நாலடியார் நயம் – 2

நாங்குநேரி வாசஸ்ரீ

 2. இளமை நிலையாமை

பாடல் 11

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; – புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்தீருப் பார்

என்றாவது ஒருநாள்
எப்படியும் மூப்பு வரும்
என்றுணர்ந்த அறிவுடையோர்
இளமையில் இன்பம் துறந்தார்
இன்பமாய் வாழ்ந்து நிலையில்லா
இளமையைக் கழித்தோர்
இன்னாத்துயருடன் மூப்பில்
இன்புற்றிருக்க இயலாமல்
கோலூன்றி எழுந்து நிற்பர்
கட்டுக்கடங்கா வருத்தத்துடன்.

பாடல் 12

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன, – உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி

நட்புக் கயிறு அறுந்தது
நல்லாளும் அன்பில் குறைந்தனள்
உற்றாரின் அன்பாகிய
உரிமைக் கயிறும் அவிழ்ந்தது
சிந்தித்துப்பார்!
சீறும் கடலில்
மூழ்கும் கப்பல்போல்
முதுமையும் வந்தது- இனி
உயிரோடு வாழ்வதால்
உண்டாகும் பயன்தான் என்ன?

பாடல் 13

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் – இல்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு.

வாய் பேச முடியாது
வார்த்தைத் தடுமாறி
கோலூன்றித் தள்ளாடும்
கிழப்பருவம் எய்தி
பற்கள் வீழ்ந்துபட
பலர் நகைக்கும் போதும்
இல்வாழ்வில் பற்றுவைத்து
இறுதிவரை சிற்றின்பத்தில்
நீந்தித் தவிக்கும்
நெறிகெட்ட மாந்தர்க்கு
பேரின்ப வழி அடையும்
பேறு கிட்டுவதில்லை.

பாடல் 14

தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று

தலை நடுங்கிக் கூன் விழுந்து
தடி ஊன்றித் தள்ளாடி
இறக்கும் நிலையிலுள்ள
இவளிடத்தும் முன்பிவளின்
தாய் கையில் ஊன்றுகோல்
தங்கியிருந்த காலத்தே
மயக்கமுற்று வருந்தியிருந்திருப்பர்
மன உறுதியில்லாக் காமுகர்
ஆதலில் உணர்வீர் இளமையும்
அழகும் நிலையற்றதென்று.

பாடல் 15

எனக்குத்தாய் ஆகியாள் என்னை ஈங்கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள்; – தனக்குத்தாய்
ஆகியவளும் அதுவானாள் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு

தாய் சென்றாள் என்னைத்
தனியே தவிக்க விட்டுத்
தனக்கொரு தாயை நாடி
தாய்க்குத் தாயும் இறந்து தன்
தாய் தேடச்சென்றவளே
இவ்வுலகம் ஒருதாய்
இன்னொரு தாய்தேடும்
நிலையற்ற தன்மையோடு
நிலையாய் என்றும் உள்ளது.

பாடல் 16

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்

வெறியாடும் பலிக் களத்தில்
வெட்டுப்படக் காத்திருக்கும் ஆடு
பூசாரி கைப்பூமாலையின் தளிரை
பூரிப்புடன் உண்ணுவதுபோல்
நிலையில்லா  இன்பத்தை
நிலையென எண்ணி இளமையில்
அகமகிழ்ந்து  இன்புறுதல்
அறிவுடையோரிடத்து இல்லை.

பாடல் 17

பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை – நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து

நில்லா இளமையின்
நிலை எதுவெனில்
பழம் உதிர்ந்து
பயனற்று வீழும்
குளிர்மிகு சோலையின்
கனிநிறை மரங்கள் போலாம்
இளமைமிகு நங்கை இவளை
இன்பம் தரும் வேல்விழியாளென
ஆசை மிகுதியால் விளித்து
அதிசயிப்போரே! உணர்வீர்
மூப்பில் இவளுக்கும் ஊன்றுகோல்
முன்நடக்க உதவும் கண்ணாகுமென்பதை.

பாடல் 18

பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று – வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.

பருவம் எத்தனை?
பல்லாட்டம் கண்டதோ?
இருபுறமும் மென்றுதின்ன
இயலுமோ உம்மாலென
முதியவர் குறைகேட்க
முயற்சிக்கும் அறிவுடையோர்
இளமையின் உடல்வலிமை
இறுதிவரை தொடருமென எண்ணார்.

பாடல் 19

மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு

இளைஞன் நான்
இனிவரும் காலத்தில்
நல்லறம் செய்வேனென
நாட்களைக் கடத்தாதீர்
பலநேரம் கடுங்காற்றில்
பழுத்த கனி வீழாது
விளைந்த காய்களும் உதிரும்
விதியின் சதியால் அதுபோல்
வயதானவர் பிழைத்திருக்க
வாலிபர் சாதலுமுண்டு.

பாடல் 20

ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் – பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று

மரணப் பிடியிலுள்ள
மனிதனைத் தேடும்
அருளில்லாத எமன்
அருகில் வருவானென்பதால்
தோளில் ஏற்றத்
தகுந்த புண்ணியமெனும்
கட்டுச் சோற்றை
காலத்தே தேடிப்
பிழைத்துக்கொள்ளுங்கள்
பத்து மாதம் சுமந்தவளின்
பிள்ளையை அவள் கதறக்
கொண்டு செல்லும்
எமனின் வஞ்சனையை
அறிந்து செயல்படுவீர்
அனுதினமும் நற்செயலை.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நாலடியார் நயம் – 2

  1. வணக்கம்! வாழ்த்துக்கள்! உரை நயமாகுமா? நன்றி

  2. உரைநடையிலான உரையாக இல்லாமல், சற்றே கவிதை நடையிலான உரையாக அமைவதால், இதில் நயம் பாராட்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.