ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 10

மீ. விசுவநாதன்
“பக்தர்களின் பிராத்தனை”
சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள்
சுருண்டு தவித்த காலம்
மொட்டுக்கள் மலர்கள் எல்லாம்
மௌனம் காத்த நேரம்
சிட்டுக்கள் பெரியோர்கள் கூடி
சிருங்க கிரியின் யோகி
பட்டுத்தாள் பணிந்த ழைக்க
பாரதீதீர் தருமே வந்தார்! (91)
வான்மழை வேண்டும்; மக்கள்
மனங்குளிர வேண்டும்; பூஜை
தேன்மலர்ச் சோலை வேண்டும்;
தெய்வப்பெண் மீனாள் ஆட்சி
தானெனும் சிறப்பு வேண்டும்;
தவத்தோராம் பாதம் பட்டு
நானெனும் அகந்தை நீங்கி
நல்மதுரை வாழ வேண்டும்! (92)
மக்களின் பிராத்தனை கேட்டு
மகானும் வழியைச் சொன்னார்!
தக்கதோர் பூஜையும் செய்தார்;
தட்டா வானம் கொட்ட
திக்கெலாம் நீரது பாய
தெரிந்த பச்சை எங்கும்
தக்கதோர் செழிப்பினைக் காட்ட
தரணி மகிழ்ந்த தம்மா! (93)
“அன்னை ஸ்ரீ மீனாட்சி தரிசனம்”
மீனாட்சி சுந்தரர் பார்த்து
முறையாய் தியானம் செய்தார்!
ஆனாலும் அவருளே உள்ள
அன்பு சிவமே பொங்கும்
தேனாக எதிரிலே நிற்கும்
தெய்வக் காட்சி என்று
வானோர்கள் மெச்சிடும் யோகி
வணங்கி வலமும் வந்தார்! (94)
“சொன்னபடி வாழும் யோகி”
சொன்னால் செய்வார்; தானே
சொன்ன வண்ணம் வாழ்வார்!
தன்னால் முடியு மென்ற
தலைக்க னமிலாப் பண்பால்
பின்னால் வரும்நல் வம்சம்
பிழைக்கே ஆளா காமல்
முன்னோர் சென்ற பாதை
முறையைப் போற்றி நிற்பார்! (95)
“கற்றோரை விரும்பும் துறவி”
தெரியா விபரம் தன்னை
தெரிவிக்கும் மனிதர் முன்னே
சரியாய்ச் செவிகள் தீட்டி
தம்முள்ளே வாங்கிக் கொள்வார்!
விரிவாய் விளக்கம் சொல்லும்
வித்வத்மா சபையோர்க் கெல்லாம்
அரிதாய்ப் பொருள் சொல்லி
ஆன்றோரை மகிழ வைப்பார்! (96)
“குழந்தைகளின் உமாச்சித் தாத்தா”
இந்தா மாம்பழ மென்று
எதிரே குழந்தை கையில்
பந்தா இன்றியே கொஞ்சி
பச்சை மனத்தை எல்லாம்
சொந்த மாக்கிடச் செய்வார்
சூர்ய ஒளிபோல் தூயர்!
இந்த பாரதீ தீர்த்தர்
என்று சொல்லு வேனே ! (97)
“அன்பே சிவமானவர்”
அன்ன சாலை கட்டி
அனைவரும் உண்ணச் செய்வார்!
இன்னும் இன்னும் என்று
எளியரும் கல்வி கற்கத்
தன்னால் ஆன மட்டும்
தரமுடை பாட சாலை
நன்றாய் ஏற்ப டுத்தி
நன்மையை ஓங்க வைப்பார்! (98)
மாணவ மணிகள் வந்தால்
மந்திரம் சொல்லச் சொல்வார்!
நாணமும் , பக்தி யோடும்
மடமட வென்று கூறி
ஆணவ மற்று நிற்கும்
அழுக்கிலா குழந்தை யர்க்கு
பாணதீர்த் தத்தின் நீராய்
பாரதீ தீர்த்தர் காப்பார் ! (99)
“மௌனம்”
நதிநீ ராடல் இன்பம்;
நல்லோர் நட்பு இன்பம்;
உதிக்கும் கதிரோன் இன்பம்;
உண்மை ஒளியே இன்பம்;
விதியைப் பார்த்துக் கேலி
செய்யும் துறவி கொண்ட
மதியின் தெளிவு இன்பம்;
மௌனம் மேலாம் இன்பம்! (100)
(ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை முதல் பாகம் நிறைந்தது)