Blog
-

இருபது இருபது
அண்ணாகண்ணன்புதியது மேவும் புவியில் எந்நாளும்விதியதை வெல்லும் வினைத்திறம் ஆளும்மதியது ஓங்கும் மாற்றம் உண்டாகும்இருபது இருபதில் ஏற்றம் உண்டாகும்!பெறுவதும் உறுவதும் பெருமைகள் ஆகும்கனவிலும் நனவிலும் களிநகை ஊறும்எழுவதில் எழுவதில் எல்லைகள் விரியும்இருபது இருபதில் இனிமைகள் சேரும்!களைவதும் அணிவதும் நித்திய வேடம்விடுவதும் தொடுவதும் பந்தயப் பாடம்இருப்பதும் மறைவதும் காட்சியின் மாயம்இருபது இருபது வேட்கையின் வேகம்!அனுதினம் இங்கே அனுபவம் ஏறும்நுண்கணம் தோறும் நூதனம் கூடும்அடியெது முடியெது அளந்திடலாமேஇருபதுக்கு இருபது எய்திடலாமே!வல்லமை அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். -

(Peer Reviewed) ஆன்ம விசார, உணர்வியல் நெருக்கமும் மௌன மொழியும்
செ. ர. கார்த்திக் குமரன்
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி
மதுரை – 625 009.
மின்னஞ்சல்:srkarthick21@gmail.com
தொடக்கமாக
நவீன தமிழிலக்கிய புனைகதைப் படைப்பிலக்கிய வெளியில், பல காத்திரமான படைப்புகள் படைப்பாளர்களால் படைக்கப்பட்டுள்ளன. இப்படைப்பாளர்களுக்கான தளத்தை ஏற்படுத்திக்கொடுத்த வகையில், மணிக்கொடி இதழின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி தொடங்கி பல முக்கிய எழுத்தாளர்களின் மனவெளியை, சமூகச் சிந்தனைச் சார்ந்த கருத்தியல்களை (உருவாக்கக் காரணியாக) பதிவு செய்யும் காரணியாக இவ்விதழ் விளங்கியது. நவீன சிந்தனையுடன் (மாற்றுச் சிந்தனையுடன்) கூடிய படைப்புகள் இவர்களால் சாத்தியமாக்கப்பட்டுள்ளன. மரபார்ந்த இலக்கியத் தளத்திலிருந்து இது பல்வேறு நிலைகளில்/வடிவங்களில் வேறுபட்டதினால் இதனை அன்றைய காலகட்டத்தில் குறைசொல்லியும் சமூகத்தில் கேடு விளைவிக்கக் கூடியது என்றும் மரபார்ந்த இலக்கியவாதிகளிடையே ஒரு கருத்து நிலவியது. இருப்பினும் அவற்றையெல்லாம் பெரிதும் பொருட்படுத்தாது இப்புத்திலக்கியத்தை வரவேற்று, புதிய பொருண்மையில் வளரச்செய்தனர் இவ்விதழாசிரியர்கள். இதன் காரணமாகவே பலதரப்பட்ட படைப்புகள் வெளிவரத் தொடங்கின. இத்துடன், ஒவ்வொரு படைப்பாளரும் அவர்அவர்க்கென்று தனித்த மொழிநடையுடன் கூடிய உருவ, உள்ளடக்கத்துடன் படைப்புகளைப் படைத்தனர். இவர்களில் சிலரின் எழுத்துக்கள் குறித்து, தற்காலத்தில் அதிகம் பேசப்படாதபோதிலும் படைப்புகளில் தனக்கென தனித்த இடத்தை வகித்துள்ளனர். மேலும், ஆன்மவிசாரத்தைத் தொடும் கருத்தாக்கங்களை வெளிக்கொணர்ந்து, தத்துவார்த்தச் சிந்தனையைத் தூண்டக்கூடிய வகையில், மௌனமான எழுத்துக்களின் வழி மொழியைப் பிரயோகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், லா.ச.ரா. என்று அழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் என்ற நவீன படைப்பாளியின் மௌடீக மற்றும் புதிருடன் கூடிய எழுத்துருவாக்கப் படைப்புகளைக் காணுவதாகவே இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.
லா.ச.ரா.
லா.ச. ராமாமிருதம் 1916, அக்டோபர் 30, பெங்களூரில் பிறந்தார். ஆங்கிலத்தில் இவருடைய கதை 18வது வயதில் வெளியானது. ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதி வந்த இவரைத் தன் 50வது வயதில் சென்னை வாசகர் வட்டம் ‘புத்ர’ நாவலை எழுத வைத்தது. 1989இல் தினமணி கதிரில் தொடராக வெளிவந்த ‘சிந்தா நதி’ என்னும் சுயசரிதை நூல் ‘சாகித்ய அகாதெமி’ விருது வென்றது. சிறுகதை, நாவல், கட்டுரை உள்பட பல நூல்களை எழுதியுள்ளார். அக்டோபர் 30, 2007இல் தமது 92வது பிறந்த தினத்தில் சென்னையில் காலமானார்.
“நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்” என்று எழுதினார் லா.ச.ரா. அந்த அளவிற்கு தன் எழுத்துக்களின் வழி மொழிக்கு மிக நெருங்கிச் சென்றவர். எழுத்தையே தன் உணர்வாகவும் உயிராகவும் கொண்டவர். மனித மனங்களின் உணர்வுகளின் ஊடாக ஆன்மாவைத் தொடும் நேர்த்தியை மொழியினூடாகக் கையாண்டவர். லா.ச.ரா.வை வாசிக்கும் வாசகனுக்குப் புதிர் விளையாட்டுடன் கூடிய சூழ்ச்சியைப் பெறவைத்து, திடுக்கிடச் செய்பவர். ஆழ்ந்த தரிசனங்களையும் அனுபவங்களையும் ஏற்படுத்தும் வகையில் இவருடைய எழுத்துக்கள் அமைந்திருப்பதோடு, பெண்ணின் மனநெகிழ்வுகளை, மனவெளிகளை உள்ளும் புறமும் அசாத்தியமான சொற்களோடு வெளிப்படுத்தி, வாசகனைக் கட்டிப்போட்டு, உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்பவர். சுயநிரூபணங்களையும் வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களையும் தன் படைப்பினூடாக வெளிப்படுத்தியுள்ளார். நவீன தமிழுலகில் இவரின் எழுத்துக்கள் தவிர்க்கவியலாத என்றென்றும் வாசிக்கப்பட வேண்டியவையாகவே உள்ளன.
புத்ர
தன் முன்னோர்களின் (ஐந்து தலைமுறை) வாழ்வியலை, அவர்களின் உணர்வுநிலைகளை, அன்பார்ந்த குணாதிசயங்களை, உறவு நிலைகளை, தான் கொண்டுள்ள நம்பிக்கைகளைத் தத்ரூபமாகப் புலப்படுத்தியுள்ளார். ஜகதா என்ற கதாபாத்திரத்தின் வழி தாய்மையின் (மாமியாரின்) இடையறாச் செயல்களை/எண்ணங்களைச் சொல்வதோடு, காலத்தினால் ஏற்பட்ட வடுக்களையும் இரணங்களையும் இன்பதுன்பங்களையும் ஒரு சரடாகக்கொண்டு, அதனை எழுத்துருவாக்கியுள்ளார். பிராமணச் சமூகத்தில் பல மரபுகள்(Heritage) வழிவழியாகப் பின்பற்றி வந்தாலும் சில கணங்களில் பிற மனித உயிர்படும் வேதனைகளை, இன்னல்களைத் தாங்காது, சம்பிரதாயங்களை மீறி மனிதநேயத்துடன் நடந்துகொள்ளும் நிலையை, தனக்கே உரிய மொழிநடையில் மொழிந்துள்ளார். தாய் – மகள் – மாமியார் ஆகிய மூன்று பெண்களின் தனித்துவங்களை, தங்களுக்குள் ஏற்படும் உணர்வுநிலைகளை, உடல்மொழியினைத் திறம்பட எடுத்துரைத்துள்ளார். உறவுகளினால் (ஜகதா(மருமகள்) – மாமியார்) இரண்டறக் கலந்திருக்கும்போது, மரணத்தால் (மாமியார்) மனித மனங்களுக்குள் நிகழும் நெருக்கடிகளை, வாழ்க்கையின் அபத்தத்தை/அர்த்தத்தை, தன் மௌன மொழியின் வாயிலாக வரையறுக்கவியலாத உணர்ச்சிகளால் நம்மை ததும்பவைத்து, வாசிப்பை நிறுத்திடச் செய்கிறார். நிலையிலா வாழ்வியல் பயணத்தை நமக்கு உணர்த்தி, ஒரு வித தியான நிலையை அடையச் செய்கிறார்.
“தர்க்கம், நியாயம் எல்லாம் பிரமாதமாய்த்தானிருக்கு. ஆனால் சம்பிரதாயம், வழக்கம், முறைன்னு நமக்கு முன்னால பெரியவாள் எல்லாம் தொன்றுதொட்ட ஏற்பாடா பண்ணிட்டுப் போயிருக்காளே. அதெல்லாம் பிசகுன்னு ஒரு நிமிஷத்தில் தூக்கியெறிஞ்சுட இந்த விஷயத்தில் என்ன அவசரம் வந்துடுத்து? நீ ஏன் கேக்கறேன்னு எனக்குத் தெரியும். இன்னிக்கு மத்தியானம் நடந்த விஷயத்தில் – அவள் குருவிக்காரியாயிருந்தால் என்ன, குபேர சம்பத்தாயிருந்தால் என்ன? நம் ஸ்திரீவர்க்கத்தின் மானம் மீட்கவேண்டிய அவசியம் நேர்ந்து போச்சு. அது மாதிரி உனக்கு நேரணுமா? அவளுக்கும் உனக்கும் ஈடா? அங்கு நீ பெற்றால் என்ன? நான் வந்து பார்க்க மாட்டேனா?
என் பிடரியில் அத்தை கை எவ்வளவு சுகமாயிருக்கு! எனக்கு தூக்கம் வரது.
என்னையறியாமல் என் தலை ஆடி, அத்தை கைமேல் சாயறது; அப்புறம் நினைவில்லை.”1
மனிதனால் உருவாக்கப்பட்ட தர்க்க, நியாயத்திற்குக் கட்டுப்படாமல், குருவிக்காரியாகயிருந்தாலும் தன் (பிராமணன்) வீட்டில் வைத்து பிரசவம் பார்த்து, ஒரு வாரம் தாய்-சேயை நலமுடன் தங்க வைத்து, போகும்போது கையில் சில பொருட்களையும் கொடுத்து அனுப்பிய தாயின் (அத்தையின்) இயற்கை குணமானது, சம்பிரதாயம் போன்றவற்றையெல்லாம் மிகச்சாதாரணமாகத் தூக்கியெறியும் (பெண்ணின்) நிலையை இதன் வழி உணர்த்தியுள்ளார். இப்பெண்ணின் (அத்தை) செயலானது மானத்தின் பொருட்டு மட்டும் செய்த செயலன்று. தன் வருங்காலக் (ஜகதா) குழந்தையின் வரவை நோக்கி காத்திருக்கும் நன்வுணர்வுச் செயலாகும். இவ்வாறாகப் பெண்ணின் இயல்புநிலையும் பரிவும் தொன்றுதொட்டு வந்த வழக்கம் மற்றும் முறைமைகளைக் கடந்து செல்லும் தன்மையுடையதைத் தன் எழுத்துக்களினூடாக் காட்சிப்படுத்தியுள்ளார்.
“மாமியாருக்கு மத்தியானம் மூன்று மணிக்கே நினைவு தப்பிவிட்டது. இரவெல்லாம் ஜுரம் நெருப்பாய்க் காய்ந்தது. மூவரும் கண்ணிமைக்காமல் அவளைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். வைத்தியன் வந்து நாடியைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியபடி போனான்.
பொலபொலவென விடியும் சமயம். கணீரெனும் குரலில் கிழவி மருமகளைக் கூப்பிட்டாள்.
“குளுகுளுன்னு எனக்கு ஒரு டம்ளர் ஜலம் கொடேன்” என்று கேட்டு வாங்கிக் குடித்தாள்.
“அப்பாடா! என் வயிறு குளிர்ந்தது. நான் இனிமேல் போயிடுவேன். ஆனால், ஒருத்தரும் அழுது ரகளைப் பண்ணிக் குழந்தைகளைப் பயமுறுத்திடாதேங்கோ. குழந்தைகள் தூங்கறதா? பரவாயில்லே. இப்போ ஒண்ணும் அதுகளை எழுப்ப வேண்டாம். இங்கே வா, பக்கத்திலே வா. நீ ரொம்ப நல்ல பெண். எனக்கு உன்னிடத்தில் பரம திருப்தி. அதனாலே உனக்கு நான் சொல்ல வேண்டியது ஒண்ணுமில்லே. அவர் எங்கே?”
“இதோ இருக்கேனே” என்று கிழவர் பக்கத்திலே வந்தார். அவருள் நடக்கும் பயங்கரமான யுத்தத்தில், முகம் செவேலெனக் கொதித்துக்கொண்டிருந்தது.
அத்தை லேசாய்ப் புன்னகை புரிந்தார்.
“இதென்ன இவ்வளவு வருத்தப்படறேளே! நான் கொடுத்து வெச்சவன்னா! விளக்கை உங்கள் கையில் கொடுத்துவிட்டு, மடியில் மஞ்சளும் தேங்காயுமா, ராஜாத்தி மாதிரி போகப்போகிறேன். குழந்தை!”
அவள் கணவரிடம் அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. ஆசையாய் ஒருமுறை உச்சந்தலையிலிருந்து முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு, கண்ணை மூடிக்கொண்டார். அவ்வளவுதான்”2
வாழ்க்கையின் இறுதியில் ஏற்படும் மரணத்தைகூட மிக எளிதாகக் கடக்க நினைக்கிற அளவிற்கு, தான் வாழ்ந்த நாட்களில் நிகழ்ந்த நிகழ்வுகளும் அனுபவங்களும் அவளுக்கு (மாமியாருக்கு) திருப்தியளிப்பதாக இருப்பதை இது காட்டுகிறது. இதனால் இம்மரணத்தைகூட எளிதில் வெல்லமுடிகிறது. எந்தவித அனுதாபங்களும் வருத்தங்களும் இனி வரப்போகிற நாட்களில் (தான் இறந்த பிற்பாடு) இருக்கக் கூடாது என்ற கண்டிப்பும் நிறைவான வாழ்வை வாழ்ந்துவிட்டதால் ஏற்படும் உணர்வுநிலையைத்தான் லா.ச.ரா. மேற்கண்ட வரிகள் மூலம் உணர்த்துகிறார். இப்படிப்பட்ட அமைதியான (புத்ர) நிலையில் மரணத்தை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தி ஞானிகளுக்கு மட்டும் சாத்தியமன்று. பரிபூரண வாழ்க்கை வாழும் சாமான்ய மக்களுக்கும் நிகழக்கூடியது என்பதைத் தன் ஆன்ம எழுத்துருவாக்கத்தால் வெளிப்படுத்தியுள்ளார்.
அபிதா
1969இல் வெளிவந்த ‘அபிதா’, அகமரபின் உணர்ச்சிக் கொந்தளிப்பின் காரணமாக எழுதப்பட்ட பிரதியாகும். கரடிமலையைக் களமாகக் கொண்டு காலத்தின் முன்பின்னாக நினைவுகளுடன் ஒரு ஆண்மகன் அகத்திற்குள் நிகழும் காதல், காமம், பரிவு, கோபம், வெறுப்பு ஆகிய உணர்வுகளினூடாக ஏற்படும் அனுபவங்களை லா.ச.ரா. வெளிப்படுத்தியுள்ளார். அபிதா என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போது வாசகர்களுக்குத் திகைப்பும் பிரமிப்பும் ஈர்ப்பும் ஏற்படும்படி ஒருவித இலயத்துடன் சித்திரித்துள்ளார். இவளுடன் சகுந்தலை, சாவித்ரி ஆகிய பெண்களின் இயல்பை இயற்கையோடு தொடர்புபடுத்தி, அவர்களுடான மனதின் மொழியினைப் புலப்படுத்தியுள்ளார்.
“அவள் புருவங்கள் வினாவில் உயர்கின்றன. ஆவேசம் வந்தாற்போல் என் வாயினின்று ஏதோ வார்த்தைகள் புறப்படுகின்றன.
“சக்கு நீ சாகவில்லை.”
அவள் பின்னடைந்தாள். அவள் விழிகள் வட்டமாயின. பயம், வியப்பு. நான் அவளை நெருங்கினேன்.
“கிணற்றில் குடத்தை விட்டு, ஜலத்தைக் கலக்குமன் ஜலத்தின் பளிங்கில் தெரிவது யார் என்று கிணற்றில் எட்டிப் பார்?”
அவள் கண்களில் கலக்கம் சட்டென விட்டது, புன்கையில் கன்னங்களில் வெளிச்சம் படர்ந்தது.
“என்னவோன்னு பயந்தே போனேன். அம்மாவையே உரிச்சு வெச்சிருக்குன்னு அப்பா கூட ஒரொரு சமயம் சொல்வார். அதையே தாத்தா என் முகத்தைத் தடவித் தெரிஞ்சுண்டு சொல்வார். நானும் அப்பப்போ கண்ணாடியில் பார்த்ததுண்டு. பத்துத்தேய்க்கறப்போ, பித்தளைப் பாத்திரத்தில் பளிச்சுனு அழுக்குவிட்ட சுருக்கில் அது என் முகத்துக்குக் காட்டற பொம்மையில் என்னைப் பார்த்து என் அம்மாவை நினைப்பேன்.”
திடீரென என்ன ஒரு பெரும் ஆவல் ஆட்கொண்டது.
“உன்பேர் என்ன?”
“அபிதா”
நான் திரும்பச் சொல்லி பெயரை நாக்கில் சுவைக்கிறேன்.
“அபிதா”
அ – சிமிழ் போன்று வாயின் லேசான குமிழ்வில்,
பி – உதடுகளின் சந்திப்பில்,
தா – நாக்கின் தெரிப்பில்
இத்தனைநாள் பிரிந்து போயும், மீண்டதுமே நினைவு கண்டுகொண்ட மனம், விட்ட இடத்திலிருந்து தொட்டுக்கொண்டு மொக்கு விரித்தாற்போல் கம்மென்று எழுதுகின்றது.
“நேரமாச்சு போவோமா?”
நீ சொல்கிறாய். செல்கிறாய், நான் உடன் வருகிறேன்.
ஆண்டவன் வேண்டுவதும் இதுதான்.
“என்னிடம் உன்னை ஒப்படை.”
உன்னிடம் என்னைக் கொடுத்துவிட்டபின் இந்தச் சமயத்துக்கு என் மனம் எவ்வளவு லேசாயிருக்கிறது.”3
சக்கு என்ற சகுந்தலையின் மகளான அபிதாவைக் கண்டதும் அவனுக்குள் எழும் உணர்வுகளை, உணர்வின் தெறிப்புகளை, ஆன்ம விழிப்புகளைத் தன் மொழியினூடே எடுத்தியம்புகிறார். தன் பழைய (காதல்) நினைவுகளிலிருந்து (சக்கு) மீண்டு அவளைக் (அபிதாவைக்) கண்டதும் நினைவுகள் நனவாகி, மனம் (ஆன்ம) நிம்மதி அடைவதையும் மேற்கண்ட வரிகள் தத்ரூபமாக உணர்த்துகின்றன. சமூக நியதிக்கு ஆட்படாத சூழலையும் மனம்/ஆன்மாவானது விதியின் வசத்தால் ஒருவித உறவுக்கு ஏங்கி ஆட்படுவதையும் மிக இயல்பாக வெளிக்காட்டுவதில் திறன் பெற்றுள்ளார் லா.ச.ரா. “தொடல் என்பது உறவின் ஆரம்பம்” என்ற ஃபிராய்டிய கூற்றுக்கிணங்க, அவன் செயல்பட்டிருந்தால் அபிதாவை அடையும் வாய்ப்பினைப் பெற்றிருப்பான். ஆனால் தொடாத காரணத்தினாலேயே அவளுடனான உறவை வளர்த்துக்கொள்ள முடியாமல் போயிற்று. மனம் சொல்வதை உடல் ஏற்க மறுக்கின்ற நிலையும் இதன்வழி அறியமுடிகிறது. மனிதன் தான் வாழ்கின்ற காலத்தில் ஏற்படுகின்ற (காதல், நட்பு) அனுபவங்களில் சில ஆன்மவிசாரத்தை அல்லது ஆன்மநெருக்கத்தை உண்டாக்கவல்லன. ஆனால், இவற்றையெல்லாம் கடந்துதான் வாழ்க்கையை வாழவேண்டியுள்ளது என்பதை லா.ச.ரா., தன் தத்துவார்த்த எழுத்தின் வழி ஆன்மாவைத் தொடுகிறார்.
சிந்தா நதி
தன் வாழ்வியல் அனுபவங்களை நினைவலைகளாகக் கொண்டு உருவாக்கிய சுயசரிதை பிரதிதான் சிந்தா நதி. இது தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. 1989 ஆம் ஆண்டு இப்பிரதி சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது. சிறுவயதிலிருந்து கிட்டதட்ட 70 ஆண்டுகள் வரையிலான தன் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை முன்பின்னாகத் தொகுத்து 48 தலைப்புகளில் எழுத்தாக்கியுள்ளார் லா.ச.ரா. ஒரு மனிதன் தான் வாழ்ந்த/வாழும் காலகட்டத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வதென்பது பெரும்பாலும் சாத்தியமன்று. ஆனால், எழுத்தாளானுக்குச் சாத்தியம் என்று இப்பிரதியின் மூலம் நிரூபித்துக் காட்டியவர். அதனால்தான் இத்தகையதொரு படைப்பினை இலக்கிய உலகிற்கு அளிக்க முடிந்திருக்கின்றது. இதில் லா.ச.ரா. அடிக்கடி பயன்படுத்தி வரும் சொல்லான “வேளை” வந்துவிட்டால் யாருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை இப்படைப்பின் வழி உணர்த்தியுள்ளார். தன் காலகட்டத்தில் நிகழ்ந்த தூய இலக்கிய (மணிக்கொடி சதஸ்) சம்பாஷனைகளில் பங்குகொண்டதால், இலக்கியம் (நவீனம்) மற்றும் தீர்க்கமான எழுத்து குறித்த புரிதலும் உந்துதலும் ஏற்பட்டது என்பதை இதில் பதிவு செய்கிறார்.
நவீன சமூகத்தில் இயங்கும் மனிதர்களின் ஆசை, பாசம், காமம், காதல், வேட்கை, பிரமை, பிரியம், கோபம், கலை, தாபம், கற்பனை, யோகம் போன்ற பலவற்றின் உணர்வுகளனூடான உள்தெறிப்புக்களை விவரணையாகச் சொல்லியிருக்கிறார். லா.ச.ரா. பத்து வயதாக இருந்தபோது அவருடைய அண்ணன் தனக்கு ஆங்கிலமும் கணிதப்பாடங்களையும் கற்றுத்தந்ததைப் பற்றியும் ஒழுக்கச் சீடனாகத் தான் வளர்ந்ததைப் பற்றியும் விவரித்துள்ளார். சமூகப்போக்கினை அறிந்து செயல்பட்டவர் என்ற ரீதியில் தமையனைத் தன் குருவாக மதித்தார். தன் தாயின் உள்உணர்வுகளின் வழி தரிசனத்தைக் கிடைக்கப் பெற்றார்.
“சில சமயங்களில் அண்ணாவின் பாடங்களினின்று அபூர்வமாகக் கிடைத்த ஒழிவு நேரங்களில், ஊர் தாண்டி, வயல் நடுவே பிள்ளையார் கோயிலுக்கு அசருடன் போவேன்.
போவோமே ஒழிய, பிள்ளையாரை வணங்கமாட்டார், சேவிக்கமாட்டார். சன்னிதானத்துக்கெதிரே, மார் மேல் கை கட்டியபடி, தரையில் வட்டம் போட்டாற் போல் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டேயிருப்பார். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம்கூட. நேரமாச்சு என்று சொல்லப் பயமாயிருக்கும். பிறகு கவனம் வெடுக்கெனக் கலைந்தாற் போல் தலையை உதறிக்கொண்டு சுற்று முற்றும் பார்ப்பார். அன்னியனைப் பார்ப்பது போல், கண்ணில் லேசான கருப்புக்கூட.
“உருவேற திருவேறும்” என்பர். முன்பின் தாக்கல் மோக்கல் இல்லாமல்.
“அப்படீன்னா?” நான் சின்னப் பையன் தானே!
“புரியவில்லையா?” புன்னகை புரிவார் (அரிசிப்பல்) “புரிந்துகொள்ளும்போது புரிந்து கொள். புரியும் வேளை வரும்போதுதானே புரியும். அப்போதும் எல்லாமே புரிந்த மட்டில்தான்.” (இந்தச் சிலம்ப விளையாட்டு எனக்கென்ன புரிகிறது?) இப்போது அனுபவத்தில் அறிகிறேன்.
பாஷைக்குள் ஒரு பாஷை ஒளிந்துகொண்டிருக்கிறது. பரிபாஷை தான் உண்மை பாஷை. ஒரு புருவ உயர்த்தல், ஒரு விரல் சொடுக்கு, ஒரு புன்னகை, அதரத்தின் வில் வளைவு மோனமாகக் கன்னத்தில் புரளும் இரு கண்ணீர்த் துளிகள், நாணத்தில் தலை குனிவு இவை பேசும் ஒரு அகிலம், மூச்சுவிடாமல் மணிக்கணக்கில் கொட்டும் வார்த்தைகளால் இயலா.”4
மொழியின் அழகே மறைந்திருக்கின்ற அர்த்தங்களை வெளிப்படுத்துவதுதான். இதனையே லெவிஸ்ட்ராஸ் (Levis strauss) தொன்மம் பற்றி விளக்கும்போது “மொழிக்குள் புதைந்திருக்கின்ற (பாஷைக்குள் ஒரு பாஷை ஒளிந்துகொண்டிருக்கிறது) அர்த்தமானது விரிவடைந்துகொண்டே இருக்கும் என்றும் அதனை வெளிப்படுத்தும்போது தான் அர்த்தத்தை அறிந்துகொள்ள முடியும்” என்கிறார். இதனைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் உடல்மொழிகள், பரிபாஷைகள், அனுபவத்தின் வழி புரியாதவற்றையும் புரிந்துகொள்ள முடியும் என்று விளக்குகிறார் லா.ச.ரா. நம் வாழ்வியல் (இயங்கியல்) ரீதியாகவே உண்மையை உணரமுடியும் என்கிறார்.
“நான் எழுத்தின் உபாசகன். ஐம்பது வருட ஈடுபாட்டுக்குப் பின் தைரியாகச் சொல்லிக் கொள்கிறேன்.
எழுத்தின் பலிபீடத்தில், தவங்கிடந்து பெற்ற பிள்ளைக்கு இட்ட தங்கத்தொட்டிலிருந்து அவன் வளர்ந்து மனிதனாகி ழுழுவயது வாழ்ந்து முடிந்த பின் அவன் சிதைக்கு அடுக்கும் வரட்டி வரை – ஏன், பின்னர் அவன் அஸ்தி கூட எடையாகிறது. ஆஷாட பூதித்தனம், நன்னம்பிக்கைகள், நாணயம் யாவுமே எம்மாத்திரம்? இதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளும்போது இதுபோன்ற சாடல்களுக்கும் தயாராய் இருத்தல் வேண்டுமல்லவா?
எழுத்து ஒரு பெரிய சவால். ருசி கண்டவன் அறிவான். ஒரு பெரிய உந்தல் வெறி / சொந்த நாணயத்துக்கு, அந்தந்த நாகரிகத்துக்கு எழுத்து ஒரு உரைகல் / எங்கோ ஆரம்பித்து, சிந்தா நதியின் கதி தள்ளி, எங்கோ வந்துவிட்டேன் -”5 எழுத்தின் தீவிரத்தையும் எழுத்தாளனுக்கு ஏற்படும் உந்துதலையும் ‘மோனம்’ என்ற தலைப்பின் கீழ் வெளிப்படுத்தியுள்ளார். எழுத்தைத் தவமாகக் கொண்டு இயங்கிய லா.ச.ரா. அத்தவத்திலிருந்து வாழ்க்கையில் யாரும் காணமுடியாத/அடையமுடியாத ஞானதரிசனத்தைக் கண்டடைந்தார். சிந்தா நதியில் இறங்கும் வாசகர்களுக்கு (வாசித்து முடித்தவுடன்) உடல் மற்றும் மனம் தூய்மை அடைவதோடு, நம் வாழ்க்கையில் நிகழ்ந்த உன்னதங்களை நினைத்துப் பார்க்கத் தூண்டுமளவிற்கு அவருடைய எழுத்து இட்டுச்செல்லும். நதியின் போக்குக் கரடு முரடாக இருப்பதைப்போலவே தன் வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளதை லா.ச.ரா. இதன் வழி தெளிவுபடுத்துகிறார்.
பாற்கடல்
குடும்பம் என்ற அமைப்புக்குள் இருக்கும் அன்பு, பாசம், இரக்கம், கோபம், பெருமிதம் என்ற சகல உணர்வுகளை அழுத்தமாகவே வெளிப்படுத்தியுள்ளார். தன் முன்னோர்களின் வாழ்வியலிலும், அவர்களின் குணங்களிலும் லயித்து இருக்கிறார். தன் எண்ணங்களிலிருந்து அகலா வண்ணம், அம்முன்னோர்களின் செயல்கள், நம்பிக்கைகள், இலட்சியங்கள், ஆசாபாசங்கள், மனவலிமைகள், வாழ்க்கை முறைகள் (பழக்க வழக்கங்கள்), பாஷைகள் ஆகியன ஒருவித ஈர்ப்பை வழங்கியிருக்கின்றன. தற்காலத்தில் இவையெல்லாம் நீர்த்துபோயிருப்பதைத் தன் கவித்துவ எழுத்துகளினூடாக உணர்த்தும் விதமாக உள்ளது. வாழ்க்கையில் தான் தேடும் தரிசனங்களை, அமைதியை, தெளிவுகளை, மனநெகிழ்வுகளை எந்தவித ஒளிவுமறைவுமில்லாமல், தனக்காகவும்/கலைக்காகவும் ஆன்மவிசாரத்திற்காகவும் படைப்புகளை உருவாக்கியவர். “எனக்கு நேர்ந்த சம்பவங்கள் என் நோக்கை, எந்த அளவுக்குப் பாதித்தன என்பதைச் சொல்லி, அதனால் நேரும், நேரக்கூடிய இலக்கிய அனுபவத்தை வாசகனுக்குச் சொந்தமாக்குவதே ‘பாற்கடல்’ எழுதும் நோக்கம். இதில் பிறர் காணும் வெற்றி, தோல்வி, குறைகள், அவரவர் பூத்ததற்குத் தக்கபடி. என் விளக்குத் தூண்டுகோல் பற்றித்தான் நான் சொல்லிக்கொள்ள முடியும்.
நடுநிசியின் முழுநிலவில் வாழ்க்கையின் கீதத்தைப் பாடிக்கொண்டே தெருவழியே செல்கிறேன். ஏன்? அது என் ஆனந்தம். நான் பிச்சைக்குப் பாடவில்லை. என் இச்சைக்கே பாடிக்கொண்டே போகிறேன்.
சில கதவுகள் திறக்கின்றன.
திறந்திருந்த கதவுகள் மூடிக்கொள்கின்றன.
சிலர் வெளியே வந்து கவனிக்கவும் கவனிக்கின்றனர். இதுதான் இலக்கிய அனுபவம்”6 என தன் நோக்கம், வாழ்வியல் இயக்கம், அனுபவம், எழுத்து போன்றவைகளைக் குறித்து தத்துவார்த்த எழுத்துருவில் தனக்கே உரிய பாணியில் புலப்படுத்துகிறார். தன்னைப் பாதித்த விஷயங்கள் பலவற்றையும் இலக்கியமாக்குகிறார். இதனால்தானோ என்னவோ லா.ச.ரா.வின் எழுத்துக்கள் தனித்துவமாகத் திகழ்கின்றன.
நிறைவாக
நவீன இலக்கியத் தளத்தில் பல எழுத்தாளர்களுக்கு மத்தியில் லா.ச.ரா. தனித்து இயங்கக் கூடியவர். தன் கதையம்சத்திலும் வடிவமைப்பிலும் மொழிநடையிலும் மற்ற எந்த எழுத்தாளரையும் சாராதவர். “உணர்ச்சி பூர்வமான மறக்கமுடியாத நிகழ்ச்சிகளை, அவை நிகழும் கணங்களை, நிறுத்திப் பிடிக்கும் வகையில் சொல்லையும் சொல்லின் பொருளையும் இணைக்கும் ரசவாதத்தைத் திறமையுடன் கையாளும் பண்பு ராமாமிருதத்திடம் உண்டு. “நித்தியத்துவம் என்மேல் படும்போது அதைச் சொல்லில் பிடித்து, அந்த நிமிஷத்தை நித்தியமாக்கிவிடலே என் தேடல், என் கனவு” என்று அவரே தன் கொள்கையை விளக்குகிறார்.”7
இவருடைய படைப்புகளை வாசிக்க நேரும் வாசகர்கள் ஆழ்ந்த உணர்வுக்கு ஆட்பட்டு, ஆன்மநெருக்கத்தினை அடைவர். இசை லயத்துடன் கூடிய மௌனமொழியின் வழி மனதின் பிரக்ஞையை தூண்டக்கூடியவர். எழுத்தையே தன் வாழ்க்கையாக, ஆன்மவெளிப்பாடாகக் கொண்டு இயங்கியதால்தான் லா.ச.ரா. தனித்த ஆளுமையுடன் திகழ்ந்துகொண்டிருக்கிறார். வாழ்க்கையின் தாத்பரியங்களைக் காட்டும் அவருடைய எழுத்துக்களானது காலத்தையும் கடந்து நிற்கும் ஆற்றல் உடையது.
மேற்கோள் விளக்கக் குறிப்புகள்
- லா.சா. ராமாமிருதம், ‘புத்ர’, ப. 118.
- மேலது., பக். 144-145.
- லா.சா. ராமாமிருதம், ‘அபிதா’, பக். 57-58.
- லா.சா. ராமாமிருதம், ‘சிந்தா நதி’, ப. 200.
- மேலது., பக். 203-204.
- லா.சா. ராமாமிருதம், ‘பாற்கடல்’, ப. 200.
- பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம், தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும், ப. 158.
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
ஆய்வாளர் தனது கட்டுரையில் லா.ச.ராவின் படைப்புணர்வை எடுத்துக் கூறியுள்ளது சிறப்பு. நாவல்கள் வாயிலாகப் பிராமணப் பெண்களின் மனவெளியைப் பூடக மொழியில் கூறியுள்ள பாங்கை விவாதப்படுத்தியிருப்பது அருமை. லா.ச.ரா என்றாலே சற்று மனதில் தயக்கம் ஏற்படும். ஆனால் ஆய்வாளர் துணிவோடு இக்கட்டுரையை உருவாக்கி லா.ச.ராவின் படைப்புலகில் நம்மை யும் அழைத்துச் செல்கிறார். தனது எழுத்து தனக்காக மட்டுமே எழுத ப்படுகிறது என்ற லா.ச.ராவின் எழுத்துத்தவத்தை அவரது படைப்பின் மூலம் வெளிப்படுத்தி நிற்கின்றது இக்கட்டுரை .
-

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 4
தி.இரா.மீனா
அக்கமாதேவி
அற்புதத்திற்குள் அற்புதம், தெய்வீகக் குயில் என்றெல்லாம் அழைக்கப் படும் அக்கமாதேவி கர்நாடக மாநிலம் சிமோகாவிலுள்ள உடுத்தடியில் சுமதி–நிர்மல ஷெட்டிக்கு மகளாகப் பிறந்தவர். பெற்றோர் சிவனின் சரணர்கள். ஏழு வயதில் ஒரு குருவோடு அக்கமாவுக்குக் கிடைத்த அறிமுகம் சிவபெருமானிடம் பக்தி கொள்ளத் தூண்டுகிறது. கௌசிகன் என்னும் சிற்றரசன் அக்கம்மாவின் பேரழகில் மயங்கி அவளை மணக்க எண்ணுகிறான். இதில் அவள் குடும்பத்திற்கு விருப்பமில்லையென்றாலும் அரசன் தன் செல்வாக்கால் அவர்களைத் தன் விருப்பத்திற்கு உடன்பட வைக்கிறான். வேறுவழியின்றி மணக்க உடன்படும் அவள் அவனிடம் சில நிபந்தனைகளை முன்வைக்கிறாள். சென்ன மல்லிகார்ச்சுனனுக்கு [இஷ்டதெய்வம்] நாளும் வழிபாடு நடத்துதலில் அவன் தலையீடு கூடாது, தன்னைத் தேடிவரும் அடியவர்களை மறுப்பின்றி உபசரிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது அந்த இரண்டு நிபந்தனைகள். அவளழகில் மயங்கிய மன்னன் அவற்றிற்கு ஒப்புக் கொள்கிறான். சிவனடியார் கூட்டம், வழிபாடு என்று தொடர்ந்து அரண்மனையில் அக்கம்மா தேவியின் பக்திநிலை வளர்கிறது. சில நாட்களுக்குள்ளேயே அவனுக்குப் பொறுக்க முடியாமல்போக ஒரு சூழலில் அடியவர் கூட்டம் எப்போதும் ஏன் என அவளிடம் கேட்க நிபந்தனையை அவன் மீறியதாகச் சொல்லி அவள் வெளியேறுகிறாள். திருமணமான குறுகியகாலத்திலேயே அவ்வாழ்விலிருந்து வெளியேறும் அக்கமாதேவி தன் ஆடையைக் களைந்து நீண்ட கூந்தலால் உடலை மறைத்து தன் வாழ்வுச் சூழலை மாற்றிக் கொள்கிறாள். பல இடங்களிலும் அலைந்து இறுதியாகக் கல்யாண் வருகிறாள். அங்கு பசவேசர் ,அல்லமாபிரபு ஆகியோர் பங்கு கொண்டுள்ள அனுபவமண்டபத்தைச் சேர்கிறாள். அனுபவ மண்டப மென்பது சிவசாரணர்கள் கூடுமிடமாகும். இளம் பெண்ணான அவளை அனுபவ மண்டபத்திற்குள் இணைத்துக் கொள்வதற்கு முன்பு அல்லமாபிரபு அவள் அறிவாற்றலையும் பக்தி நிலையையும் அறியச் சில கேள்விகள் கேட்கிறார். அவள் அளித்த விளக்கங்கள் அவளுடைய அறிவாற்றலுக்கும், இறைப்பற்றுக்கும் அடையாளமாகின்றன. அக்கமாதேவியின் விளக்கங்களால் மகிழ்ந்த பசவேசர், சித்தராமயன் என்று வயதிலும், அனுபவத்திலும் சிறந்தவர்கள் அவளைப் பாராட்டுகின்றனர். அங்கு சிலகாலம் இருந்து விட்டுப் புறப்படுகிறாள். காடுகளில் அலைகிறாள். இறுதியில் ஆலங்கட்டி தண்ணீரில் சேர்வது போல, உப்பு தண்ணீரில் கரைவது போல. பால் பாலோடு கலப்பதைப் போல இறைவனோடு கலக்கிறாள். ஐக்கியஸ்தலம் ஆனதான புகழ் அவளுக்குக் கிடைக்கிறது. அனுபவ மண்டபத்தின் சரணர்கள் பசவேசரை பசவண்ணா என்றும், அல்லமாவைப் பிரபு என்று, அக்கமாதேவியை அக்கா என்றும் அழைப்பது அம்மூவரும் பெற்றுள்ள உயர்வையும், சிறப்பையும் காட்டுகிறது.
அனுபவ மண்டபத்திற்குள் அவளைச் சேர்க்கும் முன்பு அல்லமாபிரபு அவள் ஆன்மீக நிலையை உறுதிப்படுத்த விரும்புகிறார். அவரது கடுமையான, ஆழமான கேள்விகளுக்கு எந்தவிதத் தயக்கமுமின்றி தனக்குள் தோன்றியதை அப்படியே வெளிப்படுத்தும் அல்லமா—அக்கமாதேவி உரையாடல் கீழே:
பிரபு: “உன் இளமைக்காலத்தில் நீ இங்கு வந்ததன் காரணமென்ன? நம் சமயவாதிகள் பெண்களின் அருகாமையை ஒதுக்கியிருக்கின்றனர். உன் கணவன் யார் என்ற அடையாளத்தை நீ வெளிப்படுத்தினால் எங்களோடு இணையலாம். இல்லாவிட்டால் இங்கேயிருந்து போய்விட வேண்டும். ஒரு பெண்ணின் சேர்க்கை என்பது விஷம் போன்றது. சொல். உன் கணவன் யார்?”
அக்கமா: கடவுள் என் கணவராக வேண்டும் என்பதற்காக கடுமையாகத் தவமிருந்தேன். என் பெற்றோர்கள் என் உடலைச் சாம்பலாக்கிவிட்டு என் கையில் காப்புக்கட்டி என்னைக் கடவுளுக்குச் சொந்தமாக்கிவிட்டனர். கடவுளின் கணக்கில்லாத தொண்டர்கள்தான் என் பெற்றோர் என்பதை உலகமே அறியும் அதனால் பிரபுவே! கடவுள்தான் என் தலைவன், இந்த உலகில் அவரைத் தவிர வேறு கணவர்களில்லை.
பிரபு: ஆடையைக் களைந்து கூந்தலால் உடலை மூடிமறைக்கும் உன் செயல் பொருத்தமில்லாததாக இருக்கிறது. உடலைப் பற்றிய உள்ளுணர்வு இருந்தால்தான் இப்படியான வெளிப்பாடுவரும். அதனால் இன்னும் நீ அதிலிருந்து வெளிவரவில்லை. அதை விளக்கிச் சொல்.”
அக்கமா: அதற்கான காரணம் உலகம்தான். பெண்ணை நிர்வாண நிலையில் பார்த்திருக்காத உலகப் போக்கிற்குத்தான் அச்செயல். உடலென்பது இங்கு கணக்கில் இல்லாதது. பரிசுத்தமான மனம்தான் கடவுளுக்கு உகந்தது.
பிரபு: “மனிதப் பிறவியாக, அதுவும் பெண்ணாக இருந்து கொண்டு கடவுளோடு ஒன்றாக இணைய முடியுமா? உருவமற்ற ஒன்றோடு உருவமான ஒன்று எப்படிச் சேரமுடியும்?
அக்கமா: ”சந்தனமரம் துண்டுதுண்டாக வெட்டப்படும்போது அதன் வாசனை குறையுமா?தங்கத்தை அறுத்துச் சுடும்போது அது அதன் பொலிவை இழக்குமா? கரும்பு சக்கையாகப் பிழியப்பட்டு சுடப்படும் போது அதன் சுவை குறையுமா? பாம்பின் விஷப்பல்லைப் பிடுங்கிய பிறகு யாரும் அதோடு விளையாடலாம் சதையோடு இருக்கும் தொடர்பு சரியாகப் புரிந்துகொள்ளப்படுமென்றால் அது சரியானதுதான். தாய் அரக்கியாக மாறினால் அவளுடலின் உணர்ச்சிகளும் அரக்கத் தன்மையுடையதாகிவிடும். விருப்பப்படுகிறவனுக்கு உடல் உண்டென்று நினைக்காதே கடந்து போனவற்றைச் சொல்லி என் முகத்தில் அறைந்தாலும் இழப்பு உங்களுக்குத்தான். என்னைக் கொன்றாலும் அவன் மீது அன்பு காட்டு வதை நிறுத்த மாட்டேன். அவன் இளமையானவன் உருவற்றவன் இறப்பில்லாதவன் அளக்கவியலாதவனாகிய சென்னமல்லிகார்ச்சுனன் என் கணவன்”
பிரபு: ”உன் உடல் பெண்ணுருவம் கொண்டதாக இருக்கலாம். ஆனால் உன் மனம் கடவுளோடு இணைந்துவிட்டது.” என்று பிரபு அவளைப் பாராட்டுவதான இந்த உரையாடல் தொடர்கிறது. பசவேசர், சித்தராமயன் என்று வயதிலும் ,அனுபவத்திலும் சிறந்தவர்கள் நிறைந்த அனுபவ மண்டபத்தில் இணைகிறாள்.
அக்கமாதேவியை ’ஞானி” என்ற நிலையில் அடக்கினாலும், ஞானத்தின் அடையாளமாக வசனங்கள் அமைந்தாலும் மதுரபாவம்-நாயகன் நாயகி [சரணாசதி- லிங்கா பதி ] பாவத்தை பல வசனங்களில் காணமுடிகிறது. சென்னமல்லிகார்ச்சுனன் அக்கமாதேவியின் முத்திரையாகும். வாழ்க்கையின் நலிவு — நோவு, ஆத்ம தர்மத்தின் நிலை ஆகியவை வசனங்களில் இடம் பெறுகின்றன. வசனங்கள் தவிர, ”யோகாங்க திரிவிதி”, “ஸ்வர வசனம், ”மந்த்ரகோப்ய” முதலிய சிறு நூல்களைப் படைத்திருந்தாலும் அக்கமாதேவியின் ஆத்மார்த்த தரிசனம் வெளிப்படுவது அவளுடைய வசனங்களில்தான் எனலாம். சில வசனங்கள்:
1. “பொறி பறந்தால் என்வேட்கையும் பசியும் தீர்க்கப்பட்டதாக
நினைப்பேன்
வானம் திறந்தால் என் குளியலுக்காக என்று எண்ணுவேன்
என்தலை தோளில் சாயும்போது உன்னையே நினைப்பேன்”
சென்ன மல்லிகார்ச்சுனா “2. “பசி பிச்சைப்பாத்திர
அரிசியில் தீரும்
தாகம் கிணற்றுநீரில் தீரும்
தூங்கச் சிதைந்த கோயில்களுண்டு
ஆத்மாவுக்குத் துணை நீ
என்ன கவலை சென்ன மல்லிகார்ச்சுனா”3. “நல்ல மரத்தால் நிழலைத் தரமுடியாவிட்டால் என்ன பயன்?
செல்வந்தர் கருணையற்று இருந்தால் செல்வத்தால் என்னபயன்?
அழகான மனிதன் இரக்கமற்று இருந்தால் அழகால் என்னபயன்?
நிறைந்த உணவு இல்லாவிட்டால் பாத்திரத்தால் என்ன பயன்?
உன்னைப் பற்றிய சிந்தனையில்லாவிட்டால்
சென்ன மல்லிகார்ச்சுனா என்ன பயன்?”4. “மண்ணில் புதையல்போல
பழத்தில் சுவைபோல
கல்லில் பொன்போல
விதையில் எண்ணெய்போல
மனதில் நீ யாருக்கும் தெரியாது
சென்ன மல்லிகார்ச்சுனா”5. “நான் பயப்படும் பெண்ணில்லை
வீணான அச்சம் எதற்குமில்லை
எதையும் அடக்கமுடியும்
பசியையும் வலியையும் ஏற்றுக்கொள்வேன்
உலர்ந்த இலைகளையும் உணவாக்கிக் கொள்வேன்
கூர்மையான வாள் என்படுக்கை
எதற்கும் தயார் இந்த நிமிடத்தில் இறக்கவும்,
ஓ..சென்ன மல்லிகார்ச்சுனா”6. “பருவமடைவதற்கு முன்னால்
வெட்கமென்பது தெரிவதற்கு முன்னால்
என் மக்கள் எனக்கு மணமுடித்து விட்டனர்
என்பெண்மையை உணரும் முன்னால்
மணமுடித்து விட்டனர் சென்ன மல்லிகார்ச்சுனா”7. “எனக்கு குருவின் அருளால் இலிங்கம் கிடைத்தது
ஜங்கமா குருவினருளால் கிடைத்தது
பிரசாதம் குருவினருளால் கிடைத்தது
சரணர்களோடு பழகியது குருவால்
குரு என்நெற்றியில் திருநீறு பூசினார்
இலிங்கத்தை உடலில் சேர்த்தார்
நான் ஆசீர்வதிக்கப்பட்டவளானேன்
சென்ன மல்லிகார்ச்சுனா”
[ தொடரும் ] -

சேக்கிழார் பா நயம் – 61 (நீதி மாதவர்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
சுந்தரர் முன் காட்சியளித்த இறைவன் திருவடிச் சிறப்புகளுள் அடுத்து அவற்றின் திருவருள் தன்மைகளைக் கூறுகிறார்.
நீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன
வேதி யாதவர் தம்மைவே திப்பன
சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய
வாதி மாலவன் காணா வளவின.பொருள்: “நீதியில் நிற்கும் தவமுடையார்களது மனத்திலே ஒளி வீசி விளங்குவன; அறியாதவர்களையும் அறிவித்துத் திருத்துவன; ஒளிப்பொருள்களுக் கெல்லாம் ஒளிகொடுத்து அவற்றின் மேலும் எழுந்து விளங்கும் ஒளியாயுள்ளன; ஒரு காலத்துததோன்றும் இயல்பினராகிய மாலினாலே காணமுடியாத அளவையுடையன;
மற்ற எளிய மக்களின் உள்ளத்தில் விளக்கமின்றி இறைவன் திருவடிகள் இருக்கும். ஆனால் எல்லா இடத்திலும் இருக்கும் இறைவன் திருவடிகள் சிவபிரான் அருளிய ஆகம ஒழுக்கமும் தவமாகிய சிவபூசையும் உடைய சிறந்த அடியார்களின் நெஞ்சிலே நீங்காது நிலைத்து நிற்கும். இதனைத் தேவாரம்,
‘’கற்றாரின் உற்று ஓரும் காட்சியானை’’ என்றும்,
‘’கற்பவர் விழுங்கும் கற்பகக் கனியை ‘’ என்றும் கூறுகின்றது.
திருவருள் நிலையை அறியாது மலமாயையுள் அழுந்திக் கிடப்பவர்கள் கேவலர் எனப்படுவர். அவர்களை திருவருளால் அறிவு பெறும் நிலைக்கு இறைவன் உயர்த்துவார். இத்தகையோர் சகலர் எனப் பெறுவர். இதனை வேதித்தல் என்பார்கள். வேதித்தல் = வேறுபடுத்துதல். தெரிந்து பூசிப்போரிடத்துப் பொலிந்து, தெரியாது வாளா கிடப்போரை அறிவித்தும் அருள் செய்வன இரண்டு பாதங்கள் ஆகும்.
“கல்லாதார் மனத்தணுகாக் கடவுடன்னை“,
“மற்றவரறியா மாணிக்க மலையை“ முதலிய திருவாக்குக்கள் இதனை விளக்கும். வேதிப்பன – என்பதற்குப் பேதிக்கச் செய்வன – மாற்றுவன – என்றுரைத்தலுமாம். மாற்றுவது வேதி எனப்படும். இது தரிசவேதி – பரிச வேதி என் இருவகைப்படும். என்றது காண்க.
ஆணவத்திற் கட்டுண்டுகிடப்போரை அதிலிருந்து பரிசம் – நோக்கு – பாவனை முதலிய தீக்கைகளால் மாறச் செய்வன. பரிசத்தாலே கட்டுநீங்கும் கோழி முட்டையும், பார்வையால் நீங்கும் மீன்முட்டையும், பாவனையால் (நினைவினால்) நீங்கும் ஆமை முட்டையும், இவற்றிற்கு உதாரணங்களாகக் கூறுப.
இப்பாடலில் சோதியாய் எழும் சோதி என்பது, சூரியன், சந்திரன் , விண்மீன்கள் , அக்கினி மற்றும் விளக்குகளில் தோன்றும் எல்லா ஒளிகளையும் குறித்தது. இவை தாமே ஒளிகொடுப்பன அல்ல. இவற்றுள்ளே நின்று ஒளிகொடுப்பவன் இறைவன். அவன்பிறிதொன்றினானன்றித்தானே ஒளியுடையவன்;ஆதலின்சுயஞ் சோதியாவன். அவனை ஒளியுருவுடையவனாகவே நினைப்பது சிவாகமங்களின்றுணிபு.
சிவபூசை விதியில் சூரிய பூசையிலே சூரியமண்டலத்திடையில் விளங்கும் ஒளியுருவனாகிய சதாசிவ மூர்த்தியைப் பூசிக்கும் முறை சைவாசாரியர்களிடம் உண்டு. இச்சோதியை, சோதிகளிலே மிகுந்த சோதி என்றும்,சோதிகளுக்குள்ளே நின்று அவற்றிற்கு ஒளிதரும் சோதி என்றும் கொள்க. “ஒளியா யொளியதன் ஒளி“ என அடுக்கிக் கூறுவதுங் காண்க. மும்மலங்களுக்கு சடமாயொழியவே, அவைகளினின்றும் நீங்கிச் சுத்தமாய் மேம்படும் ஆன்ம ஞானவொளியுடன் ஒளியாகி அதனை விளக்குவன.
“சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே“ – சித்தியார்.
“ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகனுருவங்கண்டு“ – கந்தர் அலங்காரம்.
இப்பாடலில் ஆதிமாலவன் காணா அளவின என்பது – பன்றியாய்ச் சென்று திருவடி தேடிக் காணாதவர் திருமாலே யாதலானும், இங்குக் கூறுவது அந்தப் புண்டரீகப் பதமேயாதலாலும் மாலவன் என்ற பாடமே சிறந்ததாம். ஆதி – தொடக்கம் – தோன்றுதல். “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே“ என்றபடி இறைவன் ஒருவனே ஆதியும் அந்தமுமில்லாதவன்; அநாதியாயுள்ளவன். தமக்கு ஒரு ஆதியை – தொடக்கத்தை – உடையார் அநாதியை அறியார். ஆதலின் ஆதி மாலவன் காணா அளவின என்றார். “ஆதியுமந்தமுமல்லா வரும்பெருஞ் சோதி“ என்பது திருவாசகம். பெருஞ் சோதியேயாயினும் சிலர் காணப்பெறாமலிருப்பது அவர்களது பக்குவக் குறையிலேகாண்க. “சோதியேசுடரேசூடரேசூழொளி விளக்கே“ என்ற திருவாசகமும்காண்க. சோதியாய் எழும் மூன்று சோதியும் இறைவனது மூன்று கண்களாம். கண்கள் கருவிகளேயாதலின் இவற்றுள்ளே உயிரின் செயல் கலந்தாலன்றி இவைகட்குச் செயல் இல்லை. இம்மூன்றினுள்ளும் உட்சோதி யாயிருந்து இறைவன் அவற்றிற்கு ஒளி தருவன் என்பதும் குறிப்பு. கறுத்தனவாயினும் சிவந்தன; பொலிந்தனவாயினும் வேதிப்பன; சோதியவாயினும் காணா வளவின; என அணிபெறத் தொடர்ந்து துதித்த சுவையும் காண்க. வேதிப்பன – என்ற கருத்து
“குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன“ என்ற திருவிருத்தத்திலும், மாலவன் காணா- என்ற கருத்து “கருடத் தனப்பாகன் காண்டற் கரியன“ என்ற திருவிருத்தத்திலும் அப்பர் பெருமான் அருளியமை காண்க. சோதிய – என்பது “சோதியாய் நிறைந்தான் சுடர்ச்சோதியுட் சோதியான்“ என்ற திருஞான சம்பந்த நாயனார் தேவாரத்துட் காண்க. இனி முழுப் பாடலையும் படித்துணர்வோம்,
நீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன
வேதி யாதவர் தம்மைவே திப்பன
சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய
வாதி மாலவன் காணா வளவின!ஆகவே சிவபூசை செய்யும் தவமுடையோர் நெஞ்சில் பொலிவதும், கேவலமலத்துட் கிடந்தோரைச் சகலராக்குவதும், ஒளிகள் அனைத்தையும் கொண்ட பேரொளிப் பிழம்பாய் நிற்பனவும், ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியும் இறைவன் திருவடிகளே என்று சுந்தரர் கண்டு கூறியதைச் சேக்கிழார் கொண்டு கூறுகிறார்.
-

புதுமை காட்டும் புத்தாண்டு!
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியாவெடித்துச் சிதறும் பட்டாசு
விடியல் காட்டும் குறியல்ல
இடக்கு முடக்கு வாதங்கள்
எதற்கும் தீர்வு வழியல்ல
நினைப்பில் மெய்ம்மைப் பொறியதனை
எழுப்பி நின்று பார்த்திடுவோம்
பிறக்கும் வருடம் யாவருக்கும்
சிறப்பை ஈந்து சிரிக்கட்டும்!
அறத்தைச் சூது கவ்வுமெனும்
நினைப்பை பொசுக்கி எரித்திடுவோம்
உளத்தில் உறுதி எனுமுரத்தை
இருத்தி வைக்க எண்ணிடுவோம்
சிறுமை தொலைந்து போகட்டும்
வெறுக்கும் எண்ணம் மடியட்டும்
புதுமை காட்டும் பாங்குடனே
புதிய வருடம் பிறக்கட்டும்!
-

புத்தாண்டு அழகே வருக
விவேக் பாரதி
புத்தாண் டழகே வருக! – நாளும்புதுமை இன்பம் இயல்பாய்த் தருக!இத்தோ டின்னும் நலமாய் – ஒருஈடில் லாத சுகமாய்த் தரமாய்புத்தாண் டழகே வருக!கண்ணில் பட்டவை வண்ண மாகுக
காற்றில் ஆயிரம் பண்கள் தூவுக
மண்ணில் அனைத்தும் இன்ப மாகுக
மனமெல் லாமும் மலர்க ளாகுகஎண்ணம் நினைப்பன ஏற்ற மாகுக
எல்லாம் எல்லாம் மாற்ற மாகுக
தண்ணீர் அமுதம் வானில் வளர்க
தரையெல் லாமும் நிறையென் றாகவயல்கள் எல்லாம் வளமை காண்க
வழிகள் எல்லாம் வலிமை காண்க
புயங்கள் உடல்கள் உறுதி காண்க
புதிராம் வாழ்க்கை புதுமை காண்கநியதிகள் எல்லாம் நிலைமை காண்க
நித்தமும் சத்தியம் நிறைவைக் காண்க
முயற்சி அனைத்தும் முனைப்பைக் காண்க
முற்றும் லட்சியம் வெற்றியைக் காண்கஏமாற் றங்கள் இனிமறை யட்டும்
ஏகாந்தங்கள் இனிநிறை யட்டும்
நாமாய் உழைக்கும் நலம்வள ரட்டும்
நல்லவர் நெஞ்சில் நயம்விளை யட்டும்ஓமெனும் தத்துவம் உள்ளுறை யட்டும்
ஒவ்வொரு கணமும் களியிருக் கட்டும்
ஆமிவை எல்லாம் இனியமை யட்டும்
ஆண்டுகள் நிலையிலை அகமுண ரட்டும்!! -

நெல்லைத் தமிழில் திருக்குறள்- 94
நாங்குநேரி வாசஸ்ரீ
94. சூது
குறள் 931
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்றுநிச்சயம் செயிக்கப் போகுதோம்னு தெரிஞ்சாலும் சூதாடக்கூடாது. அது தூண்டில் முள்ள இரைனு நெனச்சி முழுங்கின மீன் கணக்கா ஆக்கிவிட்டுரும்.
குறள் 932
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறுஒருக்க செயிச்ச சந்தோசத்துல நூறு தடவ பொருளத் தோத்துப் போவுத சூதாடிங்க வாழ்க்கையில நல்லது நடக்க வழி இருக்கா?
குறள் 933
உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்பணயம் வச்சி ஒருத்தன் தொடர்ச்சியா சூதாடினாம்னா அவன் சொத்தும் அதனால வருத லாபமும் எதிராளிகிட்ட போய் சேந்துக்கிடும்.
குறள் 934
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில்ஒருத்தனுக்கு பல சங்கடங்கள உண்டாக்கி அவன் மரியாதயக் கெடுத்து ஏழையாக்கிப்போடுத சூதாட்டம் கணக்கா கெட்ட காரியம் வேற இல்ல.
குறள் 935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்சூதாடுத எடம், சாதனம், ஆடுத தன் கைத்தெறம இதையெல்லாம் பெருமயா நெனஞ்சி சூதாட்டத்த இறுக்கிப் பிடிச்சிக்கிட்டவக எல்லாம் கைவிட்டுப்போயி ஒண்ணுமில்லாமப் போயிடுவாக.
குறள் 936
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்சூதாட்டம் ங்குத மூதேவியால முழுங்கப்பட்டவுக வயிறார திங்க ஏலாம பலவிதமா சங்கடப்பட்டு சீரளியுவாக.
குறள் 937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்சூதாடுத எடத்துலயே ஒருத்தன் தன் காலத்தக் கழிச்சாம்னா அவன் பரம்பரச்சொத்து கைவிட்டுப் போவும். நல்ல கொணத்தையும் கெடுத்துப்போடும்.
குறள் 938
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும் சூதுசூதாட்டம் பொருள அழிச்சுப்போடும் அந்தானிக்கு பொய் பேசச் சொல்லும் பொறவு இரக்கங்கெட்டவனாக்கி செரையா வந்து முடியும்.
குறள் 939
உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்சூதாடுதுவன விட்டு மரியாத, படிப்பு, சொத்து, சாப்பாடு, உடுப்பு எல்லாம் அண்டாம வெலகிப்போவும்.
குறள் 940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்பொருள வச்சி தோக்கத் தோக்க சூதாட்டத்துமேல வைக்க ஆச அதிகமாவுததும் ஒடம்பு சங்கடப் படப்பட உசிரு மேல வைக்க ஆசயும் ஒண்ணுதான்.
-

விடியட்டும்!
ரா. திவ்யா, பொள்ளாச்சி
விடியல் வரவை நோக்கி
வாழ்க்கை
புதுமை நோக்கி
சிந்தனை நிசப்தம்
நெகிழ்ச்சி சாதனைகள்
மன எழுச்சியோடு
தொடரட்டும்!
ஆண்டின் தொடக்கமே
புதிய விடியலை நோக்கி!
புத்தாண்டே வருக!
-

புத்தாண்டு பிறக்குது
சி. ஜெயபாரதன், கனடா
புத்தாண்டு பிறக்குது ! நமக்கு
புத்தாண்டு பிறக்குது !
கடந்த ஆண்டு மறையுது, நடந்த
தடம் மாறப் போகுது !
வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு
திக்கு மறையப் போகுது.
கணனி யுகம் பின்னி உலகு
பொரி உருண்டை ஆச்சுது.
வாணிப உலகு கூடி இயங்கி
நாணய மதிப்பு உயருது
விலை மதிப்பு ஏறப் போகுது.
ஐக்கிய நாட்டு மன்றம்
அமைதி கண்காணித்து வருகுது.
பூகோளச் சூடேற்றம் புவியோரை
ஒன்று படுத்திப்
போரணியில் நிறுத்தி விட்டது.
வித்தைகள் இணைந்து உழைக்கணும் !
விஞ்ஞானம் மக்கள் நலம் பெருக்கணும் !
வேலைகள் பெருகணும் !
ஊதியம் உயரணும்.
சித்தர்கள் மண்ணில் பிறக்கணும் !
பித்தர்கள் தெளிவாகணும் !
புத்திகள் கூர்மை ஆகணும் !
கத்திகள் ஏர்முனை ஆகணும்.
யுக்திகள் புதிதாய்த் தோன்றணும்.
சண்டைகள் குறையணும் !
ஜாதிகள் கைகோர்த்து உழைக்கணும் !
சமய இனத்தர் கூடி வசிக்கணும் !
திறமைகள் ஒன்றாகி வலுக்கணும்
வறுமை குன்றி வருவாய் பெருகணும்.
நீர்வளம் பெருக்கணும்.
நிலவளம் உணவு அறுவடை செய்யணும்.
வேளாண்மை விருத்தி ஆகணும் !
பசுமை மின்சக்தி யந்திரங்கள் ஓட்டணும்.
பஞ்சம் குறைய மிஞ்சி விளையணும் !
லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும் !
நீர்வளம், நிலவளம், சூழ்வெளித்
துப்புரவு செய்யணும் !
விடுதலை நாடு சீராய்த் தழைக்க,
கடமைகள் முடிக்கணும்; நாட்டுப்
பொறுப்புகள் ஏற்கணும் !
தேசப் பற்று மனதில் ஊற்றாகணும் !
தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் !
தேச மாந்தர் நேசம் பெருகணும் !
-

எண் மாற்றமும் எண்ண மாற்றமும்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்ஆண்டுக்கொருமுறை பிறக்கும் புத்தாண்டு .
ஆண்டாண்டு தோறும் வாழ்த்துக்கள் பரிமாற்றம்
ஆண்டவன் அருளால் அனைத்தும் நலமாக
வேண்டுவோம், உழைப்போம், பெறுவோம் முன்னேற்றம்.இவ்வாண்டு வந்திட்ட இன்பங்கள் தொடரட்டும்.
இவ்வாண்டு வந்திட்ட இன்னல்கள் மறையட்டும்.
வருமாண்டு வளமாக வருமானம் சிறக்கட்டும்.
வருமானம் பெருகிட வழிகள் திறக்கட்டும்.
சபதங்கள் மேற்கொள்ள புத்தாண்டு வேண்டாமே.
சபலங்கள் இல்லாத மனஉறுதிதான் வேண்டும் .எண் மாற்றம்தானென்று எளிதாக எண்ணாதீர்
எண்ண மாற்றம் இருந்தால் எல்லாம் நிறைவேறும் .
நன்னம்பிக்கை கொண்டு நல்லதே செய்திடுவீர் .
தன்னம்பிக்கை இருந்தால் ,தரணி நம் வசமாகும்.இரண்டாயிரத்து இருபதில் இந்தியா வல்லரசாகுமென்று
மறைந்த மாமேதை கலாம் சொல்லிவைத்தார் .
வல்லரசாவது பெரிதன்று, மக்களுக்கு ஏற்ற
நல்லரசாள்வதே நன்மை பயக்குமன்றோ.விவசாயமும் தொழிலும் , விரைந்து பெருகட்டும் .
வேலையில்லா நிலை வேகமாய்க் குறையட்டும்.
விலைவாசி குறைந்து மக்கள் மனம் மகிழட்டும்.
பொருளாதார மந்த நிலை மாறட்டும்.
அரசியல் கட்சிகள் அறிவோடு நடக்கட்டும் .
மதவாதம், இனவாதம், மண்ணுக்குள் புதையட்டும் .
தீவிரவாத எண்ணம் தீக்கிரையாகட்டும் .
பாலியல் குற்றங்கள் பனிபோல் மறையட்டும்.
விஞ்ஞானமும் ,மெய்ஞானமும் விழிகளாய்த் திகழட்டும்.
அஞ்ஞானம் அகன்று அறிவொளி படரட்டும்.
உழைப்புக்கும், உண்மைக்கும், உயர்வு கிடைக்கட்டும்.
தாய்நாட்டுப்பற்று எங்கும் தழைத்து ஓங்கட்டும். -

இயற்கையில் எழுந்த இசை – பகுதி 3
நிர்மலா ராகவன்
சடை விரிந்ததேன்
கோயம்புத்துரில் ஒரு சிற்றுண்டிசாலைக்கு வெளியே மழைக்கு ஒதுங்கியபோது, “அம்மா! சிவன் மேலே `ஏன், ஏன்’னு கேக்கறமாதிரி ஒரு பாட்டு எழுதேன். பேகட ராகத்திலே இருக்கணும்,” என்று ஷீலா ஒரு வேண்டுகோள் விடுத்தாள்.
உடனே, `சடை விரிந்ததேன் சிவனே?’ என்று பாடிக்காட்டினேன்.
“இதேதான்!” என்று ஆர்ப்பரித்தாள்.
எங்களிருவரையும் வீட்டுக்கு அழைத்துப்போக வந்த என் இளைய சகோதரியிடம், “எனக்கு ஒரு பாட்டு வந்தது,” என்று உற்சாகமாக அந்த ஒரு வரியைப் பாடிக்காட்டினேன்.
நான் எதற்கு அடிபோடுகிறேன் என்று அவளுக்குத் தெரியாதா! “எனக்குப் பாட்டெல்லாம் எழுதப் பிடிக்காது,” என்றபடி, விறைப்பாக காரை ஓட்டிப்போனாள்.
“உன்னை யார் எழுதச் சொன்னது?” என்ற நான் அந்த ஒற்றை வரியை விடாது பாடியபடி இருந்தேன்.
சில நிமிடங்களுக்குள், தன்னையுமறியாது, அடுத்த வரியைப் பாடினாள், சங்கீத வித்வான் டாக்டர் ஹேமலதா நடேசன் (1960-களில், அடையார் இசைக்கல்லூரியில் முசிறி, Dr.எஸ்.ராமநாதன், K.V. நாராயணஸ்வாமி, T.N. கிருஷ்ணன் போன்ற பல வித்வான்களிடம் பயின்றவள்).
அவள் பாடப் பாட, நான் ஸ்வரப்படுத்தினேன். நாங்களிருவரும் மாறி மாறிப் பாட, நான்கு ராகங்களில், இரண்டிரண்டு வரிகள்கொண்ட பாடல் முழுமை பெற்றது.
இப்பாடலைக் கேட்க:
-

நெல்லைத் தமிழில் திருக்குறள்- 93
நாங்குநேரி வாசஸ்ரீ
93. கள்ளுண்ணாமை
குறள் 921
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்கள்ளு குடிக்க பழக்கம் இருக்கவுகளப் பாத்து யாரும் பயப்படமாட்டாங்க. வாழுத காலத்துலயும் அவுகளுக்கு புகழ் இல்லாமப் போவும்.
குறள் 922
உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்கள்ளு குடிக்கக் கூடாது.. படிச்ச பெருமக்க முன்ன மானம் மருவாதி கெட்டு அலையணும்னு நெனைக்கவன் குடிச்சிக்கிடலாம்.
குறள் 923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களிஎல்லாத்தையும் பொறுத்துப்போவுத பெத்த ஆத்தா முன்ன ஒருத்தன் கள்ளு குடிச்சிட்டு கெடந்தாம்னா அவளே சகிச்சிக்கிட மாட்டாங்குதப்போ படிச்ச பெருமக்க சகிப்பாகளா?
குறள் 924
நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்குகள்ளு குடிக்கதுங்கத ஆக்கங்கெட்ட காரியத்த செய்யுதவன் முன்ன நாணம் ங்குத நல்ல கொணம் நிக்காம ஓடிப்போவும்.
குறள் 925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்தன்ன மறந்து சொரணகெட்டு மயங்கிக் கெடக்கதுக்காவ ஒருத்தன் வெல கொடுத்து கள்ளு வாங்கிக் குடிக்கதுமாரி கூறுகெட்டதனம் ஒண்ணுமில்ல.
குறள் 926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்ஒறங்குதவருக்கும் செத்தவருக்கும் எங்ஙன பெரிய வித்தியாசமில்லயோ அங்ஙனதான் கள்ளுகுடிக்கவனுக்கும் விசம் குடிச்சவனுக்கும் இருக்கதும்..
குறள் 927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்கள்ளை ஒளிச்சி வச்சிக்கிட்டு குடிச்சாலும் ஊர்க்காரவுக தெரிஞ்சிக்கிட்டு எப்பமும் எளக்காரம் செஞ்சு சிரிப்பா சிரிப்பாக.
குறள் 928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்கள்ளு குடிக்கவன் நான் குடிச்சதே இல்லன்னு பொய் சொல்லுதத உட்டுப்போடணும். ஏம்னா அவன் குடிச்சிருக்க நேரம் மனசுக்குள்ளார ஒளிச்சு வச்ச உண்ம வெளிய வந்துரும்.
குறள் 929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்றுகுடிபோதையில மயங்கிக் கெடக்கவனுக்கு புத்தி சொல்லுதது தண்ணிக்குள்ளார முங்கினவன தீப்பந்தம் புடிச்சுக்கிட்டு தேடுதது கணக்கா ஆவும்.
குறள் 930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வுஒரு குடிகாரன் தான் குடிக்காம இருக்குதப்போ மத்த குடிகாரனப் பாத்து நாமளும் இப்டிதான் சீரளியுதோம்னு புரிஞ்சிக்கிடமாட்டானோ?
-

குறளின் கதிர்களாய்…(281)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(281)
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
றகைமைக்கண் தங்கிற் றுலகு.-திருக்குறள் -874 (பகைத்திறம் தெரிதல்)
புதுக் கவிதையில்…
தேவையின் போது
பகைமையையும்
மாற்றித் தமக்கு
நட்பாக்கிக் கொள்கிற
நல்லியல்பு உள்ளவனின்
பெருமையினுள் அடங்கிவிடும்
இவ்வுலகே…!குறும்பாவில்…
தேவையறிந்து பகைமையையும்
நட்பாக்கிக்கொள்ளும் நற்குணமுள்ளவனின்
பெருமையில் அடங்கிடும் உலகிதுவே…!மரபுக் கவிதையில்…
தேவை ஏற்படும் போதினிலே
தொல்லை தந்திடும் பகைமறந்து
நோவைத் தராத வகையிலதை
நட்பாய் மாற்றிடும் நற்குணத்தால்
சேவை செய்திடும் நல்லவனைச்
சேர்ந்திடும் அளவிலாப் பெருமையெலாம்,
காவிய நாயகன் இவன்திறத்துள்
காசினி யடங்கிடும் காண்பீரே…!லிமரைக்கூ..
உறவழிக்கும் குணமாம் பகையை
மாற்றி நட்பாக்குவோன் பெருமையில் பாராய்,
உலகேயதில் அடங்கிடும் வகையை…!கிராமிய பாணியில்…
வேண்டாம் வேண்டாம்
பகயது வேண்டாம்,
ஒறவக் கெடுத்திடும்
பகயே வேண்டாம்..தேவய நல்லாத் தெரிஞ்சிக்கிட்டு
தேவயில்லாத பகயத்தான்
நன்ம தருகிற
நட்பா மாத்தி வாழுற
நல்லவனோட பெருமயிலதான்
அடங்கியிருக்கு ஒலகமே..அதால
வேண்டாம் வேண்டாம்
பகயது வேண்டாம்,
ஒறவக் கெடுத்திடும்
பகயே வேண்டாம்…! -

தமிழ்த்தொண்டாற்றிய தவநெறிச் செல்வர் – குமரகுருபரர்
-மேகலா இராமமூர்த்தி
தாமிரபரணியாற்றின் வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டமென்னும் திருத்தலத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீகைலாசம் எனும் பகுதியைச் சார்ந்த சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாமசுந்தரி அம்மையாருக்கும் கி.பி. 1625ஆம் ஆண்டு, ஆனித் திங்கள் திருவாதிரை நன்னாளில் திருமகனாய்த் தோன்றினார் சைவமும் தமிழும் தழைக்கவந்த அருளாளரான குமரகுருபரர்.
பிறந்து ஐந்தாண்டுகள் வரைப் பேசாத மூங்கைப் பிள்ளையாக அவர் இருந்ததனால் கவலையுற்ற அவருடைய பெற்றோர், அவரைத் திருச்செந்தூருக்கு எடுத்துச்சென்று செந்திலாண்டவர் சந்நிதியில் கிடத்திவிட்டுப் பாடுகிடந்தனர். முன்னியதை முடித்துவைக்கும் முருகப்பெருமான் அருளால், பேசாத அக்குழந்தை பேசும் திறன்பெற்றது. அம்மட்டோ? பாடும் திறனும் பெற்றது என்கின்றது அவருடைய வரலாறு.
பின்னர், கல்வியில் நல்ல தேர்ச்சிபெற்ற குமரகுருபரர், கந்தர் கலிவெண்பா என்ற நூலினை முதலில் பாடினார். தாம் பிறந்த தலத்தில் எழுந்தருளியிருந்த கைலாசநாதர்மீது கைலைக் கலம்பகம் எனும் பிரபந்தம் இயற்றினார். ஞான சாத்திரங்களே அன்றித் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும் நல்ல புலமைபெற்றார் குமரகுருபரர்.
அதன்பயனாய், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரை மீனாட்சியம்மை குறம், மதுரைக்கலம்பகம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், சகலகலாவல்லி மாலை முதலிய அற்புதமான நூல்களை இயற்றி அன்னைத்தமிழுக்கு அணிசெய்தார்.
குமரகுருபரரருக்குச் சிவஞான உபதேசம் செய்தருளியவர் தருமபுர ஆதினத்தில் நான்காம் பட்டத்தில் குருமூர்த்தியாக விளங்கிய திருநிறை மாசிலாமணி தேசிகராவார். துறவுநிலை அருளவேண்டுமென்று தம் ஞானாசிரியரிடம் குமரகுருபரர் வேண்ட, அவ் ஆதீன மரபுப்படி துறவறம் மேற்கொள்ள விரும்புவோர் தலயாத்திரை செய்துவரல் வேண்டுமாதலால் காசி யாத்திரை செய்து திரும்புமாறு குமரகுருபரருக்குக் கட்டளையிடுகின்றார் குருமகா சந்நிதானம் தேசிகர் அவர்கள்.
காசிக்குச் சென்றுதிரும்ப நெடுங்காலம் ஆகுமே என்று கவலைப்பட்ட குமரகுருபரரைச் சிதம்பரம் வரை சென்றுவரப் பணித்தார் மாசிலாமணி தேசிகர். அவ்வாறே சிதம்பரம் சென்ற குமரகுருபரர், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை முதலிய நூல்களை அங்கே இயற்றினார். அங்கிருந்து திரும்பியவர் பின்னர்க் காசிக்கும் சென்றார்.
காசியை அக்காலத்தில் ஆண்ட தில்லி பாதுஷாவான தாரா ஷுகோவின் மனத்தில் இடம்பெற்றுச் சிவத்தொண்டுகள் சிலவற்றைக் காசியில் புரிய விழைந்த குமரகுருபரர், பாதுஷாவோடு உரையாடுவதற்கு வசதியாக அவருடைய தாய்மொழியான இந்துஸ்தானியை விரைவில் கற்க விரும்பிக் கலைமகளைத் துதித்துச் சகலகலாவல்லி மாலை பாடி அவள் அருளால் இந்துஸ்தானி மொழியில் புலமை பெற்றார் என்று கூறப்படுகின்றது.
பிறகு பாதுஷாவிடம் இந்துஸ்தானி மொழியிலேயே பேசி அவர் மனத்தைக் கவர்ந்து, காசியில் கேதார கட்டம் (Kedar Ghat) எனுமிடத்தில் மடம்கட்ட ஓர் இடம் பெற்றார் குமரகுருபரர். அவ்வாறு கட்டப்பட்டதே குமாரசாமி மடமாகும். அங்கேயே சிவபோகம் செய்து வாழ்ந்துவந்தார் அவர். அக்காலக்கட்டத்தில்தான் காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக்கலம்பகமும் அவரால் இயற்றப்பட்டன. காசியில் தாம் வாழ்ந்த இடத்தில் தமிழிலும் இந்துஸ்தானியிலும் புராணச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தியிருக்கின்றார் அவர்.
அளவிடற்கரிய தமிழ்ப்பற்றுடையவரான குமரகுருபரர், தாம் முதலில் பாடிய கந்தர் கலிவெண்பாவிலேயே,
”ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசுமியல் பல்காப் பியத்தொகையும் – ஓசை
எழுத்துமுத லாம்ஐந் திலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து…” (கந்தர் கலிவெண்பா: 118-119)அடியேற்கு அருளவேண்டும் என்று கந்தனை வந்தனை செய்திருக்கக் காண்கின்றோம்.
சகலகலாவல்லி மாலையிலும்,”நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள்வாய்…” என்றும்”பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்…” என்றும் கலைமகளைத் துதிக்கின்றார்.குமரகுருபரருடைய செய்யுட்களில் தனிச்சிறப்புப் பெற்று விளங்குவது அவற்றின் இன்னோசையே ஆகும். ஏனையோரின் பாட்டுக்களிலிருந்து இவருடைய செய்யுட்களை நம் செவிப்புலன்கொண்டே எளிதில் வேறுபடுத்திவிடலாம். இச்செய்யுட்களின் சொற்களும் சொற்றொடர்களும் ஒன்றினோடு ஒன்று செவிக்கினிமை தரும்வகையில் பொருந்த அமைந்துள்ள பாங்கு, தென்பாண்டிநாட்டுப் பொருநை ஆற்றின் ஓட்டத்தை நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றது.
குமரகுருபரர் இயற்றிய நீதிநெறிவிளக்கம் எனும் 102 வெண்பாக்களால் அமைந்த அறநூல், அரிய வாழ்வியல் கருத்துக்களை நமக்கு அறியத் தருகின்றது. இந்நூலின் கருத்தாழத்தில் ஈடுபட்ட மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கரும், குடந்தைக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவருமான, சி. தியாகராசச் செட்டியார் ”திருக்குறள் பருவத்தே பெற்ற பிள்ளை நீதிநெறிவிளக்கம்” என்று இதனைப் போற்றியுள்ளார்.
இந்நூலிலிருந்து சில பாடல்களைச் சுவைத்தின்புறுவோம்!
கல்விகுறித்துப் பேசுகின்ற நீதிநெறிவிளக்கப் பாடலொன்று,
கற்புடைய மனைவியை ஒத்திருப்பது கல்வி; அம்மனைவியினால் கிடைக்கப்பெறும் காதற் புதல்வனே இனிய செய்யுள்; சொல்வன்மையே செல்வமாகும்; அச் செல்வத்தால் பெருமைமிகு அவையிலுள்ளோர் மனங்களை மகிழச்செய்தல் ஒருசிலராலேயே இயலும் என்கின்றது.
கல்வியே கற்புடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே ஈர்ங்கவியாச் சொல்வளம்
மல்லல் வெறுங்கையாம் மாணவை மண்ணுறுத்தும்
செல்வமும் உண்டு சிலர்க்கு. (நீதிநெறி விளக்கம் – 3)இளமை நிலையாமை, செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை, உயிர் நிலையாமை எனும் நால்வகை நிலையாமையைப் பாடாத அறநூல்களே அநேகமாகத் தமிழில் இல்லை எனலாம். திருக்குறள், சிலப்பதிகாரம், நாலடியார், திருமந்திரம் என்று நீளும் இவ்வரிசையில் குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கத்திற்கும் இடமுண்டு.
நீரில் தோன்றிடும் குமிழி போன்றது இளமை; அந்நீரில் எழும் அலைகள் போன்றது செல்வம்; அந்நீர்மேல் எழுதிய எழுத்துப் போன்றது இம்மானுட யாக்கை; எனவே சிவபிரானை வழுத்துவதே மாந்தர்க்கு வாழ்வாக அமையவேண்டும் என்று அறிவுறுத்துகின்றது இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள்.
நீரிற் குமிழி இளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் – நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று.கலைகளில் சிறந்தது இலக்கியக் கலை. நிலையில்லாமல் மாறும் அழகின்பத்தை நிலைபெறச் செய்ய இலக்கியம் பயன்படுகின்றது. மேற்கு வானத்தில் மாலையில் காணப்படும் அந்தி அழகு நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கின்றது. உள்ளம் வியந்துபோற்றும் அழகுமிக்க சிறந்த காட்சியை வானில் கண்டு மகிழ்கின்றோம். சிறிதுநேரம் கழித்து மீண்டும் அதனைக் கண்டுமகிழ விரும்பினால், அந்த அழகு, புலன்களுக்கு எட்டாத ஒன்றாக ஆகிவிடுகின்றது. ஒருநாள் ஒருவேளை உள்ளத்தில் தோன்றிய புதிய உணர்ச்சி மற்றொரு நாள் மற்றொரு வேளையில் தோன்றுதல் அரிதாகின்றது. இவ்வாறு மறைந்து மாறிப்போகும் அழகையும் உணர்ச்சியையும், படைப்பாளி தான் படைக்கும் இலக்கியத்தின்மூலம் நிலைபேறடையச் செய்துவிடுகின்றான். அத்தகைய படைப்பாளி உயிர்களைப் படைக்கும் பிரமனைவிட உயர்ந்தவன். ஏனெனில் பிரமன் படைக்கும் உயிர்களுக்கு அழிவுண்டு; ஆனால் படைப்பாளிகளாகிய புலவர்களின் படைப்புக்களோ காலத்தை வென்று, நின்று வாழக்கூடியவை என்கிறார் குமரகுருபரர்.
கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
மலரவன் வண்டமிழோர்க்கு ஒவ்வான் – மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு. (நீதிநெறி விளக்கம் – 6)குமரகுருபரரின் இக்கருத்தை மனத்திற்கொண்டே, ”படைப்பதனால் என் பேர் இறைவன்; நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று பாடினாரோ கவியரசு கண்ணதாசன் என எண்ணத் தோன்றுகிறது.
பொதுவாகவே மனிதர்கள் தம்மைப் பிறர் மதிக்கவேண்டும் எனும் வேட்கையும் விருப்பமும் கொண்டவர்கள். அம்மதிப்பைப் பெற அவர்கள் செய்யவேண்டுவது என்ன என்பதை ஒரு பாடலில் விளக்குகின்றார் குமரகுருபரர்.
”பிறருடைய குறைகளையே சொல்லித் தூற்றிக்கொண்டிராமல் அவர்களின் குணங்களைப் பலரறியப் போற்றுங்கள்; அனைவரிடமும் பணிவோடு நடந்துகொள்ளுங்கள்; பெருமதிப்புப் பெறுவீர்கள்” என்பதே அப்புலவர் பெருந்தகை நமக்குச் சொல்லும் நல்லுரை.
பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாதே நோற்பதொன்று உண்டு – பிறர்பிறர்
சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்குந் தாழ்ச்சி சொலல். (நீதிநெறி விளக்கம் – 19)குமரகுருபரர் ஓர் அருந்தமிழர்; தமிழ்மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து நன்னிலை பெறவேண்டுமென விரும்பியவர். அதனாற்றான் தம்முடைய நூல்களில் தமிழினம் ஈடேற்றம் காண்பதற்கேற்ற உயர்ந்த அறக் கருத்துக்களைத் தவறாது வலியுறுத்தியிருக்கின்றார்.
”ஆசை ஆசை என்று அத்தனைக்கும் ஆசைப்படாதீர்! செல்வம் என்பது நம் சிந்தையின் நிறைவே ஆகும். கட்டுக்கடங்கா ஆசை வறுமையில் கொண்டுபோய் விட்டுவிடும்!” என எச்சரிக்கின்றார், தம்முடைய சிதம்பர மும்மணிக்கோவையில்.
”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே
அல்கா நல்குரவு அவாவெனப் படுமே.” (சிதம்பர மும்மணிக்கோவை: 26)தமிழில் தோன்றிய பிள்ளைத்தமிழ் நூல்களில் குமரகுருபரர் பாடியருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. அதிலும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தெய்வநலஞ் சான்ற தீந்தமிழ்ப் பனுவலாகும். திருமலைநாயக்கர் அவையில் இந்நூலை அரங்கேற்றம் செய்த குமரகுருபரர், ”தொடுக்கும் கடவுள்” எனத் தொடங்கும் வருகைப் பருவத்துப் பாடலைப் பாட, அன்னை மீனாட்சியே சிறுமியாக வந்து குமரகுருபரரின் கழுத்தில் ஓர் முத்தாரத்தை அணிவித்துச் சென்றாள் என்று சொல்லப்படுகின்றது.
அப்பாடல் இதுதான்!
தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
தொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்
சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற
ஒருவன் திருவுள் ளத்தில்அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிர் ஓவியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற்கா டேந்தும்இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே! (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – வருகைப்பருவம்)குருபரரின் இறைக்கொள்கையைப் பொறுத்தவரையில் அவர் சைவ சமயத்தில் பற்றுக்கொண்டிருந்த சிவநெறியாளராக இருந்தபோதிலும், பிற கடவுளர்களைப் புறக்கணிக்கவோ, பழிக்கவோ இல்லை.
ஒரு கடவுள், ஒரு மொழி, ஒரு கலை, ஒரு நாடு என்னும் வரையறையின்றிப் பல கடவுளரையும், பல மொழிக் கருத்துக்களையும், பல கலைச் செய்திகளையும் பல நாட்டு வருணனைகளையும் இவருடைய செய்யுட்களில் காண்கின்றோம். இந்நாட்டின் தென்திசையிலுள்ள செந்தூரையும், வடநாட்டிலுள்ள காசியையும் இவர் பாடுகின்றார். தாம் பிறந்த பாண்டி நாட்டையும், தம் குருவைப் பெற்ற சோழநாட்டையும், வாழ்ந்து வந்த கங்கைக் கரையையும் வருணிக்கின்றார். சிவபெருமான் முதல் கலைமகள் வரையுள்ள தெய்வங்களைப் பாராட்டுகின்றார். இவற்றால் இவர் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் உளப்பாங்கோடு விரிந்த உலகியல் அறிவும் பெற்றவர் என்பது தெற்றெனப் புலனாகின்றது.
தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து வளர்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து, காவிரியாற்றங்கரையிலும் கங்கையாற்றங்கரையிலும் மடம் அமைத்துத் தமிழையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்த பதினேழாம் நூற்றாண்டின் பெரும்புலவர் குமரகுருபரர். இல்லறவாழ்வைத் துறந்தபோதினும் தமிழைத் துறக்காத தகைசால் பெருந்தகையான அவர், இறுதியில் கங்கையாற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.
சொற்சுவையும், பொருட்சுவையும், தெவிட்டாத அருட்சுவையும், சிந்தை மகிழும் இன்னோசையும் மிளிரும் அத்தவநெறிச் செல்வரின் அருந்தமிழ்ப் பனுவல்களைத் தமிழர்களாகிய நாம் அனைவரும் படித்துப் பயன்பெறுவோம்!
*****
கட்டுரைக்கு உதவியவை:
https://ta.wikipedia.org//wiki/குமரகுருபரர்
https://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/Blessed-in-life-and-death/article16481818.ece
http://www.tamilhindu.com/2008/09/kumaraguruparar-life-history-by-uvesa/
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/jun/09/அங்கயற்கண்ணி-அளித்த-அங்கீகாரம்-2717201.html



