Blog

  • ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் – ஒரு நோக்கு

    ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் – ஒரு நோக்கு

    மகாதேவஐயர்  ஜெயராமசர்மா 
    B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , Dip . in . com , M.Phil Edu ,SLEAS
    மேனாள் தமிழ் மொழி கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியாவில் தமிழர்கள்

    பல இடங்களிலிருந்தும் தமிழர்கள் புலம்பெயர்ந்து கங்காரு நாடு என்று சிறப்பித்து அழைக்கும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். இங்கு தமிழர்கள் வருகை எப்படி அமைந்தது என்பதை அறிந்து கொண்டால்த்தான் தமிழர்கள் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் எந்தவகையில் தங்களின் அக்கறையைச் செலுத்தினார்கள் என்று அறிவதற்கு பொருத்தமாக இருக்கும் என்னும் காரணத்தால் தமிழரின் வருகை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.

    நியூசிலாந்தின் தலைநககரமான வெலிங்டனில் உள்ள நூதனசாலையில் வெண்கல மணி ஒன்று இருக்கிறது. இந்தமணி வில்லியம் கொலன்சோ என்பவரால் நியூசிலாந்தின் நோர்த்லாண்ட் என்னும் இடத்தில் 1836 இல் கண்டுடெடுக்கப்பட்டது. அந்த மணியின் அடியில் இருபத்து மூன்று எழுத்துக்கள் சுற்றிவர இருக்கிறது. இவ்வாறு இருக்கும் எழுத்துக்கள் தமிழ் எழுத்தாக இருப்பதுதான் இங்கு மிகவும் முக்கியம் எனலாம். இதனால் இதனைத் தமிழ் மணி என்று அழைக்கலாம்.  இந்த மணியின் அடிப்பாகத்தில் “முகைய்யதின் வகுசுவின் கப்பல் மணி” என்ற கருத்தில் அதிலுள்ள வார்த்தைகள் அமைந்துள்ளன. கி.பி 200 இலிருந்து இன்று வரை எக்காலத்தைச் சேர்ந்ததாகவும் இதில் காணப்படும் எழுத்துக்களை அடக்கலாம் என்று Archaeological Survey of India கருதுகிறது. இங்கு காணப்படும்

    ‘முகைய்யதின்’ என்னும் பெயரைக் கொண்டு இஸ்லாமியா செல்வாக்கு வந்திருக்க இடமுண்டு எனக் கொண்டால் இந்த மணி கி.பி 1500 தொடக்கம் 1600 வரையானகாலப் பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் கருதமுடிகிறது. அதே வேளை சோழர் காலத்தில் வெண்கலத்தாலான பொருட்கள் மிகவும் சிறப்புப் பெற்றிருந்தன. நியூசிலாந்தில் ஓக்லண்டில் வசிக்கும் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தைச் சேர்ந்த டாக்டர் ராசநாதன் கருத்துப்படி இம்மணியானது சோழர் காலத்தைச் சேர்ந்ததேஎன்றும் – சோழர்களால்த்தான் இம்மணியை இங்கு கொண்டுவரும் ஆற்றல் இருந்திருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக 1994 இல் தெரிவித்திருக்கிறார்.

    தமிழர்கள் குடியேற்றமானது கங்காரு நாட்டில் 1778 இலிருந்து ஆரம்பமாகியதுஎன அறியமுடிகிறது. இப்படியான குடியேற்றமானது 1837, 1838 ஆம் ஆண்டுகளில் அதிகமாக நடந்திருக்கிறது. கிழக்கிந்திய கம்பனியைச் சேர்ந்த ஆங்கிலேயர்களால் தமிழர்கள் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது. 1901 க்குப் பின்னர் தமிழர் குடியேற அனுமதி இல்லாமல் போய்விடுகிறது. 1965 இலிருந்து தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்குகிறார்கள். ஆரம்பத்தில் வந்தவர்கள் திறமைஅடிப்படையில் தொழில் செய்ய அனுமதிபெற்றே வந்திருக்கிறார்கள். குடியுரிமை பெற்று வாழலாம் என்னும் வாய்ப்பு 1970 ஆம் ஆண்டு வந்ததால் தமிழர்களின் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட நாட்டுச் சூழல் காரணமாக பெருமளவில் தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துசேருகிறார்கள். 2009 ஆம் ஆண்டுக்குபின்னர் படகுகள் மூலமாகவும் தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் வந்துவிடுகிறார்கள்.

    ஏனைய உலக நாடுகளைவிட ஆஸ்திரேலியா வளத்தாலும் இடத்தாலும் பெரியது. அரசியல் ரீதியிலும் நூறுசத விகிதம் ஜனநாயகத்தைப் பேணும் நாடாகவும் விளங்குகிறது. இதனால் மனித மாண்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் உயர்வான பண்பாடும் இங்கு காணப்படுகிறது. இதனால் பலரும் இங்கு குடியேறி வாழ்வதற்குப் பெருவிருப்பத்தோடு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    கங்காரு நாடு எனப்போற்றப்படும் ஆஸ்திரேலியாவில் ஆறு மாநிலங்களும் இரண்டு மண்டலங்களும் என மொத்தம் எட்டு சமஷ்டி அரசாட்சிப் பிரிவுகள் காணப்படுகின்றன. இந்தநாட்டினது சனத்தொகை ஏறக்குறைய இரண்டு கோடி எனலாம். இந்தச் சனத்தொகை கிட்டத்தட்ட இலங்கையின் சனத்தொகையினை ஒத்ததாகும். ஆனால் இலங்கையைவிட ஆஸ்திரேலியா நிலப்பரப்பளவில் ஐம்பத்திரண்டு மடங்கு பெரியது என்பது முக்கியமாகும்.

    ஆஸ்திரேலியாவில் கூடுதலாகத் தமிழர்கள் வாழுமிடமாக சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தையே கொள்ளலாம். இங்கு தமிழர்களின் மொத்த எண்ணிக்கையில் நான்கில் மூன்றுக்கும் அதிகமானோர் வாழுகிறார்கள் என்பது நோக்கத்தக்கது. அதற்கடுத்ததாக மெல்பேணைத் தலைநகரமாகக் கொண்ட விக்டோரியாவைக் குறிப்பிடலாம். மேற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா (அடிலெயிட்) தலைநகரமான கன்பரா, வட மண்டலமான டார்வின், தஸ்மேனியா (ஹோபார்ட்) ஆகிய மாநிலங்களிலும் தமிழர்கள் வாழுகிறார்கள்.

    இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், பீஜி, தென் ஆபிரிக்கா, போன்ற இடங்களில் இருந்தெல்லாம் தமிழர்கள் காலத்துக்குக் காலம் வந்து குடியேறி இருக்கிறார்கள். வேலைக்காகவும், படிப்புக்காகவும், நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும், வர்த்தகம் செய்யும் நோக்காகவும், என பல்வித நோக்கங்களால் தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி உள்ளார்கள் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களுக்கும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கும் வேறுபாடுகள் நிறையவே இருக்கின்றன.

    இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள் நாட்டுப் பிரச்சினை காரணமாக வந்தவர்கள் அல்லர். அவர்கள் படிப்பாலும் தொழிலாலுமே இங்கும் வந்திருக்கிறார்கள். ஆனால் இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பலர், பல இழப்புகளைச் சந்திந்த பின்பே, இருக்க முடியாமல் உயிரினைக் காப்பாற்றி, மிச்சமிருக்கும் காலத்தை வாழ எண்ணி வந்தவர்கள் எனலாம். இதனால் இந்த இருவகைத் தமிழர்களின் சிந்தனை, செயற்பாடுகள் வேறு வேறாய்  இருப்பதையும் இங்கு கொள்ள முடிகிறது. இவர்களைவிட இன்னொரு வகைத் தமிழர்களாக, சிங்கப்பூர், மலேசியத் தமிழர்கள் விளங்குகின்றார்கள். பீஜி, மொரிசியஸ், தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பெயரளவில் தமிழர்களே அல்லாது அவர்கள் தமிழ் தெரியாத தமிழர்களாக இங்கு இருக்கிறார்கள்.

    ஏறக்குறைய எண்பதினாயிரம் தமிழர்கள் வாழ்ந்தாலும் குடிசன மதிப்பீட்டுப்படி ஐம்பதாயிரம் என்று கணக்குச் சொல்கிறது. குடிசன மதிப்பீட்டினை எடுக்கும்பொழுது வீட்டில் பேசும் மொழி தமிழ் என்றும் குறிப்பிடாமல் விடப்படுவதனால் இந்தக் குறைபாடு ஏற்பட்டு, தமிழரின் சரியான தொகை வராமல் இருக்கிறது என்பது முக்கியக் குறிப்பு எனலாம்.

     ஆஸ்திரேலியாவில் தமிழ் அமைப்புகள்

    தமிழர்கள் சேருமிடமெல்லாம் கலகலப்பும் இருக்கும். கலவரங்களுக்கும் குறைவிருக்காது. பண்பாடு கலாசாரம் என்பவற்றைக் காக்க வேண்டும் என்பதற்காகவே எப்படியோவெல்லாம் உழைப்பார்கள். அப்படி உழைக்கும் பொழுதில் அவர்களுக்கிடையே ஏற்படும் ஒவ்வாத தன்மைகளாலும், கருத்து முரண்பாடுகளாலும் தொடங்கவிருக்கும் அமைப்பு, பல அமைப்புகளாய், பல பெயர்களில் உருப்பெற்று வருவதை எல்லா இடங்களிலும் காணுகிறோம். இப்போட்டி சரியானதா, பிழையானதா என்பதற்கு அப்பால், இப்போட்டியினால் பல தமிழ் அமைப்புகள் உருவாகும் நிலை வருவது மகிழ்ச்சியானதுதானே! இப்படி ஒரு நிலை கங்காரு மண்ணிலும் தமிழர்கள் மத்தியில் காணப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டவே இப்படியாக விளக்கும் நிலை ஏற்பட்டது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    அமைப்புகளுக்குள் போட்டி. தனிமனித ஆளுமைக்கிடையிலான போட்டி என்று இப்போட்டி, பல அமைப்புகளின் தோற்றத்துக்கு வழிவகுத்து விட்டதையே காண முடிகிறது. என்றாலும் தமிழ் அமைப்புகள் பல, நல்ல முறையில் செயலாற்றி வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஏறக்குறைய எண்பதினாயிரம் தமிழ் மக்கள் வாழுகின்ற கங்காரு மண்ணில் நூற்றுக்கு அதிகமான சங்கங்கள் இருக்கின்றன. தமிழ் மக்களின் ஒன்றுகூடலுக்கும், தாயக மண்ணின் துயர் துடைக்கும் நோக்கத்துக்குமாக ஆரம்பத்தில் இச்சங்கங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் ஏற்பட்ட மனோபாவங்களின் விளைவால் சங்கங்கள், அமைப்புகள் பிளவுக்கு ஆளாகின என்பதும் நோக்கத்தக்கதே.

    டாக்டர் ஆர். சிவகுருநாதன் தலைமையில் “இலங்கைத் தமிழர் சங்கம்” சிட்னியில் நிறுவப்பட்டது, இச்சங்கம் 1982 முதல் “ஈழத் தமிழர் கழகம்” என்று இன்றுவரை இயங்கி வருகிறது. சிட்னி “தமிழ் மன்றம்” 1978இல் ஆரம்பிக்கப்பட்டது. விக்டோரியா மாநிலத்தில் பேராசிரியர் எலியேசர் அவர்களால் 1978இல் “விக்டோரியா இலங்கைத் தமிழ்ச் சங்கம்” தொடங்கப்பட்டது. பின்னர் இச்சங்கம் 2000ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதியில் அப்போதைய தலைவர் சட்டத்தரணி பாடுமீன் சு. ஶ்ரீ கந்தராசா தலைமையில் “விக்டோரியா ஈழத் தமிழ்ச் சங்கம்” என்று பெயர் மாற்றம் செய்ய்யப்பட்டது.

    1979இல் மேற்கு ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கம், 1986இல் “இலங்கைத் தமிழர் சங்கம்” 1990 குயின்ஸ்லாந்து ஈழத் தமிழர் சங்கம், 1983 கன்பரா தமிழ்ச் சங்கம், 1983 தெற்கு ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கம், 1984 தென் துருவத் தமிழ்ச் சம்மேளனம், இவ்வாறு சங்கங்கள் இருக்கின்ற வேளை சிட்னி, விக்டோரியா போன்ற இடங்களில் மேலும் பல சங்கங்கள் தோற்றம் பெற்றுத் தமிழ்ப் பணிகள், சமூகப் பணிகள் ஆற்றி வருகின்றன.

    சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் – ஆஸ்திரேலிய பட்டதாரிகள் சங்கம், மெல்பேணைத் தலைநகராகக் கொண்ட விக்டோரியா மாநிலத்தில் – ஆஸ்திரேலிய தமிழர் ஒன்றியம், விக்டோரியா தமிழ் கலாசாரக் கழகம், மெல்பேண் தமிழ்ச் சங்கம், விற்றல்சீ தமிழ்ச் சங்கம், ஆஸ்திரேலிய தமிழ் கலை இலக்கியச் சங்கம், கே சீ தமிழ் மன்றம் என்றும் தமிழ்ச் சங்கங்கள் இருந்து பணியாற்றி வருகின்றன. இவற்றைவிட மூத்த பிரஜைகளுக்கான சங்கங்கள், பல மாநிலங்களில் அமைந்து செயலாற்றி வருகின்றன. 1987ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விக்டோரியா மூத்த பிரஜைகள் சங்கமே கங்காரு மண்ணில் முதலில் அமைக்கப்பட்டது என்னும் பெருமையைப் பெற்றுக்கொள்கிறது. இப்படிப் பல சங்கங்கள். தமிழர் அமைப்புகள் தொடங்கப்பட்டதற்குக் காரணங்கள்தான் என்னவாக இருக்கும் என்பதை மேலோட்டமாக ஆரம்பத்தில் கண்டோம். ஆனால் அப்படியான சிந்தனைகள் காலவோட்டத்தில் விரிவடைந்து தமிழர் கலை, கலாசாரம், தமிழ் மொழி வளர்ச்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கின்றன.

    ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம்

    ஆஸ்திரேலியாவில் தமிழரின் பரம்பல். அதனால் அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் அமைப்புகள் இவற்றுக்கும் குழந்தை இலக்கியத்துக்கும் என்னதான் தொடர்பு இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? தமிழர்கள் பலவகையினராய் பல நாடுகளில் இருந்து பல தேவைகளுக்காக வந்தாலும் – தமிழ் பேசும் தமிழர்களும் அவர்களது சிந்தனையும் தங்களின் மொழிமீதும், தங்களின் பண்பாடு மீதும், மாறாத பற்றுடன் இருந்தது – இருக்கிறது என்பதைத்தான் ஆஸ்திரேலியாவில் அவர்களது செயற்பாடுகளினால் கண்டுகொள்ள முடிகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமெனலாம். இலக்கு + இயம் என்பதுதான் இலக்கியம் ஆகிறது என்பதை இங்குள்ள தமிழ் பேசும், தமிழை நேசிக்கும், தமிழைச் சுவாசிக்கும் அத்தனைத் தமிழர்களும் நம்புகிறார்கள்.

    தமிழ்ப் படைப்பாளிகள் பலர் இங்கு இருக்கிறார்கள். தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ் சஞ்சிகைகள் பல, இங்கிருக்கின்றன. தமிழ் விழாக்கள், தமிழ்ப் போட்டிகள், விவாத அரங்குகள், நாட்டிய நிகழ்ச்சிகள் யாவும் இங்கு இடம்பெறுகின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் இங்குள்ளவர்கள் தமிழை மறக்காமல் அதன் வழியில் செல்லுகிறார்கள் என்பதே.

    குழந்தை இலக்கியம் என்பது ஆணிவேரை ஒத்ததாகும். எழுதுவதற்கு மிகவும் சிரமமான இலக்கியம் எது என்றால் அது “குழந்தை இலக்கியமே” குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொண்டால்தான் அது சாத்தியமாகும். குழந்தைகளின் இலக்கியம், இலக்கிய வகைகளிலே மிகவும் முக்கியமானதாகும். சிறிய வயதிலே படிக்கும் பழக்கம் இருந்தால்தான் பெரியவர்கள் ஆன பின்பும் படிப்பார்கள். பெரியவர்களின் இலக்கியத்துக்குக் கூட அடித்தளம் “குழந்தை இலக்கியமே”. ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதில் குறிப்பிட்ட படைப்பாளர்களே ஈடுபடுகிறார்கள். குழந்தைகளுக்கான படைப்புகளை ஒரு முக்கியப் பணியாக நினைத்தே அவர்கள்  படைக்கின்றார்கள்.

    சிறுகதைகள், நாடகங்கள், பாடல்கள், இறுவெட்டுகள், என்ற வகையிலும் நாட்டிய நாடகங்கள், நடனங்கள், வில்லுப்பாட்டுகள், என்ற வகையிலும் குழந்தைகளுக்கான படைப்பு முயற்சிகள் இங்கு அமைந்து காணப்படுகின்றன. தமிழைத் தங்களின் பிள்ளைகள் மறவாமல் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் பெற்றோர்கள் பலர் விரும்பும் காரணத்தால் ஆஸ்திரேலியாவில் தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பமாகின. ஆங்கிலத்தையே மொழியாகக் கொண்ட ஆஸ்திரேலியாவில் வளரும் தங்கள் பிள்ளைகள், ஆங்கிலத்தையே முதல் மொழியாகப் பயிலும் நிலை இருப்பதனால் நாளடைவில் தாய் மொழியான தமிழையும், பண்பாட்டையும் மறந்துவிடுவார்களோ என்னும் ஏக்கமும் பயமும் பெற்றோர் பலரிடம் இங்கு அடிமனத்தில் வேரூன்றி இருக்கிறது. அதனால் எப்படியும் அவர்களுக்குத் தாய் மொழியான தமிழினைக் கற்றிடும் நிலையினை ஏற்படுத்த எடுத்த முயற்சியாய் அமைந்தனவே இங்கு இருக்கும் தமிழ்ப் பள்ளிகள் ஆகும்.

    தமிழ் அமைப்புகள் பலவும் தமிழர்கள் வாழும் மாநிலங்களில் தமிழ்ப் பள்ளிகளை ஆரம்பித்திருக்கின்றன. அப்பள்ளிகள் வார இறுதி நாட்களில் மட்டுமே இயங்குகின்றன. அங்கு பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகத்து முன் தேர்வுக்குமான பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பல்கலைக்கழகத்து முன்தேர்வுக்குத் தமிழ்  ஒரு பாடமாக எடுக்க, ஆஸ்திரேலிய அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பது நல்லவொரு வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் பெற்றோர்கள் பலர், தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு ஆர்வத்துடன் அனுப்பி வைக்கிறார்கள். இப்பள்ளிகளிலே ஆடல், பாடல், கதை சொல்லல், நாடகம் என்று குழந்தை இலக்கியம், தன்னையறியாமலேயே வளர்ந்து வருகிறது.

    குழந்தை இலக்கியம் என்று தெரியாமலேயே அங்கிருக்கும் ஆசிரியர்கள் குழந்தை இலக்கியத்தினைப் பல்வேறு வகைகளில் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். இங்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் எவருமே ஆசிரியப் பணி ஆற்றியவர்கள் அல்லர். ஒரு சிலரே ஆசிரியராக இருந்து அனுபவம் பெற்றவர்கள். ஏனையோர் வைத்தியராகவும், பொறியியலாளராகவும், தொழில்நுட்பவியலாளராகவும், கணக்காளராகவும் இருக்கிறார்கள்.

    இவர்களுக்குக் குழந்தை இலக்கியம் என்றால் என்ன என்பது தெரியாது. ஆனால் இவர்கள் குழந்தை இலக்கியத்தைக் கற்பிப்பதில் தம்மை அறியாமலே ஈடுபடுகிறார்கள்.

    ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் பற்றி எழுதவோ அல்லது பேசவோ தொடங்குவதாய் இருந்தால் அம்பி என்னும் அம்பிகைபாகரை உச்சரிக்காமல் தொடங்கவே இயலாது. அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தமக்கென ஒரு தனியான இடத்தினை அவர் ஏற்படுத்தி வைத்துள்ளார். அம்பி தாய்மொழிப் பற்று மிக்கவர். சமூக அக்கறை கொண்டவர். அடுத்த  தலைமுறையினரான குழந்தைகளை மனமிருத்தினார். அதனால் அவரின் குழந்தைகள் பற்றிய சிந்தனை, சிறப்பினைப் பெற்றது எனலாம்.

    ஆரம்பத்தில் சிறுகதை எழுதியவர் பின்னர் கவிஞராகவே மலர்ந்தார். கவிஞராகவே இருக்கவே ஆசையும் கொண்டார். தமிழ்நாட்டில் குழந்தை இலக்கியம் என்றதும் எல்லோர் நினைவிலும் வந்து நிற்பவர் கவிமணி அவர்களே. அம்பியையும் ஈழத்துக் கவிமணி என்றுதான் அழைக்கின்றனர். அந்த அளவுக்கு குழந்தைகளிடம் பற்றும் பாசமும் கொண்டு அவர்களுக்காக கவிதை இலக்கியத்தை வளர்த்து நின்றார். கணித ஆசிரியராய் இருந்தவரின் எண்ணத்தில் குழந்தைகள் இலக்கியம் கருக்கொண்டது என்றால் அந்த அளவுக்கு அம்பியின் ஈடுபாடு குழந்தைகள் பால் மிக்கிருந்தது என்றுதான் கருதமுடிகிறது.

    குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பதற்கு கடின உழைப்பு. பொறுமை, சொற்களஞ்சிய அறிவு மிகவும் முக்கியம் ஆகும். குழந்தைகளின் கவிதைகள் அவர்களின் நாட்டப் பொருட்களை மையமாகக் கொண்டிருக்கவும் வேண்டும். வீண் சொற்களையோ, வர்ணனைகளையோ, குழந்தைப் பாடல்கள் கொண்டிருப்பது கூடாது. இவற்றையெல்லாம் மனமிருத்தியே கவிஞர் அம்பி அவர்கள் குழந்தை இலக்கியத்தைப் படைத்தார். இவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் குழந்தைகளுக்கான கவிதைகளையும் தந்திருக்கிறார். ஆஸ்திரேலிய தமிழ்க்குழந்தைகள் தமிழில் பேச வேண்டு. பேசிப் பேசி மகிழ வேண்டும் என்பதே அவரின் பேரவாக இருந்தது. இந்த எண்ணத்தை மனமிருத்தியே ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தைக் கட்டி எழுப்புவதில் அம்பி அவர்கள் பெரும்பங்கு வகித்தார் என்பதை இங்கு வாழும் தமிழர்கள் அனைவருமே ஒரு மனதாக ஏறுக்கொள்ளுவார்கள்.

    “கொஞ்சும் தமிழ்”, “பாலர் பைந்தமிழ்” என்னும் கவிதை நூல்களை குழந்தை இலக்கியமாய் அளித்திருக்கிறார். இவரின் அணுகு முறை ஆஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தியதுதான் என்பதே இங்கு முக்கியமாகும். சூழலுக்கு ஒவ்வாத விடயங்களை யார் படைத்தாலும் அஃது பொருத்தம் அற்றதாகவே ஆகிவிடும். அப்படிப் பாடிஅமைப்பதை விட படைக்காமலே இருந்திடலாம். நீண்ட கால ஆசிரியப்பணி. பல நாடுகளில் ஆசியப்பணி. புலம் பெயர் நாடுகளில் உள்ள பிள்ளைகளின் உள்ளக்கிடக்கை இவற்றை எல்லாம் மிகவும் உன்னிப்பாகாகக் கவனத்தில் கொண்ட  காரணத்தினால்த்தான் அம்பி அவர்களின் குழந்தை இலக்கியம் ஆஸ்திரேயாவில் முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றது எனலாம்.

    “நீங்கள் இனிய தமிழ் வேச வேண்டு. பேசிப் பழக வேண்டும். இனிமையாக பேசி மகிழவேண்டும். நீங்கள் இனிய பாடல்கள் பாட வேண்டு. பாடப் பழக வேண்டும். இனிமையாகப் பாடி மகிழ வேண்டு. நீங்கள் பாடல்கள் பாடி ஆட வேண்டும். பாடி ஆடி மகிழ வேண்டும். பெற்றோரையும் மற்றோரையும் மகிழ்வித்தல் வேண்டும். நீங்கள் பாடி ஆடும்போது அபிநயம் செய்து மகிழ வேண்டும். அபிநயம் செய்யப் பழக வேண்டும். அபிநயத்தால் எல்லோரையும் மகிழ்வித்தல் வேண்டும். நீங்கள் பாடி ஆடி அபிநயஞ் செய்து மகிழும்போது அறிந்த சொற்களின் பொருளை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். புதிய சொற்களையும் அறிதல் வேண்டும். புதிய சொற்களுடன் அறிவு வளர்ச்சியும் பெறுதல் வேண்டும்.” என்று – ” கொஞ்சும் தமிழ் பாடல்கள்” நூலில் அம்பி அவர்கள் தனது மனத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    அம்பியின் பாடல்கள் தனித்துவம் மிக்கன. குழந்தைகளின் நாவில் உச்சரிக்கக் கூடிய எளிய தமிழ், அவர்களின் சிந்தையில் பதியக் கூடிய ஓசை நயத்துடனான சொற்கோலங்கள். இதனால் குழந்தைகள் அந்நியப்பட்டு விடாமல் பாடலுடன் நெருங்கி ஒட்டுற வாடுகின்றனர். இதுவேதான் “அம்பி” என்னும் குழந்தை இலக்கியப் படைப்பாளருக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள முக்கியத்துவம் எனலாம். வினா விடை முறையிலே பல பாடல்களை அமைத்திருக்கிறார். அங்கு குழந்தைகளின் உளவியலை அவர் நன்கு அறிந்து எழுதியிருக்கிறார் என்பதையே காணமுடிகிறது. ஆஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தி

    “அம்பி மழலை” என்னும் குழந்தை இலக்கிய நூலை ஆக்கியிருக்கிறார். கங்காரு ஆஸ்திரேலிய நாட்டின் அடையாளம். அதனை சிறியவர் முதல் பெரியவர்வரை விரும்பி இரசிப்பார்கள். இந்த நாட்டில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு விளங்காத விலங்குகளை அறிமுகப்படுத்தவோ அல்லது அவை பற்றி சொல்லுவதோ பொருத்தம் அற்றது என்பதை அம்பி அவர்கள் தெரிந்து காரணத்தால் “ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி அருமையான சின்னக்குட்டி” என்று பாடாமல்

       முன் இரண்டு காலைத் தூக்கி
       முன்னே பாய்ந்து செல்குவேன்

       பின் இரண்டு காலில் துள்ளி
       பாய்ந்து பாய்ந்து செல்லுவேன்

       சின்னக்குட்டியை வயிற்று பையில்
       செருகிக் கொண்டு செல்லுவேன்

       என்னைப் போன்ற அன்னை யாரோ
       என்று கேட்டுச் செல்லுவேன்

       என்னைத் தெரியுமா – என்
       பெயரைத் தெரியுமா?    

       என்று கங்காரு பற்றி குழந்தைகளுக்கு காட்டுகிறார் அம்பி.

    “கொஞ்சும் தமிழ்” அழகிய வண்ணப்படங்களுடன் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியமாய் வந்திருக்கிறது. அத்துடன் “பாலர் பைந்தமிழ்” படைப்பும் சேர்ந்துவிட்டது.

    “தமிழில் சிறுவர் இலக்கியம் இல்லாமை பெருங்குறையாகும். சிறுவர் இலக்கியத்தில் நாம் பின்தங்கி விட்டோம். அத்துறையில் “அம்பி யுகம் ” ஆரம்பமாகி விட்டது என்று நாம் பெருமையும் பூரிப்பும் அடைய வேண்டும்.” என ஈழத்து அறிஞர் அஸீஸ் அவர்கள் குறிப்பிடுகிறார்.

    “ஆஸ்திரேலியச் சிறுவருக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்து பிறமொழிச் சூழல்களில் வளரும் எல்லாச் சிறுவருக்கும் ஏற்ற வகையில் அம்பியின் பாடல்கள் அமைகின்றன” என்று கலாநிதி. கவிஞர் கந்தவனம் குறிப்பிடுகிறார். இப்படி பலரும் அம்பியின் குழந்தை இலக்கியம் பற்றி விதந்தே நிற்கிறார்கள். தற்பொழு தொண்ணூறு அகவை கடந்து ஆஸ்திரேலிய மண்ணில் அம்பி அவர்கள் வாழுகிறார்கள் என்பது குழந்தை இலக்கியத்துக்கே பெருமை எனலாம். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைபோல், இன்று ஆஸ்திரேலிய கவிமணியாய் வாழும் அம்பி ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் முக்கிய இடத்தினை வகிக்கிறார் என்பதுதான் உண்மை.

    அம்பிக்கு அடுத்த நிலையில் குழந்தை இலக்கியத்தை கையில் எடுத்தவர் என்னும் வகையில் வானொலிமாமா என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு நா. மகேசன் அவர்கள் விளங்குகிறார்கள். கணக்காளராக வேலை பார்த்தாலும் இவர் இதயத்தில் குழந்தைகள் பற்றிய சிந்தனையே கருக்கொண்டு இருந்தது எனலாம். இலங்கை வானொலியில் “சிறுவர் மலர்” என்னும் நிகச்சியைத் தொகுத்து வழங்கி பிரபல்யம் அடைந்தமையால் அவரை  “வானொலி மாமா” என்று அழைக்கும் அளவுக்கு செல்வாக்கினைப் பெற்றுவிட்டார். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்தபின்பும் அவர் வானொலி மாமா ஆகவே இருக்க விரும்பினார்.

    ஆஸ்திரேலியாவில் வாழும் குழந்தைகளை மனதில் வைத்து அவர்களுக்காக பாடல்கள், நாடகங்கள், கதைகள், என்று தனது ஆளுமையை வெளிப்படுத்தி பயனுறச் செய்தார். சிறுவர்களுக்காக பாடல்கள் எழுதினார்.  “பாட்டும் கதையும்” என்று கதைப்பாடல் நூலையும். சிறுவர் கவியரங்கக் தொகுதியாய் “நாகடக்கவியரங்கு நூலையும், “ஒளவை வந்தாள்” என்னும் மாணவர் மேடை நாடக நூலையும், தந்ததோடு நின்றுவிடாமல் சிறுகதையாக சிறுவர்களுகாக ” ஆஸ்திரேலியாவில் ஆத்திசூடி” என்னும் அருமையான நூலையும் தந்திருக்கிறார். அதுமட்டுமன்றி “திருவிழா” என்னும் சிறுவர் சைவசமய நாவலையும் தந்து சிறப்பித்து இருக்கிறார்.

    “ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ்ச் சிறுவர்களோடு பழகியபோது அவர்களின் தமிழ் ஆர்வத்தை உணர்ந்தேன். ஆர்வம் இருப்பினும் அவர்களது வாழ்க்கை நிலை அவர்களின் தமிழ் அறிவுக்கும் – தமிழ் நாட்டுச் சூழல் அறிவுக்கும் தடையாகவே இருந்தது.

    ஆத்திசூடி வாக்கியங்களை ஆஸ்திரேலியச் சூழலில் பொதிந்து கதைகளாக தந்தால் இங்குவாழும் சிறுவர்கள் விளங்கிக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று கருதினேன். பல நண்பர்கள் இதை ஆதரித்து எழுதும்படி தூண்டினார்கள். அதன் விளைவுதான் “அவுஸ்திரேலியாவில் ஆத்திசூடி” என்று இக்கதை நூலின் முன்னுரையில் வானொலிமாமா மகேசன் கூறுவது மனமிருத்த வேண்டிய விடயம் எனலாம்.

    பன்னிரண்டு கதைகள் இதில் இடம் பெறுகின்றன. அறச்சாலைப் பெண் – (அறஞ்செய விரும்பு) , பூங்காவில் புகுந்தவன் – (ஆறுவது சினம்) புத்தகம் போயிற்றே – (இயல்வது கரவேல்) கண்தானம் – (ஈவது விலக்கேல்), குத்துச் சண்டை – (உடையது விளம்பேல்) மோட்டார் ஓட்டுநர் – (ஊக்கமது கைவிடேல்), கல்வியா செல்வமா – (எண் எழுத்து இகழேல்), மதிய உணவு – (ஏற்பது இகழ்ச்சி), தமிழ்க் கிழவர் – (ஐயம் இட்டுண்), வாழைப்பழத் தோல் – (ஒப்புர ஒழுகு), அறிவுச் சக்கரம் – (ஓதுவது ஒழியேல்),  பரிசளிப்பு விழா – (ஒளவியம் பேசேல்) என்னும் வகையில் ஒளைவையின் ஆத்திசூடியை விளக்கும் பாங்கில் அமைந்திருபதுதான் இதன் சிறப்பு எனலாம். வானொலி மாமாவாய் ஆகிவிட்ட மகேசன் அவர்கள் ஆஸ்திரேலியாவிலே இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் இன்பத்தமிழ் வானிலியில் “சிறுவர் மலர்” நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்பதும் மனங்கொள்ளப் படவேண்டிய முக்கிய அம்சம் எனலாம். அம்பியும் வானொலிமாமா மகேசனும் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர் என்பது மிக மிக முக்கியமானதாகும்.

    பச்சையப்பன்கல்லூரியில் அறிஞர் மு. வ. அவர்களிடம் கல்வி கற்று இலண்டனில் பக்தி இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று பல உயர் பதவிகளை வகித்த ஆ. கந்தையா அவர்கள் இன்று எம்மிடையே இல்லாது விட்டாலும் அவரும் குழந்தை இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்தி அவர்களுக்காக “மழலை அமுதம்” என்னும் குழந்தைப் பாடல் நூலையும், “கங்காரு தாவித் தாவி ஓடுவதேன்”, வால் நீண்டது எப்படி” என்னும் சிறுவருக்கான நூலினையும் தந்திருக்கின்றார். ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வாழ்ந்து அங்கேயே தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு  செய்த தமிழ் ஆராய்ச்சி அறிஞரான முனைவர் ஆ. கந்தையா அவர்களும் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுவிட்டார் என்பது உண்மையான விடயமாகும்.

    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநராக விளங்கிய ஜெயராமசர்மா அவர்கள் அவுஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தி பல கவிதைகளையும் இசைப்பாடல்களையும் தந்திருக்கிறார். பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அநேகமானவர்கள் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடிவருகின்றனர். இதனை அவதானித்த ஜெயராமசர்மா அவர்கள் இங்குள்ளவர்கள் பிறந்தநாள் விழாவில் பாடத்தக்க வகையில் குழந்தைகளை வாழ்த்தி குழந்தைகளின் இலகுவான மொழிநடையிலேயே “தமிழில் பிறந்தநாள் வாழ்த்து” பாடியிருக்கிறார். அதனை பலரும் விரும்பி இப்பொழுது தங்கள் வீடுகளில் பிறந்தநாளின் பொழுது குழந்தைகளை வாழ்த்திப் பாடிவருவது குறிப்பிடத்தக்கதாகும். மெல்பேணின் தென்கிழக்குப் பகுதியில்

    கேசி தமிழ் மன்றத்தத்தால் “இளவேனில்” என்னும் சஞ்சிகை சிறுவர்களை மையப்படுத்தியே வெளிவருகிறது. ஆஸ்திரேலியாவில் சிறுவர்களை மையப்படுத்தி வெளிவரும் சஞ்சிகை இதுவாகவே இருக்கிறது. இச்சஞ்சிகையில் ஜெயராமசர்மா குழந்தைகளுக்காக கவிதைகளை எழுதி வருகிறார். அதனைப் படித்த குழந்தைகள் ஆர்வமாய் வாசித்து சுவைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். “குருவிக்கூடு” , ²உயர்ந்திடுவோம் வாழ்வினிலே”, ²அழகுதமிழ் பேசிடுவோம்” ஆகிய பாடல்களை இளவேனில் தாங்கி பல குழந்தைகளின் மனதில் இருத்தியே வைத்திருக்கிறது.

    “உணர்வுகள்” என்னும் கவிதை நூலினை ஜெயராமசர்மா அவர்கள் ஆஸ்திரேலியாவில் வெளியிட்டார். அதில் மொழி என்னும் பகுதியில் குழந்தைகளுக்கான பல கவிதைகள் இடம் பெறுகின்றன. “புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யிருக்கிறது. தமிழ் மொழியை அழிந்துவிடாமல் காப்பாற்றக் குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் பாடல்கள் பலவற்றை அடுத்துவரும் “மொழி”  என்னும் பிரிவிலே காண்கிறோம் என்று “ஞானம்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திரு. ஞானசேகரன் ஜெயராமசர்மாவின் உணர்வுகள் கவிதை நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    “அன்னைத் தமிழ்மொழிமீது அலாதி கொண்டு பிள்ளைகட்கு தமிழ் மொழிமேல் மோகம்வர யாத்த கவிதை சொல்லனைத்தும் சுகம்தரவே சுந்தரக் கவிதையென்பேன். “மாண்மிகு அம்மாவை மம்மியென்றழைக்கலாமோ?” அருமை வரிகளிட்டு அவசியக் கருத்தை அசத்தியிருக்கின்றீர்” என்று கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தை (பம்மல்) நிறிவியவரும் அதன் பொதுச் செயலாளருமான காவிரி மைந்தன் “உணர்வுகள்” கவிதை நூலில் “சுவைத்தவர்கள் சொல்லுகிறார்கள்” பகுதியில் தனது மனக்கிடக்கையினை வெளிப்படுத்தி இருக்கிறார். கவிதைகளுடன் ஜெயராமசர்மாவால் சிறுவருக்காக ‘மலர்கள்”, “சிரிப்பு” “பொங்கல்”, என்னும் நாட்டிய நாடகங்களும் – “மாமா வருகிறார்”, “நல்ல காலம்” ஆகிய வில்லுப்பாட்டும் படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஆஸ்திரேலியாவின் குழந்தை இலக்கியத்தில் நாடகம் என்னும் சொல்லினை உச்சரித்தால் அங்கு நிச்சயமாய் வந்து நிற்பவர் மாவை நித்தியானந்தன் அவர்கள்தான். விக்டோரிய மாநிலத்தில் பல தமிழ் பள்ளிகள் இருந்தாலும் மாவை நித்தியால் தொடங்கப்பட்ட “பாரதி பள்ளி” கற்பித்தல், ஒழுங்கமைப்பு, ஆசிரியர் கட்டமைப்பு, தமிழ் ஆர்வம், யாவற்றிலும் முன்னிற்கிறது என்பதுதான் அதன் விசேடம் எனலாம். இருபத்து ஐந்து வருடமாக இயங்கிவரும் இப்பள்ளியில் தமிழ் கற்க பல மாணவர்கள் விரும்பி வருகிறார்கள். அந்த அளவுக்கு நித்தி அவர்கள் நல்ல ஆசிரியராய் நல்ல நிர்வாகியாய் தமிழின்மீது ஆராக் காதல் கொண்டவராய் விளங்குகிறார்.

     “பாப்பா பாரதி” என்னும் இறுவெட்டு இங்குள்ள சிறுவர்களை மையப்படுத்தி முதலில் வெளிவந்த மிகவும் சிறந்த குழந்தை இலக்கிய படைப்பு எனலாம். இதுவரை மூன்று பாகங்கங்களில் “பாப்பா பாரதி” இறுவெட்டு வந்திருக்கிறது. இங்குள்ள சிறுவர்களின் மனங்களில் நித்தியின் இம்முயற்சி பதிந்திருக்கிறது – வெற்றி பெற்றிருக்கிறது என்பதையே காட்டுகிறதல்லவா? சிறுவர்களுக்கென்றே “சட்டியும் குட்டியும்”, “நாய்க்குட்டி ஊர்வலம்”, “சின்னச் சின்ன நாடகங்கள்”, என்னும் நாடக நூல்களையும் நித்தி தந்திருக்கிறார்கள். ஐந்து வயதுமுதல் பத்துவயது வரையும், எட்டு வயது முதல் பதின்மூன்று வயது வரையும், பின் பதின்மூன்று வயதுக்கு மேற்பட்டோர் என்று தனது நாடகங்களை நித்தி அவர்கள் வகுத்துத் தந்திருக்கிறார். வயதுகளைக் குறிப்பிட்டு எழுதியதால் அவ்வவ் வயதினருக்கு ஏற்ற சொற்களை அங்கே அவர் முக்கியத்துவப்படுத்தி இருப்பது அவரிடம் காணப்பட்ட  குழந்தைகளின் உளவியல் அறிவு என்றேதான் கருதமுடிகிறது.

    “சிறுவருக்காக எழுதுவது என்றுமே எனக்கு மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக இருந்திருக்கிறது. கணிசமான காலமாக நான் எழுத்துத் துறையில் ஈடுபட்டு அது தரும் ஆத்ம திருப்தியை அனுபவித்து வந்திருந்தாலும், நூல் வெளியீட்டீல் அக்கறை செலுத்தவில்லை. இப்பொழுது எனது சிறுவர் நாடகங்கள் தொகுப்புகள் வெளிவர உள்ளன. அவற்றில் இது முதலாவது. இத்தொகுப்புகள் வயதின் அடிப்படையில் அமைய உள்ளன.

    வளர்ந்தோருக்கான நாடக முயற்சிகளில் ஈடுபட்டிருந்த எனது ஆர்வம் சிறுவர் நாடகத்தின் பால் திரும்பியதற்கு புலப்பெயர்வு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. குழந்தைகள் தமிழ் கற்கவென 1994 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் பாரதி பள்ளியை ஆரம்பித்தேன். இது குழந்தைகள் பற்றிய அறிவையும், அவர்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள எனக்கும் ஒரு பள்ளியாயிற்று. ஒவ்வொரு வருடமும் இருநூற்றுக்கு மேற்பட்ட ஆங்கிலத்தை முதன் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்குத் தமிழிற் பேசி நடிக்க பயிற்றுவித்து அவர்களை மேடையில் காண்பது ஒரு தேவையாக இருந்தது. இருந்து வருகிறது.

    இந்த நாடகங்களை எழுதுகையில் சொற்சிக்கனம், எளிமை, வயதுக்கேற்ற சொற்கோவை ஆகிய அம்சங்களில் கவனம் சுலுத்த முயன்றுள்ளேன். பாடல்களும் ஓசை நயத்துடன் கூடிய வார்த்தைக் கோலங்களும் இந் நாடகங்களில் முக்கியத்துவம் பெறுவதையும் காணமுடியும். இந்த நாடகங்கள் யாவும் பாரதி பள்ளியில் முதல் மேடையேற்றம் கண்டவை. அத்துடன் சிறுவர் சிறுமியரை நன்கு கவர்ந்தமையுமாகும். தமிழிலுள்ள சிறுவர் நாடகத்தின் அகலமும் ஆழமும் மேலும் விரிதல் வேண்டும். வகை வகையான தன்மையில் வித்தியாசப்படும், கலைத்துவம் மிக்க நாடகப் பிரதிகள் பல்வேறு வயதினருக்கும் தேவைப்படுகிறது. இந்தத் தேவைக்கான ஒரு துளி பங்களிப்பாக எனது நாடகத் தொகுப்புகள் அமையுமாயின் அதுவே நான் அடைய விரும்புவதாகும், என்று மாவை நித்தியே குறிப்படுவது இங்கு நோக்கத்தக்கதாகும்.

    வானொலி மாமாவாக மகேசன் அவர்கள் இருப்பதுபோல வானொலி மாமியாக புவனா இராஜரட்ணம் அவரகள் ஆஸ்திரேலியாவில் விளங்குகின்றார். சிறுவர் நாடகங்களை எழுதினார். இசைப்பாடல், நாட்டியப்பாடல், வில்லுப்பாடு என்று இவரின் ஆளுமை ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் இடம் பெற்றது எனலாம். இவரின் வழியிலே ராணி தங்கராசா அவர்கள் மாண வர்களை மையப்படுத்தி நாடகங்கள் எழுதி இயக்கியும் உள்ளார்.இவர்களுடன் திரு சந்திரகாசன் அவர்களும் வந்து நிற்கிறார். இவரும் சிறுவர் நாடகத்தை வளர்பத்தில் பெரும் ஊக்கமுடையவராக விளங்குகின்றார்.

    மெல்பேண் மணி என்று அழைக்கப்படும் கனகமணி அவர்கள் நாடகங்கள், கதைகள், இசைப்பாடல்கள், கவிதைகள், வானொலிச் சித்திரங்கள் என்று பன்முகமாக தன்னை வெளிப்படுத்தி நிற்கிறார். இவரின் “சிறுவர் கதம்பம்”

    “மணியாரம்” என்னும் பல்சுவைக் கதம்ப மாலை “பாசத்தின் வலிமை” என்னும் நூலில் இடம்பெறும் நாடகங்கள் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் இணைந்து கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

    முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் சிறுவர்களுக்காக பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். அவர் ஒரு சிறந்த ஊடகவிலாளராக இருக்கின்ற காரணத்தால் ஆஸ்திரேலிய குழந்தைகளின் மனநிலையினை நன்கு அறிந்து வைத்து அதற்குத் தகுந்தாற் போல தனது பங்களிப்புக்களை வழங்கிவருகிறார் எனலாம். இங்குள்ள சிறார்கள் கணனியிலேயே தங்களின் பொழுதினை செலுத்திவருவதைக் கண்ணுற்ற முனைவர் சந்திரிகா அவர்கள்

    “சிறுவருக்கான கணனி” என்னும் நூலினை ஆக்கிக் கொடுத்திருக்கிறார். “வர்ணம்” என்னும் பெயரில் ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு நல்ல ஒரு கதை நூலினையும் கொடுத்திருக்கிறார். அண்மையில் முனைவர் சந்திரிகா அவர்களினால் “கொசுவீட்டில் பாயசம்” என்னும் வர்ணப்படங்கள் கொண்ட கதை நூல் தொகுத்து வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் முனைவர் சந்திரிகாவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    யசோதரா பாரதி சிங்கராயர் பல்மருத்துவர். ஆனால் நடனம், இசை, யாவற்றையும் கற்றுத் தேர்ந்தவர். ஈழத்தில் வாழ்ந்த புகழ்பூத்த தமிழ் புலவர் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரின் பேரனின் மகளாவார். இவரின் தந்தையார் சோமசுந்தர பாரதியும் பல்மருத்துவராவார். அதேவேளை இவர் ஒரு வரகவியாகவும் விளங்குகிறார். வாழையடி வாழையென தமிழும் இவர்களுடன் இணைந்தே வந்து கொண்டிருக்கிறது. மருத்துவம் படித்தாலும் மருத்துவத்தில் ஈடுபடாமல் குழந்தைகளை மனமிருந்தி – அவர்களுக்கு தமிழ் கற்பிப்பதிலும், தான் கற்ற இசையை , நடனத்தை, கற்பிப்பதிலும் தன்னை ஈடுபடுத்தி ஆத்மதிருப்தி அடைகின்றார் என்றுதான் சொல்லல் வேண்டும்.

    1997 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த இவர் சிட்னியிலேயே வாழ்ந்து வருகிறார். சிட்னியிலுள்ள தமிழ் பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்கு நடனம், நாட்டிய நாடகம், என்று தனது பணியினை மேற்கொண்டு வெற்றியும் ஈட்டி உள்ளார். இவரால் 400 க்கு மேற்பட்ட சிறுவர் நாட்டிய நடன நிகழ்ச்சிகள் மேடையேற்றப் பட்டிருக்கின்றன. மூன்று வயது தொடக்கம் பதினாறு வயது வரைக்குமான குழந்தைகளை மையப்படுத்தி இவரின் செயற்பாடுகள் இன்றும் சிட்னியில் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

     “பரா ஒலம்பிக் 2000” சிட்னியில் நடைபெற்ற வேளை 68 குழந்தைகளை நடன நிகழ்வும், கிருஷ்ண அவதாரங்களைக் காட்டும் நாட்டிய நாடகமும் இவரின் ஆற்றலை யாவரும் அறியப் பண்ணியது எனலாம். 6 வயது தொடக்கம் 10 வயதுவரையுள்ள  52 குழந்தைகளை வைத்து வீதியிலே காவடி நடனம் ஆடச்செய்து யாவரையும் பிரமிக்க வைத்தார். “கார்த்திகை மாலை”,  “சுனாமி”, “கிருஷ்ண வதாரம்”, என்பன ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்துக்கு வலுச் சேர்க்கும் பாங்கில் அமைந்திருக்கின்றன என்பதுதான் உண்மையெனலாம்.

     “புலம்பெயர்ந்த ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள குழந்தைகள் தொலைக் காட்சிகளைப் பார்ப்பதும், வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபட்டு அதனையே வெறித்துப் பார்த்துக்கொண்டும் கெடும் குழந்தைகள் எண்ணிக்கை கூடுதலாகவும், பெற்றோரின் பங்கெடுப்பு குடும்பநேரங்களில் குறைந்தபடியாலும் , பல வித்தியாசங்களை உணர்ந்தேன். இந்த நிலையை நாட்டியங்கள், நாட்டிய நாடகங்கள், மூலம் மாற்றி என்னிடம் பயிலும் மாணவர்கள் மத்தியில் வெற்றியும் கண்டுள்ளேன். நடனப் பயிற்சியின் முன் கதையாக அந்த நடனக் காட்சிகளை சொல்லிக் கொடுப்பேன். பெற்றோர் சில பேருக்கும் கதைகள் பல சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது.இதனால் குழந்தைகள் அந்தக் கதைகளை தாங்களாகவே ஆராய்ந்து படிக்கும் ஆர்வம் தூண்டப்படுகின்றது. என்னைச் சில பேர் கேட்பார்கள் – நல்ல பாட்டிமாதிரி கதை சொல்லிக் கொடுக்கிறீர்கள் என்று ….. அது எனக்கு பெரிய திருப்தியைக் கொடுக்கும். ஆம் நான் அந்த பாட்டியின் இடைவெளியை நிரப்பும் திருப்திதான் அது. இவ்வாறு யசோ அவர்கள் தன்னுடை அனுபவத்தை வெளிப்படுத்தி நிற்கிறார். இவரின் இப்படியான முயற்சிகள் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்துக்கு நல்லதோர் பக்க பலம் என்றே எண்ண முடிகிறது.

    மாத்தளைச் சோமு அவர்கள் நாடறிந்த நல்ல எழுத்தாளர். இவர் பல படைப்புகளை சிறுவர் அல்லாதவர்க்கே வழங்கி வந்திருக்கிறார் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவருள்ளும் ஒரு குழந்தைகள் உலகம் இருந்திருக்கிறது என்பதை இவரின் குழந்தை களுக்கான கவிதைகளும், குட்டிக்கதைகளும், காட்டி நிற்கின்றன. ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வாழும் இவர் “தமிழ் ஓசை” என்னும் சஞ்சிகையின் ஆசிரியராக விளங்குகிறார். சுட்டி விகடன், தினமணி – சிறுவர் கதிர், ரத்தினமாலா போன்ற பத்திரிகையில் குழந்தைகளுக்கான கவிதைகள், குட்டிக்கதைகளை எழுதிக்கொண்டு வருகிறார். “ஆஸ்திரேலிய ஆதிவாசிக்கதைகள்”  என்று ஒரு கதை நூலினை 2012 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வெளியிட்டார். இக்கதைகள் பெரியவர்களுக்கு என்று படைக்கப்பட்ட போதும் – இதில் ஏறத்தாள பத்துக்கதைகள் சிறுவர்களுக்கு ஏற்றனவாக இருக்கிறது என்று மாத்தளைச் சோமுவே கூறுகின்றார். இந்தியப் பத்திரிகைகளில் இவரின் குழந்தைகள் பற்றிய படைப்புகள் வெளிவந்தாலும் – அவைகள் அனைத்துமே ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்துக்கும் வலு சேர்க்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது என்பதுதான் முக்கியமாகும். தான் குழந்தைகளுக்காக படைத்த அனைத்தையும் தொகுத்து விரைவில் நூலாக வெளியிட இருபதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

    மாத்தளைச் சோமு அவர்களைப் போல நல்ல எழுத்தாளர்தான் திரு முருகபூபதி அவர்கள். இவர் மெல்பேண் நகரில் வாழ்கிறார். இவரும் சிறுவர்கள் அல்லாதவர்க்கே பலவற்றையும் படைத்தளித்தார். என்றாலும் தனது சிறிய பராயத்தில் தனது பாட்டி தனக்குச் சொன்ன கதைகளை அவரால் மறந்துவிடவே முடியவில்லை. பாட்டிகள்தான் உண்மையில் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகள் என்பதை முருகபூபதி நம்பினார். அதனால் புலம்பெயர்ந்த ஆஸ்திரேலிய நாட்டில் வளரும் எங்களின் தமிழ்க் குழந்தைகளை மனமிருத்தி “பாட்டி சொன்ன கதைகள்” என்னும் சிறுவருக்கான கதை நூலினை வெளியிட்டுவைத்தார். பன்னிரண்டு கதைகள் கொண்ட இந்தக் கதைநூல் இங்குள்ள சிறுவர்கள் படித்து பயன் பெற உதவியாய் அமைகிறது.

    இவர்களின் வழியிலே உஷா ஜவகர் அவர்களும் இணைந்து கொள்ளு கின்றார். “குறும்பபுக்கார இளவரசியும் கனிவான தேவதையும்”, “மாயக்கிழவியின் மந்திரம்”, “அதிசய உயினங்களைப் பற்றிய அரிய செய்திகளும் கதைகளும்”, ஆகிய நூல்களை அளித்து ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தனக்கு ஒரு அடையாளத்தை இவர் எடுத்துக் கொள்ளுகிறார் எனலாம். வர்ணப் படங்கள். பெரிய எழுத்துக்கள். பளிச்சிடும் காகிதம். கவர்ச்சியான வசனங்கள். குழந்தைகள் மனம்விரும்பும் தலைப்புகள். இவைகள் அனைத்துமே உஷா ஜவகர் அவர்கள்  குழந்தைகளின் உளவியலை நன்கு தெரிந்தவர் என்பதையே காட்டுகிறது எனலாம்.

    “பாப்பா பாரதி” என்னும் இசைவடிவான இறுவெட்டு ஆஸ்திரேலிய குழந்தைகளுக்காக வெளிவந்து பல ஆண்டுகள் கடந்து நிற்கும் நிலையில் 2013 ஆம் ஆண்டில் “மலரும் மொட்டுகள்” என்னும் இசைவடிவான இறுவெட்டு வெளிவந்திருக்கிறது. சங்கீத பூஷணம் திருமதி பொன்னம்மா சத்தியமூர்த்தி அவர்களின் நெறியாள்கையில் இது வெளிவந்திருக்கிறது.

    சிறுவர்களுக்காக வெளிவந்த பாடல்களுக்கும், புதிய பாடல்களுக்கும் இசைவடிவம் கொடுத்து சிறுவர்களின் அபிநயத்துடன் வெளிவந்திருப்பதே மிகவும் சிறப்பான அம்சம் எனலாம்.” ஆஸ்திரேலியாவில் வளருகின்ற குழந்தைகளுக்கு நல்லறிவையும், நமது கலாசாரத்தையும், ரசனையுடன் புரிந்து கொள்ளவும், தாய்மொழியான தங்கத் தமிழை வளர்த்துக் கொள்ளவும் நல்ல சிறுவர் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மெட்டு அமைத் திருக்கின்றார்.” என்று இசை இறுவெட்டு பற்றி ஆஸ்திரேலியாவின் மிருதங்க வித்துவான் திரு ரவி ரவிச்சந்திரா விதந்து பாராட்டியமை மனங் கொள்ளத் தக்கது எனலாம்.

    புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்தாலும் தங்களின் வருங்கால சந்ததிகளை தங்களின் மொழி, பண்பாடு, மறவாமல் வளரப்பண்ணல் வேண்டும் என்னும் அவா இங்குள்ள தமிழ்ப் படைப்பாளிகள் அனைவரிடமும் மேலோங்கி இருக்கிறது என்பதையே இதுவரை நாம் பார்த்தோம். எவ்வளவுதான் இலக்கியப் படைப்புகள் படைத்தாலும் – குழந்தைகளுக்கான இலக்கியம் வளர்ச்சியடையாவிட்டால் அங்கு பூரணத்துவம் வந்துவிடாது என்பதை ஆஸ்திரேலிய படைப்பாளர்கள் முழுமையாகவே நம்புகிறார்கள். இதனால் குழந்தை இலக்கியத்தை எப்படியெல்லாம் ஆஸ்திரேலியாவில் மேலும் வளர்ச்சி அடையச் செய்யலாம் என்று சிந்தித்தும் செயலாற்றிக் கொண்டுமே இருக்கிறார்கள். அந்தவகையில் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தினுள் இன்னும் பல புதிய படைப்பாளிகளும், ஆர்வலர்களும் இணைந்து கொள்ள காத்திருக்கிறார்கள் என்னும் இனிப்பான நல்ல செய்தினை வழங்கி நிற்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.

    Share
  • இயற்கையில் எழுந்த இசை – பகுதி 2

    இயற்கையில் எழுந்த இசை – பகுதி 2

    நிர்மலா ராகவன்

    பாறைமேல்

    சிவனும் விஷ்ணுவும் ஒருவரே என்று உணர்ந்த புருஷாமிருகத்தின் கதை.

    இக்கதையைப் படித்துவிட்டு, நான் என் பேரனுக்குச் சொன்னேன், வழக்கம்போல் பீமனும் அக்காட்டு மிருகமும் ஒருவரோடொருவர் சண்டை போடுவதை நடித்துக்காட்டி.

    “இதைப் பாட்டாக எழுது. மிக நன்றாக இருக்கும்,” என்று மகள் ஷீலா கூறிப்போனாள்.

    ஒவ்வொரு காட்சியையும், நாட்டிய – நாடகபாணிக்கு ஏற்ப எப்படி அமைப்பது என்று நிறைய யோசிக்க வேண்டியிருந்தது.

    அது மட்டுமா? நான் எடுத்துக்கொண்ட ராகம் தானாக மாறி, பிருந்தாவன சாரங்காவாக ஆகியது. கிருஷ்ணருக்கு உகந்த இடம் பிருந்தாவனம், அல்லவா? இது புரியாது, அதை மாற்றியமைக்க மூன்று நாட்கள் முட்டிக்கொண்டேன்.

    `சிவாயநம ஓம்’ என்ற வார்த்தைகள் தோடி, ஷண்முகப்ரியா, கமாஸ் ஆகிய மூன்று ராகங்களிலும் அமைந்திருப்பது தற்செயல்.

    தன் பலத்தில் கர்வம் கொண்டிருந்த பீமனை காட்டு விலங்கான புருஷாமிருகம் துரத்த, அவன் பயந்தோடுவதை மேடையில் பார்க்கும்போது சிறுவர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும்.

    பின்குறிப்பு:18 ஆண்டுகளாக, வசதியற்ற குடும்பத்திலிருந்து வரும் பெண்களுக்கும், சில தாய்மார்களுக்கும் கோலாலம்பூர் பங்க்சார் (Bangsar) ஸ்ரீநாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இலவச பரதநாட்டிய வகுப்பு நடத்துகிறாள் என் மகள் ஷீலா. மலேசியாவுடன், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளிலும் மாணவிகளுடன் இணைந்து நிகழ்ச்சிகள் படைத்திருக்கிறாள்.

    மேல் விவரங்களை அறிய — Face book: Mahavidya Dance Theatre

    இப்பாடலைக் கேட்க: https://youtu.be/A6a2lyz6gPQ

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 90

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 90

    நாங்குநேரி வாசஸ்ரீ

    90. பெரியாரைப் பிழையாமை

    குறள் 891:

    ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
    போற்றலுள் எல்லாம் தலை

    ஏத்துக்கிட்ட காரியத்த நல்லமொறையில செஞ்சுமுடிக்குத சக்தி இருக்கவங்கள எளக்காரம் செய்யாம இருக்கதுதான் தன்னயக் காக்குத எல்லாக் காவல்களிலையும் ஒசந்ததா அமையும்.

    குறள் 892:

    பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
    பேரா இடும்பை தரும்

    பெரிய மனுசங்கள மதியாம இருந்தா விட்டுவெலகாத பெருந்துன்பம் வந்து சேந்துக்கிடும்.

    குறள் 893:

    கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்
    ஆற்று பவர்கண் இழுக்கு

    ஒருத்தன் தன்னயத்தானே கெடுத்துக்கிட ஆசப்பட்டாம்னா பகைய மனசுல நெனக்க நேரமே யோசிக்காம அழிச்சுப்போடுத சக்தி உள்ளவுக கிட்ட வாலாட்டணும்.

    குறள் 894:

    கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
    காற்றாதார் இன்னா செயல்

    பலம் உள்ளவுக கூட பலமில்லாதவுக மோதுதது எமன கைய அசைச்சு கூப்பிடுததுக்கு சமானம்.

    குறள் 895:

    யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
    வேந்து செறப்பட் டவர்

    ரொம்ப பலமுள்ள ராசாவோட கோபத்துக்கு ஆளானவுக எங்க தப்பிச்சிப் போனாலும் நிம்மதியா வாழ ஏலாது.

    குறள் 896:

    எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

    நெருப்பு சுட்டா கூட உசிரு பொழச்சிக்கிடலாம். பலமுள்ள பெரியவங்க கிட்ட தப்பா நடந்துக்கிடுதவன் தப்பிப் பொழைக்க ஏலாது.

    குறள் 897:

    வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
    தகைமாண்ட தக்கார் செறின்

    கொணத்தால ஒசந்த பெரியவங்க ஒருத்தன்மேல கோவப்பட்டாகன்னா அவங்கிட்ட குவிஞ்சுகெடக்க செல்வத்தாலயும்,  சொகமான வாழ்க்கையாலயும் என்ன பிரயோசனம்?

    குறள் 898:

    குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
    நின்றன்னார் மாய்வர் நிலத்து

    மலை கணக்கா பலமிருக்க பெரியவர அழிக்க நெனயுதவன் நெலச்ச பணக்காரனா இருந்தாலும் அடியோட அழிஞ்சு போவான்.

    குறள் 899:

    ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
    வேந்தனும் வேந்து கெடும்

    ஒசந்த கொள்கை கொண்ட பெரியவங்க ராசா மேல கோவப்பட்டாகன்னா அவன் ஆட்சி இடையிலேயே கையவிட்டுப்போயி கெட்டுஅழிவான்.

    குறள் 900:

    இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
    சிறந்தமைந்த சீரார் செறின்

    அளவுக்குமிஞ்சின வசதிவாய்ப்பு பலமுள்ள பக்கத்தொணை எல்லாம் ஒருத்தர்கிட்ட இருந்தாலும் தகுதியுள்ள பெரியமனுசங்க கோவத்துக்கு எதிர தப்பிச்சுப் பொழைக்க ஏலாது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(280)

    குறளின் கதிர்களாய்…(280)

    செண்பக ஜெகதீசன்

     

    குறளின் கதிர்களாய்…(280)

    குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
    நின்றன்னார் மாய்வர் நிலத்து.

    – திருக்குறள் – 898 (பெரியாரைப் பிழையாமை)

    புதுக் கவிதையில்…

    மலைபோல்
    மனவுறுதி மிக்க
    பெரியவர்,
    ஒருவரைக் கெடவேண்டுமென்று
    மனதார நினைத்தால்,
    உலகில் அழியாமல்
    நிலைபெற்றாற்போல் உள்ளவரும்
    தம் குடியுடன் அழிவார்…!

    குறும்பாவில்…

    மலைபோல் மதிப்புடைப் பெரியோர்,
    ஒருவரைக் கெடவேண்டுமென நினைத்தால் அவர்
    நிலைபெற்றவர் போலிருந்தாலும் குடியுடனழிவார்…!

    மரபுக் கவிதையில்…

    மலையைப் போல்மன உறுதியொடு
    மதிப்பு மிக்கப் பெரியோரும்,
    நிலையில் தவறும் ஒருவர்கெட
    நினைத்து விட்டால் போதுமதே,
    நிலைத்தே யிருப்போம் அழிவில்லா
    நிலையி லிருப்போம் என்பவரும்
    தொலைந்தே போவர் தானழிந்தே
    தொடர்ந்து வந்திடும் குடியுடனே…!

    லிமரைக்கூ..

    மலைபோல் மனதினில் உறுதி
    கொண்டுயர் பெரியோர் ஒருவன்கெட நினைத்தால்,
    நிலைபெற்றவனுக்கும் குடியுடன்வரும் இறுதி…!

    கிராமிய பாணியில்…

    பகச்சிக்காத பகச்சிக்காத
    பெரியவங்களப் பகச்சிக்காத,
    பொறுப்பில்லாம நடந்து
    பெரியவங்களப் பகச்சிக்காத..

    மலபோல ஒயர்ந்த
    மனசுவுள்ள பெரியவுங்க
    மனசால ஒருத்தன் கெடணுமுண்ணு
    நெனச்சாலே போதும்,
    அழிவே வராதுண்ணு நெனச்சவனும்
    அழிஞ்சிபோவான் குடியோடே..
    அதால
    பகச்சிக்காத பகச்சிக்காத
    பெரியவங்களப் பகச்சிக்காத,
    பொறுப்பில்லாம நடந்து
    பெரியவங்களப் பகச்சிக்காத…!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 89

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 89

    நாங்குநேரி வாசஸ்ரீ

    89. உட் பகை

    குறள் 881:

    நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
    இன்னாவாம் இன்னா செயின்

    இன்பம் தருத நெழலும் தண்ணியும் கேடு வெளைவிக்கதா இருந்தா அத கெட்டவைகளாத் தான் நெனைக்கணும். அதுகணக்காதான் சொந்தபந்தத்தோட உட்பகையும்.

    குறள் 882:

    வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
    கேள்போல் பகைவர் தொடர்பு

    வாள் கணக்கா வெளிப்படையா இருக்க பகையாளியப் பாத்து பயப்படவேண்டியதில்ல. சொந்தக்காரன்மாரி பழகிட்டு மனசுக்குள்ள பகைய வச்சிருக்கவனோட ஒறவுக்கு பயந்துக்கிடணும்.

    குறள் 883:

    உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
    மட்பகையின் மாணத் தெறும்

    உட்பகைக்கு பயந்து ஒருத்தன் தன்னயக் காத்துக்கிடணும். இல்லன்னா சோதனையான நேரத்துல பச்சப்பாண்டத்த அறுக்குத சாதனம் கணக்கா நம்மள உறுதியா அழிச்சுப்போடும்.

    குறள் 884:

    மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
    ஏதம் பலவும் தரும்

    மனசு திருந்தாத அளவுக்கு ஒருத்தனுக்கு உட்பகை உணச்சி வந்துடுச்சின்னா அது அவனச் சேந்த எல்லாரையும் பகையாளியா ஆக்கிப்போடுத அளவுக்கு கெடுதல வெளைவிச்சிப்போடும்.

    குறள் 885:

    உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
    ஏதம் பலவும் தரும்

    சொந்தக்காரனோட உட்பகை வந்துச்சின்னா அது சாவுத அளவு பல கெடுதல உண்டாக்கிப்போடும்.

    குறள் 886:

    ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
    பொன்றாமை ஒன்றல் அரிது

    தங்கூட இருக்கவங்ககிட்ட பகை ஏற்பட்டிச்சின்னா அவன் அழிஞ்சு போவுதத தடுக்க யாராலயும் முடியாது.

    குறள் 887:

    செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
    உட்பகை உற்ற குடி

    செப்பு மூடியோட பொருந்தி இருக்கதுமாரி வெளிய பாக்கதுக்குத்தான் தோணும். அதுகணக்கா உட்பகை உள்ளவுக மனசார பொருந்தி இருக்க மாட்டாக.

    குறள் 888:

    அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
    துட்பகை உற்ற குடி

    இரும்ப அரத்தால தேய்க்குதப்போ அதோட வலிம கொறையுதது கணக்கா உட்பகை உள்ளவுக குடும்பத்தோட வலிமயும் தேஞ்சு கோறஞ்சி போவும்.

    குறள் 889:

    எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
    உட்பகை உள்ளதாங் கேடு

    எள்ளோட பொளவு கணக்கா சித்தூண்டு இருந்தாலும் ஒரு குடிய அழிச்சுப்போடுத அளவு கேடு உட்பகையில இருக்கு.

    குறள் 890:

    உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
    பாம்போ டுடனுறைந் தற்று

    மனசு பொருந்தாம ஒண்ணா வாழுதது ஒரு குடிசைக்குள்ளார பாம்போட வாழுதது கணக்கா பயப்படத்தக்க விசயம்.

     

    Share
  • கழல் தொழுதல் முறையல்லவா !

    கழல் தொழுதல் முறையல்லவா !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், அவுஸ்திரேலியா

    உண வூட்டும் கையதனை
    உதறி நிற்கும் உள்ளங்களே
    மன முடைந்து நிற்கின்ற
    நிலை யுமக்குத் தெரியலையா
    தின மும்மை கண்விழித்து,
    கண நேரம் பிரியாமல்
    பிணி யனைத்தும் தான்சுமந்த
    சுமை தாங்கி நினைவிலையா!

    அணி மணிகள் கண்டாலோ
    துணி வகைகள் பார்த்தாலோ
    வகை வகையாய் வாங்கிவந்து
    வடி வாக்கும் மனமல்லவா
    இரவு பகல் தெரியாது
    எதையும் தனக் காக்காது
    நில வுலகில் உமைமட்டும்
    நினைத்த மனம் கலங்கலாமா!

    கண் இருந்து நீர்வடிந்தால்
    புண் ணாகிப் போம்மனது
    தண் நீரும் பருகாமல்
    தான் உருகும் மனதங்கே
    மண் மீது வந்தசெல்வம்
    என் றெண்ணி வாழுமந்த
    கண் கண்ட தெய்வத்தின்
    கழல் தொழுதல் முறையல்லவா!

    (குறிப்பு: ஆஸ்திரேலியாவிலுள்ள முதியோர் அமைப்பு ஒன்றின் விழாவுக்குச் சென்று உரை ஆற்றிய வேளை, என் மனத்தில் எழுந்த எண்ணமே இக்கவிதை. அவர்களின் முன்னால் கண்களில் நீர்முட்ட உரையாற்றும் நிலை ஏற்பட்டது. அந்த உள் உணர்வினால் உடனே எழுதியதே இக்கவிதை.)

    Share
  • மொழியறிஞர்களின் கவனத்திற்கு

    மொழியறிஞர்களின் கவனத்திற்கு

    அண்ணாகண்ணன்

    முகநூலில் நோக்கர் என்ற மொழி ஆய்வுக் குழுவை நான் நடத்தி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்தக் குழுவில், மொழியைப் பயன்படுத்தும்போது நிகழும் பிழைகளைச் சுட்டிக் காட்டித் திருத்தங்களைப் பரிந்துரைக்கிறோம். சிறப்பான மொழிப் பயன்பாடுகளைப் பாராட்டுகிறோம். அண்மையில் தினகரன் நாளிதழில் வெண்ணை உருண்டை கல் என இருந்த தலைப்பினை வெண்ணெய் உருண்டைக் கல் எனத் திருத்தப் பரிந்துரைத்தேன். அதன் மீது நண்பர்கள் கருத்துரை வழங்கியிருந்தார்கள்.  வெண்ணெய் உருண்டைக் கல் எனப் பிரித்து எழுதக் கூடாது, வெண்ணெயுருண்டைக்கல் எனச் சேர்த்து எழுத வேண்டும் என்று வலியுறுத்திய அன்பர்களுக்கு எனது பதிலை இங்கே தொகுத்து வழங்குகிறேன்:

    நாம் பண்டிதர் கண்ணோட்டத்திலிருந்து, இலக்கணத்தை நிலைநாட்ட நோக்கரை நடத்தவில்லை. அனைவருக்கும் எளிதில் புரியும்படியாக, சரியாக எழுத வேண்டும் என்பதற்காகவே நடத்துகிறோம். அவ்வாறு அது இல்லையெனில், எழுதியவரும் அதை ஏற்றுப் பதிப்பித்தவருமே முதல் பொறுப்பாளிகள். இதை அவர்களின் தோல்வியாகவே நான் மதிப்பிடுவேன்.

    சரியாகப் பொருள் உணர்த்துவதற்காகவே இலக்கணம். அதை இயன்ற வரை எளிமைப்படுத்தியே எடுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிடில், இலக்கணமே கடினமானது என மக்கள் கருதுவர். அது தமிழுக்கே கேடாக முடியும்.

    யாப்பில் சீர்கள் அமைந்திருப்பதால் எல்லாப் பெரிய சொற்களும் இயல்பாகவே வகையுளிக்கு ஆட்பட்டிருக்கும். எனவே பிரித்துப் பிரித்தே படிப்பார்கள். அது சீரான மூச்சு ஓட்டத்திற்கும் உதவும்.

    உரைநடைக்கு என வரும்போது தேவைக்கு ஏற்ப, பிரித்தே எழுத வேண்டும், படிக்க வேண்டும். சேர்த்துப் படிப்பதற்கு மூச்சை அதிகம் இழுக்க வேண்டும். இது, வாசகரை எளிதில் சோர்வடையச் செய்யும். மொழியை அறிவியல் அடிப்படையில் அணுக வேண்டும். எந்திரத்தனமாக இலக்கணத்தைத் திணிக்கக் கூடாது.

    அடிப்படையில் இலக்கணம், மிகுந்த நெகிழ்வுத்தன்மை உடையது. இலக்கணத்தின் ஒவ்வொரு விதியும் ஒவ்வொரு தேவைக்காகவே உருவாக்கப்பெற்றவை. எல்லா விதிகளும் எல்லா இடங்களுக்கும் பொருந்தா. தமிழில் உரைநடைக்கு எனத் தனித்த விதிகள் உருவாகவில்லை. செய்யுள் இலக்கணத்தை அடியொற்றியே இது தீர்மானிக்கப் பெறுகிறது. காலந்தோறும் எழும் தேவைகளுக்கு ஏற்ப, இதை இற்றைப்படுத்த வேண்டும்.

    புதிய புதிய திசைச்சொற்களை, ஒலிக்குறிப்புகளை, நீண்ட சொற்களை அணுகுவதற்குப் பண்டித நோக்கை விட, பாமர நோக்கு வேண்டும். அவர்கள் கோணத்திலிருந்து, அவர்கள் இடத்திலிருந்து அதைப் பார்க்க வேண்டும், பயன்படுத்த வேண்டும். அவர்கள் அறிந்த இடத்திலிருந்தே, அறிந்த ஒலியிலிருந்தே, புதிய சொற்கள் பிறக்க வேண்டும். இது தொடர் சங்கிலி போன்றது. இந்தத் தொடர்பைத் துண்டித்துப் புதிய இடத்திலிருந்து தொடங்குவோர், தீவாகச் சுருங்கிவிடுவர். மொழியைச் செம்மையுறச் செய்ய விரும்புவோர், மைய நீரோட்டத்திலிருந்து விலகவே கூடாது.

    ஒரு விதியையோ, சொல்லையோ, நெறிமுறையையோ வழங்குவோர், தாம் முதலில் சொல்லிப் பார்த்து, தம் சுற்றத்தில் சிலரிடம் சொல்வதற்குக் கேட்டுக்கொண்டு, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அதன் பிறகே ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். சந்தையில் ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்த, எவ்வளவு மெனக்கெடுவார்களோ, அந்த அளவுக்கும் மேலே இதில் மெனக்கெட வேண்டும்.

    மேலும், ஒரு விதி அல்லது சொல் பரந்தேற்பு பெறும் முன்னர், அது குறித்து வைக்கப்படும் அனைத்துக் கருத்துகளும் பரிந்துரைகளே. அவை தீர்மானங்கள் அல்ல. நான் சொல்கிறேன், நீ பின்பற்று என அதிகாரத்துடன் இதைச் சொல்லக் கூடாது. உனக்கு இதுகூடத் தெரியவில்லையே என்ற ஏளனமும் கூடாது. இவையனைத்தும் மொழிப் பயனாளரை நம்மிடமிருந்து மேலும் மேலும் விலக்கி வைத்துவிடும். இந்தத் தெளிவு இருந்தால், நமது அணுகுமுறையில் பெரிய மாற்றம் உண்டாகும்.

    மொழியில் நமது பரிந்துரையை ஒருவர் கேட்பது, ஒரு மேசையில் பேச்சுவார்த்தைக்குச் சமநிலையில் உள்ள இருவர் கூடுவது போன்றது. அங்கே இருவருக்கும் ஒத்திசைவு பிறக்க வேண்டும். பயனாளரின் அனைத்து வினாக்களுக்கும் விடை கிடைக்க வேண்டும். ஒவ்வொரு சிக்கலையும் நுணுக்கமாகக் கேட்டு, அதைத் தீர்க்க முயல வேண்டும். அதன் பிறகே ஏற்பு என்ற நிலை உருவாகும். இந்தப் பொறுமையும் அணுக்கமும் தாமுறவாக்கலும் இல்லாவிட்டால், மொழி மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாகும். இந்தச் சிக்கலுக்கு மொழியறிஞரின் இயல்பே அடிப்படைக் காரணம். பயனாளரை அதட்டி, மிரட்டி, விரட்டியவர் அவரே.

    மொழிக்கு அதைப் பயன்படுத்துபவரே முதன்மைத் தேவை. மொழியறிஞர் இங்கே உதவியாளர் மட்டுமே. தாமே மொழியை ஆக்கியவர், தாமே சொல்லை ஆக்கியவர், தாமே இலக்கணம் கற்றவர், தாமே பிஸ்தா என்ற எண்ணத்தை மொழியறிஞர் அறவே விட்டொழிக்க வேண்டும். தாயுள்ளம் கொண்ட தொண்டரின் மனநிலைக்கு அவர் வர வேண்டும். அப்போதுதான், அந்தச் செயலில் இருந்தே பிறர் ஊக்கம் பெறுவர். அப்போதுதான் பிறருக்கும் பற்றுதல் பிறக்கும். அலங்கார நடையும் அலட்டலும் புகழ் வேட்கையும் மமதையும் அவருக்கு மட்டுமின்றி, மொழிக்கும் பெரும் பின்னடைவைத் தந்துவிடும். ஏனெனில் அவர் அந்த மொழியின் பிரதிநிதியாகத் தம்மைக் காட்டிக்கொள்வதால், அவரது பெருமையும் சிறுமையும் அந்த மொழியையும் பாதிக்கும்.

    இவற்றைக் கவனத்தில் கொள்வது, மொழியறிஞர்களுக்கு நலம் பயக்கும்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 237

    படக்கவிதைப் போட்டி – 237

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    லோகேஷ் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (22.12.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 236-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 236-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த நிழற்படமிது. இதனை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 236க்கு வழங்கியவர் திருமதி. சாந்தி மாரியப்பன். நிழற்பட நிபுணருக்கும் தெரிவாளருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    பட்டாசுச் சுற்றிக்கொண்டே மத்தாப்புப் புன்னகையைச் சிதறவிடும் இவ் ஆரணங்குகள், ஆபத்தான தொழிலையும் அச்சமின்றி ஆனந்தத்தோடு செய்வதைக் காணும்போது, வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துயரெனும் பகைவெல்ல, முகத்திலே மலரும் நகை பெரிய ஆயுதம் என்ற உண்மை புரிகின்றது.

    இனி, கவிதைச் சரவெடிகளைக் கொளுத்திப்போடக் காத்திருக்கும் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கிறேன்.

    *****

    தெய்வங்களும் வெடிவிபத்திலிருந்து எம்மைக் காப்பதில்லை; இத்தொழிலை விட்டால் பிழைப்புக்கு வேறு வழியுமில்லை என்று வேதனையோடு சிரிக்கும் மாதரிவர் என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வெடிக்கும் உண்மைகள்…

    செய்யும் வேலை சிரமந்தான்
    சிரித்தே அதையும் செய்கின்றோம்,
    உய்யும் வழிதான் வேறில்லை
    உயிரைப் பணயமாய் வைக்கின்றோம்,
    தெய்வ மெல்லாம் வெடிகளிலே
    தீயில் எம்மைக் காப்பதில்லை,
    பெய்யும் மழையால் பிழைப்பில்லை
    பெரிதிலை பெற்றிடும் துன்பங்களே…!

    *****

    ”வீட்டின் வறுமையால் பெண்கள் வெடி தயாரிக்கும் பணிசெய்வது நாட்டின் வறுமைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு” என்று வருந்துகின்றார் திரு. கோ. சிவகுமார்.

    நலிவுற்ற பொருளாதாரம்

    அடுப்பங்கரையில்
    சமையல் பணி
    செய்யும் வேளையில்
    ஆபத்தான வெடிகள் தயாரிக்கும் வேலையில்
    வீட்டுப் பெண்கள்!
    வேலை முடிந்ததென்று வெளியே சிரித்தாலும்
    நாளைய பொழுதுகளைப் பற்றிய பயம்
    இருக்கத்தான் செய்யும் இதயத்தின்
    எங்கோ ஓர் மூலையில்!
    வீட்டின் வறுமையும்
    வாட்டும் வேதனைகளும்
    கூட்டி வந்து
    விட்டதோ வேலைக்கு
    என்றால்
    நாட்டின் பொருளாதாரம்
    நலிவுற்றிருக்கிறது
    என்று தானே பொருள்!

    *****

    ”வெடித் தயாரிப்பால் சுற்றுப்புறத்துக்குச் சீர்கேடு” என்று வெற்றுமுழக்கம் செய்வோரால் வயிறு நிறைவதில்லை. திரியினில் வைத்த தீயால் வறுமை கருகுமென்றால் முகத்தில் முறுவல் பூக்கும் என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    வெடிச்சிரிப்பு

    சுற்றுப்புறத்தைப் பாழ்படுத்தும் என
    வெற்றுக் கோஷம் போட்டிடுவார்
    மாற்றுத்துணிக்கோர் வழிசெய்யார்;
    தேற்று நிலையும் தானுரையார்!
    குளிர்பதனப் பெட்டியிலும்
    குளிர்சாதனச் சூட்டினிலும்
    பாழுறும் சீதளச் சூழ்நிலையைக்
    கண்டும் காணாமல் ஒதுங்கிடுவார்!

    பணம்படைத்தோர் பாழாக்கும் நிகழ்வெல்லாம்
    தினந்தினந்தான் நடந்தாலும் சிந்தைசெய்யார்!
    வலியோர் தம் வாய்ச்சொல்லும் சட்டமாகும்
    எளியார் தம் வாழ்க்கையையார் எண்ணிடுவார்?!

    சுற்றும் வெடிக்கட்டினிலே
    வெற்று வயிறு நிரம்பிடுமே…
    கட்டும் தீப்பெட்டியிலே
    கிட்டிய சில்லறை கொண்டிங்கே
    வாடிய வயிறும் குளிர்ந்திடுமே…

    திரிதனில் வைத்திட்ட தீயினாலே
    வறுமை நீங்கி வயிறு நிறைந்தால்
    இறுகிய முகத்திலும் வெடிச்சிரிப்பு
    மத்தாப்புப் பூவாய்ப் பூத்திடுமே…

    *****

    மணமாலை கழுத்தில் ஏறச் சரவெடி மாலை தொடுத்துப் பணம் சேர்க்கும் கன்னியவள் என்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். மணமுடிக்க ஆடவர்க்குத் தட்சிணை கொடுக்கும் அவலநிலை இந்திய மாதர்க்கு என்று தீரும்? ஆடவர் மனம் என்று மாறும்?

    இனி எல்லாம் சுகமே!

    கழுத்தில் பூ மாலை விழக்
    காத்திருக்கும் கன்னி இவள்!
    காளையர் வீட்டில்
    கட்டணம் கேட்கச்
    சிக்கனமாய் இவள்
    சில்லறையைச் சேர்த்தாள்
    கொட்டிச் கிடந்த வெடிகளைப்
    பூ மாலையாய்க் கட்டியே!

    பூவாய் இந்தப்
    பூவை சிரித்துப் பேசச்
    சோர்வின் களைப்பும்
    நெஞ்சின் கவலையும்
    கலைந்து போனதே!
    கொடுத்த வேலையை
    விரைந்து முடித்திட
    புது வேகம் பிறந்ததே!

    சரம் சரமாய் வீதியில்
    வெடித்து மகிழ்ந்திடும்
    மழலைகளின் முகம் கண்டு
    மகிழ்ந்திடும் அன்னை தந்தையர்
    இவர்களின் அன்பு உள்ளம் கண்டு
    தான் தொடுத்த பூ மாலை
    இறைவனடி சேர்ந்த
    இன்பம் பொங்கும் இவர்கள் நெஞ்சில்
    அதில் பஞ்சாய்ப் பறந்து மறந்து போகும்
    தான் பட்ட துன்பம் எல்லாமே!

    *****

    எழுதுகோல் ஏந்தும் வயதில் ஏழ்மையை ஏந்தியது ஏனடா? புன்னகைப் பூக்கள் தொழிற்சாலையில் கருகுதல் கொடுமையடா! என்று ஏந்திழையரின் பரிதாபநிலை கண்டு இரங்குகின்றார் திரு. ராவணா சுந்தர்.

    ஏழ்மையின் புன்னகை

    பாரடா பாரடா
    பைந்தமிழ் நாட்டைப் பாரடா!
    பயிலும் பருவத்தில்
    சிறுமியின் சிரங்களைப் பாரடா!
    எழுதுகோல் ஏந்தும் வயதில்
    ஏழ்மையை ஏந்தியது ஏனடா?
    மலர்கள் தொடுக்கும் விரல்களில்
    பட்டாசு திரள்வது கேடடா!
    புன்னகையின் பூக்களெல்லாம்
    தொழிற்சாலையில் கருகுவது கொடுமையடா!
    நாளைய பாரதம் மலர்வதற்கு
    இன்றைய விதைகள் பலிகளா?
    சட்டங்கள் இயற்றுவது
    வெறும் கண்துடைப்புத் தானடா?
    சூழ்ச்சியின் அரசியலில்
    இளஞ்சிறகுகளைப் பறிப்பது பாவமடா!
    பணமுதலைகளும் பதவி வெறியர்களும்
    உலவும் பூவுலகில் பிறந்தது விதியடா!
    பள்ளிகளின் பட்டறையில்
    உன்னை மெருகேற்றாமல்
    ஏழ்மை இருளை அகற்றமுடியாது!

    ******

    நிழற்படத்துக்குப் பொருத்தமான விழிப்புணர்வுக் கவிதைகளைத் தீட்டித் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது இனி…

    கந்தக மலர்!

    ஏன் கந்தகபூமியில் இவள் பிறந்தாள்?
    எந்த வறுமையிலும் வளமாய்ச் சிரிப்பாள்!
    வெடிகளை, மருந்து என்பதை மறந்தாள்!
    மருதாணியாய் விரல் முழுக்கத் தரித்தாள்!

    வெடி மலர்களைக் கொட்டிக் குவித்துவிட்டால்
    அறியாமையிலே கட்டிக் கட்டிக் கோத்துவிட்டால்
    சரம்சரமாய் விஷப்பூக்களைச் சேர்த்துவிட்டால்
    தகதகவென எரிந்திடுமே தீக்குச்சி தலைப்பட்டால்!

    வேறு தொழில்கள் அரசு கொண்டுவந்தால்
    அல்லது பயிருக்காவது கொஞ்சம் நீர்தந்தால்
    உயிருக்கும் வயிற்றுக்கும் பசி தீர்ந்திடாதா?
    வாழ்வைப் பணயமாக்கும் இத்தொழில் மாய்ந்திடாதா?

    இந்தப் பூவுடன் சேர்த்தால் நாரும் எரியும்
    சில சமயத்தில் நாருடன் சேர்ந்து ஊரும் எரியும்!

    வெடி மருந்துகளை மருதாணியாய்த் தரித்து, சரம்சரமாய் விஷப்பூக்களைக் கோக்கும் வறுமையிலும் வளமாய்ச் சிரிக்கும் வனிதையரின் நிலைகண்டு, ஏழையர் வாழ்வைப் பணயமாக்கும் இத்தொழில் மாய்ந்திடாதா? என்று வேதனையில் நனைந்த சொல்மலர்களால் கவிமாலை தொடுத்திருக்கும் திருமிகு. புவிதா அய்யாதுரையை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 2

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 2

    தி. இரா. மீனா   

    வசன இலக்கியமென்பதை ஒர் இலக்கியவகை என்று சொல்வதை விட அதை ஒரு பரம்பரை எனக் கூறலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இலக்கியவகை என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற் குட்பட்டது. ஆனால் பரம்பரை என்பது காலத்தைத் தாண்டி நிற்பதாகும். வகை என்பதற்குப் பின்னால் குறிப்பிட்டதொரு முறை இருக்கும். அது முழுமை அடையும் போது  முறை அல்லது வகை என்பது முற்றுப்பெறும். ஆனால் பரம்பரை என்பது எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவகையில் தன் பாணியை மொழியோடு இணைத்துக்  கொண்டு  தொடரும் என்பது அதற்கு அவர்கள் தரும் விளக்கமாகும். வசனங்கள் வெறும் வடிவமாக மட்டுமின்றி முன்னோக்கிச் செல்லும் தன்மையுடைய பரம்பரையாக வளர்வதற்குக் காரணம், சரணர்கள் ’இயற்கைக்கு அழிவுண்டு; ஜங்கமத்துக்கு அழிவில்லை” என்ற எண்ணமுடையவர்களாக இருந்ததேயாகும்.

    ஏற்றத்தாழ்வற்ற சமூகநிலையைப் பற்றி பலர்  பேசியிருந்தாலும் வெகுஜன சமூக சித்தாந்த நிலை என்பது வசனக்காரர்களால் உருவாக்கப்பட்டது. அதனால் அவர்கள் தொழில் சித்தாந்தத்தை தாம் வாழும் சமூகத்தில் நிலைநாட்டினர். அவர்கள் காட்டும் அதன் தொழில் சித்தாந்த இயல்புகளென்பது கட்டாயக் காயகம், தொழிலே தெய்வம், தொழில் வேறுபாடின்மை, விருப்பமான தொழில், அதிகபலனை விரும்பாத தன்மை, உணவோடு கூடிய காயகம் ஆகியவையாகும். உணவு தேவனாகும் போது உணவைத் தேடித்தரும் தொழில் தெய்வமாக வேண்டியுள்ளது. ”உழைப்பில்லாத சரணன் முட்டாள்” என்ற சென்ன பசவன் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. சரணர் கொள்கையானது மனிதனு்க்கு தீட்சை வழங்கும் போது லிங்கத்துக்கு ஒரு பெயரையும் [முத்திரை] பக்தனுக்கு ஒரு தொழிலையும் கட்டாயப்படுத்தித் தருவதாகும் .அவரவர்  விருப்பத்திற்கு ஏற்றபடி தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதால், தொழில் ஏற்றத்தாழ்வைப் போக்கிய காரணத்தால் தம்மைத் தொழிலின் பெயரால் அறிமுகம் செய்து கொள்வது  அவர்களுக்கு மிகப் பெருமையாக இருந்தது. சான்றாகத் துணி ‘நெய்யும் தாசிம்மையா, என்று இயற்பெயரோடு தொழில் பெயரையும் சேர்த்து அறிமுகப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இரண்டாவதான தொழில் தெய்வம் என்பதில் தொழில் என்பது வெறும் வேலையை மட்டும் குறிப்பதில்லை. வெளியில் வேலை, ஆத்மாவிற்குள் அறிவு என்ற பார்வையில் தொழில் செய்பவன் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். அந்த ஒன்றிணைப்பு வழிபாட்டை மறக்கச் செய்தாலும் அதில் தவறில்லை. அதனால் ’காயகவே கைலாசா [உழைப்பே கைலாசம்] என்பது அவர்கள் கொள்கையானது.

    தொழில் வேறுபாடில்லாத தன்மை உருவாக வேண்டுமெனில் பொருளை வைத்துச்செய்யும் தொழில் உயர்வானது; உடலுழைபபு இழிவானது என்ற எண்ணம் நீங்க வேண்டும் என்ற சிந்தனையில் உழைப்புச் சமன்பாட்டை சரணர் உருவாக்கினர்.” தறி போட்டு நெசவாளியானான்”, வெளுத்து சலவைத் தொழிலாளியானான்” என்று அறிவார்ந்த உழைப்பை முன்னிறுத்திச் சமன்பாட்டை ஏற்படுத்தினர்.

    பரம்பரையான தொழிலைச் செய்து வந்ததால் சமுதாயத்தில் சாதி வேறுபாடு ஆழமானதாக இருந்தது. சரணர்கள் இந்த சாதிக்கொடுமையை அழித்தனர். சரணர்கள் அவரவர் வசதி, விருப்பத்திற்கு ஏற்றபடி எந்தச் சாதியானாலும் எந்தத் தொழிலானாலும் தாம் விரும்பியதைச் செய்தனர். சான்றாக மோளிக மாரையா என்ற சரணர் நாட்டை ஆள்வதை விட்டுவிட்டு மரம் வெட்டுவதைத் தன் தொழிலாகக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    “சரியான கூலியைத் தரும் தின நித்தியத் தொழில் மகிழ்ச்சி வேண்டும்” என்று [நுலிய சந்தய்யா] சொல்லி வசனக்காரர்கள் புது தர்மத்தை அறிமுகம் செய்தனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வசனக்காரர்கள் கூறிய புதுதர்மம் உயர்ந்த சிந்தனையாகும்.

    உழைப்பு உணவோடு  கூடியது என்ற பார்வையை சரணர்கள் வலியுறுத்துகின்றனர். குருவிற்கு உடலாலும், லிங்கத்திற்கு மனத்தாலும், ஜங்கமனுக்குப் பொருளாலும் தானம் செய்ய வேண்டுமென்று  சரணர்கள் வழிகாட்டுகின்றனர். செல்வத்தில் சமன்பாடு வந்துவிட்டால் சமுதாயச் சமன்பாடு தானாகவே ஏற்படும் என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்துகின்றனர். இவ்வகையில் அவர்களின் தொழில் சித்தாந்தம் மிக உயர்வானது.

    வசன இலக்கிய கர்த்தாக்களாக இருநூறுக்கும் மேற்பட்டோர் இருந்திருக்கின்றனர். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் கிடைத்திருக்கின்றன. வசன இலக்கிய ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்த இடம், தெய்வம், ஆளுமை அடிப்படையில் தங்கள் வசனங்களுக்கான முத்திரையை [அடையாளம்] அமைத்துக் கொண்டனர், பொதுவாக நான்கு அடி தொடங்கி பதினைந்து அடி வரையில் வசனங்கள் அமையும். ஒவ்வொரு வசமும் படைப்பாளியான சரணர் வாழுமிடக் கடவுளின் முத்திரையை அடையாளமாகக் கொண்டிருக்கும்.

    ஆனந்தய்யா :

    வசனக்காரர்கள் வரிசையில் முதலாவதாக இடம் பெறும் ஆனந்தய்யா என்னும் சரணர் ஆனந்தசிந்து  ராமேஸ்வரன் என்னும் முத்திரையில் சிவனை வழிபட்டவர். இரண்டு வசனங்கள் அவருடைய பெயரில் இடம் பெற்றிருப்பினும் ஒரு வசனம் முழுமையானதாகக் கிடைத்திருக்கிறது.

    “கல்லைப் பிடித்து மாரியுடன் நட்புக் கொள்வீர்
     துன்பப்பட்டுப் பல பிறவிகள் எடுப்பீர்.
     சிவனைக் கண்டேன் என்று  சொல்வது வெற்றாசைதான்.
     அவ்வகை குற்றமுடைய மனிதர்களை வெறுப்பவன்
     ஆனந்தசிந்து ராமேஸ்வரன் “

    ஆயதக்கி மாரையா:

    ஆயதக்கி மாரையா ராய்ச்சூர் மாவட்டம் லிங்காசுரு தாலுகாவைச் சேர்ந்தவர். லக்கம்மா அவருடைய மனைவி. கல்யாண் நகர வீதிகளில் சிதறிக் கிடக்கும் தானியங்களைப் பொறுக்குவது அவர் தொழிலாகும். உடல் உழைப்பு மற்றும் சிவ வழிபாட்டிற்காகத் தம்மை அர்ப்பணம் செய்து கொண்டவர்களில் மிக முக்கியமானவராகப் போற்றப்பட்டவர். உழைப்பே தெய்வம் என்பது அவர் வாழ்வின் குறிக்கோள். உழைப்பின் தத்துவத்தைப் பேசுவதாக அவர் வசனங்கள் அமைகின்றன. அங்குள்ள அமரேஸ்வரர் அவருடைய வசனங்களின் முத்திரையாகும். இவருடைய வசனங்கள் காயகத்தின் தத்துவத்தை பெரிய அளவில் பேசுகின்றன. சில வசனங்கள் இங்கே;

    1. “உழைப்பில் ஈடுபட்டிருக்கும் ஒருவன்
         குருவைப் பார்ப்பதை மறந்து விடவேண்டும்
         லிங்கத்தை வணங்குவதைக் கூட மறந்து விடவேண்டும்
         ஜங்கமர்  காத்திருப்பினும் கவலைப்படக்கூடாது
         உடலுழைப்பே  கைலாசம் என்பதால்.
         அமரேஸ்வரலிங்கர் கூட உடலுழைப்பிற்குட்பட்டவர்.”

     2. “சந்திரகாந்தக் கற்சிலையில் நீர்த்துளிஅடங்கி்யிருப்பது போல
          பசுக்களில் கோரோசனை அடங்கி்யிருப்பது போல
          கல் விறகுகளில் நெருப்பு அடங்கியிருப்பது போல
          உண்மையுடையோரின் நெஞ்சங்களில்
          நீரின் முத்துபோல அடங்கியிருக்கின்றாயன்றோ
          அமரேஸ்வரலிங்கமே”

    3. “அழியாத செல்வத்தைத் திரட்டுவோருக்கு
          களஞ்சியத்தின் தயவேன்?
          பற்றற்றவனைப் பாதுகாப்போருண்டோ?
          தொழில் செய்பவரை அந்தணர் துன்புறுத்துவதேன்?
          அக்குணம் அமரேஸ்வரலிங்கத்துக்குத் தொலைவானதாம்”   

    4. “கனியும்வரை பழம் வேரின் விருப்பப்படியிருக்க வேண்டும்
         அதுபோல மனிதனாக இருந்து வாழ்ந்து முடிக்கும்வரை
         உண்மைச் சரணரின் நட்பும் ஜங்கமரின் சேவையும்
         தொடரும்போதுதான் அமரேஸ்வரலிங்கரை அறியமுடியும்”

    5. “சபதமேற்று காயகம் விட்டு
         பக்தரின் வீடு சென்று
         பொன்னும் பொருளும் இரப்பது
         உயர் பக்தனுக்கு நற்செயலன்று
         அக்குணம் அமரேஸ்வரலிங்கருக்குத் தொலைவானதாம்”

    6. “பிச்சை எடுத்துக் கொண்டு வந்த உணவை வைத்து
          வழிபாடு செய்வதென்பது முடவனின் பயணம் போன்றது
          பக்தன் பிச்சைக்காரனாக இருக்க முடியுமா?
          பக்தனாகப் பிறந்து வழிபாட்டிற்காகப் பிச்சையெடுப்பது
          மோட்சத்தைத் தேடும் வழியல்ல. அவ்வகை
          முயற்சிகளில் அமரேஸ்வரனை அடைய முடியாது.”

    7. “பக்தனுக்கு வறுமையுண்டோ?
         உண்மையுடையோருக்கு வினையுண்டோ?
         மனமொன்றிச் செயல்படும் தொண்டனுக்கு
         மண்ணுலகு விண்ணுலகு என்றுண்டோ?
         அவனிருக்கும் இடம் புனிதமானது
         அவனுடல் அமரேஸ்வரலிங்கத்துடன் சங்கமமாகும்.’

    8. “சிறியதொரு பணிசெய்து பெரியதொரு
         கூலி கேட்பது நேர்மையான காயகமாகுமா?
         குறைத்துக் கொடு என பக்தன் சொல்வது
         அமரேஸ்வரலிங்கத்துக்கு தூய்மையின் காயகமாம்”

                                                                                                                                         – தொடரும்       

    Share
  • சேக்கிழார் பா நயம் – 59 (மன்பெரும்)

    சேக்கிழார் பா நயம் – 59 (மன்பெரும்)

    திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

    திருவாரூரில் பரவை நாச்சியாரைச்  சந்தித்து மகிழ்ந்த  சுந்தரர், இறைச் சிந்தனையுடன் ஆரூர்ப்  பெருமானின் திருக்கோயில் நோக்கி நடந்தார். அத்திருக்கோயில் வாயிலில் அடியார்கள் விளங்கும் தேவாசிரிய மண்டபம் விளங்கியது! பெருமானாகிய தேவதேவரை அடியார்கள் ஆசிரயித்த தேவாஸ்ரய மண்டபம் அது. அங்கிருந்த அடியார்களை வணங்கி, அவர்களின் தொடர்பைப்  பெறுவது  என்றோ, என்றெண்ணி  மிகுந்த பணிவுடன் அவர்களைக் கடந்து திருக்கோயிலுள் புகுந்தார்.

    ‘நான் இந்த அடியார்களுக்கு அடியேனாவேன்’ என்னும் அன்பு தமது திருவுள்ளத்திலே மேலிட்டெழக், கொடிகள் கட்டியதாய், நெடியதாய், வெற்றியேதருவதாய் உள்ள உட்கோபுரத் திருவாயிலைப் பணிந்து, கைகளைச் சிரமேற் கூப்பிக்கொண்டு, திருக்கோயிலினுள்ளே நம்பிகள் புகுந்தார். அப்போது  அழகிய, மணமிக்க கொன்றை மாலையை அணிந்த தோற்றத்துடன் தியாகேசர், சுந்தரர் எதிர்க்காட்சி காணும் வகையில் எழுந்தருளினார். கண்ணெதிரே காட்சி யருளிய பெருமானின் திருப்பாதங்களைக் கண்கொண்டு கண்ட மகிழ்ச்சியில் திளைத்த சுந்தரர், அவற்றைச்  சிரமேற்கொண்டு நான்கு  திருப்பாடல்களால் துதித்தார். அவற்றுள்  முதல்  திருப்பாட்டு,

    மன்பெ   ருந்திரு   மாமறை   வண்டுசூழ்ந்து
    அன்பர்    சிந்தை   அலர்ந்தசெந்   தாமரை
    நன்பெ   ரும்பர   மானந்த    நன்மது,
    என்த   ரத்தும்  அளித்துஎதிர்  நின்றன.

    என்பதாகும். சிவனடியாரின்  உள்ளமாகிய தாமரையைச்  சுற்றி வண்டுகள் சூழ்ந்து வேதங்களை ஒலித்து  ரீங்காரம் செய்யும். அப்போது அவர்களின் உள்ளக் கமலத்தில்  பரமானந்தமாகிய  தேன் ஊறித் ததும்பும். அத்தகைய தகுதியைப் பெறாத எளியேனுக்கும் அதனை வழங்க என் கண்முன் இறைவனின் திருப்பாதங்கள் தாமாக எதிரே வந்து காட்சியளிக்கின்றன.

    விளக்கம் :

    உலகியற் செல்வங்கள் எல்லாம் மிகுந்த முயற்சியால் கிட்டலாம். அவை நம்மை அறவழியில் செலுத்தமாட்டா. விரைவில் அழியும். ஆனால் இறைவன் திருவருளாகிய, அளவிடற்கரிய நிலைத்த பெருஞ் செல்வத்தை தகுதியால் பெரிய வேதங்கள் எளிதாக நமக்கு அளிக்கும்! வேதம் அளிக்கும் செல்வம் செம்மைக்கு ஏதுவான செல்வமாகும். இதனை தேவாரம் ‘’சென்றடையாத திரு‘’ என்று போற்றும். விரிந்த மறை, நிலைத்த மறை, பெருந்திருவைத் தருகின்ற மறை, அளவில்லாத மறை என்ற நான்கு அடைமொழிகள் நான்கு மறைகளைக் குறித்தன. யசுர் வேதத்தின் இடையில் ‘சிவ’ என்னும் அட்சரத் துவயமாகிய தேன் விளங்குவதாகப் பெரியோர் கூறுவர். அவற்றை வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கின்றன. சூழ்ந்து என்பதற்கு ஆராய்ந்து என்றும் பொருள்.

    பாதத் தாமரையை எண்ணி மகிழும் மனத்துள் சிவத்தேன் தானாக ஊறிப் பெருக, மனம் அதனையே உண்ணும். வண்டுகளோ புறத்தில் சூழ்ந்து கிடக்கும். இதனைச் சேக்கிழார்,

     “மன்று ளாடும்மது வின்னசை யாலே
      மறைச்சு ரும்பறைபுறத்தின் மருங்கே“   

    என்று  முன்னரே  பாடினார். பட்டினத்தடிகள் ,

    “கீழ்மையில்   தொடர்ந்து கிடந்த என் சிந்தைப்
    பாழ்  அறை உனக்குப் பள்ளியறை ஆக்கிச்
    சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு
    எந்தை நீயிருக்க விட்டனன்..”

    என்று பாடினார். மேலும் அப்பர் பெருமான்,

    “அன்புடைத் தொண்டர்க்கு  அமுதருத்தி, இன்னல் களைவன“
    “சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன், முந்திப் பொழிவன“

    என்று பாடியுள்ளார். இவ்வலர்ந்த தாமரையிலே ஊறுவது இறைவனது திருவடியாகிய மது – தேன். அது தருவது பரமானந்த அநுபவமாம். இவ்வாறன்றிச் சிந்தையிலே அலர்ந்த செந்தாமரை எனக் கொண்டு சிந்தையை அந்தத் தாமரைபூக்கும் நீர் நிலையாகக் கூறுவாருமுளர். அவர்கள்,

    “……..அன்பர் இதய மென்னும், செழுமலரோ டையின்மலர்ந்து
    சிவானந்தத் தேன்றதும்பு தெய்வக் கஞ்சத், தொழுதகு சிற்றடி…..“ (விருத்தகுமார பாலரான படலம்)  என்று திருவிளையாடற் புராணமுடையார் இதற்குப் பொருள் கூறியிருத்தலைக் கூறுவர்; அன்றியும் மது தாமரையினுட்கலந்து அது அலர, அலர உள்ளே ஊறுவதுபோலச் சிந்தையுட் கலந்த திருவடியே அன்பு முதிர முதிர ஆனந்தமாய் ஊற்றெடுப்பதாம். எனவே திருவடியையே மதுவாகக் கூறினர் என்பது.

    நன் பெரும் பரமானந்த நன்மது – வேதத்திலே ஏனைத் தேவர்கள் பெயரோடு சேர்த்து விஷ்ணுவானந்தம் – அக்கினியானந்தம் – இந்திரானந்தம் முதலியன கேட்கப் பெறாமையானும், சிவானந்தம் ஒன்றே கேட்கப்பெறுதலானும், சிவானந்தமே பரமானந்தம் என்க. ஆதலின் பிரமானந்தம் என்பதிற் பிரமசத்தமானது பிரமனைக் குறிக்காது பரப்பிரமமாகிய சிவத்தையே குறிப்பதாம் என்றுங் காண்க. நல் – என்ற இரண்டில் முன்னையது ஆனந்தத்திற்கும், பின்னையது மதுவுக்கும் அடைகளாம். பரமானந்தமாவது – உயர்வு ஒப்பு இல்லாததும் அழிவில்லாததும் ஆகிய சிவத்துவ விளக்கமாம். அதனை அழுந்தியறிதலே அநுபவமெனப்படும். “இன்பமே எந்நாளுந் துன்பமில்லை“ என்றது திருவாக்கு. பெருமானது அருளிப்பாடுகள் தம்மிடம் வெளிப்பட நிகழக் கண்டபோது தமது சிறுமையையும், அவரது அளவிறந்த பெருமையையும் எண்ணி எண்ணி ஆராமைப்பட்டு அநுபவித்தல் பெரியோரியல்பு. ஆகவே பெறச் சிறிதும் தரம் இல்லாத என்னிடத்திலேயும், கருணையினால் கொடுத்து எனவும் குறிப்பிட்ட அழகு நினைந்து மகிழ்தற்கு உரியது

    ‘’இத்தனையும் எம்பரமோ ஐய, ஐயோ
    எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே ‘’
    என்ற அப்பர் பெருமான் தேவாரமும்,
    ‘’யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
    யாவர்க்கும் கீழாம் அடியேனை – யாவரும்
    பெற்றரியா இன்பத்துள் வைத்தாய்க்கு …..’’

    என்ற திருவாசகமும் காண்க . இனி முழுப்பாடலையும்  படித்துப் பயன் பெறுவோம்.

    மன்பெ ரும்திரு மாமறை வண்டுசூழ்ந்து
    அன்பர் சிந்தை அலர்ந்தசெந் தாமரை
    நன்பெ ரும்பர மானந்த நன்மது
    என்த ரத்தும் அளித்தெதிர் நின்றன!

    இத்திருவடிச் சிறப்பை  அடுத்த  வரும் பாடல்கள் கூறும்.

    Share
  • எழுத்து – 13

    எழுத்து – 13

    வேதா. இலங்காதிலகம் (பா வானதி)
    டென்மார்க்.

    என்னுள் குமிழியிடும் திமிர்  எழுத்து.
    தென்றலும் வெட்கத்தோடு தாண்டி நடந்தது.
    நெஞ்சத் தண்டவாளத்தில் எழுத்து ரயில்
    நெடுந்துயிலின்றுp கவனமாக ஓடுகிறது
    மூங்கிலில் மறைந்த புல்லாங்குழலாக
    மேகத்துள் முடிந்த மழையாகத்
    தாகமாக ஓடுகிறது என்னுள்ளே எழுத்து
    மோகமாக இதைக் கவிதை ஆக்குகிறேன்.

    தமிழில் முழமையான பழைய இலக்கண
    நூல் தொல்காப்பியமே! முழவதும் படித்திட
    நிழலும் எனக்குத் தடை இடாது
    விழவிடாத கருவியே எழுத்தும் எழுத்தாணியும்.
    எழுத்து, சொல், பொருளாம் மூவிலக்கண
    முழு இலக்கணமும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
    எழத்து இலக்கணம் இரு வகையான
    முதல் எழத்து சார்பு எழுத்தாம்.

    சொல்லில் உயர்வு தமிழ் சொல்லாம்
    நல்ல பாரதியாரின் ஒரு கூற்று.
    எ – உச்சரிப்பைக் காதால் கேட்கிறோம்
    எ   யை கண்ணால் விழிக்க எழுதுகிறோம்.
    உயிரெழுத்து மெய்யெழுத்து  உயிர்மெய் எழுத்தாகி
    வல்லினம், மெல்லினம் இடையினமும் ஆகும்
    முதல், கடை, ஈற்று கூட்டெழுத்தாகும்
    சொல்வளம் எழுதினால் பெரும் கட்டுரையாகும்.

    Share
  • தனிமை

    தனிமை

    முனைவர். இரா. பேபி
    மடத்துக்குளம்

    நீர்த்துப் போகாத
    தனிமைத் தவம்
    மனத்துக்குள் இறங்கி
    மௌனத்தின் பாஷையை
    அறிவதற்கு இயலாமல்
    காலம் சுழல்கின்றது
    யாரோடும் எப்பொழுதும்
    ஒட்டமுடியாமல்
    பரிதவிக்கின்றது
    அதனைக் கடந்துபோக
    முயன்றாலும் நிழல்போல
    பின்தொடர்கிறது
    தாமரையிலைத் தண்ணீர்போல
    ஒட்டாமல்
    வாழ்விலும்
    கேட்பாரற்றுக் கிடக்கிறது.
    இருத்தலுக்கும் வாழ்தலுக்குமான
    இடைவெளியில் வந்து
    ஒட்டிக்கொள்கிறது
    இருப்புக் கொள்ளாமல்
    துடிக்கும்போதும்
    விடமறுக்கிறது
    எப்போதும் தன்
    வலிய கரங்களால்
    இறுக்கி  நெருக்கி
    மரண அவஸ்தையை
    தந்து ஒவ்வொரு
    நொடியிலும்
    தன்இருப்பை
    உணர்த்துகின்றது.
    ஆயாசத்துடன்
    ஏற்கும்போது
    தன் இருத்தலுக்கான
    அடையாளத்தை அழித்துவிடும்
    என்றெண்ணி இருக்கும்போது
    அழுத்தமாகப் பதித்துவிட்டுச்
    செல்கிறது என்னுள்…..

    Share
  • ஐஸ்பாய்

    ஐஸ்பாய்

    பாஸ்கர் சேஷாத்ரி

    இதோ கடைசிப் பறவையும் இருட்டில் கூட்டைத் தேடி விரைகின்றது .
    ரஸ்தாவின் வண்டியும் நின்று போய் இருட்டாய்த் தெரிகிறது .
    சுவர்க்கோழிகள் கும்மாளம் இடுகின்றன
    மின்மினிப் பூச்சிகள் ஒன்றின் வெளிச்சத்தில் ஒன்றைக் காண்கின்றன .
    இங்கு மட்டும் நக்ஷத்ரங்கள் பிரகாசமாய்த் தெரிகின்றன.
    ஊர் சுற்றப் போன நிலா, இன்று காணவில்லை
    புற அமைதி திகில் ஊட்டுகின்றது. ஆனாலும் பயம் ரசிப்பு தான்.
    ஏதோ ஆலையின் சங்கு எனக்கு மட்டும் முடியவில்லை .
    பூமியின் ஒரே ஆத்மா நான் மட்டும்தான்.
    எங்கு உட்கார்ந்தாலும் உலகை முற்றிலுமாய்க் காண முடியவில்லை .
    எனக்குள் ஓர் உலகம் நிர்மாணித்தேன்.
    அதில் என்னைத் தவிர எல்லோரும் உலா வருகிறார்கள்
    கடைசி வரை என்னை நான் கண்டுபிடிக்க முடியவில்லை.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 88

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 88

    நாங்குநேரி வாசஸ்ரீ

    88. பகைத்திறம் தெரிதல்

    குறள் 871:

    பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
    நகையேயும் வேண்டற்பாற் றன்று

    பகைன்னு சொல்லுத தீய கொணத்த ஒருத்தன் பொழுதுபோக்கா வெளையாட்டுக்குக் கூட ஆசப்படக் கூடாது.

    குறள் 872:

    வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
    சொல்லேர் உழவர் பகை

    வில்ல வச்சிருக்குத வீரர் கிட்ட கூட பகையக் காணிக்கலாம். சொல்தெறம இருக்க புத்திசாலிங்க கிட்ட காணிக்கக் கூடாது.

    குறள் 873:

    ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
    பல்லார் பகைகொள் பவன்

    தனிச்சு நின்னு பல பகையாளியத் தேடிக்கிடுதவன் கூறுகெட்ட பைத்தியக்காரன்.

    குறள் 874:

    பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
    தகைமைக்கண் தங்கிற் றுலகு

    பகையாளியக் கூட சேக்காளியா மாத்துத பெருந்தன்மையான கொணத்த இந்த ஒலகம் போற்றிப் புகழும்.

    குறள் 875:

    தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
    இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று

    தனக்கு ஒதவி செய்ய ஆளில்லாத நெலமயில ரெண்டு பகையாளிங்க இருந்தாகன்னா அவுகள்ள ஒருத்தன சேக்காளியாக்கி தொணையாக்கிக்கிட வேண்டியதுதான்.

    குறள் 876:

    தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
    தேறான் பகாஅன் விடல்

    இதுக்குமுன்ன ஒருத்தனப் பத்தி தெரிஞ்சிருந்தாலும் தெரியலன்னாலும் நெருக்கடி வருதப்போ அவன்கிட்ட நெருங்காம சேக்க வச்சிக்கிட்டும் அவனவிட்டுப் பிரியாம பகையக் காணிச்சிட்டும் இருக்கது நல்லது.

    குறள் 877:

    நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
    மென்மை பகைவர் அகத்து

    தான் துன்பப்பட்டத தெரிஞ்சிக்கிடாத சேக்காளிக்கிட்ட அதப்பத்தி சொல்லக்கூடாது. . நம்ம பலவீனத்த பகையாளிகிட்ட காட்டிக்கிடக் கூடாது.

    குறள் 878:

    வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு

    வழிவகைய உணந்து தன்னயும் பலப்படுத்திக்கிட்டு தற்காப்பும் தேடிக்கிட்டா நம்மள எதித்துநிக்க நெனச்ச பகையாளியோட அகராதி தானா அழிஞ்சு போவும்.

    குறள் 879:

    இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த இடத்து

    முள்ளு மரம் எளசா இருக்கும்போதே வெட்டிப்போடணும். அது முத்திப்போச்சுன்னா வெட்டுதவுக கைக்கு வெனையா வந்து நிக்கும்.

    குறள் 880:

    உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
    செம்மல் சிதைக்கலா தார்

    பகையாளியோட அகராதிய ஏளனமா நெனச்சி அழிக்காம விடுதவன் மூச்சுவிடுத காரணத்தாலேயே உசிரோட இருக்கதா சொல்ல முடியாது.

    Share