Blog

  • என்றும் இளமை!

    என்றும் இளமை!

    நிர்மலா ராகவன், மலேசியா 

    நலம்…நலமறிய ஆவல்….(162)

    இளமை எல்லோரது வாழ்விலும் இயற்கையாகவே இருப்பது. ஆனால், முதுமையிலும் இளமையாக இருக்க, சற்று முனைந்து செயல்பட வேண்டும். சிலருக்குத்தான் அது முடிகிறது.

    இளமை என்பது எழில் தோற்றத்தில் மட்டுமல்ல, சில குணங்களிலும் கூடத்தான். மூன்று வயதான குழந்தை ஓயாமல் கேள்வி கேட்பான். எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனை அப்படித் தூண்டும். சிலர் பொறுமையாக அவனுக்குப் புரியும் விதத்தில் விளக்குவார்கள்.

    இது இளமையின் ரகசியம். எதையும் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை எப்போதும் காத்தால், மனம் சோர்வு அடைய வாய்ப்பில்லை.

    ஆனால், எல்லாத் தாய்மார்களும் தம் குழந்தையினுடைய ஆர்வத்துக்குத் தீனி போட இசையமாட்டார்கள். `தொணதொணப்பு’ என்று அடக்குவார்கள். சில முறை கேட்டுவிட்டு, பிறகு தானே அடங்கிவிடுவான்.

    பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களும் அப்படியே நடப்பார்கள். பெரும்பாலான ஆசிரியர்கள், `நம்மை இவர்கள் கேள்வி கேட்பதா!’ என்று எரிச்சல் அடைந்து, பாடத்தை மட்டும் நடத்துவதற்குத்தான் சம்பளம் வாங்குகிறோம் என்பதுபோல் செயல்படுவார்கள். இதனால் மாணவர்கள் ஆர்வத்தை இழந்து, பள்ளிக்கூடம் என்றால் பிற மாணவர்களுடன் கலந்து பழகுவது, சண்டைபோட்டுப் பொழுதை `உல்லாசமாக’ப் போக்குவது என்று நினைக்கத் தலைப்படுகிறார்கள்.

    கதை

    நான் ஆசிரியப் பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, என் ஆற்றலை எடைபோட, பேராசிரியர் ஒருவர்  வருவதாக இருந்தது.

    முதல் நாளே, நான் மாணவிகளிடம், “எக்கச்சக்கமாக ஏதாவது கேட்டு, என்னை மாட்டிவிடாதீர்கள், ப்ளீஸ்!” என்று வேண்டுகோள் விடுத்தேன்.

    “When we ask the questions, we don’t know if they are funny,” என்றாள் ஒரு பெண்.

    தாம் கேட்கும் கேள்விகளால் ஆசிரியர்களைத் தடுமாற வைப்பது அவர்கள் நோக்கமல்ல. தமக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அவ்வளவுதான். இது புரிந்தால், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே உள்ள உறவு பலப்படும்.

    `என்ன வேண்டுமானால் கேட்கலாம்,’ என்று சிறிது நேரத்தை ஒதுக்கினால், அவர்கள் மனப்போக்கு புரியும். களங்கமற்ற அவர்களுடைய உற்சாகம் ஆசிரியர்களையும் தொற்றிவிடும். எத்தனை வயதானாலும், ஆசிரியர்கள் சிலர் இளமைத் தோற்றத்துடன் இருக்கும் ரகசியம் இதுதான்.

    இப்போதெல்லாம், தாய்மார்களுக்குச் சிறு குழந்தைகளுடன் என்ன பேசுவது என்று தெரிவதில்லை. இவர்கள் பேசாவிட்டால், மொழி வளம் எப்படி வரும்?

    நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதையாவது வேடிக்கை காட்டி விளக்கினாலே போதும். சுற்றுச்சூழலில் ஆர்வம் பிறக்கும். `ஒன்று, இரண்டு,’ என்று அவர்கள் விரல்களை மடக்கி எண்ணவும் சொல்லிக் கொடுக்கலாம்.

    `நான் பேசினா இதுங்களுக்கு விளங்காதே!’ என்று அலுத்தபடி, தொலைக்காட்சியின் முன்னால் உட்கார வைத்துவிடுகிறார்கள், அல்லது தங்கள் கைத்தொலைபேசியை அவர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள், வங்கி, மருத்துவமனை, பேரங்காடி போன்ற இடங்களில். சிறு குழந்தைகளை அடக்க, கைத்தொலைபேசி ஒரு சுலபமான வழி.

    சிறு வயதில் தம் வயதொத்தவர்களுடன் விளையாடி, தம் விளையாட்டுச் சாமான்களையோ, தின்பண்டங்களையோ பகிர்ந்துகொண்டால்தானே பிறருடன் பழகும் ஆற்றல் வரும்?

    இப்போதோ, மனிதர்களின் இடத்தில் கைத்தொலைபேசி! இம்மாதிரியான குழந்தைகளுக்கு வயதுக்குரிய இளமைகூட வாய்ப்பதில்லை.

    திரைகளில் காண்பதை வைத்துப் புதிய விஷயங்களைக் கற்கலாம் எனினும், தீமைகளே அதிகம்.

    ஒரு சாதனத்தின் திரையையே வெறித்துக்கொண்டு இருந்தால், மூளையின் நடுப்பகுதி மட்டும்தான் வேலை செய்யும். பக்கவாட்டிலுள்ள இரு புறமும் அதிகமாக உபயோகிக்கப்படாது போக, பல பிரச்சினைகள் எழுகின்றன.

    வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் இடதுபுற மூளையை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள். மொழி, பேசுவது, புரிந்துகொள்வது எல்லாம் இது அளிக்கும் திறன்.

    இன்னொரு புற மூளையானது இசை, மகிழ்ச்சி, படைப்பாற்றல், பிறர் பேசும்போது அவர் அடையும் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது ஆகியவற்றில் ஈடுபடும். இடக்கைப் பழக்கம் உள்ளவர்கள் இயற்கையிலேயே இப்படித்தான்.

    இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓயாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கோ, இந்த இரு பகுதிகளுமே முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அப்புறம், காதால் கேட்பதைப் புரிந்துகொண்டு, பகுத்தறிவது ஏது! எதுவும் படம் அல்லது எழுத்து வடிவில் கண்முன் இருந்தால்தான் புரிகிறது.

    போதாக்குறைக்கு, தொலைக்காட்சியில் தாம் பார்த்ததை எல்லாம் சிறுவர்கள் நம்புவார்கள். வன்முறை இருந்தால், அதையே தாமும் செய்து பார்க்கும் ஆவல் வந்துவிடும்.

    ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனைத் தொலைக்காட்சியில் தமிழ்ப்படம் பார்க்க அவன் உறவினர் அழைத்தபோது, மறுத்தான்.

    அவன் கூறிய காரணம்: “அப்புறம் நான் தம்பியை உதைப்பேன்!” அவன் செய்வது தவறு என்று புரிய வைத்திருந்தாள் தாய். அன்பு காட்ட வேண்டிய இடத்தில் வன்முறை எதற்கு?

    “நம்மைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களின் அன்பு நம்மை இளமையாக வைத்திருக்கிறது,” என்று சொல்கிறார் சோபியா லாரென். அழகிற்கும் இளமைத் தோற்றத்திற்கும் இந்த நடிகை பெயர் போனவர். பல விருதுகளைப் பெற்றவர். இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர், ஒரு சிறந்த பாடகியும்கூட.

    அமைதியான மனம், மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, தைரியம் ஆகிய அனைத்துமே முதுமையிலும் நம்மை இளமையாகக் காட்டும். இவை நிலைத்திருக்க முக்கியமானவை ஆக்கப்பூர்வமான செயல்கள்.

    உடற்பயிற்சியின் மகிமை பலருக்கும் தெரிவதில்லை. இங்குச் சில பள்ளிக்கூடங்களில், அதற்காகக் குறிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் கணக்கு, விஞ்ஞானம் போன்ற பாடங்களைக் கற்பிக்கிறார்கள். மாணவிகள் பெரிய பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, பள்ளிக்கூடத்திற்கு நற்பெயர் ஈட்டித் தருவார்களே! ஆரம்பப் பள்ளியிலேயே இது நடக்கிறது.

    கண்ணுக்கும், மூளைக்குமே வேலை கொடுத்துக்கொண்டிருந்தால் உற்சாகம் குன்றிவிடுமே!

    கை, கால், தோள் ஆகிய மற்ற அவயவங்கள் அதிகப் பயிற்சி இல்லாது விரைவில் வலுவிழந்துவிடாதா?

    படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால் கல்வியில் உயர்ந்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன இறுக்கம், வயிற்றுக் கோளாறு என்று பல்வித உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

    “என் மகன் பதின்ம வயதில் நான் எவ்வளவு அழைத்தாலும் என்னுடன் உலவ வரமாட்டான். `எனக்கென்ன வியாதியா!’ என்றுவிடுவான். இப்போது, நாற்பது வயதுக்கு மேல் `ஜிம்’மிற்குப் போகிறான்!” என்று ஒரு முதியவள் என்னிடம் சொல்லிச் சிரித்தாள்.

    இருபது வயதில் நாட்டியம், `ஸ்கிப்பிங்’ போன்ற ஏதாவது உடற்பயிற்சியிலோ, அல்லது விளையாட்டிலோ ஈடுபட்ட பெண்கள் திருமணமான பின், `எல்லாவற்றிற்கும் வயது இருக்கிறது!’ என்று அலட்சியப்படுத்திவிடுவார்கள்.

    `வயதுக்கேற்றபடி இல்லாவிட்டால் பிற பெண்கள் பழிப்பார்களே!’ என்று பயம் வேறு! பிறருக்குப் பயந்து, நீங்கள் கஷ்டப்படப் போகிறீர்களா? `முன்போல் முடியவில்லை!’ என்ற சாக்கு எதற்கு? முடிந்தவரை செய்யலாமே! முதுமையுடன் ஆரோக்கியமின்மை தொடர, மனமும் சோர்ந்துவிடும்.

    அறுபதைத் தாண்டிய லூசில் பால் (Lucille Ball) என்ற அமெரிக்கச் சிரிப்பு நடிகையைக் கேட்டார்கள், “நீங்கள் இவ்வளவு இளமையாக இருப்பதன் ரகசியத்தைப் பிறருக்கும் சொல்லுங்களேன்!”

    பதில்: “நேர்மையாக நடந்து, மெதுவாகச் சாப்பிடுங்கள். அத்துடன், வயதையும் குறைத்துச் சொல்லவேண்டும்!”

    வயதைக் குறைத்துச் சொல்வது நேர்மைதானா?!

    =========================

    Photo by Wikimedia Commons

    Share
  • செல்வி

    செல்வி

    பாஸ்கர் சேஷாத்ரி

    அவரின் மீசையைப் பார்த்தவுடன் அவளுக்குப் பயமாகிவிட்டது .

    “என்ன, உம்பேரு என்ன?”

    “செல்வி.”

    உடம்பு கொஞ்சம் நடுங்கியது

    “வேலையை பத்தி சுந்தரி சொன்னாளா?”

    “சொன்னாங்க சார்.”

    “காலைல எட்டரைக்கு வந்துடணும் .
    ஒம்போது மணிக்கு டீ கொடுப்ப்போம் .
    நாலு பிஸ்கட் கூட பொறையும் உண்டு .
    வேலைல கௌரவம் பாக்க கூடாது .
    முதல்ல இரண்டு கல்ல தூக்கணும் .
    அப்புறம் ஒரு வாரம் கழிச்சு நாலு கல்லு.
    மொத்தம் மூணு மாடி .
    முதல்ல தலைல.
    ஷோக்கெல்லாம் பாக்க கூடாது
    செல்போன்ல பாட்டெல்லாம் கேட்க கூடாது.”

    “எங்கிட்ட போனே இல்ல…..”

    “சிம்மோடு கட்டி விடுவாங்க .
    தலை கட்டு. துணில
    முதல்ல நடு மண்டை வலிக்காது.
    ஈர துணியோட ரெண்டு நாள் இருக்க பழகு .
    ரப்பர் செருப்பு தான் போடணும் .
    புடவை மேல ஒரு சட்டை போடணும்.”

    “சரிங்க சார்.”

    “அய்யான்னு கூப்பிடு – சுந்தரி”

    “சரிங்க அய்யா.”

    “நீ என்ன நடுல …
    உம் பேரு விலாசமெல்லாம் எழுதி
    அந்த வாட்சமேன்ட்ட கொடு.
    என்ன பண்றான் உன் அப்பன்?
    சம்பளம் பணத்தை சனிக்கிழமை சாயந்தரம் கொடுப்போம் .
    எந்த பொருளையும் நீ இங்கேந்து கொண்டு போக கூடாது.”

    “சரிங்க சார்.”

    “மணி என்ன ஒம்போது தானே.”

    “வாட்ச் இல்ல சார்.”

    “சரி சரி ராகு காலத்துக்கு முன்னாடி சேர்ந்துக்கோ.”

    “அய்யா. நான் நாளைலேந்து வரேன்யா.”

    “ஏன் …நாளைக்கு மட்டும் என்ன முஹூர்த்தம்?”

    “இன்னிக்கு பன்னெண்டு மணிக்கு பத்தாம் கிளாஸ் ரிசல்ட்யா.”

    மேஸ்திரி எழுந்துவிட்டார்!! .

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-54

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-54

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-54

    54. பொச்சாவாமை

    குறள் 531:

    இறந்த வெகுளியின் தீதே சிறந்த
    உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

    ரொம்ப சந்தோசமா இருக்குதப்போ அயத்துப் (மறதி) போவுதது கடுங்கோவத்தக்காட்டிலும் கொடும.

    குறள் 532:

    பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
    நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

    தெனைக்கும் வாட்டுத ஏழ்ம,  புத்திய மழுங்கடிக்கது கணக்கா அயத்துப் போவுத கொணம் புகழ அழிச்சுப்போடும்.

    குறள் 533:

    பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
    தெப்பானூ லோர்க்குந் துணிவு

    அயத்துப் போவுத கொணம் உள்ளவுகளுக்கு புகழ் இல்ல. இது எல்லாந்தெரிஞ்ச அறிவாளிங்களோட முடிவான கருத்து.

    குறள் 534:

    அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
    பொச்சாப் புடையார்க்கு நன்கு

    மனசுல பயம் இருக்கவங்களுக்கு சுத்திவர பாதுகாப்பா மதில்சுவர் இருந்தாலும் ஒபயோகமில்ல. அதுகணக்கா ஒசந்த நெலையில இருந்தாலும் அயத்துப் போவுத கொணமிருந்தா அந்த நெலையால ஒரு பிரயோசனமுமில்ல.

    குறள் 535:

    முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
    பின்னூ றிரங்கி விடும்

    வருத சங்கடங்கள முன்னமே தடுக்க அயத்துப் போனவன் சங்கடம் வந்த   பொறவு தன் தப்ப நெனச்சி வெசனப்படுவான்.

    குறள் 536:

    இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
    வாயின் அதுவொப்ப தில்

    யார்கிட்டயும் எந்தக்காலத்திலயும் ஓர்ம கெட்டு அலையுத கொணம் (ஞாபக மறதி) இல்லாமப் போச்சுதுன்னா அதப்போல நன்ம வேற இல்ல.

    குறள் 537:

    அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
    கருவியாற் போற்றிச் செயின்

    அயத்துப் போவாம ஓர்மையோட(ஞாபகமா) செய்யுதவனுக்கு செய்யமுடியாததுனு எதுவும் இல்லாமப் போவும்.

    குறள் 538:

    புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
    திகழ்ந்தார்க் கெழுமையும் இல்

    படிச்ச பெரிய மனுசங்க சொல்லுதத விரும்பிச் செய்யணும். அப்டி செய்ய அயத்து அலுத்து இருக்கவங்களுக்கு ஏழு பொறப்புலயும் நன்ம கெடைக்காது.

    குறள் 539:

    இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
    மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

    இறுமாப்போட பூரிச்சுப்போயி கடமையச் செய்ய அயத்து அலையுதவங்க,  முன்ன இது கணக்கா அலஞ்சி அழிஞ்சவங்கள நெனச்சிப் பாத்துக்கிடணும்.

    குறள் 540:

    உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
    உள்ளிய துள்ளப் பெறின்

    ஒருத்தன் தான் அடைய நெனக்குதத நாட்டத்தோட அசராம தொடர்ச்சியா நெனச்சிக்கிட்டே இருந்தாம்னா அவன் நெனச்சத சுளுவா அடஞ்சுக்கிடலாம்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

     

    Share
  • என்னப்பா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    விரதமெலாம் தானிருந்து
    விரும்பியெனை இறைவனிடம்
    வரமாகப் பெற்றவரே
    வாய்மைநிறை என்னப்பா
    விரல்பிடித்து அரிசியிலே
    எழுதவைத்த என்னப்பா
    உரமாக என்னுள்ளே
    உணர்வோடு கலந்துவிட்டார்!

    தோள்மீது எனைத்தூக்கி
    தான்மகிழ்ந்து நின்றிடுவார்
    வாழ்நாளில் வீழாமல்
    வளரவெண்ணிப் பலசெய்தார்
    மெய்வருத்தம் பாராமல்
    எனையெண்ணித் தானுழைத்தார்
    கண்ணெனவே காத்துநின்றார்
    கருணைநிறை என்னப்பா!

    பொட்டுவைத்த என்முகத்தை
    கட்டிக்கட்டிக் கொஞ்சிடுவார்
    பட்டுச்சட்டை வாங்கிவந்து
    பரவசத்தில் மூழ்கிடுவார்
    இஷ்டமுடன் தன்மார்பில்
    எனையுறங்க வைத்திடுவார்
    அஷ்ட ஐஸ்வரியமென்று
    அனைவர்க்கும் சொல்லிடுவார்!

    நானுண்ட மிச்சமெலாம்
    தானெடுத்துச் சுவைத்திடுவார்
    அவர்பாதி நானென்று
    அவருக்குள் எண்ணிடுவார்
    உலகிலென்னை உயர்ந்தவனாய்
    உருவாக்க உருவானார்
    நிலவுலகில் என்னப்பா
    நிகரில்லா தெய்வமன்றோ!

    பட்டம்பல நான்பெற்றேன்
    பதவிகளும் வகித்துநின்றேன்
    கஷ்டம்பல பெற்றாலும்
    கைகொடுத்தார் என்னப்பா
    விருதுகளோ எனையணுகி
    விரும்பிவந்து சேர்ந்தனவே
    விரும்பிநின்ற என்னப்பா
    விண்ணுலகு சென்றுவிட்டார்!

    ஆளாக்கி விட்ட எந்தன்
    அன்புநிறை அப்பாவை
    அனுதினமும் எண்ணியெண்ணி
    அலமந்து நிற்கின்றேன்
    ஆண்டவனின் திருவுருவாய்
    அப்பாவைக் காணுகிறேன்
    அவர்நினைப்பை மனமிருத்தி
    அவர்வாழ்த்தை வேண்டுகிறேன்!

    Share
  • கருணையாலே வெலவேண்டும்!

    கருணையாலே வெலவேண்டும்!

    மீ.விசுவநாதன்

    வந்த பிறவிச் சுவடுக்கு – ஒரு
    வகையில் நன்மை செயவேண்டும்
    எந்த உயிர்க்கும் சுமையாக – நாம்
    இல்லா திருக்க வரம்வேண்டும்

    பூவாய், காயாய்க் கனியாக – நம்
    பூமி மகிழ வரவேண்டும்
    நாவாய் போல அனைவர்க்கும் – துன்ப
    நதியைக் கடக்கத் துணைவேண்டும்

    பறவை, விலங்கு, நீர்நிலைகள் – உயிர்
    பந்த மென்ற உணர்வோடு
    துறவைப் பெற்ற மனம்போலே – நம்
    தூய பணியைச் செயவேண்டும்

    காக்கை, மைனா, குருவிகளின் -மனம்
    கண்டு உணவு தரவேண்டும்
    தீக்கை மாறிக் குளிராக – தொண்டு
    தினமும் செய்யும் குணம்வேண்டும்

    இறைவன் படைத்த உலகத்தை – அன்பு
    ஈர்ப்பி னாலே தொடவேண்டும்
    நிறைவாம் செல்வம் ஆனந்தம் – “நான்”
    நினைவை அழித்துக் கொளவேண்டும்

    முதியோர் இளையோர் குழந்தைகள் – ஒரு
    கூட்டாய் வாழும் நிலைவேண்டும்
    நிதியே அதுதான் என்கின்ற – உண்மை
    நிலையை அறிய அருள்வேண்டும்.

    தர்மத் தராசு முள்ளாக – மனத்
    தரமும் மேன்மை பெறவேண்டும்
    கர்ம வினைகள் பூராவும் – நம்
    கருணை யாலே வெலவேண்டும்!

    Share
  • குறளின் கதிர்களாய்…(259)

    செண்பக ஜெகதீசன்

    எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
    யதிர வருவதோர் நோய்.

    -திருக்குறள் -429(அறிவுடைமை)

    புதுக் கவிதையில்…

    வரவிருக்கும் தீமையை
    வருமுன்னே அறிந்து
    அது
    வராமல் தடுத்திடத் தெரிந்தவரே
    அறிவுடையோர்..
    உடலும் உள்ளமும்
    நடுங்கும்படியான
    கொடிய துன்பமெதுவும்
    வருவதில்லை அவர்க்கே…!

    குறும்பாவில்…

    வரவிருக்கும் இடரறிந்து வராதவாறு காக்கவல்ல
    அறிவுடையோர்க்கு வருவதில்லை வாழ்வில்
    நடுங்கவைக்கும் கொடிய துன்பமே…!

    மரபுக் கவிதையில்…

    வாழ்வில் தீமை வரவறிந்ததன்
    வரவைத் தடுத்துக் காக்கவல்ல
    ஆழ்ந்த அறிவ துள்ளோர்கள்
    அச்சப் படவே தேவையில்லை,
    வாழ்வினி லவர்தம் உடலுள்ளம்
    வருந்தி நடுங்க வைத்துவிடச்
    சூழ்ந்திடும் கொடிய யிடரெதுவும்
    சற்றும் அவரை நெருங்காதே…!

    லிமரைக்கூ..

    இடர்தடுப்பார் அதையறிந்து முன்னே,
    வருந்தி நடுங்கவைக்கும் கொடுந்துன்பமெதுவும்
    வருவதில்லை அறிவுடையிவர் பின்னே…!

    கிராமிய பாணியில்…

    அறிவுவேணும் அறிவுவேணும்
    ஆராஞ்சறிஞ்சி செயல்படுற
    அறிவுவேணும் அறிவுவேணும்..
    வரப்போற தீமய
    முன்கூட்டியே அறிஞ்சி,
    அது
    வராமத் தடுக்கத்தெரிஞ்ச
    வெவரமானவனுக்கு,
    வருந்தி நடுங்கவைக்கும்
    பெரிய துன்பமே வராதே..
    அதால
    அறிவுவேணும் அறிவுவேணும்
    ஆராஞ்சறிஞ்சி செயல்படுற
    அறிவுவேணும் அறிவு வேணும்…!

    Share
  • முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது

    முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது

    முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுதொடர்பாக முனைவர் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளையின் தலைவர் ப. தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கை:

    முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளை சார்பில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    நிகழாண்டுக்கான விருதுக்குத் தொல்லியல், கல் வெட்டியல், நாணயவியல், அகழாய்வு, பலதொழில் துறைகளில் பயன்படுத்தியுள்ள, ஆனால் அகராதிகளில் இது வரை இடம்பெறாத புதிய சொற்களின் தொகுப்பு, மொழிச் சீர்திருத்தம், சமுதாயச் சீர்திருத்தம், முன்னேற்ற சிந்தனை கொண்ட முத்தமிழ் படைப்புகள் போன்ற பொருள்களில் ஒன்றைக் கொண்ட நூல்கள் வர வேற்கப்படுகின்றன.

    தேர்ந்தெடுக்கப்படும் நூலின் படைப்பாளிக்கு, முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுடன் முதல் பரிசாக உரூ.30,000, இரண்டாம் பரிசாக உரூ.20,000, மூன்றாம் பரிசாக உரூ.10,000 வழங்கப்படும்.

    நிபந்தனைகள் :

    1)நூல் படைப்பு 2018 -ஆம் ஆண்டில் இருக்க வேண்டும்.
    2) நூலின் இரு படிகளை அனுப்ப வேண்டும்.
    3)நூலை அனுப்பி வைக்க வேண்டிய கடைசி நாள் : ஆனி 15, 2050 / சூன் 30, 2019.

    விருதும், பரிசுகளும் வழங்கும் நாள்: ஆடி 05, 2050 – சூலை 21, 2019.

    நூலை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:

    ப. தங்கராசு,
    தலைவர்,
    முனைவர் வா.செ.குழந்தை சாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை தமிழ் மேம்பாட்டு விருது,
    5/45, எல்.ஆர்.சி. நகர், ஆண்டாங்கோவில் கிழக்கு,
    கரூர் – 639 008.

    Share
  • Why there is a walking stick?

    Why there is a walking stick?

    Dr.Annakannan

    Most of the symbols, icons, cliparts for elders are with walking stick, which I feel irrelevant. This will discourage & demotivate elders to depend on sticks.

    I see many elders without walking sticks; they will walk easily even after 70s & 80s. Elders age is starting at 60; but the need of stick may come to someone after 80 or 90, depends on their physical condition. Certain percentage of users only will use walking stick, I assume it will be around 20%. Keeping a symbol with stick for all elders will not suit.

    Better we can think some other icon for elders, which should be with cheer & celebration. I suggest United Nations to conduct an icon contest at global level to decide by online voting.

    Share
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  குரூப்  4 நிலையில் 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 நிலையில் 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 நிலையில் 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . தேர்வுக்கு 14.07.2019க்குள் விண்ணப்பிக்கவும்.

    Share
  • மோகனக் கவிஞனுக்கு கவிதாஞ்சலி

    மோகனக் கவிஞனுக்கு கவிதாஞ்சலி

    சத்தியமணி

    புன்னகை யிருக்க பூமிக்கு சிரிக்கவழிச்
    சொன்னவன் சென்று விட்டான் …….1

    நகைப்பினில் மின்னல் தெறிப்பவர் கண்டு
    திகைப்பது வைகுந்தமோ சொல்? ……..2

    சிரித்திட நேரத்தில் சிந்தனைக்கு விருந்தும்
    இனித்தரப் போவது யாரோ ………3

    மோகனைக் கண்டதும் விரிந்திடும் இதழ்களில்
    வேதனைச் சுமையால் வலி ………4

    கேசவன் வண்ணம் கிரேசியின் எண்ணமினி
    வாசகன் ரசிக்க இல்லை ………5

    பைத்தியம் என்றுனைப் பட்டம் இட்டதற்கு
    புத்திக்கு புரிந்ததே இன்று …….6

    வெண்பா விரித்து விளையாட்டு புரிந்தவனை
    மண்பால் பிரித்தவர் யார் ………7

    வெண்பா விழைந்து அன்பால் மகிழ்ந்து
    மண்பா வையினிடமுன் நட்பா ………8

    வல்லமைப் பக்கமாய் வந்ததனால் பழக்கம்
    எல்லாமோ சிறிது காலம் ? ………9

    அத்தி வரதன் தத்தி வருமுன்னே
    முந்தி நீயவன டியிலே ……..10

    ஆன்மா அமைதியுறுக.

    Share
  • ஜெயமோகன் மீது தாக்குதல்

    ஜெயமோகன் மீது தாக்குதல்

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளர் ஜெயமோகன், நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் வசிக்கிறார். அங்கே ஒரு கடையில் புளித்த தோசை மாவை விற்ற கடைக்காரரிடம் திருப்பிக் கொடுக்கச் சென்றபோது, நேற்று தாக்கப்பட்டுள்ளார். மேலும், ஜெயமோகன் வீட்டுக்குச் சென்ற கடைக்காரர் செல்வம், அங்குநின்று மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதுகுறித்து ஜெயமோகன், நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தனது வலைத்தளத்திலும் எழுதியுள்ளார்.

    ஜெயமோகன் தாக்கப்பட்டதை வல்லமை, வன்மையாகக் கண்டிக்கிறது.

    தரம் குறைந்த பொருளை விற்பனை செய்ததற்காகவும் வாடிக்கையாளருக்கு உரிய மாற்றுப் பொருள் வழங்காததற்கும் தாக்கியதற்கும் வீட்டிற்கு வந்து மிரட்டியதற்கும் ஜெயமோகனுக்கு இழப்பீடு அளிக்கவேண்டும். நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜெயமோகன் இதற்காக வழக்குத் தொடுக்க வேண்டும். காவல் துறையினர், குற்றவியல் நடவடிக்கை எடுத்துக் கடைக்காரரைக் கைது செய்ய வேண்டும். உணவு வழங்கல் துறை, அந்தக் கடையில் உள்ள பொருள்களின் தரத்தினைப் பரிசோதிக்க வேண்டும். தொழில், வணிகத் துறையினர், அந்தக் கடையின் கணக்கு வழக்குகளை ஆராய வேண்டும்.

    தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி, மதுரை சு.வெங்கடேசன், கரூர் ஜோதிமணி, விழுப்புரம் ரவிக்குமார் ஆகியோர், ஜெயமோகனை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கலாம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரள முதல்வர் பிணராயி விஜயன் உள்ளிட்டோர், தொலைபேசியில் நலம் விசாரிக்கலாம்.

    நீ கதை எழுதுறவன்தானே எனக் கடைக்காரர் கேட்டாராம். ஜெயமோகன், நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

    படத்துக்கு நன்றி: விக்கிப்பீடியா

    Share
  • விகடம் சொல்வார் யார் யாரோ!!

    விகடம் சொல்வார் யார் யாரோ!!

    கிரேஸி மோகன், தன் இலக்கிய குரு என்று கொண்டாடியவர் அவரது நண்பர் ஓவியக் கவிஞர் சு.ரவி. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வைத்து இலக்கியத்தையும் இலக்கணங்களையும் சொல்லிக் கொடுத்து, கிரேஸி மோகனுக்குள் இருந்த கவிஞரைக் கண்டறிந்தவர் சு.ரவி. இருவரும் ஓவியங்களைத் தேடி, பாரிமுனையில் கடைகடையாய் ஏறி இறங்கிய நிகழ்வுகள், கேட்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவன.

    கிரேஸி மோகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப் பட்டதும், சு.ரவியைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவருடைய தொடர்பு அந்நாள் முழுக்கக் கிடைக்கவில்லை. இதற்கிடையில், அடுத்தநாள் அவர் இயக்கி வரும் ஒரு வாட்ஸாப் குழுவில் தழுதழுத்த குரலுடன் தன் ஆருயிர் நண்பனுக்கு இரங்கல் கவிதை எழுதி அதனை வாசித்தும் அனுப்பி இருக்கிறார். சு.ரவி போன்ற உணர்ச்சிக் கவிஞரின் வரிகளை, அதுவும் கிரேஸி மோகனோடு மிக நெருங்கிய உறவாய் இருந்தவர் வலிகளைப் படிக்க, கேட்க கண்ணீர் பூத்தது.

    இதோ அவர் எழுதிய நண்பனுக்கான கவிதாஞ்சலி…

    மோகன்

    அழவு மியலா(து); அவன்நினைவாய் ஏதும்
    எழுத முடியாது; நெஞ்சம்- முழுதும்
    துயர்மரத்துப் போச்சே! விழிவெறிக்க லாச்சே!
    அயர்ந்ததே அந்தராத் மா!

    கலகலக்க வைத்தே கவலை துரத்தி
    உலகனைத்தும் உன்திறனால் வென்றோய்! – பலகலைகள்
    தேர்ந்தவனே, தேகான்ம பாவம் தொலைத்தவனே
    சோர்ந்து குலைந்ததென் நெஞ்சு!

    மயிலைக் கபாலியைக் கற்பகத்தை என்றும்
    துயிலும் பொழுதும் மறவோய்- வியப்பால்
    உனையுலகம் போற்ற, உனையென்றும் கர்வம்
    தினையேனும் தீண்டியதில் லை!

    எனக்கிரங்கல் வெண்பா எழுதுவாய் என்றே
    நினைத்திருந்தேன், ஏமாற்றி விட்டாய் – நினக்கிரங்கல்
    நானெழுத நேர்ந்ததே நண்பனே, நீருக்குள்
    மீனழுதாற் போலழுதேன் நான்!

    எங்கோ பிறந்தோம் எவர்மடியி லோவளர்ந்தோம்
    இங்கேன் மனத்தால் இணைந்தோம்நாம்- கங்குகரை
    இல்லாக் கடல்போல் இருள்கவிந்தென் நெஞ்சினில்
    பொல்லாப் பிரிவுத் துயர்தரவோ-நல்லோய்
    சிரிப்புக் கிறையாய் வலம்வந்த தேகம்
    நெருப்புக் கிரையாவ தோ!

    நேற்றோ, நினைவில்லை உன்னுள் கவிதையெனும்
    ஊற்றுக்கண் கண்டு திறந்துவிட்டேன்- ஆற்றலுடன்
    காட்டாறு போலக் கவிபொழிந்தாய்! மீண்டுவர
    மாட்டாயோ ஏங்கும் மனம்!

    என்னைக் ‘குரு’வென்(று) அழைப்பதுவோ? நண்பனே,
    என்னைநீ விஞ்சிப்போய் எத்தனையோ நாளாச்சே!
    இன்னமும் என்னை உயர்த்தி உரைக்குமுன்
    அன்புக்(கு) அடிமையடா நான்!

    இன்னுமோர் நூறாண் டிருநண்பா எம்நெஞ்சில்
    என்றும் பதினாறாய் ஏற்றமுற!- குன்றாக்
    கவிதை, நகைச்சுவை, ஓவியத்தால் வாழும்
    புவியினில் உன்றன் புகழ்!

    “எழுதிச் செல்லும் விதியின்கை
    எழுதி எழுதி மேற்செல்லும்!
    தொழுது போற்றி நின்றாலும்
    சூழ்ச்சி பலவும் செய்தாவும்
    வழுவிப் பின்னால் ஏகியொரு
    வார்த்தை மாற்றம் செய்யாது
    அழுத கண்ணீர் ஆறெல்லாம்
    அதிலோர் எழுத்தை அழிக்காது”

    ஆம்; சற்றும் இரக்கம் காட்டாமல் விதியின் கரம் ஒரு முடிவுரையை எழுதிச் சென்றுவிட்டது. என் ஆருயிர் நண்பன் இப்போது நினைவுகளிலும், புகைப்படங்களில் மட்டுமே!

    அவகாசம் அளிக்காமல் உடனே பிரிந்துசெல்ல அப்படியென்ன
    அவசரமடா உனக்கு?
    யாருன்னை அப்படி அழைத்தும் கொண்டது?
    போதுமெனத் தீர்மானித்துப் புறப்பட்டுச் சென்றாயா?
    நோயிற் படுத்திருந்தால் நோன்பிருந்து மீட்டிருப்போம்!
    நாற்றிசையும் சுற்றி அமுதம் கொணர்ந்திருப்போம்!
    வாய்ப்பே அளிக்காமல் வாய்க்கரிசி போடவைத்தாய்!
    வெண்பா எழுதாமல் விண்ணுலகம் போகலாமா?
    ஓவியங்கள் தீட்டாமல் விரல்கள் ஓயலாமா?
    பெருமாள்மேல் நீபடைத்த வண்ண விருத்தங்கள்
    அருமையிலும் அருமையடா! அவையெல்லாம் இசைவடிவில்
    உலகெலாம் ஒலிக்க நீகேட்க வேண்டாமா?

    கே.பி.டி. சிரிப்புராஜ சோழனை மேடையிலே
    நாடகம் ஆக்கித் தருகின்றேன் என்றெனக்கு
    நீஅளித்த வாக்கை நிறைவேற்ற வேண்டாமா?
    மலைமகளும், கலைமகளும், அலைமகளும், நீபடைத்த
    வெண்பாவைப் புத்தகமாய் விஜய தசமியன்று
    பார்க்கப் பொறுமையின்றி உனையங் கழைத்தாரோ!

    மாலையிலும், இரவினிலும் தொலைபேசி ஒலித்தாலே
    நீயழைக்கிறாயென்று ஓடோடி நான்வருவேன்.
    இனியந்த அழைப்பு வாராதே, என்செய்வேன்!

    காலை எழுந்தவுடன் கேசவ் ஓவியமும்
    கண்ணன் வெண்பாவும் மின்னஞ்சல் கொண்டுவரும்!
    இனியந்த வெண்பாக்கள் வாரா! வெறுமையடா!

    எல்லாம் மறக்க நினைத்தால், ஓய்வெடுக்கப்
    புனா நகருக்குப் புறப்பட்டு வந்துவிடு.
    ஷீரடியின் நாயகனைப் பண்டரியின் விட்டலனைச்
    சேர்ந்துசென்று தரிசிப்போ மென்றழைத்தேன், சரியென்றாய்!
    சனிக்கிழமை சரியென்றாய், திங்கள் சரிந்துவிட்டாய்!
    வார்த்தை தவறுவது சரியோ, சம்மதமோ!

    சொல்ல முடியவில்லை; சொல்லில் அடங்கவில்லை;
    சோகச் சுவடுகளைச் சுமக்க முடியவில்லை!
    உன் ஓவியங்களையும், உன் கவிதை , உன்வசனம்
    உன்னுயர்வு, உன்வளர்ச்சி, உன்பெருமை, சாதனைகள்
    எல்லாமே என்னுடைய தென்றே இறுமாந்து
    நெஞ்சு நிமிர்ந்திருந்தேன்- இன்று நிலைகுலைந்தேன்!

    இதுதான் வாழ்க்கை நியதியென்று விரக்தியுடன்
    வேதாந்தம் பேசி வீடு திரும்பிவிட்டோம்!
    ஆடிக் களைத்தாலும், அழுது களைத்தாலும்
    அடுத்தநாள் வேலைகளைப் பார்க்கத் தொடங்குகிறோம்!

    ஆம்;

    “இருந்து சென்ற முன்னோரின்
    இடத்திலெல்லாம் நாம் இன்று
    விருந்து செய்து வாழ்கின்றோம்
    விகடம் சொல்லி மகிழ்கின்றோம்!
    இருந்த இடம் விட்டு யாமும்இனி
    எழுந்து சென்றால் இங்கிருந்து
    விருந்து செய்வார் யார்,யாரோ!
    விகடம் சொல்வார் யார் யாரோ!!”

    அமைதி கொள் நண்பா!

    அஞ்சலியுடன்,
    சு.ரவி

    Share
  • (Peer Reviewed) இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளும் சிக்கல்களும்

    (Peer Reviewed) இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளும் சிக்கல்களும்

    செ. சிலம்பு அரசி

    முனைவர் பட்ட ஆய்வாளர்

    ப. வேல்முருகன்

    நெறியாளர்

    தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்

    ராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளும் சிக்கல்களும்

    முன்னுரை

    படைப்புகளைப் சரியான முறையில் உரிய நெறிமுறைகளோடு பதிப்பித்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் அரும்பணி, பதிப்புப் பணி ஆகும். தொடக்க காலத்தில் சுவடிகளைப் பெயர்த்தெழுதிப் படியெடுத்துக் கொண்டனர். அப்பிரதிகள் அச்சியந்திரங்களின் வருகையினால்   அச்சிடப்பட்டுப் பரவலாக்கப்பட்டன.   பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட  பாடல்களைத் திணை, அடி, பாடுபொருள் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுத்தும் தொகுப்பித்தும் வந்துள்ளனர். சங்க இலக்கியத்திற்கு 1834–இல் திருமுருகாற்றுப்படையைப் பதிப்பித்த சரவணப் பெருமாள் ஐயர் தொடங்கி சி.வை. தாமோதரன் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், செளரிப்பெருமாளரங்கன், அ.பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ராஜகோபாலார்யன், எஸ்.வையாபுரிப்பிள்ளை முதலான பலர் சங்க இலக்கியப் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

    வே. ராஜகோபாலார்யன் செய்த அகநானூற்றுப் பதிப்புகளை அறிமுகம் செய்வதும், பதிப்பாசிரியர்; பதிப்பாண்டுகளில் உள்ள சிக்கல்களை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. இவ்வாய்வுக்கு வே. ராஜகோபாலார்யன் பதிப்புகள் முதன்மையாதாரமாகவும், அகநானூறு குறித்த திறனாய்வு நூல்கள் துணைமையாதாரமாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

    அகநானூறு

    கடைச்சங்க காலத்தில் இயற்றப்பெற்ற நூல்களுள் ஒன்று அகநானூறு என்பர்.    அகத்திணை ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் 400 பாடல்கள் உள்ளன. இந்நூல் அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு என்று வேறு பெயர்களையும் கொண்டுள்ளது. 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்டு அடியளவில் பெரியது. பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்தைப் பாடியுள்ளார். அகநானூற்றுப் பாடல்களைப் பாடியவர் 145 பேர். மூன்று (114, 117, 165) பாடல்களுக்குப் புலவர் பெயர் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை உப்பூரிக்குடிக்கிழார் மகன் உருத்திரசன்மனார் தொகுத்தும், பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தும் உள்ளனர்.

    1 -120 களிற்றியானை நிரை, 121- 300 மணிமிடைப்பவளம், 301-400 நித்திலக் கோவை  என   400 பாடல்களையும் முப்பிரிவாகப் பகுத்துப் பெயரிட்டுள்ளனர்.

    பதிப்பு

    ஓலைச் சுவடிகள், காகிதப்பிரதிகள் இவற்றை ஒப்பு நோக்கிப் பாட வேறுபாடுகள் சுட்டிக் காட்டிப் பதிப்புச் செய்வதே பதிப்பு என்பர்.

    அகநானூற்றுப் பதிப்புகளை நோக்குகையில் பெரும்பாலும் பகுத்து வெளியிடப்பட்டுள்ளன. ‘அகநானூறு முதல் பதிப்பு 1918 தொடங்கி 2010 வரை வந்துள்ள பதிப்புகள், வெளியீடுகள் என்ற நிலையில் 47 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் 13 நூல்களே பதிப்புகளாக அமைகின்றன’ என்று மா.பரமசிவன் (2010:39) அகநானூறு பதிப்பு வரலாறு (1918-2010) எனும் நூலில் குறிப்பிடுகிறார். 1918, 1920, 1923, 1926, 1933–இல் (இரு பதிப்பு) ஆறும் வே. இராஜகோபாலாரியனால் பதிப்பிக்கப்பட்டவை. 1940-இல் சைவ சித்தாந்த மகாசமாஜம், 1943-இல் களிற்றி யானைநிரை, 1944-இல் மணிமிடைபவளம், நித்திலக்கோவை மூன்றையும் பாகனேரி வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாதச் செட்டியார், 1958-இல் மர்ரே.எஸ். இராஜம், 1990-இல் களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை மூன்றையும் மயிலம் வே.சிவசுப்பிரமணியன், 2018-இல் களிற்றியானைநிரை மட்டும் ஏவா வில்தன் ஆகியோர் பதிப்பித்துள்ளனர்.

    1918 முதல் 2018 வரை அகநானூற்றிற்குப் பதிப்புகளாக 14 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் இராஜகோபாலார்யன் பதிப்புகளை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

    இராஜகோபாலார்யன் பதிப்பு

    1918, 1920, 1923, 1926, 1933 (இரு பதிப்பு) ஆம் ஆண்டுப் பதிப்புகள் ஆறும் வே.இராஜகோபாலாரியனின் பதிப்புகளாகும்.

    அகநானூற்றை முதலில் பதிப்பித்து வெளியிட்டவர், கம்பர் விலாசம் ராஜகோபாலார்யன் (வே. இராஜகோபாலையங்கார்). 1918–இல் தொடங்கி 1933 வரை சிற்சில மாற்றங்களோடு பதிப்பித்து வெளியிட்டுள்ளார். பதிப்பிக்கத் தூண்டியவர்கள், சுவடி கொடுத்தவர்கள், பொருள் உதவி செய்தவர்கள், சரிபார்த்துத் தந்தவர்கள் போன்றன கூறுவதைப்  பதிப்பறங்களாகக் கடைப்பிடித்துள்ளார்.

    1918   :  முதல் பதிப்பு

    முதல் பதிப்பு 1918-இல்

    அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதி, MADRAS, KAMBAR VILAS BOOK DEPOT, MYLAPORE, 1918 ’

    என்று உள்ளது. இப்பதிப்பின் முகப்புப் பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் கிடைக்கவில்லை என்று இரா. ஜானகி ‘சங்க இலக்கியப் பதிப்புரைகள்’ (ப.38) எனும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    முதல் பதிப்பாசிரியர் யார்?

    அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் ரா. இராகவையங்கார் என்று சிலர் கருதுவதாக மா. பரமசிவன் (2010:2) தம் நூலில் கூறியுள்ளார். 1923ஆம் ஆண்டுப் பதிப்பின் முகப்பு அட்டையில் ‘ஸேதுஸமஸ்தான வித்துவான் ஸ்ரீ உ. வே. ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் சோதித்துத் தந்தன’ என்று உள்ளதால் ரா. இராகவையங்கார் சோதித்துத் தர, ராஜகோபாலார்யன் பதிப்பித்திருக்க வேண்டும்.

    1918–இல் வெளிவந்துள்ள பதிப்பில் KAMBAR VILAS BOOK DEPOT என்று பதிப்பகம் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. கம்பர் விலாசப் பதிப்பகம், ராஜகோபாலார்யனால் நடத்தப்பட்டது என்பதை ராஜகோபாலார்யனின்  1933ஆம் ஆண்டுப் பதிப்பின், மறுபதிப்பில் இடம்பெற்றுள்ள வாழ்க்கை வரலாறு அகச் சான்றாக அமைந்து உறுதிப்படுத்துகிறது.  இவற்றைக் கொண்டு ராஜகோபாலார்யனே முதல் பதிப்பாசிரியர் என்று கூறலாம்.

    90 பாட்டா? 120 பாட்டா?

    முதல் 90 பாடல்களுக்குப் பழைய உரை உள்ளது. அது யார் உரை என்று தெரியவில்லை.  முகப்பட்டையில் ‘முதற்பகுதி’ என்று உள்ளதால். பழைய உரை கொண்ட 90 பாடல்கள் மட்டும் பதிப்பிக்கப்பட்டதா? அல்லது பழைய உரையுடன் 30 பாட்டுக்கு (91 முதல் 120வரை) மூலத்தைச் சேர்த்து களிற்றியானைநிரை (120) முழுவதும் பதிப்பிக்கப்பட்டதா? என்ற ஐயம் தோன்றுகிறது. இந்த ஐயத்திற்கு அவர் எழுதிய ஸ்ரீ பொன் ஆடு என்ற நூல் விடை கூறுகிறது. 1918–இல் களிற்றியானை நிரை மட்டும் வெளிவந்துள்ளது என்பதை

    1927-இல் (பிரபவ) வெளிவந்துள்ள ராஜகோபாலார்யனின் ‘ஸ்ரீ: பொன் ஆடு’ எனும் நூல்வழி அறியமுடிகிறது. அந்நூலின் பின் அட்டையில் தம் அகநானூற்று நூலுக்குக் கிடைத்துள்ள நூலக ஆணை பற்றிய செய்தியை இராஜகோபாலார்யன் பதிவு செய்துள்ளார் (விவரம்: பின்னிணைப்பு – 4). அப்பதிவின் மையப்பகுதி வருமாறு:

    “ A copy of the first part of  “Ahananuru” containing 120 stanzas is a useful edition to the library and the Deputy Inspectors of School are permitted to purchase a copy of the same from the allotment placed at their disposal under“ Books and periodicals “in the current year’s budget” (1927: பின் அட்டை).” (மா.பரமசிவன் 2010:7)   அறிய முடிகிறது.

    1920   : இரண்டாம் பதிப்பு

    1920-இல்

    ‘ஸ்ரீ: அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதியும், இரண்டாம் பகுதியும்’ MADRAS, KAMBAR VILAS BOOK DEPOT, MYLAPORE, 1920, copyright], [price Rs. 9.’

    என்ற பதிப்பு வெளிவந்துள்ளது. இப்பதிப்பிலும் பதிப்பாசிரியர் பெயர் இல்லை; பதிப்பகப் பெயர் உள்ளது.  முகவுரை எதுவும் இல்லாமல் கடவுள் வாழ்த்துடன் தொடங்கி, 90ஆம் பாடல்வரை பழைய உரையுடனும் பிற பாடல்களின் மூலமும், இறுதியில் பாயிரமும், செய்யுள் முதற் குறிப்பகராதியும் உள்ளன.

    1920-இல் இராஜகோபாலார்யன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எவ்வித முன்னுரையும் இல்லாமல் 90 பாடல்களைப் பழைய உரையுடன் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பு, இராஜகோபாலார்யன் பதிப்பு என்பதை 1923-இல் பதிப்பித்துள்ள அகநானூற்று நூலின் ஒரு விஞ்ஞாபனம் என்னும் பகுதி உறுதிப்படுத்துகின்றது. அப்பகுதி வருமாறு:

    பதிப்பாசிரியர் பெயர் இடம் பெறாதது ஏன்?

    பதிப்பகத்தின் பெயர் இடம்பெற்று, பதிப்பாசிரியர் பெயர் இடம் பெறாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. அதாவது உள்ளதை மட்டும் பதிப்பித்துப் பதிப்பாசிரியர்க்குரிய பதிப்பறங்களை மேற்கொள்ளாத போது பதிப்பாசிரியர் பெயரை ஏன் சேர்க்க வேண்டும் என்று இராஜகோபாலார்யன் நினைத்திருக்கலாம்.  1923-இன் பதிப்பில் பாடல்களைத் தவிர முகவுரை தொடங்கிப் பொருட்குறிப்பகராதி வரை, பதினைந்து தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. பதிப்பாசிரியர் இப்பதிப்புகளில் பதிப்பறங்களைச் சிறந்த முறையில் கடைப்பிடித்துள்ளதால் பதிப்பாசிரியர் பெயரைச் சேர்த்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. இதிலிருந்து வே. இராஜகோபாலார்யன் பதிப்பறங்களை மேற்கொண்டால் மட்டுமே பதிப்பாசிரியார் பெயர் இடம் பெறவேண்டும் இல்லையென்றால் பதிப்பாசிரியர் பெயர் இடம் பெறல் கூடாது என்ற கருத்துடையவராக இருந்துள்ளதை உணர முடிகின்றது. இதன் மூலம், அவர்   சிறந்த பதிப்பாசிரியருக்குரிய இலக்கணத்தைக் கடைப்பிடித்துள்ளார் என்றே கூறலாம்.

    1923   : மூன்றாம் பதிப்பு

    1923-இல்

    ‘ஸ்ரீ: எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும், இவை ஸேது ஸம்ஸ்தான வித்துவான் ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் சோதித்துத் தந்தன, மயிலாப்பூர் கம்பர் விலாஸம் வே. இராஜகோபாலையங்கார் பதிப்பு, ருதிரோத்காரி ளு], [விலை ரூ.10.’

    என்பது அவரின் மூன்றாம் பதிப்பாகும்.

    1920–இல் குறைப் புத்தகமாக வெளியிட்ட ராஜகோபாலார்யன் உடல்நிலை சரியானபின் 1923–இல் இரா. இராகவையங்காரைப் பரிசோதிக்கச் செய்து தம் பதிப்பைச் செம்மை செய்துள்ளார்.

    ‘1923 இல் ரா.இராகவையங்காரைப் பரிசோதித்துத் தருமாறு வேண்டுகிறார்; அவரும் பரிசோதித்துத் தர இணங்கிப் பரிசோதித்து 69 பாடல்களைச் (விவர: பின்னிணைப்பு-8:அட்டவணையில் 1923ஆம் ஆண்டிற்குரிய பகுதி) செம்மை செய்கிறார்’ (2010:43)

    1.முகவுரை – ரா. இராகவையங்கார், 2. ஒரு விஞ்ஞாபனம் – வே. இராஜகோபாலன், 3.சோதனைப் பத்திரம், 4.பாடினோர் வரலாறு, 5.தொகுத்தோர் வரலாறு, 6.தொகுப்பித்தோர் வரலாறு, 7.அரசர் முதலியோர் வரலாறு, 8.உரையாசிரியர் வரலாறு, 9.அகநானூற்று ஆராய்ச்சிக் குறிப்பு, 10.ஐந்திணைக்கு உரிய பாடல்கள், 11. இலக்கணக் குறிப்பு, 12.சுருக்கக் குறியீடு, 13.கடவுள் வாழ்த்து, 14.90 பாட்டுக்குப் பழைய உரை + (91-400) மூலம், 15.பாயிரம் 16.செய்யுள் முதற்குறிப்பு அகராதி, 17.அபிதான குறிப்பு அகராதி, 18.பொருட்குறிப்பு அகராதி ஆகியன இடம் பெற்றுள்ளன.

    1926   : நான்காம் பதிப்பு

    1926-இல்

    ‘ஸ்ரீ: எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு களிற்றியானைநிரை மூலமும் முதற்றொண்ணூறு பாட்டிற்குப் பழைய உரையும், இறுதி முப்பது பாட்டிற்கு ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் எழுதிய குறிப்புரையும்’ சென்னை, கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், அக்ஷய ளு சித்திரை மீ, விலை ரூ. 4.’

    என்னும் பதிப்பு வெளிவந்துள்ளது. அப்பதிப்பில், 1.முகவுரை – ராஜகோபாலார்யன், 2.அகநானூறு முகவுரை – இரா.இராகவையங்கார், 3.ஒரு விஞ்ஞாபனம் – வே.இராஜகோபாலன், 4.சோதனைப் பத்திரம் 5.கடவுள் வாழ்த்து, 6.120 பாட்டு, 7.அபிதானக் குறிப்பு முதலியன, 8. சோதனைப் பத்திரம், குறிப்புரை ஆகியன இடம் பெற்றுள்ளன.

    முன்னர் மூலத்தை மட்டும் பதிப்பித்தவர், இப்பதிப்பிலிருந்து உரை எழுதத் தொடங்குகிறார். இதனை ‘இறுதி முப்பது பாட்டிற்கு ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் எழுதிய குறிப்புரையும்’ என்பதிலிருந்து அறிந்துகொள்ளலாம். மேலும், ஒரு முகவுரையையும் ராஜகோபாலார்யன் எழுதுகிறார். ஏனென்றால் உரை எழுத தூண்டுகோலாக இருந்தவர் பற்றியும், பின் கிடைத்த ஏட்டுப் பிரதிகளால் பல திருத்தங்களை மேற்கொண்டுள்ளதைப் பற்றியும் கூறுகிறார். இவற்றைப் பதிவு செய்தல் பதிப்பாசிரியர் கடமை என்பதை அறிந்தே மேலும் ஒரு முகவுரை அவர் எழுதியுள்ளார் எனக் கருதலாம்.

    ராஜகோபாலார்யன், அ. பின்னத்தூர் நாராயணசாமியுடன் இருந்ததால் அவருக்கு உரை எழுதும் அனுபவம் கிடைத்தது. அதனால் உரை எழுத தொடங்கினேன் என்று கூறியுள்ளார்.  அம்முகவுரைப் பகுதியின் ஒரு பகுதி வருமாறு: அ. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்

    இப்பகுதியின் மூலம் பழைய உரையுடன் 30 பாட்டிற்கு ராஜகோபாலார்யன் குறிப்புரை என்று உரை எழுதியும், பின் கிடைத்த சில ஏட்டுப் பிரதிகளால் பல திருத்தங்கள் செய்தும் இப்பதிப்பைப் பதிப்பித்துள்ளார் என்பதை உணர முடிகின்றது.

    1926 ஆண்டு பெயரில் இரு பதிப்பு நூல்கள் வேறுபட்டு கிடைக்கின்றன. இது மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளது.

    எ.கா.  முதல் பாடலில் நவிரல் என்ற சொல்லுக்குப் பொருள் மாறுபட்டுக் காணப்படுதல்

    1. நவிரல் – சூதல் (1926 -அ)
    2. நவிரல் – குலைதல் (1926 -ஆ)

    1933   :  ஐந்தாம் பதிப்பு

    ‘ஸ்ரீ: எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும்’ இவை ‘ஸேது ஸமஸ்தான மகாவித்துவான் பாஷா கவிசேகரர் ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் பரிசோதித்துத் தந்தன,’ ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் பதிப்பு, கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம் மயிலாப்பூர், ஸ்ரீ முகளு], [விலை ரூ. 7-8-0.’

    என்பது இப்பதிப்பின் முகப்புப் பக்கம் ஆகும்.

    இந்நூலில் 1. இரண்டாம் பதிப்பின் முகவுரை – ராஜகோபாலார்யன், 2. முகவுரை – இரா. இராகவையங்கார், 3. ஒரு விஞ்ஞாபனம் – வே. இராஜகோபாலார்யன், 4. செய்யுள் முதற்குறிப்பு அகராதி, 5. அபிதானக் குறிப்பு முதலியன, 6. இலக்கணக் குறிப்பு, 7. சுருக்கக் குறியீடு, 8. கடவுள் வாழ்த்து, 9.முதல் 90 பாட்டுக்குப் பழைய உரையும்+70 பாட்டுக்கு ராஜகோபாலார்யன் உரையும் மற்றவை மூலம் மட்டும் இடம்பெற்றுள்ளன. 10. பாயிரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    இப்பதிப்பு 91-160 பாட்டுக்கு ராஜகோபாலார்யன் உரையைக் கொண்டுள்ளது.

    இரண்டாம் பதிப்பின் முகவுரையில் உள்ள,

    பகுதியைக் கொண்டு,

    1. அகநானூற்று உரை மு. இராகவையங்கார் உரையா?

    ‘121-160 ஆம் பாடல்களின் உரை, மு. இராகவையங்கார் செய்ததாக இருக்கலாமோ என எண்ணத் தூண்டுகிறது என்பர்.

    2.பதிப்பாண்டு எது?

    1935 -இல் அவர் மரணம் அடைகிறார்.  அவர் இறந்த  செய்தி 1933 நூலில் எப்படி இடம் பெற்றுள்ளது? மேற்பகுதி 1933 –இல் இடைச்செருகப்பட்டதா? அல்லது முன்னர் (1933-இல்) அச்சிடப்பட்ட பகுதிகள் 1935 பிறகே அச்சுடன் சேர்த்து நூலாக்கப்பட்டனவா?’என்ற இரண்டு வினாக்களை மா.பரமசிவன் எழுதிய அகநானூறு ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும் (2016) என்ற நூலின் அணிந்துரையில் ஆ.மணி எழுப்பியுள்ளார்.  முதல் கேள்வி, மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளது.

    1933-ஆம் ஆண்டு பதிப்பில் எவ்வித மாற்றமுமின்றி ராஜகோபாலார்யனின் இறந்த செய்தியுடன் கூடிய வாழ்க்கை வரலாற்றை இணைத்து  1935–இல் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். 1935ஆம் ஆண்டுப் பதிப்பு, மறுபதிப்பு என்று பதிப்பாசிரியர் கூறாததன் விளைவே ஆய்வில் குழப்ப நிலை  ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

    1933  : ஆறாம் பதிப்பு

    1933இல் நித்திலக் கோவையையும் பதிப்பிக்கிறார். ஸ்ரீ:எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூன்றாவது நித்திலக் கோவை மூலம், இது ‘ஸேது ஸமஸ்தான வித்துவான் ஸ்ரீ உ.வே.ரா.இராகவையங்கார் ஸ்வாமிகள் பரிசோதித்துத் தந்தது, கம்பர் விலாசம் ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் பதிப்பு, கம்பர்  புஸ்தகாலயம், மயிலாப்பூர்,  சென்னை ஸ்ரீ முகளு  – ஆவணி மீ.

    1. இரண்டாம் பதிப்பின் முகவுரை – ராஜகோபாலார்யன், 2. அகநானூறு -முகவுரை – ரா. இராகவையங்கார், 3. ஒரு விஞ்ஞாபனம் -வே. இராஜகோபாலன், 4.செய்யுள் முதற்குறிப்பு அகராதி, 5. அபிதானக் குறிப்பு முதலியன, 6. இலக்கணக் குறிப்பு, 7. இப்பதிப்பில் எடுத்துக் காட்டிய நூற்பெயர் முதலியவற்றின் முதற்குறிப்பு விளக்கம், 8. மூன்றாவது நித்திலக் கோவை (301-400), பாயிரம்.

    தொகுப்புரை

    1918, 1920, 1923, 1926, 1933(இரு பதிப்பு)ஆம் ஆண்டுப் பதிப்புகள் ஆறும் வே. ராஜகோபாலாரியனால் சிற்சில மாற்றங்களோடு பதிப்பிக்கப்பட்டுள்ளன.  

    இவற்றில் 1918ஆம் ஆண்டுப் பதிப்புஅகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதி, MADRAS, KAMBAR VILAS BOOK DEPOT, MYLAPORE, 1918 ’ என்ற முகப்பு பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் கிடைக்கவில்லை. பதிப்பகத்தைக் கொண்டே முதல் பதிப்பாசிரியர் வே. ராஜகோபாலார்யன் என்றும், அவர் எழுதிய  ‘ஸ்ரீ பொன் ஆடு’ என்ற நூல் வழி 120 பாடல்களைக் கொண்டது இப்பதிப்பு என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

    1920ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + மூலம்) எவ்வித முகவுரையும் இல்லாமல் வெளிவந்ததற்கு உடல்நலமே காரணம் என்று 1923ஆம் பதிப்பில் கூறுகிறார்.

    1923ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + மூலம்) 18 தலைப்புகள் கொண்டு ஒரு முழுமையான பதிப்பாக அமைகிறது.

    1926ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + 30 பாட்டுக்கு குறிப்புரை, களிற்றியானை நிரை மட்டும்) வே.ராஜகோபாலார்யனைப் பதிப்பாசிரியராகவும், 30 பாட்டுக்குக் குறிப்புரை எழுதியதால் உரையாசிரியராகவும் அறிமுகப்படுத்துகிறது.

    1926 ஆம் ஆண்டினையுடைய  இரு பதிப்பு நூல்கள் கிடைக்கின்றன. இந்நூல்கள், பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளன.

    1933ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + 91 இலிருந்து 60 பாட்டுக்கு உரை + மூலம்) 10 தலைப்புகளைக் கொண்டுள்ளது. இப்பதிப்பின் முகவுரையைக் கொண்டு மு. ராகவையங்கார் உரை எழுதியிருக்கலாம் என்ற ஐயம் ஏற்படுகிறது. இது மேலாய்வுக்குரியது. இவ்வாண்டிலே நித்திலக்கோவையையும் பதிப்பித்துள்ளார்.

    1933 ஆம் ஆண்டு பதிப்போடு ராஜகோபாலார்யன் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றதைத் தவிர்த்து, வேறு எவ்வித மாற்றமுமின்றி 1935–இல் மறுபதிப்பு வெளிவந்துள்ளதை அறிய முடிகிறது.

    அடிக்குறிப்பு

    இரண்டாவது கேள்வி குறித்து மா. பரமசிவன் அவர்களை நேரில் சந்தித்தபோது, என்னிடம் உள்ள ராஜகோபாலார்யன் பதிப்பு நூலில் வாழ்க்கை வரலாறு பகுதியே இல்லை. நீங்கள் எப்படி கொடுத்தீர்கள் என்று கேட்டேன். நான் உ.வே.சா. நூலகத்திலிருந்து பெற்ற நூலில் அச்செய்தி இடம் பெற்றுள்ளது என்று கூறி அவரிடமுள்ள அகநானூறு நூல்களைப் படியெடுத்து தந்துதவினார்.  நான் வைத்துள்ள அந்தப் படியை அவரிடம் காட்டினேன். இந்நூல் எனக்குக் கிடைக்கவில்லை என்று கூறிப் பின் என் கருத்து ஏற்கும் வகையில் உள்ளது என்றார்.

    இது குறித்து ஆ. மணி அவர்களிடமும் தெரிவித்தேன்.  அப்போது, ஒரு படப்படியில் (pdf)  உள்ள நூல் அவர் இறப்புக்குப் பின் இராஜகோபாலார்யன் புகைப்படத்துடன், அவர் வாழ்க்கைக் குறிப்பைத் தனியே அச்சிட்டு முன்பகுதியில் இணைத்து, 1935-இல் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே நீங்கள் எழுப்பிய வினாவுக்கு விடையாக இருக்கும் என்றும் கூறினேன்.  அதற்கு அவர் உன் கருத்து ஏற்கும் வகையில் இருந்தாலும், ராஜகோபாலார்யன் பதிப்புகளின் உண்மைப் படிகளைப் பார்த்த பிறகே உறுதி செய்ய முடியும் என்று கூறினார்.

    துணைநூல் பட்டியல்

    1. ஸ்ரீ அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதியும் இரண்டாம் பகுதியும், Madras: KAMBAR VILAS BOOK DE OT, Mylapore,1920.
    2. இராஜகோபாலார்யன் வே. (பதி.), எட்டுத்தொகை ஆகும் அகநானூறு மூலமும் உரையும், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், சென்னை, 1923.
    3. ராஜகோபாலார்யன் வே. (பதி.), ஸ்ரீஎட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு முதலாவது களிற்றியானைநிரை மூலமும் முதற்றொண்ணூறு பாட்டிற்குப் பழைய உரையும் இறுதி முப்பது பாட்டிற்கு ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் எழுதிய குறிப்புரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், சென்னை, 1926.
    4. ராஜகோபாலார்யன் வே. (பதி.), ஸ்ரீஎட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், சென்னை, 1933.
    5. பரமசிவன் மா., அகநானூறு ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், காவ்யா கோடம்பாக்கம், சென்னை, 2016.
    6. பரமசிவன் மா., அகநானூறு பதிப்பு வரலாறு (1918 – 2010), காவ்யா கோடம்பாக்கம், சென்னை, 2010.
    7. பரமசிவன் மா., அகநானூற்றுப் பதிப்புப் பின்புலம், காவ்யா கோடம்பாக்கம், சென்னை, 2012.
    8. ஜானகி இரா., சங்க இலக்கிய பதிப்புரைகள், பாரதி புஸ்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை, 2010.
    9. ஏவா வில்தன், களிற்றியானைநிரை, EFEO & IFP, புதுச்சேரி, 2018.

    =========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை [Peer Review]:

    சங்க இலக்கியங்களில் நெடுந்தொகை நானூறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவது அகநானூறு. 1918ஆம் ஆண்டு முதல் வே.இராஜகோபால ஐயங்கார் அவர்களால் அகநானூறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுரையாளர் இராஜகோபால ஐயங்காரின் அகநானூற்றுப் பதிப்புகள் அமைந்துள்ள முறை, வெளியிடப்பட்டுள்ள ஆண்டுகள், பதிப்புகளின் அமைப்பு ஆகியன குறித்து அறிமுகப்படுத்துகின்றார். இவர் 1918 முதல் 1933 வரையில் வெளிவந்துள்ள வே.இராஜகோபால ஐயங்காரின் அகநானூற்று பதிப்புகளைத் தனித்தனியே விளக்கியுள்ளார். வே.இராஜகோபால ஐயங்காரின் பதிப்பாக்கப் பின்புலத்தில் ரா.இராகவையங்கார் செயல்பட்டுள்ளார் என்பதை இவரது பதிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

    – வே. ராஜகோபாலார்யன் செய்த அகநானூற்றுப் பதிப்புகளை அறிமுகம் செய்வதும், பதிப்பாசிரியர் – பதிப்பாண்டுகளில் உள்ள சிக்கல்களை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

    – 1926ஆம் ஆண்டுப் பெயரில் இரு பதிப்பு நூல்கள் வேறுபட்டுக் கிடைக்கின்றன. இது மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளது.

    – ‘121-160 ஆம் பாடல்களின் உரை, மு. இராகவையங்கார் செய்ததாக இருக்கலாமோ என எண்ணத் தூண்டுகிறது என்பர்.

    – 1926 ஆம் ஆண்டினையுடைய இரு பதிப்பு நூல்கள் கிடைக்கின்றன. இந்நூல்கள் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளன.

    ஆய்வாளர் மேற்கண்ட கேள்விகளையும் ஆய்வுச் சிக்கல்களையும் கட்டுரையில் நுட்பமாக முன்வைக்கின்றார். ஆனால் அவற்றிற்கான முழுத் தீர்வைக் கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்தவில்லை.

    இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகள்தோறும் முகவுரை பகுதியில் முன்வைக்கின்ற கருத்துகளை, தலைப்புகளின் அடிப்படையில் மட்டும் கட்டுரையாளர் தொகுத்துத் தருகின்றார். அத்தலைப்புகளுக்குள் முன்வைத்துள்ள கருத்துகள் குறித்த கட்டுரையாளரின் பார்வை, கட்டுரையில் வெளிப்படவில்லை

    வே.இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளை அறிமுகப்படுத்துவதாகவே கட்டுரை பெரிதும் அமைகின்ற காரணத்தினால் ஆய்வுக் கட்டுரையாக வெளியிட இயலாது. ஆயினும், ஆய்வாளரின் உழைப்பையும் ஈடுபாட்டையும் கருத்திற் கொண்டு இக்கட்டுரையினை இலக்கியக் கட்டுரைப் பகுதியில் வெளியிடுகிறோம்.

    =========================================================

    Share
  • படக்கவிதைப் போட்டி 215-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 215-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கிளைமீது அமர்ந்திருக்கும் பால்வண்ணக் கொக்கைக் கலைநயத்தோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் பார்கவ் கேசவன். இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 215க்கு அளித்துள்ளார் சாந்தி மாரியப்பன். பார்கவுக்கும் சாந்திக்கும் என் நன்றிகள்!

    ”கண்ணைக் கவர்கின்ற கொக்கின் வெண்ணிறத் தோற்றமானது மாரிக்காலத்து ஆம்பல் மலரை ஒத்திருக்கின்றது” என்கிறது சங்கநூலான நல்ல குறுந்தொகை.

    ”மாரி யாம்ப லன்ன கொக்கின்…”  (குறுந்: 117)

    கொக்கினைப் பற்றிப் பாப்புனையக் காத்திருக்கும் பாவலர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன் கவிபடைக்க!

    ”காட்டைக் கொளுத்தித் தன் கூட்டை அழித்துவிட்ட மனிதனிடம் தான்பட்ட பாட்டைக் கூறும் கொக்கின் சொற்கள் அவன் செவியில் ஏறுமா?” என்று கேட்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கேட்குமா…

    மரங்களை வெட்டி
    மனிதன்
    மழையைத் தடுத்துவிட்டான்..

    காட்டைக் கொளுத்திக்
    கொக்கின்
    கூட்டைக் கலைத்துவிட்டான்..

    மீன்கள் வாழும்
    குளங்களைத் தூர்த்தே
    மாடிவீடுகள் கட்டிவிட்டான்,
    கொக்கின் பிழைப்பில்
    மண்ணைப் போட்டுவிட்டான்..

    பட்டமரக் கிளையிலிருந்து
    கொக்கு
    பட்ட பாட்டைக்
    கூறுவது
    கேட்குமா மனிதன்
    காதுகளில்…!

    *****

    ”பற்றற்ற எதிர்பார்ப்பில் தனித்துத் திரிதலில் அலுப்பேதுமில்லா இக்கொக்கு, நாளைய பறத்தலின் நம்பிக்கையோடு காத்திருக்கின்றது” என்கிறார் முனைவர் ம. இராமச்சந்திரன்.

    காத்திருத்தலின் அதீத சுகத்தில்
    போனவை திரும்புவதில்லை
    வருவதில் பற்றற்ற எதிர்பார்ப்பில்
    தனித்து அலைந்து திரிதலில்
    அலுப்பேதும் அருகில் இல்லை
    கூட்டமாகப் பறந்து திரிந்தாலும்
    தனி யுலகின் ஏமாற்றங்களும் யதார்த்தங்களும்
    யார் மீதும் குறை சொல்லாத
    வாழ்தலின் நிறைவு
    நாளைய பறத்தலின் நம்பிக்கையில்!

    *****

    ”என்றோ வரப்போகும் வசந்தத்தை வரவேற்கவும், வெள்ளத்து நீரில் துள்ளி வரப்போகும் உறுமீனைக் கொத்தவும் காத்திருக்கின்றது கொக்கு” என்று பேசும் பாவினைப் படைத்திருக்கின்றார் திருமிகு. சக்திப்ரபா.

    கொக்கு ஒன்று காத்திருக்குது
    அதற்குப் பரிச்சயமில்லா உலகம்
    நீர்நிலை தேங்க இயலா நிலம்
    அக்னிப் பிழம்பில் சுட்டுப்போன சுடுவெளி
    இலைகளும் தழுவாத பட்டமரம்
    பசுந்துளிர்களைப் பறிகொடுத்த கிளைகள்
    மலர்களின் மணம் பரப்ப மறந்து போனாலும்,
    என்றோ வரப்போகும் வசந்தத்தை வரவேற்று
    வெள்ளத்து நீரில் புரண்டு வரப்போகும்
    உறுமீனுக்கென
    பாவம் கொக்கு ஒன்று காத்திருக்குது!

    *****

    ”பறவைகளும் விலங்குகளும் நிறைந்திருந்த கானகம் நீரின்றி வறண்டுபோனதால் மகிழ்வாய் மீனுண்ட கொக்கு இன்று வான்நோக்கி அமர்ந்திருக்கின்றது மழைக்காக!” என்றுரைக்கின்றார் திரு. சுந்தர்.

    தனிமை
    நினைவுகளின் சாரலில்
    சிறகடிக்கிறேன்
    தனிமையின் தாகம் தணிக்க
    நினைவுகளின் ஈரமே மிச்சம்!
    வசந்தகாலங்கள் வாசல் தெளிக்க
    வண்ணமயில்கள் கோலமிட
    வண்டுகளும் பூச்சிகளும்
    ரீங்காரமிட
    காகம் கரைய
    பருந்து வட்டமிட
    ஆந்தையின் அலறலில்
    அறிவிப்புமணி அலறடிக்க
    மைனாவின் மெல்லிசை
    தேன் சிந்த
    வானரங்களும் வௌவால்களும்
    களிநடனமாட
    நரியின் ஊளையிலும்
    புலியின் உறுமலிலும்
    புள்ளி மான்கள் பாய்ந்தோட
    விண்ணைப் பிளக்கும்
    யானையின் பிளிறலையடுத்து
    சிங்கத்தின் கர்ஜனையில்
    நிசப்தம் சிறிது நீடிக்கும்
    ஆரவாரம் மீண்டும் ஆர்ப்பரிக்கும்
    அருவியின் வீழ்ச்சியும்
    ஓடிய நீரோடைகளும்
    தேங்கிய குன்றுகளும்
    பசையற்றுப் போனதேனோ…?
    வனத்தின் வாரிசுகள்
    தாகவேட்கையில் திரிவதேனோ….?
    அறிவற்ற மனித மிருகத்தின்
    மரங்கள் வேட்டைதான் காரணமோ…?
    நீர் நிலையில் ஊன்றிய
    என் கால்களும்
    மீன்களை நோக்கிய
    என் கழுத்தும்
    மழையின் வரவை நோக்கி
    பட்டமரத்தில் உச்சிக்கிளையில்
    விண்ணை நோக்கிய
    காத்திருப்பு மேன்மேலும் தொடர்கிறது…!

    கொக்கினை வைத்து நம் வித்தகக் கவிஞர்கள் வித்தாரக் கவி படைத்திருக்கின்றனர் நன்று! அவர்களுக்கு என் பாராட்டுக்கள் சேரட்டும் சென்று!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    இலைகள் எல்லாம் கிளைகளின் உறவறுத்தாயிற்று..!
    பசுந்தளிர்களை மீண்டும் பிரசவிக்க இயலாது பட்டமரமாயிற்று!
    இருந்தும்…வெள்ளைநிறப் பூவொன்று
    இங்கே விரிந்திருக்கும் விந்தையென்ன…?
    முற்றும் இழந்தபின்னும் கிளை
    கொக்கைத் தாங்கிநிற்கும் கோலம் புரிகிறதா…?
    மரம் இறந்தும் வாழ்கிறது…!
    மனிதம்…? இரக்கமின்றிச் சாகிறது!

    ”கிளைகளும் இலைகளும் உறவறுத்து, பட்டுப்போய்விட்ட மரமோ பால்வெள்ளைக் கொக்கு பூவாய் அமர்ந்திருக்க இடம் கொடுத்ததனால் இறந்தும் வாழ்கின்றது! இயற்கை நேயமற்று வனமழிக்கும் மனிதமோ இரக்கமின்றிச் சாகின்றது!” எனும் புதிய சிந்தனையைத் தன் கவிதையில் பதியம் போட்டிருக்கும் திருமிகு சத்யாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.   

     

     

    Share
  • பறையரை அவமதித்த அரையர்

    பறையரை அவமதித்த அரையர்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    பண்டைய தமிழக அரசியலில் நான்கு அதிகார அடுக்குகள் இருந்தது, கல்வெட்டுகள் மூலம் தெள்ளப் புலனாகின்றது. அவை முறையே வேந்தன்(emperor). அவன் கீழ் மன்னன்(king). மன்னன் கீழ் அரையன்(duke). அரையன்  என்ற அரசன் கீழ் கிழான்(knight) அல்லது கிழார் கோன் என்பவாம். தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வேந்தர் 4-5 பேர் இருந்தால் மன்னவர் அதைவிட கூடுதலாக 15-20 பேர் வரை இருந்தனர். அரையர்கள் 40-50 பேருக்கு மேல் இருந்தனர். கிழார்கள் 150-200 பேருக்கு மேல் இருந்தனர். கல்வெட்டுப் பதிவுகளில் நிலம் விற்று ஆவணமாகும் போது அதை வேளாண் எனும் அரையர்களும் கிழார்களும் ஒப்பமிட்டு ஏற்பிசைவு தந்ததை வைத்து மேற்சொன்ன கூற்றைச் சரி என்று உணரலாம்.

    வேளாண் என்னும் அரையர்களான அரசர்கள் இக்கால் ஆண்ட பரம்பரை, ஆளப்பிறத்தவர், அடக்கி ஆண்டவர், மண்ஆண்டவர், பாராண்டவர் என்று மார்தட்டிக் கொள்ளும் சாதிகளில் கலந்துவிட்டது தெரிகின்றது. குறிப்பாக, வெள்ளாளர், துளுவ வேளாளர், படையாச்சி, கொங்கு வேளாளர், கள்ளர் முதலாய சாதிகளே அவை. பறையர்கள் சில இடங்களில் கிழார்களாக அல்லது கிழார்களிடத்திலும் அரையர்களிடத்திலும் பாதுகாவலர்களாக (பந்தோபஸ்து), ஊராளிகளாக, படைத் தலைவர்களாக இருந்த போர்க்குடிகளாவர். இதனால் இந்த அரையர், கிழார்களிடத்தில் பறையருக்குப் பல நேரங்களில் அவமதிப்பு நேர்ந்துள்ளது. இந்த அவமதிப்பு பிற்காலத்தே 16-17ஆம் நூற்றாண்டில் தீண்டாமையாக உருப்பெற்றது. மேற்கண்டதை விளங்கிக்கொள்ள சில கல்வெட்டுகள் சான்றாக உள்ளன.

    இக்கால் பறையர்கள் பலர் தமது தீண்டாமைக் கொடுமைக்குப் பிராமணரே பொறுப்பு, காரணம் என்று தப்பும் தவறுமாக எண்ணமிட்டு வருகின்றனர். ஆனால் ஆயுதம் ஏந்தாத, எண்ணிக்கையில் குறைவான பிராமணரால் அவ்வாறு தம்மைத் தீண்டாமையில் ஆட்படச் செய்திட முடியாது என்பதை அவர்களால் சிந்திக்க முடியவில்லை. இதற்குக் காரணம் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னோடிகளாகக் கருதப்படும் அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கர் போன்றோர் பிராமணரை முன்னிலைப்படுத்தியே, பிராமணரை வெறுக்கும்படியாக எழுதியும் பேசியும் பரப்புரை செய்து வந்தது தான். இதைப் பறையர் மட்டுமல்லாமல் பிராமணர் அல்லா பிற சாதிமாரும், அரையர் குடியில் வந்த சாதிகளும் கூட முழுமையாக நம்புகின்றனர். இதனால் தமிழ்ப் பிராமணர், தமிழ்ச் சாதிகளின் வெறுப்பிற்கு ஆளாகி உள்ளனர். எப்படி என்றால் அடுத்த வரும் 500 ஆவது ஆண்டில் ஒரு குழந்தை பிராமண சாதியில் பிறக்கப் போகின்றது என்றால் அதையும் இதே வெறுப்பில்தான் தமிழ்ச் சாதிகளில் பலர் அணுகுகின்றனர். குழந்தை பிறக்கும் என்ற செய்தி மட்டும் தான் உறுதியே தவிர அதற்கு பெயர் இல்லை, அதன் வினை என்ன என்பதெல்லாம் எவருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட நிலையிலும் அதன்மீதும் வெறுப்புக் கருத்து சுமத்தப்படுகின்றது. இது எந்த வகையிலும் பகுத்தறிவின்பாற்படாது என்பதை யாவரும் அறிவர்.   இதைப் பற்றி தமிழ்ச் சாதிகள் கருத்துத் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக ஈண்டு சில கல்வெட்டுகள் ஆராயப்படுகின்றன. இதைப் படித்தாவது தமிழ் மக்கள் இந்த அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கரின் கற்பனைக் கருத்துகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். ஏனென்றால் பறையர்கள் அரையர் குலத்தவரான பண்ணையார்களிடம் தான் வேலை செய்கின்றனர். அவருடைய சுரண்டலுக்கும் ஏச்சிற்கும் பேச்சிற்கும் ஆளாகி அவமானப்பட்டனர் என்ற வகையில் இந்த நிலக்கிழார் சாதிகளிடம் இருந்து விடுதலை பெற்றாக வேண்டும் என்பதை உணர்த்தாமல் பிராமணரை நோக்கி, தப்பாக இம்மக்களை வழிநடத்தியதால் 130 ஆண்டுகாலப் போராட்டம், உழைப்பாற்றல், காலம் எல்லாம் வீணாகிப்போனது.  இன்றுவரை பறையர் இழிவு, குறை தீரவில்லை என்பதே உண்மை.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் அரங்கநாதர் கோவில் உடையவர் சன்னதி எதிரே 4 –ம் பிரகாரத்தில் பொறிக்கப்பட்ட 3 கல்வெட்டுகள்.

    1. ஸ்வஸ்திஸ்ரீ வீற்றிருந்தாந் சேமனாந அகளங்க நாடாழ்வா(ர்)
    2. ற்கு திருவரங்கத்து கைக்கோள முதலிகளில் நாயநான அழகிய ம
    3. ணவாள மாராயநேந் இவற்கு பிந்பு சாவாதே  இருந்தேநாகில் எந்
    4. மிணாட்டியைப் பறையற்குக் குடுத்து எங்கள்ளம்மைக்கு நானே
    5. சிதைந்துள்ளது

    கைக்கோளர் – செங்குந்தப் படைவீரர்; முதலி – தலைவர்; நாயநான – தலைவர்க்கு தலைவனான; மிணாட்டி – மனைவி; அம்மை – தாய்; மிணாளன் – கணவன்; உடன்வேளையாக – in no time, சட்டென்று.

    விளக்கம்:  அழகிய மணவாள மாராயன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தர் படைத்தலைவர்களுக் கெல்லாம் தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அந்தவகையில் இவர் உயிர் துறக்கும் முன்பே நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடும் அல்லாமல் என் தாயை நானே  புணர்ந்தவன் ஆவேன்’’.

    1. ஸ்வாஸ்தி ஸ்ரீ வீற்றி[ரு]ந்தாந் சேமநாந அகளங்க நாடாழ்வாற்கு திருவரங்
    2. கத்துக் கைக்கோளரி லரியாநாந கிடாரத்தரைய னேந் இவற்கு உட
    3. ந் [வே]ளையாகச் சாவக்கடவேநாகவும் இவற்கு பிந்பு சாவாதே இருந்
    4. தேநாகில் எந் மிணாட்டியை பறையற்கு [கு]டுத்து எங்களம்மைக்கு நா
    5. நே மிணாளநாவேந்.

    விளக்கம்:  அரியானான கிடாரத்தரையன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தர் படைத்தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அதனால் உடன்வேளையாக (in no time) இவர் உயிர் துறக்கும் முன்பே அவர் உயிரைக் காப்பதில் நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடும் அல்லாமல் என் தாயை நானே  புணர்ந்தவன் ஆவேன்’’.

    1. ஸ்வாஸ்தி ஸ்ரீ வீற்றிருந்தாந் சேமநாந அகளங்க நாடாழ்வாற்கு
    2. திருவரங்கத்துக் கைக்கோளரில் உலகநாந அழகானைச் சோ
    3. ழ மாராயநேந் இவற்கு உடந் வேளையாகச் சாவக்கடவேநாகவு
    4. ம் இவற்கு பின்பு சாவாதே இருந்தேநாகில் எந் மிணாட்டியைப் 
    5. றையற்குக் குடுத்து எங்கள்ளம்மைக்கு நாநே மிணாளநா
    6. வேந்.

    விளக்கம்: உலகனான அழகானைச் சோழன் மாராயன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தப் படைத்தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’ இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அதனால் உடன்வேளையாக (in no time) இவர் உயிர் துறக்கும் முன்பே அவர் உயிரைக் காப்பதில் நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடு அல்லாமல் என் தாயை நானே  புணர்ந்தவன் ஆவேன்’’.

    மேற்கண்ட மூன்று திருவரங்கக் கல்வெட்டில் மூன்று செங்குந்தர்களான கைக்கோளர்கள் படைத் தலைவர்களாக தனித் தனியே சூளுரை ஏற்றது பொறிக்கப்பட்டுள்ளது. கைக்கோளர் என்போர் பல்லவரது பட்டடைக்குடி / படைக்குடியாக பல்லவர்களால் உருவாக்கப்பட்ட தனி சாதியார் ஆவர். அரையரான அகளங்க நாடாழ்வான் இவர்களை கட்டாயப்படுத்தி எவ்வாறு இழிவாக சூளூரை ஏற்கசெய்துள்ளார் என்பது தெரிந்தாகிவட்டது. பார்வை நூலில் இவர்கள் சாகும்  வரை வேலைக்காரனாக சாவதாக சூளுரை ஏற்பதாக பொருத்தமற்ற விளக்கம் தரப்பட்டுள்ளது. வேந்தர் பெயரும் காலமும் குறிக்காததால் கல்வெட்டின் காலம் என்ன என்று அறிய முடியவில்லை.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 24, பக்கம் 162, தொடர்ச்சியாக மூன்று கல்வெட்டுகள்  (A.R.No 267 to 269 of 1930) 

    விழுப்புரம் மாவட்டம், ஜம்பை, ஜம்பநாதர் கோயில் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ சகலபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவற்கு யாண்டு 11 வது பெண்ணை வடகரை வாணகோப்பாடி நாட்டு செண்பையான வீரராசேந்திர சோ
    2. ழபுரத்து உடையார் திருத்தொந்தோன்றி ஆவுடையனாயனார் தேவதாநம் பெண்ணை தென்கரை குணமங்கலம் பயிற் செய்யும் படிக்கு ஏழாவழ முதல் காசாயம், பொன்வரி, ஆளமஞ்
    3. சி, அன்தராயம் கொள்ளக் கடவதல்லவாகச் சொன்னோம் ஆறகளூருடைய வாணகோவரையன் இராசராச தேவன் வந்நெஞ்ச இராயனேந். இப்படி சன்திராதித்தவரை செய்வதே. இது மாறுவான்
    4.  தன் மிணாட்டியை பரைமாயன்நுக்கு குடுப்பான். இது பன்மாகேசுர இரக்ஷை.

    செண்பை – ஜம்பை; காசாயம் –  காசாக வந்த வரி; ஆளமஞ்சி – நீர்நிலைகள் பேண வரி; அன்தராயம் – நிலவரி அல்லாத அகநாட்டு வரி ; மாறுவான் – இந்த ஏற்பாட்டை மாற்றுபவன்; குடுப்பான் – கொடுத்தவன் ஆவான்.

    விளக்கம்: காடவப் பல்லவன் கோப்பெருஞ்சிங்கனின் 11 ஆம் ஆண்டு ஆட்சியில் (பொ.ஊ.1253) பொன்பரப்பின வாணகோவரையர் வழிவந்த வாணகோ இராசராச தேவன் வன்நெஞ்சராயன் தென்பெண்ணையின் வடகரையில் அமைந்த வாணகோப்பாடி நாட்டு செண்பை கிராமத்தில் அமைந்த திருத்தொன்தோன்றி ஆவுடையார் கோவிலின் தேவதானம் ஆன தென்பெண்ணை தென்கரையில் உள்ள குணமங்கலம் என்ற ஊரில் பயிர் செய்வதற்கு காசாயம், பொன்வரி, அன்தராயம் உள்ளிட்ட  வரிகள் தண்டவேண்டாம் என்று வரிவிலக்கு அளித்தேன் என்கிறான். இந்த ஏற்பாட்டை மாற்றுபவன் தன் மனைவியை பரைமாயன் புணர விட்டுக் கொடுத்தவன் ஆவான். இந்த தர்மத்தை சிவபக்தர்கள் காக்க வேண்டும். பறையர் குறித்து வாணகோ வன்நெஞ்சன் கொண்டிருந்த இழி கருத்து இக்கல்வெட்டில் வெளிப்படுகின்றது.

    பார்வை நூல்: தொல்குடி வேட்டுவர் சமூக ஆவணங்கள், ஆசிரியர் ப. ஆனந்தகுமார், பக்.106

    கோயம்புத்தூர் மாவட்டம், அவினாசி வட்டம், திருமுருகன்பூண்டி முருகநாதர் கோவில்

    ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சொழதேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற திருநல்லியாண்டு 11 வதுக் கெதிராவது புரட்டாதி மாதம் 18 தியதி ஞாயிற்றுக் கிழமை முதல் வாயறைக்கா நாட்டுப் பல்லவிடத்தில் வெள்ளாளன் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலனேன். நாயனார் திருமுருகன்பூண்டி ஆளுடையார்க்கு கோயில் நாயகர்க்கு நாளொன்றுக்கு நாழியரிசி அமுதுபடி செல்வதாக இக்கோயில் காணியுடைய சிவப்பிராமணர் காஸ்ய கோத்திரத்து அவிநாசி முருகனான சீகாழியானும் அவிநாசிமுருகன் உள்ளிட்டாரும் சாந்தாரைக் காப்பான் திருவேங்கடமுடையானும் இவ்வனைவோங்கள். இவ்வச்சு பத்துக் கொண்டு எங்கள் மக்கமக்கள் குடங்கொண்டு கோயில் குடங்கொண்டு கோயில் புகுவான் சந்திராதித்தவரை செல்வதாக. இது பன்மாகேஸ்வர ரட்சை.

    நல்லியாண்டு – முடிசூட்டிய ஆண்டு, வெள்ளாளன் – கிழான் அல்லது அரையன், மாப்புள்ளி – தலைமை மதிப்பீடு செய்வோன், chief assessor, சாந்தாரை – சந்தனக் கல், மக்க மக்கள் – பேரர் வழிப் பேரர்.

    விளக்கம்: கொங்கு சோழன் விக்கிரமசோழன் முடிசூட்டி 11 ஆம் ஆண்டிற்கு எதிர்ஆண்டான 12 ஆம் ஆண்டு ஆட்சியில் (பொ.ஊ.1285) புரட்டாசி மாதம் 18 –ம் நாள் ஞாயிறு தொட்டு வாயறைக்கா நாட்டு பல்லடத்தின் கிழானான வெள்ளாளனிடத்தில் மாப்புள்ளியாக பொறுப்பில் இருக்கும் சோழன் பறையனான தனபாலன் திருமுருகன் பூண்டி இறைவர்க்கு ஒவ்வொரு நாளும் அமுதுபடிக்காக நாழியரிசிக்கு பத்து அச்சு வழங்கினான்.  இக்கோயில் காணியுடைய சிவப்பிராமணர் காசியப கோத்திரத்து அவிநாசி முருகன் சீகாழியான், அவிநாசி முருகன்,  திருவேங்கடமுடையான் ஆகியோர் பத்து அச்சு பெற்றுக்கொண்டு மக்களுக்கு மக்கள் என வழிவழிப் பேரர் காலம் வரை இதைநடத்தி வருவோம் என்று உறுதி கூறுகின்றனர்.

    இதனால் சோழப்பறையன் தனபாலன் கோவிலில் நுழைந்து இறை வழிபாடு செய்துள்ளான் என்று உறுதி ஆவது தீண்டாமை அக்கால் இருந்த்தில்லை என்பது மட்டுமல்ல அவன் தலைமை மதிப்பீட்டாளனாக இருந்துள்ளான் என்பது பறையர் உயர் பொறுப்பில் இருந்தனர் என்பதையும் தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டு பறையர் உயர் பொறுப்பில் இருந்தனர் என்பதற்கு சான்று. இதாவது, நிலம், பயிருக்கு வரி மதிப்பீடு செய்தான் என்பதற்கு சான்று.

    பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடலும், பக். 138

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேசுவரர் கோயில் வடக்குக் கருவறைச் சுவர் 11 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ ஸகாப்தம் ஆயிரத்து ஒரு நூற்று எண்பதின் மேல் செல்லாநின்ற ஸிம்ஹ நாயற்று அபரபக்ஷத்துத்ருதியையும் நா[ய]ற்றுக்கிழமையும் பெற்ற ரேவதி நாள் ஆடையூர்நாட்டு எலியூற்றுக்கு மேற்கும் நம் _ _ _ _ _ _ _  க்கு உள்ளுப்பட்ட நாடும் மலையும் அடிவாரமும் தென்கரை நாடும் மூவரை வென்றநல்லூற்கு மேற்கு சிற்றிங்கை[க்]குக் கிழக்கு உட்பட்ட 
    2.  நாடும் மலையு முட்பட்ட நாடும் இந்த இரண்டு கரைநாட்டுக்கு உள்ளுப்பட்ட நாட்டவரும் நாட்டுநாயகஞ் செய்வார்களும் மன்றாடுவார்களும் பிள்ளைமுதலிகளும் [தனி]யாட்களும் படைநாயகஞ் செய்வார்களும் தனியாள் முதலிகளும் _ _ _ _ _ _ ம்பனாயகரு _ _ _ _ _ லிகளும் கூலிச்சேவகரும் கொந்த விச்சாதிரரும் நவிரமலைத் தென்பற்று நாட்டவரும் நாட்டுமுதலிகளும் வடமலைநாட்டவரும் நாட்டுமுதலிகளு முன்னுப்பட்ட
    3. பலசனத்தோமும் அடிவாரத்து மலையாளரும் மலையாள முதலிகளும் முதுநீர்மலையாளரும் மலையரண்முதலிகளும் செட்டிகளும் வாணிகரும் கணக்கரும் கருமப்பெரும் பன்னாட்டவரும் பன்னாட்டு முதலிகளும் பொற்கொ[ற்ற] கைக்[கோளரும் ஆண்]டார்களும் சிவப்ராஹ்மணரும் மன்றாடிகளு முவச்சரும் தென்கரைநாட்டு வடதலைநாட்டவரும் தென்மலை நாட்டாரும் உட்பட்ட நாட்டவரும் தெல்ல _ _ _ _ _ புலவ[ரு]ம் பண்
    4. ணுவாரும்  நியாயத்தாரும் பன்னிரண்டு பணிமக்களு முள்ளிட்ட பெரும் வேடரும்   பாணரும் பறையரும் பறைமுதலிகளும் செக்கிலியரும்      இறுளரு முள்ளிட்ட அனைத்துச்சாதிகளு[ம்] அந்தணன் தலையாக அரிப்பான் கடையாக உள்ளுப்பட்ட அனை[த்}துச்சாதி[மா]ற்க்கு தெ _ _ _ _ ல்லாரும் __ _ _ _ _ [ண]ம் பண்ணினபடியாவது எங்கனாயனாரமட்டன் கரிகாலச்சோழ ஆடையூர் நாடாழ்வார் திருவிராச்சியம் பண்ணி எழுந்தருளி[இ]ருக்க. இவர் ஏவி அருளினபடியே இவர்கள் திருத்தம்பி
    5. யார் நாயனார் நரசிங்கபன்மர் செய்து எழுந்தருளியிருக்க நாயனார் நரசிங்கபன்மர் மகன் பெரியுடையானும் இவன் தம்பி அர[சக]ணாயனும் கருப்புக்கட்டி நாயக்க[ருட]னே கூடி எங்கள் நாயன்[மாற்]கும் எங்களுக்கு[ம்] பகைதேடிக் கிழற்றுப்போயிருக்க இவர்கள் செய்த பிழையும் பொறுத்து இவர்கள் கூச்சந்தீ[ர்த்து]த் திருவெழுத்துச்சாத்தின திருமுகமும் குடுத்துச் செட்டிபுணை[ப]ட்டு அமைத்துவிட்ட இடத்து திருமுகமு மறுத்து எங்கள் நாயன்மாற்கு
    6. ம் எங்களுக்கும் பகைதேடி வெறுப்பான பேருடனே கூடி எங்களுக்குப் பகையாகையினாலும். இவர்கள் பிரிதிகங்கர் வ[ழியி]லுள்ள பேராகையாலும் இப்பெரியுடையாநும் அரசகணாயனும் இவர்கள் [த]ம்பி அமட்டாழ்வானும் எங்கள் நாயன்மாற்கு இராசத்துரோகிகளும்      நாட்டுத் துரோகிகளுமாய் இவர்கள் மூவரையும் பெண்டிழந்தான் கூட்டத்தில் ஒன்றாகப் புற[க்]கடித்தோம். பிரிதிகங்கர் மக்கள் எங்கள் நாயன்
    7.  மாற்குப் புகுந்த நம்பிராட்டியார் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளை அரசுக்குக் கொள்ளக் கடவதல்லவாகவும் அல்லாத பிள்ளைகள் பூர்வர்முறையிலே இராச்சியம் பண்ணப் கடவர்களாகவும் இம்மண்[ணு]ம் மலையு முள்ளதனையும் எங்கள் [ம]க்கள் மக்கள் வழிவழி இப்பெரியுடையானையும் அரச[கணா]யனையும் இவர்கடம்பி [அ]மட்டாழ்வாரையும், இவர்கள் மக்களி[ல்] [வழி]வழி ஒருத்தரையும் இம்மண்ணில் புகுத ஒட்டோம்
    8. இவர்களுக்கு இடங்குடுப்பதுஞ் செய்யோம், இடங்குடுப்பாரோடு கூடுவதுஞ் செய்யோம். இவர்க[ள்] மூவரும் இம்மண்ணுக்கு உரியரென்று சொல்லு[த]ல் சொல்லுவ[ர்க்கு] இடங்குடுக்[கச்] செய்யக்கடவோமு மல்லோம். இவர்களுக்குக் கீழோலை விடுதல், இவர்களைக் கா[த்]தல், இவர்க[ள் _ _ _ _ _] சருடன் பேசுதல்  செய்தாருண்டாகில் இராசத்துரோகிகளுமாக்கி நாயிலும் பன்றியிலும் கடையா[க ரு]த்தறுக்கக்கட _ _ _ _ கவும். இவர்கள் பெண்டுகளை மூக்கு மூலையுமறுத்துவிட
    9.  க்கடவோமாகவும். இவர்கள் பக்கல் பெண்டுகள் போனவன் குடியாக இப்படி [ஆகச்] செய்யகடவோமாகவும் இவர்கள் பக்கல் போன பேரைப் ப[ணி]செய் மக்[களை]  இட்டுக் கொன்றுபோடக்  கடவோமா[க]வும் இப்படிக்கு நாங்க ளனைவரும் பூணை ஓலைப்பாடியு[ம் ந]ந்திமங்கலமும் உள்ளுப்பட்ட இந்த அனைத்து[ங்] _ _ _ _ _இப்படி நிலைமைக் _ _ _ _ள் ப்ரமாணமிட்டோம்.
    10. இப்படி அற்றுமறவும் செய்திலோமாகில் வல்லவரையன் சத்தியம் தங்களம்மைக்குத் தானே மிணாளன் அசல வன்னியர் குதிரைக்குப் புல்லுப்பறிக்கி[ற] ப[றை]யற்கு எங்கள் பெண்டுகளைக் குடுத்தோமாகில் படுக்க[த] ஒலைப்பாடிக்குத் தப்பினாருண்டாகில் செயங்கொண்ட நாச்சியார் கோயிலில் செவ்வாய்க்கிழமையில் பட்ட[ஆ]டுபட்டது படக்கடவோமாக செயங்கொண்ட நாச்சியார் திரி_ _ _ _ _ தமிட்டுச் சிங்கநாயற்று இருபத்துமூன்றா
    11.  ந் தியதியான பஞ்சமியும் கஸ்வதியும் பெற்ற செவ்வாய்க் கிழமை நாள் ஆடுவெட்டிப் பூதமுதை[த்]து நிலைமை ப[ண்ணி] இப்படிக்குத் [தி]ருஇடவந்துறை நாயனார் கோயிலிலே கல்லும் வெட்டிக்குடுத்தோம் இவ்வனைவோம். இக் கல்வெட்டினபடிக்குத் தப்பினவன் கெங்கை குமரியிடைக் குராற்பசுக் கு[த்]தினவன் பாவங்கொள்வான். இப்படிக்கு இவனைத்து நாட்டவரும் பணிக்கக் கல்லுவெட் _ _ _ _ ய நாட்டாசாரியனேன். இவை என்னெழுத்து.

    மலையாளர் – மலையகத்து வாழ்வோர், பெண்டிழந்தான் – கம்மனாட்டி, புறக்கடித்தோம் – புறக்கண்ணித்தோம், ஓடவிட்டோம், பூரவர்முறை – தந்தைக்கு பின் மூத்த மகன் நாடாளுதல் முறை. இராச்சியம்  பண்ணு – அரசாளுதல், கீழோலை – நட்புத் தூது, அற்றுமறவும் – செய்யாமல் மறத்தல்.

    விளக்கம்: வேந்தன் பெயர் குறிப்பிடாத சக ஆண்டு 1180, பொது ஆண்டு 1258 இல் பொறித்த கல்வெட்டு. அமட்டன் கரிகாலச் சோழ ஆடையூர் நாடாழ்வான் என்ற அரையன் ஆட்சி செய்துவர இவன் ஏவியபடி இவனுடைய தம்பி நரசிங்கபன்மன் ஆட்சி செய்துவர, இவனது மூன்று மகன்கள் பெரியுடையான், அரசகணாயன்,  அமட்டாழ்வான் ஆகியோர் கருப்புக்கட்டி நாயகனுடன் சேர்ந்து கொண்டு இந்த சூளுரையை செய்யும் ஊரவர்க்கும் ஆடையூர் நாடாழ்வானுக்கும் இடையே பகையை வளர்த்து விடுகின்றனர். இந்த பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவர் பிரிதிகங்கரைசருடன் நட்பு கொண்டவர்கள் என்பதோடு ஆடையூர் நாடாழ்வானுக்கு இராச துரோகிகளும் நாட்டுத் துரோகிகளும் ஆனதினால் இம்மூவரையும் பெண்டிழந்தான் (மனைவி இழந்தான்) கூட்டத்தோடு ஒன்றாக்கி சூளுரைப்போர் புறக்கடித்தனர். பிரிதிகங்கரைசர் பிள்ளைகள் ஆடையூர் நாடாழ்வான் பிராட்டிக்கு பிறந்த பிள்ளைகளை மகுடம் ஏற்கமுடியாதவராக ஆக்கி அப்படி அல்லாத பிள்ளைகளை பூர்வர்முறையில் அரசாளவைத்துவிட்டனர். அதனால் இம்மண்ணும் மலையும் உள்ள காலம் வரை, எமக்குப் பிள்ளைகள் அவர்கள் பிள்ளைகள் என வழிவழியாக பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவரையும் இவர்கள் பிள்ளைகள் வழிவழி ஒருவரையும் இம்மண்ணில் புகவிடமாட்டோம், இவர்களுக்கு இடம் கொடுக்கவும் மாட்டோம். இவர் மூவருக்கு இடங் கொடுப்பவரோடு நட்பு கொள்ளமாட்டோம். இம்மூவர் இம்மண்ணுக்கு உரியவரென்று சொல்பவருக்கும் இடம் கொடுக்க மாட்டோம். இவர்களுக்காக தூதுபோதல், இவரைக் காத்தல், இவருடன் பேச்சு வைத்திருப்போர்  ஆகியோரை இராசதுரோகிகளாக்கி நாயினும் பன்றியினும் கடையராக எண்ணி அத்தகையோர் மனைவியர் மூக்கு முலைகளை அறுத்துவிடுவோம். இம்மூவருக்காக பணிசெய்யும் மக்களை கொன்றுபோடுவோம். இப்படிக்கு பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் உள்ளிட்ட ஊர் மறவர்கள் நாங்கள் மேற்கண்ட அனைத்தையும் பிரமாண செய்தோம். அப்படிச் செய்யாமல் மறந்துவிட்டோமானால் எங்கள் தாயை யாமே புணர்பவர் ஆனோம் அதோடு அசல வன்னியர் குதிரைக்கு புல்பறிக்கும் பறையருக்கு எமது மனைவிமாரை புணர விட்டவர் ஆனோம். படுக்கத ஓலைப்பாடிக்கு தப்பிச்செல்வோர் இருந்தால் செயங்கொண்ட நாச்சி கோவிலில் செவ்வாய்க் கிழமை பலிஇடப்படும் ஆடுபோல படுவோமாக என்று செய்ங்கொண்ட நாச்சியார் திருமுன்பு சபதமிட்டோம். சிங்க ராசி நிகழும் ஞாயிற்றுக் கிழமை 23 ம் நாள். பஞ்சமியான செவ்வாய்க் கிழமை ஆடுவெட்டி பூதம் உதைத்தோம். இப்படிக்கு திருஇடவந்துறை இறைவர் கோவிலில் நாங்கள் கல்வெட்டினோம். இக்கல்லில் உள்ளது படி நடவாதவன் கங்கைக்கும் குமரிக்கும் இடை வாழ்பவர் குராற்பசுவை கொன்று கொண்ட பாவத்தை கொள்வானாக.

    ஆடையூர் நாடாழ்வான் தன் பிள்ளைகள் சிறியவராய் இருப்பதால் தன் தம்பியை அரசனாக பதவி ஏற்க செய்துள்ளான், அவன்பின் தன் பிள்ளை அரசராக பதவி ஏற்க வேண்டும் என்ற புரிந்துணர்வோடு. ஆனால் தம்பி நரசிங்கபன்மன் பிள்ளைகள் தந்தைக்கு பின் மூத்தபிள்ளை என்ற முன்னைய வழிமுறைப்படி பிரிதிகங்கர் மகன்களின் உதவியோடு தாமே அரசராக ஆனதாகத் தெரிகின்றது. இதை எதிர்த்து தம் நாயகன் மீதான தமது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வண்ணமாக பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் வாழ் மறவர்கள் மேற்கண்டபடி  சூளுரை செய்துள்ளனர். அரசியல் அறியாத வெகுளி மக்கள் அவர்கள் என்று தெரிகின்றது. இவர்கள் பறையரை இழிவாக மதிப்பிட்டது படைத்துறையில் அப்படியாக இருந்த ஒரு சொல்வழக்கைப் நமக்குப் புலப்படுத்துகின்றது. இக்கல்வெட்டில் சாதி குறிப்பிடப்படுவது சாதிமுறை 13 ஆம் நூற்றாண்டிலேயே வலுப்பெற்றுவிட்டதைக் காட்டுகின்றது.மொத்தத்தில் கல்வெட்டுச் செய்து அரிய செய்திகளை நமக்கு வழங்குகிறது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 7, பக். 49-50, (A.R.No 105 of 1990) 

        

    Share