நெல்லைத் தமிழில் திருக்குறள்- 89

நாங்குநேரி வாசஸ்ரீ
89. உட் பகை
குறள் 881:
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
இன்பம் தருத நெழலும் தண்ணியும் கேடு வெளைவிக்கதா இருந்தா அத கெட்டவைகளாத் தான் நெனைக்கணும். அதுகணக்காதான் சொந்தபந்தத்தோட உட்பகையும்.
குறள் 882:
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு
வாள் கணக்கா வெளிப்படையா இருக்க பகையாளியப் பாத்து பயப்படவேண்டியதில்ல. சொந்தக்காரன்மாரி பழகிட்டு மனசுக்குள்ள பகைய வச்சிருக்கவனோட ஒறவுக்கு பயந்துக்கிடணும்.
குறள் 883:
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்
உட்பகைக்கு பயந்து ஒருத்தன் தன்னயக் காத்துக்கிடணும். இல்லன்னா சோதனையான நேரத்துல பச்சப்பாண்டத்த அறுக்குத சாதனம் கணக்கா நம்மள உறுதியா அழிச்சுப்போடும்.
குறள் 884:
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்
மனசு திருந்தாத அளவுக்கு ஒருத்தனுக்கு உட்பகை உணச்சி வந்துடுச்சின்னா அது அவனச் சேந்த எல்லாரையும் பகையாளியா ஆக்கிப்போடுத அளவுக்கு கெடுதல வெளைவிச்சிப்போடும்.
குறள் 885:
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்
சொந்தக்காரனோட உட்பகை வந்துச்சின்னா அது சாவுத அளவு பல கெடுதல உண்டாக்கிப்போடும்.
குறள் 886:
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது
தங்கூட இருக்கவங்ககிட்ட பகை ஏற்பட்டிச்சின்னா அவன் அழிஞ்சு போவுதத தடுக்க யாராலயும் முடியாது.
குறள் 887:
செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி
செப்பு மூடியோட பொருந்தி இருக்கதுமாரி வெளிய பாக்கதுக்குத்தான் தோணும். அதுகணக்கா உட்பகை உள்ளவுக மனசார பொருந்தி இருக்க மாட்டாக.
குறள் 888:
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
துட்பகை உற்ற குடி
இரும்ப அரத்தால தேய்க்குதப்போ அதோட வலிம கொறையுதது கணக்கா உட்பகை உள்ளவுக குடும்பத்தோட வலிமயும் தேஞ்சு கோறஞ்சி போவும்.
குறள் 889:
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு
எள்ளோட பொளவு கணக்கா சித்தூண்டு இருந்தாலும் ஒரு குடிய அழிச்சுப்போடுத அளவு கேடு உட்பகையில இருக்கு.
குறள் 890:
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று
மனசு பொருந்தாம ஒண்ணா வாழுதது ஒரு குடிசைக்குள்ளார பாம்போட வாழுதது கணக்கா பயப்படத்தக்க விசயம்.