். திரு, இளம்பூரணர் உரை [பதிப்பாசிரியர்],  தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 988.
    1. தொல்காப்பியப் பதிப்புகள் சண்முகம் பிள்ளை, மு., தமிழாய்வு -தொகுதி-8,  நன்னூல் தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர்,  1984.

    ======================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    இலக்கண நூல்களின் கருத்தைப் புரிந்துகொள்வதற்கு உரைகள் பெரிதும் துணை புரிகின்றன. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலுக்கு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் எனப் பலரும் உரை இயற்றியிருக்கின்றனர். இவ்வுரைகளைத் தொகுத்து, சரிபார்த்து, பிழைகளை நீக்கி வெளியிடுவது என்பது எளிதான பணி அன்று. அத்தகைய பணிகளை மு ன்னெடுத்த அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்புப் பணியினை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களுக்குப் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்த பெருமை அடிகளாசிரியருக்கு உண்டு. தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் இளம்பூரணருரையினைப் பதிப்பிப்பதற்கு இவர் எடுத்து கொண்ட முயற்சிகள், நூலை அச்சிட இவர் பட்ட இன்னல்கள் ஆகியவற்றைக் கட்டுரையாளர் நிரல்படத் தொகுத்தளித்துள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான வ.அய்.சுப்பிரமணியம் அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்பு முயற்சிகளை ஊக்குவித்தமை, தொல்காப்பியச் செம்பதிப்புகளுக்கான ஆலோசனைகளை வழங்கியமை ஆகியன குறித்த செய்திகளைக் கட்டுரையாளர் சுட்டிச் செல்கின்றமை பாராட்டுதலுக்குரியன.

    ======================================================================

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)

    சேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
    சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப
    முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு
    தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்

    தில்லைமூதூரில் வாழ்ந்த  திருநீலகண்டர் மனைவி, ‘’தீண்டாதீர்!’’ என்று கூறிய  சூளுரை கேட்டு, எல்லாப் பெண்களையும் மனத்தாலும் தீண்டிடாமல் வாழ்ந்தார்!

    இதனை  ஆறுமுக நாவலர்,

    ‘’அவர்கள் இருவரும் தங்கள் வீட்டினின்றும் புறப்படாதொழிந்து, அவ்வீட்டிலே தானே இருந்து, இல்லறத்திற்குரிய பிறசெய்கைகளெல்லாம் செய்து கொண்டு, புணர்ச்சியின்மையை பிறரறியாதபடி வாழ்ந்தார்கள். இளமைப் பருவத்தை யுடைய இருவரும் அவ்வாணையைப் பேணிக் கொண்டு, பலவருஷங்கள் செல்ல, யெளவனம் நீங்கி, வயோதிகர்களாகி, வருத்தமுற்றார்கள். உற்றும் சிவபத்தி சிறிதும் குறையாதவர்களாகி இருந்தார்கள்.

    கருணையே உருவமான பெருமான் , அவ்வடியாருடைய சிறப்பை உலகினர் முழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டு, ஒரு சிவயோகியாகி அடியார் இல்லத்துக்குச் சென்றார். அவரைக் கண்டவுடன் வணங்கி இல்லத்துக்குள் அழைத்துக் கொண்டுபோய் ஆசனத்தில் இருத்தி,  விதிப்படி கால்கழுவி, குடிக்க நீர்தந்து பூசைகள் செய்து வணங்கி எழுந்து, ‘’அடியேன், உங்களுக்குச் செய்யத்தக்க குற்றேவல் யாது?’’ எனக் கேட்டார். இறைவன் தம் திருக்கரத்தில் வைத்திருந்த திருவோட்டை அவருடன் தந்து,‘’ஒப்பற்ற இத்திருவோட்டை பத்திரமாக வைத்திருந்து மீண்டும் கேட்கும்போது தருக!’’ என்று கூறிக் கொடுத்தார் அதைக் கேட்ட அடியவர் அவரை வந்தனஞ் செய்து, அவ்வோட்டை வாங்கிக்கொண்டு, வீட்டிலே ஒரு பக்கத்தில் சேமித்து வைத்துவிட்டு, திரும்பி வந்து, போம்படி எழுந்த சிவயோகியாருக்குப் பின் சிறிது தூரஞ்சென்று, அவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார்.

    நெடுநாட்கள் கழிந்தபின், ஒருநாள் பரமசிவன் தாம் வைக்கக் கொடுத்த திருவோட்டை வைக்கப்பட்ட இடத்தில் இல்லா தொழியும்படி செய்து, அவ்வடியாருடைய உண்மைநிலையைப் பிறர்க்குப் புலப்படுத்தும்பொருட்டு முன் போலச் சிவயோகி வடிவங்கொண்டு, அவர் வீட்டுக்கு எழுந்தருளினார். அவர் சிவயோகியாரை முன்போல வழிபட்டு, “சுவாமி! தேவரீர் இவ்வீட்டிற்கு எழுந்தருளிவந்தது அடியேங்கள் பூர்வசன்மத்திற் செய்த தவத்தினாற் போலும்” என்று விண்ணப்பஞ்செய்து நிற்க; சிவயோகியார் “நாம் முன்னாளிலே உன்னிடத்திலே தந்த திருவோட்டை இப்பொழுது தா” என்றார். அதனைச்  சேக்கிழார்,

    ‘’வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
    சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப
    முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு
    தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்!’’ என்று  பாடுகிறார்.

    இப்பாடலில் தொண்டனார் எப்போதும் இறைச் சிந்தனையும், அடியார் வழிபாட்டுணர்வும் உடையவராய் விளங்கினார் என்பதைக் கூறுகிறார்! இதனால்  அவருடைய திருந்திய வாழ்வு நமக்குத் புலனாகின்றது. எதிரே சென்று இனிய உரைகள் கூறி, இல்லத்துக்கு அழைத்து வந்து  உரிய வழிபாட்டைச் செய்தலை சேக்கிழார் பின்னர் கூறியுள்ளார், இதனை இங்கே ‘’எதிர் வழிபாடு‘’ என்று கூறுகிறார்! இவ்வாறு அடியார் தம் இல்லம் நோக்கி வந்தது , முன் செய்த புண்ணியத்தின் பயன் என்றும்  தவத்தின் விளைவு என்றும் என்று சிந்தித்தார். ஆகவே இப்பிறப்பில் செய்த பாவங்கள் அகன்றதும், இப்பிறப்பில் தாம் செய்த தவம் பலித்தது    என்பதும் நமக்குப்  புலனாகின்றது!  இதனை இப்பாடலின்,

    ‘சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப’ என்ற தொடர் விளக்குகிறது.

    இறைவன்நமக்கு தனு என்ற புறவுடலையும். கரணம் என்ற அகக்க ருவிகளையும், புவனம் என்ற அனுபவப்பொருளையும், போகம் என்ற அனுபவத்தையும் தந்து, இவற்றில்  நமக்குக்  கசப்பையும்  தருகின்றான். இவை முறையான நெறியில் அமைந்தால், நம் உடல் ஞானஒளி வீசித்  திகழும். இதனை ‘’மொய்யொளி விளங்கும் ஓடு‘’ என்கிறார் .  இவையனைத்தையும்,

    ‘முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு’ என்ற  அடி  புலப்படுத்துகின்றது! அவ்வாறு இறைவன் தந்த அனைத்தையும் அவன் திருவடிகளில் சென்று சேரும்போது, ஒப்படைத்து விட  வேண்டும் என்பது, தத்துவம்! அதனைத் தந்து விட்டால், வீடுபேறு  என்னும்  நிரந்தர வாழ்வில் நிலைக்கலாம்! இதனையே ‘தந்து நில்‘ என்ற தொடர் விளக்குகிறது!

    இறைவன்  நமக்குத் தருவன அனுபவப்  பொருளே யாகும். அனுபவம் ஆசையை நீக்கும்; அதனால் பற்று நீங்கும் . ‘’அற்றது பற்றெனில் உற்றது வீடு!’’  ஆகவே இறைவனே நமக்குத் தந்து, தந்தவற்றை நீக்கியருளுவான்!

    ‘’உலகம் யாவையும் தாம் உள வாக்காலும்
    நிலை பெற்றுத்தலும் நீக்கலும் ‘’ இறைவன் திருவிளையாடல் என்கிறார் கம்பர்!

    ‘’விச்சு-அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் ‘’ என்பது  திருவாசகம்!   இதனையே   சேக்கிழார்,

    ‘எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்’ என்ற தொடரில் வைத்து விளக்குகிறார்! இனி முழுப்பாட்டையும் பயின்று பொருளுணர்ந்து மகிழவோம்,

    ‘’வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
    சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப
    முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு
    தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்!’’
    சேக்கிழாரின்  பாடல் நயம் படிக்கப் படிக்க இனிக்கிறதல்லவா?

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16

    தி. இரா. மீனா

    கோரக்கர்

    இவர் ’நாத’ பரம்பரையைச் சேர்ந்தவர். இயற்பெயர் கோரக்க நாதர். பசுக்களை மேய்ப்பது இவரது காயகம். அல்லமாபிரபுவிடம் “இஷ்டலிங்க தீட்சை“ பெற்றவர். சூன்ய சம்பாதனை வழி இவருடையது. ‘கோரஷபாலக மகாபிரபு சித்த சோமநாத இலிங்கம்’ இவரது முத்திரையாகும்.

    “மாவு பொம்மைக்கு  உறுப்புகள் கொடுத்து
    நெய்யினிப்புச் சேர்த்து நெருப்பில் சுட்டு சாப்பிட்ட பிறகு
    உறுப்புகளைத் தேடமுடியுமா? இது  பொருளினியல்பு
    காட்சியும் கண்ணோட்டமும் உடையவன்
    ஏகலிங்கத்தில் உள்ளவனுக்குக் கட்டுப்பட்டவன்
    ஆத்மாவில் கவனிப்பும் கவனிப்பாரற்றும் ஆனவன்
    கோரஷபாலக மகாபிரபு  சித்தசோமநாத இலிங்கம்.”

     கட்டிவாளய்யா

    சந்தனம் அரைப்பது இவரது காயகம். இவருடைய மனிதாபிமானம் குறித்து பல சரணர்கள் போற்றியுள்ளனர். ”சிக்கய பிரிய சித்தலிங்க இல்ல இல்ல நில்லு மாணு“ என்பது இவரது முத்திரையாகும்.  தத்துவ விளக்கம் ,சில வரலாற்று நிகழ்வுகள், சரணர்களைப் போற்றுதல் ஆகியவை வசனங்களில் இடம் பெறுகின்றன.

    1. “நான் நீயழித்து பரமலிங்கத்துள் இணைந்தவனுக்கு
    பரமென்பதில்லை இகமென்பதில்லை
    மறதியில்லை அறிவில்லை
    சிக்கய்ய பிரிய சித்தலிங்கா இல்ல இல்ல நில்லு மாணு”

    2. “பூமி உயர்வென்பேனா அது பாதத்திற்குள் அடக்கம்
    ஆகாயம் உயர்வென்பேனா அது கண்களுள் அடக்கம்
    பரதத்துவம் உயர்வென்பேனாஅது பேச்சில் அடக்கம்
    உயர்வு உயர்வு என்பது எங்கேயுள்ளது?
    அறிவிற்கு ஒழுக்கமில்லை,அடையாளத்திற்கு நிலையில்லை
    சிக்கய்ய பிரிய சித்தலிங்கா இல்ல இல்ல நில்லு மாணு”

    3. “அலைந்தால் உடலில்லை,நிற்கும் போது நிழலில்லை
    நடக்கும் போது கவனமில்லை,பேசும் போது மொழியில்லை
    உண்டால் துன்பமில்லை,உண்ணாவிட்டால் ஆசையில்லை
    கிடைத்ததில் நிறைவு ,புகழ்,உறவு,பகை,நிந்தனையில்லை
    அறிவில்லை,மறதியில்லை ,தானெனும் சிந்தனையற்றதால்.
    சிக்கய்ய பிரிய சித்தலிங்கா இல்ல இல்ல நில்லு மாணு”

    கனலிங்கிதேவா

    சுத்தூர் மடத்தலைவர் இவர். நாயகன்—நாயகி பாவனையில் அமைந்தவை இவரது வசனங்கள். ”கனலிங்கியமோகத மல்லிகார்ச்சுனா“ இவரது முத்திரையாகும்.

    1. “நெருப்பும் நெருப்பும் சேர்ந்தால் ஒளி
    நெருப்பும் புல்லும் சேர்வதாலான புகை உண்மை வெளிச்சமா?
    பரமாத்மன் சிந்தனையிலிருக்கும் ஞானியுடன் இணைபவன்
    தூய்மை பெறாமல் எப்படிக் களங்கமடைய முடியும்?
    ஞானியும் அஞ்ஞானியும் இணைவது பாலில் புளி சேர்ந்ததாம்
    கனலிங்கிய மோகத மல்லிகார்ச்சுனனே“

    2. “பொன்னின் நிறம் அறிபவன் பொற்கொல்லனன்றி
    உழுதுண்ணும் விவசாயிக்கு அது எப்படித் தெரியும்?
    இலிங்கமோடு சேரும் மொழியை
    இலிங்க வம்சாவளியினரன்றி, வேடதாரிகள் எப்படியறிவர்?
    கனலிங்கிய மோகத மல்லிகார்ச்சுனனே “

    3. “கூலிக்குச் செல்பவர் பொற்குடம் கண்டாற் போல
    மண்ணுலகில் மனிதப்பிறவி கண்டேன்
    மூடனிடம் என்றேனும் தெரியும் அரிய செயல் போல
    எனக்கு இலிங்கம் தெரிந்தது, அது சாமான்யமானதா?
    சொல்வதைச் செய்யவும்,செய்வதைச் சொல்லவும் அருள்வாய்
    முரண்பட்டால் சரணர் ஏற்கமாட்டார்
    அவர் ஏற்கவில்லையெனில் நீங்களும் ஏற்கமாட்டீர்
    ஐயனே! சொல் செயல் இரண்டாகாதபடி காப்பாய்
    கனலிங்கிய மோகத மல்லிகார்ச்சுனனே “

    சந்திமரசா

    அந்தணரான இவர் ஊர் சிம்மலிகேயாகும். நிஜகுண யோகியிடம் தீட்சை பெற்றவர். ”சிம்மலிகேய சென்னராமா“ இவரது முத்திரையாகும். ஆத்ம அறிவு, சரணர்களைப் போற்றுவது ஆகியவை இவரது வசனங்களில் இடம் பெற்றுள்ளன.

    1.“கண்ணாடி தன்னுடையாதானால் என்ன?
    மற்றவருடையதானால் என்ன?
    தனதுருவம் தெரிவது போதுமே.
    குரு யாராக இருந்தாலென்ன
    தன்னைப் புரிய வைப்பது போதுமே.
    சிம்மலிகேய சென்னராமன் வல்லவன் “

    2.“உண்மைப் பொருள் ஒன்றே
    இரண்டாவதும் அது ஒன்றே
    மாற்றாகத் தெரிவதும் அதுவே
    தன்னை மறக்க வைப்பதும் அதுவேயாம்
    மறப்பை அறிவதும் அதுவே
    தானன்றி வேறில்லை என்னுமறிவும் தானே
    சிம்மலிகேய சென்னராமனே “

    3.“கயிற்றைப் பாம்பென நினைத்தவன் போல
    இந்தவுடல் தனதென நினைத்து
    இல்லற வாழ்வின் வேதனையனைத்தையும்
    அறியாமல் ஏற்றனர்
    அறியாமையை பொய்யென்றுணர்ந்த அறிவு நீ
    சிம்மலிகே சென்னராமனே “

    4. “இறப்பு தாமதமன்று ,நரகம் தொலைவிலில்லை
    வீணாய்க் கெட வேண்டாம்
    புலனாசைகளை விட்டொழிப்பாய்
    குருபக்தியை நம்பி மகிழ்வாய்
    சிம்மலிகே சென்னராமனே “

    5. “பன்றி பசுவாவதில்லை  சம்சாரி ஜங்கமனாக மாட்டான்
    அறிவான சம்சாரியும்,அறிவீனமான சன்யாசியும்
    தமக்குள் பொருந்துவார்களோ?
    சிம்மலிகே சென்னராமனே “

    6. “சோளக்காட்டு பொம்மையைக் கண்டு பயமடையும்
    மான் போல இல்லாததை உண்டென நம்புவார்
    பேடிகளை துன்புறுத்தியது
    சிம்மலிகே சென்னராமனின் எண்ணம்”

                                                                                                          [தொடரும்]

    Share
  • எனது முதல் ரத்த தானம்

    எனது முதல் ரத்த தானம்

    சாமிநாதன் ராம்பிரகாஷ்

    நான் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம் அது. அப்போது எனக்கு ரத்த தானம் என்றால் என்னவென்றே தெரியாது. என்னுடைய வேலை, டெலிபோன் ஆப்பரேட்டர். அதாவது வருகின்ற தொலைபேசி அழைப்புகளை ஏற்பது, பதில் சொல்வது.

    நான் சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிஏ இரண்டாம் ஆண்டு அஞ்சல் வழியில் படித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய உடனடி மேலாளர் டான்பாஸ்கோ, எனக்காகவே ஒரு மாதம் முழுவதும் இரவுப் பணி (நைட் டூட்டி) போட்டுவிட்டார். ஏனென்றால் அப்போதுதான் நான் ஓரளவாவது வரவிருக்கும் தேர்விற்குப் படிக்க முடியும் என்று.

    ஆனால் இரண்டு வாரம் கழித்துச் சிற்சில உடல் உபாதைகள் வர ஆரம்பித்தன. நல்ல நீண்ட உறக்கத்தின் அருமை, அப்போதுதான் எனக்கு நன்றாகப் புரிந்தது…!

    இப்படி இருக்கையில் ஒருநாள், இரவுப் பணி செய்துகொண்டிருக்கும் போது… ரத்த வங்கியில் பணியாற்றும் சகோதரி, எனக்கு அருகில் நின்றுகொண்டு ஓர் உதவி என்று செய்கையால் கூறினார். நான் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துவிட்டு, என்ன என்று சாவகாசமாகக் கேட்டேன். ஒரு 18 வயதுச் சிறுவன் அடிபட்டுக் கிடக்கிறான். அவனுக்கு உடனே ரத்தம் தேவை என்றார்.

    நான் இதற்கு முன் இரத்தம் கொடுத்ததில்லை என்று சற்று பதற.. ஒரு பிரச்சனையும் இல்லை பிரதர். ஒன்னும் ஆகாது. பயப்பட வேண்டாம் என்று கூறி என்னுடைய இரத்தப் பிரிவைக் கேட்டார். நான் ஓ பாசிடிவ் என்று கூறியவுடன், அவர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். ரொம்ப தேங்க்ஸ் பிரதர் என்று கூறிவிட்டு, என்னுடைய HODக்கும் அவரே போன் செய்து இந்த மாதிரி விஷயத்தை எடுத்துக் கூறினார்.

    எனது HODயும் உடனே எனக்கு போன் செய்து… ராம்பிரகாஷ் நீங்க போய் ரத்தம் கொடுத்துட்டு வாங்க. ஒன்னும் பிரச்சினை இல்ல என்று சொல்லிட்டார். எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். வேலையும் பார்க்க வேண்டாம். நல்லா நிம்மதியாகத் தூங்கி ரெஸ்ட் எடுத்து ஓப்பி அடிச்சு விட்டு… காலை வீட்டுக்கு போயி… இன்னும் நல்லா தூங்கி எழுந்து நல்லா படிச்சுவிடலாம் அப்படின்னு என்னுடைய மனம் குறுக்குப் புத்தியில் பயங்கர வேகமாக வேலை செய்தது.

    முதலில் என்னுடைய ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. பிறகு ரத்தம் கொடுப்பதற்கு ஏற்றது தானா எனப் பார்க்கும் (இந்த ஹீமோகுளோபின் போன்ற) அடிப்படைப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பிறகு, என்னைப் படுக்க வைத்து, கையில் ஒரு ஸ்மைலி பந்தைக் கொடுத்துவிட்டார்கள். எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ரத்தம் எடுக்கும் போது மிக மிக மெலிதாக ஒரு வலி தெரிந்தது. அவ்வளவுதான…

    அதற்கப்புறம் 350 மில்லி உடம்பிலிருந்து போனது எனக்குத் தெரியவே இல்லை. மிகவும் பதற்றத்துடன்தான் இருந்தேன். ஆனால் ரத்தம் கொடுத்துவிட்டு, நான் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை.

    மிக மிகச் சுறுசுறுப்பாக உணர்ந்தேன். சற்று நேரம் தூங்கலாம் என்று நினைத்ததெல்லாம் நடக்கவே இல்லை. மிகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தேன். அப்படி ஒரு எனர்ஜி எனக்குள் வந்தது!

    அவர்கள் கொடுத்த ஜூஸ், பிஸ்கட் எல்லாம் சைக்காலஜி ஆறுதல் தான் என்பது நன்றாகப் புரிந்தது. அன்று முதல் வருடத்திற்கு இரண்டு முறை ரத்தம் கொடுத்து வருகிறேன்.

    நாம் கொடுக்கும் ரத்தம், கண்டிப்பாக மற்றவர்களுக்குப் பயன்படும். அதை அவர்கள் மூன்றாகப் பிரித்து, தேவையானதைக் கொடுத்துவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் நமக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

    அதனால் வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்த தானம் செய்வோம். நாமும் ஆரோக்கியமாக இருந்து, நம்மால் பிறருக்குக் கிடைக்கும் உதவியை நினைத்துப் பெருமிதம் அடைவோம்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-128

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-128

    நாங்குநேரி வாசஸ்ரீ

    128. குறிப்பறிவுறுத்தல்

    குறள் 1271

    கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
    உரைக்கல் உறுவதொன் றுண்டு

    நீ சொல்லாம மறைச்சாலும் உன்னையக் கடந்து உன்னோட கண்ணுங்க எனக்கு சொல்லுத சேதி ஒண்ணு இருக்கு.

    குறள் 1272

    கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
    பெண்நிறைந்த நீர்மை பெரிது

    கண்ணுகொள்ளாத அழகும் மூங்கில் கணக்கா இருக்க தோளும் இருக்க என் காதலிக்கு பெண்மைத் தன்மை நெறஞ்சு கெடக்கது இன்னும் அழகு கொடுக்குது.

    குறள் 1273

    மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
    அணியில் திகழ்வதொன் றுண்டு

    கோத்து வச்ச மணிக்குள்ளார கெடக்க நூல் தெரியுதது கணக்கா இவளொட அழகுக்குள்ளார கெடந்து வெளிய தெரியுத குறிப்பு ஒண்ணு கெடக்கு.

    குறள் 1274

    முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
    நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு

    பூவரும்புக்குள்ளார அடங்கிக் கெடக்குத வாசம் கணக்கா பொம்பளப்புள்ளையோட புன்முறுவலுக்குள்ளார அவ காதலனோட நெனப்பு அடங்கிக் கெடக்கு.

    குறள் 1275

    செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
    தீர்க்கும் மருந்தொன் றுடைத்து

    நெருக்கமா வளவி போட்டிருக்க என் காதலி கள்ளத்தனமா காட்டுத குறிப்புல என் பெருஞ்சங்கடத்த தீக்குத மருந்து ஒண்ணு இருக்கு.

    குறள் 1276

    பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
    அன்பின்மை சூழ்வ துடைத்து

    பெரிசா நேசத்தக் காட்டி கூடி இருக்கது பொறவு நேசமத்து பிரிஞ்சு போவுத குறிப்பக் காணிக்கதா இருக்கு.

    குறள் 1277

    தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
    முன்னம் உணர்ந்த வளை

    குளுந்த துறையை உடைய தலைவன் ஒடம்பால சேந்து இருந்து மனசால வெலகி இருக்குத எனக்குமுன்னமே என் வளவி அறிஞ்சுக்கிட்டு கழண்டு விழுதுபோல.

    குறள் 1278

    நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
    எழுநாளேம் மேனி பசந்து

    நேத்தைக்குத்தான் என் காதலர் பிரிஞ்சு போனாவ. அதுக்குள்ளார ஏழு நாள் கழிஞ்சமாரி பசலை எம்மேனியில பத்திக்கிட்டுக் கெடக்கு.

    குறள் 1279

    தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
    அஃதாண் டவள்செய் தது

    பிரிவுனால கழண்டு விழப்போவுத வளவியையும், மெலிஞ்சுபோவப் போகுத தோளையும் பாத்த பொறவு பொறத்தால நானும் வாரேம்னு குறிப்பு சொல்லுததுகணக்கா தன் பாதத்தையும் பாத்தா அவ.

    குறள் 1280

    பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
    காமநோய் சொல்லி இரவு

    காதல் நோயக் கண்ணால காணிச்சு பிரிஞ்சுபோவாதனு கெஞ்சுதது பெண்மைக்கு மேலும் பெண்மை சேத்தது கணக்கா ஆவும்.

    Share
  • இசைக்கவி ரமணனின் கவிதை

    இசைக்கவி ரமணனின் கவிதை

    இசைக்கவி ரமணன்

    இந்தக் கவிதையை இசைக்கவி ரமணனின் குரலில் இங்கே கேட்கலாம்

    தொங்கிச் சுழலும் உலகத்தைத்
    தொற்றிச் சுழற்றும் நோயொன்று
    பங்கம் செய்தது நம்வாழ்வை
    பணமும் இதன்முன் வெறும் ஏழ்மை
    எங்கே இருந்து வந்ததென
    இடத்தைச் சொல்லி என்னபயன்?
    எங்கும் அதுவாய் ஆகிறதே
    எல்லாம் பாழாய்ப் போகிறதே!

    நம்பிக் கைகள் ஒருபக்கம்
    நடுக்கங் கள்பல ஒருபக்கம்
    தெம்புடன் இருந்து பார்த்தாலும்
    தெரியா தேஇதன் நிசப்பக்கம்!
    வம்புச் சண்டை கிளப்பாமல்
    வதந்தி களினைப் பரப்பாமல்
    கும்பிடு போட்டுக் கைகழுவிக்
    குடிலில் ஒடுங்கும் காலமிது!

    பொறுமை தேவை மிகத்தேவை
    பொறுப்பு ணர்ச்சியோ தலைத்தேவை
    வெறுப்பும் வெறுமையும் அண்டாத
    வீர விவேகம் அதுதேவை
    கறுப்புப் பணமும் பதவிகளும்
    கால்தூ சானதிந் நோயாலே
    இருக்கும் இடத்தை விட்டெவனும்
    எங்கும் செல்ல முடியாதே!

    விழுந்து புரண்டு தவித்தோமே
    விலகி வாழ்ந்திடக் கற்போமே
    பழுதுக ளான உறவுகளைப்
    பழகிப் புதுமை செய்வோமே
    அழுந்தி நூல்கள் படித்திடுவோம்
    ஆழ்ந்து பார்ப்போம் நம்முள்ளே
    விழுந்து விழுந்து சிரித்திடுவோம்
    வீணையை மீட்டிப் பாடிடுவோம்!

    கடவுளை நம்பிக் கும்பிடுவோம்!
    கைகளை நன்றாய்க் கழுவிடுவோம்!
    கடமையை இயன்ற வரைசெய்வோம்
    கவலையை நீக்கிக் காத்திருப்போம்
    திடமாய் இருப்பது மானிடமே!
    தேவர்க்கும் இதுவோர் புகலிடமே!
    தொடாமல் விடாமல் தொடுவான்போல்
    தொடர்வோம் சீக்கிரம் விடுபடுவோம்!

    Share
  • கவிவருத்தம் தந்த கலிவிருத்தம்

    கவிவருத்தம் தந்த கலிவிருத்தம்

    கொடியேறி குடையாகி அடியேற்றி மகமாயி
    கொடிதான கொரானா மகிடனாய் வதமேவ
    படியேறி மருந்தாகி பரவாத படியாக
    குடியேறி வந்தாளே குவலயம் காக்கும்படி

    ஓங்கார ஒளிசோதி ரீங்கார ஒலியாகி
    ஆங்கார அரக்கரை அடங்கா பிணியோட
    தேங்காது வேம்பிடை தெரியாத படியாக
    தூங்காது நீக்கினளே நிமிர்ந்தெழு மானிடமே

    திரிசூலக் கூராகும் திகம்பர நேராகும்
    அடிகூட செம்மையா குங்கும நிறமேறி
    அதான மருந்தாய் அன்னை ஆகிவிட
    கலிகால நேராகும் காளியடி பணிவோமே

    கோதையைப் பழித்தனர் கீதையைக் கடிந்தனர்
    பாதையைப் பிரித்தனர் பகைமையை வளர்த்தனர்
    போதையில் அந்தணர் மறையினைைக் கிழித்தனர்
    வேதையும் வேண்டுமோ வேள்வியின் சுவாலையே

    சதிகார வஞ்சகரின் சல்லாபப் பிதற்றுகளை
    அதிகாரத் தனத்தோடு அடக்கவே அவசரமாய்
    மதுராகக் காளியவள் சிங்கம் ஏறிவர
    இதிகாசச் சண்டியிதோ இனிமேல் வருந்தாதே

    அறநெறி தவிர்த்துமே அதர்மமாய் மாற்றினால்
    மறநெறி காக்கவே வெகுண்டுநீ காட்டினாய்
    பிறநெறி போற்றுவார் பிழைகளைக் கூட்டினார்
    சரிநெறி காட்டுமே தண்டனை போதுமே

    இருமிகள் சேர்க்கின்ற எச்சிற் சாரல்களால்
    கிருமிகள் சேர்க்கின்ற பரவல் தூறல்களால்
    ஒருமித்த கொரானாவை உலகில் அழித்தருள்
    வருமந்த திருக்கண்ண புரவாசி உமையே

    அட்டமா திக்கெலாம் அட்டகாசம் ஆருயிரின்
    கெட்டமா வினையாவும் கேளிக்கை ஆக்காமல்
    இட்டமாய் வந்திடுமுன் இன்னருளே காப்பாகு
    கட்டமாய்க் காண்பதுன் கால்பட்டு துரும்பாக

    துளிவருத்தம் கூடாது துயரெமக்கு ஆகாது
    பலியனைத்தும் ஏறாது பக்தருமென் சேராது
    கலிவிருத்தம் பாடாது கலங்குமெனை பாராது
    ஒலிஎடுத்து வாராயோ ஓங்காரி மாயவளே!!

    Share
  • எல்லீசர் என்னும் நல்லறிஞர்!

    எல்லீசர் என்னும் நல்லறிஞர்!

    -மேகலா இராமமூர்த்தி

    கிறித்தவ மதத்தைப் பரப்பவும், வாணிகம் செய்யவும் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த மேனாட்டார் மெல்ல மெல்ல இந்தியாவையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும், அதனால் அடிமைத்தளையில் சிக்கிய இந்தியா பல்லாண்டுகாலப் போராட்டத்துக்குப் பின்பே விடுதலைக் காற்றைச் சுவாசித்ததும் நாமறிந்தவையே. அந்நியரிடம் நாம் அடிமைப்பட்டதில் நமக்குப் பெருமை ஏதுமில்லை என்றபோதும், அவர்கள் ஆட்சியில்தான் சில நல்ல சமூக மாற்றங்களை இந்தியா சந்தித்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

    ஒழுங்குபடுத்தப்பட்ட கல்விமுறை, அனைவருக்கும் பொதுவான மருத்துவ வசதிகள் போன்றவை வெள்ளையர் ஆட்சியின் கொடைகள். அச்சு எந்திரத்தின் வருகையும்கூட அவர்களால் நமக்கு ஏற்பட்ட நன்மையே. அதன்பயனாய்க் கிறித்தவ மதபோதனை நூல்கள் மட்டுமல்லாது,  ஓலைச்சுவடிகளிலே கவனிப்பாரற்று உறங்கிக் கிடந்த பல பழந்தமிழ் நூல்களும் புத்துயிர்பெற்று அச்சுவாகனமேறி தமிழ்கூறு நல்லுலகுக்குப் புத்தொளி ஊட்டின எனில் மிகையில்லை.

    மதபோதகர்களேயன்றி ஆங்கிலேய அரசில் அதிகாரிகளாகப் பணியாற்றிய வெள்ளையர்களும் நம் தமிழை ஆர்வத்தோடு கற்று  தமிழ்த்தொண்டாற்றிய வியத்தகு செயல்களும் தமிழ்மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தாம் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) எனும் ஆங்கிலேய அதிகாரி. அவரது தமிழ்ப்பணிகள் குறித்துச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

    1777-இல் இங்கிலாந்தில் பிறந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ், எப்பொருளையும் ஆய்ந்து மெய்ப்பொருள் காண்பதில் ஆர்வமுடையவர்.  ஆங்கில நாட்டு அரசியலாளர்கள் அவரைச் சென்னை நிலவரி மன்றத்தின் செயலாளராக (secretary of revenue board) முதலில் நியமித்தனர். எட்டு ஆண்டுகள் அப்பணியில் இருந்தார் எல்லிஸ். அப்போது நிலவுரிமை குறித்த விவரங்களையெல்லாம் தெளிவுறக் கற்ற அவர், நிலவுடைமையாளருக்குரிய உரிமைகள், கடமைகள் முதலியவற்றைச் சென்னை அரசியலாளர்களுக்குத் தெளிவுற உணர்த்தினார். ’மிராசு முறை’ குறித்து அவரெழுதிய நூல் இன்றும் ஆதார நூலாகக் கொள்ளப்படுகின்றது.

    படிப்படியாகத் தம் பதவிகளில் உயர்ந்த எல்லிஸ், பத்தாண்டுகள் சென்னையின் கலெக்டராகப் பணியாற்றியிருக்கிறார். இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆவல் அப்போது அவருக்கு ஏற்படவே, நல்லாசிரியர்களின் துணையோடு வடமொழியும் தென்மொழியும் பயின்றார். தென்னக மொழிகளில் தமிழின் செம்மையும் தொன்மையும் அவரைப் பெரிதும் கவரவே சென்னையின் சிறந்த தமிழ்ப்புலவர்களாக அப்போது திகழ்ந்துவந்த சாமிநாதப் பிள்ளை, இராமச்சந்திரக் கவிராயர் ஆகியோரின் உதவியோடு ஏட்டுச்சுவடிகளில் இருந்த தமிழ்நூல்களையெல்லாம் ஆர்வத்தோடு கற்றார்.

    தமிழ்பால் கொண்ட ஈடுபாட்டால் எல்லிஸ் என்ற தம் பெயரை ’எல்லீசன்’ என்று மாற்றிக்கொண்டார் என்பதை அறியும்போது நமக்கு வியப்பு ஏற்படுகின்றது.

    வள்ளுவப் பேராசானின் திருக்குறளை அச்சேற்றிய முன்னோடிகளில் ஒருவராகவும் எல்லீசர் திகழ்கின்றார். ஆம், ஜார்ஜ் ஹேரிங்டன் (George Harrington) என்ற வெள்ளைக்கார அதிகாரியிடம் சமையற்காரராகப் பணியாற்றிய அயோத்திதாச பண்டிதரின் பாட்டனாரான கந்தப்பன் என்பவர் தம்மிடம் ஓலைச்சுவடிகளாக இருந்த திருக்குறளையும், நாலடியாரையும், அருந்தமிழ்ச் சுவடிகளைச் சேகரிப்பதிலும் பாதுகாப்பதிலும் ஆர்வமுடைய, எல்லீசரிடம் தந்திருக்கின்றார்.

    ஓலைச்சுவடியில் இருந்த வள்ளுவத்தைக் கற்று அதில் உள்ளம் பறிகொடுத்த எல்லீசர், பழந்தமிழின் பண்புகளைப் பளிங்குபோல் காட்டும் திருக்குறளை மேனாட்டாரும் அறிந்து பயனுறவேண்டும் என்று விரும்பி அதற்கு ஆங்கிலத்தில் விளக்கமான விரிவுரை ஒன்று எழுதத் தொடங்கினார். ஆனால் அப்பணி முற்றுப்பெறாது போயிற்று. அறத்துப்பாலின் சில அதிகாரங்களுக்கு மட்டுமே அவர் வரைந்திருந்த அவ்வுரையில் புறநானூறு, நாலடியார், சீவக சிந்தாமணி, பாரதம், பிரபுலிங்கலீலை முதலான பல தமிழ் நூல்களின் பாடல்களை அவர் எடுத்தாண்டிருப்பது அவரின் ஆழங்காற்பட்ட தமிழ்புலமைக்குச் சான்றாகின்றது.

    எல்லீசர் வெளியிட்ட குறள் பதிப்பிலும் சில குறைகள் இல்லாமல் இல்லை. அவற்றை அயோத்திதாச பண்டிதரே வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறள், நாலடியார் ஓலைப் பிரதிகள் அச்சில் வந்தபொழுது அறத்துப்பாலிலுள்ள சில குறட்பாக்களைப் பொருட்பாலில் சேர்த்தும், சில குறட்பாக்களின் சொற்களை தம் விருப்பத்திற்கிணங்க எல்லீசர் மாற்றியும் வெளியிட்டிருந்ததைக் கண்ட அயோத்திதாச பண்டிதரின் பாட்டனார், இவ்வாறு மாற்றங்கள் செய்தது ஏன் என்று எல்லீசருக்குக் கடிதம் எழுதிக் கேட்டதற்கு மறுமொழி ஏதும் அவரிடமிருந்து வரவில்லை என்கிறார் பண்டிதர்.

    ”தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப் படும்”
    என்ற குறட்பாவின் இரண்டாவது அடியை எதுகை நோக்கி ’மக்களால் காணப்படும்’ என்று எல்லீசர் மாற்றியதாகவும் அதற்கு அப்போதே தமிழறிஞர்களிடமிருந்து கண்டனம் எழுந்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி உண்டு.

    அயோத்திதாச பண்டிதர் கூறும் கருத்தை இச்செய்தியோடு ஒப்பவைத்துப் பார்க்கும்போது, எல்லீசர் தம் விருப்பப்படி இவ்வாறு சில திருத்தங்கள் செய்திருப்பது உண்மையாகவே இருக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது. இவற்றை ஆதாரபூர்வமாக  உறுதிப்படுத்த எல்லீசரின் திருக்குறள் உரை நமக்குத் தேவை.

    விமரிசனத்துக்குரிய இவைபோன்ற சில செயல்களை எல்லீசர் செய்திருந்தாலும், குறள்மீது அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது என்பதை விளக்கும் வகையில் இரு அரிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சென்னை நகரில் 1818-இல் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டவேளையில் அப்போதைய  சென்னைக் கலெக்டராகப் பணியில் இருந்த  எல்லீசர், பெருமுயற்சி செய்து நகரின் 27 இடங்களில் குடிநீர்க் கிணறுகளைத் தோண்ட ஏற்பாடுகள் செய்திருக்கின்றார். அக்கிணறுகளில் ஒன்று இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளது. அக்கிணற்றின் கைப்பிடிச் சுவரில் பதிக்கப்பட்டிருந்த ஒரு கல்லில், 1818-ஆம் ஆண்டில் ஒரு நீண்ட கல்வெட்டை வெட்டியிருக்கின்றார் எல்லீசர். அக்கல்வெட்டு இப்பொழுது தமிழ்நாடு தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சியகத்தில் உள்ளது.

    ”….சயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்
    ஆழியில் இழைத்த வழகுறு மாமணி
    குணகடல் முதலாகக் குடகடலளவு
    நெடுநிலந்தாழ நிமிர்ந்திடு சென்னப்
    பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
    பண்டார காரிய பாரம் சுமக்கையில்
    புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
    தெய்வப் புலமை திருவள்ளுவனார்
    திருக்குறள்தன்னில் திருவுளம் பற்றிய
    “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
    வல்லரணும் நாட்டிற் குறுப்பு”
    என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து…”
    என்று செல்கின்றது அக்கல்வெட்டு.

    அதே காலகட்டத்தில் எல்லீசர் சென்னப்பட்டணத்துப் பண்டார காரியங்களைப் பார்க்கும் பாரத்தையும் தாங்கியிருந்தமையை இதன்மூலம் அறியமுடிகின்றது.

    மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரில் உள்ள எல்லீசரின் கல்லறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. அதில்,

     “எல்லீசன் என்னும் இயற்பெயருடையோன்”
    ‘….திருவள்ளுவப் பெயர்த் தெய்வம் செப்பி
    அருள்குறள் நூலுள் அறப்பாலினுக்குத்
    தங்குபல நூலுதாரணக் கடலைப் பெய்து
    இங்கி லீசுதனில் இணங்க மொழிபெயர்த்தோன்….

    என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்வாயிலாய் திருக்குறளின் அறத்துப்பாலுக்கு எல்லீசர் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்த செயல் உறுதிப்படுகின்றது.

    அத்தோடு, தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத் தங்க சாலையில் திருவள்ளுவரின் உருவத்தை வெள்ளை அரசாங்கத்தின் பெரிய தங்க நாணயமான இரட்டை வராகனில் பொறித்த பெருமைக்குரியவராகவும் எல்லீசர் திகழ்ந்திருக்கின்றார் என்ற செய்தியை கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் கண்டு சொல்லியிருக்கின்றார்.

    அந்த நாணயத்தில் ஒரு சமண முனிவராகத் தலையில் குடையுடன் காட்சிதருகின்றார் வள்ளுவர்.

    தமிழில் செய்யுள் இயற்றும் அளவுக்கு எல்லீசருக்குப் பயிற்சி இருந்தது என்பதற்கு மேற்கண்ட கல்வெட்டுச் செய்திகளே தக்க சான்றுகளாகத் திகழ்கின்றன. இவையல்லாமல் ’நமசிவாயம்’ என்ற ஐந்தெழுத்து மந்திரம் பற்றி எல்லீசர் ஐந்து பாடல்கள் இயற்றியிருப்பதாகக் குறிப்பிடுகின்ற சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள், எல்லீசர் இயற்றிய பாடலையும் அதன் பொருளையும் நமக்கு அறியத் தருகின்றார்.

    ”சிற்றிறைவர் இவ்வுலகுள் சிறியோரின் சிறுபொருளில்
    வற்றிறையை வாங்குவரே வல்லமையும் மகிழ்ச்சியுள்ள
    பற்றிறைவன் நீ திறையை வாங்காயே ஆனதினால்
    சொற்றிறையை விட்டு உட்டிறையைச் சொரிவேனே நமசிவாய”

    என்பது அப்பாடல்.

    இதன் பொருள்: சர்வ வல்லமையுள்ள தெய்வமே! பேரானந்த வடிவாயப் பெருமானே! பரந்த உலமெல்லாம் பற்றியாளும் பரமனே! இம்மண்ணுலகத்தை ஆளும் சிற்றரசர்கள் தம் குடிகளைக் கண்டித்தும் தண்டித்தும் வரிப்பணம் (திறை) வாங்குவர். ஆனால் அரசர்க்கெல்லாம் அரசனாக விளங்கும் நீயோ ஒன்றையும் திறையாகப் பெறுதல் இல்லை. ஆதலால் வாக்காலே திறையளக்கும் வழக்கத்தைவிட்டு, என் உள்ளத்தில் ஊறி எழுகின்ற அன்பினையே உன் திருவடியில் காணிக்கையாய்ச் சொரிகின்றேன்.”

    தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக 1812-இல் புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை (the College of Fort St. George) நிறுவினார் எல்லீசர். ‘சென்னைக் கல்விச் சங்கம்’ என்று தமிழில் அறியப்பட்ட அக்கல்லூரியே எல்லீசரின் மொழி ஆய்வுகளுக்குக் களமாக விளங்கிற்று.

    1814-ஆம் ஆண்டிலேயே தெலுங்கு மொழியானது தமிழின் ‘உடன்பிறப்பு’ (sister language) என்று குறிப்பிட்டிருக்கிறார் எல்லீசர். 1816-இல் காம்பெல் (Alexandar Duncan Campbell) எழுதிய தெலுங்கு இலக்கண நூலுக்கு முன்னுரையாக எல்லீசர் எழுதிய விரிவான ஆய்வுரையில், தெலுங்குக்கும் சமஸ்கிருதத்திற்கும் குடி உறவில்லை என்பதையும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலானவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், வெறும் சொற்கள் அளவிலான கொள்வினையே சமஸ்கிருதத்துடன் அவற்றுக்கு உண்டு என்பதையும் நிறுவிக் காட்டியிருக்கின்றார்.

    1856-இல் கால்டுவெல் (Robert Caldwell) எழுதி வெளியிட்ட ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) என்ற ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே, 1816-இல், திராவிட மொழிகளின் தொன்மையை, வடமொழிச் சார்பில்லா அவற்றின் தனித்தன்மையை முதன்முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் எல்லீசரே என்பது தமிழறிஞர் உலகம் அறிய வேண்டிய அரிய செய்தியாகும். எல்லீசரின் இந்தக் கருத்தாக்கமே கால்டுவெல்லின் நூலில் முழு மலர்ச்சியும் விரிவும் கொள்கின்றது.

    தமிழ் மொழியின் செம்மையையும் தொன்மையையும் குறித்துப் பல ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தார் எல்லீசர். எனினும் அவற்றை முறையாக வகுத்தும் தொகுத்தும் நூல் வடிவத்தில் எழுதுமுன் முத்தமிழ் வளர்த்த மதுரை மாநகரைக் கண்ணாரக் கண்டுவர விரும்பி அலுவலகத்தில் விடுப்புப்பெற்று மதுரைக்குச் சென்றார். அங்குக் கலெக்டராயிருந்த ‘பெற்றி’ (Rous Petrie) என்பவருடைய மாளிகையில் விருந்தினராய்த் தங்கி மதுரை மாநகரைச் சுற்றிப் பார்த்தார்.

    ”புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
    வையை என்ற பொய்யாக் குலக்கொடி”
    (சிலம்பு -புறஞ்சேரி இறுத்த காதை: 169-170)

    என்று இளங்கோவடிகள் பாராட்டிய வையை ஆற்றின் கரையில் அமைந்த அழகிய நகரம் இதுவன்றோ என்று விம்மிதமுற்றார்.  இங்ஙனம் மதுரையம்பதியைக் கண்டு புதியதோர் ஊக்கமுற்ற எல்லீசர் ஒருநாள் இராமநாதபுரத்தைக் காணச் சென்றார். அங்குத் தாயுமானவர் சமாதி அடைந்த இடத்தைக் கண்டு நெஞ்சுருகி நின்றார். பின்பு அவ்வூரில் காணத்தக்க இடங்களையெல்லாம் கண்டு நண்பகலில் தம் இருப்பிடம் திரும்பி உணவருந்தினார். அவ்வுணவில் கலந்திருந்த நஞ்சால் துயருற்று உயிர் துறந்தார் என்ற செய்தி நம் இதயத்தைப் பிளப்பதாய் இருக்கின்றது.

    சென்னையிலும் மதுரையிலும் இருந்த அவர் உடைமைகளை அரசாங்கத்தார் நியமித்த அதிகாரி ஒருவர் ஏலமிட்டார். மதுரைக் கலெக்டர் பெற்றியின் பங்களாவில் எல்லீசரின் ஆராய்ச்சிக் குறிப்பமைந்த பொதிகள் ஓர் அறையில் குவிந்திருந்தன. அத்தமிழ்ப் பொதிகளை அரசாங்க அதிகாரி ஏலம் கூறினார். இதில் வேதனை யாதெனில்… பாண்டியர் தமிழ்வளர்த்த அப்பழம்பதியில் அத்தமிழ்ப் பொதிகளைத் தீண்டுவார் யாருமில்லை. பெற்றியின் பங்களாவில் எடுப்பாரும் படிப்பாருமின்றி அவலமாய்க் கிடந்த எல்லீசரின் ஆராய்ச்சித் தாள்களை பெற்றியின் பணியாட்கள் பலநாள் அடுப்பெரித்துக் காலி செய்தனாராம்.

    ”யாரறிவார் தமிழருமை யென்கின் றேன்என்
    அறிவீனம் அன்றோஉன் மதுரை மூதூர்
    நீரறியும் நெருப்பறியும்…”
    என்ற பரஞ்சோதி முனிவரின் வாக்கு எல்லீசர் விஷயத்தில் மெய்யானது வருந்தத்தக்கதே!

    ஓர் ஆங்கிலேயர் நம் தாய்த்தமிழைப் பெரிதும் நேசித்து அருந்தொண்டுகள் பல புரிந்திருக்கின்றார். மேலும் பல தொண்டுகள் புரிய வேண்டும் எனும் ஆவல் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக அகால மரணமடைந்தார் என்பதை அறியும்போது அவரது தமிழார்வம் குறித்து மகிழ்ச்சியும், அவல மரணம் குறித்து வருத்தமும் ஒருங்கே ஏற்படுகின்றன. அந்த நல்லறிஞரை, சென்னை மக்களுக்குத் தொண்டாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியரை என்றும் நெஞ்சில்நிறுத்திப் போற்றுவோம்!

    **********

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. https://en.wikipedia.org/wiki/Francis_Whyte_Ellis

    2. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=539

    3. கிருஸ்துவத் தமிழ்த் தொண்டர் – ரா.பி. சேதுப்பிள்ளை, பி.ஏ., பி.எல்., எஸ்.ஆர். சுப்பிரமணியப் பிள்ளை பப்ளிஷர்ஸ் – திருநெல்வேலி.

    4. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=539

     

    Share
  • மழைகூட இவர்களுக்கு வாழ்த்துக்கூறி நிற்கிறதே!

    மழைகூட இவர்களுக்கு வாழ்த்துக்கூறி நிற்கிறதே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வாழையிலை குடையாக
    வதனமெலாம் மலர்ச்சியுற
    விண்ணின்று பன்னீராய்
    மழைத்துளிகள் சிந்திடவே
    நாளைதனை நினையாமல்
    நனையுமந்தத் திருக்கோலம்
    பார்ப்பவரின் மனமெல்லாம்
    பக்குவமாய்ப் பதிந்திடுமே!

    உலகநிலை தனைமறந்து
    உளமகிழ்வு முகம்காட்ட
    மழைநனையும் அழகுநிலை
    மனமதனில் அமர்கிறதே
    களங்கநிலை காணாத
    காதல்நிறை பிணைப்பாக
    கைதொட்டு நிற்குநிலை
    களிப்பூட்டி  நிற்கிறதே!

    ஏழ்மையது எழிலாக
    இங்குருவாய் ஆகியதே
    ஆழமுடை  அன்புநிலை
    அருகணைந்து தெரிகிறதே
    வாழையிலை மகிழ்வுடனே
    காதல்கண்டு மகிழ்கிறதே
    மழைகூட  இவர்களுக்கு
    வாழ்த்துக்கூறி நிற்கிறதே!

    Share