நாலடியார் நயம் – 7

நாங்குநேரி வாசஸ்ரீ
7. சினம் இன்மை
பாடல் 61
மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க – மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.
மதித்து நடப்பாரும் நடக்கட்டும்
மதியாது அவமதிப்பாரும் இருக்கட்டும்
அற்ப ஈயும் மிதித்து ஏறித்தலையில்
அமருதலால் அந்நிலையுணர்ந்து
சிந்திக்கும் சான்றோர் அவமதிப்போரை
சீறிச்சினந்து இருத்தல் வேண்டா.
பாடல் 62
தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ – மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.
ஓரடியும் எடுத்து வைக்க
ஒழியாத பெரு அவமதிப்பு
வந்த காலத்தும் கலங்காது
வகுத்த காரியம் நிறைவேற்றும்
மனவலிமை மிக்கார்
மிகச் சிறந்த தம் உயிரை
சிறிய இடர் வந்தகாலத்தே
சினம் பொறுக்காது விடுவரோ?
பாடல் 63
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் – ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து
நா காவாமல் வாய்திறந்து
நவிலும் சினச்சொல்
இடைவிடாது தனக்கே
இன்னலைத் தந்துவிடும்
இடையறாது ஆராய்ந்து
பொருந்திய கேள்வி அறிவைப்
பெற்ற சான்றோர் சினத்தினால்
கடுஞ்சொல் கூறார் என்பது
கற்றறிந்த மேலோரின் கருத்து.
பாடல் 64
நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் – ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.
பெரியோர் தமக்கு நிகரல்லாதார்
பழிச்சொல்லைச் சொல்லுங்கால்
மனம் புழுங்கிச் சினம் கொள்ளார்
மனதில் இருத்தி நினைத்து நினைத்து
மற்றவரிடம் பகிர்ந்து மேலும்
கோபமுற்று ஆறாது ஊரெல்லாம்
கேட்பத் துள்ளிக் குதித்துத் தூணில்
முட்டிக்கொள்வர் கீழ்மக்கள்.
பாடல் 65
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் – எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.
பொறிவழிச் செல்லா இளைஞனின்
புலனடக்கமே அடக்கம்
கொஞ்சமும் பொருள் இல்லானின்
கொடையே பயனுள்ள கொடை
பலவித எதிர்ப்புகளை வெல்லும்
பலமும் மனவுறுதியும் உடையோன்
சினம் பொறுத்தலே ஆகச்
சிறந்த பொறுமை.
பாடல் 66
கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் – ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.
கல் எறிந்ததுபோல் வரும்
கீழ்மக்கள் வாய்ச்சொல்லை
மந்திரித்து இட்ட திருநீற்றினால்
மயங்கிப் படம் அடங்கும்
பாம்பைப்போல் தங்கள்
குலப்பெருமையால் தடைபட்டு
கட்டுண்டு சினமின்றி அமைதிகாத்து
நல்வழி செல்குவர் பெரியோர்.
பாடல் 67
மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் – ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.
பகைகொண்டவராய் இருந்து
பகைமைக்கேற்ப தீச்செயல்
புரியும் ஒருவரை எதிர்த்துநின்று
பகை கொள்ளாது பொறுமைகாப்பவரின்
பண்பை இயலாமை எனப்
பகரமாட்டார் பெரியோர்
பகைவர் மனம் அடங்காது
பல துன்பம் இழைப்பினும்
பழிதீர்க்க திரும்பத் தீமைகள்
புரியாதிருத்தலே நல்லது.
பாடல் 68
நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் – அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.
கீழ்மக்கள் சினம் நெடுங்காலம்
கழியினும் தணியாது வளரும்
காய்ச்சும் பொழுது நீர்
கொண்ட வெப்பம்போல்
தானே தணிந்து குறையும்
மேன்மை மிகுந்த
மேலோர்களின் சினம்.
பாடல் 69
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் – உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.
தாம் செய்த உதவியைத்
துளியும் சிந்தியாது
தமக்குத் தீமையே செய்தாலும்
தாம் அவருக்கு நன்மையே கருதி
திரும்பவும் உதவுவார்களன்றி
தீமைசெய்தல் வானளவு புகழ்
தன்னகத்தே கொண்ட குடியில்
தோன்றியோர்க்கு இல்லை.
பாடல் 70
கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை – நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.
கோபம் கொண்ட நாய்
கடித்தாலும் தம்வாயால்
எதிர்த்துக் கடித்தவர்
எவரும் இல்லை இவ்வுலகில்
குணமில்லாக் கீழ்மக்கள்
கூறும் ஈனச்சொல்லை
மீண்டும் கூறுவரோ
மேலோர் தம் வாயால்.