இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 14

அவ்வைமகள்
14. எளிவந்த எளிமை
உலகத்திலேயே மிகவும் சிக்கலான விடயம் ஒன்று உண்டென்றால் அது தான் எளிமை.
ஆம்! “எளிமை” தான் அத்தனைச் சிக்கல் நிறைந்தது. எளிமையாக எழதுவது, எளிமையாகப் பேசுவது, எளிமையான கருவிகளை – பொருட்களை உருவாக்குவது என்பதெல்லாம் எளிமையின் முத்தாய்ப்பான வெளிப்பாடுகள்.
இவ்வாறாக எளிவந்து எளிமை படைப்போர்கள் உலகத்தில் எப்போதோ அபூர்வமாய் உதிக்கிறார்கள். வள்ளுவனுக்குப் பிறகு ஒன்றே முக்கால் வரியில் ஒரு இலக்கியத்தை, அவன் போல் எளிவந்து எழுதிப்போந்த ஒருவனை இவ்வுலகம் இதுகாறும் காணவில்லை.
அவ்வையின், இரண்டே இரண்டு சொற்களைக் கொண்ட “ஆத்திசூடியும்” நான்கே நான்கு சொற்களைக் கொண்ட “கொன்றைவேந்தனும்” நாவை வருடிச் சொடுக்கெடுக்கும் நேர்த்தித் திறன் மிக்க எளிமை கொண்டவை. அவ்வையின் ஆத்திசூடியில் ஆடித்திளைத்த பாரதி, தானும் கூட ஒரு புதிய ஆத்திச்சூடியைப் படைத்து ஆத்திசூடிக்கு ஆத்திச்சூட்டி மகிழ்ந்தான். எளிமையின் அசாத்தியக் கவர்ச்சியை – ஆற்றலை இன்னமும் சொல்லவும் வேண்டுமோ?
தற்காலத்தில், “ஹைக்கூ” எனப்படும் குறுங்கவிதை வகையை அறிவோம். இன்று, ஹைக்கூ கவிதை எழுதுவோர்கள் உலகிலேயே மிகவும் குறைவான எண்ணிக்கையிலேதான் இருக்கிறார்கள்! வெறும் பதினேழு (5-7-5) சொற்கள் போதும் இக்கவிதையை எழுதுவதற்கு. எளிமை என்றால் அத்தனை எளிமை! ஆனால், அதை எழுத ஆளில்லை! காரணம் அதிலுள்ள சவால்!!
சொல்லப்போனால் இன்றைய ஹைக்கூ பெரிதும் விதிகள் தளர்த்தப்பட்டிருக்கிறதான கவிதை வடிவமே. “ரெங்கா” (Renga), என்பதான பெயரில், பதினைந்தாம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றியதான ஒரு கவிதை வகையின் பல்லவி “ஹோக்கு” என்று வழங்கப்பட்டு வந்தது. ஹோக்கு எழுதுவது என்பது வெகுபல நிறைத்த சவால்களை உடைத்ததாய் இருதிருக்கிறது. அடுத்து. “ரெங்கா” என்பது “ரெங்கு” (Renku) வாக மாறி, விதித்தளர்வு பெற்று, படிப்படியாக, இன்னும் கொஞ்சம் எளிமையை இழந்தது. அப்புறம், இன்னமும் கொஞ்சம் விதித் தளர்வு ஏற்பட்டு, பல்லவியான ஹோக்குவையே ஒரு தனிக் கவிதைப் பாணியாகத் எடுத்துக் கொள்ளுவது என்று முடிவு செய்யபட்டது. அது தொட்டு, ஹோக்கூ எனும் பெயரை, ஹைக்கூவாக மாற்றி, பற்பல வகைகளில் மேலும் விதித் தளர்வுகள் ஏற்படுத்திய வகையில், இன்றைய ஹைக்கூ இளைத்து நிற்கிறது. ஆனால், இந்நிலையில் கூட, அதன் எளிமை சவால் நிறைந்த கடினமாய் இருக்கிறது என்றால் எளிமையில் இருக்கக் கூடிய கடினத்தை, சிக்கலை, நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும்.
ஆக, எளிமை என்பது சுலபமானது அன்று என்பது வெள்ளிடை மலை.
ஆனால், இவ்வுலக வாழ்க்கையில், எளிமை தான் விரும்பப்படுவது – வேண்டப்படுவது – இன்றியமையாதது.
சுக்குக்கு மிஞ்சின வைத்தியமில்லை – சுத்திக்கு மிஞ்சின ஆயுதமில்லை – என்பார்கள்.
மிகவும் எளிமையான விடயங்களான சுக்கும் சுத்தியலுமில்லாமல் வீடிருக்க வாய்ப்பில்லை அல்லவா?
ஆக, எளிமையானவை எவையோ அவையே வலிமையானவை – அவையே இன்றியமையாதவை – என்பது விளங்கும்.
கணினி உலகத்தில் முதல் தலைமுறைக் கணினிகளை தற்போதையக் கணினிகளோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இன்றைய கணினிகள் எத்தனை எளிமையாகி இருக்கின்றன என்பது புரியும்.
அதுபோன்றே, கணினிகளில் செருகிப் பயன்படுத்தும் நினைவுப் பெட்டகங்கள் (Memory Storage Devices) எத்தனை எளிதாயிருக்கின்றன என்பதை நினைக்கும்போது மயிர்க்கூச்செறிகிறது. காந்தத் துளை அட்டைகள் (Magnetic Punch Cards), ப்ளாப்பி தட்டுகள். சி டி தட்டுகள், யு எஸ் பி பேனாச் செருகி, மினி யு எஸ் பி பேனாச் செருகி, மைக்ரோ யு எஸ் பி பேனாச் செருகி, நேனோ யு எஸ் பி பேனாச் செருகி என எளிமையை நாம் சேர்த்துக்கொண்டே வந்திருக்கிறோம். இதுபோன்றே எஸ் டி அட்டைகளிலும் தொடர்ச்சியாக எளிமை சேர்ந்து கொண்டே இருக்கிறது.
காரணம்? இவற்றின் எளிமையே இன்றைய மக்களின் வாழ்வாதாரம் என்பதால்.
காந்தத் துளை அட்டையிலிருந்து ஒரு மைக்ரோ யு எஸ் பி வருவதற்கு எத்தனை ஆண்டுகள ஆயின என்று பாருங்கள் – ஏறக்குறைய 50 ஆண்டுகள்.
இந்த 50 ஆண்டுகளிலும் நாம் ஒரு நினைவுப் பெட்டகத்தையோ அல்லது ஒரு கணினியையோ எளிமைப்படுத்துவதற்காக கொடுத்திருக்கிற முயற்சி, உழைப்பு, முதலீடு, ஆகியனவற்றைக் கணக்கில் கொண்டு பார்த்தால், எளிமை என்பது எத்தனைக் கடினமான பணி – காலம் வேண்டுகிற பணி என்பது விளங்கியிருக்கும்.
ஒரு தொழிநுட்பத் துறயில், எளிமை என்பது சாதிக்கப்படவேண்டுமேன்றால் அங்கே மகத்தான திட்டம் இருக்க வேண்டும். நீண்ட கால மற்றும் குறுகிய கால மைற்கற்கள் விவரம் வேண்டும், ஏற்படக்கூடிய இலாப நட்டங்கள் பட்டியலிடப்பட்டாக வேண்டும்; வெற்றி தோல்விகளுக்கு ஏற்றார் போன்ற தகவமைப்பு வேண்டும், நிதிவேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக, அசைக்கமுடியாத உறுதியும், “இது நடக்கும் – நடந்தே யாகும்” என்கிற நம்பிக்கை வேண்டும் – அதற்கும் மேலாக, விசுவாசமான் ஊழியர்கள் வேண்டும்.
கணினிகளும் நினைவாற்றல் பெட்டகங்களும் எளிமையாகின பரிணாம வளர்ச்சியில், எளிமை ஏற்றப்பட ஏற்றப்பட, கணினிகளின் – நினைவாற்றல் பெட்டகங்களின் – சக்தியானது (Power) அதிகரித்துக்கொண்டே போவதை நாம் நிதர்சனமாகப் பார்த்துக் கொண்டிருகிறோம் என்பது பேருண்மை.
நாம் இன்னொன்றையும் கவனிக்கிறோம்: கணினிகள் எளிமையானதால். நினைவாற்றல் பெட்டகங்கள் எளிமையானதால், ஒட்டுமொத்த மனித குலத்தின், திறன் அதிகரித்திருக்கிறது – தொலைத்தொடர்புகள் விரைவு பட்டிருக்கின்றன. உலகமே ஒரு கைப்பிடிக்குள் என்பதான ஏகாந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆக, எளிமை என்பது மனிதகுலத்தின் சக்தியை, திறனை, பலத்தை அதிகரிக்கும் சத்தியத்தை நாம் வெகு யதார்த்தமாகப் பார்க்கிறோம்.
கணினிகளை எளிமைப்படுத்தி, அனைவர் கைகளிலேயும் எளிமையான கணினிகளை ஆனந்தமாய்த் தழுவ விட்ட பெருமை ஸ்டீவ் ஜாப்சிற்கு உண்டு என்றால் சமயத்தை –– எளிமையாக்கி, மக்களின் சிந்தையிலே எளிமையானதொரு சமயத்தை ஆனந்தமாய்த் தழுவவிட்ட பெருமை வள்ளலாரைச் சேரும்.
கணினி என்பது மனிதர்களது வாழ்வாதாரம் என்று ஜாப்சும் சமயம் என்பது மனிதர்களது வாழ்வாதாரம் என்று வள்ளலாரும் சொல்லாமல் சொல்லிப்போன பெற்றியை நம் சிந்தையில் பொருத்திப் பார்க்கிற போது – இவர்கள் இருவரும் ஒப்பிலா மணிகள் என்றே நாம் உணர்ந்து கொள்கிறோம்.
இவ்வாறு நாம் பேசும்போது, கணினியை சமயத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது போல் சிலருக்குத் தோன்றலாம். கணினியையும் சமயத்தையும் ஒப்பிடுவது நம் இலக்கு அல்ல. ஆனால், கணினி என்பது இன்றைய மனிதகுலத்தின் வாழ்வாதாரத்திற்கு எத்தனை முக்கியமானதோ அத்தனை முக்கியமானது சமயமும் என்கிற புரிதல் கிடைக்குமெனில், வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் எனும் இரு பெருமனிதர்களை நாம் புரிந்துகொள்ளுவதற்கு அதுவே ஒரு சிறந்த துவக்கப் புள்ளியாகும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகளை எளிமைப்படுத்தும்போது நேரிட்ட பல சுவையான நிகழ்வுகள் உண்டு. அவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்க இருக்கிற நிலையிலே, எளிமை பற்றிய அவரது பொன்னான கூற்று ஒன்றினை முதலில் பார்ப்போமாக:
“That’s been one of my mantras – focus and simplicity. Simple can be harder than complex: You have to work hard to get your thinking clean to make it simple. But it’s worth it in the end because once you get there, you can move mountains.”
“கவனச்செறிவும் எளிமையுமே எனது மந்திரங்கள் – எளிமை என்பது சிக்கலையும் விடச் சிக்கலானது. உன் எண்ணம் எளிமையாவதற்கு, நீ கடினப்பட்டு முயன்று உனது எண்ண நிலையைத் தூய்மைப்படுத்த வேண்டும். அவ்வாறான, கடின முயற்சி எத்தனை மதிப்புடையது என்பது இறுதியில் விளங்கும் ஏனென்றால், அங்கே (எளிமைக்கு) சென்று விட்டாயென்றால், நீ மலைகளை அசைக்கமுடியும்!”
எளிமை என்பதற்கு இருக்கிற பராக்கிரம ஆற்றலை ஸ்டீவ் ஜாப்சை விட விவரமாக எடுத்துச் சொல்லியவர்கள் எவருமில்லை.
அவருக்கு முன் எளிமையைப் பற்றிப் பூடகமாக, சுருங்கச்சொல்லிப் போந்தவர்கள் சிலருண்டு: லியனார்டோ டா வின்சி (ஏப்ரல் 14/15, 1452 – மே 2. 1519); வால்ட் விட்மன் (மே 31, 1819 – மார்ச் 26,1892); ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18,1955)
“எளிமை என்பது நுட்பத்தின் முத்தாய்ப்பு” (Simplicity is the ultimate sophistication) – லியனார்டோ டா வின்சி.
“எளிமை வெளிப்பாட்டின் மகிமை” “Simplicity is the Glory of Expression” – வால்ட் விட்மன்
எந்த ஒன்றையும் எளிமையாக்குங்கள் – எளிதாக்காதீர்கள் “Make Everythig Simple not Simpler” – ஐன்ஸ்டீன்.
இக்கூற்றுக்கள் மூன்றும் சங்கமித்து மிளிருமுகமாக அமைவது ஸ்டீவ் ஜாப்ஸின் கூற்று என்று எடுத்துக்கொண்டாலும், எளிமை என்பது யாதென செய்முறையாக (practical) ஒரு விளக்கத்தைத் தந்த முதல் மனிதர் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமே. ஏனெனில் எளிமையை, கணினியில் தத்ரூபமாக நிலைநாட்ட அவர் தந்த முற்சிகளும், அம்முயற்சிகளுக்கு அவர் தந்த மாபெரும் உழைப்பு என்னும் மூலதனமும் மட்டுமே எளிமையின் செய்முறையைப் பிறருக்குச் சொல்லுமளவுக்கு அவரைத் தயார் செய்தது.
அவருக்கு முன்னே, எளிமைக்கான எளிமைச் செய்முறையை பிரம்மாண்டமானதொரு தொழிலில், ஒரு தொழில் நுட்பச் சவாலாக எடுத்துக் கொண்டு நிலை நாட்டவேண்டிய வாழ்க்கைப் பேறு, அதாவது கொடுப்பினை பிறருக்கு இல்லை என்பதும் புலப்படுகிறது.
இந்நேரத்தில், நம் கவனத்திற்கு இன்னொன்றும் வருகிறது; ஸ்டீவ் ஜாப்சிற்கு அவரது எளிமை மந்திரத்துக்கு அடித்தளம் போடுவதற்கு ஏதுவாக, எளிமையை வேராகக் கொண்டு வளர்ந்தெழுந்த இந்தியச் சிந்தனை அவரிடம் இருந்ததாக நாம் உணர்கிறோம்.
தியானமுறைகளைப் பயில இந்தியா வந்து, இங்கு தங்கியிருந்து, பயின்று சென்றிருக்கிறவர் என்ற முறையிலும், பொதுவாகவே சிலபல தருணங்களில் இந்தியப் பரிபாஷைகளை எடுத்தாள்கிற மனிதராக வாழ்ந்திருக்கிறார் என்பதாலும், எளிமை என்பது கருவிலேயே, எண்ண நிலையில் எழவேண்டிய ஒன்று என்பதை அவர் துரிதமாகவே அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார் என்றே நம்மால் ஊகிக்க முடிகிறது. இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருமாறு எண்ணிறந்த நேரடியான தனித்தனிச் சம்பவங்கள், இப்போது நம் வசம் இல்லை என்றாலும் “நேர்க் காணல்” முறையில் ஐசக்சனால் எழுதப்பட்ட அவரது வாழ்க்கைச் சரிதத்தில் [1] ஸ்டீவ் ஜாப்ஸின் பல கூற்றுக்களில் உள்ள இந்தியச் சிந்தனையின் சாயலை, நாம் புறக்கணிக்க முடியாது. இதுபற்றி நாம் பின்னால் பேசவும் இருக்கிறோம்.
இந்தியச் சிநதனை என்பது எளிதானதல்ல ஆனால் எளிமையானது. “எளிமையால் மலைகளை அசைக்க முடியும்” என்கிற ஸ்டீவ் ஜாப்சின் கூற்று, மலைகளின் தொகுப்பாக, மாவல்லமை பெற்று நின்ற பிரிட்டிஷ் அரசை, தனது எளிமை என்னும் ஒற்றை நெம்புகோலால் அனயாசயமாய்ப் புரட்டிப்போட்ட அண்ணல் காந்தியடிகளின் (அக்டோபர் 2, 1869 – சனவரி 30,1948) செயல் சாதனையின் வெளிப்பாடே என்று நாம் கொள்ளலாம். இந்த வெளிப்பாட்டை வெறும் வாய்மொழியோடு ஸ்டீவ் ஜாப்ஸ் நிறுத்திக்கொள்ளவில்லை. நேரடியாக செய்து காட்டிச் சென்றிருக்கிறார் – அதுவும் அதி சிக்கலான அவரது துறையில்.
கணினித்துறை என்பது சும்மா அல்பசொல்பமானதல்ல. மிகுந்த போட்டிகளும் வர்த்தகச் சவால்களும், தொழில்நுட்பச் சவால்களும், பல வேலைப் பணியார்களின் மனிதாயுதச் சவால்களும் நிறைந்தது அது. அதுமட்டுமல்ல அது ஒரு உலகாய்ந்த துறை; நொடிப்பொழுதும், “கண்கொத்திப் பாம்பைப்போல்” பிறர் பார்த்துக் கொண்டிருக்கிற பார்வை உள்ளதான துறை. அத்தகையதொரு துறையில், அந்தரத்தில், அப்பட்டமாய் நின்றபடி, வெட்டவெளிச்சமாய், நாட்டவர் மருளவும், கேட்டவர் வியக்கவும், பார்த்தவர்க் கிறங்கவும், எளிமையை எளிவந்து சாதித்துக் காட்டிய ஸ்டீவ் ஜாப்ஸின் சாதனை உலக வரலாற்றில் நீங்காத இடம் பெரும் தன்மையதுதான்.
அவருள் இருந்த எளிமைச் சார்பின் தன்மை தான் ஸ்டீவ் ஜாப்ஸின் இந்தச் சாதனைக்கு அடித்தளமாய் அமைந்தது என்பதை நாம் வலியுறுத்த வேண்டிய தேவை இல்லை.
(மேலும் பேசுவோம்)
துணைநூற் பட்டியல்
[1] Walter Issacson (2011). Steve Jobs, Simon & Schuster, 656 pp.