நெல்லைத் தமிழில் திருக்குறள்- 88

நாங்குநேரி வாசஸ்ரீ
88. பகைத்திறம் தெரிதல்
குறள் 871:
பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
பகைன்னு சொல்லுத தீய கொணத்த ஒருத்தன் பொழுதுபோக்கா வெளையாட்டுக்குக் கூட ஆசப்படக் கூடாது.
குறள் 872:
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை
வில்ல வச்சிருக்குத வீரர் கிட்ட கூட பகையக் காணிக்கலாம். சொல்தெறம இருக்க புத்திசாலிங்க கிட்ட காணிக்கக் கூடாது.
குறள் 873:
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்
தனிச்சு நின்னு பல பகையாளியத் தேடிக்கிடுதவன் கூறுகெட்ட பைத்தியக்காரன்.
குறள் 874:
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு
பகையாளியக் கூட சேக்காளியா மாத்துத பெருந்தன்மையான கொணத்த இந்த ஒலகம் போற்றிப் புகழும்.
குறள் 875:
தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று
தனக்கு ஒதவி செய்ய ஆளில்லாத நெலமயில ரெண்டு பகையாளிங்க இருந்தாகன்னா அவுகள்ள ஒருத்தன சேக்காளியாக்கி தொணையாக்கிக்கிட வேண்டியதுதான்.
குறள் 876:
தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்
இதுக்குமுன்ன ஒருத்தனப் பத்தி தெரிஞ்சிருந்தாலும் தெரியலன்னாலும் நெருக்கடி வருதப்போ அவன்கிட்ட நெருங்காம சேக்க வச்சிக்கிட்டும் அவனவிட்டுப் பிரியாம பகையக் காணிச்சிட்டும் இருக்கது நல்லது.
குறள் 877:
நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து
தான் துன்பப்பட்டத தெரிஞ்சிக்கிடாத சேக்காளிக்கிட்ட அதப்பத்தி சொல்லக்கூடாது. . நம்ம பலவீனத்த பகையாளிகிட்ட காட்டிக்கிடக் கூடாது.
குறள் 878:
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு
வழிவகைய உணந்து தன்னயும் பலப்படுத்திக்கிட்டு தற்காப்பும் தேடிக்கிட்டா நம்மள எதித்துநிக்க நெனச்ச பகையாளியோட அகராதி தானா அழிஞ்சு போவும்.
குறள் 879:
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
முள்ளு மரம் எளசா இருக்கும்போதே வெட்டிப்போடணும். அது முத்திப்போச்சுன்னா வெட்டுதவுக கைக்கு வெனையா வந்து நிக்கும்.
குறள் 880:
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்
பகையாளியோட அகராதிய ஏளனமா நெனச்சி அழிக்காம விடுதவன் மூச்சுவிடுத காரணத்தாலேயே உசிரோட இருக்கதா சொல்ல முடியாது.