Blog

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53

    53. சுற்றந் தழால்

    குறள் 521:

    பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
    சுற்றத்தார் கண்ணே உள

    ஒருத்தன் ஏழையான பொறவு கூட அவனுக்கும் தங்களுக்கும் முன்னால இருந்த ஒட்டுஒறவ நெனப்புல வச்சி பேசுத கொணம் சொந்தக்காரங்களுக்கு  உண்டு.

    குறள் 522:

    விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவுந் தரும்

    ஒருத்தனுக்கு எப்பமும் கொறையாத நேசத்தோட சொந்தபந்தம் அமைஞ்சிடுச்சின்னா அது அவனுக்கு வளர்ச்சி கொறையாத செல்வங்கள் பலதையும் கொடுக்கும்.

    குறள் 523:

    அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
    கோடின்றி நீர்நிறைந் தற்று

    சொந்தக்காரங்களோட மனசு விட்டு பேசிப் பழகாதவனோட வாழ்க்க, கரையில்லாத குளத்துல தண்ணி நெறஞ்சது கணக்கா ஒபயோகமில்லாமப் போயிடும்.

    குறள் 524:

    சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
    பெற்றத்தாற் பெற்ற பயன்

    சுத்திச்சூழ இருக்குத பாசமான சொந்தக்காரங்களோட வாழுத வாழ்க்க தான் ஒருத்தன்கிட்ட இருக்க காசுபணத்தோட ஒபயோகம்.

    குறள் 525:

    கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
    சுற்றத்தாற் சுற்றப் படும்

    வேண்டியதக் கொடுக்குத குணமும், நயமா பேசுத கொணமும் இருக்கவனச் சுத்தி சொந்தக்காரங்க இருந்துக்கிட்டே இருப்பாங்க.

    குறள் 526:

    பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
    மருங்குடையார் மாநிலத் தில்

    தேவைப்படுதவங்களுக்கு அள்ளிக் கொடுத்து கோவப்படாம ஒருத்தன் இருந்தாம்னா அவனப்போல சுத்திவர சொந்தபந்தம் இருக்கவன் ஒலகத்துல இல்லன்னு சொல்லிப்புடலாம்.

    குறள் 527:

    காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள

    தனக்கு சாப்பிடக் கெடச்சத ஒளிச்சு வையாம தன் இனத்தக் கூப்பிட்டு சாப்பிடுத காக்கா கணக்கா கொணம் உள்ளவுகளுக்கு மட்டுமே ஒலகத்துல செல்வம் உண்டு. .

    குறள் 528:

    பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
    அதுநோக்கி வாழ்வார் பலர்

    ராசா எல்லாரையும் ஒண்ணுபோலப் பாக்காம அவனவன் சிறப்புக்கு ஏத்தபடி பாத்தா அத விரும்பி அவரப் பிரியாம வாழுத சுற்றத்தார் பலர் இருப்பாங்க.

    குறள் 529:

    தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
    காரண மின்றி வரும்

    ஏதோ ஒரு காரணத்துக்காக பிரிஞ்சு போன சொந்தக்காரவுக அந்தக்காரணம் பொருந்தாது னு தெரிஞ்ச பொறவு திரும்ப சொந்தம் கொண்டாட வருவாக.

    குறள் 530:

    உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
    இழைத்திருந் தெண்ணிக் கொளல்

    தன்னவுட்டு பிரிஞ்சு போயிட்ட  ஒருத்தன் ஏதோ ஒரு காரணம் சொல்லிக்கிட்டு திரும்பி வந்தாம்னா அவன சோதிச்சு பாத்த பொறவுதான் சேத்துக்கிடணும்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • இதோ இதோ சிவலோகம்

    இதோ இதோ சிவலோகம்

    மீ.விசுவநாதன்

    இதோ இதோ சிவலோகம் – என்
    இதயம் அவனின் பனிமேகம்
    நிதானமாய் ஓங்காரம் – அதில்
    நின்று காண்பேன் சிவரூபம்.

    மின்னலை வீசிடுவான் – கார்
    மேக மாகப் பொழிந்திடுவான்
    என்னிலைத் துடிப்பறிந்து – மன
    இம்சை அலம்பித் துடைத்தெறிவான்

    நந்தியை நகரவைத்து – சிவ
    நடனம் காண அருள்புரிவான்
    புந்தியில் புரியவைத்து – என்
    பொல்லா “நானை” விரட்டிடுவான்.

    Share
  • விடையறியா வினாக்கள்

    விடையறியா வினாக்கள்

    -சக்தி சக்திதாசன்

    நான் இங்கிலாந்துக்குள் நுழைந்து நாற்பத்தைந்தாவது ஆண்டில் கால் பதித்திருக்கிறேன். இந்த 45 வருட காலத்தினுள் நான் கண்ட மாற்றங்கள் பல. இம்மாற்றங்களின் ஊடாக நான் பயணிக்கும்போது என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் பல. நாட்டினில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கத்தினால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறம், இம்மாற்றங்களைச் சரியான வகையில் உள்வாங்கிக் கொள்ளாமல் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டதினால் என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மறுபுறம். 18 வயது முடிவுற்று பத்தொன்பதாவது ஆண்டில் காலடி வைத்த நிலையில் மாணவனாக உள்நுழைந்த எனக்கும் இன்று 63வது வயதை நோக்கி நடைபோடும் எனக்கும் இடைப்பட்ட இக்காலத்தின் வாழ்க்கை மாற்றங்கள் தந்த அனுபவச் செழிப்புகள் கணக்கிலடங்காதவை.

    மாணவனாக நுழைந்தபோது அன்றைய என் முன்னால் இருந்த இலட்சியம் வேறோர் பார்வையைக் கொண்டிருந்தது. கல்வித் தகமைகளை வெற்றிகரமாகப் பெற்றுக் கொண்டு தாய்நாட்டிற்குத் திரும்பவேண்டும் எனும் முனைப்பு அன்ரைய என் பல சக மாணவர்களுக்கு இருந்தது போல் எனக்கும் ஒரு முக்கிய இலட்சியமாகவே இருந்தது. பின் எப்படி 45 வருடங்கள் ஓடிய பின்பு இன்னமும் இந்த இங்கிலாந்து நாட்டில் ஒரு மாணவனாக அல்லாமல் ஓய்வூதியம் பெறும் ஒரு ஜக்கிய இராச்சியப் பிரஜையாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்? இம்மாற்றத்துக்கு உரிய காரணத்தைத் தேடி பல சமயங்களில் என் உள்ளத்தில் விரிவான சுய அலசல்கள் எழுவதுண்டு.

    அன்றைய மாணவ வாழ்க்கையில் ஜக்கிய இராச்சியத்தின் அரசியல் போக்குகள், அரசியல் மாற்றங்கள், நாட்டின் தலைவர்களின் கொள்கைகள் இவற்றைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருந்ததற்குக் காரணம் அதைப்பற்றிய ஆர்வம் இருக்கவில்லை என்பதோடு அது எனக்கு தேவையற்ற ஒன்று எனும் மனப்பான்மையும் இணைந்திருந்தது என்பதுதான் உண்மை. அன்றைய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களின் வகையில் ஏற்படுத்தும் மாற்றங்களின் தாக்கங்களைப் பற்றி காலத்தின் கட்டாயத் தேவையினால் அறிந்து கொள்ள வேண்டிய தேவையிருந்தது.

    எனது வாழ்வின் வாழ்வாதரத்திற்காக படித்துப் பட்டம் பெற வேண்டும் எனும் முனைப்பில் மிகவும் சிரமத்துக்குள்ளான நிலையில் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது அவ்வாழ்க்கையில் தனிப்பட்ட எனக்கு ஏற்படும் சிக்கல்களைப் பற்றிய மனத்தாங்கல் இருந்ததேயொழிய ஒரு வெளிநாட்டு மாணவனாக கல்வி கற்றுக் கொண்டு வாழவும் வழி வகுத்துக் கொடுத்த ஜக்கிய இராச்சியத்தின் ஆதரவைப் பற்றிய அனுமானத்தை சரியான வகையில் உள்வாங்கியிருக்கவில்லை எனபதுவே உண்மை. பெரிய பிரித்தானிய எனும் பெயரில் எமது தாய்நிலங்களை ஆக்கிரமித்திருந்தவர்கள் இந்நாட்டவர் எனும் அபிப்பிராய பேதத்தோடு இந்நாட்டிற்குள் நுழைந்த எனக்கு அக்கால மனநிலை மாறிய வித்தியாசமான கால கட்டத்தில் விசாலமான பார்வையோடு வாழும் மக்கள் மத்தியில் வாழ்கிறோம் என்பது புரியாமல் இருந்ததில் வியப்பொன்றுமில்லை.

    45 வருடங்கள் என்பது நாலு தசாப்தங்களை உள்ளடக்கியிருக்கிறது இக்காலத்தினுள் மாணவனாக இருந்த நான் கணவனாக , தந்தையாக, இன்று ஒரு தாத்தாவாக மார்றம் பெற்றிருக்கிறேன் என்பதுவே கண்முன்னால் கணப்படும் உண்மைகள். இப்பாத்திர மார்றங்கள் எனக்குக் கொடுத்த அனுபவப் பாடங்களோடு எனது நீண்டகால வாழ்க்கையும் பிணைந்திருப்பதினால் அரசியல் மார்ரங்களை கூர்ந்து நோக்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது. நான் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த ஒரு புலம்பெயர் மாணவன் எனும் போது எமை ஒரு தனிக்குழுவாக எம்மோடு ஒத்தவர்களோடு இயங்குவது வழக்கமாகவிருந்தது. அந்த நிலையிலிருந்து ஒரு ஜக்கிய இராச்சியப் பிரஜையாக இங்கிலாந்து சமுதாய மாற்றங்களின் தாக்கத்துக்கு முகம் கொடுக்க வேண்டியவனாக மாறிய போது அக்குழுநிலை மனப்பான்மையை மார்றி சமுதாயத்தோடு , மற்றைய சமூகங்களோடு இணைந்து செயலாற்ற வேண்டிய தேவையிருந்தது.

    இக்காலகட்டத்தினுள் எனது கல்விக் காலத்தை முடித்துக் கொண்டு பணியாற்ற வேண்டிய நிலையில் நிலையான ஒரு பணியைப் பெற முன்பு பல இடங்களில் மாறி, மாறி பணிபுரிய வேண்டிய தேவையேற்பட்டது. அப்போது பல சமூகத்தினரோடும் இணைந்து பணியாற்றத் தேவையிருந்தது. அத்8உவரை பிரிந்து வாழ்ந்த சூழல் மாறி அனைவரும் மனிதர்களே அவர்களின் உணர்வுகளும் எமைப் போன்றதே அவர்களும் என்னைப் போல பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துத்தான் வாழ்கிறார்கள் எனும் உண்மை புலப்பட்டது. எமது மொழி, எமது கலாச்சாரம் என்பன எமக்கு அத்தியாவசியமானவை எனும் உண்மை ஒருபுறம் இருக்க, அவற்றின் முக்கியத்துவத்துக்கு முன்னிலை கொடுத்து அடுத்தவரின் கலை , கலாச்சாரத்தை முற்று முழுதாகப் புறக்கணிக்கும் மன்ப்பன்மையைத் தவிர்த்துக் கொள்ளும் மனப்பக்குவம் தேவைப்பட்டது.

    நாம் வாழ்ந்த காலம் வேறு எமது குழந்தைகள் இன்றைய சமுதாயத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் வேறு. நிற வேற்றுமை, இனத்துவேஷம் என்பன ஆங்காங்கே சில, சில இடங்களில் என்னை எதிர் கொன்டாலும் நான் நிலையான பணிபுரிந்த நேரத்தில் அத்தகைய வேறுபாடுகள் என்றுமே எனது முன்னேற்றத்தை தடுக்கவில்லை. மாறாக இந்நாட்டவர்கள் எனக் கருதப்படும் பெரும்பான்மை இனத்தவர் ஒன்றாகப் பணிபுரியும்போது நேர்மையான, கடுமையான உழைப்பை இனங்கண்டு அதற்குரிய வேளைகளில் அதற்குரிய உயர்வைப் பெற்றுத்தந்தார்கள் என்பதுவே உண்மை. ஆனால் பல சமயங்களில் எம்முள் நாம் கொண்ட தாழ்வு மனப்பான்மையால் எம்மை நாமே ஒதுக்கிக் கொள்ளும்போது அடுத்தவர்கள் எம்மை விலக்குவது போலவே தென்படும் ஒரு சூழலில் பலர் எதிர்மறையான அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளேன்.

    இந்த 45 வருட காலத்தில் இந்நாட்டில் வந்து குடியேறிய பல வெளிநாட்டவர் பல சூழ்நிலைகளின் நிமித்தம் இங்கு வந்திருக்கிறார்கள். வந்த னைவரும் ஏதோ ஒரு வகையில் தமது வாழ்வினை நன்கு தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுவே உண்மை. ஆனால் அதிலே எத்தனை பேர் உலசுத்தியுடன் இந்நாட்டினைத் தமது சொந்த நாடாகக் கருதி அதன் முன்னேற்றத்தை மனதில் கொண்டு உழைக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே ! இந்நாடு வாழ்வில் தடுக்கி விழுந்தோருக்கு கைகொடுக்கும் வகையில் கொடுக்கும் உதவிகளை பல முறையர்ற வகையில் பெற்றுக் கொள்ளும் தந்திரோபாயங்களை பலர் மேற்கொள்ளுகிறார்கள் என்பது துயரத்துக்குரிய உண்மையாகும். அத்தோடு பொருளாதாரச் சிக்கல்களினால் எழும் வீட்டு வசதியின்மை, பாடசாலைகளில் குழந்தைகளுக்கு போதிய இடமின்மை, வைத்தியசாலைகளில் வைத்தியத்துக்காக காத்திருக்கும் கால அவகாசத்தின் நீடிப்பு என்பன இந்நாட்டு மக்கள் என்று கருதப்படுவோரின் (இதில் இங்கு குடியுரிமை பெர்று இந்நாட்டு பிரஜைகளாகிய பல வெளிநாட்டவரும் அடங்குவர்) மனதில் வெளிநாட்டவரின் குடியேற்றக் கொள்கை மீதான கண்ணோட்டத்தை மிகவும் எதிர்மறையாக மாற்றியுள்ள நிலையில் இன்றைய அரசியல் சூழல் இந்த 45 வருட காலத்தில் நான் என்றுமே கண்டிராத வகையில் ஒரு முக்கியமான் சந்தியில் நிற்கிறது.

    இனத்துவேஷம் கொண்டவர்கள் குளிர்காய்வதற்காக இச்சூழலைப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கிறேன். அமேரிக்காவில் ஆரம்பித்த மாற்றம் இன்று ஜரோப்பிய நாடுகளில் முக்கியமானவைகளையும் தொற்றிக் கொண்டதோ எனும் ஜயம் எழும் வகையில் பலநாடுகளின் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.
    இவையனைத்துக்கும் இருக்கும் ஒரேயொரு ஒற்றுமை வெளிநாட்டவரின் வருகைக்கான எதிர்ப்பு ஒன்றே. கட்டுப்பாடின்றி வெளிநாட்டிலிருப்பவர்கள் மற்றைய நாடுகளில் குடியேறுவது என்பது ஆதங்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பது மறுக்கப்பட முடியாதது. ஆனால் இவ்வுணர்வு ஒரு இனத்துவேஷ வெறியாக மாறி இனக்கலவரங்களைத் தூண்டும் அளவிர்குச் செல்ல விடாமல் இன்றைய அரசியல் தலைவர்கள் கட்டுப்படுத்துவார்களா? என்பதுவே கவலைக்குரிய கேள்வியாகும்.

    இங்கிலாந்து நாட்டிலே 45 வருடங்களாகப் புலம்பெயர் வாழ்வினை மேற்கொள்ளும் என் முன்னால் இன்று நிகழும் அரசியல் மாற்றங்கள் மனதில் சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது எனக்குள் இத்தகைய உணர்வை முதர் தடவையாக ஏற்படுத்தியதான்ல் கொஞ்சம் சத்தமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இன்றைய அரசியல் விளையாட்டுத் திடலில் நான் ஒரு சாதாரண பார்வையாளனே ! வினாக்களுக்கு விடை காலத்தின் கைகளிலோ?

    Share
  • விண்ணுலகத்தில் கிரேஸி நாடகம்

    விண்ணுலகத்தில் கிரேஸி நாடகம்

    -விஜய்பிரகாஷ்

    “கிரேஸி மோகன்” என்கிற பெயர் தெரியாதவர்கள் கூட, அவரின் நகைச்சுவைகளை ரசித்திருப்பார்கள். கிரேஸி மோகன் இல்லாமல் கமல்ஹாசனின் நகைச்சுவை படங்கள் கிடையாது என்றே சொல்லலாம். அபூர்வ சகோதர்களில் ஆரம்பித்து மைக்கல் மதன் காம ராஜன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் என்று பட்டியல் நீளும். ஒவ்வொரு படமும் நகைச்சுவையில் தனித்து விளங்கும். அதிலும் பஞ்சதந்திரம் படம் இன்று பார்த்தாலும், எதோ கவலையில் இருப்பவர் கூட சிரித்துவிடுவர். அவரின் வசனத்திற்காக திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்ததுமுண்டு.

    மைக்கல் மதன காம ராஜனில்,

    குஷ்பு – யூ ஆர் நாட்டி

    கமல் – நான் நாட்டின்னா நீ கம்முனாட்டி

    காதலா காதலா படத்தில்,

    “நாமளும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நிறைய  அனாதை குழந்தை பெத்துக்கலாம்”

    பஞ்சதந்திரம் படத்தில்,

    “பர்தார்ஜி சாடி”

    “சாபூ த்ரீ இல்ல.. சா பூ ஃபோர்”

    மேகியும் மைத்திலியும் சந்திக்காமல் சாமாளிக்கும் காட்சி என்று படத்திற்குப் படம் நிறைய எடுத்துக்காட்டு சொல்லி சிரிக்கலாம். தேடினேன் வந்தது படத்தில் பிரபுவிடம் கனவைப் பற்றி பேசும் காட்சி பார்க்கும் போது, அப்பொழுதே ஹாலிவுட் இன்செப்ஷன் படத்தைப் போன்ற கதையை நகைச்சுவையாய் சொல்லியுள்ளாரே என்ற ஆச்சரியமாக இருக்கும். மகளிர் மட்டும் படத்தில் பிணமான நகேஷுடன் தலைவாசல் விஜய் சண்டை போடும் காட்சியெல்லாம் அவருக்கே தனித்துவமான நகைச்சுவை. வியட்னாம் காலனி, அருணாச்சலம், ரட்சகன், பூவெல்லம் கேட்டுபார் போன்ற அரசியல் காதல் படங்களுக்கும் திரைக்கதைகளும் வசனங்களும் எழுதியிருக்கிறார். வசனகர்த்தாவாய் ஒரு பக்கம் இருக்க, கிரேஸி மோகன் ஒரு நடிகரும் கூட. திரையில் குணச்சித்திர பாத்திரங்களிலும் அவருடைய நாடகங்களிலும் நடித்திருக்கிறார். அவரது மேரேஜ் மேட் இன் சலூன், கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், மீசை ஆனாலும் மனைவி போன்ற  நாடகங்கள் எல்லாம் நினைத்து நினைத்து சிரிக்க வைப்பன.

    நாடகத்தில் அவருக்குப் பக்கபலமாய் அவரது தம்பி மாது இருந்தார். இருவரையும் ஒரு சேர பார்த்தாலே காரணமின்றி சிரிப்பு வந்துவிடும். தொலைக்காட்சியிலும் அவரது நாடகங்கள் பார்த்து வளர்ந்த காலமுண்டு. மாது சீனு, நில் கவனி கிரேஸி, கிரேஸி டைம்ஸ் எல்லாம் பார்த்து வயிறு குலுங்க சிரித்ததெல்லாம் நீங்கா நினைவுகள். கிரேஸி மோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி கேட்ட போது, விரைவில் குணமாய் வந்துவிடுவார் என்ற நம்பிகையில்தான் அடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்தேன்.ஆனால், கொஞ்ச நேரத்திலேயே கிரேஸி மோகன் இறந்துவிட்டார் வதந்தி வரத் தொடங்கியது. மனதும், அது உண்மையாக இருக்கக் கூடாது என எண்ணுகையில் அவர் அதை மெய்ப்பித்து என்னைப்போன்ற லட்சோப லட்சம் ரசிகர்களைப் பிரிந்து சென்றுவிட்டார். அதைக் கேட்டபின் என்னால் எந்த செயலையும் செய்ய முடியவில்லை. உடனே ஏதாவதொரு அவரது நகைச்சுவையைத்தான் பார்க்கச் சொன்னது மனம். இனி அவரது நகைச்சுவைகளைப் பார்த்து சிரிக்கும்போது, அந்தச் சிரிப்பில் மென்சோகம் கலந்திருக்கும். கிரேஸி மோகனின் மறைவு திரையுலகத்திற்கும் நாடக உலகத்திற்கும் பெரிய இழப்பு. அவரைப் போன்று ஒருசேர சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வசனகர்த்தாக்கள் எழுத்தாளர்கள் இனி வருவார்களா என்பது சந்தேகமே.

    இனி மேலோகத்திலும் அவரது ஏதாவதொரு நாடகம் அரங்கேறி, கடவுள்களையும் தேவர்களையும் சிரிக்க வைக்கட்டும்.

    Share
  • கோயம்புத்தூர் நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் தேவை

    கோயம்புத்தூர் நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் தேவை

    கோயம்புத்தூர் நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் தேவை. விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

    Share
  • புன்சிரிப்பு மோகன் புறப்பட்டுப்  போய்விட்டார்!

    புன்சிரிப்பு மோகன் புறப்பட்டுப்  போய்விட்டார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா
      தமிழறிஞர், பேராசிரியர் இரா.மோகனுக்குக் கண்ணீர் அஞ்சலி 
                                       

    தமிழ்த்தேனீ  பறந்தது  தமிழறிஞர்  கலங்குகிறார்
    அறிவுநிறை  தமிழறிஞர்  அழவிட்டே  அகன்றுவிட்டார்
    அறிஞராம் மு.வ.வின் அருமைமிகு செல்லப்பிள்ளை
    அனைவரையும் அழவிட்டே அவ்வுலகு போனதேனோ !

    மோகனென்று நினைத்தவுடன் புன்னகைதான் வந்துநிற்கும்
    காதலுடன் தமிழ்படித்துக் காத்திரமாய் எழுதிநின்றார்
    நோதலுடன் பேசாத  நுண்ணறிவும் பெட்டகமாய்
    பூதலத்தில் இருந்தமோகன் புறப்பட்டுப் போனதேனோ!

    பட்டம்பல பெற்றாலும்  பதவிபல  வகித்தாலும்
    மற்றவரை நோகடிக்கும் வகையிலவர் இருந்ததில்லை
    கற்றபடி ஒழுகிநின்றார் கண்ணியத்தைக் காத்துநின்றார்
    கண்ணீரில் மிதக்கவிட்டு காணாமல் போய்விட்டார்!

    அவர்படைத்த  நூலடுக்கோ அழுதபடி இருக்கிறது
    அவர்பெற்ற விருதடுக்கோ அலமந்தே நிற்கிறது
    பட்டிமன்றம் கவியரங்கம் பரிதவித்தே நிற்கிறதே
    கட்டழகுச் சிரிப்பழகர் கலங்கவிட்டுப் போனதேனோ!

    இலக்கியத்தில் இரட்டையராய் இருந்தார்கள் இணைபிரியா
    இப்போது இரா.மோகன் இணையைவிட்டு ஏகிவிட்டார்
    பிரிந்தஇணை நிர்மலாவோ  புரண்டேங்கி அழுகின்றார்
    சிரித்தமுகம் காணாமல்  சென்றவிடம்  தேடுகிறார்!

    புன்சிரிப்பு  மோகன்  புறப்பட்டுப்  போய்விட்டார்
    என்கின்ற செய்தி இடியெனவே இருந்ததுவே
    அவர்நட்பை எண்ணியெண்ணி அழுதபடி நிற்கின்றேன்
    அறிவுநிறை இரா.மோகன் அழவிட்டுப் போனதேனோ!

    Share
  • வல்லமையும் கிரேஸியும்

    வல்லமையும் கிரேஸியும்

    விவேக் பாரதி

    சிரிப்பு என்னும் மருத்துவத்தால் நம் கவலை நோய்கள் அத்தனையும் மறைக்க வைத்த சிரிப்பு டாக்டர் கிரேஸி மோகன். அவரது பன்முகத் தன்மையை என்னென்று சொல்லி வியப்பது? வசனகர்த்தா, நாடக ஆசிரியர், நடிகர், நகைச்சுவை வித்தகர், கவிஞர், பேச்சாளர், ஆன்மீக சிந்தனையாளர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். கிரேஸி மோகனுக்கும் வல்லமை மின்னிதழுக்கும் இருந்த தினசரி உறவு. கிரேஸி மோகன் அதிகம் எழுதிய இதழ் என்ற பெருமை வல்லமைக்கு மட்டுமே உண்டு. பார்ப்பவர்கள் பிரம்மித்துப் போகும் அளவுக்கு வெண்பாக்களை எழுதிக் குவித்துள்ளார். கிரேஸி மோகனின் வெண்பாக்கள் தனி ரகம். ஒருபக்கம் புதுமையான நடையைக் கொண்ட வெண்பா என்றால் இன்னொருபக்கம் திருப்புகழ் பாணியில் வண்ணப் பாடல்கள். திருமால் திருப்புகழ். கிரேஸி மோகனின் படைப்பாற்றல் வியக்க வைப்பது. எந்த அளவுக்கு என்றால் அவர் மறைந்த தினத்துக்கு முன் தின இரவு வல்லமைக்குத் தன்னுடைய இரு வெண்பாக்களையும் அனுப்பி வைத்திருக்கிறார். பொதுவாகவே அவருடைய வெண்பாக்கள் படித்ததும் புரியும். அதை அவர் சொல்லும்போது கூட, “ஸ்வீட் மாதிரி கொஞ்சூண்டு இருந்தாலும் டக்குன்னு மனசுல பதிஞ்சுடுதுல்ல… வெண்பாவோட ட்விஸ்ட் ஆஃப் த டேல் அதோட ஈற்றடிதான். அதுலதான் கதையோட க்ளைமேக்ஸ்” என்று அதையும் திரைக்கதை பார்வையில் பார்த்தவர் கிரேஸி மோகன். அவருடைய வெண்பக்கள் எளிமையாக இருக்கும். அதற்குத் தனியே பதவுரை எல்லாம் தேவைப்படாது. ஆனால், நேற்று அவர் அனுப்பியிருந்த வெண்பாவின் ஆழமும் பொருளும் விளங்க கொஞ்ச நேரம் பிடித்தது.

    மற்கடக்(குரங்குக்) குட்டியே, மாதா ரமணரை
    நிற்க அனுமதிப்பாய் நின்னுள்ளே – வர்கத்தின்
    பேதங்கள் போகும் பிறவிப் பிணிதீரும்
    மோதுங்கள் அண்ணா மலை’’….!

    வந்த மனக்குரங்கு வாயுள்ளே வாத்ஸல்யம்
    சந்திர வம்சத்து சூரியன் – பந்தமறுப்பு:
    முற்றும் துறக்க முனிவனாய் மாறலாம்
    கற்ற களவை மற….கிரேசி மோகன்…! (09.06.2019)

     

    எத்தனை பொருள் பொதிந்த வெண்பா.. அவருடைய இறுதி வெண்பாக்கள் முக்தியை நோக்கி, நிலையாமை நோக்கி அமைந்திருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது. கிரேஸி மோகனின் ஆன்மா சாந்தி பெற பிராத்திக்கிறோம். அவரை இழந்து வாழும் எம் போன்ற நண்பர் குழாத்துக்கும், குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வல்லமை மின்னிதழ் தெரிவித்துக்கொள்கிறது.

    வல்லமையில் கிரேஸி மோகன் படைப்புகளைப் பார்க்க…

    கேஷவ் வண்ணம் கிரேஸி எண்ணம், பெருமாள் திருப்புகழ், கட்டுரைகள் இன்னும் பல…

    http://www.vallamai.com/category/thirumal-thiruppugazl/

    http://www.vallamai.com/category/thirumal-thiruppugazl/crazyquotes/

     

     

    Share
  • குழந்தைமை உள்ளம், உன்னத நட்பின் இலக்கணம்

    குழந்தைமை உள்ளம், உன்னத நட்பின் இலக்கணம்

    எஸ் வி வேணுகோபாலன்

    கிரேசி மோகன் மறைவுச் செய்தி கிடைத்து, உடனே, இல்லை, அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார், தவறுதலாக யாரோ கொடுத்த செய்தியை உங்களுக்குத் தெரிவித்தேன், மன்னிக்கவும் என்று அதே நண்பர் குறுஞ்செய்தி போட்டிருந்தார். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், மோகன் காலமாகிவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரே ஒரு முறை கூட நேரில் பரஸ்பரம் சந்தித்திராதபடியே, உயிரோட்டமாக ஆத்மார்த்தமாகப் பழகிய கடந்த நான்காண்டு நட்பு இனி நினைவில் மட்டுமே நிற்பதாயிற்று. நான் தான் இன்னார் என்று பார்த்து அறிமுகம் செய்துகொள்ள இனி ஒருபோதும் புன்னகை பூத்த அந்த முகம் கிட்டப்போவதில்லை. மறைந்தே போய்விட்டார் கிரேசி மோகன்.

    திரையில் ஒலிக்கும் அதே குரல், கொஞ்சம் வெற்றிலை சீவல் குழைவோடு மேலும் கனிந்து எத்தனையோ நாட்கள், இரவுகள் தனிப்பட எனக்காக என் காதில் ஒலிக்கக் கேட்ட அந்தக் குரல் காற்றில் கலந்துவிட்டது. ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம், மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி’ என்று வரும் நந்திக் கலம்பகம்போல், ‘காற்று வெளியை நிறைத்ததுன் சிரிப்பு, கனிவகை புகுந்ததுன் நேயம்’ என்றுதான் எழுத வேண்டும். அவரை அறியாத தமிழ்த்திரை ரசிகர்களோ, சாதாரண மனிதர்களோ தமிழகத்தில் இருக்க இயலாதென்றே திடமாக நம்புகிறேன்.

    செம்மலர் இதழில் வெளியாகி இருந்த ‘மரணத்தை முன் வைத்து..’ என்ற எனது கட்டுரை ஒன்றைத் தற்செயலாக மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பி இருந்தேன். அதை உடனே வாசித்துவிட்டு, பாராட்டுதலோடு சுருக்கமான ஒரு பதிலை அனுப்பி இருந்தார்:

    பிரமாதம் சார் கட்டுரை….

    ”மரணமென்ற வார்த்தையை மாற்றி அமைத்தால்
    வரணும் ரமணனென்ற வார்த்தை, -பெறணும்
    அவனருளைப் பெற்றால் அனைத்தும் பெறலாம்
    சிவனருளுன் சீமந்தச் சேய்”..

    அதனோடு நிறைவு பெறாத மனத்தோடு, இரவு அலைபேசியில் அழைக்கவும் செய்தார். அவரோடான முதல் உரையாடல் அது. மரணத்தை முன்வைத்து எப்படி அத்தனை நகைச்சுவையாக எழுத முடிந்தது என்ற அவரது பாராட்டுக் குறிப்போடு முகிழ்த்தது நான்காண்டுகளுக்குமுன் அவரோடு வாய்த்த நட்பு.

    கவிதை பிரியர், வெண்பா சித்தர் என்பதை அப்போதே உணர்ந்த என்னை, இடையறாது திக்குமுக்காடச் செய்து கொண்டிருந்தார் மோகன். அவரது வேகத்திற்கேற்ப பதில் அனுப்புவது சவாலான வேலை. ஏனெனில், வெண்பாவுக்கு பதில் வெண்பா எழுதி அனுப்புவதை மிகவும் சிலாகித்து வாசித்து ரசிக்கவும் செய்தது அவரது குழந்தைமை பொங்கிய குதூகல உள்ளம். எண்ணற்ற வெண்பாக்கள்….ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு என்ன மொழியிலும் சொற்களை முந்திரி பருப்பு போல மேலே தூவி கமகமக்க சூடான வெண்பா(யசத்தை) மின்னஞ்சல் வழி ஊற்றி அனுப்பிக் கொண்டே இருப்பார்.

    சிறந்த ஓவியரும், தி இந்து கார்ட்டூனிஸ்டுமான திரு கேஷவ் அவர்கள், மோகனுக்கு விருப்பமான வேலையை அன்றாடம் வழங்கி மகிழ்ந்திருப்பார். கிருஷ்ணரைத் தமது கற்பனையில் இழைத்த தூரிகையைக் கொண்டு அவர் வரையும் அற்புதமான ஓவியங்களை முன்வைத்து, புராண இதிகாச கதைகள், உபநிடத உட்பொருள்களை உள்ளடக்கிய செய்திகளை நான்கே அடிகளாலான வெண்பாக்களில் அசாத்தியமாக எழுதித் தள்ளிக்கொண்டே இருந்த கிரேசி மோகனே ஓர் ஓவியர்தான்! இராமாயண ஓவியங்கள் உள்ளிட்டு ரவிவர்மா ஓவியங்களையும், மிக ஈர்ப்பாக ரமணரையும் மிக அழகாக வரைந்திருப்பார் மோகன்.

    நான் ஒரு நாத்திகன், உங்களைப்போல் அல்ல என்று ஒருமுறை அவருக்கு எழுதிய அஞ்சலுக்கு, அவர் இப்படி பதில் எழுதி இருந்தார், நீங்கள் நாத்திகன் அல்ல, naughtyகன் (குறும்பர்) என்று. பிறகு அலைபேசி உரையாடலில், இறை நம்பிக்கை இல்லாதவர் என்பதால் உங்களை வெறுக்க மாட்டேன், அது அவரவர் விருப்பம். அடுத்தவருக்காக சிந்திப்பது, உழைப்பது இதைத்தான் ஆன்மிகம் என்று நான் கருதுவேன். உங்களோடு பேச இந்த விஷயம் ஒரு தடையே அல்ல என்றார்.

    வாழ்க்கையின் அபத்தங்களை அனாயாசமாக நகைச்சுவை வசனங்களில் அபாரமான கற்பனையோடு கொண்டுவரும் திறமை அவரது தனித்துவமான அம்சங்களுள் ஒன்று. அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில், ‘உங்க வயசு என்ன 55ஆ’ என்று நாகேஷ் கேட்கும்போது, எதிரே இருப்பவர் ‘இன்னொரு 5 சேர்த்துக்குங்க’ என்றால், ‘555ஆ?’ என்று நாகேஷ் வியப்போடு கேட்கும் வசனத்தைப் பற்றி ஒருமுறை அவரிடம் கேட்டேன், அதெல்லாம் வீட்டுல பாலாஜியோடு பேசினது, எங்கப்பா சொன்னது எல்லாம் தான் இப்படி வசனங்களுக்கு காரணம் என்றார். அடுத்தவர்களைப் பாராட்டும் மனம் அவருடையது.

    திரையில், அவரது ஹாஸ்யத்தை மிக நுட்பமாக கவனிக்கத் தவறினால், அடுத்தடுத்த வசனங்கள் போய்க்கொண்டே இருக்கும். அவரது வசனத்திற்காகப் புகழ் ஈட்டிய படங்கள் நிறைய உண்டு. ஆனால், அவரது பேச்சில், எழுத்தில் கொஞ்சமும் கர்வம் தலைதூக்கிப் பார்த்ததில்லை. இதைப் பலமுறை அவரிடமே கேட்டிருக்கிறேன். மிகப் பெரிய மனிதர்கள் பலரது பெயர்களை எல்லாம் வரிசையாகச் சொல்லிவிட்டு, நாம எங்கோ கீழே சாதாரண மட்டத்தில் இருக்கோம் சார், இதில் பெரிய ஆட்டம் எதுக்குப் போடணும் என்று தன்னடக்கத்தோடு பதில் வரும்.

    அவரது நகைச்சுவை வசனங்களில் ரசித்த ரசிப்பை விடவும், அவ்வை சண்முகி திரைப்படத்தில் ஆழமான ஓர் ஒருமைப்பாட்டு உணர்வை விதைக்கும் வசனம் ஒன்றை அவர் வழங்கி இருந்ததைக் கொண்டாட வேண்டும். நாசர், தம்மை அய்யர் என்று பொய் சொல்லிவிட்ட ஒரு முகம்மதியர் என்றறிய வந்ததும் கோபப்படும் ஜெமினி கணேசனை, மாமி வேடத்தில் இருக்கும் கமல் ஹாசன் ஆற்றுப்படுத்தும் காட்சி அது. ‘மாட்டுக்கறி சாப்பிடறவா’ என்று சொல்லும் ஜெமினியிடம், கமல் இப்படி சொல்வார்: :நீங்க பண்றது லெதர் பிசினஸ், அவாளுக்காக வெட்டப்படற மாடுகளை விட, உங்களுக்காக வெட்டப்படறது அதிகம்”. சாதி மதங்களைக் கடந்த பேதமற்ற உள்ளம் கொண்ட ஒருவரால் அன்றி வேறு யாரால் இப்படி எழுத முடியும்?

    ஓயாது எழுதிக் கொண்டிருந்தார் மோகன். நேர்காணல் எந்த இதழில் வந்தாலும், ஒரு குழந்தைமை உள்ளத்தோடு பகிர்ந்து கொண்டிருந்தார். ரமணரை நோக்கிய தேடல் அவரது அண்மைக்கால தனிப்பட்ட எழுத்தில் அதிகம் மேலோங்கி இருந்தது. இரவு உறங்கப்போகுமுன் என்று அவர் எழுதியதிலும், காலை விழித்தவுடன் என்று எழுதி அனுப்பியதிலும் இந்த ‘பற்றறுத்தல்’ ஒலித்துக் கொண்டே இருந்தது.

    “சார், இந்த வெண்பாவில் தளை தட்டி இருக்கிறது என்றால், தலை தட்டாமல் இருந்தால் சரி என்று பதில் போடுவார்…வெண்பாவை உடனே திருத்தி அனுப்பி வைப்பார். பதில் வெண்பாவை அத்தனை ரசித்து அதற்கும் மெயில் போடுவார். பத்து பதினைந்து நாட்கள் அவரது வெண்பாவிற்கு பதில் போடாமலோ, கருத்து தெரிவிக்காமலோ இருந்தால், அவ்வளவுதான், அழைத்தும் பேசிவிடுவார்.

    எத்தனை எத்தனை ஆயிரம் பேரிடம் இப்படி, இதேபோல் உயிரான கேண்மை பாராட்டி இருந்தார் என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. அவரது தந்தை திரு ரங்காச்சாரி அவர்கள் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளராக, இயக்குநர் குழுவின் செயலாளராக பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றி ஓய்வு பெற்றவர். முதல் உரையாடலிலேயே அதைக் குறிப்பிட்டவுடன், வாஞ்சையோடு அப்படியானா அவரைப் பார்க்கவாவது ‘ஆத்துக்கு வாங்கோளேன் ‘ என்று அவரது பேச்சுத் தமிழில் அழைத்தார். அப்பாவுடன் பேசுவதற்கு தொடர்பு எண்ணையும் எனக்குத் தந்தார். மறுநாளே அவரோடு பேசிய இனிமையான நேரத்தையும் மறக்க முடியாது.

    ஆனால், நேரில் சென்று பார்க்காது நாட்களைக் கடத்திக்கொண்டு இருந்துவிட்டேன், மன்னிக்க முடியாத பாவி! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு மறுநாள் காலை அவருடைய தந்தை திரு ரங்காச்சாரி காலமான செய்தி அறிந்து அவரை உடனே அழைத்தேன். மிகவும் இயல்பாக, ‘எஸ்விவி சார், அப்பா காலமாயிட்டார்” என்று பேசத் தொடங்கினார். ‘நேரில் வந்து பார்க்காதிருந்து விட்டேன், இப்போது வெளியூர் வந்திருக்கிறேன், உங்கள் அப்பா என்னை மன்னிப்பாரா ?” என்று கண்ணீர் மல்க அவரோடு பேசினேன்.

    “அதெல்லாம் மன்னிப்பார், கவலையே படாதீங்கோ. தூக்கத்திலேயே அமைதியாய் பிரிந்துவிட்டது அவர் உயிர்” என்றார்.

    நீண்ட ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன், திரு சாரி குறித்து! அதை வாசித்துவிட்டுப் பேசுகையில், மிகவும் ஆறுதலாக இருந்ததென்றார் மோகன். இப்போது அவரையும் இழந்துவிட்டோம். யார் தர முடியும், ஆறுதலை?

    Share
  • இந்த வார வல்லமையாளர் 308 – ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ அப்துல் கனி

    இந்த வார வல்லமையாளர் 308 – ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ அப்துல் கனி

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    இந்த வார வல்லமையாளர் 308 – அப்துல் கனி

    உலக வெப்பமயமாதல் அதனால் ஏற்படும் வறட்சி பேரழிவு ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதே ஆகும். இதிலிருந்து மீண்டு வருவதற்கு மரங்கள் வளர்ப்பது ஒன்றே தீர்வாக அமையும். .

    தொல்காப்பியம், சங்க இலக்கியப் பாடல்களில் தொடங்கி  தற்கால புதுக்கவிதைகள் வரை அனைத்திலிருந்தும் நம் தமிழர்கள் மரங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை உணரலாம். பண்டைய தமிழகத்தில் ஒவ்வொரு மன்னனும் ஒரு குறிப்பிட்ட மரத்தினை காவல் மரமாகக் கருதினர்.  . இறை வழிபாட்டோடு தொடர்புடைய தல விருட்சங்களாகவும் மரங்கள் இருந்ததற்குப் பக்தி இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.

    ஆனால் இன்றைய நிலையில் வேளாண்மை, நகரமயமாக்கம் போன்ற பல காரணங்களுக்காக சிறிது சிறிதாக நாம் காடுகளை அழித்து வந்துவிட்டோம். அதன் விளைவு புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்கள். இயற்கையான காட்டு மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டு எரிபொருள் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படுவதோடு , அந்த இடங்கள் மேய்ச்சல் நிலம், விளை பொருள் தோட்டங்கள் மற்றும் குடியேற்றங்களாக உருமாறிவிட்டன. மரங்கள் தொடர்ந்து குறைந்துவருவதால் உயிரியற் பல்வகைமை (bio diversity) குறைந்து சூழலும் தரம் குறைந்துவிட்டது. வாழ்விட சேதம், பல்லுயிர் இழப்பு, மற்றும் வறண்ட நிலங்கள் பெருகிவிட்டன.. வளிமண்டல கரியமிலவாயுவை நீக்க போதிய காடுகள் இன்மையால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டு காலநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

    தற்போதைய மிகப்பெரும் பிரச்சினையான தண்ணீர்ப் பஞ்சத்துக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் , மரங்கள் அழிப்பால் போதிய  மழைப்பொழிவு இல்லாமல் போனது முக்கிய காரணம். இதேபோல் போதியமரங்கள் இல்லாததால் சென்னை போன்ற பெரு நகரங்களில் காற்று மாசுபாடும் அதிகரித்து வருகின்றது.

    மனிதன் இன்புற்று வாழ

    மழை வளம் பெருக்கி, மண்வளம் காத்து,

    உறைவிடம் கொடுத்து,  உணவு வழங்கி

    மகிழ்ச்சியுடன் நாளும் மாசில்லாக் காற்றளிக்கும்

    மரங்கள் இயற்கைச் சீற்றத்தால் இன்னலுரும்போது கை கொடுத்துக் காப்பது நம் கடமையன்றோ.

    அந்த மாபெரும் பணிக்காகத்தான் சென்னை கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் நிறுவனம் ட்ரீ ஆம்புலன்ஸ் சேவை ஒன்றைத் தொடங்கியுள்ளது. உலக சுற்றுச் சூழல் தினத்தன்று மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான அவசர ஊர்தி சேவையை இந்த நிறுவனம் சென்னையில் துவக்கியது. இந்த சேவையை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்தியில் பயணிக்கும் சுற்றுச் சூழல்  ஆர்வலர்கள், மரங்களுக்கு முதலுதவி அளித்தல், வேரோடு சாய்ந்த மரங்களை மறு பதியம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இது குறித்து திரு அப்துல் கனி பேசுகையில் பசுமையின் தேவையை மனிதர்கள் உணர வேண்டும். அதனால்தான் இந்த மர ஆம்புலன்ஸ் சேவை என்றும் தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாகவும் 2020க்குள் இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப் போவதாகவும் கூறினார். முதற்கட்டமாக தமிழகத்தில் பயணிக்கும்  இந்த அவசர ஊர்தி நாட்டின் பல்வேறு இடங்களுக்கும்  சென்று பாதிக்கப்பட்ட மரங்களுக்கு முதலுதவி அளித்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளைச் செய்யும்.

    9941006786 என்ற எண்ணில் ட்ரீ ஆம்புலன்ஸ் குழுவினரை அழைத்து, அவர்களின் சேவையைப் பெறலாம். இவர்களின் இணையத்தளம் – www.treeambulance.org

    உயிர் காக்கும் மரங்களின் உயிர் காக்கும் பணி செய்யும் ட்ரீ ஆம்புலன்ஸ் நிறுவனர் அப்துல் கனி அவர்களையும், உடன் பணியாற்றும் ஆர்வலர்களையும் வல்லமை மின்னிதழ் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம். இந்த நற்பணிக்காக அவருக்கு “இந்த வார வல்லமையாளர்” விருதினை அளித்துப் பாராட்டுகிறோம்.  அப்துல் கனி குழுவினர், இன்னும் பற்பல தொண்டுகள் புரிய வாழ்த்துகிறோம்.

    தொடர்புடைய பக்கங்கள்

    https://www.indiatimes.com/news/india/in-a-first-chennai-environmentalist-launches-tree-ambulance-to-give-first-aid-to-trees-368673.html

    http://www.nxtpix.com/tree-ambulance-demonstration-program-on-world-environmental-day-an-initiative-by-dr-k-abdul-ghani-and-mr-suresh-k-jadhav-sasa-group/

    Share
  • படக்கவிதைப் போட்டி – 216

    படக்கவிதைப் போட்டி – 216

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (16.06.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-52

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-52

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-52

    52. தெரிந்து வினையாடல்

    குறள் 511:

    நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
    தன்மையான் ஆளப் படும்

    நன்ம எது தீம எது னு தெரிஞ்சுக்கிட்டு நல்லதுல மட்டுமே நாட்டம் செலுத்துதவன் எந்த வேலைய செய்யுததுக்கும் ஏத்தவன்.

    குறள் 512:

    வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
    ஆராய்வான் செய்க வினை

    வருமானம் வருத வழிய விரிவாக்கி வளத்த பெருக்கி வார தொந்தரவெல்லாத்தையும் கண்டுக்கிட்டு நீக்கி இருக்கவன் தான் காரியத்த செய்யணும்.

    குறள் 513:

    அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு

    நேசம், புத்திசாலித்தனம், திறம, பேராச இல்லாத கொணம் இந்த நாலையும் இருக்கவங்கள தேர்ந்தெடுக்கது தான் நல்லது.

    குறள் 514:

    எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்

    எம்புட்டுத்தான் ஆராஞ்சு தேர்ந்தெடுத்தாலும் எதிர்பாக்குத அளவு சிறப்பா நடந்துக்கிடாதவங்க பல பேர் இருக்காங்க.

    குறள் 515:

    அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
    சிறந்தானென் றேவற்பாற் றன்று

    செய்யுத வழிய தெரிஞ்சு எத்தன தடங்கல் வந்தாலும் செஞ்சு முடிக்கவன தவித்து மத்தவன ஒசந்தவன்னு நெனச்சி ஒருவேலையும் ஏவக்கூடாது.

    குறள் 516:

    செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
    டெய்த உணர்ந்து செயல்

    காரியத்த செய்ய வேண்டியவனோட தகுதிய அறிஞ்சுக்கிட்டு, காரியத்தோட தன்மயையும் புரிஞ்சுக்கிட்டு அத செய்யுத காலத்தையும் உணந்து காரியத்த செய்ய வைக்கணும்.

    குறள் 517:

    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
    ததனை அவன்கண் விடல்

    இந்தக் காரியத்த இவன் இன்னின்ன ஆள் பலத்தாலையும், பொருள் பலத்தாலையும் செஞ்சு முடிப்பான் னு தெரிஞ்சுக்கிட்ட பொறவு காரியத்த ஒப்படைக்கணும்.

    குறள் 518:

    வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
    அதற்குரிய னாகச் செயல்

    ஒருத்தன ஒரு காரியத்துல ஈடுபடுத்துதக்கு முன்ன அவன் அதுக்கு ஏத்தவனானு அறிஞ்சுக்கிட்டு செய்யணும்.

    குறள் 519:

    வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
    நினைப்பானை நீங்குந் திரு

    எடுத்த காரியத்த கண்ணும் கருத்துமா செய்யுத ஒருத்தன சந்தேகப்பட்டு தப்பா நினைக்குத தலைவனோட செல்வம் அவன் கையவிட்டு போவும்.

    குறள் 520:

    நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
    கோடாமை கோடா துலகு

    உழைப்பாளிங்க மனசு நோவாம இருந்தாங்கன்னா தான் ஒலகம் செழிப்பா இருக்கும். அதனால ராசா தெனைக்கும் அவங்க நெலம பத்தி தெரிஞ்சுக்கிட்டு வேண்டியத செய்யணும்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • சேக்கிழார் பா நயம் – 40

    சேக்கிழார் பா நயம் – 40

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

    நமக்கு ஐந்துபொறிகள்,அதாவது அறிவுக்கருவிகள் உள்ளன. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன! இந்த ஐந்து அறிவுக் கருவிகளாலும் ஐந்துவகைப் புலனறிவுகளை நாம்பெறுகிறோம். அவை தொடுதல், சுவைத்தல், காணுதல், முகர்தல்,கேட்டல் ஆகியவை. அவற்றால் உலகப் பொருளைகளைத் தொட்டு அறிகிறோம், சுவைப்பண்டங்களை சுவைத்து உண்கிறோம். காட்சிப் பொருள்களைக் கண்டறிகிறோம்.மணப்பொருள்களை முகர்ந்து இன்புறு கிறோம். இசை முதலிய ஓசைகளைக் கேட்டறிகிறோம். இவ்வாறு அறிவதற்கு உரிய ஐவகை பூதங்களே, நம்மை சூழ்ந்துள்ள பிரபஞ்சம் ஆகும். அவை நிலம், நீர், காற்று, தீ, வான் ஆகிய ஐந்தாகும். ஆகவே புறத்தில் உள்ள ஐம்பூதங்களையும் நம் ஐம்புலன்களால் அறிந்து கொள்கிறோம். இதனைத் தொல்காப்பியர் முகர்தலறிவு, சுவையறிவு, உற்றறிவு,கேட்டலறிவு , காணலறிவு என்று வகைப்படுத்துவார்.

    ஒரு வியப்புக்குரிய நிகழ்வு என்ன வென்றால், கண் காணும் , ஆனால் கேட்காது, முகராது, சுவைக்காது, உணராது! அதுபோலவே காது கேட்கும், ஆனால் காணாது, முகராது, சுவைக்காது, உணராது! மூக்கு முகரும், ஆனால் கேட்காது, சுவைக்காது, காணாது, உணராது! வாய் சுவைக்கும், காணாது, கேட்காது, முகராது, உணராது! உடம்பு உணரும். சுவைக்காது, காணாது, கேட்காது ,முகராது! ஆம், ஒவ்வொரு புலனும் ஒவ்வோர் அறிவையே அறியும்! ஒவ்வொரு பூதத்தையே அறியும்.

    நம் உடம்புக்குள் ஐம்பூதத்தையும் அறிந்துகொள்ளும் ஐந்தறிவையம், ஐந்து அறிவுக் கருவிகளையும் உலகின் புறத்து உறுப்பாக இறைவன் படைத்திருக்கி றார். அவ்வாறே, உடலின் உள்ளே ஐந்துவகை அறிவையும் அறிந்து கொள்ளும் மூளையையும் படைத்துள்ளார். இவ்வாறு அறிந்து கொள்ளும் அறிவை மேலாக அறிந்து கொள்ளும் மனத்தையும், அது இன்னது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் புத்தியையும், அதனை ஏற்றுக்கொள்வோம் என்று முயலும் அகங்காரத்தையும், அதை நிரந்தரமாக ஆக்கிக் கொள்ளும் சித்தத்தையும் இறைவன் நமக்கு அளித்துள்ளார். அவற்றை அந்தக் கரணங்கள் என்பர். இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளும் ராஜஸம் , தாமசம், சத்துவம் ஆகிய மூவகை குணங்களுடன் மனிதனை வாழ வைக்கிறார்!

    இவற்றை அன்னையே நமக்குள் வைத்து வேதிவினை செய்து நம்மை உயிர்ப்புடன் திகழ வைக்கிறாள். இதனைத் திருவாசகம் ‘’வேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை! ‘’ என்று போற்றுகிறது. இதனை விரிவாக அபிராமி பட்டர் , அபிராமியந்தாதியில் பாடுகிறார்.

    ‘’பாரும் புனலும் கனலும் காலும் படர்விசும்பும்
    ஊரும் முருகு சுவையொளி யூறுஓசை ஒன்றுபடச்
    சேரும் தலைவி சிவகாம சுந்தரி ‘’

    என்பது அப்பாடல் பகுதி. இவ்வாறமைந்த ஐம்புலன், நான்கு அந்தக் கரணம், மூன்று குணங்கள் அனைத்தும் சுந்தர மூர்த்தி சுவாமிகளிடம் எவ்வாறு செயல் பட்டன என்பதைச் சேக்கிழார் பெருமான் விளக்குகிறார்.தில்லையம்பதிக்குள் நுழைந்து, அம்பலத்தை அடைந்து அணுக்கன் திருவாயிலில் புகுந்து ஆடல் அரசராகிய சிவபெருமானைச் சுந்தரர் கண்களால் காண்கிறார்! அக்கண்களால் காணும் போதே, பாதச் சிலம்பொலி கேட்டு, இறைவனைச் சூழ்ந்த நறுமணத்தை நுகர்ந்து, உடலார உணர்ந்து, இறைவன் திருவடிமலர்த் தேனைச் சுவைத்து விடுகிறார். இதனைச் சேக்கிழார்,

    ‘’ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள ‘’

    என்று பாடுகிறார்.ஐந்துபேர் அறிவு – ஐந்துவகையாக ஐந்து வழிகளிலே பெயர்கின்ற அறிவு. அறிவு ஒன்றேயாயினும் ஐந்து வெவ்வேறு புலன்வழியே சென்று, ஐந்து வெவ்வேறு பொறிகளின்மூலம் ஐந்து வெவ்வேறு பொருள்களை அறியுமாதலின் ஐந்தறிவாம்.

    கண்களே கொள்ள – ஐம்பொறி வழி அறியும் ஐம்புல அறிவும் கண்ணாகிய ஒரு பொறிவழி யறியும் காட்சியறிவின் மட்டிலே அமைந்துநிற்க.அதாவது ஏனைய, மூக்கு, நாக்கு, மெய், செவிகளின் வழியே அவற்றின் புலன்களிடத்து அறிவு செல்லாமையின் இவை நான்குந் தொழிற்படவில்லை. அதாவது : கண் கண்டுகொண்டே நிற்கக், காது கேளாது – மூக்கு முகராது – என்றபடி. அடுத்து, கண்களுக்குச் சொல்லியவாறே கரணங்கள் நான்கும் சிந்தையேயாக என்ற இடத்து அந்தக்கரணங்கள் நான்கினுள்ளே ஒழிந்த ஏனைய சிந்தை அகங்கார முதலியவைகள் தொழிற் படாது, நான்கும் சிந்தையின் தொழிலேயாகி நிற்க எனவும்; குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமே யாக – சாத்துவிகம், இராசதம், தாமதம் என்ற மூன்று குணங்களில் ஏனையிரண்டும் தொழிற்படாமல் சாத்துவிகத்துள் அடங்கி நின்றன எனவும் கொள்க.

    இதனைச் சேக்கிழார் ,

    ‘’அளப்பரும் கரணங்கள் நான்கும்,
    சிந்தையே ஆக , குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக’’

    என்று பாடுகிறார். இறைவனின் திருக்கூத்துக் காட்சியை சுந்தரர் அப்படியே உள்வாங்கிக் கொண்டு விடுகிறார். அவர்கண்கள் ஐம்புலன்களின் அறிவையும் ஒன்றாக்கி விட்டன; உள்நுழைந்து மூளையில் எட்டிய அறிவு பேரறிவாகி விட்டது! அப்பேரறிவை அப்படியே மேற்கொள்ளும் மனமும் , ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் புத்தியும் , உடனே தனதாக்கிக் கொள்ளும் அகங்காரமும் அனைத்தையும் நிரந்தரமாக்கிக் கொள்ளும் சித்தமாகி விடுகிறது. எதனையும் முரட்டுத்தனமாக விரைந்து ஏற்றுக்கொள்ளும் ராஜஸம் என்ற குணம், மெதுவாக ஏற்றுக் கொள்ளும் தாமச குணத்துக்குள் அடங்கி , அதுவும் மிக மென்மையான ஞானமாகிய சத்துவகுணத்துக்குள் அடங்கி விடுகிறது.
    குணம் மூன்றும் கரணம் நான்கினைத் தூண்டத் தனித்தனிப் பன்னிரண்டு நிலைகள் உண்டாம். இவை வெவ்வேறாய் ஐம்பொறி புலன்வழிக் கலக்க மேலும் பல செயல்கள் உண்டாம். இவற்றிலே பிற எல்லாம் ஒழித்துச் சாத்துவிகந் தூண்டக் கிளம்பிய மனநிலை கலந்த கண்ணின் செயல் ஒன்றே இங்குக் குறித்ததாம். இதனைச் சேக்கிழார்,

    ‘’வந்தபேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்’’

    என்றுபாடுகிறார். மகிழ்ச்சி வந்தால் மாறுபட்ட வருத்தத்தின் துன்பம்இனி இல்லை என்ற இரட்டை நிலைஉண்டாகும். இங்கே மாறிலா மகிழ்ச்சி என்ற ஒரே நிலை உண்டாகி விட்டது! இந்நிலை முறையான பக்திநெறி வழியில் சென்று, நேர்மையான ஞானநெறிக்குள் இணைந்து, ஒரு தூண்போல கர்ம நெறியில்நின்று இறைவனை யன்றி வேறெதனையும் உணராத யோக நெறிக்குள் நிற்கும் பெருநிலை உருவாகும் ! இதனையே திருமூலர்

    ‘’நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
    தறியிருந் தாற்போலத் தம்மை இருத்திச்
    சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணராக்
    குறி, அறிவாளர்க்குக் கூடலும் ஆமே.“

    என்று பாடுகிறார். அவ்வாறு இறைவன்ஆடும்கூத்து, ஆனந்தக்கூத்து, எல்லையில் கூத்து, தனிக்கூத்து , பெருங்கூத்து, தனிக்கூத்து எனப்பகுத்து உணரப்படும். வெளியே ஆடுகின்றாரைக் கண்களே கொண்டதனால் ஆடும் கூத்து என முதலிற் கூறினார். கண்டதன் விளைவு ஆனந்தமாதலின் அதனை ஆனந்தக் கூத்து என்றும் , அது அம்மட்டோடு நிற்கும் அளவுபடாமையின் எல்லையில்கூத்து என்றும், இது ஐங்கலைகளின் அதி தெய்வங்களையும் அதிட்டித்துப் பெத்த நிலையில் ஆடுங்கூத்து ஆகிய ஊனநடனம் போலன்றி மோனந்த மாமுனிவர்க்கு மும்மலத்தை மோசித்த முத்திநிலையிற் செய்யும் ஞானநடன மாதலின் தனிக்கூத்து என்றும், இதற்குமேல் வேறொன்றின்மையின் பெருங்கூத்து என்றும் கூறினார்.. பிறரை அதிட்டித்தலின்றித் தானே செய்தலின் தனிக்கூத்தென்பதாம்.இக்கூத்தையே

    “மன்னுசிற் றம்பலத்தே, ஆதியு முடிவுமில்லா வற்புதத் தனிக்கூத்தாடும், நாதனார்“

    என்று சேக்கிழாரே பின்னர்ப்போற்றியதுங் காண்க. ஆடுங்கூத்து இருவகைப்படும். அவை சாந்திக்கூத்து, விநோதக் கூத்து என்பன.

    “அவைதாம், சாந்திக்கூத்தும் விநோதக் கூத்துமென்,
    றாய்ந்துற வகுத்தன னகத்தியன் றானே“

    என அடியார்க்குநல்லார் சிலப்பதிகார வுரையிற் காட்டியது காண்க.

    இறைவனாடும் கூத்து சாந்திக்கூத்தின் பாற்படும். அவன் இன்ப சொரூபனாதலின் அவனதாடலும் இன்பம் பயப்பதாம். உயிர்களை ஆனந்தத்தில் அழுத்திவைக்குஞ் செயலுடைமையான் ஆனந்தக் கூத்தாயிற்று. அக்கூத்து இறைவனைப்போன்று முதல் நடு ஈறு அற்றதாதலின் எல்லையில் கூத்தெனப் பெற்றது. கூத்தாடுவோர் பல முத்திரைகளைக் காட்டுதல்போல இறைவனும் தமது இரு திருக்கரங்களில் உடுக்கையும், அங்கியும் பிடித்துக் காட்டியும், அபய, வரத திருக்கரங்களைக் காட்டியும், ஒரு திருவடி முயலகனை மிதித்தும், மற்றொன்றைத் தூக்கிக் காட்டியும், தாமே சிருட்டி, திதி, சங்காரம், திரோதம், அநுக்கிரகம் எனும் பஞ்சகிருத்தியங்களைச் செய்ய வல்லவர் எனப் புலப்படுத்துவாராயினார். இரு கால்களினாலாடாது ஒற்றைக் காலினால் புரியும் தாண்டவம் செய்பவராயினார். பிறர்போல் இருநிலத்தினின் றாடாது ஆகாய வெளியிலாடும் கோலமுடையவரானார். ஆடுவோர் பிறருக்கு நட்டுவன் இன்றியமையாதவனாம். ஆயின் இறைவன் தாமே உயிர்களை யாட்டிவைக்கும் விறலுடையாராய்த் தன்னிற் றொழிற்படுத்துவோன் வேறொருவனில்லாமையான் நட்டுவனார் ஒருவனைப் பெற்றாரில்லை.
    “நட்டுவனாரை யறிகிலன்“ என வரும் பழமலையந்தாதிச் செய்யுள் காண்க. ஆதலினாலும் இது தனிக்கூத்தாயிற்று. இனி இப்பாடலை முழுமையாகப் பயின்று இன்புறுவோம்

    ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும்
    சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக
    இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின்
    வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.

    ‘’இப்பாடலில் இந்துவாழ் சடையான் – சந்திரன் வாழ்வடைதற்கு ஏற்ற இடமாகிய சடையனை உடையான். சடையை அடைந்ததனால் சந்திரன் தனக்குத் தக்கன் சாபத்தால் வந்த குறை நோயும், இறப்பும், தீரப்பெற்றதுமன்றிப் பகைத் தீர்வும் ஏற்றமும் பெற்று நிலவினமையாலே வாழ் என்றார். இப்பாடல் திருச்செந்தில் முருகப்பெருமான தருள் (பெற்று, அவ்) வழியே சென்ற குமரகுருபரருடைய வாக்கு வன்மை, தருமபுர ஆதீனம் நான்காவது குருமூர்த்தியாகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த குருமூர்த்திகளின் முன்னர்த் தடைபட்டதன்மூலம் அவரே ஞானகுரு என்று காட்டித்தரக் காரணமாயிருந்தது இத் திருப்பாட்டேயாம் என்பது வரலாறு. ஆதலின் இதன் பொருளை விளக்குதல் விதிப்படி ஞானோபதேசமும் குருவருளும் பெற்ற அநுபூதிமான்களுக்கே கூடுவதன்றி என்போன்ற எளியோர்க்கு இயல்வதன்று.’’ என்று உரையாசிரியரும் , பின் வந்த ஞானியரும் கூறி, சேக்கிழாரின் பா நயத்தை மிகுவித்தனர்.

    மேலும் ஐந்து புலங்களால் நாம் பெறும் அறிவைச் சிற்றறிவு என்று பெரியோர் உரைப்பர்.’ ‘’சில்வாழ்நாள் சிற்றறிவு பெரும்பிணி யுடைய மனிதப்பிறவி ‘’ என்பது சான்றோர் கூற்று. ஆனால் சேக்கிழார் இங்கே ‘ஐந்து பேரறிவு ‘ என்று அறிவுக்குஓர் அடைமொழி தந்து சிறப்பித்திருப்பதை நோக்க வேண்டும். ஐம்புலன்களால் அறியும் புலனறிவு, மேலும் ஆழமாகி அப்புலன்களின் வழியே உணரும் மெய்யுணர்வைக் குறிக்கும்போது , ‘பேரறிவு’ எனச் சிறப்பிக்கப் பெறுகிறது. இதனை ,

    ‘’ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
    மெய்யுணர் வில்லா தவற்கு‘’

    என்ற திருக்குறளுக்குப் பரிமேலழகர் கூறும் உரை விளக்குகிறது. மெய்யுணர்வினை அவர் தாரணை என்பர். தாரணை என்பது யோகத்தின் ஓர் அங்கம். அது, கண்டம், இதயம், நெற்றி, கபாலம், நாபி இவற்றுள் ஓன்றில் எப்போதும் சிந்தை வைத்திருத்தல். இதனையே சேக்கிழார் ‘’ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள ‘’ என்று தியானமுறைப்படி ஐந்து பேரறிவும் கண்களில் நிலைத்த அழகை விளக்குகிறார்.

    இதனை மேலும் தெளிவாக ‘’அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக’’ என்று கூறும் நயம், எண்ணியெண்ணி மகிழ்தற்கு உரியது.

    Share
  • சிரிப்புக்கு இவர்தானே சிரபுஞ்சி!

    சிரிப்புக்கு இவர்தானே சிரபுஞ்சி!

    (நகைச்சுவை எழுத்தாளர், கவிஞர், நடிகர் கிரேஸி மோகன் அவர்களின் மறைவுக்கு வல்லமையின் ஆழ்ந்த இரங்கல். வல்லமையில் அவர் எழுதிய பல்லாயிரம் வெண்பாக்களும் சந்தப் பாக்களும் அவர் புகழையும் ஆற்றலையும் உலகிற்கு முழங்கிக்கொண்டே இருக்கும். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார். வாசகர்கள், சக எழுத்தாளர்கள், நண்பர்கள், கிரேஸி மோகன் குறித்த நினைவுகளை வல்லமையுடன் பகிருமாறு அழைக்கிறோம் (vallamaieditor@gmail.com)  – அண்ணாகண்ணன்)

    காவிரிமைந்தன்

    வாழ்கின்ற வாழ்க்கையில் வருகின்ற கவலைகள்
    வாய்விட்டுச் சிரித்தால்தான் போகும்!!
    ஆறறிவு மானுடர்க்கும் ஐந்தறிவு ஜீவன்களுக்கும்
    அடிப்படையில் வேற்றுமை அதுதானே சிரிப்பு!!

    பரபரப்பாய் இயங்கிடும் பம்பர கதியிலுமே
    பல்லைக் காட்டிச் சிரிக்கும்போதே நோயகலும்!
    யாரிதற்கு வழிவகுப்பார்? யாரை இங்கே அணுகிடலாம்?
    கிரேஸி இருக்க ஏது பயம் என்றதுவே உண்மைதானே!!

    இயல்பான நகைச்சுவையை இனிதாக வழங்கவல்ல
    இரட்டையரில் இவர் ஒருவர்! ஹாஸ்ய கர்த்தா!!

    நாடக மேடைகளை நாடுதோறும் சென்று நடத்தி
    நகைச்சுவைக்கு நாங்கள் என்றே பேரெடுத்தவர்!!

    திரையுலக ஜாம்பவான்கள் சிலரும்கூட கூட்டணிவைத்து
    வெளிப்படையாய் வெற்றிக்குக் காரணம் இவரென்றாரே!!

    எவ்வயது கொண்டவரையும் சிரிக்க வைத்து
    இடைவெளி இல்லாமல் வயிறு குலுங்க வைத்து

    திறம்படவே பலகாலம் பவனி வந்தார்!
    இறையருளால் வெண்பாக்கள் இயற்றி வந்தார்!

    இவருக்கு இணைசொல்ல யாருமில்லை
    இறக்கும்வரை சிரிப்பதற்கே மறக்கவில்லை!

    சிரிப்புக்கு இவர்தானே சிரபுஞ்சி!
    கிரெஸி என்றால் கொண்டாட்டம்!
    மோகன் என்றால் குதூகலம்!
    கூட்டுக் குடும்பத்திற்கு எடுத்துக்காட்டு!
    வார்த்தைக்கு வார்த்தை விஞ்சிநிற்கும்
    வளமான நகைச்சுவை இன்பம்! இன்பம்!
    மேடை நாடகங்கள் காண்பதற்கு
    கூடும் மக்களின் கூட்டம் சாட்சி!
    சிரிப்பலைகள் ஒன்றையொன்று அடங்குமுன்னே
    அடுத்ததாக எடுத்துவிடும் சாதுர்யமென்ன?
    மண்ணுலகில் வந்ததவர் காரணம் முடிந்ததோ?
    விண்ணுலகில் சிரிக்கவைக்கப் புறப்பட்டாயோ?
    புன்னகையை ஒருசிறிதும் மறக்காமல் பிறருக்கும்
    எந்நாளும் வழங்கிட்ட வள்ளல் கிரேஸி புகழ்வாழ்க!!

    அன்புடன்
    காவிரிமைந்தன்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
    சென்னை 600 075.

    ==============================================================

    “காலம்”

    மீ.விசுவநாதன்

    வித்தையுண்டு நல்ல விநயமுடன் ஆழ்ந்ததோர்
    பக்தியுடன் நற்பேறு பாட்டெழுதும் சக்தியுண்டாம்
    இத்தனையும் எங்கள் கிரேசிமோக னுக்குண்டாம்
    சித்தத்தில் வைத்தான் சிவன்.

    (660) 10.06.2019

    ==============================================================

    Share