Blog

  • சுதர்மம்

    சுதர்மம்

    -கௌசி (சந்திரகௌரி சிவபாலன்)

    ஆண்டவன் சிருஷ்டியின் அற்பதப் படைப்பு மனிதன். இறைவன் மனிதன் கையில் முக்கிய பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு அமைதி காணுகின்றான். இப் பொறுப்புக்களில் ஒன்று உன்னத பண்பாகிய நன்மை செய்தல். நன்மை செய்தல் என்ற பதத்தினுள் அடங்கும் உதவி என்ற பதத்திற்குள் உள் நுழைவோம். கேட்பவர்க்கு இல்லையென்னாது வாரி வழங்கும் கொடையும் உதவியே. ‘உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கு இடுக்கண் களைவதும்”உதவியே

    வாழ்க்கையிலே நிம்மதி இழந்து, உறவுகளைப் பறி கொடுத்து, அல்லல்பட்டு அடைக்கலம் எனப் புகுந்தவர்களை அந்நியநாடு, அன்புக்கரம் கொடுத்து ஆதரவு தந்து அடிப்படை தேவைகள் மட்டுமன்றி ஆடம்பர தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது. சொந்தமா? பந்தமா? சொல்லிக் கொள்ளும் நட்பா? யாரென்று தெரியாத ஒரு அந்நியனை தன் உடன்பிறப்புப் போல் நினைத்து உதவுகின்றது. இங்குதான் உதவியின் உண்மைத் தன்மையை நாம் அடையாளம் காணமுடிகின்றது. இனவேறுபாடு, சாதிவேறுபாடு, மதவேறுபாடு என மனிதனை மனிதனே பங்கு போட்டுக் கொள்ளும் நாடுகளுக்கிடையே ஒரு எடுத்துக்காட்டாக நாம் புகுந்த மனை விளங்குகின்றது. அதைப் போற்றிப் பாடாவிட்டாலும் தூற்றாமல் இருக்க வேண்டியது எமது கடமை.

    உதவி பற்றி நாம் விரிவாக நோக்குவோமேயானால், அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திய பொதுமறை திருக்குறள் தந்த தெய்வப்புலவர், திருவள்ளுவர் தான் அநுபவித்து உதிர்த்த வார்த்தைகளான,

    “உதவி வரைத்தன்று உதவி உதவி
    செய்யப்பட்டார் சால்பின் வரைத்து”

    என்ற குறளை எடுத்து நோக்கினால், உதவியைப் பெறுபவர்க்கு நாம் செய்யும் உதவி எந்த அளவிற்கு பயன்படுகின்றதோ. அந்த அளவே உதவியின் அளவு அமையும். என்பதே அதன் உள்ளார்ந்த பொருள் ஆகும். நாம் உதவியை யாருக்குச் செய்கின்றோம் என்பது முதலில் அறியப்படல் வேண்டும். அதாவது “பாத்திரம் அறிந்து பிச்சை போடு”என்ற பழமொழியோடு இக்கருத்து ஒன்றி நிற்கின்றது. பசித்தவனுக்கு உணவு பரிமாறப்படல் வேண்டும். எனக்குப் பசியில்லை என்று கூறும் விருந்தாளியை நோக்கி இதுதான் சுதர்மம் என்று கூறி வலுக்கட்டாயமாக உணவைத் திணிப்பது எந்தவகையில் நியாயமாகப்படும். கேட்டோமா? கொடுத்தார், பெற்றோம் என்று அவர் கூறும் நிலைதான் ஏற்படும். அவன் சால்பின் வரைத்துத்தானே உதவி அமைதல் வேண்டும். பழங்கள் இருக்கும் வரை பழமரத்தைப் பறவைகள் அண்மிப்பது போல ஒட்டி உறவாடிய சொந்தங்கள், வெறுமையாக வழியிழந்து நிற்கும் போது விட்டு விலகிவிடும். இது நடைமுறை வாழ்க்கை. நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற கருத்துக்களே உலகுக்கு ஏற்ற பொதுமொழியாக அமைகின்றன. மனிதனிடம் கொடுக்கப்பட்டிருப்பது அட்சயபாத்திரம் அல்லவே, கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் இருக்க. எனவே ‘தனக்குண்டு தானம் வழங்கு”என்பதும் சுயபுத்தி கொண்டு சுயமாகச் சிந்திக்க வேண்டியதுதான். ஆனாலும், மனிதன் கர்மம் செய்யப் பிறந்தவன். ஏதோ ஒருவகையில் அவன் கர்மம் செய்தேயாக வேண்டும் என பகவத்கீதை கூறுகின்றது. தனது மகனுக்காவது ஒரு மனிதன் கருமம் செய்திருப்பான். எனவேதான் இறுதிமரியாதையில் மகன் அவனுக்குக் கர்மம் செய்கின்றான் என அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் விளக்கியுள்ளார். கர்மம் செய். பலனை எதிர்பாராதே என பகவத்கீதை கூறுவது போல் ஒளவையும்

    ‘நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
    என்று தருங்கொல்? என வேண்டா – நின்று
    தளரா வளர் தெங்குதாள் உண்ட நீரைத்
    தலையாலே தான் தருதலால்”

    என்று தன வாக்குண்டாம் என்றும் நூலில் கூறியிருக்கின்றார். அதாவது அடியிலேயிருந்து வேர் மூலமாகக் குடித்த நீரை இளநீராகத் திரும்பவும் தென்னைமரம் தருவதனால், அதேபோல் ஒருவருக்கு நன்றி செய்தால் அந்த உதவிக்கு எப்பொழுது பதில் உதவி புரிவாரோ என்று நினைக்க வேண்டியதில்லை.

    உதவி பற்றிக் கீதையும் வள்ளுவமும் முரண்பட்டு நிற்பது போல் தோன்றினாலும் வள்ளுவம் கூறுவது, நீங்கள் செய்யும் உதவியின் பயன் அதனைப் பெற்றுக் கொள்ளுபவனின் மனதைப் பொறுத்தது. என்பது மட்டுமே. அந்தப் பலனைத்தான் எதிர்பார்க்காதே என்று கீதை சொல்கின்றது. வள்ளுவம் கூட பலனை எதிர்பார் என்று கூறவில்லை. பலனானது உதவி பெற்றுக்கொள்பவர் மனதைப் பொறுத்தே அமையும் என்கிறது. இந்துமதத்தின் அடிப்படை பகவத்கீதை. பகவான் கிருஷ்ணபரமாத்மா மூலம் இறைவாக்காக அருளப்பட்டது. கீதையைத் தலைமேற்கொண்டால், ‘உன்னுடைய கர்மம் நன்மை செய்வதாக இருந்தால், அதை யாருக்கு வேண்டுமானாலும் செய் அதுவே சுதர்மம்|| என்பதை ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இதை அடிப்படை வித்தாக மனதிலே ஆழமாகப் பதிக்க வேண்டும். நன்மை செய்வதாக இருந்தால், சொந்தமோ, பந்தமோ, உறவோ, பகையோ, யாருக்கு வேண்டுமானாலும் செய்ய வேண்டும். இதனையே ஒளவைப்பிராட்டியும்

     ‘உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
      உடன் பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
      மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
      அம் மருந்து போல் வாரும் உண்டு”

    என்கிறார். உடன்பிறப்பு, சுற்றம் என்று உன் கவனத்தைக் குறுக்கி விடாதே. உறவினர்கள் தான் நன்மை செய்வார்கள் என்றிருக்க வேண்டியதில்லை. மலையிலுள்ள மருந்து உன் நோயைத் தீர்க்கின்றது. அந்த மருந்து போன்ற அந்நியர்களும் உதவிக்கு வருவார்கள் என்று அழகாகச் சொல்லியிருக்கின்றார். அதனால் எமது பார்வையானது விரிய வேண்டும். அகலக்கண் கொண்டு பார்க்க வேண்டும்.

    எனவே ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” “முடிவு இறைவன் கையில் இருக்கின்றது. நீ வெறுமனே செயற்படு” என்னும் வாக்கியங்களை அகங் கொண்டு ஆட்டி வைப்பவன் இருக்கின்றான். ஆவதைப் பார்ப்போம். எனத் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவோம். நாம் பெற்ற உதவிகளை மனதில் பதித்திருக்கும் என மனந்தெளிவோம். ஒரு கரம் வழங்க மறுகரம் அறியாதிருக்கும் எனத் தொழிற்படுவோம்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 70

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 70

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

    குறள் 691:

    அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
    இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

    ராசா கூட இருக்கவங்க நெருப்புல குளிர் காயுதது போல கிட்டக்க போவாமலும் தூர வெலகாமலும் இடையுல நின்னு பழகணும். 

    குறள் 692:

    மன்னர் விழைப விழையாமை மன்னரான்
    மன்னிய ஆக்கந் தரும்

    ராசா ஆசப்படுதது தான் தனக்கும் வேணும்னு நெனையாம இருக்கவனுக்கு ராசாவால நெலையான செல்வம் கிடைச்சிக்கிடும்.

    குறள் 693:

    போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
    தேற்றுதல் யார்க்கும் அரிது

    ராசாகிட்டேந்து தன்னயக் காத்துக்கிட நெனைக்கவன் தப்பான காரியத்த செய்யக் கூடாது. ஒருக்கா ராசாவுக்கு சந்தேகம் தோணிப்போச்சுதுன்னா  அதத் தெளிய வைக்கது சங்கடந்தான். 

    குறள் 694:

    செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
    ஆன்ற பெரியா ரகத்து

    பெரிய மனுசங்க முன்ன மத்தவன் காதுல ரகசியம் சொல்லுததும், அவன் கூட சேந்து சிரிக்குததும் கூடாது. 

    குறள் 695:

    எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
    விட்டக்காற் கேட்க மறை

    பதவியில இருக்கவங்க ரகசியமா பேசுதப்போ நின்னு ஒட்டு கேக்கக் கூடாது. பொறவு அது என்னனு கேட்டு தொந்தரவும் செய்யக்கூடாது. அவுகளா சொல்லுத வரைக்கும் விட்டுப்போடணும். 

    குறள் 696:

    குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
    வேண்டுப வேட்பச் சொலல்

    ஒருத்தங்களோட மனசப் புரிஞ்சிக்கிட்டு ஏத்த காலத்துல மனசுஒப்பாதத நீக்கிப்போட்டு நல்லதா அவுக விரும்புதாமாரி சொல்லணும். .     

    குறள் 697:

    வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல்

    விருப்பப்பட்டு கேட்டாக ன்னாலும் உருப்படியான விசயத்த மட்டும் சொல்லிப்போட்டு உருப்படாதத விட்டுப்போடணும். 

    குறள் 698:

    இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
    ஒளியோ டொழுகப் படும்

    பதவியில இருக்கவங்கள எனக்கு இன்ன மொறையில சொந்தம், என்னைய விட இளையவன் தான்னு எளக்காரமா பேசாம அவுகளுக்கு இருக்க புகழ நெனச்சி பாத்து நடந்துக்கிடணும். 

    குறள் 699:

    கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
    துளக்கற்ற காட்சி யவர்

    தெளிஞ்ச புத்திக்காரங்க ராசாக்குதான் நம்மளப் புடிக்குமே ன்னு நெனச்சு துணிஞ்சு அவருக்கு பிடிக்காத காரியத்த செய்ய மாட்டாக.  

    குறள் 700:

    பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் 
    கெழுதகைமை கேடு தரும்

    ராசாகிட்ட நெருக்கமா பழகுதோம் ங்குத காரணத்த வச்சிக்கிட்டு தகுதியில்லாத செயலச் செஞ்சாம்னா அது கெடுதலாதான் முடியும்.  

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • அறிவும் புத்தியும்

    அறிவும் புத்தியும்

    -நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல்… (170) 

    அக்குழந்தைக்கு அன்று ஆண்டுநிறைவு.

    “குழந்தை புத்திசாலியா?” தன் முதல் குழந்தை நல்லவிதமாக வளரவேண்டுமே என்ற ஆதங்கத்துடன் ஓர் இளம் தாய் என்னைக் கேட்டாள்.

    அதன் கண்களைப் பார்த்தபோது, களங்கமற்ற குணம் மட்டும்தான் தெரிந்தது.

    “நாம் பேசப் பேசத்தான் குழந்தைகளின் அறிவு வளரும்,” என்று என் அனுபவத்தில் அறிந்ததைக் கூறினேன்.

    பொது இடங்களில், குழந்தையிடம் பேசுவதே வீண் என்பதுபோல் நடக்கிறார்கள் பல தாய்மார்கள். அப்படியே கைத்தொலைபேசியிலிருந்து மிகுந்த சிரமத்துடன் கண்களை அகற்றிப் பேசினாலும், எதைப் பற்றிப் பேசலாம் என்ற கேள்வி எழுகிறது.

    சில பெரியவர்கள், ‘வேடிக்கை’ என்று நினைத்து, கெட்ட வார்த்தைகளும், பழிப்புச் சொற்களும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். அர்த்தம் புரியாது, குழந்தைகள் அதையெல்லாம் திரும்பச் சொல்லும்போது, மூத்தவர்கள் வேண்டுமானால் சிரிக்கலாம். ஆனால், வளர்ந்தபின் அப்படிப் பேசினால், யாரும் அப்படி வளர்க்கப்பட்ட ஒருவனை மதிக்கமாட்டார்கள்.

    கல்வி ஒருவனை அறிவாளி ஆக்குகிறதா என்பதும் யோசிக்க வேண்டிய சமாசாரம்தான்.

    பள்ளிக்கூடத்தில், “உன் மூளையை உபயோகப்படுத்து!” என்று படித்துப் படித்துச் சொல்வார்கள். தற்காலத்தில், பிறர் தமது மூளையை உபயோகித்து அறிந்தவற்றை நமதாக்கிக்கொள்ள விஞ்ஞானம் வழிவகுக்கிறது.

    நிறைய விஷயங்களைத் தெரிந்துவைத்து, ஒருவன் தான் புத்திசாலி என்று பெருமிதம் கொண்டிருக்கலாம். ஆனால், வெறும் ஏட்டுச் சுரைக்காயால் என்ன பயன்! நற்குணமும், ஆழமாகச் சிந்திப்பதன் பயனாக உலகைப் புரிந்துகொள்ளும் அறிவும் வேண்டாமா?

    கதை

    பட்டப்படிப்பில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்த சரவணனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைப்பது சிரமமாக இருக்கவில்லை. ஆனால், புத்தக அறிவைத் தவிர வேறு எதுவும் இல்லாதவனுக்குப் பயம் ஏற்பட்டது, புதிய இடத்தில் தான் எப்படி பிழைக்கப் போகிறோமோ என்று.

    மாற்றங்களை எதிர்கொள்ளும் துணிவு புத்தகப் பாடங்களைப் படித்துப் பெற்ற புத்தியால் கிடைப்பதல்ல.

    தன் நண்பர்கள் யாருக்காவது அங்கு உறவினர்கள் இருக்கிறார்களா என்று கேட்டுப் பார்த்தான் சரவணன். அவர்களுடன் தொடர்புகொண்டு, “என்னை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்,” என்று கெஞ்சினான். ஆதாயம் எதிர்பார்த்து வலுவில் நட்பை ஏற்படுத்திக்கொண்ட போதும், பிறருடன் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அன்றாடம் வானொலியில் கேட்ட செய்திகளை மட்டும் திரும்பக் கூறுவான்.

    `இவன் கல்லூரியில் என்னதான் கற்றான்?’ என்ற கேலிக்கு ஆளானான்.

    `தெரிந்தவரை போதும்,’ என்ற மனப்பான்மை இருந்தால் அறிவு எப்படி வளரும்?

    `நான் புத்திசாலி!’ என்று படிப்பையும் உத்தியோகத்தையும் வைத்து இவன் பெருமை கொள்ளலாம். கைநிறையப் பணமும் கிடைக்கலாம். ஆனால், பிறருடன் பழகத் தெரியாவிட்டால், கல்வியால் என்ன பயன்?

    செய்தித்தாள் மட்டுமின்றி, நிறைய புத்தகங்களையும் படித்து, தான் அறிந்ததை சமயம் கிடைத்தபோதெல்லாம் வெளிக்காட்டிக்கொள்பவன் தன்னைப் புத்திசாலி என்று நினைத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்வது உள்ளாடைகளைப் பெருமையுடன் வெளியில் காட்டிக்கொள்வதுபோல்தான் என்கிறார் திரு.அனுபவசாலி. உள்ளாடை, புத்தி இரண்டும் ஒருவருக்கு அவசியம் தேவை.  ஆனால், பிறர் மெச்சுவதற்காக அல்ல.

    கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதில்களைச் சொல்பவனும் புத்திசாலி என்பதல்ல. படித்ததை எவ்வாறு தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தலாம் என்று புரிந்து, அதை உபயோகிக்காவிட்டால், படித்து என்ன பயன்?

    புதிய விஷயங்களைக் கற்று, புத்திக்கூர்மையை அதிகரிக்க சரியான கேள்விகளைக் கேட்கவேண்டும். நிறையக் கேள்வி கேட்பவர்களை பலரும் விரும்புவதில்லை. சந்தேகத்துடன் பார்ப்பார்கள்.

    ஆனால், அறிவை நாடுகிறவர்கள் தமக்குள் எழும் கேள்விகளுக்கு விடைகாணும்வரை முயற்சியைக் கைவிடமாட்டார்கள். இவர்களால் வித்தியாசமான பிறரைப் புரிந்து ஏற்க முடிகிறது. தம் சொந்த வளர்ச்சிக்காக பிறரை நோகடிக்கவோ, அதிகாரம் செலுத்தவோ மாட்டார்கள். ஏனெனில் இவர்களது உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.

    அறிவை எப்படித்தான் வளர்ப்பது?

    கல்வி மட்டுமின்றி, கலை, ஆரோக்கியமான, கவனம் செலுத்தவைக்கும் விளையாட்டுகள், தியானம் போன்றவற்றால் அறிவு வளரும். அதைக் குறித்து கர்வம் எழாதபோது, தன்னம்பிக்கையும் மிகும்.

    தன்னம்பிக்கையுடைய எழுத்தாளர், சைத்திரிகர், நடிகர் போன்றோர் தனிமையை விரும்புகிறார்கள். கற்பனையில் பல பாத்திரங்களுடன் ஒன்றிணைந்து, அவர்களாகவே மாற வேறு வழியில்லை.

    இவர்களிடமும் பிறர் குற்றம் கண்டுபிடிப்பார்கள் -– பழகத் தெரியவில்லை என்று. இவர்களுக்கு நிறைய நண்பர்கள் வாய்க்கமாட்டார்கள். ஏனெனில், தகுதியானவர்களை மட்டுமே இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். பிறர் சொல்லாததையும் புரிந்துகொள்ளும் திறமை இருப்பதால் `ஆமாம் சாமி’ போட இவர்கள் விரும்புவதில்லை என்பதும் ஒரு காரணம்.

    விஞ்ஞான வளர்ச்சியால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை கணக்கில் அடங்காமல் போய்விட்டன. எல்லாவற்றையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாவிட்டால், நாம் முட்டாள்கள் என்றாகாது.

    கணினி, கைத்தொலைபேசி என்று பல்வித சாதனங்களையும் ஓயாது உபயோகிக்கும் திறன் மட்டும் இருந்தால் போதுமா?

    பழகத் தெரிய வேண்டும்

    ஒரு பேரங்காடியில் பார்த்தேன். நாற்பது வயதுக்குட்பட்ட ஆறுபேர் ஒரு நீண்ட இருக்கையில் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு தொலைபேசி. பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து யாரும் புன்முறுவல் செய்யவோ, உரையாடவோ முயலவில்லை. மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கையிலும் Ipad! அவர்களும் தம் உலகில் மூழ்கி இருந்தார்கள்.

    மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில், பிறருடன் பழகத் தெரிந்திருக்க வேண்டாமா? கணவன் எப்போதும் கணினியின்முன், மனைவி கைத்தொலைபேசி அல்லது தொலைக்காட்சி என்றிருந்தால், சிறுபிராயத்தில் ஒரு குழந்தைக்கு எதையோ இழந்துவிட்டது போன்ற ஏமாற்றம் எழும். சமாதானம் செய்யும் வகையிலோ, அல்லது `அன்பு’ என்ற பெயரிலோ, ஏதாவதொரு சாதனத்தை வாங்கிக் கொடுக்கத்தான் பொற்றோர்களால் இயலும்.

    இப்படிப்பட்ட குடும்பத்தின் அங்கத்தினர் அனைவரும் தீவுகள்போல் தனித்து இயங்குவார்கள். எல்லாச் சூழ்நிலைகளிலும் சுயநலத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து நடக்க முற்படுவது இதனால்தான்.

    கதை

    ஒருமுறை என் சக ஆசிரியை, “ஆண்கள் வளர்ந்துவிட்ட குழந்தைகள். என் கணவர் குழந்தைகளிடம் பேசியதே கிடையாது. நண்பர்களுடனேயே தன் நேரத்தைக் கழிப்பார். ஒரு விடுமுறை நாள், வீட்டில் உட்கார்ந்திருந்தபோது, அவருடைய ஆத்திரம் பெருக்கெடுத்தது. `யாருமே என்னை மதித்து, ஒரு வார்த்தைகூடப் பேச வரவில்லை!’ என்று கத்தினார்!’ என்று சிரித்தாள்.

    இருபது வயதுக்கு மேற்பட்டிருந்தாலும், அவளுடைய குழந்தைகள் தம் வாழ்க்கையில் நடப்பதையெல்லாம் தன்னுடன் ஏன் பகிரவேண்டும் என்ற என்னிடம் ஆச்சரியப்பட்டாள்.

    “உன் குழந்தைகள் ஏதோ, கடவுளைக் கண்டதுபோல் பரவசத்துடன் உன்னைப் பார்ப்பதைக் கவனித்திருக்கிறேன். அது உனக்குத் தெரியுமா?” என்று நான் கேட்டபோது, அவள் விழித்தாள்.

    எதையும் எதிர்பாராது, அவள் தன் நேரத்தை, உழைப்பை, தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடந்த கசப்பான, அல்லது இனிமையான, பொழுதுகளை சிறுவயது முதல் அவர்களிடம் சொல்லியிருக்கிறாள். (தமிழ் தெரியாத, அல்லது நெருக்கமாக இல்லாத அக்கம்பக்கத்தினர் இருந்தால், நாம் பெற்ற குழந்தைகளே உற்ற நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்).

    இப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் தாயுடன் நெருக்கமாக இருப்பதில் என்ன அதிசயம்?

    புத்தி மட்டும் போதுமா?

    என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், பெரிய உத்தியோகம் வகித்து, கைநிறைய சம்பாதித்தாலும், சக மாந்தருடன் சுமுகமாகப் பழகுவது, அவர்களைப் புரிந்து நடப்பது போன்ற தன்மைகள் குறைந்துவிட்டால் அறிவு மங்கிவிடும்.

    வெளிநாட்டில் வேலை பார்த்த சரவணன் கூறினான், “என் இரு குழந்தைகளுக்கும் இப்போதுதான் இரண்டு வயது, ஒரு வயதாகிறது. இந்த வயதில் அவர்களுக்கு நான் தேவைப்படமாட்டேன்!”

    நினைவுதெரிந்த நாளாக, தாய்தந்தையரின் அன்பு கிடைக்கப்பெற்று, அதன்மூலம் வாழ்க்கையில் என்ன இடர் வந்தாலும் எதிர்கொள்ளும் மனோதிடத்துடன் வளர்ந்திருக்கும் எத்தனைபேர் இதை ஒப்புக்கொள்வார்கள்?

    முற்றும்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 69

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 69

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்

    69. தூது

    குறள் 681:

    அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
    பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

    நேசமான கொணமும், நல்ல குடிப்பொறப்பும், ராசா விரும்புதது கணக்கா நல்ல பழக்கவழக்கமும் இருக்கது தான் தூதருக்கு உண்டான தகுதிங்க. 

    குறள் 682:

    அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
    கின்றி யமையாத மூன்று

    தூது போவுதவுங்களுக்கு தேவப்படுத மூணு முக்கியமான பண்பு  நேசம், புத்திசாலித்தனம், பேச்சுத்தெறமை.

    குறள் 683:

    நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் 
    வென்றி வினையுரைப்பான் பண்பு

    வேத்து நாட்டுக்குப் போயி தன் நாட்டு ராசா செயிக்கது கணக்கா சேதி சொல்லுதவன் நூல்களப்படிச்சு அறிஞ்ச அறிவாளிய விட தெறமசாலிய இருக்கணும். 

    குறள் 684:

    அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
    செறிவுடையான் செல்க வினைக்கு

    நல்ல புத்தி, பாக்கவங்க விரும்புத தோற்றம், நல்ல படிப்பு இந்த மூணு பொருத்தமும் இருக்கவன் தான் தூது போவணும்.

    குறள் 685:

    தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
    நன்றி பயப்பதாந் தூது

    கோவத்த உண்டாக்காம சந்தோசம் கொடுக்குத மாதிரி இருக்க சேதிகளாப் பாத்து ஒண்ணுபோலத் தொகுத்து வெறுப்பு ஏத்துதத ஒதுக்கிப்போட்டு உபயோகமா சொல்லுததே நல்ல தூதருக்கு அழகு.

    குறள் 686:

    கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் 
    தக்க தறிவதாந் தூது

    படிச்சவனாவும் எரிச்சுப்போடுதமாரி பாக்க பகையாளிக்கு பயந்துகிடாம, அவன் மனசுல பதியுதமாரி சொல்லவேண்டியதச் சொல்லி தெரிஞ்சுக்கிடவேண்டியத தெரிஞ்சுக்கிட்டு வருதவன் தான் ஒசந்த தூதன். 

    குறள் 687:

    கடனறிந்து காலங் கருதி இடனறிந்
    தெண்ணி உரைப்பான் தலை

    தான் செய்ய வேண்டிய கடம என்னன்னு தெரிஞ்ச பொறவு தகுந்த காலத்தையும் எடத்தையும் பாத்து வச்சி சொல்ல வேண்டியதச் சொல்லுதவன் தான் சிறந்த தூதன். 

    குறள் 688:

    தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
    வாய்மை வழியுரைப்பான் பண்பு

    துணிச்சல். தொணை, ஒழுக்கம் இந்த மூணும் தூதுவர்க்கு தேவையானவைகள் னு சொல்லுதாங்க. 

    குறள் 689:

    விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
    வாய்சோரா வன்க ணவன்

    ஒரு ராசா சொல்லிவிட்ட சேதிய இன்னொரு ராசா கிட்ட சொல்லுதப்போ தெரியாம கூட தப்பான வார்த்தைகளச் சேத்து சொல்லாம இருக்கவனால தான் தூது போவ ஏலும். 

    குறள் 690:

    இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் 
    குறுதி பயப்பதாம் தூது

    தூது போன எடத்துல ஏதும் ஆபத்து வந்து தான் செத்தா கூட பரவாயில்ல தன் ராசாக்கு நல்லது செய்யணும்னு நெனைக்கவன் தான் தூதன்.

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(270)

    குறளின் கதிர்களாய்…(270)

    செண்பக ஜெகதீசன் 

    உளரெனினு மில்லாரோ டொப்பர் களனஞ்சிக்
    கற்ற செலச்சொல்லா தார்.
    -திருக்குறள் -730(அவை அஞ்சாமை)

    புதுக் கவிதையில்...

    அவைக்களத்தில் பேச
    அஞ்சித்
    தாம் கற்றவற்றைப்
    பொருள் விளங்கச்
    சொல்ல இயலாதவர்,
    உயிருடன் இருந்தாலும்
    இல்லாதவராய்
    இறந்தவர்க்கு ஒப்பானவரே…!

    குறும்பாவில்…

    உயிருடன் இருந்தாலும் ஒருவர்
    கற்றவற்றை அவையஞ்சி எடுத்துரைக்க இயலாதெனில்,
    இறந்தவராய் இல்லாதவர் ஆவார்…!

    மரபுக் கவிதையில்…

    அவையி லுள்ளோர் பொருள்விளங்க
    அச்ச மின்றி கற்றவற்றைச்
    சுவையோ டெடுத்துச் சொல்லிடவே
    சிறிதும் திறமை யில்லாதார்,
    எவையும் கற்றுப் பலனில்லை,
    எல்லோர் போல வாழ்ந்தாலும்
    சவமாய் உயிரே யில்லார்க்குச்
    சமமாய்க் கருதுவர் உலகோரே…!

    லிமரைக்கூ..

    உயிரிலா பிணத்துக் கொப்பாவார்,
    கற்றவற்றைப் பிறரறியும்வகையில் அஞ்சாதே
    அவைதனில் எடுத்துச் செப்பாதார்…!

    கிராமிய பாணியில்

    அஞ்சாத அஞ்சத
    அறிஞ்சதச் சொல்ல அஞ்சாத
    சபயில சொல்ல அஞ்சாத..

    படிப்பு நெறய படிச்சிருந்தாலும்
    படிச்சதப் பலரறியச் சபயில
    பயமில்லாம எடுத்துச்சொல்லணும்..

    அந்தத் தெறமயில்லாதவன்
    உயிரோட இருந்தாலும்,
    உயிரு இல்லாத
    பொணமும் அவனும் ஒண்ணு..

    அதால
    அஞ்சாத அஞ்சத
    அறிஞ்சதச் சொல்ல அஞ்சாத
    சபயில சொல்ல அஞ்சாத…!

     

    Share
  • எழுத்து -11

    எழுத்து -11

    -வேதா. இலங்காதிலகம்

    சிந்திக்கும் என் சுதந்திரம் என்றும்
    நந்தவன மலர்களில் தேனருந்த அலைந்து
    சிந்து பாடும் தேனீயாக உலவும்!
    மந்திரமாய் உயர்வாய் மலைத்திட எழுத
    செந்தமிழ்ச் சதுரங்கம் ஆடும். சங்கொலி
    முந்தி வரட்டும் என்  தமிழுக்கு
    முந்திய மூன்று சங்கங்களின் இருப்பும்
    தந்தது  இந்த எழுத்து தானே!

    என் சொற்காலம் இப்படித்தான் நிலவட்டும்!
    என் கவிச்சிறகுகள் இப்படித்தான் விரவட்டும்!
    மீன்களாகக் கண்ணாடிக்குள் வண்ணமாக அல்ல
    மீளாது ஓடிடும் ஆற்றின் மீன்களாய்
    கீழாகவோடி அழியாது சரித்திரம் படைக்கட்டும்!
    என் விரல்கள் எப்போதும் பேசட்டும்!
    மென் அலங்கார வார்த்தை இரசனையிலல்ல
    இன்னமுதத் தகவலோடு இனிமையாய்ப் பரவட்டும்!

    நாலெழுத்துத் திறமையோடு சபை நடுவே
    நீட்டோலை வாசிக்காதவனே மரமென்றார் ஒளவையார்
    வல்லமையாய் எழுத்தில் மேன்மை தேடுதல்
    வில்லேந்தும் வீரமாக அகலவியலாத அறிவாகும்.
    மெல்லிய மலர் மஞ்சமாக மனதில்
    தொல்காப்பியம் விரிக்கும் அகளங்கம் இன்றி
    புல்லறிவு விரட்டி தமிழினிமை கொள்ளல்
    அல்லிக் குளத்தருகே முல்லை மல்லிகையனுபவமாகும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 68

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 68

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    68.வினைச்செயல் வகை

    குறள் 671:

    சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
    தாழ்ச்சியுள் தங்குதல் தீது

    ஒரு காரியத்த செய்யுதப்போ சாதகபாதகத்த யோசிச்சு முடிவெடுக்கணும். முடிவு எடுத்த பொறவு காரியத்த கெடப்புல போடுதது தப்பா போயிடும்

    குறள் 672:

    தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
    தூங்காது செய்யும் வினை

    நிதானமா செய்ய வேண்டியத தாமதமா செய்யலாம். வெரசலா செய்ய வேண்டியத தாமதமா செய்யக்கூடாது. 

    குறள் 673:

    ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
    செல்லும்வாய் நோக்கிச் செயல்

    ஏலுத (இயலுகின்ற) எடத்துல காரியத்த செஞ்சு முடிக்கது நல்லது. ஏலாத எடத்துல அதுக்கேத்த வழியத் தெரிஞ்சுக்கிட்டு செய்யுதது நல்லது. 

    குறள் 674:

    வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
    தீயெச்சம் போலத் தெறும்

    செய்ய ஏத்துக்கிட்ட காரியம், அழிச்சுப் போட நெனச்ச பகை ரெண்டுலயும் முடிக்காம வைக்குத மிச்சம் பாதில அணைக்காம விட்ட தீயப் போல வளந்து கெடுதல வெளைவிக்கும்.

    குறள் 675:

    பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
    இருள்தீர எண்ணிச் செயல்

    ஒரு காரியத்த செய்யுததுக்கு முன்ன அதுக்குத் தேவைப்படுத பணம், சாமான், காலம், இடம், எப்டி செய்யணும் ங்குத மொறை இந்த அஞ்சையும் சந்தேகமில்லாம யோசிச்சு பொறவு தொடங்கணும். 

    குறள் 676:

    முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
    படுபயனும் பார்த்துச் செயல்

    காரியத்த எப்டி முடிக்கணும் ங்கதையும், அதச் செய்யுதப்போ வரப்போகுத தடங்கலையும், காரியம் முடிஞ்ச பொறவு கெடைக்கப்போவுத பயனையும் நெனைச்சுப்பாத்து செய்யணும்.   

    குறள் 677:

    செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
    உள்ளறிவான் உள்ளங் கொளல்

    ஒரு காரியத்த தொடங்குதப்போ அத முன்னமே செஞ்சவங்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு செய்யுதது தான் மொறை. 

    குறள் 678:

    வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று

    ஒரு காரியத்த செய்யுதப்போ அத வச்சி இன்னொரு காரியத்தயும் நடத்திக்கிடதது  ஒரு யானைய வச்சி இன்னொரு யானைய பிடிக்குதது கணக்கா ஆவும்.   

    குறள் 679:

    நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
    ஒட்டாரை ஒட்டிக் கொளல்

    பகையாளியா இருக்கவங்கள சேத்துக்கிடதது சேக்காளிங்களுக்கு தேவைப்படுதத செஞ்சு கொடுக்கதக் காட்டிலும் வெரசலா செய்ய வேண்டிய விசயம். 

    குறள் 680:

    உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற் 
    கொள்வர் பெரியார்ப் பணிந்து

    தங்கள விட பலசாலிய  எதித்து நிக்கதுக்கு கூட இருக்கவங்களே நடுங்குதப்போ  எதிர்பாக்குத பலன் கெடைக்கும்னு தெரிஞ்சா அவுக பலசாலிய பணிஞ்சு ஏத்துக்கிடுவாக. 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 227

    படக்கவிதைப் போட்டி – 227

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முகம்மது ரபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (13.10.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • அம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019

    அம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019

    -விவேக்பாரதி 

    நமக்கு அவள் அணைப்பு போதும்! அவளுக்கு என்ன வெண்டும்? நம்மையே வேண்டும் என்று கேட்கிறாளே! அட! யாரடா இவள் என்று பார்த்தால் அவள் பெயரே பெயராத அளவு நெஞ்சத்தில் நிற்கிறது…

    என்னையே தனக்காகக் கேட்பவள் – அவள்
    என்னுளே தானாகிப் பூப்பவள்
    மின்னலே சிரிப்பாகக் கொண்டவள் – எனை
    மீட்டவே விரல்கொண்டு வந்தவள்!
    முன்னமே நிற்கின்ற மாயையள் – ஒரு
    முறுவலில் சாய்க்கின்ற பூவிதழ்
    அன்னையாய் அன்பளாய் வருபவள் – அவள்
    ஆதிதுர்க்கை எனும் பெயரினள்!

    சிம்மத்தின் மேல்வீற்றிருப்பவள் – பிள்ளைச்
    சிணுங்கலை அறிகின்ற காதினள்
    சும்மா இருக்காமல் ஓரமாய் – நின்று
    சுருக்கென்று கிள்ளிச் சிரிப்பவள்!
    நம்மையே அவள்தான் படைத்தவள் – எனில்
    நம்முள்ளும் அவள்தான் இருப்பவள்!
    அம்மாடி எத்தனைப் புதிரவள் – அவள்
    ஆதிதுர்க்கை எனும் பெயரினள்!

    கிண்ணத்தில் தேன்கொண்டு வருபவள் – பழம்
    கிள்ளிநம் வாயிலே தருபவள்
    கன்னத்தில் முத்தம் இழைப்பவள் – அடர்
    காட்டினில் தனியாய் வசிப்பவள்!
    அன்னத்தில் அமுதாய் இருப்பவள் – மக்கள்
    அகத்தினில் அன்பாகி வளர்பவள்
    அன்னவள் எப்போதும் எளியவள் – அவள்
    ஆதிதுர்க்கை எனும் பெயரினள்!

    பூச்சூட்டிப் பார்க்கச் சிரிப்பவள் – பகை
    பொய்சூடும் நெஞ்சை எரிப்பவள்
    காய்ச்சலைத் தந்தே ரசிப்பவள் – அதைக்
    கவிதையாய் மாற்றிக் கொடுப்பவள்
    பாய்ச்சலில் வரியற்ற புலியவள் – கொஞ்சம்
    பச்சிளம் பிள்ளைபோல் வாழ்பவள்!
    ஆய்ச்சியர் பால்போல் குணத்தினள் – அவள்
    ஆதிதுர்க்கை எனும் பெயரினள்

    பெயர்சொல்லிக் கூப்பிட வருபவள் – குணம்
    பெயராத வண்ணமே தருபவள்
    மயல்வந்து சாய்க்கின்ற வேளையில் – சூலம்
    மழுவேந்திக் காத்திடும் தைரியள்
    புயல்வந்து நின்றதாய்த் தெரிபவள் – சிறு
    பூவுக்குள் தேன்போல் இனிப்பவள்
    அயலென்ப தில்லாத அசலிவள் – எங்கள்
    அம்மை துர்க்கை எனும் பெயரினள்!!

    03.10.2019

    Share
  • படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அன்னையின் தோளில் முகம்சாய்த்துப் ’போஸ்’ கொடுக்கும் குழந்தையை அழகாகத் தன் புகைப்படக் கருவியில் பதிந்து வந்திருக்கின்றார் Yesmk. இந்த அழகிய படத்தைப் படக்கவிதைப் போட்டி 226க்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றிக்கு உரியவர்கள்!

    வண்டுவிழிப் பார்வையால் நம் உள்ளத்தைக் கொண்டுசெல்லும் இந்த அழகிய குழந்தையின் வதனம் சந்திர பிம்பம்; பிஞ்சுக் கரங்கள் பஞ்சுப் பொதிகள் என்று என் மனமும் கவிபாட விழைகின்றது. எனினும் படக்கவிதைப் போட்டிக்குக் கவியெழுதக் கவிகள் பலர் ஆவலோடு காத்திருப்பதால் அவர்களுக்கு வழிவிட்டு அமைகின்றேன்.

    வருக புலவீர்! தருக நிலாமுகக் குழவிக்குப் பலாச்சுளைக் கவிதைகளை!

    *****

    ”தோளில் தூங்கும் பிள்ளையெனும் கிள்ளையின் துயில்கலையாவண்ணம் அலுங்காது நடக்கும் கலை தாய்மார்களுக்குக் கைவந்த ஒன்று!” என்று விளக்குகிறார் தாய்மார்களின் உளவியல் அறிந்த திருமிகு தமிழ்முகில்.

    அன்னையின் தோளில் சாய்ந்து
    உலகத்தின் அழகில் இலயித்திருக்க
    முன்னின்று பின்னோக்கியும்
    பின்னின்று முன்னோக்கியும்
    ஓடும் காட்சிகள்
    நிகழ்வுகளின் சாட்சிகளாய்!
    காட்சிகள் அயர்ச்சியூட்டினாலும்
    அன்னையின் தோள்
    தலையணையாயும் – அவர்தம்
    கரங்கள் மெத்தையாயும் மாறிப்போக
    சுகமான துயிலும் கண்களை
    வருடியபடித் தழுவிக் கொள்ள
    அன்னையின் முத்தங்கள்
    தாலாட்டுப் பாட – உறங்கிப் போன
    கிள்ளையின் துயில் கலையாது
    அலுங்காது நடக்கும் கலை
    அன்னைகட்கெலாம் – தானாக
    கைவந்து சேரும் உத்தியன்றோ!
    அன்னையின் தோள் சாய்ந்து கொண்டு
    பின்னிருக்கும் உதடுகளில்
    புன்னகையும் – உள்ளத்தில்
    ஆனந்தமும் துளிர்க்கச் செய்யும்
    வித்தை கைவரப் பெற்றவர்கள்
    கிள்ளைகள்!

    *****

    பிள்ளைக் கனியமுதே! பேசும்பொற் சித்திரமே! கள்ளமில்லாக் கற்கண்டுப் பொற்குவையே! உன்னைச் சீராட்டி வளர்க்கும் அன்னையின் அன்பை உணர்ந்து நீயும் அவளிடம் அன்பு பாராட்டு! என்று இனியவை கூறுகின்றார் திரு. யாழ். நிலா. பாஸ்கரன்.

    தாயவள் தோளில் தவழ்கின்ற
    தூயவளே கண்மணியே!
    துள்ளிக் களித்தே பின் நோக்குகிறாய்
    தூக்கம் வரவில்லையோ? – தூளியது ஏங்குதம்மா

    அன்னையவள் அள்ளியணைத்து
    ஆரத் தழுவி அமுதே தேனே அஞ்சுகமே என
    ஆசையாய்க் கொஞ்சுகையில் நெஞ்சில்
    அன்பு தவழுதம்மா ஆருயிரும் சிலிர்க்குதம்மா!

    பிள்ளைக் கனியமுதே பேசும் பொற்சித்திரமே
    கள்ளமில்லாக் கற்கண்டுப் பொற்குவையே
    வெள்ளை உள்ளத்து வளர்கவின் நிலவே
    எல்லையில்லா இன்ப அமுதூற்றே ஆவி துடிக்குதம்மா!

    உன்னை வளர்த்து ஆளாக்க
    உன் அன்னையவள் அல்லும் பகலும்
    உழைத்திருப்பாள் ஊணுறக்கம் இல்லை அவளுக்கு
    உலகே நீ தான் என்று உள்ளம் மகிழ்ந்திருப்பாளம்மா!

    காலத்தால் அழியாத களவாட முடியாத
    கல்விச் செல்வம் அதைக் கண்ணும்
    கருத்தாக நீ கற்றிடவே கலாசாலைக்கு அன்போடு
    கருமைப் பொட்டு வைத்து அனுப்பிடுவாளம்மா!

    அன்னை போல் அன்புகாட்ட ஆர் உளார்
    அவனிதனில்? அன்னையே யாவரும் அறிந்த
    அன்பு தெய்வம்மம்மா அவளுக்கும்
    அன்பு செய்வோமம்மா அகிலம் வாழுமம்மா!

    *****

    கொடிக்குக் கொழுகொம்பெனச் சேய்க்குப் பக்கபலமாய்த் திகழ்பவள் தாய் என்று அவளின் மேன்மையைப் பாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    சேயே அறிவாய்…

    தாயின் தோளில் சாய்ந்திருந்தால்
    தானே வந்திடும் தைரியமே,
    சேயின் எண்ணம் எதுவாயினும்
    சேதி சொலாமல் தாயறிவாள்,
    சாயும் கொடிக்குக் கொழுகொம்பாய்ச்
    சற்றும் பிரியாத் துணையவளே,
    ஓயும் போதவள் துணையாயிரு
    ஒன்றே போதுமுன் உயர்வுக்கே…!

    *****

    ”அரவிந்த முகங்காட்டிச் சிரிக்கின்ற கண்ணே! உன் சூரியப் பிரபை விழிகள் என் துன்பங்கள் தீர்க்குமடி!” என்று புகலும் அன்னையைக் காண்கிறோம் திரு.சித்திரவேலு கருணானந்தராஜாவின் கவிதையில்.

    அன்னையின் தோளிற் சாய்ந்துன்
    அரவிந்த முகத்தைக் காட்டி
    என்னடீ சிரிக்கின்றாய் நீ
    என்முகக் கரியைக் கண்டா?
    உன்னைப் போல் மதிமுகத்தை
    உண்மையில் கொண்டேனில்லை
    கன்னிப் போய்க் கறுத்து விட்ட
    கன்னந்தான் எனக்குத் தொல்லை!

    பார்க்கின்ற உன்னைப் போன்ற
    பாலகரெல்லா மென்னை
    ஆரிந்த மந்தியென்று
    அருவருத்திட்ட போதும்
    கூரிய விழியாலென்னைக்
    குத்திடப் பார்க்கும்போதும்
    நேரிய உங்கள் கண்ணில்
    நின்றொளி பாய்ச்சுகின்ற
    சூரியப் பிரபை என்றன்
    துன்பங்களகற்றும் போடீ.

    சேய்க்கும் தாய்க்கும் சேர்த்தே கவிபாடிச் சிறப்பித்திருக்கும் வித்தகக் கவிஞர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும்!

    அடுத்துக் காண்போம் இவ்வாரத்தின் சிறந்த கவிதையை…

    ஆடி ஓடி விளையாடி
    அயர்வுற்று வரும்பொழுதெல்லாம்
    அம்மாவின் தோள்களே
    அடைக்கலம் தரும்!

    அன்னையின்
    தோள் சாய்ந்து
    பார்க்கும் பொழுது
    பரந்த உலகம் கூட
    ஒரு பனித் துளியாய்த்
    தெரியும்!

    கனவுகள் மெய்ப்படவும்
    காற்று வெளியிடை
    அவள் சிறகு விரிக்கவும்
    அந்தத் தோள்சாயலில்தான்
    தொடங்குகிறது பாடம்!

    எதிர்ப்படும் இன்னல்களை
    எதிர்கொள்ளும் வழியினையும்
    அன்னையின் தோள்களில் இன்றி
    வேறு எங்குக்
    கற்க இயலும்?

    வெம்புலிக் குழாமென
    விலங்கு மனிதர்கள்
    திரிகின்ற உலகில்
    அன்னையின் அரவணைப்பே
    அவளுக்கு
    எல்லாமுமாய் விளங்கும்!

    சின்னஞ்சிறு ஆசைகள்கூட
    வண்ணம் பெற்று
    வானில் பறக்கத்
    தோள் மீது
    கண் மூடும்போதுதான்
    வடிவம் கிடைக்கிறது!

    அம்மாவின் தோள் சாயுமிவள்
    நாளை
    ஆதவனில் கால்பதிக்கும்
    அதிசயமும் நடக்கலாம்!

    எங்குச் சென்று
    எதனை சாதித்தாலும்
    அம்மாவின் தோள் சாய்ந்த
    அந்த அற்புத உணர்வுக்கு
    ஈடென்று சொல்ல
    இங்கு
    எதுவும் கிடையாது!

    ”கண்ணே! வெம்புலிக் குழாமென விலங்கு மனிதர்கள் திரிகின்ற இவ்வுலகில் அன்னைதரும் அடைக்கலமே உனக்கு இன்பம் நல்கும்! ஆதவனில்கூட நாளை நீ பாதம் பதிக்கலாம்; உனை இந்த உலகமே மதிக்கலாம். எனினும், அன்னையின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஈடு இணை ஏதுமில்லை என்றறிவாய்! என இனிய சொற்களால் பாமாலை தொடுத்திருக்கும் திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • இந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்

    இந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சாதாரணமாக நான் விமானத்தில் பயணிக்கும்போது படங்கள் எதையும் பார்ப்பதில்லை. அந்தச் சின்னத் திரையில் பார்ப்பதை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை. இந்த முறை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இரண்டு பயணங்களிலும் படம் பார்த்தேன். ஒன்று LKG. அரசியல் கட்சிகள் செய்யும் அட்டகாசங்களையும் அரசியல்வாதிகள் புரியும் ஊழல்களையும் எடுத்துச் சொல்வதுதான் படத்தின் முக்கியக் குறிக்கோள். இரண்டாவது ‘சம்பல்’ என்னும் கன்னடப் படம். இதில் ஒரு ஐ.ஏ.ஏஸ் அதிகாரி அரசியல்வாதிகளோடு மோதும்போதெல்லாம் எப்படி அலைக்கழிக்கப்படுகிறார் என்று காட்டுகிறார்கள்.

    இரண்டு படங்களும் நன்றாக ஓடியதாக விமர்சனங்களிலிருந்து தெரிந்துகொண்டேன். அப்படியென்றால் மக்களில் பலருக்கு லஞ்சம், ஊழல் என்பதில் வெறுப்பு இருக்கிறது என்று சொல்லலாம் என்றால், அவர்கள் வாழ்க்கையில் ஊழலையும் லஞ்சத்தையும் தவிர்க்க என்ன செய்கிறார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறது.

    மைசூரில் பல வருஷங்களுக்கு முன்பு எங்கள் பக்கத்து வீட்டு நண்பராக இருந்த அஸ்வத் என்னும் கன்னட எழுத்தாளர் – அவர் 1994-இல் தனது 82ஆவது வயதில் காலமானார் – ஒரு காந்தியவாதி. வாரணாசி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலைபார்த்து அங்குள்ள ஊழல்களைத் தாங்க முடியாமல், 50 வயதில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, மைசூர் திரும்பி, அங்கு தன்னுடைய எழுத்து வேலையைத் தொடர்ந்து வந்தார்.

    தன்னுடைய நன்மைக்காக யாருக்கும் அவர் லஞ்சம் கொடுத்ததில்லை. யாருக்கும் லஞ்சம் கொடுக்காமலேயே மைசூர் மாநகராட்சி அவருக்காக ஒதுக்கிய வீட்டைப் பெற்றுக்கொண்டு நாணயமாக வாழ்ந்து வந்தார். அவர் மனைவியைக் கதர் மட்டும் உடுத்த வற்புறுத்தினார். தானும் கதர்தான் உடுத்துவார். அவரும் அவர் மனைவியும் மிக எளிய உணவையே உண்டு வந்தனர். நான்கு செட் கதர் உடைகள்தான் இருவருக்கும்.

    ஒரு முறை வாரணாசியிலிருந்து மைசூர் திரும்பியபோது அவருக்கும் அவருடைய மனைவிக்கும் ரயிலில் இரவு தூங்கும் வசதி கிடைக்கவில்லை. உடன் இருந்த நண்பர் லஞ்சம் கொடுத்து வாங்கித் தருவதாகச் சொன்னதை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு இரவுகள் இருவரும் உட்கார்ந்தே பயணம் செய்தனர். அவருடைய பக்கத்து வீட்டுக்காரராக நாங்கள் பத்து வருடங்கள் வாழ்ந்தபோதிலும் அவரிடமிருந்த எல்லாக்
    காந்தியக் கொள்கைகளையும் நான் கற்றுக்கொள்ளவில்லை. அவரைப்போல் யாருக்கும் எதற்கும் லஞ்சம் கொடுக்காமல் எங்களால் வாழ்க்கையை நடத்த முடியவில்லை. ஆனாலும் பெரிய அளவில் அம்மாதிரியான தவறுகள் செய்யாமல் காலம் கடத்தி வந்தோம்.

    நாட்டில் நடக்கும் ஊழல்களைக் கண்டு மனம் புழுங்கி வேதனைப்படுவதோடு எங்களால் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி வாழ்க்கை நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் என்னிடம் எப்போதும் உண்டு. சமீபத்தில் இந்தியாவில் பெரிய அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அதனுடைய பின்னணியைச் சொல்ல வேண்டும்.

    சுமார் 28 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தந்தை இறந்துவிட்டார். அதன் பிறகு நான்கு ஆண்டுகளில் தாயும் இறந்துவிட்டார். அதன் பிறகு நாங்கள் சகோதரிகள் மூவரும் எங்கள் தாய் தந்தையர் சொத்துகளைப் பிரித்துக்கொண்டோம். எங்கள் தந்தை, தாய் வாழ்ந்த வீடு – அது எங்கள் தந்தையே கட்டியது – மூன்றில் ஒரு பங்குக்கு, அதாவது என்னுடைய பங்குக்கு மேல் பெறுமாதலால் எங்கள் பெற்றோரின் ஞாபகார்த்தமாக
    நானே வைத்துகொள்ள எண்ணி எங்கள் சகோதரிகள் இருவருக்கும் அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு நானே பெற்றுக்கொண்டேன்.

    எங்கள் சகோதரிகள் இருவரைப் பொறுத்தவரை எல்லாச் சொத்துகளையும் – எங்கள் பெற்றோர் வாழ்ந்த வீடு உட்பட – விற்றுப் பணத்தை மூவரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று விருப்பம். எங்கள் பெற்றோர் வாழ்ந்த வீட்டை அவ்வளவு சீக்கிரம் விற்றுவிடுவதை நான் விரும்பவில்லை. எப்படியோ என் சகோதரிகளை சம்மதிக்க வைத்து அதை மட்டும் விற்காமல் பார்த்துக்கொண்டேன்.

    வீட்டைப் பெற்றுக்கொண்டாகிவிட்டது. இனி அதை எங்கள் பெற்றோர் பெயரில் ஒரு நல்ல காரியத்திற்காகப் பயன்படுத்துவது என்று முடிவு செய்தோம். எனக்கு ரொம்ப நாட்களாக நோயாளிகளுக்குக் குறைந்த செலவில் ஒரு கிளினிக் நடத்த வேண்டும் என்று ஆசை. வீட்டைக் கொஞ்சம் புதுப்பித்து ஒரு டாக்டரைத் தேடினோம். யாரும் கிடைக்கவில்லை. என் தங்கையோடு படித்த ஒரு டாக்டரிடம் போய் யோசனை கேட்டேன். ஒரு டாக்டரைப் பார்த்துக் கொடுப்பதற்குப் பதில், அந்த ஊரிலேயே வடலூர் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தினரின் உதவியோடு ஆசிரமம் ஒன்றை நடத்தும் ஒரு நல்ல மனிதரை அடையாளம் காட்டினார். இதுவும் நல்ல சேவைதான் என்று அவரைப் போய்ப் பார்த்தேன்.

    மிகவும் எளிய தோற்றத்தில் இருந்த, ஓய்வு பெற்ற ஒரு அரசாங்க அலுவலரைச் சந்தித்தேன். பல வருடங்களாக எங்கள் ஊரின் ஒரு கோடியில் ஆதரவற்ற குழந்தைகள் இருபது பேரையும் முதிய பெண்மணிகள் ஏழெட்டுப் பேரையும் கொண்ட ஒரு ஆசிரமம் நடத்திவந்தார். எங்கள் வீட்டைப் பற்றிக் கூறியதும் சில குழந்தைகளையும் சில முதியோர்களையும் எங்கள் வீட்டிற்கு மாற்றி அங்கு இன்னொரு ஆசிரமம் நடத்த ஒப்புக்கொண்டார்.

    ஊரின் நடுவில் வீடு இருந்ததால் அவருடைய மற்ற பல சேவைகளுக்கும் அது பயன்படும் என்பதால் அவருக்கு சந்தோஷமாக இருந்தது. 500 ரூபாய்தான் வாடகையாகக் கொடுக்க முடியும் என்றார். அப்போது எங்கள் வீட்டிற்குத் தாராளமாக 5000 ரூபாய் வாடகை கிடைத்திருக்கும். ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படப் போவதால் சரி என்றேன். மூன்று வருஷத்திற்கு ஒப்பந்தம் போட்டுக்கொண்டோம்.

    எங்கள் துரதிருஷ்டம், ஒப்பந்தம் போட்ட ஒன்றரை வருஷங்களில் அவர் இறந்துவிட்டார். வீட்டை ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படுத்த மறுபடி ஒருவரைத் தேடினோம். மதுரையில் இயங்கிவரும் ஒரு பிரபல, லாப நோக்கமற்ற சேவை நிறுவனத்தைப் பற்றித் தெரிய வந்தது. அவர்களிடம் நாங்களே நேரில் சென்று எங்கள் வீட்டைக் குறைந்த வாடகைக்கு அவர்களுக்கு – அவர்கள் நல்ல காரியங்கள் செய்வதாக நினைத்து – கொடுப்பதாகக் கூறினோம். அவர்களும் ஒப்புக்கொள்ள, வாடகை ஒப்பந்தம் தயார் செய்தோம்.

    இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டோம். ஏழு வருஷங்கள் கழிந்தன. எட்டாவது வருஷம் அவர்களுக்கும் அவர்களின் கீழே பணியாற்றும் ஒரு அமைப்பிற்கும் நிர்வாகத்தில் மன வேறுபாடு ஏற்பட்டு, அது பெரிய சண்டையாக விஸ்வரூபம் எடுக்க, சேவை நிறுவனத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சாவியை போலீஸிடம் ஒப்படைத்துவிட்டார்கள். நாங்கள் அப்போது அமெரிக்காவில் இருந்தோம். இரு தரப்பாரும் இது பற்றி முதலில் எங்களிடம் எதுவும் கூறவில்லை. ‘வீடு எங்கள் வீடுதானே, இந்தியாவுக்கு வந்ததும் போலீஸிடமிருந்து சாவியைப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று நினைத்தோம். வாடகை ஒப்பந்தமும் நாங்கள் திரும்பும் சமயம் முடிவதாக இருந்தது. ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை என்று இந்தியாவுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது.

    இரு தரப்பாரும் தங்களுக்கே வீட்டைக் கொடுக்கும்படி எங்களிடம் கேட்டனர். முதலில் வீட்டுச் சாவியைப் பெற்றுக்கொண்டு அது பற்றி யோசிக்கலாம் என்று நினைத்து வட்டாட்சி வருமான அதிகாரியிடம் (Revenue Divisional Officer – RDO) (அதற்குள் சாவி, போலீஸிடமிருந்து அவரிடம் போயிருந்தது) சாவியைக் கொடுக்கும்படி கேட்டோம். இருவரின் சாமான்களும் உள்ளே இருப்பதால் அவர்களுக்குள் சாமான்களைப் பகிர்ந்துகொள்வது பற்றி ஒரு முடிவுக்கு வந்த பிறகே சாவியை எங்களிடம் கொடுக்க முடியும் என்றார் அந்த அதிகாரி.

    சேவை நிறுவனத்தையும் அதன்கீழ் இருந்த அமைப்பையும் வீட்டுச் சொந்தக்காரரான என்னையும் தனக்கு முன்னால் வந்து தங்கள் தங்கள் கட்சியை எடுத்துச் சொல்லும்படி வட்டாட்சி வருமான அதிகாரி கேட்டுக்கொண்டதால் நானும் அந்த அமைப்பும் அவருக்கு முன்னால் ஆஜரானோம். ஆனால் சேவை நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. அதன் பிறகும் பல முறை இந்த அதிகாரி அழைத்தும் அதன் சார்பில் யாரும் வரவேயில்லை. வேண்டுமென்றே காலம் கடத்திக்கொண்டிருந்தார்கள். RDO முன்னால் ஆஜராகாததோடு RDO தங்களிடம் சாவியைக் கொடுக்க வேண்டுமென்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு வேறு போட்டார்கள். ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி RDO எங்களிடம் சாவியைக் கொடுக்காதவாறு பார்த்துக்கொண்டார்கள். நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. வாடகை ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. வீடு சட்டப்படி எங்களிடம் வந்திருக்க வேண்டும்.

    ஆறு மாதங்களுக்கு மேல் வீடு பூட்டியிருந்ததால் வீட்டைப் பற்றிய கவலை என்னைப் பிடித்துக்கொண்டது. பத்துத் தடவைக்கு மேல் அழைத்தும் வராத சேவை நிறுவனத்துக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டு எங்களிடம் வீட்டுச் சாவியைக் கொடுக்கக் கூடாதா என்று நாங்கள் கேட்டதற்கு, எந்தவிதப் பதிலும் சொல்லாமல் வட்டாட்சி வருமான அதிகாரி காலம் கடத்திக்கொண்டே இருந்தார். நாங்கள் அமெரிக்கா திரும்பும் நாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. கடைசியாக தமிழ்நாடு அரசில் வேலைபார்க்கும் ஒரு நெருங்கிய உறவினர் எங்களுக்கு உதவுவதாகக் கூறியதும் அவரை எங்கள் பிரதிநிதியாக நியமித்துவிட்டு அமெரிக்கா திரும்பினோம். அவர் எங்கள் சம்மதம் இல்லாமலேயே ஒரு பெரிய தொகையை அந்த அதிகாரிக்கு லஞ்சமாகக் கொடுத்துச் சாவியைப் பெற்றுக்கொண்டார்.

    அதுவரை சாவியை எங்களிடம் கொடுக்காததற்கு அந்த அதிகாரி சொன்ன சால்ஜாப்புகளெல்லாம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. நல்ல காரியங்களுக்குப் பயன்படட்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில் குறைந்த வாடகைக்கு எங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததற்கு இந்தத் தண்டனையா என்று எங்களை நாங்களே நொந்துகொண்டோம்.

    அந்த சேவை நிறுவனம் அதற்குக் கீழ் வேலைபார்த்த அமைப்பிற்கு நாங்கள் வீட்டைக் கொடுத்துவிடுவோமோ என்று நினைத்து வீட்டை எங்களிடம் ஒப்படைப்பதற்குத் தடை ஏற்படுத்தப் பல்வேறு வழிகளைக் கையாண்டது. அவர்களோடு தொடர்பு கொண்ட இன்னும் சில சேவை நிறுவனங்களின் தலைவர்களையும் அந்தச் சேவை நிறுவனத்தின் தலைவரோடு பேசிச் சாவியை எங்களிடம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய எவ்வளவோ முயன்றும் ஒன்றும் முடியவில்லை. எங்களையும் அவர்களின் கீழ் வேலைபார்த்த அமைப்பையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வருமான வட்டாட்சியர் முன்னால் ஆஜராகாமல் காலம் தாழ்த்திக்கொண்டே போனார்கள். இரண்டு வழக்குகள் – எங்களையும் சேர்த்து – போட்டார்கள். அவர்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் சாவியை எங்களிடம் ஒப்படைக்க முடியாது என்று வட்டாட்சி வருமான அதிகாரியும் பிடிவாதமாக இருந்தார். இந்த முறை இந்தியாவில் நாங்கள் இருந்த இரண்டரை மாதங்களில் இரண்டு மாதங்கள் இந்த உளைச்சலிலேயே கழிந்தது.

    எந்தச் சேவை நிறுவனத்திற்கும் எந்தவித உதவியும் செய்யக் கூடாது என்ற பாடத்தைப் படித்துக்கொண்டோம். சேவை நிறுவனங்கள் செயல்படும் லட்சணத்தைப் பாருங்கள். ஊழலை ஒழிப்பதற்காகவே பதவிக்கு வந்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி. அரசு ஆட்சி நடத்தும் காலத்தில் இப்படி நடந்திருக்கிறது. ஊழல் என்னும் அரக்கனை இந்தியாவிலிருந்து ஒழிக்க இறைவனே மனித அவதாரம் எடுத்து வந்தாலும் முடியாதா?

    Pic courtesy: https://www.maxpixel.net

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 67

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 67

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    67.வினைத்திட்பம் 

    குறள் 661:

    வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
    மற்றைய எல்லாம் பிற

    செயல செஞ்சு முடிக்குணும்ங்குத உறுதி அவன் நெஞ்சுறுதி மட்டுந்தான். மத்ததெல்லாம் வேற தான். 

    குறள் 662:

    ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

    தடங்கல் வரமுன்ன தடுக்கணும். வந்துடுச்சின்னா அந்தால கெடந்து தொவண்டு போவாம இருக்கணும். இந்த ரெண்டும் அறிவுள்ளவங்களோட கொள்க. 

    குறள் 663:

    கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
    எற்றா விழுமந் தரும்

    ஒரு செயல எப்பமும் செஞ்சு முடிச்ச பொறவுதான் வெளிப்படுத்தணும். இடையில வெளிப்படுத்தினா முடிக்க முடியாம தடங்கலா வந்து நிக்கும்.  

    குறள் 664:

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்

    இந்தக் காரியத்த இப்டி செஞ்சு முடிக்கலாம்னு சொல்லுதது எல்லாருக்கும் சுளுவு. சொன்னமேனிக்கு செஞ்சு முடிக்கது தான் சிரமம்.  

    குறள் 665:

    வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்

    செய்யுத தெறமையில பெரும பெத்து ஒசந்தவங்களோட செயல்உறுதி நாட்ட ஆளுத ராசா வரைக்கும் பரவி மதிக்கப்படும்.

    குறள் 666:

    எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்

    ஒண்ணச் செய்யணும்னு நெனைக்கவங்க நெஞ்சுறுதி உள்ளவங்களா இருந்தாங்கன்னா அவங்க நெனச்சத நெனச்சபடி அடஞ்சிக்கிடுவாங்க.

    குறள் 667:

    உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
    கச்சாணி யன்னார் உடைத்து

    உருளுத தேருக்கு வடிவுல சிறுசா இருக்க அச்சாணி எம்புட்டு முக்கியமோ அது கணக்கா தான் ஒலகத்துல மன உறுதி உள்ளவங்களும்.  அவுக உருவத்த வச்சி எளக்காரம் செய்யக்கூடாது. 

    குறள் 668:

    கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கங் கடிந்து செயல்

    கொளம்பாம தெளிவா துணிஞ்சு ஏத்துக்கிட்ட தொழில அசராம, கெடப்புல போடம வெரசலா செஞ்சு முடிக்கணும். 

    குறள் 669:

    துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை

    முடிக்கையில மகிழ்ச்சி கெடைக்கும்னு தெரிஞ்சா ஒரு செயல சங்கடப்பட்டுக்கிட்டேன்னாலும் செஞ்சு முடிக்கணும். 

    குறள் 670:

    எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
    வேண்டாரை வேண்டா துலகு

    வேற எந்த வகையில உறுதி இருந்தாலும் காரியம் செய்யுததுல  உறுதியில்லாதவர ஒலகம் விரும்பாது. 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • அணைப்பொன்று போதும் – நவராத்திரி பாடல்கள் 2019

    அணைப்பொன்று போதும் – நவராத்திரி பாடல்கள் 2019

    -விவேக்பாரதி 

    என்ன வேண்டும்? நமக்கு என்னதான் வேண்டும்? தினந்தோறும் பூசைகள் திசை எட்டும் பாட்டுகள். யாவும் எதற்காக? மனதே கேள்வி கேட்டு மனதே பதில் சொல்கிறதாம்… எல்லாம் அவள் அணைப்புக்குத்தானே! அதைத்தான் ஊர் நம்புமா?
    அணைப்பொன்று போதும் அம்மா! – உன்
    அணைப்பொன்று போதும் அம்மா!
    என்
    நினைப்பெல்லாம் தூளாக நெஞ்செங்கும் நீயாக
    கணப்போதும் மறவாத காருண்யம் நான்காண!
    புதுப்பாதை நான்போட்டு நடக்கின்ற போதில்
    புயலாக அதைவந்து கலைப்பவளே!
    விதிப்பாதை எனக்காக நீபோட்டு வைத்து
    விளையாடிப் பாரென்று அழைப்பவளே!
    எதைக்கேட்டு எதைப்பார்த்து என்னோடு சேர்ந்தாய்
    எனக்கொன்றும் தெரியாதடி! அட
    இதுக்கென்ன தயக்கம்?என் இதயத்தின் ஓரம்
    இதமாக பதில் சொல்லடி!
    சிவத்தோடு நீயாடும் நடுஜாம நேரம்
    விசுக்கென்று பாட்டோடு எழுப்பிடுவாய்!
    கவலைகள் எனைச்சூழ்ந்து களியாட்டும் போடும்
    கண்ணென்னும் தீயாலே அழித்திடுவாய்!
    அடுத்தென்ன எனக்கென்று தெரியாத நேரம்
    அடியாகி நிற்பவளே! உயிர்
    கொடுத்தேனும் உன்பாதம் தொடவேங்கும் நெஞ்சைக்
    குறிபார்த்துச் சிரிப்பவளே!
    காதோடு மணியோசை புதுச்சந்தம் போட
    கவிபாட எனைக்கூட்டிக் கேட்பவளே
    பாதாதி கேசத்தை நான்பாடும் போதில்
    பக்கத்தில் நின்றென்னை ரசிப்பவளே
    நீதந்த பாட்டுக்கள் நீதந்த ராகம்
    நிஜம் என்று ஊர் நம்புமா? – அடி
    நீயே உன் பாட்டுக்கு ரசிகைபோல் ஆடும்
    நிலைதந்த சந்தேகமா?
    -02.10.2019
    Share
  • சேக்கிழார் பா  நயம் -50

    சேக்கிழார் பா  நயம் -50

    -திருச்சி   புலவர்  இராமமூர்த்தி

    தம் முன்னே தோன்றிய இவர் யார்? என்று சுந்தரர் அருகில் இருந்தாரை வினவினார். ‘’அவர் பரவை என்னும் நங்கை! வானுலகில் காணப்படும் தேவர்களுக்கும்  சேர்வதற்கு அரியார்!’  என  விடைகூறினர் . அதாவது, பெரிய தேவர் சபையும்  விரும்புகின்ற இடையை உடைய திலோத்தமை, உருப்பசி, ரம்பை, மேனகை ஆகிய பேரழகியரும்  விரும்பி  வணங்கும்  தெய்வம்    போன்றவள்!’’ இதனை,

    “பேர்பரவை!    பெரும்பரவை     விரும்பல்கு     லார்பரவை!”என்ற அடி விளக்குகிறது அதாவது- ‘’பெரு உம்பர் அவை விரும்பும் அல்குலார் பரவு  ஐ’’   என்பதாம். மேலே  தொங்கிய மூக்கின்  அணியாகிய  முத்துப் புல்லாக்கின் கீழே  இதழ்களின்  இடையில் திகழும்  அழகிய  பல் வரிசையோ, முல்லை அரும்புகளே!

    என்பதை ‘‘அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை’’ என்ற தொடர்  குறிக்கிறது. மற்றும் இலக்குமியும்  விரும்பும் பேரழகுடையார் – அதாவது  சீர் = திருமகளும் , பரவு = விரும்பும்  ஐ = அழகு   ஆயினாள் என்ற விளக்கத்தை  உடைய ‘’சீர் பரவு  ஐ  ஆயினாள்‘’  அதாவது சீர்பரவை   ஆயினாள்! என்ற தொடர்  குறிக்கிறது.  இவர் உருவம் இனிய , மென்மையான  சாயலைப்  பெற்றுள்ளது.  கண்டாரால் விரும்பப்படும்  காட்சியழகின்  இடையில் அகப்பட்ட என்  விருப்பமானது  எழுகடல்களைப்   போன்று பெருகுகின்றது. இதனை, திருவுருவு இன்  மென் சாயல்  ஏர்பரவை   இடைப்பட்ட என் ஆசை  எழு பரவை  என்ற தொடர்  குறிக்கின்றது. இனி  முழுப்பாடலையும்  பயில்வோம் .

    “பேர்பரவை   பெண்மையினிற்   பெரும்ரவை  விரும்பல்குல்
    ஆர்பரவை  அணிதிகழும்  மணிமுறுவல்     அரும்பரவை
    சீர்பரவை     ஆயினாள்     திருவுருவின்      மென்சாயல்
    ஏர்பரவை    என்னாசை     இடைப்பட்ட      எழுபரவை”

    இதற்கு  மேலும் சில விளக்கங்கள்  உள்ளன. அவை:

    – பெண்மையிற் சிறந்தாரை நங்கை என்பது மரபு..    நங்கை பரவை  என்பதே இவரை அழைத்த மரபு போலும். தஞ்சை இராசராசச் சக்கரவர்த்தியார் தமது இராசராசேச்சுரத்திலே தாபித்துள்ள இவரது செப்புப் படிமத்தில் “நங்கை பரவை“ என்று பெயர்  தீட்டப்பெற்றிருத்தலும் அறிக.

    -யார்? என்று கேட்டார்க்குப் பேரோடு, தன்மையும் உரைத்தல் மரபாதலின் அரியார் என்று அறிவித்தனர் என்க. உம்பர் தரத்தும் யார்க்கும் சேர்வரியார் என்க. மக்கள் தேவர் நரகர் என்ற மூவகை உயர்திணையிலும் தேவர் உயர்ந்தோர்; அவர் தரத்திலே உள்ளார்க்கும் என உம்மை உயர்வு சிறப்பு. உயர்திணை எல்லாம் அடங்கும்பொருட்டுத் தேவரே – அன்றி அவர் தரத்தாரே -யாவரே யாயினும் என்பார்,  தரத்தும் ஆர்க்கும் என்றார். உம்மை தொக்கது.உம்பரின் மேலாயினவர் விட்டுணுமூர்த்தி; அவருக்குக் கிருட்டிணாவதாரத்திற் சிவதீக்கை செய்து அவர்முடிமேல் அடிவைத்தவர் உபமன்னிய முனிவர்; அவரால் துதிக்கப் பெறுபவர் நம்பிகள். இவர்

    அவர்க்கே உரியவர் அல்லது உம்பர் தரத்தார்க்கும் சேர்வரியார் என்றபடி

    தலைவனுக்குத் தலைவியினது பெயர் கேட்டலும் அதில் ஓர் விருப்பம் நிகழ்வதும்  ஓர்  அகப்பொருள் உண்மை. பெயர் வினாதல் என்ற துறையில் வரும் பாட்டுக்களைக் காண்க. அவ்வாறே பரவையார் என்ற பெயர் கேட்டலும் நம்பிகள் நாவலர் காவலராதலின் அப்பெயரிற் சென்ற விருப்பத்தை இவ்வாறு அறிவிக்கின்றார். ஒரு பாட்டில் எழுபரவை அடக்கிய நாவலர் என்று சேக்கிழார் பெருமானை மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் பாராட்டியுள்ளார்கள்.

    “முறையினொரு சிறுதூக்கின்  எழுபரவை  யும்புக
    முடித்துற   நிறுத்தா   னிவன்
    மொழியெங்கள்   தம்பிரான் வல்லபம்  உணர்ந்திலைகொல்“

    என்பது  அவரியற்றிய  சேக்கிழார் பெருமான் பிள்ளைத் தமிழ். இதில் உள்ள பரவை எழு என்பதை ஆசிரியர் “என் ஆசை எழுபரவை“ என்று முடித்து இரட்டுற மொழிந்து காட்டியதும் ஒரு அழகாம்!. கடல்கள் ஏழென்பர்.

    இவள் பேர் பரவை. இவளது பெண்மைக் குணங்களைப் பற்றிப் பேசின் இவர் திலோத்தமை முதலிய தேவப் பெண்களும் தொழக்கூடிய தெய்வம்போன்றார். முல்லையரும்புபோன்ற முறுவலுடையார். இலக்குமி விரும்பும் அழகும் பெற்றார். இவரது சாயலாகிய பரப்பிலே பட்ட எனது ஆசை எழுகடலினும் பெரிதாய் வளர்கின்றது என்பது திரண்ட பொருள்.

    விரும்பும் நிதம்பம் பொருந்திய வளர்ச்சியிலே பரம்பின் அரசு போலும் என்று கூறுதலும் ஒன்று. ‘அல்குல் அரவுலகை வென்ற துணிவு கொண்டார்ப்ப’ என்று முன்னர்க் கூறியதும் (284) காண்க. அரவுலகு என்பது வடிவத்திற்கும், உடன்பட்டார் படும் விடத்தன்மைக்கும் ஆம். இது வெளிக் காணப்படா உறுப்பாயினும் பெண்மைக்குரிய அவயமாய் நோய்செய்தல் பொருந்திய சிறப்பு இயல்பு பற்றியே எடுத்துக் கூறப்படுவது தமிழ்க் கவியியல்களில் ஒன்று.

    அணிதிகழும்  – அணியிற்றிகழ் என ஐந்தனுருபு விரித்துரைக்கப்பட்டது. முத்து மூக்கணியிற் றொங்குவதன் அழகைச் சிவப்பிரகாசர்,

    “தன்னை நிந்தைசெய் வெண்ணகை  மேற்பழி சார
     மன்னி   யங்கது   நிகரற   வாழ்மனை    வாய்தன்
    முன்னி றந்திடு வேனென ஞான்றுகொள் முறைமை          யென்ன வெண்மணி மூக்கணி யொருத்திநின் றிட்டாள்“                          

    என்று பிரபுலிங்கலீலையில், ‘’பல்லின்  வெண்மைக்கும்  வடிவிற்கும்  நிகராக வில்லையே  என்ற ஏக்கத்தால்  மூக்கின் கீழே  தூக்கில்  தொங்கியது  மூக்கணி  என்ற அழகிய கற்பனையின் மூலம் அறிவித்திருத்தல் காண்க. அணி திகழும் – அழகு விளங்கும் என்றலுமாம்.

    பரவையார் உருத்திர கணிகையராய் வீதி விடங்கப் பெருமானது திருவோலக்கத்தில் பாடல் ஆடல்களுக்கே உரியவர் என்பது பின்னர் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 271-வது பாட்டில் காண்க. வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகராசர் தேவருலகில் அரசு வீற்றிருந்தார். இவர்பால் அங்கு ஆடற்குரிய பெண்கள் தேவமாதர்கள். அம்மையாரது சேடியராய் அருளின்வழி இங்கு அவதரித்து இவர்முன் ஆடல் புரியும் பரவையாரை அவர்கள் பரவுதல் இயல்பு என்பார் உம்பர் அவை பரவு ஐ (ஐ – தெய்வம்) என்றார். இங்குத் தேவர்கள் வந்து தொழக் காத்திருப்பதும் காண்க.

    இவ்வாறு  சீர்தோறும்  புதிய புதிய  பொருள்களைக்    காட்டும்  சேக்கிழாரின்  கவிதைத் திறம்  பயின்று  போற்றுதற்கு  உரியதாகும்.

    Share
  • கோலாகல கொலு 2019

    கோலாகல கொலு 2019

    அண்ணாகண்ணன்

    சென்னை, புதுப் பெருங்களத்தூர், சுமதி முரளிகிருஷ்ணன் இல்லத்தில் அமோகமான ஒரு கொலுத் திருவிழாவைக் கண்டேன். புதிய புதிய கருப்பொருள்களில் வரிசை வரிசையாய், படிப் படியாய், திரும்பும் திசையெங்கும் பொம்மைகள், நேர்த்தியான கலை வடிவங்கள். பழைமையும் புதுமையும் கைகோக்கும் தருணங்கள். மண்பொம்மைகள் உயிர்த்தெழுந்து, ஒயில்சிறந்து நிற்கும் கோலம் கண்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முதுமொழிக்கு இணங்க, இந்தக் கொலுவை உங்கள் முன் படைக்கிறேன்.

    Share