நாலடியார் நயம் – 6

நாங்குநேரி வாசஸ்ரீ
6. துறவு
பாடல் 51
விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் – விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.
விளக்கு ஒளியின் முன்னே
விலகிச்செல்லும் இருள்போல்
செய்த நல் வினையின் முன்
சேர்த்துவைத்த பாவம் நீங்கும்
எண்ணெய் குறையும்நேரம்
எங்கும் இருள் சூழ்வதுபோல்
நல்வினைப்பயன் நீங்கும்
நேரம் பாவம் வந்துநிற்கும்.
பாடல் 52
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் – தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.
நிலையாமையும் மூப்பும்
நோயும் சாவுத்துன்பமும்
இவ்வுடம்பிற்கு உண்டு என
இயன்றவரை கருமங்களைச்
செய்து வாழ்வர் ஞானநூல்களைச்
செவ்வனே கற்ற சான்றோர்
இம்மைக்கு மட்டுமே பயன்நல்கும்
இலக்கணநூல்களையும் சோதிடமும்
பிறவற்றையுமே பிதற்றித்திரியும்
பித்தர்களைவிட அறிவிலார்
இவ்வுலகில் இல்லை.
பாடல் 53
இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் – மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம்உய்யக் கொண்டு.
சிறந்த அழகு மனை இளமை
செல்வாக்கு செல்வம் வலிமை
இவையெல்லாம் நாளடைவில்
இல்லாமல் போகும் நிலைஅறிந்து
மேலோர் தாம் கடைத்தேற
மேற்கொண்டு காலம்தாழ்த்தாது
பற்றுக்களை விடுத்துப்
பாங்காய் வாழ்வர்.
பாடல் 54
துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் – இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு
அடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.
ஆறாத்துன்பம் பலநாட்கள்
அடைந்து துன்புற்றாலும்
அறிவிற் சிறியர் ஒருநாளின்
அற்ப இன்பம் விரும்புவர்
இன்பம் நிலையற்றதெனவும்
இன்னல் தருவதெனவும்
உணர்ந்த சான்றோர்
உடன் இல்லறத்தினின்று
நீங்கிச் சென்று
நீடூழி வாழ்வர்.
பாடல் 55
கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே
பிணியோடு மூப்பும் வருமால் – துணிவொன்றி
என்னொடு சூழாது எழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு.
இளமை வீணாய்க் கழிய
இப்போதே நோயுடன்
இணைந்து மூப்பும் வந்தது
என்னோடு ஆலோசிக்காது
எழுகின்ற மனமே!
நமக்கு நல்வழி கிடைக்க
நல்ல பாதையில் போகின்றாயோ?
(நன்மார்க்கத்திற்குச் செல்லத் துணிந்தவன் தன் மனதுடன் பேசியதுபோல் அமைகிறது இப்பாடல்)
பாடல் 56
மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்
பூண்டான் கழித்தற்கு அருமையால் – பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார்.
மாட்சிமைப்பட்ட குணமும்
மக்கட்பேறும் இல்லையெனினும்
மணம் செய்த கணவன்
மனையாளை நீக்குதல்
தகாது என்பதால்
தானே தேடிக்கொள்ளும் துன்பம்
திருமணம் செய்தல் என
உணர்ந்த சான்றோர் எக்காலத்திலும்
உறுதியாய் மணம்முடிக்காதீர் என்றனர்.
பாடல் 57
ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.
முயன்று செய்த விரதங்கள்
முடிவுற்று அழியும் வண்ணம்
தாங்கமுடியாத் துன்பம் வரினும்
தடங்கல்களை விலக்கித்
தம் விரதங்களை நிலைநிறுத்தும்
மனவலிமை கொண்டோரே
மேலான துறவற ஒழுக்கம்
மேற்கொள்ளும் சிறப்புடையவர்.
பாடல் 58
தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் – உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.
பழித்துப் பேசி தீவினை
புரிந்தோரைத் தாம்
பொறுப்பதோடல்லாது
எம்மை இகழ்ந்த தீவினையால்
எரியும் நரகம் வீழ்ந்து இவர்
மறுமையில் துன்புறுவாரே என
மனது இரங்குவதும்
மேலோரின் கடமையே.
பாடல் 59
மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் – கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.
மெய் வாய் கண்
மூக்கு செவி எனப்
பெயர் கொண்ட ஐம்
புலன்களை அடக்கி
அவற்றின் வழி வரும்
ஆசையைக் கலக்கமின்றி
அறவழியில் செலுத்தும்
வல்லவன் தப்பாமல்
வீடுபேறு அடைவான்.
பாடல் 60
துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் – இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.
அறிவிலார் வாழ்வில் துன்பம்
அதிகமாய் வருதல்கண்டும்
துறத்தலை நினையாதவராய்
துளியளவு இன்பம் விரும்புவர்
அறிவுடைய மேலோர்
அச்சிறு இன்பம் கிட்டும்நேரம்
ஆசை கொள்ளார் மனதில்
அதனைத் தொடரும் துன்பம்கருதி.