Blog

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 76

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 76

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள்

    76.பொருள் செயல்வகை

    குறள் 751:

    பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
    பொருளல்ல தில்லை பொருள்

    தகுதியில்லாதவங்களக் கூட ஒசத்தி மதிக்க வைக்கது அவுக கிட்ட குவிஞ்சு கெடக்க  பணம் தான். 

    குறள் 752:

    இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
    எல்லாரும் செய்வர் சிறப்பு

    பணம் இல்லாதவுகள எல்லாரும் எளக்காரம் பண்ணுவாங்க. பணம் இருந்திச்சின்னா பெருமப் படுத்துவாங்க. 

    குறள் 753:

    பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று

    பொருள் னு சொல்லுத அணையா விளக்கு நெனச்ச எடத்துக்குப்போயி எல்லா எடஞ்சலையும் தீத்து வச்சிரும். 

    குறள் 754:

    அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்

    நல்ல வழியில கெடுதல் செய்யாம சம்பாதிச்ச பணம் தான் ஒருத்தனுக்கு அறநெறியக் காட்டி சந்தோசத்தக் கொடுக்கும்.

    குறள் 755:

    அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல்

    பொறத்தியார் மேல இரக்கம் காட்டாம, நேசம் இல்லாம சேத்த பணத்த வச்சிக்கிட்டு சந்தோசப்படாம அது கெடுதலத்தான் கொடுக்கும்னு நெனச்சி விட்டுப்போடணும். 

    குறள் 756:

    உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
    தெறுபொருளும் வேந்தன் பொருள்

    வரியும், சுங்கமும், செயிச்ச பகையாளி நாடு கட்டுத கப்பமும் ராசாவோட பொருள்கள் ஆவும். 

    குறள் 757:

    அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
    செல்வச் செவிலியால் உண்டு

    அன்புங்குத ஆத்தா பெத்த அருள் ங்குத பச்சப்புள்ள பொருள் னு சொல்லுத வளர்ப்புத்தாயல வளரக் கூடியது.

    குறள் 758:

    குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
    றுண்டாகச் செய்வான் வினை

    தன் கையில பணத்த வச்சிக்கிட்டு ஒரு காரியத்த தொடங்குதது மலை மேல ஏறி நின்னுக்கிட்டு பதனமா யானைச் சண்ட பாக்குதது போல ஆவும். 

    குறள் 759:

    செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃதனிற் கூரிய தில்

    பொருள சம்பாதிச்சி சேத்துவச்சிக்கிடணும். ஏம்னா பகையாளியோட அகராதிய (செருக்கு) அழிக்குத கூரிய அரிவாள் கணக்கா இருக்கது அதுஒண்ணுதான்.

    குறள் 760:

    ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
    ஏனை இரண்டும் ஒருங்கு

    நல்ல வழியில நெறைய பணம் சேத்தவங்களுக்கு மத்த அறமும், இன்பமும் சுளுவாக் கெடச்சிப்போடும். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • ஐயப்பன் காவியம் – 9

    ஐயப்பன் காவியம் – 9

    -இலந்தை சு. இராமசாமி

    இந்திரலோகப் படலம் – தொடர்ச்சி

    அழகெனில் இஃதே அழகெனச் சொல்லும்
    அற்புத மோகினி யாகப்
    பழகிய வள்போல் படபட விழிகள்
    பரிவுடன் அரக்கனை நோக்கக்
    குழைவொடும் ஈர்க்கும் குறுநகை யோடும்
    குறுகினள் அரக்கனின் பக்கம்
    ஒழுகிடும் வாயன் பத்மனும் பார்த்தான்
    உடன்கரம் பற்றிடப் போனான் 122

    “இருயிரு, பத்மா, ஆடலில் சிறந்தோன்
    என்பதை முன்னரே அறிவேன்
    ஒருபெரும் போட்டி ஆடுவோம் நாமே
    உன்னையும் வென்றிடு வேன்நான்
    சரிவர ஆடி என்னைநீ வென்றால்
    தந்திடுவேன் உனக் கெனையே
    பருவரை யதனைச் சரிசமப் படுத்து
    பந்தயம் தொடங்குவம் என்றாள் 123

    மரத்தினை ஒடித்தான், மலைகளைப் பொடித்தான்
    வடிவுடன் தளத்தினை அமைத்தான்
    தரத்தினில் மிகுந்த தனையவள் வெல்லச்
    சாத்தியம் இலையென நினைந்தான
    கரத்தினைத் தட்டித் தொடங்கெனச் சொன்னான்
    கால்களை தூக்கிக் குதித்தான்
    வரத்தினைப் பெற்ற செருக்கினால் பத்மன்
    மகிழ்ச்சியின் எல்லையில் நின்றான் 124

    *

    கால்களால் குதித்தாள் – இரு
    கைகளால் நொடித்தாள்- விழி
    காட்டியே நடித்தாள்-பின்
    மேல்குதிப்பதும் கீழ்குதிப்பதும்
    வேகமே பதித்தாள்- தரை
    மீதிலே மிதித்தாள் 125

    கால்களால் குதித்தான் – மரம்
    கைகளால் பொடித்தான்-கனல்
    கக்கியே குடித்தான்- பின்
    மேல்குதிப்பதும் கீழ்க் குதிப்பதும்
    வேகமே சிதைத்தான் – தரை
    வீழ்ந்திடப் புதைத்தான் 126

    முத்திரை விரித்தாள்- மிக
    மோகமாய்ச் சிரித்தாள்- விழி
    மூடியே பிரித்தாள்-பின்
    சித்திரந்தனை ஆட்டுவித்தாய்ச்
    சீக்கிரம் அசைத்தாள்- இசை
    தேனென இசைத்தாள் 127

    முத்திரை விரித்தான் – பயம்
    மூட்டிடச் சிரித்தான்-மலை
    மோட்டினைச் சரித்தான்-பின்
    தத்தரத்தரத் தத்தரத்தரத்
    தாளமே பிடித்தான் பல்லைச்
    சத்தமாய்க் கடித்தான் 128

    *

    வேகம் வேகம் வேகம் வேகம் வேகமெடுத்தாள்- தன்
    வித்தகங்கள் யாவும் காட்டி வீசி நடித்தாள்
    பாகம் பாகம் பாகம் பாகம் ஆட்டி நடித்தாள்- காணும்
    பக்க மெல்லாம் தானிருக்கும் தோற்றம் கொடுத்தாள் 129

    வேகம் வேகம் வேகம் வேகம் வேகமெடுத்தான் -தன்
    வித்தகங்கள் யாவும் காட்டி விந்தை தொடுத்தான்
    பாகம் பாகம் பாகம் ஆட்டிப் பல்லை இளித்தான் – தன்
    பக்கத்தில்தான் வெற்றியென்று பாடிக் களித்தான் 130

    வளைந்தாள் விழுந்தாள் எழுந்தாள் குழைந்தாள்
    இடுப்பில் கரம் வைத்தாள்
    நெளிந்தாள் துளைந்தாள், குனிந்தாள் நிமிர்ந்தாள்
    சிரத்தில் கரம் வைத்தாள் 131

    வளைந்தான் விழுந்தான் எழுந்தான் குழைந்தான்
    இடுப்பில் கரம் வைத்தான்
    நெளிந்தான் துளைந்தான், குனிந்தான் நிமிர்ந்தான்
    சிரத்தில் கரம் வைத்தான் 132

    *

    சடபட படபட சிரமும் வெடித்தது
    தரையோ அவனுடல் எடையில் பொடித்தது
    கடகட கடகட அகிலம் சிரித்தது
    கடுமன அரக்கரின் கருவம் மரித்தது
    எடுமெடு மெடுமென திசைகள் அதிர்ந்தன
    எரிகல் பலப்பல இறங்கி உதிர்ந்தன
    படபடபடபடவென அமரர் இறங்கினர்
    பரவசம் மிகமிகக் களியில் கிறங்கினர் 133

    -தொடரும்

    Share
  • படக்கவிதைப் போட்டி – 231

    படக்கவிதைப் போட்டி – 231

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (10.11.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. முகமது ரபியின் ஒளிப்படக்கருவி பதிவாக்கித் தந்த இப்புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 230க்குத் தெரிவுசெய்து தந்தவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். ஒளிப்பட நிபுணர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள் சென்று சேரட்டும்!

    இளைஞனின் நீலநிற வண்ணம் தீட்டிய கோலமுகம் சலனமற்றிருந்தாலும், அகத்துள் ஆயிரம் சிந்தனைகள் சிறகடித்துப் பறப்பதை உணர முடிகின்றது.

    அரியகலை நிகழ்த்தும் இவ் இளைஞனின் வாழ்வைக் கவலைகள் தின்னத் தகா! பெரிய சாதனைகள் படைக்கும் ஆற்றலைக் காலம் இவனுக்கு அளிக்க வேண்டும். இவனைப் பெற்றோர் மனம் களிக்கவேண்டும்!

    நீலவண்ணக் கண்ணனாய் ஆடிமுன்னே நின்றிருக்கும் இளைஞனின் இதய எண்ணங்களைக் கவிதைகளில் வடித்துத் தாருங்கள் எனக் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கிறேன்!

    *****

    ”உள்ஒன்று வைத்துப் புறமொன்றுபேசி வயிறு வளர்க்கும் நாடகத்தை
    உயிர்வாழ்க்கை எனக்கூறி உழன்று நாளும் நாம் திரிவதனை
    எடுத்திங்கே காட்டுதம்மா என் மனக்கண்ணாடி” என்று  வஞ்சக மனிதரின் நெஞ்சகத்தை ஆடியில் காட்டுகிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மனக்கண்ணாடி

    வீண் படாடோபம் கொண்டு
    வெற்று வார்த்தை பேசி
    நல்லவனாய்
    வல்லவனாய்
    நாலும் தெரிந்த தூயவனாய்
    நித்தம் நூறு வேடம் கொண்டு
    சுயநலப் பச்சோந்தியாய்
    பிணந்தின்னும் சாத்திரம் சொல்லித்
    தன்னுருவே தனை வெறுக்க
    உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசி
    வயிறு வளர்க்கும் நாடகத்தை
    உயிர் வாழ்க்கை எனக்கூறி
    உழன்று நாளும் திரிவதனை
    எடுத்திங்கே காட்டுதம்மா
    என் மனக்கண்ணாடி!

    அரிதாரம் தனை நீக்கித்
    தன்மானம் கொண்டு
    சுயபிம்பம் எதுவென்று
    தெளியும் நாள் எந்நாளோ?

    *****

    ”ஏடெடுத்துப் படித்ததில்லை; எழுத்தாணி பிடித்ததில்லை. எனினும், போடும் வேடம் எதிலும் இவன் பொய்யாய் நடித்ததில்லை. இன்றோ முடங்கிக்கிடக்கிறான்; விடியட்டும் இவன் வாழ்வு” என்று நன்மொழி நவில்கின்றார் திரு. யாழ். நிலா. பாஸ்கரன்.

    ஓட்டைக் கீற்றின் ஒதுக்கின் மறைவில்
    ஒருசாண் வயிற்றுக்குக் கஞ்சி வார்க்க
    ஒய்யாரமாய் ஒப்பனை செய்கிறான்
    ஓயாது உழைக்கும் ஓர் குப்பத்து ராசா

    அரியாசனம் இல்லாமலே, அரண்மனைதான் செல்லாமலே
    அரிதாரம் பூசிக்கிட்ட அவன்தானே இந்நாட்டு ராசா
    அரங்கேற்றம் ஆகின்ற அரங்கத்தில் எந்நாளுமே
    அரசாளும் மகராசன் இவன் வந்தாலே கரகோசந்தான்

    தெருவோரம்தான் இவன் அரசாங்கம்
    இரவானால்தான் நடந்தேறும் இவன் அதிகாரம்
    தெரியாத கதையாடல் இங்கேது திரைவிலகி ஒளி
    தெரிந்தால் இவனாலே உருவாகும் புதுஉலகம்!

    ஆயிரம் வழிகள் அவனுக்கு எது அடைத்தாலும் திறந்திடுவான்
    ஆயிரம் வலிகள் அவனுள்ளே ஆனாலும் சிரித்திருப்பான்
    ஆயிரம் விழிகள் அவன்மீது அதனாலே மகிழ்ந்திருப்பான்
    ஆயிரம் வாழ்த்துகள் அவைதரும் ஆனந்தவாழ்கை அவனுக்கு

    ஏடு எடுத்து படித்ததில்லை எழுத்தாணி பிடித்ததில்லை ஆனாலும்
    போடும் வேடம் எதிலும் பொய்யாய் நடித்ததில்லை
    ஆடும் கூத்தில் எங்கும் மனம் தடுமாறவிட்டதில்லை
    ஓடும் நதிபோல ஓயாமலே தாவும் இவன் ஆட்டம்

    முடிசூடா மன்னன் இவன் இ‌ப்போது முடங்கிக் கிடக்கின்றான்
    முன்எப்போதும் இல்லாமல் இப்போது மூழ்கித் தவிக்கின்றான்
    முகச்சாயம் பூசாமல் பல மாதம் முடிந்து போனது – இனி
    முடியட்டும் பகல் முளைக்கட்டும் இரவு விடியட்டும் இவன் வாழ்வு!

    *****

    ”முகம்மூடிச் செல்லுமுன்னே மனிதன் முகமூடி அணிகின்றான்; ஒப்பனையே இல்லாத இவன் நாடகம் எப்போது முடியும்?” என்று வினா எழுப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அரிதாரம்…

    பாரினில் நாம்
    பார்க்கும் முகங்களில் பல
    பொய்ப்பூச்சில் மிளிரும்
    போலி முகங்கள்..

    உண்மை முகங்களைக்
    காட்டுவதில்லை ஒருவரும்,
    முகம்மூடிச் செல்லுமுன்னே
    மனிதன் பல
    முகமூடிகளை மாட்டிக்கொள்கிறான்..

    அரங்கத்தில் நடித்திடவும்
    ஆலய வேண்டுதல்களிலும்
    அரிதாரம் பூசுபவர்களை
    அடையாளம் கண்டுகொள்ளலாம்
    எளிதாக..

    ஒப்பனையே இல்லாமல்
    வேடம் போடும்
    மனிதனின் நாடகம்
    எப்போது முடியும்…!

    *****

    முகவண்ணம் தீட்டிய இளைஞனின் அகவெண்ணத்தைக் காட்ட முற்பட்டிருக்கின்ற, அவன் வருங்காலம் வளமாயிருக்க வேண்டும் என்று வாழ்த்தியிருக்கின்ற கவிஞர்பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    அழகு!

    பொய்யாய்ப் போகும் மெய்க்குப்
    போராடிச் செய்கிறோம்
    அலங்காரம் தினம்
    அழகாய்த் தோன்றிடவே
    அகத்தின் அழகு
    முகத்தில் தெரியும்
    என்று சொன்னதாலோ?
    போராடித் தினம்

    அலங்காரம் செய்து
    உள்ளிருக்கும் மிருகத்திற்கு
    முகமூடி போட்டுப்
    புன்னகை பூட்டிய
    பொய்முகம் தேவையில்லை!
    சிந்தனைகள் சீராய் இருந்தால்
    அகத்தின் அழகு தானாய் மெய்ப்படும்!

    அசுரனாய் வேடமிட்டு
    மேடை ஏறி
    வர்ணஜாலம் காட்டிடவே
    வர்ணம் பூசி
    வந்து நின்றேன்
    கண்ணாடியின் முன்னாடி!
    தொண்டை வறண்டு

    வாய்கிழிய வசனம் பேசி
    அழிந்து போகும்
    அசுரனாய் நான்
    சூரஸம்ஹாரம் நாடகத்தில்!
    பாராட்ட யாருமில்லை

    பார்த்து ரசிக்கக் கூட்டமில்லை
    அழிந்து போகும் இக்கலையால்
    நஷ்டம் வந்து
    நலிந்து போனேன்!
    என்னுள் இருக்கும்
    பசியெனும் மிருகம்தனைப்
    போக்கிடவே
    வந்த இந்த வாய்ப்பில்
    அசுரனாய் முகமூடி அணிந்து
    மேடை ஏறி அழிந்து போனேன்!
    நிலைமாறும் இவ்வுலகில்
    என் நிலை மாறும்
    என்ற நம்பிக்கையில்!

    கரகோஷம் மட்டும்
    கலையை வளர்க்க உதவாது
    கலையை அறிந்த
    உயிரோட்டமாய் வாழும்
    அந்த உயிர்களைக்
    காத்து நிற்க
    உதவிக்கரம் நீட்டுவோம்!
    இப்புவியெங்கும்
    நம் கலை அழகைப்
    போற்றிடச் செய்வோம்!

    நிகழ்த்துகலை (performing arts) வடிவங்களில் ஒன்றான நயமிகு கூத்துக் கலை, திரைப்படத்துறையின் அசுர வளர்ச்சியால், இப்போது நாடுவார் யாருமின்றி அழிவின் விளிம்பில் வாடிக்கொண்டிருக்கின்றது. நலிந்துவரும் இக்கலைக்கு உயிர்கொடுப்பதும், தம் வாழ்வாதாரத்துக்கு இக்கலையையே நம்பியிருக்கும் கலைஞர்களை ஆதரித்துப் புரப்பதுமே மக்கள் செய்யவேண்டிய உடனடிச் செயல்களாகும் என்பதைத் தம் கவிதையில் இதயம் தொடும் வகையில் பதிவுசெய்திருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 12.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 12.2

    -மீனாட்சி பாலகணேஷ்

    (சிறுபறைப்பருவம்- ஆண்பால்) 

      சிறுபறைப்பருவப் பாடல்கள் கருத்துவளமும் சந்தநயமும் மிகவும் நிறைந்து விளங்குபவை. சைவத்தின் தனிப்பெருங்கடவுளான சிவபெருமான் பிறப்பிலிப் பிஞ்ஞகன்; சிவபிரான் மீது பிள்ளைத்தமிழ் பாடவியலாத குறையை அடியார்கள் அவனுடைய பலவிதமான நடனங்களைப் பற்றிக் குழந்தையின் பல்வேறு பருவங்களிலும் பாடிமகிழ்ந்து நிறைவுசெய்து கொண்டனர். சந்தநயம் மிகுந்த பல பாடல்கள் சிவபிரானின் திருநடனத்திற்கேற்பக் குழந்தை முருகன் தனது சிறுபறையின் ஒலியினை எழுப்புவதாக அமைந்து இன்புறுத்தும்.

    சிறுபறை முழக்கி வரும் முருகன் எனும் சிறு குழந்தை பெரிய மணி போன்று ஒளிர்கின்றான்; வாடாத  புதுமை நிறைந்த மென்மலர் போலப் பொலிகின்றான். கண்ணூறு பட்டுவிடப் போகின்றதே எனத் தாய் உள்ளம் எண்ணுகிறது. 

    படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து விதமான தொழில்களையும் செய்யும் சிவபிரான் நடனமாடுகிறான். அவனுடைய நடனத்திற்கேற்ப குமரனின் சிறுபறை முழங்குகிறது. இறைவனின் கூத்துக்கு ஆயிரம் கைகளாலும் மத்தளம் கொட்டும் வாணன் என்பவன் தோற்று வெட்கும்படியாக முருகனின் சிறுபறை சிறப்பாக முழங்குகின்றதாம்!

    நந்திதேவன் இதைக்கேட்டு அதிசயித்து, “எமக்கு இதற்கேற்ப ஜதி சொல்ல வராது அப்பா குழந்தாய்!” எனக் குமரக்குட்டனிடம் தனது இயலாமையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டான்! முருகனின் சிறுபறை முழக்கத்தைக் கேட்டு உள்ளம் உவந்த தந்தை சிவபிரான், நடனம் ஆடும்பொழுதே தலையை இயைவாக அசைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான். பக்கவாத்தியக்காரர்கள் அனுசரணையாகவும் திறமையாகவும் இசைக்கருவிகளை வாசிக்கும்போது தலையை அசைத்து அவர்களைப் பாராட்டித் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் கலைஞர்கள் இயல்பு. இதனைச் சிரக்கம்பம் என்பர்.

    ‘தந்தன தந்தன திந்திமி,’ என்று ஜதிகளை முதலில் வாயால்கூறி பின் அவற்றை சிறுபறையில் தோன்றுமாறு முழக்குகிறான் குமரன். தாயான உமையவளுக்கு ஆனந்தம் பொங்குகிறது; குமரன் கூறும் ஜதிகளுக்குத் தானும் பொருத்தமாகக் கைத்தாளம் இட்டு காலப்பிரமாணம் வரையறுக்கின்றனளாம்!

    ‘இவ்வகையாக கொத்துக் கொத்தான மலர்கள் பூத்த சோலைகள் நிறைந்த எட்டிக்குடி குகனே, சிறுபறை முழக்குவாயாக!’ எனத் தாய் ஆசை பொங்க வேண்டுவதாகப் புலவர் நடேச கவுண்டர் எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழில் முருகப்பெருமானை வேண்டுகிறார். படிக்கும் நமது உள்ளங்கள் ஆனந்த வெள்ளத்தில் முழுகுகின்றன. இது 20-ம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற அருமையான ஒரு பிள்ளைத்தமிழ் நூலாகும்.

    ஐந்தொழி லுஞ்செயு மெந்தை நடஞ்செய 

    வாயிர மங்கைகளால்

        அணிமத் தளமறை யுந்தொழில் வாணனும் 

    அகமிக வெள்குறவே

    நந்தியு மிந்த விதஞ்சதி கொட்ட 

    நமக்குவ ராதெனவே

        நாதனு மாதர வாகித் தலையை 

    யசைத்து நடஞ்செயவே

    தந்தன தந்தன திந்திமி யென்று 

    சதிக்கண முந்துறவே

        தாயுமை யானந் தக்கொடியுங் 

    கைத்தாளங் கொட்டிடவே

    கொந்தண வும்பொழி லெட்டிக் குடிக்குக 

    கொட்டுக சிறுபறையே

        கோவா மணியே வாடா மலரே 

    கொட்டுக சிறுபறையே1.

    சிறுபறையில் ஒலி சந்தநயத்துடன் நமது காதுகளில் கேட்கின்றதல்லவா? அதுவே இப்பாடலின் பெருமையாகும்!

    சில பாடல்களில் சிறுபறையின் ஒலிக்கேற்ப இன்னும் என்னவெல்லாம் ஒலித்தன எனக்கண்டு களிக்கலாம். சில பாடல்கள் முருகப்பெருமான் போர்க்களத்தில் செய்த வீரதீரப் பிரதாபங்களைப் பேசுவனவாகும். இத்தகைய பாடல்களின் சந்தம் போர்முரசம் போன்றும் அமைந்திருக்கும். இன்னுஞ்சில, ஐவகை நிலங்களின் அருமைபெருமைகளைப் பாடும். அத்தகையதொரு பாடல்தான் நாம் இப்போது காணப்போவது:

    அழகான திருப்போரூர் முல்லைநிலங்கள் செறிந்த ஊர். இவ்வூரின்கண் பலவிதமான ஒலிகள் எப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளன. முடைநாற்றம் கமழும் மெல்லிய உருவம் கொண்ட இடைப்பெண்களின் மத்துக்கள் தயிர்கடையும் கலங்களில் முழங்குகின்றன; தம் கன்றுகளை நினைத்த மாத்திரத்திலேயே பசுக்கூட்டங்கள் அழகான குடம்போலும் மடித்தலத்திலுள்ள பாலைச்சுரந்து, அன்போடு விம்மிக்கதறும் முழக்கமும் மிகுகின்றது. மூங்கில்களின் துளைகளின் வழியே விரல்களை விட்டுப்பிடித்து இசையினை எழுப்பும் தொறுவர்கள் எனப்படும் இடையவர்கள் ஊதும் குழலோசையும் கேட்கின்றது. பலநிறம் பொருந்திய காட்டுக்கோழிகள் முறைமுறையாக நின்று நெருங்கிக்கூவும் ஒலியும் எழுந்த வண்ணம் உள்ளது. விளைந்து மலர்ந்த செம்முல்லை மலர்களில் வண்டுகள் அமர்ந்து விளரிப்பண்ணை இசைக்கும் அழகிய முழக்கமும் கேட்கின்றது. காலை விடியலில் கடலின் ஒலியைப்போல இந்தப் பலவகை முழக்கங்களும் மிகுதியாக எழுகின்ற தன்மை கொண்டது இந்தப் போரூரின் முல்லைநிலங்கள். இப்போரூரின் இறைவன் குமரவேள் ஆவான். 

    ஒருவரை அறிமுகம் செய்யும்போது அவருக்கு என்ன ஊர், பிறப்பால் எந்தக்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிப்பது வழக்கம். அதுபோன்று இங்கு புலவர் முருகன் வளரும் போரூரின் சிறப்பைப் பற்பல சொற்களிற் கூறினார். அவனுடைய குலம்- குடிப் பெருமை கூற ‘குளமலிகண்ணன் தரும் இறை’ எனச் சில சொற்களையே கூறினார். இதுவே மிகவும் பெருமை தரும் அறிமுகமாக விளங்கி அழகு செய்கின்றது. குளம்- நெற்றி; அலிகம்- நெற்றி; – நெற்றிக் கண்ணனான சிவபிரான் தந்தருளிய முருகக் கடவுள் என்கிறார். வேறு என்ன பெருமை வேண்டும் மகனுக்கு? அவனும் தன் பங்கிற்கு முத்தமிழையும் தனது பெற்றோரைப்போல் தொடர்ந்து வளர்த்து அருளியவன்தான் அல்லவா?  

    “திருப்போரூர்க் குமரனே! நீ சிறுபறை முழக்குக,” எனப் புலவர் சிதம்பர அடிகளார் வேண்டுகின்றார். திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் இவர் பாடிய திருப்போரூர் சந்நிதி முறையில் உள்ள முப்பத்தாறு நூல்களுள் ஒன்றாகும். பொருள் வளமும் கற்பனை வளமும் மிக்கு விளங்குவது.

    அளைகடை முடைகதுவிய தளிர் வடிவத்து ஆய்ச்சியர் மத்தொலியும்

    அங்குட மடிமுலை விம்மிக் கன்றுளி ஆன்நிரை கத்தொலியும்

    கிளைபடு தொளைவழி விரல்விடு தொறுவர்கள் கீதக் குழலொலியும்

    கேழ்செறி கானக் கோழிகள் முறைமுறை கிட்டிக் கூவொலியும்

    விளைதரு தளவத் தளிபல விளரி விளக்கிய சீரொலியும்

    விடியற் காலைக் கடலைப் பொருவ மிகுத்தெழு மாமுல்லைக்

    குளமலி கண்ணன் தருபோரூர் இறை கொட்டுக சிறுபறையே

    கொத்துறு முத்தமிழ் மெத்த வளர்த்தவ கொட்டுக சிறுபறையே2

    புல்லாங்குழலை இடையர்கள் வாசிக்கும் முறை இப்பாடலில் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. மூங்கிற்குழலில் அமைக்கப்பட்ட துளைகளில் (இசைக்கேற்ப) விரல்களை மாற்றிமாற்றிப் பொருத்தி (அவற்றை மூடியும் திறந்தும்) இசைக்கிறார்கள் என விளக்கமாகக் கூறியுள்ளமுறை நயக்கத்தக்கது. இவ்வாறு நுணுக்கமான நயங்களைப் புலவர் பெருமக்கள் தாமியற்றியுள்ள பாடல்களிலும் நூல்களிலும் ஆங்காங்கே பொருத்திப் பாடியுள்ளமை வியக்கத்தக்கது.

    முல்லைநிலத்திற்கான பண் ‘விளரிப்பண்’ என்பது இதிலிருந்து பெறப்படுகின்றது. ஆனால் தமிழிசை மரபுப்படி விளரிப்பண்ணானது மருதநிலத்துக்கு உரிய பண்ணாகும். வண்டுகளின் ஒலியே விளரிப்பண் என அறியப்படுகின்றது. இவ்வாறு திணைமயங்கி வருவதும் ஒரு இலக்கிய உத்தியாகும்.  

    இதேபோன்று மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப் பருவத்துப் பாடலொன்றில், ‘விளரிப் பண்ணைப் பாடுகின்ற வண்டுகள் முழங்குகின்ற கூந்தலையுடைய கொடி போன்றவளே!’ என அன்னை விளிக்கப்படுகிறாள்.

    ‘விளரிமி ழற்றருளி குமிறுகு ழற்கொடி3.’ என்பன பாடல்வரிகள்.

    திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழில் இன்னொருவகை இனிமையைக் கண்டு ரசிக்கலாம். தகப்பன்சுவாமியாகிய முருகப்பெருமான் உறையும் சுவாமிமலையின் சிறப்புகளைக் கூறுமுகமாக அங்கு என்னவெல்லாம் எவ்வாறு முருகனின் சிறுபறை ஒலிக்கேற்ப ஒலிக்கின்றன எனப் புலவர் கூறும்விதம் மிகுந்த நயம் வாய்ந்தது.

    அரங்கமெல்லாம் மத்தளம் எனப்படும் பறைமுழக்கம் ஒலிக்கும்; சாலைகள் அனைத்திலும் தருமமாகிய முரசொலி கேட்கும்; ஊரின் சபைகள் அனைத்திலும் தமிழின் இனிமை கேட்கும்; அங்கு வாழும் மக்கள் சிந்தை முழுவதும் சாந்தம் எனும் தன்மை நிரம்பியிருக்கும். பெண்கள் விளையாடும் இடங்களிலெல்லாம் கழங்கு, அம்மானைப் பண்கள் ஆகியவை பெருமளவில் பாடப்படும். மேகங்கள் கூடுவதைக் கண்ட மயில்களின் ஆனந்த அகவலோசை மலர்ப்பூங்காக்களில் நிறைந்திருக்கும். 

    வயல்கள் சூழ்ந்த தடங்களிலெல்லாம் பூந்தேனைச் சொரியும் கனிவாழைகளும், முதிர்ந்து வெடித்த தேன்மாங்கனிகளும் நிறைந்து, பறவைகளின் இன்னொலியால் நிறைந்திருக்கும்; இங்ஙனம் பலவித ஓசைகள் முழங்கும் சாமிமலை முருகனே! நீயும் உனது சிறுபறையை இவ்வோசைகளுக்கு ஈடாக முழக்கியருளுக! என்பார் புலவர்.

    தழங்கு முழவ மரங்கமெலாம் தரும முரசஞ் சாலையெலாம்

    தமிழி னினிமை சபைகளெலாம் சாந்த நிலைமை சிந்தையெலாம்

    கழங்கு கழலம் மனைப்பண்கள் கனிவாய் மகளிர் பண்ணையெலாம்

    களிக்கு மயிலி னகவல்மழைக் கலிப்பு மலர்ப்பூங் காவிலெலாம்

    விழுங்கு பூந்தேன் கனிவாழை வெடிப்புத் தேமா விளைந்தகனி

    வீழ விரியும் புள்ளினொலி விளைந்த வயற்சூழ் தடங்களெலாம்

    முழங்குஞ் சாமி மலைமுருகா முழக்கி யருள்க சிறுபறையே

    முடியா முதலே வடிவேலா முழக்கி யருள்க சிறுபறையே4.

    குழந்தை முருகன் சிறுபறையைக் கையில் ஏந்தி முழக்குகின்றான்- அவ்வொலியைக் கேட்பவர்களுக்கு அது ஒவ்வொரு விதமாகத் தோன்றுகிறதாம். இது ஒருவிதமான இனிய கற்பனை! 

    வடகலையோடு தென்கலையைப் பயிலுகின்ற புலவர் குழாம் ஒன்று ஆர்வமாகப் புரவலர்களைத் தேடி வருகின்றது. அவர்கள் செவியில் குமரன் முழக்கும் சிறுபறையொலி விழுகின்றது. உடனே கவிவாணர்கள் பரபரப்புடன் ஒருவருக்கு ஒருவர், “வாருங்கள், புலவர் பெருமக்களே, இந்நகரில் முழங்கும் கொடைமுரசின் ஒலி உங்களுக்குக் கேட்கவில்லையா? அது நம்மை, ‘வருக,’ என அழைக்கிறது; விரைந்து வாருங்கள், சென்று நமது கலைத்திறமை விளங்கப் பாடிப் பரிசில் பெறுவோம்,” என கூறிக் கொண்டு மற்றவர்களை ஊக்குவித்தபடி விரைகின்றனர்.

    சிவபெருமானுடன் அமர்ந்து உமையம்மை உரையாடிய வண்ணம் இருக்கிறாள். அவர்கள் செவியில்  இந்தச் சிறுபறையொலி கேட்கின்றது. சின்னஞ்சிறு பிராயத்திலேயே சூரசங்காரம் போன்ற பெரிய வீரச் செயல்களை எல்லாம் செய்து புகழ் பெற்றுவிட்டான் இவர்கள் மைந்தன் முத்துக்குமரன். இனி இப்போது அவனுக்கு மணம்முடித்துப் பார்க்கவேண்டும் எனும் ஆவல் பெற்றோர் இருவர் உள்ளத்திலும் பொங்கி எழுந்துள்ளது. மெல்லிய இளம்பிடி போன்ற தேவ உலகத்துப் பெண்ணானவளும் தேவர்க்கு அதிபதியின் மகளுமான தெய்வயானை எனும் அணங்கை மணம்முடிக்க எண்ணம் கொண்டுள்ளனர்!  அவ்வாறு அவளைக் குமரன் மணந்துகொள்வதற்கு உரிய மணமுரசு தான் ஒலிக்கின்றது என்று எண்ணி ஒருவருக்கொருவர் புன்முறுவல் கொண்டு உள்ளம் மகிழ்கின்றனராம். 

    தேவர்கள், அவர்களது அரசன் இந்திரன் ஆகியோர் எப்போதும் பகைவர்கள் தம்மை வெருட்ட வருகின்றனர் என எண்ணியவாறே உள்ளனர். தேவசேனாபதியாகிய குமரப்பெருமான் அவர்களது குலத்தை யாங்கணும் காத்து வருகின்றவன். இச்சமயம் அத்தேவர்கள் செவியில் முருகனான இச்சிறுபிள்ளை முழக்கும் சிறுபறையொலி விழுகின்றது. உடனே அவர்கள் உற்சாகமடைந்து ஒரு திருவிழாவிற்கே ஏற்பாடு செய்ய முனைகின்றனராம். எதனால்? இன்னுமொரு பகைவனின் படைதனை செங்குருதி பாயும் போர்க்களத்தில் வென்று வாகைசூடிவிட்டான் அவன்; அவனுடைய வெற்றியைக் கொண்டாடும் வெற்றிமுரசின் ஒலியாக இவ்வொலி அவர்கள் செவிகளில் கேட்கின்றதாம்!

    இவ்வாறு ஒரு திருநாட்டுக்கு உரிய கொடை, வீரம், மங்கலம் எனும் மூன்றுவிதமான முரசங்களும் இக்காவிரி நாட்டில் (புள்ளிருக்குவேளூர் என்னும் வைத்தீசுவரன் கோவிலில்) முழங்குகின்றன. ‘இந்நாட்டினை உடையவனும் முத்தமிழைப் பயில்கின்றவனுமாகிய பருதிப்பதியின் முருகவேளே, சிறுபறை முழக்குக,’ என மகிழ்வுமிகக் குமரகுருபரனார் முருகப்பெருமானைத் தாயின் நிலையில் நின்று பெருமிதம் பொங்க வேண்டுகிறார்.

    வம்மினெனப் புலவோரை அழைத்திடு

    வண்கொடை முரசமென

        வடகலை தென்கலை யொடுபயி லும்கவி

    வாணர்கள் ஓடிவர

    அம்மென் மடப்பிடி பொன்னுல கீன்ற

    அணங்கை மணம்புணரும்

        அணிகிளர் மணமுரசென்ன எம் ஐயனொடு

    அம்மை மனங்குளிர

    தெம்முனை சாயச் சமர்விளை யாடிச்

    செங்கள வேள்வி செயும்

        திறன்முரசு என இமையவர் விழவயரச்

    செழுநகர் வீதிதொறு

    மும்முரசமும் அதிர் காவிரி நாடன்

    முழக்குக சிறுபறையே

      முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன்

    முழக்குக சிறுபறையே5 

    தாரகாசுரன் முதலான அரக்கர்களுடன் முருகன் போரிடுகிறான்; முருகப்பெருமானின் படையின் நவகோடி வீரர்கள் அட்டகாசம் செய்தவாறு வருவதனால் நாற்றிசைகளும் பதறிக் கலங்குகின்றனவாம்; நாற்கோணமாக வியூகம் வகுத்து நான்குவிதப் படைகளும் அணிவகுத்து வருவதனால் கருங்கடல் கலங்கியது; பலவாறு தவமியற்றிப்பெற்ற வரங்களால் கிடைத்த கோடிகோடியான வெற்றிகள் அழிந்தொழியப் போவதனால் தாரகாசுரன் தன் மனம் கலங்கலானான்; தோல்வியையடையாத படைகளைக்கொண்ட மாயாபுரியைச் சேர்ந்த அவுணர்கள் இனி வரப்போகும் தோல்விக்கு அஞ்சித் தம் கண்கள் கலங்கி வருந்தினர். தீய மனத்தவர்களான அசுரர்களின் பெண்டிர் தமது அருமையான கருப்பம் கலங்குமாறு அச்சம் கொண்டனர். கோடிக்கணக்கில் வரும் அரக்கர்களின் கோடிக்கணக்கான உயிர்கள் அலறிடவும், அந்தகனான காலன் திசைகளில் நின்று கலங்கவும், சிவனுடைய அவதார வடிவமாக வந்துதித்துள்ள முருகவேளே! நீ உனது சிறுபறையை முழக்குவாயாக, என வேண்டுவதாக அமந்த பாடலிதுவாம்.

    நவகோடிவீரர்வரு மட்டகாசத்தினா

           னாற்றிசைகள் கெடிகலங்க

    *தகசதுரங்கபத சதுரங்கவர்க்கத்தி

          னாற்கருங் கடல்கலங்கத்

    தவகோடியால்வந்த செயகோடிசாயவே

           தாரகன் மனங்கலங்கச்

    சாயாதபடையான மாயாபுரத்தவுணர்

          தம்மிலே கண்கலங்க

    அவகோடிபெருமவுணர் புணர்கோடிமடவார்க

           ளரியகர்ப்பங் கலங்க

    வருகோடிவருமசுர ருயிர்கோடியலறவே

           யந்தகன் றிசைகலங்க

    சிவகோடியவதார வடிவாகவருமுருக

           சிறுபறை முழக்கியருளே 6       

    இப்போரின் காட்சிகள் குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழில் காட்சியாக்கப்பட்டுள்ளன.

    முருகன் தமிழ்த்தெய்வமல்லவா? முருகனின் சிறுபறை ஒலிக்கேற்பப் புலவர்கள் தமிழ்மொழியின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐவகை இலக்கணங்களின் துணைகொண்டு சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி எனும் ஐம்பெரும் காப்பியங்களை அமைத்தனர். மேலும் தமிழின் பலதுறைகளையும் ஆராய்ந்து செய்யுட்களின் நடைவகையான க்ஷீரபாகம், திராக்ஷாபாகம், கதலீபாகம், இக்ஷுபாகம், நாளிகேரபாகம் முதலானவைகளைக் கொண்டும், ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி எனும் கவிதைவகைகளைக் கொண்டும் தமிழ்மொழியைத் துதித்து முழக்குகின்றனர். இதற்கியைய நீயும் உனது சிறுபறையை முழக்குவாயாக என வேண்டும் பாடல். 

    தமிழ்க்கடவுளான குமரனைத் தமிழ்மொழியின் நயங்களுடன் இணைத்துப் போற்றும் இனியதொரு பழனிப்பிள்ளைத்தமிழ்ப் பாடலிதுவாகும்.

    ‘ஐவகை யிலக்கணமு மைங்காவி யத்துறையு

    மாராய்ந்து பாகமுறையால்

        ஆசுமது ரஞ்சித்ர வித்தார முஞ்சொலு

    மருங்கவிஞர் துதிமுழக்க7 என்பன பாடல்வரிகள்.

    ‘பான் முந்திரிகை வாழைக் கனியாய்க், 

    கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத்து- இளங்கனியாய்த் 

    தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான

    முத்திக் கனியேஎன் முத்தமிழே8,‘எனும் தமிழ்விடு தூதின் கவிதைவரிகளை இங்கு நினைவு கூரலாம்.

    முருகனின் சிறுபறை முழக்கொலி ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களது சமயம் சார்ந்த ஒலியாகத் தோன்றுகின்றது: சங்கரனாம் சிவபிரானின் அன்பர்களான சைவர்களுக்கு அது அவர்களது சமய முழக்கமாகக் கேட்கின்றது; பாம்பணையில் வளரும் சங்கேந்திய திருமாலின் அன்பர்களுக்கு அது வைணவசமய முழக்கமாகக் கேட்கின்றது. புத்தனின் அடியார்களுக்கும் அருகப்பெருமானின் தொண்டர்களுக்கும் அவரவர் சமய முழக்கமாகக் கேட்கின்றது. தூய ஏசுநாதனின் தாமரைமலர்ப் பதங்களைப் பணியும் அடியவருக்கும் அல்லாவின் பக்தர்களுக்கும் தமது மதமுழக்கமாகவே இச்சிறுபறையொலி கேட்கின்றது.

    ‘சங்க ரன்பா லன்பு கொண்ட

    சைவ ரோடு பாம்பணை

        தங்கு சங்க ணிந்த வன்றன்

    தாள்வ ணங்கு வைணவர்

    ………………………………………….

    பங்க யம்ப ணைந்து ளோரும்

    பகரு மல்லா பக்தரும்

        பால னுன்மு ழக்கு தத்தம்

    மதமு ழக்க மென் றிட9

    …………………………………..’ என்பன பாடல் வரிகள்.

    (குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- தி. சு. ஆறுமுகம் சிவதாசன்)

    இப்பாடலின் உட்பொருள் மிக அருமையானது. ஒன்று, இப்பாடலில் அனைத்து சமயங்களும் ஒன்றே எனும் கருத்து தொக்கி நிற்கின்றது. அவை பரம்பொருள் எனும் பெருங்கடலில் நாம்  சென்று சேர்வதற்கு இறைவனைக் குழந்தையாகக் கொண்டு நாம் செலுத்தும் அன்பும் ஒரு காரணமாகும். 

    இவ்வாறு பல சுவைகளையும் இப்பாடல்களில் நாம் படித்து இன்புறலாம். 

    (வளரும்)

    ———————–&—————-

    பார்வை நூல்கள்:

    1. நடேச கவுண்டர்- எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
    2. சிதம்பர அடிகள்- திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    3. குமரகுருபரர்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
    4. நடேச கவுண்டர்- திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்
    5. குமரகுருபரர்- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
    6. மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்- மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ்
    7. விசயகிரி வேலோச்சின்னவையன்- பழனிப் பிள்ளைத்தமிழ்
    8. தமிழ்விடு தூது
    9. தி. சு. ஆறுமுகம் சிவதாசன்- குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்.
    Share
  • சேக்கிழார்  பா நயம் – 54

    சேக்கிழார்  பா நயம் – 54

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    இலக்கியங்களில் திணை, பால் ,  எண், இடம் ஆகியவற்றுக்கு உரிய சொல்லோ தொடரோ ஒன்றுக்கொன்று விரவி வரலாம். அந்நிலையில் தகுதிபற்றி  ஒரு திணையின் முடிபைக் கொண்டு தொடர் நிறைவுறும். ‘’மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா!’’ என்பது உலகியல் மொழி. இதில்  மூர்க்கன்- உயர்திணை ஆண்பால், முதலை- அஃறிணை ஒன்றன் பால். இவையிரண்டையும் கொண்ட தொடர்,‘’கொண்டது விடான்’’ என்றோ,‘’கொண்டதுவிடாது’’  என்றோ முற்றுப் பெறாது. உயர்திணை, அஃறிணை ஆகிய இரண்டிற்கும் பொதுவான வினைமுற்று இல்லை. விடான் என்று உயர்திணை முற்றைக் கூறுவதை விட , கொண்டது விடாமை  என்ற இழிவான செயல் பற்றி, விடாது என்று முடிக்கலாம். மூர்க்கனையும் அஃறிணையாகக் கருதிப் பலவின்பாலாக்கி , ‘’விடா ‘’ என்று தகுதி கருதிக் கூறினர். இவ்வாறே  திருவள்ளுவரும் , 

    ‘’எனைத்துணையர் ஆயினும்  என்னாம் தினைத்துணையும்
    தேரான்   பிறனில்  புகல் ‘’

    என்ற  குறட்பாவில்  ‘எனைத்துணையர்’  என்று உயர்த்திக் கூறியவர், அவர்  செய்த இழிசெயல் பற்றித் ‘ தேரான்’  என்று தாழ்த்திக்கூறினார். இதற்கு உரை கூறும் தேவநேயப் பாவாணர்’’ எத்துணை உயர்ந்தோன் ஆயினும் குற்றம் குற்றமே’’ என்கிறார். ஆகவே தொடர்  முற்றுப்பெறும் பொது தகுதியுடைய திணை, பால், எண், இடங்களுக்கு உரிய முற்றினைப்பெறும். கம்பராமாயணத்தில், சீதையைக் கண்டு உள்ளத்தை இழந்த இராமபிரான், ஜனகரின் விருந்தினனாய் இருப்பிடங்களில்  தங்கிய போது, இராமபிரானுடன், இரவும், நிலவும், அச்சீதையின் நினைவும் இணைந்து விளங்கியதைக் கம்பர்,   

    முனியும் தம்பியும் போய் முறையால் தமக்கு
    இனிய பள்ளிகள் எய்திய பின் இருள்
    கனியும் போல்பவன் கங்குலும் திங்களும்
    தனியும் தானும் அத் தையலும் ஆயினான்

    என்ற பாடலில் , கங்குலும், திங்களும், இருள்கனிபோன்ற தனித்த தானும்,  அத் தையலும் இணைந்து, அஃறிணை, உயர்திணை, ஆண்பால் , பெண்பால் ஆகிய

    நான்கும் சேர்ந்து  இருந்ததை, இராமனின் தகுதி பற்றி ஆயினான் என்று உயர்திணை  ஆண்பால் வினைமுற்றாகக் கூறினார். இதற்கு ,

    ‘’யானும்  தோழியும் ஆயமும் மேவிய  அந்நாளில்
    தானும் தேரும் பாகனும் வந்து என்நலன்உண்டான்,
    தேனும்  பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்
    கானும்  கைதையும் கடலுமே அன்றிக் கரியாதே!’’

    என்ற  பழம்பாடலில் ‘’தானும் தேரும் பாகனும் வந்துஎன்நலன் உண்டான்’’ என்று  தகுதி பற்றி அவனுடைய செயலாகவே கூறப்பெற்றது. இவற்றை நன்கு கற்றறிந்த சேக்கிழார்   சுவாமிகள், ‘’குளங்களில் இருந்த பறவைகளின் ஒலிகுறைந்த நள்ளிரவில், பரவையார் துணையின்றித் தனித்திருந்த சுந்தரர், தம்காதல்உள்ளத்துடனும், தம் உயிர்த் துணைவராகிய இறைவனுடனும் இருந்த நிலையை, ‘’பாவை தந்த படர்பெருங் காதலும்  ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்’’ என்று காதல் ,தனிமை, இறைவன், ஆகிய துணைகளுடன், சுந்தரர் தனியர் ஆயினார்! என்றுபாடினார். இப்பாடலுக்கு விளக்கம் கூறிய உரையாசிரியர் ஆவி சூழ்ந்த தனிமையும் – தமது ஆவியைச் சூழ்ந்த தனியாந்தன்மையும். அஃதாவது ஆவி இங்கு நின்றும் பரவையாரிடம் போயினமையால் ‘ஆவி நல்குவர்’ என ஆரூர்ப் பெருமானை வேண்டிக் கொண்டனர் நம்பிகள்.. ஆனால் ஆவி நல்காது (பரவையாரைத் தாராது) பெருமான் தாமே தனியாய்த் துணையிருந்தார் என்பது. ஆவி சூழ்ந்த தனிமையாவது இறைவன் உயிர்க்குள் உயிராய்க் கலந்து சூழ்ந்து நிற்குந்தன்மை. இங்கு ஆவி வேறிடமிருந்தமையின் முன் அதனைச் சூழ்ந்திருந்த அவன் தனியனாயிருந்தான். தனிமை – தனிப்பொருளாந் தன்மை. தோழர் தனியராயினமையின் தாமும் தனியர் ஆயினர் என்பதும் குறிப்பாம். நாவலூரர் காதலும் தனிமையும் ஆயினார் என்று முடிக்க. பரவையில்லாது அது தந்த காதல் மட்டும் இருந்தது; ஆவியில்லாது அது சூழ்ந்த தனிமைமட்டும் இருந்தது; பரவை உண்டாயின் ஆவியும் உளதாம்; அப்போது தனிமையும் நீங்கும் என்க. “தமியனேன் தனிமை நீங்குதற்கே“ என்ற திருவிசைப்பாக் கருத்தையுங் காண்க. காதலோடு தனித்து முன்னர்க் கூறியபடி யாவரோடும் உரையியம்பாது இருந்தனர் நம்பிகள் என்க.’’ என்றுகூறினார். 

    மேலும்  இப்பாடலில்  சுந்தரருக்கு  இரவில் துணையாக இருந்த  பறவைகளின் பேரொலி சுந்தரர்  நினைவுக்கு வரவில்லை. அந்த அளவுக்கு  அவர் நினைவு தனித்திருந்தது. இது காதல் வயப்பட்டவர்  நிலை போலும். அவர் தனிமை இறைவனுடன் கலந்திருந்தமையால்  அதனைப் பறவை முதலாயின காணாமல் ஒதுங்கி மாறின. இனிப் பாடலை முழுமையாகப்  பயில்வோம்.

    வாவி புள்ளொலி மாறிய மாலையில்
    நாவலூரரும் நங்கை பரவையாம்
    பாவை தந்த படர் பெருங் காதலும்
    ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்.

    ஆகவே  சுந்தரரின் காதலுக்கு இறைவனும், பரவையார் நினைவும்  துணையாய் இருந்தமையை நாம் புரிந்து கொள்கிறோம்.

    சுந்தரரின்   மனோநிலை இறைவனுடன்  கலந்து இருந்ததற்குக்  காரணம் சுந்தரரின் உயிர்  போன்ற பரவையாரைச் சிவபிரான்  கொண்டு வந்து சேர்ப்பர் என்ற நம்பிக்கை ஆகும்!  அந்த இறைவனுடனும், மனங்கவர்ந்த காதலுடனும் சுந்தரர் இருந்ததை,   உயிர்கள் தம் மும்மலங்களில் இருந்து நீங்கிச் சிவனடிக்கீழ் சேரும்போதும்  புதிய விளைவாய் ஆணவ மலம் சற்றுப் பின் நோக்கிப் பார்க்கும் என்று ‘’ உண்மை விளக்கம்’’ என்ற  சித்தாந்த சாத்திரம் விளக்குகிறது. ஒரே நேரத்தில் ஆன்மா இறைவனிடமும் பாசங்க ளிடமும் சேர்ந்து  விளங்கும் அற்புதம் சிவலோகம் சென்று இறைவனிடம் அருளும் அனுமதியும் பெற்ற சுந்தரர். மையல் மானுடமாய்  மயங்கிய போதும் சிவ பெருமானுடன் உடன்பட்டும், முரண்பட்டும் நேரில் பேசிய போதும் வெளிப்பட்டது . இதற்கு  சித்தாந்தம் இசைவு தருவதைத் திருஞான சம்பந்தர், மற்றும் திருநாவுக்கரசர் வாழ்விலும், காண்கிறோம். சிவபிரானுடன்  நேரில் பேசும் பெருமை மிக்க அடியார்களுக்கு நேரும் அற்புதம் இது! அத்தகைய அற்புதங்கள் இப்போதும் நாம் வாழும் நாளில் நிகழ்கின்றன. நம்மைச் சுற்றி வாழும், வாழ்ந்த ரமண பகவான், சேஷாத்ரி  சுவாமிகள், மஹாபெரியவர் போன்றோரின் வாழ்வியல் அற்புதங்கள் இதனை உணர்த்தும். அதன் முன்னோடியாக, அப்பூதி யடிகள், அப்பர் அருளால் துன்பில் பதம் பெற்றார்! வாழும்போதே,திருஞான சம்பந்தர் திருமணத்தில் பங்கேற்றோருக்கும் திருவடிப்பேறு கிட்டியது! சேரமான் பெருமாள் நாயனார் உடம்போடு கைலாயம் சென்று ‘’திருக்கயிலாயஞானஉலா’’  பாடினார்.ஆன்மாவின் நோக்கமாகிய இறைவனடி சேர்ந்தபின்னும், மீண்டும் இங்கே வந்து தம் வாழ்வால் உயிர்களுக்கு வழிகாட்டிய அடியார்களின் அருள் வரலாறே திருத்தொண்டர் புராணம்! இவற்றைச் சேக்கிழாரின் பாடல்கள் செவ்வனே விளங்குகின்றன.    

    Share
  • திருவள்ளுவர் யார்?

    திருவள்ளுவர் யார்?

    மாலன் நாராயணன்

    “புகையை நம்பி உணவை வெறுக்கும் மனிதர்களை இந்த ஒரு விஷயத்தில்தானா பார்க்கிறோம்?”
    – பாரதியார் (சுதேசமித்ரன் 25.11.1915)

    திருவள்ளுவர் பற்றிய சர்ச்சைகளைப் படிக்கும் போது இந்த வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன.

    திருக்குறளில் பேசப்பட்டிருக்கும் செய்திகள் அது எழுதப்பட்ட காலத்தில் (கி.பி. 500-550 என்கிறார் கமில் ஸ்வெலபில்) வேறு எந்த நூலிலும் எழுதப்பட்டதில்லை. எந்த மொழிக்கும், எந்த மதத்திற்கும், எந்த ஜாதிக்கும், எந்தக் காலத்திற்கும், எந்தத் தொழிலுக்கும் ஏற்புடைய செய்திகள் அவை. அதில் ஏதேனும் பத்துக் குறளையேனும் பின்பற்றியிருந்தால் தமிழ்ச் சமூகம் உருப்பட்டிருக்கும். ஆனால் அதை உருப்போடுவதோடு நாம் நின்றுவிட்டோம்

    ஆனால் வள்ளுவரையும் குறளையும் பற்றிய சர்ச்சைகளைக் காலம் காலமாய் வளர்த்து வருகிறோம்

    அவர் இந்துவா? சமணரா?
    அவர் என்ன ஜாதி? பூணூல் போட்டிருந்தாரா இல்லையா?
    திருக்குறளை எழுதியவர் ஒருவரா? பலரா?
    அவருக்குத் தாடி இருந்ததா? தலையில் சடையா? மொட்டையா?
    வள்ளுவர் வடக்கே இருந்து வந்தவரா?
    திருக்குறள் மனுஸ்மிருதியைத் தழுவி எழுதப்பட்டதா?
    திருக்குறள் பகவத் கீதையைச் சார்ந்து எழுதப்பட்டதா?

    இந்தச் சர்ச்சைகளால் தமிழருக்கு ஏதேனும் பயன் உண்டா?

    திருக்குறளை எழுதியது யார் என்ற கேள்விக்கு ஒரு பதில்தான் உண்டு.

    திருக்குறளை எழுதியது ஒரு தமிழன்!

    தன்னை ஒரு சிமிழுக்குள் சிறை வைத்துக்கொள்ள மறுத்த ஒரு தமிழன்.

    வாழ்வின் அடிப்படை அறம் என்று நம்பிய ஒரு தமிழன்.

    அவ்வளவுதான். முற்றும். Dot. Period. The end.

    அபத்த சர்ச்சைகளை நிறுத்துங்கள், ஆயாசமாக இருக்கிறது.

    ஆனால் இவர்கள் ஓயமாட்டார்கள்.

    ஒட்டகத்திற்கு ஒரு இடத்திலா கோணல்? தமிழ்நாட்டிற்கு ஒரு வழியிலா துன்பம்?

    (இதுவும் பாரதி சொன்னதுதான்)

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 12.1

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 12.1

    -மீனாட்சி பாலகணேஷ்

    (சிறுபறைப்பருவம்- ஆண்பால்)

    ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள் பெரும்பாலும் முருகப்பெருமான் மீதானவையே. அவனுடைய வேல், மயில், அரக்கர்களையழித்த வீரச்செயல்கள், தேவர்களைக் காத்த வரலாறுகள் எனப் பற்பல கருத்துக்களைக் கொண்டமைந்த பாடல்கள் எண்ணற்றவை. அருணகிரிநாதரின் திருப்புகழ், கச்சியப்பச் சிவாச்சாரியாரின் கந்தபுராணம் ஆகியவற்றில் காணும் நிகழ்ச்சிகள், மக்களிடையே வழக்கிலிருந்து வரும் சிறு புனைகதைகள் ஆகியன பிள்ளைத்தமிழ் நூல்களின் புலவர்களால் பொருத்தமான பருவங்களில் இப்பிள்ளைத்தமிழ் நூல்களில் அழகுற எடுத்தாளப்பட்டுள்ளன.

    ஆண்பால் பிள்ளைத்தமிழின் ஒன்பதாம் பருவமாக சிறுபறைப் பருவம் அமையும். சற்று முன்பின்னாகவும் சில நூல்களில் அமைந்துள்ளதனைக் காணலாம். சப்பாணிப்பருவத்தைப் போலவே, இப்பருவத்திலும் சிறுபறை முழக்கும் பாட்டுடைத்தலைவனின் சின்னஞ்சிறு கைகளே பாடுபொருளாக அமைகின்றன. ஆண்மகவு பத்தொன்பதாம் திங்களில் அல்லது மூன்று முதல் நான்காண்டுகளில் சிறுபறை முழக்குவதாகப் பாடுவது வழக்கம்.

    ‘பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
    சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
    கண்ணகத் தெழுதிய குரீஇ ப்போலக்
    கோல்கொண் டலைப்பப் படீஇயர் மாதோ1,’

    எனும் பாடலொன்றால் பெருஞ்செல்வர்களின் இல்லத்துச் சிறுவர்கள் தம்தோளில் சிறுபறையை மாட்டிக்கொண்டு முழக்குவர் எனவும், அப்பறையின் கண்ணகத்து குருவியின் படம் வரையப்பட்டிருக்கும் என்ற செய்தியையும் அறிகிறோம்.

    இன்று நாம் காணப்போவது முருகப்பிரானின் சிறுபறை முழக்கும் கைகளின் செயல்களைத்தான்!

    ‘வாங்கும் எனக்கு இருகை- ஆனால் அருளை
    வழங்கும் உனக்குப் பன்னிருகை2,’

    என ஒரு அடியார் முருகனைப் போற்றியுள்ளார். எண்ணிக்கை கைகளுக்கானதல்ல! அத்திருக்கைகள் வாரிவாரி வழங்கும் அருட்செயல்களுக்காகத்தான் பலவாக உள்ளன எனக்கொள்ள வேண்டும்! முதலாவதாக, குழந்தையைச் சிறுபறை முழக்குமாறு தாயும் மற்றவர்களும் ஏன் வேண்டுகின்றனர் எனக் காண்போமா? வளர்ந்துவரும் குழந்தை கைகளால் செய்யவேண்டிய செயல்களைக் கற்க வேண்டும். அதற்கு கைகள் உறுதியாக வளர வேண்டும். எவ்வாறு அம்மானையாடும் பெண்குழந்தை (சிறுமி) கைகள், கருத்து, சிந்தனை அனைத்தையும் ஒருமுகப்படுத்தக் கற்றுக் கொள்கின்றதோ அவ்வாறே சிறுபறை முழக்கும் ஆண்மகவும் அதனைத் தாளலயத்துடன் ஒலிக்கக் கற்றுக்கொண்டால், கைகளும் கருத்தும் இணைந்து செயலாற்றும் திறமை படைத்தவனாக இருப்பான் என விழைகிறது தாயுள்ளம்.

    சிறந்த மிருதங்க வித்துவான்கள் அனைவருமே சிறுவயதிலிருந்தே தாளலயத்துடன் இணைந்து வளர்ந்தனர் எனக் கூறவும் வேண்டுமோ?

    பல சுவைமிகுந்த கருத்துக்களைப் புலவர் நடேச கவுண்டர் தாமியற்றிய எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் முருகனின் பன்னிருகைகளின் கைவண்ணமாகக் கூறிச் சிறப்பிக்கிறார். அவற்றைக் காணலாமா?

    இவர் போற்றுவது பன்னிரு கரங்களையுடைய குழந்தை முருகன்; எல்லாமறிந்த எல்லாம்வல்ல இறைவனே சிறுகுழந்தையான முருகப்பெருமான் எனத்தெளிந்த அடியார் சிறுபறை முழக்கும் அவனுடைய சிறு கரங்களைப் பலவிதமாகப் போற்றுகிறார்.

    மிகுந்த துயரளிக்கும் பிறவிப்பெருங்கடலிலிருந்து எடுத்து எம்மைத் தாங்கி ஆறுதல் அளிப்பதொருகை;

    இருவினைகளையும் செய்து இந்த உலகில் உழலும்போது ‘அஞ்சாதே!’ என அபயம் அளிப்பது மற்றொரு கை.

    அருணகிரிநாதருக்கு அருள் செய்யும் விதத்தில் செபமாலையை அவருக்கு அளித்ததொரு சிவந்த கொடைக்கை.

    மிகுந்த செருக்குடன் திரிந்த தாமரையோனாகிய பிரமனுடைய தலை குலுங்குமாறு குட்டுவது ஒரு கை!

    தேவர்களின் அரசனான இந்திரனுக்கு, அவனுடைய பறிபோன அரசபதவியைத் திரும்பப் பெற்றளித்து அவன் தலையில் மகுடம் சூட்டும் வரதக்கை இன்னொன்று!

    இனிய தெளிந்த அமுதம் போன்றவளான வள்ளியம்மைக்கு மணமாலையைச் சூட்டும்கை மற்றொன்று!

    இவ்வுலகத்திலுள்ளோர், வானுலகிலுள்ளோர் என அனைவரும் வேண்டுகின்றன அனைத்தினையும் கொடுத்தருளுவது ஒருகை!

    அருணகிரிநாதர் கோபுர உச்சியிலிருந்து கீழே விழுந்தபோது அவர்தமைத் தாங்கியெடுத்து ஏந்திக்கொண்டது மற்றொருகை!

    சித்தர் பெருமக்களுக்கு ஞானநெறியைத் தெரிவிக்கும்வகையில் சின்முத்திரை காட்டும்கை ஒன்றாகும்.

    சீர்காழி எனும் திருத்தலத்தில் ஞானசம்பந்தராக அவதரித்து அந்தணராகிய தமது தகப்பனாருக்கு சிவபெருமானை, ‘தோடுடைய செவியன்’ எனச் சுட்டிக்காட்டிய திருக்கை மற்றொன்றாகும். (குழந்தையான சம்பந்தர் குளக்கரையில் தனியே இருந்து அழுதபோது, உமையம்மையும், சிவபிரானும் விடையேறி வந்து அவருக்கு ஞானப்பாலைப் புகட்டிச் சென்றனர். பின் கரையேறி வந்த அந்தணராகிய தந்தை யார் வந்தனர் எனக்கேட்க, “தோடுடைய செவியன் விடையேறித் தூயவெண்மதி சூடி வந்தனன்,” எனச் சுட்டியது குழந்தை. அதனையே இங்கு குறிப்பிடுகிறார்.)

    மாலையணிந்த பாண்டியமன்னனின் (வேம்பன்) சுரத்தை நீக்கி, அவன் உடல் குளிருமாறு திருநீறு பூசிய கையொன்று! (சமணோரோடான மதவாதத்தில், திருநீற்றைப்பூசி, நின்றசீர் நெடுமாறப் பாண்டியனின் சுரநோயைத் தீர்த்தருளினார் திருஞானசம்பந்தர். அதனை இங்கு நயம்படக் கூறினார் புலவர்.)

    கோலக்கா எனும் ஊரில் பொற்றாளம் கிடைக்கப்பெற்றது ஒருகை. (சிவபிரான் குழந்தை ஞானசம்பந்தருக்கு பொற்றாளங்களை அளித்தது திருக்கோலக்கா எனும் ஊரிலாகும்; அதுவே கூறப்பட்டுள்ளது)

    இக்கைகளால் எல்லாம் எட்டிக்குடிவாழ் முருகா நீ சிறுபறை முழக்கியருளுக! எனப்புலவர் கற்பனை வளம் பெருக வேண்டிப்பாடும் இருபாடல்கள் மிக்க அழகானவையாகும்.

    ‘வருந்தும் பிறவிக் கடனின்று வாங்கி யெம்மைத் தாங்குங்கை
    மண்மேல் வினையி லுழலுங்கால் மயங்கா தஞ்ச லருளுங்கை
    ……………………………………………………………………………………………………
    முருந்து நகையெட் டிக்குடியாய் முழக்கி யருள்க சிறுபறையே
    முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே,’

    ‘இத்தா ரணியார் வானோர்வேண் டியவெல்லாமு மீயுங்கை
    எம்மானருண கிரிசிகரி யிருந்து விழுங்கா லேந்துங்கை
    ……………………………………………………………………………………………………
    கொத்தார் வேம்பன் சுரநீங்கிக் குளிர நீறு பூசுங்கை
    கோலக்காவிற் பொற்றாளங் கொண்ட கையா லுமையளித்த
    …………………………………………………………………………………………………….
    முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே3,’

    என அழகிய இரு பாடல்களில் ஈராறு கரங்களின் பெருமையை எல்லாம் அழகுறப் பேசுகிறார்.
    இப்பாடல்களின் சிறப்பே குழந்தை எனக் கொண்டாடப்பட்டுப் போற்றப்படும் தெய்வத்தை, அதன் குழந்தைமைச் செயல்களுக்காகப் போற்றிவரும் பாடல், ஒரு கட்டத்தில் அக்குழந்தையின் தெய்வத்தன்மையைப் புலவர் உணர்ந்து புகழ்ந்து பாடுவதாக அமைந்துவிடும் அழகுதான்!

    எப்போதும் மோனத்திலிருக்கும் எம்பிரான் சிவபெருமான் அம்மோனநிலை கலைந்து சற்றே அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கிறார். தகப்பனார் சிறிது இவ்வாறு அமர்ந்திருந்தாலும் சிறிய குழந்தைகள் உடனே உரிமையுடன் அவர் தோள்மீதும் மடிமீதும் ஏறி விளையாடுவார்களல்லவா? குழந்தை விநாயகனும் இதற்கு விலக்கல்லவே! ‘குறுகுறு’வென நடந்துவந்து சிவபிரான் மடிமீதேறித் தோள்களை அடைய எத்தனிக்கிறான். குழந்தையின் பூப்போன்ற மேனிஸ்பரிசம் பட்டதும் ஐயனின் திருமேனி அன்பில் குழைந்து இளகுகின்றதாம்! அழகான, நுணுக்கமான, உணர்வுபூர்வமான கற்பனை!

    ஐயனின் தோள்மீதேறி இருகால்களையும் வாகாக இருபுறமும் போட்டுக்கொண்டு குறும்புகள்செய்ய வசதியாக அவருடைய தலையைப் பிடித்தபடி அமர்ந்துகொள்கிறான் விநாயகன். அவனைப் பொறுத்தவரை தன் தந்தையை அழகுசெய்வதாகக் கருதுகிறான். அவருடைய சடைமுடியும், அதிலுள்ள அணிகலன்களும், உடலின் சாம்பல்பூச்சும் அவனுக்குப் பிடித்தமானவையாக இல்லை. தன்விருப்பப்படி அவரை அலங்கரிக்கத் திட்டமிடுகிறான் குழந்தை! அவர் சடாமுடியிலணிந்துள்ள கொன்றைமலர்வேணியினைப் பிடித்திழுத்து உதறி வீசியெறிகிறான். ‘சுடலைப்பொடி பூசிய’ பெருமானின் உடலைக் கழுவ எத்தனிக்கிறான். அதற்கு வாகாக அவருடைய சடையினின்று இழிதரும் கங்கைப்புனலைத் தனது தும்பிக்கையால் பிடித்து உறிஞ்சியெடுக்கிறான். (இக்காலத்தில் வாகனங்களைக்கழுவ ரப்பர்குழாய்களால் நீர் பீய்ச்சுவதைப்போல) அவ்வாறு உறிஞ்சிய நீரை அவர்மீது பீய்ச்சியடித்து சாம்பல்பொடிபடர்ந்த அவரது திருமேனியைக் கழுவுகின்றானாம்!

    புள்ளிகள் நிரம்பிய அரவங்கள், தலையிலணிந்த மாலை, வெண்மையான எலும்புகளாலாகிய மாலை, கையில் அவர் வைத்திருக்கும் மான், இடையிலுள்ள புலித்தோல் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக ‘வெடுக்,வெடுக்’கென எடுத்தெடுத்து அவருடைய கரத்திலுள்ள தீயினில் இட்டுப்பொசுக்குகிறான். பின் தலையிலணிந்த பிறையினை நோக்கி, ‘இது முழுமையான வட்டநிலவாக இல்லையே என்ன செய்யலாம்,’ என ஒருகணம் சிந்திக்கிறான். பிரான் அணிந்திருக்கும் வலிய, வளைந்த ஒரு பன்றிக்கொம்பினை எடுத்து அந்தப்பிறைநிலாவுடன் பொருத்திப்பார்க்கிறான். அட! அது அழகாகப் பொருந்தி வட்டவடிவாகக் காண்கின்றது; குழந்தையின் உள்ளம் மகிழ்கின்றது. இடையில் இந்த மானையும் வைத்தால் முழுநிலவாகுமே எனக்கருதி, மானையும் அதன் நடுவே வைத்துப் பொருத்துகிறான். பின் அந்த முழுநிலவை ஆகாயத்தில் உலவவிடுக்கின்றான்! வான்தரு எனும் தெய்வீகக் கற்பகத்தருவின் மலர்களாலும் இலைகளாலும் அதற்கு மேலும் அழகு செய்கின்றான்.

    இப்போது அவனுக்கு மகிழ்ச்சி பொங்குகிறது. “எல்லாம் பொருத்தமாக அமைந்துவிட்டது! ஒரு குறையும் இல்லை,” எனக்கைகளை அசைத்துக்கூறியபடி பெருமகிழ்ச்சிகொள்கிறான் விநாயகன் எனும் குறும்புக்குழந்தை.

    “இவ்வாறு எல்லாம் செய்து அசைத்து மகிழும் கரங்களால் சிறுபறை முழக்குவாயாக! தென்கோ இருந்தநகரின் செங்கழுநீர் (உற்பலம்) விநாயகனே! நீ சிறுபறை முழக்கி விளையாடி அருளுக,” எனத் தாயாரும் மற்றோரும் வேண்டுவதாக அமைந்த இந்த சிறுபறைப்பருவப்பாடல் தனியழகு கொண்டு விளங்குகிறது. வேறெந்த பிள்ளைத்தமிழிலும் காணாத கருத்தாக, குழந்தை கணேசன் தன் தகப்பனை அலங்கரிக்கும் அழகு, கவிநயமும், சொன்னயமும் மிகுந்து விளங்கும் பாடலினால் பேரழகுடன் விளங்கி நம்மைக் களிப்பிலாழ்த்துகிறது.

    சப்பாணி கொட்டும் கைகள், சிறுபறை முழக்கும் கைகள், இப்போது தந்தையான சிவபிரானையும் அலங்கரித்து மகிழ்கின்றன!

    குறுகுறுந டந்தெய்தி எம்பிரான் திருமேனி
    குழையமே லேறி வேணிக்
    கொத்தினைக் கோட்டினிற் கோத்தலைத் துதறிவான்
    குளிர்புனல் புழைக்கை எற்றிப்
    பொறியரவு தலைமாலை வெள்ளென்பு கைம்மாப்
    புலிச்சரும முதல ணியெலாம்
    பொள்ளென எடுத்தெடுத்து அங்கை அனலிற்பெய்து
    போக்கிஇள மதியை வன்றி
    எறுழுலவை ஒன்றப் பொருத்தித் திருக்கைமான்
    இடைவைத்து முற்று மதிசெய்
    திருவிசும்பு உய்த்துவான் தருத்தரும் பேரணிகொடு
    எங்கணும் அலங்க ரித்து
    சிறுமைஇலை இனியென அசைக்கும் கரம்கொண்டு
    சிறுபறை முழக்கி அருளே
    தென்கோ விருந்தநக ருற்பலவி நாயகன்
    சிறுபறை முழக்கி அருளே4

    இந்த விநாயகக் குட்டனை வாரியணைத்து உச்சிமுகர நமக்குமே உள்ளம் ஆவலில் துடிக்கின்றதல்லவா? பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் அழகியல் பார்வையில் பல தொன்மங்களையும், புராணக் கதைகளையும், கற்பனைக் கதைகளையும் கொண்டு திகழ்ந்தாலும் பல பாடல்கள் அவற்றினை இயற்றிய புலவோரின் திறமையில் அணிநயம், சந்தநயம் கொண்டு மிளிர்வது அவற்றினைப் பயில்வோருக்கு மிக்க இன்பம் பயப்பதாகும். அவ்விதத்தில் இன்று நாம் காணப்போவது புதுக்கோட்டை சமஸ்தானம் திருப்புல்வயலில் எழுந்தருளி இருக்கும் குமரக்கடவுள் மீது வீரபத்திரக்கவிராயர் அவர்கள் இயற்றியுள்ள குமரமலைப் பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடல். இது சிறுபறைப் பருவத்திற்கானதாகும்.

    முற்றும் கற்றுணர்ந்தவர், சந்தநயம் தோன்றி விளங்கப் பாடுவதில் அருணகிரியாரை விஞ்சியவர் கிடையாதென்பர். அதுபோன்றே இப்பாடல் ‘முத்தைத்தரு,’ என்ற திருப்புகழ்ப் பாடலை மிகவும் நினைவுபடுத்துகின்றது. சந்தநயம் மட்டுமின்றி அருணகிரியாரின் பாடல் போன்றே அதே தொன்மத்தைப் பொதிந்து அமைந்தமையும் மிக்க வியப்பைத் தருகின்றது. அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தத் தாக்கத்தினை இப்பாடல்களில் உணரலாம். முதற்கண் பாடலை அதே சந்தநயத்திலேயே பாடிப்பார்த்துக் கொள்ளலாமே!

    ‘முச்சுடர் முக்கண் முதற்கட வுட்கொர்
    முதற்படு பிரணவ மா
    முற்பொரு ளைத்தெரி வித்தகு ருக்கண்
    முகத்தருள் விழியுடை யாய்
    இச்சக மற்றுள வெச்சக முற்றினு
    மிச்சக மொடுபுகழ் வோய்
    இக்குவி லிக்குயர் மைத்துன செச்சை
    யியக்குறு மழகளி றே
    கச்சப மொத்த புறத்தடி மைக்குழல்
    கட்கய லகலிகை யாய்க்
    கற்சிலை யைச்செய் பதத்தர் மகிழ்ச்சி
    கருத்தெழ வருசுதை யாங்
    கொச்சை மொழிக்குயி லைப்புண ருத்தம
    கொட்டுக சிறுபறை யே
    கொற்றவ யிற்கும ரச்சிலை யுற்றவ
    கொட்டுக சிறுபறை யே5,’ என்பன பாடல்வரிகள்.

    அருமையான சந்தநயம்! கருத்துச்செறிவு! பொருள்நயத்தையும் காணலாமா?
    சூரியன், சந்திரன், நெருப்பு ஆகிய மூன்று சுடர்களும் மூன்று கண்களாக விளங்கும் முதற்கடவுள் சிவபிரான்! அவனுக்கு, அந்த முழுமுதற்பொருளுக்கு, பிரணவ மாமந்திரத்தின் பொருளை உணர்த்தியருளிய குருநாதன் குமரப்பெருமான்! இதனைத்தான் அருணகிரிநாதரும், ‘முக்கட்பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து6,’ எனப்பாடினார்.

    தனது ஆறுமுகங்களிலும் இலங்கும் அருள்பொழியும் விழிகளை உடையவன் அக்குமரன். இந்த உலகம் (இச்சகம்) மற்றும் இருக்கின்ற எல்லா உலகங்களிலும் (எச்சகம்) கண்டாலும் இவனை அனைவரும் ஆசையுடன் (இச்சகம், இச்சை) புகழ்ந்து போற்றுகின்றனர். இடுக்கண் (இக்கு) வருங்காலத்து உடன்வந்து காப்பவன் அவனே! ‘மைத்துன!’ என்பது விளியாகக் கொள்ளலாம்.
    செச்சை எனப்படும் சந்தனக்குழம்பினைப் பூசிய இளமையான யானைக்கன்று போல்பவன் இக்குமரன் எனப் பொருள் கொள்ளலாம்.

    ஒரு கற்சிலையை -கருங்கல்லை- தனது திருவடி பட்டதனால் அகலிகையாய் உருக்கொள்ளச்செய்த ‘பதத்தவர்’ எனத் திருமாலை, இராமனைப் போற்றுகிறார். அகலிகையை, ‘ஆமைபோலும் (கச்சபம் ஒத்த) புறங்கால்களைக் கொண்டவள், மைபோலும் கருங்குழலினள், கயல்விழியாள்,’ எனவெல்லாம் வருணிக்கிறார். இராமன் திருவடிபட்டுத் தன் சுய உருவான அகலிகையாய் மாறி அவனுடைய திருவருளுக்கும் உரிமையானவள்; ஆகவே இந்த வருணனைக்கும் அருகதை உடையவள் எனத் தெரிவிக்கிறார்!

    அவ்வாறு செய்த திருமாலின் மனம் மகிழுமாறு வள்ளிக்குறமகளை மணந்துகொண்டவன் இக்குமரன். அக்குறவள்ளியோ மழலைமொழி பேசும் குயில் போன்றவள். ‘இத்தகு செயல்களைச் செய்த உத்தமனாகிய குமரனே, உனது சிறியபறையை முழக்குவாயாக! கொற்றவனே! வில்லேந்திய குமரனே! சிறுபறையை முழக்குவாயாக!’ எனப்புலவர் வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. சிலை என்பதற்கு மலை எனவும் அகராதியில் ஒரு பொருள் உண்டு. ஆகவே, கிரௌஞ்ச மலையைப்பொடி செய்த முருகனே எனவும் பொருள் கொள்ளலாம். முருகனை நாம் வேலேந்திய வடிவத்திலேயே அறிந்தவர்களாதலின் வில்லேந்திய வடிவம் சிறிது ஆச்சரியத்தினை விளைவிக்கும்!

    (திருவையாற்றில் ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி திருக்கோவிலில், முருகனின் ஒரு சிலைவடிவம் வில்லேந்திய நிலையில் காணப்படுகிறது.)

    (வளரும்)

    —————————-&———————–
    பார்வை நூல்கள்:

    1. நற்றிணை- பா 58. வரி-1-4
    2. ஊத்துக்காடு வேங்கட கவி பாடல்
    3. நடேச கவுண்டர்- எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
    4. சிவஞான முனிவர்- கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
    5. வீரபத்திரக் கவிராயர்- குமரமலைப் பிள்ளைத்தமிழ்
    6. அருணகிரிநாதர்- திருப்புகழ்

    Share
  • நாசாவின் வாயேஜர் – 2 அனுப்பும் தகவல்

    நாசாவின் வாயேஜர் – 2 அனுப்பும் தகவல்

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    நாசாவின் வாயேஜர் – 2 விண்கப்பல் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ப் பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்புகிறது

    Image result for VOYAGER 1 , 2 LOCATION
    NASA VOYAGERS 1 AND 2 ARE NOW IN INTERSTELLAR ZONES
    +++++++++++++++++++
    Image result for VOYAGER 1, 2 PRESENT LOCATION
    சூரிய மண்டலம் கடந்த வாயேஜர் -2 விண்கப்பல் 
    +++++++++++++++++++++++++
    Image result for voyager 1 2 pictures
    NASA VOYAGERS 1 AND 2 ARE NOW IN INTERSTELLAR ZONES

    It’s Official! NASA’s Famed Voyager 2 Spacecraft Reaches Interstellar Space

    By Meghan Bartels , Science & Astronomy

    [December 10, 2018]

    நாசாவின் வாயேஜர் -2  விண்கப்பல்  அண்டைப் பரிதி மண்டலத்தில் பயணம்  செய்து தகவல் அனுப்புகிறது.

    நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பயணம் செய்து நாசாவின் வாயேஜர் -2 விண்கப்பலும், வாயேஜர் -1 போல் நமது சூரிய  மண்டல விளிம்பைத் தாண்டி  நவம்பர் 5 , 2019 இல் அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்பி  அண்ட வெளி வரலாற்றுச் சாதனை  புரிந்துள்ளது.  இது மனிதன் செய்த ஓர் மகத்தான யந்திரம்.  துகள்கள் நிரம்பி, காந்த வெளியான நமது சூரிய குடும்பத்தின் பாதுகாப்புக் கோள விளிம்பைக் [Heliosphere] கடந்து போய் உள்ளது.   அந்த எல்லைக் கோளத் தடை அரங்கு, ஹீலியோபாஸ் [Heliopause] எனப்படுவது.  ஆந்த அரங்கில்தான் நமது வெப்பமய சூரியப் புயல், குளிர்ந்து போன  அண்டைப் பரிதி மண்டலப் புயலைக் குறுக்கிடுகிறது.  வாயேஜர் -1 விண்கப்பல் 2012 இல் இந்த கோள விளிம்பைத் தாண்டிச் சென்றுள்ளது.  வாயேஜர் -2 விண்கப்பல் இந்த வெளிவாசல் அமைப்பை உளவும் கருவிகள் கொண்டுள்ளதாக நாசா அறிவிக்கிறது.

    வாயேஜர் -2 விண்கப்பல் பூமியிலிருந்து  இதுவரை 11 பில்லியன் மைல் [18 பில்லியன் கி.மீ.] பயணம் செய்துள்ளது.  இன்னும் பூமியில் உள்ள கட்டளை அறையிலிருந்து, விஞ்ஞானிகள் வாயேஜர் -2 அனுப்பும் தகவலைப் பெற்றுக் கொண்டு வருகிறார்.  ஒளிவேகத்தில் வரும் அந்த தகவல் பூமிக்கு வந்து சேர 16.5 மணி நேரம் ஆகிறது.  வாயேஜர் -2 இல் உள்ள சூரியப் பிழம்பு உணர் கருவிதான்  [Plasma Science Experiment], விண்கப்பல் சூரிய விளிம்புக் கோளத்தைத் தாண்டி உள்ளது என்று உறுதியாகத் தெரிவித்தது. இந்தக் கருவி வாயேஜர் -1 விண்கப்பலில் 1980 இல் பழுதாகி விட்டது.  நமது  சூரியப் பிழம்புப் புயல் வேகம், திரட்சி, உஷ்ணம், அழுத்தம்  அனைத்தும் அளப்பது அந்த உணர் கருவிதான்.  சூரிய மண்டல விளிம்பைக் கடக்கும் போது, பிழம்புப் புயல் தளர்ச்சி அடைவதைக் கருவி அளந்து, வாயேஜர் -2 அடுத்த பரிதி மண்டலத்தில் தொடர்ப் பயணம்  செய்வதை அறிவித்துள்ளது.

    +++++++++++++++++++++++++++++++

    ++++++++++++++++++

    1. https://youtu.be/rl1gtC6kuPg
    2. https://youtu.be/L4hf8HyP0LI
    3. https://youtu.be/prYDgWDXmlQ
    4. https://youtu.be/AbZ-6CcKw5M
    5. https://youtu.be/seXbrauRTY4
    6. https://youtu.be/rl1gtC6kuPg

    https://voyager.jpl.nasa.gov/

    https://en.wikipedia.org/wiki/Voyager_1

    https://en.wikipedia.org/wiki/Voyager_2

    https://www.nasa.gov/mission_pages/voyager/index.html

    See the source image

    ++++++++++++

    நாற்பதாண்டுகள் பயணம் செய்து
    நாசாவின் விண்வெளிக்
    கப்பல்கள் இரண்டு
    சூரிய மண்ட லத்தின் காந்த
    விளிம்புக் குமிழைக்
    கடக்கும் !
    அண்டைப் பரிதி மண்டலத்தை
    நெருங்கும்  !
    நேர்கோட் டமைப்பில் வந்த
    சூரியனின்
    வெளிப்புறக் கோள்களை
    விண்கப்பல் இரண்டும்,
    உளவுகள் செய்யும் !
    நெப்டியூனின் நிலவை,
    கருந் தேமலை,
    பெரும் புயலைக் காணும் !
    நாலாண்டுத் திட்டப் பயணம்
    நீள்கிறது
    நாற்பது ஆண்டுகட்கும் மேலாய் !
    அண்டைப் பரிதி மண்டலத்தின்
    அன்னிய கோள்களுக்கு
    சின்னமாய் எடுத்துச் செல்லும் நமது
    ஞாலக் கதை சொல்லும்
    காலச் சிமிழை !

    +++++++++++++++++

    See the source image

    See the source image

    நாற்பது ஆண்டுகள் கடந்து தொடர்ந்து பயணம் செய்யும் நாசாவின் அகிலத் தாரகை விண்ணுளவிகள் [Interstellar Probes]  

    [2018 அக்டோபர் 5 ]

    நாசாவின் விண்வெளி உளவி வாயேஜர் -2  நாற்பத்தி ஒன்று ஆண்டுகளாய் நெடுந்தூரம் பயணம் செய்து, நமது சூரிய மண்டலக் காந்த விளிம்பில் ஊர்ந்து, சூரிய ஏற்பாடுக்கு அப்பால் எழும்  தீவிர அகிலக்கதிர்கள் [Intersellar Cosmic Rays] தாக்குவதை அறிவித்துள்ளது. 1977 இல் ஏவப்பட்ட வாயேஜர் -2 விண்ணுளவி பூமியிலிருந்து சுமார் 11 பில்லியன் மைல் [17.7 பில்லியன் கி.மீ.] தூரத்தில் [2018 செப்டம்பர் 5 ] போய்க் கொண்டுள்ளது.  2007 ஆண்டு முதல் வாயேஜர் -2 சூரிய மண்டலக் காந்தக் குமிழியின் விளிம்பு வெளிப்புறக் கோள அடுக்கில் [Heliosphere] பயணம் செய்கிறது. அதற்குப் பிறகு எல்லையில் உள்ள சூரிய விளிம்பு நிறுத்த வரம்பை [Heliopause]  விண்ணுளவி வந்தடையும்.  அந்த வரம்பைக் கடந்ததும் வாயேஜர் -2 விண்ணுளவி, முதல் வாயேஜர் -1 போல் அகிலத் தாரகை அரங்கில் [Interstellar Space] நுழைந்த இரண்டாவது விண்கப்பல் சாதனையாக இருக்கும். 2012 இல் முதல் வாயேஜர் -1   சூரிய மண்டலக் காந்த விளிம்பை கடந்து அகிலத் தாரகை அரங்கில் நுழைந்து விட்டது.

    See the source image

    See the source image

    சென்ற 2017 ஆகஸ்டு முதல், வாயேஜர் -2 விண்ணுளவி  உயர்சக்தி அகிலக் கதிர்கள் [High Energy Cosmic Rays] தாக்குதல் 5% மிகையாகி உள்ளது. வெகு வேகமாய்ச் செல்லும்  அகிலக் கதிர்கள் சூரிய மண்டலத்துக்கு அப்பாலிருந்து வருபவை.  இதேபோல் 2012 இல் வாயேஜர் -1 விண்ணுளவியும்  5% மிகையான  தீவிர அகிலக் கதிர்கள் தாக்குதல் பெற்றுள்ளது.

    +++++++++++++++++++

    “இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012].  விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வரம்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”

    ராபர்ட் டெக்கர் [John Hopkins University in Maryland]

    சூரிய மண்டலத்தின் காந்த விளிம்பு பற்றிய மகத்தான முக்கிய தகவலை  வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.

    ரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]

    “வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”

    எட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)

    “பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் !  அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”

    ஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)



    “வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே !  175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது.  தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.

    ஹாரிஸ் சூர்மையர் (Harris Schurmeier, Voyager Project Manager) (1970 -1976)

    “வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் !  நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன்.  ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”

    டாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)

    நாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள்.  அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு.  அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.

    நாசா வெளியிட்ட அறிக்கை

    புதிய வரலாற்று மைல் கல் நாட்டும் வாயேஜர் விண்கப்பல்கள்

    35 ஆண்டுகளாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது.   இது நாசா விஞ்ஞானிகளின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது.   10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் இன்னும் பணி புரிந்து வருகின்றன.   சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது.  இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன.   அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.

    2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ]  தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது.   இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது.  இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம்  [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது.   அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.

    இரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயுள் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries].  அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  வாயேஜர் -1 விண் கப்பலிலிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.

    நாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்

    2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார்.  அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும்.  மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.

    ஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார்.  திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார்.  ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது.  பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.

    வாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது.  அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.

    இப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன !

    “வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.

    வாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது,  175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன.  அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.

    புறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்

    1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது.  அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது.  வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது !

    மேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது !  2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன !

    வாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின.  வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர்.  அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது !

    பரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் !

    வாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன.  பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம்.  வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம்.  இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன !  அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன.  அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும்.  எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம்.  வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் !

    வாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது !  ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG).  முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ்.  1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது.  2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ்,  மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன.  இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் !

    கார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை

    இன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும்.  2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன.  உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார்.  படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன.  நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடையாக இருக்கும்.

    ———————–

    *************************

    படங்கள்:  BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html(Jupiter)

    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html(Saturn)

    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html (Uranus & Neptune)

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 205)

    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)

    7.  Space Travel :   Mankind’s Messenger [Voyager 1 & 2]  at the Solar System  Frontier  [September 5, 2012]

    8.  http://en.wikipedia.org/wiki/Voyager_1   [September 8, 2012]

    9.  http://www.history.com/news/6-fascinating-facts-about-space-probe-voyager-1  [September 5, 2012]

    10.  http://voyager.jpl.nasa.gov/mission/interstellar.html  [Interstellar Mission]

    11. https://www.theguardian.com/science/2015/mar/15/voyager-1-and-2-space-journey-nasa  [March 15, 2015]

    12.https://www.nasa.gov/mission_pages/voyager/index.html [September 2017]

    13.  https://www.nasa.gov/press-release/nasa-s-voyager-spacecraft-still-reaching-for-the-stars-after-40-years  [July 31, 2017]

    14. https://www.space.com/37775-nasa-voyager-mission-40-years-launch.html  [August 12, 2017]

    15. https://www.jpl.nasa.gov/news/news.php?feature=7252&utm_source=iContact&utm_medium=email&utm_campaign=nasajpl&utm_content=daily20181005-1  [October 5, 2018]

    16.  https://en.wikipedia.org/wiki/Voyager_2  [October 5, 20128]

    17.  https://en.wikipedia.org/wiki/Voyager_1  [October 7, 2018]

    18. https://voyager.jpl.nasa.gov/mission/

    19.  https://voyager.jpl.nasa.gov/mission/status/

    20. https://en.wikipedia.org/wiki/Voyager_1

    21. https://en.wikipedia.org/wiki/Voyager_2

    22. https://voyager.jpl.nasa.gov/news/details.php?article_id=48

    22. https://www.space.com/interstellar-probe-science-of-solar-system.html?utm_source=Selligent&utm_medium=email&utm_campaign=9486&utm_content=20191031_SDC_Newsletter+-+adhoc+&utm_term=2989398&m_i=HvLHmPDPTM7BwoB4Wa43OJCbTuoGQmmGTWu_CzsgKtLlQFgz_qG5zZWt_fEtPQ14ZY25VJY1EUz4P_VntMaeWJEC%2B3EWGhHHHO [October 30, 2019]

    Share
  • எங்கிருந்து வருகிறது?

    எங்கிருந்து வருகிறது?

    -சு.திரிவேணி
    இந்த முறையும் நிகழ்ந்தே விட்டது
    எப்படியோ ஒவ்வொரு தடவையும்
    தவறிவிடுகிறது
    என் மகனுக்கான முதல் பரிசு.
    குழந்தை முகம் வாடிப்போகுமென்ற
    கவலை முள்ளாய்க் கீறியது!
    ஆதரவாய் அணைத்துக் கொள்ள வேண்டும்
    பூவை வருடும் தென்றலாய்
    மெல்லத் தலை கோத வேண்டும்!
    நீ நன்றாகத்தான் செய்தாய் என
    மனம் தேற்ற வேண்டும்!
    இரண்டாம் பரிசுக் கோப்பைதான்
    அழகாய் இருப்பதாக
    சத்தியம் செய்ய வேண்டும்!
    சூழ்ந்து வரும் மலர் முகங்களில்
    என் மழலை முகம் தென்படுகிறதா?
    சமாதான ஒத்திகைகளோடு
    தேடிய நான் திகைத்துப் போனேன்
    இயல்பாய் அவன் தேற்றிக் கொண்டிருந்தான்
    மூன்றாம் பரிசுக் குழந்தையை!
    குழந்தமையில் பெருந்தன்மையும்
    பெரியவர்களிடையே குழந்தைத் தன்மையும்
    எங்கிருந்துதான் வருகிறது?
    படம் – Vector stock
    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 75

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 75

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    75.அரண்

    குறள் 741:

    ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் 
    போற்று பவர்க்கும் பொருள்

    படையெடுத்து சண்டபோடுதவங்களுக்கு கோட்டை ஒதவியா இருக்கும். சண்ட போடப்பயந்து உள்ள பதுங்கி இருக்க நெனைக்கவங்களுக்கும் கோட்டை உதவியா இருக்கும். 

    குறள் 742:

    மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடைய தரண்

    தெளிவான தண்ணி, வெட்ட வெளி, ஒசரமான மலை, அழகான நிழல் தருத காடு இந்த நாலும் இருக்கது தான் அரண். 

    குறள் 743:

    உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
    அமைவரண் என்றுரைக்கும் நூல்

    ஒசரம், அகலம், பலம், பகையாளியால அழிக்க ஏலாத அமைப்பு இந்த நாலும் அமஞ்சிருக்கதுதான் கோட்டை னு படிச்சவுக சொல்லுவாக. 

    குறள் 744:

    சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
    ஊக்கம் அழிப்ப தரண்

    காவல் செய்ய வேண்டிய இடம் சிறுசாவும்  கோட்டையோட சுற்று பெரிசாவும் , சண்ட போட வருத பகையாளிக்கு மலைப்பத் தருததாவும் இருக்கது அரண். 

    குறள் 745:

    கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
    நிலைக்கெளிதாம் நீர தரண்

    பல நாள் முற்றுகைக்குப் பொறவும் எதிரியால கைப்பத்த முடியாம, உள்ள இருக்க மக்களுக்கும், படை வீரர்களுக்கும் தேவைப்படுத சாப்பாட்டு வசதியோட, பகையாளி கூட சண்ட போட ஏதுவாவும் அமச்சிருக்கதே அரண் ஆவும்.   

    குறள் 746:

    எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்
    நல்லா ளுடைய தரண்

    உள்ள இருக்கவங்களுக்கு தேவைப்படுத எல்லாம் இருக்கதாவும், வெளியில இருக்க பகையாளி கூட சண்ட போட பலசாலி வீரர்களைக் கொண்டதாவும் இருக்கது அரண். 

    குறள் 747:

    முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
    பற்றற் கரிய தரண்

    சுத்திவளச்சோ, வளைக்காமலோ, சூதுவாது செஞ்சோ என்னமும் செஞ்சும் பகையாளியால கைப்பத்த முடியாமப் போவுத பலம் கொண்டது அரண். 

    குறள் 748:

    முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
    பற்றியார் வெல்வ தரண்

    சுத்தி வளச்சி முற்றுகையிட்டவங்களையும் உள்ள இருந்துக்கிட்டே சண்டபோட்டு வெரட்டதுக்கு ஏதுவா அமஞ்சது அரண். 

    குறள் 749:

    முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
    வீறெய்தி மாண்ட தரண்

    சண்ட தொடங்கின பொறவு உள்ள இருந்துக்கிட்டே தாக்குத அளவு தனிச் சிறப்பு கொண்டது அரண்.

    குறள் 750:

    எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
    இல்லார்கண் இல்ல தரண்

    எல்லா சிறப்பும் இருக்க கோட்டையில உள்ள இருக்கவங்க சண்ட போடுத தெறம இல்லாம இருந்தாங்கன்னா பிரயோசனம் இல்ல. 

    (அடுத்தாப்லையும் வரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(273)

    குறளின் கதிர்களாய்…(273)

    -செண்பக ஜெகதீசன் 

    நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்
    பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
    -திருக்குறள் -924(கள்ளுண்ணாமை)

    புதுக் கவிதையில்…

    யாரும் விரும்பாத
    கள்ளுண்ணல் என்னும்
    கொடுங்குற்றத்தை
    விடாமல் செய்வார்முன்,
    நாணம் என்னும்
    நல்லவளும்
    நில்லாமல் சென்றிடுவாள்…!

    குறும்பாவில்…

    தகாதசெயலாம் கள்ளுண்ணல் பெருங்குற்றம,;
    அதைச்செய்வாரை விட்டுவிலகிச் சென்றிடுவாள்
    நாணம் என்னும் நல்லவள்…!

    மரபுக் கவிதையில்

    நல்லவள் நாணமாம் நங்கையவளும்
    நீங்கியே புறமது காட்டிடுவாள்,
    நில்லா துடனே போய்விடுவாள்
    நிரந்தர மாகப் பிரிந்தேதான்,
    பொல்லா தெனவே பிறர்விரும்பாப்
    பெரிய குற்றமாம் கள்ளுணலைத்
    தொல்லை யென்றே அறிந்திருந்தும்
    தொடர்ந்து தீதிதைச் செய்வார்க்கே…!

    லிமரைக்கூ..

    கள்ளைக் குடிப்பார் விரும்பி,
    குற்றமிதைத் தொடர்வோரை விட்டுச்செல்வாள்
    நாணமெனும் நல்நங்கை திரும்பி…!

    கிராமிய பாணியில்…

    குடிக்காத குடிக்காத
    கள்ளக் குடிக்காத,
    குத்தமுண்ணு தெரிஞ்சியுமே
    கள்ளக் குடிக்காத..

    செய்யக்கூடாத செயலுண்ணு
    தெரிஞ்சிருந்தும் கள்ளுகுடிக்கிற
    தவறுயித
    உடாமச் செய்யிறவன
    உட்டு வெலவியே
    வெக்கங்கிற நல்லவளும்
    ஓடிடுவாளே திரும்பியே..

    அதால
    குடிக்காத குடிக்காத
    கள்ளக் குடிக்காத,
    குத்தமுண்ணு தெரிஞ்சியுமே
    கள்ளக் குடிக்காத…!

     

    Share
  • தமிழகம் கண்ட ஆன்மிகச் சீர்திருத்தவாதி!

    தமிழகம் கண்ட ஆன்மிகச் சீர்திருத்தவாதி!

    -மேகலா இராமமூர்த்தி

     

    இந்திய வரலாற்றில் அரசர்களுக்கு இணையான புகழொடு திகழ்பவர்கள் வள்ளல்கள். முதலெழு வள்ளல்கள், இடையெழு வள்ளல்கள், கடையெழு வள்ளல்கள் என்று இவர்களை மூவகைப்படுத்திச் சொல்வார்கள். இவ்வரிசையில் கடையெழு வள்ளல்களே தமிழ்மரபில் தோன்றிய சிறப்புக்குரியவர்களாய்த் திகழ்கிறார்கள். அவ்வழிவந்த 19ஆம் நூற்றாண்டு வள்ளலே வள்ளலார் என்று தமிழக மக்களால் அன்போடும் பக்தியோடும் அழைக்கப்படும் இராமலிங்க அடிகள்.

    தமிழ்நாடு செய்த தவத்தின் பயனாய், தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் 1823ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் நாள் இராமையா பிள்ளைக்கும் சின்னம்மையார்க்கும் மகவாய்த் தோன்றினார் இராமலிங்கர்.

    தாம் இப்புவியில் பிறந்த காரணத்தை,

    ”அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்
              திருந்த உலகர் அனைவரையும்
         சகத்தே திருத்திச் சன்மார்க்க
              சங்கத் தடைவித் திடஅவரும்
         இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்
              திடுதற் கென்றே எனைஇந்த
         உகத்தே இறைவன் வருவிக்க
              உற்றேன் அருளைப் பெற்றேனே” 5485) என்று என்று நமக்கு அறியத் தருகின்றார்.

    இளமையிலேயே திருத்தணிகை முருகனின் அருட்காட்சியைக் கண்ணாடியில் கண்டவராக அறியப்படும் அடிகளார், முறையாகக் கல்விபயிலாமலேயே அனைத்தையும் இறையருளால் முற்றாகக் கற்றவர் என்பதற்கு அவருடைய பாடல்களிலேயே அகச்சான்றுகள் கிடைக்கின்றன.

    ”சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
    தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
    ஆதிநடுக் கடைகாட்டாது அண்டபகி ரண்டம்
     
    ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
    ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
    ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
    சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
    தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே”
    என்கிறார்.

    இவ்வாறு முறையாகக்கல்வி பயிலாமலேயே ஞானம் கைவரப் பெற்றவர்களைச் சாமு சித்தர்கள் என்றழைப்பார்கள். அவர்கள் முற்பிறவிகளில் செய்த சரியை கிரியை யோகம் முதலிய உயர்செயல்களின் பயனாய் இப்பிறவியில் ஞானமார்க்கத்தில் நின்று சித்திபெறுவதற்கென்றே பிறந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

    “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி  ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து”
    எனும் குறளின் கருத்துக்கு அடிகளின் வாழ்க்கை சிறப்பாய்ப் பொருந்துகின்றது எனலாம்.

    இளமையில் முருகனைத் தம் வழிபடு கடவுளாகக் கொண்டிருந்த வள்ளல் பெருமானார், திருஞானசம்பந்தரை வழிபடு குருவாகவும், திருவாசகத்தை வழிபடு நூலாகவும் கொண்டிருந்தார் என்பதனை அவர் வாழ்க்கை வரலாறு உணர்த்துகின்றது.

    சென்னையில் 35 அகவை வரை வாழ்ந்த அவர், தம் பன்னிரண்டாம் அகவை தொடங்கி 35ஆம் அகவை வரை நிதமும் திருவொற்றியூருக்குச் சென்று இறைவனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒற்றியூரில் கோயில்கொண்டிருக்கும் ஒற்றியப்பரையும், வடிவுடையம்மையையும்,  முருகனையும் பல பதிகங்களில் பாடிப் பரவியிருக்கின்றார்.

    திருவொற்றியூரிலுள்ள நந்தியோடை அடிகளாருக்கு மிகவும் விருப்பமான இடமாகும். அந்த நந்தியோடையின் கரையிலே தென்னஞ்சோலையின் ஒருமருங்கிலே அமர்ந்து, மெல்லென வீசுங்காற்றை நுகர்ந்தும், ஓடையிலே ஓடும் தெண்ணீரின் ஓட்டத்தைக் கண்டும் அதனை உண்டு மகிழ்ந்தும், மரநிழலின் அருமையை ஆரத்துய்த்தும் இன்புற்ற பொழுதெல்லாம் இறைவன் திருவருள் நலத்தையும் உன்னி உன்னி அதன்கண் திளைப்பார் அவர்.

    இத்திளைப்பே பின்னர் அவர் பாடிய செய்யுள் ஒன்றிலே திறம்பட வெளிப்படுவதாயிற்று. அச்செய்யுள் இயற்சொற்களால் இயன்றுளதேனும், திட்பமும் நுட்பமும் பெற்றுப் பலநோக்குடன் திகழ்வதைக் காணலாம்.

    கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
              குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
         ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
              உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
         மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
              மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
         ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
              ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே”

    வள்ளலார் ஒற்றியூரில் வாழ்ந்தகாலத்தே நிகழ்ந்த வியத்தகு செயல்கள் சிலவற்றை அறிந்துகொள்வோம்.

    திருவொற்றியூர்த் தேரடித் தெருவில் ஒரு வீட்டுத் திண்ணையில் நீண்ட நாள்களாகத் துறவி ஒருவர் இருந்துவந்தார். அவர் உடை ஏதும் உடுத்துவதில்லை. தெருவழியாகப் போவோர் வருவோரையெல்லாம் அவரவர் குணங்களுக்கேற்ப, ‘மாடு போகிறது, கழுதை போகிறது, நாய் போகிறது, நரி போகிறது’ என்று சொல்லிக் கேலிசெய்து கொண்டிருப்பார்.

    அடிகள் திருவொற்றியூருக்குச் செல்லும்போதெல்லாம் தேரடித்தெரு வழியாகச் செல்வதில்லை. தெற்குமாட வீதியிலுள்ள நெல்லிக்காய்ப் பண்டாரச் சந்தின் வழியாகச் சென்று கோயிலை அடைவதே வழக்கம். நெல்லிக்காய் ஊறுகாய்ப் பக்குவமாய்ச் செய்து அன்பர்களுக்கு இடும் பண்டாரமொருவர் அச்சந்தில் வசித்ததால் அஃது அப்பெயர் பெற்றது.

    அடிகளும் உடன்செல்வோரும் சிற்சில சமயங்களில் அப்பண்டாரத்தின் வீட்டில் உண்பதுண்டு. வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் அடிகள் தேரடித் தெரு வழியாகச் சென்றார். அன்று புதிதாக அடிகளைக் கொண்ட அத்துறவி, “இதோ ஓர் உத்தம மனிதன் போகிறான்!” எனக் கூவியவாறே தமது கைகளால் மெய்யைப் பொத்திக்கொண்டார். அடிகள் அவரிடம் சென்று சற்று அளவளாவினார். அதன்பின்னர் அந்நிர்வாணத் துறவியார் அங்கில்லை. அன்றிரவே அவ்விடம் விட்டகன்றார். அடிகளைக் காண்பதற்காகவே அவர் அத்தனை நாள் அங்கே காத்திருந்தார் போலும்!

    இதுபோன்றே, மற்றொருநாள் நள்ளிரவில் பசியோடு தம்வீட்டு வாயிற் திண்ணையில் அடிகளார் படுத்திருந்தபோது, ஒற்றியூர் அன்னையான வடிவுடையம்மை தம் அண்ணியாரின் கோலத்தில் வந்து தமக்கு அமுதளித்துப் பசிபோக்கியதை நெகிழ்ச்சியோடு தம் பாடலில் பதிவுசெய்திருக்கின்றார் வள்ளல் பெருமானார்.

    இராமலிங்கர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவருட்பா என்று அழைக்கப்படுகின்றது. ஆறு திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ள அத் திருப்பாடல்களின் எண்ணிக்கை 5818 ஆகும். இவையன்றி அடிகளார் அவ்வப்பொழுது தம் நண்பர்களுக்குக் கடிதமாகவும் சிறப்புப் பாயிரமாகவும் எழுதிய தனிப்பாடல்களும் பலவுள.

    உரைநடை நூல்கள் அரிதாகத் தோன்றிய அப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் இரண்டு உரைநடை நூல்களை அடிகளார் எழுதியுள்ளார்.

    மனுமுறை கண்ட வாசகம் என்பது, ‘வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோனா’கிய மனுச்சோழன் முறைசெய்த வரலாற்றைக் கூறுவது.

    அடிகளார் பதிப்பித்த நூல்கள் மூன்று. அவை ஒழிவிலொடுக்கம், தொண்டமண்டல சதகம், சின்மய தீபிகை என்பன.

    தொண்டமண்டல சதகத்தின் நூற்பெயர் இலக்கணம் குறித்த விளக்கத்தின் இறுதியில் இந்நூல் தொண்ட மண்டலமா, தொண்டை மண்டலமா என்று வினவுவோருக்கு விடையளிக்கும் வகையில்,

    ”ஆதொண்டச் சக்கரவர்த்தி என்பவர் தாம் அரசு செய்யும் காலத்தில் தம்மால் கட்டுவித்த ஆலயங்களில் தம் பெயரிலச்சினையைச் சிலையின்கண் பொறிப்பித்தனர். ஆண்டும் ஆதொண்ட என்றே இலக்கண அமைதி பெற்றிருக்கின்றது. இதனைத் திருவலிதாயம், திருமுல்லைவாயில் முதலிய சிவதலங்களில் சென்றேனும் கண்டு தெளியக் கடவர்” என்று கல்வெட்டுச் சான்றுகாட்டி முடிக்கின்றார்.

    திருவலிதாயம், திருமுல்லைவாயில் கல்வெட்டுக்களில் ‘தொண்ட மண்டலம்’ என்றே காணப்படுகின்றது என்று அடிகள் கல்வெட்டுச் சான்றாதாரம் காட்டுவதிலிருந்து அவர் திருக்கோயில்களுக்குச் செல்லுங் காலங்களில் கோயிலின் கட்டடக்கலை, சிற்பக்கலை கல்வெட்டுக்கள் ஆகியவற்றை ஆராயும் வழக்கமுடையவர் என்பதை அறிகின்றோம். அவ்வகையில் தமிழகத்தின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் இராமலிங்க அடிகளே எனக் கருதுவதில் பிழையில்லை.

    சிறந்த தமிழ்ப்பற்றாளரான அடிகளார், ஒருமுறை சென்னையில் சங்கராசாரிய சுவாமிகளுடன் உரையாட நேர்ந்தபோது சங்கராசாரியார் சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கூறியிருக்கின்றார். அதைக்கேட்ட அடிகளார், அஃது உண்மை அன்றென மறுத்ததோடல்லாமல், சமஸ்கிருதம்தான் தாய் என்றால் தமிழே தந்தைமொழி எனக்கூறித் தமிழின் சிறப்பை விளக்கியிருக்கின்றார். அத்தோடு அமையாது, தமிழ்மொழியே அதிசுலபமாகச் சுத்த சிவானுபூதியைக் கொடுக்கவல்லது என்பதையும் தெளிவாய்ச் செப்பியிருக்கின்றார்.

    இறைநம்பிக்கை மிகுந்தவராக வள்ளலார் விளங்கியபோதினும், ஒற்றுமைக்கும், உண்மைக்கும் புறம்பான வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலியவற்றை மறுத்து அவற்றின்மீது லட்சியம் வைக்கத் தேவையில்லை என்கின்றார். இவற்றால் ஒரு பயனும் இல்லை, இவை சூதாகச் சிலவற்றைச் சொல்ல வந்த புனைந்துரைகள் எனவும் விளம்பிச் சனாதனக் கொள்கைகளின் வேரில் வெந்நீரை ஊற்றுகின்றார்.

    கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்
    கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக… (3768)

    என்று கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளைக் கருணையின் வடிவான வள்ளலார் கடுமையாய்ச் சாடுகின்றார். நால்வருணம் என்னால் படைக்கப்பட்டிருக்கின்றது என்று பகவத்கீதையில் கண்ணன் உபதேசிப்பதாய் உள்ளது. ஆனால் வள்ளலாரோ,

    “நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
    நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே
    மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவார் இலை …. (4174)

    என்று தமது சீர்திருத்தத்தை அருட்பாவில் காட்டிச் சமுதாயப் பாகுபாட்டைச் சாடுகின்றார்.

    தெய்வத்தை வழிபடுவதற்கு இடைத்தரகர்கள் தேவையில்லை என்றுரைக்கும் அவர், தெய்வத்திற்காக அதிகப் பொருட்செலவில் செய்யப்படும் பூசைகள், சடங்குகள் போன்றவற்றையும் மொட்டையடித்தல், காதுகுத்துதல், காவடி எடுத்தல், தீ மிதித்தல், தேர் இழுத்தல் முதலியவற்றையும் பக்குவமும் பகுத்தறிவுமற்ற செயல்கள் என்று துணிந்துரைக்கின்றார்.

    செத்தவர்களுக்கு செய்யும் பித்ரு காரியங்களான கருமாதி, திதி முதலிய சடங்குகளைக் கூட வீணாகப் பயனின்றிச் செய்யாமல் அந்த நாளில் அவர்களை (இறந்தவர்களை) நினைத்து ஏழைகளுக்கும், பசித்தவர்களுக்கும் அன்னதானம் செய்ய வலியுறுத்துகின்றார். பெண்களிடம் தாலி வாங்கும் சடங்கை ஒழிக்கவேண்டும். பிணத்தை எரிக்காமல் புதைக்கவேண்டும் என்பனவும் வள்ளலாரின் கொள்கைகளாகும்.    

    சமரசத்தையும், சீவகாருண்யத்தையும் வள்ளலாரைப்போல் ஆழமாகவும், அழுத்தமாகவும் வலியுறுத்தியவர்கள் வேறு எவருமில்லை எனலாம். 

    ”அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்!
    ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்!”
    எனும் தம்முடைய உயர்ந்த எண்ணத்தைத் தமிழ் விண்ணப்பமாக இறைவனிடம் வைத்தவர் அவர்.

    ”கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா வுயிரும் தொழும்”
    எனும் குறளுக்கு இலக்கணமானவர்.

    வாழ்வுக்கு வழிகாட்டும் வள்ளுவத்தை மக்களுக்குப் பாடமாக்கிச் சொல்ல திருக்குறள் வகுப்பை முதன்முதலில் தொடங்கிய ஆசான் அவர். எளிமையும் தன்னடக்கமும் வலிமையானவை என்பதை அண்ணல் காந்தியடிகளுக்கும் முன்னதாய்ச் செயலில் காட்டியவர். கூறுபோட்டு மனிதர்களைக் கொள்ளைகொண்ட சாதி, மதப் போக்குகளுக்கு இடையில் சோறுபோட்டு அவர்களுக்குச் சாகாக் கலையைச் சொல்லிக்கொடுக்கக் கடைவிரித்தவர்.

    மதங்கடந்த மனிதநேயம், அதனையும் கடந்த ஆன்மநேயம் என்பதுதான் இராமலிங்க வள்ளலின் முடிமணியான கோட்பாடாய்த் திகழ்ந்தது. துன்புறும் உயிர்களுக்காக மட்டுமின்றி, வாடிய பயிர்களுக்காவும் வாடிநின்ற அந்தப் பேரருளாளரைப் போற்றுவோம்; அவர் வகுத்தளித்த கொலை புலை தவிர்த்த நன்னெறிப் பாதையில் பயணிப்போம்!

     கட்டுரைக்கு உதவியவை:

    1. http://www.tamilvu.org/ta/library-l5F31-html-l5F31noo-144976
    2. இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள், சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்.
    3. http://www.vallalar.org/tamil

     

    Share
  • செந்திருவே! கந்தவேளே!

    செந்திருவே! கந்தவேளே!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா
     
    விழிக்குத் துணையானாய் எங்கள்
    மொழிக்கும் துணையானாய்
    பழிக்குப் பகையானாய் நாளும்
    வழிக்குத் துணையானாய்!
     
    அழிக்கும் பகையனைத்தும் நில்லா
    நிலைக்குக் களனானாய்!
    இமைக்கும் விழியில் என்றும்
    இருக்கும் கதிர்வேலா!
     
    தந்தைக்குப் பாடமுரைத்தாய் அதனால்
    தரணிக்கே குருவானாய்!
    சொந்தமுடன் கந்தனென்பார் வாழ்வைச்
    சோதனைக்குள் சிக்கவைப்பாய் !
     
    உந்தனது சோதனையால் நாளும்
    உழலுகின்ற பக்தர்தமை
    செந்திருவே கந்தவேளே விரைவில்
    சிறப்படையச் செய்திடப்பா!
    Share
  • படக்கவிதைப் போட்டி – 230

    படக்கவிதைப் போட்டி – 230

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முகமது ரபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (03.11.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share