கவித்தலம் கை. அறிவழகன்

காப்புச் செய்யுள்

(இன்னிசை வெண்பா)

வேங்கட வேட்கை விருப்புடன் பாடியே
தீங்கினை நீக்கித் திருமலைக்குச் செல்ல:
திரைவிரி காவிரித் தீந்தமிழ் ஆற்றங்
கரைகிடந்த கண்ணா அருள்.

(கலிவிருத்தம்)

முத்தமிழ் உவப்பானை முகில்வண்ண மூர்த்தியைப்
புத்தியில் உறைவானைப் பொழிலேழு மலையானை
வித்தகக் கண்ணனை வேதத்தின் நாயகனைச்
சித்தம் நிறைந்திடச் சேவிப்ப தெந்நாளோ?

உருக்கிடும் உருவானை உளத்துளே நிறைவானைப்
பெருக்கிடும் விழிநீர் மல்கப் பிணைத்திடும் அன்பினாலே
திருக்கண்டு பொன்மேனி கண்டு திருப்பதியான்
இருக்கின்ற எழிலுருவை எப்போது காண்பேனோ?

ஆயனை அலர்மேல் மங்கை போற்றும்
நேயனை நெடுங்கடல் வண்ண நிமலனைத்
தூயநீர் அருவி துளிர்த்திடும் வேங்கடத்தே
தாயனையத் தலைவனைத் தரிசிப்ப தெந்நாளோ?

கங்குல் விளக்கானைக் கருத்ததனில் நிறைந்தானை
எங்குலக் கொழுந்தானை எவ்வுயிருக்கும் நாயகனைத்
தெங்கிள நீர்ச்சுவைத் திருவேங்கட மலையானைப்
பொங்கிடத் தரிசித்துப் பூரிப்ப தெந்நாளோ?

பொங்கரவில் அணைவானைப் புரிதுயில் நிறைவானைச்
சிங்கமுக உருவானைச் சிதறுந்தேன் ஒன்றாகித்
தங்குமலர்த் தாமரை தமிழ்வேங் கடத்தே
செங்கமலக் கண்ணனைச் சேவிப்ப தெந்நாளோ?

எண்ணிய எண்ணத்தை ஈடேற்றும் நாயகனைப்
புண்ணிய நல்வினை பொழிந்திடும் தேவனை
மண்ணிலே உயர்ந்த மாமலை வேங்கடத்தில்
கண்ணினால் கண்டே கரையேறு வதெந்நாளோ?

முத்தி தருவானை மூவுலகும் காப்பானை
எத்திசையும் போற்றும் ஏழு மலையானைப்
பத்திப் பெருக்குடனே பாதமலர் தான்வணங்கி
அத்தி வரதரையும் அடிதொழுவ தெந்நாளோ?

செந்துவர்வாய்ச் சங்கனைச் சீரிமிகு சக்கரம்
தந்தோள் சூடிய தாமோ தரனை
எந்துயர் தீர்ப்பானை ஏழுமலை வேங்கடனை
முந்தியே தரிசித்து மூழ்குவதும் எந்நாளோ?

சீதை நாயகனைச் செங்கண் திருமாலைக்
கோதை மாலை சூடிய கோவிந்தனை
வேத முதல்வனை வேங்கட மலையானைத்
தீதறத் திருவிழி காண்பதுவும் எந்நாளோ?

குலம்காக்க வேண்டும் கோவிந்தா என்றும்
நலம்காத் தருள்வாய்; நாராயணா என்றும்
தலம்போற் றுகின்ற தமிழ்வேங் கடத்தே
பலர்போற்றுந் தமிழால் பாடுவதும் எந்நாளோ?

                           (வேறு)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

கண்ணுளே பாவை யானாய்
கருத்துளே யாவும் ஆனாய்
மண்ணுளே மரமும் செடியும்
மற்றுள அனைத்தும் ஆனாய்
தண்ணொளிக்  கதிராய் ஆனாய்
தமிழெலாம் நீயே ஆனாய்
விண்பொழி மழைபோல் ஆங்கே
வேங்கடம் நின்றாய் நீயே!

உன்னையே தொழுதேன் என்றும்
உணர்வுடன் மகிழ்வாய் நின்றே
என்னையும் ஏற்பாய் என்றே
எழுமலை துதிக்கின் றேனே
அன்னையே அத்தன் நீயே
அன்பினோர் வடிவம் நீயே
இன்னுமோ உறக்கம் கொண்டாய்
ஏழையேன் தவிக்கின் றேனே!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வேங்கட வேட்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *