சேக்கிழார் பாடல் நயம் – 78 (ஆயும்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
ஆயும் நுண்பொருள் ஆகியும் வெளியே
அம்பலத் துள்நின்று ஆடுவார் வெளியே
நாய கிக்கும.. தறியவோ பிரியா
நங்கை தானறி யாமையோ அறியோம்
தூய நீறுபொன் மேனியில் விளங்கத்
தூர்த்த வேடமும் தோன்றவே தியராய்
மாய வேடமே கொண்டுதம் தொண்டர்
மறாத வேடமும் காட்டுவான் வந்தார்!
பூம்புகார் நகரில் வாழ்ந்த சிவனடியாராகிய இயற்பகையாரை நோக்கி இறைவன் ஒருநாள் வந்தார். உலகில் உள்ளவர் சிவஞானத்தால் ஆராய்வதற்கு உரிய மிகுந்த நுண்பொருளாய் இருப்பவரும், தில்லை யம்பலத்திலே வெளிப்படையாய் நின்று ஆடுகின்றவரும் ஆகிய சிவபெருமான், கைலாயத்திலுள்ள உமையம்மையார் அறியாத வண்ணமோ, என்றும் பிரியாது இடப்பாகத்தில் இருக்கும் நங்கை தானே அறிந்து கொள்ளாத நிலையிலோ, நம் அறிவுக்கெட்டாத வகையில் வந்தார். அவ்வாறு வரும் அவர் திருமேனியில் தூய்மையான திருநீறு தம் பொன்போன்ற மேனியில் ஒளிவீசி விளங்க வேதியராகவும், காமவயப்பட்ட ஒரு தூர்த்தனாகத் தோன்றியும் வந்தார். அவர்தோற்றம் பிறருக்குப் புலப்படாத மாயவேடமாக விளங்கிய போதும், சிவனைடியார் மறுத்து விலக்காத உயர் தோற்றம் உடையவராக வந்தார்.
இப்பாடலில் ‘ஆயும்’ என்ற சொல், நாம் நம் ஆணவத்தால் ஆராய்வோம் என்ற நிலையில் இல்லாமல் ஆணவத்தை முற்றிலும் அடிப்படுத்தி அவன் அறிவிக்க அறிகின்றேன் – என்னும் பரஞான சிற்சத்தி ஒளியின் உதவியால் அறிகின்ற ஆராய்ச்சியை இங்கே காட்டுகிறது. இது பாசஞானத்தால் பெறாத ஆய்வைப் பசுஞானத்தால் பெறலாம் என்பதைக் குறித்தது! அவர் பிரபஞ்சப் பெருவெளியில் எங்கும் உறைந்து ஆனந்த நடனம் ஆடுகிறார்; அவரே பூம்புகார் நகரினுள் எளிய மனிதராகி, அந்தணராய்த் தூர்த்த வேடத்தில் வருகிறார். இதனை,
‘’ஆயும் நுண்பொருள் ஆகியும் வெளியே
அம்பலத்து நின்று ஆடுவார்…..
மாய வண்ணமும் கொண்டு தொண்டர்
மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்’’
என்று சேக்கிழார் பாடுகிறார். தூயதாகிய திருநீறு தமது பொன்மேனியிலே விளக்கம் பெறவும், (அதற்கு மாறாகத்) தூர்த்த வேடமும் அத்திருமேனியிலே வெளிப்படையாய்த் தோன்றவும், ஒரு வேதியராக உருவங் கொண்டு, தமது மறைப்பினிற் போந்த உருவத்தினையே மேற்கொண்டு (உலகத்தார் காண அதனைக் காட்டுதலே யன்றித்) தமது தொண்டராகிய இயற்பகையார் அடியவர் வேண்டியவை எவையேயாயினும் இல்லை யென்னாது கொடுக்கும் இயல்பினையும் காட்டும் பொருட்டு வந்தார். இதனையே திருவாசகம்,
‘’வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!’’
என்று பாடும்! சொரூப நிலையிலிருந்து தடத்த நிலைக்கு மாறும் தோற்றச் சிறப்பு இது! ஆழ்ந்து என்பது நெடுந்தோற்றம்; அகன்று என்பது பக்கத் தோற்றத்தின் விரிவு; இது சொரூபம்; நுண்மை என்பது நுட்பத்தோற்றம் இது தடத்தம்; இதனைப்
‘’பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்!
போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே ‘’
என்ற திருவாசகத்தால் அறியலாம்! நுட்பத்தை,
‘’அணுவோர் அண்டமாம் சிறுமை கொண்டு ‘’
என்ற திருவிசைப்பா காட்டும். மேலும், ’’உள்ளதன் நுணுக்கம்’’ என்ற தொல்காப்பியச் சூத்திரம் விளக்கம் பெறும். அடுத்து,
‘’அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகின், அளவில்லை‘’ என்றும்,
‘’எதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர் விட்டுள்ளன் எங்கள் சோதி!’’
என்றும் கூறப்பெறும் தேவாரத்தின் விளக்கமாகச் சேக்கிழாரே,
‘’ஓதும் எல்லை உளப்பில வாதலின் யாதும் ஆராய்ச்சி இல்லை!’’
என்று பாடுகிறார். ‘’மனம் வாக்குக்களுக்கு எட்டாததாயும் சிவஞானத்தால் அறியப்பெறுவதாயும் உள்ள நுண் பொருளேயாயினும், திருவம்பலத்தினிடத்தே தாமாக வெளிப்பட்டு எல்லா உயிர்களும் உய்யுமாறு அருட் கூத்தாடுவார்’’ என்பதை முன்னரே ‘’உலகெலாம்‘’ என்ற பாட்டில் கூறினார்.
மேலும் இப்பாட்டில் ‘’அறியோம்’’ என்ற சொல்லிற்கு, ‘இங்கு இறைவன் திருமேனி தாங்கிவரும் இயல்பினைப்பற்றி முன் ஆயுநுண் பொருளாகியும் என்றதற்கேற்ப ஒர் ஆராய்ச்சி செய்கின்றார். இவர் திருமேனி தாங்கி வருவதில் ஒன்றற்கொன்று மாறுபட்ட இவ்விரண்டியல்புகள் காணப் பெறுகின்றன; ஆயுநுண் பொருளாவார வெளியே யாடுவாருமாயினர்; ஓருருவு மில்லார் ஒரு வேடங் கொண்டார். தூர்த்த வேடமுடைய பொன்மேனியில் தூய நீறும் விளங்கிற்று; இவர்தாம் இவ்வாறு வருங்கால் தமது பங்குடைய உமையம்மையார் அறிய வந்தனரோ? அன்றி அறியாமை வந்தனரோ? எனின் அறிய வருவாராயின், இவர் இங்குப் பிறர் மனைவியாரை வேண்டிச் செல்வதற்கு அவர் உடன்பட்டிரார் அவர் அறியாது வந்தாரெனின் உடன் பிரியாது இருப்பாராதலின் அஃதுமியலாது; ஆதலின் இதனை இன்னவாறெனத் துணிய அறியோம் என்று பொருள் காணலாம்.
வெளிப்படையாக அருளும் சத்தியும், மறைப்பாகிய திரோதான சத்தியும் ஒருங்கே தொழிற்பட்டன என்ற கருத்தால் இவ்வாறு கூறப்பெற்றது போலும்! நாயனார் இயற்பகையாராயினமையால் தாமும் தமது இயலுக்கு மாறாக இத்தன்மையில் வெளிப்பட்டு அருளினர் என இங்கு நினைவு கூர்ந்தவாறாம்.
மேலும் திருநீறணிந்த தோற்றமும் தூர்த்த வேடமும் வெவ்வேறாய் இருப்பதன் நுட்பம் ஆராய்வதற்கு உரியது! தூய நீறு “சுத்தம தாவது நீறு“ என்றவாறு தான் தூய்மையுடையதாகும். அதனோடு யாவற்றையும் தூய்மை செய்வதுமாம். திருநீறு தம் சார்ந்த மேனியைத் தூய்மை செய்வது. ஆதலால் அடியவரின் தூய மனம் அவர் வடிவத்தையு மறுக்காமல் ஏற்றுக் கொண்டது.
அதனோடு அதற்கு மாறாகத் தூயதல்லாத தூர்த்த வேடமும் ஒருங்கே காணஅதாவது, பிறனில் விழைவோன் செய்யும் காமந்தோன்றும் அடையாளங்கள் விளங்கும் கோலத்துடன் அதாவது நகக்குறி, பற்குறி, மஞ்சட்பூச்சுக்குறி ஆகியவற்றுடன் வந்தார். காமவசப்பட்ட இயல்புடன் இழிந்த செயல் செய்பவனாய்த் தூர்த்த வேடத்தில் இருக்கும் இழிபினைப் போக்க அதற்குப் பரிகாரமாக அந்த மேனியிலே நீறு அணிந்ததுபோல என்ற குறிப்புமாம். மேலும் வேதியராய் விளங்கியதையும் குறிப்பிடும் திறம் உணர்ந்து கொள்ளுதற்குரியது.
அடுத்து இப்பாடலில் ‘’மாய வண்ணமும், மறாத வண்ணமும்‘’ என்ற தொடர்கள், பிறர் அறிய இயலாதபடித் தம்மை மறைத்துக் கொண்ட இவ்வுருவந் தாங்கிக்கொண்டு அதனைக் காட்டுதலேயன்றி, வேண்டும் யாவையும் இல்லை யென்னாதே முன் கொடுக்கும் இயல்பினையும். தமது மாயை வண்ணத்தைக் காட்டுதலேயன்றி, அடியார் மறாத வண்ணத்தையும் கொண்டு வந்தார்.
இறைவன் தம் அருள் விளையாட்டில் காட்டும் தோற்ற மாற்றங்களை மிகவும் நுட்ப்பமாகப் புலப்படுத்தும் இப்பாடல், சேக்கிழாரின் பாடல் நயத்தை விளக்குகிறது.