Blog

  • பூட்டிய இதயங்களுக்குள் புகுந்து வா!

    பூட்டிய இதயங்களுக்குள் புகுந்து வா!

    ராதா விஸ்வநாதன்

    அன்பே….
    எத்தனை பெயர்கள் உனக்கு
    நீ இருக்குமிடமே சொர்க்கம்
    மண்ணுக்குள் வளம்
    மலருக்குள் வாசம்
    மேகத்துக்குள் நீர்
    பெண்மைக்குள் தாய்மை
    உறவுக்குள் நட்பு
    தேசத்தின்பால் கடமை
    இறையைக் காண பக்தி
    இறை காட்டுவது கருணை

    அன்பே …
    எத்தனை பெயர்கள் உனக்கு
    இருப்பிடத்திற்குத்
    தகுந்தாற்போல்..

    நீ இருந்தால்
    சுழலும் உலகம்
    உடலும் உழைக்கும்
    உயிர்கள் வாழும்
    பூக்களும் பூக்கும்
    பூக்கள் மட்டுமில்லை
    மனங்களும் தான்
    அமைதியின் வாசத்துடன்

    உன் ஆளுகையில்
    பருவங்கள் பொய்ப்பதில்லை
    கோடையின் விடுமுறையில்
    வசந்தங்கள் வருகின்றன
    உன் அரவணைப்பில்
    எல்லைகள் அழிகின்றன
    வேரற்று வீழ்கிறது
    வேற்றுமையும்…..

    நீ மறைந்தால்
    எங்கும் முளைக்கும்  கல்லறை
    காளான்களைப் போல்
    கருவறையும் கல்லறையாகும்
    கங்கையும் வண்டுவிடும்
    அன்புக்கு விலை பேசுவது
    மனிதனின் இயல்பு
    உன் இயல்பினை
    என்றும் மறந்து விடாதே
    எதிர்பார்ப்பு இல்லாமல்
    பூட்டிய இதயங்களைத்
    திறந்து புகுந்து விடு

    Share
  • திருக்காட்சித் திருவிழா

    திருக்காட்சித் திருவிழா

    ரகுதேவன்

    இயற்கையில் அங்கங்கொண்ட நானும்
    எம்புறச் சேரிகளும் –
    வன்முறையால் சூறையாடப்பட்டுக் கிடக்கிறோம் – இதோ
    என் உடலிலும் இதயத்திலுமுள்ள
    காயங்களைப் பாருங்கள் – இவையெல்லாம்
    உன்னால் ஏற்பட்டவை
    காயங்கள் சில ஆறி வடுவாகியிருக்கின்றன
    புண்கள் சில ஆறாமல் கொந்தி சீல்பிடித்து
    நெரியேறி ரணமாகியிருக்கிறது – இந்த
    உணர்வுப் படையலேந்தி எல்லாக் காலத்திலும்
    ஆகக் கடைசியிலிருக்கும் எம்மை உம் முன்கொணர
    நீதியின் நல்நிமித்தம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
    நம்பிக்கை எம்மில் ஆழப் பதிந்து
    ஆத்தும நங்கூரமாய் இருக்கிறது – எம்
    ஆவேசப் பெருவெறுப்பைத் தணித்து – உம்
    வாதை எமை இனி நெருங்காதிருக்க
    வாழ்வளிக்கும் வார்த்தையைக் கண்ணால் கண்டோம்
    தொட்டுணர்ந்தோம் சுவாசிக்கப் போகிறோம்
    பகல் மறுத்த சமூகமானதால் – இப்பொழுதும்
    இருளோடு இருளாய் மறைந்து வாழ்கிறோம்
    காடோடிக் குடிகளென – அதோ
    நீல வான்வெளியில் விண்மீன் எழுந்து திசைகாட்டி வழிநடத்த
    தேடிக் கண்டடைந்தோம்
    விடுதலை என்னும் மறைபொருளை
    இந்நற்செய்தி அறிவிப்பை
    திருக்காட்சித் திருவிழாவெனக் கொண்டாடப் போகிறோம்
    வாருங்கள் திருவிருந்து உண்ண
    உன்னில் கீழானவனென்று இனியும் எனை ஒதுக்காமல்
    என் இல்லத்திற்கு அன்புள்ளத்தோடு

    Share
  • குறளின் கதிர்களாய்…(283)

    குறளின் கதிர்களாய்…(283)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்… (283)

    ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
    சொல்லாடார் சோர விடல்.
    – திருக்குறள் -818(தீ நட்பு)

    புதுக் கவிதையில்…

    செய்ய முடிந்த செயலை
    செய்ய இயலாதவாறு
    கெடுப்பவர் உறவை,
    சொல்லாமலே அவர்
    சோர்வுறுமாறு
    கைவிடல் வேண்டும்…!

    குறும்பாவில்…

    இயன்ற செயலைச் செய்ய
    இயலாதவாறு கெடுப்போர் நட்புறவை
    இல்லாமலாக்கிடவேண்டும் சொல்லாமலே…!

    மரபுக் கவிதையில்…

     செய்திட இயன்ற செயலதுவைச்
    செய்ய இயலா வகையினிலே
    மெய்யாய்க் கெடுப்பவர் உறவதுதான்
    முறைய தில்லாத் தீநட்பே,
    பொய்மை மிக்க இவருறவைப்
    போற்றிக் காப்பது நன்றன்று,
    உய்யும் வழியாய் அவர்சோர
    உறவதை உதறிடு உரையாதே…!

    லிமரைக்கூ..

    தீநட்பு கண்டே பதறிடு,
    செயலாற்ற இயலாமல் கெடுப்பவர் உறவைச்
    சொல்லாமலே அவர்சோர உதறிடு…!

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம்
    தீய நட்பு வேண்டாம்,
    கெட்டவன் கூட நட்பு
    வேண்டவே வேண்டாம்..

    நம்மால செய்யமுடிஞ்சதச்
    செய்யமுடியாமக் கெடுக்கிற
    கெட்டவனோட ஒறவு
    கட்டாயமா வேண்டாம்..

    சொல்லாமக் கொள்ளாம
    அவன் அசரும்படியா
    அந்த ஒறவேயில்லாம
    அறுத்து விட்டுடணும்..

    அதால
    வேண்டாம் வேண்டாம்
    தீய நட்பு வேண்டாம்,
    கெட்டவன் கூட நட்பு
    வேண்டவே வேண்டாம்…!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 99

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 99

    நாங்குநேரி வாசஸ்ரீ

    99. சான்றாண்மை

    குறள் 981

    கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
    சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

    நாம செய்ய வேண்டிய கடம இதுனு உணந்துகிட்டு அத நல்ல மொறையில செய்ய மொனையுத எல்லா முயற்சியையும் நல்ல கடமனு சொல்லுதாங்க.

    குறள் 982

    குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
    எந்நலத் துள்ளதூஉ மன்று

    நல்ல கொணம் ஒண்ணுதான் படிச்ச பெருமக்களுக்கு அழகு. மத்த எதுவும் அழகோட சேத்தியில்ல.

    குறள் 983

    அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
    டைந்துசால் பூன்றிய தூண்

    நேசமா இருக்கது, பொல்லாப்புக்கு பயப்படுதது, ஒழுக்கமா இருக்கது, இரக்கமா இருக்கது,  உண்மையே பேசுதது இந்த அஞ்சும் சான்றாண்மையத் தாங்குத தூண்கள் ஆவும்.

    குறள் 984

    கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
    சொல்லா நலத்தது சால்பு

    நோன்புங்கது மத்த உசிரக் கொல்லாம இருக்கத அடிப்படையாக் கொண்டது. பொறத்தியாரப்பத்தி எப்பமும் கொற பேசாம இருக்குத கொணத்தக் குறிக்குதது  சால்பு.

    குறள் 985

    ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
    மாற்றாரை மாற்றும் படை

    தெறமசாலியோட தெறமங்கது பணிஞ்சு நடக்குத கொணம். அதுவே பகையாளியோட பகைய மாத்துத சாதனமா பெருமக்களுக்கு அமைஞ்சுக்கிடும்.

    குறள் 986

    சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
    துலையல்லார் கண்ணும் கொளல்

    ஒருத்தரோட மேன்மைக்கு உரைகல் எதுன்னா தனக்கு சமமில்லாத சின்னவுககிட்ட கூட தோல்விய ஒத்துக்கிடதுதான்.

    குறள் 987

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு

    தனக்கு தீம செஞ்சவுகளுக்கும் நன்ம செய்யாம விட்டுப்போட்டோம்னா சான்றாண்மைங்குத நல்ல கொணம் இருந்தும் என்ன பிரயோசனம்?

    குறள் 988

    இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
    திண்மையுண் டாகப் பெறின்

    சால்பு (நிறைவு)ங்குத மனவலிம ஒருத்தங்கிட்ட இருந்திச்சுன்னா பொருளில்லாமப் போகுத ஏழ்ம அவனுக்கு தாழ்ச்சி ஆவாது.

    குறள் 989

    ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
    காழி யெனப்படு வார்

    தனக்குரிய கடமையக் கண்ணியமாச் செய்யுத பெருமக்க எல்லாக் கடலும் தடம் புரண்டு போவுத ஊழிக்காலத்துல கூட தன் நெல மாறாம இருப்பாக.

    குறள் 990

    சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
    தாங்காது மன்னோ பொறை

    பெருமக்களோட நல்ல கொணம் கொறையத் தொடங்கிச்சின்னா இந்தப் பெரிய ஒலகத்தால  பாரத்தத் தாங்க முடியாமப் போவும்.

    Share
  • புரட்சித் துறவி

    புரட்சித் துறவி

    அண்ணாகண்ணன்

    ஞானகுரு யோகவுரு ஞாலவொளி யானதிரு
    வானமதி பூணுறுதி வையநிதி – தேனமுது!
    புத்தெழுச்சி யூட்டு புரட்சித் துறவிநரேன்
    சித்தெழுச்சி யூட்டு சிவம்!

    (சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஆண்டினை முன்னிட்டு எழுதியது)

    Share
  • மந்திரத் திருவடி

    மந்திரத் திருவடி

    மரபின் மைந்தன் முத்தையா  

    வணங்கா முடியும்
    வணங்கும் திருவடி
    இணங்கா அசுரரும்
    இணையும் மலரடி
    துணங்கை வென்று
    துலங்கும் கழலடி
    குணங்கள் கடந்த
    கயிலைச் சிவனடி

    வேதப் பொருளென
    விளங்கும் திருவடி
    ஆதிச் சுடர் என
    ஆடும் கழலடி
    நாதமும் தாளமும்
    நாடும் மலரடி
    மாதொருபாகன்
    மந்திரத் திருவடி

    சித்தர்கள் தேடிச்
    செல்லும் திருவடி
    பக்தர்கள் அஞ்சிப்
    புல்லும் திருவடி
    சத்திய ஞானியர்
    சொல்லும் திருவடி
    வித்தகன் சிவனின்
    வெல்லும் திருவடி

    தென்னாடுடைய
    தெய்வக் கழலடி
    எந்நாட்டவரும்
    எண்ணும் திருவடி
    பொன் கைலாயம்
    பொருந்தும் பொன்னடி
    தென் கைலாயம்
    தோயும் மலரடி

    Share
  • ஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’

    ஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’

    ஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’  

    ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ – நமது பாரம்பரிய கலை, இசை, கலாச்சார வடிவங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் ஒரு முற்றிலும் புதுமையான கூட்டு முயற்சி.

    கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது கால அடைவுகளுக்கு அப்பாற்பட்டது; அத்தகைய ஒரு பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும்  பாதுகாத்துப் பராமரிக்கும் ஒரு புதிய, புதுமையான கூட்டு முயற்சியாக ‘தa பியூச்சர்ஸ்’ உருவாகி இருக்கிறது.

    இந்த பிரமிப்பூட்டும் மகத்தான முயற்சியில், அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் – இசை விஞ்ஞானி ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் உலகின் மிக முக்கியமான இசை கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட எம்ஐடியின் புகழ்பெற்ற ஊடக ஆய்வகத்தின் இசையமைப்பாளர் – இசை விஞ்ஞானி டோட் மக்கோவர், மற்றும் காலத்தால் அழியாத தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட ‘பெரிய எண்ணங்களின் பாதுகாவலர்’, ஆகச்சிறந்த இயக்குநர் பரத் பாலா, ஜே ஜெயராமன் ஆகியோர் இணைந்து எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை உங்களிடம் கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் பேசும் போது, ‘கிராமீய இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை எனப் பல வடிவங்களைத் இசை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இவையனைத்திற்கும் அப்பாற்பட்டு, இசை மக்களாகிய உங்களிடம் இருந்தே உருவாகிறது. நமது சமூக ஒலிகளே, கலைகளே ஒரு விதமான இசையாகிறது. சென்னைவாசிகள், தமிழர்கள் ஏன் இந்தியர்கள், இசையையும் கலையையும் அனுபவிக்கும் முறையை மாற்றுவதற்காகவும், புதிய கனவுகள், புதிய சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைத் தூண்டுவதற்கும், சாத்தியப்படுத்துவதற்கும் இசையை ஒரு புதிய பரிமாணத்தில் அனுபவிக்கவும் உங்களது கற்பனையைத் தூண்ட விரும்புகிறோம். ‘தா’ என்பது தாய், தமிழ், தந்தை, தர்மம் என பல விஷயங்களுக்கு ஒரு அடையாளச் சின்னமாகத் திகழ்வதாகவும், அது இந்த பெரிய முயற்சிக்கு ஒரு சிறிய விதையாக அமைவதாகவும் குறிப்பிட்டார். இந்த முயற்சி, டோட் மக்கோவரின் ‘சிட்டி சிம்போனி’ பாணியில் உருவாக இருப்பதால், மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பங்களிப்பை வழங்கலாம் என்றும் அது குறித்த விபரங்கள் வெகு விரைவில் இணையத்தளத்தில் வெளியிடப்படும்” என்றார்.

     

    அடுத்ததாக, இயக்குநர் பரத் பாலா, ““கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது காலமற்றது; நான் அத்தகைய ஒரு கலாச்சாரம் கொண்ட பாரம்பரியமான தமிழகத்தின் மகன்; உலகில் நான் எங்கிருந்தாலும், அதை என் உணர்வுகளில், நரம்புகளில் உணர்கிறேன். நாங்கள் அதை எங்கள் பிறப்பிலிருந்து கற்றுக்கொள்கிறோம். எங்கள் தாயின் தாலாட்டிலிருந்து கற்றுக்கொள்கிறோம். அது நாங்கள் வளரும் போது காணும் காட்சிகள் மற்றும் ஒலிகளின் மூலமாக எங்கள் ஆன்மாவுக்குள் நுழைகிறது. எங்களை இறுதியாக வழியனுப்பும் பாடல்கள் வரை, எங்களது கடைசி மூச்சு வரை அது எம்மிடமே நிலைத்து இருக்கிறது. அன்றாட மக்களின் குரல்களிலிருந்து, வீதிகளின் நாதங்களிலிருந்து, பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் வரை அனைத்துமே எங்கள் அடையாளம். ஒலி, ஒளி, நாடகம் என எந்த ஊடகமாக இருப்பினும், உயிர்ப்பித்தல் என்பது எங்கள் தமிழ் ஒலியின்  கலாச்சாரம். இது தவிர்க்க முடியாதது” என்றார்.

    இந்த கூட்டு முயற்சியில் பங்கேற்றுள்ள மற்றோர் இசையமைப்பாளர் – இசை விஞ்ஞானி டோட் மக்கோவர், “இந்தியாவின் தொன்மையான கலாச்சாரம், அழுத்தமான கருத்துகள், ஒலிகள் மற்றும் இசை தனக்குள் மாணவப் பருவத்திலேயே ஒரு பெரிய உத்வேகத்தை உருவாக்கியதாகவும், இந்தப் பண்டைய பாரம்பரியத்தின் ஊற்றுக்கண்ணாக வெடித்துக் கிளம்பும் படைப்பாற்றலை, வேறு எங்கும் இல்லாத அளவிற்கு எதிர்கால ஆற்றலுடன் இணைக்கின்ற இந்தப் புதுமை முயற்சியில் தானும் இடம்பெறுவது தனக்கு பெருமகிழ்ச்சியாகவும், பெருமிதம் சேர்ப்பதாகவும் அமைந்திருக்கிறது” என்றார்.

    இது குறித்து ஜே ஜெயராமன் பேசும் போது, “நம்முடைய அழகான, அர்த்தமுள்ள இசையின் மூலம் எதிர்காலத்தைக் கற்பனை செய்துகொள்வது; காவிரி புகும் பட்டினம் முதல் சென்னை முதல் கேம்பிரிட்ஜ் வரை, இந்தப் பூமியின் மைந்தர்களாகிய நம்மை, நமது நம்பிக்கைகள், அபிலாஷைகள், ஆற்றல் மற்றும் குரல் ஆகியவற்றின் சாரத்தை வெளிப்படுத்தும் இசைபை, பெருமையுடன் பங்கேற்பதன் மூலம் உருவாக்க, ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    மேலும் புத்திசாலித்தனமான மூன்று பேருடன் ஒன்றிணைந்து, தனித்துவமான மற்றும் தனியாகச் செய்ய முடியாத இந்த நுட்பமான பணியில், படைப்பின் வெளிப்பாட்டை, உங்களைப் போலவே நானும் அறிய ஆர்வமாக இருக்கிறேன். அதுவே நமக்குள் இருக்கும் சக்தியைக் கட்டவிழ்த்துவிட வேண்டுகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து இந்த முயற்சிக்குக் கை கொடுப்போம்” என்றார்.

    Share
  • 83 – கபில் தேவின் வாழ்க்கைத் திரைப்படம்

    83 – கபில் தேவின் வாழ்க்கைத் திரைப்படம்

    சுரேஷ் ரங்கநாதன்

    இந்திய கிரிக்கெட் அணியின்  புகழ்மிக்க முன்னாள் தலைவர் கபில் தேவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ’83’ என்ற தலைப்பில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. கான், விஷ்ணு வர்தன் இந்தூரி, மது மந்தனா, தீபிகா படுகோனே, சஜித் நதியாத்வாலா ஆகியோரது கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தைக் கபீர் கான் இயக்கியுள்ளார். கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார்.

    படத்தில் தீபிகா படுகோனே, தஹிர் ராஜ் பாசின், சாகிப் சலீம், ஹார்டி சந்தூ, அம்மி விர்க், அமிர்தா பூரி, பங்கஜ் திரிபாதி, போமன் இரானி, சாஹில் கட்டர் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.

    கபில் தேவ் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது முதல், 1983ஆம் ஆண்டு  உலகக் கோப்பையை வென்றது வரை உள்ளடங்கிய அவரது வாழ்க்கைப் பயணத்தை, இப்படம் விவரிக்கிறது.

    படத்தின் முதல் படப்பிடிப்பு, இங்கிலாந்தில் தொடங்கியது. அக்டோபர் 2019இல் படம் முழுவதுமாக எடுத்து முடிக்கப்பட்டது. இந்நிலையில், 2020 ஏப்ரல் மாதத்தில் இத்திரைப்படம், திரைக்கு வருகிறது.

    இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், தமிழிலும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

    Share
  • எனக்குரைத்தல்!

    எனக்குரைத்தல்!

    ஏறன் சிவா

    உண்மை நெஞ்சம்
    உடையோ ருக்கே
    உயரம் தாழுக முடியே!

    கண்ணின் பார்வை
    கலையும் வரையும்
    நூலே தேடுக விழியே!

    வன்சொல் ஒழித்துன்
    வழியே நல்ல
    சொல்லே அனுப்புக செவியே!

    என்றும் “முடியும்”
    என்றே மூச்சுக்
    காற்றில் எழுதுக துளையே!

    அன்பு,  அமைதி
    அதிகம் ஓதி
    இன்பம் பருகுக இதழே!

    திண்மை கொண்டு
    தீயோர் தன்னைத்
    தீயில் அனுப்பு! தோள் திடமே!

    வன்மை இருக்கும்
    வரையில் எழுதும்
    கோலை ஏந்துக விரலே!

    நன்மை செய்யும்
    நோக்கங் கொண்ட
    நல்லோர்க் குதவுக கரமே!

    துன்பம் கண்டு
    துவண்டோர் தமையே
    தூக்க விரைக! கால் தசையே!

    எண்ணத் தூய்மை
    எழுவோ ரிடையே
    எண்ணம் செலுத்துக உணர்வே!

    மண்ணில் உடலோ
    மாய்ந்த பின்னும்
    தமிழே தாங்குக உயிரே!

    என்றும் இதனை
    இதயம் வைத்தே
    விலகா தொழுகுக உளமே!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 98

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 98

    நாங்குநேரி வாசஸ்ரீ

    98. பெருமை

    குறள் 971

    ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
    கஃதிறந்து வாழ்தும் எனல்

    ஒருத்தனோட வாழ்க்கைக்கு ஒளி தருதது மன உற்சாகம். அவனுக்கு தாழ்ச்சி உற்சாகம் இல்லாம வாழுவேன் னு நெனைக்கதுதான்.

    குறள் 972

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்

    எல்லா மக்களும் பொறப்பால சமம் தான். அவுக செய்யுத தொழிலில் காட்டுத தெறமியில இருக்க ஒசத்தி தாழ்ச்சியால மட்டுந்தான் வேறுபடுதாங்க.

    குறள் 973

    மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழல் லவர்

    கொணங்கெட்டவுக ஒசந்த பதவியில இருந்தாலும் நல்லவுகளா மதியப்பட மாட்டாக. ஆக்கங்கெட்ட காரியத்த செய்யாத நல்லவுக சின்ன பதவியில இருந்தாலும் ஒசந்தவுக தான்.

    குறள் 974

    ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

    ஒருத்தன் தன்னயத்தானே காத்துக்கிட்டு வாழ்ந்தாம்னா கற்போட வாழுத பத்தினிக்குரிய அத்தன பெருமயும் அவனுக்கும் கெடைக்கும்.

    குறள் 975

    பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை யுடைய செயல்

    எந்த நெருக்கடியிலயும் மத்தவுகளால செய்ய ஏலாத காரியத்த அதுக்குண்டான வழிமொறையில செஞ்சு முடிக்குத தெறம இருக்கவுக பெருமயானவங்க.

    குறள் 976

    சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
    பேணிக்கொள் வேமென்னும் நோக்கு

    பெருமக்களப் போற்றி ஏத்துக்கிடணும் ங்குத நெனப்பு அவுகளோட சிறப்ப புரிஞ்சிக்கிடாத சின்னவுக மனசுக்குள்ளார இருக்காது.

    குறள் 977

    இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்
    சீரல் லவர்கண் படின்

    தாழ்ச்சியான கொணம் இருக்கவன்கிட்ட பணம், படிப்பு, பதவி ங்குத சிறப்புநிலை சேந்துச்சின்னா அவன் அகராதி புடிச்சி வரம்புகெட்டு அலையுதது நிச்சயம்.

    குறள் 978

    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து

    கொணமுள்ள பெரிய மனுசங்க எல்லார்கிட்டயும் பணிஞ்சு நடப்பாக. கொணங்கெட்டவுக மண்டக்கனம் புடிச்சி தன் பெருமய தம்பட்டம் அடிச்சிட்டுத் திரிவாக.

    குறள் 979

    பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல்

    பெருமைங்கது மண்டக்கனம் இல்லாம அடக்கமா வாழுத கொணம். சிறுமைங்கது மண்டக்கனம் புடிச்சி அதோட எல்லைக்கே போயி திமிரா திரியுதது.

    குறள் 980

    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்

    பொறத்தியாரப்பத்தி பாடு பேசாம கொறைய மறைக்கது பெரும. அவுகளப் பத்தி எப்பமும் கொற சொல்லி பொறளி பேசுதது சிறும.

    Share
  • ஒரே நாளில் இரு நிகழ்வுகள்

    ஒரே நாளில் இரு நிகழ்வுகள்

    அண்ணாகண்ணன்

    ஒரே நாளில் இரு நிகழ்வுகளில் பங்கேற்றுப் பேசுகிறேன்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 240

    படக்கவிதைப் போட்டி – 240

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கோபி ஷங்கர் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (12.01.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 239-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 239-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    மர்க்கடங்கள் மார்புறத்தழுவி பாசம் பகிரும் அரிய காட்சியைத் தன் புகைப்படக் கருவியில் அள்ளிவந்திருக்கிறார் திரு. முபாரக் அலி மக்கீன். கவிதையெழுத இனிய படமிது என்று இதனைப் படக்கவிதைப் போட்டி 239க்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றிக்கு உரியவர்கள்!

    மனிதர்களிடம் காணப்படும் பல குணநலன்களை நாம் குரங்குகளிடத்தும் காணலாம். அதனால்தான் நம் சங்க இலக்கிய நூல்கள், மனித வாழ்வியலைக் குரங்குகளைக் கொண்டு பல பாடல்களில் விளக்கியிருக்கின்றன. அதில் ஒன்றுதான் கடுவன்(ஆண்குரங்கு) இறந்ததும் கைம்மைத் துயருற்ற மந்தியொன்று (பெண்குரங்கு) தன் பறழை (குட்டி) சுற்றத்திடம் ஒப்படைத்துவிட்டு மலையிலிருந்து பாய்ந்து உயிர்விடுவதாகக் கற்பனை நயந்தோன்ற அமைந்துள்ள கடுந்தோட் கரவீரனாரின் குறுந்தொகைப் பாடல்!

    கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
    கைம்மை உய்யாக் காமர் மந்தி
    கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
    ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
    சாரல் நாட நடுநாள்
    வாரல் வாழியோ வருந்துதும் யாமே.  (குறுந்: 69)

    இனி, போட்டிக்குத் தரப்பட்டுள்ள இவ்வுணர்வுபூர்வமான படத்துக்குப் பொருத்தமான கவிதையெழுதக் கவிஞர்களை அழைக்கின்றேன்.

    *****

    ”தாயன்பு காட்டுவதில் தரணிவாழ் உயிர்கள் அனைத்தும் சிறந்திருக்க, தாய்க்குத் திருப்பிச்செலுத்தவேண்டிய அன்பில் மனிதன் மட்டும் சுருக்கமுடையவனாகின்றான்; அதன் விளைவன்றோ முதியோர் இல்லங்களின் பெருக்கம்!” என வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மனிதன் மட்டும்…

    சின்னஞ் சிறிய பறவைமுதல்
    சிறப்பாய் விளங்கும் மனிதன்வரை,
    அன்னையின் அன்பு மாறுவதில்லை
    அதற்கிணை உலகில் எதுவுமில்லை,
    சின்னக் குரங்கை மடிசுமக்கும்
    சிறந்த பாசக் குரங்கினத்தின்
    பின்னால் வந்த மனிதனவன்
    பிழைதான் முதியோர் இல்லமதே…!

    *****

    தமக்கைக் குரங்கு தம்பியின் முரட்டுத்தனம் பற்றித் தாய்க்குரங்கிடம் முறையிட, தாயோ… ”மகளே! கடவுளை நம்பு; வேண்டாம் வீண் வம்பு” என்று சமாதானம் செய்ய, தமக்கைக் குரங்கோ, ”தம்பியைச் சமாளிக்க எனக்குக் கைகள் இருக்கின்றன; கடவுள் நம்பிக்கை தேவையில்லை!” என்று சொல்வதாகச் சுவையான நாடகத்தைத் தம் கவிதையில் அரங்கேற்றியிருக்கிறார் திரு. சித்தி கருணானந்தராஜா.

    குட்டியின் குமுறல்-

    அம்மா எனக்கு அடிக்கிறான் தம்பி
    சும்மா நானிருந்தாலும் சுரண்டித் தனகுகிறான்
    கிட்ட வந்து என் முதுகில் கிள்ளுகிறான் – நான் திரும்ப
    எட்டி அறைகின்றான், எனக்கும் வரும் கோபம்.
    சின்னக் குழந்தையென்று சினக்காதிருந்தாலும்
    என்னையவன் சீண்டி எனைக் கோபம் மூட்டுகிறான்
    அம்மா அவனுக்கு அறிவுரை சொல் அல்லவெனில்
    நானும் அடிப்பேன் நகத்தாலே பேர்த்திடுவேன்.

    தாய் பதில் –
    வேண்டாம் மகளே வீணான சச்சரவு
    கடவுள் இருக்கின்றார் காத்திடுவார் உன்னை.
    எத்தனை கோடி உயிர்கள் இருந்தாலும்
    எல்லாரையும் காப்போன் ஏக இறைவன்தான்
    காக்கும் கடவுளுனைக் கண்ணெடுத்து ஓர் போதும்
    நோக்காது விடமாட்டார் நொந்தவரைக் காக்கின்ற
    ஆயிரம் கண்ணுடைய ஆண்டவனே எப்போதும்
    தாயினும் மேலாய்த் தயை புரிவான் சகித்துக்கொள்.

    குட்டி
    அம்மா எனக்கிப்போ அவசரமாய் வேண்டுவது
    இம்மா துயரில் இருந்து விடுதலையே
    ஆண்டவன் வருவானா அப்பாவி எனைக்காக்க?
    என் கையே எனக்குதவி இனிப் பொறுப்பதில்லையம்மா
    மானிடர்களின் பொறுமை வானரர்க்கு வேண்டுவதோ?
    நானினிமேல் என்றன் நகங்களையே நம்பிடுவேன்.
    பாய்ந்தறைந்தாற்தான் தம்பி பணிவான் அதுவேதான்
    ஆய்ந்தறிந்த என்றன் அறுதி முடிவம்மா.

    (தனகு – சீண்டுதல்-ஈழவழக்கு).

    *****

    ”சுற்றத்தைக் கூவியழைத்து உண்ணும் காக்கையாய்க் கூடி வாழ்! பொய், பொறாமையை விட்டொழி!” என்று மனித யாக்கை பயனுற வாழும் வாழ்க்கையை விளக்குகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    பரிணாமம்!

    காக்கை கரவாக் கரைந்துண்ணும் என்னும்
    வாக்கை நினைந்து நிற்பாய் மானிடனே!
    யாக்கை எடுத்த பயன் பிறர்க்குழைக்க என்னும்
    பாடம் கற்றுப் பரிணமிப்பாய் வா நரனே வா!

    பொய் பொறாமைத் தீக்குணங்கள் தான்விடுத்து
    செய்ந் நன்றி கொண்டார்க்கு உய்வில்லையெனும்
    மெய்ப்பொருளைத் தானுணர்ந்து
    உய்வு கொண்டு பரிணமிப்பாய் வா நரனே வா!

    கவி காட்டும் மெய்யன்பைக் கண்டுணர்ந்து
    புவியனைத்தும் களிக்கும் வகைசெய்து
    பொதிகை வளர் திருநாட்டில் புது
    ஆதிமந்தியெனப் பரிணமிப்பாய் வா நரனே வா!

    *****

    படத்தில் காணும் இரு குரங்குகளை வைத்துச் சுவையான கதைகளைத் தம் கவிதையில் வடித்துத் தந்திருக்கும் துடிப்பான கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது…

    நட்பே துணை!

    வானுயர்ந்த சோலையும்
    வளர்ந்து நின்ற மரங்களும்
    வளம் பொங்கும் வனமாகும்!

    இரை தேடி இந்த வானரம்
    இடம்பெயர்ந்து செல்ல
    இந்த வனம் எங்கும்
    காட்டுதீக்கு இரை ஆனதே!

    வேகமாய்ப் பரவிய தீயில்
    சிக்கித் தவித்த உயிர்களின்
    வேதனை அறியும் முன்னே
    சிதைந்து போன உடல்கள் இங்கே!

    துள்ளிக் குதித்து திசை அறிந்து
    வந்து நின்ற சிறு குரங்கு
    தீயில் கருகிக் போகும்
    வனம் கண்டு கலங்கி நின்றதே!

    ஓடி ஆடித் திரிந்த காலம்
    கண்முன்னே வந்து போக
    மெல்ல நகர்ந்த அதன் விழியில்
    கருகிப் போன தன் அன்னையைக் கண்டதே!

    தான் குடி இருந்த கோயில்
    தீயில் கருகித் தான் போக
    இடி வந்து நெஞ்சைத் தாக்க
    உடைந்து தான் போனதே!

    உறவுகள் இன்றித் தனிமையில் தவித்திட
    உதவிக்கரம் நீட்டி ஆறுதல் சொல்லி
    என்னைத் தேற்றி நின்றது
    தோழமை போற்றும் நட்பெனும் உறவே!

    ”இரைதேடி இடம்பெயர்ந்த வானரம் மீண்டும் வனம் வந்தபோது காட்டுத்தீக்கு இரையான வனத்தையும் இறந்துபட்ட தாயையும் கண்டு வெதும்பி நிற்க, உதவிக்கரம் நீட்டி அரவணைத்த நட்பால் மகிழ்ந்தது” என்று அழகான கதையொன்றால் நட்பின் பெட்பினை விளக்கியிருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • சேக்கிழார் பா நயம் – 62 (வேதம்)

    சேக்கிழார் பா நயம் – 62 (வேதம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    சுந்தரர் பெரிதும் விரும்பிக் கண்ட ஈசனின் திருப்பாதங்கள் மேலும் உயர்ந்த சிறப்புக்களைப் பெற்றுள்ளன. அப்பாதங்கள் வேதங்களாகிய யானைமேல் எழுந்தருளுவன. அவை அறிவின்றி  யான் செய்த பிழைகளையும் பொறுத்து என்னை ஆட்கொண்டன, இன்னும் யான் செய்தற்குரிய பிழைகளையும் இல்லாமல் செய்து என்னை வாழ வைப்பன, என்று கூறும் சுந்தரர் இவை உயிர்த்தொகையின்  தலைவராகிய ஈசனின் தாமரைப் பாதங்கள்  என்கிறார். இதனை, ‘’பூதநாத, நின் புண்டரீகப் பதம்‘’ என்ற ஈற்றடி குறிக்கிறது. அடியும் அடியவர்களும் இணைந்து நிற்றலின் அன்பால் நினைவார்களது உள்ளக்கமலத்தே விரைந்து சென்று நிற்கும் திருவடி என்க. அடியவர்களுக்கு ஆளாந்தன்மையை வேண்டியே திருவடியைத் துதித்தாராதலின் அவர்களது உள்ளக்கமலத்தே விரைந்து சேரும் தன்மையனவாகவே அவற்றைத் துதித்தார் என்பது குறிப்பாம். “அன்பர் சிந்தை யலர்ந்த செந்தாமரை“ என்று தொடங்கிய நம்பிகள் அதனையே மீண்டும் கூறி  முடித்தார் .  தாமரைபோன்ற பாதம் என்பதும் ஆம்.

     “பொலம்புண்டரீகப் புதுமலர் போல்வன“,

     “தூக்கமலத் தன்ன  வடிவின“ என்பன  அப்பர் பெருமான் திருவாக்குக்கள்.

    ‘’வேதவாரணம் மேற்கொண்டிருந்தன’’ என்ற என்ற முதலடி  வேத  வாரணம் என்றும், வேத ஆரணம் என்று பிரிந்து இருவகைப் பொருள் தந்தது. வேதங்கள் பெருமையும் விளக்கமும் கொண்டமையால்  யானை எனப்பட்டன. பொதுவாக  வேதம் ஆரணம்  எனப்படும். வேதத்தின் ஞானபாகமாகிய உபநிடதம் ஆரணமாகும்.

    “ஆரணங்களே யல்ல மறுகிடை

    வாரணங்களும் மாறி முழங்குமால்“

    எனச் சேக்கிழாரே முன்னர்க் கூறுதலும், வேதங்கள் நிஷாதசுரத்திற் பயிலப்பெறுதலும் இங்கு வைத்துணரத் தக்கன. நிஷாதம் – யானையின் பிளிற்றோசை. “மலைக்கொளானை“ என்ற திருக்கடவூர்த் திருக்குறுந்தொகையிலே அப்பர் பெருமான் இறைவனைக் “கலைக்கை யானை கண்டீர்“ “கள்ளவானை கண்டீர்“ முதலாகப் பதிக முழுதும் யானையாகவே காட்டியதும், “வேதமாகிய வெஞ்சுடரானையார்“ என்றருளியதும் இங்கே காணத்தக்கன.

    மேலும் ஆரணம், குதிரை என்ற பொருளையும் தரும். வாரணம் – குதிரை எனக்கொண்டு வேதமாகிய குதிரையின்மேல் என்றுங் கூறுப. இறைவன் மாணிக்கவாசகர் பொருட்டு வேதக் குதிரையின்மேற் குதிரைச் சேவகனாகி வந்தான் என்ற சரிதமும், “பண்ணியல், வைதிகப் புரவியும்“  என்ற  கோயில் நான்மணி  மாலைத்   திருவாக்கும்   இங்கு கருதத்   தக்கன!

    ‘’பேதையேன் செய்பிழை பொறுத்து ஆண்டன‘’ என்ற அடியில் செய்பிழை என்ற வினைத்தொகை  செய்த  பழைய  பிழைகளையும், இனிமேல்  செய்யத்தக்க பிழைகளையும் என்ற பொருள்பட்டுப், பிற்காலத்தில் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்து அடியார்கள், பரவையார், சங்கிலியார் ஆகியோருடன் செய்யும் பிழைகளையும் பொறுத்து ஆட்கொண்ட திறத்தையும்  கூறியதாகக்  கொள்ளலாம்.

    முன் செய்த பிழை பொறுத் தாண்டது போலவே, இனி வருங்காலத்திற் செய்யக் கடவனவாகிய பிழைகளையும், அவற்றால்வரக் கடவனவாகிய ஏதங்களையும் தீர்க்க இப்போதே உடன்பட்டன என்க. “ஏதந்தீர் நெறியைப் பெற்றேன்“  என்பது சேக்கிழார்  வாக்கு.  முன்னே  திருக்கயிலையில் ஏதந்தீர்க்க இசைந்தன; ஆதலின் பேதையேன்செய் பிழைபொறுத் தாண்டன என்று கூட்டியுரைத்தலுமாம். என் பிழையைப் பொறுத்தாண்டதேயன்றி எல்லா உயிர்க்கும் ஏதம் தீர்க்க இசைந்தன  எனவும் பொருள்படும்.

    ஆறாத வானந்தத் தடியார் செய்த  அனாசாரம் பொறுத்தருளி யவர்மே லென்றுஞ் சீறாத பெருமானை“  என்பது அப்பர்  திருத்தாண்டகம்..

    “யான்செய்யும் துரிசுகளுக் குடனாகி“ என்ற நம்பிகள் தேவாரமும் இங்குச் சிந்திக்கத்தக்கது. இப்பாட்டில் ‘’பூத நாத!’’ என்ற தொடர்  பூதங்களின் தலைவனே  எனப் பொருள்படும்.

    பூதபதயேநம: என்பது சிவாஷ்டோத்திரம். பூதங்களாற் சூழப்பட்டு நடம்புரிதல் சிவபெருமானுக்கேயுரியது. இப்பூதங்களின் இயல்பும் வலிமையும் முன்னர்க் கண்டோம்.

    “பூத நாயகர் புற்றிடங் கொண்டவர்“  என முன்னர் இத்திருவாரூர்ப் பெருமானைக் குறித்ததும் எண்ணத்தக்கது..

    “ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்அங்க ணன்றனை“ முதலிய எண்ணிறந்த திருவாக்குக்களும் காண்க. பூதங்கள் தாருகவனத்து இருடிகள் மாறாகச் செய்த ஆபிசார யாகத்திற் றோன்றின என்றும், அவற்றைச் தம்மைச் சேவித்துச் சூழ்ந்து நிற்க இறைவன் ஆணையிட்டான் என்றும் புராணங்கள் கூறும்.

    இந்நான்கு திருப்பாட்டுக்களிலும் நின் புண்டரீகப்பதம் என்ற ஒரே எழுவாய் எதிர் நின்றன என்பது முதல் இசைந்தன என்பதுவரைப் பதினொரு தனி வினைமுற்றுக்களைக் கொண்டு முடிந்தது காண்க. பஞ்சப்பிரம சடங்கமாகிய பதினொரு மந்திரங்களாலே இறைவனைக் கொண்டு துதிக்கும் சிவாகம மரபினை இது குறித்தது. இவையே பின்னர்த் திருத்தொண்டத்தொகையின் பதினொரு பாசுரங்களாகப் போந்தன என்பர் ஆலால சுந்தரம்பிள்ளை.

    பதம் எதிர் நின்றன – ஆடின – என்னாது, இறுதியில் நிற்கவேண்டிய பயனிலைகள் முன்னும், முன்னிற்கவேண்டிய எழுவாய் இறுதியிலும் வந்தன. மலையின் மேலே சகடங்களை ஏற்றும் இயந்திரம் பின்னின்று தள்ளுதல்போன்ற மரபுபற்றிப் போலும். “எழுவா யிறுவா யிலாதன“ என்று அப்பர் பெருமான் இத்திருவடிகளின் இலக்கணம் வகுத்துள்ளார்.

    Share
  • கங்காரு நாடு கருகியதே!

    கங்காரு நாடு கருகியதே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    கருகியது உடலம் கதறியது  உள்ளம்
    பதறியது நாடு சிதறியது வீடு
    சுட்டெரிக்கும் வெப்பம் தாக்கியது எங்கும்
    சுடர்விட்டுத் தீயும் ஆடியது கோரம்!

    கங்காரு நாடு கருகியது தீயால்
    கணக்கில்லா விலங்கு அக்கினிக்கு விருந்து
    கண்முன்னே யாவும் கரிமேடாய்ப் போச்சு
    கலக்கமுடன் மக்கள் வெறுமையுடன் நின்றார்!

    உயிர் பறிக்கும் தீயை உளவுறுதியுடனே
    எதிர்கொண்ட வீரர் இதயம் உறைகின்றார்
    அர்ப்பணிப்பு என்னும் அளப்பரிய பண்பை
    ஆஸ்திரேலிய நாட்டில் அவர்களிடம் கண்டோம்!

    உதவிபுரி கரங்கள் ஓய்ந்து விடவில்லை
    உளமார உருகி ஓடியோடிக் கொடுத்தார்
    தளர்வின்றி அரசும் தாராளம் கொண்டு
    நிலையுணர்ந்து கரத்தை நீட்டியதே நன்கு!

    Share