Blog

  • ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம்

    ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம்

    சிவ சேனையின் செய்தியறிக்கை

    தொடர் வண்டிகள் இல்லை. எந்திரக் கப்பல்களோ, வள்ளங்களோ இல்லை வானூர்திகள் இல்லை.  மகிழுந்துகள், பேருந்துகள், சரக்குந்துகள், உழவுந்துகள், மலையுந்துகள் எதுவுமே இல்லை.

    ஆனாலும் பயணித்தார். மக்களுக்காகப் பயணித்தார். நாட்டுக்காகப் பயணித்தார். மரபுகளைப் பேணப் பயணித்தார். பண்பாட்டை வாழவைக்கப் பயணித்தார்.

    தனக்காக எதையும் வைத்திருக்கவில்லை, சேமிக்கவில்லை, விட்டுப் போகவும் இல்லை.

    நமது மண், நமது நீர், நமது வானம், நமது காற்று, நமது முன்னோர் இவற்றோடு வாழ்ந்தனர். ஒவ்வொரு செயலும் சோதனையே. நன்மை தருவனவோ? தீமை தருவனவோ? நன்மை தருவனவற்றைப் பெருக்குவதும் தீமை வருவனவற்றை ஒதுக்குவதும் ஆக, சோதனைகளின் விளைவுகளாகப் படிப்படியாகச் செதுக்கிச் செதுக்கி உருவாக்கிய தமிழ் மரபுகள், மண்ணின் மரபுகள் அழிந்து விடாமல் காப்பதற்காகப் பயணித்தவர்.

    சொல்லில் வல்லவர். எழுத்தில் எழுஞாயிறு. சொல்லையும் செயலையும் வாழ்வாக்கியவர். சோர்விலர். அஞ்சா நெஞ்சினர். ஆற்றலர். பயணத்தையே வாழ்வாக்கியவர்.

    அவரே ஆறுமுக நாவலர்.

    சீனாவில் Wei Yuan (1794-1856), Li Hongzhang (1823-1901), Kang Youwei (1858-1927), Liang Qichao (1873-1929), and Tan Sitong (1865-1898) இந்தியாவில் Dayanand Saraswati  (1824-1883), Vishnu Bhikaji Gokhale (1825-1871) என ஆசிய நிலப் பரப்பில் வாழ்ந்த இவரின் சம காலத்தவர் போன்றே இவரும் அலையென வந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தனி ஒருவனாய் ஈழத்தில் தடுத்தவர்.

    ஓடங்களில் வள்ளங்களில் படகுகளில் தோணிகளில் வடகடலைக் கடந்து தமிழகம் சென்று மீண்டவர்.

    மாட்டு வண்டிகளில் குதிரை வண்டிகளில் ஈழத்திலும் தமிழகத்திலும் தெருத்தெருவாக அலைந்தவர்.

    யாழ்ப்பாணத்திற்கு அனைத்துலக வானூர்தி நிலையம் மீண்டும் வந்துவிட்டதே எனத் தமிழர்கள் மகிழ்கிறார்கள்.

    தன் பயணங்களால் நாட்டுக்காக, மக்களுக்காக, கால்கள் தேய்ந்து, உடல் நலம் குன்றி வாழ்ந்த ஆறுமுக நாவலரின் பெயரே யாழ்ப்பாணம் அனைத்துலக வானூர்தி நிலையத்தின் பெயர் ஆகவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம் என்று தம் வானூர்தி நிலையத்தை அழைக்க ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்கள்.

    சைவ தமிழ் அமைப்புகள் ஒரே குரலில் இலங்கை அரசுக்கு இந்த வேண்டுகோளை வைப்பதால், இந்த மண் பெற்றெடுத்த பயணப் பெருமகன், நடைபுகழ் நாவலர் அனைத்துலக ஆறுமுக நாவலர் ஆவார்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 72

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 72

    நாங்குநேரி வாசஸ்ரீ

    72. அவை அறிதல்

    குறள் 711:

    அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்

    சொல்லுத வார்த்தையோட தன்மைய உணந்துக்கிட்ட அறிவாளிங்க சபையில உக்காந்து இருக்கவங்களோட தன்மையையும் புரிஞ்சுக்கிட்டு ஏத்தாமாரி பேசுவாங்க.

    குறள் 712:

    இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர்

    சொற்களோட அர்த்தம் (பொருள்) தருத போக்க புரிஞ்சி வச்சிருக்க நல்லவங்க சொல்குத்தமும் பொருள் குத்தமும் வாராம கேக்குதவங்களோட நிலைமையயும் சரியா புரிஞ்சுக்கிட்டு பேசணும்.

    குறள் 713:

    அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
    வகையறியார் வல்லதூஉம் இல்

    சபையில இருக்கவங்க தன்ம தெரியாம பேசுதவங்களுக்கு சொற்களோட வகையும் தெரியாது, பேசுத தெறமையும் கெடையாது.

    குறள் 714:

    ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
    வான்சுதை வண்ணங் கொளல்

    அறிவாளிக்கு முன்ன தானும் அறிவாளி கணக்கா நடந்துக்கிடணும். புத்தியில்லாதவன் முன்ன வெள்ளசுண்ணாம்பு கணக்கா தன்னய அறிவில்லாதவனா காட்டிக்கிடணும்.

    குறள் 715:

    நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
    முந்து கிளவாச் செறிவு

    அறிவாளிங்க கூடியிருக்க எடத்துல முந்திரிக்கொட்ட கணக்கா பேசாம இருக்க அடக்கம் எல்லா நன்மயிலயும் சிறந்த நன்ம.

    குறள் 716:

    ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
    ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

    அறிவாளிங்க முன்ன பேசுதப்போ தப்பாயிடுச்சின்னா அது ஒழுக்கங்கெட்டதுக்கு சமானம்.

    குறள் 717:

    கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
    சொற்றெரிதல் முன்னர் இழுக்கு

    குத்தமில்லாத சொற்களச் சலிச்சு எடுத்து பேசுதவங்ககிட்ட தான் அவங்க படிச்ச படிப்போட பெரும வெளங்கும்.

    குறள் 718:

    உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
    பாத்தியுள் நீர்சொரிந் தற்று

    உணந்துக்கிடுத சக்தி உள்ளவுக கிட்ட பேசுதது வளருத பயிரு இருக்க பாத்தியில தண்ணியப் பாய்ச்சுதது கணக்கா பலனக் கொடுக்கும்.

    குறள் 719:

    புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லு வார்

    நல்லவங்க சபையில மனசுல பதியுதமாரி பேசுத தெறம இருக்கவங்க முட்டாளுங்க கூட்டத்துல அறவே பேசாம இருக்கது நல்லது.

    குறள் 720:

    அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
    அல்லார்முன் கோட்டி கொளல்

    அறிவுள்ளவங்க தனக்கு சமமில்லாத அறிவுகெட்டவங்க முன்ன பேசுதது அழுக்கான முற்றத்துல சிந்தின அமிழ்தம் கணக்கா வீணா போவும்.

    Share
  • குறளின் கதிர்களாய்… (271)

    குறளின் கதிர்களாய்… (271)

    செண்பக ஜெகதீசன்

    ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
    தெய்வத்தோ டொப்பக் கொளல்.
    – திருக்குறள் -702 (குறிப்பறிதல்)

    புதுக் கவிதையில்…

    சந்தேகப்படாமல் ஒருவர்
    சிந்தையிலிருக்கும் எண்ணமதைத்
    திண்ணமாய் உணர்ந்தறியும்
    வல்லமை கொண்டவன்,
    மண்ணுலகில்
    மாந்தராய் இருப்பினும்
    அவனைத்
    தெய்வத்துக்கு ஒப்பாக
    மதித்துப் போற்றிடுக…!

    குறும்பாவில்…

    அடுத்தவர் மனத்திலிருப்பதை ஐயமின்றி
    அறிந்துணரும் ஆற்றலுள்ளவரை, மனிதனாயிருந்தாலும்
    தெய்வத்திற்கு ஒப்பாகப் போற்றிடு…!

    மரபுக் கவிதையில்…

    சற்றும் வராமல் சந்தேகம்
    சார்ந்தவர் மனத்தின் எண்ணங்களைக்
    கற்றே உண்மை உணர்ந்தறியும்
    கலையது தெரிந்த வல்லவரை
    மற்ற மனிதராய் எண்ணாதே,
    மதிப்பில் உயர்ந்தே நாம்வணங்கும்
    பற்று மிகுந்த தெய்வமதைப்
    போல யெண்ணிப் போற்றுவாயே…!

    லிமரைக்கூ..

    பிறர்மன எண்ணங்களை ஏற்று
    ஐயமின்றி உண்மையறிந்திடும் வல்லவரை,
    தெய்வத்திற் கொப்பாகப் போற்று…!

    கிராமிய பாணியில்…

    அறிஞ்சிக்கோ அறிஞ்சிக்கோ
    அடுத்தவர் மனச அறிஞ்சிக்கோ,
    குறிப்பா அறிஞ்சிக்கோ..
    சந்தேகம் கொஞ்சமும் வராம
    அடுத்தவர் மனசில உள்ளத
    அப்புடியே உள்ளபடி தெரிஞ்சிக்கிற
    தெறம உள்ளவன
    சாதா மனுசனா நெனச்சிடாத,
    நாம கும்புடுற
    சாமியப் போல ஒரு
    சாமியாவே நெனச்சிக்கணும்..
    அதால
    அறிஞ்சிக்கோ அறிஞ்சிக்கோ
    அடுத்தவர் மனச அறிஞ்சிக்கோ,
    குறிப்பா அறிஞ்சிக்கோ…!

    Share
  • நெல்லையப்பர் கோவிலிலே!

    நெல்லையப்பர் கோவிலிலே!

    அண்ணாகண்ணன்

    நெல்லையப்பர் கோவிலில் நேற்று (18.10.2019) நெல்லையப்பரைத் தரிசித்து, ஆதி சிவன் அருள் பெற்றேன்.

    ஆலயத்தினுள் இசைத் தூண்களைக் கண்டு பிரமித்தேன். கற்களைக் கொண்டு மாயாஜாலங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தச் சிற்பிகளை, நாம் தலைமேல் தூக்கிக் கொண்டாட வேண்டும். இந்தக் கலைத்திறன் நம்முள் யாரிடமாவது எஞ்சியிருக்கின்றதா?

    காணும் ஒவ்வோர் இடத்திலும் சிற்ப எழில், உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. பிரகாரத்தில் இருந்த சிலைகளின் தலையலங்காரம் தனித்த அழகுடன் இருந்தது. ஒரு பக்கம் மட்டும் ஓதுக்கிய கிரீடம்போல் அவை இருந்தன. நம் முன்னோர்கள் இப்படியும் இருந்திருப்பார்களோ என்ற எண்ணம் எழுந்தது.

    பற்பல சந்நிதிகளில் அர்ச்சகர் பலரும் தீபாராதனை காட்டி, திருநீறு, குங்குமம் வழங்கினர். ஒரு சந்நிதியில் மட்டும், ஒருவர் குங்குமம் கொடுத்ததோடு, மடித்து வைத்த ஒரு குங்குமப் பொட்டலத்தையும் கொடுத்தார். ஒவ்வொரு சந்நிதியிலும் கொடுத்த திருநீறு, பிரசாதங்களைத் தனித் தனியே மடித்து வைக்கக் காகிதம் இல்லாமல், எல்லாவற்றையும் ஒரே காகிதத்தில் சேர்த்து வைத்திருந்தேன். அப்படி இருக்க, இவர் தனியே பொட்டலமாகவே கொடுத்தது உதவிகரமாக இருந்தது. எனக்குக் கொடுத்ததுடன் நில்லாமல், அடுத்தடுத்து அவர் பொட்டலம் மடித்துக்கொண்டே இருந்தார். சோர்விலாத அந்த அன்பரை வாழ்த்தினேன்.

    எல்லா இடங்களிலும் எண்ணெய் என்பதை எண்ணை என்றே எழுதி வைத்துள்ளார்களே என்ற வருத்தம் எழுந்தது.

    நேற்று கூட்டம் அதிகமில்லை. எளிதில் தரிசிக்க முடிந்தது. நெல்லையப்பரின் பிரகாரத்தைச் சுற்றி வருகையில் கவனித்தேன். அந்த நேரத்தில் நான் மட்டும் தனியாக நடந்துகொண்டிருந்தேன். லேசாகப் பசிப்பது போல் இருக்கிறதே என எண்ணினேன். அடுத்த இரண்டு நிமிடத்திற்குள் இடது பக்கச் சந்நிதியிலிருந்து அம்மாள் ஒருவர் படியிறங்கி வந்தார். என் முன் நின்று, வைத்திருந்த பாத்திரத்திலிருந்து தம் கையால் இரண்டு முறை அள்ளி என் கைநிறைய வைத்தார். ஆஹா, லட்டா என்றேன். பூந்தி என்றார். பேருவகையுடன் வணங்கிப் பெற்றுக்கொண்டு, ஆனந்தக் களிப்புடன் உண்டேன். பல முறைகள் எனக்கு இப்படி நிகழ்ந்திருக்கிறது. எனக்குத் தேவையானதைத் தானே அளிக்கிறது தெய்வம். பிறகு நான் எதற்குத் தனியாக வேண்ட வேண்டும்?

    பிறகு, அன்னை காந்திமதி அம்பாளை வணங்கி, குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு வெளியில் வந்தேன். படியின் அருகில் அம்மாள் ஒருவர், பெரியவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். “நான் புதிதாக ஒரு தொழிலைத் தொடங்கியிருக்கிறேன், நன்றாக நடக்க வேண்டும்” எனக் கூறினார். பெரியவர், “நன்றாக நடக்கும்” என்றார். நானும் மனத்திற்குள் ‘நன்றாக நடக்கும்’ எனக் கூறிக்கொண்டேன்.

    எங்கிருந்தோ தண்ணீர் பிரகாரம் வழியாக, திருக்குளத்திற்குள் ஓடிக்கொண்டிருந்தது. மழைநீரைக் குளத்திற்குள் விடுவதாகச் சொன்னார்கள். மிகுந்த சில்லிப்படன் இருந்தது. அதில் கால் நனைய நின்றுகொண்டேன்.

    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

    Share
  • கண்ணனின் தாசனடா!

    கண்ணனின் தாசனடா!

    -வெ.விஜய்

    “கட்டழ கானதோர் கற்பனை ராஜ்ஜியம்”  என்கிற கண்ணதாசன் பாடலின் சந்தத்தில் எழுதியது…

    தத்துவப் பாடலும் காதல் கவிதையும்
    தந்தவன் தாசனடா – தமிழ்ச்
    சாரதி தாசனடா – கவிக்
    கத்தி எடுத்தவன் காலம் கடந்தவன்
    கண்ணனின் தாசனடா- இவர்
    கற்பனை ராசனடா

    எத்தனை ஆயிரம் செந்தமிழ்ப் பாடல்கள்
    எங்கெங்கும் வாழுகிறான் – இவன்
    ஏழையை ஆளுகிறான் – இந்த
    முத்தையன் பேச்சினில் கொட்டிக் கிடப்பது
    முத்தமிழ்க் கீதையடா – அதில்
    மூழ்குதல் போதையடா

    திங்களைப் போல்முகம் கொண்டுள மங்கையின்
    தேகத்தைப் பாடியவன் – நல்ல
    திராவிடம் சூடியவன் – சிவ
    கங்கையில் தோன்றிய காவிய நாயகன்
    காதலின் ஓடமடா – கவிக்
    காட்டினில் வேடனடா

    மொட்டவிழ் தாவரம் முன்பொரு நாளினில்
    முட்டி முளைக்கையிலே – மண்ணை
    மோதி எழுகையிலே – அதைக்
    கட்டுப் படுத்திடும் தன்மையென் றாலது
    காதலில் மட்டுமடா – கண்ண
    தாசனின் திட்டமடா

    இந்தக் கவிஞனை எய்திய வேடனோ
    என்னிறை கண்ணனடா – அவன்
    இப்புவி மன்னனடா – அவன்
    மந்திரம் செய்கையில் முந்திப் பிறந்தவன்
    மாவீரன் தாசனடா – தென்றல்
    வார்த்தையில் வீசுமடா!!

     

    Share
  • வ.உ.சி. என்றொரு மானுடன்!

    வ.உ.சி. என்றொரு மானுடன்!

    -மேகலா இராமமூர்த்தி

    முத்தமிழைப் போல வ.உ.சி. என்ற மூன்றெழுத்துக்களுங்கூட என்றும் நாம் நெஞ்சில் நிறுத்தவேண்டியவை. கப்பலோட்டிய தமிழர் என்றும் பெருமிதத்தோடு அறியப்படும் வ.உ.சிதம்பரனார் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1872ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5ஆம் நாள், நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்ற சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த அதே நாளில், உலகநாதப் பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் திருமகனாய்த் தோன்றினார்.

    வ.உ.சி., அக்கால வழக்கப்படி திண்ணைப் பள்ளியில் படித்தார். ஒளவையின் பாடல்கள் மற்றும் நீதி நூல்கள் அவருக்குக் கற்றுத்தரப்பட்டன. அவருடைய வீட்டில் அவருடைய தாத்தாவும் பாட்டியும் இதிகாசம் மற்றும் புராணக் கதைகளை வ.உ.சி.க்குக் கூறுவது வழக்கம்.  ஒட்டப்பிடாரத்தில் அவ்வப்போது நடைபெறும் புராணச் சொற்பொழிவுகளுக்கும் வ.உ.சி. தம் பாட்டனாருடன் செல்வதுண்டு. வ.உ.சி.க்கு ஆரம்பப் பாடம் சொல்லிக்கொடுத்தவர் வீரப்பெருமாள் அண்ணாவியார். 

    வ.உ.சி.யின் தந்தையான உலகநாதப் பிள்ளை ஒரு வழக்கறிஞர். தம்முடைய மகனும் தம்மைப் போலவே நன்கு படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று விரும்பினார் அவர்; அதனால் தம் மகனுக்காக ஒரு பள்ளியைக் கட்டினார்.

    வ.உ.சிதம்பரனார் இப்பள்ளியில் தம் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பிறகு தூத்துக்குடி செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். அங்கிருந்த கால்டுவெல் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் படிப்பைத் தொடர்ந்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் ஒருமுறை வெற்றிவாய்ப்பைத் தவறவிட்ட வ.உ.சி., பிறகு அதில் வெற்றிபெற்றுத் தம் தந்தையின் விருப்பத்திற்கிணங்க ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் எழுத்தராக இருமாத காலம் பணியாற்றியிருக்கின்றார். அவ்வேலையில் வ.உ.சி.க்கு ஈடுபாடில்லை. தம் தந்தையைப் போலத் தாமும் வழக்கறிஞராக விரும்பிய அவர், தம் விருப்பத்தைத் தந்தையிடம் கூறியிருக்கின்றார். அவரும் அதற்கிசைந்து திருச்சியில் அப்போது மிகவும் பிரபலமாயிருந்த கணபதி ஐயர், ஹரிஹர ஐயர் என்ற இரண்டு சட்ட நிபுணர்களிடம் வ.உ.சி.யைச் சட்டத்தேர்வுப் பயிற்சிக்காக அனுப்பினார்.

    வழக்கறிஞருக்கான தேர்வை 1894இல் எழுதி வெற்றிபெற்ற வ.உ.சி., 1895இல் வழக்கறிஞராகத் தம்மைப் பதிவுசெய்துகொண்டார். அப்போது அவருடைய வயது 23. உரிமையியல் (civil), குற்றவியல் (criminal) என இரு துறைகளிலும் சிறந்துவிளங்கினார் அவர்.  குறிப்பாகக் குற்றவியல் துறையில் மிகுந்த திறமையுடையவராக வ.உ.சி. திகழ்ந்திருக்கின்றார். அதுகண்டு வழக்கறிஞர்கள் சிலர் அவர்பால் அழுக்காறு கொண்டதும் உண்டு. தொழிலில் நல்ல வருமானம் வந்தும்கூடச் சம்பாதிப்பதையே தம் குறிக்கோளாகக் கொள்ளவில்லை வ.உ.சி. மாறாக வாய்மை, ஒழுக்கம், பிறர்நலம் பேணுதல் போன்றவற்றையே தம் வாழ்வுக்கான குறிக்கோள்களாகக் கொண்டார்.

    அக்காலத்திலும் வழக்கறிஞர்கள் சிலர் கைக்கூலி கொடுத்துக் கட்சிக்காரர்கள் பிடித்ததையும், நீதித்துறையிலும் கையூட்டாக நிதி புகுந்துவிளையாடியதையும் வெறுப்போடும் வேதனையோடும் தம் சுயசரிதையில் பதிவுசெய்திருக்கின்றார் அவர்.

    சிறந்த வழக்கறிஞராகச் சிதம்பரனார் பணிசெய்துவந்த காலத்தில், 1905ஆம் ஆண்டு, வைஸ்ராய் கர்சன் பிரபு வங்கப் பகுதியைக் கிழக்கு வங்கம் மேற்கு வங்கம் என்று இரண்டாகப் பிரித்தார். இதை எதிர்த்து இந்தியாவெங்கும் கிளர்ச்சி வெடித்தது. அப்போது காங்கிரஸ் கட்சியில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரு பிரிவினர் இருந்தனர். இதில் பாலகங்காதர திலகர் தீவிரவாதப் பிரிவுக்குத் தலைவராகச் செயற்பட்டார். தென்னாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வ.உ.சி, மகாகவி பாரதி, வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா போன்றோர் திலகருடைய கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள்.

    அப்போது நாடெங்கும் அந்நிய ஆடைப் புறக்கணிப்பு இயக்கம் தோன்றியது. வெளிநாட்டு ஆடைகளை வீதிகளில் மலைபோல் குவித்த மக்கள் அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினர். பம்பாயில் திலகர் தலைமையில் அந்நியத் துணி எரிப்புப் போராட்டம் நிகழ்ந்தது. தூத்துக்குடியில் வ.உ.சி. தலைமையில் அப்போராட்டம் தீவிரமடைந்தது. அந்நியப் பொருள்களை வாங்குவதில்லை என்று உறுதிபூண்டனர் மக்கள்.

    1906-இல் வ.உ.சி. ’சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்’ என்ற பெயரில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் விடுவதென முடிவுசெய்தார். பாலவனத்தம் ஜமீன்தார் திரு. பாண்டித்துரைத் தேவரைத் தலைவராகவும், 13 வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட செல்வந்தர்களின் ஆதரவுடன் வ.உ.சி. செயலர் பொறுப்பில் இருந்து கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். தொடக்கத்தில் வாடகைக்குக் கப்பல்கள் வாங்கித் தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் இடையே பயணிக் கப்பல்களை ஓட்டினார். பிறகு திலகர் உதவியுடன் கம்பெனிக்குச் சொந்தமாகக் கப்பல்கள் வாங்க முடிவுசெய்து பம்பாய் சென்றார் வ.உ.சி.

    வ.உ.சி.யை கப்பல் வாங்கவிடாமல் சூழ்ச்சிசெய்து தடுத்தனர் வெள்ளையர். ஆனால் அந்தத் தடைகளைத் தகர்த்துத் திலகரின் துணையுடன் பிரான்சிலிருந்து இரு கப்பல்களைத் தூத்துக்குடிக்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஊர் திரும்பினார் வ.உ.சி. அந்த இரு கப்பல்களின் பெயர்கள் கேலியா (Gallia), மற்றும் லேவோ (Lavo) என்பதாகும்.

    தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் இடையே சுதேசிக் கப்பல் போக்குவரத்து நன்கு நடைபெற்றது. வெள்ளையர் கப்பல்களிலோ வருமானம் குறைந்தது. எப்படியாவது சுதேசிக் கப்பல் கம்பெனியை ஓடவிடாமல் தடுக்கப் பல குறுக்குவழிகளை வெள்ளையர் கையாண்டனர். வ.உ.சி.க்கு ஏராளமான பணத்தைக் கொடுத்து அவரைக் கப்பல் கம்பெனியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு வலியுறுத்தினர். ஆனால் கொள்கை வீரரான வ.உ.சி. அதற்கு இம்மியும் அசைந்துகொடுக்கவில்லை; மாறாக எப்படியாயினும் சுதேசிக் கப்பல் கம்பெனியை வெற்றிகரமாக நடத்திக்காட்டுவது என்றே முடிவுசெய்து செயற்பட்டார்.

    அதே காலக்கட்டத்தில் தூத்துக்குடியில் வெள்ளையர்களுக்குச் சொந்தமான கோரல் மில்லில் தொழிலாளர்களுக்கு வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டன; சம்பளமும் சரியாகக் கொடுக்கப்படவில்லை. எனவே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவுசெய்தனர். வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 1908 பிப்ரவரி 3 முதல் மார்ச்சு 9 வரை தூத்துக்குடிக் கடற்கரையில் சுப்பிரமணிய சிவாவுடன் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தி மக்களுக்கு வீர உணர்வும் விடுதலை உணர்வும் ஊட்டினார் வ.உ.சி. அதே ஆண்டில் நெல்லையில் தேசாபிமானச் சங்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.

    கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடையவே, இறுதியில் நூற்பாலை நிர்வாகம் அவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தது. தொழிலாளர்களின் கூலியை உயர்த்தவும், வேலை நேரத்தைக் குறைக்கவும் ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை அளிக்கவும் நிர்வாகம் ஒத்துக்கொண்டது. தொழிற்சங்கங்கள் இல்லாத காலமது. இந்தியாவின் முதல் தொழிற்சங்கமே 1920-இல்தான் தொடங்கப்பட்டது. ஆனால் வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்தி, அவர்களை வழிநடாத்தி, வேலை நிறுத்தத்தைப் பெரும் வெற்றி பெறச் செய்திருக்கின்றார். அவ்வகையில் வ.உ.சி.யே தொழிலாளர் போராட்டங்களை நடத்திய அனைவருக்கும் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் எனில் மிகையில்லை.

    இதினிடையே சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களுக்கு எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று கருதிய ஆங்கிலேயர் அதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.

    வங்கத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவரான  பிபின் சந்திர பால் (Bipin Chandra Pal) 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் சிறையிலிருந்து விடுதலையாக இருந்தார். வ.உ.சி. அதனை ஒரு விழாவாகக் கொண்டாட எண்ணினார். ஆங்கில அரசு அதனை விரும்பவில்லை. அதனால் வ.உ.சி.யைக் கைதுசெய்ய முடிவு செய்தது. ஆனால் தூத்துக்குடியில் அவரைக் கைதுசெய்தால் மக்களிடையே பெருங்கொந்தளிப்பு ஏற்படும் என்று கருதிய மாவட்ட ஆட்சியர் வின்ச்சு (Winch), வ.உ.சி.யைத் திருநெல்வேலி வந்து தம்மைச் சந்திக்கும்படி ஓர் ஆணை அனுப்பினார். அதனை ஏற்றுத் திருநெல்வேலி செல்லத் தயாரானார் வ.உ.சி. அங்கே அவர் கைது செய்யப்படுவார் என்று அனைவருக்கும் தெரியும். ஆதலால் அவரைச் செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். ஆனால் வ.உ.சி. மக்களைச் சமாதானப்படுத்திவிட்டுத் தம் நெருங்கிய நண்பர் சுப்பிரமணிய சிவாவுடன் திருநெல்வேலிக்குச் சென்றார்.

    மாவட்ட ஆட்சியர், வ.உ.சி.யும் சிவாவும் திருநெல்வேலியைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் கண்டித்துக் கூறினார். அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார் வ.உ.சி. விளைவு? வ.உ.சி.யும் சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.

    அதனை அறிந்த மக்கள் கடுங்கோபம் கொண்டனர். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் சேதப்படுத்தப்பட்டன. காவல் நிலையமும், நகராட்சி அலுவலகமும் தாக்கப்பட்டன. காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். இந்த நிகழ்வு திருநெல்வேலி எழுச்சி (Tinnevelly riot of 1908) என்று குறிப்பிடப்படுகின்றது.

    காவல் துறையினர் வ.உ.சி.க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம், ஆங்கில அரசுக்கு எதிராகச் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிட்டதற்காக 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை; சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக மற்றுமோர் 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை; மொத்தம் 40 ஆண்டுகள் (இரட்டை ஆயுள்) சிறைத்தண்டனை விதித்தது வ.உ.சி.க்கு. சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்ததில் வ.உ.சி.யின் சிறைத்தண்டனை 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. அவர் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார்; அவரது நண்பர்கள் இலண்டனில் உள்ள பிரிவியூ கௌன்சிலில் முறையீடு செய்ததில் 6 ஆண்டுக் கடுங்காவல் தண்டனையாக அது குறைந்தது.

    வ.உ.சி. சிறையிலிருந்தபோது, அவர் ஆரம்பித்த சுதேசிக் கப்பல் நிறுவனம் அவருடைய பங்குதாரர்களால் சரியானமுறையில் நிர்வகிக்கப்படவில்லை. அதன் விளைவாய் வ.உ.சி. அரும்பாடுபட்டு வாங்கிய இரண்டு சுதேசிக் கப்பல்களும் வெள்ளையரிடமே விற்கப்பட்ட அவலம் நேர்ந்தது.  சுதேசிக் கப்பல்கள் விற்கப்பட்ட விவரம் பாண்டிச்சேரியில் இருந்த பாரதியின் காதுகளுக்கும் எட்டியது. அவர் தம்முடைய இந்தியா பத்திரிகையில்,

    ”கேவலம் காசுக்காகக் கப்பல்களை ஆங்கிலேயருக்கு விற்றுவிட்டார்களே! அதைவிட அக்கப்பல்களை உடைத்து மன்னார்குடாக் கடலில் எறிந்திருக்கலாமே!” என்று கொதிப்புடன் எழுதினார்.

    1908இல் சிறை புகுந்த வ.உ.சி., அங்கு அனுபவித்த சித்திரவதைகள் கொஞ்சநஞ்சமல்ல. சணல் நூற்றார். அதனால் அவரது உள்ளங்கைகளிலிருந்து குருதிவெள்ளம் வழிந்தது. கல் உடைத்தார்; மாடுகள் இழுக்கும் செக்கினைத் தாம் இழுத்தார். அவரது எடை மிகவும் குறைந்துபோனது. மருத்துவர் சிறையதிகாரியை எச்சரித்ததன் பேரில் அவருக்கு அரிசி உணவு வழங்கப்பட்டது. வ.உ.சி. சிறையில் பட்ட பாட்டை ஒரு பாட்டாகவே வடித்திருக்கின்றார் நாமக்கல் கவிஞர்.

    “எல்லோரும் தேசபக்தர் இந்த நாளில்
    எத்தனையோ சிறைவாசம் இனிதாய்க் காண்பார்
    சொல்லாலும் எழுத்தாலும் விளக்க வொண்ணாத்
    துன்பமெல்லாம் சிறைவாசம் அந்த நாளில்
    வல்லாளர் சிதம்பரனார் சிறையில் பட்ட
    வருத்த மெலாம் விரித்துரைத்தால் வாய்விட் டேங்கிக்
    கல்லான மனத்தவரும் கண்ணீர் கொட்டிக்
    கனல்பட்ட வெண்ணெயெனக் கரைவார் இன்றும்”

    பிறகு, சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி வ.உ.சி.க்குச் சில சலுகைகள் சிறையில் அளிக்கப்பட்டன. அதன் பயனாய்த் தமிழிலக்கியத்துறைக்கு அருங்கொடைகளை நல்கினார் அப்பெருமகனார்.

    மக்கள் அல்லவை கடிந்து நல்லவை பெற உதவும் நோக்கில் குறளின் அடிப்படையில் ’மெய்யறம்’ என்ற அறநூலை சிறையில் அவர் இயற்றினார். இந்நூல் மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் எனும் ஐந்தியல்களைக் கொண்டது.

    வ.உ.சி. கண்ணனூர் சிறையில் இருந்தபோது மற்ற கைதிகளுக்கு நீதி நெறிகளை விளக்குவார். அக் கைதிகள் இந்த அறிவுரைகள் செய்யுள் வடிவில் இருந்தால் மனனம் செய்ய எளிதாக இருக்குமே என்று வ.உ.சி.யிடம் கூற, அப்போது இயற்றப்பட்ட செய்யுட்களே ’மெய்யறிவு’ என்ற நூலாகும்.

    தம்முடைய சுயசரிதையைக் கவிதை நடையில் அகவற்பாவில் எழுதியிருக்கின்றார் சிதம்பரனார். இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு வண்டமிழில் உரை வரைந்திருக்கின்றார். மணக்குடவர் உரையுடன் திருக்குறளையும், இளம்பூரணர் உரையுடன் தொல்காப்பியத்தையும் பதிப்பித்திருக்கிறார்.

    சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் வ.உ.சி. திகழ்ந்திருக்கின்றார். ஜேம்ஸ் ஆலனின் (James Allen) ’As a man Thinketh’ என்ற நூலை ’மனம் போல் வாழ்வு’ என்று பெயரிலும், ’Out from the heart’ என்ற நூலை ’அகமே புறம்’ என்ற பெயரிலும், அவருடைய ’From Poverty to Power’ என்ற நூலின் முதற்பகுதியான ’The part of prosperity’யை ’வலிமைக்கு மார்க்கம்’ என்ற பெயரிலும், அதன் இரண்டாம் பகுதியான ’The way to peace’ என்பதைச் ’சாந்திக்கு மார்க்கம்’ என்ற பெயரிலும் மொழிபெயர்த்திருக்கின்றார். திருக்குறள் அறத்துப்பாலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்றார் வ.உ.சி.

    1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் வ.உ.சி. விடுதலையடைந்தார். சிறையிலிருந்து அவர் வெளிவந்தபோது சுப்பிரமணிய சிவா மட்டுமே அவரை வரவேற்கச் சிறைச்சாலையின் வெளியே காத்திருந்தார். அவருக்கும் உடல்நலம் குன்றித் தொழுநோய் கண்டிருந்தது. வ.உ.சி.யின் தேசிய உணர்வையும் தியாகத்தையும் அன்றைய தமிழக மக்கள், அந்தோ! முற்றாக மறந்துவிட்டிருந்தனர்!

    அப்போதைய அரசியல் சூழ்நிலையும் பெரிதும் மாறியிருந்தது. திலகரின் தீவிரவாத விடுதலை அமைப்பை ஆதரித்தவரான வ.உ.சி.யால் அண்ணல் காந்தியாரின் சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற மிதவாதக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

    1919இலிருந்து 1922வரை கோயம்புத்தூரில் வாழ்ந்த வ.உ.சி., பிறகு தூத்துக்குடியில் குடியேறி வழக்கறிஞராகத் தம் பணியைத் தொடர்ந்தார்; இலக்கியப் பணிகளிலும் ஈடுபட்டுவந்தார். 1935இல் அவர் உடல்நலம் குன்றியது. படுத்த படுக்கையானார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்த பாபு ராஜேந்திர பிரசாத் தூத்துக்குடி வந்தார். சிதம்பரனாரின் இல்லத்துக்குச் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    ”சிதம்பரனாரின் சேவையே தமக்கு ஓர் உந்து சக்தியாக இருந்தது” என்றும் ”தூத்துக்குடி மண்ணை மிதித்தது தமக்குக் கிடைத்த புண்ணியம்” என்றும் ம(நெ)கிழ்ந்தார் அம் மாபெருந்தலைவர்.

    1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் வ.உ.சி. அமரரானார். அவருடைய இருபெரும் கனவுகளான இந்திய விடுதலையும், திருக்குறளுக்குத் தாம் எழுதிய உரையை அச்சிட்டுவிட வேண்டும் என்பதும் அவர் காலத்திற்குப் பின்பே நிறைவேறின.

    நாவீறு படைத்த வழக்கறிஞராகச் செல்வாக்கோடு விளங்கிய காலத்திலும், வெஞ்சிறையில் நெஞ்சுபதறச் செய்யும் வெங்கொடுமைகளுக்கிடையே வாடிய காலத்திலும், எல்லாமிழந்து வறுமையில் உழன்ற பொல்லாச் சூழலிலும் தாய் நாட்டையும் தாய்த்தமிழையும் தம் இரு கண்களாகவே போற்றித் தொண்டாற்றிய தன்னலமற்ற நன்னர் நெஞ்சினர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார்.

    தோழர்களே! சிதம்பரனார்கள் மிக அரிதாகவே இம் மண்ணில் தோன்றுவார்கள். அவர்களின் தொண்டுகளை மறவாது போற்றுவதும், அவர்களைப்போல், இயன்றவரையில், பிறர்க்கென வாழ முயலுதலுமே அம் மாமனிதர்களுக்கு நாம் செய்யத்தக்க கைம்மாறாகும்!

    *****

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. https://ta.wikipedia.org/wiki/ வ._உ._சிதம்பரம்பிள்ளை
    2. வ.உ.சி.யும் தமிழும் – முனைவர் அ. சங்கரவள்ளிநாயகம் – உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 113
    3. வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை – முனைவர் எஸ். கண்ணன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – தரமணி, சென்னை – 600 113

     

    Share
  • காலந்தோறும் தமிழ்க் காதல்

    காலந்தோறும் தமிழ்க் காதல்

     -கௌசி (சந்திரகௌரி சிவபாலன்)

    ”விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு” என்று காதலுக்கு அழகான வரிவடிவம் தந்திருக்கின்றார் கவிஞர் வைரமுத்து. காதல் இல்லாது வாழ்க்கை ஏது! உறவுகள் ஏது! ஏன் உலகுதான் ஏது! வாழ்க்கை வட்டத்திலே உண்மையும், அழகும், அபூர்வமும், அற்புத உணர்வும் ஏற்படுத்தும் ஒரு உணர்வு உண்டென்றால், அது காதலே! மனிதன், விலங்குகள், பறவைகள் உயிர்கள் அனைத்திலும் இழையோடிக் காணப்படும் இவ்வுணர்வு வாழ்க்கை முழுவதும் தேவையானதாகவும் அகற்ற முடியாததாகவும் பெற்றோரின் பாசம் போல் தொடர்ந்து வரும் உணர்வாகவும் விளங்குகின்றது. காதல் என்றவுடன் காத்திருக்காமல் நம் முன்னே தென்படும் தாஜ்மஹாலும், வடமொழிக் காதல் மீராவும், தமிழ் மொழிக்காதல் ஆண்டாளும் ஆண்டாண்டுக் காலமாகக் காதலுக்கு அடையாளங்களாகக் காணப்படுகின்றனர்.

    கல்லும், மண்ணும், கடலும், மலையும், உலோகங்களும் எனத் தொடரும் இயற்கை வனப்புக்களை அழகு செய்ய இரத்தமும் சதையும் கொண்டு உணர்வுகளுடன் நடமாடிய மனிதன் தோன்றக் காரணமான உணர்வாக இது காணப்படுகின்றது. அதனாலேயே காதல், முதலில் சங்ககாலத்தில் காமமாகவே சொல்லப்பட்டது.

    ”ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் உடலாலும் உள்ளத்தாலும் இணைந்து தமக்குள் இன்பந்துய்த்து வாழ்தல்” என்று காதல் பற்றி நச்சினார்க்கினியார் அழகான விளக்கம் தந்துள்ளார். இவ்வுணர்வினைச் சங்கப்பாடல்கள் உணர்த்திய  அளவு வேறு எக்காலத்துப் பாடல்களும் உணர்த்தவில்லை என்றுதான் குறிப்பிட வேண்டும். தற்காலப் பாடல்களில் கூட சங்கப்பாடல்களின் தாக்கத்தினை  அதிகமாகக் காண முடியும். காதலும் வீரமும் கலந்து கிடந்த சங்ககாலத்திலே அகத்திணைப் பண்பு தழுவிய காதல் பாடல்கள் மனதுக்குள் இனிமை பயப்பனவாகக் காணப்படுகின்றன. செம்புலப்பெயல் நீரார் எனப்படும் புலவர் குறுந்தொகையில்,

    “யாயும் ஞாயும் யாராகியரோ 
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    நீயும் யானும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல் நீர்போல
    அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே”

    ”உன் தாயும் என் தாயும் யாரோ தெரியாது? எனது தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்னர் அறிமுகமானவர்கள் இல்லை. ஆனால், செம்மண்ணில் மழை நீர் கலந்தால், அந்நீரும் செந்நீராய் கலத்தல் போல நம் இருவர் நெஞ்சங்களும் ஒன்றாகக் கலந்துவிட்டன” எனக் காதலின் சிறப்பைப் புலவர் விளக்கும் பாங்கானது காதலுக்கு முகவரி தேவையில்லை. உறவுகள் பார்ப்பதில்லை. இரண்டு இதயங்கள் மட்டுமே போதுமானது இரண்டறக் கலப்பதற்கு என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

    குறுந்தொகையில் தலைவியின் நலத்தினைப் பாராட்டித் தலைவன் ஒரு வண்டினைப் பார்த்துக் கேட்பதாக இறையனார் படைத்திருக்கும் இப்பாடல்,

    “கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி!
    காமம் செப்பாது, கண்டது மொழிமோ
    பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயற்
    செறி எயிற்று அரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ? நீ அறியும் பூவே”

    அதாவது ”பூக்களிலே இருக்கின்ற தேனை ஆராய்ந்து உண்ணுகின்ற பண்புடைய அழகிய சிறகினைப் பெற்ற வண்டே! உண்மையைச் சொல், மயில் போன்ற மென்மையும், வரிசையான பற்களும் கொண்ட என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நறுமணம் கொண்ட பூவை நீ அறிந்ததுண்டா” என்று பாடுகின்றார். உலகின் எத்தனை சிறப்புக்கள் இருந்தாலும் அவை அத்தனையும் காதலியின் கால் தூசுக்குச் சமம் என எண்ணத் தோன்றும் மயக்கத்தை ஏற்படுத்தும் தன்மை காதல் உணர்வுக்கு உண்டு.

    மறைவாய்க் காதலித்து, யாரும் அறியாது உடன்போக்காய் உற்றார், சுற்றம் துறந்து, வசதி வாய்ப்புக்களை உதறித் தள்ளி  காதலனே துணை, அவனன்றி வேறு எதுவுமே தேவையில்லை என்று எண்ணத் தோன்றும் உணர்வு காதலுக்கு மட்டுமே உள்ளது. இந்த உணர்வினைச் சித்தரிக்கும் ஒரு குறுந்தொகைப் பாடலினை கூடலூர் கிழார் பாடியிருக்கின்றார்.

    “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
     கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
    குவளையுண் கண் குய்ப்புகை கழுமத்
    தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
    இனிதெனக் கணவ னுண்டலின்
    நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே”

    தமை விட்டுப் பிரிந்து சென்ற மகள் தன் காதலனுடன் எப்படி வாழ்கின்றாள் என்று அறிந்து வரும் படி செவிலித் தாயிடம் கூறி நற்றாய் அவளை அனுப்புகின்றாள். அதைப் பார்த்து வந்து செவிலித்தாய் கூறிய வார்த்தைகளே இப்பாடலிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ”புளித்த தயிரைக் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் பிசைந்து தாளிதம் செய்யும் போது, அது கருகி விடாது பட்டுச் சேலை முந்தானையிலே கைகளைத் துடைத்துவிட்டுத் தாளிதத்தை முறையாகச் செய்து சமைத்த உணவினைக் கணவனுக்கு இடும்போது அவனும் இனிமை, இனிமை என்று சொல்லி உண்டான்” என்று நற்றாயிடம் கூறுகின்றாள்.

    காதலனின் சுவைக்காகவும் மகிழ்வுக்காகவும் தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கக் கூடிய தன்மையை ஒரு பெண் காதல் வசப்படும் போது பெற்றுக் கொள்கின்றாள். இதற்காக பல்கலைக்கழகமோ, கல்லூரியோ சென்று கற்கவேண்டும் என்ற தேவையில்லை. நமக்குள்ளேயே சுரந்து, நமக்குள்ளேயே தொடர்ந்து, வேளை வரும்போது வெளிப்படும் இக்காதல் உணர்வு இப்பிரபஞ்சத்தின் பெருமைமிக்க சக்தியாகக் காணப்படுகின்றது.

    சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை ஐம்பது என்னும் நூலில், காதலின் தியாகத்தை ஒர் அழகான பாடல் மூலம் மாறன் பொறையனார் எடுத்துக் காட்டியுள்ளார்.

    “சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்றெண்ணிப்
    பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமான்தன்
    கள்ளத்தின் உச்சும் சுரமென்பார் காதலர்
    உள்ளம் படர்ந்த நெறி”

    சுனையிலே சிறிதளவு நீரேயுள்ளது. ஒரு மானே அருந்தும் அளவுள்ளது. ஆண்மான் குடிக்காது விட்டால் பெண் மான் குடிக்காது. எனவே ஆண்மான் சுனைநீரில் குடிப்பது போல் வாயை வைத்துப் பாவனை செய்து பெண்மானை குடிக்கச் செய்கிறது. காதலிலே விட்டுக் கொடுத்தல்கள், தியாகங்கள், அன்புப் பரிமாற்றங்கள் அளவுக்கு அதிகமாகவே பேணப்படுகின்றன.

    பல்லவர் காலத்துத் தோன்றிய ஆண்டாள் பாடல்களில் ஒருதலைக் காதல் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் சிவபெருமானைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவம் கொண்டும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

    சோழர் காலத்தில் புகழேந்தி, செயங்கொண்டார், கம்பர், ஒட்டக்கூத்தர் போன்றோர் காதல் சுவை மிக்க பாடல்கள் மூலம் காதல் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். அதேபோல் புகழேந்தி நளவெண்பாவில், நளன் தமயந்தி மேல் கொண்ட காதலை அழகாக விரித்துக் காட்டியுள்ளார்.

    நாயக்கர் காலத்திலே குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்பக் கவிராயர்

    வாகனைக்கண் டுருகுதையோ – ஒரு
    மயக்கமதாய் வருகுதையோ
    மோகம்என்பது இதுதானோ – இதை
    முன்னமே நான் அறியேன்! ஓ!
    ஆகம் எல்லாம் பசந்தேனே – பெற்ற
    அன்னைசொல்லும் கசந்தேனே
    தாகம் அன்றிப் பூணேனே – கையில்
    சரிவளையும் காணேனே.

    எனக் காதலால் ஏற்படும் உணர்வுகளைக் கொண்டு வந்திருக்கின்றார்.

    தற்காலக் கவிஞர்களின் அற்புதமான கவிதை வரிகள், காதலை வெகுவாக வெளிப்படுத்தியுள்ளன. கவிஞர் மீரா தம் புதுக்கவிதை ஒன்றில்,

    “ஒருமுறை நீ என்னைப் பார்த்தாய்
    நெஞ்சில் முள் குத்தியத
    முள்ளை முள்ளால்தானே எடுக்க முடியும்        
    மீண்டும் ஒருமுறை என்னைப் பார்”

    என்கிறார். கற்றறியாத பாமரர்கள் கூட நாட்டுப் பாடல்கள் மூலமாகத் தமது காதலை வெளிப்படுத்தியிருக்கின்ற பாங்கு, ரசித்து இன்புற வைப்பதுடன் இளைஞர்கள் உள்ளத்தில் காதல் என்னும் பயிருக்கு விதை ஊன்றுவதாக உள்ளன.

    “கண்டாங்கி பொடவை கட்டிக்
    கைநிறையக் கொசுவம் வச்சு         
    இடுப்பில சொருகிறியே முனியம்மா – அது        
    கொசுவம் அல்ல எம் மனசு முனியம்மா”

    முண்டாசுக்கவி பாரதி கூட,

    ”காதல் காதல் காதல்
    காதல் போயின் காதல் போயின்
    சாதல் சாதல் சாதல்” 

    என்கிறார். ஆனால், மனிதர் தோன்றியது தொடங்கி, தொடர்ந்து வரும் காதலுக்கு எதிர்ப்புகளும் தொடர்வது இயற்கையே. மரபு, கலாச்சாரம், சாதி, மதம் என மனிதனால் உருவாக்கி வைக்கப்பட்ட கட்டுக் கோப்புக்கள் காதலுக்குத் தடை போடுகின்றன. முறை தவறிய காதலால் தமது வாரிசுகள் வாழ்க்கை முறை தவறிப் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர். இயல்பாகவே தோன்றுகின்ற மகிழ்ச்சியை இடையிலே முறிக்க முயற்சிக்கின்றனர்.

    நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
    நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
    ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
    ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்
    பாடைகட்டி அதைக் கொல்ல வழிசெய் கின்றார்
    பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க

    என்று தற்போதைய நிலமையினை மகாகவி பாரதியார் தன் பாடல் வரிகள் மூலம் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

    பகட்டுக்காகவும், பொழுது போக்குக்காகவும், எதிர்கால சிந்தனை எதுவுமின்றி விளையாட்டாக காதலென்னும் போர்வையில் பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் ஏங்க வைத்து ஏமாற்றும் காதல், காதலுக்கே ஒரு அவமானமாகக் கருதப்படுகின்றது. எனவே காதல் செய்வீர்! காதல் செய்வீர்! காலம் முழுவதும் இணைந்திருக்க கருத்தில் கொண்டு, உண்மை அன்பை முதலீடு செய்து, வாழ்வில் முயன்று காதலில் வெற்றி காண்பீர்!

    Share
  • கவியரசர் நினைவாக

    கவியரசர் நினைவாக

    -சுரேஜமீ 

    காற்றின் அலைகொண்டு காலம்வென் றாயே
    காதல் ரசம்தந்து கண்ணன் ஆனாயே
    ஏற்றும் விளக்காகி ஏழைகவர்ந் தாயே
    என்றும் தமிழர்தம் வாழ்விலிணைந் தாயே
    போற்றும் எவர்நெஞ்சின் புத்தகமா னாயே
    போதை புகுந்ததுபோல் பொங்கியெழுந் தாயே
    சாற்றும் கவிதையெலாம் சங்கதியா னாயே
    சாகா வரம்பெற்ற கவியரச நீயே!

    அற்றை நிலவினிலும் ஆங்கேநீ யிருந்து
    அன்னைத் தமிழாலே அண்டமளந் தவனே!
    இற்றை வருநிலவும் இன்னுமுன் நினைவால்
    இன்பம் விளைக்கிறதே இன்னிசைத் தேனாக!
    வற்றா துயிர்நதிபோல் வாரி வழங்கிடுமுன்
    வார்த்தைத் தமிழாலே வண்ணங் கூட்டுகிறோம்
    பொற்றா மரைவாழும் பூவை மீனா மகிழும்
    பொழிதமிழே முத்தையா வெனும் பேரோனே!

    பற்றை விலக்கென்றே பாரதஞ் சொன்னாலும்
    பாசம் பிடித்திட்டே பாவியுனைத் தொலைத்தாய்
    பற்றும் எகிறியதாய்ப் பாவம் செய்திட்டார்
    பண்ணில் தமிழ்வந்தாள் பத்தனுனைக் காக்கத்
    தூற்றும் மனிதரெல்லாம் துச்சமென எறிந்தே
    துன்பம் கடந்து வந்த தூமணி நீயன்றோ
    நாற்றம் இசைக்கின்ற நற்றமிழ் ஆனாயே
    நாளும் உனைப்போற்றி நானும் மகிழ்கின்றேன்!

    தேற்றும் பலபாடல் தேன்தமிழ்ச் சொல்லாலே
    தீட்டும் மதிகொண்ட தென்றல் தேரோனே
    சேற்றில் விழுந்தாலும் செந்தா மரையாய்ச்
    சீறி எழுந்திட்ட சிங்கமன்றோ! கண்ணா!
    ஊற்றுச் சுரங்கம்நீ! உன்னதத் தமிழும்நீ
    உன்னால் கவியானோர் ஊரில் பலருண்டு
    போற்றி வணங்குகிறேன்! புன்னகைப் பூவுனையே!
    புக்க எனக்குள்ளே கண்ணதாச! நீயே!

    Share
  • டல்லாஸ்

    டல்லாஸ்

    -சேஷாத்ரி பாஸ்கர் 
    =========

    டேய் .. நீ முகுந்து தம்பியா ?

    ஆமாம் சார் .உங்க பேரு

    அம்பின்னு சொல்லு எங்கிருக்கான் அவன்?

    தாம்பரம் சார் .பட் ரிடயர்ட் .

    என்னை விட ரெண்டு வயசு சின்னவன்

    நீ என்ன பண்ற?

    சொன்னேன் .

    பட் ஐ ஹேட் திஸ் கன்ட்ரி! எங்க போனாலும் துட்டு புடுங்கிறான் . ஏன் இங்க ஆறு மாசம் கழிச்சு வந்தேன்னு இருக்கு

    என்ன சார் ஆச்சு ?

    ஒண்ணா ரெண்டா .பர்க்ளர்ஸ்

    டெல்லாஸ் இப்படி இல்லை. நோ பொல்யூஷன். நோ டர்ட்டி ட்ராபிக் . மூணு மாசம் பெண் வீட்ல இருந்தேன். இட் வாஸ் ஹெவென்! அப்புறம் அங்கேந்து சிகாகோ . -காட் . அது தாண்டா ஊர்! குப்பா ஒரு கவுளி வெத்தலை . சுண்ணாம்பு போடாதே எப்பவும் போல தண்ணிலேந்து அங்கே பருப்பு வரைக்கும் ஹை கிளாஸ் ஸ்டப். முன்னை மாதிரி ஊறுகாய் , காபிபொடி தூக்கிண்டு போக வேணாம் . சீரங்கம் அய்யங்கார் மாப்ள கடையை போட்ருக்கான் .ஒரே மலிவு . என்ன மெட்ராஸ் மண்ணாங்கட்டி! நேத்து தானே வந்தேன் . இன்னும் ஜெட் லாக் போகலை .சித்த இரு .

    குதப்பிய வெத்தலையை அப்படியே பாதையோரம் துப்பி விட்டு நேஷனல் சீவல் பாய்கிட்ட குப்பன் பிச்சை வாங்கனும் .இவன் தர்றது ஒரே கமாற வெத்தலை புகையிலையில் ஒரே பச்சை கற்பூரம் பன்னீர் கொடுரா? எதுக்கு சொல்ல வந்தேன்னா .. இங்க உக்காந்துண்டு குண்டு சட்டில குதிரை ஒட்டக்கூடாது

    டல்லாஸ்ல இது போல துப்பலாமா மாமா என நானும் கேட்கவில்லை .

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 71

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 71

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    71.குறிப்பறிதல்

    குறள் 701:

    கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
    மாறாநீர் வையக் கணி

    ஒருத்தங்க பேச வாயத் தொறக்காம இருக்கயிலேயே அவுக மனசுக்குள்ளார என்ன நெனைக்காங்கனு அறிஞ்சுக்கிடுதவன் ஒலகத்துக்கு பூட்டுத நகநட்டு ஆவான். 

    குறள் 702:

    ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
    தெய்வத்தோ டொப்பக் கொளல்

    அடுத்தவன் மனசுக்குள்ளார இருக்கத ஐயமில்லாம கண்டுக்கிடுதவன தெய்வத்துக்கு சமமா மதிக்கணும். 

    குறள் 703:

    குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
    யாது கொடுத்துங் கொளல்

    ஒருத்தரொட மொகத்தப் பாத்தே மனசுல இருக்கத தெரிஞ்சுக்கிடுத தெறம இருக்கவங்கள எதுனாச்சும் சோலியக் கொடுத்தாவது தொணையா வச்சிக்கிடணும். 

    குறள் 704:

    குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
    உறுப்போ ரனையரால் வேறு

    ஒருத்தன் மனசுல இருக்கத அவன் சொல்லாமலே தெரிஞ்சுக்கிடுத தெறம உள்ளவங்க மூஞ்சி,கை,கால்  (உறுப்புக்களால்) பாக்க ஒரேமாரி தோணினாலும் அறிவால வித்தியாசப்படுவாக. 

    குறள் 705:

    குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
    என்ன பயத்தவோ கண்

    அடுத்தவனோட மொகமும் கண்ணும் காட்டுத ஜாடைய (குறிப்ப) புரிஞ்சுக்க முடியாமப் போவுத சமயம் ஒசந்த உறுப்பான கண்ணு இருந்து என்ன பிரயோசனம்? 

    குறள் 706:

    அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
    கடுத்தது காட்டும் முகம்

    அடுத்தாப்ல இருக்குதத தனக்குள்ளார காட்டுத பளிங்கு கணக்கா ஒருத்தன் மனசுல உள்ளத அவன் மொகம் காட்டிப்போடும். 

    குறள் 707:

    முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
    காயினும் தான்முந் துறும்

    ஒருத்தன் எதுமேலயும் ஆசவச்சாலோ வெறுத்தாலோ முந்திக்கிட்டு அதக் காட்டிக்கொடுத்துப் போடுத மொகத்த விட அறிவாளி வேற ஏதும் உண்டா? 

    குறள் 708:

    முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
    உற்ற துணர்வார்ப் பெறின்

    தன் மனசுல இருக்கத மொகத்தப்பாத்து அறிஞ்சுக்கிடுதவர தொணையா வச்சிருக்கவன் அவர் மொகத்துக்கு நேரா நின்னாப் போதும். 

    குறள் 709:

    பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
    வகைமை உணர்வார்ப் பெறின்

    கண் பார்வைல இருக்க வித்தியாசத்த புரிஞ்சிக்கிடுதவங்க அடுத்தவங்களோட கண்ணப் பாத்தே அவுக மனசுல இருக்கது நட்பா பகையான்னு தெரிஞ்சுக்கிடுவாங்க.  

    குறள் 710:

    நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்
    கண்ணல்ல தில்லை பிற

    நாங்க நுண் அறிவுடையவர்கள் னு சொல்லிக்கிடுதவங்க மத்தவங்க மனசுல இருக்கத தெரிஞ்சுக்கிடுதக்கு ஒபயோகிக்க சாதனம் என்னன்னு பாத்தா அவுக கண்ணு தான். 

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share
  • படக்கவிதைப் போட்டி – 228

    படக்கவிதைப் போட்டி – 228

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    Ayman bin Mubarak எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (20.10.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. முகம்மது ரபி எடுத்திருக்கும் ஒளிப்படமிது! வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இதனைத் தேர்வுசெய்து இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். ஒளி ஓவியர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    சிந்தனைகளை முகத்தில் தேக்கி, குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் இச்சிறுவனின் அகத்தைப் படம்பிடிக்க முயலுங்கள் என்று வல்லமையின் சொல்லோவியர்களை நல்வாழ்த்துக்கூறி அழைக்கின்றேன்.

    *****

    ”ஓரமாய் ஒண்டிடும் ஒளிக்கதிரே! ஊராரின் உள்ளமதில் இடம்பிடிக்க ஓயாதுழைப்போம்! அடிமைத் தளையறுத்துச் சுடர்விடுவோம்! என்று நம்பிக்கை விதைகளைச் சிறுவனின் மனத்தில் விதைக்கிறார் திருமிகு. எம். புஷ்ப ரெஜினா.

    ஒடுக்கப்பட்டோம் ஒளிவீசுவோம்!

    ஓலைக்குடிசையில்
    ஓட்டை ஒடசலுடன்
    ஓரமாக ஒண்டிடும்
    ஓர் ஒளிக்கதிர்….
    ஓராயிரம் கனவுகளுடன்
    ஓயாத உழைப்புடனே
    ஓவியமென
    ஓய்ந்திருப்போனே…
    ஓடமாய் மனம் அலைந்திட
    ஒன்றுக்கும் வழியின்றியே
    ஒப்பற்ற நிலைக்கு
    ஒளிவிளக்காகிடவே….
    ஓரறிவுயிர்களும் ஒடுங்கிட
    ஒடுக்கினோர்கள்
    ஒழிந்துபோயினர்
    எல்லாம் ஒளிமயமே…
    ஓயாது உழைத்திடுவோம்
    ஊராரின் உள்ளமதில்
    ஓங்கி உயர்ந்திடவே
    ஓசோனில் கால்பதிப்போம்…
    வாராய் என் இளஞ்சிங்கமே,
    ஒளிவிளக்காவோம் அடிமைத் தளைஅறுத்து,
    ஆர்வமுடன் நிலைநாட்டுவோம்!

    *****

    ”பள்ளிசென்று மீண்ட பிள்ளை பெற்றோரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான்! விரைந்து வரட்டும் பெற்றோரும் பொற்காலமும்!” என்று வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நம்பிக்கையில்…

    பள்ளிக்குச் சென்ற
    பிள்ளை வந்துவிட்டான்,
    பணிக்குச் சென்ற
    பெற்றோர் வரவில்லை..

    மதிய உணவைப்
    பள்ளி பார்த்துக்கொண்டது,
    இரவு உணவுக்கு
    வழிதேடிச் சென்றவர்கள்
    வரவில்லை இன்னும்..

    வாசலில் காத்திருக்கிறான்
    வாடியே பிள்ளை
    நம்பிக்கையில்,
    வரட்டும் சீக்கிரம்-
    இப்போது பெற்றோர்,
    நாளை நல்வாழ்வு…!

    *****

    ”வாழ்க்கையாம் வட்டத்திற்குள் வறுமை என்றும் நிரந்தரமில்லை; முடக்கிய கால் நிமிர்த்தி மடக்கிய கரம் தளர்த்தித் தடம் பதிக்க வா!” என்று சிறுவனுக்கு அறைகூவல் விடுக்கிறார் திருமிகு. சத்யா இரத்தினசாமி.

    வழு இல்லா வாழாநிலை போல் ஓர் நெறி முறைக்குள் நிற்பவனாய்…… வாயில் தாண்ட வாஞ்சையின்றி வையம் நோக்கி இருப்பதேனோ.?

    வீட்டினுள்ளே காவல் காக்க வேறுயிர் ஏதும் இருக்கிறதோ? – அன்றி வெறும் வயிறு பசி தணிக்க வரும் நுந்தை வழி நோக்கி அமர்ந்தனையோ….?

    எதுவாகில் இருந்திடினும் – நீ இளைத்துப் போய் இருத்தல் வேண்டாம்…. வாழ்க்கையாம் வட்டத்திற்குள் வறுமை மட்டும் நிரந்தரமா ?

    நின் விழி தான் உரைக்கின்றதே இந்நிலை வென்றிடலாம் என்று…….எனவே முடக்கிய கால் நிமிர்த்தி மடக்கிய கரம் தளர்த்தி முனைப்போடு தடம் பதித்து முன்னே வா செழுஞ்சுடரே…….!

    *****

    சிறுவனின் பார்வையில் தெரிந்த சோர்வைப் போக்கிச் சுறுசுறுப்பூட்டும் வகையில் அருமருந்தெனக் கவிதைகள் அளித்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    *****

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    கீற்றுக் குடிசையின் கிழக்குச் சூரியன்
    நேற்று இன்றின் நீங்காத் துயரை – நாளை
    மாற்றும் நம்பிக்கையின் மின்னல் கீற்று!
    காற்றுப் புகா இடத்திலும் பாயும் ஓளியின் நாற்று!

    இடிந்த சுவரை எண்ணி
    இடிந்திடாதே தம்பி!
    இழந்ததை எண்ணிக் கலங்காதே,
    இருப்பதைக் கொண்டு போராடு!

    அள்ளக் குறையாத அறிவூறும்
    அட்சய பாத்திரம் தான்
    அருகில் இருப்பவை எல்லாம்
    அள்ளிப் பருகு; ஆளுமை கொள்!

    கீழகழ்ந்து தேடாமல் இருந்தவரை வைகையின்
    கீழடி கூட நம் காலடிக்குக் கீழே தானே கிடந்தது?
    கிளறித் தோண்டிய பின்னே தான் அது தமிழனின்
    கிட்டாப் பெருந்தனம் எனப் புரிந்தது!

    தலைநிமிர் தடை தகர்!
    தளையறு தடம் பதி!
    விளையட்டும் புது விதி!
    வீழட்டும் பழமையின் சதி!

    கண்ணீர் சிந்தியொரு பயனுமில்லை
    காலத்தைப் பூட்டிட யார் கையிலும் சாவி இல்லை!
    கடினம் ஆயினும் கனமாய் அடி
    கதவுகள் திறக்கும் கவலைகள் பறக்கும்!

    வீணாய்க் கிடந்தால் வீழ்ச்சிதான் விரைந்தெழு!
    விண்ணளக்கும் உன் உழைப்பால்
    மண்குடிசை வாசலையும் வா
    பொன் பளிங்கு மாளிகையாக்கலாம்!

    ”கீழகழ்ந்து தேடாமல் இருந்தவரை வைகையின் கீழடிகூட நம் காலடியில்தான் கிடந்தது. கிளறித் தோண்டிய பின்புதான் அது தமிழனின் கிட்டாப் பெருந்தனம் எனப் புரிந்தது. ஆதலால் தலைநிமிர்! தடை தகர்! பழைமைச் சதியை வீழ்த்திப் புதுமை விதியை நிலைநிறுத்து! உழைப்பால் உயர்ந்துநில்!” என்று சிறுவனுக்கு நம்பிக்கை உரமேற்றும் நல்லுரைகளைச் சுமந்திருக்கும் இக்கவிதையை யாத்த திரு. யாழ். நிலா. பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • கவிஞன் கிரேஸி மோகன்

    கவிஞன் கிரேஸி மோகன்

    -விவேக்பாரதி
     
    கண்ணனையே எண்ணியவன் காலமெலாம் கண்ணன்வாய்
    வெண்ணெயென நல்விகடம் வீசியவன் – பண்ணமையும்
    பாட்டும் கவிதைகளும் பண்ணியவன்! நம்கிரேஸி
    நாட்டில் பிறந்ததிந்த நாள்!
     
    நாளொன்று வீழ நமதில்லம் தேடிவரும்
    காலன்ன மோகன் கவிதைகள் – மாலனைக்
    கோட்டோவி யம்செய்யும் கேசவ் படங்கட்குப்
    பாட்டோவி யம்செய்வான் பார்த்து!
     
    பார்த்தால் எளியன் பழகப் புதுக்குழந்தை,
    சேர்ந்தால் அனுபவங்கள் செல்வங்கள் – வார்த்தையில்
    பன்வைத்துப் பேசும் படவசன கர்த்தாவைப்
    பண்வைத்து நெஞ்சே பணி!
     
    பணிவான நெஞ்சும் பகவானின் நாமம்
    அணியான நெற்றி அழகும் – துணிவான
    ஹாசியமும் நட்பின்மேல் ஆதரவும் சேர்த்தால்
    கிரேஸியென மாறும் கிளர்ந்து!
     
    கிளர்ச்சி பெருகும் கிரேஸி வசனம்
    வளர்ச்சி தருமே வழியில் – தளர்ச்சியே
    இல்லாமல் வேடம் எடுத்துநமை ஆட்டிடும்
    வில்லாளி வீரன் வியப்பு!
     
    வியப்பிவன் ஏற்கும் விசித்திர ரூபம்
    நயமுடை ஓவியன் நாட்டில் – பயன்செய்
    நடிகன் கவிஞன் நவயெழுத் தாளன்
    அடியன் திருமால் அடி!
     
    அடித்தாலும் நம்மோகன் ஹாசியத்தால் நம்மைக்
    கடித்தாலும் எல்லாம் கவினே – வெடிக்காத
    பட்டாசு விற்றுப் பழக்கமில் லாதவன்
    தட்டாத கையில்லை சான்று!
     
    சான்றோர் புகழும் சமர்த்தன் வயதிலெனைப்
    போன்றோர் விரும்பும் புதுமையன் – ஆன்ற
    படிப்புக்குச் சொந்தம் பலர்போற்றும் நல்ல
    நடிப்புக்குச் சொந்தம் நரன்!
     
    நரனென்னைக் காத்திடுக நாரணா என்றே
    சுரம்நூறு சொல்வான் தினமும் – கரமென்ன
    எந்திரமா மந்திரமா ஏடு நிறைக்கின்ற
    தந்திரம்யார் தந்த தமிழ்
     
    தமிழில் நம்மோகன் தந்த தனைத்தும்
    அமிழ்தம் இழைத்த அணிகள் – தமிழைச்
    சுவைஞர்கள் கோடி சுவைக்கக் கொடுத்த
    கவிஞன் கிரேஸிமோ கன்!!
     
    16.10.2019
     
     
     
    Share
  • சேக்கிழார் பா நயம் – 51

    சேக்கிழார் பா நயம் – 51

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

    திருநாவலூரர் ஆகிய சுந்தரர் , திருக்கோயிலில் இறைவனை வணங்கச் செல்லும் போது பரவையாரைக் கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்தார். இறைவன் திருவடிகளையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழும் சுந்தரர் உள்ளத்தில் தானே வந்துநின்று அவர் உள்ளத்தில் சிவனருளாக விளங்கினார் பரவையார்! இறைவனை வணங்கி, வழிபட்டுத் திரும்பும்வரை, அவர் உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட அப்பெண்மணி, அவர் வெளியே வந்த போது அங்கிருந்துசென்றுவிட்டார்! கண்வழியே புகுந்து இறைவன் திருவருளே போல நின்ற உருவம் மறைந்துவிட்டது! அவ்வுருவம் எங்கே என்று தேடத் தொடங்கினார் சுந்தரர். இறைவன் திருவருட் செயல்களுள் மறைப்புஎன்னும் திரோதான சக்தி பரவையாரை மறைத்தருளியது. ஆனாலும் சுந்தரர் தேவாசிரியன் மண்டபத்தைச் சார்ந்துநின்றார். தனக்குத் திருவருளைக் காட்டிய இறைவனே, தம் கண்முன் மறைந்த பரவை நாச்சியாரை மீண்டும் கொண்டு வந்து காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் யாரிடமும் எதனையும் கேட்காமல் நின்றார். அப்போது மாலை நேரத்துக் கதிரவன் மேலைக் கடலுக்குள் மறைய முற்பட்டான். அந்த நிகழ்ச்சியைக் கதிரவன் உளக் கருத்தாகத் தன் குறிப்பினை ஏற்றிக் கவிஞர் பாடுகிறார்.

    இறைவன் திருவருளால் சிவபிரான் புகழையும் அடியார் புகழையும் மண்ணுலகில் நிலைநாட்டப் பிறந்தவரே சுந்தரர் என்பதைக் கயிலை மலையில் , ‘’மாதவம்செய் தென்திசை வாழ்ந்திட – அதாவது சிவபெருமான் புகழைத் தம் பாடல்களால் பரவச் செய்து தென்னாட்டிற்கே புது வாழ்வைத் தந்திட, தீதிலாத் திருத்தொண்டத் தொகைதர – அதாவது இறைவனடியார்கள் பலரின் சிறப்பைக் கூறும் திருத்தொண்டத் தொகை என்ற முதல் நூலை வழங்கிச் சைவத்தை உயர்த்தும் கடமையைச் செய்ய அங்குள்ள மாதரார் மேல் மனம் போக்கினார் என்று சேக்கிழார் பெருந்தகை முன்னதாகவே கூறிவிட்டார்.இதனை உரையாசிரியர்,’’சிவபெருமானது புகழையும் அடியார் புகழையும் உலகில் நிலவச் செய்வதற்கே அவதாரஞ் செய்தாராகலின் நல்லிசை நாட்டும் நாவலூரன் என்றார்
    ஏனையோர் இசைகள் ஒன்றும் முற்றும் நல்லன ஆகாமையின் அரன் புகழும் அவன் அடியார் புகழுமே நல்லிசை எனப்பெறும்.இதனை நிலைநிறுத்தியவர் திருநாவலூரர். ஆகவே, ‘’நாட்டு நல்லிசை நாவலூரன்‘’என்றார். அவர் முன்பு கைலையில் தம் மனத்தால் விரும்பிய கமலினியாரே
    திருவாரூரில் திருக்கோயிலில் வந்து நின்றமையால், விதி கடைக்கூட்ட, அவரை விரும்பினார், இதனை ‘வேட்ட ‘ என்ற சொல் உணர்த்துகிறது. அவர் விரும்பியது,இறைவன் திருவருளை! அத்திருவருள் மின்னல் போன்ற இடையை உடைய பரவையார் என்ற பெண்ணுருவில் தோன்றி மறைந்தது. மின்னல் போன்று தோன்றி மறைந்த , தம் உயிரை மீட்டுத் தர வல்லது அமுதமே! அந்த அமுதத்தை மேற்கடலில் குளித்துக் கைப்பற்றிக் கீழ்க்கடலில் தரவல்ல அருஞ்செயலைச் செய்யவல்லவன், கதிரவனே! ஆதலால் ஏழு வண்ணங்க ளாகிய குதிரைகளை பூட்டிய தேரோனாகிய ‘’ஏழ் பரித் தேரோன் ‘’ மேலைக் கடலில் புகுந்தான். இதனைச் சேக்கிழார்,

    ‘’வேட்ட மின்னிடை இன்னமு தத்தினைக்
    காட்டுவன் கடலைக் கடைந்து என்பபோல்
    பூட்டும் ஏழ்பரித் தேரோன் கடல்புக’’

    என்று பாடினார். இப்பாடற்பகுதி தற்குறிப்பேற்ற அணியின் பாற்படும். இயல்பாக நிகழும் இயற்கை நிகழ்ச்சியின் மேல் , புலவன் தன் குறிப்பினை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்றம் ஆகும். இத் தற்குறிப்பேற்றத்தின் மேலும் அதனை விளக்குகிறார் புலவர். கீழ்க்கடலில் புகுந்து அமுதத்தைத் தேடக் கதிரவன் புகுந்ததாகக் கூறுவது சற்று மிகையான விளக்கம்.

    உலகில் நிகழும் நிகழ்ச்சிகளை எப்போதும் கண்டு சாட்சியுரைப்பது கதிரவன். அதனால்தான் கண்ணகி தன் கணவன் கள்வனல்லன் என்பதை, நிறுவக் ‘’காய்கதிர்ச் செல்வனே, கள்வனோ என்கணவன் ?’’ எனக்கேட்டாள். இவ்வாறு இயற்கை நிகழ்ச்சியில் தன குறிப்பை ஏற்றிக் கூறும் கவிஞர் , மேலும், பரவை நாச்சியாரை நாவலூரன் சிந்தை வேட்ட ‘’மின்னிடை இன்னமுதம் ‘’ என்று உருவகப்படுத்துவது மிக்க நயத்துடன் விளங்குவதைக் காண்கிறோம். இனிப் பாடலைப் பயில்வோம்.

    “நாட்டு நல்லிசை நாவலூரன் சிந்தை
    வேட்ட மின்னிடை இன்னமு தத்தினைக்
    காட்டுவன் கடலைக் கடைந்து என்பபோல்
    பூட்டும் ஏழ்பரித் தேரோன் கடல்புக.”

    இப்பாடலில் சுந்தரருக்கு இயற்கையே உதவும் சிறப்பைக் கண்டு மகிழ்கிறோம்!

    Share
  • அருணகிரியும் ஆனைமுகனும்

    அருணகிரியும் ஆனைமுகனும்

    -விவேக்பாரதி 

    காலை எழுந்து வழக்கம்போல் திருப்புகழ் பாடல்களை யூடியூபில் பாடவிட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். முதல் வரிசையில் வந்த சில பாடல்கள் எனக்குள் ஒரு சிந்தனையைக் கிளப்பியது. செந்தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அருளால் வண்ணத் தமிழ் படைத்தவர் அருணகிரிநாதர். அவர் அருளியிருக்கும் திருப்புகழ் முருக வழிபாட்டைக் கடைபிடிப்பாருக்கு உயரிய செல்வம். தமிழ்க் கவிதை உலகுக்குப் பெரும் பேறு. திருவண்ணாமலை கோயில் கோபுரத்தின் மேலிருந்து உயிரை மாய்த்துக் கொள்ளக் குதித்தவரை முருகன் தடுத்தாட் கொண்டு மந்திர உபதேசம் வழங்கி, தவத்தில் இருக்கச் செய்தான். “சும்மா இரு சொல்லற” என்ற முருகனின் மந்திர உபதேசம் கேட்டுச் சும்மா தியானத்தின் அமர்ந்த அருணகிரிக்கு வஜ்ஜிர தேகமும், ஞான விளக்கமும் கிடைத்தது. பின்னர் முருகப் பெருமானே அடியெடுத்துக் கொடுக்கத் திருப்புகழ் என்னும் புதுவித வண்ணப் பாடல்களைத் தலங்கள் தோறும் சென்று பாடுவாராயினார். இது அருணகிரி வரலாறு. அருணகிரிநாதரின் அதீத பக்தி, அபாரமான கவித்துவம். அதனை அவரது பாடல்களில் அநாயசமாக கவனிக்க முடியும். முருகனின் அறுபடை வீடுகளில் தொடங்கி அருணகிரிநாதர் எல்லாத் திருத்தலங்களுக்கும் சென்று முருகனைப் பாடிப் பரந்தார்.

    முருகன் அடி எடுத்துக் கொடுத்து அருணகிரிநாதர் பாடிய ‘முத்தைத் தரு’ என்கிற பாடலே திருப்புகழில் முதல் பாடலாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னம் விநாயகரை அவர் பாடிய சில பாடல்களை முன்வரிசையில் வைத்துப் பதிப்புகள் வெளியாகின்றன. எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளான விநாயகனைப் பாடுதல் நம் தமிழ்க் காவிய மரபு. அதன் அடிப்படையில் உரையாசிரியர்கள் திருப்புகழை அவ்வாறு தொகுத்திருக்கலாம். அருணகிரிநாதர் பாடிய ஏணைய செய்யுட்களான கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகியனவும் முதல் பாடலில் விநாயகரைப் போற்றுவதாகவே அமைந்திருக்கின்றன.
    அருணகிரிநாதர் உறவு சொல்லிப் பாடுவதில் வல்லவராக இருக்கிறார், குறிப்பாக முருகனை நாராயணனாகிய திருமாலின் மருகனே என்று அழைப்பதிலும், சிவசக்தி மைந்தன் என்று புகழ்வதிலும், விநாயானின் தம்பி என்று பெருமை கூறுவதிலும் ஆர்வமாக இருந்திருக்கிறார். இது அவரது எல்லாப் பாடல்களிலும் வெளிப்படை. குறிப்பாக விநாயகப் பெருமானை அருணகிரிநாதர் எந்த இடத்தில் வைத்து வழிபட்டிருக்கிறார் என்பது கந்தர் அலங்காரத்தில் அவர் சொல்லும் பாடலில் விளங்கும்.

    அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
    வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
    தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
    கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.

    தம்முடைய டைரிக் குறிப்பு போல அருணகிரிநாதர் எழுதியிருக்கும் இந்தப் பாடலில், விநாயகன் தம்பி முருகனைத் தாம் கண்டதாகப் பாடுகிறார். அதாவது வருவார்களுக்கு முக்தியைத் தர வல்ல அருணை என்னும் திருவண்ணாமலை கோவில் கோபுரத்துக்குப் பக்கத்தில், அந்த வாயிலுக்கு அருகில் தெற்குப் பக்கமாக அமர்ந்திருக்கிறான் விநாயகப் பெருமான். அவனைத் தரிசிக்க வருபவர்கள் தலையில் குட்டு இட்டு, உக்கி போட்டு வழிபட்டு, மேலும் படையலாக வழங்கும் சர்க்கரை முதலிய பொருட்களை ஏற்கும் விநாயகன் என்னும் யானைக்கு இளைய யானையான முருகன். அவனைக் கண்டேன் என்று அருணகிரி வாக்குமூலம் தருகிறார்.

    வயலூர் திருக்கோவிலைப் பாட வந்த அருணகிரிநாதர் அந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் விநாயகப் பெருமானைப் பாடும் அழகைப் பாருங்கள்…

    பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
    பட்சியெனு முக்ரதுர …… கமுநீபப்

    பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
    பட்டுருவ விட்டருள்கை …… வடிவேலும்

    திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
    சிற்றடியு முற்றியப …… னிருதோளும்

    செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
    செப்பெனவெ னக்கருள்கை …… மறவேனே

    இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
    எட்பொரிய வற்றுவரை …… இளநீர்வண்

    டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவௌ
    ரிப்பழமி டிப்பல்வகை …… தனிமூலம்

    மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
    விக்கிநச மர்த்தனெனும் …… அருளாழி

    வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
    வித்தகம ருப்புடைய …… பெருமாளே.

    இது நாம் அனைவரும் அறிந்த பாடலே. அருணகிரிநாதர் இதிலே வழங்கும் பட்டியல்,  விநாயகர் சதுர்த்தி திருநாளில் நாம் ஒருதரம் நினைக்க வேண்டியது. கரும்பு, அவரை, நல்ல கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், வண்டின் எச்சில் எனப்படும் தேன், அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளறிப்பழம், இடித்த மாவு வகைகள், கிழங்கு வகைகள், சிறந்த உணவுகள், கடலை ஆகிய பட்சணங்களைப் பிரசாதமாக தருவதாக அருணகிரி பாடுகிறார்.

    மற்றோரிடத்தில், தம்பி முருகப் பெருமானின் காதல் நாடகத்துக்கு அண்ணன் விநாயகன் துணை புரிந்த கதையையும் கைத்தல நிறைகனி பாடலில் விளக்குகிறார். முருகனைப் பாடுதலையே தம்முடைய மறுபிறப்பின் பயனாகக் கொண்டு வாழ்ந்த அருணகிரிநாதர் விநாயகனைப் பாடியிருக்கும் பாங்கு நம்முடன் மிக நெருக்கமானவரை வாஞ்சையுடன் வாழ்த்துவது போல தொணிப்பது ஆனந்தம். நாமும் ஒருகணம் அருணகிரிநாதர் பாடிய விநாயகனைக் காதாரக் கேட்டால் சுகம். கலைவாணி தந்த வரமாக அதற்குத்தான் டி.எம்.எஸ், சம்பந்தம் குருக்கள் ஆகியோர் பாடிய பாடல்கள் யூடியூபில் கிடைக்கின்றனவே!

    பக்கரைவி சித்ரமணி பாடல் – https://www.youtube.com/watch?v=U9CM142K1YA

    கைத்தல நிறைகனி பாடல் – https://www.youtube.com/watch?v=2laPCCsVY_Y

    Share