தனிமை
முனைவர். இரா. பேபி
மடத்துக்குளம்
நீர்த்துப் போகாத
தனிமைத் தவம்
மனத்துக்குள் இறங்கி
மௌனத்தின் பாஷையை
அறிவதற்கு இயலாமல்
காலம் சுழல்கின்றது
யாரோடும் எப்பொழுதும்
ஒட்டமுடியாமல்
பரிதவிக்கின்றது
அதனைக் கடந்துபோக
முயன்றாலும் நிழல்போல
பின்தொடர்கிறது
தாமரையிலைத் தண்ணீர்போல
ஒட்டாமல்
வாழ்விலும்
கேட்பாரற்றுக் கிடக்கிறது.
இருத்தலுக்கும் வாழ்தலுக்குமான
இடைவெளியில் வந்து
ஒட்டிக்கொள்கிறது
இருப்புக் கொள்ளாமல்
துடிக்கும்போதும்
விடமறுக்கிறது
எப்போதும் தன்
வலிய கரங்களால்
இறுக்கி நெருக்கி
மரண அவஸ்தையை
தந்து ஒவ்வொரு
நொடியிலும்
தன்இருப்பை
உணர்த்துகின்றது.
ஆயாசத்துடன்
ஏற்கும்போது
தன் இருத்தலுக்கான
அடையாளத்தை அழித்துவிடும்
என்றெண்ணி இருக்கும்போது
அழுத்தமாகப் பதித்துவிட்டுச்
செல்கிறது என்னுள்…..