நாலடியார் நயம் – 11

நாங்குநேரி வாசஸ்ரீ
11. பழவினை
பாடல் 101
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.
கூட்டமான பசுக்கள் நடுவே விட்டினும்
கன்று தன் தாய்ப் பசுவைத் தேடி
அடைதல் போல் முற்பிறப்பில்
ஆற்றிய பழவினையும் செய்தவனைத்
தேடிஅடைதலில் வல்லமையுடைத்தே. .
பாடல் 102
உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் – ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
நின்றுவீழ்ந் தக்க துடைத்து.
அழகும் இளமையும் மேன்மையான
அருஞ்செல்வமும் பலர் அஞ்சத்தக்க
பெருமதிப்பும் ஓரிடத்தில் நிலையற்று
இருப்பதைக் கண்டபின்னும்
இனியும் யாதொரு நற்செயலும்
செய்யாதவன் வாழ்க்கை, உடலெடுத்து
சில காலம் வாழ்ந்து பயனில்லாது பின்
அழிந்துபோகும் தன்மைத்தாம்.
பாடல் 103
வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம் அவரவர் ஆற்றான்
விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக்
காரெனச் செய்தாரும் இல்.
வளமுடன் சிறந்து வாழ்தலை
விரும்பாதார் எவருமில்லை இவ்வுலகில்
அளக்கப்பட்டுள்ளன அனுபவிக்கும் சுகங்கள்
ஆற்றிய நற்செயல்களுக்கேற்ப
விளாங்காயை உருண்டையாக
வார்த்தவரில்லை களாம்பழத்தைக்
கருமையுடையதாய் ஆக்கியவருமில்லை.
பாடல் 104
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்.
வந்தடையும் தீவினையைத் தடுக்கும்
வல்லமை துறவிகளிடத்தும் இல்லை
அவ்வாறே பெறத்தக்க நன்மைகளை
அடையாது தடுப்பதும் எவராலுமாகா
மழை பொழியாது வறண்டால்
மீட்டுக் கொடுப்பாருமில்லை
அதிகமாய்ப் பெய்தால்
அடக்குவாரும் இல்லைபோல.
பாடல் 105
தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை
வினைப்பயன் அல்லால் பிற.
பனையளவு உயர்ந்த
பெருமை மிக்கவரும்
தினையளவாகச் சிறுத்து
தம் கூர்மதியை உள் அடக்கி
தினந்தோறும் பெருமைகெட்டு
வாழ்வதன் காரணம் யாதெனின்
முற்பிறப்பில் செய்த தீவினைப்
பயனேயன்றி வேறெதுவுமில்லை.
பாடல் 106
பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் – கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.
உயர்ந்த நூல்களின் கேள்வியறிவால்
உற்ற பயன்பெற்றோர் இறப்பதையும்
கல்வியறிவற்றோர் நீடு வாழ்வதையும்
அறிந்துள்ளீர்கள்! காரணம்
அறிவு எனும் சாறு கல்லாதார்
அகத்தே இல்லாமையால்
அவர்களைச் சக்கை என நினைத்து
எடுத்துச் செல்வதில்லை எமன்.
பாடல் 107
இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் – அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்.
அடம்பக்கொடியின் மலர்களை
அன்னங்கள் கோதிக் கிழிக்கும்
அலைகடலின் குளிர் கரையையுடை
அரசனே! சிலர் துன்பமிகு மனத்துடன்
அனைவரும் காணும்படி பல தலைவாயில்களை
அடைந்து பிச்சைகேட்டு வருந்தும் செயல்
அனைத்தும் முற்பிறப்பில் செய்தீவினைப் பயனே.
பாடல் 108
அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடும் பட்டவை செய்தல் – வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும்.
நெய்தல்நிலத்தில் காற்று வீசுதலால்
நீண்ட கடலில் தேன் சிந்தும்
குளிர் கரையையுடை வேந்தனே!
அறிவற்றவராய் இல்லாது
அறிவுடையவராய்த் திகழ்ந்தாலும்
பழிதரும் செயல்களைச் செய்தல்
பழம்பிறப்பில் செய்தீவினையின் விளைவே.
பாடல் 109
ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும்
வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது.
எல்லையில்லாக் கடல்சூழ் உலகில்
எல்லாரும் எவ்வளவாயினும்
தீயவைகளை விரும்பார் நலம்
தரும் நன்மையையே விரும்புவர்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
வரத்தக்கவை முன்வினைப்பயனால்
வராமற் போவதில்லை.
பாடல் 110
சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு.
கரு அமைந்த காலத்தில்
கடவுளால் எழுதப்பட்ட விதிகள்
வளராது குறையாது
வரிசைமாறி வராது
துன்ப காலத்தில் ஊன்றுகோலாகி
துயர்துடைக்கவும் மாட்டா
வரவேண்டிய காலத்தே தப்பாது
வந்துசேருமெனவே மரணகாலத்தில்
மனம் வருந்துவது ஏன்?