வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-19

0

தி. இரா. மீனா

ஜோதர மாயண்ணா

பிஜ்ஜள மன்னனிடம் யானைப் படைத் தலைவராகப் பணியாற்றியவர்.” சோமநாதாலிங்கா “என்பது இவரது முத்திரையாகும். சொல் செயல் தூய்மை, குருவின் பெருமை ஆகியவற்றைப் பற்றிப் பேசுவதாக இவர் வசனங்கள் அமைகின்றன.

“பிற பெண்கள் பார்வதியெனச் சொல்லி
நம்மை நடத்திச் சென்றது குரு வார்த்தை.
என்னைச் சரணனின் மனைவியென
நடத்திச் சென்றது குருவசனம்.
மனைவியர் அனைவரும் குருவின் சதியரென
நடத்திச் சென்றது குருவசனம்
குருவின் வார்த்தை என்னை வழி நடத்திச் சென்றது
குருவின் வார்த்தை என்னை அமைதிப்படுத்தியது
குருவின் வார்த்தை என்னை
சம்பு சோமநாதலிங்கத்தோடு ஐக்கியமாக்கியது“

டக்கேய பொம்மண்ணா

இவருக்கு டக்கேய மாரய்யா என்றொரு பெயருமுண்டு. நாட்டுப்புறக் கலைஞர். சிவசரணராவதற்கு முன்பு மாரியம்மனைத் தலைமேலேந்தி துடியை இசைத்துக் கொண்டு இரந்து பிழைப்பு நடத்தியவர். ”காலாந்தக பீமேஸ்வரலிங்க“ இவரது முத்திரையாகும். வசனங்களில் நாட்டுப்புறக் கலைத் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தியுள்ளார்.

1. “கையில் ஆயுதமேந்திப் போரிடும் போது
போராடுவது மனமா, கையா, ஆயுதமா ?
அங்கம், இலிங்கம் கூடும் போது
உறவாவது அங்கமா, இலிங்கமா, ஆன்மாவா?
இதை அறிந்தால்
காலாந்தக பீமேஸ்வரலிங்கத்தை அறிந்ததாம். “

2. “ஆற்று வெள்ளத்தில் படகோட்டியுடன் உதவியுடன்
அவன் பின் செல்வது போல
உடலின் புலன்கள் என்ற ஆற்று நீரில்
இலிங்கமெனும் படகோட்டியின் துணையோடு
பின் தொடர வழி காட்டுவாய்
காலாந்தக பீமேஸ்வரலிங்கமே”

3. “சிற்பியின் கையில் கல் நிலையழிந்து அடையாளமானது
குருவின் கையில் பாறை அழிந்து இலிங்கமானது
சரணரின் சிந்தனையில் இலிங்கம் நிலையானது
சிந்தை புலனோடிணைந்து காலாந்தக பீமேஸ்வரனானது“

4. “மனைவியின் பண்பைக் கணவன் பார்க்க வேண்டுமேயன்றி
கணவன் பண்பை மனைவி பார்க்கலாமா? எனல் தவறு.
சதியின் தொடுதல் பதிக்குக் கேடல்லவா?
பதியின் தொடுதல் சதிக்குக் கேடல்லவா?
அங்கமொன்றின் கண்கள் இரண்டில்
ஒன்று பழுதானால், எது பழுதானதெனப் புரிந்தால்
காலாந்தக பீமேஸ்வரலிங்கத்தைப் புரிந்து கொள்ளலாம்”

டோகர கக்கய்யா 

மாளவத்திலிருந்து கல்யாண் வந்தவர். தலித் பரம்பரையைச் சேர்ந்தவர். தோல் பதனிடும் காயகம் இவருடையது கல்யாணில் புரட்சி நடந்த போது  சென்ன பசவரோடு ஏர் கலப்பையைக் கொண்டு சென்றவர். கக்கேரியில் ஐக்கியமானவர். அங்கு இவர் பெயரில் சமாதி, ஏரி ஆகியனவுண்டு. “அபிநவ மல்லிகார்ச்ஜூனா” இவரது முத்திரையாகும்.

1.“குலத்தின் குறைவு தங்கள் கைபட்டு மாயமானது
சாதியாலான தீட்டு உங்களைத் தொட்டபின்பு மாயமானது
இலிங்கத்தின் தீண்டல் ஐம்புலன்களை மாயமாக்கியது
அந்தரங்கத்திற்குள் ஞானவெளி புகுந்து அதை மாயமாக்கியது
சம்சார பந்தம் நீக்கியதால் மனஇருள் மாயமானது
அபிநவ மல்லிகார்ஜூனனே
உன்னைத் தொட்டு நானும் மாயமானேன்.”

2.“ஓ, இலிங்கத் தந்தையே !
தாழ்குலத்தில்  பிறக்கவைத்தாய்
உன்னைத் தொடாமல் வருந்தினேன்
கை தொடாவிட்டாலும் மனம் தொடாதோ?
அபிநவ மல்லிகார்ஜூனனே“

தளவார காமிதேவய்யா

கல்யாண் நகரைச் சேர்ந்த இவரது காயகம் கிராமத் தலையாரி. “காமஹரப்பிரிய ராமநாதா “இவரது முத்திரையாகும்.

1. “காளையாக இருந்துகொண்டு ஏர் சுமக்கமறுப்பது முறையா ?
சேவகனாக இருந்துகொண்டு ஆணைகேட்க மறுப்பது முறையா?
சரணனாகி குருவைக் கடைபிடிக்காமலிருப்பது முறையா ?
காமஹரப்பிரிய இராமநாதனே”

2. “வியாபாரத்தில் ஆதாயம் இல்லையென்றால்
அது வியாபரமாகுமா? அதைச் செய்வதேன்?
குருலிங்க ஜங்கமத்துக்கு புகழ் கருதிச் செய்வது
மூலமில்லாமல் ஆதாயம் தேடுவது போன்றதே
காமஹரப்பிரிய இராமநாதனே”

துருகாஹி ராமண்ணா

சரணர்களின் வீட்டுப் பசுக்களை மேய்க்கும் காயகம் இவருடையதாகும். ”கோபதிநாத விஸ்வேஸ்வரலிங்கா“ என்பது இவரது முத்திரையாகும். தொழில் அனுபவத்தை ஆத்ம அனுபவத்தோடு சேர்த்துக் கூறுவதாக  வசனங்களின் போக்குள்ளது.

“ஒரு கம்பு கொண்டு வெவ்வேறு பசுக்களைக்
கட்டுப்படுத்துவது போல வெவ்வேறுபட்டவர்களை
ஏக சிந்தனையில் வைத்து, மும்மலம் கொண்டவரை விலக்கி
இறைவனோடு தன்னை இணைப்பது
கோபதிநாத விஸ்வேஸ்வரலிங்கம் அறிவதற்கு வழி.”

தெலுகேச மசணய்யா

பசுக்களை மேய்க்கும் காயகம் இவருடையதாகும். இவரது பெயரிலுள்ள தெலுகேச அடைமொழி இவர் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்கிறது. ”தெலுகேசுவரா“ என்பது இவரது முத்திரையாகும்.

1.“அழகானவனாக இருப்பின் மகளிர் அவனைப் போற்றவேண்டும்
கொடையாளனாக இருப்பின் யாசிப்போர் போற்றவேண்டும்
வீரனாக இருப்பின் பகைவர் போற்ற வேண்டும்
நீசன் தன்னையே போற்றிக் கொள்வான்
ஒருவன் தெலுகேஸ்வரனின் பக்தனாயின்
தேவன் புகழ்வதோடு உலகமும் பாராட்டும்“

2.“அங்கத்தின் மீது இலிங்கமிருப்பது
குருவின் கருணையைப் பெற்றதற்கு சாட்சி.
அங்கத்தின் மீது இலிங்கம் இல்லையெனில்
குருவின் கருணை கிடைப்பது எப்படி?
இலிங்க தீட்சை இல்லையெனில் குருவின் கருணையுண்டோ?
ஒருவன் அம்மாதிரியான பேச்சுக்கள் கேட்கக் கூடாது
உடலில் இலிங்கம் அணிவது ஒழுக்கமாகும்
இல்லையெனில் ஒழுக்கமில்லையென்பேன் தெலுகேஸ்வரனே”

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *