Blog

  • அமெரிக்க நெவேடா: புதிய சூரியக்கனல் மின்சக்தித் திட்டம்

    அமெரிக்க நெவேடா: புதிய சூரியக்கனல் மின்சக்தித் திட்டம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    Public Utility Commission Nevada, Approves 1190 MW of New Solar Energy and 590 MW of Additional Energy Storage [December 9, 2019]

    Renewable energy developer offers 125MW and 300MW solar farm projects in Texas [December 10, 2019]

    image

    https://us.sunpower.com/commercial-solar

    ++++++++++++++++++

    சூரியக்கதிர் மின்சக்தி பரிமாற
    முந்நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள
    ஓரரும் பெரும் மின்சார நிலையம்
    தாரணியில் உருவாகி வருகிறது,
    வாணிபப் படைப்புச் சாதனமாய் !
    தட்டாம்பூச்சி போல் பறக்க
    வானூர்திக்குப் பயன்படப் போகுது !
    பரிதி சக்தியால் பறக்கும் !
    எரி வாயு இல்லாமல் பறக்கும் !
    பகலிலும் இரவிலும் பறக்கும் !
    பசுமைப் புரட்சியில் பிறக்கும்  !
    பாதுகாப்பாய் இயங்குவது !
    நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் 
    நான்கு காற்றாடி உந்துது !
    பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
    பரிதிச் சக்தி ஊட்டும்  !
    ஒற்றை விமானி ஓட்டுவார் !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாட்களில்  உலகைச் சுற்றியது.
    சூரியக்கதிர் தட்டுகள்  அனுதினம்
    பராமரிக் கப்பட வேண்டும்.  
    நூறாண்டு முன் பறந்த
    ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    +++++++++++++++++++++++

    Image result for solar power commercial installations

    COMMERCIAL SOLAR INSTALLATION ACROSS CHICAGO LAND

    Related image

    +++++++++++++++++++++
    அமெரிக்க நகரங்களில் சூரியக்கனல் மின்சார நிலையங்கள் அமைக்கத் திட்டங்கள்
    நெவேடா மின்சார வாரியம் மேலும் இணைக்க 1190 மெகா வாட் சூரியக்கனல் மின்சக்தித் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.  இந்த மேலடுக்கு மின்சாரம் சுமார் 230,000 வீடுகளுக்குப் பயன் படும்.  அடுத்து மேலும் மின்கலத்தில் சேமித்து வைக்க  590 மெகா வாட் அபாய / அவசர நிலைத் தேவைகளுக்கு அமைக்கப் படும்.
    வாரியத்தின் குறிக்கோள் 2030 ஆண்டுக்குள் 50% மின்சாரத் தேவையை மீள் பயன்பாடு, பச்சை எரிசக்தி [Renewable Green Energy]  பரிமாறி வரும். இத்திட்டங்கள் நிறைவேற 3000 பேருக்கு வேலை கிடைக்கும்.
    ஜிங்கோ சூரியசக்தி நிறுவகம் [JinkoSolar Holding Company]  சைனா வில் உள்ள கிங்கை மாநிலத்தில் [Qinghai Province]  300 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையம் கட்டப் போகிறது.  முதன் முதல் திட்டமிடும் அந்த அசுர நிலையத்தில் சூரிய சக்தியின்
    திறனாற்றல் [Module Efficiency]  20.4%.
    டெக்சஸ் நகரம் 2020 ஆண்டில் 125 மெகாவாட் சூரிய சக்தி நிலையம் ஒன்றையும், அடுத்து 2021 இல் மாபெரும் 300 மெகாவாட் நிலையம் ஜோன்ஸ் மாவட்டத்தில் [Jones County] நிறுவப் போகிறது.
    Image result for solar power commercial installations
    Related image
    Trina Solar Company Supplies Solar Power Modules to
    Ukraine’s Largest Solar Power Plant

     

     

    See the source image
    இந்திய சூரியக்கதிர் மின்சக்தி விருத்திக்கு வெளிநாட்டு நிறுவகங்கள் சாதனங்கள்  உற்பத்தி செய்யும்.
    2022 ஆண்டுக்குள் மொத்த 100,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மிகப்பெரு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் இந்தியாவில் நிறுவ, வெளிநாட்டு சூரியக்கதிர் நிறுவகங்கள் பங்கெடுக்கும் என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 2015 ஜூன் முதல் தேதி டெல்லியில் அறிவித்தார்.   உள்நாட்டு நிறுவகங்கள் தமது தொழிற் சாதனங்களை, மேல்நாட்டு நிறுவகங்கள் மூலமாய் மேம்படுத்த  முன்வந்துள்ளன.  இன்னும் ஓராண்டுக்குள் மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு நிறுவகங்கள் இந்தியாவில்  ஆரம்பிக்கத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  2015 நவம்பரில் தற்போதுள்ள சிறு திட்டமான 3000 மெகாவாட் நிறுவகத்திலிருந்து, 100,000 மெகாவாட் பெருந் திட்டத்துக்கு விரிவு படுத்தினார்.
    See the source image
    2015 ஆண்டில் மொத்த சூரியக்கதிர் மின்சக்தி நிலைய நிறுவகம் :  2700 மெகாவாட்.
    இந்திய  உற்பத்தி தகுதி : 2000 மெகாவாட் சூரியக்கதிர்ச் சாதன தட்டுகள் [Solar Power Modules]
    சூரியக் கதிர் மூலவிகள் [Solar Power PV Cells]   : 500 மெகவாட்.
    உள்நாட்டு சூரியக் கதிர் மூலவிகள் [PV Cells], வெளிநாட்டு விலையை விட 15 cents மிகையான விலையில் உள்ளன.  வெளிநாட்டு இறக்குமதி சூரியக் கதிர்ச் சாதனங்கள் நிதிச் செலவு, 7% – 8% குறைவாகவே உள்ளது.   சோலார் எனர்ஜி நிறுவகம் [SunEdison] இந்தியாவில் கட்டுமானம் செய்ய ஆகும் செலவு  [2015 நாணய மதிப்பு]  சுமார் 4 பில்லியன் டாலர்.
    indian solar industry
    Trina Solar Company to Invest $500 Million in Indian Solar Industry
    [December 4, 2017]
    See the source image
    See the source image
    ராஜஸ்தான் மாது சூரிய கதிர்த் தட்டுகளைத்
    துப்புரவு செய்கிறார்

    ++++++++++++

     

    magazine
    ++++++++++++++++++++++++++++
    இந்தியச்  சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள்
     சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும்  உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்”  [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது.  தற்போதைய  பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும்,  அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு  [Climate, Improper Installation, Lack of Maintenance]  ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல !
    இந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து  [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத்  ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை  வரை ஆராய்ந்து தீர்வுகள் கூற வந்தது.  ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.  அதற்கு  புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம்  [Ministry of New & Renewable Energy (MNRE)]  &   [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டன.
    ஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை
    +++++++++++++++++++
    உலக நிறுவன அரங்குகளில்  சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில்  [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெக்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று    [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds]  யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ஆசியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin]  கூறுகிறார்.  குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது.  இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில்  சிரமாக உள்ளது.
    சூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும்.
    கூரையில்’ ஒளித்தட்டுகள் அமைப்பு
    +++++++++++++
    +++++++++++++++++

     சூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.
    2013 -2014 ஆண்டுகட்கு  இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி   [Solar Energy Industries Association ]  அறிவித்துள்ளது.  அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது.  மீள் பயன்பாடு கனல் எருவுக்கு
    மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும்  தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது.  இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.
     
    அதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு  [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)]  தயாராகி வருகின்றன.  2010 ஆண்டிலிருந்துசூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது.  பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு   [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும்.  2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை.  அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters]
    விலைகளும் சேர்க்கப் படவேண்டும்.
    உதாரணமாக 2013 ஆண்டில்  ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh  மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையக  [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார்.  அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது.  அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது.  அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது.  அதனால் 25 ஆண்டுகட்டு  சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.

    World’s Largest Lithium Ion Battery Banks

    By Tesla

    ++++++++++++++++++++

    மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.

    2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார்.  2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும்  மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார்.  2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது  100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார்.  அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

    A close-up of Musk's face while giving a talk
    Elon Musk 
    Space X Falcon Heavy Rocket Pioneer
    BORN Elon Reeve Musk
    June 28, 1971 (age 46)
    PretoriaTransvaal (now Gauteng), South Africa
    RESIDENCE Bel AirLos AngelesCalifornia, U.S.[1][2]
    CITIZENSHIP
    • South Africa (1971–present)
    • Canada (1989–present)
    • United States (2002–present)
    ALMA MATER
    OCCUPATION Entrepreneurengineerinventor, and investor
    KNOWN FOR SpaceXPayPalTesla Inc.HyperloopSolarCityOpenAIThe Boring CompanyNeuralinkZip2
    NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6]
    TITLE
    Share
  • இயற்கையில் எழுந்த இசை – பகுதி 1

    இயற்கையில் எழுந்த இசை – பகுதி 1

    நிர்மலா ராகவன்

    முன்னுரை

    “நாட்டியத்திற்குப் பாட்டு எழுதிக்கொடேன்!’ மகள் ஷீலா என்னைக் கெஞ்சினாள். அதற்கு முன்பே, இரண்டு வருடங்களாகப் பலமுறை கேட்டிருந்தாள்.

    விடாமல், மறுபடியும் கேட்டபோது, “பாட்டா!’’ என்று முதலில் அயர்ந்தேன். “எனக்குப் பாட்டெல்லாம் எழுதத் தெரியாது. ஏதோ, கதை, கட்டுரை. நாடகம், நாட்டிய விமரிசனம் என்று எழுதிக்கொண்டிருக்கிறேன். வேறு யாரையாவது கேட்டுப்பார்!”

    “அம்மாவே மறுத்தால், நான் யாரைக் கேட்பது?” என்றாள், பரிதாபகரமாக முகத்தை வைத்துக்கொண்டு.

    அதில் பொதிந்திருந்த லாஜிக் என்னைச் சம்மதிக்கவைத்தது.

    முதல் பாடல் எழுத ஆரம்பிக்கும்போது அச்சமும் கூடவே எழுந்தது. விக்னமில்லாமல் என் முயற்சியில் வெற்றிபெற பிள்ளையாரை மனத்துள் துதித்தேன். அடுத்து, `நீயே வந்து எழுதிக்கொடு,’ என்று கலைக்கடவுளான ஸரஸ்வதியை வேண்டினேன். பின்பு, என் இசைக் குரு பத்மஸ்ரீ T.S.கல்யாணராமன். (`எப்படி எழுதறது, ஸார்?’) பின்னர், பல பாடல்களில் இவரது பரிந்துரைகள் உண்டு. (நான் பாட்டெழுத ஆரம்பிக்குமுன்னரே அவர் இவ்வுலகைவிட்டுப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது).

    இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப்பாடல்களை இயற்றி, அவற்றில் சிலவற்றை வாத்தியங்களுடன் பதிவு செய்திருக்கிறேன். இவை பெரும்பாலும் பரதநாட்டியத்திற்கான பாடல்களாகும்.

    ஒவ்வொரு பாடலும் இயற்கையுடன் நான் ஒன்றியிருந்த சமயம் தானாக அமைந்தவை.  ஓர் இந்துக் கடவுளின்மேல், அவரை ஒட்டிய கதை ஒன்றுடன் இருக்கும். (இப்படியாக அடிக்கடி என் “மேதாவித்தனத்தைக்” காட்டிக்கொள்வேன். எல்லாம் தலபுராணங்கள் மற்றும் ஆன்மிகப் புத்தகங்களின் உபயம் என்று யாருக்குத் தெரியப்போகிறது!).

    பாடல்கள் எங்கே, எப்படிப் பிறந்தன என்ற சிறு குறிப்பை இத்தொடரில் எழுத உத்தேசித்திருக்கிறேன். பிள்ளையாரிலிருந்து ஆரம்பிப்போமா? (நான் எழுதிய முதல் பாடல் இதுவல்ல. அந்தக் கதை பிறகு).

    விக்ன விநாயகனே

    கோலாலம்பூரின் கிழக்குப் பகுதியில், 280 கிலோமீட்டர் தூரத்தில் செராடிங் (CHERATING) என்ற இடம் இருக்கிறது, கடலோரத்தில். நீர்நிலைகளைக் காணும்போது என் மனம் உற்சாகம் அடையும். கடலைப் பார்த்தபடி, அலையோசையை ரசித்தபடி பாடிக்கொண்டிருப்பேன்.

    ஒரு முறை, செராடிங்கில் சில தினங்களைக் கழித்துவிட்டு, நானும் என் இளைய மகள் சித்ராவும் வாடகைக் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பிறந்த பாடல் இது.

    காரின் ஜன்னலை சரியாக மூட இயலாத நிலையில், போக்குவரத்து சப்தம் காதைத் துளைத்தது. நிம்மதியாக பாடலைப் புனைய ஒரு வழி கிடைத்தது: ஒரு தினசரியை என் உடல் முழுவதிலும் கூடாரம்போல் கவிழ்த்துக்கொண்டு, எழுத ஆரம்பித்தேன். அனுபல்லவியில், சிவனார் பிள்ளையாரை துதிப்பதாக வருகிறது. முப்புரங்களை எரிக்க சிவன் புறப்பட்டபோது, கணபதியை வணங்காததால் தேரின் அச்சு உடைந்ததாக அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். பிள்ளையாரை வணங்கியதும் தடை நீங்கியது.

    சரணம்: பாற்கடலைக் கடையுமுன், தேவர்களும் அசுரர்களும் விநாயகரை வணங்காததால், மத்தாக இருந்த மேருமலை சாய்ந்துவிட்டது. தம் தவற்றை உணர்ந்து, கிளிஞ்சல்களுடன் கடல் நுரையைச் சேர்த்து கணபதியாக்கி வணங்கினர். விக்னமும் விலகியது.

    (திருவலஞ்சுழியில் வெள்ளை வெளேரென்று இருக்கிறது ஸ்வேத விநாயகர் விக்கிரகம். ஸ்வேதா என்றால் வெள்ளை).

    ஒரு நிகழ்ச்சியின் முதல் அங்கமாகப் பலர் இணைந்து, நாட்டிய நாடகமாக ஆட ஏற்ற பாடல். இப்பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=bfv-BuDciVM

    Youtube: Mahavidya Dance Theatre

    Share
  • ஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு

    ஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    மெல்பேண், அவுஸ்திரேலியா. 
    முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர். 
    
    

    “மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் கண்ணன் கூறுகிறான். அந்த வாக்கை வைணவர்கள் மனங்கொண்டு மார்கழி முழுவதையும் வழிபாட்டுக்கு உரிய மாதமாக்கி விட்டார்கள் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. மார்கழி என்றதும் சுப நிகழ்ச்சிகளைச் செய்வதை பொதுவாகவே இந்துக்கள் தவிர்த்துக் கொள்ளுகிறார்கள். இந்த நிலை ஈழத்திலும் காணப்படுகிறது. திருமணம், வீடு குடுபுகுதல், காதுகுத்தல், ஏடுதொடக்குதல் முதலான சுப விஷயங்களை மார்கழியில் செய்வதை தவிர்த்து விடுகிறார்கள். அப்படித் தவிர்ப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் – மார்கழி பீடை பிடித்த மாதம் என்பதே ஆகும். ஆனால் உண்மையில் மார்கழி பீடுடைய மாதமே என்பதை மனமிருத்தத் தவறி விடுகின்றனர்.

    மார்கழி தேவ வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பதாலேயே அதில் மக்களுக்கான விழாக்களைத் தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மையாகும். மார்கழியில்த்தான் திருப்பாவை, திருவெம்பாவை, பாடப்படுகிறது. ஆருர்த்தா தரிசனம், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறத்தல், போன்ற முக்கிய தெய்வ வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இந்தவகையில் மணிவாசகப் பெருமானும் ஆண்டாள் நாச்சியாரும் சைவர்களாலும், வைணவர்களாலும் ஏற்றிப் போற்றி வணங்குதலுக்கு ஆளாகி இருப்பதையும் காண்கின்றோம்.

    மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவை பற்றி ஈழத்தவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். ஈழத்தில் இருக்கும் சைவக் கோவில்கள் பெரியனவாக இருந்தாலும், சிறியனவாக இருந்தாலும், அங்கெல்லம் மார்கழியில் திருவெம்பாவை மிகவும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படும். காலையில் அதுவும் மிகவும் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சியுடன் ஆரம்பித்து திருவெம்பாவை பாடல்முழுவதும் பாடி கோவிலில் பூஜை வழிபாடு நிறைவு பெறும்.

    சைவ ஆலயங்களான அனைத்து ஆலயங்களிலும் இந்த நடை முறை நீண்ட காலமாகவே நடைபெற்று வருவதை யாவரும் அறிவர். அதேவேளை விஷ்ணு ஆலயங்களில் திருவெம்பாவைக்குப் பதிலாக திருப்பாவை பாடப்படும் முறை காணப்படுகிறது. திருவெம்பாப் பாடல்களை பெரும்பாலான சைவர்கள் அறிந்தளவும் திருப்பாவையினை அறிந்தவர்களாக இல்லை என்பது முக்கிய விஷயமாகும். அதேநேரம் மணிவாசப் பெருமானை அறிந்ததுபோல் ஆண்டாள் நாச்சியார் அதிகளவில் அறியப்படவில்லை என்பதும் நோக்கத் தக்கதாகும்.

    ஈழத்தில் பல பாகங்களிலும் விஷ்ணு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அங்கெல்லாம் பூஜைகளை ஆற்றுகின்றவர்கள் பெரும்பாலும் சிவப்பிராமணர்களே என்பது இங்கு முக்கியமாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஈழத்தில் சைவமே நிறைந்து காணப்படுகிறது. வைஷ்ணவம் என்னும் பெயர் படித்தவர்கள் மட்டத்தில் தெரிந்தளவு பாமர்களிடம் சென்றடையவில்லை என்றுதான் கொள்ளவேண்டி இருக்கிறது. வைஷ்ணவ சம்பிரதாயங்கள் இந்தியாவில் இருப்பது போன்று ஈழத்தில் இல்லை என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். வடகலை, தென்கலை, நாமம் இடுதல், என்றால் பெரும்பாலான ஈழத்தவர்களுக்கு விளங்குமா என்பது ஐயமேயாகும். இந்த நிலையில் வைஷ்ணவ அடியவாராய் விளங்கும் ஆண்டாள் நாச்சியார் பற்றியும் அநேகம் பேர் அக்கறை காட்டும் நிலையிலும் இல்லை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. மணிவாசகப் பெருமானை அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை அறிந்திருப்பவர் மிகவும் குறைவாகவே காணப்படுகிறார்கள்.

    பல்கலைக்கழகத்தில் தமிழை, இந்துநாகரிகத்தைப் படிக்கும் மாணவர்களும் படிப்பிக்கும் ஆசிரியர்ளும் பாடத்துக்காக ஆண்டாள் நாச்சியாரையும் அவரது திருப்பாவையும் அவரின் படைப்புக்களையும் அவர்பற்றிய வரலாற்றையும் அறிந்து வைத்திருக்கிறார்களே அன்றி மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு மிகவும் அரிதாகவே இருக்கிறது என்பது மிகவும் முக்கிய விஷயமாகும்.

    யாழ்ப்பாணம் முழுவதும் நாவலர் கலாசாரம், கநதபுராண கலாசாரம் நிறைந்த இடமாகும். இங்குள்ள கோவில்கள் பெரும்பாலும் ஆகமவிதிப்படி பூஜைகள் நடைபெறும் சைவக் கோவில்களேயாகும். ஆனால் பொன்னாலை வரதராஜப் பெருமாள், வல்லிபுர ஆழ்வார், யாழ்நகரில் உள்ள பெருமாள் கோவில், தற்பொழு இணிவிலில் புதிதாக அமைக்கப்பட்ட இணுவில் திருப்பதி கோவில் யாவும் விஷ்ணு கோவில்களே ஆகும். விஷ்ணு கோவிலாக இருந்தாலும் வைஷ்ண பட்டாச்சாரியார்கள் இங்கு பூஜை ஆற்றுவதில்லை. இங்கு பூஜை ஆற்றுகிறவர்கள் யாவருமே சிவப் பிராமணர்களே என்பது நோக்கத்தக்கதாகும்.

    ஈழத்திலுள்ள விஷ்ணு ஆலயங்களில் சிவப்பிராமணர்களும், சைவர்களும் இருந்தாலும் மார்கழியில் அங்கெல்லாம் ஆண்டாள் நாச்சியாரின் வடிவங் கொண்ட சிலை உள்வீதியில் பக்தியுடன் வலம் கொண்டுவரப்பட்டு ஸ்ரீரங்க நாதர் முன்னே வைக்கப்பட்டு திருப்பாவை இன்றளவும் காலைப் பூஜையின் பொழுது பாடப்பட்டு வருகிறது என்பது முக்கிய அம்சம் எனலாம்.

    வைஷ்ணவம் என்பது சமயபாடப் புத்தகத்தில் படிக்கும் அளவுக்கு ஈழத்தில் இருக்கிறதே அல்லாமல் சைவம் போன்று மக்களால் கடைப்பிடிக்கும் அளவுக்கு இல்லை என்பது மனங் கொள்ளத்தக்கதாகும்.

    திருமுறைகளும், நாயன்மார்களும் அறியப்பட்டளவுக்கு ஆழ்வார்களும் அவர்களது பாசுரங்களும் பொதுமக்களிடம் சென்றடையவில்லை என்றுதான் கருதவேண்டி இருக்கிறது. அதற்குக் காரணம் ஈழத்தில் சைவம் பெற்ற முக்கியத்துவமே எனலாம். அறுபத்து மூன்று நாயன்மார் பெற்ற முக்கியத்துவத்தை பன்னிரு ஆழ்வர்களும் ஈழத்துப் பெரும்பாலான மக்களிடம் பெற்றிருக்கிறார்களா என்பது ஐயத்துக்கு உரியதாகவே இருக்கிறது. பெரிய புராணம் கோலோச்சிய அளவுக்கு, கந்தபுராணம் போற்றப்படும் அளவுக்கு  வைஷ்ணவ ஆழ்வார்களும் அவர்களது திருப்பாசுரங்களும் அறியப்பட்டிருப்பது மிகவும் குறைவென்றே கொள்ள வேண்டி இருக்கிறது.

    சமயச் சொற்பொழிவாற்றுகின்ற பெரியவர்கள்கூட சைவ இலக்கியங்களையும், சைவ மேன்மைகளையும் எடுத்துச் சொல்லுவார்களே அன்றி வைஷ்ண சம்பிரதாயங்களையோ அல்லது வைஷ்ணவ ஆழ்வார்களையோ பற்றியோ சொல்லுவது மிகவும் அரிதாகும். மணிவாசகர் மன்றம், மணிவாசகர் சபை என்றெல்லாம் அமைத்து அதன்மூலம் போட்டிகளும் பரிசுகளும் அளித்து மார்கழியில் வீதிகளில் மணிவாசகரின் திருப்பள்ளி எழுச்சி திருவெம்பா பாடல்களைப் பாடும் அளவுக்கு – ஆண்டாள் நாச்சியாரோ அவரது திருப்பவையோ இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

    நாயன்மார்களைப் போற்றும் முகமாக குருபூசைத்தினம் என்று அமைத்து கோவில்களிலும், பாடசாலைகளிலும், சிறப்பான பூஜை வழிபாடு செய்யும் அளவு வைஷ்ணவ ஆழ்வார்களுக்கோ குறிப்பாக ஆண்டாள் நாச்சியாருக்கு ஈழத்தில் செய்யப்படுவது அரிதென்றே சொல்லலாம்.

    யாழ்ப்பாணத்தில் புதிதாக இணிவிலில் திருப்பதி என்னும் பெயரில் விஷ்ணுவுக்கு பெரியதொரு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு விநாயகர் தொடக்கம் விஷ்ணுவரை மிகவும் பிரமாண்டமான சிலா விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இக்கோவிலில் ஆண்டாள் நாச்சியாரிக்கும் ஒரு சன்னிதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு செல்லும் அடியவர்கள் ஆண்டாள் நாச்சியாரையும் வணங்கியே செல்லுகிறார்கள்.

    விஷ்ணு ஆலயங்களில் ஆண்டாள் நாச்சியார் வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் வழிபடச் செல்லும் அடியார்களுக்கு சரியான விளக்கம் இல்லாத காரணத்தால் விஷ்ணு கோவில் செல்பவர்கள் ஆண்டாள் பற்றிக் கவனம் செலுத்தத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது. வல்லிபுரக் கோவிலில் திருமண்ணும் திருநீறும் வழங்கப்படுகிறது. விஷ்ணு ஆலயமாக இருந்தாலும் சிவனும் விஷ்ணுவும் இங்கு பிரித்துப் பார்க்கும் விதத்தில் வழிபாடு அமையவில்லை என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.

    ஆண்டாள் நாச்சியாரின் தமிழ் அமுதத் தமிழ். அவரின் பக்தி அளவிடமுடியாத பக்தி. ஈழத்தில் சைவத்தின் உச்சத்தால் வைஷ்ணவ அடியரான ஆண்டாள் நாச்சியாரை சாதாரண மக்கள் அறியும் வாய்ப்புக் கிட்டவில்லை என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
           நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
            ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
    பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
          தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
    வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
        நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

     

    Share
  • நெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார் என்னும் நாமம் கொண்ட பெண்பாற் புலவர்கள்

    நெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார் என்னும் நாமம் கொண்ட பெண்பாற் புலவர்கள்

    கெளசி, ஜெர்மனி

    இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னமே புகழ்பெற்ற பல பெண்பாற் புலவர்கள் தமிழுக்கும் சமயத்திற்கும் சேவையாற்றியுள்ளார்கள். சங்ககாலத்தில் சுமார் 37 பெண்புலவர்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் பாடிய சுமார் 185 பாடல்கள் கடல்கோள்களுக்கு அகப்படாது எமக்குக் கிடைக்கின்றன. அவர்கள் ஆதிமந்தையார், பொன்முடியார், நக்கண்ணையார், அவ்வையார், ஒக்கூர் மாசாத்தியர், வெள்ளிவீதியார் போன்றோர் என அறியக் கிடக்கின்றது.

    அதில் அணு என்பது பிளக்க முடியாத அளவு மிகச் சிறியதுகள். அவ் அணுவைப் பிளக்கும் போது பிரமாண்டமான ஒரு சக்தி தோன்றும். அதாவது ஏழுகடல் அளவு சக்தி தோன்றும். ஒரு கடலின் ஆழமே அறிய முடியாது இருக்கும் போது 7 கடல் அளவு சக்தியை புகட்டிய குறள் என்னும் விளக்கத்தை

    “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
    குறுகத் தரித்த குறள்”

    என்று திருக்குறளின் பெருமையை அறிவுபூர்வமாக எடுத்துக் கூறிய அவ்வையார் என்னும் பெண்பாற்புலவர் பாடிய பல பாடல்கள் பல எமக்குக் கிடைக்கப் பெறுகின்றன.

    முருகக் கடவுளிடம் நாவற்கனி பறித்துத் தரும்படி கேட்ட போது சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று வினாவிய முருகக் கடவுளை “பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா தமிழ்ஞானப் பழம் நீயப்பா” என்று பாடிப் புகழ்ந்த அவ்வையார் பாடல்களையும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், பாடிய அவ்வையார் பாடல்களையும், குறுநிலமன்ன அதியமான் காலத்தில் வாழ்ந்த அவ்வையார் பாடல்களையும் எடுத்து ஆராயப் புகுந்தால், பாடல்வரிகளில் தன்மையை நோக்கும் போது அவ்வையார் என்பவர் ஒருவரே என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது உள்ளது.

    உதாரணமாக “அறஞ்செய்ய விரும்பு, ஆறுவது சினம்” என்று தொடருகின்ற ஆத்திசூடிப் பாடல்களையும்,

    “இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
    கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து”

    என்னும் புறநானூறு பாடல்வரிகளையும் எடுத்து நோக்கினால், வேறுபட்ட கவித்துவத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே அவ்வையார் என்னும் பெயருடைய வெவ்வேறு பெண் புலவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது உண்மையென ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

    திருமணம் செய்யாமல் கல்வி கற்று சமூகப்பணிகளுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்களே அவ்வை என்னும் பெயரால் அக்காலத்தில் அழைக்கப்பட்டனர். அவ்வழியில் சங்ககாலத்தில் வாழ்ந்த அவ்வையார், குறுநில மன்னன் பாரி வள்ளல் பிள்ளைகளான அங்கவை சங்கவை காலத்தில் வாழ்ந்த அவ்வையார், சோழர் காலத்தில் கம்பர் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த அவ்வையார். பிற்கால ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நீதி நூல்களைத் தந்த அவ்வையார் என அவ்வையார்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

    சங்ககாலத்து அவ்வை தற்போது மலையாளம் என்று சொல்லப்படுகின்ற சேரநாட்டிலே தர்மபுரி என்று தற்போது அழைக்கப்படும் தகடூர் எனப்படும் தலைநகரத்திலே யாளிதத்தனுக்கு மகளாகப் பிறந்தாள். பிள்ளை 3 வயதாக இருக்கும் போது தாய் இறக்கும் தறுவாயில் கலங்கி நிற்க

    “இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
    விட்டசிவனுஞ் செத்து விட்டானோ – முட்ட
    முட்டப்பஞ்ச மேயானாலும் பாரமவ னுக்கன்னாய்
    நெஞ்சமே அஞ்சாதே நீ”

    என்று பாடியதாகவும். அக்கணமே கவலை நீத்த தாய் உயிர்நீத்தாள். தந்தையும் உறவினர் வசம் பிள்ளையை ஒப்படைத்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இவர் கல்வி, சமயப்பற்று அத்தனையும் பெற்றவராய் சமுதாய சமயப்பணிக்காய்த் தன்னை ஒப்படைத்து நல்லறிவாற்றலுள்ள பெண்ணாய் வளர்ந்தாள் என வரலாற்று நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இக்காலம் கி.மு.300 – கி.பி 250 வரையுள்ள காலப்பகுதிகளாகும். இவர் பாடல்கள் சங்கப் பாடல்களான அகநானூறு, புறநானூறு, நற்றிணை குறுந்தொகை ஆகியவற்றிலே தொண்டைமான், பாரி, அதியமான், எழினி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி, சோழன் பெருநற்கிளி, சேரன் மாரி வெண்கோ போன்ற மன்னர்களைப் பற்றிய பாடல்களில் காணக்கிடக்கின்றன.

    இவர் அக்கால குறுநில மன்னன் அதியமான் புகழ்பாடிப் பரிசில்கள் பெற்றுள்ளார். அவர் பெருமை கண்ட மன்னனும், அவரை அரசவைப் புலவராக அமர்த்தினார். இம்மன்னனிடம் சிறப்புப் பொருந்திய 12 ஆண்டுக் கொருமுறை காய்க்கின்ற கருநெல்லிக்கனியைப் பொதிகைமலை வாழ்ந்த தவமுனிவர் வழங்க அக்கனியை நீண்ட காலம் வாழ வேண்டிய ஒளவைக்கு அதியமான பரிசாகக் கொடுத்தான்.

    அதியமானுடன் தொண்டைமான் போர் புரிய ஆயத்தமான போது, போர் நடக்காதவண்ணம் தடுப்பதற்காக தொண்டைமானிடம் ஒளவையார் தூது சென்றார். தொண்டைமான் படைக்கலக் கொட்டிலைக் காட்டியபோது

    “இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
    கண்திரழ் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
    கடியுடை வியனகரவ்வே, அவ்வே
    பகைவர்க் குத்திக் கோடுனுதி சிதைந்து
    கொல்துறைக் குற்றிலமாதோ”

    மன்னனே உன்னுடைய அரண்மனையிலேயுள்ள படைக்களங்கள் யாவும் போர்க்களத்தைக் காணாததால் மயில்பீலி அணியப்பெற்று, மாலை சூட்டப்பெற்று, நெய்பூசப்பெற்று அழகுடன் காணப்படுகின்றன. ஆனால், அதியமானின் வேல்கள் நாளும் பகைவர்களைப் போரில் குத்துதலால், முனைகள் முறிந்து சிதைந்து கொல்லன் உலைக்களத்திலே குவிந்து கிடக்கின்றன என்று அதியமான் பெருமையைப் பாடி தொண்டைமான் போரை நிறுத்தினார்.

    12ம் நூற்றாண்டில் (சோழர்காலம்) வாழ்ந்த ஒப்பற்ற புலவர்களான கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, பொய்யாமொழி போன்றோர்க்கு ஒப்பாக அருங்கவியாற்றிய அற்புதத் தமிழ் புலவர் அவ்வையார் பற்றிய ஓர் சம்பவத்தை எடுத்து வருகின்றேன். மன்னர்களைப் புகழ்ந்து பாடலும் அப்பாடலுக்கு மனமுவந்த மன்னர்கள் பரிசில் வழங்கலும் அக்காலத் தமிழ் பற்றுக் கொண்ட மன்னர்களின் மனப்பாங்கு. ஒரு மாமன்னனைக் காண அவ்வையார் செல்கின்றார். அம்மையே நீவீர் எந்த ஊர் என்று மன்னன் கேட்க

    காலொந்தே னொந்தேன் கடுகி வழிநடந்தேன்
    யான்வந்த தூர மெளிதன்று கூனல்
    கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா
    இருந்தேனுக் கெங்கே யீடம்

    வளைந்த சங்கு தேனையுண்பதற்காக வாய் திறந்துள்ள நாட்டுக்கு வல்லவனே! காவிரி நதி சூழ்ந்த நாட்டின் மன்னனே! உன்னைக் காண்பதற்காக நெடுந்துரம் பரபரப்போடு நடந்து வந்தேன். அதனால், கால் நொந்தேன், ஆங்காங்கே தங்கினேன். அதனால், எந்த ஊர் எனக்குச் சொந்த ஊர் என்பது, என்று கூறுகின்றார்.

    அதைக் கேட்ட மன்னனும் அரியணை காட்டி அமரச் செய்ய, அவ்விடத்தில் கம்பர் பாடல் ஒன்று படிக்கப்படுகின்றது. மன்னனும் கம்பருக்கு நிகர் யாருண்டு என்று புகழ்ந்துரைக்க

    “விரக ரிருவர் புகழ்ந்திடவே வேண்டும்
    விரனிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில்
    பஞ்சேனும் பட்டேனும் வேண்டு மவர்கவிதை
    நஞ்சேனும் வேம்பேனு நன்று

    சூழ்ச்சிக்காரர் இருவர் தன்னைப் புகழ்வதற்காக வேண்டும், எல்லா விரல்களிலும் மோதிரங்கள் வேண்டும், பஞ்சால் அல்லது பட்டால் ஆடை அணிந்திருக்க வேண்டும், அவர்கள் எழுதிய கவிதை வேம்பாக இருந்தாலும் நல்லது என்று அவ்வையார் எழுந்து அவ்விடத்தில் பாடுகின்றார்.

    இதைகேட்ட மன்னன் உலகத்து உண்மை இதுவாகிலும் அம்மையே! கம்பர் சிறப்பான கவி புனையும் ஆற்றல் மிக்கவர் என்று கூற

    வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
    தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் – யாம்பெரிதும்
    வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண்
    எல்லோர்க்கு மொவ்வொன்று றெளிது

    தூக்கணாங்குருவியின் கூடு, கரையான் புற்று, தேன்கூடு, சிலந்திக்கூடு, ஆகியவை யாராலும் இலகுவாகச் செய்து முடிக்கக் கூடியதல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது. அதனால், யாம் பெரிதும் வல்லோம் என்று வலிமை சொல்ல வேண்டாம் என்று பாடினார். அத்துடன் எவ்வாறு புலமை கம்பருக்கு வந்திருக்கும் என்பதை எடுத்துக்காட்ட

    சித்திரமுங் கைப்பழக்கம் செந்தமிழு நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
    நடையு நடைப்பழக்க நட்புந் தயையும்
    கொடையும் பிறவிக் குணம்

    என்று கூறி

    காணாமல் வேணதெல்லாம் கத்தலாங் கற்றோர்முன்
    கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
    பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தாக்கால்
    கீச்சுக்கீச் சென்னுங் கிளி

    என படிப்பு என்னவென்று அறியாதவர்கள் படித்தவர்கள் முன்னே வெட்கப்படாமல் நினைத்ததெல்லாவற்றையும் கூறலாம் ஆனால், படித்தவர்கள் முன்னே பணியாமல் இருக்கக் கூடாது. அது எப்படியென்றால் கிளி பெரும் பூனை வந்தால் கீச்சுக்கீச்சென்று கத்துவதைப் போன்றது. இவ்வாறு பாட அவ்வை மதிநுட்பம் அறிந்த மன்னனும் அம்மையே! தங்கள் பெயர் எதுவென்று உரைக்க அவ்வை என்கின்றார். ஆ… அவ்வையா! என்று துடிதுடித்த மன்னனும் அவரை அரியாசனத்தின் தன் பக்கத்தில் இருத்துகின்றார்.

    இவ்வாறு கல்வி ஆற்றல் மிக்க தைரியமான அவ்வையார் சோழர்காலத்தில் வாழ்ந்திருக்கின்றார். பிற்கால அவ்வையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற சமுதாய சீர்திருத்த சிந்தனைகளை விதைக்கும் இலகுதமிழ் பாக்களை யாத்திருக்கின்றார் என்று அறியக்கூடியதாக இருக்கின்றது.

    எப்போது வாழ்ந்த அவ்வை என்று காலக்கணிப்பீட்டில் மயக்கம் இருந்தாலும் அவ்வையார் என்ற பெயரிலே எமக்குக் கிடைக்கும் அத்தனை பாக்களும் எமது உள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்துவதாகவே உள்ளன.

     

    உசாத்துணை நூல்களும் இணையப்பக்கங்களும்

    1. தனிப்பாடல் நகைச்சுவை – வே.ந.கபிலர்
    2. ஒளவையார் வாழ்வும் வாக்கும் – பேராசிரியர் தி. முத்து
    3. https://mayadigimedia.blogspot.com/2015/06/blog-post_37.html
    4. http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_16.html

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 87

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 87

    நாங்குநேரி வாசஸ்ரீ

    87. பகை மாட்சி

    குறள் 861:

    வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
    மெலியார்மேல் மேக பகை

    பகையாளி நம்மளவிட பலசாலியா இருந்தா எதுக்கக் கூடாது. பலமில்லாத எளச்சவன சட்டுனு எதித்து நின்னுடணும்.

    குறள் 862:

    அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
    என்பரியும் ஏதிலான் துப்பு

    கூட இருக்கவங்க மேல நேசம் வைக்காம, பலமுள்ள தொணையில்லாம, தானும் பலம் இல்லாம இருக்குதப்போ பகையாளிய எங்ஙன செயிக்க ஏலும்?.

    குறள் 863:

    அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
    தஞ்சம் எளியன் பகைக்கு

    ஒருத்தன் தொட நடுங்கியாவும், கூறுகெட்டவனாவும், மத்தவங்களோட சேந்து பழகுத கொணம் இல்லாதவனாவும், கஞ்சாம்பட்டியாவும் இருந்தாம்னா பகையாளி அவன சுளுவா தோக்கடிச்சிடுவான்.

    குறள் 864:

    நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
    யாங்கணும் யார்க்கும் எளிது

    கோவத்தையும், மனசையும் கட்டுக்குள்ள வைக்க ஏலாதவன யார் வேணும்னாலும், எப்பம்னாலும், எங்குட்டுன்னாலும் சுளுவா தோக்கடிச்சிப்போடுவாக.

    குறள் 865:

    வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
    பண்பிலன் பற்றார்க் கினிது

    நல்ல வழிய நாடாம, பொருத்தமானத செய்யாம, பொல்லாப்புக்கு அஞ்சாம, நல்ல கொணமும் இல்லாம ஒருத்தன் இருந்தாம்னா அவன் பகையாளியால சுளுவா செயிக்கப்படுவான்.

    குறள் 866:

    காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
    பேணாமை பேணப் படும்

    யோசிக்காம கோவப்படுதவனாவும், பேராசக்காரனாவும் இருக்கவனோட பகைய ஏத்துக்கிட்டு எதித்து நிக்கலாம்.

    குறள் 867:

    கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
    மாணாத செய்வான் பகை

    தான் கூட இருந்துக்கிட்டே தனக்கு வேண்டாத வேலயச் செய்யுதவன பொருள் கொடுத்தாது பகையாளியா ஆக்கிக்கிடணும்.

    குறள் 868:

    குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
    கினனிலனாம் ஏமாப் புடைத்து

    ஒருத்தன் கொணங்கெட்டவனாவும், தப்புதண்டா செய்யுதவனாவும் இருக்குதப்போ அவன் பக்கத்தொணை இல்லாமப் போவுத நெலம பகையாளிக்கு பலமா ஆகிப்போவும்.

    குறள் 869:

    செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
    அஞ்சும் பகைவர்ப் பெறின்

    கூறுகெட்ட தொடநடுங்கியா பகையாளிங்க இருந்தாகன்னா அவுகள எதித்து நிக்கவங்கள விட்டு மகிழ்ச்சி வெலகாம இருந்துக்கிடும்.

    குறள் 870:

    கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
    ஒல்லானை ஒல்லா தொளி

    போர் செய்யுத மொறையப் படிச்சுத் தெரிஞ்சிக்கிடாம இருக்க பகையாளிய எதித்து நிக்குத சுளுவான காரியத்த செய்யத் தயங்குதவுகள புகழ் அண்டாம எட்டத்துலயே நின்னுக்கிடும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(279)

    குறளின் கதிர்களாய்…(279)

    செண்பக ஜெகதீசன்

     

    குறளின் கதிர்களாய்…(279)

     உள்ளொற்றி யுள்ளூர் நாப்படுவ ரெஞ்ஞான்றுங்
    கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

    – திருக்குறள் -927(கள்ளுண்ணாமை)

    புதுக் கவிதையில்…

    பிறர் அறியாவண்ணம்
    எங்காவது ஒளிந்திருந்து
    கள்ளுண்டு போதையில்
    சாய்ந்தாலும்,
    கண்டுபிடித்திடுவர் ஊரார்
    ஆய்ந்தறிந்தே..
    அதனால்
    குடித்தவன் ஊரார்
    கேலிக்கு ஆளாவான்…!

    குறும்பாவில்…

    ஒளிந்திருந்து பிறரறியாமல் கள்ளை
    விரும்பிக் குடித்துச் சாய்பவன், ஊராரால்
    கண்டறியப்பட்டு கேலிக்கு ஆளாவான்…!

    மரபுக் கவிதையில்…

    அடுத்தவர் அறிந்திடா வகையினிலே
    அயலிடம் தன்னில் ஒளிந்திருந்தே
    படுத்திடும் வகையிலே கள்ளுண்ணும்
    பண்பிலா ஒருவனை ஊர்மக்கள்
    அடுத்தே இருப்பிடம் கண்டறிவர்
    அவன்குணம் அனைவரும் அறியவைப்பர்,
    தடுத்திட வியலாத் தவறிதனால்
    தள்ளப் படுவான் நகைப்பிற்கே…!

    லிமரைக்கூ..

    மறைவினில் கள்ளினை உண்டு
    மயங்கிவிழுபனை ஊரார் எள்ளிநகைப்பர்,
    அறிந்தவன் இருப்பிடம் கண்டு…!

    கிராமிய பாணியில்…

    குடிக்காத குடிக்காத
    கள்ளக் குடிக்காத,
    கொணத்தக் கெடுத்துக்
    குடியக் கெடுக்கும்
    கள்ளக் குடிக்காத..

    ஒருத்தருக்கும் தெரியாத எடத்தில
    ஒளிஞ்சிருந்து கள்ளக்குடிச்சி
    உழுந்து கெடந்தாலும்
    அவன எப்புடியும்
    ஊரார் கண்டறிஞ்சிடுவாங்க,
    அவனுக்கு
    ஊர்சிரிக்கும் நெலம வருமே..

    அதால
    குடிக்காத குடிக்காத
    கள்ளக் குடிக்காத,
    கொணத்தக் கெடுத்துக்
    குடியக் கெடுக்கும்
    கள்ளக் குடிக்காத…!

    Share
  • திறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்த புலமையாளர் – அ.ச. ஞானசம்பந்தன்

    திறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்த புலமையாளர் – அ.ச. ஞானசம்பந்தன்

    -மேகலா இராமமூர்த்தி

    இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியைத் தம் பேச்சாலும் எழுத்தாலும் செங்கோல் செலுத்தியாண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர். அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள். அழுத்தந்திருத்தமான கணீரென்ற பேச்சு; அருவியின் வீழ்ச்சிபோன்ற தடையற்ற சொற்பெருக்கு; அதிலே பொங்கிவரும் புதுபுதுச் சிந்தனைகள் என்று அனைவரையும் வியக்கவைத்த வித்தகர் அவர். சங்க இலக்கியம் முதல் பாரதிதாசன்வரை அவர் பேசாத பொருளில்லை!

    1916ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று திருச்சி, லால்குடியை அடுத்த அரசங்குடியில் பெருஞ்சொல் விளக்கனார் அ.மு. சரவண முதலியாருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்தார் அ.ச. ஞானசம்பந்தன். தந்தையார் சிறந்த தமிழ்ப் பண்டிதர். இலக்கண, இலக்கியங்களிலும் கம்பராமாயணத்திலும் கரைகண்டவர். பெரிய புராணத்தை எழுத்தெண்ணிக் கற்றவர். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாருடன் இணைந்து திருவிளையாடற் புராணத்துக்கு உரை வரைந்தவர். பின்னர், லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் (Board High School) தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு. பிற்காலத்தில் அதே பள்ளியில் அ.ச.ஞா. சேர்க்கப்பட்டார். தந்தையே அவருக்குத் தமிழாசிரியராகவும் திகழ்ந்தார்.

    ’பெருஞ்சொல் விளக்கனார்’ இலக்கியவாதி மட்டுமல்லர், சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளரும் ஆவார். தந்தையின் ஆர்வமும் புலமையும் தனயனுக்கும் இயல்பாகவே அமைந்திருந்தது. தமது ஒன்பதாவது அகவையில் துறையூரில் ஸ்ரீலஸ்ரீ வாலையானந்த சுவாமிகள் தலைமையில் நடந்த ஒரு சைவ மாநாட்டில் கலந்துகொண்டு மெய்ப்பொருள் நாயனார் குறித்துச் சிறப்புறப் பேசிப் பாராட்டைப் பெற்றார் அ.ச.ஞா.

    தம்முடைய பதினைந்தாவது வயதில் வ. உ. சிதம்பரனார் ஏற்பாடு செய்திருந்த சைவ சித்தாந்த மகாசபையில் பேசுவதற்காகத் தம் தந்தையாருடன் அ.ச.ஞா.  தூத்துக்குடி சென்றார். அப்போது நடந்த சுவையான சம்பவத்தை அவரே பின்வருமாறு பதிவுசெய்திருக்கின்றார்.

    ”தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. மற்றைய ஊர்களைப் போலக் காலையிலும் மாலையிலும் அங்கு விழா நடைபெறாது. இரவு 9:30 மணிக்குத் தொடங்கி, விடியற்காலை 3 மணி 3:30 மணிவரை நடைபெறும். காரணம் வருபவர் அனைவரும் வணிகர்கள். ஆதலால் கடையை மூடிவிட்டு இரவில்தான் வருவார்கள். இந்த நிலையில் ஒரு பிரச்சினை எழுந்தது. அன்று இரவு கூட்டத்திற்குச் சொற்பொழிவாளர்களைப் போடும்போது ”சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளையைக் கடைசிப் பேச்சாளராகப் போட்டுவிடுங்கள்” என்றார் வ.உ.சி; எல்லாரும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், என் வாய் சும்மா இருக்கவில்லை. சிதம்பரம் பிள்ளையைப் பார்த்து, “அது ஏன்?” என்று நான் கேட்டேன். அவர் மிக அமைதியாக, “பையா! ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் பேசிய பிறகு யாருடைய பேச்சும் எடுபடாது. அதனால்தாம் நிகழ்ச்சியை இவ்வாறு அமைக்கிறோம்” என்றார். நான் கொஞ்சங்கூடச் சிந்திக்காமல், ”அவர் என்ன கொம்பா?” என்று கேட்டுவிட்டு, அத்தோடு நிறுத்தாமல், “அவருக்குப்பின் நான் பேசுகிறேன்” என்றேன். என் தந்தையார் என்னைக் கடிந்துகொண்டார். ஆனால், பிள்ளையவர்கள், “அப்படியானால் இன்றிரவு, ரா.பி.க்குப் பின்னால் நீ பேசலாம்” என்றார். பிள்ளையைத் தவிர மற்ற அனைவரும் என்னைக் கோபத்துடன் பார்த்தனர்.

    விழாத் தொடங்கியது. திரு. ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் பேசத்தொடங்க இரவு 1 மணிக்குமேல் ஆகிவிட்டது. நான் இரவு 10:30 மணிக்கே மேடையின் பின்புறம் தூங்கிவிட்டேன். சேதுப்பிள்ளையவர்கள் தம் பேச்சை முடிக்கும் தறுவாயில், வ.உ.சி. அவர்கள் எல்லையற்ற அன்புடன் என் முகத்தை ஈரத்துணியால் துடைத்துத் தூக்கம் கலையுமாறு செய்தார்கள். என்னை மேசையில் ஏற்றிவிட்டார்கள்; பின்னர் என்னை அப்படியே தூக்கிக் கொண்டார்கள். பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் தூக்கி வைத்துக்கொண்டே “பேசு ஐயா பேசு!” என்றார்கள். அவர் தூக்கிக்கொண்டிருந்தபடியால் என்னால் பேச இயலவில்லை; இறக்கிவிட்டதும் பேசத் தொடங்கினேன்.

    என் பேச்சு முற்றுப்பெற்றதும் என் தந்தையாரைப் பார்த்து, “முதலியார், இவனை என்ன செய்யப் போகீறீர்கள்?” என்று கேட்டார் வ.உ.சி. அப்போது என் தந்தையார், ”இவனைக் கல்லூரியில் படிக்கவைக்க எனக்கு வசதியில்லை; எனவே வித்துவானுக்குப் படிக்கவைக்கப் போகிறேன்” என்றார். வ.உ.சி. உடனே, “நான் கப்பலோட்டிய காலத்தில் நீங்கள் வரவில்லையே; இவனைப் போய் வித்துவானுக்குப் படிக்கச் சொல்லுகிறீர்களே! ஏதாவது வழிசெய்து கல்லூரியில் படிக்க வையுங்கள் என்று தழுதழுத்த குரலில் கூறினார்” என அச்சம்பவத்தை நெகிழ்ச்சியோடு நினைவுகூரந்து, ’நான் கண்ட பெரியவர்கள்’ என்ற தம்முடைய நூலில் எழுதியிருக்கின்றார் அ.ச. ஞானசம்பந்தன்.

    இச்சம்பவம், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளைக்கே சவால் விடும் அ.ச.ஞா.வின் துணிச்சலையும், மேடை ஆளுமையையும் பறைசாற்றுவதோடல்லாமல், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் பெருந்தன்மையையும் பேரருள் உள்ளத்தையும் அங்கை நெல்லியென நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

    1935இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்பில் (Intermediate) சேர்ந்தார் அ.ச.ஞா. தமிழின் பெரும்பகுதி இலக்கண, இலக்கியங்களை வீட்டிலிருந்தவாறு ஏற்கனவே பயின்றிருந்ததால், பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியலை விருப்பப்பாடங்களாக எடுத்துப் படித்தார் அவர். அதைத்தொடர்ந்து இயற்பியல் ஹானர்ஸ் படிப்பில் சேரவிருந்தார். அப்போது தமிழ்த்துறைத் தலைவராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார், அ.ச.ஞா.வின் தமிழ்ப் புலமையை நன்கு அறிந்தவராதலால், மிகவும் வற்புறுத்தி அ.ச.ஞா.வைத் தமிழில் முதுகலைப் படிப்பு படிக்க வைத்திருக்கின்றார்.

    ந.மு. வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், மகாவித்துவான் இரா. இராகவையங்கார், பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற இலக்கியப் பேரறிஞர்கள் பேராசிரியர்களாய் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அணிசெய்த பொற்காலமது.  அவர்களது அறிவின் ஆழத்தால் அ.ச.ஞா.வின் மேதைமை மேலும் சுடர்விட்டது.

    அ.ச.ஞா. தம்முடைய பேராசிரியரான நாவலர் சோமசுந்தர பாரதியாரிடம் திருக்குறளுக்குப் பரிமேலழகரின் வைப்புமுறை தவறு என்றதும், ’ஏஎ இஃதொத்தன் நாணிலன்’ என்று தொடங்கும் கலித்தொகை 62ஆவது குறிஞ்சிக்கலிப் பாடலை நச்சினார்க்கினியர் பெருந்திணைப் பிரிவில் அடக்கியது தவறு; அஃது அன்பின் ஐந்திணையிலேயே அடக்கத்தக்கது என்று வாதிட்டு நாவலரை ஏற்கச்செய்தமையும் அ.ச.ஞா.வின் அறிவுக்கூர்மைக்குத் தக்க சான்றாகும்.

    அப்போது பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கிய மகாகனம் ’ரைட் ஹானரபிள்’ சீனிவாச சாஸ்திரியார், அ.ச.ஞா.வின் ஆங்கிலப் புலமை சிறந்து விளங்கக் காரணமானார். இசைமேதை எஸ். இராமநாதன், பேராசிரியர் க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், தோழர் பாலதண்டாயுதம் போன்றோர் அக்காலத்தில் அ.ச.ஞா.வோடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஒருசாலை மாணாக்கர் ஆவர்.

    தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றபின் 1942இல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார் அ.ச.ஞா. அக்கல்லூரியில் 1956 வரை பணியாற்றினார். பின், இந்திய வானொலியின் சென்னை அலுவலகத்தில் நாடகங்கள் தயாரிப்புப் பிரிவின் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றினார்.  தமிழ்நாட்டுப் பாடநூற் கழகத்தின் தலைவராகச் சிலகாலம்  பொறுப்பில் இருந்தார். 1970இல் மதுரைக் காமராசர் பல்கலைக்கழத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியிற்சேர்ந்து 1973இல் அப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார். 

    தமிழொடு நல்ல ஆங்கிலப்புலமையும் கைவரப்பெற்ற அ.ச.ஞா., மேலைநாட்டுத் திறனாய்வாளர்களின் கோட்பாடுகளைத் தமிழ்ப்படுத்தித் தம் விரிந்த தமிழ்ப்புலமையால் அவற்றிற்குத் தக்க சான்றுகளைத் தமிழிலக்கியங்களிலிருந்து பொருத்திக்காட்டித் திறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்தவர் ஆவார்.

    திறனாய்வுத்துறைக்கு மட்டுமன்று! ’திறனாய்வு’ என்ற சொல்லையே தமிழுக்கு அறிமுகம் செய்தவர் அ.ச.ஞா.வே ஆவார். அதுவரை ’விமர்சனம்’ என்று வழங்கப்பட்டுவந்த சொல்லுக்குத் ’திறனாய்வு’ எனும் புதுப்பெயர் தந்தவர் அவர். ஆரம்பத்தில் அதற்குப் பலத்த எதிர்ப்பு இருந்திருக்கின்றது. ஆனந்தவிகடன் பத்திரிகை, ”திறனாம்…ஆய்வாம்!” என்று அதனைக் கேலி செய்து தலையங்கம் எழுதியதையும், பத்தாண்டுகளுக்குள் அப்பத்திரிகையே அச்சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டதையும் அ.ச.ஞா.வே தம் நூலொன்றில் குறிப்பிடுகின்றார். அதுபோலவே ’டிராஜடி’ (Tragedy) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக ’அவலம்’ என்ற தமிழ்ச்சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவரும் அவரே.

    ஏராளமான ஆய்வு நூல்கள், எண்ணிலடங்கா இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சிப் பொழிவுகள் என அ.ச.ஞா. தமிழுக்கு ஆற்றியிருக்கும் அரும்பணிகள் அளப்பரியன. எல்லாருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் ஆனந்த விகடனில் அவர் எழுதிய ‘குறள் கண்ட வாழ்வு’ எனும் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். தாகூர், ஜான் டெவி (John Dewey), தொரோ (Henry David Thoreau) போன்றோரது நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் அவர். தம்பியர் இருவர், கிழக்கும் மேற்கும், மணிவாசகர், தத்துவமும் பக்தியும் போன்ற பல நூல்கள் அவரது நுண்மாண் நுழைபுலத்தைப் பறைசாற்றுவன.

    ஆங்கில இலக்கியம் பயிலும் மாணாக்கர்கட்கு ஹட்சனின் (William Henry Hudson) இலக்கியத் திறனாய்வு (Literary Criticism) போலத் தமிழிலக்கியம் பயில்வாருக்கு அவருடைய ‘இலக்கியக் கலை’  சிறந்த இலக்கியக் கைகாட்டி எனலாம். 1985-இல், ஏ.வி.எம். அறக்கட்டளைக்காகப் பன்னிரண்டே நாள்களில் அவர் எழுதிய ‘கம்பன் புதிய பார்வை’ என்ற திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தமை அவரது ஆராய்ச்சித் திறனின் ஆழத்தையும் விரைவையும் அவனிக்கு அறியத்தருகின்றது.

    ’இளங்கோவடிகளின் சமயம் எது?’ என்ற நூலில் இளங்கோவடிகளும், கோவலனும் சமணர் அல்லர் என்பதைத் தக்க சான்றாதாரங்களோடு நிறுவியுள்ளார் பேராசிரியர் அ.ச.ஞா.

    இவரது ’பெரிய புராண ஆய்வு நூல்’, சைவ அறிஞர்களால் பெரிதும் போற்றப்படும் நூலாகும். அதில் பெரியபுராணம் தோன்றிய காரணம், அதன் காலப் பின்புலம், சேக்கிழாரின் நூல்நோக்கம், படைப்பாற்றல் திறன், பெரிய புராணத்தின் மூலம் அவர் கூறவந்த கருத்து போன்ற தகவல்களையும், வேதத்திற்கும் சைவத்திற்கும் உள்ள தொடர்பு, உருத்திரன் உருத்திர சிவனாகி, சிவ வழிபாடு முக்கியத்துவம் பெற்றமை, சங்ககாலம் முதல் காப்பியக் காலம்வரை தமிழகத்தில் நிகழ்ந்த சிவ வழிபாட்டுமுறை, தேவார காலத்திற்கு முன்னும் பின்னுமான சிவ வழிபாட்டு நிலை போன்ற பல அரிய செய்திகளை விரிவாக ஆய்ந்து விளக்கியிருக்கின்றார். அந்நூலின் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டிருக்கும் ’ஸ்ரீ ருத்திரம்’ பற்றிய விளக்கம் மிகச் சிறந்த ஒன்றாகும்.

    பேராசிரியர் அ.ச.ஞா.வின் மாலைக்கால வாழ்வு (evening of his life) ஆங்கில மாக்கவி மில்டனின் (John Milton) வாழ்வை நிகர்த்ததாய் அமைந்திருந்தது. அக்கவிஞன் தன் பார்வையை இழந்த நிலையிலேயே துறக்க நீக்கம் (paradise lost), துறக்க மீட்சி (paradise regained) போன்ற ஒப்பற்ற காப்பியங்களைப் படைத்தான். அ.ச.ஞா.வும் அவ்வாறே நீரிழிவு நோயால் கண்பார்வை பறிபோன முதுமை நிலையிலும் ஆய்வுப்பணிகளில் ஓயாது ஈடுபட்டார். ஏதேனும் நூல் தேவையாக இருந்தால் கூட, இல்லத்தில் அந்நூல் வைக்கப்பட்டிருக்கும் இடம், நூலின் தலைப்பு, அதன் அட்டையின் நிறம் என எல்லாவற்றையும் குறிப்பிட்டுத் தெளிவாகக் கூறுமளவிற்கு நிகரற்ற நினைவாற்றல் படைத்திருந்தார். அவர் குரல்வழி வந்த கருத்துக்களைத் தம் விரல்வழி எழுத்துருவாக்கித் தந்தார்கள் அ.ச.ஞா.வின் அருமை மகளார் மீராவும், யாழ்ப்பாணத் தமிழன்பர்  மார்க்கண்டு என்பவரும். அவ்வாறு வெளிவந்தவையே திருவாசக விரிவுரை, இராமன் பன்முக நோக்கில் முதலிய அற்புத நூல்கள்.

    பேராசிரியர் தம் இளமைக்காலத்தில் எழுதிய நூல் ’இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.’ அஃது இராவணனின் சிறப்பை மாட்சியுடன் எடுத்துக்காட்டுவது. அதுபோல் அவர் தம் முதுமைக்காலத்தில் எழுதிய ’பன்முக நோக்கில் இராமன்’ எனும் நூல் இராமனின் பெருமைகளைப் பல்வேறு கோணங்களில் பரக்கப் பேசுவது. பரபக்கம் பேசிச் சுபக்கம் காட்டும் சமயக்கணக்கர்போல் இந்நூலில் எதிர்த்தட்டுத் தலைவனின் இயல்புகளைக் காட்டி நடையில் உயர் நாயகனான இராமனின் உயர்பண்புகளை நிலைநிறுத்துகின்றார் பேராசிரியர் அ.ச.ஞா.

    தமிழ் மூதறிஞர், தமிழ்ச் செம்மல், இயற்றமிழ்ச் செல்வர், செந்தமிழ் வித்தகர், கம்பன் மாமணி போன்ற பல பட்டங்களையும், ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் விருது, திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, உட்படப் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற பெருமைக்குரியவரான அ.ச.ஞா, 2002ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் நாள் தம்முடைய 85ஆவது அகவையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

    பரந்த கல்வியும், ஆழ்ந்த அறிவும், அறிவியல் பார்வையும் பெற்று, இலக்கியத் திறனாய்வுக்குத் துறைக்கு முன்னோடியாய்த் திகழ்ந்து, புதிய நூல்கள் பலவற்றை ஆய்வுநோக்கில் படைத்தளித்திருக்கும் பேராசிரியர் அ.ச.ஞா.வின் அரும்பணி,  தமிழர்கள் அனைவரும் போற்றிப் பயன்கொள்ளத்தக்கது.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://ta.wikipedia.org/wiki/அ._ச._ஞானசம்பந்தன்
    2. https://www.dinamani.com/specials/ nool-aragam/2017/oct/09/அசஞானசம்பந்தன்-2786757.html
    3. நான் கண்ட பெரியவர்கள் – கங்கை புத்தக நிலையம், 13 தீனதயாளு நகர், சென்னை – 600 017

     

    Share
  • (Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்

    (Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்

    ஸ்ரீ. நடராஜன்
    ஆற்றல் அறிவியல் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி
    மின்னஞ்சல்: natarajangravity@gmail.com
    
    இரெ. சந்திரமோகன்
    இயற்பியல் துறை, ஸ்ரீவித்யாகிரி கல்லூரி
    புதுவயல்
    மின்னஞ்சல்: rathinam.chandramohan@gmail.com
    
    

    பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்

    முன்னுரை

    நமது பழைய தமிழ்ப் பாடல்கள் அறிவியலைப் பற்றிப் பேசுகிறதா? முன்னோர்கள் அறிந்திருந்தனரா? என்பது போன்ற கேள்விகள் எப்போதும் விவாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் கிடைத்த அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி மற்றும் சமீபத்தில் கிடைத்தத் தகவல்களைக் கொண்டு இப்பாடல்களை ஆராயும் போது சில வியத்தகு முடிவுகள் கிடைக்கின்றன. அவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

    திருமந்திரப் பாடல்

    திருமந்திரத்தில் அணுவைப் பற்றி பாடியுள்ள இரு பாடல்களை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.

    மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
    கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
    மேவியது கூறது ஆயிரமானால்
    ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே” [1]

    பொருள் :

    ‘துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து, இறந்தாரை எண்ணிக்கொண்டற்று’ என்பதுபோல ஆருயிரின் வடிவம் அளவிட்டுக் கூறவொண்ணாததாகும். அவ்வுண்மையினை ஒருவகையாக ஓதியருள்வாராயினர். உடல் கலன் உலகம் ஊண் முதலியவற்றுடன் பொருந்திய ஆருயிரின் வடிவினைக் கூறுவோமானால் பசுவினது மயிர் ஒன்றினை எடுத்து நூறுபங்கு செய்தல்வேண்டும். பின்பு அந் நூற்றினில் ஒன்றினை எடுத்து ஆயிரம் கூறுசெய்தல்வேண்டும். அந் நிலையில் ஏற்படும் ஒரு கூற்றினை நூறாயிரம் கூறுசெய்தால் எவ்வளவு ஏற்படுமோ அவ்வளவாகும் ஆருயிரின் வடிவமென்க. எனவே, ஆருயிர்க்கு வடிவமின்றென்னும் வாய்மையினை வனப்புற வகுத்து ஓதுவதிது.

    அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
    அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
    அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
    அணுவில் அணுவை அணுகலு மாமே. [2]

    பொருள்:

    அணுவாகிய ஆருயிர்க்கு உயிராய் நுண்ணியனாய் விளங்குபவன் ஆதியாகிய அம்மையையுடைய சிவபெருமான் ஆவன். அவனைத் திருவருளுணர்வால் அளவின்றி நுணுகி ஆராயவல்லார்கட்கு அணுவுக்கு அணுவாய்த் திகழும் சிவபெருமானை அணுகுவது கைகூடும். இப்பாடல்களில் அணுவின் அளவு எவ்வளவு இருக்கும் என்பது பற்றிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இப்பாடலில் அணுவின் அளவானது பசுவின் ரோமத்தை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ளது. எனவே இப்பாடல் கூறும் அணுவின் அளவை ஆய்வு செய்வதற்குப் பசுவின் ரோமத்தை ஆய்வு செய்வதன் மூலம் தெளிவான விளக்கத்தைக் காண முடியும். இது போன்ற அடிப்படைத் துகள்களைப் பற்றி ஆராயும் போது அவற்றின் அளவுகளை மிகச்சரியாக சொல்லிவிட முடியுமா என்பது மற்றுமொரு ஆலோசனைக்குரிய விஷயம். ஏனென்றால் துகள்களின் அளவு மிகச் சிறியதாகச் செல்லச் செல்லக் குவாண்டம் விளைவுகள் அதிகமாக இருக்கும். இவ்வகையான விளைவுகள் குவாண்டம் நிலையில்லாத் தத்துவத்தின் மூலம் நிரூபிக்கப்படுகின்றன. நிலையில்லாத் தத்துவம் என்பது ஒரு துகளின் இருப்பினையும் மற்றும் அதன் உந்தத்தையும் இணைக்கிறது. இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் குவாண்டம் துகள்களின் இயக்கத்தை ஆராயும்போது ஒரே நேரத்தில் துகள்களின் இருப்பினையும் மற்றும் உந்தத்தினையும் ஒருசேரக் கணக்கிட இயலாது என்பதாகும். அதாவது துகளின் இருப்பினை ஆராய வேண்டுமானால், அது உந்தத்தில் சார்பாக இருக்கும். இதேபோல உந்தத்தை ஆராய வேண்டுமானால் அது இருப்பின் சார்பாக இருக்கும். இவற்றைக் கீழ்காணும் சமன்பாடு மூலம் இணைக்க முடியும்.

    மேலும் இதே தத்துவத்தின் விளைவானது துகள்களின் அளவை ஆராயும்போது பாதிப்பை ஏற்படுத்தும். எவ்வாறெனில் அடிப்படைத் துகள்களின் அளவினை ஆராயும் போது அதன் உந்தமும் பெருமளவில் இந்த ஆய்வின் விளைவைப் பாதிக்கும். எனவே அடிப்படைத் துகளின் குறுக்களவினை மிகச் சரியாக அளவிட முடியாது.

    பசுவின் ரோமம்

    அடிப்படைத் துகள்களில் ஒன்றான எலக்ட்ரானின் வடிவமைப்பைச் சமீபத்திய ஆய்வு ஒன்று உறுதி செய்துள்ளது [4]. கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் மேற்கொள்ளப்பட்ட அவ்வாய்வின் முடிவில் எலக்ட்ரானானது ஒப்பீட்டளவில் ஒரு கோள வடிவமான அமைப்பைப் பெற்றிருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு மிக குளிர்ந்த சூழ்நிலையானது ஏற்படுத்தப்பட்டது. இங்கு வெப்பநிலையானது 3 கெல்வின் என்ற அளவில் குளிர்ந்த நிலையில் இருக்கும் [4]. இதன்மூலம் அடிப்படைத் துகள்களின் இயக்கம் மட்டுப்படுத்தப்பட்டு அவற்றின் அமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.

    இப்பாடலில் உள்ள கருத்துக்களை உறுதிசெய்ய பசுவின் ரோமத்தின் குறுக்களவானது ஆய்வகத்தில் கணக்கிடப்பட்டது. இந்த ஆய்வுக்காக பத்து பசு மாடுகளில் ரோமங்கள் சேகரிக்கப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட ரோமங்கள் ஆய்வகத்திற்குக் கொண்டு வரப்பட்டு அவற்றின் குறுக்களவானது கண்டறியப்பட்டன. ஏர்வெட்ஜ் முறையில் ரோமத்தின் குறுக்களவானது அளவிடப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட தரவுகள் ஏற்கனவே உள்ள ஆய்வு முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது [3].

    உரோமத்தின் குறுக்களவு பின்வரும் சமன்பாட்டின்  மூலம் பெறப்படுகிறது.

                

    L என்பது கண்ணாடித் தட்டின் எல்லையிலிருந்து உரோமமானது வைக்கப்பட்டுள்ள நீளத்தையும், D என்பது கண்ணாடித் தட்டின் குறுக்களவையும்,  என்பது மஞ்சள் நிறத்தின் அலைநீளத்தையும், என்பது ஒளிவிலகல் எண்ணையும் மற்றும் N என்பது ஒளிப்பட்டைகளின் எண்ணிக்கையையும் குறிக்கும்.  எமது ஆய்வுத்தரவுகளில் பின்வரும் மதிப்புகள் அடிப்படையாகக் கையாளப்பட்டன.

    இவ்வாறு பெறப்பட்ட மதிப்புகளை குறுக்களவு சமன்பாட்டில் பிரதியிட, கிடைக்கும் எண்மதிப்பு உரோமத்தின் குறுக்களவை உறுதி செய்கிறது.

    இப்பகுதியானது பாடலின் வரியையும் மற்றும் கணக்கீடுகளையும் ஒப்பிட்டு விளக்குகிறது. நாம்  கண்டுபிடித்த ரோமத்தின் குறுக்களவை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கீடுகள் செய்யப்படுகின்றன. பசுவின் ரோமம் குறுக்களவு = 160 மைக்ரோ மீட்டர்

    முதல் வரி

    இரண்டாவது வரி

     

     

     

    மூன்றாவது வரி

     

    4 வது வரி

     

    இவ்வாறு கிடைக்கப்பட்ட எண் மதிப்பின் அளவை அறிவியல் தரவுகளுடன் ஒப்பிடும்போது சில ஒப்பீட்டளவிலான முடிவுகள் கிடைக்கின்றன. இங்கு கிடைக்கப்பட்ட மதிப்பான 160 x 10^-16 மீட்டர் என்ற எண் மதிப்பானது ஒரு ஹைட்ரஜன் அணுவை விட மிகக் குறுகியது. ஹைட்ரஜன் அணுவானது 53 x 10^-12 மீட்டர்கள் என்ற எண் மதிப்பைக் குறுக்களவாகப் பெற்றிருக்கும். எனவே இங்கு குறிப்பிட்டுள்ள அடிப்படைத்துகளின் அளவு என்பது இந்த ஹைட்ரஜன் அணுக்களை விடவும் மிகச் சிறியதாக இருக்கும்.

    குவாண்டம் தத்துவம்

    குவாண்டம் இயற்பியலைப் பொருத்தவரையில் நிகழ்தகவு விளையாட்டுகளின் அடிப்படையில் தத்துவங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. குவாண்டம் இயற்பியலில் ஒரு துகளின் இருப்பை நிகழ்தகவு அடிப்படையில் வெளிப்படுத்த முடியும். இதற்குப் பின்னணியில் ஹெய்சன்பர்க்கின் நிலையில்லாத் தத்துவம் வேலை செய்கிறது. நிலையில்லாத் தத்துவத்தின்படி, இயங்கும் நிலையில் இருக்கும் ஒரு துகளின் இருப்பினையோ அல்லது உந்தத்தையோ ஒரு சேர அறுதியிட்டுக் கூற முடியாது.

    அவ்வாறெனில் துகள்களில் இயக்கத்தை எவ்வாறு கணக்கிடுவது? இந்த சிக்கலைத் தீர்க்க, நிகழ்தகவின் கணம் என்ற சமன்பாட்டுத் தொடர்பு பயன்படுத்தப்படுகிறது. இவ்வகையான சமன்பாடுகளில் அலைச்சார்பு என்பது பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணம், அடிப்படை நிலையில் பருப்பொருளானது, அலையாகவும், துகளாகவும் இயங்கி வருவதைக் குவாண்டம் இயற்பியல் விதிகள் வெளிப்படுத்துகின்றன.  அலைச் சார்பு என்பது இயங்கும் ஒரு துகளின் நிலையும், நேரத்தையும் இணைத்துக்கொண்ட ஒரு பொதுச்சார்பாக வரையறுக்கப்படுகிறது.

    இதனை அடிப்படையாகக் கொண்டு  துகள் ஒன்றின் நிகழ்தகவுக் கணத்தை வரையறுக்க முடியும். ஒரு துகளின் நிகழ்தகவுக் கணம் என்பது அதன் அலைச்சார்பு மற்றும் அதன் கலப்பு இணை ஆகியவற்றின் பெருக்கத் தொகைக்கு நேர்த்தகவில் இருக்கும்

    இந்த நிகழ்வுகளில் கணத்தை அலைசார்புடன் இயல்பாக்கும் செயல்முறைக்குத் (normalization) தலைப்படும் போது பின்வருமாறு மதிப்புகள் கிடைக்கிறது.

    நிகழ்தகவின் தற்போதைய கணம் என்பது, குவாண்டம் இயற்பியலின் ஷ்ரோடிங்கர் சமன்பாட்டை மாற்றியமைப்பதன் மூலம் பெறப்படுகிறது.

    குவாண்டம் இயற்பியல் ஆனது ஹில்பர்ட் வெளியில் கட்டமைக்கப்படுகிறது. ஹில்பர்ட் வெளியானது முடிவுறாப் பரிமாணங்களைக் கொண்டது. இதன்மூலம் தொன்மை இயற்பியலில் உள்ள முப்பரிமாண வெளியைத் தாண்டிய அதிகமான பரிமாணங்களில், சமன்பாடுகளை எழுத இயலும். மேலும் இவ்வெளியானது துகள் மற்றும் அலை சார்ந்த சமன்பாடுகளை எழுதுவதற்கு அதிக சுதந்திரத்தைத் தருகிறது.

    குவாண்டம் இயற்பியலின் எதிர்பார்ப்பு மதிப்புகள்

    குவாண்டம் இயற்பியலைப் பொருத்தவரையில் ஒரு துகளின் இருப்பையும், அதன் நேரத்தையும் இணைத்து நிகழ்தகவின் கணம் என்ற சமன்பாடு ஒன்றிணைப்பது குறித்துப் பார்த்திருந்தோம். நிகழ்தகவின் கணம் என்பது ஒரு துகள் ஆனது ஒரு குறிப்பிட்ட வெளி அளவில் மற்றும் இருக்கக்கூடிய மொத்த நேரங்களின் அமைப்பில் பரவியிருக்கும் நிகழ்தகவின் மொத்த எண்மதிப்பை அளவிடுகிறது. அவ்வாறெனில் ஒரு துகளின் அடிப்படை அளவை நாம் அறுதியிட்டு கூற முடியாதா? என்ற ஒரு கேள்வி எழுப்பலாம்.

    அதற்கு பதிலாக எதிர்பார்ப்பின் எண்மதிப்பு என்ற மாபெரும் விடையானது கிடைக்கிறது. எதிர்பார்ப்பின் எண்மதிப்பு என்பது நிகழ்தகவுக் கணங்களை, நாம் எதிர்பார்க்கும் நிலைப்பள்ளியில் தொகுக்கக் கிடைக்கும் எண்மதிப்பைப் பெற்றிருக்கும். அவற்றை சமன்பாடு வாயிலாக கீழ்கண்டவாறு எழுதலாம்.

    மொத்த ஆற்றலின் எதிர்பார்த்தல் எண் மதிப்பானது பின்வருமாறு கணக்கிடப்படுகிறது. எண்மதிப்பானது நிலை ஆற்றலின் எதிர்பார்த்தல் மதிப்பிற்கும் இயக்க ஆற்றலின் எதிர்பார்த்தல் மதிப்பிற்கும் உண்டான கூட்டுத் தொகைக்குச் சமமாக இருக்கும்.

    உந்தத்தின் எதிர்பார்த்தல் மதிப்பானது பின்வருமாறு எழுதப்படுகிறது.

    எஃரன்பெஸ்ட் விதியானது திசை வேகத்தையும் உந்தத்தையும் ஒருங்கிணைப்பது போல், விசையையும் நிலையாற்றலையும் ஒருங்கிணைக்கிறது.

    இவற்றின் விளைவாக எண்ணற்ற சிக்கல்களை தீர்த்துக் கொள்ள முடியும். சரி தற்போது இந்த கேள்விக்கு வருவோம். திருமந்திரம் சொல்லும் உயிர் பற்றிய அளவீடு குறித்து குவாண்டம் இயற்பியல் எவ்வாறு தனது கணக்கீடுகளை முன்வைக்கிறது? என்று இயற்பியலின் தலைசிறந்த கோட்பாட்டின் மீது நாம் கேள்வி எழுப்பலாம்.

    தற்போது நாம் மேலே குறிப்பிட்டுள்ள அலைச்சார்பு குறித்த தகவல்களின் மூலமும், எதிர்பார்ப்பின் கணம் என்ற சமன்பாட்டின் மூலமும் மேலே உள்ள கேள்வியைப் பற்றி விரிவாக ஆய்வு செய்யலாம். இதன் அடிப்படையில் நாம் பார்க்கும்போது ஒரு துகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பது என்பதை ஆராய்வது என்பது அதன் நிகழ்தகவுக் கணங்களில் மதிப்பைப் பொறுத்து அமையும்.
    இதனடிப்படையில் ஒரு துகளின் அளவானது அளவிடப்பட வேண்டும் வேண்டுமென்றால் அந்த கணக்கீடானது நிகழ் தகவுகளின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படும். மேலும் குவாண்டம் இயற்பியல் அடிப்படைத்துகள்களை அலைத்துகள் கோட்பாட்டின் மூலம் ஆய்வு செய்கிறது. இக் கோட்பாட்டின்படி அதிக உந்தம் கொண்ட துகள்கள், குறைந்த அலைநீளம் கொண்டதாகச் செயல்படும் . இதன் விளைவாகத் திருமூலர் பாடலில் சொல்லியுள்ள மிகக் குறுகிய அளவிலான துகள்களை ஆய்வு செய்ய முற்படுகையில் அவற்றின் உந்தமானது மிக அதிகமாக இருக்கும் என்பதைக் கண்டறிய முடியும்.

    அத்தகைய துகள்களை ஆய்வு செய்ய வேண்டுமானால் மிக அதிக திறன் கொண்ட துகள் முடுக்கிகள் தேவைப்படும். எனவே திருமூலர் பாடலில் சொல்லியுள்ள உயிரின் அளவு குறித்த மதிப்பை நிகழ்தகவு கணங்களின் மதிப்பீடுகளில், தொடர் மதிப்புகளில் ஒரு நிகழ்தகவு எண்மதிப்பாக கருத்தில் எடுத்துக் கொள்ளலாம்.  எலக்ட்ரானின் தொன்மை ஆரம் என்பதைக் கீழ்வரும் சமன்பாடு மூலம் கணக்கிடலாம்.

    இவ்வாறு பெறப்படும் எண் மதிப்பு 2.82 x 10^-15 மீட்டர் என்ற எண் மதிப்பைப் பெற்றிருக்கும். மேலும் நமது கணக்கின் மூலம் கிடைக்கும் எண் மதிப்பானது, எலக்ட்ரானின் அளவைவிட சற்றுச் சிறிதாகவே உள்ளது. இது எலக்ட்ரானின் அலைச்சார்பு மூலம் பெறப்படுகிறது.

    முடிவுரை

    எலக்ட்ரானின் குறுக்களவு நேரடியாக மதிப்பிடப்பட இயலாது. காரணம் குவாண்டம் அளவில் அடிப்படைத் துகள்களானவை ஒரே சமயத்தில் துகளாகவும் அலையாகவும் பரிணமிக்கும்.  இவ்வெண் மதிப்பானது எலக்ட்ரானின் அலைச்சார்பு மூலம், நிலையில்லாக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பெறப்படுகிறது. தொன்மை இயற்பியலைப் பொருத்தவரை அறுதியிட்டு கூறப்படும் எண்மதிப்புகள் குவாண்டம் இயற்பியலில் நிகழ்தகவுக் கணங்களாக மாற்றப்படுவதால் நம்மால் ஒரு துகளின் அளவை அறுதியிட்டுக் கூறமுடியாது. எனவே இப்பாடலில் குறித்துள்ள ஆவியின் அளவு என்பதை நிகழ்தகவுக் கணங்களில் தொகுப்பாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பாடல் அணுவின் அளவு என்பது குறித்து விளக்கியிருந்தாலும், கணக்கீடுகளின் படி இப்பாடல் சொல்ல விழையும் அணு என்னும் கருத்து அடிப்படைத்துகள்களையே குறிக்கிறது என்று யூகிக்க முடிகிறது. எனவேதான் ஆவி என்னும் சொல்லாடலை அணு என்னும் சொல்லாடலுடன் இணைத்துப் பயன்படுத்தியுள்ளோம். திருமூலருக்கு குவாண்டம் இயற்பியல் தெரிந்திருக்குமா என்ற கேள்விக்கு இக்கட்டுரை செல்லவில்லை. மாறாக அவர் சொல்லும் கருத்தை குவாண்டம் இயற்பியலில் ஏற்றி விளக்க முற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழின் தொன்மைத்தன்மைகளை நாம் நவீன இயற்பியலில் மூலம் ஆய்வு செய்யும்போது பல்வேறு தகவல்கள் புரிய வருகிறது, என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இது போன்ற பல்வேறு கணக்கீடுகள் தமிழில் பல்வேறு நூல்களில் பொதிந்திருக்கும். அவற்றை ஆராய வேண்டியது ஆய்வாளர்களின் கடமை.

    ஆதாரங்கள்

    [1] திருமூலர், திருமந்திரம், சீவன், பா.2011
    [2] திருமூலர், திருமந்திரம், பசு இலக்கணம், பா.1
    [3] Kshirsagar, S. V., Singh, B., & Fulari, S. P. (2009). Comparative study of human and animal hair in relation with diameter and medullary index. Indian Journal of Forensic Medicine and Pathology, 2(3), 105-8.
    [4] Hudson, J. J., Kara, D. M., Smallman, I. J., Sauer, B. E., Tarbutt, M. R., & Hinds, E. A. (2011). Improved measurement of the shape of the electron. Nature, 473 (7348) 493.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    இந்த ஆய்வுக் கட்டுரையானது, திருமந்திரப் பாடல் வரிகளை குவாண்டம் அறிவியலுடன் ஒப்பிட்டு விவரிக்கிறது. சில ஆய்வகச் சோதனைகளும், உசாத்துணைகளும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்திருக்கின்றன. தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள அறிவியல் கருத்துகளை ஆய்வக சோதனைகள் மூலம் வெளிக்கொணரும் முயற்சிகள் பரவலாக மேலெழுவதற்கு இக்கட்டுரை தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.


     

    Share
  • உய்ய்ய்

    உய்ய்ய்

    பாஸ்கர் சேஷாத்ரி

    வாய் திறந்தபடி எல்லாவற்றையும் முழுங்கிக்கொண்டு இருக்கிறது .
    ஆளுயுர அலைகள் இதில் ஊழி ஆடி இசை பாடும்
    பெருமரங்கள் ஊஞ்சலாடி, தானாகத் தரை படுக்கும்
    காமக்காற்று முனை தேடிக் கொக்கரித்து ஆர்ப்பரிக்கும்
    பாரம் தாங்கா விண்வெளி நிலம் முற்றும் ஈரம் செய்யும்
    அழுத்தம் கொண்ட பூமி கொஞ்சம் தனியாய்த் தான் விலகும்
    எழுச்சி மிக்க மலைகள் கொஞ்சம் நின்றபடி புகையும் ஊதும்
    வெளிறிப்போன விலங்கினங்கள் இரை மறந்து ஒன்று கூடும்
    வெளிச்சப்புகை மீண்டும் வர உலகம் திரும்ப உய்த்து நிற்கும்
    காலம் மட்டும் கண்ணயராது காத்திருந்து காவல் செய்யும்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 86

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 86

    நாங்குநேரி வாசஸ்ரீ

    86. இகல்

    குறள் 851:

    இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
    பண்பின்மை பாரிக்கும் நோய்

    எல்லா உசிருங்களையும் மனசு பொருந்தாம இருக்கச்செய்யுத தீய கொணத்த வளக்குத நோய நாம மனவேறுபாடு ங்குதோம்.

    குறள் 852:

    பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
    இன்னாசெய் யாமை தலை

    நம்ம கூட இணங்க ஏலாம ஒருத்தன் நமக்கு எடஞ்சல் செஞ்சாலும் அவன பகையாளியா நெனச்சி தீம செய்யாம இருக்கது நல்லது.

    குறள் 853:

    இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
    தாவில் விளக்கம் தரும்

    ஒருத்தன் மன மாறுபாடுங்குத துன்பம் தருத நோய மனசுலேந்து நீக்கிட்டாம்னா அவனுக்கு அழியாத நெலச்ச புகழ் உண்டாவும்.

    குறள் 854:

    இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்

    துன்பத்துல பெருந்துன்பம் மனவேறுபாடு. அது இல்லாமப் போச்சுதுன்னா சந்தோசத்துலயும் சிறந்த சந்தோசம் கெடைக்கும்.

    குறள் 855:

    இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
    மிகலூக்கும் தன்மை யவர்

    மனவேறுபாடு தோணும்போது அத ஏத்துக்கிடாம வெலக்குதவங்கள எதித்து நிக்குத வலிம யாருக்கு உண்டு.

    குறள் 856:

    இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
    தவலும் கெடலும் நணித்து

    மனவேறுபாட்ட வளக்கது நல்லதுனு நெனைக்கவனோட வாழ்க்க வெரசலா தடம்மாறிப் போய் அழிஞ்சு போவும்.

    குறள் 857:

    மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
    இன்னா அறிவி னவர்

    பகைய மனசுல வச்சிருக்க கெட்டபுத்தி உள்ளவுக வாழ்க்கையில செயிக்க ஒதவுத உண்மப் பொருள அறியமாட்டாங்க.

    குறள் 858:

    இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
    மிகலூக்கின் ஊக்குமாங் கேடு

    மனவேறுபாடு தோணும்போது அத ஏத்துக்கிடாம இருக்கது ஒருத்தனுக்கு சொத்துகணக்கா. ஏத்துக்கிட்டா கெடுதல் தான் வெளையும்.

    குறள் 859:

    இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு

    ஒருத்தன் நன்ம வரும்போது மாறுபாட்டை நெனைக்க மாட்டான். தனக்குத்தானே கெடுதல தேடிக்கிடுதவன் மாறுபாட்ட பெரிசுபடுத்தி நெனைப்பான்.

    குறள் 860:

    இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
    நன்னயம் என்னும் செருக்கு

    மனமாறுபாடு காட்டி பகையாளியா இருக்கவுகள எல்லாத் துன்பமும் அண்டும். சேக்காளியா இருக்க நெனயுதவுகளுக்கு நெறய சந்தோசம் கெடைக்கும்.

    Share
  • முகமூடி

    முகமூடி

    முனைவர் இரா. பேபி
    மடத்துக்குளம்.

    அடிமனதின் ஆழத்தில்
    மறைந்திருந்து மர்மமாய்
    புன்னகைக்கின்றது
    மனம்
    மூடி வைத்து மூடி வைத்து
    மூச்சு முட்டி
    வெளியே பிதுங்கி வழிகிறது!
    மரித்துப் போன நினைவுகளை
    ஜீரணிக்க முடியாமல்
    திசைமாறி
    விழி பிதுங்கி வழிகின்றது
    வெளிப்பட்டால்
    குரூரம் வெளிப்பட்டுவிடுமென
    பயந்து தவிக்கிறது.
    சமூக ஒழுங்குக்கு பயந்து
    பலவித ஒப்பனைகளை
    பூசி மகிழ்கிறது.
    அதுவே நிஜமாகிப் போனதை
    அறியாமல் மீண்டும் மீண்டும்
    அரிதாரம் பூசி
    போலியாக மாறி
    வாழப்பழகிக்கொண்டது
    தனக்கான முகத்தைக்
    வீதியில் தேடி அலைந்து
    கேட்பாரற்று கனத்துக்
    கிடந்தது மனம்…..

    Share
  • நாயும் நானும்!

    குருநாதன் ரமணி
    (முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து)

    என்கரச் சங்கிலி பற்றிநான் – தினம்
    . என்நாய் முன்செலத் திரிவேன்
    தன்புலன் கூர்மையாய்ப் பெற்றநாய் – அது
    . தாள்விரை யக்கரம் நெரிவேன். … 1

    என்னைத் தரதர வென்றிழுக்கும் – பல
    . வெண்ணம் மேலெழ மூச்சிரைக்கும்
    என்மன நாயிது பாய்ந்தோடும் – அதில்
    . என்நிலை தேராய்ச் சாய்ந்தாடும்! … 2

    இங்கது நின்றுமண் நுகரும் – பின்
    . எதுவோ புதர்மேல் நீரிழிக்கும்
    அங்கது நின்றுமண் முகரும் – கால்
    . அகற்றியே கர்மக் கூர்கழிக்கும்! … 3

    இங்கொரு வீட்டுநாய் கண்டால் – பல்
    . இளித்துத் தன்வால் குழைக்கும்
    மங்கிய தெருநாய் நின்றால் – தன்
    . வாயால் குரைத்ததைத் துரத்தும்! … 4

    தலைமேல் பட்டாம் பூச்சியை – அது
    . தாவிப் பிடிக்கப் பார்ப்பதேன்
    நிலைகொள் ளாமனப் பேச்சினில் – அதை
    . நெருக்கியே நசுக்கப் பார்ப்பதோ? … 5

    சுற்றிச் சுற்றியே ஓடுமே – வாய்
    . தொட்டுத் தொட்டுத் தேடுமே
    பற்றிப் பற்றிக் காணுமே – ஒரு
    . பல்லால் இழுத்துக் கோணுமே! … 6

    நாயை ஓர்மனப் படுத்தவே – தொலை
    . நானோர் பந்தை எறிவனே
    பேயைப் போல்கால் விடுப்பிலே – வாய்
    . பெற்றே என்னிடம் சொரியுமே! … 7

    அரணாய் வரனாய் வருநாய் – ஓர்
    . அகநாய்த் திறனாய் உருநாய்
    முரணாய்ச் செலுநாய் மொழிநாய் – நான்
    . உளநாள் பலனாய்க் கடனாய்! … 8

    நாயில் லாமல் நானில்லை – அது
    . ஞானம் தேடும் நாளென்றோ? – இந்
    நோயில் லாமல் நானில்லை – உயிர்
    . நோவலென் றாலுமென் சேயன்றோ? … 9

    *****

    Share
  • டிக் டிக் டிக்

    டிக் டிக் டிக்

    அண்ணாகண்ணன்
     
    காலத்தை மீறி
    நிற்கிறது தமிழ்
    கடிகாரத்திலும்
    Share
  • படக்கவிதைப் போட்டி – 236

    படக்கவிதைப் போட்டி – 236

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (15.12.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 235-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 235-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அனுபாலா எடுத்துத் தந்திருக்கும் இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டி 235க்கு வழங்கியவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் என் நன்றிக்குரியவர்கள்!

     

    நீலவண்ண உடையணிந்து கோலமுகம் சிறிது காட்டி, உச்சிமலை மீதமர்ந்து இச்சையொடு உலகுநோக்கிப் பார்வை வீசும் பாவையையும், அவரைச் சுற்றி கைபுனைந்தியற்றா கவின்பெரு வனப்பொடு காட்சிதரும் வனமும் நம் மனம் கவர்கின்றது.

    இவ்வினிய காட்சிக்கு ஏற்றதொரு கருத்தைப் பாவாகப் புனைந்து தாருங்கள் என்று கவிவலவர்களைக் கனிவோடு அழைக்கின்றேன்!

    *****

    ”பூமரக் காட்டின் நடுவே மலையுச்சியில்  அமர்ந்து தலைவன் வரவு பார்த்திருக்கும் தையலிவள்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உதவிக்கு…

    பூமரக் காட்டில் மலைமீது
    பாவை யவளும் காத்திருக்கிறாள்,
    தாமத மானது வரவில்லை
    தலைவன் வரவைப் பார்த்திருக்கிறாள்,
    சாமரம் வீசிடும் மரக்கிளையும்
    சற்றும் அவளைத் தேற்றவில்லை,
    நாமும் தேடி உதவுவோமெனும்
    நீல வான மேகங்களே…!

    ***** 

    ”இயற்கையோடு நம் வாழ்வினை இணைத்து, நற்சிந்தனை வளர்த்து, எட்டா உயரங்களை எட்டிப்பிடிப்போம்” என்று பாட்டுப் படிக்கின்றார் திரு. ராவணா சுந்தர்.

    பார்வையை விசாலமாக்கு!

    பதுமையின் பார்வையில்
    பரணியும் பளிங்கு குண்டுதான்,
    உயர்ந்த எண்ணங்கள்
    உலவும் உள்ளத்தில்,
    குழப்பங்கள் என்றும்
    தெளிந்த நீரோடைதான்!
    தொலைநோக்கா பார்வையை
    அணியாத மேவியும், (?)
    குட்டைக்குள் குடிகொண்ட
    சிறுமீன்கள் தானோ..?
    இயற்கையின் எழிலோடு
    நம் வாழ்வியலை இணைத்துத்
    தரணி போற்றிடும்
    தார்மீகச் சிந்தனைகளை
    மனதில் விதைத்து,
    எட்டா உயரங்களையும்
    எட்டிடுவோம்..!
    சுமந்த பல கனவுகளுடன்….

    *****

    ”உச்சிதனை நீ தொட்டபோதும் சிறகை விரித்துப் பறந்திடு; அடுத்த கட்டம் நோக்கி உனது பயணத்தைத் தொடர்ந்திடு!” என்று நங்கைக்கு நம்பிக்கை ஊட்டுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    வானமே எல்லை!

    சேரும் இடம் அறிந்திருந்தும்
    பாதை மாறிப் போனாலே
    ஊரும் வந்து சேராதே!
    அடிமேலே அடியெடுத்து
    முன்னே நடக்கையில்
    மெல்ல விரிந்திடும் பாதை
    உன் கண் முன்னே!
    போட்டு வைத்த பாதையில்
    செய்யும் பயணமதில்
    சுவாரசியம் ஏதும் இல்லை
    புதிய பாதை அமைத்து முன்னேறு
    சரித்திரம் படைத்திடுவாய்
    தடை ஏதும் இன்றியே!
    அச்சமின்றி நீ எடுத்து வைத்த
    முதல் அடி உச்சி வரை
    உனை அழைத்துவந்திட
    தயங்கி ஏன் திரும்பிப் பார்க்கிறாய்?
    கடந்து வந்த பாதையில்
    முளைத்த முட்கள்
    நீ மிதிக்க மடிந்து போனதே!
    களிப்பு மட்டும்
    உற்சாகமாய் நின்றது நின்றதே!
    உச்சிதனை நீ தொட்ட போதும்
    சிறகை விரித்துப் பறந்திடு
    அடுத்த கட்டம் நோக்கி
    உனது பயணத்தை
    நம்பிக்கையோடு தொடர்ந்திடு!
    அந்த நிலவும்
    நீ தொடும் தூரத்தில்
    வந்து சேர்ந்திடும்!
    பறந்து விரிந்து கிடக்கும்
    அந்த வானும் உனக்கு வசப்படும்
    முயற்சிக்கு என்றும்
    இல்லையே எல்லையே!

    *****

    மலைமீது அமர்ந்திருக்கும் மங்கைக்கு அழகான பாமாலைகளைத் தொடுத்துத் தந்திருக்கும் திறன்மிகு கவிஞர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    நல்வழி!

    கள்ளிப்பால் கடந்து
    கல்வியறிவுதான் வென்று
    எட்டா அறிவுதனை
    எட்டிப் பிடித்துவிட்டுப்
    பட்டங்கள் பலபெற்றுச்
    சட்டங்கள் தானறிந்து
    திட்டமிட்டுத் தான் வாழும்
    திறமனைத்தும் பெற்றிருந்தும்
    பெட்டைப் பிள்ளை என்று
    புறம்பேசித் திரிகின்றார்!

    பட்டாம்பூச்சிபோலச்
    சிட்டாகப் பறந்திடும் கனவைக்
    கிட்டாமல் செய்கின்றார்…
    வீட்டு முற்றத்தில் நிறுத்துகின்றார்!

    காரியங்கள் பல செய்யக்
    காத்திருக்கும் காலத்திலும்
    காமமொன்றே காரணமாய்க்
    காரிகையை ஆக்குகின்றார் – நெஞ்சைக்
    காயம்தினம் செய்கின்றார்!

    உயிருள்ள பொம்மையாக
    உருவத்தைப் புணர்கின்றார்!
    உணர்ச்சிகளை மிதிக்கின்றார்
    உள்ளத்தைக் காண்பதில்லை!

    விட்டுவிடுதலையாகி நின்று
    எட்டும் எல்லை தானடைந்து – வான்
    முட்டும் மலைச் சிகரம்
    தொட்டுவிடச் செய்யுமொரு
    வழிதேடி இருக்கின்றேன் – நல்
    வழிபார்த்துக் காத்திருப்பேன்…!

    ”காரியங்கள் பல ஆற்றும் திறன்வாய்ந்த காரிகையரை வெறும் காமப்பொருளாய் நோக்கும் ஆடவரின் பார்வைக் கூட்டிலிருந்து விட்டுவிடுதலையாகிச் சிகரம் தொட்டுவிடத் துடிக்கும் பாவையிவள்” என்று பெண்விடுதலைக்குப் பரணி பாடியிருக்கும் திரு. வெங்கட் ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share