Blog

  • சீலமும் நோன்பும் செறிந்த சிவப்பேறு!

    சீலமும் நோன்பும் செறிந்த சிவப்பேறு!

    ஔவை நடராசன் 

    சிவ பூசையிலேயே பழுத்துக் கனிந்த செந்தமிழ் மாமுனிவராகப் புகழோடு திகழ்ந்த தருமை ஆதீனக் குருமுதல்வரை அறிந்து அவர்பால் பணிந்து வணங்கிய நிலையில் ஐம்பதாண்டுகள் நினைவில் மின்னுகின்றன.

    1970 ஆம் ஆண்டிலிருந்தே தியாகராய நகர் – வேளூர்த் திருமடத்தில் ஈரோட்டு அப்பா என்று அழைத்த பெருந்தகை சென்னியப்ப முதலியாரும், நானும் – என் துணைவியாரும் – பிள்ளைகளும் தம்பிரான் சாமிகளுக்கு முன்னிலையில் விருந்தோடுப் பழகியதை நினைந்து உருகுகிறேன்.

    அருட்செல்வர், வாரத்துக்கு ஒருமுறையேனும் வேளூர் மடத்திற்கு வந்து தம்பிரான் சாமிகளைக் கண்டு பேசுவது வழக்கம்.

    வேளூர்த் திருமடத்தைச் சென்னையிலேயே மாபெரும் மண்டபமாக உருவாக்க வேண்டுமென்று திட்டமிட்டார்கள் .

    திருவாமூர்த் திருக்கோயிலுக்குப் பெருஞ்சிறப்புச் சேர்த்து முதலாண்டு விழா தொடங்கியது என் நினைவில் இப்போதும் நிழலாடுகிறது.

    1971ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் திடுமென 25ஆவது குரு மகா சந்நிதானம் திருவடிப்பேறு எய்தியதைக் கேட்டுத் தமிழுலகம் கலங்கியது. சந்நிதானத்தின் திருமேனி வாரணாசியிலிருந்து வானூர்தியில் வந்ததும், அருட்செல்வர் உடனிருந்து விமான நிலையத்தில் மகத்தான ஏற்பாடுகளைச் செய்ததையும் சைவ உலகம் என்றும் மறக்காது. கதறி அழுது வீதியில் புரண்ட தம்பிரான் சாமிகளுக்கு எவராலும் தேறுதல் சொல்ல முடியவில்லை.

    இராமலிங்கர் பணி மன்றத்தில் அன்பர்கள் புடைசூழ அருட்செல்வரோடு ஊரன் அடிகளாரும் இரண்டு சீருந்துகளில் தருமை சென்றதும், தம்பிரான் சாமிகள் செங்கோல் ஏற்றதும் வரலாற்று நிகழ்வுகளாகும். கசிந்துருகித் திருமுறைகளை ஓதுவதும் – சொக்கேசரைத் தொழுதபடி சிவபூசையிலேயே வாழ்வைக் கழித்ததுமாகக் குருமகா சந்நிதானத்தின் தலைமை நிறைவெய்தியது.

    கால நேரம் கருதாமல் காண்போரிடம் உரையாடி மகிழ்வதிலேயே நெடுநேரத்தைச் செலவழிப்பார்கள். சிவ சிந்தனையும், சைவ சித்தாந்தப் பொருண்மையும்தான் அவருடைய உரையாடலில் மிதந்து வரும். தொண்ணுற்றைத் தொடுவது என்பது நெடிய வயதுதான். நடக்க முடியாமல் அடியவர் இருவரின் தோளைப் பற்றி மெல்லச் சோர்ந்து இடறி நடந்ததைக் கண்டு நான் கண் கலங்கினேன்.

    நண்பர் தாமோதரனும் நானும் அணுக்கமாக இருந்து தியாகராய நகர் திருமடத்தில் பேசிக் கழித்த பொழுதுகள் இனி என்றும் வாரா.

    குரு மகா சந்நிதானம், திருவடிப்பேறு எய்தியது, காலத்தின் நிறைவிதுதான் என்பதைக் காட்டுகிறது.

    தருமையின் பெருமைச் சரிதத்தின் இருபத்தாறாவது குருமகா சந்நிதானத்தின் நெடும் புகழ் நிலைத்து நிற்கும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 83

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 83

    நாங்குநேரி வாசஸ்ரீ

    83. கூடா நட்பு

    குறள் 821:

    சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு

    மனசார இல்லாம வெளிஒலகத்துக்கு சேக்காளிமாரி நடிக்கவன்,  பொருளத் தாங்குததுக்கு ஒதவுதது கணக்கா தோணினாலும் பொருள வெட்டி எறிய ஒதவுத பட்டடை கணக்கா தான்.

    குறள் 822:

    இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
    மனம்போல வேறு படும்

    பாக்குததுக்கு வேண்டியவரு கணக்கா இருந்து மனசுக்குள்ளார வேண்டாதவரா இருக்கவங்களோட சேக்க தாசியோட மனசு கணக்கா உள்ளார ஒண்ணும் வெளிய ஒண்ணுமா வித்தியாசப்படும்.

    குறள் 823:

    பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது

    பல நல்ல நூல்களப் படிச்சிருந்தாலும் பகைய மனசுல வச்சிருக்கவன் மனசு திருந்தி நல்ல சேக்காளியாவது நடக்க ஏலாத காரியம்.

    குறள் 824:

    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்

    சிரிச்சுப் பேசி நம்மள சீரளிக்க நெனக்கவுகளோட சேக்கயக் கண்டு பயந்துக்கிடணும்.

    குறள் 825:

    மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
    சொல்லினால் தேறற்பாற் றன்று

    மனசு ஒத்துப்போவாம பழகுதவங்களோட வார்த்தய நம்பி எந்தக் காரியத்திலயும் எறங்கக் கூடாது.

    குறள் 826:

    நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை உணரப் படும்

    சேக்காளி கணக்கா இனிக்க பேசினாலும் பகையாளியோட சொல்லுல இருக்க உண்மய அப்பமே உணந்துக்கிடலாம்.

    குறள் 827:

    சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்

    வில்லோட வளைவு தீம செய்யுததுக்குத்தான். அதுகணக்கா பகையாளி பம்மிக்கிட்டு கும்புடுதத நன்மனு நெனைக்கக் கூடாது.

    குறள் 828:

    தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
    அழுதகண் ணீரும் அனைத்து

    பகையாளி கும்பிடுதப்போ கைக்குள்ளார  கொலைசெய்யுத ஆயுதம் இருக்கும். அவன் அழுகையில வெளிவிடுத கண்ணீரும் அதுமாரிதான்.

    குறள் 829:

    மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
    நட்பினுட் சாப்புல்லற் பாற்று

    வெளிய சேக்காளி கணக்கா பெரிசா காட்டிப்போட்டு மனசுக்குள்ளார எளக்காரமா நெனைக்கவன அவன் மொறையிலயே நாமுளும் போலியா ஒப்புக்கு சேக்காளிமாரி நடிச்சு கவுக்கணும்.

    குறள் 830:

    பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
    டகநட் பொரீஇ விடல்

    பகையாளிகூட பழகுத காலம் வருதப்போ மனசார இல்லாம மேம்போக்கா சேக்காளிமாரி இருந்துட்டு பொறவு அந்த சேக்கய உட்டுப்போடணும்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 235

    படக்கவிதைப் போட்டி – 235

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அனு பாலா எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (08.12.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 234-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 234-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    Yesmk எடுத்திருக்கும்  இந்த எழிற்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து, படக்கவிதைப் போட்டி 234க்குத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். படக்கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    அட்டணக்காலிட்டு அமர்ந்து, சுந்தரப் புன்னகை வீசும் இச்சிறுவன் சிந்தை கவர்கின்றான்.

    ”தம்பி உன் கம்பீரம் தருகிறது பூரிப்பு!
    நல்லவனாய் நீ வாழ்ந்தால்
    பெற்றிடுவாய் சிறப்பு!” என்று சிறுவனை வாழ்த்தி, இப்படத்துக்குக் கவிபாடக் கவிஞர்களைக் கரங்கூப்பி வரவேற்கின்றேன்.

    *****

    ”அறத்தின் வழியில் நடந்திடு! கள்வனையும் கயவனையும் களைந்திடு! தோல்விகளை விதைத்து உழைப்பின் துணையோடு வெற்றிக்கனி பறித்திடு” என்று சிறுவனுக்கு அறிவுரை கூறுகின்றார் திரு. ராவணா சுந்தர்.

    அறி-ஆசனம்

    நெகிழியின் இருக்கையில்
    வீற்றிருக்கும் சுடரே,
    மகுடம் சூடா மழலை வேந்தே,
    தரணி ஆளும் தகுதி
    உன்வசம் பிறக்க,
    ஈன்றோரை மதித்து
    சான்றோர் அறிவுச்சாலையில்
    நீ ஒளிர வேண்டும்!
    அறத்தின் வழியை
    நீ அறிந்திட வேண்டும்!
    இகழ்ச்சியின் இருளை
    நீ கடந்திட வேண்டும்!
    தூற்றும் சமூகத்தைத்
    துறந்திட வேண்டும்!
    சுற்றமும் சூழலும்
    நட்புடன் பழக
    கள்வனையும், கயவனையும்,
    களைந்திட வேண்டும்!
    நேர்மையின் பிடியில்,
    முறுக்கேறிய திமிரில்,
    பொய்ம்மைப் பொசுங்கிட வேண்டும்!
    எண்ணிய எண்ணம்
    உள்ளத்தில் உயர்ந்திட!
    நெஞ்சுரம் நிமிர்ந்திட வேண்டும்.
    தோல்விகளை விதைத்து
    வெற்றிக்கனியைப் பறித்திட
    எந்நாளும் உழைத்திட வேண்டும்!

    *****

    ”சாதி அபிமானத்தில், சுயநலத் தாக்கத்தில், குறுமதிகொள் சிறியோரை
    அரியாசனம் ஏற்றிவைத்து அறிவிழந்து வாழ்கின்றோம்” என்று நாற்காலியில் அமர்ந்திருக்கும் சிறுவனை வைத்து நாட்டுநிலை காட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    நாற்காலி ஆட்டம்

    வெற்று கோஷத்திலே,
    வீண் வாதத்திலே,
    மத மார்ச்சரியத்திலே,
    சாதி அபிமானத்திலே,
    சுயநலத் தாக்கத்திலே
    சூழ்நிலைக் கைதியாகித்
    தகுதியற்றோரைத் தேர்ந்தெடுத்தோம்
    தலைவர்களை வீழ்த்திவிட்டோம்…

    மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழியே…
    குடியாட்சியிலோ மக்களே மன்னர் – எனவே
    மக்கள் எவ்வழியோ மந்திரியும் அவ்வழியே…

    தேர்ந்தெடுத்த மக்களையே
    ஒரு பொழுது மேலேற்றிப் பின் கீழ்த்தள்ளி
    மகாராட்டினத்தில் ஆட்டிவைக்கும்
    குறுமதிகொள் சிறியோரை
    அரியாசனம் ஏற்றிவைத்து
    அறிவிழந்து வாழ்கின்றோம்…

    கொள்கைக் கோலம் கலைந்து
    பின்புலமும் களையிழந்து
    எடுப்பார் கைப்பிள்ளையாய்
    ஏமாற்றம் அறியாமல்
    குரங்காட்டம் கண்டு
    குதூகலித்து அமர்ந்துள்ளோம்!

    *****

    காணும்பொங்கலன்று இச்சிறுவனைக் கம்பீரமாய் அமரவைத்துக் கைப்பேசியில் படம்பிடித்தபோது தன் மனம் மலரும் நினைவுகளில் மூழ்கியதை நமக்கும் அறியத் தருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    மந்திரப் புன்னகை

    வீதியெங்கும் வாசல் முன்னே
    வண்ணக்கோலங்கள்
    ஊரெங்கும் விழாக்கோலமாய்ப்
    பழையன களைந்து புதிய முகம் பூண்டதே!

    விளையும் பயிர் முளையிலே தெரியும்
    இவன் சிரிப்பில்
    விவசாயின் வெற்றி தெரியும்
    தைப் பிறந்து நல்வழி பிறந்ததின் அடையாளமாய்!

    புத்தாடை போட்டுப் பூமியின் அச்சாணியாய்ப்
    புன்னகை பூட்டி அரியாசனம் ஏறி அமர்ந்தானே
    அழியும் உலகுக்கு அன்னம் தந்த
    அத்தனைக்கும் நன்றி சொல்லியே!

    பிழைப்புத் தேடி ஓடி வந்தவன் பிள்ளை வந்ததும்
    கூடி வாழ்ந்தால் பெறும் நன்மையை உணர்ந்திட
    ஊரை நோக்கி ஓடி வந்தான்
    குடும்பத்தோடு ஒன்றாய்ச் சேர்ந்திட!

    காணும் பொங்கலில்
    உற்றார் உறவினர்களைக்
    கண்டு மகிழ்ந்திட
    இத்தனை நாளாய்
    இவன் கைகளில்
    சிறைப்பிடித்த கைப்பேசியில்
    பட்டு வண்ண வேட்டி கட்டி
    கால்மேல் கால் போட்டு
    இவன் முகத்தில் மலர்ந்த
    மந்திரப்புன்னகையைப் படம் பிடித்தேன்
    கள்ளம் கபடமில்லா இவன் சிரிப்பில்
    களவு போன
    குழந்தைப் பருவம் கண்டேன்
    மறந்து போன
    மந்திரப் புன்னகைகள்
    மெல்ல விரிந்ததே நினைவுகளாய்…
    மலரும் நினைவுகளாய்…

    சிறுவனை வைத்து உலகியல் நடப்பை, மலரும் நினைவுகளை, அறவாழ்வின் அவசியத்தை நமக்கு உணர்த்தியிருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டுக்களைப் பரிசளிக்கின்றேன்.

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    முதலிடம் பிடித்திடுவாய்…

    சின்னவனே சின்னவனே சேதி கேளு
    சிறந்துவாழ வழியெல்லாம் உன்னிடம் தானே,
    முன்னோர்கள் சொன்னதெல்லாம் பொய்யே யல்ல
    முறைப்படியே தெரிந்தவற்றைச் செயலில் காட்டு,
    அன்னைதந்தை பெரியோரை மதித்து வாழ்வாய்
    அடுத்தவர்க்கும் உதவும்கலை அறிந்து கொள்வாய்,
    முன்னேறு பலகலையும் கற்றுத் தேர்ந்தே
    முதல்நிலையில் ஆசனத்தில் அமர்வாய் நீயே…!

    ”சின்னவனே! அன்னை தந்தையை மதித்து வாழ்! அடுத்தவர்க்கு உதவிடு! கலைபல தேர்! அமருவாய் நீ அரியாசனத்தில்!” என்று சிறுவனின் மனத்தில் நம்பிக்கையை விதைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • புதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

    புதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

    சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வானவில் பண்பாட்டு மையம், 2019ஆம் ஆண்டுக்கான பாரதி திருவிழாவை டிசம்பர் 07, 08 தேதிகளில் நடத்துகிறது. இதில் புதுநெறி காட்டிய புலவன் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கினையும் நடத்துகின்றது. அழைப்பிதழ் காண்க.

    Share
  • கோயிற் பண்பாடு – பன்னாட்டுக் கருத்தரங்கம்

    கோயிற் பண்பாடு – பன்னாட்டுக் கருத்தரங்கம்

    அழகப்பா பல்கலைக்கழகத்தில் கோயிற் பண்பாடு என்ற கருப்பொருளில் பன்னாட்டுக் கருத்தரங்கம்.

    Share
  • சுழல்

    சுழல்

    பாஸ்கர்

    மோடி பண்றது ஞாயமா?
    நீ எவ்வளவு நோட்டை எக்ஸ்ச்சஞ் பண்ண?
    என்ன இந்த வருஷமும் அதே மழை உண்டா?
    எட்டாம் தேதி என் ஏ சீ வாசல்ல கூட்டத்தை பாத்தயா?
    எவனும் சில்லறை தர மாட்டனுங்க.
    என்ன எழுதினான் சோ… இப்ப ஆஸ்பிட்டல்ல பாத்தியா?

    விஷால் பண்றது மட்டும் சரியா என்ன?
    ஜீ டிவி வந்து விஜய்க்கு தண்ணி காட்டுறான் .
    அந்த ராயர் கேப் டேஸ்ட் போச்சுடா.
    கொஹ்லி இஸ் ப்ராமிசிங், எங் ப்ளட்.
    டே, வைகுண்ட ஏகாதேசி பாஸ் மறக்காதே.

    அரட்டை அழகு சுழல் .வைத்து பாரும் கால்களை …..ஒரே இழு

     

     

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1

    மீனாட்சி பாலகணேஷ்   

       (சிறுதேர்ப்பருவம்- ஆண்பால்)

    ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்தாம் பருவமாக சிறுதேர்ப் பருவம் அமையும். சிறுதேர் உருட்டுதலானது சிறுகுழந்தை நன்கு நடை பழகுவதற்காகவும், ஓடியாடி விளையாடவும் வகைசெய்யும் விதத்தில் ஊக்குவிக்கப்படும் விளையாட்டாகும். தற்காலத்திலும் குழந்தைகளுக்கு நடைவண்டி என நடை பழகுவதற்காக மரத்தாலான மூன்றுகால் சக்கரவண்டி ஒன்றினைக் கொடுப்பதனைக் கிராமப்புறங்களில் காணலாம். நகரத்துக் குழந்தைகள், நான்கு சக்கர ஊர்தி பொம்மைகளையும், நாய்க்குட்டி பொம்மைகளையும் கயிற்றால்கட்டி இழுத்தவண்ணம் நடப்பதனைக் காணலாம்.

                ‘பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்

             முக்காற் சிறுதேர்1,’ என்று பட்டினப்பாலை, இச்சிறுதேரினை, சிறு குழந்தைகள் புரவியில்லாது உருட்டி விளையாடும் மூன்றுகால்களாலான சிறுதேர் எனக் கூறும்.

    ஐங்குறுநூறு, தலைவனின் உள்ளம் தன்மகன் புன்னகை புரிந்தவாறு தளர்நடை நடந்து சிறுதேர் உருட்டும் அழகினைக்கண்டு தலைவியைவிடப் புதல்வனிடத்தில் அன்புமிகுதியால் ஈடுபட்டதனைக் கூறுகிறது.

    ‘புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்

             ……………………………………………………………………

             சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே2,’ என்பன பாடல்வரிகள்.

    பிள்ளைத்தமிழின் ஒவ்வொரு பருவத்திலும் பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவியின் சிறப்புகள் கூறப்படும்; சப்பாணி, அம்மானை, சிறுபறை ஆகிய பருவங்கள் கைகளைப் பாடுபொருளாகக் கொண்டமையும்; வருகை, சிற்றில் (ஆண்பால்) ஆகியன கால்களைப் பாடுபொருளாகக் கொண்டு அவற்றின் சிறப்பைப் பேசும். தளர்நடை நடக்கும் ஆண்மகவு இழுத்துச் செல்லும் சிறுதேரைப்பேசும் சிறுதேர்ப்பருவம், தலைவன் செலுத்தும் தேர் தொடர்பான பல செய்திகளைத் தெரிவிக்கும்.

    இவையே பிள்ளைத்தமிழின் தனிச்சிறப்பாகும்.

    தளர்நடைபயிலும் சிறு ஆண்மகவு நடக்கக் கற்றுக்கொண்டு விட்டதனால் அவனுடைய தாய் அவனுக்கு விளையாட தச்சனிடம் செய்து வாங்கிய ஒரு அழகான சிறுதேரினைக் கொடுத்திருக்கிறாள். இலேசான, கனமற்ற மரத்தால் குழந்தை விளையாடுவதற்காகவே செய்யப்பட்டு, குழந்தை கையிலோ காலிலோ குத்திக் காயம் பண்ணிக்கொள்ளாமலிருக்க முன்னெச்சரிக்கையாக கூர்மையான முனைகள் எல்லாம் தேய்த்து மழுங்கவைக்கப்பட்டு செய்விக்கப்பட்ட விளையாட்டுத்தேர்! சிவப்பு, பச்சை, மஞ்சள் எனக் கண்ணைக்கவரும் வண்ணங்கள் பூசப்பட்டு, சில பட்டுத்துணித்துண்டுகளால் கொடிகளும் பறக்கும்படி அமைந்து மிக அழகாக இருக்கிறது. தாய் தனது ஆசைப்படி அதில் ஒரு அழகான அன்றலர்ந்த தாமரைப்பூவினையும் செருகிவைத்திருக்கிறாள்.

    இந்தத்தேரை அழகான ஒரு மணிக்கயிற்றினால் கட்டி, குழந்தை அதனை இழுத்து உருட்டும்போது ஒலியெழும்படியாகச் சில மணிகளையும் அங்கங்கே இணைத்துள்ளான் அதனைச் செய்த தச்சன். மிக்க மகிழ்ச்சியுடன் சிறுகுழந்தை தேரை இழுத்துக்கொண்டு செல்கிறான். தேர்ச்சக்கரங்கள் உருளும்போது மணிகள் இனிமையாக ஒலிக்க அதனை இழுத்து உருட்டும் தன் மகனைக்கண்டு தாயின் மனம் ஆனந்தத்தில் பூரிக்கின்றது. குழந்தையும் புது விளையாட்டில் உற்சாகமாக ஈடுபட்டுத் தெருவெங்கும் தேரினை இழுத்தவண்ணம் நடந்து செல்கிறான்.

    இந்தக்குழந்தை நம்மையெல்லாம் காக்கும் செந்தில்வாழ் கந்தன்; சேவற்கொடி கொண்ட குமரன். பக்தியிலும் தாயன்பிலும் திளைக்கும் புலவர் பகழிக்கூத்தர் தாமியற்றியருளிய திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் குமரன் சிறுதேர் உருட்டுவதனை பரவசமாக வருணிக்கிறார்: குமரன் தேருருட்டுங்காலை மற்றும் பலரும் பலவிதமான தேர்களை உருட்டுகின்றனர் எனக்கூறும் நயம் வியக்கத்தக்கது.

    ‘தேவர்களுக்கரசன் இந்திரன்; மணம்மிகுந்ததும் தேன்சொரிவதுமான மாலைகளை அணிந்தவன்; ஆயிரம் யாகங்களைச் செய்து இந்திரபதவி பெற்று தக்கதருணத்தில் அரியாசனத்தில் அமர்ந்தவன்; அவனுடைய அழகிய தேரினை ஓட்டுபவன் (தேரினை உருட்டுபவன்) மாதலி எனும் பெருமைமிக்க தேர்ப்பாகன். உலகின் நிலைப்பாடு அழிந்துபட்டதென்று குபேரன் எனும் தேவன் தானும் ஒரு தேரை உருட்டுகிறான். அது என்ன? பழங்காலம்தொட்டே பகைமைகொண்ட அரக்கர்கள் அச்சமடையும்படி,  வடவரையாகிய இமயத்தினைப்பொரும் புஷ்பகவிமானத்தினை அவன் செலுத்துகிறான் (புட்பகத்தேரை உருட்டுகிறான்). வெற்றிமிகும்படி உதித்தெழுகின்ற ஆயிரம்கதிர்களைக் கொண்ட கதிரவன் ஆகாயத்தில் ஒளிபரப்பியவண்ணம் கோலம் நிறைந்த அழகான ஒளிவட்டத்தைப் பரிவட்டமாகக் கொண்டு சுடர் வீசுகின்றான்: உலகினைத்தன் ஒளியால் துலக்கி விளக்கமுறச் செய்கின்றான். சூரியனின் தேரோட்டியான அருணன்  முட்கோல் எனப்படும் தேரோட்டுபவனின் கைக்கோலை (சாட்டைக்கோலை) எடுத்துக்கொண்டு வலிமைமிகுந்த தேரினை உருட்டிவருகிறான். ஆகவே, செந்தில்பதியில் வாழும் கந்தனே! நீயும் உனது சிறுதேரினை உருட்டி வருவாயாக!’ எனப் பகழிக்கூத்தர் வேண்டுகிறார்.

                தண்டே னுடைந்தொழுகு மருமாலை நீள்முடி

                       தரிக்குஞ் சதக்கிருதுசெந்

             தருணமணி ஆசனத் தேறமா தலிசெழுந்

                       தமனியத் தேருருட்டப்

             ………………………………………………………………………………

             கொண்டே உதித்தசெங் கதிரா யிரக்கடவுள்

                       குண்டலந் திருவில்வீசக்

             ……………………………………………………………………………….

             திண்டே ருருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே

                       சிறுதேர் உருட்டி யருளே

             சேவற் பதாகைக் குமாரகம் பீரனே

                        சிறுதேர் உருட்டி யருளே3.

    புலவரின் ஆவல் இத்துடன் நிறைவுபெறவில்லை! இன்னும் யார்யார் என்னவெல்லாம் உருட்டினார்கள் எனக் குறிப்பிடுவதிலேயே முனைப்பாக இருக்கிறார். இதுவுமொரு அழகிய சொல்நயமும் தமிழ்நயமும் செறிந்த பாடல்!

    வாரணிந்த இளமுலைகளைக் கொண்ட இடைச்சியர்கள் (பொதுவியர்) தங்கள் ஆடை மோரினாலும் தயிரினாலும் முடைநாற்றம் வீசும் தகைமையர். தயிரினைக் கடைந்து வெண்ணையையும் உருண்டைகளாக உருட்டி, வெண்தயிரையும் உறிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய வீடுகளுக்குள் கள்வனைப்போல் மெல்லப்புகுந்து அந்தத் தயிரினை உண்கிறான் ஒருவன்; பின் குடைத்தை உருட்டித்தள்ளி அதிலிருந்து வெண்ணையையும் அள்ளிவாரி (உருட்டி வாயில் இட்டுக்கொள்ளக்கூட அவகாசமின்றி) யாரும் காணும்முன்பு திருட்டுத்தனமாக மிக அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு உண்டுவிடுகிறான்; அதன்பின்பு தனது செங்கனி வாயினையும் துடைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதவன் போலச் செல்பவன், ஒரு பருத்த பெரிய சகடத்தைச் சிலம்பணிந்த தனது சிறுகாலால் எட்டியுதைத்து உருட்டி விளையாடிச் சிதைக்கிறான்! யாரிவன்? சகடாசுரனைக் கொன்ற கிருஷ்ணபெருமானே இவன். ‘அந்தப் பச்சைமாலின் மருகனே’ என முருகனைப் புலவர் விளிக்கிறார்: இவ்வாறு மாமனின் ‘சிறப்பைக்’கூறி விளித்த மருகனாகிய முருகனிடம், “உன்னிடம் தீராத பெரும்பக்தி கொண்ட அடியவர்களின் பழவினைகளாகிய கொடுமைகள் தீருமாறு நீ அத்தீமைகளைப் புறந்தள்ளி (உருட்டிவிட்டு) அனுக்கிரகம் செய்கிறாய் முருகா! மேலும் அத்துணை உலகங்களிலும், அண்டபகிரண்டங்களிலும் உனது  ஆணை (கட்டளை, அதிகாரம்) எனும் ஆக்ஞாசக்கரத்தை (ஆழியை) உருட்டிக் காக்கிறாய். இவ்வாறு செய்து, உனதடியைச்சேராத/வணங்காத அசுரர்களின் தலைகளாகிய குவடுகளை (மலைகளை) உருட்டுகின்றனை! நீ இந்தச் சிறுதேரையும் உருட்டியருளுக,” என வேண்டுவதாக இப்பாடல் அழகுற அமைகிறது.

    ‘சேவற்பதாகைக் குமாரகம்பீரனே,’ என ஆசையாக விளிக்கிறார். சேவல்கொடியைக்கொண்டு கம்பீரமாக விளங்குபவனே எனும் இப்பிரயோகம் தனித்துவம்கொண்டு விளங்குகிறது.

                   வாராரும் இளமுலை முடைத்துகிற் பொதுவியர்

                                 மனைக்குட் புகுந்து மெல்ல

                   வைத்தவெண் தயிருண்டு குடமுருட் டிப்பெருக

                                வாரிவெண் ணெயை யுருட்டிப்

                   பாராமல் உண்டுசெங் கனிவாய் துடைத்துப்

                                பருஞ்சகடு தன்னையன்று

                   பரிபுரத் தாளால் உருட்டிவிளை யாடுமொரு

                               பச்சைமால் மருக ……………………..

                    ……………………………………………………..

                  அண்டபகி ரண்டமும் அனைத்துலக முஞ்செல்லும்

                               ஆணையா ழியையு ருட்டிச்

                  சேராநி சாசரர் சிரக்குவ டுருட்டநீ

                                சிறுதேர் உருட்டி யருளே4

    முருகன் உருட்டும் சிறுதேரானது ஒவ்வொரு அடியாரின் உள்ளத்திலும் விதம்விதமான கற்பனைகளை உண்டுபண்ணுகின்றது.

                திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் சிதம்பர அடிகளார் மனித உடலையே முருகன் எனும் தெய்வக்குழந்தை படைத்து உருட்டும் அற்புதமான தேராக உருவகிக்கிறார். பாதங்களே தேரின் சக்கரங்களாகவும், எலும்பே பெரிய பலகையாகவும், சொல்லும் நாடியே அச்சாணியாகவும், பருத்தமார்பு தேரின் தட்டாகவும், காற்றாடியைப்போல அலமலந்து சுழலும் வஞ்சம் நெருங்கிய ஐம்பொறிகள் சிறப்பான தேர்க்கொடிஞ்சியாகவும் உள்ளன; விருப்பம் பொருந்திய சிகையே தேர்க்கொடிஞ்சியாக அமைய, பேசும் சொற்களே பல வாத்தியங்களின் தொகுக்கப்பட்ட ஒலியாக அமைகின்றது; இவ்வாறு பெரிய வேகம் மிகுந்த பலவகை மாறுபாடுகளையும் கொண்ட உடல் எனக் கூறப்படும் தேரின்மீது பெறுதற்கரிய உயிர் எனப்படும் ஒரு சிறுவனை அமரச் செய்துள்ளாய்! மனம் எனும் குதிரைகளை இருவினைகள் எனும் கயிற்றினால் பூட்டி, உனது திருவருளே பாகனாக இருக்குமாறு அமைத்து குற்றமற நடத்தச் செய்தருளும் குமரேசனே! நீ உனது சிறுதேரினை உருட்டியருளுக, என வேண்டுகிறார் புலவர்.

                             பாததிகி ரியுமெலும் புப்பெரும் பலகையும்

                                         பகர்நாடி யுருவாணியும்

                             பரியமரு மத்தட்டும் ………………

                                         ……………………………………

                            காதல்தரு குஞ்சிக்கோ டிஞ்சியும் பலமொழி

                                        கலித்தபல் லியராசியும்

                                   …………………………………………………

                         பேதமுறு தேர்கள்மீ தாருயிர்ப் பிளையைப்

                                       பிறங்கிட விருத்திவெற்றிப்

                         பேசரு மனப்புரவி கட்டிவினை வடவழிப்

                                       ………………………………

                         தீதற நடத்திடச் செய்தகும ரேசனே

                                      சிறுதே ருருட்டியருளே5

    அழகான உருவகங்களைக் கொண்டமைந்த பாடலிதுவாகும். முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் நாம் செய்த வினைகளின்படிதான் ஆன்மாக்கள் அடுத்தடுத்த பிறவிகளில் உடல் பெறுகின்றன. இதனையே, “கணமொடு மலிந்த உடலென உரைதரும் பெரிய கடுவேகம் உடைய நானாபேதமுறு தேர்கண்மீது,” எனப் பொருத்தமாகக் கூறுகிறார். அவ்வினைப் போகங்களை அனுபவிப்பதற்கு அந்தவந்த உடல்களில் உயிர்களைப் பொருத்திக் கூட்டிவைப்பதனால், “ஆருயிர்ப் பிள்ளையைப் பிறங்கிட இருத்தி,” எனும் தத்துவமும் விளக்கப் பட்டுள்ளது.

    இத்தகைய பெரும் வேதாந்த தத்துவத்தை உள்ளடக்கிய பாடல்கள் பிள்ளைத்தமிழ் நூல்களில் பலவாகும்.

                                                                                      ***

    வேறொரு அடியாரின் சிந்தையில் உலகில் இயற்கை நியதிக்கேற்ப நடைபெறும் பலவிதமான செயல்களும் முருகனின் சிறுதேரோட்டத்திற்கு  இணையாகக் கூறப்படுகின்றன.

    சந்திரன் வானில் பலவேறு நட்சத்திரக் கூட்டங்கள் புடைசூழத் தன் விமானத்தில் உலாவருகிறான்;

    ஒளி (சவி) வாய்ந்த இரவி எனும் சூரியன் ஏழு புரவிகளைப்பூட்டித் தனது அழகான தேரில் உலாவருகிறான்;

    அரன் எனப்படும் சிவபிரான் தனது விடை வாகனத்தைச் செலுத்தி வர, மாயவனாகிய திருமால் தனது கருடவாகனத்தில் வலம் வருகிறான்; தாமரை மலரில் உறையும் பிரம்மன் தனது அன்னவாகனத்தில் வலம் வருகிறான்;

    முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்திடவும், இந்திரனுடைய அழகான தேவமங்கையர் இருபுறமும் கவரிகளைக்கொண்டு வீசிடவும், இளமையான நிலவு வட்டமான வெண்குடையை ஏந்திடவும், இருகொம்புகளையுடைய மலைபோலும் யானைகள் மரங்கள் நிறைந்த மலைகளைச் சுறி வலம்வரவும், நீ உன் சிறுதேரினை உருட்டுக என வேண்டுகிறார் புலவர்.

                           சந்திரன் பலவேறு தாராக ணங்கள்சூழ்

                                     தரவிமா னத்து லாவச்

                           சவிபெற்ற ரவிபுரவி யேழ்பூட்டி யேநெடும்

                                     தமனியத் தேர்சே லுத்த 

                                    …………………………………….

                           முளரிப் பொகுட்டயன் புள்ளூர முப்பத்து

                                    முக்கோடி தேவர் வாழ்த்த

                                    ………………………………………

                              …….. ஈரிருமருப் புப்பொ ருப்பு

                          சிந்துரம் கற்பகா டவிகடவி வலம்வரச்

                                     …………………………….

                          தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா

                                       சிறுதே ருருட்டி யருளே6.

     இது மயிலம் முருகன் பிள்ளைத்தமிழில் நாம் காணும் அழகான பாடல்.

    உலகில் அனைத்தும்  இலயம் தவறாது   இயங்கிடவேண்டுமாயின் இறைவனின் அருளாணை வேண்டும். இதனையே முருகன் உருட்டும் சிறுதேராகக் காண்பார் இவ்வடியார்.

                                                                                                                                                                     – (வளரும்)

     

    பார்வை நூல்கள்:

    1. பட்டினப்பாலை
    2. ஐங்குறுநூறு
    3. பகழிக்கூத்தர்- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
    4. பகழிக்கூத்தர்- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
    5. சிதம்பர அடிகளார்- திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    6. திருவாரூர் வைத்தியநாத தேசிகர் – மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்

     

     

    Share
  • (Peer Reviewed) தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்

    (Peer Reviewed) தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்

    நீ.அகிலாண்டேஸ்வரி
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக் கழகம்
    தஞ்சாவூர்- 10
    —————————————————————————————————————————————————-

    தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்

    கதைப்பாடல்கள் வாய்மொழி வரலாறு மட்டுமன்று வாழ்க்கைப் பொருளின் வரலாறு என்பது இன்று நாட்டுப்புறவியலாளர்கள் மட்டும் அல்ல வரலாற்று ஆசிரியர்களாளும் முழுமையாக ஏற்றுக் கொள்கின்ற வகையில் இவை வரலாற்றுப் பெட்டகமாகவும் அமைகின்றன. அவ்வகையில் சிவ விவேகானந்தனின் தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகளை ஆய்கிறது இக்கட்டுரை.

    கதைப்பாடலின் தோற்றம்

    பெரும்பாலும் கதைப்பாடல்கள் யாவும் பாரம்பரியமாக அந்நாட்டு மக்களால் வாய்மொழியாகப் பாடப்பட்டு வரும் இயல்பு உடையன. இதன் அடிப்படையில் தம்பிமார் கதைப்பாடலும் கோவில்களில் வில்லுப்பாட்டாகப் பாடப்பட்டு வருகிறது. வரலாற்றுக் கதைப்பாடல்கள் பெரும்பாலும் அரசியல் பிரச்சனைகள் காரணமாக எழும் போர்கள் பற்றி அமைவனவாகும்.  இதனடிப்படையில் தம்பிமார் கதை திருவிதாங்கூர் வரலாறு தொடர்பான ஒரு போர் கதைப்பாடலாகும்.

    வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம் சங்க காலத்தில் 13 மண்டலங்களை உள்ளடக்கியதாக இருந்தது. அவற்றுள் பூழி, குடம், குட்டம், வேண் என்ற நான்கு மண்டலங்களும் அரபிக்கடலை ஒட்டி வடக்கிலிருந்து தெற்காக அமைந்து இருந்தன. குட்ட நாட்டிற்குத் தெற்கில் உள்ள வேணாடு குமரிமுனை வரை பரவிக்கிடந்த்து. இந்த வேணாட்டை சங்க காலத்தில் வேள் மன்னர்கள்(குறுநில) ஆட்சி செய்து வந்துள்ளனர்.அவ்வாறு வேள் மன்னர்கள் ஆட்சி செய்த வேணாடு இன்றைய திருவிதாங்கூர் பகுதியாகும்.ஆய்வேள், எவ்விவேள், பேகன்வேள், வேண்மான், பாரிவேள், நன்னன் முதலியோர் வேள் மன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர்’’.

    அரசு உருவாக்கமும் மன்னராட்சியும்

    மன்னராட்சி முறை என்பது உலகம் முழுவதும் வாரிசு முறையே இருந்து வந்துள்ளது. மேலும் நாடாலும் உரிமை மன்னனுக்குப் பிறகு வாரிசுகளுக்கும் வலிமையைக் கொண்டு யார் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களும் நாட்டை ஆண்டு இருக்கிறார்கள். இவை உலக நாடுகளில் நடந்து உள்ளன. சேர நாட்டில் வாரிசு உரிமை தாய்வழிச் சார்ந்தது எனவும், சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் தந்தை வழிச் சார்ந்தது எனவும் கருத்து நிலவுகிறது. ஆனால் தொல்காப்பியர் தாயத்தின் அடையாத் தாயம்1 என்று உலகம் முழுவதுக்குமான ஒரு பொதுவான வழக்கத்தைக் குறிப்பிட்டு உள்ளார். இதன் வழியாக அக்காலச் சமூகம் தந்தை வழிச் சமூகம் என்பது தெளிவாகிறது.

    தொல்காப்பியம்

    சோழர், பாண்டியர் மரபினரில் வாரிசு முறை பின்பற்றப் பட்டது. மேலும் இதிகாச புராணங்களில் பட்டத்து அரசியின் மூத்த மகனுக்கே என்கிறது. சோழர் பாண்டியர் மரபினில் சில சமயங்களில் மூத்த சகோதரனுக்குப் பின்னர் இளையவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற செய்திகளும் சங்க இலக்கியத்தில் உள்ளது.

                      “பரந்துபடு நல்லிசை எய்தி மற்று

                       உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும்

                       ஒழித்த மாயம் அவர்க்குரி தன்றெ …’’ 2

    என்ற புறநானூற்றுப் பாடல் அரசுரிமை தந்தைக்குப் பின் மகனுக்கே என்பதை உணர்த்துகிறது. மேலும் மன்னர்கள் மரபுகளையும், வழக்காறுகளையும் மதித்தனர். முறைமுதற்கட்டில் என்பது மரபு. தந்தைவழி தாய முறையில் மூத்த மகனுக்கு அரசு உரிமை கிட்டியது என்பதை

                       மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

                       பால்தர வந்த பழவிரல் தாயம்….’’ 3

    என்ற புறநானூற்றுப் பாடல் வழியாக அரசுரிமை தலைமுறை, தலைமுறையாக அரசின் மூத்த மகனுக்கு வந்துகொண்டிருந்தது என்பதை அறிய முடிகிறது.

    சங்க கால ஆட்சிமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆட்சியாக திருவாங்கோட்டு மன்னர் ஆட்சி முறை இருந்தது குறிப்பிடத் தக்கதாகும். இங்கு தந்தை வழிச்சமூகமோ அல்லது தாய் வழிச்சமூகமோ ஆட்சி நடத்தவில்லை. அதற்கு மாறாக மருமக்கள் வழி தாயத்தின் படி ஆட்சி நடந்துள்ளது. என்பதனைத் தம்பிமார் கதைப்பாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதாவது ராம வர்மாவிற்கு அரசாளக்கூடிய தகுதிகளோடு இரு மகன்கள் இருந்தும் அவர் தனது மருமகனான மார்த்தாண்ட வர்மாவிற்கு அரசுரிமையை வழங்குகிறார். இதனை,

                      நானிலிருந்து பொறுத்தது போல் நலமாக நீபொறுத்து

                       முக்காலும் நீ பொறுத்து முடிசூட்டி நீ ஆண்டிடுவாய்

                       செங்கோலும் முத்திரையும் திருமுடியும் தான் கொடுத்து

                       திருக் கையினால் கொடுக்க திருவயது குறைந்திடுமாம்’’4

    என்ற கதைப்பாடல் வரிகள் மூலமாக ராமவர்மா நாட்டை எந்தக் குறையும் இல்லாமல் ஆள வேண்டும் என்று மார்த்தாண்ட வர்மாவிடம் கேட்டுக்கொண்டது மட்டுமல்லாமல், நாட்டை ஆள்வதற்கு உரிய செங்கோல், ராஜமுத்திரைமோதிரம் மற்றும் ராஜகிரீடம் ஆகியவற்றை தன் மருமகனிடம் ராமவர்மா அவர்கள் வழங்கினார் என்பதை அறிய முடிகிறது.

    மேலும் பொதுவாக மன்னராட்சி முறையில் அரசன் இறந்து விட்ட பிறகு அவனுடைய ஆண்வாரிசு அரசனாக்கப் படுவான். இந்த வாரிசு உரிமையில் பொது மக்களின் பங்கு எதுவும் இருக்காது. புதிதாக வாரிசு உரிமை ஏற்ற அரசின் நேர்ப்பொறுப்பில் முன்பு இருந்த அரசின் கீழ் உள்ள நிலங்களும், ஊர்களும் அப்படியே தொடர்கின்றன’’5 ஆனால் தம்பிமார் கதைப்பாடலில் அரசனுக்குப்பிறகு அவனுடைய மருமகன் அரசுரிமை ஏற்று ஆட்சி நடத்தினான் என்பதை,

                       ஆண்டிருக்கும் நாளையிலே அழகு முடிமன்னவரும்

                       ஆறிலொரு கடமை தாண்டி அசையாத மணியும்கட்டி

                       செங்கோலும் முத்திரையும் தேசமதில் சிறந்திலங்க

                       ஒன்றும் குறைவராமல் உலகமதை ஆண்டிருந்தார்….’’ 6

    என மார்த்தாண்டவர்மா ஆட்சிப் பொறுப்பினை  ஏற்ற பின் மக்களின் வருவாயில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே வரியாக வசூலித்தார். மேலும் செங்கோல் வலையாத நிலையில் ஆட்சி புரிந்தார் என்பதை இக்கதைபாடல் வரிகள் மூலம் அறிய முடிகிறது.

    மணமுறை

                       பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

                       ஐயர் யாத்தனர் கரணம் என்ப.’’ 7

    என்கிறார். ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தனர். பின் பொய்யும், குற்றமும் மிகுந்த பின்பு இவனுடைய மனைவி இவள் என்று அடையாளப்படுத்தும் விதமாகத் தோன்றியதே திருமணம் என்கிறார் தொல்காப்பியர். மேலும் குறுந்தொகை தலைவி தலைவனுடன் தான் பழகியதற்குக் குருகைச் சாட்சியாக்குகிறாள்.

                       யாரும் இல்லைத் தானே கள்வன்

                       தானது பொய்ப்பின் யானெவன் செய்தோ

                       ——————————————————-

                       ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்

                       குருகும் உண்டு தான் மணந்த ஒன்றே…’’8

    என்றதன் வழி ஊரார் அறியாமல் நடந்த களவு வாழ்வில் ஆடவனிடம் பொய் தோன்றுமாயின் சாட்சி இல்லை என்ற நிலை அறியலாகிறது. இக்காரணத்தினால் திருமணம் தோன்றியது எனலாம். இதனையே,

                       தந்தையும் கொடா அன் ஆயின்வந்தோர்

                       ———————————————————-

                       ———————————————————-

                       படை மயங்கி ஆரிடை நெடுநல் ஊரே ’’9 

    மணமகள் வீட்டில் பெண் கேட்டு ஊரரிய திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இன்றளவிலும் இருந்து வருவதைக் காணலாம். ஆனால் வேணாட்டின் திருமண முறைகள் சற்று வேறுபட்டு இருந்தன. யாதெனில் திருவாங்கோட்டு மன்னர்கள் யாரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர்களுடைய வாரிசுகளுக்கு அவருடைய நாட்டில் ஆட்சி செய்யும் உரிமை இல்லாத காரணத்தால் மன்னர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் அவர்கள் விருப்பத்திற்கேற்ப பல பெண்களுடன் வாழ்ந்து வந்தார்கள். மன்னர்கள் பலரும் திருமணம் செய்து கொள்ளாமல் ரகசிய மனைவிகளை வைத்திருந்தனர். ஆனால் மன்னர் ராமவர்மா மட்டுமே ஊரரிய கணிகையர்குலப் பெண்ணை மணந்து கொண்டு அவளோடு இல்லறம் நடத்துகிறார். அதன் பின் அவருக்கு மூன்று பிள்ளைகளும் பிறக்கின்றன.

    பொதுவாக இவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கும், அவளுடைய வாரிசுகளுக்கும் சொத்துரிமைகள், இல்லறக் கடமைகள் என அனைத்து சமூக செயல்பாட்டு உரிமைகளும் மறுக்கப்பட்டன. ஆனால் ராமவர்மா அவர்கள் தன்னுடைய மனைவிக்கும், வாரிசுகளுக்கும் அரசுரிமையைத் தவிர்த்து மற்ற அனைத்து உரிமைகளையும் வழங்கியிருந்தார். இதனை,

                       நாலாறு முட்டுச்  சந்தையிலே நல்லமுதல் எடுப்புகளும்

                       கொடுப்பக்குழி பேட்டையிலே கூண்ட முதல் எடுப்புகளும்

                       கொடுத்தாரே மன்னவரும் கூண்ட….’’10

    போரும், போருக்கான காரணங்களும்

    மூன்று வேந்த மரபினரும் தங்களிடம் மூன்றினைத் தவறாது வைத்திருந்தனர். அவை குடை, முடி, கோல். வெண்கொற்றக் குடை என்பது காவல் தொழிலையும், மணிமுடி என்பது அரசியல் தலைமையையும், செங்கோல் என்பது நீதியையும் குறிக்கும் குறியீடுகளாகத் திகழ்ந்தன. இவை மூன்றும் தனக்கு நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே போர் மேற்கொண்டனர், சங்க கால வேந்தர்கள். அப்போரானது மண்ணாசைக் காரணமாகவும், பெண்ணாசைக் காரணமாகவும் நிகழ்ந்தன என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. இங்கு நடைபெறுகின்ற போரானது பெண்ணாசையின் காரணமாக நடக்கிறது. அதாவது தம்பிமார்களின் தங்கையை மன்னர் பெண் கேட்டலும் அதற்குத் தம்பிமார்கள் நிபந்தனையின் பேரில் மறுத்தலும் போருக்கு முக்கிய காரணமாகிறது.

    மார்த்தாண்டவர்மா அவர்கள் தம்பிமாரின் தங்கையைப் பெண் கேட்கிறார். அப்போது தம்பிமார்கள் துருவத்தில் பிறந்தார்க்கு பெண் கொடுப்பதில்லை என்று கூறி மறுத்து விடுகின்றனர். இதனால் கோபம் கொண்ட மன்னர் மார்த்தாண்டவர்மா  தம்பிமார்களுக்கு அவருடைய தந்தை கொடுத்த குமரி நாட்டுப் பகுதிகளையும், அவர்களின் அரண்மனையையும் பறித்துக் கொண்டு அவர்களையும் நாட்டை விட்டுத் துரத்திவிடுகிறான். இதனை,

                       வலியதம்பி மன்னவர்க்கு மன்னவனார் கொடுத்திருந்த

                         வகைதொகையும் கூண்ட மன்னர் தானெடுத்தார்

                         குஞ்சுதம்பி மன்னவர்க்கு கொடுத்திருந்த வகைதொகையும்

                         திருவுளக் கோடாக வல்லோ சிறியவர் எடுத்துவிட்டார்…. ’’11

    என்ற கதைப்பாடல் வரிகள் மூலம் அறியலாம். மேலும் ஒரு தலைவன் நின் மகளைத் தருக என்று கேட்க அதனை அவனுக்கு எளியவன் ஒருவன் மறுத்துக் கூறுதலை புறநானூற்றின் வழியாக அறிய முடிகிறது.

    அரசனின் அறம்

                        அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

                          பொன்றுங்கால் பொன்றாத் துணை …’’12

    என்று கூறுகிறது வள்ளுவம். அதாவது அறம் செய்வதற்கு காலம், நேரம் பார்க்கவேண்டியதில்லை என்பதுதான் வள்ளுவரின் ஆழமான கருத்தாக இருந்திருக்கின்றது. இந்த அறமானது தனிமனித வாழ்வில் பிரதிபலிக்கின்றது. அதாவது சர்வவல்லமையும், ஆதிக்க மனப்பான்மையும் கொண்டு இருந்தாலும் அறநெறியைப் பின்பற்றி ஆட்சி நடத்தல் வேண்டும் என்று மன்னருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனை

                        நான்குடன் மாண்டது ஆயினும் மாண்ட

                         அறநெறி முதற்றே அரசின் கொற்றம்

                         அதனால் நமர் எனக் கோல் கோடாது

                         பிறர் எனக் குணம் கொல்லாது …’’13

    என்று புறநானூறு குறிப்பிடுகின்றது. வலிமையான நான்கு படைகள் கொண்டு இருந்தாலும் அறநெறி வழியாகச் செயல்படுதலே நாட்டின் இறையான்மையைப் பாதுகாக்க முடியும் என்று மருதன் இளநாகனார் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மார்த்தாண்டவர்மா இக்கொள்கையினைக் கடைபிடிக்கவில்லை. தான் ஒரு அரசன் என்கின்ற ஆளுகையையும், செல்வாக்கினையும் கொண்டு தம்பிமார்களின் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு நாட்டைவிட்டுத் துரத்தி விடுகிறான். இதன் காரணமாகச் சர்வ வல்லமை பொருந்திய மன்னரைப் பெரும்படைகளைக் கொண்டு தம்பிமார்கள் தோற்கடித்து விடுகின்றன. இதனைக் கீழுள்ள கதைப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

                     மந்திரவாள் உறை உருவி வலுவுடனே குஞ்சு தம்பி

                     கைகலந்து வெட்டும் நேரம் கண்டாரே ’’…..14

    மன்னிக்கும் பண்பு

    முகம் தெரியாத யாரோ ஒருவர் மீதும், இனம் புரியாத ஏதோ ஒரு உயிரின் மீதும் செலுத்துகின்ற  அன்பு, நேசம் இவற்றைக் காட்டிலும் எதிரிகள் மற்றும் பகைவர்களை மன்னிக்கும் செயலே உயர்பண்பாகக் கருதப்படுகிறது. பிழை செய்தவர்களை மன்னிக்கும் பண்பு புநானூற்றில்

                       நின் யான் பிழைத்து நோவாய்; என்னினும்

                       நீ பிழைத் தாய் போல் நனி நாணினையே …’’15

    என்று கண்ணனார் குறிப்பிடுகிறார். பகைவனே தவறு செய்திருந்தாலும் நான் தான் தவறு செய்தேன் என்று அவன்மேல் சினம் கொள்ளாது சொல்வது என்பது உயர்ந்த பண்பாகக்  கொள்ளப்படுகிறது. அதுபோல தம்பிமாரும் மன்னரும் ஒருவருக்கொருவர் தங்களுடைய பகையினை மறந்து சமாதானம் அடையும் படியாக அழகப்ப முதலியார் வேண்டிக்கொண்டதற்கு இணங்க அவர்கள் தங்களது பகையினை மறந்து மனதில் எந்த விதமான வஞ்சகமும் இல்லாமல் மன்னருடன் நட்பு பாராட்டி வந்தனர். அதாவது பகைவனை வெல்ல நண்பனாக்கிக் கொள்வது சிறந்த வழியாகும். அதுபோல தம்பிமார்களோடு மன்னர் மார்த்தாண்டவர்மா நட்பு பாராட்டி வந்தாலும் தம்மை கொள்ள வந்த தம்பிமார்களை எப்படியும் கொன்று விட வேண்டும் என்று அவர்கள் மீது வஞ்சகம் கொண்டு இருந்தார். இதனை,

                       மன்னவரும் தன்மனதில் வஞ்சகமாய் தானினைந்து

                       ———————————————————————

                       ———————————————————————

                       நம்மைக்கொள்ள வந்தவனை தாம் கொலை செய்யவேனும்… ’’16

    என்ற கதைப்பாடல் வரிகளால் அறிய முடிகிறது. மேலும் போர்களில் எதிர்ப்படை வீரர்களைச் சிறைபிடித்தல் என்பது பொதுவான வழக்கம் ஆகும். அதுபோல தம்பிமார் கதையிலும் சிறைபிடித்தலுக்கு ஒப்பான இரு காட்சிகள் இடம்பெறுகின்றன. மன்னரைக் காண வந்த தம்பிமார்கள் இருவரையும் சூழ்ச்சியின் காரணமாகத் தனியே பிரித்து அவர்களிடம் உள்ள ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு காவலர்களை ஏவி சிறைபிடித்து விடுகிறார்  மன்னர் மார்த்தாண்டவர்மா. பொதுவாக நிராயுதபானியாக உள்ளவர்கள் எதிரியாக இருந்தாலும் கூட அவர்களிடம் போர் செய்தல் என்பது அரச மரபிற்கு அப்பாற்பட்டது. அது அரசனுக்குரிய தர்மமும் கிடையாது. ஆனால் மார்த்தாண்டவர்மா இத்தகைய அரச தர்மத்தை மீறி தம்பிமார்களைச் சிறைபிடித்துக் கொலை செய்து விடுகிறான். இருப்பினும் இது வெற்றியாகக் கருதப்படாது. ஏனெனில் இந்த வெற்றி அநியாயமாகவும், வஞ்சகச் சூழ்ச்சியாலும் பெறப்பட்டது. அதாவது போரின் மீறிப் பெற்றது. ஆதலின் உண்மையில் வெற்றி பெற்றவர்கள் தம்பிமார்களே என்று கூறினால் அது மிகையாகாது.

    சான்றெண் விளக்கம்

    1. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை,முதல் பதிப்பு – மே 2005, பக்கம் – 329
    2. .புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 224
    1. மேலது, பக்கம் – 75
    2. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன்.சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு 2012, பக்கம் – 289
    3. தமிழ் மக்கள் வரலாறு, அறவாணன் க.ப, தமிழ் கோட்டம், சென்னை, முதல் பதிப்பு மார்ச் 2006, பக்கம் – 195
    4. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன். சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு 2012, பக்கம் – 290
    5. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – மே 2005, பக்கம் 247
    6. குறுந்தொகை, சுப்பிரமணியன் ச.வே, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – டிசம்பர் 2009, பக்கம் – 45
    7. புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 331
    8. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன் சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு -2012, பக்கம் – 275
    9. மேலது, பக்கம் – 304
    10. திருக்குறள், பரிமேலழகர் உரை, செண்பகா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – ஆகஸ்ட் 2012, பக்கம் – 20
    11. புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 77
    12. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன் சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு – 2012, பக்கம் – 329
    13. புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 64
    14. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன் .சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு – 2012, பக்கம் – 334.

    ———————————————————————————————————–

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஆய்வாளர் இக்கட்டுரையை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். தம்பிமார் கதைப் பாடலின் வரலாற்றுப் பின்புலம் நன்றாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மருமக்கள் வழி மாண்மியம், தாய் வழிச் சமூகத்தின் எச்சமாக விளங்கியதை எடுத்துக் காட்டியுள்ளார். துரோகத்தின் அரசியல் வரலாற்றைத் தம்பிமார் கதைப் பாடலும் பெற்றுள்ளதை அறிய முடிகிறது. தொல்காப்பியம் மற்றும் புறநானுற்றுச் சான்றுகள் கட்டுரைக்குக் கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

    ———————————————————————————————————–

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 82

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 82

    நாங்குநேரி வாசஸ்ரீ

    82. தீ நட்பு

    குறள் 811:

    பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
    பெருகலிற் குன்றல் இனிது

    மனசால உருக்கமா இருக்கமாரி பசப்புதவங்களோட சேக்கய வளத்துக்கிடதவிட கொறச்சிக்கிடது நல்லது.

    குறள் 812:

    உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
    பெறினும் இழப்பினும் என்

    தனக்கு தேவப்படுதப்போ சேக்காளி போல நடந்துக்கிட்டு பொறவு தேவையில்லாத நேரம் பிரிஞ்சுபோவுதவங்களோட சேக்க இருந்தா என்ன. இல்லாட்டி என்ன.

    குறள் 813:

    உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
    கொள்வாரும் கள்வரும் நேர்

    என்ன கெடைக்கும்னு எதிர்பாத்து பழகுத சேக்காளி, தாசி, களவாணி இந்த மூணு பேரும் ஒருத்தருகொருத்தர் சமம் தான்.

    குறள் 814:

    அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
    தமரின் தனிமை தலை

    போர்க்களத்துல கீழதள்ளி விட்டுப்போட்டு ஓடுத புத்தியில்லாத குதிர கணக்கா இருக்கவங்களோட சேக்க வைக்கத விட தனியா இருக்கது மேல்.

    குறள் 815:

    செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
    எய்தலின் எய்தாமை நன்று

    நாம பலவிதமா ஒதவி செஞ்சாலும் நமக்கு பாதுக்காப்பா இல்லாத அல்பங்களோட சேக்கயா இருக்கத விட இல்லாம இருக்கது நல்லது.

    குறள் 816:

    பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
    ஏதின்மை கோடி உறும்

    கூறுகெட்டவனோட நெருங்கின சேக்காளியா இருக்கத விட புத்திசாலி ஒருத்தனுக்கு பகையாளியா இருக்கது கோடிமடங்கு மேல்.

    குறள் 817:

    நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
    பத்தடுத்த கோடி உறும்

    மொகத்துல சிரிப்பாணியோட சிரிச்சுப் பேசி நடிக்குதவுகளோட சேக்கய விட பகையாளியால வருத துன்பம் பத்துகோடி மடங்கு நன்ம.

    குறள் 818:

    ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
    சொல்லாடார் சோர விடல்

    முடியும் ங்குத காரியத்தையும் முடிக்க உடாம கெடுக்கவங்க ஒறவ அவுகளுக்கு தெரியாம பையப் பைய வெலக்கிக்கிடணும்.

    குறள் 819:

    கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
    சொல்வேறு பட்டார் தொடர்பு

    சொல்லுதது ஒண்ணு, செய்யுதது ஒண்ணு னு இருக்கவனோட சேக்க கனவுல கூட துன்பத்தக் கொடுக்கும்.

    குறள் 820:

    எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
    மன்றிற் பழிப்பார் தொடர்பு

    நம்ம வீட்டுக்குள்ளார வந்து நல்லதனமா பேசிப்போட்டு பொறவு பலபேர் இருக்க சபையில பொறளி பேசுதவன் ஒறவ வெலக்கிக்கிடணும்.

    Share
  • ஒரு கலைஞனின் வக்கிர புத்தி

    ஒரு கலைஞனின் வக்கிர புத்தி

    நாகேஸ்வரி அண்ணாமலை

    தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பெயர் வாங்கிய இயக்குநர், நடிகர் ஒருவர் பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் அநீதி குறித்துப் பேசியிருப்பது பெண்ணான எனக்கு நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியதுபோல் இருக்கிறது.  இப்படிப் பேசுவதற்குப் பெண்களை இவர் எவ்வளவு தரக்குறைவாக நினைக்கிறார் என்பதை நினைத்தால் இவருடைய சில படங்களைப் போய் ரசித்துப் பார்த்தோமே என்ற நினைப்பு வந்து மனதில் ஒரு குமட்டல் ஏற்படுகிறது.

    இல்லஸ்ரேடட் வீக்லி என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த குஷ்வந்த் சிங், ‘ஒரு பெண்ணால் ஒரு ஆண்மகனுக்கு இழைக்க முடியாத கொடுமை ஒன்று உண்டென்றால் அது அவனுடைய கற்பைச் சூறையாடுவதுதான்’ என்று சொல்லியிருக்கிறார். இவரே, rape is not violent expression of sex, but sexual expression of violence’  என்று கூறியிருக்கிறார். ‘ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கற்பழிக்கும்போது அது வன்முறையாகச் செய்யும் பாலுறவு மட்டுமல்ல; தன் ஆதிக்கத்தைப் பாலுறவின் மூலம் காட்டுகிறான்’. இந்தக் கொடுமையை ஆண்களால் மட்டுமே பெண்களுக்கு இழைக்க முடியும்.  இப்படிப்பட்ட கொடுமையில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்று சொல்ல இந்த இயக்குநருக்கு எப்படி மனம் வந்தது? ஊசியின் காது இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியுமாம். இது என்ன அபத்தமான உவமை!  இவர் உதிர்த்த முத்துக்களில் இதுவும் ஒன்று!

    சில வருஷங்களுக்கு முன்னால் டில்லியில் இரவு பதினொரு மணிக்கு நண்பனுடன் தெருவில் போய்க்கொண்டிருந்த பெண்ணை ஒரு வாகனத்திற்கு இழுத்துக்கொண்டுபோய் நான்கு மிருகங்கள் அவளைப் பலாத்காரம் செய்தனவே, அந்தச் சம்பவத்தில் ஊசி என்ன செய்தது, நூல் எப்படி நுழைந்தது என்று  வெற்றி இயக்குநர் விளக்குவாரா? சென்னையில் ஆறு வயதுச் சிறுமியை அவள் வசித்த அதே அப்பார்மென்ட் கட்டடத்தில் வசித்த ஒரு மிருகம் சீரழித்ததே,  அது எப்படி அந்தச் சிறுமியின் தவறாகும் என்று இவர் விளக்குவாரா? இவை இரண்டே இரண்டு உதாரணங்கள்தான். இன்னும் எத்தனையோ இருக்கின்றன.

    அமெரிக்காவில் தொட்டுத் தாலிகட்டிய கணவனே தன் மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முடியாது.  அப்படிச் செய்யும் பட்சத்தில் கணவனே குற்றவாளியாகிறான். அப்படியிருக்க ஒரு பெண்ணை எதோ ஒரு மிருகம் பலாத்காரம் செய்யும்போது அதில் பெண்ணுக்கும் பங்கு உண்டு என்று சொல்ல இயக்குநருக்கு எப்படி மனம் வந்தது?

    பெண்கள் தங்கள் உடல் தெரிய உடை உடுத்துவதால்தான் ஆண்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று ஒரு அதிமேதாவி கூறியிருந்தார். இவர் ஒரு அரசியல்வாதி.  பெண்களை ஒரு தாயாக, சகோதரியாகப் பாவிக்க வேண்டும் என்று பாடம் புகட்டப்பட்ட தமிழ்நாட்டில் எப்போது இந்த வன்முறையில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்று சொல்ல ஆரம்பித்தோம்? ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. மாதவம் செய்து பிறந்த பெண்களையா இப்படிப்பட்ட அவலத்துக்கு உள்ளாக்குகிறீர்கள்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நாகரிகத்தில் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சான்றுகள் கீழடியில் கிடைத்திருப்பதாக பெருமை பேசிக்கொள்கிறோம். அப்போதே நாகரிகத்தில் சிறந்து விளங்கிய சமூகத்தில், ஒரு பாதியான பெண்களை இப்போது `இப்படி இழிவுபடுத்த வேண்டுமா?

    இன்னொரு உண்மையையும் உதிர்த்திருக்கிறார் இந்த இயக்குநர். ஆண்கள் சின்ன வீடு வைத்துக்கொள்வதில் தவறில்லை என்கிறார். ஆணும் பெண்ணும் சமம் என்று எல்லாச் சமூகங்களும் ஒப்புக்கொண்டாயிற்று. நாகரிகத்தில் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கியதாகச் சொல்லும் தமிழர்களாகிய நாம் பெண்களை இப்படிக் குறைத்துப் பேசலாமா? பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்ற மிருக உணர்ச்சி இன்னும் தமிழ்நாட்டு ஆண்களிடம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.

    Share
  • சுனாமியில் சிதைந்த ஜப்பானிய அணுமின் நிலையம் மீண்டெழுகிறது

    சுனாமியில் சிதைந்த ஜப்பானிய அணுமின் நிலையம் மீண்டெழுகிறது

    சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     

    2011 மார்ச் சுனாமியில் சிதைந்த ஜப்பான் “ஓனகவா அணுமின் நிலையம்” செப்பனிடப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் கடந்து, மீண்டும் இயங்கப் போகிறது

    Nuclear Watchdog Approves Restart of Onagawa Reactor in Miyagi, Japan Hit by March 2011 Tsunami [Look at the Sea Wall]

    ++++++++++++++++

    கீழே விழுவது இயற்கை, ஆனால் 
    மேலே எழுந்து மீண்டும் நடக்காமல்
    முடங்கிப் போவது மானிட மில்லை

    +++++++++++++

    1. https://youtu.be/YIGM_HxfseE
    2. https://youtu.be/h49OaZ0–Ok
    3. https://youtu.be/CtYq70-71RI
    4. https://youtu.be/0rWkMHVEU6Y
    5. https://youtu.be/CtYq70-71RI  [March 13, 2011]
    6. https://youtu.be/0rWkMHVEU6Y

    +++++++++++++

    japan_map1.jpg

    Reactors

    Unit Type Start construction First criticality Commercial operation Electric Power
    Onagawa – 1 BWR July 8, 1980 October 18, 1983 June 1, 1984 524 MW
    Onagawa – 2 BWR April 12, 1991 November 2, 1994 July 28, 1995 825 MW
    Onagawa – 3 BWR January 23, 1998 April 26, 2001 January 30, 2002 825 MW

    It was announced in 2018, that Onagawa Unit 1 which has been idled since 2011 will be decommissioned. Tohoku Electric also plans to resume operations of the Onagawa Unit 2 reactor in 2020-21 following significant safety improvements.

    Image result for onagawa nuclear power plant

    Look at the Great Seawall in the front
    2011 மார்ச் 11 ஆம் நாளன்று நேர்ந்த 9 ரிக்டர் பூகம்பத்தாலும், சுனாமிப் பேரலைகளாலும் ஜப்பான் மக்கள் பட்ட மாபெரும் இழப்புகள், இடர்கள்,  புகுஷிமா அணுமின் உலைகள் பெற்ற சிதைவுகள், கதிரடிப்புகள் உலக மாந்தரைப் பேரளவு அதிர்ச்சிக்குள் தள்ளியது.  புகுஷிமா அணுமின் உலைகள் வெடிப்பு, எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீக்கம், கசிவு  கதிரியக்கப் பெருக்கம் அனைத்தும் பூகம்பத்தால் தூண்டப் பட்டாலும்,  அவை இயற்கைப் பேரிழப்பு அல்ல என்பதுதான் என் கருத்து.  முழுக்க முழுக்க அவை மனிதரால் உண்டான மாபெரும் தவறுகள், தவிர்க்கக் கூடிய தவறுகள், முன் எதிர்பார்ப்புடன் தடுத்திருக்க முடியும் தவறுகள் என்பது என் முடிவு.
                              – கியோஷி குரோகவா [தலைவர், புகுஷிமா அணுமின் உலை விபத்துகள்                                                                  தனிப்பட்ட உளவு அறிக்கை]

    2011 மார்ச்சில் நேர்ந்த பூகம்பச் சுனாமிப் பேரழிகளால் 20,000 ஜப்பானியர் உயிரிழந்தார் / காணாமல் போனார்.  அதனால் எழுந்த பூதப் பேரலைகள் எதிர்பாராத உயரம் 30 மீடர் [100 அடி].  புகுஷிமாவில் அணுமின் உலைகள் நிறுத்தம் ஆயினும், வெப்பத் தணிப்பு நீரின்றி எரிக்கோல்கள் உருகின.  அதனால் கதிரியக்கம் பெருகிக் கசிந்து சூழ்வெளியிலும், கடல் வெள்ளத்திலும் கலந்தது.  ஆனால் பூகம்ப மையத்துக்கு [Epicenter]  அருகில் இருந்த ஓனகாவா  அணுமின் உலைகள் நிறுத்தமாகி, எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரைத் தொடர்ந்து பெற்றதால், அவை உருகவில்லை.  கதிரியக்கம் சூழ்வெளியில் கசியவில்லை.  அடித்த சுனாமி அலை உயரம் 14.3 மீடர் [48 அடி].
    ஓன்காவாவின் இரண்டு அணுமின் உலைகளும் சற்று உயரத்தில் கட்டப்பட்டுள்ளன.  புகுஷிமா அணு உலைபோல் ஓனகவா அணு உலையும் “கொதிநீர் அணு உலையே [Boiling Water Reactor (BWR)].

    Related image

    அணு உலைகள் முன் கட்டப்பட்ட 800 மீட்டர் நீளம், 29 மீட்டர் உயரம் உள்ள சுனாமி தடுப்புச் சுவர்.

    சுனாமிப் பேரழிவுகள் மீண்டும் ஏற்படாவண்ணம், தடுப்பு முறைகள், அபாயத் தவிர்ப்பு ஏற்பாடுகள், அபாய மின்சாரச் சாதனங்கள், எரிக்கோல் வெப்பத் தணிப்பு அமைப்புகள் நிதி செலவழித்து கட்டுமானம் ஆயின.  அத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய 3.1 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டது. முக்கியமாக சுனாமி பேரலைத் தடுப்புச் சுவர் நீளம் : 800 மீடர், உயரம் : 29 மீடர் [ 2600 அடி X 90 அடி], கட்டப் பட்டது. ஜப்பான் அணுவியல் கட்டுப்பாடு ஆணைகம் 2019 நவம்பரில் ஓனகவா மீண்டும் இயங்கலாம் என்று அனுமதி அளித்தது.

    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    புகுஷிமா விபத்துக்குப் பிறகு ஏழாண்டுகளில் உலக அணு மின்சக்தி இயக்கப் பேரவை வடித்த மேம்பாட்டு நெறிப்பாடுகள்

    Posted on March 24, 2019

    [ கட்டுரை – 2 ]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++

    1. http://afterfukushima.com/tableofcontents
    2. http://afterfukushima.com/book-excerpt
    3. https://youtu.be/YBNFvZ6Vr2U
    4. https://youtu.be/HtwNyUZJgw8
    5. https://youtu.be/UFoVUNApOg8
    6. http://www.cornell.edu/video/five-years-after-fukushima-lessons-learned-nuclear-accidents
    7. https://youtu.be/_-dVCIUc25o
    8. https://youtu.be/kBmc8SQMBj8
    9. https://www.statista.com/topics/1087/nuclear-power/
    10. https://www.statista.com/statistics/238610/projected-world-electricity-generation-by-energy-source/
    11. https://youtu.be/ZjRXDp1ubps
    12. https://www.thinkingpower.ca/PDFs/NuclearPower/NP_3_2_Crawford.pdf

    முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமா வின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, பேரரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலை களில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் அணு மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

    உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடங்கள் என்று கருதியே இயக்கி வருகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங் கள் தேவைப்படு கின்றன.  அதுபோல் ஓர் அணுமின்சக்தி நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

    கட்டுரை ஆசிரியர்

    தற்போது முப்பதுக்கு மேற்பட்ட உலக நாடுகளில் 447 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) மின்சார ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டு களில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

    உலக அணு மின்சக்தி இயக்கக் கண்காணிப்புக் கூட்டுப் பேரவை [ WANO -World Association of Nuclear Operators ] விதித்த மேம்பாடு நெறி முறைகள்

    2011 புகுஷிமா பெரு விபத்துக்குப் பிறகு, பாடங்கள் கற்று நான்கில் ஒரு தலையகமாக இருக்கும் இங்கிலாந்து லண்டன்  வானோ பேரவையில் வடிக்கப்பட்ட மேம்பாட்டு நெறிப்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.  அவை சிக்கலானவை, சிரமமானவை, சவாலானவை.  அவற்றை நிறைவேற்ற மிக்க நிதிச் செலவும், நேரச் செலவும் ஏற்படும். அவற்றுக்கு மெய் வருந்திய உழைப்பும், குறிப்பணியும் அவசியம் என்று, அவற்றை வெளியிட்ட வானோ ஆளுநர், பீட்டர் புரோசெஸ்கி சொல்கிறார்.

    1.  புகுஷிமா விபத்தில் கற்றுக் கொண்ட பாதுகாப்புப் பாடப் பணிகள் உலக முழுமையாக சுமார் 6000.
    2. அவற்றுள் முக்கியமானவை :  அபாய நிகழ்ச்சி காப்பு வினைகள்,  அபாய நிகழ்ச்சி உதவிகள், அபாய நிகழ்ச்சி பராமறிப்பு வினைகள், அபாய நிகழ்ச்சி அறிவிப்பு முறைகள், கதிரியக்க திரவம் சேமிப்புக் கலன்கள், பயிற்சி பெற்ற ஏராளமான பணியாளர், தோழ நாடுகள் முதல் உளவு, அடுத்த உளவு, முழு உளவு, ஆய்வு அறிக்கை வெளியீடு. வானோ உலக நாட்டு உளவு & அறிக்கை வெளியீடு.

    As of November 28, 2016 in 31 countries 450 nuclear power plant units with an installed electric net capacity of about 392 GW are in operation and 60 plants with an installed capacity of 60 GW are in 16 countries under construction.

    Country

    IN OPERATION

    UNDER CONSTRUCTION

    Number

    Electr. net output
    MW

    Number

    Electr. net output
    MW
    Argentina

    3

    1.632

    1

    25

    Armenia

    1

    375

    Belarus

    2

    2.218

    Belgium

    7

    5.913

    Brazil

    2

    1.884

    1

    1.245

    Bulgaria

    2

    1.926

    Canada

    19

    13.524

    China

    36

    31.402

    20

    20.500

    Czech Republic

    6

    3.930

    Finland

    4

    2.752

    1

    1.600

    France

    58

    63.130

    1

    1.630

    Germany

    8

    10.799

    Hungary

    4

    1.889

    India

    22

    6.225

    5

    2.990

    Iran

    1

    915

    Japan

    43

    40.290

    2

    2.650

    Korea, Republic

    25

    23.133

    3

    4.020

    Mexico

    2

    1.440

    Netherlands

    1

    482

    Pakistan

    4

    1.005

    3

    2.343

    Romania

    2

    1.300

    Russian Federation

    36

    26.557

    7

    5.468

    Slovakian Republic

    4

    1.814

    2

    880

    Slovenia

    1

    688

    South Africa

    2

    1.860

    Spain

    7

    7.121

    Sweden

    10

    9.651

    Switzerland

    5

    3.333

    Taiwan, China

    6

    5.052

    2

    2.600

    Ukraine

    15

    13.107

    2

    1.900

    United Arab Emirates

    4

    5.380

    United Kingdom

    15

    8.918

    USA

    99

    98.868

    4

    4.468

    Total

    450

    391.915

    60

    59.917

    Nuclear power plants world-wide, in operation and under construction, IAEA as of 27 November 2016

    அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

    புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு.  அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

    1. https://youtu.be/CPeN7GhTpz4
    2. https://www.thegreenage.co.uk/cos/nuclear-power-in-france/
    3. https://youtu.be/4YgmCu7dfS4
    4. https://www.dw.com/en/france-sticking-with-nuclear-power/av-38397323
    5. https://www.businessinsider.com/countries-generating-the-most-nuclear-energy-2014-3
    6. https://www.youtube.com/watch?v=TZV2HRKNvao
    7. https://www.youtube.com/watch?v=HMrQJoN-Ks4
    8. https://www.youtube.com/watch?v=kr4mFLws3BM
    9. https://www.youtube.com/watch?v=YfulqRdDbsg
    10. https://www.youtube.com/watch?v=Hn-P3qnlB10

    ++++++++++++++++++++++++

    பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

    BBC News (June 23, 2011)

    Image result for nuclear power in france

    ஈரோப்பியன் கூட்டுறவு நாடுகளில் உள்ள 143 அணுமின் நிலையங் களில் பிரென்ச் அணுமின் நிலைய எண்ணிக்கை : 53 (40%).  அவற்றின் மின்சக்தி பரிமாற்றம் : 75% பங்கு.  பிரென்ச் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி “பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்திலும் புகுஷிமா விபத்துக்களை முன்னிட்டு ஆழ்ந்த பாதுகாப்பு இயக்க உளவுகள் செய்யப் படும்.  ஆயினும் ஜெர்மனி, இத்தாலி, சுவிட்ஜர்லாந்து ஆகிய அண்டை நாட்டு அரசாங்கங்கள் போன்று பிரான்ஸ் இயங்கும் அணுமின் நிலையங்களை நிரந்தரமாய் மூடத் தடை விதிக்காது,” என்று அறிவித்தார்.

    BBC News (May 30, 2011)

    Image result for nuclear power in france

    பிரான்ஸ் நாட்டு அணுமின்சக்தி இயக்கத் திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள்.

    2018 நவம்பர் அறிப்பின்படிக் கடந்த 50 ஆண்டுகளாக

    1. பிரான்ஸ் தேசம் தற்போது தேவையான மின்சக்தி உற்பத்தியில் 75% அணுசக்தி மூலமாக பாதுகாப்பு முறையில் வெற்றிகரமாகப் பெற்று வருகிறது.  2035 ஆண்டுக்குள் அது 50% ஆகக் குறைக்கப்படும்.  அதாவது பிரான்ஸில் 17 பழைய அணுமின்சக்தி நிலையங்கள் 2035 ஆண்டுக்குள் நிறுத்தப் படும்.
    2. உலகத்திலே பேரளவு மின்சக்தி ஏற்றுமதி தொடர்ந்து செய்யும் நாடுகளில் பிரான்ஸ் முன்னணியில் நிற்கிறது. காரணம் மலிவான நிதியில் மின்சக்தி உற்பத்தியை பிரான்ஸ் செய்ய முடிகிறது.  அதலால் ஆண்டுக்கு மூன்று பில்லியன் ஈரோ [ 3.4 பில்லியன் டாலர் : ] பிரான்சுக்கு வருமானம் வருகிறது.
    3. கடந்த 50 ஆண்டுகளாக பிரான்ஸ் அணுவியல் துறை நுணுக்க சாதனங்கள் விருத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளது.  குறிப்பாக அணுவியல் எரிக்கரு உற்பத்தி ஏற்றுமதியில் செல்வாக்கு அடைந்துள்ளது.
    4. அத்துடன் சுமார் 17% பங்கு மின்சக்தி அணுவியல் எரிக்கரு மீள் சுழற்சியில் [Recycled Nuclear Fuel] கிடைக்கிறது.

    +++++++++++++

    Related image

    French nuclear power reactors

    பிரான்ஸ் எரிசக்தி உற்பத்தி மூல எருக்கள் [Energy Sources] 

    2016 ஆண்டில் பிரான்சின் மின்சக்தி ஆற்றல் உற்பத்தி 556 TWh [ terra watt hours [Gross].

    1. அதில் அணுமின்சக்தியின் பங்கு : 72% [403 TWh].
    2. நீரழுத்த மின்னாற்றல் : 12%  [65 TWh],
    3. இயல்வாயு + நிலக்கரி வெப்ப மின்சக்தி 8% [45 TWh];
    4. சூரியக்கதிர் + காற்றாற்றல் :  5% [ 31 TWh ]
    5. அதாவது பிரான்ஸ் மொத்தத் தேவை மின்சக்தி : 442 TWh [6,600 KWh/cappit] : கி.வாட் ஹவர் / காப்பிட்டா.
    6. 2013 இல் வீட்டு மின்சார விலை அளவு : 8 சென்ட்/கிலோவாட் ஹவர்.  [cents/Kwh]

    French nuclear power reactors

    Class Reactor MWe net, each Commercial operation
    900 MWE BLAYAIS 1-4
    910
    12/81, 2/83, 11/83, 10/83
    BUGEY 2-3
    910
    3/79, 3/79
    BUGEY 4-5
    880
    7/79-1/80
    CHINON B 1-4
    905
    2/84, 8/84, 3/87, 4/88
    CRUAS 1-4
    915
    4/84, 4/85, 9/84, 2/85
    DAMPIERRE 1-4
    890
    9/80, 2/81, 5/81, 11/81
    FESSENHEIM 1-2
    880
    12/77, 3/78
    GRAVELINES B 1-4
    910
    11/80, 12/80, 6/81, 10/81
    GRAVELINES C 5-6
    910
    1/85, 10/85
    SAINT-LAURENT B 1-2
    915
    8/83, 8/83
    TRICASTIN 1-4
    915
    12/80, 12/80, 5/81, 11/81
    1300 MWE BELLEVILLE 1 & 2
    1310
    6/88, 1/89
    CATTENOM 1-4
    1300
    4/87, 2/88, 2/91, 1/92
    FLAMANVILLE 1-2
    1330
    12/86, 3/87
    GOLFECH 1-2
    1310
    2/91, 3/94
    NOGENT S/SEINE 1-2
    1310
    2/88, 5/89
    PALUEL 1-4
    1330
    12/85, 12/85, 2/86, 6/86
    PENLY 1-2
    1330
    12/90, 11/92
    SAINT-ALBAN 1-2
    1335
    5/86, 3/87
    N4 – 1450 MWE CHOOZ B 1-2
    1500
    12/96, 1999
    CIVAUX 1-2

    1495

    1999, 2000
    Total (58)
    63,130

    Differences in net power among almost identical reactors is usually due to differences in cold sources for cooling

    “இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

    பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)     


    “மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

    ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

    ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

    ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

    நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமை யாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்தி ருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக் குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

    லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

    “விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

    விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

    இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப் பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

    அணுமின் நிலைய ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுகள் வற்புறுத்தும் புதிய பாதுகாப்பு விதிகள்

    21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான உளவு விதியை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப்படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணுசக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்துள்ள முடிவுகளைக் கீழே காணலாம் :

    புகுஷிமா அணுமின் உலை விபத்துச் சிக்கல்கள் போல் மீண்டும் நேராதிருக்க ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுத் தலைவர், யுகியா அமானோ (Yukiya Amano, Head of UN Watchdog) அகில உலக அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஆழ்ந்து உளவி 18 மாதங்களுக்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.  இந்த அறிவிப்பை முன்னிட்டு 150 உலக நாடுகள் வியன்னா அகில் நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) நிறுவகத் தளத்தில் கூடப் போகின்றன. மேலும் அவர் கூறியது: புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துகள் பொது மக்களைப் பேரளவில் பயமுறுத்தி உள்ளதால், அவருக்கு நேர்மையாய்ப் பதிலளிக்க வேண்டிய கடமையும் IAEA வுக்கு நேர்ந்திருக்கிறது.  அணுமின் நிலையங்களின் அபாயப் பாதுகாப்பு முறைகள் மீது பொது நபருக்கு நம்பிக்கை போய்விட்டது.  ஆதலால் IAEA அணுமின் நிலைய இயக்க அதிகாரிகளுக்குக் கடுகையான கண்காணிப்பு விதிகளை விடுத்து அவற்றை எல்லா அணுமின் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.

    முடிவுரை:   பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்பதாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

    (தொடரும்)

    ***************

    தகவல்:

    1.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

    2. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

    3. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

    4.  Nuclear {Power in Japan (March 30, 2011)

    5. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

    6 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

    7. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

    8.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

    9.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

    10. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

    11. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

    12. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

    13. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

    14. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

    15 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant(Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

    16. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

    17. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

    18. BBC News : Europe, French Nuclear Policy  (May 31, 2011)

    19 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

    20. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

    21. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

    22 Wikipedea http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors (List of World Nuclear Reactors) (June 8, 2011)

    23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011)

    24. Nuclear Watchdog wants new safety checks after Fukushima (June 20, 2011)

    25. BBC News : New UK Nuclear Plant Sites Named  (June 23, 2011)

    26. https://www.japantimes.co.jp/news/2018/03/09/national/fukushima-no-1-cleanup-continues-radioactive-water-rumors-also-prove-toxic/#.XI0k

    27.  https://www.theguardian.com/environment/2018/jun/03/was-fallout-from-fukushima-exaggerated

    28. https://www.iaea.org/newscenter/focus/fukushima/status-update  [March 14, 2019]

    29. https://www.fairewinds.org/fukushima-latest-updates  [January 18, 2019]

    30. http://www.world-nuclear.org/information-library/country-profiles/countries-a-f/france.aspx  [November 2018]

    31http://www.nuclearpowerdaily.com/reports/Glowing_results_for_nuclear_power_at_Frances_EDF_999.html  [February 15, 2019] 

    32. https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_France  [March  10, 2019]

    33. http://www.cornell.edu/video/five-years-after-fukushima-lessons-learned-nuclear-accidents

    34.  https://www.japantimes.co.jp/news/2018/03/29/national/seven-years-radioactive-water-fukushima-plant-still-flowing-ocean-study-finds/#.XJaYFR-JK70  [February 21, 2018]

    35. https://www.statista.com/statistics/268154/number-of-planned-nuclear-reactors-in-various-countries/

    36. https://www.statista.com/topics/1087/nuclear-power/

    37. https://www.statista.com/statistics/238610/projected-world-electricity-generation-by-energy-source/

    38. https://www.iaea.org/newscenter/news/iaea-releases-country-nuclear-power-profiles-2017

    39. https://world-nuclear.org/getmedia/b392d1cd-f7d2-4d54-9355-9a65f71a3419/performance-report.pdf.aspx  [WANO 2018 REPORT]

    40. http://www.world-nuclear-news.org/RS-WANO-reports-on-post-Fukushima-improvements-27061803.html  [June 27, 2018]

    41. https://www.thinkingpower.ca/PDFs/NuclearPower/NP_3_2_Crawford.pdf  [WANO – WORLD NUCLEAR POWER WATCH DOG]

    42. https://www.euronuclear.org/info/encyclopedia/n/nuclear-power-plant-world-wide.htm   [March 24, 2019]

    43. https://www.japantimes.co.jp/news/2019/11/27/national/nuclear-watchdog-restart-reactor-march-2011-tsunami/#.XeKwFZqJKHs

    44.https://thebulletin.org/2014/03/onagawa-the-japanese-nuclear-power-plant-that-didnt-melt-down-on-3-11/

    45. https://en.wikipedia.org/wiki/Onagawa_Nuclear_Power_Plant  [October 12, 2019]

    46. http://www.asahi.com/ajw/articles/AJ201911290036.html  [November 29, 2019]

    ************************

    Share
  • (Peer Reviewed) சித்தர் சிவவாக்கியர்  ஓர் சமூகச் சீர்திருத்தவாதி

    (Peer Reviewed) சித்தர் சிவவாக்கியர் ஓர் சமூகச் சீர்திருத்தவாதி

    முனைவர் சொ. அருணன்
    முனைவர் பட்ட மேலாய்வாளர்,
    தமிழ்ப் பண்பாட்டு மையம்,
    அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3

    முன்னுரை

    இந்தியத் திருநாட்டின் பெருமைகளுக்கும் சிறப்புகளுக்கும் முழுமுதற் காரணமாக விளங்குவது தமிழ் மரபு. தத்துவ, ஆன்மீக, சமுதாயக் கொடைகளை அது நிறையவே இந்தியாவுக்கும் உலகுக்கும் வழங்கியிருக்கிறது. அதனால்தான் பாரதியார்,

    எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை

    இந்தியா உலகிற் களிக்கும்[1]

    எனத் தமிழ்மொழி(வழி)யில் கூறி அறிமுகப்படுத்தினார்.

    பாரதியார் குறிப்பிடும் அமரநிலை என்பது சாவாக்கலையாகிய சித்த குணமேயாகும். சித்தர்கள் தமிழ்மரபு வேர்களில் கிளைத்த விழுதுகளாக விளங்குபவர்கள். இந்தச் சித்தநிலை யாவர்க்கும் கிடைக்க வேண்டியது என்பதே சித்தர்களின் நோக்கமாக இருந்துள்ளது. அவர்கள் சித்தநெறியைப் பாமரனுக்கும் புரியும்படி எடுத்துரைத்து  வழிகாட்டினார்கள். அவர்களுள் சித்தர் சிவவாக்கியர் மிக எளிமையாகவும், மக்களோடு மக்களாகக் கலந்தும் இந்தநெறியைப் போதித்து வந்தார். அவரைச் சமூகச் சீர்திருத்தவாதியாக இக்கட்டுரை அறிமுகப்படுத்துகிறது.

    யார் சித்தர்கள்?

    சித்தர் என்ற சொல்லுக்கான பொருளை உணர்த்தும் பிறசொற்கள் சங்ககால இலக்கியங்களில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்திலும்[2], திருக்குறளிலும்[3] பயின்று வரும் நிறைமொழி மாந்தர் என்ற தொடர், சித்தர்களையே குறிப்பிடுகிறது.

    நிறைமொழி மாந்தர் என்னும் தொல்காப்பியத் தொடருக்கு உரை கூறும் பேராசிரியர், சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையவர்[4] என்கிறார்.

    புறநானூற்றுப் பாடலில் பெறப்படும் திறவோர் காட்சி[5] என்ற தொடர் சித்தர் அனுபவம் எனக் கருதப்படுகிறது. சித்து எனப்படும் இயற்கைகடந்த அற்புதச் செயல்களைப் பற்றிய குறிப்பு, குறுந்தொகைப் பாடல்களில் காணப்படுகிறது. நிறைந்த ஆற்றல்களும் இயற்கை கடந்த மீவியல் செயல்களுமான பூமியைத் தோண்டி உள்ளே, புகுதல், ஆகாயத்தின்கண் ஏறுதல், கடல்மேல் காலால் நடத்தல் ஆகியவற்றைச் சித்தர்களுக்குரிய அற்புதங்களாகக் குறிப்பிடுவர்.

    தமிழ்மரபு சித்தர்களைப் பதினெண்மராக அடையாளம் காட்டுகிறது. ஆனால் இந்தப் பதினெண்மரும் தொகுப்பிற்குத் தொகுப்பு வேறுபடுகிறார்கள் எனினும் பதினெண்மர் என்னும் தொகையில் மாறுபாடில்லை. ஆனால் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டையும் கடந்து விடுகிறது. இவ்வகையில் சித்தர்களில் போற்றுதற்குரியவராகவும் சிறப்பிடம் பெறுபவராகவும் விளங்குபவர் சித்தர் சிவவாக்கியர் ஆவார். காரணம் அவர் அற்புதங்கள் செய்வதோடு நின்று விடாமல் மானுடச் சிந்தனைகளை முன்னிறுத்திய சமூகச் சீர்திருத்தவாதியாகவும் விளங்கியதே எனலாம்.

    கருவிலே திருவுடையார்

    தோன்ற புகழொடு தோன்றியவராகக் கருவிலே திருவுடையவராக அவதரித்தவர் சித்தர் சிவவாக்கியர். சிவசிவா என்ற ஒலியுடன் நிலத்தில் பிறந்தவர்[6] ஆதலால் சிவவாக்கியர் எனப் பெயர் பெற்றார். திருவள்ளுவர் எழுதிய நூலை வள்ளுவம் என வழங்குதல் போலவே சிவவாக்கியர் இயற்றிய பாடல்களைச் சிவவாக்கியம் என்றே வழங்குகின்றனர்.

    சிவாயம் என்ற சொல்லை மிகுதியாகப் பயன்படுத்திச் சிவக் கொள்கையும், சித்தநெறியும் பூண்டு நிறைந்தவர் சிவவாக்கியர். ஆனபோதும் பரசிவ வெள்ளத்திலேயே மூழ்கிக் களித்திருந்தாலும் சமூகத்தில் நிலைத்திருந்த மடமைகளைக் கண்டு சாடும் சீர்திருத்தவாதியாகவே சிவவாக்கியர் விளங்கினார்.

    பிற்காலச் சமூகச் சீர்திருத்தவாதிகள் மேற்கொண்ட பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடப் பழக்கவழக்கங்கள் சாடல் ஆகியவற்றுக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் சித்தர் சிவவாக்கியரேயாவார்.

    தீண்டாமைக்கு எதிர்க்குரல்

    சமய ஒழுக்கங்களின் மீது படிந்த கறையே தீண்டாமை ஆயிற்று. ஒன்றே குலம் ஒருவனே தேவன்[7] எனத்தோன்றிய சமயக் கோட்பாடுகள் நாளடைவில் அயலார் தலையீடுகளால் தனக்கான தனித்த பக்தர்களைக் கொண்ட சங்கங்களாக மாறத் தொடங்கின. தொடர்ந்து அவை, சாத்திரம் சம்பிரதாயம் என்னும் பெயர்களில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டன. தமிழியத்திற்கும் இந்தியத்திற்கும் இது முரணான சமூக வழக்கு என்பதை,

    முன்னேற்றம் அடைந்த வகுப்பார் சில உரிமைகளைத் தமக்கு மட்டுமே உரியதாக வைத்துக் கொண்டனர். அவர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்ற கற்பனையில் இறுமாப்புக் கொண்டனர். தகுதியேதுமின்றிப் பிறப்பால் தங்களை உயர்ந்தோர் எனக் கூறிக்கொண்டோர்களின் அறியாமையும் தன்னலப்போக்கும் இறுமாப்பும் சமூக வாழ்வைக் குன்றச் செய்து விட்டன[8] என்கிறார் விவேகானந்தர்.

    இதை முன்பே கடுமையாகச் சாடியவர் சித்தர் சிவவாக்கியர் ஆவார். சிவவாக்கியர் மேட்டிமையோரின் தனித்துவமான அடையாளங்கள் சிலவற்றைக் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்கியவர். கோவில் வழிபாடு, குடுமி வைத்தல், பூணூல் அணிதல், நீராடல், எச்சில் குறித்த கட்டுப்பாடுகள், புலால் உண்ணாமை, வேதம் ஓதுதல், தீட்டுக் கருத்தியல் ஆகியன தமிழக மேட்டிமையோரின் பண்பாட்டு அடையாளங்களாகக் காட்சி அளிக்கின்றன. இப்பண்பாட்டு அடையாளங்கள் குறித்துப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிவவாக்கியர் எதிர்க்குரல் எழுப்பியுள்ளார்.[9]

    ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்

    சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை

    பேதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகாள்

    சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே[10]

    எனச் சிவவாக்கியர் சாதிமுறைகளைச் சாடுவதோடு, சடங்குகளையும் வெறுத்தொதுக்குகிறார். வேதத்தை விலக்குவதோடு மந்திரங்களை மறுத்து, ஆகமங்களையும் ஆகாதென்கிறார். மதவாதங்களையும் புறச்சடங்குகளையும் புறக்கணிக்கிறார். போலிச் செயல்களைக் கடுமையாகக் கண்டித்து, மூடநம்பிக்கைகளுக்கெதிராக முழக்கமிடுகிறார். சாதி ஆவதேதடா[11] என்று வினவும் அவர் சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பதெக்காலம்?[12] எனவும் ஆவல் உறுகிறார். அவர்தம் பாடல்கள் முழுவதும் சமயக் கொள்கைகளை விடவும் இறைவழிபாட்டை விடவும் சமூகச் சீர்திருத்தமே மேலோங்கி நிற்கிறது.

    பெண்மை போற்றிய பெருந்தகையாளர்

    ஏனைய சித்தர்கள் பெண்மையை வெறுத்தொதுக்கும் பண்போடே வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், சித்தர் சிவவாக்கியர் பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளராக விளங்கியிருக்கிறார் என்பதை அவரது வரலாற்றின் வழி உணர முடிகிறது.

    குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தனது இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்ட சிவவாக்கியர், அப்பெண்ணுக்குரிய குலத்தொழிலையே தாமும் செய்து ஏழுபருவம் இன்பம் துய்த்து வந்தார்[13] என்கிறது அவர்தம் வரலாறு.

    பெண்மையின் பெருமையை உணர்ந்தவர் சித்தர் சிவவாக்கியர். அதனால் பெண்ணின் உடல்சார்ந்த இயற்கைச் செயலாகிய குருதிப்போக்கைச் சுட்டிக்காட்டி அவளைத் தீட்டு என வெறுக்கும் மடமையைச் சிவவாக்கியர் முற்றிலும் உணர்ந்து எதிர்க்கிறார்.

    தூமைநீர் என்று சொல்லப்படும் அக்குருதிப் போக்கின் விளைவே மானுடத்தின் தோற்றக்களன். அதனைத் தீட்டு என்று புறந்தள்ளும் வேதியரை நோக்கி,

    மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்

    மாதமற்று நின்றலோ வளர்ந்துரூப மானது

    நாதமேது வேதமேது நற்குலங்கள் ஏதடா

    வேதமோதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா[14]

    எனச் சினந்து சீறுகிறார்.

    இவ்வாறெல்லாம் தீட்டின் எதிர்ப்பைத் தீவிரமாக எதிர்க்கும் சிவவாக்கியரிடம் வழக்கமாகப் பிற சித்தர்களிடம் எழும் மாதரைப் பழிக்கும் நிலைப்பாடு காணப்படவில்லை.[15]

    வழிபாடு – பூசை – மந்திர மறுப்பு

    சிவவாக்கியர் தனது இளமைக்காலத்தில் இறைவனைத் தரிசிக்கவேண்டி, தலங்கள்தோறும் சென்று பூவும் புனலும் சொரிந்து வழிபட்டவரே. ஆனால் சித்தநிலைக்கு எய்தியபின்னர் அவற்றை எண்ணி வருந்துகிறார். இதனை,

    பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்க ளெத்தனை

    பாழிலே செபித்துவிட்ட மந்திரங்க ளெத்தனை

    மிண்டனாய்த் திரித்தபோ திறைத்தநீர்க ளெத்தனை

    மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த தெத்தனை[16]

    என்ற பாடல்வழி உணர்த்துகிறார். மேலும் பூவும் புனலும் சொரிந்து வழிபடும் தமிழ்மரபுக்கு எதிரான அபிடேகமும், அருச்சனையும் அவருக்கு எரிச்சலையே ஊட்டியதால்,

    மாறுபட்ட மணி துலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்

    ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே

    மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்

    கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே[17]

    என்றும் சினந்து பாடுகிறார்.

    கருங்கல்லை நட்டு வழிபடும் உருவ வழிபாடு தேவைதான் எனினும், அதனை முறையோடு வழிபடாமல் சாத்திரமாகவும், சம்பிரதாயமாகவும் வழிபடும் வழிபாட்டினால் என்ன பயன் கிடைத்து விடும் என்று வினாவுகிறார்.

    நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே

    சுற்றிவந்து மொணமொணென்று சொல்லுமந்திரம் ஏதடா

    நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் ளிருக்கையில்

    சுட்டசட்டிச் சட்டுவக் கறிச்சுவை அறியுமோ?[18]

    என்று அரும்பொருள் தந்து உருவ வழிபாட்டின் பயனற்ற தன்மையைப் புலப்படுத்துகிறார்.

    உருவநிலையிலும் அருவநிலையிலும் அருவுருவ நிலையிலும் வைத்து இறைவனைப் போற்றும் மரபு சமய உலகினில் உண்டு. அதேபோது, உருவ வழிபாட்டின் மூலமாக மக்களை ஏமாற்றிப் பணம் பண்ணுவதும் ஆன்மீகத்திற்குப் புறம்பான தீங்குகள் புரிவதும் ஆகிய நிலை கண்டு வெதும்புவது சிவவாக்கியரின் இயல்பாக இருப்பதைக் காணலாம்.[19]

    நிறைவாக

    சித்தர் சிவவாக்கியர் தம் பாடல்கள் முழுவதிலும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளயே முன்னிறுத்திப் பாடியுள்ளார். இதற்காக அவர் எளிதான சொற்களையே கொண்டு மொழியாளுமை செய்திருக்கிறார். இயற்கையான எங்கும் காணக்கூடிய இயற்கைப் பொருள்களிலிருந்து வெளிப்படும் அவர்தம் உவமைகள் சமூகத்தின் புரையோடிக் கிடக்கும் இருளின்மீது அனல் வெள்ளமெனப் பாய்ந்து அதை எரிக்கின்றது.

    எழுத்தறிவு இல்லாத பாமர மக்களுக்கும் கூட உயர்ந்த யோகச் செய்திகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களது புழக்கத்திலுள்ள எளிய சொற்களையே தம் பாடல்களில் கையாண்டுள்ளார்.

    ஐம்புலனை வென்றவருக்கு அன்னமிடச் சொல்லி, பெண்மையைப் போற்றுகிறார். தீட்டு எனப் பெண்களை விலக்கி வைப்போரைத் திட்டுகிறார். இறைவனை வேண்டித் தவமிருக்கும் தவசிகளுக்கு இல்லறம் தடையன்று என்று நேர்மறைச் சிந்தனையை எழுப்புகிறார். சாதி சமய மறுப்புகளைத் துணிந்து கூறி, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் பேதத்தை ஒழித்து, மூடப் பழக்க வழக்கங்களைக் கண்டித்து, சமூகச் சீர்திருத்தத்துக்கும் முன்னேற்றத்துக்கும் அடிகோலுகிறார்.

    யோகத்தால் ஞானமெய்தி எல்லோரும் இன்புற்றிருக்க விழையும் சீர்திருத்தச் சிந்தனையாளராக, சமுதாயச் சிற்பியாக சித்தர் சிவவாக்கியர் திகழ்கிறார் என்பது இக்கட்டுரையின் வழி தெளிவுபடுத்தப் பெறுகிறது.

    துணைநூற்பட்டியல்

    1. இராமசுப்பிரமணியம், வ.த., (உ.ஆ) புறநானூறு மூலமும் தெளிவுரையும், திருமகள் நிலையம், சென்னை, மு.ப. 2000,
    2. கருணாநிதி ஆ., முனைவர்,  (தொ.ஆ)  சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை, பாவை பதிப்பகம், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை  மு.ப. 2007.
    3. குன்றக்குடி அடிகளார், தவத்திரு, (உ.ஆ) திருக்குறள் உரை, அருள்நெறிப் பதிப்பகம், குன்றக்குடி, மு.ப. 2005
    4. சிவவாக்கியர், சிவவாக்கியம், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, மு.ப.  1904
    5. திருமூலர், திருமந்திரம், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை பிராட்வே,  சென்னை – 600108,  மு.ப.2004
    6. தொல்காப்பியர், தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் புத்தக நிலையம், 31. சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 1, மு.ப. 1999,
    7. பாண்டியன், அ., முனைவர், சித்தர் சிவவாக்கியர், 321, மூன்றாம் முதன்மைச் சாலை, மகாவீர் நகர், புதுச்சேரி – 8, மு.ப. 2015
    8. பாரதியார், பாரதியார் கவிதைகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை பிராட்வே,  சென்னை – 600108,  மு.ப.2011
    9. மாணிக்கவாசகம், இரா. நம்நாட்டுச் சித்தர்கள், அன்னை அபிராமி அருள் வெளியீடு, ………., 1978.
    10. விவேகானந்தர் சுவாமி, , விவேகானந்தர் ஞானதீபம், தொகுதி 8, ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர் சென்னை, மு.ப. 2001.

    அடிக்குறிப்புகள்

    [1] . பாரதியார், பாரதியார் பாடல்கள், பாரதசமுதாயம் பாடல்..

    [2]. தொல்காப்பியர், தொல்காப்பியம், பாடல். 1484

    [3] . திருவள்ளுவர், திருக்குறள், பாடல். 28

    [4] . முனைவர் அ.பாண்டியன், சித்தர் சிவவாக்கியர், ப.34

    [5] .புறநானூறு 192 8-11

    [6]. மாணிக்கவாசகம், இரா. நம்நாட்டுச் சித்தர்கள், ப.173

    [7] திருமூலர், திருமந்திரம், பா.300

    [8] .சுவாமி விவேகானந்தர், விவேகானந்தர் ஞானதீபம் – 8, ப.400

    [9] .முனைவர் ஆ.கருணாநிதி, (தொ.ஆ) சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை, பக்.149-150

    [10] .சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.112

    [11] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.47

    [12] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.126

    [13]. அ.பாண்டியன், முனைவர், சித்தர் சிவவாக்கியர், பக்.46-47.

    [14] சிவவாக்கியர், சிவவாக்கியம், பாடல்36.

    [15] அ.பாண்டியன், முனைவர், சித்தர் சிவவாக்கியர், ப. 211.

    [16] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.29

    [17] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.34

    [18] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.520

    [19] அ.பாண்டியன், சித்தர் சிவவாக்கியர், ப.205

    —————————————————————————————————-

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் சித்தர் மரபு செழுமையான வளர்ச்சியைக் கொண்டு திகழ்கின்றது. பதினெண் சித்தர்கள் என்ற வரையறை ஆய்வாளர்கள் பலராலும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் பதினெண் என்ற பட்டியல் மாறுபாடு உண்டு. எனினும் சித்தர்களில் சிவவாக்கியருக்கு என்று தனித்த இடம் உண்டு. சிவவாக்கியரின் சிந்தனைகள் பிற சித்தர்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு அமைகின்றன என்பதைக் கட்டுரை விளக்க முற்படுகின்றது. குறிப்பாக மக்களிடையே மண்டிக்கிடந்த பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கு எதிரான கலகக் குரலை முன்வைத்ததில் சிவவாக்கியர் எந்தகைய நிலையில் செயல்பட்டுள்ளார் என்பதைக் கட்டுரையாளர் சான்றுகளோடு விளக்கியிருக்கின்றார்.

    —————————————————————————————————-

    Share
  • வேண்டல்!

    வேண்டல்!

    ஏறன் சிவா
     
    காலத்தால் அழியாத பொன்னும் வேண்டேன்!
    கவலைகளே அற்றதொரு நிலையும் வேண்டேன்!
    சோலைக்கு நடுவேநல் மனையும் வேண்டேன்!
    துள்ளியங்கு வந்துதொடும் தென்றல் வேண்டேன்!
    ஆல்போல பல்லாண்டு வாழ்தல் வேண்டேன்!
    அறிவுலகில் மேதையென புகழும் வேண்டேன்!
    ஞாலத்தை உயர்த்துகின்ற நற்சொல் ஒன்றை
    நற்றமிழில் நான்படைக்க வேண்டு மம்மா!
     
    கனிச்சாற்றை முப்பொழுதும் சுவைத்தல்  வேண்டேன்!
    கண்ணசைவில் நினைத்ததனை முடித்தல் வேண்டேன்!
    பனிமலையைக் காலடியில் பணித்தல் வேண்டேன்!
    படைகொண்டு வெற்றிகளைக் குவித்தல் வேண்டேன்!
    இனிமையான அழகுடைய பெண்ணி னோடு
    இன்புற்றுக் கழிக்கின்ற பொழுதும் வேண்டேன்!
    நனிசிறந்த புதுக்கருத்தைக் கொண்டு நல்ல
    தமிழ்படைக்கும் நெஞ்செனக்கு வேண்டு மம்மா!
    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 81

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 81

    நாங்குநேரி வாசஸ்ரீ

    81. பழைமை

    குறள் 801:

    பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
    கிழமையைக் கீழ்ந்திடா நட்பு

    பழைமை ங்கது என்னன்னா ரொம்ப நாள் பழகின சேக்காளி உரிமல தப்பா என்னமும் செஞ்சாலும் அதப் பெரிசாக்காம விடுததுதான்.

    குறள் 802:

    நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
    குப்பாதல் சான்றோர் கடன்

    சேக்காளிங்க உரிமையாச் செய்யுதத நட்புக்கு உறுப்புனு சொல்லுதோம். அந்த உரிமைய நெனச்சி சந்தோசப்படுதது பெரியமனுசங்களுக்கு கடம ஆவும்.

    குறள் 803:

    பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
    செய்தாங் கமையாக் கடை

    பிடிக்கலன்னாலும் பழைய சேக்காளிங்க செஞ்சத ஒத்துக்கிட்டு தானே செஞ்சது கணக்கா காட்டிக்கிடலேன்னா அம்புட்டு நாள் பழகினதுல என்ன பிரயோசனம்?

    குறள் 804:

    விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
    கேளாது நட்டார் செயின்

    தம்மேல இருக்க உரிமையில சேக்காளி கேக்காமலேயே ஒரு காரியத்த செஞ்சுபோட்டாலும் ஒத்துக்கிட்டு நடப்பாங்க புத்தியுள்ளவுக.

    குறள் 805:

    பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
    நோதக்க நட்டார் செயின்

    நாம வெசனப்படுததுமாரி வேலய சேக்காளி செஞ்சுபோட்டாம்னா அதுக்கு அறியாமை மட்டுந்தான் காரணமா.  உரிமையுந்தான்னு நெனச்சிக்கிடணும்.

    குறள் 806:

    எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும்
    தொல்லைக்கண் நின்றார் தொடர்பு

    எல்லையக் கடக்காம வரமொறையோட பழகுதவங்க, தன்னோட பழைய சேக்காளி கெடுதியச் செஞ்சாலும் அதுக்காவ ஒறவ அத்து விடமாட்டாக.

    குறள் 807:

    அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
    வழிவந்த கேண்மை யவர்

    தன்னோட சேக்காளி அழிஞ்சுபோவுதது கணக்கா கெடுதலச் செஞ்சாலும் ரொம்பகாலம் பழகினவுக அவன் மேல இருக்க நேசத்த விட மாட்டாக.

    குறள் 808:

    கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
    நாளிழுக்கம் நட்டார் செயின்

    சேக்காளி உரிமையா தப்பு செஞ்சத பொறத்தியார் எடுத்துச்சொல்லியும் கேக்காத நல்லவனுக்கு அவுக கூட சேக்க வச்சிருந்த நாளெல்லாம் வீணான நாள் ஆவும்.

    குறள் 809:

    கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
    விடாஅர் விழையும் உலகு

    பலகாலமா பழகின சேக்காளி என்னமாரி நடந்துக்கிட்டாலும் சேக்கைய கைவிடாம இருக்கவர ஒலகம் போற்றும்.

    குறள் 810:

    விழையார் விழையப் படுப பழையார்கண்
    பண்பின் தலைப்பிரியா தார்

    பழைய சேக்காளிக தப்பே செஞ்சாலும் சண்ட போடாம சேக்கயா இருக்கவன பகையாளியும் விரும்புவான்.

    (அடுத்தாப்லையும் வரும்…

    Share