Blog

  • குறளின் கதிர்களாய்…(296)

    குறளின் கதிர்களாய்…(296)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(296)

    உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
    யற்றே தவத்திற் குரு.

    – திருக்குறள் – 261 (தவம்)

    புதுக் கவிதையில்…

    உண்டி சுருக்கல்
    போன்ற நோன்புகளால்
    தம் உயிருக்கு வரும்
    துன்பங்களைப் தாம்
    பொறுத்தலும்,
    பிற உயிர்களுக்குத்
    துன்பம் தராதிருத்தலும்
    ஆகிய அளவினதே
    தவத்திற்கு வடிவமாகும்…!

    குறும்பாவில்…

    தவத்தின் வடிவம் இதுவே,  
    தன்னுயுயிருக்கான துன்பம்பொறுத்தல், பிறவுயிரைத்
    துன்புறுத்தாதிருத்தல் ஆகியவற்றின் அளவினதே…!

    மரபுக் கவிதையில்…

    உண்டி சுருக்கல் போலுள்ள
    உயர்தர நோன்புகள் பலவற்றால்
    அண்டிடும் தம்முயிர்த் துன்பங்கள்
    அனைத்தையு மொன்றாய்த் தாம்பொறுத்தும்,
    அண்டையி லுள்ள பிறவுயிர்க்கும்
    அளவிலா துன்பம் தராதிருக்கும்
    பண்புட னிருத்தல் போன்றவற்றின்
    பயனுள அளவே தவவடிவே…!

    லிமரைக்கூ..

    தனன்னுயிருக்கான துன்ப மதுவே
    பொறுத்தலும் பிறவுயிர்க்குத் துன்பம்தராதது மிணைந்த
    தவத்தின் வடிவ மிதுவே…!

    கிராமிய பாணியில்…

    ஒசந்ததுதான் ஒசந்ததுதான்
    உண்மயான தவமதுதான்
    ஒசந்ததுதான் ஒசந்ததுதான்..

    உண்ணாநோம்பு போலவுள்ள
    பலவக நோம்புகளால
    தனக்க உயிருக்கு வருகிற
    துன்பங்களப் பொறுத்துக்கிறதும்,
    அடுத்த உயிருக்குத்
    துன்பம் செய்யாமயிருக்கிறதும்தான்
    நல்ல தவத்துக்கு
    அடயாளமே..

    எப்பவும்
    ஒசந்ததுதான் ஒசந்ததுதான்
    உண்மயான தவமதுதான்
    ஒசந்ததுதான் ஒசந்ததுதான்…

    Share
  • இந்த வார வல்லமையாளர் – 310

    இந்த வார வல்லமையாளர் – 310

    ராம்பிரகாஷ்  சாமிநாதன்

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றார் வள்ளுவர் !

    அன்பு ஒரு மிகப்பெரிய சக்தி, நிகரற்ற பேராற்றல். அதை நாம் இந்தக் “கொரோனா“ கிருமியின் கோரப் பிடியில் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

    எண்ணற்ற மனிதர்கள், தன்னார்வ அமைப்புகள், சேவை மையங்கள், ஆலய அலுவலர்கள்  எனப் பல தரப்பு மக்களும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களால் இயன்ற உதவிகளை உணவாகவோ, பணமாகவோ, பொருட்களாகவோ, உடல் உழைப்பு மூலமாகவோ செய்து வருகின்றனர். அதிலும் தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த பணியாளர்களும் செய்து வரும் நிகரற்ற சேவைகளை விவரிக்கவும் வாழ்த்தவும் வார்த்தைகள் போதா!

    இவர்களின் அர்ப்பணிப்பான தொண்டிற்கும் அன்பே ஆதாரம், சக உயிரின் பால் உள்ள பிரியம். இந்த அன்பின் நெடும்பயணத்தில் இந்த வாரம் நடைபெற்ற இரு நிகழ்வுகள், நம்மைப் பெரிதும் ஈர்த்தன.

    1. ஒரு சாமானியனின் சமரசமற்ற பயணம்

    பாசம் விலைமதிப்பற்றது. அதை ஆணித்தரமாக நிரூபிக்கும் விதமாக இந்த வாரத்தில் இரு வேறு நெகிழ வைக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.

    திரு. அறிவழகன் வயது 65. கும்பகோணத்திற்கு  அருகே உள்ள ஒரு சிற்றூரில் வசித்து வருகிறார். விவசாயம் சார்ந்த தொழில் புரியும் சாமானியர், பரம ஏழை!

    அவரது மனைவி மஞ்சுளா, வயது 60. வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இரண்டு முறை ஹீமோதெரபி சிகிச்சை முடித்துவிட்டு மூன்றாவது சிகிச்சை பெற, 2020 மார்ச் 30ஆம் தேதி மருத்துவர்கள் வரச்சொல்லி இருந்தனர்.

    ஆனால் “கோவிட்-19” கிருமித் தொற்று காரணமாக, நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், வேன், கார் என எதுவும் கிடைக்கப் பெறமால் தவித்த அறிவழகன், ஓர் அதிரடி முடிவை எடுத்தார்.

    அவரது பழைய மிதிவண்டியிலேயே தனது மனைவியைக் கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதென்று முடிவெடுத்தார். இடைப்பட்ட தூரம்  ஏறக்குறைய 130 கிலோமீட்டர்கள். நெஞ்சுரம் மிக்க அறிவழகன், தம் மனைவியுடன் பயணத்தைத் தொடங்கினார். வரும் வழியில் குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் இவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்து அசந்துவிட்டனர் அத்தோடு அவர்களுக்கு உணவு வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னர்  எங்கேயும் ஓய்வு எடுக்காமல் சிதம்பரம், சீர்காழி, கடலூர் வழியாக ஜிப்மர் சென்று அடைந்தனர்.

    ஆனால்  அங்கோ, அனைத்துப் புற நோயாளிகள் சிகிச்சைகளும் தள்ளி வைக்கப்பட்டிருந்தன. இச்சமயத்தில் இவர்கள் நிலையையும் வந்த விதத்தையும் கண்டு இரங்கிய திரு.எ.எஸ். பாதே மற்றும் அவருடைய குழு மருத்துவர்கள், அவர்களை 3 நாட்கள் அங்கேயே தங்க வைத்து, சிகிச்சை அளித்து, ஜிப்மர் ஆம்புலன்ஸ் வண்டியிலேயே மிதிவண்டியோடு சேர்த்துத் திரும்ப அனுப்பி வைத்தனர்.

    2. தடைகளைத் தவிடுபொடியாக்கிய தாய்ப்பாசம்

    ரஜியா பேகம் (50), தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த அரசு ஆசிரியை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கணவரை இழந்தவர். அதன் பின்னர் தம் இரு மகன்களே அவரின் உலகம்.

    வாழ்வில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டு தன் பிள்ளைகளைக் கரைசேர்க்கப் போராடும் தாய்.

    அவருக்கு இளைய மகன் முகமத் நிஜாமுதீன் (17) பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை எழுதிவிட்டு, சித்தூரில் உள்ள அவரது நண்பர் வீட்டிற்குச் செல்ல நேர்ந்தது. அப்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அங்கேயே தங்கும் நிலை உண்டாயிற்று.

    பல வழிகளில் முயன்ற ரஜியா, தாமே சென்று நிஜாமுதீனை அழைத்து வந்துவிடுவது என்று முடிவுசெய்து, போதன் காவல் துறை உதவி ஆய்வாளர் திரு. ஜெயபால் ரெட்டியைச் சந்தித்து அனுமதி கோரினார். அவரும் இவரது துணிச்சலைக் கண்டு மெச்சி, பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துக் கூறி அனுமதிக் கடிதத்தை அளித்தார் .

    2020 ஏப்ரல் 6ஆம் தேதி எரிபொருள் நிரப்ப ஒரு கேனினையும், சாப்பிட சில ரொட்டித் துண்டுகளையும்  தனது ஸ்கூட்டியில் எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

    வழியில் வரும் பெட்ரோல் பங்குகளில் பத்து நிமிடங்கள் ஓய்வு, பிறகு அடர்ந்த காடுகளுக்கு இடையில் அசராத பயணம். இதோ அவரது வார்த்தைகளிலேயே தொடர்கிறது.

    “நான் செல்லும் வழிகளில் காவல் துறையினர் எனக்குப் பெரிதும் உதவினார்கள். அவர்கள் எனக்கு மேலும் நம்பிக்கை தந்தனர்.

    “சகோதரி, இந்த நேரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் நீங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம், இங்கேயே சிலமணி நேரம் தங்கிவிட்டுச் செல்லுங்கள்“ என்று கூறித் தங்க வைத்து, எனது பாதுகாப்பை உறுதி செய்தனர். கிட்டத்தட்ட 700 கிலோமீட்டர்கள் கடந்து என் மகனைக் கண்டேன், அவனைக் கண்டவுடன் (7ஆம் தேதி மாலை) அத்தனையும் பறந்துவிட்டது.

    மேலும் நேரத்தை விரயம் செய்யாமல் அன்றே கிளம்பி மீண்டும் 700 கிலோமீட்டர்கள் கடந்து 8ஆம் தேதியே இங்கே வந்துவிட்டோம்“

    திட சிந்தையும்  தன்னம்பிக்கையும் அயராத நெஞ்சுறுதியும் மிக்க, அன்பே உருவான அறிவழகன், ரஜியா பேகம் இருவரையும் இந்த வார வல்லமையாளர்களாக அறிவிக்கிறோம். இருவரையும் வாழ்த்திக் கௌரவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது.

    படத்திற்கு நன்றி – விகடன்.காம் 

    Share
  • இருதயாகாயம் (சிறுகதை)

    இருதயாகாயம் (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    முதல் மாடியில் ஜன்னலுக்கருகில் வெளியில் கண்ணுக்கெட்டும் தூரம் வரைப் பார்த்துக்கொண்டு சுரேஷ்மேனோன் உட்கார்ந்திருக்கும் போது ஆகாயத்தின் மேகங்கள் நிறம் மாறிக் கொண்டிருந்தது. அவன் இரயிலிலிருந்து இறங்கும்போது இருந்த வெள்ளை மேகங்கள் எங்கோ மறைந்தது. வானம் இருண்டது போலிருந்தது.

    “தீப்தியெ இனியும் காணோமே” வேறொரு ஜன்னல்வழியாக வெளியில் பார்த்துக்கொண்டு கீதா கூறினாள்.

    தீப்தி சுரேஷ்மேனோனுக்குக் கடைசியாக அனுப்பியக் கடிதத்தில் சில ஆணைகள் இருந்தது. ஏது வண்டியில் நகரத்தில் வரவேண்டுமென்றும், அக்காவின் வீட்டை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அதில் விளக்கப்பட்டிருந்தது. சுரேஷ்மேனோன் தீப்தியின் ஆணையை அப்படியேச் செய்தான். அவள் கூறின அதே இரயிலில் பயணித்தான். ப்ளாட்ஃபோமிலிருந்து வெளியில் வந்து கொஞ்சம் கூடயோசித்து நிற்காமல் ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்தான். தீப்தியோடக் கடிதம் சட்டை ஜோப்பிலிருந்தாலும் அதை எடுத்துப்பார்க்க வேண்டிய அவசியம் வரவில்லை. இடத்தினுடையவும், தெருவினுடையவும் பெயர்கள், வீட்டு எண், சுற்றுப்புற அடையாளங்கள் என எல்லாம் மனதில் பதிந்திருந்தது. அதனால்தான் பயணம் சுலபமானது. தீப்தி, அக்காவுக்கும் கடிதம் போட்டிருக்கிறேன் என்று கூறியிருந்தாள். ஆட்டோ கேட்டில் வந்து நின்றதும் முதல்மாடியில் வராந்தாவில் ஒரு நிழல் அசைந்தது. வீட்டில் கீழ்த்தளத்தில் வேறொரு குடும்பம் இருந்தனர். அக்குடும்பத்தில் உள்ள ரிட்டயர்டு நபர் ஒருவர் யார பாக்கணும்னு கேட்பதற்குள் தீப்தியின் அக்கா படியிறங்கி வந்துவிட்டாள்.

    “என்னோட ஒரு சொந்தக்கார பையன்” கீதா கூறினாள்.

    அவள் முதல்முறையாகப் பார்க்கிறாள்.

    “தீப்தி…?”       அவன் கேட்டான்.

    “வரல”

    கீதா படிக்கெட்டிற்கு நேராக நடந்தாள். அதற்கு முன்பே ரிட்டயர்டு தாத்தா, தான் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் மீண்டும் மூழ்கினார்.

    “பத்து மணிக்கு முன்னாடியே இங்க வந்திருவேன்னுதானே எனக்கு எழுதியிருந்தா” படிக்கட்டுகள் ஏறும்போது சுரேஷ்மேனோன் சொன்னான்.

    “அப்படிதா எனக்கும் எழுதியிருந்தா இப்போ வந்திருவாளா இருக்கும்” கீதா திரும்பிப்பார்த்து சிரித்துக்கொண்டே கேட்டாள் “பாக்கறதுக்கு அவ்வளவு அவசரமா?”

    நல்லமனசுள்ள அக்காவுடன் ஒரு பகல்பொழுதைக் கழிக்கலாம் என்றுதான் தீப்தி சுரேஷ்மேனோனுக்கு எழுதியிருந்தாள். அக்காவின் தயவாக இருந்தாலும் தீப்தியுடன் ஒரு பகல்பொழுதைக் கழிக்கிறோம் என்ற அவனது ஆர்வத்தை மறுக்கமுடியவில்லை. ஒரு எளிமையான வாய்ப்பு தனக்குக் கிடைத்திருக்கிறது என்று அவன் மகிழ்ந்தான். இரயிலில் வரும்போது அவனுடைய மனம் முழுவதும் எதிர்பார்ப்புப் பெட்டகமாயிருந்தது. ஒரு ஸ்பரிசம்? ஒரு முத்தம்? ஒரு கட்டிப்பிடித்தல்? அப்படி சில சந்தர்ப்பங்களை எண்ணி அவன் தெரியாமல் சிரித்துவிட்டான்.

    “என்ன சிரிப்பு?” வரவேற்பறைக்கு டீயுடன் வந்த கீதா கேட்டாள்.

    “தீப்தியெ நெனச்சுத்தா” கொஞ்சம் தயக்கத்துடன் கூறினான்.

    “நல்ல பொண்ணு அவ. அம்மாவுக்கோ இல்ல வேற யாருக்கோ இது தெரிஞ்சா என்ன இனிமேல் உள்ள விடமாட்டாங்க”. கீதா டீயும் பலகாரங்களும் மேசைமேல் வைப்பதற்கிடையில் கூறினாள்.

    சுரேஷ்மேனோனுக்கு ஒரு விருந்து உபச்சாரத்தை எதிர்கொள்வதற்கான மனநிலமை இருக்கவில்லை. ஆனால் கீதா அவனைக் கட்டாயப்படுத்தி மேசைக்கருகில் வரவழைத்தாள். தட்டில் கிராம்பின் சுவை கலந்த அப்பம் இருந்தது. சுரேஷ்மேனோனுக்கு உபசரிப்பை மறுக்கமுடியவில்லை.

    “தீப்தி வர்றாளேண்ணு செஞ்சதுதா. அவளுக்குச் சின்ன வயசிலிருந்து இது ரொம்பப் புடிக்கும்”. கீதா சொன்னாள்.

    “அவ இனியும் வரலையே” சுரேஷ்மேனோன் பொறுமையற்றுக் கூறினான்.

    “பஸ்ஸில வர்றா இல்லயா? நெனச்ச மாதிரி பஸ் கெடச்சிருக்காது அவளுக்கு. அதுதா நேரமாகுதுனு நெனக்கறே”.

    “அதுதா தெரியும்” சுரேஷ்மேனோன் மேலும் ஒரு அப்பத்தை கையில் எடுத்தான். அவனுடைய கைவிரல்கள் கிராம்பின் மணமுள்ளவையானது.

    “நா சமயல்கட்டுக்குப் போகட்டுமா? அவ வர்றதுக்குள்ள ஏதாவது செய்ய வேண்டாமா? அதுவும் ஸ்பெஷலா? இரால் மீன் பிடிக்குந்தானே இல்லயா?” கீதா கேட்டாள்.

    “ஆமா!” சுரேஷ்மேனோன் கூறினான்.

    “புள்ளகளுக்கும் இரால்னா ரொம்பப்புடிக்கும். வாங்கறதப் பாத்திட்டுதா ரெண்டுபேரும் ஸ்கூலுக்குப்போனங்க. சாயங்காலம் வரை அங்க உட்காரவே பொறுமை இருக்காது”. கீதா மனதார சிரிப்புடன் சமையல்கட்டைப் பார்த்து நடந்தாள்.

    சமையல் அறையை மறைத்துக்கொண்டு பச்சைநிற திரைச்சீலை இருந்தது. கீதா திரைசீலைக்கு அப்புறம் மறைந்தாள்.

    சுரேஷ்மேனோன் டீ குடித்துவிட்டு கையை கழுவி சிட்டௌட்டில் போய் உட்கார்ந்தான். முன்னால் செய்தித்தாளும்  சில வெளியீடுகளும் கிடந்தன. சுரேஷ்மேனோன் ஒரு வாரஇதழை எடுத்துப் பக்கத்தைத் திருப்பினான்.

    பின்னால் காலடி சத்தம் கேட்டது.

    “சிகரெட் புடிக்கறப் பழக்கம் இருக்கா?”

    அவன் முகமுயர்த்தினான்.“ஹேபிட்டில்ல. எப்போதாவது புடிப்பேன்”.

    “சும்மா இருக்கறல்லையா? புள்ளகளோட அப்பா மறந்து வெச்சிட்டுப்போன ஒரு பாக்கெட் பீரோல இருக்கு. நான் எடுத்திட்டு வர்றே. கீதா படுக்கையறைக்குள் சென்றாள். திரும்பி வரும்போது கையில் ஒரு பாக்கெட் சிகரெட்டும், ஒரு தீப்பெட்டியும் இருந்தது.

    “அக்காங்கற முறைக்கு நானே ஊக்கப்படுத்தக்கூடாது” அவள் சற்று கர்வம் பாவித்துக் கூறினாள்.

    “வேண்டா அக்கா” சுரேஷ்மேனோன் பணிவுடன் கூறினான்.

    “பரவால்ல” கீதா நொடியிடையில் கர்வத்தை விட்டு விருந்து உபசாரப்பூர்வத்துடன் தீப்பெட்டியும் சிகரெட்டும் நீட்டினாள்.

    வரவேற்பறையில் புகைச்சுருள்கள் உயர்ந்தது. சுரேஷ்மேனோன் லாவகமாக சாய்ந்து உட்கார்ந்தான். தாய்லாண்டின் சுற்றுலாப் பகுதிகள் குறித்த ஒரு செய்திக்கட்டுரையை ஒருவார்த்தை கூடத் தவறாமல் வாசித்து முடித்தான். அதற்குப்பிறகு நியூயோர்க்கிலிருந்து ஒரு சிறப்பு செய்தியாளனின் சிறப்பான பெரிய கட்டுரைக்கு நகர்ந்தான்.

    “கரண்டிருந்தா ஒரு கேசட் போட்டுப்பாக்காலம். எங்கயோ மெயின் லைன்ல ரிப்பேர் இருக்கறதனால இன்னிக்கிப் பகல் முழுக்கக் கரண்ட் இருக்காதுன்னு பேப்பர்லப் போட்டிருந்தாங்க. கீதா அழுக்குத்துணிகளையும் சோப்புப்பொடியையும் எடுத்துக்கொண்டு குளியலைறைக்குப் போகும்போது கூறினாள்.

    தொவைத்து முடிந்து துணிகளை மாடியில் காயப்போடப் போகும்போதுதான் அவள் வானத்தை கவனித்தாள். வெளிச்சம் மங்கியிருந்தது. மொட்டைமாடி மீது மழை மேகங்கள் கனமாகத் தெரிந்தது. “மழ கண்டிப்பாப் பெய்யும்” என்று தனக்குக்தானேக் கூறிக்கொண்டு கீதா ஈரஆடைகளுடன் திரும்பிவந்தாள். அவள் வரவேற்பறைக்கு வரும்போது சுரேஷ்மேனோன் ஜன்னலுக்கு அருகில் நின்று கொண்டிருந்தான்.

    “இப்போ மழ பெய்யும்” அவள் சமையல்கட்டோடு சேர்ந்த சின்ன வராந்தாவை லட்சியமிட்டு நடந்தாள். சரிதான் சுரேஷ்மேனோன் மனதில் நினைத்தான். தீப்தி இனியும் வரல. பார்வைக்கு எட்டின தூரம்வரை அவள் இல்லை. அவ கையில குடை இருக்குமா? அவ மழய எதிர்பார்த்திருப்பாளா? “ஓஹ் மழ பெய்யத் தொடங்கியாச்சு!”

    வெளியில இருபக்கங்களிலுமுள்ள கட்டிடங்களில் மொட்டைமாடிகளில் பெண்களின் அவசரமான ஓட்டம். மாடிகளில் துணிகாய்வதற்காகக் கட்டப்பட்டக் கயிறுகள் பார்க்கப்பார்க்கவே சூன்யமானது. வெளியிலும் மொட்டைமாடியும் மழைபெய்து ஈரமாயிற்று.

    “மழயெ பாக்கறதுக்கு என்ன ஒரு அழகு. எனக்கு  பைத்தியம் பிடிச்ச போலத்தா” ஜன்னலுக்கு அருகில் நின்று மழையைப் பார்த்துக்கொண்டு கீதா கூறினாள். மழைக்காற்று அவளுக்கு நேராக வீசியது. காற்றில் மழைத்துளிகள் முகத்தில் சிதறி விழுந்தது. சுரேஷ்மேனோன் ஆச்சர்யத்துடன் அவளுடைய முகத்தைப் பார்த்தான். நான் தீப்தியைத்தான் பார்க்கிறேன் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் தனது கைகள் இரண்டையும் உயர்த்தினான். அவளுடைய நினைந்த கன்னங்களை அவன் ஸ்பர்சித்தான். அவள் அவனுடைய கண்களில் மாறிமாறிப்பார்த்தாள். அவற்றில் அசாதாரணமான ஒரு பொலிவை அவள் உணர்ந்தாள். அதுத் தனக்கு மிகவும் நெருக்கமாக வருகிறதென்பதை அவள் அறிந்தாள். ஆனால் அவள் பின்னோக்கி நகரவில்லை. அந்தப் பொலிவிற்கு நேராக அவளுடைய முகமும் நகர்ந்தது. அத்துடன் ஒரு நீண்ட முத்தத்திற்குத் தொடக்கமானது.

    ஜன்னலின் கண்ணாடிகளை வேகமாக அடைத்துவிட்டு மழைக்காற்று நகர்ந்து சென்றது.


    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

    Share
  • ***கொரோனாவுடன் எங்கள் அன்றாட இல்வாழ்க்கை

    ***கொரோனாவுடன் எங்கள் அன்றாட இல்வாழ்க்கை

    அவ்வைமகள்

    இன்று கொரோனா பற்றிப் பலப்பல தகவல்கள் ஒவ்வொரு நானோநொடிக்கும் வெளிவந்து கொண்டிருக்கும்போது இன்னொரு ரோதனையைத் தருவது நம் நோக்கமில்லை.

    இப்போது சுகாதாரத் தூய்மைப் பொருட்களும் பிற அத்தியாவசியப் பொருட்களும் எங்கும் கிடைக்காத ஒரு சூழலில் நாம் இருக்கிறோம். இந்நிலையில், தொற்று நம்மைத் தீண்டாத வகையில் தனிமனிதர்கள் தமது சுகாதாரத்தை –எப்படிப்  பாதுகாத்துக்கொள்வது அதுவும் வீட்டில் இருந்தபடியே, ஒவ்வொரு குடும்பமாக, சுகாதார நிலைப்பாட்டோடு – பாதுகாப்பாக இந்தக் காலக்கட்டத்தை எப்படிக் கடத்துவது என்பதே நம் நோக்கு.

    இங்குப் பேசப்படுவது தற்போது எங்கள் இருப்பிடத்தில் நாங்கள் பயன்பாட்டில் பின்பற்றி வருகிற ஓர் எளிமையான தினசரி வாழ்வியல் பயிற்சி. கொரோனாவினால் எங்களுக்கு எந்த இல்லலும் இதுவரை ஏற்படவில்லை. அதனால், எங்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படவே செய்யாது என்று கட்டியங்கூற வரவில்லை. இடர்ப்பாடுள்ள சூழலில், ஒவ்வொருவரும் தொற்றுக்குத் தோதாக, தூதாக மாறாது தம்மை பலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிற விருப்பமே எமது உளச்சிந்தை.

    இங்குக் கூறப்படுவது மருத்துவ முறையன்று. நான் மருத்துவரும் அல்லள். இது ஒரு அனுபவப் பகிர்வு. நம் இந்தியர்களைப் போலவே, பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஆழ்ந்த ஆர்வம் கொண்ட ஜமைக்கா, மெக்சிகோ, கரீபியன், ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூகத்தில், இன்றைய  சூழலுக்கு இது பொருத்தமாய் இருக்கும் என அறிவார்ந்து எண்ணி, அந்த மனிதர்கள் என்ன செய்கிறார்கள் எனபதை அறியும் ஆவல் இருப்போருக்காக இது பகிரப்படுகிறது. விருப்பமிருப்பின்,  உங்கள் சூழ்நிலைக்கு ஏற்பத் தகவமைப்பு செய்துகொண்டு இவ்வாறான வாழ்வியல் வழிமுறையை நீங்களும் பின்பற்றலாம். இதனால் பாதகம் ஏதும் இல்லை.

    மேலும், இங்கு பேசப்படும் வழிமுறை ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ள நோயாளிகளுக்கானது இல்லை. தற்போது தொற்றில்லாமல் இருந்தபடி, தனக்குத் தொற்று ஏற்படாதவாறு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என விழைவோருக்கு மட்டுமே. (அடிக் குறிப்பு 1 ஐப் படிக்கவும்). தொற்று வந்துவிட்டதென்றால் அரசுக்கு அறிவித்து, மருத்துவ உதவி நாடுவது வேண்டும்.

    காலை மற்றும் இரவுப் பல் துலக்கல்: இருக்கிற பல் பொடி அல்லது பல் பசை – அன்றேல் – உப்பு மற்றும் ஆப்ப சோடா கலந்த கலவை கொண்டு பல்துலக்கி – உப்புநீரால் தொண்டை வரை இறக்கிக் கொப்புளித்து வாய் – மற்றும் உள்நாக்கு – தொண்டைப் பகுதிகளை நன்கு சுத்திகரித்துக் கொண்டுவிட்டு – ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை  வாயிலிட்டு நன்கு கொப்புளித்து – அந்த எண்ணெயை உமிழ்ந்துவிடுதல்.

    காலை மற்றும் இரவு பானம் (இயலுமெனில் காலை மற்றும் மாலை இடைவெளி நேரம் கூட): பாலில் சம அளவு நீர் சேர்த்து – அதில், பூண்டு (2) , இஞ்சி (1), ஏலக்காய் (0.5) , மஞ்சள் தூள் (2), மிளகுத்தூள் (0.25)  சேர்த்து நன்கு காய்ச்சி – அதனுடன் தேன் அல்லது, நாட்டுச் சர்க்கரை, அல்லது சர்க்கரை சேர்த்து – பொறுமையாய்த் தொண்டையில் பரவி இறங்குமாறு அவரவர் தாங்கு திறனுக்கேற்ற சூட்டுடன் பருகுதல் – இங்கே தந்துள்ள எண்கள் –எடை அளவின் விகிதாச்சாரம்.

    இவ்வாறு தயாரிக்கப்பட்ட பால் வெகு சுவையாய் – சிறந்த இனிய மணத்துடன் இருப்பதோடு, பார்க்கவும் வெகு ஜோராய் இருக்கும். அனைத்து வயதினரும் விரும்பிப் பருகக் கூடியது.

    சர்க்கரை வியாதி இருப்பவர்கள், இனிப்பு சேர்க்காமல் குடிக்கிறோம்– பால் விரும்பாதவர்கள் –அல்லது பால் கிடைக்கவில்லை என்பவர்கள் – பாலுக்கு பதில் வெறும்  நீரைப்  பயன்படுத்தியே இந்த பானத்தைத் தயார் செய்து கொள்கிறோம்.

    ஏலக்காய்க்குள்ள நுண்ணுயிர்க் கொல்லித் திறனை அறிய: https://www.sciencedirect.com/topics/food-science/cardamom

    உணவு: எந்த உணவையும் புதிதாகத் தயாரித்து உண்ணுகிறோம். மீந்து போகுமாறு சமைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் கண்டிப்பாய் ரசம் உண்டு; மோர் உண்டு. பெருங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், தணியா, வெந்தயம் சேர்க்க இயலாத எந்த உணவையும் தயாரிப்பதில்லை. தயிரைத் தவிர்க்கிறோம். தயிருக்குப் பதிலாக முறித்த மோரைப் பயன்படுத்துகிறோம். மோரில் நன்கு காய்ச்சிய இரும்புக் கரண்டிக் காம்பைத் தோய்த்து எடுத்துவிட்டு –  வெந்தயத் தூள், பெருங்காயத் தூள், நசுக்கிய இஞ்சி மற்றும் கருவேப்பிலை சேர்த்து மோரைப் பயன்படுத்துகிறோம். (எங்களுக்கு, பச்சை கருவேப்பிலை கிடைப்பது அரிது – காய்ந்த கருவேப்பிலையைத் தான் பயன்படுத்துகிறோம்). எங்களில் சிலர் (இந்தியர்கள்), ஒருபடி மேலே போய் – மஞ்சள் தூள் சேர்த்து – தாளித்தும் மோரைப் பயன்படுத்துகின்றனர்.

    வீட்டில் கைகளைச் சுத்தம் செய்துகொள்ள: வீட்டில் இடையிடையே கையைச் சுத்தம் செய்துகொள்வதற்கென, கீழே குறிப்பிட்டுள்ளபடி தயார் செய்த கழுவு நீரை ஓர் அகலமான பாத்திரத்தில் வைத்துவிடுகிறோம் – குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் – இதில் கை நனைத்து, கைகளை நீருக்குள்ளேயே நன்றாக அலசிக்கொள்கிறோம் பக்கத்தில் சுத்தமான பழைய பருத்தித் துணி – (வேட்டி அல்லது பழைய வாயில் சேலைகள் மிகவும் தோதானவை) கைக்குட்டைகளை வைத்திருக்கிறோம் – அக்கைக்குட்டைகளில்  கை துடைத்துக்கொள்ளச் சொல்கிறோம். துடைத்தபின் அந்தக் கைக்குட்டைகளை ஆப்ப சோடா கரைத்த நீரில் இட்டுவிட்டுச் செல்லுமாறு சொல்கிறோம் – ஒவ்வொரு நாளின் இறுதியிலும் இக்கைக்குட்டைகளைத் துவைத்து  உலர்த்தி – மீண்டும் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்கிறோம். இவ்வாறு செய்வதால், கைகள்  எப்போதும் தொற்று நீங்கி இருப்பதோடல்லாது, தோல் பாழாகாமல் – வறட்சித்தன்மை இன்றி, சுத்தமாய்ப் பளிச்சென்று மிருதுவாய் இருக்கிறது. ஒரு நாளைக்கு, மூன்று முறை இந்த நீரை மாற்றிக்கொள்கிறோம்.

    (இரண்டு லிட்டர் நீரை ஒரு புட்டியில் எடுத்துக்கொண்டு அதில் – அரை டீ ஸ்பூன் உப்பு, ஒரு டீ ஸ்பூன் ஆப்ப சோடா, அரை டீ ஸ்பூன் நல்லெண்ணெய், கால் டீ ஸ்பூன் பொடித்த இலவங்கம் சேர்த்து – புட்டியை மூடி – நன்கு குலுக்கிக் கரைத்துக் கொள்ளவும்). கிராம்புக்கு இருக்கிற நுண்ணுயிர்க்கொல்லித் திறனை அறிய: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3074903/

    மூக்கின் உட்சுவரில் பூச: விருப்பமுள்ளவர்கள், மூக்கின் உட்சுவரில் சுத்தமான நல்லெண்ணெய் ஒரே ஒரு இழை தடவிக்கொள்கிறோம். நல்லெண்ணெய்க்கு உள்ள நுண்ணுயிர்க் கொல்லித் திறனை அறிய:

    https://www.prohealth.com/library/discover-the-little-known-uses-of-sesame-oil-6750

    தொண்டையில் வெளிப்புறம் பூச: விருப்பமுள்ளவர்கள், கொத்துமல்லி, துளசி, கற்பூரவள்ளி, தும்பை – இவற்றில் ஏதேனும் ஒன்றின் இலையைப் பறித்துவந்து இரு கைகளுக்கிடையே அழுத்திக் கசக்கிப் பிழிய  வரும் சாற்றை, சிறிது சுண்ணாம்பு கலந்து – தொண்டையின்  வெளிப்புறம் தடவிக்கொள்கிறோம். எங்களுக்குச் சுண்ணாம்பு கிடைப்பது அரிது என்பதால், கால்சியம் மாத்திரையை  உரைகல்லில் இழைத்து – தேவையான சுண்ணாம்பை எடுத்துக்கொள்கிறோம் குழந்தைகளுக்கு – பெரியவர்களுக்கு என எல்லா வயதினருக்கும் ஏற்ற பூச்சு இது. இந்தப் பூச்சினால் எந்தக் கெட்ட வாசனையும் வராது. மாறாக, விறுவிறுப்பான சுகந்தம் தெரியும். இதைத் தினப்படியோ அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ செய்து கொள்ளலாம். (அடிக் குறிப்பு 2ஐப் படிக்கவும்). பச்சிலைச் சாற்றுக்குப் பதிலாக, மஞ்சள் பற்றும் போட்டுக்கொள்கிறார்கள்.

    மூக்கில் நுகர: விரலி மஞ்சளை – தீபத்தின் ஜ்வாலையில் காட்ட – அது கனன்று இலேசான மெல்லிய புகை  இழையை உருவாக்கும் – அப்புகையை ஒரே ஒரு விநாடி நுகர்வது ஒரு சிலரது பயிற்சியாக உள்ளது. காலை ஒரு முறை – மதியம் ஒரு முறை – இரவு ஒரு முறை நுகர்ந்தால் போதும், மேல் சுவாச மண்டலத் தொற்றுகளை விலக்குவதற்கு எளிமையான வழியாம். குறிப்பாக வீட்டை விட்டு வெளியே சென்று வரவேண்டியிருந்தால், வீட்டு வாசலிலேயே – இதைச் செய்துவிட்டு உள்ளே வருவது நலம் என்று அறிந்து கொண்டோம். ஆஸ்துமா உள்ளவர்கள் இதைச் செய்யவேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.

    மூக்கு – வாய் மூடி: மூக்கு -வாய் மூடிகள் கிடைக்காத நிலையில், சன்னமான பருத்தித் துணியை (வேட்டி அல்லது பழைய வாயில் சேலைகள் மிகவும் தோதானவை) மஞ்சள் கலந்த நீரில் நனைத்து உலர்த்தி  – எங்களுக்குத் தேவையான மூக்கு -வாய் மூடிகளை நாங்களே உருவாக்கிக் கொள்கிறோம். எங்களுடைய சிறுவட்ட இயக்கங்களுக்கு இது தோதாக இருக்கிறது. மஞ்சளின் வாசம் ஒரு பிளஸ் பாயிண்ட் தான்.

    வீட்டிற்கு உள்ளும் வெளியும் ஆங்காங்கே:  பூண்டையும் வசம்பையும் தட்டி – டிஷ்யுவில் (பழைய வேட்டி அல்லது புடவைத் துண்டுகள் தோதானவை) தளர்ந்த சிறு சிறு மூட்டைகள் போல் செய்து வீட்டைச் சுற்றி ஆங்காங்கே வைத்துவிடுகிறோம். மூன்று நாளைக்கு ஒருமுறை  இதை மாற்றிக்கொள்கிறோம். (அடிக் குறிப்பு 3ஐப் படிக்கவும்). பூண்டு, வசம்பு இரண்டுமே ஒரு சிறந்த நுண்ணுயிர்க் கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லிகளாகும். வசம்பு, மருந்து எனும் நிலையைத் தாண்டி உணவாகப் பயன்படுத்தும் பிரபலத்துவம் இல்லாதது. வசம்பின் குணாதிசயங்களை அறிய: https://www.researchgate.net/publication/266372059_Acorus_calamus_An_overview

    நாள் முழுவதும் தீபம்: நல்லெண்ணெய் விட்டு தீபம் நாள் முழுக்க எரியுமாறு செய்கிறோம். காற்றைத் தூய்மை செய்ய நன்மை பயக்கும் வழி இது என்பது பெரியவர்களால் சொல்லப்பட்டிருக்கிற சேதி. (அறிவியல் ரீதியாகப் பார்த்தால், தீபத்தின் ஜ்வாலை ஒளி பிளாஸ்மாவாகும்; இது பரவு திறன் கொண்ட அயனிகளை உருவாக்குகிறது – இதனால் வீட்டினுள் காற்றுச் சலனம்  சன்னமாய் ஏற்படுவதால் எரியும் தீபம், காற்றைச் சுத்திகரிக்கும் தன்மை உடையதாகிறது.)

    தூபம்: எங்களுக்கு வீட்டில் புகை போடுவது இயலாது (புகை அலாரம் அடித்து ஊரைக்கூட்டி ரகளை பண்ணிவிடும்). எனவே அதிகப் புகை வராதவாறு, மிக இலேசான தூபம் ஒருநாள் விட்டு ஒரு நாள் – ஒரு முறை காலையும் ஒரு முறை மாலையும் போடுகிறோம்– வீட்டிற்கு உள்ளும் வெளியிலும்.

    ஐந்து வெள்ளைக் கடுகு, நாலு உலர்ந்த துளசி இல்லை –ஒரு சிட்டிகை வேப்பிலைத் தூள்   – ஒரு சிட்டிகை நீலகிரி இலைத்தூள், இவற்றைக் கலந்து வைத்துக்கொண்டு, இரண்டு பார்பிகியூ கரித்துண்டுகளை வைத்துக்கொண்டு துரிதமாக போடப்படும் தூபம் இது. (அடிக் குறிப்பு 4ஐப் படிக்கவும்). வெள்ளைக் கடுகு இல்லாமலும் இந்த தூபத்தைப் போடலாம். வெள்ளைக் கடுகின் மருத்துவக் குணங்களை அறிய: https://botanical.com/botanical/mgmh/m/mustar65.html

    தூபக் குப்பிகள்: மஞ்சள் தூளில் சிறிது வேப்பிலைத் தூள்   – மற்றும் நீலகிரி இலைத்தூள், சில சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் (நறுமணத்திற்காக) கலந்துப் பிசைந்து சிறு – சிறு கூம்புகள் (மஞ்சள் பிள்ளையார் செய்வது போல) செய்து, வீட்டிலேயே உலர்த்தி எடுத்துக்கொண்டு அவற்றைத் தினசரி தூபமாக ஏற்றி வருகிறோம்.

    யோகா: ஜிம், அதாவது உடற்பயிற்சிக் கூடத்தை நம்பியே வாழும் ஒரு வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை வந்துவிட்டதால் பைத்தியம் பிடித்தால் போல் இருக்கும் நிலை பலருக்கு. அதே நேரத்தில், தொற்றை – நோயை எதிர்ப்பதற்கும் வெளியே செல்லாமல் வீட்டுக்குள் இருப்பதால் நேரும் மந்த நிலையைப் போக்கவும்   – உடலுக்குச் சரியான பயிற்சி தந்தே ஆகவேண்டும். யோகா எனும் நம் பண்டையக் கலை, கருவிகள் சார்ந்த  உடற்பயிற்சிகளைக் காட்டிலும் எத்தனை உன்னதமானது என்று நமக்குப் புரியும்படியான தருணமிது. எனவே நாங்கள் யோகாவை தினசரிப் பயிற்சியாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

    தியானமும் பிரார்த்தனையும்: உலகு இன்று ஸ்தம்பித்து நிற்கிறது. இறையருள் இன்றி எதுவும் நடக்காது என்பதை எம் நட்பு வட்டத்தில், நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்கள் கூட வாய்விட்டுச் சொல்லிவிட்டார்கள். இன்று, கிருமி நம் உடலில் புகுந்தாலும், அது நுரையீரலுக்குள் இறங்காமல், நம் மிடறிலேயே  நின்று விட்டதென்றால் எந்தப் பாதிப்புமில்லை என்பது தான் உண்மை. எனவே, நம் அனவருக்கும் திரு நீலகண்டனே துணை. அன்று நளிர் சுரம் வந்து மக்களை வாட்டியபோது, திருஞான சம்பந்தர் பாடித் தொழுத திருநீலகண்டப் பதிகம் நமக்கு அருள்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிகம் தோன்றிய வரலாற்றை, அறிந்த அந்நொடியில், சமயப் பிணக்கின்றி அனைவருமே அதனைப் படிக்க ஒப்புக்கொண்டது இறைவனின் அருளே – மாலை ஆறு மணிவாக்கில் அனைவரது இல்லங்களிலும் அவரவர் படிப்பது அல்லது ஒலிப்பது (https://shaivam.org/thirumurai/first-thirumurai/1307/thirugnanasambandhar-thevaram-thiruneelakandam-avvinaik-kivvinai) என்று ஒரே நேரத்தில், கூட்டம் போடாமலேயே, கூட்டாகப் பிரார்த்திக்கிறோம். அதிகாலையில் யோகப் பயிற்சிக்கு முன்பு, யோக முத்திரைகளும், தியானமும், சூரிய நமஸ்காரமும் செய்கிறோம்.

    கொரோனாவைத் தாண்டிய பிரச்சனைக்கான ஆயத்தம்: பலபேர் வேலை இழந்திருக்கிறார்கள் – பல பேர் வேலை இழக்கக்கூடும் என்பதாகவும் அறிகிறோம்.  பசியும் ருசியும் வெவ்வேறானவை என்பது வெகு தெளிவாகவே புரிகிற காலமாய் இக்காலம் அமைந்திருக்கிறது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு தலைதூக்க ஆரம்பித்திருகிறது. பொருளாதாரப் பிரச்சனைகள் பகிரங்கமாய் வெடிக்க, அதிகக் காலம் பிடிக்காது என்றே தோன்றுகிறது. இதை உணர்ந்தவர்களாக, எல்லா அத்தியாவசியப் பொருட்களையும், மிகக்  குறிப்பாக, உணவுப் பொருட்களை வெகு எச்சரிக்கையோடு உபயோகப்படுத்துகிறோம். எந்த ஒரு பொருளையும் ஒரு துளியும் வீணடிப்பதில்லை என்ற உறுதியோடு செயல்படுகிறோம். மீடியாக்களில் கவனத்தைச் சிதறவிடாமல், இருக்கிற ஒவ்வொரு உணவுப் பொருளையும் – ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளையும் எப்படிப் பாதுகாத்து – அதன் உபயோக நாட்களை எவ்வாறு நீட்டிப்பது – என்பதான சிந்தனையில் –  செயலில் சிரத்தையுடன்  ஈடுபட்டிருக்கிறோம். கொத்துமல்லி, வெந்தயக்கீரை, புதினா, துளசி ஆகியனவற்றை  வீட்டிலேயே வளர்த்துக்கொள்ளும் முயற்சியும் இதில் அடக்கம். குழந்தைகளும் – பெற்றோர்களும் – உள்நாடு – வெளிநாடு என்று பிரிவாலும் – கொரோனாத் திகிலாலும் கலக்கமுற்றுக் கிடக்கிறார்கள். ஏழ்மையில் உள்ளோரின் நிலை பரிதாபகரமாக உள்ளது.  என்று தணியும் இந்தக்  கொரோனா பயம்? என்று உலகோர் அனைவரும் இறைஞ்சும் இவ்வேளையில், தனிமனிதப் பாதுகாப்பும் பலமும் இன்றியமையாத சக்திகளாகும் என்பதை  வலியுறுத்தத் தேவையில்லை.

    அடிக்குறிப்புகள்

    (1) நமக்கு முன்னே உள்ள பிரச்சனையை நாம் முதலில், புரிந்து கொள்ள வேண்டும்: நம்மைச் சுற்றி – நம்முடைய சூழலில் தொற்றுக் கிருமிகள் பரவுகின்றன – அவை நம்மையும் கட்டாயம் வந்தடையும் – அவ்வாறிருப்பினும், ஒவ்வொரு தனிமனிதரும் வைரசிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது தான்.

    இவ்வாறு தனிமனிதர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பொதுவான நெறிமுறைகளை – சட்டங்களை, அரசு அறிவித்திருகிறது – மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் – ஒருவருக்கொருவர் எட்டத்திலே நிற்கவேண்டும்  – முகத்தில் – கண்ணைத் தவிர, பிற ஓட்டைகளை மூடிக்கொள்ளவேண்டும் – சுத்தமாய் இருக்கவேண்டும் என்பதெல்லாம் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டியவையே. அவற்றை அலட்சியம் செய்யக் கூடாது.

    அதே நேரத்தில், காற்றை ஊடகமாகக் கொண்டு வரும் ஒன்றை முழுதுமாய்க் கட்டுப்படுத்துவது என்பது அரிது – அதுவும் கிருமிகள், ஒன்றிரண்டாய்ப் பரவுவதில்லை – ஒரு இருமலில் சுமார் 3,000, எச்சிற்துளிகள் இருக்கும், 20,௦௦௦ வைரஸ்கள் இருக்கும்.  தும்மல், இருமலைக் காட்டிலும் கூடுதலான காட்டமுடையது .  தும்மலில் 4௦,௦௦௦ எச்சிற்துளிகள் இருக்கும்; இருமலின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர்; தும்மலின் வேகம் மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர்.

    இருமும்போதும் தும்மும்போதும், வெகு நுண்ணிய துளிச் சிதறல்களாய்ச் சளியும் கிருமிகளும் கலந்த மிகப் பொடிதான் எச்சிற்துளிகள் நோயாளியின் வாயிலிருந்து வெளிவந்து காற்றில் கலப்பதால்,  காற்றில் அவை பலமாய் நிற்பவை. (சிறு துளிகளுக்கு வாழ்க்கை அதிகம்). தும்மல் துளிகளின் பலம், இருமல் துளிகளின் பலத்தைவிட அதிகம். ஏனெனில், தும்மல் துளிகள் இன்னமும் பொடிதானவை.

    ஒரு இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகு சுமார் ஒரு மணி நேரம், காற்றில் நிலைத்து மிதக்கும் தன்மை உடையவை  இந்த எச்சிற்துளிகள். எச்சிற்துளிகளின் பலத்தால் அவற்றில் உள்ள வைரஸ்களும் காற்றைப் பலமாய்ப் பிடித்துக்கொள்கின்றன

    எனவே நம்மீது தும்மல் அல்லது இருமல் நேரடியாகப் படவில்லை என்றாலும் கூட – அவை நம்மை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த எச்சிற்துளிகள் பொருட்களின் மீது படியவல்லவை.

    ஆகையால், சூழலில் உள்ள பொருட்களை நாம் – தொடுதலினாலும் பரவுகிறதான ஒன்றாய் இந்நோய் இருக்கிறது.

    மேலும், வயதாதானலும் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாலும் பலவீனமானவர்களாக இருக்கிறவர்களையே அது குறிவைக்கிறது.  இந்நோய் மனிதர்களை, மரணமுறச் செய்யும் பொறிமுறை (mechanism) மிகுந்த நுட்பமானது – விபரீதமானது ஏனெனில், அது நுரையீரல்களைத் தாக்கி மூச்சினை  நிறுத்திச் சாகடிக்கிறது.

    (2) அமெரிக்காவில் உள்ளவர்கள், நாங்கள் தும்பைக்கு எங்கே போவது என்று கவலைப்படத் தேவையில்லை. இந்தியத் தும்பையை ஒத்த ஏன் இன்னமும் ஒருபடி மேலான தும்பை இங்கு இருக்கிறது. நம்மூர் தும்பையைப் போலவே, இது சர்வ சாதாரணமாக, கால்படாத இடங்களில் எங்கும், முளைத்துக் கிடக்கறது. இதற்கு “Heal All” அல்லது “Self-heal” என்று பெயர் – தமிழில் சொல்லவேண்டுமென்றால் – சர்வரோக நிவாரணி. இது ஒரு சிறு செடி – புல் பூண்டுகளோடு – இயல்பாய் விளைந்து – கொள்ளை  அழகோடு காணப்படுகிறது. ஊதா வண்ணத்தில் உள்ள இதன் மலர்கள் கண்கொள்ளாக் காட்சி – இதை அப்படியே பச்சையாக உண்ணமுடியும் என்று சொல்கிறார்கள்.

    இப்போது இதற்கு சீசன் – சொல்லப்போனால் – இந்த ஆண்டு – சீசனுக்கு முன்னாடியே இது வந்துவிட்டது. நம் கொரோனா போராட்டத்திற்கு ஒத்தாசை செய்ய விரும்புகிறாற்போல.

    பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு “Heal All” செடி பற்றித்  தெரியவில்லை. இதனைக் களை என்று நினைத்து அழித்துவிடுகிறார்கள். ஆனால் சில வர்த்தக நிறுவனங்கள் – “Heal All” பண்ணைகள் வைத்து இதிலிருந்து “Heal All” எண்ணெய் இறக்கி நல்ல விலைக்கு விற்று வருகிறார்கள்.

    அமெரிக்காவில், கற்பூரவள்ளி இல்லை என்று எண்ணாதீர்கள். மெக்சிகன் மின்ட் என்ற பெயரிலும் விக்ஸ் பிளான்ட்  என்ற பெயரிலும் கற்பூரவள்ளி இங்கு கிடைகிறது. விதை அல்லது துண்டங்கள் (cuttings) வாங்கி நாமே வீட்டில் தொட்டிகளில் வளர்க்க முடியும்.

    (3) வசம்பு (Sweet Flag) அமெரிக்காவிலும் இருக்கிறது. வசம்புக் கன்றுகள் கூட சில நர்சரிகளில் விற்கப்படுகின்றன.

    நம்மூர் வசம்பு (Acorus calamus)  மற்றும் அமெரிக்காவின் வசம்பு இரண்டுமே இங்கு உள்ளன. அமரிக்க வசம்பு (Acorusamericanus) நம்மூர் வசம்பைப் போலவே இருப்பினும் தாவரவியல் ரீதியாக இது வசம்புக் குடும்பத்தைச் சேர்ந்த இன்னோர் உறுப்பினர் அவ்வளவே (வசம்பை, யுரேசிய  வெள்ளையர்கள், அமெரிக்காவில் புகுத்தியதாக வரலாறு). இங்குள்ள பாரம்பரியம் மிக்க வெள்ளையர்கள் பலரும், மருத்துவப் பயன்பாட்டுக்கும் அழகுக்கும் என வசம்புச் செடிகளை வீட்டில் வளர்க்கிறார்கள். (ஆனால், அமரிக்காவின் USDA, உணவுப் பொருட்களில் வசம்பைச் சேர்ப்பதைத் தடை செய்துள்ளது).

    (4) வெள்ளைக் கடுகு விதைகள் இங்கே கிடைக்கின்றன. இங்கு இது வெள்ளைப் பனிக் கடுகு என்று அழைக்கப்படுகின்றது. பார்ப்பதற்கு நம்மூர் வெள்ளைக் கடுகு போலவே இருக்கிறது.

    அமெரிக்காவில்  வேப்பமரங்கள் உண்டு என்றாலும் – எல்லா மாநிலங்களிலும் அவை வளரா. புளோரிடா, டெக்ஸாஸ், அரிஸோனா, கலிபோர்னியா, போன்ற சாதகமான தட்பவெப்பச் சூழ்நிலைகள் உள்ள மாநிலங்களில் – சில இடங்களில் வேப்ப மரங்கள் – வேப்பமரப் பண்ணைகள் உள்ளன என்று அறிகிறோம். வேப்ப மரங்களை வளர்க்க அமெரிக்காவில் தடையில்லை என்றாலும், வேம்புக்குத் தேவையான தட்பவெப்ப நிலை இல்லாததாலும்  – வேம்பினால் வணிக இலாபமும் இல்லை என்பதாலும்  அமெரிக்கர்கள் வேப்பமரத்தைப் பயிரிடுவதில் நாட்டம் காட்டுவதில்லை. இப்போதுள்ள சில வேப்பமரங்கள் அல்லது வேப்பம்பண்ணைகள், பெரும்பாலும் இந்திய ஆர்வலர்களால் வந்தவை என்பதாகச் சொல்லப்படுகிறது. அமரிக்காவில், யூகலிப்டஸ் மரங்கள் உண்டு என்றாலும், வெகு பரவலாக எல்லோராலும் வளர்க்கப்படும் மரமாக அல்லது சாலை நெடுகிலும் காணப்படும் மரமாக, சர்வஜனக் காட்சியாக எல்லார் வீடுகளிலும் எல்லா மாநிலங்களிலேயும் இதைக் காண முடிவதில்லை.

    நான் உலர்ந்த வேப்பிலையையும் வேப்பிலைத் தூளையும், மற்றும் யூகலிப்டஸ் இலைத் தூளையும் ஆன்லைனில் மட்டுமே வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன்.

    Share
  • இணையத்தில் நேர மேலாண்மை

    இணையத்தில் நேர மேலாண்மை

    அண்ணாகண்ணன்

    இணையத்தில் நேர மேலாண்மை என்ற பொருண்மையில் ஒரு பயிலரங்கை இந்திய நேரப்படி இன்று (10.04.2020) மதியம் 2 மணிக்கு Zoom தளத்தின் வழியாக நடத்துகிறேன். வாய்ப்புள்ளோர் இணைக.

    Share
  • கண்கண்ட தெய்வங்கள்

    கண்கண்ட தெய்வங்கள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

    கொரனோ வந்து கோரமாய்த் தாண்டவம் ஆடி, பல உயிர்களைப் பறித்தபடி இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்க்கவோ பேசவோ கைகுலுக்கவோ முடியாத நிலையைக் கொரனோ ஏற்படுத்திவிட்டது. உறவுகள் பிரிவுகள் ஆகிவிட்டன. கூடினால் ஆபத்து! குலவினால் ஆபத்து! நினைக்கவே இருள் எம்மைச் சூழந்த உணர்வே எழுகிறது.

    இந்த நிலையில் வைத்தியர்களும் தாதியர்களும் எப்படி இருக்கிறார்கள் என்றால் மண்மீது வந்த மருத்துவ தெய்வங்களாய் மாறியிருக்கிறார்கள் என்று தான் கொள்ள வேண்டும். சாதாரண வேளையில் மருத்துவம் பார்ப்பதைவிட தற்போதுள்ள நிலையில் மருத்துவம் பார்ப்பதும் கம்பியில் நடப்பது போல் என்றுதான் சொல்லவேண்டும். கொரோனா தொற்றியவர்களைப் பராமரிக்கும் மருத்துவர்களே கொரோனாவுக்கு இலக்காகி உயிரை இழக்கும் நிலைகூட நேர்கிறது. அதனால் தற்போது மருத்துவர்கள் கம்பியில்தான் நடக்கிறார்கள்.

    வைத்தியர்களும் தாதியர்களும் வானத்திலிருந்து வந்து குதித்தவர்கள் அல்லர். அவர்களும் எங்களை ஒத்தவர்களே. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அன்பான கணவன், ஆசையான குழந்தை, அன்பான மனைவி அணைத்திடக் குழந்தை, அப்பா, அம்மா, சகோதரங்கள் என்று உறவுகளால் பிணைக்கப்பட்டே அவர்களும் இருக்கிறார்கள். அப்படி அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்தே விடுகிறோம். வைத்தியசாலை சென்றால் அது எந்த நேரமானாலும் எம்மைக் கவனித்துப் பராமரிக்கும் கடமை அவர்களுக்கு உண்டு என்பதை மட்டுமே நாமெல்லோரும் நினைவில் வைத்தபடியே இருக்கிறோமே தவிர – அவர்களும் மனிதர்களே அவர்களுக்கும் களைப்பு இருக்கும், அவர்களுள்ளும் பல நினைப்புகள் ஓடும் என்பதையெல்லாம் எவருமே எண்ணுவதே இல்லை. வைத்தியத்துக்குப் போய்விட்டால் சுகமாக்கி அனுப்புவது அவர்களது கடமை மட்டுமே என்றுதான் எண்ணுகிறோம். அப்படி நினைப்பதற்கு நாம் ஒருவரல்லர். எம்மைப் போல் பலரும் அங்கு வந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரையும் முகங்கோணாமல் சினங்காட்டாமல் பசியை நித்திரையை மறந்து மருத்துவர்கள் தாதியர்கள் வேலை செய்யவில்லை, சேவையாற்றுகிறார்கள் என்பதை எம்மில் பலரும் நினைத்துக்கூடப் பார்ப்பதே இல்லை.

    இரத்தமும், சதையும், மரணமும், ஓலமும் அவர்களின் நாளாந்த வாழ்க்கை ஆகிவிட்டது. அவர்கள் படுக்கைக்குப் போனாலும் அவர்கள் கனவில்கூட ஓலமிட்டு நிற்பவரும், மரணவாயில் நிற்பவரும்தான் வந்துநிற்பார்கள். கார் இருந்தும், நல்ல வீடிருந்தும், நல்ல படுக்கை இருந்தும், அவர்களுக்கு நல்ல நித்திரைதான் வந்திடுமா? ஒருகணம் நாம் நினைத்துத்தான் பார்த்ததுண்டா?

    நாளாந்தம் இதுதான் அவர்களது நிலை. ஆனால் இப்போது இந்த நிலை இன்னும் மோசமாகிவிட்டது . இதுவரை நாளும் பணிக்குச் சென்றால் பணி முடிந்தபின்னர் வீடு வந்திடலாம். சிறிது பொழுதாவது குடும்பத்துடன் இருந்திடலாம். ஆனால் கொரோனாவின் கோரத்தால் மருத்துவர்களோ தாதிகளோ மருத்துவமனையிலேயே இருக்கும் நிலை உருவாகிவிட்டது.

    பணிகூட இப்போது பயமாகிவிட்டது. தொற்றிவிடும் எனும் பயத்தால் எட்ட நிற்கும் நிலை. தொற்றிவிடும் எனும் பயத்தால் தொடமுடியா நிலை. பெற்ற பிள்ளை வீட்டில். பெற்றவரும் வீட்டில். கட்டிய கணவனும் வீட்டில். தொட்டிலிலும் ஒரு பிள்ளை. பால் கொடுக்கத் தாயில்லை. பார்க்கத் துடிக்கும் பிள்ளைக்கு அம்மாவைப் பார்க்கவே முடியாத நிலை.

    மூன்று பிள்ளைகளின் தாயான மருத்துவர் பிள்ளைகளைக் கட்டி அணைத்து முத்தமிட்டுப் பிரிய விருப்பின்றி மருத்துவமனை செல்கின்றாள். சென்றவள் வீட்டுக்கு வரமுடியா நிலை. சின்னக் குழந்தைகள் அம்மாவைக் காணாது அடம் பிடிக்கின்றன. அப்பாவினால் அம்மாவை அணுகமுடியாத நிலை. கைப்பேசியில் கதைக்கிறார்கள். காணொலியில் பிள்ளைகளுக்கு முத்தம் இடுகிறாள். இரண்டு வாரத்தின் பின் காணொலியில் முத்தமிட்ட தாய், காணாமலே போய்விடுகிறாள். கட்டிய கணவன் கதறி அழுகிறான். மருத்துவ மாது மனிதம் காக்க தெய்வமாகிறாள்.!

    இங்கிலாந்தில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றியவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை. அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர். சக மருத்துவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். மருத்துவமனையிலேயே மனைவியைக் குழந்தையைத் தவிக்கவிட்டு மரணத்தை தழுவுகின்றார். இந்தியரானவர் இங்கிலாந்து சென்று மருத்துவத்தில் பெரும்புலமை பெற்றார். மருத்துவத்துக்குத் தன்னையே கொடுத்தும் விட்டார். மாடிமனை வீடிருந்தும் அவர் குடும்பத்தையே பார்க்காமலேயே பணியிலேயே பலியாகிவிட்டார்.

    வீடுசென்றால் மனைவிக்கும் குழந்தைக்கும் தொற்று பரவிடும் என்பதால் தனது வாகனத்தையே வீடாக்கி அதிலேயே தங்கி நோயாளரைக் கவனித்து வருகிறார் என்னும் செய்தியைப் பார்க்கும்பொழுது அவரை வணங்காமல் இருக்கத்தான் முடியுமா? மனைவியுடன் குழந்தையுடன் கைப்பேசியில் மட்டுமே தொடர்பில் இருக்கும் அவரும் எங்களைப் போல் ஒருவர்தானே!

    வருகிறேன் என்று சொல்லி விடைபெற்ற மருத்துவர், திரும்பி வரவேயில்லை. இரண்டு வயதுக் குழந்தையைக் காணொலி வாயிலாகக் கண்டு தனது அன்பு முத்தத்தை அளிக்கிறாள் அந்த மருத்துவ மாது. தாயைக் கண்ட குழந்தை அழுகிறது. அழுகை தாங்கமுடியாக் கணவன் குழந்தையுடன் மருத்துவமனை செல்கிறான். மனைவியோ பக்கம் வரமுடியாமல் தூரவே நிற்கிறாள். தாயைக் கண்ட மழலை, தவித்து அழுகிறது. தாயும் தவிக்கிறாள். அழுகிறாள். பார்த்திருக்கும் ஏனைய பணியாட்களும் அழுகிறார்கள். கணவன் கலங்கிய கண்களுடன் அழுங்குழந்தையுடன்! இதுதான் மருத்துவர்களின் நிலை! அழுகையை ஓரங்கட்டிவிட்டு தனது பணியில் இறங்கிவிடுகிறாள் அவள். இது இறை நிலை அல்லவா? விருப்பை வெறுப்பை வெளிக்காட்டா நிலை! பற்றற்ற நிலை!

    தன் கையால் உணவு கொடுத்து தயாளமாய் தடவிக் கொடுத்த பலரின் மரணத்தைக் கண்டு தாதியர்களால் தாங்க இயலவில்லை. பேசியபடி வந்தவர்கள் பேசாமலே ஆகிவிடுதலைக் காணும் தாதியர்கள் எப்படி இருப்பார்கள்? மருத்துவர்கள் சேவை ஒருவிதம் தாதியர்கள் சேவை இன்னொரு விதம். “மக்கள் சேவை மகேசன் சேவை” இதைத்தான் மருத்துவர்களிடமும் தாதியரிடம் காணுகிறோம்.

    மகான்களின் வழியில் செல்லும் மருத்துவர்களும் தாதிகளும் மண்ணுலகில் இன்று “கண்கண்ட தெய்வம்” ஆகின்றார்.

    விதண்டாவாதம் பேசுவதும், விஷமத்தனமாய்க் கருத்துகளைப் பதிவிடுவதும் குறைசொல்லி நிறைவடைவதும், நாட்டுநிலை புரியாமல் செயற்படுவதும் சமூக அக்கறையின்மையினையே காட்டும். வீட்டுக்கே வரமுடியாமல் நாட்டினைக் காத்திட தம் வாழ்வினையே அர்ப்பணிக்கும் மருத்துவர்களையும் தாதியர்களையும் வணங்கவே வேண்டும். “மானிட உருவில் பூமிக்கு வந்த தெய்வங்களே”  இவர்கள் என்பதை யாவரும் மனத்தில் இருத்த வேண்டும்.

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 13

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 13

    அவ்வைமகள்

    13. ஆயத்தச் சிந்தையும் புரட்சிப் பிரசவமும்

    புரட்சிகள் எவ்வாறு உருவாகின்றன என்று நாம் சிந்தித்து வரும் இத்தருணத்தில், புரட்சிக்குண்டான காரணங்கள், சமுதாயத்தில் எல்லோரும் அறியும்படியாக், பொத்தம்பொதுவில் நடக்கிறபோது – ஏன் ஒருவர் – ஒரே ஒருவர் புரட்சியாளனாக ஆகிறார் என்று ஒரு வினா வருகின்றது.

    புரட்சியும் அறிவியல் கண்டுபிடிப்பும் ஒன்றே போன்றவை. புரட்சியைப் போன்றே, அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று நிகழவேண்டுமேன்றால் அதற்கு, பல்முகக் காரணங்கள் இருக்கவேண்டும் (அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்கள்); புறத்தே இருந்து வரும் ஊக்குவிப்பான்களும் வேண்டும். இவை அனைத்தும் எல்லாத் தருணங்களிலும் எவருக்கும் கிடைக்கப்பெறுவதாகத்தான் இந்த உலகம் இயங்கி வருகிறது. ஆனால் ஒரே ஒருவர் தான் புரட்சிகரமான அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார்.

    இது இவ்வாறு நடப்பதன் காரணம் என்னவென்று நோக்கினால், தயார் நிலைச் சிந்தையோடு (prepared mind) எவரொருவர் இருக்கிறாரோ அவர் மட்டுமே அந்த அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார் என்பது புரியும்.

    தயார் நிலைச் சிந்தையை விளக்குவதற்கு. சர் ஐசக் நியூட்டனை ஒரு எடுத்துக் காட்டாகக் கொள்வோம். என்றைக்கு ஆப்பிள்  மரங்கள், இந்த பூமியில் உருவாகினவோ அன்றிலிருந்தே ஆப்பிள் பழங்கள் மரத்திலிருந்து கீழே விழுந்து கொண்டு தான் இருந்தன.  ஆனால், தன் முன்னே மரத்திலிருந்து ஆப்பிள் விழுகையில், இப்பழம் ஏன் மேலே செல்லாமல் கீழே விழவேண்டும்? என்கிற முதல் வினாவை – உலகில் யாரெவரும் எழுப்பாத முதல் வினாவை நியூட்டன் எழுப்புகிறான். அந்த வினாதான் புரட்சியின் பொறி – அந்தப்பொறி தான் – அவனை மாபெரும் அறிவியல் புரட்சி ஒன்றை நிகழ்த்தவைக்கிறது. இன்று நியூட்டன் அறிவியலில் ஒரு சகாப்தம்.

    நியூட்டனைப்போன்றே நம்மவரான சர் சி.வி. ராமன், மத்தியதரைக்கடலில் பயணம் செய்யும்போது தன கண்முன் தோற்றம் தந்து கொண்டிருந்த, வானமும் கடலும்  ஏன் நீல வண்ணத்தில் இருக்கின்றன என்று வினவினார். வானம் என்பது வெகு இயல்பாக எப்போதும் எல்லோருக்கும் நீலவண்ணத்தில் தான் காட்சியுறுகிறது ஆனால் அது வினவவேண்டிய விடயமாக. ஆய்வு செய்யவேண்டிய விடயமாக சி. வி. ராமனுக்கு மட்டுமே புலப்பட்டது; அதனால் அவன் மாபெரும் அறிவியல் புரட்சியை நிகழ்த்துகிறவனாயினான். இன்று நியூட்டனைப் போன்றே சி. வி. ராமனும் அறிவியலில் ஒரு சகாப்தம்.

    தன்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளினால் உந்தப்பட்டு, அந்நிகழ்வுகளின் மூலமாய் நிற்கும் ஆதியை சரிவர அறியும் முகமாக, அதுகாறும் வேறு எவரும் கேட்காத முதல் கேள்வியை ஒருவர் எழுப்புகிறார் என்றால், அவருக்கு ஆங்கே, ஆயத்த உள்ளம் – தயார் நிலைச் சிந்தை – Prepared Mind – வாய்க்கப்பெற்றிருந்தது என்று பொருள்.

    சரி, ஒருவர் தயார் நிலைச் சிந்தையைப் பெற வேண்டுமென்றால்  அதற்கு என்ன தேவை என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது அல்லவா?

    பாண்டித்யம்  அதாவது  ஆழ்ந்த அறிவும் அதனோடு  தம்மைச் சுற்றி நடப்பவற்றைக் காணுகிற இயல்பும், சமூக நேசமும், எளிமையான எண்ணப்போக்கும் ஆகிய நான்முகத் திறன் ஒரே நேரத்தில் தேவை.

    புரட்சி விளைக்கப் போகிற துறை எதுவோ அல்லது உபதுறை எதுவோ அல்லது அத்துறையைச் சார்ந்த சித்தாந்தம் எதுவோ அதிலே மிகவும் ஆழ்ந்து நிறைந்த பாண்டித்யம் ஒருவருக்கு இருக்கிறபோது அவர் ஒரு உண்மையான, சமூகநேசனாக இருக்கிற வகையில், அவருக்கு வாய்க்கப் பெற்றிருக்கிற பாண்டித்யத்தின் நாடிநரம்புகளை மீட்டிக் கிளர்த்துவிடும்படியான  சம்பவம் ஒன்று அவரது சூழலில் நடக்கிறபோது, அக்கணம், அவருள் தடையின்றி, எளியதாய், அனாயாசமாய்க் கிளம்புவதுதான் புரட்சியின் பொறி.

    பொறி கிளம்பியது என்றால் உடனே புரட்சி விளைந்துவிடும் என்று பொருள் இல்லை. நான் ஏற்கனவே கூறியதைப்போல, துரிதப்புரட்சிகள் நிலைத்தவையகா!

    பொருட்கள் உற்பத்தியில், Idea to Product என்கிற வாசகம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிற வாசகம். எண்ணம் செயல்  ஆகிய இரண்டும் தொடர்புடையவை என்றாலும், அவை இருவேறு துருவங்களைப் போன்று எட்டித் தொலைவில்  நிற்பவை. ஒரு எண்ணமானது  செயல் எனும் நிலையை அடைய நிறையப் பாடுபடவேண்டும் – அதற்கு, நிறைய காலம் பிடிக்கும். பட்டுபூச்சியின் வாழ்க்கைச் சுழலில் நடக்கும் உருமாற்ற நிகழ்வுகளைப் போல – பலபடி நிலைகளை எண்ணம் கடந்து சென்றாக வேண்டும். அப்போதுதான் அது  தேவையான பரிமாணங்களையும், பலத்தையும், ஆற்றலுடன் விரைந்தெழும், உத்வேகத்தைப் பெற்றதாய், வெளிக்கிளம்ப முடியும்.

    புரட்சிகள் உருவெடுக்கத் தேவைப்படும், இவ்வாறான காலத்தேவையை, புரட்சிக் கருநிலைக் காலம்  அல்லது புரட்சிக் கர்ப்பக் காலம் (gestation Period of revolution) எனலாம்.

    இந்தக்கட்டுரைத் தொடரின் கதாநாயகர்களான வள்ளலாரும் ஸ்டீவ் ஜாப்சும் இவ்வாறேதான் புரட்சிக் கர்ப்பக் காலத்தினை அனுபவித்து வெளி வந்தவர்கள். அவர்களது புரட்சிகள் நிலைத்தவையாய் நின்றமைக்கு, அவர்கள் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்ட இயற்கையான புரட்சிப் பிரசவமே காரணம்.

    சமயத்தில் பாண்டித்யம் இருந்தமையால், தன்னைச் சுற்றி, சமயம் தொட்டு சம்பவங்கள் நிகழ்ந்த வாக்கில், என் மக்களுக்காய் நான் எளிமையாய் என்ன செய்வது என்ற தீவிர சிந்தையில்  மனமும் உடலும் நெகிழ்ந்து,  வள்ளலார்  சமயப் புரட்சிக் கருவுருகிறார்.

    கணினித் துறையில் பாண்டித்யம் இருந்தமையால், தன்னைச் சுற்றி, கணினி தொட்டு சம்பவங்கள் நிகழ்ந்த வாக்கில், என் மக்களுக்காய் நான் எளிமையாய் என்ன செய்வது என்ற தீவிர சிந்தையில்  மனமும் உடலும் நெகிழ்ந்து,  ஸ்டீவ் ஜாப்ஸ்  தொழிற்நுட்பப் புரட்சிக் கருவுருகிறார். துறை வேறு, கால கட்டம் வேறு என்றாலும், புரட்சியின் கட்டுமானத்தில் இவ்விருப் புரட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை.

    சரி, புரட்சியாளர்களின் வாழ்நாளிலேயே, அவர்களது புரட்சி உச்ச நிலை வளர்ச்சியைக் கண்டுவிடுகிறதா என்று கேட்போமேயானால், இல்லை என்று தான் கூற முடியும். பல புரட்சியாளர்களின் புரட்சி அவர்கள் கண்முன்னாலேயே, தரைமட்டமாய் வீழ்வதுண்டு. சில புரட்சியாளர்களின் புரட்சி அவர்கள் வாழும்போது வளர்ந்து, அவர்கள் மறைவுக்குப்பின் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி நிற்பன.

    நியூட்டனுக்கும் ராமனுக்கும் இதே நிலைதான் – நியூட்டனின் புவியீர்ப்புக் கொள்கை விதியை ஒரு பரிசோதனையாகச் செய்து நிரூபணம் செய்ய 111 வருடங்கள் ஆயின; இது நியூட்டன் இறந்து 71 ஆண்டுகளுக்குப் பிறகு. ராமனின் ராமன் விளைவை ஒரு வணிகக் கருவியாக (Raman Spectrometer) உருவாக்கி வெளியிட 27 வருடங்கள் ஆயின. ஆனால் இந்தக்  கருவி, ராமனின் மறைவுக்குப் பிறகு, பல வளர்ச்சி நிலைகளைக் கடந்து இன்று சிறப்பான மேம்பட்டக் கருவியாக புழக்கத்தில் இருக்கிறது. ராமன் தனது கண்டுபிடிப்பினாலான முதல் நிலைக் கருவியைத் தானே காணும் பேறு  பெற்றார். நியூட்டனுக்கு  அந்த பாக்கியம் இல்லாமல் போனது.

    வள்ளலார் பற்றியும், ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றியும், தற்காலத்தில் நாம் நித்ர்சனமாக அறியும் உண்மைகளை வைத்து அளவிடும்போது, ஸ்டீவ் ஜாப்ஸ், வள்ளலார் இருவருமே உலகிற்கு, நிலைத்தப் புரட்சியை அளித்தவர்களே என்று இப்போது நம்மால் உறுதியாகக் கூற முடியும்.

    (மேலும் பேசுவோம்)

    Share
  • (Peer Reviewed) அதிகார முறைமையும் அழகர் திறனும்

    (Peer Reviewed) அதிகார முறைமையும் அழகர் திறனும்

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    முன்னுரை

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக வைத்து எண்ணப்படினும் தமிழிலக்கிய உலகில் தனித்தும் தலைமை சான்றும் விளங்குவது திருக்குறளே. நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டு திகழும் தமிழின் தலைமைப் பனுவலான அதற்கு உரைகண்ட சான்றோருள் பரிமேலழகரும் ஒருவர். அவருடைய உரையழகை அவர் மேல் ஏற்றி இக்கட்டுரையில் இனி அவர் ‘அழகர்’ என்றே குறிக்கப்படுவார். திருக்குறளின் முதல் உரையாசிரியர்கள் பதின்மருள் காலத்தால் பிற்பட்ட அழகரின் உரை ஏனைய உரைகளை எல்லா உரைக்கூறுகளிலும் விஞ்சிக், காலத்தை வென்றும் கடந்தும் நிற்கும் சிறப்பினை உடையதாக விளங்குகிறது. அத்தகைய சிறப்புக் கூறுகளுள் ஒன்றான திருக்குறள் அதிகார முறைவைப்பினுக்கு அழகர் கூறும் விளக்கத்தினைச் சுருக்கமாக எடுத்துரைப்பதையே இக்கட்டுரை தனது முதன்மை நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    1. அழகரின் உரை மாண்பு

    எப்பொருளைப் பற்றியும் எழுதுவதற்கு முன்னால் அதுபற்றிய முந்தைய அறிஞர்தம் கருத்துக்களை அறிந்து கொள்ள முயல்வது ஆய்வு நெறிகளுள் தலையாயதாகும். செந்நெறியாகிய அந்நெறியைப் பின்பற்றிய அறிஞருள் அழகரும் ஒருவர். இவர் உரைக்கு முன்னோடியாக இருந்த உரை மணக்குடவர் திருக்குறளுக்கு எழுதிய உரையே ஆகும். தமிழ் மரபார்ந்த அவ்வுரை ‘செந்தமிழ்ச் செம்மல்’ வ.உ.சி. அவர்களால் பதிப்பிக்கப் பெற்ற சிறப்பினையுடையது. “பரிமேலழகருக்குச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் மணக்குடவரே. இவர் அமைத்துச் செப்பனிட்ட பாதையிலேயே பரிமேலழகர் முன்னேறிச் செல்கிறார்” என்னும் கருத்து அழகர் உரை ஆதரவாளரும் எதிர்ப்பாளரும் சிந்தனையுள் இருத்த வேண்டிய ஒன்றாகும்.

    1.1. அழகரின் உரை நெறி

    தமிழிலக்கிய உரை வரலாற்றில் அழகரின் திருக்குறள் உரை தனிச்சிறப்பினைப் பெற்று நிலைத்திருப்பதற்குப் புறக்காரணங்களைவிட அவ்வுரையின் கட்டுமானமாகிய அகக்காரணமே தலையானதாகும். வேறு எந்த இலக்கிய உரைகளிலும் காண்பதற்கு அரியனவாகிய அக்கட்டுமானச் சிறப்புக்கள்  எளிய புரிதலுக்காகப் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.

    1. குறட்பாவுக்கு உரையெழுங்கால் ஏனையோர் எழுதிய உரைகளை நினைவிற் கொள்கிறார்.
    2. பாடவேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகிறார்.
    3. பொருத்தமற்ற பாடங்களை விலக்குகிற இவர் தவறான உரையைக் காரணம் காட்டி மறுக்கின்றார்.
    4. மதிக்கத்தக்க பிற உரைகளை ‘என்பாரும் உளர்’ எனச் சுட்டிச் செல்கிறார்.
    5. மாறுபட்ட கொள்கைகளையும் மதிக்கும் பண்பாளரான இவர், போற்றத்தகுந்த வேறுபாடுகளைப் போற்றுகின்றார்.

    மேற்சொல்லப்பட்ட அழகரின் இத்தகைய உரை மாண்புகள், அவ்வுரையில் காணப்படும் இலக்கண மற்றும் இலக்கிய சிறப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் தனித்தனித் தொகுப்புக்கும் ஆய்வுக்கும் உட்படும் சிறப்புக்குரியன. அவற்றுள் ஒன்றான அதிகார முறைவைப்புக்கான விளக்கம் பற்றிய ஆய்வு பின்வரும் பத்திகளில் தொடர்கிறது.

    1.2. அழகர் நோக்கில் இயல்களுக்குள் அதிகாரங்கள்

    மானுடத்திற்கான நெறிமுறைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்துணர்த்தும் திருக்குறளில் அறத்துப்பால், ‘பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்’ என நான்காகவும், பொருட்பால், ‘அரசியல் அங்கவியல், ஒழிபியல்’ என மூன்றாகவும், காமத்துப்பால், ‘களவியல், கற்பியல்’ என இரண்டாகவும் அமைந்து நூல் நிறைகிறது. தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டிருப்பதும் திருக்குறள் தன்னுள் ஒன்பது இயல்களைக் கொண்டிருப்பதுமான ஒற்றுமை வியப்பானதாகக் கருதப்படலாம். அழகர் திருக்குறள் அதிகாரங்களை ஒன்றிலிருந்து இறுதிவரை நிரலாக நோக்குவதில்லை. ஒவ்வொரு இயலையும் தனித்தனிப் பொருண்மை கூறும் பகுதிகளாகக் கொண்டு அவற்றுள் அடங்கியிருக்கிற அதிகாரங்களுக்கேற்றபடியே வைப்புமுறை கூறி விளக்குவதை அறிய முடிகிறது.

    1.2.1 இயலுக்குள் அதிகாரங்கள் ஒரு சிந்தனை

    இயலுக்குள் ‘அதிகாரம்’ என்னும் வரையறையால் தமது உரையில் பொருட்சிதைவோ மயக்கமோ ஏற்படுவதற்கான வாய்ப்பினை அழகர் தவிர்த்து விடுகிறார். அதாவது இல்லறவியல் அதிகாரக் கருத்துக்கள் அவ்வியலுக்கு உரியன, துறவறவியலில் உரைக்கப்பட்ட கருத்துக்கள் துறவறவியலுக்குரியன என்னும் தெளிவை முன்னிறுத்திக் கொள்கிறார். இந்தத் தெளிவு ஒவ்வொரு பாலிலும் அவர் பிரித்தமைத்துக் கொண்ட இயலிலும் இயலுக்குள் அமைந்த அதிகாரங்களுக்குள்ளும் புலனாவதை அறியலாம். சான்றாகத் திருக்குறளில் ஒரே அதிகாரம் ஒரு இயலாக அமைந்திருப்பது ‘ஊழ்’ என்னும் அதிகாரமாகும். இது துறவறவியலின் இறுதியாக அமைந்திருப்பது. இது அவ்வியலோடு இணையாது தனித்ததொரு இயலாக அமைந்ததன் காரணத்தை அறிய முயல்கிறார் அழகர். ‘ஊழ்’ என்பது அறத்தோடு தொடர்புடையது என்பதும் பொருளுக்கோ இன்பத்திற்கோ தனித்தனியான தொடர்பற்றது என்பதும் அவருக்குத் தெரிந்த உண்மை. இந்த உண்மையைத் தெரிந்து கொண்டதாலேயே,

    “இது பொருள் இன்பங்கள் இரண்டற்கும் பொதுவாய் ஒன்றனுள்
    வைக்கப்படாமையானும் அறத்தொடு இயைபுடைமையானும் அதனது
    இறுதிக்கண் வைக்கப்பட்டது.”

    என அதிகார வைப்பு முறைக்கு விளக்கம் கூற முடிகிறது. வேறுவகையாகச் சொன்னால் 38ஆவது அதிகாரமாக உள்ள ஊழ் என்பது 109ஆவது அதிகாரமாக அமைக்கப்படாததற்கான காரணத்தைக் கண்டறிய முயல்கிறார் என்பதாம். ‘ஊழ்’ தனி இயலானதற்கும் அது அறத்துப்பாலின் இறுதியில் வைக்கப்பட்டதற்கும் அழகரின் இந்த விளக்கமே துணை புரிகிறது. ஓர் இயலின் தொடக்கமாகவும் இறுதியாகவும் அமைந்துள்ள ‘ஊழ்’ என்னும் அதிகாரத்தின் வைப்புமுறை பெரிதும் நுட்பமானது., சிந்திகக்கத்தக்கது. இத்தகைய நுட்பமான சிந்தனை சார்ந்த அதிகார வைப்புமுறைகள் ஒருசில எடுத்துக்காட்டுக்களால் விளக்கப்படுகின்றன.

    1.3. அழகரின் அதிகார வைப்புமுறைக் கோட்பாடுகள்

    பொதுவாக ஒவ்வொரு அதிகாரத் தொடக்கத்தில் அதிகாரத் தலைப்புக்கான விளக்கத்தைக் கூறி அதற்கும் அதற்கு முந்தைய அதிகாரத்திற்கும் உள்ள பொருள் தொடர்பால் வைப்புமுறையை விளக்குவது அழகருக்கு இயல்பு. ஆனால் ஒருசில நேர்வுகளில் முற்றிலும் மாறுபட்டுப் பெரிதும் நுட்பமாக வைப்புமுறை கூறுவது அவர்க்கேயுரிய தனிச்சிறப்பாகும்.

    1. அதிகாரத் தலைப்புக்கான பொருளை விளக்குவதன் மூலம் இரண்டு அதிகாரங்களின் வைப்புமுறைப் பொருத்தத்தை விளக்குதல்
    2. முந்தைய அதிகாரத்தின் இறுதியிலேயே பின்வரும் அதிகாரத்திற்கான வைப்புமுறையை விளக்குதல்
    3. பொருள் விளக்கத்தை மட்டுமே கூறி வைப்புமுறையைக் கற்பாரே உணரச் செய்தல்
    4. இரண்டுக்கும் மேற்பட்ட முந்தைய அதிகாரப் பொருளை விளக்குவதன் மூலம் அதிகார வைப்புமுறைக்கான பொருத்தத்தை விளக்குதல்.
    5. இயலின் இறுதியில் வைப்புமுறைக்கான காரணத்தை விளக்குதல்

    என்னும் ஐந்து முறைகளில் திருக்குறள் அதிகார வைப்புமுறைக்கான காரணங்களைப் அழகர் விளக்குவதாகக் கொள்ளலாம்.

    1.4. அதிகாரத் தொடக்கத்தில் வைப்புமுறைப் பொருத்தம்

    அதிகார வைப்புமுறையை விளக்குவதில் அழகர் பெரிதும் இம்முறையையே பின்பற்றியுள்ளார்.  சான்றாக,

    “இது பெரும்பாலும் அறிவைத் திரித்து இருமையும் கெடுக்கும் இயல்பிற்றாய
    அதனைப் (சிற்றினத்தைப்) பொருந்தின், பெரியாரைத் துணைக்கோடல்
    பயனின்று என்பது உணர்த்தற்கு இஃது அதன் (பெரியாரைத்
    துணைக்கோடலின்) பின் வைக்கப்பட்டது”

    எனச் சிற்றினம் சேராமை (46) என்னும் அதிகார வைப்பிற்குக் காரணம் சுட்டுவதும்,

    “தகை அணங்குற்ற தலைமகன் இது (குறிப்பறிதல்)
    வேண்டுமாகலான் அணங்குறுத்தலின் பின் வைக்கப்பட்டது”

    எனக் காமத்துப்பாலின் குறிப்பறிதல் (110) அதிகார வைப்பிற்குக் காரணம் காட்டுவதும் சில எடுத்துக்காட்டுக்கள் ஆகலாம்.

    1.5. முந்தைய அதிகாரத்தின் இறுதியில் வைப்பு முறை பொருத்தம்

    திருக்குறள் அறத்துப்பால் ஆறாவது அதிகாரம் ‘வாழ்க்கைத் துணைநலம்’ ஏழாவது அதிகாரம் ‘புதல்வரைப் பெறுதல்’ (இதனை ‘மக்கட்பேறு’ என்றே அழைக்கவேண்டும் என்று பெண்ணியச் சிந்தனையாளர் பலரும் கூறுவர். ஆனால் இந்த மாற்றத்தைப் பரிமேலழகருக்கு முன்பே பரிதியார் முதலியோர் உரைகளிலும் காணமுடிகிறது) (419) ‘புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத் தொடக்கத்தில்,

    “இறுபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படும் கடன்
    மூன்றனுள் முனிவர் கடன் கேள்வியானும் தேவர்கடன்
    வேள்வியானும் தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும்
    அல்லது இறுக்கப்படாமையின் அக்கடன் இறுத்தற் பொருட்டு நன்
    மக்களைப் பெறுதல்”

    எனப் பொருள் விளக்கம் கூறிய அழகர், ‘அதிகார முறைமை மேலே பெறப்பட்டது’ என முந்தைய அதிகாரத்தின் இறுதியில் அமைந்த அவர்தம் உரைப்பகுதியை அவரே சுட்டிக்காட்டுகிறார். ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் முந்தைய அதிகாரத்தில் அமைந்த இறுதிக் குறளான,

    “மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு”

    என்னும் குறட்பாவிற்குச் சிறப்புரை எழுதிய அழகர்,

    “வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிநலம் கூறி
    வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய்
    செய்யப்பட்டது”

    என அதிகாரங்களின் அமைப்பு முறைக்கு விளக்கமளிப்பதைக் காண முடிகிறது. இவ்வாறு அழகர் உரையெழுதுவதற்குக் காரணமே திருக்குறள் கட்டமைப்பை அவர் ஊன்றி நோக்கியதேயாகும். அதாவது ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தின் ஏனைய ஒன்பது குறட்பாக்களும் மனைவியின் மாட்சிமையைப் பேச, இவ்வொரு குறட்பா மட்டும் தனித்துநின்று மக்களைப் பற்றிப் பேசுகிறது என்னும் நுட்பத்தை அழகர் புரிந்து கொள்ளுகிறார். கொண்டு, இல்வாழ்க்கையின் நலம் மக்கட்பேறே என்னும் முடிவுக்கு வந்து அடுத்த அதிகாரம் அதனைப் பற்றியே பேசுகிறது என்பதைப் பெறவைத்து விடுகிறார். வாழ்க்கைத் துணை, துணையின் நலம், (இல்வாழ்க்கையின் நலம்) மக்கட்பேறு என்னும் கருத்து நிரலும், ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தின் இறுதிக் குறட்பா அமைப்பும் அடுத்து நின்ற ‘புதல்வரைப் பெறுதல்’ என்னும் அதிகாரத் தலைப்பும் அழகரின் நுண்மாண் நுழைபுலமும் ஒரே இழையில் ஊடாடுவதை இதனால் புரிந்து கொள்ள இயலும். இவ்வாறு எதிர்வரும் அதிகாரத்தின் வைப்புமுறைக்கு முந்தைய அதிகாரத்தின் இறுதியில் வைப்புமுறை விளக்கம் கூறும் இவர்தம் உரைப்போக்கினை நன்றியில் செல்வம் (101), நல்குரவு (105) முதலிய அதிகாரங்களிலும் பின்பற்றியிருப்பதைக் காணலாம்.

    1.6. வைப்புமுறை அமைதியைக் கற்பாரே உணரச் செய்தல்

    அதிகாரத் தலைப்பிற்குப் பொருள் விளக்கம் கூறி, வைப்புமுறைக்கான காரணத்தைக் கூறும் நெறிக்கு அடுத்த நிலையில் பெரும்பான்மையான இடங்களில் அழகர் பின்பற்றும் நெறி இதுதான். வைப்புமுறைக்கான காரணம் தெளிவாகுமாறு விளக்கம் அமைந்து விடுதலின் அதற்கான காரணத்தை அவர் தனித்துச் சுட்டாதிருந்திருக்கலாம். மேலும் கற்பாரின் ‘புரிதிறனை’ உயர்வாகக் கருதும் அவரது உயர்பண்பாட்டின் வெளிப்பாடாகவும் கருதலாம். கல்வியின் சிறப்பை முதலில்  உடன்பாட்டால் கூறித் தொடர்ந்து ‘கல்லாமை’ என அதன் சிறப்பையே எதிர்மறை முகத்தால் பெறவைத்த திருவள்ளுவர் கேள்வியினால் கல்விச்சிறப்பை நிறைவு செய்கிறார். இவைகளின் விளைவாக அமைவது செயற்கை அறிவு. இச்செயற்கை அறிவுடன் இயற்கையில் அமையும் உண்மையறிவு இணைந்தாலேயே அறிவுடைமை முழுமை பெறும். கல்வி, கல்லாமை, கேள்வி என்னும் நிரலில் அமைந்திருக்கும் ‘அறிவுடைமை’ (43) என்னும் அதிகாரம் உண்மையறிவின் இன்றியமையாமையை வற்புறுத்துவது.

    “கல்வி கேள்விகளின் ஆய அறிவோடு உண்மையறிவு
    உடையனாதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்”

    எனக் கூறி விடுக்கிறார் அழகர். வான்சிறப்பு (2), அறன்வலியுறுத்தல் (4), வாழ்க்கைத் துணைநலம் (6), அன்புடைமை (8), துறவு (35), அவா அறுத்தல் (37), பெரியாரைத் துணைக்கோடல் (45), வலியறிதல் (48), காலமறிதல் (49), இடமறிதல் (50), தெரிந்து வினையாடல் (52), இடுக்கண் அழியாமை (63), வினைத்திட்பம் (67), வினைசெயல்வகை (68), அவையஞ்சாமை (73), நாடு (74), படைமாட்சி (77), படைச்செருக்கு (78), நட்பு (79), நட்பாராய்தல் (80), பண்புடைமை (100), நாணுடைமை (102), இரவு (106), இரவச்சம் (107), புணர்ச்சி மகிழ்தல் (111), படர்மெலிந்திரங்கல் (117), நெஞ்சொடு புலத்தல் (130), புலவி (131), புலவி நுணுக்கம் (132), ஊடலுவகை (133) என்னும் அதிகாரங்களில் எல்லாம் ‘அதிகார முறைமையும் இதனானே விளங்கும்’ என்ற தொடரின் மூலம் வைப்புமுறை அமைதியைக் கற்பாரை உணரச் செய்யும் வகையில் உரையெழுதியுள்ளார் அழகர்.

    1.7. ஒன்றுக்கும் மேற்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் வைப்புமுறை

    இன்னதற்குப் பின் இது என்பது நிரலான வைப்புமுறை. இன்னவைகளுக்குப் பின் இன்னது என்பது கூடுதல் நிரலாகக் கொள்ளப்படலாம் அழகர் ஒரு குறிப்பிட்ட அதிகாரத்திற்கான வைப்புமுறையைப் பதிவு செய்கிற போது அதற்கு முந்தைய அதிகாரத்தை மட்டும் கணக்கில் கொள்ளாது  ஒன்றுக்கு மேற்பட்ட முந்தைய அதிகாரப் பொருண்மைகளைக் கருத்திற் கொண்டு வைப்புமுறைக்குப் பொருத்தம் காண்பதை அறிய முடிகிறது. இது பற்றிய விளக்கம் ஒருசில சான்றுகளால் பின்வரும் பத்தியில் ஆராயப்படுகிறது.

    1.7.1.  அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை

    அழுக்காறாமை, வெஃகாமைக்குப் பின் புறங்கூறாமை வைத்தது பற்றிய விளக்கத்தை அழகர் இப்படிப் பதிவு செய்திருக்கிறார். அழுக்காறு, வெஃகுதல், புறங்கூறுதல் ஆகியன மனம், மொழி, மெய் என்னும் களங்களில் தோன்றும் பாவங்களாகும். மனக்குற்றம் ஏனைய குற்றங்களுக்குக் காரணமாகிறது.  புறங்கூறுதல் மொழிக்குற்றம். பிறர் ஆக்கம் கண்டவழி அழுக்கறுத்தல், தனக்குரியதல்லாத பொருளை வெஃகுதல் முதலியன மனக்குற்றங்கள். ‘புறங்கூறாமை’ (19) என்னும் அதிகாரத்திற்கு வைப்புமுறை எழுதும் அழகர், இதனைக் கருத்திற் கொண்டு,

    “மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், அஃது
    அழுக்காறாமை, வெஃகாமைகளின் பின் வைக்கப்பட்டது.”

    என எழுதும் உரைப்பகுதியால் குற்றங்களைக் காரண காரியத்தோடு பகுத்து நோக்கும் அழகர் திறம் புலப்படுவதை அறிய முடிகிறது.

    1.7.2. இனியவை கூறல் புறங்கூறாமை, பயனில சொல்லாமை

    அறத்துப்பாலில் இனியவை கூறல் (18), புறங்கூறாமை (19) என்னும் அதிகாரங்களை அடுத்துப் பயனில சொல்லாமை (20) என்னும் அதிகாரம் அமைந்துள்ளது. இந்த அதிகாரத்தின் இட வைப்புமுறை பற்றிச் சிந்திக்கும் அழகர், அறத்துப்பால் முழுமையையும், அதன்கண் அமைந்துள்ள இயல் அனைத்தையும் ஓரலகாகக் கொள்கிறார். கொண்டு,

    “பொய், குறளை, கடுஞ்சொல், பயனில சொல்லாமை என வாக்கின்கண்
    நிகழும் பாவம் நான்கனுள் பொய், துறந்தார்க்கல்லது ஒருதலையாக்
    கடியலாகாமையின் அஃதொழித்து, இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை
    மூன்றனுள், கடுஞ்சொல், இனியவை கூறலானும் குறளை
    புறங்கூறாமையானும் விலக்கி நின்ற பயனில சொல் இதனால்
    விலக்குகின்றார் ஆகலின் இது புறங்கூறாமையின் பின்
    வைக்கப்பட்டது.”

    என வைப்புமுறை கூறுவதைக் காணமுடிகிறது. இதனால் பாவங்களை அதிகாரப்படுத்துங்கால் திருவள்ளுவர் கொண்டிருந்த நோக்கத்தையும் கருத்தையும் அறியும் அழகரின் ஆர்வம் புலப்படுவதை உணர முடியும்.

    1.7.3. பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை.

    தீ நெறி விலக்கி நன்னெறி செலுத்தும் பெரியாரைத் துணைக்கோடல் (45) என்னும் அதிகாரத்தில் நேர்முகமாகவும் சிற்றினம் சேராமை (46) என்னும் அதிகாரத்தில் எதிர்முகமாகவும் கூறிய திருவள்ளுவர், தெரிந்து செயல்வகை (47) என்னும் அதிகாரத்திற்கு வைப்புமுறை கூறும்பொழுது,

    “அச்செயல் (தெரிந்து செயல்வகை) பெரியாரைத் துணைக்கோடல்
    பயனுடைத்தாயவழி அவரோடும் செய்யப்படுவது ஆகலின் இது
    சிற்றினஞ்சேராமையின் பின் வைக்கப்பட்டது”

    என விளக்கிக் காட்டுகிறார். ‘சிற்றினம் சேராமை’ என்னும் அதிகாரத்தை அடுத்துள்ள ஓர் அதிகாரப் பொருளை (47) அதற்கு இரண்டு அதிகாரங்கள் முன்னதாக உடைய ‘பெரியாரைத் துணைக்கோடல்’ (45) என்னும் அதிகாரப் பொருண்மையோடு இயைபு கண்டு வைப்புமுறை உரைக்கும் அழகரின் சதுரப்பாடு அறியத்தக்கது.

    1.7.4. புணர்ச்சி மகிழ்தல், நலம்புனைந்துரைத்தல், காதற்சிறப்புரைத்தல்

    தமிழ் அகத்திணை மரபின் நுட்பமான பகுதிகளை அழகர் சிந்தித்திருப்பதற்குக் காமத்துப்பாலுக்கான அவரது உரையே கரியாகிறது. காதலைத் தலைவனுக்கு வெளிப்படையாகக் கூறுவதோ, காதல் மீக்கூரும் நிலையில் மடலேறுவதோ தலைவிக்கு மரபன்று. ஆயினும் தலைவனோடு புணர்ச்சி நிகழ்ந்துழித் தலைவன்மீது தான் கொண்டிருந்த காதலை வெளிப்படுத்தும் உரிமை அவளுக்கு உண்டு. இதனைத்தான் திருவள்ளுவர் காதற்சிறப்புரைத்தல் (113) என்னும் அதிகாரத்தில் விளக்கிக் காட்டுகிறார். இந்த அதிகாரம் புணர்ச்சி மகிழ்தல் (111), நலம்புனைந்துரைத்தல் (112) ஆகிய அதிகாரங்களின் பின் வைக்கப்பட்டதற்கான காரணத்தை,

    “இது புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின், புணர்ச்சி
    மகிழ்தல், நலம்புனைந்துரைத்தல்களின் பின் வைக்கப்பட்டது”

    என முறைவைப்பு விளக்கமாகக் கூறி அமைகிறார்.

    1.8.  இயல் இறுதியில் அதிகார வைப்புமுறை

    நூல் பாலாகவும் பால் இயல்களாகவும் இயல் அதிகாரங்களாகவும் அதிகாரம் குறட்பாக்களாகவும் தன்னிறைவு பெறுகின்றன. இயலின் உள்ளடக்க இறுதியாக அதிகாரம் அமையும். அழகர் இயல் இறுதியைப் பால் இறுதியாகக் கணித்து அதிகார அமைப்பு முறை வகுத்திருப்பதையும் காணமுடிகிறது. பொருட்பாலில் அரசியலையும் அங்கவியலையும் தொடர்ந்து ஒழிபியல் அமைந்திருக்கிறது. ஒழிபியலின் இறுதி அதிகாரமாக அமைந்திருப்பது ‘கயமை’ என்பதாகும். ‘கயமை’ என்பது பண்பாகுபெயராய்க் கீழோரைக் குறித்தது. இந்த அதிகாரத்திற்கு முன்பாக அமைந்த ‘இரவச்சம்’ என்னும் அதிகாரத்திற்கும் ‘கயமை’ என்னும் அதிகாரத்திற்கும் ஏற்புடைய இயைபு காண அழகர் பொருட்பால் முழுமையையும் ஒருசேர நோக்கிப் பொருட்பாலின் ஏனைய இயல்களாகிய அரசியலையும் அங்கவியலையும் கருத்திற் கொண்டு ‘கயமை’ என்னும் அதிகாரத் தலைப்பிற்கான பொருள் விளக்கத்தையும் அதிகார வைப்புமுறையையும் சுட்டிக்காட்டுவது பெரு வியப்பளிப்பதாக அமைந்திருக்கிறது. அதிகார நிரலாக வைப்புமுறை, ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரங்கள் நோக்கிய வைப்புமுறை முதலியவற்றினின்றும் இம்முறை பெரிதும் வேறுபாடு உடையது என்பதை அறியலாம்.

    “மேல் அரசியலுள்ளும் அங்கவியலுள்ளும் சிறப்பு வகையால்
    கூறப்பட்ட குணங்களுள் ஏற்புடையன குறிப்பினால் யாவர்க்கும்
    எய்த வைத்தமையின், ஆண்டுக் குறிப்பால் கூறியனவும் ஈண்டு
    ஒழிபியலுள் வெளிப்படக் கூறியனவுமாய குணங்கள் யாவும் 
    இலராய கீழோரது தன்மை. அதனால் இது எல்லாவற்றிற்கும் பின்
    வைக்கப்பட்டது”

    பால், இயல், அதிகாரம், குறட்பா என ஒவ்வொரு கூறுகளையும் தனித்தும் இணைத்தும் நோக்கி உரையெழுதும் பேராற்றல் உடைய பேராசிரியராகவே அழகர் திகழ்ந்திருக்கிறார். இனிக், ‘கயமை’ என்னும் அதிகாரம் காமத்துப்பாலைத் தவிர்த்த ஏனை பொருட்பகுதியின் இறுதியில் அமைந்திருப்பதற்கு அழகர் குறிக்கும் ‘’எல்லாவற்றிற்கும்’ என்னும் சொல்லின் நுட்பத்தை உணர்தல் வேண்டும். காமத்துப்பால் இருக்கவும் ‘எல்லாவற்றிற்கும் பின்’ என்பதற்கான காரணம் சிந்தித்தற்குரியதே. இதனால் அதிகார வைப்புமுறையைப் பாலின் அடிப்படையிலும் சிந்தித்திருக்கிறார் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. மேலும்  இறைவனில் தொடங்கி கயவரில் நிறைவு செய்திருக்கும் திருவள்ளுவரின் சதுரப்பாடும் பெரிதும் வியப்பளிப்பதாகவே உள்ளது.

    முடிவுரை

    அழகர் திருக்குறளுக்கு உரையெழுதுவதற்கு முன் பன்முறை அதனை நன்கு ஊன்றிப் பயின்றுள்ளார் என்பதற்கு அதிகார வைப்புமுறை பற்றிய அவர் கொள்கையும் ஒரு வலிமையான சான்றாகத் திகழ்கிறது. நிரலாகப் படித்துக் கொண்டே எழுதியிருந்தால் இவ்வாறு பல்வகை முறைமைகள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. திருவள்ளுவரின் உள்ளத்தை அறிந்து கொள்ள அவர் செய்திருக்கும் முயற்சி ‘நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆரளவின்று’ என்றே கூறலாம். அதிகாரத்தின் இருப்பிடத்தையோ தலைப்பையோ அவர் மாற்ற எண்ணியிருந்தாலோ மாற்றியிருந்தாலோ இவ்வாறு பல்வகை வைப்புமுறைகளைக் கூறியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. நூல் அமைந்திருந்த அதிகார முறையிலேயே வைப்புமுறை கூறவேண்டிய நெறிக்கு அவர் கட்டுப்பட்டதால்தான் அவ்வதிகார வைப்புக்கான காரணத்தைச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு நேர்ந்தது. அந்தக் காரணங்களைத் தம் புலமைத்திறம் தோன்ற அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். உரையாசிரியர் பெருமக்களுள் அழகரைப் போல பெருமையுற்றோர் பலர். ஆனால் அவரைப் போலப் பன்முகத் தாக்குதலுக்கு ஆளானவர் யாருமிலர். அவருடைய உரை மாண்புகளை வகைமாதிரிகளாகக் (GENRE) கொண்டு அவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படல் வேண்டும். ஏனைய உரையாசிரியர்களின் உரைகளோடு ஒப்பிட்டுக் காணும் முயற்சி பல்க வேண்டும். தமிழிலக்கிய வரலாற்றில் திருக்குறள் தனித்து விளங்குவது போலவே அழகர் உரையும் தனிச்சிறப்புடன் விளங்குவது உண்மை. “காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கறைசேற்றால் தாமரையின் வாசம் போமோ?”

    “பரிமேலழகரின் உரையை மறுக்கும் முயற்சிகள் பரிமேலழகர்
    புலமைப் பாறையைச் சுற்றியடிக்கும் அலைமோதல்களாக
    அமைந்தனவேயன்றி அப்பாறையின் உருக்கோட்டம் கண்டு செப்பம்
    செய்யும் சிற்றுளிகளாகக் கூட அமையவில்லை”.

    இது திராவிட இயக்கக் கொள்கைச் சார்பாளரும் பன்மொழிப் புலவருமான உயர்திரு க. அப்பாத்துரையார் அழகர் உரைக்குத் தந்திருக்கும் சான்றிதழ். இந்தச் சான்றிதழைக் கற்பார் பார்வைக்கு வைப்பதையே தனது தலையாய கடனாகக் கொண்டு இக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

    துணைநூற் பட்டியல்

    1. திருக்குறள் பரிமேலழகர் உரை, வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன், உமா பதிப்பகம், சென்னை – 600 001, முதற்பதிப்பு – 2009

    2. திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல், புலவர் ச.சீனிவாசன், மெய்யப்பன் தமிழாய்வு மையம், 53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001, முதற்பதிப்பு – 2002

    3. பன்முகப் பார்வையில் பரிமேலழகர், முனைவர் நா.பாலுசாமி, அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007, முதற்பதிப்பு – 2005

    4. உரையாசிரியர்கள், மு.வை.அரவிந்தன், 8/7, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108, முதற்பதிப்பு – 1968


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழ் இலக்கிய இலக்கண வல்லாளர்களால் வலுவான அடிப்படைக் காரணம் இல்லாது புறக்கணிப்புக்கு ஆளான பேரறிஞர் நிரலில் வரும் இருவரில் ஒருவர் பரிமேலழகர். மற்றொருவர் நச்சினார்க்கினியர். எழுதப்பட்ட ஏனைய  உரைகளெல்லாம் தமிழ் மரபை மட்டுமே சார்ந்திருப்பது போலவும் பரிமேலழகர் ஒருவர்தான் வடமொழிச் சார்ந்த உரையெழுதினார் என்பது போலவும் கருக்கொண்ட எண்ணம் பலருடைய புலமை இழப்பிற்கே பெரிதும் காரணமாயிற்று. அழகரை ஆய்வுப் பொருளாகத் தேர்ந்த ஆய்வாளரின் புலமைத் துணிச்சல் பாராட்டுக்குரியது.

    1. திருக்குறள் அதிகார வைப்புக்கான அழகர் தரும் காரணங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் குழப்பம் ஏதுமில்லாமலும் நிரல்பட விளக்குவது எடுத்துக்கொண்ட பொருள் பற்றிய ஆய்வாளரின் சிந்தனைத் தெளிவைக் காட்டுவதாக உள்ளது.
    2. பகுப்புக்கேற்ற தரவுகள் எண்ணிக்கையில் பல இருப்பினும் அளவு கருதி வரையறுத்துக் கொண்டது கட்டுரையைச் செறிவாக்கும் முயற்சியாகவே கருதப்படலாம்.
    3. ‘புறங்கூறாமை’ என்னும் அதிகார வைப்பிற்கு அழகர் தாம் சொல்ல வந்த விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட முயற்சியும் அதனைக் கண்டறிந்து ஆய்வுலகப் பார்வைக்கு வைப்பதற்கு ஆய்வாளர் எடுத்துக் கொண்ட முயற்சியும் ஒன்றையொன்று விஞ்சுவதாக அமைந்துள்ளது.
    4. ‘அதிகார வைப்பிற்கான விளக்கம்’ எனக் கருதுகோளைத் தெளிவாக அமைத்துக் கொண்டதால் கருதுகோளை விளக்கி உறுதிப்படுத்துவதற்கான தரவுகளைத் தொகுப்பதில் கட்டுரையாளர் தமது இடர்ப்பாடுகளைக் குறைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. ஏனைய ஆய்வாளர்கள் கருத்திற் கொள்ள வேண்டிய கருதுகோள் பற்றிய உண்மை இது. அடிப்படையான தரவுகளையும் சான்றுகளையும் மனத்தளவில் பதித்துச் சிந்தித்துப் பார்த்தாலொழிய வலிமையான கருதுகோள் அமைவது கடினம். கருதுகோள் தெளிவானால் கட்டுரை தெளிவாகும்.
    5. “காமத்துப்பால் இருக்கவும் ‘எலலாவற்றிற்கும் பின்’ என்பதற்கான காரணம்  சிந்தித்தற்குரியதே.”  என்னும் கட்டுரையாளரின் பதிவு சரியே. காமத்துப்பாலில் திருவள்ளுவரின் கருத்தேதும் இல்லை.  இருபத்தைந்து அதிகாரங்களும் அகப்பொருள் மாந்தர் கூற்றாகவே அமைந்து போனதே அழகரின் (ஆசிரியர் கூற்றாக அமைந்த)  ‘எல்லாவற்றிற்கும்’ என்பதற்கான காரணம் என் பணிவான கருத்து.
    6. “அதிகாரத்தின் இருப்பிடத்தையோ தலைப்பையோ அவர் மாற்ற எண்ணியிருந்தாலோ மாற்றியிருந்தாலோ இவ்வாறு பல்வகை வைப்பு முறைகளைக் கூறியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. நூல் அமைந்திருந்த அதிகார முறையிலேயே வைப்பு முறை  கூறவேண்டிய நெறிக்கு அவர் கட்டுப்பட்டதால்தான் அவ்வதிகார வைப்புக்கான காரணத்தைச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு நேர்ந்தது.” என முடிவுரைப் பதிவு மிகவும் ஆற்றல் வாய்ந்த பதிவு. இதனால் திருக்குறள் அதிகாரவைப்புக்களைப பரிமேலழகரே உண்டாக்கினார் என்னும் வாதம் வேர்பிடிக்காப் பயிராகிவிடுவதைக் காணலாம்.
    7. கட்டுரையாளர் சான்றெண் பதிவுகளுக்கான எண்களையோ நூல்களையோ குறிப்பிடாது துணைநூற்பட்டியல் மட்டும் கூறியிருப்பதற்கான காரணம் புலப்படவில்லை.
    8. வைப்புமுறையில் அழகரோடு மாறுபடும் தற்கால உரையாசிரியர்களின் பதிவுகளையும் ஒப்பிட்டு உண்மையைச் சொல்லியிருந்தால் கட்டுரையின் ஆய்வுச்செறிவு கூடியிருக்கக்கூடும்.

    கருதுகோள் அமைப்பு, கருதுகோளுக்கிணங்க, தரவுகள் மற்றும்  குறுந்தலைப்புகள் பகுப்பு என முப்பரிமாணத்திலும் தெளிவே முன்னிற்பதால் கட்டுரை சிறக்கிறது. அறிவு தெளிவின் மேற்று! ‘தெளிவு பெற்ற மதியினாய்’ என்பது மகாகவி வாக்கு. இதுபோன்ற கட்டுரைகள் வல்லமையின் கொள்கைக் ‘குரலை’ முழக்கமாக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை!


     

    Share
  • நாலடியார் நயம் – 2

    நாலடியார் நயம் – 2

    நாங்குநேரி வாசஸ்ரீ

     2. இளமை நிலையாமை

    பாடல் 11

    நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
    குழவி யிடத்தே துறந்தார்; – புரைதீரா
    மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
    இன்னாங் கெழுந்தீருப் பார்

    என்றாவது ஒருநாள்
    எப்படியும் மூப்பு வரும்
    என்றுணர்ந்த அறிவுடையோர்
    இளமையில் இன்பம் துறந்தார்
    இன்பமாய் வாழ்ந்து நிலையில்லா
    இளமையைக் கழித்தோர்
    இன்னாத்துயருடன் மூப்பில்
    இன்புற்றிருக்க இயலாமல்
    கோலூன்றி எழுந்து நிற்பர்
    கட்டுக்கடங்கா வருத்தத்துடன்.

    பாடல் 12

    நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
    அற்புத் தளையும் அவிழ்ந்தன, – உட்காணாய்;
    வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
    ஆழ்கலத் தன்ன கலி

    நட்புக் கயிறு அறுந்தது
    நல்லாளும் அன்பில் குறைந்தனள்
    உற்றாரின் அன்பாகிய
    உரிமைக் கயிறும் அவிழ்ந்தது
    சிந்தித்துப்பார்!
    சீறும் கடலில்
    மூழ்கும் கப்பல்போல்
    முதுமையும் வந்தது- இனி
    உயிரோடு வாழ்வதால்
    உண்டாகும் பயன்தான் என்ன?

    பாடல் 13

    சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
    பல்கழன்று பண்டம் பழிகாறும் – இல்செறிந்து
    காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
    ஏம நெறிபடரும் ஆறு.

    வாய் பேச முடியாது
    வார்த்தைத் தடுமாறி
    கோலூன்றித் தள்ளாடும்
    கிழப்பருவம் எய்தி
    பற்கள் வீழ்ந்துபட
    பலர் நகைக்கும் போதும்
    இல்வாழ்வில் பற்றுவைத்து
    இறுதிவரை சிற்றின்பத்தில்
    நீந்தித் தவிக்கும்
    நெறிகெட்ட மாந்தர்க்கு
    பேரின்ப வழி அடையும்
    பேறு கிட்டுவதில்லை.

    பாடல் 14

    தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
    வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழ்இலா
    மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
    அம்மனைக்கோல் ஆகிய ஞான்று

    தலை நடுங்கிக் கூன் விழுந்து
    தடி ஊன்றித் தள்ளாடி
    இறக்கும் நிலையிலுள்ள
    இவளிடத்தும் முன்பிவளின்
    தாய் கையில் ஊன்றுகோல்
    தங்கியிருந்த காலத்தே
    மயக்கமுற்று வருந்தியிருந்திருப்பர்
    மன உறுதியில்லாக் காமுகர்
    ஆதலில் உணர்வீர் இளமையும்
    அழகும் நிலையற்றதென்று.

    பாடல் 15

    எனக்குத்தாய் ஆகியாள் என்னை ஈங்கிட்டுத்
    தனக்குத்தாய் நாடியே சென்றாள்; – தனக்குத்தாய்
    ஆகியவளும் அதுவானாள் தாய்த்தாய்க்கொண்டு
    ஏகும் அளித்திவ் வுலகு

    தாய் சென்றாள் என்னைத்
    தனியே தவிக்க விட்டுத்
    தனக்கொரு தாயை நாடி
    தாய்க்குத் தாயும் இறந்து தன்
    தாய் தேடச்சென்றவளே
    இவ்வுலகம் ஒருதாய்
    இன்னொரு தாய்தேடும்
    நிலையற்ற தன்மையோடு
    நிலையாய் என்றும் உள்ளது.

    பாடல் 16

    வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
    முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
    மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
    அறிவுடை யாளர்கண் இல்

    வெறியாடும் பலிக் களத்தில்
    வெட்டுப்படக் காத்திருக்கும் ஆடு
    பூசாரி கைப்பூமாலையின் தளிரை
    பூரிப்புடன் உண்ணுவதுபோல்
    நிலையில்லா  இன்பத்தை
    நிலையென எண்ணி இளமையில்
    அகமகிழ்ந்து  இன்புறுதல்
    அறிவுடையோரிடத்து இல்லை.

    பாடல் 17

    பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
    கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை – நனிபெரிதும்
    வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
    கோல்கண்ண ளாகும் குனிந்து

    நில்லா இளமையின்
    நிலை எதுவெனில்
    பழம் உதிர்ந்து
    பயனற்று வீழும்
    குளிர்மிகு சோலையின்
    கனிநிறை மரங்கள் போலாம்
    இளமைமிகு நங்கை இவளை
    இன்பம் தரும் வேல்விழியாளென
    ஆசை மிகுதியால் விளித்து
    அதிசயிப்போரே! உணர்வீர்
    மூப்பில் இவளுக்கும் ஊன்றுகோல்
    முன்நடக்க உதவும் கண்ணாகுமென்பதை.

    பாடல் 18

    பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
    இருசிகையும் உண்டீரோ என்று – வரிசையால்
    உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
    எண்ணார் அறிவுடை யார்.

    பருவம் எத்தனை?
    பல்லாட்டம் கண்டதோ?
    இருபுறமும் மென்றுதின்ன
    இயலுமோ உம்மாலென
    முதியவர் குறைகேட்க
    முயற்சிக்கும் அறிவுடையோர்
    இளமையின் உடல்வலிமை
    இறுதிவரை தொடருமென எண்ணார்.

    பாடல் 19

    மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
    கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
    முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
    நற்காய் உதிர்தலும் உண்டு

    இளைஞன் நான்
    இனிவரும் காலத்தில்
    நல்லறம் செய்வேனென
    நாட்களைக் கடத்தாதீர்
    பலநேரம் கடுங்காற்றில்
    பழுத்த கனி வீழாது
    விளைந்த காய்களும் உதிரும்
    விதியின் சதியால் அதுபோல்
    வயதானவர் பிழைத்திருக்க
    வாலிபர் சாதலுமுண்டு.

    பாடல் 20

    ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
    தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் – பீட்பிதுக்கிப்
    பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
    கள்ளம் கடைப்பிடித்தல் நன்று

    மரணப் பிடியிலுள்ள
    மனிதனைத் தேடும்
    அருளில்லாத எமன்
    அருகில் வருவானென்பதால்
    தோளில் ஏற்றத்
    தகுந்த புண்ணியமெனும்
    கட்டுச் சோற்றை
    காலத்தே தேடிப்
    பிழைத்துக்கொள்ளுங்கள்
    பத்து மாதம் சுமந்தவளின்
    பிள்ளையை அவள் கதறக்
    கொண்டு செல்லும்
    எமனின் வஞ்சனையை
    அறிந்து செயல்படுவீர்
    அனுதினமும் நற்செயலை.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 11

    பழகத் தெரிய வேணும் – 11

    நிர்மலா ராகவன்

    (குழந்தைகளுடன் பழகுவது) 

    ‘எல்லாரும் வீட்டுக்குள்ளேயேதான் இருக்க வேண்டும் வெளியில் தலைகாட்டினால் தண்டனை!’ உலகெங்கும் பரவியிருக்கும் தொற்றுநோயைத் தடுக்கப் பல நாடுகளிலும் அமலாக்கப்பட்ட சட்டம் இது.

    இதை ஒட்டி வலைத்தளங்களில் வெளியான துணுக்கு ஒன்றில், குழந்தைகளும், வீட்டு வளர்ப்பு நாயும் ஓடிப் பிடித்துக்கொண்டிருக்க, சத்தம் தாங்க முடியாததாக இருக்கும். `நான் என் அலுவலகத்துக்குப் போகிறேன்,’ என்று சொல்லிவிட்டு, அப்பா தன் மடிக்கணினியுடன் கழிவறைக்குப்போய் கதவைச் சார்த்திக்கொள்வார்!

    சாதாரணமாகவே, குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு, அவர்களை எப்படி ‘கட்டி மேய்ப்பது’ என்று புரியாத பல பெற்றோரின் நிலை இதுதான்.

    “விடுமுறை வந்தாலே எனக்குப் பிடிப்பதில்லை. ‘அம்மா, அம்மா’ என்று என் குழந்தைகள் ஏதாவது கேள்வி கேட்டு, பிராணனை வாங்கும்”. இப்படிச் சொன்னவள் என் சக ஆசிரியை. `மாணவிகளைக் கேள்வி கேட்பதே நிம்மதி,’ என்ற மனப்பக்குவம் கொண்டவள்.

    பலரும் அவளை ஒத்துப் பாடினார்கள். “இந்த மூன்று, நான்கு வயதுக் குழந்தைகள் எப்போதடா பெரிதாகப் போவார்கள் என்றிருக்கிறது! அவர்கள் கேட்கும் கேள்விகள்!”

    “எனக்கு அந்தப் பருவம்தான் மிகவும் பிடிக்கும்,” என்றேன் நான்.

    “எங்கள் குழந்தைகளை உன்னிடம் அனுப்புகிறோம். நீ அவர்களுடன் பேசிக்கொண்டிரு” என்று சிரித்தார்கள்.

    படிக்கத் தெரியாத அந்த வயதில், தமக்குத் தெரியாதவற்றைக் குழந்தைகள் வேறு எப்படித்தான் அறிந்துகொள்வார்கள்?

    இப்போதெல்லாம் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் கையில் பொம்மையோ, பம்பரமோ இருப்பதைக் காண முடிவதில்லை. அம்மாவுடைய கைப்பேசி அல்லது ஐ பேட்தான் அவர்கள் கையின் ஓர் இன்றியமையாத அங்கமாக விளங்குகிறது.

    நாகரீகமான யுகம் என்பதால் மட்டுமல்ல. ஏதாவது திரையை வெறித்துக்கொண்டிருந்தால் குழந்தைகள் நம்மைத் தொந்தரவு செய்யாது, அதிலேயே ஆழ்ந்து போயிருப்பர், நாம் நிம்மதியாக இருக்கலாம் என்றெண்ணி, தம் பொறுப்பைத் தட்டிக் கழிக்க நினைக்கும் பெரியவர்கள்தாம் இந்த வாழ்க்கைமுறையின் முக்கியக் காரணம்.

    இப்படி வளர்கிறவர்கள் பெற்றோரைவிட, திரையில் தாம் காண்பவர்களிடமிருந்துதான் கற்கிறார்கள். பொழுதுபோக்கிற்காகத் தயாரிக்கப்படும் படங்களில் உண்மையான வாழ்க்கை வெளிப்படுமா?

    SESAME STREET போன்ற கார்ட்டூன்களால் ஆங்கில மொழி அறிவு வளரும். குழந்தைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, திரையில் காண்பதை விளக்கினால், மொழியுடன் உறவும் பலப்படுமே! (நான் அப்படிச் செய்ய, மூன்று வயதிலேயே ‘காமிக்ஸ்’ படங்களைச் செய்தித்தாள்களில் படித்துப் புரிந்துகொண்ட குழந்தைகளும் உண்டு).

    குழந்தைக்கும் உணர்ச்சி உண்டு

    ஐந்து மாதக் குழந்தைக்குக்கூட அழுகை, சிரிப்பு மட்டுமின்றி, பிற உணர்ச்சிகளையும் வெளிக்காட்டத் தெரியும்.

    கதை

    ‘குழந்தை என்ன இவ்வளவு குண்டாகிவிட்டது! இடுப்பெல்லாம் ஒரே சதை,’ என்று குழந்தையின் தந்தை அயர, தாயும் ஒத்துப் பாடினாள். ‘இதுக்கு எப்பவும் பசி. பசி வந்துட்டா ஒரேயடியா அலறும். உனே பால் கொடுக்கணும். குண்டாகாம எப்படி இருக்கும்?’

    இந்த ரீதியில் அவர்களது பேச்சு தொடர, குழந்தையின் முகத்தில் சோகம். தன்னைப் பற்றிக் குறையாக ஏதோ பேசுகிறார்கள் என்றவரை புரிந்திருக்கும்.

    “குழந்தைக்கு ஒரே வருத்தம். அதை வைத்துக்கொண்டு ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?” என்று அங்கிருந்த நான் அதட்டினேன்.

    தாய் திடுக்கிட்டு, அதன் முகத்தைப் பார்த்தாள். “நீ எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும்பா!” என்று சமாதானத்துக்கு இறங்கினாள்.

    அழுகை பலவிதம்

    பசி, தூக்கம், ஈர உடையை மாற்ற என்று ஒவ்வொரு தேவையையும் வெவ்வேறு விதமான அழுகையால் வெளிப்படுத்துவார்கள் குழந்தைகள்.

    உண்மையான அன்பு என்பது அவர்களுடைய தேவையைக் குறிப்பால் உணர்ந்து, வேண்டுவதை உரிய காலத்தில் செய்வது.

    கதை

    என் தோழி தேவி காதலித்து, எதிர்ப்புகளைச் சமாளித்துக் கல்யாணம் செய்துகொண்டவள். விரைவிலேயே, சூதாடும் அவனுடைய போக்கு ஆத்திரத்தை ஊட்டியது. தன் குழந்தைமேல் அதை வெளிப்படுத்தினாள்.

    “பிள்ளையை பேயாட்டம் போட்டு அடிக்கும்!” என்று தேவியின் தாய் என்னிடம் முறையிட்டாள். அவளுடைய ஆதரவில் இருந்த தாய்க்கு மகளைத் தடுக்கும் துணிவு இருக்கவில்லை.

    “எதுக்கு அடிக்கிறது! பேசிப் புரிய வையேன்,” என்றேன்.

    “பேசினா விளங்காதே!’ என்று சலித்துக்கொண்டாள்.

    சின்னஞ்சிறு குழந்தைக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று புரிந்து, அவனையும் ஒரு பொருட்டாக மதித்து அவள் பேசியிருந்தால்தானே!

    ‘ஒன் வயசு இப்போ நாலு மணி நேரமா! எவ்வளவு பெரியவனாகிவிட்டே!’ என்று அன்றுதான் பிறந்த குழந்தையைக் கொஞ்ச, அதற்கு என் தொனி புரிந்து சிரித்தது.

    (நான்கு வருடங்கள் கழித்து, ‘எனக்கு நாலு வயசு!’ என்று ஒவ்வொருவரிடமும் பெருமையாகப் பலமுறைச் சொல்லிக்கொள்வான். அவர்கள் கண்களைக் குத்தாத குறையாக அவனுடைய நான்கு விரல்கள் விரியும்).

    நாம் பேசுவது புரிந்துதான் சிரிக்கிறதா, இல்லை, நம்மைக் கவனிக்கிறார்களே என்ற பெருமிதத்துடன் சிரித்துவைக்கிறதா?

    என்னுடைய இந்தக் கேள்விக்கு இதுவரை எந்தக் குழந்தையும் பதில் சொல்லவில்லை.

    நீட்டி முழக்கி, குழந்தை போலவே பேசுவதுதான் அதன் மொழி.

    அருகிலிருக்கும் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தாலும், அப்பேச்சு ஒரு சிசுவின் கவனத்தைக் கவராது.

    எப்படிப் பேசுவதோ?

    குழந்தைகளுக்குப் பதில் சொல்லத் தெரியாது என்ற நிலையில், கேள்விகளை அடுக்கக் கூடாது. நம் கேள்வியிலேயே பதிலும் அடங்கியிருக்க வேண்டும்.

    ‘நீலச் சட்டை போட்டிருக்கியா? ஜோரா இருக்கே!’

    நம் பாராட்டில் குழந்தை அகமகிழ்ந்து சிரிக்கும்.

    அதட்டலாகப் பேசினால், உதடு விம்ம அழுகை எட்டிப் பார்க்கும்.

    வார்த்தைகள் புரிகிறதா, அல்லது தொனியா?

    பேச வந்தாலும் கஷ்டம்தான்

    குழந்தைகளுக்கு மொழிவளம் வந்தால் புத்தி கூர்மையாகும் என்று நிறையப் பேசுகிறோம். அதுவே சில சமயம் தொந்தரவாகிவிடுகிறது. வாய் ஓயாமல் பேசுவார்கள்.

    ஒரு முறை, என் மகளைக் கண்டித்தேன். “சும்மா தொணதொணன்னு பேசாதே!”

    சில நாட்களுக்குப்பின், நான் அவளிடம், “குளி, வா!” என்று அழைத்தேன். அவள் கவனிக்காத மாதிரி இருந்தாள். இன்னொரு முறை கூற வேண்டியிருந்தது.

    “தொணதொண பேசறே!” என்று என்னிடம் குற்றம் கண்டுபிடித்தாள் மூன்று வயது மகள்!

    நாம் செய்வது, சொல்வது எல்லாம் நமக்கே திரும்பி வரும். அதனால், கவனமாக இருக்கவேண்டும்.

    தொலைக்காட்சியில் குழந்தைகள்

    தொலைக்காட்சியில், மூன்று, நான்கு வயதுக் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்.

    வேடிக்கை என்று நினைத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் மரியாதையின்றி, வயதுக்கு மீறி பேசுகிறார்கள் அக்குழந்தைகள். (‘நான்தான் அழகு. நீங்க அசிங்கமா இருக்கீங்க’).

    பெற்றோர் பெருமையாகச் சிரிக்கிறார்கள். அவையினரும் அதிர்ச்சியை வெளிக்காட்டும் தொகுப்பாளரின் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.

    “எங்கப்பா வேஸ்ட். எப்பவும் சித்தியைக் கூட்டிக்கிட்டு வெளியே போயிடுவார்,” என்று ஒரு குழந்தை கூற, அந்த அப்பாவின் முகத்தில் அசடு வழிந்தது.

    இந்த மாதிரி வார்த்தைகளை உபயோகிக்க குழந்தைகள் யாரிடம் கற்றிருப்பார்கள்?

    ‘நான் தொலைக்காட்சியில் தலைகாட்டிவிட்டேனே!’ என்ற பெருமிதத்துடன், பிறரை மதிக்கத் தெரியாது வளர்கிறார்கள் எதிர்காலச் சந்ததியினர்.

    இவர்களை இப்படி வளரவிட்டது யார் தவறு?

    கதை

    ஏதோ விசேஷத்திற்காக என் உறவினரது வீட்டில் நிறைய பெண்கள் கூடியிருந்தார்கள். வழக்கம்போல், அருகில் இல்லாத பிற பெண்களைப் பற்றி – உறவினர்களோ, தெரிந்தவர்களோ — அவதூறாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    பத்து வயதுப் பையனான சிவா அங்கே உட்கார்ந்திருந்ததை அவர்கள் லட்சியம் செய்யவில்லை. சிரித்தபடி சுவாரசியமாக அவர்களது வம்பைக் கேட்டுக்கொண்டிருந்தான் சிறுவன்.

    “இப்படித்தான் குழந்தைகள் கெட்டுப்போகிறார்கள்!” என்று ஆக்ரோஷமாகக் கத்தியபடி, ஐம்பது வயதான உறவினர் வந்து, செத்த எலியை அருவருப்புடன் தூக்கி எறிவதுபோல, சிவாவின் காதைப் பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு போனார்.

    அவன் வயதில் நானும் அப்படி எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால், ஒரு விதி: பெரியவர்களின் பேச்சு காதில் விழாதமாதிரி இருந்துவிட வேண்டும்.

    சற்று விவரம் புரிந்ததும், எனக்கு நிறைய பேருடைய அந்தரங்க வாழ்க்கை, அதிலுள்ள அவலம், புரிந்தது. கதைகளுக்கான கருவை வெளியே தேடும் அவசியம் குறைந்தது.

    இப்படி வளர்ந்த ஒரு சிறுமியை, `உனக்கு எப்படி இத்தனை விஷயங்கள் தெரிகிறது!’ என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டபோது, `அப்பாவும் அம்மாவும் பேசறதைக் கேட்டுண்டே இருப்பேன். குறுக்கே பேசாட்டா, திட்டு விழாது!’ என்றாள்!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 253

    படக்கவிதைப் போட்டி – 253

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முகம்மது ரபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (12.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 252-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 252-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இந்த ஒளிஓவியத்துக்குச் சொந்தக்காரர் திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம். இதனைப் படக்கவிதைப் போட்டி 252க்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மானுடக் குழந்தைகளும், ஆவின் குழவியும் அருகணைந்து நிற்கும் அழகிய காட்சி நெஞ்சில் இன்பத்தைப் பூக்கச்செய்கின்றது.

    இப்பூவுலகை இயற்கை படைத்தளித்தது அனைத்துயிர்களும் இன்பமாய் வாழ்வதற்கே. ஆனால் மானுடனோ உயிர்கள் அனைத்தையும் இரக்கவுணர்வின்றிக் கொன்றழிக்கின்றான் உணவுக்காக. அதன்விளைவாய்த் தீராத துன்பங்களையும் தேவையற்ற நோய்களையும் எதிர்கொண்டு கலங்குகின்றான்.

    எந்த ஒரு வினைக்கும் இணையான எதிர்வினை உண்டு என அறிவியலும் அறவியலும் உரைப்பது பொய்ப்பதில்லை!

    சிந்தனையைத் தூண்டும் இவ்வினிய படத்துக்குக் கவியெழுதித் தந்திருக்கின்றார்கள் வல்லமையின் வித்தகக் கவிஞர்கள்; அவற்றை ஒவ்வொன்றாய்ச் சுவைத்துவருவோம்! வாருங்கள்!

    *****

    ”பெரியோரினும் விஞ்சிய பாசத்தோடு இணைந்திருக்கும் பயமறியாக் கன்றுகள் இவை!” என்று வியக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கன்றிலே ஒன்றாய்…

    பயமதை அறியாக் கன்றுகளைப்
    பாசம் ஒன்றாய்ச் சேர்த்திடுமே,
    வயலில் மேய்ந்திடும் பசுமாடு
    வந்தே ஊட்டிடும் கன்றுக்கே,
    வெயிலில் ஆடிய பிள்ளைகளும்
    வந்து சேர்ந்தார் கன்றுடனே,
    செயலில் பெரியோர் செய்யாததைச்
    சின்னஞ் சிறிதுகள் செய்திடுமே…!

    *****

    ”இளங்கன்றை இறுக்கிப் பிடிக்கும் இன்முகச் சிறார்களே! கண்ணனாய் என் கண்ணுக்குக் காட்சிதரும் நீங்கள், தெய்வமாய் மக்கள்தொழும் பசுமாட்டின் கன்றினைக் கட்டி வைக்காதீர்கள்! தாயோடு அதனைச் சேர்த்துவிடுங்கள்!” என்று தம்முடைய இரண்டு கவிதைகளிலும் அன்பாய் வேண்டுகோள் விடுக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    இளங்கன்றை இறுக்கிப் பிடிக்கும்
    இளஞ்சிறார்கள் நீங்கள்தானோ
    வாய்நிறையப் புன்னகைக் குவியல்
    வாரியணைத்த மகிழ்ச்சியால்தானோ?

    உங்கள் புன்னகையில் கள்ளமில்லை
    அவைப் பூத்துக் குலுங்கும் பன்னீர்ப் பூக்கள்
    நீங்கள் வாரியணைத்த கன்றும் கூட
    வாகாய்த்தான் சிரிக்கிறதே!

    கோமாதா நம் குலமாதாவெனப்
    போற்றுகின்ற உலகமிது
    அதன் கோமியமும் சிறந்த மருந்தென்று
    சொன்னாரே முன்னோர் அன்று!

    பால் மட்டும் பொழிகின்ற
    பசுமாடாய் இல்லையவள்
    நம்மையெல்லாம் இரட்சிக்கின்ற
    காமதேனு தெய்வமவள்!

    பசுஞ்சாணத்தை உரமாக்கி
    எரிவாயுவும் அதிலுருவாக்கி
    எண்ணிலடங்கா வளம் நல்கும்
    கற்பக விருட்சமவள்!

    பாய்ந்தோடக் காத்திருக்கும்
    பசுங்கன்றை விடுங்கடா!
    பரிதவிக்கும் அதன் தாயோடு
    மனம் களிக்கப் புரளட்டும்!

    *****

    உங்கள் கைகளால் கட்டிப்போட்ட
    கன்றினை அவிழ்த்து விடலாமே!
    அது பாய்ந்தோடக் காத்திருக்கு!
    பாசத்தாயைக் காண்பதற்கு!

    ஆயர்பாடிக் கண்ணனாய் நீங்கள்!
    ஆழிமழைக் கண்ணனும் நீங்கள்!
    என் கண்களுக்குத் தெரிகிறீர்
    கன்றினை அணைத்தபடி
    நான் காணும் உங்கள் கோலம்

    தாய்ப்பசு எதிரில் வருகிறதா?
    தாவித்திரியக் கன்றும் முயல்கிறதா?
    அதன் சுதந்திரத்தைப் பறிக்காதீர்!
    கரம் கொட்டி அனுப்பி விடும்!
    உறவோடு சேர்த்து விடும்!
    தாயென்ற உறவோடு சேர்த்து விடும்!

    *****

    கள்ளமின்றித் திரிந்துவரும் கன்றும், பிள்ளைகளும் எங்கள் வாழ்வில் ஒன்றே!” எனக் கவிதையில் சமத்துவம் விதைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    வீட்டுக் கன்றுக்குட்டி

    வீடு முழுதும் துள்ளிச் செல்லும்
    காடு முழுதும் சுற்றித் திரியும்
    நாடியாரும் வரும் போதெல்லாம்
    ஓடிப் பதுங்கி ஒளிந்து அவரை
    ஓரக்கண்ணால் பார்த்திருக்கும்
    கள்ளங் கபடமின்றிக் கனிவாய் நின்றிருக்கும்
    எல்லைகள் ஏதுமின்றி எங்கும் திரிந்து வரும்
    தொல்லைகள் பல செய்தாலும்
    சுகமாய் அவைகள் தோன்றும்
    பிள்ளையும் கன்றும் ஒன்றாய் எங்கள்
    வாழ்க்கையில் கலந்தே இருக்கும்!

    கன்றுக்குட்டிமீது நீங்கள் பாடியிருக்கும் கவிதைகள் நன்று கவிஞர்களே! பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    எங்க வீட்டுக் கன்னுக்குட்டி இனிமையான செல்லக்குட்டி
    திங்கப் புல்லைக் குடுத்திட்டாலும் தேடித்தாயை ஓடும்குட்டி
    முட்டி முட்டிப் பால்குடிக்க மோதி மோதித் தாய்மடியை
    எட்டிக் எட்டிக் கவ்வும் குட்டி எம்பி எம்பிக் குதிக்கும் குட்டி

    எங்க வீட்டுப் பாப்பாவுக்கும் என்றுபாலை மிச்சம் வச்சி
    பங்கு போட்டுக் குடிக்கும் குட்டி பாசமுள்ள ஆசைக்குட்டி
    அங்க இங்க எண்ணு சொல்லி அடிக்கொருக்கா பாயுங்குட்டி
    தங்கமான குணம்படைச்ச தாவி வந்து அணையும் குட்டி

    கிட்டப்போயி அணைச்சிட்டாலும் எட்டித் திமிறி ஓடிடாது
    கட்டிப் புடிச்சிக் கொஞ்சினாலும் காலையுதறி எகிறிடாது
    பட்டுப்போல உடம்பும் நல்ல பாசங்கொட்டும் முகமும் கொண்ட
    கெட்ட குணம் எதுவுமில்லாக் கீழ்ப்படியும் தங்கக் கட்டி

    தாயை மேய அனுப்பினாலும் தானுமட்டும் தொழுவத்தில
    காயக்காய நிக்கும் குட்டி கண்டு விட்டா எங்கமீது
    பாயநின்னு தவிக்கும் குட்டி பாலை மறந்து மகிழும் குட்டி
    தூய நெஞ்சில் அன்புகாட்டி துயர்மறந்து துள்ளும் குட்டி

    மாலை நேரம் அம்மாவர மகிழ்ந்து கொஞ்சி செல்லங்காட்டி
    பாலைக் குடித்துப் பசியைப்போக்கி பாப்பாவுக்கும் வைக்கும் குட்டி
    வாலைத்தூக்கி நிமிர்த்திக்கோண்டு வாளி பாஞ்சி ஓடும்குட்டி
    சோலையெல்லாம் துள்ளித்துள்ளி சோர்வில்லாமல் திரியும் குட்டி

    பட்டுப்போல் உடம்புகொண்ட கன்னுக்குட்டியின் பாசத்தை, பசுவின் பாலைத் தான்மட்டும் குடிக்கவேண்டும் எனும் தன்னலமில்லாமல் பாப்பாவுக்கும் மிச்சம் வைக்கும் நேசத்தை, அதன் சேட்டைகளை அழகானதொரு ‘குழந்தைப் பாடலாக’ வடித்துத் தந்திருக்கும் திரு. கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • உலகம் பெரிது

    உலகம் பெரிது

    அண்ணாகண்ணன்

    இந்தப் பாடலை   ஆசிரியர் அண்ணாகண்ணன் குரலில் இங்கே கேட்கலாம்:

     

    உலகம் பெரிது உலகம் பெரிது
    எதற்கும் அஞ்சாதே – நீ
    திலகம் உறுதி. எந்த நெற்றியில்
    என்பது பிற்பாடே!

    ஒருவர் மறுத்தால் ஒருவர் ஏற்பார்
    கவலை கொள்ளாதே
    ஒன்றில் குறைந்தால் ஒன்றில் கூடும்
    எதற்கு கண்ணீரே?

    ஒருவழி அடைத்தால் மறுவழி திறக்கும்
    உத்திர வாதம்இது.
    ஒருவிதை பிழைத்தால் மறுவிதை முளைக்கும்
    வாழ்வின் விளக்கம்இது.

    உழைப்பில் உண்மை; இலக்கில் மேன்மை
    உனக்குள் இருக்கிறதா?
    கனவு மெய்ப்படும்; கைவசம் ஆகும்
    காலம் இருக்கிறது.

    விழியே உறங்கு; உடலே உறங்கு
    மனமே விழித்திருப்பாய்
    வழியும் வாய்ப்பும் தோன்றும் கணத்தை
    வாகாய் வளைத்திருப்பாய்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-18

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-18

    தி. இரா. மீனா      

     சென்னய்யா

    “சென்னய்யபிரிய  நிர்மாய பிரபுவே “இவரது முத்திரையாகும். கண்டிப்பான தன்மையுடையதாக இவரது வசனங்கள் அமைகின்றன.

    1.“இட்டலிங்கத்துக் காட்டி
    அமிர்தமான உணவு கொண்டேன் என்று சொல்வதெதற்கு?
    அந்த இட்டலிங்க முகத்தில் நிறைவு காண முடியவில்லையா
    அந்த சரணரின் முகத்தில் இலிங்க நிறைவு உண்டேயன்ற
    அங்கமுகத்தில் சரணன் நிறைவடைய முடியாது
    “விருக்சச்ச வதனம் பூமி லிங்கச்ச  வதனம் ஜங்கமம் ”
    என்னும் வேதம் கண்டு அறியாமை கொண்டவர்க்கு
    சிவலிங்கம் இல்லையென்றான் உன் சரணன்
    சென்னய்யப்பிரிய நிர்மாயப் பிரபுவே “

    2.“மரத்திற்கு மண் முகமாகுமோ?
    மண்ணிற்கு மரம் முகமாகுமோ?
    சரணனுக்கு இலிங்கம் முகமாகுமோ ?
    இலிங்கத்திற்கு சரணன் முகமாவானோ?
    இந்த வேறுபாடறிந்தோர் கூறுவீர்
    மரத்திற்கு நீரிறைத்தால் பூமிக்குப் பயனுண்டு
    பூமிக்கு நீரிறைத்தால் மரத்திற்குப் பயனுண்டு
    சரணன் முகத்தில் இலிங்கம் நிறைவடையும்
    இலிங்கத்தின் முகத்தில் சரணன் நிறைவடைவான்
    அந்த இலிங்க முகத்தோன் சரணன் என்றறியாதவர்க்கு
    இலிங்கமில்லையென்றான் சரணன்
    சென்னய்யப்பிரிய நிர்மாயப் பிரபுவே ’

    ஜக்கணய்யா 

    “ஜேங்கார நிஜலிங்கபிரபு “இவரது முத்திரையாகும். இவரது வசனங்கள் ஸ்தலங்களின் அடிப்படையில்  “நிரலான மந்தர கோப்ய “ என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

    1. “குருவிடம் குணம் தேடவில்லை
    இலிங்கத்திடம் உருவம் தேடவில்லை
    ஜங்கமனிடம் குலம் தேடவில்லை
    குருவிடம் குணம் தேடுதல்
    இலிங்கத்திடம் உருவம் தேடுதல்
    ஜங்கமனிடம் குலம் தேடுதல் ஆகியன
    என்னை நரகத்தில் வீழ்த்தும்
    இதற்கு சாட்சி மரங்களை எடுத்துவந்து தீயில் சாம்பலாக்கி
    அச்சாம்பலில் மரங்களின் அடையாளத்தை அறியமுடியுமா?
    ஜேங்கார நிஜலிங்கப் பிரபுவே“

    2. “வேதம் உயர்வென்போனின் பேச்சைக் கேட்கக் கூடாது
    சாத்திரம் உயர்வென்போனின் வாதத்தைக் கேட்கக் கூடாது
    புராணம் பெரிதெனச் சொல்பவனின் பேச்சைக்கேட்கக் கூடாது
    ஆகமம் உயர்வென்பவனின் பேச்சைக் கேட்கக் கூடாது
    சோதிடம் உயர்வென்பவனின் வாதத்தை ஏற்கக் கூடாது
    தன் ஆன்மாவில் பரப்பிரம்மமறிந்தவனுக்கு
    வேதம் சாத்திரம் புராணம் ஆகமம் சோதிடம் எங்குள்ளதோ ?
    இதற்கு அகப்படாமல் உன் சரணன் ஒதுங்கினான்
    ஜேங்கார நிஜலிங்கப் பிரபுவே”

    தேவர தாசிம்மையா

     

     

    வசனகாரர்களுள் காலத்தால் பழமையானவராக அமையும் தேவரதாசிம்மையா [ஜேடர தாசிம்மையாஎனவும் அழைக்கப்படுதல்] முதனூரு கிராமத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள இராமநாதன் கோயில் அவருக்கு விஷேஷமானது. விஷ்ணுவின் அவதாரமான இராமன் சிவனை வணங்கியதான ஐதிகப் பின்னணியில் அமைவதால் அங்கு பல கோயில்களிருந்தும் இக்கோயில் அவரைக் கவர்ந்ததால் “இராமநாதா“ அவரது முத்திரையாகிறது. இறைவனருள் வேண்டி கடுமையாகத் தவம் செய்தபோது சிவன் தரிசனம் தந்து “காயக தத்துவ’’த்தைச் [உடல் உழைப்புக் கொள்கை] சொல்லித் தன்னையுணர்த்தியதாகவும், தாசிம்மையா பிறகு தன் பரம்பரைத் தொழிலான நெசவுத்தொழிலை தொடர்ந்ததாகவும் வரலாறு அமைகிறது.

    தாசிம்மையாவின் திருமணம் குறித்த செய்தி சுவையானதாக அமைகிறது.மணல் கலந்த அரிசி, ஒரு கரும்புத் துண்டு, ஆகியவற்றைக் கொண்டு தண்ணீர், விறகு இல்லாமல் பாயசம் செய்யும் பெண்தான் தனக்கு மனைவியாக முடியுமெனச் சொல்கிறான். இதைக் கேட்டதுக்களை [பெண் வசனக்காரரும் கூட] கரும்பு கொண்டு வந்து அதிலிருந்து சாறு பிழிந்து சக்கையையைக் காயவைத்து அதையே விறகாகப் பயன்படுத்தி அடுப்பேற்றி கரும்புச் சாற்றில் அரிசியைக் கலக்கிறாள். மணல் கீழே தங்க பாயசம் செய்து தருகிறாள். அந்த அறிவுத்திறனைக் கண்டு அவளை மணக்கிறான். நெசவுத் தொழிலைத் தொடர்கிறான். ஒருமுறை தான் விரும்பி நெய்த வேலைப்பாடான தலைப்பாகையைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்க முயல்கிறான். அதை ஒரு திருடன் தொட முயன்றபோது ஒரு கூரிய சக்கரம் அவன் கையைத் துண்டாக்குகிறது. அக்காட்சியைப் பார்த்தவர்கள் அது மந்திரத் தன்மையுடையதாக இருக்கலாமென நினைத்து வாங்கத் தயங்குகின்றனர். விற்கமுடியாமல் தாசிம்மையா வீடு திரும்புகிறான். அப்போது எதிர்ப்படும் ஒரு முதியவர் அதைத் தனக்குத் தரும்படி வேண்ட கொடுத்து விடுகிறான். அதை வாங்கியவர் துண்டுகளாகக் கிழித்து தலயிலும், மார்பிலும், கையிலும் சுற்றிக்கொள்கிறார், அதைப் பார்த்து தாசிம்மையா கோபம் கொள்ளவில்லை.

    “ஒரு பொருள் உனக்குக் கொடுக்கப்பட்ட பிறகு அதை நீ எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று சொல்லிவிட்டுத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவிடுகிறார். முதியவர் விடை பெறும் போது ஒரு கைப்பிடியரிசியைத் துக்களையிடம் தந்து அரிசிப்பானையில் போடும்படி சொல்ல அது அட்சயபாத்திரமாக வளர்கிறது. வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இராமநாதன் கோயிலுக்குச் சென்று தன்னை அழைத்துக் கொள்ளும்படி வேண்ட “சிவதரிசனம்” கிடைக்கிறது. ’கணவன் பாதையே தன் பாதை’ என துக்களையும் அருள் பெற்றதாக வரலாறு அமைகிறது. இவரது வசனங்கள் சுருக்கம், தெளிவு கொண்டவையாக அமைகின்றன. ஆண், பெண் சமத்துவம், மனிதர்களின் விபரீதப் போக்குகள், தன்னலம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகின்றன. இவரது வசனங்களை புதிய இலக்கிய வடிவம் கொண்டவையாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கன்னட சமய, இலக்கிய உலகில் தனிச் சிறப்புடையவராகப் போற்றப்படுகிறார்.

    1. “அறிவை அறிவதற்கு
    அடையாளத்தை கையில் தந்தார்
    அறிவை மறந்து அடையாளத்தை  மட்டுமே
    அறிந்த மனிதர்கள்
    முக்தியை எப்படி அறிவார் இராமநாதா “

    2. “இன்று பொழுது எப்படி நாளை எப்படியென வருத்தமேன்?
    எடுத்து வந்து தருகின்ற சிவனுக்கு
    வறுமை உண்டோ இராமநாதா”

    3. “என்னை நானறிவதற்கு முன்பு எங்கிருந்தாய் ஐயா
    என்னுள் இருந்தாயல்லவா?
    என்னை நானறிய குருவின் வடிவில்
    என்னுள் அடங்கியிருந்தாயல்லவா இராமநாதா?”

    4. “கணவனிருக்கும் பெண்ணை கௌரியென நினைத்தால்
    உலகாளும் அரசனாகப் பிறக்கமுடியும்.
    கணவனிருக்கும் பெண்ணிடம் மோகம் கொண்டால்
    நரகம்தான் கிட்டும் இராமநாதா “

    5. “குடத்திற்குள் தெரியும் சூரியனைப் போல
    எல்லோருக்கும் இறைவனின் ஆற்றலுண்டு
    எனினும் குருவின்றி இறைவனோடு
    இணைய  முடியுமா இராமநாதா ?”

    6. “மனம் தன் போக்கில் அலைந்த பிறகு
    உடல் தன்னிலையில் எவ்வளவு காலம் இருந்தென்ன?
    சத்தில்லாத மோரைக் கடையும் போது
    ஒரு துளி நெய்யும் அங்கிருக்காது இராமநாதா “

    7. “மரத்திற்குள் இருக்கும் தீ எரியாது
    நுரைப்பாலின் நெய் மணக்காது
    உடல் ஆன்மாவை பார்க்க இயலாது
    நீ ஒன்றிணைந்த மர்மம் காண் இராமநாதா “

    8. “மேலே முடி வந்தால் பெண்ணென்பார்
    தாடி மீசை வந்தால் ஆணென்பார்
    நடுவில் சுற்றும் ஆத்மா
    ஆணும் அல்ல ,பெண்ணும் அல்ல காண் இராமநாதா”

    9. “தீ எரியும் அசையாது
    காற்று அசையும் எரியாது
    தீ காற்றைச் சேரும் வரை
    ஒரசைவுமில்லை
    தெரிவதும் செய்வதும் அது போன்றதே
    மனிதர்களுக்குத் தெரியுமா இராமநாதா?”

      10.  “இது என்னுடல் என்றால்
    என் விருப்பப்படி நடக்க வேண்டும்
    இது உன்னுடலென்றால்
    உன் விருப்பப்படி நடக்கவேண்டும்
    இது என்னுடையதுமில்லை உன்னுடையதுமில்லை
    சலனப் புத்தியுள்ள வஸ்து இராமநாதா “

    11. “ஒவ்வொருவரும் சாகவே
    போருக்குப் போகின்றனர்
    நூறில் ஆயிரத்தில் ஒருவர்தான்
    எதிரியைக் கொல்கிறார்.
    ஒவ்வொரு புளியம்பூவும்  பழமாக முடியுமா இராமநாதா ?”

    12. “பூமி உனது பரிசு
    பயிர் உனது பரிசு
    நான் இதை என்னவென்று சொல்லட்டும்
    எல்லாவற்றையும் உன்னிடமிருந்து பெற்றுக் கொண்டு
    உன்னைத் தவிர எல்லோரையும் புகழ்வதேன் இராமநாதா?”

                                           [தொடரும்]

    Share
  • (Peer Reviewed) பிள்ளைச்சிறு விண்ணப்பம் உணர்த்தும் உயிர் நேயம்

    (Peer Reviewed) பிள்ளைச்சிறு விண்ணப்பம் உணர்த்தும் உயிர் நேயம்

    முனைவர் பீ. பெரியசாமி,
    தமிழ்த்துறைத்தலைவர்,
    டி.எல். ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,                  
    விளாப்பாக்கம் – 632 521.  தமிழ்நாடு, இந்தியா.

    மின்னஞ்சல்: periyaswamydeva@gmail.com    

    முன்னுரை

    திருவருட்பா – திரு + அருள் + பா எனப் பிரியும்.  இறையருளால் பாடப்பெற்ற பாக்கள் என்றும் இறையருள் வேண்டிப் பாடப்பெற்ற பாக்கள் என்றும் பொருள் கொள்ளலாம். திரு என்பது மேன்மை என்ற பொருளில் வந்துள்ளது. இறைப் பற்றாளர்களின் அருள் அனுபவத்தால் ஊற்றெடுப்பவையே அருட்பாக்கள். இவை வள்ளற் பெருமானின் திருவாக்கினில் ஞானியர்களின் சிந்தனைகளில் சித்தர்கள் யோகிகளின் அனுபவங்களில் இழையோடுவதைக்  காணமுடிகின்றது. வள்ளற் பெருமான் உலகினில் இறைவனை அடையவும் இறவாநிலை பெறவும் ஒரோவழி உலகினில் வாழும் அனைத்து உயிர்களிடத்தும் மனிதநேயத்தோடு நாம் நடந்துகொள்வதே என்கிறார் என்பதை உரிய உதாரணங்களோடு வெளிக்கொணர்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

    உயிர் இரக்கமே உயர்ந்த பண்பு

    “வாழையடி வாழையென வந்த திருக் கூட்ட
    மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை யறியேன் இந்த
    ஏழைபடும் பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ
    இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ
    மாழை மணிப பொதுவில் நடஞ்செய் வள்ளால் யான் உமக்கு
    மகன் அலனோநீ எனக்கு வாய்த்த தந்தை யலையோ
    கோழை உலக உயிர்த் துயரம் இனிப பொறுக்க மாட்டேன்
    கொடுத்தருள் நின அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே .!”1

    எனத் தன்னைப் பற்றிக் கூறியவர். பகைவரும் வணங்கக் கூடிய பண்பாளர் நம் வள்ளற் பெருமான்.  உயிர் இரக்கமே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்.

    “மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை
    மதித்துளம் வருந்திய பிறர்தம்
    கண்ணினீர் விடக்கண் டையவோ நானும்
    கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
    நண்ணிநின் றொருவர் அசப்பிலே என்னை
    அழைத்தபோ தடியனேன் எண்ணா
    தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி
    ஏன்எனல் மறந்தனன் எந்தாய்”2

    துயருற்றோரைப் பார்த்துக் கண்ணீர் விடத் தொடங்கியவர் பிறர் அழைத்தபோதும் ஏன் எனல் மறந்தாராம்.

    “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.”3

    என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாய் நம் வள்ளல் விளங்கியதை அறிய முடிகிறது. பசிப்பிணி போக்கும் மருத்துவர், மனிதர் படுகின்ற துன்பங்களைப்,பசிதாகம்பிணி, இச்சைஎளிமைபயம், கொலை4 என்று  வகைப்படுத்துகின்றார். இத்துன்பங்களால் மனிதன் வேதனையுறுகிறான். இவற்றைத் தவிர்க்க எனக்கு வரம் கொடுக்க வேண்டுமென்று வேண்டுகிறார்.

     “கருணையே வடிவாய் பிறர்களுக் கடுத்தகடுந்துயர் அச்சமா திகளைத்
    தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புல்கொலை இரண்டும்
    ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே
    மருவிய புகழைவழுத்தவும் நிண்ணை வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய்”5

    உலக உயிர்களுக்கு வரும் இடையூறுகளைத் தூர நின்று வேடிக்கை பாராமல் விரைந்து சென்று அதைப் போக்க எண்ணுபவனே சன்மார்க்கி.

    இதனை, ““வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை6 “இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்7 என்று திருக்குறள் ஈதலின் சிறப்பைக் கூறுகிறது. அறங்களிலேயே சிறந்தது உயிர்களுக்கெல்லாம் உணவளிப்பதுதான்.  எவ்வுயிரும் பட்டினியால் மடியாமல் பாதுகாக்கப்படவேண்டும்.  இந்த உண்மையை வலியுறுத்துவது மணிமேகலை,

    “மக்கள் தேவர் எனஇரு சார்க்கும்
    ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன்
    பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
    தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆதலின்
    மடுத்ததீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட
    எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென்.”8

    “பசியும் பிணியும் பகையும் நீங்கி
    வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி
    மாதர்க் கோலத்து வலவையி னுரைக்கும்”9

    “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”10

    “கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லார் மற்று
    அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே ”11

    “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும்.”12

    என எல்லா அற நூல்களும் பசிப்பிணி போக்குதலையும் கொல்லா விரதத்தையும் போற்றுகின்றன. ஈஸ்வர பக்தி என்பது எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருத்தலை அறிதலாகும். ஜீவகாருண்யம் உண்டானால் அருள் உண்டாகும். அருள் உண்டானால் அன்பு உண்டாகும். அன்பு உண்டானால் சிவானுபவம் உண்டாகும். நேயம் ஐந்து வகை என்கிறார் வள்ளலார். இறை அனுபவம்தான் ஆன்மீகம். ஆன்மீகம் என்றால் உயிர்கள் தன்னலத்தைப் பெரிதாகக் கருதாமல் மற்ற உயிர்களுக்கும் பணிபுரிவதுதான் இதுவே வழிபாடு ஜீவகாருண்ய ஒழுக்கம். ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எனப்பெருமான் கூறுகின்றார். இதுதான் சுத்த சன்மார்க்கத்தின் இலட்சியம்,  ஐந்து நேயங்கள் நேயம் என்பதும் அன்பே! இந்திரிய நேயம் என்பது பொறி புலன்களிடம் அன்பு காட்டுவது, கரண நேயம் என்பது கொள்கையில் ஈடுபடுவது, ஜீவநேயம் என்பது மனிதாபிமானத்தைக் குறிப்பது, ஆன்ம நேயம் எல்லா உயிர்களிடத்தும் உருக்கம் காட்டுவது, சிவநேயம் என்பது கடவுள் வழிபாடு.

    நடமாடும் உயிர்களுக்குச் சேவை

    இந்திரிய நேயம் மிக்கவர்கள் தங்கள் உடலை அழுகு படுத்துவதிலும் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதிலுமே குறிக்கோளாய் வாழ்வர்.  இவ்வாறு வாழும் வாழ்க்கை சுயநலம் மிக்கதாகும்.  சாமானிய மனிதர்களின் வாழ்க்கை பெரும்பாலும் இவ்வாறே அமைந்து தங்கள் பிறப்பின் காரணத்தை அறிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து மறைவதாக உள்ளது.  கரண நேயம் மிக்கவர்கள் தாம் கொண்ட கொள்கையில் பிடிவாதமாய் இருப்பர். ஜீவநேயம் என்பது மனிதர்களிடையே தோன்றும் நேயமாகும். இங்கே மற்ற ஜீவராசிகள் மீது இரக்கம் என்பது பின்பற்றப்படுவதில்லை.  எல்லா ஜீவராசிகளும் தங்கள் இனத்தின் மீது காட்டும் நேயமும் இதுவே ஆகும்.  ஆன்ம நேயம் என்பது தம் இனம் மட்டுமின்றி எல்லா உயிர்களிடத்தும் காட்டும் நேயமாகும்.  வள்ளலார், புத்தர் போன்றோர் இந்நேயத்தோடு வாழ்ந்து மனிதர்களையன்றி எல்லா உயிர்களையும் மதித்துள்ளனர்.

    “உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற்கு உரு”13

    உயிர் காத்தலைத் தவமாகப் போற்றுபவர்களாவர் இவர்கள்.

    “படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
    படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”14

    என்கிறார் திருமூலர். நடமாடும் உயிர்களுக்குச் சேவை செய்தலே இறைவன் நீக்கமற நிறைந்துள்ளான் என்று உணர்ந்தவர்களின் நிலையாகும். அடுத்து ஐந்து சிவநேயம் என்பது கடவுள் வழிபாடு.  உயிர்கள் மீது நேயம் காட்டுதலையே கடவுள் வழிபாடாகக் கொள்வதாகும். வள்ளற் பெருமான் கடவுளை வழிபடவே சாதனம் வகுத்துக் கூறியுள்ளார் அது சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவர் உண்டென்றும் அவர் ஒருவரே என்றும் அவரை உண்மையின்பால் வழிபட வேண்டும்.  அப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கத்துக்கு  உரிய  கடவுளை வழிபாடு செய்வதற்குச் சாதனம் இருவகை.  பரோபகாரம் – என்பது தேகத்தாலும், வாக்காலும், பொருளாலும் உபகாரம் செய்வன, சத்விசாரம் – என்பது நேரிட்ட பக்ஷத்தில் ஆன்ம நேய சம்பந்தமான  தயாவிசாரத்தோடு  இருப்பது. கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையையே  கடவுளிடம் விண்ணப்பித்தல் என்பதாகும். இவ்வகையில் நம்பெருமான் இறைவனிடம் தன் பல்வேறு விண்ணப்பங்களைக் கூறி இறையருளை வேண்டியுள்ளார் என்பது விளங்குகிறது.

     “அருள் அலாது அணுவும் அசைந்திடாது அதனால்
    அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய்ச்சிவமே!”15

    என அகவல் கூறுகிறது. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற தத்துவத்தின் பொருள் இதன் மூலம் விளங்குவதை அறிய முடிகிறது.  ஆன்ம நேயமே மனிதனின் அடையாளம் என்று வாழ்ந்து காட்டிய பெருமான் சாகாவரம் தான் பெற்று விட்டதாகவும் அதைப் பெறுவதற்கான வழியையும் நமக்கு எடுத்துரைக்கின்றார்.

    “நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
    சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் – தேவாநின்
    பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
    யார்உளர்நீ சற்றே அறை.”16

    “நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
    நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு
    நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
    நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
    வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்
    மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
    புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றோர்
    சொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.”17

    “யானே பொய் என் நெஞ்சும் பொய்
    என் அன்பும் பொய்
    ஆனால் வினையேன் அழுதால்
    உன்னைப் பெறலாமே
    தேனே அமுதே கரும்பின்
    தெளிவே தித்திக்கும்
    மானே அருளாய் அடியேன்
    உனை வந்து உறுமாறே!”18

    என்கிறார் மாணிக்கவாசகரும். அதோடு மட்டுமின்றி மனித சமுதாயத்தின் குறிக்கோள் ஞானத்தை அடைவதே ஆகும்.  இன்பம் மனித வாழ்வின் இலட்சியமன்று. ஞானம் ஒன்றுதான் மனித வாழ்வின் இலட்சியம்.  இன்பமும், மகிழ்ச்சியும், துன்பமும் அழியக் கூடியவை.  எனவே உண்மையான ஞானத்தைப் பெறுவதே சிறந்தது.  அழியாத ஞானத்தைப் பெற வள்ளலார் கூறிய ஒழுகலாறுகள், ஜீவகாருணிய ஒழுக்கம், பசித்துயர் போக்குதல், ஆன்ம நேய ஒருமைப்பாடு, சாதி மதம் கடந்த சமரசம், ஒளி வழிபாடு என்பவை.  மேற்கண்ட உபாயங்களால் அழியாத உடம்பைப் பெறுவது உறுதி. இதனையே, உடம்பார் அழியில் உயிரார் அழிவர்”19 எனத் திருமூலர் குறிப்பிடுகிறார்.

    “பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
    பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
    பற்றின் வருவது முன்னது பின்னது
    அற்றோர் உறுவது அறிக.”20

    என்கிறது மணிமேகலை.  தாம் பெற்ற வரத்தைக் கூறுகையில்,

    “சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
    சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
    மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
    மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
    ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
    எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
    தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
    சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.”21

    ஒட்டுமொத்த திருவருட்பாவில் கூறப்பட்ட செய்திகளைப் பிள்ளைச்சிறு விண்ணப்பத்திலேயே கூறியுள்ளார் என்று அறுதியிட்டுக் கூறலாம். தன்னை மகனாகப் பாவித்து தனக்கு வரமருள வேண்டியதின் உண்மையான தவிப்பை, ஒவ்வொரு பாடலிலும் உணர முடிகிறது.

    உயிரிரக்கத்தால் பிறர் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவற்றைக் கண்டபோது இரக்கப்படுதலே ஆன்ம உருக்கமாகும். எவ்வுயிரும் பின்பற்றக் கூடிய ஒழுக்கத்தை நிறுவிய வள்ளலார் மனிதன் இதை ஏன் செய்ய வேண்டும் என்று விளக்குகிறார். “மனிதப் பிறவி மிகச்சிறந்த பிறவி கிடைப்பதற்கு அறிய பிறவி மனித தேகத்தில் தான் ‘அருள்’ விளக்கம் விளங்குகிறது. முக்தி இன்பத்திற்குரிய தேகமிது – வழி சன்மார்க்கம். மனித தேகமே அறிவைப் பெறக்கூடியது மனிதனே பிறர் உணர்வை உணரக் கூடியவன்.22 இவ்வாறே இறையுணர்வையும் பெறக் கூடியவன்  முறையான சாதனம் பயின்றால் தான் இறைவனை உணரமுடியும் என்பதை இராமகிருஷ்ண பரமஹம்சர்,

    “பாலில் உள்ள வெண்ணெய்யைக் கண்களால்
    பார்க்க முடிகின்றதா! வெண்ணெய்யைக் காணவேண்டி
    மத்து இட்டுக் கடைய வேண்டுமன்றோ! இதைப்
    போலவே இறைவனைக் காணவேண்டினும்
    சாதனம் பயில வேண்டும்”23

    “ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
    அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
    நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
    என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.”24

    இரக்கப்படுதலே ஆன்ம உருக்கம்

    ஒரு மனிதனுக்குத் தெய்வ நம்பிக்கை உண்டாகிவிட்டால் செல்வத்தின் மீது உண்டான அவா நீங்கும். காணும் உயிர்களிலெல்லாம் பொருட்களிலெல்லாம் இறைவனையே காண்பான்.  அதனால்தான் எந்த உயிரும் துன்பப்படுவதை விரும்புவதில்லை.  தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து அவ்வுயிருக்கு வந்த துன்பத்தை அகற்றுகின்றான்.  கண்ணப்ப நாயனாரும் அவ்வாறே தன் கண்ணைப் பெயர்த்து இறைவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை அகற்ற முற்படுகின்றார்.  உடல் எடுத்ததன் பயனே உயிர்களைக் காவல் செய்யவே ஆகும்.

    “தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்.”25

    என்று கேள்வி கேட்கிறார் வள்ளுவர்.

    இன்றைய உலக சமுதாய சூழ்நிலையில் விரிந்த கண்ணோட்டத்தோடு மக்களுக்கு தொண்டு முறையில் ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும்அதனைத் தடுத்துக் கொண்டிருக்கும் கற்பனை புகையையும்துன்பங்கள், சிக்கல்கள் இவற்றைக் குறைப்பதற்காகவும் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட நிறுவனமே ‘உலக சமுதாய சேவா சங்கமும்அதன் செயல்வழியாகிய மனவளக்கலையுமாகும். கர்ம  யோகம் என்னும் வாழ்க்கை நெறியை மக்கள் பண்பாடாக  வளர்ப்பது சிறந்ததோர் சீர்திருத்தத் திட்டமாகும்.26 என்கிறார் அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி.

    மனிதனுக்கு உரிமையுணர்ச்சி பிறவியிலேயே அமைகிறது.  ஆனால்  கட்டுப்பாட்டுணர்ச்சி  பயிற்சியால் தான் கிடைக்கிறது என்கிறார் மு.வ.  தங்கத்தைச் சுடச்சுட பல்வேறு உருவம் எடுப்பதுபோல் வைரம் பட்டை தீட்டத் தீட்ட ஒளிர்வது போல் மனிதன் எத்துணை துன்பங்கள் வந்தாலும் இறைவனையே கைவிடாது தொழுதல் வேண்டும். அடுத்தடுத்த துன்பங்களே அவனைச் சோதிக்கும் பயிற்சிகளாகின்றன.

    வருத்தப்பட்டுப்  பாரஞ்சுமக்கிறவர்களே!  நீங்கள் என்னிடத்தில் வாருங்கள்நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.  நான் சாந்தமும் மனத் தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்27 என்கிறார் இயேசு கிறிஸ்து.

    பல மதனிகளும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும்படி கூறுகின்றனர்.  துன்பம் இடைவிடாமல் நேர்ந்தாலும்   கொள்கையில் மாறாத அடியார்களின் கூட்டுறவால் ஞானசுத்த சன்மார்க்க சங்கம் காண விழைகிறார் வள்ளலார்.  அச்சங்கம் சார்பாகத் திருக்கோயில் கண்டிடவும்  நல்விளக்கமே   தரும  சன்மார்க்க  சங்கம்   நிடூழி  வாழவும் அந்தச் சங்கத்தில்தான் ஈடுபாட்டுடன் மனம் குளிர அருட்ஜோதி ஆண்டவனை நினைத்துப் பாடவும் ஆடவும் நமக்கு விருப்பமுள்ளதாய்ப் பிள்ளைச்சிறு விண்ணப்பத்தில் விளக்கி உரைக்கின்றார்.

    ”தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
    சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும்
    துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
    அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.”28

    எனவரும் அடிகள் இதனை மெய்ப்பிக்கும்.

    வள்ளலாரது சிந்தனை வளர்ச்சி

    பிற சமயவாதிகள்,  தத்துவக் கொள்கைவாதிகள்,  துறவிகள், மதகுருமார்கள், மக்களுக்கு ஆன்மீக ஞானத்தை போதனை அளவில் புகட்டுவதைப்போலன்றி நடைமுறையில் பயன்பெற வழிவகுத்தவர் இவர்.  இதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர். தம் உடலையும் உள்ளத்தையும் உயிரையும் பல்வேறு ஒழுக்க நியதிக்கு உட்படுத்திப் புடம் போட்ட பொன்னாக ஆக்கிக் கொண்டு பிறரும் அந்த வாய்ப்பைப் பெற வழிகாட்டியவர். சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை ஏற்படுத்தி ஒளி வழிபாட்டைத் துவங்கி வைக்கிறார். இறைவன் உருவமற்ற ஒளிவடிவானவன் என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

    “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”

    என்ற தாரக மந்திரத்தையும் போதித்தருளினார் நம் பெருமான். இந்த மகாமந்திரத்தில் உள்ள எழுத்துக்கள் 33 தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களின் தொகையும் 33. நம் முதுகெலும்பிலுள்ள எலும்புகள் 33 மனித மொழிகளிலுள்ள எழுத்துக்களின் ஒளி வடிவங்களும் 33 தான் இவற்றை ‘ஒலியன்கள்’  என்பர். இம்மகாமந்திரத்தில் உள்ள மெய் எழுத்துக்களை நீக்கி எண்ணினால் வரும் எழுத்துக்கள் 25 இவை 25 அனுபவங்களைக் குறிக்கின்றன.  இவை ஜீவ அனுபவம் 5, பர அனுபவம் 5, நின்மல அனுபவம் 5, குரு அனுபவம் 5, இறை அனுபவம் 5 ஆக 25 அனுபவங்கள். சன்மார்க்கக் கொடி ஒன்றையும் நம் பெருமான் உருவாக்கியருளினார். சன்மார்க்கக் கொடியில் மேல் 3/4 பாகம் வெண்மைநிறம் கீழ் 1/4 பாகம் பொன்மை நிறம் மகாமந்திரத்தில் அருட்பெருஞ்ஜோதி 3 முறை வருவது வெண்மையைக் குறிக்கும். தனிப்பெருங்கருணை ஒரு முறை வருதல் பொன்மையைக் குறிக்கும். வெண்மை தூய்மையைக் குறிப்பதோடு அறியாமையையும் குறிக்கும்.  அறியாமை நீங்க வேண்டுமானால் தொடர்ந்து உயிர்ப்பணி புரிதல் வேண்டும்.

    உயிர்ப்பணி புரியச் சத்திய தருமச் சாலை

    1867-இல் சத்திய தருமச்சாலையை நிறுவி அணையா அடுப்பேற்றி வைத்து அங்கு வருவோர்க்குப்  பசியாற உணவளித்தாராம்.  இன்றும் அந்த அடுப்பு வடலூரில் எரிந்த வண்ணம் உள்ளது. பசித்தோரின் வயிறு குளிர்ந்த வண்ணம் உள்ளது. கொலை புலை தவிர்த்தோர் உறவினத்தார் என்றும்,

    “உயிர்க்கொலையும் புலைப்பசிப்பும் உடையவர்கள்
    உறவினத்தார் அல்லர் அவர் புறவினத்தார் அவர்க்குப்
    பயிர்ப்புறும் ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
    புரிந்த மற்றைப் பண்புரையேல் நன்புத வேலிங்கே
    நயப்புறும் சன்மார்க்கம் அவர் அடையளவும் இதுதான்
    நம் ஆணை என்றெனக்கு நவின்ற அருள் இறையே””29

    உறவினத்தார், புறவினத்தார் என்று இரண்டு வகையான மனிதர்களைப் பற்றிப் பாடலில் கூறியுள்ளார். சாதி, சமய பேதமற்று மனிதர்களின் பசியைப் போக்க எழுப்பிய இத்தருமச் சாலையில் உறவினத்தார்க்கு (கொலை, புலை, தவித்தோர்) மட்டுமே உணவு என்று மாற்றி விடுவார்களோ என்றஞ்சிய வள்ளற் பெருமான் புறவினத்தார்க்கும் உணவிட்டுப் பசியாற்று விக்குமாறு ஆணையிடுகிறார்.  ஆணையிட்டு ஒருவரின் தீய குணங்களை யாராலும் மாற்ற இயலாது.  பசியாறியவுடன் புறவினத்தார் தம் குணத்தைப் பற்றி யோசித்து தாம் கூறிய வழியில் தானாகவே நடக்க முன்வருவார் என்று பெருமான் நம்புகிறார்.

    பஞ்சோபாயம்

    நயமாகப் பேசி நல்லவர்களாக்குதல், பொருளைக் கொடுத்து வசப்படுத்தல், வேறுபாடு காட்டி திருத்துதல், வணங்கி வழிக்குக் கொண்டு வருதல், இறைவனிடம் வழிபாடு செய்து திருத்துதல் என்பன பஞ்சோபாயமாகும். இதனை,

    “முதல் நான்கு உபாயங்களைவிட ஐந்தாவது உபாயம்
    மிகச் சிறந்தது, உயர்ந்தது.  தீய மனம் படைத்தவர்களை
    சன்மார்க்கிகள் தகுந்த அணுகுமுறையை மேற்கொண்டு
    பஞ்சோபாயத்தால் வென்று திருத்தி உயர்த்த வேண்டும்”30

    “சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
    சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
    ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
    அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
    நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
    நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
    வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
    மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே”31

    என்று மக்களின் தவறான செயல்களை எடுத்துக்கூறி வேறுபாடு காட்டி சன்மார்க்க நெறிக்கு அழைக்கிறார் நம்பெருமான்.

    “பொய்விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
    புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
    கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
    களியர் எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
    ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
    அடிவயிற்றை முறுக்காதோ கொடிய முயற்றுலகீர்
    மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
    மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே!!”32

    என்று பலவாறு கூறி சிறுமையினைத் திருத்த முற்படுகின்றார் பெருமான்.

    “மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
    கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்!
    பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
    உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
    நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்
    அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
    உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்
    கண்டனையாகு …”33

    என்று சீத்தலைச்சாத்தனாரும் அறிவை மயக்கும் கள்ளையும் பிறவுயிரைக் கொல்லும் செயலையும் அறிவுள்ளோர் வெறுத்து அகற்றினர். மேலும், நல்ல அறங்கள் செல்வோர் துறக்கம் பெறுவர். தீய அறம் (பாவம்) செய்வோர் கொடிய நரகம் அடைவர் என்று கூறி எச்சரிப்பதைக் காணலாம். மணிமேகலை என்ற புத்தமதக் கொள்கையை வலியுறுத்தும்  காவியத்தில் மேற்கண்ட கருத்துக்கள் பல நிரம்பியுள்ளன. மதங்கள் வேறானாலும் மார்க்கங்கள் பலவானாலும் கொள்கைகள் ஒன்றே என்பதை அறிய முடிகிறது.  சத்திய தருமச்சாலையில் பசியாற்றுதல் என்ற உயர் தர்மம் ஒன்றே இன்றளவும் பின்பற்றப்பட்டு பெருமானின் ஆணைக்கும் கட்டுப்பட்டு வாழ்கின்றனர் பெரியோர்.

    முதல் திருமுறை முதல் ஆறு திருமுறைகள்

    நாயன்மார்கள் ஆழ்வார்களைப் போல் பாடல்களை மனமுருகப்பாட ஆரம்பித்தவர் தன் சிந்தனையில் செயலில் வேறுபட்டவராக நமக்குக் காட்சியளிக்கின்றார். முருகனின் அழகை வர்ணித்துப் பாடுகையில், சீர் கொண்ட வதனங்கள் ஆறும்34 என்று மனமுருகப் பாடியவர். மேலும் பிள்ளையாரை, திருமாலை,  வடிவுடைய  மாணிக்கவல்லியை,  தியாகேசப் பெருமானை என முதலில் உருவ வழிபாட்டில் மனம் லயித்தவராய் காண்கிற நம்மால் அவருடைய எண்ணம் வித்தியாசமான சிந்தனையில் ஆழ்ந்திருந்ததை அறிய முடிகிறது.

    “வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
    மயில் குயிலாச்சுதடி – அக்கச்சி
    மயில் குயிலாச்சுதடி
    துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
    வள்ளலைக் கண்டேனடி – அக்கச்சி
    வள்ளலைக் கண்டேனடி
    சாதி சமயக் சழக்கைவிட் டேனருள்
    ஜோதியைக் கண்டேனடி – அக்கச்சி
    ஜோதியைக் கண்டேனடி”35

    என்ற வரிகள் மூலமாகத் தம்முடைய மாற்றத்தைத் தானே கூறுவதை நம்மால் உணர முடிகிறது. சர்வ அழகு பொருந்திய பறவை மயில் கண்ணுக்குத் தெரியக் கூடியது.  ஆனால், குயிலோ எங்குள்ளது என்றே நம்மால் அறிய முடியாது.  ஆனால், இனிய ஓசை மட்டும் நம் காதுகளில் வந்து ஒலிக்கும்.  இந்த அழகான உவமையை எழுத்துக்குக் கூறியுள்ள விதம் எண்ணி எண்ணி இன்புறத்தக்கதாகும். மனிதனின் மனம் ஒருமைப்பட ஒரு உருவம் தேவைப்படுவது உண்மை.  நாளாக ஆகப் பக்தியில் பயிற்சியில் மேம்பட மேம்பட உருவமற்ற ஒரு சோதி வடிவில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்கிறான் மனிதன் தானே இறைவனாக இரண்டற்ற ஒரு நிலைக்கு வந்து விடுகிறான்.  நம் பெருமானும் அவ்வாறே முதல் ஐந்து திருமுறைகளில் உருவ வழிபாட்டில் ஈடுபட்டவராய் காணப்படுகிறார்.

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன். ”36

    என்பார் மாணிக்கவாசகர் சிவபுராணத்தில். ஓரறிவுடைய புல், பூண்டாக, ஊர்வன, பறப்பனவாக விலங்காக பிறவியெடுத்த உயிர் தன் பரிணாம வளர்ச்சியால் மனிதனாகப் பிறக்கிறது.  ஆறறிவு கொண்ட மனிதனுக்குப் பல சிறப்புகள் உள்ளன. ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ மானிடப் பிறவியில் மட்டுமே தன்னுயிர்போல் மன்னுயிர் போற்றும் ஆறாவது அறிவு உருவாகிறது. இரக்கத்தாலும் அன்பாலும் கருணையாலும் மனிதன் இந்த உலகையே ஆட்கொள்கிறான்.  தன் பிறப்பின் பொருள் தேடுகிறான்.  தான் யார் என்று ஆராய்கிறான்.  தன்னை உணர்ந்தவன் தலைவனை (இறைவனை) அறிகிறான்.  இவ்வுலகிற்குத் தான் வந்ததன் குறிக்கோளை மனதிற் கொண்டு செயல்படுகிறான். நம்பெருமானும் அவ்வாறே தன் இலட்சியத்தைக் கூறுகிறார். உலகில் பெரும்பாலான மக்கள் இரட்டை வாழ்க்கை நடத்துகின்றனர்.  ஒரு நூறு பேய்கள் ஆட்டமாடும் பிணக்காடாய் இருக்கும் உள்ளத்தை மறைத்து உடலை ஆடை அணிகலன்களால் அழகுபடுத்திக் கொண்டு வலம் வருகின்ற மக்களைப் போல் வாழ்க்கை வாழ்பவர்களைக் கிறிஸ்துவ வேத நூல், “வெள்ளையடிக்கப் பட்ட கல்லறை போல் இருப்பதாகக் கூறுகிறது37  இவர்களைத் திருத்தி உள்ளும் புறமும் மாற்றமின்றி தூயவராய் மாற்றவே தான் இவ்வுலகிற்கு  வந்துள்ளதாகக்  கூறுகிறார் பெருமான்.  இதையே திருக்குறள்,

    ”மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
    ஆகுல நீர பிற” 38

    என்கிறது.

    “பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்றும்
    இந்தப் பிறவியிலேயே இறையனுபூதி பெற முயலாதவன்
    வீணில் பிறந்தவனே!”39

    மானிடர் அனைவரும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையையும் பெற்று இறையனுபூதி அடைய வேண்டும் என்று பாடுபட்டவர் நம் பெருமானார். தான் கண்ட ஆனந்த  அனுபவத்தைப் பாடல்களாக்கினார் அன்பர்கள் இதைத் தொகுத்து நமக்குத் தந்துள்ளனர்.

    திருவருட்பாவின் ஒவ்வொரு திருமுறைப் பகுதிகளும் படித்துப் படித்துப்பார்த்து எண்ணியெண்ணி இன்புறத்தக்கதாகும். பெருமானின் அனுபவங்கள் நமக்குப் பாடமாகவும் நற்பேறுடைய ஓர் வழியாகவும் உள்ளது.

    “நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
    தேரினும் அஃதே துணை.”40

    நல்ல வழியில் ஆராய்ந்து நாம் அருள் என்ற பண்பையே கடைப்பிடிக்க வேண்டும்.  ஏனெனில் பல வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக விளங்குகிறது என்கிறது உலகப் பொது மறை. அந்த வகையில் திருவருட்பா நமக்குக் காட்டும் அருள்வழியில் அன்பு வழியில் நாம் நடந்தோமேயானால் வாழ்வில் இன்புறலாம்.

    “யாவர்க்குமாம் இறைவற் கொரு பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
    யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே”41

    முடிவுரை

    உலகினில் பிறந்த மனிதர்கள் எல்லாம் மனிதர்கள் அல்லர். அடுத்த உயிரின் மீது யார் அதிக பாசமும் நேயமும் கொண்டு விளங்குகிறார்களோ அவர்களே சிறந்த மனிதர்கள் என்பதை வள்ளலாரின்  பாடல்களிலிருந்து  நாம் உணர்ந்து கொள்ளலாம். அவர், உயிர் இரக்கமே மற்ற பண்புகளைக் காட்டிலும் உயர்ந்த பண்பு என்கிறார்.  நடமாடும் உயிர்களுக்கு நாம் செய்யும் சேவை கடவுள் சேவைக்கு நிகரானது என்கிறார். உயிர்கள் வருத்தப்படும்போது வருந்துவதே ஆன்ம உருக்கம் என்கிறார். வள்ளலார் ஆரம்பத்தில் உருவ வழிபாடு கொண்டு வழிபட்டுப் பிறகுத தன் ஆத்ம ஞானத்தினால் ஒளி வழிபாட்டினை மேற்கொண்டார். அவ்வாறு ஒளி வழிபாட்டினை மேற்கொண்டவர் அனைத்து மத மனிதர்களும் சாதி, மதப் பாகுபாடின்றி  பசியிலிருந்து விடுபடச்  சத்திய  தருமச்சாலையை நிறுவினார். இதன் வழி அவர் ஓர் உயிருக்கு நாம் செய்ய வேண்டிய முதல் கடமை உணவளித்தல் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறார். பஞ்சோபாயம் என்பது கடவுள் வழிபாடு என்பது உயிர்களைக் கொல்லாது, துன்புறுத்தாது காத்தலே என்பதை உணர்த்துதலாகும். இதையே அனைத்துத் திருமுறைகளும் உணர்த்துகின்றன. இவற்றின் வழி வள்ளலார் பிள்ளைச்சிறு விண்ணப்பத்தில் மனிதநேயமே கடவுளை அடையவும் இறவாநிலை பெறவும் ஒரோவழி என்கிறார் என்பதை நாம் உணரலாம்.

    ”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
    வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
    நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்
    ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”
    (திருவருட்பா பாடல்:3471)

    அடிக்குறிப்புகள்

    1. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.469.
    2. மேலது, பா. எண்.269.
    3. திருவள்ளுவர், திருக்குறள், 71.
    4. இராமலிங்கர், ஜீவகாருண்ய ஒழுக்கம், ப – 8.
    5. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.210.
    6. திருவள்ளுவர், திருக்குறள், 221.
    7. மேலது, 223.
    8. ஊரன் அடிகள், புத்தரும் வள்ளலாரும், ப – 46.
    9. மேலது, ப – 93.
    10. மேலது, ப – 77.
    11. தாயுமானவர், தாயுமான சுவாமி பாடல்கள், ப – 314.
    12. திருவள்ளுவர், திருக்குறள், 260.
    13. மேலது, 261.
    14. திருமூலர், பெரியபுராணம், ப – 130.
    15. சேலம் சேக்கிழார், வள்ளலாரும் இராமகிருஷ்ணரும், ப – 142.
    16. அப்பாய் செட்டியார். கோ.அ, அருட்பெருஞ்சோதி அகவல், ப – 26, பா. எண்.2.
    17. மேலது, பா. எண்.1530.
    18. மாணிக்கவாசகர், திருவாசகம், ப – 377.
    19. டாக்டர்குருசாமி. மா.பா, வாழ்விக்க வந்த வள்ளலார், ப – 17.
    20. சீத்தலைச் சாத்தனார், புத்தரும் வள்ளலாரும், ப – 40.
    21. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.743.
    22. இராமலிங்கர், ஜீவகாருண்ய ஒழுக்கம், ப – 11.
    23. இராமகிருஷ்ண பாமஹம்சர், வள்ளலாரும் இராமகிருஷ்ணரும், ப – 108.
    24. பட்டினத்தார், சித்தர் பாடல்கள், ப – 65.
    25. திருவள்ளுவர், திருக்குறள், 251.
    26. யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, வாழ்க்கை மலர்கள், ப – 67.
    27. புதிய ஏற்பாடு, ப – 17.
    28. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.209.
    29. மேலது
    30. இராமலிங்கர், சன்மார்க்க பேருபதேசம், ப – 28.
    31. மேலது, ப – 1005.
    32. இராமலிங்கர், சன்மார்க்க பேருபதேசம், ப – 1476.
    33. ஊரன் அடிகள், புத்தரும் வள்ளலாரும், ப – 53.
    34. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.53.
    35. மேலது.2211.
    36. மாணிக்கவாசகர், திருவாசகம், ப – 121.
    37. புதிய ஏற்பாடு, ப – 36.
    38. திருவள்ளுவர், திருக்குறள், 242.
    39. இராமகிருஷ்ணர், ஞானமுரசு, ப – 29.
    40. திருவள்ளுவர், திருக்குறள், 242.
    41. திருமூலர், சித்தர் பாடல்கள், ப – 85.

    பயன்பட்ட நூல்கள்

    1. அரு. இராமநாதன் (பதி), சித்தர் பாடல்கள், 13-ஆம் பதிப்பு – 2005, பிரேமா பிரசுரம், 35, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை – 24.
    2. ஊரன் அடிகள், சன்மார்க்க தேசிகன், புத்தரும்வள்ளலாரும், மு.ப. 2005, சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர்.
    3. தாயுமானவர்,  ஸ்ரீ தாயுமானசுவாமி பாடல்கள், மு.ப. 1980, ஸ்ரீ ராம கிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை – 639 115, எலமனூர் ரயில்வே ஸ்டேஷன், திருச்சி ஜில்லா.
    4. திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய திருஅருட்பா, ஆறாம் திருமுறை, மூ.ப. 2004, சிந்தாமணி பிரிண்டர்ஸ், மயிலாடுதுறை – வடலூர் – 607 303.
    5. திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், சன்மார்க்கம் பேருபதேசம், மு.ப.2003, திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர் – 607 303.
    6. பரிசுத்த வேதாகமம், பதிப்பு 2000-2001, இந்திய வேதாகமச் சங்கம், 206, மகாத்மா காந்தி, பெங்களுர் – 560 001.
    7. வேதாத்திரி மகரிஷி, வாழ்க்கை மலர்கள் (நாள் ஒரு நற்சிந்தனை), மு.ப. மார்ச் 2003, வேதாத்திரி பதிப்பகம், 156 காந்திஜி சாலை, ஈரோடு – 638 001.
    8. இராமகிருஷ்ணர், ஞான முரசு, மு.ப. 2001, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை – 4.
    9. சித்பவானந்தர் ஸ்ரீமத் சுவாமி (உ.ஆ.), திருவாசகம், மூ.ப. 1975, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை – 639 115. எலமனூர் ஸ்டேஷன், திருச்சி ஜில்லா.
    10. சேக்கிழார். கொ. அ. (சேலம்) அப்பாய் செட்டியார், வள்ளலாரும் ராமகிருஷ்ணரும், மு.ப. டிசம்பர் 1988, மணிவாசகர் பதிப்பகம், 55. லிங்க தெரு, சென்னை – 1.
    11. திருமுருக கிருபானந்த வாரியார், பெரிய புராணம், மு.ப. 2003, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 107 சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப் பேட்டை, சென்னை – 2.
    12. திருஅருட்பிரகாச வள்ளலார், திருவருட்பா உரை – நடைப்பகுதி, மு.ப. 5.10.2000, திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்.
    13. குருசாமி. மா.பா, வாழ்விக்க வந்த வள்ளலார், மு.ப. 2006, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், நெ.41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 98.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review): 

    பிள்ளைச் சிறு விண்ணப்பம் உணர்த்தும் உயிர் நேயம் என்னும் இக்கட்டுரை திருவருட்பிரகாச வள்ளலாரின் அமுதனைய அருட்கோட்பாடுகளைப் பிழிவாக எடுத்து மொழிகிறது. வள்ளற் பெருமானின் உயிரிரக்கக் கொள்கை தோன்றுவதற்குக் காரணமான முந்தைய இலக்கியங்களின் சாரத்தையும் மேற்கோள்கள் வாயிலாக இக்கட்டுரை நிறுவியுள்ளது.

    மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாக உள்ள உணவே பசித்த வயிறுகளுக்குக் கிட்டாத காரணத்தால் சிக்கல்களுக்கும் காரணமாக உள்ளது என்பது வள்ளற் பெருமானின் அடிப்படைக் கொள்கை. இதனைத் தொடக்கத்திலிருந்தே தமிழ் இலக்கியங்கள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றன என்பதையும் இக்கட்டுரை நிறுவுகிறது.

    வள்ளல் பெருமானின் வழிகாட்டுதலின்படி நடாமாடும் எல்லா உயிர்களுக்கும்  அன்பு செய்து அவை உற்ற துயர்களைத் தீர்ப்பதே சன்மார்க்கியின் தலையாய கடன் என்பதையும், அதற்கான வழிமுறைகளைத் தந்துள்ள திருவருட்பாக் கருத்துகளையும் இக்கட்டுரை எடுத்து மொழிகிறது. அவற்றுள் முக்கியமானதாக விளங்கும் பஞ்சோபாயம் சன்மார்க்கிகளுக்கான தனிச்சிறப்பு என்பதையும் உணர்த்துகிறது.

    எல்லாவற்றுக்கும் மேலாக, ஆறு திருமுறைகளாக உள்ள திருவருட்பாக்களின் மொத்தப் பிழிவும் அவர் இயற்றிய பிள்ளைச் சிறுவிண்ணப்பத்திலேயே நிறைந்திருக்கிறது என்பதை இக்கட்டுரை நிறுவ முயல்கிறது.

    கட்டுரையாசிரியர் தம் கருத்துக்கு உரமாகச் சேர்க்கும் அருளாளர்களின் பாடல்களைப் பிழையில்லாமல் கையாளக் கற்றுக் கொள்ளுதல் அவசியம்.


     

    Share