Blog

  • படக்கவிதைப் போட்டி – 220

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    காயத்ரி அகல்யா (Gaya3 Akallya) எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (14.07.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    PicturesQueLFS எடுத்த இந்தப் படத்தை சாந்தி மாரியப்பன் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இருவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!

    நீரின்று அமையாது உலகெனில் யார்யார்க்கும்
    வானின்று அமையாது ஒழுக்கு எனவும்

    நீரின்றி அமையா யாக்கைக் கெல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனவும் நீரின் மாண்பைத் தெற்றெனக் காண்பிக்கின்றன வள்ளுவமும் சங்கப்பாடலும்.

    மாந்த உயிர்களும் ஏனைய பயிர்களும் பிழைப்பதும் தழைப்பதும் நீரின்றி நடவாது. இனியும் நாம் நீரைச் சேமியாது வாழ்ந்தால் வாழ்க்கை நிலையாது என்பதை இம்மன்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

    இனி கவிஞர்களின் முறை. அவர்களைக் கனிவோடு அழைக்கின்றேன் கவிபாட!

    *****

    ”வாழ்வு நிலையில்லாதது என்பதை நீரின் மொழியால், நிலைக்காத அதன் வடிவால் புரிந்து நடந்திடு மனிதா!” என்று புகல்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நீரின் மொழி…

    நீரின் மொழியைத் தெரிந்திடுவாய்
    நிலைக்கா தெதுவும் அறிந்திடுவாய்,
    பாரிதை விழும்துளி கலந்துவிடும்
    பெற்ற வடிவை யிழந்துவிடும்,
    சேரும் ஒன்றாய் நீராக
    சுழலும் வட்டம் நீர்மேலே,
    பாரினில் வாழ்வின் தத்துவமாய்ப்
    பார்த்திடு நீர்த்துளி கதையிதையே…!

    *****

    ”பச்சைகளற்று வெளிறிக்கிடக்கும் வெளிகளுக்கு உன் துளிக்கருணையை இச்சையோடு அளி!” என்று மழையை இறைஞ்சுகின்றார் திருமிகு. பவித்ரா.

    வான் நோக்கி..
    இமைகள் கனமுற
    விழிசெருகி
    கன்னங்கள் கருகருக்க
    உடல் தளர
    நாவைப் பரத்தி
    சகாப்தங்களாய்க் காத்திருக்கிறேன்…

    பச்சைகளற்று
    வெளிறிக்கிடக்கும்
    வெளிகளுக்கு
    உன்றன்
    துளிக்கருணையை
    தானமிட்டுச்செல்!

    துக்கங்கள்
    மழையெனப்
    பொழிய

    நூறாண்டுகளின்
    சூல் நிரம்பட்டும்…!

    *****

    நிலாவுலக ஆராய்ச்சி ஒருபுறமிருப்பினும் நமக்குதவும் மழைநீரைச் சேகரித்து நிலவுலகையும் காக்க உறுதியேற்போம்! என்று காலத்துக்கேற்ற கருத்தை உரைத்திருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

    நீர்த்துளி நமதுலகின் உயிர்த்துளி!

    நாம் மழலையாய் இருந்தபோது
    நிலாவைக் காண்பித்து
    நல்லமுதூட்டினாள் அன்னை..!!

    நீல் ஆம்ஸ்ட்ராங்
    நிலாவில் கால்பதித்ததைப் படித்தது
    நன்றாய் நினைவிருக்கிறது..!!

    நிலாவில் நீரிருக்கிறதா..?
    நல்ல காற்றிருக்கிறதா..?
    நாள்தோறும் நடக்கும் ஆராய்ச்சிகள்..!!

    நிலவுலகில் பிறந்த நாள் முதலாய்..
    நிலாவுலகில் சஞ்சரிக்கிறது மனம்..
    நாம் வாழுமிந்த நீலக்கோளத்தில் வறட்சி..!!??

    நீரின்றி அமையாது உலகென்று
    நன்மொழி பகன்றான் வள்ளுவன்..
    நாமனைவரும் அதனை மறந்துவிட்டோம்..!!

    நீலவானத்தினின்று பொழியும் மழைத்துளியை
    நமக்குதவும்படிச் செய்யாது வீணில்
    நீலக்கடலில் கலக்கச் செய்துவிடுகின்றோம்..!!

    நிலாவுலக ஆராய்ச்சி ஒருபுறமிருப்பினும்
    நமக்குதவும் மழைநீரையும் சேகரித்து
    நிலவுலகையும் காக்க உறுதியேற்போம்..!!

    நீர்த்துளிதான் நமதுலகின் உயிர்த்துளி
    நல்லபடியிதைக் காப்பதே நம்கடமை
    நினைவிற்கொள்வோம் இதை என்றும்..!!

    நீரின் அவசியத்தை, அதனைச் சேமிக்கவேண்டியதன் அவசரத்தை உள்ளந்தொடும் வகையில் உரைத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையெனத் தெரிவாகியிருப்பது…

    நீரே!
    முகிழ்த்த பேரண்டத்தில் முதன்முதலாய்த் தோன்றினாய்
    உயிர்ப்பை விளைவிக்கும் ஊடகமாய் ஆனாய்
    கங்கையாய் காவிரியாய் கடலாய்ப் பல் ஏரிகளாய்
    எங்கும் பரந்தோடி இவ்வுலகை நிரப்பினாய்
    அன்பைக் கலந்து அகிலத்தில் பல்லுயிர்கள்
    தோன்றிச் சிறக்கத் துணையாக நிற்கின்றாய்
    ஆனாலும்,
    உன்றன் மகிமையுணராது மானிடரோ
    வீணாக்கி விட்டுன்னை விழிபிதுங்கி நிற்கின்றார்
    காற்றைத் தடுத்துக் கழனிகளை நீ நிரப்ப
    ஏற்ற மழைக்காடுகளை எந்தப் பொறுப்புமின்றி
    வெட்டியழித்து விட்டு வீணாயுனையிழந்து
    ஊரூராய் மாந்தர் உனக்காய் அழுகின்றார்!
    ஓடுமுனைக் கடலின் உப்பிற் கலக்க விட்டு
    வாடும் பயிர்களுக்கு வழியேதும் காணாது
    ஏங்கும் மனிதர்களை என்னென்று சொல்லுவது?
    அளவாய் அகிலம் பயனடைய ஆழத்தில்
    உன்னை நீ காக்க ஓடி ஒளித்தாலும்
    ஆழத்துளையிட்டுறிஞ்சி வெளியெடுத்து
    அளவுக்கதிமாய் உனை விரயமாக்கிவிட்டு
    பாலையாய் மண்ணைப் பாழாக்கும் மாந்தர்களின்
    பாவச் செயலுக்குப் பழிகாணாதன்னவரின்
    தேவைகளைத் தீர்ப்பாய் தெரிந்து!

    ”மழைதரும் காடுகளை அழித்து, கடலில் வீணிற்கலக்கும் மழைநீரைச் சேமியாது விடுத்து, குடிநீருக்கு ஓடித்திரியும் மக்களின் பாவச்செயலை மன்னிப்பாய் நீரே!” என்று நீரிடம் ஈரம் வேண்டிநிற்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. சித்தி கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்.

       

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இதோ அடுத்த மடலில் உங்களோடு உளக் கருத்தை பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

    ஐக்கிய இராச்சியம், அதாவது இங்கிலாந்து, இன்று ஒரு முக்கியமான திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறது.

    எமது அடுத்த பிரதமர் யார்? எனும் கேள்வி அனைத்து மக்களின் மனங்களிலேயும் தொங்கிக் கொண்டிருந்தாலும் அதற்கான விடை, பெரிதான ஒரு புதிராக ஒன்றும் இல்லை.

    பொதுவாகப் பொதுத்தேர்தல் நடைபெறும் போதுதான் இந்தக் கேள்விக்குச் சரியான பதில், கொஞ்சம் புதிராக இருக்கும். இப்போது இது ஒன்றும் புதிர் இல்லையே!

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் வெளியேற்றம், சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளின் மூலம் ஊர்ஜிதமாக்கப்பட்டதும் அதனோடு சம்பந்தப்பட்டு, பல நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன.

    அப்போதைய பிரதமர் டேவிட் கமரன், பிரதமர் பதவியிலிருந்து மட்டுமல்ல, அரசியலிலிருந்தே ஒதுங்கி விட்டார்.

    அவரோடு இணைந்து அரசமைத்த மிதவாத கன்சர்வேடிவ் கட்சிகள் பலவற்றின் பாராளுமன்ற அங்கத்தினர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டோ அன்றித் தாமாகவோ ஒதுங்கிக்கொண்டார்கள்.

    இதோ மக்களே! உங்களில் பெரும்பான்மையினரின் அபிலாஷையை நிறைவேற்றுகிறேன் என்று கங்கணங் கட்டிப் பிரதமராகிய அம்மையார் தெரேசா மே அவர்கள், இன்று தீவிரவாதப் போக்குக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் அழுங்குப் பிடியினால் ஒதுக்கப்பட்டுவிட்டார்.

    இன்றைய நிலையில் இரண்டு கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரைச் சுமார் 1,60,000 கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் முழு நாட்டிற்குமே பிரதமராகத் தெரிவு செய்யப் போகிறார்கள்.

    இந்த வெறும் 1,60,000 மக்களின் முக்கிய பிரச்சினையாக ப்ரெக்ஸிட் எனும் ஐக்கிய இராச்சியத்தின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிகழ்வே திகழ்கிறது.

    ஆனால் இன்றைய ஐக்கிய இராச்சியத்தின் பிரச்சினை இது ஒன்றுதானா? இல்லை நாட்டை முன்நோக்கியிருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் பல இருக்கின்றன.

    இந்த ப்ரெக்ஸிட் பிரச்சினை, கடந்த மூன்றரை வருடங்களாக இங்கிலாந்து அரசியல் களத்தின் முழு நேரத்தையும் தனதாக்கிக் கொண்டது. இப்பிரச்சினையைத் தீர்த்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனும் வகையில் அரசாங்கச் செயற்பாடுகள் முடக்கப்பட்டுவிட்டன.

    முழு நாடுமே இரண்டாகப் பிளவுபட்டு, மூர்க்கத்தனமான விவாதங்களுக்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டு இருக்கிறது.

    இன்றைய மேற்குலக அரசியல் ஒரு பெரும் மாற்றத்துக்குள்ளாகி வருவது போன்றே தெரிகிறது. ஜனநாயக அடிப்படையில் இயங்கும் நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில் காலகாலமாக இருந்து வந்த அரசியல் தலைவர்களின் தெரிவுமுறைகளிலும், மக்களின் அதை நோக்கிய பார்வைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

    அரசியல்களத்திலே அனுபவம் பெற்றவர்களே நாட்டின் தலைவர்களாக பரிணமித்து வந்த முறைகள் மாறி, அரசியலிலேயே என்றுமே ஈடுபடாத, மக்களிடையே பிரபலமானவர்கள் அரசியலில் குதிப்பதை மக்கள் பெரிதும் வரவேற்கும் ஒரு சூழல் உருவாவதைக் காண்கிறோம்.

    மிகவும் சர்ச்சைக்குரிய, மக்களின் மனங்களிலே துவேஷங்களை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளைப் பேச்சுரிமைச் சுதந்திரம் எனும் பெயரில் தெரிவிப்பதோடு அதைப் பற்றிய கேள்விகள் ஊடகங்களில் எழும்போது அதனை முற்றாக மறுத்துப் பேதலிப்போர் ஜனநாயகத்தின் உச்ச நாடுகளின் தலைவர்களாவதைக் காண்கிறோம்.

    இத்தலைவர்களின், நாட்டு அதிபர்களின் நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக அவரும் சாதாரண மனிதர் தானே எனும் நியாயத்தை முன்வைத்து ஏற்றுக்கொள்ளும் பொது மக்களிடையே வாழும் ஒரு நிலையில் இருக்கிறோம்.

    இத்தகைய ஒரு பின்னணியில்தான் இன்றைய ஐக்கிய இராச்சியப் பிரதமரின் தெரிவும் இடம்பெறுகிறது. தன்னைப் பிரதமராகத் தெரிவு செய்யப்போகும் மக்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ, அது யதார்த்தத்துக்குப் புறம்பாக இருப்பினும் அதனைத் தனது முக்கிய கொள்கைகளாகப் பேசி தருணத்திற்கேற்ற அரசியல் நடத்தும் ஒருவர் பிரதமராக வரக்கூடிய சந்தர்ப்பம் இன்று அதிகமாகக் காணப்படுகிறது.

    தற்போதைய ஊடகக் கணிப்புகளின் படி பிரதமராகப் போட்டியிடும் போரிஸ் ஜான்சன், ஜெர்மி ஹண்ட் எனும் இருவரில் போரிஸ் ஜான்சனே வெற்றியடையும் வாய்ப்புகளிருப்பதாகத் தெரிகிறது.

    யாரிந்த போரிஸ் ஜான்சன் ?

    நியூயார்க் நகரில் 1964ஆம் ஆண்டு ஒரு நடுத்தர மேல்வகுப்பு குடும்பத்தில் முதலாவது குழந்தையாகப் பிறந்தார். வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை பிரெஸ்ஸல்ஸ் நகரில் உள்ள யூரோப்பியன் பிஸினஸ் ஸ்கூல் எனும் பள்ளியிலும் பின்பு இங்கிலாந்தின் ஆஷ்டவுண் கல்லூரியிலும், பின்பு புகழ்பெற்ற ஈட்டன் கல்லூரியிலும் பயின்றார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், அக்கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

    ஊடகத் துறையில் பணியாற்றத் தொடங்கிய இவர், இங்கிலாந்தின் புகழ் வாய்ந்த “தி டைம்ஸ்” பத்திரிகையில் நிருபராகப் பணிபிரிந்தார். அப்பணியிலிருந்து தவறான செய்தியொன்றை குறிப்பிட்டமைக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.(ஆதாரம் – விக்கிப்பீடியா).

    தொடர்ந்து “தி டெய்லி டெலிகிராப்” பத்திரிகையில் பிரெஸ்ஸல்ஸ் நகர நிருபராகப் பணியாற்றினார். அப்போது இவர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பல தொகுப்புகளை வரைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துகள் கூட கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர் மத்தியில் ஏற்பட்ட ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பலைகளை ஊக்குவிப்பதற்குத் துணை நின்றன என்பதும் உண்மையே.

    “தி டெய்லி டெலிகிராப்” பத்திரிகையின் உதவி ஆசிரியராக 1994-1999 வரையும் பின்பு “தி ஸ்பெக்டெட்டர்” எனும் இதழின் ஆசிரியராக 1999-2005 வரையும் கடமையாற்றினார். 2001ஆம் ஆண்டு அப்போதைய எம்.பி மைக்கல் ஹெசில்டைன் அரசியலிலிருந்து ஒதுங்கவும் , ஹென்லி எனும் தொகுதியின் கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

    2008ஆம் ஆண்டிலிருந்து இரண்டு தடவைகள் லண்டன் நகர மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். இக்காலக்கட்டத்தில் ரூட் மாஸ்டர் எனப்படும் மாடலிலான லண்டன் பேருந்துகளை மீள ஓடவிட்டது, லண்டன் சைக்கிள் சேவை மற்றும் தேம்ஸ் கேபிள் கார் எனப்படும் திட்டங்கள் தன்னால் கொண்டு வரப்பட்டன என்று பிரச்சாரம் செய்துகொள்கிறார்.

    2015இல் மீண்டும் எம்.பி. ஆகப் பதவியேற்றதன் பின்னால் 2016ஆம் ஆண்டு தனது மேயர் பதவியை இராஜினாமா செய்தார். 2016 ப்ரெக்ஸிட் சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று பிரச்சாரம் செய்த அணியின் முன்னணி பிரச்சாரகராகச் செயல்பட்டார்.

    டேவிட் கமரன் விலகிய பின்பு, தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் வெளிநாட்டு அமைச்சராகப் பதவி வகித்தார். தெரேசா மே அவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையை எதிர்த்துத் தனது பதவியை போரிஸ் ஜான்சன் இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டு தடவைகள் திருமணம் செய்து விவாகரத்து செய்த இவர், தற்போது தன் காதலியுடன் வசித்து வருகிறார். இவருக்கு இவரது இரண்டாவது மனைவியின் மூலம் இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இதைத் தவிர, திருமணத்திற்கு அயலில் ஒரு தொடர்பூடாக மற்றொரு பெண்குழந்தையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரது தந்தைவழியான ஒரு பூட்டனார் துருக்கி தேசத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய ஊடகவியலாளர் எனவும் மற்றொரு வழியான பூட்டனார் இங்கிலாந்தின் இரண்டாம் ஜார்ஜ் மன்னரின் வழி வந்தவர் எனவும், தாய்வழிப் பூட்டனார் ஒரு ரஷ்ய யூத இனத்தவர் என்றும் கூறப்படுகிறது.

    இவரது அரசியல் கருத்துகள், காலத்துக்குக் காலம் மாறுபட்டு வந்திருக்கின்றன. இவரது ஊடகத் துறைக் காலங்களில் இவரது கட்டுரைகளில் சிலவற்றில் உபயோகித்த வார்த்தைகள், வேற்று இனத்தவர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. வெளிநாட்டவரின் குடியேற்றத்தில் இவரது கொள்கைகள் புரியாதவையாகவே இருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

    இவர்தான் ஐக்கிய இராச்சியத்தின் அடுத்த பிரதமர் என்பது துல்லியமாகத் தெரிகிறது என்கின்றன ஊடகங்கள்.

    ப்ரெக்ஸிட் எனும் இப்பாரிய பிரச்சினை, இங்கிலாந்து மக்களின் மனங்களிலே கசிந்துகொண்டிருந்த இனத் துவேஷம் எனும் உணர்விற்குத் தீனியாகி, கொஞ்சம், கொஞ்சமாகப் புகையைக் கக்கத் தொடங்கியுள்ளது. 4% அளவில் மட்டுமே பெரும்பான்மை பெற்றிருந்த ஐரோப்பிய ஒன்றிய விலகல் தீர்மானம், அதற்கு எதிரான மக்களை விசனத்தின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது.

    இந்நிலையில்தான் புதிய பிரதமர், 2019 ஜூலை 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளார். ஊடகக் கணிப்புகளின் படி அவர் போரிஸ் ஜான்சனாக இருந்தால், நாட்டினை ஒன்றுபடுத்தி, மக்களின் மனங்களில் பரவியிருக்கும் இனத்துவேஷ உணர்வுகளைப் போக்கும் வல்லமை அவருக்கு இருக்கிறதா? என்பது கேள்விக்குறியே!

    தன்னிடமிருந்து வெளிவரும் கருத்துகள், இருக்கும் பிரச்சினையை இன்னும் பெரிதாக்கி விடுமோ எனும் அச்சம் சிறிதுமின்றி, நான் வெளிப்படையாக எனது மனத்தில் பட்டதைக் கூறுவேன் என்று சொல்லும் இவர், பல சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பல்லினக் கலாச்சார நாடான இங்கிலாந்தைச் சரியான வழியில் கொண்டு செல்வாரா?

    இதே நேரம் எதிர்க்கட்சியான இங்கிலாந்தின் லேபர் கட்சி ஒரு இடதுசாரிப் பாரம்பரியத்தைக் கொண்டது. தொழிலாளரின் நலனை முன்வைத்தே ஆரம்பிக்கப்பட்டது. வட இங்கிலாந்து, பல தொழில் ஆலைகளைக் கொண்டது. அங்கு வாழும் மக்கள், அவ்வாலைகளின் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். முன்னைய காலத்து நிலக்கரிச் சுரங்கங்களும் இந்தப் பகுதிகளிலேயே அமைந்திருந்தன. கால காலமாக இப்பகுதிகளின் ஆதரவு, தொழிற்கட்சிக்கே இருந்து வந்திருக்கின்றது.

    சமீப காலமாக ஐரோப்பிய ஒன்றியத்தில், பல முன்னைய சோவியத் யூனியனின் அங்கங்களாக இணைந்திருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்ததும் அந்நாட்டுப் பிரஜைகள் பலர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இடநகர்வுச் சட்டங்களின் வழி இங்கிலாந்துக்குள் இலகுவாக குடியேறி வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர்.

    தொழிலதிபர்கள் பலர், தமது இலாபத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக, குறைந்த ஊதியத்தில் வேலைக்கமர்த்தக்கூடிய இந்தக் கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதால் உள்நாட்டுத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு குறைவதோடு அவர்களின் ஊதியமும் குறைக்கப்படுகிறது. இது இப்பகுதிகளில் வாழும் மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இக்காரணத்தால் இப்பகுதிகளில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான வகையிலே வாக்குகள் விழுந்திருக்கின்றன. பாரம்பரியமாகத் தொழிற்கட்சிக்கு வாக்களிப்பவர்களின் இத்தகைய மனப் போக்குக்குத் தொழிற்கட்சி முகம் கொடுக்காத பட்சத்தில் அவர்களின் செல்வாக்கு இப்பகுதிகளில் மறைந்துவிடப் போகிறது எனும் அச்சம், இக்கட்சியைப் பிரதிநிதிப்படுத்தும் இக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    அதே நேரம் தொழிற்கட்சியின் உத்தியோகப்பூர்வமான கொள்கை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகினாலும், அதனுடனான உறவுகள் மிகவும் நெருக்கமாகப் பேணப்பட வேண்டும் என்பதுவே. இது இன்றைய இக்கட்சியின் நிலையைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

    அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் இன்றைய ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் களத்தில் மிதவாதப் போக்குக் கொண்ட அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பலவீனமடையப் போகிறது போலவும், பாப்புலிசம் (populism) என்கிற பிரபலமான, மக்களின் தீவிர உணர்வுகளுக்குத் தீனி போடும் நபர்களின் அரசியல் தலைவிரித்தாடப் போகிறது போலவும் போன்றதொரு நிலையே தென்படுகிறது.

    ஓ! ஹிட்லர் கூட முதன் முதலில் ஜனநாயக அரசியலின் மூலம் தான் பதவிக்கு வந்தவரோ?

    எத்திசையில்? எப்பயணம்?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • ஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம்

    கௌசி, ஜெர்மனி

    இன்றைய சிறுவர்கள் நாளைய பெரியவர்கள். இன்றைய சிறுவர்களைச் சிறப்பான முறையில்
    வளர்த்து எடுக்கும் போதே நாளைய உலகம் சிறப்பான உலகமாகத் திகழும். இந்த நோக்கத்துடனேயே கதைகளுக்கூடாகவும் பாடல்கள் மூலமும் அறிவுரை புகுத்தும் இலக்கியங்கள் தோன்றின.

    சிறுவர்களுக்காக எழுதப்பட்ட இந்த இலக்கியத்தின் கதாநாயகர்களாக, பிள்ளைகள் விரும்புகின்ற பிராணிகளும் விலங்குகளும் அதிகமாக வந்து போவார்கள். குழந்தைகள் கற்பனாசக்தி மிக்கவர்கள். எனவே இக்கதைகளில் மிருகங்கள் பேசும், பறவைகள் பாடும். வண்ண வண்ண நிறங்களிலும் அழகான கண்ணைக் கவரும் படங்களுடனும் கவர்ச்சியாக சிறுவர்களைக் கவரும் வகையில் இந்த இலக்கியத்தைப் படைப்பார்கள்.

    நிலா நிலா ஓடி வா
    நில்லாமல் ஓடி வா
    மலைமேலே ஏறி வா
    மல்லிகைப்பூ கொண்டு வா

    என்று நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டிய தாயின் வாய்மொழி இலக்கியமாகத் தொடங்கியதே சிறுவர் இலக்கியம். பாட்டி வடை சுட்ட கதை போன்று குழந்தைகளை உறங்க வைக்கத் தாய் கூறிய
    கதையிலிருந்து சிறுவர் கதைகள் ஆரம்பமாகின. தாயின் ஆராரோ ஆரிவரோ என்ற தாலாட்டுப்
    பாடலுடன் சிறுவர் பாடல்கள் தொடங்கின.

    சிறுவர்களுக்கான கதைகள் பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், அறிவியல் கட்டுரைகள், சித்திரக் கதைகள், நீதிக் கதைகள், துணுக்குகள் எனச் சிறுவர் இலக்கியத்துள் அடங்குகின்றன. ஈழத்திலும் மிகச் சிறப்பான சிறுவர் இலக்கியத்தின் கர்த்தாவாக அநு.வை. நாகராஜன் (1933 – 2012) அவர்களைக் குறிக்கலாம். இவர் சிறுவர்களுக்காக,

    • தேடலும் பதிதலும் என்னும் சிறுவர் அறிவியல் நூல் – 1992
    • அவன் பெரியவன் என்றும் சிறுவர் குறும் நவீனம்
    • சிறுவர் சிந்தனைக் கதைகள் – 2002
    • சிறுவர் கவிதையில் புதிய சிந்தனைகள் 2005
    • சிறுவரும் அவர்கள் அறிவுசார் சாதனங்களும் – 2005
    • சிறுவர் பழமொழிக் கதைகள்

    போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

    இவ்வாறு சிறுவர்களுக்கான நூல்களை எழுதிய அநு.வை. நாகராஜன் போன்றே குழந்தைகளுக்கான முதல் முதல் வெளிவந்த சிறுவர் மாத இதழாக வெற்றிமணியை வெளியீடு செய்து அதன் மூலம் சிறுவர் இலக்கியங்களுக்குப் பங்களித்த ஆ.மு.ளு என்று அழைக்கப்படும் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களும் பெருமைக்கு உரியவர்.

    தொலைநோக்குச் சிந்தனை உள்ள ஒருவரால் மாத்திரமே இவ்வாறாக மாதம் ஒரு சஞ்சிகை அதுவும்
    முழுக்க முழுக்கச் சிறுவர்களுக்காக மட்டுமே வெளியிட முடியும். இதற்கு ஆசிரியப் பணியை அவர்
    மேற்கொண்டது மட்டுமல்லாமல் மாணவர்களுடன் உள்ளன்புடன் பழகியமையும் காரணமாகும்.

    அத்துடன் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1980இல் மறைந்துவிட்டாலும், இன்றும் பேசப்படும்
    மனிதராக இருப்பதற்கும் ஆசிரியத் தொழிலில் மட்டுமே நின்றுவிடாது மாணவர்கள் நலன் கருதி அவர் ஆற்றிய சேவைகளே முதன்மைக் காரணங்கள்.

    இவர் மே மாதம் 14ஆம் திகதி, 1919ஆம் ஆண்டு குரும்பசிட்டியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் திரு.-திருமதி கந்தவனம் தம்பதியனருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஏழாவதாகப் பிறந்தார். கல்வியிலும்
    சமூகத் தொண்டிலும் நேரத்தை அர்ப்பணித்தார். காங்கேசந்துறை வட்டாரக் கல்வி, விளையாட்டு, இவற்றின் அமைப்பாளராகவும் பரீட்சைக் காரியதரிசியாகவும் இருந்து அளப்பரும் தொண்டுகள்
    ஆற்றி கல்விப் பணிப்பாளர், உதவி அரசாங்க அதிபர் போன்றோரின் பாராட்டுதலைப் பெற்றார். அகில இலங்கை ஆசிரியர் கலாசாலையின் தமிழாசிரியர் சங்க உப தலைவராகவும் நுவரெலியா, முல்லைத்தீவு கிளைகளின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்து பெரும் தொண்டாற்றினார். காங்கேகன் துறை ஆசிரியர் சங்கக் கிளையை ஆரம்பித்தவர்களில், இவர் முக்கியமானவர்.

    இவர் 1964ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளம் குளத்தில் அரசினர் தமிழ்ப் பாடசாலை
    தலைமை ஆசிரியராக இருந்தார். அப்போது அங்குப் பயின்ற மாணவர்களை அவர்களின் பெற்றோர், படிப்பை இடையில் நிறுத்தி, விவசாயத்திற்கு அழைத்துச் சென்றனர். அறுவடைக் காலத்தில் பெற்றோருக்கு பிள்ளைகளின் உதவி தேவை என்பதனை அறிந்து அந்த நாட்களில் அரச அனுமதியுடன் விடுமுறை கொடுத்து, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் உதவினார். இதனால் மாணவர்களின் படிப்பை இடைநிறுத்தாது பாதுகாத்த பெருமை அமரர் சுப்பிரமணியம் அவர்களையே சாரும்.

    ஆர்வம் மிகுந்த மாணவர்கள் பலரை யாழ்ப்பாணம் அழைத்து வந்து மேற்படிப்பிற்கு வழிசமைத்துக் கொடுத்தார். இவ்வாறு மாணவர்களுக்கான கற்றல் வளர்ச்சிக்கு தன் எண்ணம் முழுவதையும் ஈடுபடுத்தி வந்தார். அவ்வேளையில் மாணவர்கள் முன்னேற்றம் கருதி, யாரும் அக்காலத்தில் நினைத்திருக்காத மாதாந்த சஞ்சிகை ஒன்று வெளியிட வேண்டும் என்ற தன் கனவை நனவாக்கினார்.

    மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்தல், அவர்கள் அறிவைத் தூண்டும் விதமான அறிவியல் கல்வியை மேம்படுத்தக் கூடிய கட்டுரைகளை கற்றோரிடம் இருந்து பெற்றுச் சஞ்சிகையில் பிரசுரித்தல் போன்ற நோக்கங்களைக் கொண்டு நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்த வேளை, தினகரன், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் வந்த குறுக்கெழுத்துப் போட்டிகளின் சிறந்த விடை விமர்சனி என்னும் வெற்றி மணியை 1950ஆம் ஆண்டு வெளியிட்டார். போட்டிகளில் வெற்றி என்பதனைக் குறிக்க, வெற்றி என்பதனையும் சுப்பிரமணியம் என்பதில் உள்ள மணியினையும் இணைத்து வெற்றிமணி எனப் பெயர் இட்டார்.

    08 பக்கங்களில் ஆரம்பித்துப் பின் 16, 32, 59 எனப் பக்கங்கள் தேவைக்கேற்ப அதிகரித்த வண்ணம்
    இருந்தன. அதன்பின் 1954ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மாணவர் பத்திரிகையாக வெற்றிமணி உருவெடுத்தது. மலையக மக்களின் கல்வி திட்டமிட்டு நசுக்கப்பட்ட வேளையில், அவர்களது கல்விக்கும் ஆற்றலுக்கும் முதற்களம் அமைத்துக் கொடுத்தது. தான் ஆசிரியராக கடமை புரிந்த பாடசாலைகளில் எழுத்தாற்றல் மிக்க ஆசிரியர்களையும் மாணவர்களையும் வெற்றிமணியில் எழுத வைத்தார்.

    வெற்றிமணியில் ஒரு சிறு மாணவன் மாடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தான். அக்கட்டுரைக்கு
    முக்கியத்துவம் கொடுத்து வெற்றிமணி வெளியிட்டு இருந்தது. மாடு பற்றி எழுதிய சிறுவனிடம் ஏன்
    மாடு வண்டி இழுக்கும் என்று எழுதவில்லை? எனக் கேட்டபோது, அவன் சொன்ன பதிலே ஆசிரியரை
    கவர்ந்தது. அவன் சொன் பதில், மாடு பாவம், வண்டி இழுக்கும் என்று சொல்ல தனக்குக் கவலையாக
    இருக்கும் என்றானாம். ஜீவகாருண்யம் அச்சிறுவனின் உள்ளத்தில் தெய்வீக ஒளிபாய்ச்சியது. உடனே
    இக்கட்டுரையை சஞ்சிகையில் வெளியீடு செய்திருந்தார்.

    மாடு
    மாட்டிற்கு 2 கொம்பு உண்டு.
    மாட்டிற்கு ஒரு வாலுண்டு.
    மாட்டிற்கு நான்கு கால்கள் உண்டு.

    இக்கட்டுரையைப் பார்த்த வாசகர்கள், “ஏன் இப்படி தரமில்லாத கட்டுரையை பிரசுரித்தீர்கள்? என்று
    ஆசிரியரைக் கேட்டபோது “இந்தக் கட்டுரை வந்தபின்பே வெற்றிமணியில் பல சிறப்பான கட்டுரைகள்
    வரத் தொடங்கின. வாசகர்கள் படைப்பாளிகள் எல்லோருக்கும் அட, இதனைவிட எம்மால் நன்றாக எழுத முடியும் என்று எண்ணத் தோன்றியது. எனவே எப்போதும் சிறப்பான ஆக்கங்கள்தான்
    வெளியிட வேண்டும் என்பதில்லை. எழுத்தாளரைக் கிளர்ந்து எழச்செய்யும்வண்ணம் இப்படி சிலவற்றையும் செய்யத்தான் வேண்டும் என்றார். இதன் மூலம் இவருடைய ஆழ்ந்த தொலைநோக்குச் சிந்தனை புலப்படுகின்றது. ஊக்கமுள்ள ஒருவருக்கு இடம் கொடுத்தால், எதிர்காலத்தில் அவர் உச்சத்தைத் தொடுவார் என்னும் உயரிய நோக்கம் அவரிடம் இருந்ததனால், அந்த மாடு என்னும் கட்டுரை எழுதிய சிறுவன் பிற்காலத்தில் சிறந்த எழுத்தாளனாகவும் உருவெடுத்தார் என்பது யாம் அறிந்த செய்தியாகும்.

    இதுமட்டுமன்றி வெற்றிமணியில் எழுதும் சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் முகமாக
    சிலசமயம் அவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு நேரில் சென்று புத்தகங்களை வழங்கி அவர்களை
    மகிழ்ச்சியடையவும் வைத்துள்ளார். சிறுவர்களுக்காக இலக்கியம் படைப்பதிலும் சிறுவர்களே தமக்கான இலக்கியத்தைப் படைப்பது பாராட்டத்தக்கதே. மாணவர்களின் உயர்வே ஒரு நாட்டின் உயர்வு எனக் கருதி இத்தன்மையை ஊக்குவித்த அமரர் மு.க.சுப்பிரமணியம், எல்லோராலும்
    போற்றப்படக் கூடியவர்.

    இவருடைய இந்த நூற்றாண்டுக் காலப் பகுதியில் படைப்புலகம் இவரை நினைத்துப் பார்ப்பதுடன்
    பாராட்ட வேண்டியதும் அவசியமாகின்றது.

    சாதனையாளர்கள் என்றும் சாவதில்லை
    சாதனைகள் என்றும் மறைவதில்லை – மனிதன்
    வாழும்வரை மறக்கப்படுவதில்லை.

    Share
  • ஈகோவும் அகங்காரமும்

    ஈகோவும் அகங்காரமும்

    -நிர்மலா ராகவன் 

    நலம்… நலமறிய ஆவல் (165) 

    “எனக்கு ஈகோ (ego) இருக்கு!” பெண்பார்க்க வந்தவரிடம் நடிகை ரேவதி கூறியது – அவர் தன்னை மறுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில். மௌன ராகம் படத்தில். ஆனால், அது தகாத குணமல்ல.

    பசியோ, தூக்கமோ, ஈரமோ, தனக்குத் தேவையானது கிடைக்கும்வரை குழந்தை ஓயாமல் அழுவது ஈகோவால்தான். பிறந்தவுடனேயே இயற்கையாக அமைந்திருக்கும் தன்மை இது.

    (அழுகைதான் குழந்தையின் மொழி. கவனித்துக் கேட்டால், ஒவ்வொரு தேவைக்கும் வித்தியாசமான அழுகை ஒலிப்பது புரியும்).

    சற்றே வளர்ந்தபின், பிறருடன் எப்படிப் பேசிப் பழக வேண்டும் என்று தீர்மானிக்கிறது ஈகோ. வெளியுலகத்தின் தொடர்பை மனத்தில் கொண்டு, தகுந்த முடிவுகள் எடுக்க வழிசெய்ய இன்றியமையாத குணம் இது.

    இப்போதெல்லாம் இதை ஏன் தகாத குணம் என்று பழிக்கிறோம்?

    முறைப்படி நடந்து, தனக்கு வேண்டியது கிட்டாவிட்டால், `பிறரது உணர்ச்சிகளுக்கு எதற்காக மதிப்புக் கொடுப்பது?’ என்று தோன்றிப் போக, எப்படியாவது நினைத்ததை அடைய முனையும்போது ஈகோ பிரச்னைக்கு உரியதாக ஆகிவிடுகிறது. அந்த நிலையில் அறிவு மங்கிவிடுகிறது.

    “அறிவுக்கு நேர் எதிரான விகிதாசாரம் (inversely proportional) கொண்டது ஈகோ!” (ஐன்ஸ்டீன்)

    இதனால்தான் பிறர் செய்வது பொறுக்காவிட்டால், அது தவறாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றிப் போக, தண்டனை கொடுக்கிறோம்.

    கதை

    ஸலீனா எங்கள் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களின் பொதுவறையில் உட்கார்ந்திருந்தாள். அவளருகே கட்டொழுங்கு ஆசிரியையான இஸ்னாயானி நின்றிருந்தாள்.

    ஸலீனாவின் குற்றம்: காதில் இரு துளைகள்!

    “நம் மதம் இதை அனுமதிப்பதில்லை!” என்று இஸ்னாயானி கண்டிப்புடன் கூறியது எல்லாருக்கும் கேட்டது.

    `ஏதோ சுவாரசியமான விஷயமாக இருக்கும் போலிருக்கிறதே!’ என்று பலரும் தத்தம் வேலையை விட்டுவிட்டு, அந்த இருவரையும் சூழ்ந்துகொண்டார்கள்.

    பதிலுக்கு, “அம்மா ஒன்றும் தடை சொல்லவில்லையே!” என்று துடுக்காகக் கேட்டாள் அப்பெண்.

    அவ்வளவுதான்! மற்றவர்களும் வாய்க்கு வந்ததைக் கூறி, ஸலீனா செய்தது எவ்வளவு பெரிய பாவ காரியம் என்பதுபோல் பேச, அதற்கு மேலும் பொறுக்க முடியாத அப்பெண் கதறி அழ ஆரம்பித்தாள்.

    “ஐயோ பாவம்!” என்றது ஒரு குரல்!

    தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அப்பெண் நடந்திருக்கிறாள். பதின்ம வயதில், எல்லாப் பெண்களுமே தம் தோற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

    அதை மறந்து, `இவள் நம் பேச்சை மீறுவதா!’ என்று சம்பந்தமே இல்லாத மற்ற ஆசிரியைகளின் ஈகோ தூண்டிவிட, அவளை அழவிட்டார்கள்.

    இந்த ஈகோதான் `நான்’ என்ற அகங்காரம். அது பிறரது உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை.

    “செய்வது தவறு என்று தெரிந்தும், அது சரிதான் என்று சாதிக்கிறார்களே, சில ஆசிரியைகள்! ஏன் அப்படி?” பிறிதொரு சந்தர்ப்பத்தில் கைரி என்ற மாணவன் என் மேசையருகே வந்து கேட்டான். (என் வகுப்பில்தான் எது வேண்டுமானாலும் கேட்கும் சுதந்திரம் இருந்ததே!)

    “இவர்களை power crazy என்போம்,” என்றேன், ஒரு சிறு சிரிப்புடன்.

    புரிந்ததுபோல், கைரி தலையாட்டினான். “இந்தப் பள்ளியில் நிறைய power crazy இருக்கிறார்கள்!”

    என் சிரிப்பு விரிந்தது.

    அப்படிப்பட்டவர்களுக்கு எப்போதும் பிறர் தம்மைக் குறை கூறிவிடக்கூடாது என்ற பதைப்பு எழும். அதனால் தாம் முந்திக்கொள்கிறார்கள்.

    நாம் சொல்வதையோ, செய்யும் காரியத்தையோ பிறர் `தவறு’ என்று பழித்தால், அதிலுள்ள உண்மையை ஆராய்வது அறிவுடைமை. `இன்னும் சிறக்க வேண்டும்,’ என்ற எண்ணம் இல்லாது ஆத்திரம் அடைந்தால், பிரச்னை நம்மிடம்தான்.

    சிலர் ஏன் எப்போதும் நம் குறையையே பெரிதுபடுத்தி, நாம் கேளாமலேயே அறிவுரை கூறுகிறார்கள் என்று அமைதியாக யோசித்தால், அநேகமாக, அது பொறாமையின் விளைவாகத்தான் இருக்கும் என்பது புலனாகும்.

    இவர்கள் பேச்சை அலட்சியம் செய்தால் பிழைக்கலாம். இல்லையேல், நம் நிம்மதிதான் கெடும்.

    இவர்களுக்கு நம் நலன் முக்கியமல்ல. நாம் எதிலும் அவர்களை மிஞ்சிவிடக்  கூடாது என்பதில்தான் குறி.

    ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கும் உயர்வான எண்ணம் ஆட்டங்காண, பிறர் ஏதாவது செய்தாலோ, சொன்னாலோ, ஈகோ தலைதூக்குகிறது. விளைவு: கோபம், வாக்குவாதம், அல்லது பாராமுகம்.

    கதை 1

    “எனக்கு எவ்வளவு காதலிகள் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று மணமான ஒருவன் பெருமை பேசுவான், தான் கவர விரும்பும் பெண்களிடம்.

    பணத்தைக் கொடுத்தாவது பெண்களை நாடியவனுக்கு தன்னிடம் உள்ள ஏதோ ஒன்றைப் பார்த்துத்தான் எல்லாப் பெண்களும் மயங்குகிறார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எழுந்தது.

    அதனால், அவனை ஒரு பெண் நிராகரித்தபோது, அடக்கமுடியாத ஆத்திரம் எழுந்தது. அவளுக்கு நிறைய தொல்லை கொடுத்தான்.

    அவனுக்குச் சரி, தவறு எல்லாம் ஒரு பொருட்டல்ல. தனக்கு வேண்டியதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற உந்துதலே அவனை ஆட்டிவைத்தது.

    இவனைப் போன்றவர்கள் ஏன் திருமணம் செய்துகொண்டு, அந்த அபாக்கியவதியான மனைவியையும் படுத்த வேண்டும்? ஈகோ அவனுடைய வியாதி. ஆனால், பாதிக்கப்பட்டவள் அவன் மனைவி.

    கதை 2

    புதிய தம்பதிகள் அவர்கள். எல்லாருக்கும் நடப்பதுபோல், அவர்களுக்கு இடையேயும் பூசல் வந்தது.

    அவள் குறை கூற, அவன் கத்த, நிலைமை மோசமாகியது. ஒரு வாரம் இருவருக்கும் மௌன விரதம்!

    அடுத்த முறை, அவனிடம் ஏதோ குறை கண்டு, அவள் வேறொரு சண்டையை ஆரம்பிக்க, அவன் யோசிக்க ஆரம்பித்தான். இனிமையாகக் கழியவேண்டிய பொழுதுகளை இறுக்கமான மௌனத்தில் வீணாக்க வேண்டுமா?

    தான் தவறு செய்யவில்லை, தவறு அவளுடையதுதான் என்று மீண்டும் ஆரம்பித்தால், அது தன்னையே உயர்த்திக்கொள்வதுபோல் ஆகிவிடாதா! தான் உயர்வு என்று எதற்காகக் காட்டிக்கொள்வது!

    “ஸாரி,” என்றுவிட்டு, அப்பால் நகர்ந்தான்.

    இவன் தோற்கவில்லை. ஈகோவிற்கு அதிக மதிப்பு கொடுத்து நடந்தால் பிறர் நம்மிடமிருந்து விலகுவர் என்று புரிந்த அறிவாளி. இவனைப் போன்றவர்களுக்கு உறவுகள் முக்கியம். ஈகோ பெரிதில்லை.

    புகழை எதிர்பார்ப்பதும் ஈகோவால்தான்.

    “நான் உனக்காக எவ்வளவு செய்கிறேன்! உனக்கு நன்றியே இல்லை!” என்று தன் கணவர் பழித்ததாக ஒரு மாது என்னிடம் வருத்தமாகக் கூறினாள். அவளுக்கு அறுபது வயது.

    அவள் கடமையை அவள் சரிவரச் செய்துகொண்டிருந்தாள்.

    அவரை எதிர்த்து வாயாடவில்லை. மிகவும் அடங்கிப் போனாள், `மரியாதை’ என்று.

    `நன்றி’ என்றால், அவர் என்ன எதிர்பார்த்தார்?

    `உங்களைப்போல் உண்டா!’ என்ற புகழ்ச்சியை எதிர்பார்த்துச் செய்தால் இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சி கிட்டாது.

    குழுவில் ஈகோ

    ஒரு குழுவில் இணைந்து செயல்படுகையில், யாராவது ஒருவரின் ஈகோ தலைதூக்கினாலும், எடுத்த காரியம் வெற்றி அடையாது.

    தன்னையொத்த பிறரிடம், `இப்படிச் செய், அப்படிச் செய்’ என்று ஓயாமல் விரட்டினால், பாதிக்கப்பட்டவர்கள் மனம் தளர்ந்துவிடுவார்கள். அடுத்த முறை, அவருடன் சேரவே அச்சம் பிறந்துவிடும்.

    ஈகோவால் வருத்தம்

    காதலர்களோ, தம்பதிகளோ பிரிவது இந்த ஈகோ தொல்லையால்தான். `நான் செய்வதுதான் சரி. நீதான் விட்டுக் கொடேன்!’ என்பதுபோல் இருவரும் நடந்தால், எந்த பிரச்னைக்கும் முடிவே கிடையாது.

    பிரிந்த பின்னர் பலரும் துயரத்திலிருந்து மீள முடியாது, அதிலேயே நீண்ட காலம் ஆழ்ந்து கிடக்கிறார்களே, ஏன்?

    மனத்துக்குப் பிடித்தவரைப் பிரிந்துவிட்டோமே என்பதாலா?

    அல்லது, ஈகோ தோல்வியுற்றதாலா?

    Share
  • சிதம்பரம் (சிறுகதை)

    சிதம்பரம் (சிறுகதை)

    -பாஸ்கர் சேஷாத்ரி
    —————

    அவன் அந்த இடத்தைக் காட்டிய போது எந்த சுவாரஸ்யமும் இல்லை. அகற்றப்படாத குப்பை, மலம் என, நெருங்க முடியாத அளவுக்கு ஒரே துர்நாற்றம்.

    டேய், அந்தப் பக்கம் போகாதே என்றதை அவன் சட்டை செய்யவில்லை.

    வாடா என்றான். போய் நின்றேன். அழுக்குக் கலவையாய் ஓடும் நீரோட்டம். சுற்றிலும் பாசி. எக்கச்சக்க செடிகள். மிதக்கும் டயர், சேற்றுப் படுகை.

    பாசு, நம்புவியா… இங்கிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் கட்டு மர சவாரி. டப்பா கட்டு கட்டி கையில் தள்ளு குச்சியை வைத்துக்கொண்டு அவர்கள் தள்ளும் வேகம் நீரைக் கிழிக்கும். இரண்டு பேர். இரண்டு பக்கம். உள்ளே நாலு பேருக்கு மேல் இடமில்லை. குழந்தைகளை அனுமதிக்க மாட்டார்கள்.. எதிர்ப் பக்கம் உப்பு மூட்டை. இந்தப் பக்கம் சுள்ளிக் குச்சி.. ஓரத்தில குடம் தண்ணி. நடுவுல காய்கறி மூட்டை.. பெண்டிர் ஒரு பக்கம், பேச்சு பெரிதாய் இருக்காது. பூ தொடுத்துக்கொண்டு ஒரு அணி. இன்னொரு அணி மந்தார இலைகளைப் பின்னிக்கொண்டு. நாட்டமாய் எல்லோரும் அவரவர் வேலை செய்வார்.

    நீ போயிருக்கியா?

    என்னெல்லாம் உள்ள விடலை. நீச்சல் தெரியும்னு அப்பா சொன்னார்.

    ஆனா பட்டாமணியம் ரொம்ப கண்டிப்பு. அவர் பேத்தியைக் கூட ஏத்தல.

    எவ்வளவு ரூபாடா

    ரூபாவா? ரெண்டணா…. நினைச்சா இறங்க முடியாது. விசில் எல்லாம் கிடையாது. தோ இங்க இந்தக் கட்டடம் முன்னால காய்கறிச் சந்தை. அதுக்குப் பேரே தண்ணித்துறை மார்கெட். பாஷ்யம் அய்யங்கார் கட்டினது. நூத்திப் பத்து வருஷம் ஆச்சு. எட்டரை கிரௌண்ட். அவர் ஜட்ஜ். நேர்மைக்குப் பேர் போனவர்.

    காய்கறி வணிகம், கணக்குல கெட்டியாய் இருந்தா தான் சமாளிக்க முடியும். ஆளும் மாறும், விலையும் மாறும். புதினாவை உடம்பில் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்தால் அசதி தெரியாது. வாணிபம் அவர்கள் உடம்பில் ஓடும் ரத்தம். நேர்மைக்குப் பேர் போனவர்கள். அம்பதுக்கு அப்புறம் வந்த தலைமுறை பணத்தைப் பெரிசாகப் பார்த்தது. அதுதான் வீழ்ச்சி. கண்ணியம் போச்சு. மேல் விலைக்கு வித்தவன் முடக்கு வாதம் வந்து செத்துப் போனான். ஆனாலும் யாரும் மாறல. சாவு மனுஷனை மாத்தும்னா இன்னிக்கு ஊர்ல பாலும் தேனும் ஓடும். அதெல்லாம் தாவார பேச்சு .

    எப்படிடா இதெல்லாம் உனக்குத் தெரியும்? என் வயசுதான்டா உனக்கு?

    எல்லாம் எங்க தாத்தன் சொன்னதுரா. கண்கள் கலங்கின.

    சிதம்பரம் அழுது, நான் அப்போது தான் பார்க்கிறேன். தோள்கள் கொஞ்சம் நடுங்கின.  இது நிஜ அழுகை. அறுபது வயதில் பாசாங்கு செய்ய முடியாது.

    டேய், ஆர் யு ஓகே?

    நல்ல நினைவாற்றல் உனக்கு .

    அது வலிடா என்றான்.

    ஏன்?

    அந்தப் பரிசிலை ஓட்டியது என் தாத்தன். முடக்கு வந்து செத்தவன் என் அப்பன்.

    என் உடலும் உள்ளமும் மொத்தமுமாய் சிதம்பரமாய் இருந்தது…

    Share
  • 2019 ஜூலை 2இல் நிகழ்ந்த முழுச் சூரிய கிரகணமும் கலிஃபோர்னியாவில் ஜூலை 7ஆம் நாள் நேர்ந்த நிலநடுக்கமும்

    2019 ஜூலை 2இல் நிகழ்ந்த முழுச் சூரிய கிரகணமும் கலிஃபோர்னியாவில் ஜூலை 7ஆம் நாள் நேர்ந்த நிலநடுக்கமும்

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. Nuclear.

    ++++++++++++++++++++++

    1. https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChcgJbFQjpxXjsmVRSPZzCPMM
    2. https://scienceofcycles.com/update-2019-full-solar-eclipse-and-earth-changing-events/
    3. https://pmdvod.nationalgeographic.com/NG_Video/776/831/1005835843746_1500669678490_1005846083907_mp4_video_1024x576_1632000_primary_audio_eng_3.mp4
    4. https://scienceofcycles.com/big-earthquakes-might-make-sea-level-rise-worse/
    5. https://www.travelandleisure.com/trip-ideas/space-astronomy/next-total-solar-eclipse-july-2019
    6. https://www.sciencenews.org/article/2019-total-solar-eclipse-south-americ

    ++++++++++++++++++++++++

    ++++++++++++++++++++

    சூரிய கிரகணம் வானில் நிகழும் போது,
    பேரளவு வட்டம் மறைக்கும் சிறு நிலவு.
    முழுச் சூரிய மறைவு பல நூறாண் டுக்கு,
    ஒருமுறை தெரிவது, அத்தருணம்
    தடுமாற்ற நிலையில் கீழே கிடக்கும்
    புவித்தட்டுப் பிறழ்ச்சி பல நேர்ந்து
    பூமியில் நிலநடுக்கம் தூண்டப் படலாம் !
    காலி போர்னியா நிலநடுக்கத் துக்கு
    காரணம் முழுச் சூரிய கிரகணம் !
    திடீர் உஷ்ண மாறுதல் புவித்தட்டில்
    நீட்சி, நெருக்கம் உண்டாக் கலாம் !
    கடலடியில் உறங்கும் எரிமலையும்
    திடீர் உஷ்ண மாற்றத்தால்  உடனே
    விழித்து மேலே பீரிட் டெழலாம் ! 

    ++++++++++++++++

    ++++++++++++

    சமீபத்தில் நிகழ்ந்த முழுச் சூரிய கிரகணத்தால் பூமியில் நேர்ந்த நிலநடுக்கங்கள்

    2019 ஜூலை 2 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் தெரிந்த முழுச் சூரிய கிரகணம், 20 ஆண்டுகட்குப் பிறகு ஜூலை 7 ஆம் தேதி தூண்டப் பட்ட  5.4 / 7.1 ரிக்டர் அளவு தீவிர காலிஃபோர்னியா நிலநடுக்கங்களுக்குக் காரண மாக இருக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு வியப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.  அக்கருத்து 2019 ஜூலை 2 இல் விஞ்ஞானச் சுழல் நிகழ்ச்சி இணைய வலையில் [ScienceOfCycles.com]] வந்துள்ளது.  வெளியிட்டவர் மிட்ச் பாட்டரஸ் [Science Of Cycles with Mitch Battros].  பெரும் பான்மை  எரிமலைக் குழம்பு வாயுக் கட்டிகள், எரிமலைகள்  [Mantle Plumes & Volcanoes]  கடலுக்குக் கீழே தங்கிக் கிடப்பவை.  ஆதலால் திடீர்க் கடல் உஷ்ண மாற்றம் அலை விசைகளைத் தூண்டி, எரிமலை சீறி எழலாம்.

    Image result for 2019 full solar eclipse and earth changing events

    area of ec events

    முழுச் சூரிய கிரகணத்தால் நேரும் தீவிரக் காரண விளைவுகளை நான் குறிப்பிட்டு வந்திருக்கிறேன்.  விளிம்பில் தயாராய் நிகழ இருக்கும், புவித்தட்டுப் பிறழ்ச்சிகள் விரைவில் தூண்டப்பட நெடு நேரம் ஆகாது.  பல நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் முழுச் சூரிய கிரகணம், 3 அல்லது 4 நிமிடங்களே நீடிக்கும்.  அந்தக் குறுகிய தருணத்தில் வெகு விரைவாக இறங்கி ஏறும் உஷ்ண மாறுபாட்டில், பூமிக்கடியில் உள்ள மேல் கோளத் தட்டில்  [Earth’s Lithosphere] மிகச் சிறிய நீட்சி, நெருக்கம் ஏற்படலாம்.

    Related image

    எரிமலைக் குழம்புப் பாறை, ஒரு கனல் கட்டி.  அது பூமியின் நடுக் கருவை மேலே போர்த்திய வரம்பு.   அந்தக் கனல் கட்டிக் குழம்பு ஓடிப் பூமியின் பல்வேறு கோளத் தட்டுகளை ஊடுருவி,  எரிமலையாய் மேலே பீரிட்டெழச் செய்வது  அடித்தட்டுப் பிறழ்ச்சி நில நடுக்கம் உண்டாக்குவது, அந்த நீட்சி, நெருக்க வினைகளே.  மேலும் கடல் நீர் உஷ்ணம் மிகையாகிப் பருவ காலப் புயல்கள் எழுவதும் ஹரிக்கேன் உருவாவதும் வட அமெரிக்க நாடுகளில் நாம் அறிந்தவையே.

    Image result for 2019 full solar eclipse and earth changing events

    ++++++++++++++++++++++++

    தகவல்:

    1. https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChcgJbFQjpxXjsmVRSPZzCPMM
    2. https://scienceofcycles.com/update-2019-full-solar-eclipse-and-earth-changing-events/
    3. https://pmdvod.nationalgeographic.com/NG_Video/776/831/1005835843746_1500669678490_1005846083907_mp4_video_1024x576_1632000_primary_audio_eng_3.mp4
    4. https://scienceofcycles.com/big-earthquakes-might-make-sea-level-rise-worse/
    5. https://www.travelandleisure.com/trip-ideas/space-astronomy/next-total-solar-eclipse-july-2019
    6. https://www.sciencenews.org/article/2019-total-solar-eclipse-south-americ

    ++++++++++++++++++++++++++

    Share
  • குறளின் கதிர்களாய்…(262)

    குறளின் கதிர்களாய்…(262)

    -செண்பக ஜெகதீசன்…

    ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
    பல்லார் பகைகொள் பவன்.

    -திருக்குறள் -873(பகைத்திறம் தெரிதல்)

    புதுக் கவிதையில்…

    சுற்றம் நட்பு படை ஏதுமின்றி
    தனி ஆளாய்ப்
    பலரிடமும் பகை கொள்கிறவன்,
    பித்துப் பிடித்தவனைவிட
    அறிவில்லாதவன்…!

    குறும்பாவில்…

    தனியனாய் நின்று
    பலரிடம் பகைமை பாராட்டுபவன்,
    பித்தனைவிட அறிவிலிதான்…!

    மரபுக் கவிதையில்…

    உடன்வரும் உறவுகள் நட்புடனே
    உதவிடும் படையென எதுவுமின்றி
    துடிப்புடன் துணைக்கு யாருமின்றித்
    தனியொரு மனிதனாய் நின்றேதான்
    அடக்கிடும் ஆவலால் பகைகொண்டால்
    அளவுக் கதிகமாய் மாந்தருடன்,
    கிடைக்கு மவனுக் கொருபெயரே
    கிறுக்கனை விடவும் அறிவிலியே…!

    லிமரைக்கூ..

    துணையேதுமின்றி நின்று தனியே,
    பலரிடமும் பகைகொண்டு நடப்பவன்
    பித்தனைவிட அறிவிலிதான் இனியே…!

    கிராமிய பாணியில்…

    பகவேண்டாம் பகவேண்டாம்
    அடுத்தவரோடே பகவேண்டாம்,
    தனக்க நெலம தெரியாம
    பகவேண்டாம் பகவேண்டாம்..

    ஒதவிக்கு யாரும் இல்லாம
    ஒத்த ஆளா நின்னுக்கிட்டு,
    பலரோட பகயச் சேக்கிறவன்,
    பயித்தியத்த மிஞ்சுன
    அறிவுகெட்டப்
    பயித்தியக்காரன்தான்..

    அதால
    பகவேண்டாம் பகவேண்டாம்
    அடுத்தவரோடே பகவேண்டாம்,
    தனக்க நெலம தெரியாம
    பகவேண்டாம் பகவேண்டாம்…!

     

    Share
  • ஆமாம், அவள் ஒரு விடுகதை!

    மலையாள மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன்
    தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் (உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை)

    ஆமாம், அவள் ஒரு விடுகதை!

    ஏப்ரல் 17, 2006
    திங்கட்கிழமை
    நேரம்:12.20

    வெப்பம் மிகுந்ததும் காற்றில்லாததுமான ஒரு மதிய வேளை. ஆஷா உடல் முழுக்க வியர்க்க, மேனேஜர் அறைக்குள் சென்றாள். ஒரு மேசை தூரம் இருந்தும் தனது வேர்வை நாற்றம், மேனேஜிங் டைரக்டரைத் தொந்தரவு செய்யுமோ என்ற குழப்பத்தில் அவளால் அவரின் வார்த்தைகளைக் கவனிக்க முடியவில்லை. அறைக்குள் இருந்து வெளியில் வந்ததும் நிம்மதிப் பெருமூச்சு தானாக வந்தது. அது கொஞ்சம் சத்தமாக வந்தது. மன்னிக்கவும்.

    மொபைல் ஃபோன் மேசை மேலிருந்தது. திரும்ப இருப்பிடத்திற்கு வருவதற்குள் அதில் நான்கு அழைப்புகள். நான்கும் ஒரே எண்ணிலிருந்து. அதுவும் பழக்கமில்லாத எண். யாராக இருக்கும். அவள் ஃபோனை காதோடு வைத்தாள். கொஞ்ச நேரத்திற்குள் அவள் கேட்டது இதுவரை கேட்காத ஒரு குரல்.

    ஆஷாவா?………

    ஆமா!….

    நாம பார்த்ததில்ல, என்னோட பேரு அனில்

    எதுக்கு கூப்பிட்டீங்க?

    சும்மா.

    நம்பர் எப்படி கெடச்சுது?

    மானுவல் தந்தான்

    ஏது மானுவல்

    மானுவல் ஜோர்ஜ். நீங்க ஒன்னாத்தா வேல பாத்தீங்கன்னு சொன்னான்.

    ஓ……………………..

    அவளுக்கு மானுவலை நினைவுக்கு வந்தது. அந்த நினைவை நிலையானது எனக் கூற முடியாது.

    ஒன்னா வேல செஞ்சோம்ங்கறது சரிதா. கடைசியா ஃபோனில பேசியே சில மாதங்களிருக்கும். நம்பர் எப்போ கொடுத்தான், ஆஷா கேட்டாள். அவள் கொஞ்சம்
    ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

    நம்பர் தந்து கொஞ்ச நாளாச்சு, அனில் விளக்கினான். வாடகை வீட்டின் படுக்கையறையில் ஓய்வாகச் சாய்ந்து கிடந்தான். மொபைல் போனின் இன்டக்ஸைத் தேடின போது ஆஷாவின் நம்பர் கிடைத்தது. அது பயன்பாட்டில் இருக்கா என்று கூட யோசிக்கல. சும்மாதான் டயல் செய்தான். ஒரு ஆர்வம். அவ்வளவுதான். வீட்டில் தனியாகத்தான் இருந்தான்.

    விஷாலும் அவனோட அம்மாவும் மொதல் நாள்தா ஊருக்குப் போயிருக்காங்க. அவங்க திரும்பிவர ஒரு வாரமாகும். அத்தனை நாட்கள் இங்க தனியாக…… இன்னக்கினு பாத்து வேலயுமில்ல. ஆஃப் டேதா. கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தாச்சு. விஷால் இல்லாம வீடு சூன்யமானது. அவன் அடிக்கடி அப்பாவின் ஷூ அணிந்து ஒரு தொப்பியும் வெச்சு மூங்கில் தடியும் ஊன்றிப் பிடித்து சார்லி சாப்ளினாக மாறுவான்.

    எம்பொண்ணுக்கும் சாப்ளினெ ரொம்பப் புடிக்கும். ஆஷா விளக்கினாள். ஆனால் அவள் சாப்ளினை போலச் செய்யமாட்டாள்…… ஆனா சினிமா எல்லாம் பாப்பா.

    “ஒரு பொண்ணு மட்டுந்தானா?” அனில் கேட்டான்.

    “ஓ…. அதுவே போதும்!” ஆஷா கூறினாள்.

    அவளோட அப்பா?

    ஒரு கம்பெனில வேல பாக்கறாரு. இப்போ டூரிலிருக்காரு.

    பொண்ணுக்கு எத்தன வயசாச்சு?

    மூணு?………. மகனுக்கோ?

    அவனுக்கு நாலாச்சு. கிண்டர்கார்டனுக்குப் போறா. பெரிசா அவனுக்கு
    நாட்டமில்ல. அவன் ஒரு கிரகவாசி.

    அது என்ன வா……..சி?………

    சிரிப்பு கேட்க நல்லா இருக்கு.

    ஆஷா சிரிப்பதை நிறுத்தினாள். பேசுவதற்கும் இடைவேளை விட நேர்ந்தது.

    மேனேஜிங் டைரக்டர் மறுபடியும் அவளை அலுவலக பணிக்காக தனது கேபினுக்கு அழைத்தார். அவள் அவசரமாக ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து எழுந்தாள். மறுபடியும் வியர்வையின் குழப்பம். அவள் கேபினை லட்சியமிட்டு நடக்கும்போது சக ஊழியர்களில் சிலர் அவளை உதாசீனப் பார்வை பார்த்துவிட்டுப் பின்தொடர்ந்தனர். அவர்களுடைய பார்வையில் சந்தேகமோ, விருப்பமோ, பகையோ இருக்கவில்லை. அவர்களில் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மேனேஜிங் டைரக்டர் தனது அறைக்கு அழைக்க உரிமையிருக்கிறது. வியர்வை மூலம் உடல் ஈரமாவதைச் சபித்துக்கொண்டு ஆஷா நகர்ந்தாள். கண்ணாடி ஜன்னலுக்கு அப்புறம் வேனலின் அக்னி ஜ்வாலை வெளியில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது.

    நேரம்: 12.45

    தனது சோர்வை அகற்ற இதற்கு முன் முழுமையாக்காமல் பாதியில் நிறுத்திய பேச்சை ஃபோனில் மீண்டும் தொடர்வதல்லாமல் வேறு உபாயம் ஒன்றும் மனத்தில் தோன்றவில்லை. ஆஷா மொபைல் ஃபோனைக் கையில் எடுத்தாள். ஏதோ ஹொரர் படங்களிலிருந்து எடுத்த சிறப்பு சத்தங்களுடன் ஹலோ ட்யூன் கேட்கத் தொடங்கியது.

    ஹலோ………..

    வேலயா இருப்பீங்கன்னு நெனச்சுதா நா ஃபோன் பண்ணாம இருந்தேன்.
    கொஞ்சம் வேலயிருந்துச்சு

    முடிஞ்சுதா?

    இப்போதைக்கு

    எனக்கிங்க போரடிக்குது.

    என்ன பண்றீங்க?

    போட்டோ எடுத்திட்டிருக்கிறே.

    ஸ்டுடியோ?…

    இல்லல்ல ஒரு இங்கிலீஷ் நாளிதழ்ல…

    ஓ ஓ….

    சமீபமா ஒரு ஃபோட்டோ கண்காட்சி போட்டிருந்தேன்.

    எங்கே?

    கொச்சில தர்பார் ஹாலில.விஷ்வல் மீடியாவிலயும் பேப்பர்ல கவரேஜ் இருந்துச்சு.

    நா…. கவனிக்கலன்னு நெனக்கறே.

    நெனக்கறன்னு சொல்ல வேண்டாம். கவனிக்கலன்னு சொன்னாப் போதும்.

    மொழிக்கு இப்படி சில பிரச்சனைகளிருக்கு.

    ‘அப்போ போட்டோகிராஃபர் மட்டுமல்ல மொழி வித்வானும்தான்’.

    ’மொழி வித்வானு சொன்னதனால என்னோட ஒரு கணிப்பு.
    சொல்லட்டுமா?’

    ’என்னது?’

    படிச்சது மலையாளம் எம்.ஏ. …..கரெக்டா……

    சோரி நா படிச்சது இங்க்லீஷ் லிட்டரேச்சர்.

    நான் கெமிஸ்ட்ரி…

    ஏதாவது கல்லூரில வேல கெடக்கும்னு நெனச்சே. நடக்கல…

    இனியும் வாய்ப்பு இருக்கே?

    எனக்கு எதிர்பார்ப்பில்ல

    அது ஏ……

    வாழ்க்கையும் எதிர்பார்த்த மாதிரி இல்லயே

    என்னோட வரலாறும் கிட்டதட்ட அதுவேதா.

    சமீபமா எங்கேயோ வாசிச்சே. வன் ஓஃப் தி ட்ரேஜடீஸ் ஆஃப் ரியல் லைஃப் ஈஸ் தாட் தேர் ஈஸ் நோ பேக்ரௌன்ட் மியூசிக்.

    அதொரு நல்ல கண்டடைதல்.

    சாப்பிட்டாச்சா?

    நேரமாகலயே! வேளில எங்காவது போணும். ஆப்பீடைசரா ஒரு ஜிம்லெட் (எலும்பிச்சம்பழம் சேர்த்து செய்யக்கூடிய ஒரு வகை குளிர்பானம்) செய்யலாம்னு யோசிக்கிறே.

    ஜிம்லெட்!….?

    ஏன், புடிக்குமா? நா எப்பவும் செய்வே ப்ரண்ட்ஸெல்லா நல்ல பிரிபரேஷனு சொல்லுவாங்க.

    அது இப்போ சாப்பிடாம எப்படி சொல்றது?

    அப்படீனா இங்க வா. நா ஜிம்லெட் செஞ்சு வெக்கறே….

    இப்போ எங்க இருக்கீங்க?

    அந்த இடத்தோட பேரெக் கேட்டதும், ஆஷா கடவுளக் கூப்பிட்டு விட்டாள். ரெண்டு எடங்களுக்குமிடையே உள்ள இடைவெளி சுமார் 80 கிலோ மீட்டராவது இருக்கும். ஆஷா கடவுளைக் கூப்பிடவும், ரெண்டு இடங்களுக்கும் இடையேயான தூரத்தைக் கூறும்போது, அணினில் சுவரில மாட்டியிருக்கிற கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

    மணி ஒன்றாகல.ஏதாவது சூப்பர் ஃபாஸ்ட் பஸ்ல ஏறினா ரெண்டரை மணிக்குள் இங்கே வரலாம். அதுக்குமேல நேரமாகாது. நல்ல ரோடு சூப்பர் ஃபாஸ்ட் பஸ்கள் மிகவும் வேகமாகவும் வரும்.

    எனக்கு இன்னக்கு வேல இருக்கற நாள்.

    பாதி வேல முடிஞ்சதில்ல. ஹாஃப்டே லீவ் எழுதிக் கொடுத்திட்டு வெளில வா.

    அனில் மொழிந்தான்.

    நாம எப்படி தெரிஞ்சக்கறது.

    அது அப்படி கஷ்டமான விஷயமொன்னுமில்ல. நான் காரெடுத்திட்டு பஸ் ஸ்டாப்
    பக்கத்தில நிக்கறே. காரோட நம்பர் சொல்றே. எழுதிக்கோ.

     

    நேரம்: 2.40

    ஆஷா, பஸ்சை விட்டிறங்கினாள். மதிய வேளையின் சிவப்புப் பொடி அமர்ந்து கிடந்தது. அதுவழியாகச் சென்ற நீண்ட பாதை. வெயிலின் தீவிரம் கண்களை குருடாக்குவது போல இருந்தது. பஸ் ஸ்டாப்பில் சிலர் நிழல் உருவங்கள் போல அசைவற்று நின்று கொண்டிருந்தனர். அவர்களையும் தூசி மூடியிருந்தது. முகம் தெரியவில்லை. அவள் வடக்கே பார்த்தாள். கார் மரநிழலில் நின்று கொண்டிருந்தது. அவள் அதற்கு நேராக நடந்தாள். நம்பர் மனத்தில் பதிந்திருந்தது.

    அனில், பச்சைநிற காட்டன் ஆடையும், கார்கோவும் அணிந்து ஸ்டியரிங் வீலிற்கு
    கை வைத்து உட்கார்ந்திருந்தான். காருக்கு நேராக வருகின்ற நீலநிறச் சுடிதார்
    அணிந்த பெண்ணை அவன் உற்றுப் பார்த்தான். சந்தேகமே இல்லை. அவளே தான்.
    அவன் இடப்புற கதவைத் திறந்தான். அவள் ஏறி உட்கார்ந்தாள்.

    ’போலாமா?’ அவன் கேட்டான்.

    அவள் தலையாட்டினாள்.

    கார் மெதுவாக நகர்ந்தது.

    யாரைப் பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பை இருவரும் இவ்வளவு நேரம் அனுபவித்தனர். தற்போது அவ்வெண்ணம் அடங்கியது. அனில், கார் ஓட்டுவதற்கிடையில் பின்சீட்டில் கிடக்கும் பாட்டிலை சுட்டிக் காண்பித்தான். ஜிம்லெட். ஆஷா அதை கைநீட்டி எடுத்து ஒரு வாய் குடித்துப் பார்த்தாள்.’நல்லா
    இருக்கு.’

    நமக்குச் சாப்பிட ஏதாவது வாங்க வேண்டாமா? அனில் கேட்டான்.

    எங்கிட்ட சாப்பாடு இருக்கு. ஆஷா கூறினாள்.

    கரிமீன் சுட்டதும். வாத்து ரோஸ்ட்டும், இரால் குழம்பும், மரவள்ளியும் பரிமாறுகின்ற ஒரு கடைக்கு முன்னால் அனில் காரை நிறுத்தினான். ஆஷா வெளியில் இறங்கவில்லை. கையில் ஜிம்லெட் பாட்டிலைப் பிடித்துக்கொண்டிருந்தாள்.

     

    நேரம்: 2.55

    படுக்கையறையில் பாரிசில் இருந்து வாங்கின சில வாசனைப்  பொருட்கள் இருந்தன. அவற்றைத் தோற்கடிக்கும் ஒரு வாசனை அனுபவப்பட்டு அனில் மூக்கை விரித்து நின்றான்.

    குளித்து முடிந்து பாத் டவலால் தலைமுடியைச் சுற்றிக்கொண்டு ஆஷா அவனுக்கு முன்னால் வந்தாள். பரிமள வாசனை அவளின் தேகத்தினுடையது. அவன் மெய்மறந்தான். அவள் அணிந்திருந்த தனது மனைவியின் ஆடை ஒரு நொடி அவளை நினைவுபடுத்தியது. அது ஆஷாவுக்கு நன்றாக இணைந்திருந்தது.

    அவள் வார்ட்ரோபில் கண்ணாடிக்கு முன்னால் சென்று நின்றாள். கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அனில். அவனின் பிரதிபிம்பத்தைப் பார்த்து அவள் சிரித்தாள்.

    டைனிங் டேபிளில் பல பாத்திரங்களில் உணவுப் பொருட்களை வைத்துவிட்டு, அவன் அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். ஜிம்லெட் தீர்ந்திருந்தது.

    ’நாம சாப்பிடத் தொடங்கலாமே’. அனில் கேட்டான்.

    ’பசிக்குது. ’ ஆஷா கூறினாள்.

    சாப்பிட உட்கார்ந்த போது அவளுக்கு எதை முதலில் தொடங்கலாம் என்ற குழப்பமானது. நிறைய வகைகள். ஊறுகாயே நாலு வகை. பூண்டு ஊறுகாய், பச்ச குறுமிளகு, பாவற்காய் ஊறுகாய், வடுமாங்கா.

    .இதெல்லா இங்கே செஞ்சதுதா..’ அனில் கூறினான்.

    ஆஷாவுக்கு அவனின் மனைவியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஊறுகாய் ஒவ்வொன்றும் அவ்வளவு ருசி.

    அனில் அவளுடைய வலது கை நகர்வதைக் கவனித்தான். கரிமீனிற்கும், பொடிமீனிற்கும் நேராக விரல்கள் நீண்டன. அவளுடைய ஓவ்வோர் அசைவும் கவர்ச்சியுடையதாக இருந்தது. கண்களிலோ ஒரு மின்னல் எப்போதும் இருந்தது.

     

    நேரம்: 3.20

    கிம் கிடுக்கின் ‘ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், வின்டர்.. அன்ட் ஸ்ப்ரிங் என்ற ஆங்கிலப் படம் கம்ப்யூட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. அப்படத்தை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்த ஆஷா, அனிலை பேர் சொல்லி அழைத்து தனக்குப் பின்னால் வந்து நெருக்கமாக நிற்கவும், தொடர்ந்து தன் பின் கழுத்தில் உதடுகள் பதிக்கவும் உத்தரவிட்டாள். வாசனைச் செடிகளுக்கு நடுவில் தனது உதடுகள் அமர்ந்தது என்ற நினைவில் அவன் கண்களை மூடினான்.

    அவனுடைய உதடுகளின் ஸ்பரிசம் ஏற்காத ஒரு இடம் கூடத் தன் பின் கழுத்தில் இல்லை என்று தெரிந்த பிறகு அவள் திரும்பி நின்றாள். அவள் சிரித்தாள்.

    கண்களின் மின்னல் அதிகரித்திருந்தது. இரண்டு கைகைளையும் அவள் அவனுடைய தோள்களில் வைத்து அழுத்தினாள்.

    ’எத்தனை விசித்திரமானது ….நம்முடைய….. இந்த அறிமுகம்…’

    அமைதியான குரலில் அவள் கூறினாள்.

    அவளுடைய பெருமூச்சு அவனுடைய முகத்தில் பட்டது. அவன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தான்.

    நாம் ஒவ்வொருவருக்கு உள்ளும் இருண்ட விடுகதைகள் இருக்கின்றன.

    அவனுடைய கண்களைப் பார்த்துக்கொண்டு அவள் கூறினாள்.

     

    நேரம்: 4.00

    பகல் வெளிச்சமே ஆடைகள் என்பது போல படுக்கையில் கிடந்தனர். ஜன்னலுக்கு வெளியே வாழைத் தோப்புகளின் இருண்ட பச்சை. ஆடுகள் அழுகின்றன.

    ’கொஞ்சம் தூங்கலாமா?’ அனில் கேட்டான்.

    ’நாலு மணியாச்சு. ’ ஆஷா சொன்னாள்.

    அவளுக்குத் திரும்பப் போகாமல் இருக்க முடியாது. வீட்டை அடைய நெடுந்தூரம்
    பயணிக்கவும் வேண்டும்.

    அவனது வலது கையை அகற்றிவிட்டு அவள் எழுந்தாள். அவளுடைய உடல்
    வசீகரமாக அவனுடைய கண்களில் நிறைந்து நின்றது. ஒளியைக் கடத்துகின்ற
    கண்ணாடித் திரைகளுக்குப் பின்னால் அவள் ஷவருக்குக் கீழே நின்றாள்.

    அதற்கிடையில் எப்போதோ அவனையறியாமல் அவன் கண்ணயர்ந்தான். ஷவரிலிருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. வெயிலின் வானத்திலிருந்து வெண்மை நிற இறகுகள் கழன்று விழுந்தன.

     

    நேரம்: 4.15

    பஸ் எந்த நேரத்துக்கு வரும்னு உறுதியாத் தெரியாது. சாயங்காலம் கூட்டமும் அதிகமா இருக்கும்.

    ’நான் கூட்டிட்டுப்போய் விடுறேன்.’ அனில் கூறினான்.

    வேண்டாம். ஆஷா பட்டெனச் சொன்னாள்.

    எனக்கு அதில ஒரு சிரமமும் இல்ல. அனில் கூறினான்.

    கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்றதெல்லாம அவனுக்கு அன்றைக்குப் பெரிய வேலையொன்றுமில்லை. ட்ரைவ் செய்வது ரொம்பப் புடிக்கும். ஆனால் ஆஷா ஒத்துக்கொள்ளவில்லை.

    அதற்கு முன்பாக அவனுடைய மற்றொரு உடன்படிக்கையையும் அவள் நிராகரித்திருந்தாள். மடித்த வெள்ளைக் கவரில் அது அவன் ஜோப்பிலிருந்தது.

    ’கிளம்பறேன்……,’ அவள் முனகினாள்.

    அவனுடைய பதிலுக்காகக் காத்திருக்காமல் அவள் நடந்தாள். அவள் நடந்து செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

     

    நேரம்: 4.22

    பஸ் வருவதும் போவதும் தெரிவதற்காகக் கார்லேயே இருந்தான்.

    மொபைலில் ரிங்டோன் எப்போதும் போல பேய்ச் சத்தமோ எனத் தோன்றுமளவிற்கு முழங்கியது.

    ஆஷாவின் நம்பர். ஆவேசத்துடன் அவன் காதருகே வைத்தான்.

    சொல்ல மறந்து போன ஒரு விஷயத்துக்காக அழைத்திருந்தாள்.

    அவனுடைய கருத்திற்கோ, எதிர்வாதத்திற்கோ இடம் கொடுக்காமல் தீர்க்கமாகக் கூறினாள்.

    என்னுடைய நம்பரை நினைவில் வைக்கக் கூடாது. இனி உங்களப் பொறுத்தவரை
    நான் என்கிற ஒருத்தி கிடையாது. உங்க நம்பரை நான் இப்பவே அழிச்சிடுவேன்.

    ஒரு ஜடப் பொருளாக நிசப்தமான ஃபோனைக் கையிலேந்தி அனில் நிற்கும்போது, இரண்டு நகரங்களை இணைத்துக்கொண்டு ஓடுகின்ற அந்த பஸ், தெருவின் கடைசிப் பக்கத்தைப் பார்த்து முகம் நீட்டியது.

    Share
  • நீர்

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    காரானாய் ககனமதில்
    நீரானாய் நீள்தரையில்
    பார்மீது உனைக்காணா
    பலரிப்போ தவிக்கின்றார்
    மோர்விற்கும் ஆய்ச்சியரைக்
    கண்டுவிட முடியவில்லை
    பீர்விற்கும் கடைகளைத்தான்
    காணுகிறோம் தெருவெல்லாம்!

    Share
  • பணம் என்பது காகிதத்தாள் தான்!

    பணம் என்பது காகிதத்தாள் தான்!

    நியாண்டர் செல்வன்

    கேரளாவில், முத்தூட் பைனான்ஸ் எனும் தனியார் நிதி நிறுவனத்துக்கு ஒரு ரிப்பேர் வேலை பார்க்க ஒரு எஞ்சினியர் செல்கிறார்.

    அந்தச் சமயம் அந்த வங்கியில் ஐந்து கொள்ளையர், துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையடிக்க முயல்கிறார்கள்.

    இவர் அவர்களை எதிர்த்துப் போராட-> டிஷ்யூம்….வீர மரணம்.

    “அவர் ஒரு வீரர்” எனப் போலிஸ் கமிசனர் பாராட்டுகிறார்..

    இதில் வீரம் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.

    வீரம் என்பது வள்ளுவர் சொன்னதுபோல் “வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும், துணை வலியும்” எண்ணிச் செய்ய வேண்டிய செயல்.

    நாம் என்ன காரியம் செய்யவிருக்கிறோம்? அதைச் செய்து முடிக்கவேண்டிய வலிமை என்ன? எதிரியின் வலிமை என்ன? நமக்குத் துணையாக வருபவர் வலிமை என்ன?-> இதைக் கணக்கிட்டுச் செயல்பட வேண்டும்.

    துப்பாக்கியுடன் ஐந்து பேர். எதிரே ஒருவர்… வந்தவர் நோக்கம் பணத்தைக் கொள்ளை அடிப்பது… ஆட்களை கொல்வது இல்லை.

    அதிலும் அது இவர் பணமும் இல்லை, நிதி நிறுவனப் பணம். பணம் போனால் சம்பாதித்துக்கொள்ளலாம். உயிர் போனால் என்ன செய்ய முடியும்?

    புகழ்மாலைகளைச் சூட்டிவிட்டு போலிஸ் கலைந்துவிடும், நிதி நிறுவனம், இன்சூரன்சு சில லட்சங்களைக் கொடுக்கலாம். அதன்பின் இவரது குடும்பம், தாய், மனைவி, பிள்ளைகள்… வாழ்நாள் முழுக்க இவரை இழந்து வருந்துவார்கள். எத்தனை பணமும், புகழும் அதை ஈடு கட்டாது.

    ஒரு பத்து நிமிடம் ஹேன்ட்ஸாப் பொசிசனில் இருந்திருந்தால், இன்று இவர் உயிருடன் இருந்திருப்பார்.

    உயிரைப் பொருட்படுத்தாமல் போரிட வேண்டிய சமயங்கள் உண்டு. இன்னொரு உயிரைக் காப்பாற்ற அப்படிப் போரிடலாம்.

    நிதி நிறுவனத்தின் பணத்தைக் காப்பாற்ற தன் உயிரை இழக்கவேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

    உங்கள் போர்க்களங்களை நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். நினைத்தபோது விட, உயிர் மலிவான பொருள் இல்லை.

    பணம் என்பது காகிதத்தாள் தான்……

    Share
  • படக்கவிதைப் போட்டி – 219

    படக்கவிதைப் போட்டி – 219

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    PicturesQueLFS எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (07.07.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை

    முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    Liberty: The state of being free within society from oppressive, restrictions, imposed by authority on one’s way of life, behaviour, or political views, the power or scope to act as one pleases.

    மேற்கண்ட ஆங்கில விளக்கம் சுதந்திரம், தன்னுரிமை என்பதற்கு ஒருவர் வாழும் சமூகத்தில் ஒருவரது வாழ்வில், நடக்கையில், அரசியல் பார்வையில் அரசதிகாரத்தால் ஒடுக்குதல், கட்டுப்பாடுகள் ஆகியன திணிக்கப்படாத நிலை என்கின்றது. இன்னொரு விளக்கம் தான் விரும்பியவாறு செயற்படுதல் என்கின்றது.

    நமது தமிழ்நாட்டு வரலாற்றில் இத்தகு விளக்கத்தின் படியான தன்னுரிமைகள் எளிய பொதுமக்களுக்கு இருந்ததில்லை என்பதையே தமிழ்க் கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. மேற்கண்ட உரிமைகள் யாவும் வேந்தர், மன்னர், அரையர், கிழார், பெருஞ்செல்வ வணிகர் ஆகியோருக்கு மட்டுமே இருந்திருக்கும் போல் தெரிகின்றது. ஏனெனில், இப்படி இருந்ததால் தான் பின்னாளிலே அதை எளிய மக்களும் அனுபவிக்க உரிமை தரப்பட்டுள்ளது.  ஏன் இப்படி உரிமை பின்னாளிலே தரப்பட்டது என்றால் அது முன்னாளிலே வழக்கத்தில் இருந்திருக்கவில்லை, இதாவது சங்க காலத்திலே இருந்திருக்கவில்லை அதனால் அதன் தொடர்ச்சியாகவே இந்த உரிமைகள் அடுத்து வந்த இடைக்காலத்தில் மக்களுக்கு தரப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை நிலை.  ஆனால் பலரும் சங்க காலத்தை பற்றி ஆஹா! ஒஹோ என்று கூறி புலகாங்கிதம் அடைகின்றனர். இதை நாமே கல்வெட்டில் நேரில் படித்து அறிந்து கொண்டால் தான் இலக்கியங்களை விளக்கியோர் சொன்ன பொய்மைகள் உலகுக்கு தெளியத் தெரிய வரும். உண்மையில் கல்வெட்டுகள் இத்தகையோர் கற்பனை எழுத்திற்கும், பேச்சிற்கும் வாய்ப்பூட்டாகவும் கைப்பூட்டாகவும் அமைகின்றன. இந்தப் பதிவு கம்மாளர் பற்றியது என்பதால் அது தொடர்பாக மூன்று கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன மற்ற இரண்டு கல்வெட்டுகள் துணைச் சான்றுகள்.

    கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் பட்டீசுவரர் கோயில் தென் சுவர் 12 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்ரவத்தி கோனேரின்மேல்
    2. கொண்டான்  தெந்கொங்கில் கண்மாளர்க்கு தங்க
    3. ளுக்கு பதினைஞ்சாவது ஆடிமாதம் முதல் னன்மைத் திந்மைக்
    4. கு இரட்டைச் சங்கும் ஊதிப் பேரிகை யுள்ளிட்டன கொட்டி
    5. வித்துக் கொள்ளவும் தாங்கள் புறப்படவேண்[டும்] இடங்க
    6. [ளு]க்கு  பாதரக்ஷை கோத்துக் [கொ]ள்ளவும் தங்கள்  வீ
    7. [டுக]ளுக்கு சாந்திட்டுக் கொள்ளவும் சொன்னோம் [இ]ப்[ப]
    8. [டி]க்கு நம்மோலை பிடிபாடாக் கொண்டு ச[ந்த்ரா]தித்யவ
    9. ரை செல்வதாகத் [த]ங்களுக்கு வேண்டும் இடங்களி[லே]
    10. [க]ல்லிலும் செம்பிலும் வெட்[டிக் கொள்]க. இவை விழு
    11. ப்பாதராயந் எழுத்து. யாண்டு 15 ள் 129 . இவை(க்) கலி[ங்]
    12. கராயந் எழுத்து.

    நன்மை தின்மை – நல்லது கெட்டது ஆகிய நிகழ்விற்கு; பேரிகை – முரசு; சாந்து – சுண்ணாம்பு அடித்தல்; பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines.

    விளக்கம்: விழுப்பாதராயனும் கலிங்கராயனும் கொங்கு சோழ வேந்தன் கோனேரின்மை கொண்டான் வீரராஜேந்திரனின் 15 –ம் ஆட்சிஆண்டு(1222), 129 -ம் நாளில் வேந்தன் சார்பாக அரசாணை ஓலை ஒன்றை வழங்குகின்றனர். அதில் தென்கொங்கில் வாழும் கம்மாளரான பதினெண் விஷயத்தார் ஆடிமாதம் 15-ம் நாள் முதல் தமது இல்லத்து எல்லா நல்லது கெட்டதுக்கும், இதாவது நிகழ்வுகளுக்கும் இரட்டை சங்கு ஊதவும் முரசு கொட்டிக் கொள்ளவும் ஆட்களை அமர்த்திக் கொள்ளலாம். அதோடு தாம் புறப்பட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு காலில் செருப்பு அணிந்து செல்லலாம். தமது வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்துக் கொள்ளலாம் என்று இசைவு தந்ததாக சொல்கின்றார் வேந்தர். இந்த ஓலை ஆணையை வழிகாட்டுநெறியாகக் கொண்டு ஞாயிறும் நிலவும் நிலைக்கும் நாள் வரை நடத்திச் செல்லவேண்டும். இதைத் தாம் விரும்பும் இடங்களில் பாறையிலும் செப்பேட்டிலும் பொறித்துக் கொள்ள உரிமை தருகின்றான் வேந்தன். சுதந்திரம் என்பதன் மேற்கண்ட ஆங்கில விளக்கத்திற்கு தக்கபடி 13 ஆம் நூற்றாண்டிற்கு முன் பதினெண் விஷயத்தாரான கம்மாளருக்கு தன்னுரிமை இருந்ததில்லை என்று தெரிகின்றது.   ஏன் இப்படி? இராசராசன் இராசேந்திரன் ஆகியோரது சோழப் பேரரசு காலத்தில் அதற்கு அடங்கிய கொங்கு மண்டலத்தில் இந்த உரிமைகள் இல்லாதது சோழநாட்டிலும் கம்மாளருக்கு அத்தகைய உரிமைகள் இல்லாததால் அன்றோ? அதற்கு முந்தைய பல்லவப் பேரரசு காலத்திலும் இந்த கம்மாளருக்கு சுதந்திரம் இருந்ததில்லை என்று தெரிகின்றது. தொண்டை நாட்டு கம்மாளருக்கு அத்தகு சுதந்திரம் இருந்திருந்தால் கொங்கு நாட்டிலும் கம்மாளருக்கு முன்னமே இத்தகு சுதந்திரம் வந்திருக்கும். அப்படியானால் சங்க காலத்தில் அப்படி ஒரு சுதந்திரம் இருந்திருக்கவே முடியாது என்பதன்றோ முடிவு. இத்தனைக்கும் கம்மாளர்கள் நாகரிக சமுதாயத்தில் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர்கள். அவர்களுக்கே இந்தநிலை என்றால் மற்றவர் நிலையும் இதே போன்றது தான் என்பது இரங்கத் தக்கதாக உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட வேளிரான பல்லவர், வாணர், நுளம்பர், அதியமான்கள் போன்றோர் வடக்கே இருந்து வந்தவர். வடக்கில் இத்தகு உரிமைகள் மக்களுக்கு இருந்திருந்தால் இங்கே தமிழ்நாட்டிலும் அத்தகு உரிமை முன்னரே வந்திருக்கும். அப்படி வடநாட்டில் உரிமைகள் மக்களுக்கு இருந்தது இல்லை என்பதை இது தெளிவாக்குகிறது. பிராமணர் நிலையும் இப்படித் தான் இருந்துள்ளது என்பதை அடுத்த கல்வெட்டு உணர்த்துகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 5, பக். 87, (A.R.No 562  of 1893)

     

    கோயம்புத்தூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோயில் முகமண்டப மேற்குச் சுவர் – வாயிலுக்குத் தெற்கு. 9 வரிக் கல்வெட்டு.

    1. வீரசோழனேன் எமக்குச் செல்லா நின்ற யாண்டு _ _ _ _ வடபரி
    2. சார நாட்டில் திருமுருகன்பூண்டி மகாதேவ
    3. சிவபிராமணன்  காசியபன் வெண்காடன், சிவ(ன்)
    4. கோயில் திருமடைவிளாகத்தில் இருக்
    5. கும் சிரி நிமந்தகாற்கும் குடுத்த  உரிமைகளாவன
    6. முற்றம் குதிரையும் பேரிகையும் செகண்டியும் கொட்டவும்
    7. இரண்டு நிலையும் இரட்டைத் தலைக் கடையும்
    8. கொள்ளப்  பெறுவார்களாகவும். இப்படி இவ்வரிசைகள்
    9. செம்பிலும் சிலையிலும் செய்யிது கொள்ளவும்
    10. குடுத்தோம்.

    திருமடைவிளாகம் – கோவிலைச் சூழ்ந்த தெரு; நிமந்தக்காரர் – செப்புத் திருமேனியை எழுந்தருளச் செய்ய சப்பரத்தில், வாகனத்தில் தண்டு கட்டுபவர், சாமி தூக்கும் பாதந் தாங்கியர்க்கு தலைவர்; செகண்டி –  ஒலி எழுப்புத்வெண்கலத் தட்டு; இரட்டை நிலை – இரண்டு நிலைவாயிற்படி; தலைக்கடை – இரட்டை பின்வாசல்

    விளக்கம்: கொங்கு வீரசோழனின் ஆட்சியில் (ஆண்டு சிதைந்துள்ளது943-1074 வரை மூன்று வீரசோழர் ஆண்டுள்ளனர்)  வடபரிசார நாட்டில் அமைந்த திருமுருகன்பூண்டி மகாதேவர் கோயில் சிவபிராமணன் காசியபன் வெண்காடன் மற்றும் அக்கோயிலை சூழ்ந்த இடத்தில் வாழும் சாமி தூக்கும் நிமந்தக்காரர் ஆகியோர் வீட்டிற்கு முற்றம் அமைத்துக் கட்டவும், குதிரை ஏறி ஊர்வலம் வரவும், நல்லது கெட்டதற்கு பேரிகையும் செகண்டியும் கொட்டவும், வீட்டிற்கு இரண்டு நிலை வாசலும், இரண்டு பின் வாசலும் வைத்துக் கட்ட வேந்தர் உரிமை தருகின்றார்.

    இதன் மூலம் இருவருக்கு மட்டும் இந்தச் சலுகை வழங்கப்படுகின்றது மற்ற பிராமணர்க்கு   இவ்வாறான உரிமை இல்லை என்பது தானே பொருள்.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள்; கோயம்பத்தூர் மாவட்டம், பக். 75, ஆசிரியர்:  மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    தென்ஆர்க்காடு மாவட்டம், விருத்தாசலம் வட்டம், திட்டக்குடி வைத்தியநாதர் கோவில் கருவறை முன் உள்ள மண்டபத்தின் வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. சு[ப]கிறி[து] ஆண்டு ஆடிமாதம் 20 – கு ஸ்ரீமது நாகம நாயக்கரய்யன் காரியத்துக்கு கடவர் வசியப்ப முத
    2. லியார் திட்டைகுடி தாநத்தாரும், இளமங்கலம் ஊரவர் வெள்ளாழரும் தந்[தி]ரிமாரும் ந
    3. த்தக்கேடு அடிக்கேட்டுக்காக சண்டையாய் யிரண்டு திறவரும் குடிப்போய் ஊரும்
    4. நாலாறு வருஷ(ம்)மாகப் பாழாயிருக்கையில் யிப்பொழுது வெள்ளாழர் தந்[தி]ரிமார் கா
    5. ணியாழ்ச்சி. பறையர் உள்பட நத்தக்கேடு அடிக்கேடு யிறுக்கடவராகவும் [யி]ந்த படிக்கு
    6. எழுதின கோயில் கணக்கு _ _ _ _  திரு[த்தாந்தோன்றி] பிரிய[னெ]ழுத்து.

    தானத்தார் – ஸ்தானத்தார், பொறுப்பாளர்; தந்திரிமார் – படைவீரரை கொண்ட சாதி ; நத்தக்கேடு – விளையாத தரிசுநில மாசு; அடிக்கேடு – தரிசுக்கு நிலத்திற்கு அண்மைநில மாசு; குடிப்போய் – ஊரைவிட்டுப் போய்; பாழ் – வெறிச்சோடிப்போய் இரு; காணியாழ்ச்சி – பரம்பரை நில உரிமை; இறுக்கக் கடவர் – தண்டம் அல்லது இழப்பீடு கட்டு.

    விளக்கம்: சுபகிறிது ஆண்டு (1542 / 1602 இல் ஏற்படுகின்றது) ஆடிமாதம்  20-ம் நாள் நாகமநாயக்கரின் செயல்களை ஆற்றும் வசியப்ப முதிலியார் இசைவுப்படி திட்டக்குடி வைத்தியநாதர் கோயில் பொறுப்பாளர்களும் இளமங்கலம் ஊராரும் வெள்ளாளரும் தந்திரிமாரும் இங்கத்து விளையாத தரிசு நிலமான நத்தம் கேடு அடைந்ததால் கோயில் பொறுப்பாளர்களுக்கும் இளமங்கல ஊராருக்கும் சண்டை ஏற்பட்டு ஊர் வெள்ளாளரும் தந்திரமாரான படைச் சாதியாரும் காலிசெய்து கொண்டு போனதால் 4-6 ஆண்டுகளாக ஊரே வெறிச்சோடிப் போனது. இப்பொழுது இளமங்கலத்தில் வெள்ளாளரும் படைச்சாதிமாரும் பரம்பரை நில உரிமையை காரணம் காட்டி குடிசை போட்டும், பறவை விலங்குகளின் புலாலுக்காக அவற்றின் இறகுகளை, தோலை உறித்து போட்டும் நத்தத்தில் மாசு ஏற்படுத்துபவர்கள், நத்தத்தை அண்மித்த நிலத்தில் மாசு ஏறபட்டுத்துபவர்களான பறையர் உள்ளிட்டோர் இனி அதற்கு இழப்பீடு கட்ட வேண்டும். இப்படிக்கு எழுதினேன் கோயில் கணக்கனான திருத்தான்தோன்றிப் பிரியன்.

    புதிதாக ஒரு உரிமையை ஆட்சியாளர் தரலாம் ஆனால் இருக்கின்ற உரிமையை அனுபவிக்க விடாமல் ஒரு குழு இன்னொரு குழுவைத் தடுத்தால் அதுவும் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகும். இங்கே நத்தக்கேடு அடிநிலக்கேடு என்று காரணம் காட்டி வெள்ளாளரும் படைச்சாதியாரும் பறையர் உள்ளிட்டாரின் உரிமையை தடுத்தனாரா? அல்லது பறையர் உள்ளிட்டோர் வெள்ளாளர் தந்திரிமாரின் உரிமையை தடுத்தனரா? யார் மீது குற்றம் என்ற தடுமாற்றம் ஏற்படும். ஆனால் காணியாட்சி பெற்றவருக்கே நத்தம், அடிநிலப் பயன்பாட்டு உரிமை என்று நிலைநாட்டுகின்றனர். அதற்காக பறையர் உள்ளிட்டாருக்கு தண்டம் அல்லது இழப்பீடு விதிக்கப்படுகின்றது. இதனால் ஏழைகளான அவர்கள் அந்த இடத்தை காலி செய்துவிட்டுப் போய்விடுவரன்றோ?

    மூன்று ஆண்டுகள் முன் மடலாடற் குழு ஒன்றில் முடியாட்சியில் விளைநிலங்கள் மட்டுமல்லாது ஆறு, ஏரி, குளம், காடு, நத்தம் ஆகியன கூட தனியாருக்குச் சொந்தமாக இருந்தன. அதனால் குடிசை போட வேண்டும் என்றாலும் உரியவரிடம் அனுமதி பெற்றால்தான் குடிசைகூட போட முடியும் என்றேன். இதை அறிஞர் திரு. கௌதம் சன்னா மறுத்து நத்தம் புறம்போக்கில் குடிசை போடலாம் என்றார். அப்பொழுது என்னால் இந்தக் கல்வெட்டை அவருக்கு சான்றாகக் காட்ட முடியவில்லை. இப்பொழுது இயன்றது. முடியாட்சி என்பது ஒருவரது செயல்களை வரையறை செய்வதாகவே அந்நாளிலே இருந்துள்ளது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 8, பக். 150, (A.R.No 6  of 1903)

    மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், பொய்கைக்கரைப்பட்டி ஊருக்குக் கிழக்கே உள்ள தோட்டத்தில் தனிக் கல்லில் பொறித்த 51 வரிக் கல்வெட்டு.

    ஸ தது ஸகல நிர்மாண / கரணாம் விஸ்வகர்மணாம் / ஸாஸநரேத காராணா / ம் ஸேஷபுவ நாந்திதம் / மப ஜீவநகர்த்யணாம் ஸ / மஸ்தபுரவாஸிநாம் அ / க்ஷ ஜாத ஜநாநாந்து  ஸ / த்யமேவாதி தைவதம் / விஸ்வகர்ம்மா ஜகந்மாதா / விஸ்வகர்மா ஜகது புரு வி / ஸ்வே ச விஸ்வகர்ம்மாணம் / விஸ்வகம்மணுர வாஸதே / இப்படி யுபஸியா நின்ற / ஸ்ரீ பாண்டி மண்டலத்து  / மாடக்குளக் கீழ் மாடமது / ரை மங்கலவாசல் சேரியில் மூன் / று வினைப் பள்ளி அறுவகைத் / தொழில் நால்வகை இர[த]கா / ரோமும் உலகுடைய நாயனார்  / உடன் கூட்டத்து மூன்றுவினைப் / பள்ளி யறுவகைத் தொ / ழில் நால்வகை யிரதகார  ரோமும் சமைய சங்கேதி / களோமும் கீழையிரணிய / முட்ட நாட்டுத் திருமாலிருஞ்சோலை / நின்றருளிய பரமஸ்வாமிகள் திரு / ப்பதி ஸ்ரீயான பவித்ர மாணிக்க பு / ரத்து மூன்று வினைப் பள்ளி அறு / வகைத் தொழில் நால்வகை / யிரதகாரோம் குறைவறக் கூ / டி நிறைந்து செய்த சமையகா / ரியமாவது இத்திருப்பதியில் தா / த நம்பிமாரில் திருவாய்கு / ல முடையான் திருமலை ஆழ்வா  / ர் சாதிக்குப் பல  நன்மைகள் / செய்கையாலிவற்கு பெரு / மாள் குலஸேகர தேவற்கு மு / ப்பத்தொன்பதாவது நாள் / லிலே எங்கள் சமைய வரி / சையுங் குடுத்து முழுதும் / தலத்தார் இடை எங்கள் பேரும் / குடுத்து நாங்களிவர்க்கு பண் / ணி குடுத்த சமைய சாதன / படியுள்ளவை அனைத்  / தும் பெற்று மேலும் எங்கள் / சாதிக்கு வேண்டும் நன்மை / செய்து போதுவதாக இ / வர் வாசலிலே வரி[ச] / ட்டம் [பூமி] தோரணமு _ _ _ / ம் ஆக குடுத்தோம் பதிணென் / விக்ஷையத்து _ _ _ _

    வினைப்பள்ளி – school of art, பாணி; இரதகாரர் – தேர் செதுக்குவோர்; சமைய சங்கேதிகளோம் – மத தொடர்பான கூட்டம் கூட்டி செய்தியைப் பரப்புவோர்;

    விளக்கம்: பிற்காலப் பாண்டியரில் குலசேகரனின் 39 ஆம் ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1307) வெட்டப்பட்ட கம்மாளப் பிரிவில் அடங்கும் ரதகாரரான தேர் செதுக்குவோர் பற்றிய கல்வெட்டு இது. முதல் பன்னிரெண்டு வரிகள் சமஸ்கிருத மொழியில் அமைந்த ரதகாரர்களின் மெய்கீர்த்தி ஆகும். தமிழில் சமஸ்கிருதம் கலந்தோரில் பிராமணரல்லாத பிரிவைச் சேர்ந்தவர்களில் இவர்கள் குறிப்பிடத்த்தக்கவர் என்பதை உணரமுடிகின்றது. இந்த தேர் செதுக்கும் ரதகாரரில் மூன்று பாணியில் ஆறுவகைத் தொழிலாற்றும் நாலு வகையான தேர் செதுக்குவோர் என்பது முற்றிலும் அரிய செய்தி ஆகும்.

    பாண்டி மண்டலத்தில் கிழக்குமாட மதுரை மங்கலவாசல் சேரியில் வாழும் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆறு தொழில் புரியும்  நால்வகை  தேர் செய்வோர்  உலகுடை நாயனார் உடன் வந்த  மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆறு தொழில் புரியும்  நால்வகை  தேர் செய்வோரும் மதத் தொடர்பான கூட்டம் கூட்டி செய்தியைப் பரப்புவோரும்  இணைந்து கிழக்கு இரணிய முட்ட நாடான திருமாலிருஞ்சோலையில் தங்கி தெய்வீகப் பணிகள் ஆற்றி வரும் பரமசுவாமிகளும் பவித்ர மாணிக்கபுரத்து மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆறு தொழில் புரியும்  நால்வகை  தேர் செய்வோருடன்  கூடிச்செய்த சமயப்பணி

    யாதெனில் திருமாலிருஞ்சோலை தாத பிராமணரில் திருவாய்க்குலமுடையான் என்பான் திருமலை ஆழ்வார் சாதிக்கு நன்மைகள் பல செய்ததால் இவருக்கு ரதகாரரின் மத மதிப்பை அளித்து சிறப்பு செய்தனர்.

    இக்கல்வெட்டின் மூலம் ஆறு தொழில் செய்கின்ற  நால் வகை தேர் செதுக்கும் தேரோரை அறிந்து கொள்ள முடிகின்றது. இக்கல்வெட்டு தீவிர சிந்தனைக்கு இட்டுச் செல்வதாக உள்ளது. அது யாதெனில் பொது மக்கள் யாரும் தேரைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற நிலையில் இவர்கள் செய்த தேர் கோவிலுக்கும்  நாற்படைகளில் ஒன்றான தேர்ப் படைக்கும் தான் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. இப்படியாகப் போர்க் கருவிகளை உருவாக்குதற்கு இவர்கள் பணி முழுக்க முழுக்க அரசாள்பவருக்குத் தான் பயன்பட்டுள்ளது. இவ்வாறு கைத்திற மிக்க ( artisans and craftsman) பல ஆயிரம் பேரை அரசாள்பவர் தமக்காக ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இந்த கம்மாளர் ஒரு பொருளை உற்பத்தி செய்வதால் நால்வருணத்தில் வைசியர் என்ற பிரிவில் அடங்குகின்றனர். அதேபோல கோட்டை, கொத்தளம் போன்ற  கட்டுமானப் பணிகளுக்காக நான்காம் நிலை உழைப்பாளிகளை அரசாள்பவர் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இரண்டாம் நிலையில் சேர்க்கப்பட்டுள்ள போர்க்குணமிக்கோரை  படைப்பிரிவில் ஊர்க்காவல் பிரிவில் சேர்த்து விட்டனர். முதல்நிலையில் உள்ள அறிவுத்திற மக்களை  ராஜ்ய பரிபாலனம் என்ற நாடாட்சியிலும் தர்மபரிபாலனம் என்ற அற வளர்ச்சியிலும் ஈடுபடுத்தினர். மக்களைத் தன்  பணிக்கு அமர்த்திக் கொள்ளும் ஆட்சியாளனுக்கு தான் வருணாசிரமம் தேவை. ஏனென்றால் மக்களின் மனஈடுபாடு எப்படியோ அதன்படி அவர்களைத்  தன்  பணியில் ஈடுபடுத்திக்கொண்டான் அரசாள்பவன். மக்களைப் பெருந்திரளாக வேறு யாருமே இப்படி தம் பணிக்கு ஈடுபடுத்திக்கொண்டது இல்லை.  15% மக்கள் வாழ்க்கை அரசாள்பவனின் செலவை நம்பித் தான் நடந்தது. அந்த வகையில் பிராமணர், வைசியரை விட இந்த வருணாசிரமம் அரசாள்பவருக்குத் தான் அதிகம் தேவைப்பட்டது, பயன்பட்டது. ஆதலால் வருணாசிரமத்தை ஆட்சியாளர்கள் தாம் உருவாகிக் கொண்டார்கள். இது காலப்போக்கில் வெவ்வேறு வடிவு கொண்டது என்பதே உண்மை. இதை புரிந்து கொள்ளாத மக்கள்தாம் கடந்த 130 ஆண்டுகளாக மனுதர்மம், வருணாசிரமம் என்று  சர்ச்சையை கிளப்புகிறார்கள்.   மதத்தையும் பிராமணரையும் பொருத்தமின்றி சாடுகிறார்கள். முதற் கல்வெட்டுப்படி 13 –ம் நூற்றாண்டில் தான் தென்கொங்கில் செருப்பு அணிய கம்மாளருக்கே உரிமை தரப்பட்டது. அதே நேரம் பிராமணர் தோல் செருப்பு அணியாமல் கட்டைசெருப்பை அணிந்தனர் என்றால் செருப்பு தைக்கும் சக்கிலியர் சாதி யாருக்காக? யாரால்? உருவாக்கப்பட்டது என்ற கேள்விக்கு அரசாள்பவர் உற்றார், உறவு குடும்பங்களுக்கு தான் என்ற விடை தானே மேலெழுகின்றது. ஆக சாதி உருவாக்கத்திற்கும் வருணாசிரம உருவாக்கத்திற்கும்  அரசாள்பவர் தான் காரணம் என்று படுகின்றது.

    பார்வை நூல்: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக். 206 – 208. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

     

    பெரியகுளம் வட்டம் சின்னமனூர் இராசிம்மேஸ்வரர் கோவில் கருவறை வடக்கு சுவர் 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ தி[ருவாய்க்கேழ்]விக்கு மேல் ஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவத்திக
    2. ள் யெம்மண்டலமு[ங்]  கொண்டருளிய ஸ்ரீ குலஜேகர தேவற்கு யாண்டு 41 வது ஆனி மாத 14 தியதி பூர்வபக்ஷத்து ப்ரதமையும் புணர்
    3. பூசமும் பெற்ற திங்கள் கிழமை நாள் அளநாட்டு அரிகேசரி நல்லூர் உடையார் திருப்பூலாந்துறை (உறை) உடையாரான ராஜஸிம்ஹசோள ஈஸுரமுடையா
    4. ற்கு நாலுநகரம் பதினெண் வி[ஷய]த்தோமும் பதினெட்டிராச்சியத்திற் பதினெண் விஷயத்தோமும் தரகரோ[மு]ம் நாட்டுச் செட்டிகளோமும் தளச்செட்டிகளோமும்
    5. உடையார் விக்ரமபாண்டீஸ்வரமுடைய நாயனார் திரும_ _ _தில் நிறைவற நிறைந்து _ _ _ _ நிச்சயித்த காரியமாவதுஉடையார் திருப்பூலாந்து
    6. றையுடைய நாயனார் _ _ _ _ _ _  த்த பட்டின பகிதியாவது

    விளக்கம்: பிற்காலப் பாண்டியரில் குலசேகரனின் 41 வது ஆட்சி ஆண்டில் (1309) ஆனி 14 ம் தாள் புணர்பூச நட்சத்திரம் கூடிய திங்கள் கிழமையான வளர்பிறையில் அளநாட்டு அரிகேசரி நல்லூர் திருப்பூலாந்தறை இராசசிம்ம சோளீசுரருக்கு நாலுநகரத்தை சேர்ந்த பதினெண் விஷயத்தாரும், தரகரும், நாட்டுச் செட்டிகளும், தளச் செட்டிகளும் விக்ரமபாண்டிசுரமுடைய இறைவர் கோவிலில் நிறைந்து கூடி திருப்பூலாந்துறை இறைவனுக்கு செய்ய வேண்டியது பற்றி பேசினர். கல்வெட்டு அரைகுறையாக இத்தோடு நிறுத்தப்பட்டு விட்டது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி 23, பக். 328 (A.R. No 431 of 1907)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (297)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (297)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் மனம் திறப்பதில் மகிழ்வடைகிறேன். இவ்வுலகில் மனிதராகப் பிறக்கும் எவரும் எத்தகைய சூழலில் , எங்கே, எப்படி பிறக்கப் போகிறோம் என்று தாமே கணித்துக் கொண்டு பிறப்பதில்லை. எமது கட்டுப்பாடில்லாமல் எங்கோ ஓரிடத்தில் விழுகிறோம். விழுவது பச்சைவளமா? இல்லை பாலைவனமா? என்பதும் எமது கையில் இல்லை.

    வறுமையின் கோரப்பிடியில் சிக்கி அல்லலுறும் சமூகத்திலும், நீரின்றி வாடும் வறண்ட நாடுகளிலும், போரில் சிக்குண்டு சிதறியோடும் சமூகங்களிலும் வாழும் பலரின் நிலைகளை அன்றாடம் செய்திகளாகக் கேட்டும், காணொளிகளாகத் தொலைக்காட்சிகளில் பார்த்தும் அறிந்துகொண்டிருக்கிறோம். தமது உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அந்நிய நாடுகளில் புகலிடம் தேடியோடும் பயணத்தில் எந்த உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஓடுகிறார்களோ அந்த உயிரை இழந்து விடுவதையும் பார்க்கிறோம்.

    இத்தகையதோர் அகிலத்தில் ஐக்கிய இராச்சியம் போன்ற ஒரு நாட்டில் வாழும் ஒருவரின் வாழ்க்கை, ஓப்பிட்டு முறையில் எத்தனையோ வகைகளில் மேலானதாக இருக்கிறது. சாதாரண மனித வாழ்வின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவையிருப்பினும் ஒவ்வொரு மனிதரினதும் அடிப்படை வாழ்வாதரத் தேவைகளுக்காக அவர்கள் தவிக்க வேண்டியதொரு நிலை ஐக்கிய இராச்சியத்தில் அரிது என்றே கூற வேண்டும்.

    இத்தகைய ஒரு காலகட்டத்திலே தான் இன்றைய ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் லண்டன் ஒரு பாரிய பிரச்சனையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அது என்ன என்கிறீர்களா? பல இளம் உயிர்களைக் காவுகொள்ளும் வன்முறைச் சம்பவங்களே அவை. கடந்து போன இந்த வார விடுமுறைக்குள் மட்டும் கத்திக்குத்துச் சம்பவத்தில் நான்கு உயிர்கள், லண்டனைச் சுற்றிய பகுதிகளில் பலியாகியுள்ளன. இவற்றில் எட்டுமாத கர்ப்பவதியாக இருந்த 27 வயதுப் பெண்மணியும் அடங்குகிறார். அப்பெண்ணின் உயிர் போனநிலையில் அங்கு வந்த அவசர மருத்துவ நிபுணர்கள் அப்பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவைக் காப்பாற்றியுள்ள போதும் அதன் நிலமை இன்றும் கவலைக்கிடமாக உள்ளது என்றே தெரிய வருகிறது.

    அப்படியே அக்குழந்தை உயிர் பிழைத்து நலமடைந்தாலும் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தனது தாயை வன்முறைக்கு பலிகொடுத்த அக்குழந்தை எத்தகைய ஓர் மனநிலையுடன் வாழும் என்பது கேள்விக்குறியே!

    வரலாற்றுக் குறிப்புகள் ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை 2018ம் ஆண்டில் வன்முறையோடு சம்பந்தப்பட்ட கொலைகள் கடந்த பத்து வருடங்களில் அதியுயர்ந்த எண்ணிக்கையை அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஒன்பது வயதுச் சிறுவர்கள் கூட தமது பதுகாப்புக்காக என்று கத்திகளை தம் வசம் வைத்திருக்கும் ஒரு நிலையை இன்றைய இங்கிலாந்து கண்டு கொண்டிருக்கிறது.

    எங்கே? எதற்காக? எவர் மத்தியில் இவ்வன்முறைச் சம்பவங்கள் தலை விரித்தாடுகிறது என்பது பல புத்திஜீவிகள் மத்தியில் அலசப்பட்டு வருகிறது. பதின்ம வயதுகளில் இருக்கும் இளைய சமூகத்தினரிடம் அதுவும் பெரும்பான்மையாக கறுப்பின சமூகத்தின் மத்தியில் அவர்களுக்கிடையிலே நடக்கும் ஒரு குழுநிலை மோதல் போன்றும் தோற்றமளிக்கிறது. போதை வஸ்து வியாபாரத்தினைக் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல குழுக்களுக்கிடையே நடக்கும் அதிகாரப் போரோ? என்று கூட இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் புலப்படுத்துகின்றன.

    இதனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் லண்டன் மேயர் திரு சாடிக் கான் உட்பட பலரும் தவிப்பது போலத் தெரிகிறது. இதற்கான பலமான குற்றச்சாட்டு, இங்கிலாந்து அரசின் மீது சாட்டப்படுகிறது. இங்கிலாந்து அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து இலாக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இதனால் அதிகமான பாதிப்புக்குள்ளாக்கப்பட்டது இங்கிலாந்தின் போலிஸ் இலாகா என்பது உண்மையே. இதன் காரணமாக இங்கிலாந்து மெட்ரோபோலிட்டன் போலிஸ் படையில் சுமார் 20,000 போலிஸ் உத்தியோகத்தர்கள் குறைக்கப்பட்டனர். வன்முறைச் சம்பவங்களைக் குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

    போலிஸ் உத்தியோகத்தர்களின் ஆட்குறைப்பு இதற்குக் காரணமல்ல; இருக்கும் போலிஸ் உத்தியோகத்தினர்களின் நடவடிக்கைகளைச் சரியான வகையில் வழிநடத்த இலண்டன் மேயர் தவறிவிட்டார். இதன் முழுப் பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டும் என்று அரசாங்கமும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் வாதிடுகிறார்கள். இங்கேதான் மக்களின் பொது நன்மையைக் கருத்திலெடுக்காமல் அரசியல் மோதல் நிகழ்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இங்கிலாந்தின் அரசோ கன்சர்வேடிவ் கட்சியினால் நடத்தப்படுகிறது, லண்டன் மேயரோ லேபர் கட்சியைச் சேர்ந்தவர் அவர்களுக்கிடையில் இருக்கும் அரசியல் வேறுபாடுகள் தலைதூக்குவது யதார்த்தமே!

    அடுத்தொரு காரணமாக சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த, அதுவும் குறிப்பாக, கறுப்பினத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளதால் அவர்கள் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டு இத்தகைய வன்முறைக்குத் தள்ளப்படுகிறார்கள் எனும் வாதம் ஒருபுறமிருக்கிறது. இத்தகைய இளைய தலைமுறையை வழிநடத்தக்கூடிய பொதுநல அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் பல பொதுநல அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் தமது செயற்பாடுகளைக் குறைத்தும், நிறுத்தியும் விட்டதும் ஒரு காரணம் எனும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

    லண்டன் மேயரான சாடிக் கான் மீது பல விமர்சனங்கள் எதிர்மறையாக வைக்கப்படுகின்றன. இவர் ஒரு இஸ்லாமியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பலரின் விமர்சனத்துக்கு இவர் உள்ளாகி வருகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கும் இவருக்கும் இடையிலான பிரச்சனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்தவுடன் அறிவித்த சில இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்தவர்களின் மீதான தடையின் போது எழுந்தது. அதேநேரம் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் லண்டன் நகர மேயராக இருப்பதை மனத்தளவில் ஏற்றுக்கொள்ள முடியாத,  இனத்துவேஷம் கொண்ட சிலர், இப்பிரச்சனையைத் தமக்குச் சாதகமாக்குக்கிறார்களோ எனும் கருத்தும் சிலர் மத்தியில் நிலவுகிறது.

    தற்போது பிரதமர் பதவிக்கு போட்டியிட்டுக் கொண்டிருக்கும் திரு பொரிஸ் ஜான்சன் அவர்கள் இருமுறைகள் லண்டன் நகர மேயராகப் பணியாற்றியிருக்கிறார். கருத்துக் கணிப்புகளின் படி இவரது பதவிக் காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் லண்டனில் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. இக்காலகட்டத்தில் போலிஸாருக்கு யாரையும் தடுத்து நிறுத்திச் சோதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் இவ்வதிகாரம் இனத்துவேஷம் கொண்ட காவல் படையினரால் கறுப்பின மக்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால் தற்போதைய பிரதமர் தெரேசா மே அவர்களால் தடை செய்யப்பட்டது. இத்தகைய வன்முறைச் சம்பவங்களில் பெரும்பான்மையானவை ஒரு குறிப்பிட சமூகத்தினரிடையில் தான் நடைபெறுகிறது எனும் போது அச்சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் மத்தியில் தானே போலிஸார் தமது நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்த வேண்டும் அதனை இனத்துவேஷம் என்று குற்றம் சாட்டினால் குற்றங்களை எவ்வகையில் தடுக்க முடியும் எனும் வாதம் நியாயமானதே!

    அரசியல், தனிப்பட்ட கருத்து மோதல்கள், இனத்துவேஷம் எனும் கூப்பாடுகள் இவையெல்லாம் பலியாகிக் கொண்டிருக்கும் இளையோரின் உயிருக்கு பதில் கூறிவிட முடியுமா? ஐக்கிய இராச்சியம் போன்றதொரு முன்னேற்றமடைந்த நாடு என்று தன்னை விமர்சித்துக் கொண்டிருக்கும் நாட்டில் மனித உயிரின் மகத்துவத்தின் நிலைதான் என்ன எனும் கேள்வி எழுகிறது. இயற்கையும், மூட நம்பிக்கையும், தேவையற்ற போர்களும் உயிர்களைப் பலி கொள்வது ஒருபுறமிருக்க ஏனிந்த கண்மூடித்தனமான கொலைவெறி ஐக்கிய இராச்சிய சில இளையோர் மத்தியில் எழுகிறது எனும் கேள்விக்கு விடை காண வேண்டியது அவசியம். முளையிலே கிள்ளியெறிவதே அறிவான செயல் என்பதன் அடிப்படையில் பாலகர்கள் மத்தியில் இத்தகைய வன்செயல்களின் விளைவுகளை மனதினில் புகுத்தும் வகையிலான கல்விமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமா? எனும் கேள்வியும் எழுகிறது.

    “அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று பாடிய அவ்வை இன்று இருந்திருந்தால் அழுதிருப்பாளோ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • சேக்கிழார் பா நயம் – 43

    சேக்கிழார் பா நயம் – 43

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ————————————————–

    இறைவன் உலகில் முதன்முதலாக எழுந்தருளிய தலம் திருவாரூர் ஆகும். இங்கும் தில்லையிலும் சிவபிரான் முதலில் எழுந்தருளினார் என்று தேவாரம் பாடும். திருவாரூரில் பெருமானுக்கு அருகில் உள்ள திருமூலட்டானமும், தில்லையில் நடராசர் சந்நிதிக்கு அருகில்உள்ள திருமூலட்டானமும் இறைவன் மிகவும் முற்காலத்தில் தாமே தோன்றிய தலம் ஆகும் .தில்லையில் நடராசர் எழுந்தருளிய சபைக்கு வடபால் வேறாகத் திருமூலநாதர் எழுந்தருளி யிருக்கும் திருமூலட்டானம் போல, இங்குத் தியாகேசர் எழுந்தருளியிருக்கும் இடம் வேறு; புற்றிடங்கொண்டார் எழுந்தருளியிருக்கும் திருமூலட்டானம் வேறு. இதைக்கருதியே சேக்கிழார்,

    ‘’புற்றிடங் கொண்ட புராதனன்!’’ என்று பாடுகிறார்.புற்றிடங் கொண்ட புராதனனை-புற்றிலே என்றைக்கு வெளிப்பட எழுந்தளினார் என்றறியக் கூடாத படி மிகப் பழமையாயுள்ளவன்.

    “மாடமொடு மாளிகைகண் மல்கு தில்லை
    மணிதிகழு மம்பலத்தே மன்னிக் கூத்தை
    ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
    அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே“ என்றும்,

    “தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ
    திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே“ என்றும்

    வரும் திருத்தாண்டகங்களின் பொருளை உற்று நோக்குக. புராதனன் – மிகப் பழமை வாய்ந்தவன்.

    “முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி“ – (திருத்தாண்டகம்) “முன்னைப் பழம்பொருட்குப் முன்னைப் பழம்பொருளே“ – (திருவாசகம்). என்று போற்றப் பெற்ற புற்றிடங் கொண்டவனும், பழமையுடையவனும் என்று பொருள் கூறுவர். மக்கள், தேவர், நரகர் ஆகிய அனைவருக்கும் தம்மையன்றி வேறு பற்றுக் கோடு இல்லாத பெரும்பொருள் என்று இதனைச்சேக்கிழார் சிறப்பிப்பார் . இப்பிரானை சுந்தரர் எவ்வாறுவணங்கினார் என்று மேலும் கூறினார்!

    சுந்தரர் தியாகேசப் பெருமானின் சந்நிதிக்கு அருகில்உள்ள திரு மூலட்டானர் திருமுன்பு சென்று முதலில் வணங்கினார் . அப்போது அவர் தம்உடலின் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பட வீழ்ந்து வணங்கும் ‘’அட்டாங்கம் ‘’ , மற்றும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் படக் குனிந்து வணங்கும் ‘’பஞ்சாங்கம்’’ என்ற இருவகை விதிகளின்படி வணங்கினார்! அதனால் அவரது ஆசை அளவு கடந்து பெருகியது! இறைவன் திருவடியை அடைந்த ஆனந்தம் உண்டாயிற்று. அந்த இன்பப் பெருக்கில் முழுகியமையால் அவர்தம் ஐம்புலன்களும் ஒன்றிய பேரின்பத்தினுள் திளைத்தார். இதனைச் சேக்கிழார்,

    ‘’அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
    முன்பு முறைமை யினால் வணங்கி முடிவிலாக் காதல் முதிர ஓங்கி
    நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப் பெற்ற
    இன்ப வெள்ளத்திடை மூழ்கி ன்நின்றே’’

    என்று பாடுகிறார். அந்த நிலையில் அவர் இனிய பண் நிரம்பியதும் , வண்மை பொருந்தியதும் ஆன தேவாரப் பதிகம்பாடினார்! இதனை,

    ‘’இன்னிசை வண்டமிழ் மாலைபாட’’

    என்று சேக்கிழார் பாடுகிறார். அட்டாங்கமாக வணங்கும் முறை – தலை (1), கைகள் (2),காதுகள் (2), நெற்றி (1), கால்கள் (2) ஆக எட்டு உறுப்புக்களும் நிலத்திற் பொருந்துமாறு வணங்குதல். பஞ்சாங்கமாக வணங்கும் முறை, தலை 1 கைகள் 2 பாதங்கள் 2 ஆகிய ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பதிய வணங்கும் முறை.

    முன் அட்டாங்கமாகவும் பின் பஞ்சாங்கமாகவும் ஆக இவ்வாறு மூன்றுமுறை ஐந்து முறை முதலாக வணங்குதல் வேண்டுமென்பது விதி. இவ்விரண்டும் சேர்ந்தது ஒரு வணக்கமாதலின் அட்டாங்க பஞ்சாங்கமென்று சேர்த்துக் கூறினார். அவற்றில் முன்னர்ச் செய்யப்பெறுவதாதலின் அட்டாங்கத்தை முதலில் வைத்தார். (பெண்கள் அட்டாங்க வணக்கம் செய்யலாகாது.)

    திருக்கோயிலிலே இறைவனைத் தவிர வேறு ஒருவரையும் அஞ்சலி செய்யாமை, தூபி முதலியவற்றின் நிழலை மிதியாமை முதலிய பல விதிமுறைகளையும் உள்ளிட்டு ‘முறைமையினால்’ என்றார்..

    அன்பு பெருகி உள்ளம் அதில் சிக்குண்டு அலைந்து மேன்மேல் முதிரவே, ஆன்மாக்கள் எல்லாம் நாயகிகள் ஆகவும், இறைவன் அவர்களது நாயகனாகவும் உள்ள பாவனை முதிர்ந்தது; ஆகலின் “நாயகன் சேவடி எய்தப்பெற்ற இன்ப வெள்ளம்“ என்று கூறினார்.

    “நாயகன் சேவடி தைவருஞ் சிந்தையும்“ எனக் கூறுவதும் காண்க. நாயகன் சேவடி தைவருதல் (தடவுதல் – வருடுதல்) நாயகியின் இயல்.

    “செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கமலக் கரத்தால்
    வருடச் சிவந்தன“ என்பது (திருமாற்பேறு) திருவிருத்தம்.

    நாயகன் – என்பதற்கு – இயவுள் – இயங்குபவன் என்றும், ஞான நாயகன் – என்பதற்கு உயிரறிவைச் செலுத்துபவன் – என்றும் பொருள் கூறுவர். என்று இவ்வாறெல்லாம் உரைகாரர்கள் பொருள் கூறினர்! இனி முழுப் பாடலையும் கற்று மகிழ்வோம்.

    ‘’அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
    முன்பு முறைமை யினால் வணங்கி முடிவிலாக் காதல் முதிர ஓங்கி
    நன்புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப் பெற்ற
    இன்ப வெள்ளத் திடைமூழ்கி நின்றே இன்னிசை வண்டமிழ் பாட ‘’

    இப்பாடலில் சுந்தரர் முன்பு திருவெண்ணெய் நல்லூரில் திருமண மண்டபத்தில்

    ‘’அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
    சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார் ‘’

    என்று அருளாணை இட்டதை எண்ணி மகிழ்ந்தமை கூறப் பெறுகிறது.

    நன்புலனாகிய ஐந்தும் ஒன்றி – “கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண்டொடி கண்ணே யுள“ என்று கூறியபடி ஐம்புலனும் ஒன்றித்து அனுபவிக்கப் படுவதோர் இன்பம் உண்டு; அது சிறியது; சிற்றின்பம் என்பர். ஆயின், இங்குக் குறித்த இதுவும் ஐம்புலன்களும் ஒன்றித்துஅனுபவிக்கப்பெறுவதாயினும் அவ்வாறின்றிப் பெரிதாய், நன்மை தருவதாய், அழியாததாய் உள்ளது; ஆதலின் நன்புலனாகிய ஐந்தும் என்றார். ஐம்புலன்களே உலகவழிச் செல்லும்போது தீமையும், இறைவன்வழிச் செல்லும்போது நன்மையும் பயப்பனவாம். என்க.

    இன்ப வெள்ளம் – ஏனைச் சிற்றின்பம்போ லல்லாது இன்பத்திலே கரைகாண முடியாத பெருமை யுடைத்தாதலால் வெள்ளம் என்றதாம். இதனை அனுபவித்தல் கன்மேந்திரிய ஞானேந்திரியங்களுக்கும் அந்தக்கரணங்க ளுக்கும் ஆன்மபோதத்துக்கும் எட்டாது இவை ஒருமைப்பாடு பெற்றவழி- ஐந்தும் ஒன்றி – அனுபவிக்கப்படுவதாதலின் மூழ்கி என்றார்.

    இப்பாடலில் கூறப்பெறுவன யாவும் இறைவன் திருவாக்கே யாகும். பாட என்ற வினையெச்சம் அடுத்த பாடலுடன் வினை முடிபு கொள்ளும் !

    Share