Blog

  • படக்கவிதைப் போட்டி – 218

    படக்கவிதைப் போட்டி – 218

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (30.06.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • இலக்கியச் சிந்தனை 587 + குவிகம் 51

    இலக்கியச் சிந்தனை 587 + குவிகம் 51

    இலக்கியச் சிந்தனையும் குவிகமும் இணைந்து அழைக்கின்றன.

    Share
  • கடமையால் உயர்ந்த காவற் கோபுரம்

    கடமையால் உயர்ந்த காவற் கோபுரம்

    ஔவை நடராசன்

    கல்வியாளரும், அறிவிற்சிறந்த மரபின் கிளையாகவும் திகழ்ந்த காவல்துறைத் தலைவர் வி.ஆர்.இலட்சுமி நாராயணன் அவர்கள், இந்திய நாடு முழுவதும் நன்கறிந்த காவல்துறையின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார்.

    சிறந்த ஆங்கிலப் புலமையும் சிந்தனை வளமும் செயல் நேர்மையும் அவர் புகழுக்கு அணி சேர்த்தன.

    பல முறைகள் அண்ணா நகரில் நான் அவரைக் கண்டு பேசியிருக்கிறேன். மறைந்த வழக்கறிஞர் நண்பர் தெய்வசிகாமணி தான், அவர் இல்லத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்.

    எண்ணிப் பத்தாண்டுகளுக்கு முன்னர் அவர் ஆங்கில இந்து நாளிதழில் எழுதிய கடிதங்கள், அவரின் சிந்தனைப் பெருமிதத்தைக் காட்டின. நானும் அவரும் பல இலக்கிய மேடைகளிலும், இசை அரங்குகளிலும் பங்குகொண்டு பேசியிருக்கிறோம்.

    ஒரு முறை நீதியரசர் மேதை வி.ஆர்.கே. இல்லத்தில் விருந்துண்டதாக நினைவு .

    முதுமை என்பது, காலம் செல்லச் செல்லக் கனிந்து பழுத்ததும் காம்பிலிருந்து உதிரச் செய்து விடுகிறது. அந்த வகையில்தான், அறிஞர் இலட்சுமி நாராயணன் மறைந்தார்.

    எ.எஸ்.பி. ஐயர் தலைமுறையின் ஒரு மாமணியை இழந்துவிட்டோம். காவல்துறையில் பணியாற்றியபோதும் கனிவு ததும்பும் கடமை உணர்ச்சிக்கு அவர் உயரிய எடுத்துக்காட்டாக ஒளிர்ந்தார்.

    நான் அவரிடத்தில் பேசிய போதெல்லாம் அவரின் அண்ணன் நீதியரசர் விஆர்.கிருஷ்ணய்யரைப் பற்றித்தான் பேசினார் .

    தனக்குப் புகழ் வேண்டாத தலைவராக வாழ்ந்தார் .  ஒரு முறை அருளைக் கண்டு ஆரத் தழுவி, அப்பாவை நீ மிஞ்சுகிறாய் அதற்கு அடையாளம் தெரிகிறது என்று பாராட்டி என்னிடத்தில் புகழ்ந்தார்.

    அண்ணா நகர் சிகரப் பூங்காவில் அமைதியாக நடந்து வந்த நடையாளரை இழந்த துயரத்தை எண்ணி இரங்குகிறேன்.

    Share
  • A symphony with water colour

    A symphony with water colour

    Art by Jayanthi Sankar, Singapore

    Preserving the subjects with masking fluid to create the back grounds first – with the twilight, the reflections, water surface, the door, and the night sky were the most crucial. Removing masking fluid on the A3, 300mg watercolour papers to work on the subjects needed more care and very gradual building with dilute pigment. My constant dialogues with water in the past two years have been beautifully creating an effect of a symphony in me. Lovely experience🙂

    Share
  • தனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்

    தனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்

    The Extraordinary Journey of the Fakir என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கென் ஸ்காட் (கனடா நாட்டு இயக்குநர்) இயக்கிய படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பெற்று வெளிவந்துள்ளது. புதிய கதைக் களத்துடன் சுவையான படமாக அமைந்துள்ளதாகத் திரை விமர்சனங்கள் பலவும் தெரிவிக்கின்றன. வல்லமை வாசகர்கள் யாரும் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால், உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

    Share
  • வண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி

    வண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி

    மரபின் மைந்தன் முத்தையா

    காலத்தின் தோள்களிலே குயிலாக உட்கார்ந்து
    கானங்கள் இசைத்தவனைப் பாடு
    காற்றுவரும் திசையெல்லாம் குளிர்ந்துவரும் அவன்பாட்டில்
    கூறியுள்ள வாழ்க்கைமுறை தேடு

    ஞானத்தின் கருவூலம் தான் என்று இருந்தாலும்
    நான் என்ற ஆணவமே இன்றி
    வானத்தின் செய்திகளை வார்த்தைகளில் வார்த்தளித்த
    கண்ணதாசக் கவியரசே நன்றி

    சூட்சுமங்கள் எத்தனையோ சொல்லி வைத்த உன் கவிதை
    சூத்திரமாய் இருக்குதய்யா வாழ்வில்
    காட்சிக்கு இலை எனிலும் கருத்தெல்லாம் நிறைந்தவனே
    கைகூப்பினோம் உனது நாளில்

    சிறுகூடல் பட்டியையோர் ஷேத்திரமாய் ஆக்கியவன்
    சிறகடித்து ஆண்டுகளும் ஓடும்
    வருங்காலம் எப்போதும் வரகவியே உன்னுடைய
    வண்ணத்தமிழ் பாட்டிசைத்தே வாழும்

    Share
  • காலமெலாம் வாழும் கண்ணதாசன்!

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு
    பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே
    நிலைநிற்கும் பலகருத்தைச் சுமந்துவந்த அவர்பாட்டு
    நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது!

    பட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்
    பலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்
    இஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்
    கஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான்!

    கருவிலே கற்பனையைக் காவிவந்த கண்ணதாசன்
    உருவிலே கம்பனாய், காளிதாசன் போலானான்
    துருவியே தமிழ்கற்றான் துணிவுடனே கவிதந்தான்
    அருமைமிகு கண்ணதாசன் அகமெங்கும் வாழுகிறான்!

    வேதக்கருத்தை எல்லாம் மிகச்சிறப்பாய்த் தமிழாக்கி
    காதினுக்குள் செலுத்துதற்குக் காரணமாய் இருந்தானே
    கீதைதனைப் படிப்பதற்கும் பாதைதனை அமைப்பதற்கும்
    போதனையாய்ப் பாவெழுதிப் போதித்தான் கண்ணதாசன்!

    Share
  • எங்கே போகும்?

    எங்கே போகும்?

    மணிச்சிகை

    நாட்டை ஒருவன் குப்பை என்றான்
    ஆங்கோர் திரைப்படத்தில்,
    நமக்கோ உடனே ரோசம் வந்தது!
    நல்லது நல்லதுதான்!
    ஏட்டில் காட்சியில் இழித்துச் சொன்னால்
    எழுந்து வரும்கோபம்
    ஏனோ வாழ்க்கை வாழும் போதில்
    எவர்க்கும் வருவதில்லை!

    குழுமிக் கிடக்கும் குப்பைக் கூட்டம்,
    கூடவே பசுக்களிங்கு!
    குவியும் நெகிழி உண்டு நலத்தில்
    குலையும் உயிரனங்கள்!
    மழைக்கா லத்தில் அள்ளாக் குப்பை
    மழையில் என்னபடும்?
    மக்கள் சிந்தனை எங்கே போனது?
    மாற்றம் என்றுவரும்?

    பசுமை என்று பெயரை வைத்தால்
    பசுமை நேராது!
    பளிங்குக் கற்கள் எந்தப் போதும்
    பால்நில வாகாது!
    தசையின் அழுக்கு தேய்த்துக் குளிக்கத்
    தேவை என்பதுபோல்,
    தரையில் ஊரில் குப்பை அழுக்கு
    தேவை சுத்தமொன்றே!!

    Share
  • கலிகாலத்தில் நல்லவர்கள்!

    கலிகாலத்தில் நல்லவர்கள்!

    நிர்மலா ராகவன், மலேசியா

    நலம்…நலமறிய ஆவல் – 163

    மகிழ்ச்சி அடைவதே தவறு என்பதுபோல் நடந்துகொண்டுவிட்டு, பிறகு தம்மைத் தாமே சமாதானப்படுத்திக்கொள்ளக் கூறுவது: `இந்தக் கலிகாலத்தில் நல்லவர்கள்தாம் அதிகமாகக் கஷ்டப்படுவார்களாமே!’

    `இன்னா செய்தார்க்கும்..’ என்று திருவள்ளுவர் எக்காலத்திலோ சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால், இன்று நமக்குத் தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்தால், நாம் ஏமாளி என்று நினைத்து இன்னும் எல்லை மீறுகிறார்கள். தேவையற்ற துன்பங்களை அனுபவிப்பதற்கு நல்லவர்களாக இருந்து என்ன பயன் என்ற விரக்தி ஏற்பட்டுவிடுகிறது.

    எதிர்ப்பா, மௌனமா?

    `நல்லவனாக இருக்கத்தான் எனக்குப் பிடிக்கும். ஆனால் அது எப்படி முடியும்?’ என்று கேட்பவர்களுக்கு:

    பிறர் நமக்குத் தீமை இழைத்தால் அதை பொறுத்துப்போவானேன்! அப்படிப்பட்டவர்களுக்குப் பயந்து நடந்தால், நமது சக்தி அவர்களுக்குப் போய்விடுகிறது. நாம் எதிர்த்தால் அவர்கள்தாம் சக்தியை இழந்துவிடுகிறார்கள்.

    கோபத்தை மௌனத்தால் வெல்லலாம் என்கிறார்கள். சில சமயங்களில் இம்முறை பலனளிக்கலாம். ஆனால், அவசியம் என்னும்போது கோபத்தை வெளிக்காட்டத்தான் வேண்டியிருக்கிறது.

    அளவுக்கு அதிகமாக பொறுமைகாப்போர் நாளடைவில் பலகீனம் அடைந்துவிடுவதுண்டு. இவர்களில் சிலருக்கு எதிலும் பிடிப்பற்றுப் போய்விடக்கூடும்.

    பிறரோ, எதிர்த்துச் சண்டைபோடத் தைரியம் இல்லாது, பின்புறம் போய் முதுகில் குத்தும் முறையைக் கையாள ஆரம்பிக்கிறார்கள்.

    கதை

    புதிய மணப்பெண்ணான பாலம்மா கிராமப்புறத்திலிருந்து வந்தவள். புக்ககத்தினரோ நாகரீகமான நகரைச் சேர்ந்தவர்கள். அவளுக்கு அவர்கள் வாழ்க்கைமுறை புரியவில்லை.

    எனினும், `பெரியவர்கள் சொல்வதையெல்லாம் சற்றும் யோசியாது, அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்’ என்ற முறையில் வளர்க்கப்பட்டிருந்ததால், எல்லாரையும் அனுசரித்துப்போனாள்.

    திருமணமாகிப்போன அவளுடைய நாத்தனார்கள் பிறந்தகத்திற்கு வந்தபோதெல்லாம் பெற்றோரிடம் துணிச்சலாகப் பேசுவதைப் பார்த்து, தான் எதையோ இழந்துவிட்டதைப்போல ஒரு வெறுமை உண்டாயிற்று.

    பாலம்மாவுக்கும் சிறிது தைரியம் வந்தது. ஆனாலும், `மூத்தவர்களை எதிர்ப்பதா!’ என்று தோன்றிப்போக, அவர்களுக்குப் பின்னால் அவதூறாகப் பேச ஆரம்பித்தாள்.

    குடும்பத்தில் மூத்தவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தது நற்குணமாக இருக்கலாம். ஆனால், அவளுக்கு எந்த உரிமையையும் கொடுக்காது, `அசடு’ என்று அவர்கள் ஓயாது பழித்தபின்னரும் பொறுத்துப்போனது பாலம்மாவின் தவறு.

    தன்னை மாற்றிக்கொள்ள முடியாது, `என் வாழ்க்கையை இப்படியே, பிறர் சொல்வதைக் கேட்டே, கழித்துவிடுகிறேன்!’ என்று கண்டவரிடமெல்லாம் சொல்லிப்பார்த்தாள். அதில் நிறைவில்லை.

    தன்னைப்போல் இல்லாத, பிற கலாசாரங்களிலிருந்து வந்தவர்களுடன் பாலம்மா தன் அவலத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தால், ஒருக்கால் தீர்வு கிடைத்திருக்கும்.

    நல்லவனாக நடி

    `என்னை நல்லவர், திறமைசாலி என்று பிறர் பாராட்ட வேண்டும்!’ என்று உறுதி எடுத்துக்கொண்டவர்போல் நடப்பது போலித்தனம். குறுகிய காலத்தில் பதவியும், அத்துடன் பெரும்பொருளையும் அடைய முனைகிறவர்கள் செய்யும் உத்தி இது. நினைத்ததை அடைந்தவுடன் நல்ல குணமும், முன்பு காட்டிய சுறுசுறுப்பும் எங்கோ காணாமல் போய்விடும்!

    பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நம்பி நடப்பவர்கள் பெரும்புகழை வாங்கலாம். ஆனால், மனோதிடமோ, நற்பண்போ இல்லாவிட்டால் வாழ்வில் எதிர்ப்படும் இடர்களைக் கடக்க இயலுமா?

    பிறர் படும் துயர்களைப்பற்றிப் பேசியே பொழுதைக் கழிப்பவர்கள் தம்மைப்பற்றி சற்று மறக்கலாம். `எனக்குப் பிறரது நலனில் மிகுந்த அக்கறை!’ என்று காட்டிக்கொள்ளும் முயற்சி இது.

    நாம் பேசுவதால் மட்டும் பிறரது கஷ்டங்கள் குறைந்துவிடுமா? அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்று யோசித்து, காரியத்தில் இறங்கினாலாவது பயனுண்டு.

    எல்லாருக்கும் நம்மைப் பிடிக்கப்போவதில்லை. நம்மைப் புரிந்துகொள்ளவும் முடியாது. (நமக்கே நம்மைப் புரிகிறதா என்பது வேறு விஷயம்).

    பார்ப்பவர்கள் அனைவரையும் கவரவேண்டும்; குறைந்த பட்சம் அவர்களது ஆமோதிப்பையாவது பெறவேண்டும் என்றெண்ணியே நடந்தால், சக்தி விரயமாக, சலிப்புதான் மிஞ்சும். நம் எல்லையை நிர்ணயிக்கும் உரிமையை பிறருக்கு எதற்காக வழங்கவேண்டும்?

    சில சமயம், குடும்பத்தினரே, `இவன் வித்தியாசமாக இருக்கிறானே, கஷ்டப்படப்போகிறானே! என்ற கரிசனத்துடன், ஒருவர் தேர்ந்தெடுத்த பாதையைக் குறைகூறினாலும், `நான் செல்வது நல்வழியில்தான்!’ என்று உறுதியுடன் நடந்தால், அவரையொத்த பிறரது நட்பு கிடைக்கும். அவர்கள் பக்கபலமாக அமைவார்கள்.  

    யார் நல்லவர்கள்?

    பிறரது துன்பத்தை தாமே அனுபவிப்பதுபோல் உணர்ந்து, அதைக் குறைக்கத் தம்மால் இயன்றதைச் செய்பவர்கள்.

    நம்மை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தால், ஏமாற்றாமல் அதைச் செய்பவர்கள். இத்தகையவர்களுக்குப் பிறரது கண்காணிப்பு அவசியமில்லை.

    கதை

    ஈவலின், பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்தவள். கணவரைவிட்டு, பிழைப்பைத் தேடி மலேசியா வந்திருந்தாள். (ஆங்கிலம் தெரிந்திருப்பதால், அந்நாட்டு பணிப்பெண்களுக்குக் கூடுதலான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது).

    கணவன், மனைவி, இரண்டு வயதுக் குழந்தை ஆகியோர் மட்டும் கொண்ட சிறிய குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கிடைத்தது. வீட்டு வேலையைச் சுத்தமாகச் செய்ததால், கவலையின்றி, எல்லா பொறுப்புகளையும் அவளிடமே விட்டது குழந்தை ஏமியின் (Aemi) தாய் செய்த தவறு. `என் குழந்தைக்கு என்னைத் தெரியாது! எல்லாவற்றையும் என் `மெய்ட்’ பார்த்துக்கொள்கிறாள். நான் தனியாக வெளிநாட்டுப் பயணம் செய்யச் சௌகரியமாக இருக்கிறது!’ என்று பெருமை பேசும் ரகம் அவள்.

    மூன்று வயதான ஏமி நோஞ்சானாக இருந்தாள். அதிகமாகப் பேசவில்லை. எதிரிலேயே இருந்த விளையாட்டு மைதானத்தில் தினமுமே அவள் சோர்ந்திருப்பதைப் பார்த்த நான், “ஏமி என்ன சாப்பிட்டாள்?” என்று ஒருநாள் விசாரித்தேன்.

    “ஜூஸ்!”

    “எப்போது?” என்று துருவினேன்.

    “அவள் தூங்குவதற்குமுன்”.

    “எப்போது தூங்கினாள்?” என்று கேட்க, ஐந்துமணி நேரத்திற்குமுன் என்று தெரிந்தது.

    சிறு வயதிலிருந்து என்னைத் தினமும் பார்த்திருந்தும், பதினைந்து வயது ஏமி, “யார் இது?” என்று என்னைக் காட்டி என் பேத்தியிடம் விசாரித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

    நான்கு வயதுக்குள் மனித மூளையில் 80% வளர்ந்துவிடுகிறது. அது நல்லபடியாக வளர சத்தான ஆகாரமும், தகுந்த ஓய்வும் வேண்டாமா?

    ஏமி ஐந்து மணிநேரம் தூங்கினாள் என்றால், அது களைப்பால். `பசிக்கிறது’ என்று சொல்லி அழக்கூடத் தெரியாது இருந்ததால், ஈவலின் அடித்து, மிரட்டி இருப்பாள் என்று தோன்றியது.

    இந்த இரண்டு பெண்களில் யாரை நோவது?

    யார் நல்லவள், யார் கெட்டவள்?

    தன் கடமையில் சற்றும் பொறுப்பின்றி, `விடுமுறைக்கு என் கணவரைப்போய் பார்த்துவிட்டு வந்தேன். பாஸ் (Boss) எனக்காக விமான டிக்கெட் வாங்கினார்!’ என்று பெருமை பேசிய ஈவலினா, அல்லது குழந்தை எப்படியோ வளர்ந்தால் சரி என்று விட்டேற்றியாக இருந்த அந்தத் தாயா?

    Pic courtesy: https://www.maxpixel.net/Model-Beautiful-Woman-People-Portrait-Fashion-2303383

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    -நாங்குநேரி வாசஸ்ரீ

     

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    57. வெருவந்த செய்யாமை

    குறள் 561:

    தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங் கொறுப்பது வேந்து

    செஞ்ச தப்ப நியாய வழில கவனிச்சு பாத்து திரும்ப அவன் அந்த தப்ப செய்யாம இருக்கதுக்கு ஏத்தா மாதிரி தண்டன கொடுக்கவனே ராசா.

    குறள் 562:

    கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்

    நெறைய நாள் செல்வாக்கோட இருக்கணும்னு நெனைக்கவங்க கண்டிக்கத் தொடங்குதப்போ கடுமையா தொடங்கிட்டு பொறவு வரம்பு மீறாம தண்டன கொடுக்கணும்.

    குறள் 563:

    வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

    மக்கள் பயப்படுதமாரி இருக்க  கொடுமக்கார ராசா நடத்துத ஆட்சி வெரசலா அழிஞ்சு போவும்.

    குறள் 564:

    இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
    உறைகடுகி ஒல்லைக் கெடும்

    நம்ம ராசா கொடுமக்காரன்னு மக்கள் சொல்லுததக் கேட்டு இருக்க ராசாவோட ஆட்சிக்காலம் கொறஞ்சு அவன் கெட்டழியுவான்.

    குறள் 565:

    அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
    பேஎய்கண் டன்ன துடைத்து

    கடுகடுனு மொகத்த வச்சிக்கிட்டு யாராலயும் சுளுவா பாக்கமுடியாதவனா இருக்கவன் கிட்ட குவிஞ்சு கெடக்க சொத்து பேய் கணக்கா பாக்குததுக்கு பயப்படுத்தும்.

    குறள் 566:

    கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
    நீடின்றி ஆங்கே கெடும்

    கடுமையா பேசி, தயவு தாட்சண்யமே இல்லாம இருக்கவன் கிட்ட உள்ள செல்வம் நிக்காம அழிஞ்சு போவும்.

    குறள் 567:

    கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
    அடுமுரண் தேய்க்கும் அரம்

    கடுஞ்சொல்லும் வரம்பு மீறின தண்டனையும் ஒரு ராசாவோட பகைய செயிக்க ஒதவுத ஆயுதத்த தேச்சி மொண்ணையாக்குத அரம் கணக்கா ஆவும்.

    குறள் 568:

    இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
    சீறிற் சிறுகுந் திரு

    மந்திரி , மத்த கூட்டாளிங்க எல்லார்கிட்டயும் கலந்து பேசாம கோவப்பட்டு சீறுதவனோட செல்வம் சுருங்கிப் போவும்.

    குறள் 569:

    செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
    வெருவந்து வெய்து கெடும்

    முன்னாலயே யோசிச்சு தேவைப்படுத பாதுகாப்பு செய்யாத ராசா போர் வந்திச்சுன்னா பயந்து வெரசலா அழிவான்

    குறள் 570:

    கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
    தில்லை நிலக்குப் பொறை

    கொடுமக்கார ராச்சியம் நல்லதப் படிக்காதவுகள தனக்கு பக்கத் தொணையா வச்சிக்கிடும். அது கணக்கா பூமிக்கு பாரம் வேற ஒண்ணுமில்ல.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • குறளின் கதிர்களாய்…(260)

    குறளின் கதிர்களாய்…(260)

    செண்பக ஜெகதீசன்

    பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங்
    கழகத்துக் காலை புகின்.

                                                             –திருக்குறள்937(சூது)

     

    புதுக் கவிதையில்

    அறம் பொருள் இன்பங்களுக்காகக்
    அளிக்கப்பட்ட காலம்,
    அரசாள்பவனுக்கு
    அற்ப சூதாடு களத்தில் கழிந்தால்,
    அது
    காலம்காலமாய் தொடர்ந்துவரும்
    செல்வத்தையும்
    சொந்தமான நற்பண்புகளையும்
    இல்லாமல் போக்கிவிடும்…!

    குறும்பாவில்

    சூதாடுகளத்தில் அரசனுக்கான நற்காலம்
    கழிந்தாலது வழிவழிவந்த செல்வத்தையும்
    நற்பண்புகளையும் கெடுத்தழிக்கும்…!

    மரபுக் கவிதையில்…

    அறம்பொரு ளதனுடன் இன்பமென
    அரசன் துய்த்திடும் காலத்திலவன்,
    பொறுப்பது கொஞ்சமும் இல்லாமலே
    பொல்லாச் சூதின் களம்சென்றே
    அறமிலாச் சூததில் கழித்தாலே,
    அதுவே யவன்தன் பரம்பரையின்
    திறமையால் வளர்த்தநற் பண்புடனே
    திரண்ட பொருளையும் கெடுத்திடுமே…!

    லிமரைக்கூ…

    பொழுதுபோக்கினால் சூதாடும் களத்தில்,
    புவியரசனுக்கு அதனாலே வந்திடும் கேடு
    பண்போடு செல்வ வளத்தில்…!

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம் சூதாட்டம்
    வாழ்க்கையக் கெடுக்கும் சூதாட்டம்..
    நல்லதெல்லாம் அனுபவிக்கிற நேரத்தில
    அத மறந்து
    பொல்லாச் சூதுல போய்க்கழிச்சா,
    பெரிய ராசாவுக்கும் அது
    பரம்பரயா வந்த நல்லகொணத்தையும்
    சேத்துவச்ச செல்வத்தயும்
    சேந்தப்புல அழிச்சிடுமே..
    அதால
    வேண்டாம் வேண்டாம் சூதாட்டம்
    வாழ்க்கையக் கெடுக்கும் சூதாட்டம்…!

    Share
  • மாசிலா மணியே! வலம்புரி முத்தே!

    மாசிலா மணியே! வலம்புரி முத்தே!

    ஔவை நடராசன்

    என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய்மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து, தன் வியர்வையையும் உதிரத்தையும் கண்ணீரையும் குடம் குடமாகச் சிந்தி, ஒப்பற்ற மகளிர் திலகங்களாக இருவரையும் வளர்த்தார்.

    என் உறவினர்கள் யாரும் எட்ட முடியாதிருந்த கான்வென்டு பள்ளியில் சேர்த்துத் தாயாகி, தந்தையாகித் தெய்வமாக ஒவ்வொரு நாளும் வளர்த்தார்.

    சென்னையில் வாழ்ந்தபோது, அப்போதுதான் இரண்டாம் உலகப் போர் அச்சம் நிலவியது. சென்னையை விட்டு எல்லோரும் குடி பெயர்ந்தார்கள். பெயருக்கு ஏற்ற மாசிலாமணியாகத் திகழ்ந்த என் தாத்தா, வேலூருக்குக் குடிபெயர்ந்தார். வேலூரில், தன் மக்கட் செல்வங்களை நாளும் காலையில் கொண்டு போய்ப் பள்ளியில் விடுவதும், தாமே உணவு சமைத்து மதியம் பள்ளி வந்து ஊட்டுவதும் உருக்கம் தரும் காட்சியாகும்.

    இந்நிலையிலும் கூட, விடியலில் எழுந்து தாம் வல்லவராக இருந்த தச்சுப் பணியில் தம் கை நோக உழைத்தார். உடன் இருந்தவர்கள் எல்லாம் இந்தப் பெண் மக்களுக்குப் பத்தாம் வகுப்பு போதாதா என்று கேட்டபோது, வெகுண்டு எவ்வளவு படிக்க விரும்புகிறார்களோ, எந்த உயரத்துக்கு எட்ட விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு உயிர் உள்ள வரையில் அவர்களை உயரே அமர்த்திப் பார்ப்பதுதான் நான் எடுத்துக்கொண்ட சபதம் என்று வாழ்ந்து காட்டினார். உழைப்புக்கும் உறுதிக்கும் ஒரே சான்று என் மாமன்தான் என்று என் தந்தை சொல்வார் . தாராவைப் பார்த்துத் தான் மரபார்ந்த எங்கள் குடும்பத்தினரும், உறவினரும், பெண் மக்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.

    என் துணைவியார் தாரா ஒருவர் தான், எங்கள் மரபிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, பயின்று முதன் முதலில் வெற்றிச் சிறப்புப் பெற்றார். என் துணைவியார், மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத மனச் சோர்வு முதலில் வந்தது. ஆந்திர மாநிலத்து விசாகப்பட்டினத்தில் அவருக்கு இடம் தந்து அங்கே வரச் சொன்னார்கள். வேலூரில் இருந்து மீளவும் திரும்பிச் சென்னைக்கு வந்து துன்பக் கடலில் தாயில்லாத தனிமைத் துயரில் தவித்துக்கொண்டிருக்கும் நாங்கள் விசாகப்பட்டினத்துக்கு எப்படிச் செல்ல முடியும்? ஒரு மகளைச் சென்னையிலும் மற்றொரு மகளை விசாகப்பட்டினத்திலும் நான் போய்ச் சேர்ப்பதா என்று எள்ளளவும் என் மாமனார் மனம் கலங்கவில்லை.

    மன உறுதி மட்டும் இருந்தால் போதும். மலைகளையும் கூடத் தகர்த்துவிடலாம் என்று தன் மகளை விசாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்றார். மொழி தெரியாத மாநிலம், உறவினர்கள் என்று ஒருவர்கூட இல்லாத நிலை. கை உழைப்பைத் தவிர வேறு கதி இல்லாத நிலை.

    வீட்டுத் திண்ணை கிடைத்தால் போதும். என் கண்ணிலும் மடியிலும் வளர்ந்த மகளைத் தோளில் சுமந்தாவது துன்பம் வராமல் அவளைக் காப்பது என் கடமை என்று உறுதிபூண்டார். ஒரு கதை படித்தது போல இருக்கும். தாரா அம்மையாரின் தளராத மனமும் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்கிற தனிப்பெரும் முயற்சியும் பத்து நாளில் சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே மாற்றம் பெற்று வந்து சேரும் ஆணையைப் பெற்றார்கள்.

    ஓர் இனத்துக்கு மாசிலாமணி பிள்ளை போன்ற ஒரு கடமையாளர் இருந்தால் அந்த இனம் தலை நிமிர்ந்து நிற்கும்.

    முதலில், என் திருமணம் அவர் மனத்துக்குப் பேரிடியாக இருந்தது. சென்னைக்கு நான் வந்து வாழத் தொடங்கியதும், பழகப் பழக மெல்ல மெல்ல என் மீது பரிவைக் கொட்டினார். என் கடமை முடிந்துவிட்டது. என் அருமை மகளைப் போல இன்னொரு திருமகளை நான் எந்தப் பிறவியில் பெறப் போகிறேன் என்றாலும், என் மகள் தான் எனக்கு அன்னை. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என் பிள்ளைகள் தான் எனக்குக் குல தெய்வங்கள் என்று புலம்பிய நிலையில் தான் அவர் உயிர் பிரிந்தது.

    உலகின் எத்தனை நாடுகளுக்கு நீ போவதென்றாலும் நான் உடன் வருவேன் என்று சொல்லி, மலை போன்ற மனத்துணிவை மகளுக்கு ஊட்டினார். இப்போதும்கூட, என் மனைவியைப் பார்த்து நான் பேசும்போதெல்லாம் என் மனக்கண்ணில் அவர் தான் நிற்கிறார்.

    “தாயாகி, தந்தையாகி எம்மைத் தாங்கி நின்ற தெய்வம்” என்ற தொடர்தான் அவர் கல்லறையில் எழுதப்பெற்றது.

    அவர் வளர்த்த குடும்பக் கொடி, இன்று செழித்தோங்கி நிற்கிறது. மகனும் பெயர்த்தியும் எனக் குடும்பத்தினரும், உறவினரும் மருத்துவ மணிகளாகத் மிளிர்கிறார்கள். எந்த உயர்வு அவர்களுக்கு வந்தாலும் மாசிலாமணி அவர்களின் நினைவுக்குத்தான் காணிக்கையாக்குகின்றனர்.

    ஒப்பற்ற ஒரு தந்தையாக, உலகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தார்.

    இன்று அவரின் 49ஆவது நினைவு நாளாகும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். மனத்திலே எத்தனையோ தாக்கங்கள். சுற்றி அவ்வப்போது நிகழும் நிகழ்வுகள் உள்ளத்தில் தாக்கத்தை  ஏற்படுத்துகின்றன. அத்தகு தாக்கங்களின் எதிரொலிகள் ஏற்படுத்தும் உணர்வலைகள் அனைத்துமே என் வாசக உறவுகளாகிய உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆயிரம் எண்ணங்களை மலர்விக்கின்றன. ஆனால் இன்றைய இங்கிலாந்தின் உடனடி அரசியல் நிகழ்வுகள் கொடுக்கும் நாளாந்த மாற்றங்களின் தாக்கங்கள் அரசியல் களத்திலேயே நடமாட வைக்கின்றன. நடக்கும் அரசியல் மாற்றங்கள் எம் தனிப்பட்ட வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கம் எவ்வகையாக இருக்கப் போகிறது எனும் ஆதங்கம் ஒருபுறம், புலம்பெயர் வாழ்வினில் இந்நாட்டு பிரஜைகளாகி வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டவராகிய எமக்கும், எமது தலைமுறைக்கும் இவ்வரசியல் மாற்றங்கள் எத்தகைய மாற்றங்களை அல்லது எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கப் போகின்றன எனது ஆதங்கம் மறுபுறம்.

    நாம் பிறந்த மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் குடியேறி அந்நாட்டிலேயே வாழத் தொடங்கும் நாம் படிப்படியாக நமக்கு வாழ்வளித்த இந்நாட்டை நமது சொந்த நாடாகக் கருதும் நிலைக்கு நம்மை மாற்றிக்கொள்வது மிகவும் இலகுவான காரியம் அல்ல. ஆனால் காலப் போக்கில் நாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்கள், கலாச்சார விழுமியங்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்து வாழும் நாட்டிற்கு உளசுத்தியுள்ள ஒரு பிரஜையாக வாழ நமை மாற்றிக் கொள்கிறோம். அத்தகைய மாற்றத்தின்போது நாம் பிறந்த மண் நமக்குக் கொடுத்த மொழியின் மீதான காதலையும், கலாச்சார அடிப்படையையும் தொலைத்து விடாமல் தக்க வைத்துக் கொள்வதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகளே ஒரு போராட்டம்தான். இப்படியாக வாழ்ந்து நமது அடுத்த தலைமுறைகளை இங்கே உருவாக்கி அவர்கள் முற்றுமுழுதாக இந்நாட்டு மண்ணின் குழந்தைகளாகி, இந்நாட்டுச் சூழலிலே தமது வாழ்வாதாரத்துக்கான வழிகளைத் தேடி வாழும் வாழ்க்கையின்போது நாட்டில் பல அரசியல் மாற்றங்களும், இந்நாட்டின் தொன்மை மக்களின் மனத்தில் ஏற்படும் கசப்பான புரிந்துணர்வுகளினாலும் எமைச் சுற்றி ஏற்படும் மாற்றங்கள் ஒருவகை பயத்தைத் தோற்றுவிக்கத்தான் செய்கின்றன.

    பதினெட்டிலிருந்து அறுபத்திரண்டு வரை ஓடிக் கொண்டிருக்கும் என் வாழ்க்கைப் பயணத்தின் தண்டவாளங்களின் திசை இந்தச் சந்தியில் இத்தகையதோர் திருப்பத்தை ஏற்படுத்துவது கொஞ்சம் என்னைச் சிந்திக்க வைக்கிறது. பல வருடங்களாக இங்கிலாந்தின் பழம்பெரும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான உறவுகளின் மீதான அபிப்பிராய பேதங்களும், கருத்து மோதல்களும் கூர்மையடைந்து வரும் வேளையில், அது அக்கட்சியின் தலைவர் பலரைக் காலம் காலமாகக் காவு கொண்டு வந்துள்ளது. இந்தக் கருத்து மோதல்களின் அதியுச்சகட்டமாகவே இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த “ப்ரெக்ஸிட்” எனும் அரசியல் பூதம் அடைத்து வைக்கப்பட்ட கண்ணாடிக் கூஜாவிலிருந்து வெளிப்பட்டு, அரசியல் களத்தினில் ஆட்டம் போட்டு, இன்றைய பிரதமர் தெரேசா மே அவர்களையும் பலிகொண்டு நிற்கிறது.

    தெரேசா மே அவர்களுக்குப் பதிலாக, கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரையும், இந்நாட்டின் அடுத்த பிரதமரையும் தெரிவு செய்யும் பொறுப்பு, 313 கன்சர்வேடிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் விடப்பட்டு அவர்களின் வடிகட்டலில் மிஞ்சும் இரண்டு உறுப்பினர்கள், கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் சுமார் 1,60,000 பேர்களின் வாக்கெடுப்பினால் அடுத்த தலைவரும், எமது நாட்டின் பிரதமரும் தெரிவு செய்யும் திருவிழா ஆரம்பமாகிவிட்டது. 11 பேர் வாக்களிக்க, இந்தத் தலைவர் தேர்தலில் இன்று இருவர் மிஞ்சி நிற்கிறார்கள். யார் இவர்கள்? முன்னாள் லண்டன் நகர மேயராக இருந்த போரிஸ் ஜான்சன் இவர்களிலொருவர் இவரே சக பாராளுமன்ற அங்கத்தவரிடையே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர். இவர் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் வெளிநாட்டமைச்சர் பதவியிலிருந்தவர். தெரேசா மேயின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கையோடு ஒத்துப் போகாமல் தனது பதவியை இராஜினாமா செய்தவர்.

    அடுத்தவர் ஜெர்மி ஹண்ட். இவர் இங்கிலாந்தின் தற்போதைய வெளிநாட்டமைச்சர், முன்னாள் தேசிய சுகாதார அமைச்சர். இவர்களில் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து காலக் கெடுவான அக்டோபர் 31ஆம் திகதி உடன்படிக்கையுடனோ, அன்றி உடன்படிக்கை இல்லாமலோ விலகுவது என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறிக் கொள்கிறார். ஜெர்மி ஹண்ட் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் உடன்படிக்கையை எட்டக்கூடிய பட்சத்தில், ஒரு சிறிய கால தாமதம் ஏற்பட்டாலும் கூட அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றே என்று கூறுகிறார். ஆனால் தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடான தெரேசா மே அவர்களுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்பதன் அடிப்படையில் இவர்கள் இருவரினதும் நிலை திரிசங்கு சொர்க்கமே!

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதுவித உடன்படிக்கையும் எட்டப்படாத பட்சத்தில் உடன்படிக்கை இல்லாமல் விலகுவதே சட்டத்திலுள்ளது. ஆனால் அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது ஒரு வழக்கின் தீர்ப்பாக உள்ளது. பாராளுமன்றத்தில் இங்கிலாந்து எதுவித உடன்படிக்கையும் இல்லாமல் வெளியேறுவது என்பது பெரும்பான்மை உறுப்பினர்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் தெரிவு செய்யப்படும் புதிய பிரதமர், எவ்வகையில் இந்த பிரெக்ஸிட் எனும் பூதத்தைத் திரும்ப ஜாடிக்குள் அடைக்கப் போகிறார் எனது ஒருவராலேயும் புரிந்துகொள்ள முடியாமலே இருக்கிறது.

    சரி! தெரிவு செய்யப்படும் பிரதமர் யாராக இருப்பினும் அவர்கள் முன்னால் இருக்கும் பிரெக்ஸிட் எனும் பிரச்சனை ஒரு பிரச்சனையே! அதன் பின்னால் நாட்டின் பல பிரச்சனைகள் இன்னும் முகம் கொடுக்கப்படாமல் இருக்கின்றதே! அதனை அவர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள். பிரெக்ஸிட் எனும் இப்பூதம் நாட்டினை இரண்டாகப் பிளவுபடுத்தி வைத்திருக்கின்றது. வெளிநாட்டவர் குடியேற்றம் அல்லது இமிகிரேஷன் எனும் பிரச்சனை

    வெள்ளை இனத்தவர் மத்தியில் பலரின் மனங்களிலே சிறிது இனத்துவேஷ விதைகளைத் தூவியிருக்கிறது. இனத் துவேஷத்தையே கொள்கையாகக் கொண்ட சில கட்சிகள், இந்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார்கள். மனத்தில் பட்டதை அப்படியே பேசும் உண்மையான அரசியல்வாதிகளின் மீது தான் நமது அபிமானம் எனும் மக்கள் கூட்டம் அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் பெற்ற வெற்றிக்குப்பின் இங்கிலாந்திலும் தலைவிரித்தாடுகின்றது. வெளிநாட்டவரின் வருகை, இந்நாட்டின் மக்களுக்கு ஏற்படுத்தும் இடர்களைப் பகிரங்கமாக விவாதிப்பது ஜனநாயகமே எனும் வாதம் ஒரு சரியான வாதமாகப் பட்டாலும் இந்தப் போர்வையின் கீழ் பல இனத்துவேஷம் கொண்டவர்கள் தமது இனவெறிக்கு நியாயம் கற்பிக்கும் நிலையொன்று ஏற்பட்டிருக்கிறது.

    இத்தகைய நிலையைச் சரி செய்து, வீழ்ந்துகொண்டிருக்கும் தமது கட்சிகளின் செல்வாக்கை மீண்டும் அதிகரித்துக் கொள்வதற்காக வழமையாக மிதவாதப் போக்குக் கொண்ட இங்கிலாந்தில் பெரும் அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தமது போக்கினை வெளிநாட்டவருக்கு எதிரான வகையில் கொஞ்சம் கடுமையாக்கிக் கொள்வார்களோ எனும் அச்சம் மேலோங்கியுள்ளது. இந்நிலையில் தான் இன்றைய எமது கேள்வியான இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? எனும் கேள்வி எனைப் போன்ற புலம்பெயர்ந்து வாழும் இங்கிலாந்து நாட்டுப் பிரஜைகளின் மனத்தில் ஆதங்கம் மிக்க கேள்வியாக மேலோங்கி நிற்கிறது. பல சமயங்களில் கட்டுப்பாடின்றி மனத்தில் தோன்றுவதை அப்படியே பேசி பல பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் போரிஸ் ஜான்சன் அவர்களே பிரதமராவர் எனும் எதிர்பார்ப்பு, அரசியல் அவதானிகள் மத்தியில் நிலவுகிறது. தனது பூட்டனார் துருக்கி நாட்டிலிருந்து அகதியாகக் இங்கிலாந்துக்கு தஞ்சம் தேடி வந்தவர். அந்த வழியில் வந்த நான் எப்படி இனத்துவேஷம் கொண்டவராக இருக்கலாம் எனும் வாதத்தை இவர் முன்வைக்கிறார். அதேபோல நான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டிருப்பது ஒரு சீன நாட்டுப் பெண்ணையே, நான் எப்படி வெளிநாட்டவருக்கு எதிராக இயங்குவேன் என்கிறார் ஜெர்மி ஹண்ட்.

    இதற்கான முடிவு ஜூலை மாதம் 22ஆம் திகதியே எமக்குத் தெரிய வரும். அடுத்து வரும் ஒரு 50 வருட காலத்தின் ஐக்கிய இராச்சியத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் பிரதமரை நாட்டில் வெறும் 1,60,000 மக்கள் மட்டும் தெரிவு செய்வதுதான் உலக ஜனநாயகத்துக்கே முன்னோடியாகத் திகழும் ஐக்கிய இராச்சியத்தின் ஜனநாயகமோ எனும் கேள்வி பல முனைகளில் இருந்து கிளம்பாமலில்லை.

    எதிர்காலம் எனும் கண்ணாடிச் சாளரத்தினூடாக என்ன தெரிக்கிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் லட்சோப லட்ச மக்களில் நானும் ஒருவன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • யோகம் தரும் யோகா!

    யோகம் தரும் யோகா!

    எம். ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது எல்லோருக்கும் தெரிந்த முக்கியமான விஷயமாகும். ஆனால் அதற்காக நாம் எவற்றையெல்லாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை எவருமே கவனத்தில் கொள்ளுவதில்லை. நோய்கள் வந்தவுடன் வைத்தியரை நாடுவோம். அவர் பல மருந்து மாத்திரைகளை எழுதித் தந்திடுவார். அத்துடன் விடவும் மாட்டார். அந்தப் பரிசோதனை, இந்தப் பரிசோதனை என்று சொல்லி அங்குமிங்கும் இருக்கின்ற நோயியல் ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பிப் படாத பாடு படுத்திவிடுவார். பணமும் செலவழிந்து, நோயும் மாறாத நிலையில், என்ன செய்வது என்று அறியாமல், புரியாமல், வேறொரு விசேஷ வைத்திய நிபுணரைப் பார்ப்பதற்கு ஆயத்தமாகிவிடுவோம்.

    இதுதான் பலரது வாழ்வில் நிகழும் பரிதாபகரமான சம்பவமாகிவிட்டது. இப்படியெல்லாம் நொந்து, வெந்து, போகாமல் இருப்பதற்கு மிகவும் அருமையான வழி ஒன்றை நமது முன்னோர்கள் ஆக்கி அளித்துச் சென்றுள்ளார்கள். அதுதான் யோகம் தருகின்ற யோகாவாகும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அந்தச் சுவரும் இடிந்து விழும் நிலையிலோ, உடைசலாய் ஓட்டையாய் இருக்கும் நிலையிலோ அங்கு சித்திரத்தை வரைய முடியுமா? முடியவே முடியாது!  இங்கே சுவர் என்று சுட்டப்படுவது நம் உடம்பையே! எனவே உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராக வேண்டியது கட்டாயமாகும்.

    நோய்வராமலும் தடுக்க வேண்டும். நோய் வந்தாலும் அதனால் தாக்கப்படாமல்  காத்துக் கொள்ளவும் வேண்டும். இவையெல்லாம் நடை முறைக்குச் சரிவருமா என்ற எண்ணம் கூடத் தோன்றுகிறதல்லவா?  இவற்றுக்கெல்லாம் வழிவகைகளை நமது முன்னோர்களான சித்தர்களும் முனிவர்களும், யோகிகளும் வகுத்து வைத்திருக்கிறார்கள்.

    அவை யோகா என்னும் வரமாகும். இந்த யோகம் என்பது மதம், இனம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு மனிதம் சார்ந்தது. இதை உணர வேண்டும். இறைவனது படைப்புகள் எண்ணிறந்தன. அவற்றுள் மனிதப் படைப்பே அரியதும் பெரியதுமாகும். உலகினை அடக்கி ஆளும் ஆற்றலை மனிதன் தனது அறிவாற்றலினால் ஏற்படுத்தி இருக்கின்றான். அப்படிப்பட்ட மனிதன், நோயால் படும் அவஸ்தையும் அதைப் போக்க எடுக்கும் பிரயத்தனங்களும்தான் பெரும் பிரச்சினையாக இருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன? மனம் போன போக்கிலே போவது! மதுவுக்கு அடிமையாவது! அளவுக்கு மிஞ்சி உண்பது! உடலைக் கவனிக்காமல் இருப்பது! ஒழுக்கத்தை ஒதுக்கி வைத்துவிடுவது என்று பட்டியலிடலாம்.

    மனிதனுக்குள்ளே தெய்வமும் இருக்கிறது. தேவையற்றவையும் இருக்கின்றன. தேவையற்ற எண்ணங்கள் கூடும்போது மனம், தன்னிலையை இழக்கிறது. வாழ்வு தடுமாறுகிறது. மனத்தினிலே சாந்தியும் சமாதானமும் எழுகின்ற வேளையிலே தெய்வம் அங்கே தோன்றி, சிறப்பு எல்லாம் வந்து ஏறுகிறது!

    யோகம் பற்றிக் கூறவந்துவிட்டு சமயமும் சன்மார்க்கமும் போதிக்கப்படுகிறது என்று தோன்றுகிறதா? யோகம், ஒரு வாழ்க்கை! யோகம், ஒரு வாழ்கலை! யோகம் என்பது வளத்தை, வலிமையை, வாலிபத்தை, மகிழ்ச்சியை, நிம்மதியைத் தரக் கூடியது. இதனால்தான் “யோகக் கலை சாகாக் கலை” என்றார்கள்!

    நமக்குக் கடவுளால் கொடுக்கப்பட்ட இந்த உடம்பைக் கவனமாகப் பார்க்காவிட்டால் கவலைப்பட்டே ஆகவேண்டும்! ஆகையால் உடம்பினைக் காக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கட்டாயமாகிறது.

    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
    திடம்பட மெஞ்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே !

    உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
    உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோவில்கொண் டானென்று
    உடம்பினை யானிருந் தோம்பு கின்றேனே !

    இதனை இவ்வாறு கூறியவர் சித்தரும் யோகக் கலையில் வல்லவருமான திருமூலராவார். திருமூலரே இந்த உடம்பின் அருமையை, பெருமையை, உயர்வை, அவசியத்தைக் காட்டிய பின்னாவது நம் உடம்பைப் பேணாமால் விட்டுவிடுவது முறையாகுமா! யாவரும் சிந்திப்பது அவசியம் அல்லவா! ”பிராணாயாமம் என்பது மனித வாழ்வுக்கு இன்றியமையாததாகும். இதனை வழங்கியது யோகமாகும். காற்றை வெளியே விட்டு உள்ளிழுத்துச் சிறிதுநேரம் அடக்கினால்… மனம் சற்று அமைதியடையும். முறையான பிராணாயாமப் பயிற்சியினால் உடலின் வெவ்வேறு இயக்கங்களையும், நரம்பு ஓட்டங்களையும், நாம் அடக்கி ஆளலாம். உடலில் செல்லும் உணர்ச்சி ஓட்டங்களையும் நம் வசப்படுத்தலாம்.

    யோகப் பயிற்சியின் மூலம் உடலில் வேறுபாடுகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு புது எண்ணமும் மூளையில் ஒரு பாதையை உண்டாக்குகின்றது. மானிட அமைப்பை முற்றும் காப்பதற்கு இந்த எண்ணப்  பாதைகளே காரணம். இப்படிப் பாதைகள் அமைவதால்தான் ஞாபக சக்தியே மனித இனத்துக்கு அமைந்திருக்கிறது. உடலைப் பேண, ஆரோக்கியமாக விளங்க, யோகப் பயிற்சிகள் உதவுகின்றன. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. எல்லாவற்றிலும் சமநிலை கடைப்பிடிப்பது யோக சாதனையால் சாத்தியமாகின்றது.” இவ்வாறு சுவாமி விவேகானந்தர் அவர்கள் யோகத்தின் மகத்துவம் பற்றி எடுத்துச் சொல்லி இருக்கின்றார்.  உடல் என்பது தனிப்பட்ட பொருள் அன்று. ஐம்பெரும் தத்துவங்களால் ஆன ஒரு தொகுப்பு. இந்தத் தொகுப்பு தனித்து இயங்க முடியாது. அது இயங்க வேண்டுமானால், அதற்கு ஒரு முக்கியமான பொருள் தேவை. அதுதான் உயிர்.

    இந்த உயிர் இருந்தால் மாத்திரம் போதாது. உயிர் இருப்பதை உணர்த்தும் கருவியாக மனமும், அதிலே தோன்றக்கூடிய எண்ணங்களும், அந்த எண்ணங்களுக்கு ஏற்ப இயங்கும் உடல் உறுப்புக்களும் இருந்தால்தான் உடலின் இயக்கம் முழுமை பெறும். இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இதில் எந்தவொன்று பழுதானாலும், இன்னொன்றின் இயக்கம் பாதிக்கப்படும். உடலும், அதன் உறுப்புக்களும் சரியாக இயங்க வேண்டுமானால், மனமும், அதன் எண்ணங்களும் சீராக இருக்க வேண்டும். மனம் சீர்கெட்டு நோயுறும்பொழுது உடலும் அதன் உறுப்புகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.

    எனவே நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நமது மனமும் எண்ணங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இதுதான் அடிப்படை. இங்குதான் யோகம் என்பது எமது வாழ்வுக்குள் வந்து சேர்கிறது. நோய்களை அணுக விடாது, நோயெதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தி, பஞ்ச பூதங்களாலான இந்த உடம்பைக் காக்கும் பாரிய பணியினை யோகம் ஏற்று நிற்கிறது. இதனால் எங்கள் வாழ்க்கையில் யோகம் தரும் நிலையில் யோகா அமைந்திருக்கின்றது என்பதை எவராலுமே மறுத்துவிட முடியாது. வெளியில் உடம்பை முறுக்கேற்றுவதில் பலர் நாட்டமுடையவர்களாக இருக்கின்றார்கள். அதற்காகப் பலவிதமான பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். குஸ்தி போடுவது, கராத்தே பழகுவது, இன்னும் பல விநோதமான விளையாட்டுகளிலும் பயிற்சிகளிலும், பணத்தைச் செலவு செய்து தமது வெளித் தோற்றத்தைப் பேணி நிற்பதை நடைமுறையில் காண்கின்றோம். ஆனால் இவற்றால் எல்லாம் உள்ளுறுப்புகளுக்கு எந்தவித நலன்களும் ஏற்பட்டுவிடாது. இந்தப் பயிற்சிகளால் பிரச்சினையை உருவாக்கும் மனம் கூட அமைதியைப் பெற்றுவிடாது.

    பணத்தின் அவசியமே இல்லாமல் உடலையும் உள்ளத்தையும் வளப்படுத்தி ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும் ஒரே வழி யோகம் மட்டுமே. ஏழைகளுக்கும் ஏற்றது. வசதி படைத்தவருக்கும் ஏற்றது இந்த யோகம் ஆகும். மற்றைய பயிற்சிகளுக்குக் கூடுதலான உணவுகள் தேவை. யோகப் பயிற்சிக்கோ குறைந்த சாதாரண உணவுகளே போதும். யோகம் பயின்றால் கோபம் குறையும். நிதானம் ஏற்படும். சமநிலை பேணும் எண்ணம் உருவாகும். பதற்றம் குறையும்.

    யோகத்தின் அருமை கருதி அதனைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் கொண்டுசெல்லும் வகையிலும் முயற்சிகள் நடக்கின்றன. மேலை நாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கே யோகாவை பயிற்றுவிக்கின்றனர். யோகாவைக் கடைப்பிடிப்பது என்பது மிகவும் இலகுவானது. யோகா செய்வதற்கெனப் பிரத்தியேகமான இட வசதிகள் எல்லாம் தேவையில்லை. சாதாரணமான காற்றோட்ட வசதியுள்ள இடமே போதுமானதாகும். மற்ற பயிற்சிகளின் போது களைப்பைப் போக்க, விதம்விதமான குளிர்பானங்களை அருந்துவார்கள். அல்லது காப்பியோ, தேநீரோ, போன்விட்டா, மைலோ போன்றவற்றையோ வைத்திருந்து நன்றாக அருந்தி மகிழ்வார்கள். பயிற்சி செய்வதுகூட இவற்றை எல்லாம் குடிப்பதற்கோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இவற்றைக் குடிப்பதால் செய்த பயிற்சியின் பலன்கூட அவர்களுக்குக் கிடைக்காமல் போனாலும் போகலாம்.

    இவை எதுவுமே இல்லாமல் நல்ல காற்றோட்டமான இடத்தில் அமைதியாக இருந்து செய்வதுதான் யோகா. காசுச் செலவும் இல்லை. கண்டவற்றைக் குடித்து ஆரோக்கியத்தைப் பாழாக்கவும் தேவையில்லை. குறைந்த உணவும் நிறைந்த திருப்தியும் யோகாவின் முக்கியமான அம்சம் எனலாம்.

    இராமகிருஷ்ண மிஷனால் நிர்வகிக்கப்படும் பள்ளிக் கூடங்களில், யோகா மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இலங்கையிலே சுவாமி விபுலானந்த அடிகளாரின் கீழியங்கிய மட்டக்களப்பு, கல்லடி, உப்போடை சிவானந்தா வித்தியாலயத்தில் விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கும் ஏனையவர்களுக்கும்கூட ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன்னரே யோகத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அங்கு கல்வி கற்றவர்கள் நல்ல திறமையானவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

    மனித வாழ்க்கை, அகவியல் புறவியல் என்று இருகூறுகளைக் கொண்டது. அக ஆரோக்கியத்துக்குத் தியானப் பயிற்சி உதவுகிறது. புற ஆரோக்கியத்துக்கு யோகப் பயிற்சி உதவுகிறது. ஒவ்வொரு மனிதனின் உடம்பில் ஏற்படும் நோயை – தலையில் இருந்து பாதம்வரை, எலும்புக்கும் தசைக்கும் நரம்புக்கும் நாடிக்கும் குருதிக்கும் குடலுக்கும் பல்லுக்கும் பார்வைக்கும் மனத்துக்கும் தொண்டைக்கும் தோலுக்கும் மூச்சுக்கும் மூளைக்கும் கைக்கும் வருகின்ற அனைத்து நோய்களையும் மருந்தின் துணையில்லாமலேயே யோகா குணப்படுத்தும் வல்லமை பெற்றது. இது இத்துறையில் ஆய்ந்தவர்கள் மற்றும் அனுபவப்பட்டவர்களின் கருத்தாகும்.

    இளமை வரும். சுறுசுறுப்புடன் நினைவாற்றலும் வரும். மனோசக்தியும் மன அமைதியும் உண்டாகும். வீரம் உருவாகும். ஆற்றல் விருத்தியடையும். ஆயுள் பலப்படும். புலமை, நுண்ணறிவு, பழுதில்லா வாழ்க்கை என அத்தனையும் தருவது யோகா ஆகும். இவையாவும் அமைய வேண்டும் என்பதுதானே அனைவரதும் ஆசையும் கனவும்! இவற்றை நமக்கு அள்ளித் தரும் யோகா, வரம் தரும் யோகமாக நம் வாழ்வில் திகழ்கிறது.

    சிரித்து வாழவேண்டும். சிறக்கவும் வாழவேண்டும். சதைபெருத்த உடல் பெற்று, சங்கடங்கள் பல பெற்று சந்தோஷம் இழந்து வாழ்வது வாழ்க்கையல்ல. இளமையுடன், வளமையும், இனிமைநிறை எண்ணமும், பொறுமைநிறை உள்ளமும், பொங்கிவரும் சுகமுமே வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் என்பதாகும். இந்தச் சிறந்த வாழ்வை நமக்கு அளிக்கவல்ல சஞ்சீவியாக  அமைந்திருப்பது யோகா.

    Share
  • சிறுவனுக்குச் சிரச்சேதமா?

    சிறுவனுக்குச் சிரச்சேதமா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் அவர்களுடைய குடிமக்களுக்கே மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு.  சென்ற வருடம் அரசை எதிர்த்து எழுதிய, அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் வாழ்ந்துவந்த, சவூதி அரேபியாவின் குடிமகனான கஷோகி என்னும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபரை துருக்கியில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தில் கொலைசெய்து அவர் உடம்பை துண்டு துண்டாக்கி அதை யாரும் கண்டுபிடிக்காதவாறு வீசி எறிந்திருக்கிறார்கள்.  சவூதி அரசு அதை மறுத்தாலும் உலகம் ஒப்புக்கொள்வதாக இல்லை. இப்போது ஐ.நா.வின் விசாரணைக் குழு, இதை ஆதாரத்தோடு உறுதிப்படுத்தியிருக்கிறது.

    இந்த வருடம் 37 பேர்களை அரசுக்கு எதிரான பயங்கரவாதக் கொள்கைகள் உடையவர்களாக இருந்தவர்கள் என்றும் அரசுக்கு எதிராகச் சதி செய்தார்கள் என்றும் குற்றம் சாட்டி அவர்களின் தலைகளைச் சீவி மரண தண்டனை கொடுத்தார்கள்.  அது மட்டுமல்ல அந்தத் தலைகளை பொதுமக்களின் பார்வைக்காகவும் வைத்தார்கள்.  2016-இல் ஷியா பிரிவைச் சேர்ந்த மதத்தலைவர் ஒருவர் உட்பட அரசை விமர்சித்த 47 பேரைத் தண்டித்தது.  சவூதி அரசைப் பொறுத்தவரை அரசை விமர்சிப்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள்.

    இப்போது இதைவிடக் கொடிய பாவச்செயல் ஒன்றைப் புரியக் காத்திருக்கிறார்கள்.. பத்து வயது சிறுவன் ஒருவன் அரசுக்கு எதிராக நடந்த பிரச்சாரத்தில் பங்குகொண்டான் என்றும் துப்பாக்கி வைத்திருந்தான் என்றும் ஒரு பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருந்தான் என்றும் அவன் மீது குற்றம் சாட்டி, 13 வயதில் அவனைக் கைதுசெய்து தனிமைச் சிறையில் அடைத்து அவனுக்குப் பதினெட்டு வயதாகியதும் விசாரணை என்ற ஒன்றை நடத்தி அவன் செய்த ‘குற்றங்களுக்கு’ அவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்கள்.  சீக்கிரமே அது நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.  இவன் சார்பில் வாதாட வழக்கறிஞர் யாரும் நியமிக்கப்படவில்லை.  இந்தக் குற்றங்கள் புரிந்ததாக அவனைக் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள்.  மனித உரிமைகள் மீறப்படும் சவூதி அரேபியாவிலேயே கூட ஒரு சிறுவனைக் கொலைக் குற்றத்திற்கு ஆளாக்கிய கொடுமை இதுவரை நிகழவில்லை.

    2017-இல் ஐ.நா. சபையின் மனித உரிமை ஹைகமிஷனர் அலுவலகத்திலிருந்து வந்த மனித உரிமைகள் பற்றிய கேள்விகளுக்கு சவூதி அரசு பதிலளிக்கையில் மிகக் கொடிய குற்றங்களுக்குத்தான் மரண தண்டனை அளிக்கப்படுகிறது என்று கூறியது.  ஆனால் மனித உரிமைக் கழகம், சிறு குற்றம் புரிந்தவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்றும் அரசை எதிர்ப்பவர்களுக்கும் சிறுபான்மையரான ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்றும் கூறுகிறது

    சவூதி அரேபியாவில் குற்றம் புரிந்தவர்களுக்கு அவர்களுடைய தலைகளைச் சீவி மரண தண்டனை வழங்குகிறார்கள்.  சவூதி அரேபியா, ஒரு முடியரசு.  அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமீர்தான் எல்லா விஷயங்களிலும் முடிவெடுக்கிறார்.  இப்போது இருக்கும் அரசருக்கு வயதாகிவிட்டதால் அடுத்து அமீராக வரப் போகிற முகம்மது பின் சல்மான்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்.  இவர்தான் கஷோகியின் கொலைக்குக் காரணமானவர்.  பல நாடுகளில் இப்போது எந்தவிதக் குற்றங்கள் புரிந்தோருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டுமா என்ற சர்ச்சை நடந்துகொண்டிருக்கிறது.  ஆனால் சவூதி அரேபியாவோ அமீர்,  யாராவது குற்றம் புரிந்தவர்கள் என்று தீர்மானித்தால் அதுதான் தீர்ப்பாகிவிடுகிறது.  நீதிமன்றங்களோ குற்றம் புரிந்தவர்களுக்கு சாதகமாக வழக்காடுவதற்கு வழக்கறிஞர்களோ இருப்பதாகத் தெரியவில்லை.  அப்படியே இருந்தாலும் அவர்கள் பெயருக்குத்தான் இருக்கிறார்கள்.  குற்றம் புரிந்தவர்களைக் குற்றம் புரிந்தவர்கள் என்று தீர்மானிப்பது அமீர்கள்தான்.  இப்படிக் குற்றம் புரிந்தவர்கள் என்று தீர்மானிக்கப்பட்டவர்களில் முக்கால்வாசிப் பேர் ஷியா என்ற முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள். சவூதியில் சன்னி என்னும் முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினர்.

    பத்து வயதில் இந்தப் பையனுக்கு என்ன புரிந்திருக்கும்?  பதிமூன்று வயதிலேயே கைதுசெய்யப்பட்டுத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டபோது இவனுடைய மனது எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கும்?  அதன் பிறகு அவனுடைய மன, உடல் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படிருக்குமே.  இப்போது அவனுக்கு மரண தண்டனை கொடுக்கப் போகிறார்கள் என்பதை எவ்வளவு தூரம் அவன் உணர்ந்திருப்பான்?  இவையெல்லாம் விடை காண முடியாத கேள்விகள்.

    கஷோகி கொல்லப்பட்டு அவருடைய உடலைச் சின்னாபின்னமாக்கித் தூர வீசிய பிறகு அமெரிக்கா, சவூதி அரேபியாவோடு எந்த வர்த்தக உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அமெரிக்காவில் எதிர்ப்பு எழுந்தது.  ஆனால் ட்ரம்ப் அந்த எதிர்ப்புக்கெல்லம் செவிசாய்க்கவில்லை.  ஆயிரம் கோடி டாலர் பெறுமான ஆயுதங்களை சவூதி அரேபியாவுக்கு விற்காவிட்டால் அமெரிக்காவுக்குத்தான் நஷ்டம் என்பதுபோல் பேசிவந்தார்.  சவூதி அரேபியா தலைவர்களும் புஷ் குடும்பமும் தனிப்பட்ட முறையிலும் நண்பர்கள்.  இப்போது ஜனாதிபதி ட்ரம்ப் குடும்பமும் சவூதியின் தலைவர்களோடு நெருக்கம் காட்டிவருகிறார்கள்.  ட்ரம்ப்பின் மருமகன் குஷ்னரும் சௌதியின் வருங்கால அமீரும் நெருங்கிய நண்பர்கள்.  இதுவரை இவர்கள் யாரும் 18 வயது சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கியிருப்பது பற்றி வாயே திறக்கவில்லை.

    இப்போது உலகெங்கிலுமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்திருப்பதால் சவூதி அரேபியா, பையனின் சிரச்சேதத்தைப் பன்னிரண்டு வருஷ சிறைவாசமாக மாறியிருக்கிறது.

    மனித உரிமைகளைக் காக்கும் நாடுகளின் தலைவன் (leader of the Free World) என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா, மனித உரிமைகளைத் காலில் போட்டு மிதிக்கும் சவூதி அரேபியாவைப் பற்றி என்ன சால்ஜாப்பு சொல்லப் போகிறது?

    ====================================================================

    More: https://theintercept.com/2019/06/16/saudi-crown-prince-child-execution/

    Pic courtesy: https://en.wikipedia.org/wiki/Mohammad_bin_Salman

    Share