ஏமாறாதே ஜாக்கிரதை!

கவியோகி வேதம்
வானவில்லின் நாணறுந்து
வர்ணமெல்லாம் மறையுதே!!
நீநினைக்கும் கடல்ஓலம்,
நிமிடத்தில் மாறுதே!!
ஞானச்சுட ர் ‘வாசல்’
நாணமின்றி ஏய்க்குதே!
கூனல் மயக்கத்தில்-அட!
குனிந்தேநீ விழுவயோ!
ஈன‘அகம்’ அகற்றிநீ
ஈசனை“உள்” பூட்டுவாய்!
சட்டிசுட்ட பின்னுமிந்தச்
சட்டையுடல் காவலா?
விட்டகுறை வினையெல்லாம்
விலகுமோ மானிடா?
சட்டுவ- விவாதத்தால்
சரியாமோ உன் ‘பாவம்’?
முட்டைவிட்டுக் குஞ்சுவரும்;
முன்மயக்கம் தீர்ந்துவிடும்!
பட்டணத்துச் சாமிவந்து
பற்றவைத்த தீயடா-(*உன்னுள்)
பத்ரகிரி மயங்கிப்போய்
பற்றுவைத்த ஓடடா!
பட்டுப்பட்டும் மாறுமோ-
பாழுமனப் பேயடா?-(உன்)
பட்டினியில், பத்தியத்தில்
பயந்திடுமோ விதி-யடா?
சாட்டைக்கோர் விதியுண்டே,
பம்பரம் சாட்சியடா!
சாதகமும் உனைப்பற்றிச்
சாற்றுவது கேளடா!
நீட்டிப் படுத்துவிட்டால்
நீயும்அங்கு நெருப்படா!(அவன்!)
நிச்சயித்து விட்டாலோ
நினக்கில்லை மண்ணடா?